Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Tuesday, 12 March 2013

கல்வியின் அரசியல்

education உதயசங்கர்

 

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அரசியல் தான் தீர்மானிக்கிறது. முதலாளித்துவ அரசியல் அதன் இருப்பை உறுதி செய்கிற கல்வி, அறம், நீதி, பண்பாடு, முதலியவற்றை முன்னெடுக்கிறது. அதைப் பிரச்சாரம் செய்கிறது. மக்கள் மனதில் பதிய வைக்கிறது. மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. மக்கள் மனங்களைத் தன் வசப்படுத்துகிறது. ஆக அரசு யந்திரம் தன்னுடைய அரசியல் தத்துவத்துக்கேற்ப எல்லாவற்றையும் உருமாற்றுகிறது. கல்வியும் இந்த சமூகத்தில் அத்தகைய உருமாற்றம் அடைந்து கொண்டேயிருக்கிறது. இப்போதைய கல்வி முறை நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ தத்துவத்துக்கேற்ப மாற்றப்பட்டிருக்கிறது. போலியான ஜனநாயகநடைமுறைகள் உள்ள இந்த அமைப்பு அதே போலியான ஜனநாயகநடைமுறைகளைக் கல்வித் திட்டத்திலும் கடைப்பிடிக்கிறது. எல்லோருக்கும் கல்வி என்று முழங்குகிறது. கட்டாயக்கல்வி என்று கட்டாயப்படுத்துகிறது. ஆனால் அதே நேரம் சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்தில் கல்வி இருக்கும்படியாக கல்வியைத் தனியார் மயமாக்கியுள்ளது. அரசுப்பள்ளிகளுக்குப் போதுமான அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்பு வசதிகளோ செய்து கொடுப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாநில, மற்றும் மத்திய அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி குறைந்து கொண்டே வருகிறது. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் கல்வி என்ற முழக்கத்தையும், கொஞ்சம் கொஞ்சமாகக் கல்விக்கான நிதிக்குறைப்பையும் செய்து தாங்கள் முதலாளிகள் பக்கம்தான் என்று நிருபிக்கிறது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கல்வித்திட்டம் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் பிள்ளைகளுக்கேற்ப இல்லை. அந்தக் குழந்தைகளின் அறிதிறன், கற்றல் திறன், உள்வாங்கும் சக்தி, இவற்றிற்குச் சம்பந்தமில்லாமல் கல்வியைத் திணிக்கும்போது அந்தக் குழந்தைகளால் உள்வாங்க முடிவதில்லை. அல்லது சில குழந்தைகளுக்கேனும் அது முடிவதில்லை. அந்தக் குழந்தைகளைப் படிக்க லாயக்கில்லை என்ற முத்திரையைக் குத்தி பள்ளியை விட்டு விலகச்செய்து மாடு மேய், பன்னி மேய் என்று திரும்பத் திரும்பச்சொல்லி அவர்களை தாங்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று மனதளவில் ஏற்றுக் கொள்ளவைத்து கல்வியிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ஓரங்கட்டுகிறது. இப்படி பெரும்பான்மையான குழந்தைகளை உதிரித் தொழிலாளிகளாக்கி தன்னுடைய உழைப்புச் சுரண்டலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது இந்த அமைப்பு.

இப்படி பாரதூரமான பாதிப்பைக் குழந்தைகள் மனதில் நம்முடைய கல்வித்திட்டம் ஏற்படுத்தி அவர்களைத் தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களாக மாற்றுகிறது. எந்த விமர்சனமுமில்லாமல் சமூகத்தின் அடக்குமுறைகளைச் சகித்துக் கொள்ளும் பொறுமையை அது தருகிறது. இதற்கு ஆதரவாக மதமும், நீதித்துறையும் இருக்கிறது. இதைப் பெரும்பான்மையானவர்கள் புரிந்து கொள்ளும்போது சமூகத்தில் மாற்றம் நிகழும். இத்தகைய அரசியலைப் புரிந்து கொண்ட மாணவர்கள் எட்டுபேர் தங்களுடைய பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் தான் “ எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? ” என்ற குறுநூல். இதனை எழுத்தாளர் ஷாஜஹான் அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் நம்மை அதிரவைக்கும் கேள்விகளும் பதில்களும் கொண்டவை

இத்தாலியிலுள்ள பார்பியானோ நகரத்தின் பள்ளிக்கூட மாணவர்கள் எட்டு பேர் தங்களுடைய டீச்சருக்கு எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதுக்குமான கேள்விகளாக மாறி நம்மை உலுக்குகிறது. முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்றால் பாஸ். முப்பத்திநாலு மதிப்பெண்கள் பெற்றால் பெயில் என்ற நடைமுறையினை தகர்த்தெறியும் கேள்விகளை அந்த மாணவர்கள் கேட்கிறார்கள். கல்வி என்பது கூட்டாகக் கற்க வேண்டியது என்பதையும், கல்வியில் மாணவர்களுக்கான பங்கேற்பு பற்றியும் அவர்கள் கேட்கிறார்கள். ஆசிரியர் என்பவர் கல்வி பயிலுவதற்கான வழிகாட்டியாக ஏன் இல்லாமல் அதிகாரியாக நடந்து கொள்கிறார் என்று கேள்வி கேட்கிறார்கள். பெயிலாக்கப்பட்டு பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள் ஒரு பாதிரியாரின் ஏற்பாட்டில் இரவுப்பள்ளி தொடங்கி தாங்களே ஆசிரியராகவும், தாங்களே மாணவர்களாகவும் நடத்திய அநுபவங்களைச் சொல்கிறார்கள். ஒருபாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின் தங்கிய மாணவனுக்காக வகுப்பே காத்திருந்து அவன் அந்தப் பாடத்தைக் கற்ற பிறகு அடுத்த பாடத்துக்குப் போவதைப்பற்றியும், வாழ்க்கை நடைமுறைக்கு ஒவ்வாத மேதாவித்தனமான பாடங்களை நெட்டுரு போட்டு வாந்தியெடுப்பதில் உள்ள இழிமுறைகளைப்பற்றியும் பேசுகிறது. ஒருவகையில் இது தோற்றுப்போனவர்களின் முழக்கம். தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி. புத்திசாலி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி, அலுப்பூட்டும் ஆசிரியர்களின் உரைகள் பற்றி, ஒருவழிப்பாதையாக வகுப்பறைகள் மாறியிருப்பதைப் பற்றி, கேட்கிறது. கூட்டாகக் கற்பது அரசியல் தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது. மதிப்பெண்களுக்காக, தேர்ச்சிக்காக, சான்றிதழுக்காகக் கல்வி பயிலும் நடமுறையைக் கேலி செய்கிறது. இத்தகையக் கல்விமுறையில் பெற்றோர்களின் தலையீடு பற்றி, ஆசிரியர்களின் பொறுப்பு பற்றி பேசுகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏழைகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே இந்தக் கல்விமுறையை மாற்ற முடியும் என்று முரசறைகிறது. கல்வி கற்க எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது போல சொல்லி மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்றி அவர்களை கற்க லாயக்கில்லாதவர்களாக முத்திரை குத்தும் இந்த சமூக அமைப்பிற்கெதிரான போர்க்குரல் இந்தச் சிறுநூல்.

மதுரையிலுள்ள வாசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை அனைவரும் வாசிப்பதின் மூலம்நம்முடைய கல்விமுறை குறித்தும், நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதைப்பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.

நன்றி- இளைஞர் முழக்கம்

Monday, 12 November 2012

மருத்துவத்தின் தத்துவம்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி- 6

உதயசங்கர்Medicines-are-obtained-from-animals

 

மருத்துவம் என்பது எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடு தான். நாய், பூனை, போன்ற மிருகங்களைக் கவனித்துப்பார்த்தால் தெரியும். தனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் உணவெடுக்காது. அதோடு நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கி விட்ட விஷப்பொருளை கக்கி விடும். நாய்க்கு எப்படி அருகம்புல் தெரியும்? அதன் உள்ளுணர்வில் பதியப்பட்டுள்ள மருத்துவக்குறிப்பு ஞாபகத்தின் மேலாக அலையடித்து அதற்கு வழிகாட்டுகிறது. மனிதன் சமூகவயமாகும் போது கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்து விட்டான். வேலைப்பிரிவினைகள் உருவாகும் போது மருத்துவம், மந்திரம், சடங்குகளோடு இணைந்து விட்டது. மருத்துவம் மிக உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவதே பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது, ஆனால் எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப்போவதில்லை. பெரும்பாலும் கை வைத்தியமாக வீடுகளில் சாதாரண நோய்களைக் குணமாக்கி விடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி, என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு, உணவுப்பத்தியம், பச்சிலைச்சாறு, கஷாயம், சூரணம், என்று கொடுத்துக் குணப்படுத்தி விடுவார்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தது. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.

ஆனால் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. பலருக்கு ஆங்கில மருத்துவம் தவிர மற்ற மருத்துவமுறைகள் எல்லாம் நாட்டு வைத்தியம் தான். ஆங்கிலவைத்தியம் மட்டும் தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் கண்ட்ரி மெடிசின். நோயுற்ற மனிதனை நம்பாமல் சோதனைச்சாலை முடிவுகளின் அடிப்படையிலே மருத்துவம் செய்யும் ஆங்கிலமருத்துவம் நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது. என்ன சொல்ல? அதைப் பற்றி வேறொரு கட்டுரையில் பேசுவோம்.

எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.

தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் வாழ்க்கை பற்றிய விளக்கம். கண்ணோட்டம். உதாரணத்துக்கு இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்கு நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலானோர்கள் நினைக்கிறார்களே அது ஒரு தத்துவவெளிப்பாடு. இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவநோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய உணவுப்பழக்கம், உடை, இருப்பிடம், என்று எல்லாம் மாறியதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அந்த அரசு நிர்வாகத்தை நிர்மாணிக்கிறது. அதைச் செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது? அதன் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி, இவற்றைத் தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் எல்லோரையும் ஏமாற்றும். ஆனால் சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதிமூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. ஆனால் எல்லாத்தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்திலும் ஒரு தத்துவப்பார்வை இருக்கிறது. அது தான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவமுறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப்பார்வை கொண்டவை என்றால் ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாய் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால் அது பலிக்காது என்றும் நம்பப் பட்டது. மருத்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போல மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.

ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. அதற்குச் சந்தை தான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். மைதாஸின் மனநிலை கொண்ட அதன் லாபவெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையது என்பதால் அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தை தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே எல்லாருமே பண்டங்கள் தான். எப்படி மனிதர்களுக்காக பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ அதே போல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் உற்பத்தி செய்யும்.

உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன் தான் என்றாகி விட்டது. இது திட்டமிட்டு பணம் பறிப்பதற்கான செயலாக மாறி விட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிக்குப் பாதிப்பேருக்கு கர்ப்பப்பையை எடுத்து தூரப் போட்டாயிற்று. சமப்ந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாக தடுப்பூசிகளைப் போடச் செய்வது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து அவனை ஒரு இயந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது. எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வம் கொழிக்க பெரும்பான்மை மக்கள் தங்கள் உயிர், பொருள், ஆவி, அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப்பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை.

ஆனால் ஹோமியோபதியின் தத்துவப்பார்வை சமூகவயமானது. தெளிவான தத்துவநோக்கம் கொண்டது. எந்த மர்மங்களுமற்றது. இயற்கையின் விதிகளுக்கேற்ப செயல்படுவது, எளிமையானது, இனிமையானது, முழுமையான நலத்தை மீட்டுத் தருவது. பக்கவிளைவுகளற்றது. எனவே தான் ஹோமியோபதி மருத்துவம் புரட்சிகரமான மக்கள் மருத்துவமாக விளங்குகிறது. அது எப்படி என்று பின்னால் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

நலம் காக்க…தொடர்வோம்

Sunday, 11 November 2012

தலைமைச் செயலாளர்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி –5medicine

உதயசங்கர்

 

நம்முடைய உயிராற்றல் என்ற தலைமைச் செயலாளர் அல்லது மேற்பார்வையாளர் இருபத்திநான்கு மணிநேரமும் உடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். உடலின் மாறுபாடுகளுக்கேற்ப அவ்வப்போது உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். உடலிலுள்ள மற்ற உறுப்புகளின் சொற்களைக் கேட்கிறார். அவற்றின் நலம் அல்லது துயரைக் கவனித்து அதற்கேற்ப தன் உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே போல உடலின் உறுப்புகள் தரும் சமிக்ஞைகளுக்குக் கட்டுப்பட்டு தன் உத்திரவுகளை மாற்றவும் செய்கிறார். கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சமிக்ஞைகள், உத்திரவுகள், எதிர்வினைகள், செயல்கள் என்று மிகுந்த ஜனநாயக உணர்வுடன் நமது உயிராற்றலும் உடலும் இயங்குகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைகள் அனைத்தும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஜனநாயக ( CENTRALISED DEMOCRACY ) முறையிலேயே நடக்கும். தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளை மேலிருந்து கீழாகவும் கீழிலிருந்து மேலாகவும் ஜனநாயகபூர்வமான கருத்தொற்றுமை மூலம் தீர்மானிக்கிறார்கள். இது இயற்கையோடு இயைந்த நடைமுறை.

உயிராற்றலை மையம் என்று கொண்டால் அதற்கு அடுத்த வட்டத்தில் மனமும், அதற்கடுத்த வட்டத்தில் உடலின் முக்கியமான ஜீவாதாரமான உறுப்புகளும், அதற்கடுத்த வட்டத்தில் அவ்வளவாக முக்கியமில்லாத உறுப்புகளும் அதற்கடுத்த கடைசி வெளிவட்டத்தில் தோல் போன்ற மிகவும் முக்கியத்துவம் குறைந்த உறுப்புகளும் வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனால் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பு உயிரியக்கத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாதென்பதால் அதன் அதிர்வுகளை உயிராற்றல் மையத்திற்கு வெகு தூரத்திலுள்ள உயிரியக்கநோக்கில் மிகவும் முக்கியத்துமில்லாத தோலுக்குக் கடத்துகிறது.

சரி உயிராற்றல் ஏன் பாதிப்புக்குள்ளாகிறது?. நமது சீரில்லாத ஆரோக்கியக்கேடான, பல்வேறு நடவடிக்கைகளாலும், முறையற்ற, தீமையான மருந்துகளாலும், ஏற்றத்தாழ்வுமிக்க சமூகக் காரணிகளாலும், ( உணவு, நீர், காற்று, சுற்றுச்சூழல், குடும்பம், சமூகம், அரசியல் ) பாதிப்புக்குள்ளாகிறது. இந்தப் பாதிப்பை அப்படியே உயிராற்றல் வைத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அதனால் உயிராற்றலின் கடைசி வட்டத்திலுள்ள தோலுக்கு அந்தப் பாதிப்பைத் தள்ளி விடுகிறது. தோலில் சில பாதிப்புகள் ( கொப்புளங்கள், பருக்கள், கட்டிகள், நிறமாற்றம், அரிப்பு, ஊறல், காந்தல் ) ஏற்படுகின்றன. இவை உயிராற்றல் வெளித்தள்ளும் பாதிப்புகள் என்று நமக்குத் தெரியாததனால் நாம் தோல்நோய் நிபுணரைச் சென்றுச் சந்திக்கிறோம். அவர் கொடுக்கும் மருந்து, ஆயிண்மெண்ட், களிம்பு, என்று பல்வேறு வேதியல் கலவைகளைத் தடவி உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை, மீண்டும் உள்ளே தள்ளுகிறோம்.

சில காலம் கழித்து மூட்டுகளில் வலியோ, ஆஸ்த்மா துயரோ வருகிறது. இருக்கவே இருக்கிறார்கள் ஸ்பெஷலிஸ்டுகள். ஆர்த்தோ அல்லது நுரையீரல் நிபுணர்கள். அவர்களைச் சென்று பார்க்கிறோம். அவர்களும் நமக்கு வந்த தோல் வியாதியைப் பற்றிக் கவலைப்படாமல் ( ஏனென்றால் அது அவர்கள் வேலையில்லையே அதற்குத் தான் தோல் நோய் நிபுணர் இருக்கிறாரே ) இப்போதுள்ள ஆஸ்த்மாவுக்கோ, மூட்டு வலிக்கோ, மருந்துகள் தருகிறார். அதைச் சாப்பிட்ட சிறிது காலத்துக்குப் பிறகு இதயத்தில் வலி வருகிறது. இப்போது இதயநோய் நிபுணரைப் பார்க்கிறோம். அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து நம்மை எப்படியோ உயிரோடு (!) விட்டு விடுகிறார். யோசித்துப்பாருங்கள். உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை தவறான சிகிச்சைமுறையினால் உயிருக்கே ஆபத்தாக்கிக் கொண்டோம். அதில் இன்னொரு வேடிக்கை இப்படிப்பட்ட அறிவியல்பூர்வமற்ற மருத்துவமுறையை நாமெல்லோரும் ரெம்ப அறிவியல்பூர்வமான மருத்துவமுறையென்று கொண்டாடுகிறோம்.

நமது நாட்டில் உடல்நலமின்மையால் இறப்பவர்களில் ஐம்பது சதவீதமானவர்கள் தவறான மருத்துவச் சிகிச்சையினால் இறப்பவர்கள் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா இல்லையா? இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய அறியாமை. மருத்துவம் நமது பிறப்புரிமை என்ற ஞானம் இல்லாததால் அதை யாரோ விற்பன்னர்கள் சமாச்சாரமாக நினைத்து, அவர்களை கடவுளாக வழிபட்டு அவர்கள் கையில் நமது உடலையும் உயிரையும் ஒப்படைத்து விட்டு கையறு நிலையில் காசையும் தொலைத்து விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறோமே.

ஆதியிலிருந்தே இந்த மண்ணில் இருந்து வரும் மருத்துவ முறைகளை மாற்று மருத்துவமுறைகள் என்றும், பாதியில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ஏகாதிபத்திய ஆங்கில மருத்துவத்தை முதல் மருத்துவமாகவும் போற்றுகிறோமே. விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஆங்கிலேய மோகம் இன்னும் மறையவில்லை. அதற்குள் மறுபடியும் நம்மை அடிமை கொள்ள அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

நலம் காக்க…..தொடர்வோம்.

Saturday, 10 November 2012

நோயின் மூலம் எது?

 

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி-4

உதயசங்கர்joisel-2

 

இப்போது டெங்கு காய்ச்சல் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் பன்றிக்காய்ச்சல், அதற்கு முன்னால் எலிக்காய்ச்சல், கோழிக்காய்ச்சல், ஒரு நாலைந்து வருடங்களுக்கு முன்னால் சிக்கன்குனியா காய்ச்சல், மழை பெய்து விட்டால் வைரஸ் காய்ச்சல், என்று புதிதாய் காய்ச்சல்கள், உருவாகியிருக்கின்றன. இந்த மாதிரியான எல்லாநோய்களுக்கும் மூலகாரணம் என்ன? பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லாஉயிர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமது உடல் தான் நோய்களுக்கு மூலகாரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! எப்படி எப்படி என்று கேட்கத் தூண்டுகிறதல்லவா!

ரெம்ப சிம்பிள். பத்துபேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டால் யாரோ ஒருவருக்கு வயிற்றாலை போகிறது. நமது இந்தியத் திருநாட்டில் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் எல்லாநோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா? நம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுவில், தூசுவில், இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால் அதற்கு நம் உடலே காரணம் இல்லையா?

எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல் தான் நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்!.

இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத் தான் என்று புரிந்து கொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர்சுரப்பிகள் பாதுகாப்பு படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்புமண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அநுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில் தான் உடல் தன் ஆரோக்கியத்தை பேணிக் கொள்கிறது. தனக்கு எது தேவை என்று சொல்கிறது. தேவையில்லாததை நாம் செய்யும் போது எச்சரிக்கிறது. ஒரு முறையல்ல பல முறை. நாம் விடாப்பிடியாக அதைச் செய்யும் போது பலத்த குரலில் உடலின் மூலமாக நம் செவிட்டுக் காதுகளில் அலறுகிறது. இதையெல்லாம் ஒரு ஒழுங்குடன் செய்வதற்குக் கற்றுக் கொண்டுள்ளது. நாம் தான் நமது உடலைப் பற்றிய அறியாமையால் உடலைப் பாழ்படுத்துகிறோம்.

மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல் தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர் தான் நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச்செயல்களும் செவ்வனே நடைபெற உதவுகிறார். இந்த உயிராற்றலில் எப்போது பலவீனம் ஏற்படுகிறதோ அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது புறவயமாக எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைப் போட்டுத் தாக்குகிறது. உடல் நோய்வாய்ப் படுகிறது.

ஆக நம்முடைய உடல் நோய்வாய்ப்படுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்த பலவீனம் நமது உடலின் நோய் ஏதிர்ப்புத் திறனைக் குறைத்து விடுகிறது. நோய் ஏற்புத்திறன் அதிகரித்து விடுகிறது. இதனால் உடல் எளிதில் மாற்றங்கள் தோன்றுகிறது. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழுச் சக்தியோடு இருக்கும் வரை நாம் பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி, என்று எதைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

நலம் காக்க……..தொடர்வோம்.

Friday, 9 November 2012

கேள்விகளில்லா உலகம்

குழந்தைகளின் அற்புத உலகில் little-boy-reading

 

உதயசங்கர்

 

 

ஏன்? எதற்கு? எப்படி? இந்தக் கேள்விகள் தான் மனிதகுலத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய வரலாற்றில் உழைப்புக்கு பெரும் பாத்திரம் இருக்கிறது. நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதக்குரங்குகள் எப்போது தன் கைகளை உயர்த்தி விரல்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததோ அப்போதிருந்து மூளையின் வளர்ச்சியில் ஒரு பெரும்பாய்ச்சல் நிகழ்ந்து விட்டது. இதெல்லாம் ஒன்றிரண்டு வரிகளில் சொல்லி விடுவதைப் போல நிகழவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சின்னச் சின்ன மாற்றங்களினால் உருவாகியது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சின்னச் சின்னதான அந்த ஒவ்வொரு மாற்றத்துக்கும் பின்னால் ஏன்? எதற்கு? எப்படி? இருக்கிறது. இந்தக் கேள்விகள் தான் இன்று மனிதகுலம் அறிவியல், இலக்கியம், கலை, தத்துவம், அரசியல், தொழில்நுட்பம், என்று சகலவிதமான துறைகளிலும் பிரம்மாண்டமான வளர்ச்சியடைய அடிப்படைக் காரணம். ஆனால் எல்லாக் காலங்களிலும் ஆளுகின்ற வர்க்கத்துக்கு எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் பிடிக்காத மூன்று வார்த்தைகள் ஏன்? எதற்கு? எப்படி?.

ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் துவங்கி இன்றைய முதலாளித்துவகாலம் வரை சமூக மாற்றங்களைத் தூண்டியதும், மாற்றங்களைக் கொண்டு வந்ததும் இந்தக் கேள்விகள் தான். எனவே தான் அடிப்படை மாற்றத்தை எப்போதும் விரும்பாத ஆளும் வர்க்கம் இந்தக் கேள்விகளையும் விரும்புவதில்லை. எனவே பெரும்பான்மை மக்கள் இந்தக் கேள்விகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். இந்தக் கேள்விகள் அவர்கள் மனதில் தோன்றாதபடி மதம், கடவுள்கொள்கை, விதி, ஜோதிடம், என்று மயக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மனதை வசப்படுத்துவதற்காக எல்லாவித தந்திரங்களையும் சாம, தான, தண்ட, பேதங்களையும் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது சட்டம், ராணுவம், போலீஸ், என்று அரசின் வன்முறை அமைப்புகளுக்கு ஈடாக கல்வி, மதம், நீதி, ஊடகங்கள், ( பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி ) சூட்சுமமாக மக்கள் மனதை வசப்படுத்தும் கருவிகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்துகிறது. இதில் கற்பிக்கும் முறை இளம் வயதிலேயே கேள்வி கேட்கும் தீராத ஆவலை முளையிலேயே கிள்ளியெறிகிறது.

குழந்தைகள் வளர, வளர, அவர்கள் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய புரிகிற இந்த முயற்சி தான் கேள்விகள். அநேகமாக மூன்று வயதிலிருந்தே குழந்தைகள் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆமாம். முதலில் தாயிடம், தந்தையிடம், பின்னர் எல்லோரிடமும் கேள்விகள் கேள்விகள் லட்சக்கணக்கான கேள்விகளைக் கேட்கத் துவங்குகிறார்கள். அது என்ன? இது என்ன? சூரியன்னா என்ன? நட்சத்திரம் ஏன் ராத்திரி வருது? சாமி யார்? ஏன் கும்பிடணும்? எப்படி மூச்சா போகுது? ஏன் சாப்பிடணும்? இப்படி கேள்விகளால் திணறடிக்கிறார்கள் குழந்தைகள். இவைகள் எல்லாம் அவர்கள் திட்டமிட்டு கேட்பதில்லை. இயற்கையின் உந்துதலால் உள்ளுணர்வின் வெளிப்பாடாக இந்தக் கேள்விகள் அவர்களிடமிருந்து ஊற்றெடுக்கின்றன. கேள்வி கேட்பதையே மறந்து போய் விட்ட மரத்துப் போன பெரியவர்களின் மூளை இத்தகைய கேள்விகளைக் கண்டு திகைத்து விடுகிறது. முதலில் நம்முடைய குழந்தை இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று ஆனந்தப் படுகிறார்கள். பெரிய அறிவாளியாய் வருவான் என்று ஊரிலுள்ள எல்லோரிடமும் சொல்லி மகிழ்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர்களுக்குச் சரியான பதில் சொல்லத் தெரியாது. இல்லையென்றால் மூடத்தனமான பதில்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குழந்தைகளின் ஆர்வத்தை மட்டுப்படுத்துவார்கள். சிலர் குழந்தைகளை அவர்களுடைய கேள்விகளினால் சலிப்புற்று திட்டவும் செய்வார்கள். ஏனெனில் பெரியவர்களின் அறியாமையை குழந்தைகள் அறிந்து கொள்ளக் கூடாது என்று வரட்டுக் கௌரவம் தான். ஆனால் குழந்தைகள் அவர்களுடைய கேள்விகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அதற்கு என்ன மாதிரியான பதில்களைத் தருகிறீர்கள் ? என்று உன்னிப்பாகக் கவனிக்கவும் செய்கிறார்கள். உங்கள் பதில்களை அவர்கள் உடனே புரிந்து கொண்டு விடுவார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அந்தப் பதில்களின் உள்ளார்ந்த உணர்வுகள் அவர்களைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

நான் என் குழந்தைகளிடம் அவர்கள் சிறு பிராயத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான விஞ்ஞானபூர்வமான விளக்கங்களைக் கொடுத்தேன். பூமி எப்படி உருவானது? உயிர்கள் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? கடவுள் எப்போது , எதனால், ஏன் மனிதனால் படைக்கப்பட்டார்? என்றெல்லாம் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு அது புரியுமா? புரியாதா? என்றெல்லாம் யோசிக்கவில்லை. அதற்காக அவர்களை வலுக்கட்டாயமாக உட்காரவைத்துச் சொல்லவுமில்லை. அவர்கள் கேள்விகள் கேட்கும் போது அவற்றைப் பற்றியெல்லாம் சொன்னேன். அரைமணி நேரம் ஒருமணிநேர வகுப்பெல்லாம் இல்லை. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், அவ்வளவு தான். குழந்தைகள் அடுத்த கேள்விக்குத் தாவி விடுவார்கள். அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. ஆனால் நான் சொன்ன பதில்கள், என்னுடைய நடைமுறை வாழ்க்கையெல்லாம் பார்த்து, என் குழந்தைகள் சாதிய, மத, தெய்வநம்பிக்கை இல்லாத குழந்தைகளாக வளர்ந்தார்கள்.

பல குடும்பங்களில் குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போதல்ல.. பேச ஆரம்பித்தவுடனேயே நர்சரியில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். எப்போதும் ஓட்டமும் சாட்டமும் பேச்சும் கேள்விகளுமாய் இருக்கிற குழந்தைகளை அங்கே கையில் அடிஸ்கேலுடன் அடக்கி ஒடுக்கி உட்காரவைத்து கையைக் கட்டி வாயைப் பொத்தி ஒழுங்கு படுத்தி சர்க்கஸில் மிருகங்களைப் பழக்குவதைப் போல குழந்தைகளை வசக்குகிறார்கள். அதில் இருண்டு ஒளியிழந்து போகிற குழந்தைகள் கடைசி வரை அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதில்லை. ஒரே நேரத்தில் அடி, உதை, என்ற தண்டனைகளாலும், ஆசிரியர்கள் சொல்லித் தருவதைத் திரும்பச் சொல்கிற கிளிப்பிள்ளைகளாகவும் பள்ளி என்றாலே பயந்து நடுங்குகிற அளவுக்கு நம்முடைய கல்வி முறை அமைந்துள்ளது. ஒருவழிப்பாதையாகவே கற்பிக்கும்முறை இருக்கிறது. அதில் எப்போதும் ஆசிரியர் தான் சின்னஞ்சிறு குழந்தைகளின் மீது எல்லாவிதமான அதிகாரங்களையும் செலுத்துகிற சர்வாதிகாரியாக விளங்குகிறார். அந்த சர்வாதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்கு குழந்தைகளுக்கு மார்க்கமேயில்லை. ஏனென்றால் அவர் தான் மார்க்கும் போடுபவராக இருக்கிறார். கல்வி மனப்பாடக்கல்வியாக, பரீட்சைகள், மதிப்பெண்கள் வழியாக ஒரு குழந்தையின் திறமையைத் தீர்மானிக்கிற கல்வியாக இருக்கிறது. இப்போது சில பாரதூரமான மாற்றங்கள் வந்திருக்கின்றன என்ற போதிலும் இன்னும் முழுமையான ஜனநாயகபூர்வ இனிமையான சமத்துவக்கல்விமுறை மலரவில்லை. அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். தங்கள் குழந்தை பெரிய அறிவாளியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக பெரிய பள்ளிக்கூடத்தில் பெரிய சிபாரிசுடன், நிறையப் பணம் கட்டி சேர்க்கிறார்கள். அந்தப் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை வசக்குகிற கொடுஞ்சித்திரவதைக்கூடங்களாகின்றன. பெற்றோர்களுக்கு நம்முடைய கல்விமுறை குறித்த எந்த சிந்தனையும் இல்லை. அது ஏதோ அரசாங்கத்தின் வேலை என்றோ, அல்லது கல்வியாளர்களின் வேலை என்றோ நினைத்து கை கழுவி விடுகிறார்கள். உண்மையில் பெற்றோர்களின் செயலூக்கமான பங்கேற்பு கற்பிக்கும்முறை குறித்து இருந்தால் நிலைமை வெகு தூரத்துக்கு முன்னேறியிருக்கும். ஆனால் இன்னமும் பள்ளிக்கூடங்கள் அதிகார மையமாகவே செயல்படுகின்றன. வியாபாரநோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, அதிகாரமையமாக பள்ளிக்கூடங்கள் மாறி வருவதற்கு அரசின் ஆதரவும் ஒரு காரணம். குடிமக்களின் அடிப்படை உரிமையான கல்வியை அரசு கை விட்டு விடுவதற்கான முயற்சிகளே இத்தகைய தனியார்மயம்.

குழந்தைகள் கேள்விகள் கேட்பதை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. அவர்கள் சொல்லிக் கொடுப்பதை, அல்லது நோட்ஸில் உள்ளதை அப்படியே சொல்பவன் அல்லது எழுதுபவன் சிறந்த மாணவன்/ மாணவி. ஆசிரியர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. பெற்றோர்கள் பயப்படுவார்கள். குழந்தைகளை டார்ச்சர் செய்வார்களோ என்று பயந்து எதுவும் பேச மாட்டார்கள். அதை மீறி ஏதாவது புகார் செய்து நடவடிக்கை எடுத்து விட்டால் அவர்களுக்குச் சங்கம் இருக்கிறது. ஆனால் பெற்றோர்களுக்குச் சங்கம் இல்லை. முக்கியமாகக் குழந்தைகளுக்குச் சங்கம் இல்லை. தாங்கள் பேரன்பும் பெரும் மரியாதையும் வைத்திருக்கிற பெற்றோர்களும் கைவிட்டு, ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் போது பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்! எல்லாக்கொடுமைகளையும் தாங்கிக் கொள்கிறார்கள். மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள். அந்தப் பாதிப்புடனே அவர்கள் வளர்கிறார்கள். அவர்கள் தான் எதிர்காலத் தலைமுறையென்றால் எப்படியிருக்கும்? நாம் அவர்களுக்கு என்ன கொடுத்தோமோ அதைத் தானே அவர்களும் திருப்பி இந்தச் சமூகத்துக்குக் கொடுப்பார்கள். நாம் என்னென்ன நம்முடைய குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு முறை எல்லோரும் தங்களுடைய மனதுக்குள் ஆராய்ந்து பாருங்கள்! மற்றெல்லாவற்றையும் விட முக்கியமாகக் குழந்தைகளிடமிருந்து கேள்விகளைப் பிடுங்கி விட்டோம். கேள்விகளில்லா உலகத்தில் அவர்களை ஊமைகளாக்கி விட்டோம். கேள்விகளின்றி வாழ்க்கையா?

Wednesday, 7 November 2012

எது நோய் ?

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி- 3

உதயசங்கர்Homeopathic Medicine: Calendula officinalis, Chamomile

 

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நோய் எது ? என்று தெரிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான உயிரியக்கத்தின் பரிணாமவளர்ச்சியில் நமது உடலுக்குள் ஒரு மருத்துவர் உருவாகியிருக்கிறார். அவர் எப்போதும் அதாவது இருபத்திநாலுமணி நேரமும் நமது உடலியக்கத்தைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார். நாம் நமது உடலுக்குச் செய்யும் நல்லது பொல்லதுகளை உற்றுக்கவனிக்கிறார். எங்கே கோளாறு ஏற்பட்டாலும் உடனே அடுத்த கணமே அப்படிக்கூடச் சொல்லமுடியாது கணத்தின் பின்னநேரத்தில் அந்த இடத்துக்கு தன் அத்தனை படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்தக் கோளாறைச் சரி செய்வதற்காக என்ன விதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார். இது எதையும் நாம் சொல்லிச் செய்வதில்லை அல்லது நம்மிடம் கேட்டுச் செய்வதில்லை. இதற்காக அவர் நம்மிடம் எந்த ஃபீஸும் கேட்பதில்லை. எந்தச் சோதனைச்சாலை பரிசோதனைகளையும் செய்யச் சொலவதில்லை. ஆனால் தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்று தான். அவர் செய்து கொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகளைத் தடுக்காதீர்கள். குழப்பாதீர்கள். வெளியிலிருந்து அந்நியக்குண்டர்களைக் ( MEDICINES ) கொண்டு வந்து தன்னுடைய நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்காதீர்கள்.

சரி. அப்படியானால் என்ன செய்ய வேண்டும் ?

முடிந்தவரை உடலின் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். அதற்கு முதலாவதாக எது நோய் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். எது நம்முடைய உடல் நோயிலிருந்து நலமாவதற்கு செய்யும் முயற்சிகள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

நாம் நம்முடைய சமூகப்பழக்கவழக்கம், பிழைப்பு, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீதநம்பிக்கை இவற்றால் பல உடலுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்கிறோம். நாம் மனமுவந்து செய்கிற காரியங்களைச் செய்யுமுன்னால் உடலால் தடுக்க முடியாது. சிலநேரம் தடுக்க முயற்சிக்கவும் செய்யும். புகை பிடிக்கப் பழக ஆரம்பிக்கும் போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் வரும். மதுவருந்த பழகும் போது ஒமட்டல், வாந்தி, வயிற்றாலை, உணவுப்பாதையில் காந்தல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல், என்று பல வழிகளில் பேசிப்பார்க்கிறது. மன்றாடுகிறது. ஆனால் நாம் அப்படியெல்லாம் விட்டு விடுகிறவர்களா? விடாமல் பழகி உடலியக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்புமண்டலம், எல்லாவற்றையும் அரசின் ஆதரவோடு பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், இரவு பனிரெண்டு மணிக்கு ரோட்டோரக்கடையில் புரோட்டாச் சால்னாவை வளைத்துப் பிடிக்கிறோம். கெட்டுப்போனச் சால்னா உடலுக்குள் விஷமாக மாறி உடல் நலத்துக்கு நிரந்தரமாக தீமை செய்து விடக்கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குகிறார். அதிகமான நீர்ச்சத்தை சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தை குடல் உறிஞ்சி விடுமுன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலி ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. நீராய் பீச்சியடிக்கிறது. வயிற்றாலை என்ற உபாதையினால் உடலின் நீர்ச்சத்து குறைகிறது. தாகம் எடுக்கிறது. உடல் சோர்வாய் இருக்கிறது. ஓய்வெடுக்கச் சொல்கிறது. மிகமிக எளிய உணவைச் சாப்பிடச் சொல்கிறது. உடலுக்கு முழுவிஷத்தையும் வெளியேற்றிய திருப்தி வரும்வரை வயிற்றாலை போகிறது. ஆக வயிற்றாலை என்பது நோயல்ல. உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். அவர் மலச்சிக்கலை உருவாக்கும் மருந்துகளைக் கொடுக்கிறார். அதைச் சாப்பிட்டதும் வயிற்றாலை நின்று விடுகிறது. நமக்குத் திருப்தி. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாளைக்கு மலம் போக மாட்டேனென்கிறது. வயிறு கனமாக பசியின்றி மந்தமாக இருக்கிறது. மறுபடியும் மருத்துவரிடம் சென்று மலச்சிக்கலுக்கு மருந்து வாங்கிச் சாப்பிட்டு மலம் கழிக்கிறோம். இதற்குள் உணவு விஷத்தை வெளியேற்றுவதற்கு உடலின் மருத்துவர் செய்த அத்தனை முயற்சிகளையும் நாம் சாப்பிட்ட மருந்துகள் முறியடித்து விட விஷம் உடலில் தங்கிவிடுகிறது. சரி இரைப்பையில் போகும்போதே உடலுக்கு ஒவ்வாதது என்று தெரிந்து விட்டால் வயிற்றுத்தசைகளை முறுக்கி வாந்தியை ஏற்படுத்துகிறது. இப்படி உடல் எல்லாவழிகளிலும் நம் நலத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறது.

அடிபட்ட இடத்தில் முதலில் ரத்தக்கசிவை உறையவைக்கும் பிளேட்லெட்டுகளுக்கு கட்டளையைக் கொடுத்து உறைய வைக்கிறது. சிதைந்த செல்களைச் சுற்றி வீக்கம், வலி, இவற்றை ஏற்படுத்துகிறது. உடல் சூட்டை அதிகப்படுத்துகிறது. அதிகமான உடல் சூட்டில் வெளியிலிருந்து உடலுக்குள் அந்நிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் நுழையாது. அதற்கு பொருத்தமான சீதோஷ்ணநிலையில் தான் நம் உடலில் நுழையும். உடனடியாக தன் படைவீரர்களுடன் வந்து அந்த இடத்தில் சிதைந்த செல்களை வெளியேற்ற சீழை உருவாக்கி, வெளியேற்றுகிறது. காயத்தின் தன்மையைப் பொறுத்து புதிய செல்களால் அந்தக் காயத்தை பாவு போல நெய்து மூடி விடுகிறது. இந்தக் காரியங்களைச் செய்வதற்கு நம்முடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகவே நெறிகட்டுதல், காய்ச்சல் போன்ற குறிகளை ஏற்படுத்துகிறது.

எனவே முதலில் நமக்கு எது நோய் என்று தெரிய வேண்டும். புறவயமான காரணிகளால் உணவு, காற்று, நீர், குளிர், வெப்பம், மழை, பூச்சிகள், மிருகங்கள், ஆகியவற்றின் கடிகள், காயங்கள், ஆகியவற்றால் உடலில் ஏற்படும் மாறுமைகளுக்கு உடல் உடனடியாக எதிர்வினை புரிந்து விடும். பெரும்பாலான மாறுமைகளை நம்முடைய உடல் மருத்துவரே நலமாக்கிவிடுவார். சிலவற்றுக்கு மட்டும் வெளியிலிருந்து மருந்துப்பொருட்களின் அவசியத்தைக் கோருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோனார் நமது உடலின் மருத்துவர் நலமாக்கும் முயற்சிகளின் போதே தலையிட்டு விடுகிறோம். நாம் நமது உடலைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதனை ஒரு யந்திரமாக நினைத்து அலட்சியம் செய்கிறோம். ஆனால் நமது உடலும் அதன் இயக்கமும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உயிர் பெற்ற அற்புத இயங்கியல் வளர்ச்சி. அதை நாம் அலட்சியப்படுத்தலாமா?

நலம் காக்க…….தொடர்வோம்.

Saturday, 3 November 2012

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம் - 1

உதயசங்கர்juneteenth-synthia-saint-james

 

உயிர் வாழ்வதின் நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பதா? ஏழேழு தலைமுறைக்கும் தேவையான சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா? நன்றாக உணவுண்டு, நன்றாக உறங்கி, நன்றாக வேலை செய்து கிழப்பருவம் எய்தி நொந்து உயிர்விடுதலா? இல்லை தன் பெண்டு, தன் பிள்ளை என்று தன் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக்கி யந்திரமாய் வாழ்ந்து செத்து மடிவதா? தேடிச் சேகரித்த புகழ் தரும் போதையில் தலைசுற்றிக் கொண்டே திரிவதா? வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருப்பதா? தன் இலக்கு எது என்று தெரியாமலே வாழ்நாள் முழுவதும் அம்புகளை எல்லாத்திசைகளிலும் எறிந்து கொண்டு திரிவதா?

வாழ்வதின் நோக்கம் தான் என்ன?

வாழ்வதன் நோக்கம் இன்பமாக இருத்தல் தான். ஒவ்வொரு உயிரும் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை இன்பமாக இருக்கவே விரும்புகிறது. எந்த ஒரு உயிரும் துன்பத்தை விரும்புவதில்லை. இன்பமாக இருப்பதற்காகவே எல்லாஉயிர்களும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டேயிருக்கின்றன.

சரி. இன்பம் என்றால் எப்படிப்பட்ட இன்பம்? உண்பது, உறங்குவது, எப்போதும் ஏதாவதொரு போதையிலிருப்பது, இப்படிப்பட்ட இன்பங்கள் எல்லாம் புலன்களின் வழியே கிடைக்கிற தற்காலிகஇன்பங்கள். இந்தத் தற்காலிக இன்பங்கள் எல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறது. நல்ல உணவு, காற்று, நீர், உறக்கம் , கலவி, எல்லாவற்றுக்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. தற்காலிக புலனின்பங்களில் உச்சபட்சமானது கலவியின்பம். இயற்கை இனவிருத்தியோடு அதைப் பிணைத்து இடையறாமல் உயிர் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு இந்த அனைத்து இன்பங்களும் இயற்கையின் சுழற்சிக்கு உட்பட்டவை. எனவே இயற்கையின் நியதிகளுக்கேற்ப உயிரினங்கள் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் இயற்கையோடு இயைந்தும் இயற்கையின் மீது ஆளுகை செலுத்தியும் தன் புலனின்பங்களைத் தக்க வைத்துக் கொள்கிறான்.

இந்தத் தற்காலிக புலனின்பங்கள் சீராக இருப்பதற்கு மிக முக்கியமானது உடல்நலம். சரி. உடல்நலம் என்றால் என்ன? உடல்நலம் என்பது மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கணையம், எலும்புகள், தசைகள், நரம்புகள் என்று சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் போலத் தனித் தனியாக நட்டுபோல்ட்டாக இயங்குகிற இயக்கமல்ல. நுரையீரல் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ, இதயம் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ சொல்லிவிடமுடியுமா. நாம் அப்படிச் சொல்வதுமில்லை. எல்லாஉறுப்புகளும் ஒன்றிணைந்து இயங்குகிற சமச்சீரான இயக்கத்தையே நாம் உடல்நலம் என்று சொல்கிறோம். உயிர் என்பது மனதும் உடலும் இணைந்தது. உடலும் மனமும் இணைந்தும், மனதின் ஆளுகையின் கீழ் ஒருங்கிணைந்தும் உயிர் தன் இருத்தலை நிச்சயித்துக்கொள்கிறது. எனவே உடல்நலம் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் நலமாக வைத்துக் கொள்வது என்று புரிந்து கொள்ளலாம். இதைப் பொதுவான வரையறையாகக் கொள்ளலாம்.

மரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன? யோசித்துப்பாருங்கள். வெறுமனே மரம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நமக்கு என்ன தோன்றுகிறது. வேப்பமரம், புளியமரம், ஆலமரம், அரசமரம், இப்படிக் குறிப்பிட்ட மரங்களே நமக்குத் தோன்றும். ஏனெனில் மரம் என்ற ஒன்று கிடையாது. அதே போல எல்லாவேப்பமரங்களும் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் குட்டையாய், பருமனாய், உயரமாய், முண்டுகள் நிறைந்து, விரிந்து பரந்ததாய், இப்படி எத்தனை விதமான வேப்பமரங்கள்! சரி அந்த விதவிதமான வேப்பமரத்தின் இலைகள் எல்லாம் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொரு தனித்தனி இலையும் ஒவ்வொரு விதமாய் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அது தான் இயற்கையின் மாயாஜாலம். அற்புதம். எந்த ஒரு சிறு உயிரையும் ஜெராக்ஸ் பிரதிகள் எடுப்பதைப் போல எடுக்கவில்லை. ஒவ்வொன்றும் தன்னுடைய தனித்துவமான உயிரியக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரின் உள்ளுணர்வு, மரபணுக்களின் ஞாபகச்சேகரிப்பினால் உருவாகிறது. இந்த உள்ளுணர்வும், சூழலும் இணைந்து தனித்துவமிக்க உயிர்களை உருவாக்குகிறது.

இப்படி உயிர்கள் அனைத்தும் தனித்துவமிக்கதாக உருமாற லட்சக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கலாம். சூரியனிலிருந்து தெறித்து விழுந்த இந்தப் பூமியில் உயிர்கள் தோன்ற கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின என்றால் உயிர்களின் பரிணாமவளர்ச்சிக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இந்தப் பரிணாமவளர்ச்சியில் தான் ஒவ்வொரு உயிரும் தான் உயிர்வாழ்வதற்கான தனித்துவமிக்க உடல் உயிரியக்கத்தைப் பெற்றன. சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னால் தான் மனிதகுலத்தின் மூதாதை தோன்றியிருக்கிறாள். இந்தக் கதையெல்லாம் எதற்கென்றால் பூமியிலுள்ள உயிர்கள் அனைத்தும் மனிதன் உட்பட தனித்துவமிக்கவை. எனவே இந்தத் தனித்துவமிக்க உயிர்களின் தனித்துவமிக்க நோய்களுக்குத் தனித்துவமிக்க மருத்துவமுறை வேண்டும்.

தனித்துவமிக்க மனிதனின் தனித்துவமிக்க உடல் உயிரியக்கம் தனித்துவமிக்க நோய்களையே உருவாக்கும். இந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டு மருத்துவம் செய்யும்போது அந்தத் தனித்துவமிக்க நோய் விரைவாகக் குணமாகிறது. அந்தத் தனித்துவமிக்க மனிதனின் நலம் மீட்கப்படுகிறது. ஆக குமாருக்கும் ஆனந்துக்கும் காய்ச்சல் வந்ததென்றால் இரண்டுபேரின் நோயும் ஒன்றல்ல. அதாவது குமாருக்கு வந்த காய்ச்சல் குமார் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். அதேபோல ஆனந்துக்கு வந்த காய்ச்சல் ஆனந்த் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்?

குமாருக்குக் குளிரும் உடல்வலியும் அதனால் அசையமுடியாமையும் தாகமின்மையும் உடல்முழுவதும் சூடாகவும் இருக்கிறது. ஆனால் ஆனந்துக்கு தலையும் கால்களும் சூடாக இருக்க, உடல்வலியினால் புரண்டுகொண்டே இருக்கிறார் தண்ணீர் தாகமும் அடிக்கடி எடுக்கிறது. அப்படியானால் இரண்டு காய்ச்சலும் ஒன்றாகுமா? நாம் இருவருக்கும் ஒரே மருந்தைக் கொடுக்கலாமா?

இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

நலம் காக்க… மீண்டும் தொடர்வோம்.

Saturday, 9 June 2012

கதையின் ஆதிபருவம்

 pictures உதயசங்கர்

குரங்கிலிருந்து உழைப்பின் வழியாகவே மானிட இனம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அந்தப் பரிணாமவளர்ச்சியின் பாதையில் விலங்கின் மூளை மனித மூளையாக மாறத் தொடங்குகிறது. அதன் வரையறை குட்பட்ட சைகை மற்றும் ஒலிக்குறிப்புகள் தன் எல்லையை விரிகிறது. அதற்கு முன்புவரை விலங்குகள், பறவைகள்,பூச்சிகள், எல்லாமும் சில குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகளின் மூலம், சைகை மற்றும் உடல் மொழியின் மூலம் தங்கள் தேவைகளான பசி, கோபம், பயம், இணைவிழைச்சு, என்று எல்லா உணர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. இந்த சைகை, உடல், ஒலி, மொழியை அவைகள் கற்றுக் கொள்வதில்லை. பிறக்கும்போதே அதன் உள்ளுணர்வின் ஆழத்தில், தலைமுறை தலைமுறையாக, தொடர்ந்து வருகின்றன. அவை புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது திகைத்துப் போய்விடுகின்றன. தங்கள் ஆதிஞாபகச் சில்லுகளில் தேடிப்பார்த்து ஏமாந்து போகின்றன. குறிப்பிட்ட, வரையறைக்குட்பட்ட,சைகை,மற்றும் உடல் மொழி, ஒலிக்குறிப்புகளைத்தாண்டி அவற்றால் புதிதாகச் சிந்திக்க முடிவதில்லை.

ஆனால் மனிதன் அப்படியில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக்குறித்தும் தன்னுடைய சூழல் குறித்தும் புறவயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். தன்னைக்குறித்து தனியாகவும், சூழலோடு பொருத்தியும், சிந்திக்கிற மனிதனின் ஆற்றலையே பகுத்தறிவு என்கிறோம். மற்ற உயிரினங்களுக்கோ தன்னைச் சூழலில் இருந்து பிரித்துணரும் ஆற்றல் கிடையாது. இயற்கையோடு இணைந்தே அவை தங்களுடைய தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எனவே அந்த இயற்கைச் சூழல் மாறும்போது அல்லது அழியும்போது மாறிய சூழலுக்கேற்ப தங்களுடைய தகவமைப்புகளை மாற்ற முடியாத உயிரினங்கள் அழிந்து விடுகின்றன். பரிணாமக்கோட்பாட்டின் மூலமாக மனிதகுல வரலாற்றில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்திய டார்வினின், தகுதியானவைகளின் உயிர்மீட்சி (survival of the fittest  ) என்ற கொள்கையின்படி இயற்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாத எல்லா உயிரினங்களுமே வாழ்வதற்கான தங்களுடைய தகுதியை இழந்து விடுகின்றன.ஆனால் மனிதர்கள் மட்டுமே தன்னுடைய உழைப்பின் மூலமும் பகுத்தறியும் திறன் மூலமும், இயற்கையின்மீது வினை புரிந்து தாங்கள் வாழத்தகுதியாக இயற்கையை மாற்றுகிற வல்லமை பெற்றவர்களாக மாறியிருக்கின்றனர்.

உழைப்பு சகமனிதர்களுடனான உறவில் பெரும் மாற்றத்தை உருவாக்குகிறது. தங்களுடைய வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, விலங்கு பருவத்திலிருந்த பழைய சைகை மற்றும் உடல்மொழியும், ஒலிக்குறிப்புகளும், போதுமானவைகளாக இல்லை. அப்போது புதிய சைகை மற்றும் உடல்மொழியும் புதிய ஒலிக்குறிப்புகளை சிருஷ்டிக்கின்றனர். சிந்தனையின் ஒளி தன் கிரணங்களை மெல்ல முகிழ்க்கிறது. மனிதமூளையின் மடிப்புகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவங்களை, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளும் பேராவல் அதிகரிக்கின்றது. இந்தப் பேராவலில் விளைந்த பயிர் தான் கதை என்று சொல்லலாம். கடந்த காலத்தைச் சொல்கிற சமூகச் செயல்பாடாகவே ஆதியில் கதைசொல்லுதல் தொடங்கியிருக்கலாம். முதலில் இது குகைப்பாறைக் கீறல்களாக, ஓவியங்களாக, குறியீடுகளாக,அடையாளச் சின்னங்களாக, மெல்ல மெல்ல மனிதனின் நனவிலி மனதில் பெரும் விருட்சமென வளர்ந்திருக்கிறதுகதை. மொழி தோன்றியவுடன் கதைகள் ஆயிரங்கால் பூச்சிகளைப் போல ஊர்ந்து சென்று மனித உயிரில் குடியேறிவிட்டது. பின்னர் கற்பனைகளும், புனைவும் பிறந்து கதைகளை மனித இனத்தின் மூச்சாக மாற்றி விட்டது.

ஆதியில் வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்த போது தன்னுடைய வேட்டையனுபவங்களைக் கதையாக மாற்றினான். ஆற்றங்கரை நாகரிகத்தில் வேளாண்சமூக அனுபவங்களை கதையாக மாற்றினான். மனித சமூகத்தின் உற்பத்திசக்திகளின் மாற்றத்திற்கேற்ப கதைகளும் மாறிக் கொண்டே வந்தன. கதையின் உடல் முழுவதும் மனிதகுலவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறபோது புதிது புதிதாகப் பிறக்கிறது. கதை சொல்வது படைப்பூக்கஉணர்வைத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பழைய கதையாக இருந்தாலும் கதை சொல்பவர் அதை அப்படியே சொல்வதில்லை. கதை கேட்பவரும் அதை அப்படியே கேட்பதும் இல்லை. எனவே தான் கதைகளுக்கு என்றும் மூப்பில்லை. அன்றலர்ந்த மலர் போல மலர்ந்து கொண்டேயிருக்கின்றன கதைகள்.

ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுடைய வெற்றிகளை, தோல்விகளை, வேட்கைகளை, கொண்டாட்டங்களை, கனவுகளை, கதைகளுக்குள் நேரிடையாகவும், மறைமுகமாகவும், பொதிந்து வைத்திருக்கின்றன. அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தவும் செய்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட பிரதேசமும், மண்ணும் நீர்வளமும், இயற்கையும், வாழ்நிலையும் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்துக்கென்றே பிரத்யேகமான கதைகளை உருவாக்குகின்றன. இந்தக் கதைகள் அந்த இனக்குழுவின், அந்த வட்டாரத்தின் மொழிப்பிரயோகம், பழக்க வழக்கங்கள், வரலாறு, பண்பாட்டைத் தெரிவிக்கின்றன.

இன்று ஒற்றைக் கலாச்சாரத்திணிப்பினால் நம் பன்முகக் கலாச்சாரத்தின் வேர்கள் அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே போல தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன் கேம்ஸ்,என்று நவீன சாதனங்கள் பெருகி கதை சொல்லும் நம் மரபினை அரித்துக் கொண்டிருக்கின்றன. பழங்கதைகள்,நாடோடிக் கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வீரகதைகள், துப்பறியும் கதைகள், மந்திரக்கதைகள், ராஜாராணிக்கதைகள், புதிர்க்கதைகள், விடுகதைகள், பஞ்சதந்திரக் கதைகள், என்று கதைகள் தான் எத்தனை வகை?

இன்று குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு தாத்தாக்களோ,பாட்டிகளோ, வீடுகளில் இல்லை. அப்பா, அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடப் பயிற்சிக் கூடங்களாகி விட்டன. ஆனாலும் குழந்தைகள் கதைகளைத் தங்களுக்கே உரிய பாணியில் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளிடம் தான் கதையின் மலர் பூத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு குழந்தை இப்படிக் கதை சொல்லியது; ஒரு வீட்ல களவாணிப்பய வந்து எல்லாத்தையும் சுருட்டி எடுத்துகிட்டுப் போகும் போது அந்த வீட்ல இருந்த குழந்தை பாத்துருச்சி.. அது உடனே களவாணிப்பய கிட்ட என்ன சொல்லுச்சி தெரியுமா? மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்துகிட்டுப் போயிரு..இல்லேன்னா அப்பாவை எழுப்பிருவேன்.

Saturday, 2 June 2012

விளையாட்டின் உளவியல்

 

உதயசங்கர்

 

“ஓடி விளையாடு பாப்பா - நீpictures2

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா”

மகாகவி பாரதியின் ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் அர்த்தங்கள் துடிப்பது தெரிகிறது. ஓராயிரம் கட்டுரைகளில் விரித்து விரித்து சொல்வதை ஓரிரு வரிகளில் செறிவுடன் சொல்கிறவன் கவிஞன். அதிலும் பாரதி மகாகவி. அவன் கவிதைச் சொற்கள் ஒவ்வொன்றிலும் சமூக உணர்வு பொங்கித் திளைக்கும். எத்தனைமுறை படித்தாலும் அத்தனை ஆழம் இழுத்துச் செல்லும் மகாகவியின் கவிதைகள். மேலே கண்ட பாடலில் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஓடியாடி விளையாடுவது எத்தனை முக்கியம் என்பதை இரண்டாவது வரியில் ஓய்ந்து, சோம்பேறியாக இருக்கக்கூடாது என்று சொன்ன பாரதி அடுத்த வரியில் கூடி விளையாடச் சொல்கிறானே அதோடு யாரையும் நிந்திக்காமலிருக்கவும் கேட்கிறான். ஏன் கூடி விளையாட வேண்டும்?

இன்று பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களின் கட்டுப்பாடுகளினால் வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே தனிமையில் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனக்குத் தானே விளையாடிக் கொண்டு பத்திரமாய் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதைத் தவிர வேறு எந்த சமூகச் செயல்பாடுகளுமின்றி தனிமை, வீட்டில் பெரியவர்களின் கட்டுப்பாடுகளினால் தனிமை. இப்படி உள்ளும் புறமும் தனிமையில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

விலங்குகள், பறவைகள், பூச்சிகள் முதல் மானுட சமூகம் வரை கூடி வாழ்தல் என்பது இயற்கையின் உள்ளுணர்வினால் விளைந்த செயல்பாடு. அது தங்களை இந்த பூமியில் வாழத்தகுதியானவர்களாக்குகிற இயற்கை வாழ்முறை. கூடி வாழ்தலில் தான் ஒரு சமூகம் உயிர்த்திருக்கிறது. கூடி வாழ்வதற்கான கூட்டுச் செயல்பாட்டுக்கான சில அடிப்படை உளவியல் இயல்புகளை எல்லா உயிரினங்களுமே இயல்பாகக் கொண்டிருந்தாலும் மானுட இனம் அதை மிகச் சிறப்பாகவே தன் பகுத்தறிவின் துணைகொண்டு தன் சமூகத்துக்குப் பயிற்றுவிக்கிறது. அது மனதுக்கும், உடலுக்கும் உரமூட்டுவதாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக சமூகத்தின் அங்கத்தினரான ஒவ்வொருவரையும் பண்படுத்துகிறது. அதற்கு குழந்தைப்பருவத்திலேயே சமூகம் கண்ட வழிமுறை தான் விளையாட்டு கூடி விளையாடும் விளையாட்டுகளில் குழந்தையின் மனம் களிப்புறுகிறது. எந்த கட்டுப்பாடுமின்றி தன்னைத் தானாகவே உணர்ந்து, தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, மொத்தத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படும் செயல்களில் விளையாட்டுக்கு முக்கியப்பங்கு உண்டு.

அதுமட்டுமல்ல. புறஉலகின் எல்லா நெருக்கடிகளிலிருந்தும், பெற்றோர்ககளின், ஆசிரியர்களின், வீட்டுப்பாடச்சுமையின் மதிப்பெண் பூதங்களிலிருந்து விடுபட்டு தங்களுடைய இயல்பான படைப்பூக்க உணர்வை மீட்டெடுக்கவே குழந்தைகள் விளையாடுவதற்கு பேராவல் கொள்கின்றனர். படைப்பூக்க உணர்வை மீண்டும் மீண்டும் உருவாக்குவதின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அனுபவிக்கத் துடிக்கின்றனர். இதோடு சமூகத்தில் அவர்கள் இயைந்து வாழ விளையாட்டு அவர்களை பண்படுத்துகிறது. தன் வயதொத்த குழந்தைகளோடு கூடி விளையாடும்போது கூட்டுச்செயல்பாடுக்கான விவேகமும், கூட்டுணர்வும் ஏற்படுகிறது. கூடிச்சேர்ந்து செய்வதில் ஒரு தார்மீக நெருக்கமும், அழகியலும் தோன்றுகிறது. அதோடு கூட்டுச்செயல்பாட்டிலேயே தனித்துவம் காணும் தனிப்பாணியும் உருவாகிறது.

கூட்டுச் செயல்பாட்டை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பும் இயல்பாகவே தோன்றுகிறது. இந்தத் தலைமைப்பண்பின் தனித்தகுதியாக எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்கிற திறன் வளர்கிறது. பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதால், அன்பும், நட்பும் பெருகித் தழைக்கிறது. விளையாட்டுச் சண்டை என்பது விளையாட்டுச் சண்டையாகவே முடிந்து விடுகிறது. குழந்தைகளால் நீண்ட நேரத்திற்குக் கோபத்தையும், வெறுப்பையும், கசப்பையும் வளர்க்க முடியாது. சிறிது நேரத்திலேயே பழம்விட்டு சேர்ந்து கொள்வார்கள். யார் பக்கம் நியாயம் என்று தர்க்கரீதியாக யோசிக்காமல் யார் அதிகமாகப் புண்பட்டிருக்கிறார்களோ, யார் அதிகம் வருத்தமடைந்திருக்கிறார்களோ அவர்களுக்காக விட்டுக்கொடுப்பார்கள். இந்த விட்டுக்கொடுத்து இயைந்து வாழ்கிற பண்பு விளையாட்டின் மூலமே கிடைக்கிறது. இதற்கேற்ப இருவர் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து பத்துபேர் விளையாடும் விளையாட்டுகள் வரை அந்தந்தக் கால சீதோஷ்ண நிலைமைகளுக்கேற்பவும், அந்தந்தப் பகுதி மண், வளம், வாய்ப்புகளுக்கேற்பவும் இருந்து வந்தன. ஆனால் இப்போது அந்தப் பன்முக விளையாட்டுகளின் களத்தை கிரிக்கெட் என்ற ஒற்றை விளையாட்டு அபகரித்துக்கொண்டது. தொலைக்காட்சியின் மூலம் திணிக்கப்பட்ட அந்த விளையாட்டு நிறைய வசதிகளைக் கோருவதால் எல்லாக் குழந்தைகளாலும் அதில் பங்கேற்க முடிவதில்லை. இருந்த இடத்திலே வீட்டின் முற்றத்திலே திண்ணையிலே தெருவிலே, மைதானத்திலே, என்று வித விதமாய் விளையாடக்கூடிய வாய்ப்புகள் இந்த ஒற்றை விளையாட்டினால் அழிந்து போய்விட்டது.

கிட்டிப்புள், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, கிளியாந்தட்டு, தாச்சி, ஓடு அடுக்குதல், எறி பந்து, கல்லாமண்ணா, பாண்டி, கள்ளன்போலீஸ், கபடி, மரம் ஏறுதல், பச்சைக் குதிரை, செதுக்குழுத்து போன்ற ஓடி ஆடும் விளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், ஆடுபுலி, ஒத்தையா ரெட்டையா, போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளுமாய் எத்தனை எத்தனை விளையாட்டுகள்! காலத்திற்கும், பருவத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற மாதிரியான உள்விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகை வகையாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இப்போது காணவில்லை.

காலத்திற்கேற்ப புத்துருவாக்கம் செய்யலாம். ஆனால் இவை மேலே குறிப்பிடப்பட்ட விளையாட்டுகளை எதுவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில்லை. ஆனால் பெரிய அளவில் பொருளாதார வசதி தேவைப்படாத விளையாடுபவர்களின் நோக்கத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கக்கூடிய விளையாட்டுகள். இந்த விளையாட்டுகளை யெல்லாம் விழுங்கி ஏப்பமிட்டது கிரிக்கெட் என்ற வெளிவிளையாட்டு மட்டுமல்ல. கம்ப்யூட்டர் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் என்று சொல்லப்படுகிற உள்விளையாட்டுகளும் தான்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற அந்த வீடியோ கேம்ஸிலும், கம்யூட்டர் கேம்ஸிலும் உள்ள பிரத்யேகமான தன்மை குழந்தை தன்னைப்போன்ற இன்னொரு குழந்தையோடு விளையாடுவதைத் தடுக்கிறது. அது பிரதிமையோடு விளையாடத் தூண்டுகிறது. அந்தக் காட்சிப் பிரதிமைகள் எப்படி இருக்கின்றன? கார்ரேஸ், வேட்டையாடுதல், பைக் ஓட்டுதல் போன்ற குழந்தையின் வயதுக்கும், மனநிலைக்கும், யதார்த்தத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லாத விளையாட்டுகளே குழந்தைகளுக்கு கிடைக்கின்றன. வேறு வழியின்றி பெரியவர்களின் அடக்குமுறைக்கும் அதட்டலுக்கும் அஞ்சி குழந்தைகள் விளையாடுகின்றனர். அதில் எந்தக் கூட்டுச் செயல்பாடும் இல்லை. விட்டுக்கொடுத்தல் இல்லை. தலைமைப்பண்பு தேவையில்லை. அன்போ, நட்போ, பாசமோ, தேவையில்லை. அதிலே ஒரே குறிதான். வெற்றிபெறவேண்டும் நிறைய்ய பாயிண்டுகள் எடுக்கவேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். தனிமையில் விளையாடும் இந்த விளையாட்டு குழந்தையிடம் பிடிவாதத்தை வளர்க்கிறது. தான் என்கிற வெறியை கிளப்புகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.

கார் ரேஸ் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை எதிர்ப்படும் தடைகளை முறியடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறான். சாலையோரத் தடுப்பைத் தகர்க்கிறான். விளக்குக் கம்பங்களை வீழ்த்துகிறான். எந்த சிக்னலையும் மதிக்காமல் விரைகிறான். குறுக்கே எதிர்ப்படும் எவரையும் காரை ஏற்றிக் கொல்கிறான். சில நேரம் பிளாட் பாரத்தில் நடந்து போய் கொண்டிருப்பவர்கள் மீதும் காரை ஏற்றுகிறான். அது பிரதிமையே என்றபோதிலும் குழந்தையின் முகத்தில் காணும் தீவிரத்தையும், வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியையும் பார்க்கும்போது உள்ளம் பதைபதைக்கிறது. அருகில் அவனுடைய பெற்றோர்கள் உட்கார்ந்து கொண்டு அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன மாதிரியான எதிர்கால மானிட சமூகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கவலை பீடிக்கிறது. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலமாக நமது காலம் இருக்கிறது. குழந்தைகள் கூடி விளையாடுவதற்கான தருணங்களே இல்லாமல் ஆகிவிட்டது நம் காலம். வெறிச்சோடிக்கிடக்கின்றன தெருக்கள். குழந்தைகளின் குரலுக்காக ஏங்கித்தவிக்கின்றது நிலா. சுட்டெரிக்கும் சூரியன் கூட இனி சுடமாட்டேன் வாருங்கள் குழந்தைகளே என்கிறது. ஆனால் குழந்தைகள் வீடுகளுக்குள் எப்போதும் அலறும் முட்டாள் பெட்டிகளின் முன்னேயோ, பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களிலோ வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். சமூகத்தின் கூட்டுச்செயல்பாட்டின் ஆதாரமான, தார்மீக நெறிகளைப் பயிலாமலே ஒரு எதிர்கால சமூகம் வளர்ந்தால் என்ன ஆகும்? யோசிக்க வேண்டும்.

Monday, 28 May 2012

மறுக்கும் பக்குவம்

child-obesitykoke

உதயசங்கர்

 

இப்போது பெரியவர்களாக இருக்கும் பெரும்பான்மையோருக்கு தங்கள் பாலியகாலம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. எல்லா வீடுகளிலும் குஞ்சும் குறுமானுமாக குழந்தைகளின் நெருக்கடி. போதும் போதாத வருமானம், அப்போதும் இருந்த விலைவாசி, வேலையின்மை, நிரந்தரமான எதிர்காலப் பயத்திலேயே வாழ்நாளைத் தள்ளிக் கொண்டிருந்த பெற்றோர்கள். ஒண்டிக்குடித்தனம், வாடகை வீடு, தண்ணீர் பிரச்சனை, உணவுப்பற்றாக்குறை என்று ஏராளமான குறைகளுடனே வளர்ந்தவர்கள் இன்றிருக்கும் பெரியவர்கள். இதோடு மட்டுமா? வீட்டில் அடி உதை பள்ளிக்கூடத்தில் தண்டனைகள், வெளியில் குழந்தைகள் என்றாலே ஏளனம் என்று எப்போதும் மனம் சோர்வுறும் வகையிலேயே வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்களுடைய குழந்தைப்பருவம் போல தங்களுடைய குழந்தைகளுக்கும் அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள் அது நியாயம் தான்.

தங்கள் பெற்றோரை விட சற்றே கூடுதலான வசதி வாய்ப்புகளைப் பெற்ற இன்றைய பெரியவர்கள், அதிலும் குறிப்பாக மத்தியதர வர்க்கப் பெற்றோர்கள், இன்னொரு விபரீதமான முடிவெடுத்து குழந்தைகளின் ஆளுமையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தாங்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த எதிர்மறைச்சொற்களான இல்லை முடியாது வேண்டாம் இவற்றைத் தங்களுடைய குழந்தைகள் கேட்கவே கூடாது என்று தீர்மானமான முடிவெடுக்கிறார்கள். தாங்கள் அடைந்த ஏமாற்றங்களைத் தங்களுடைய குழந்தைகள் அடையவே கூடாது என்று மனதுக்குள் சத்தியம் செய்து கொள்கிறார்கள். தனக்குக் கிடைக்காத எல்லாமும், தான் ஆசைப்பட்ட எல்லாமும் தங்களுடைய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றார்கள். இதன் விளைவாக தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த உணவு, சிறந்த உடை, சிறந்த கல்வி (?) சிறந்த இருப்பிடம் சிறந்த விளையாட்டுகள், சிறந்த பொழுதுபோக்குகள் இன்னும் சிறந்த சிறந்த என்று எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவற்றை தேர்ந் தெடுக்க ஆசைப்படுகின்றனர். படித்து நல்ல அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்ற மத்தியதர வர்க்கத்தினரின் குணநலன்களை யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ இல்லையோ முதலாளிகளும், வியாபாரிகளும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே பெரும்பாலான இன்றைய பொருட்களின் விளம்பரங்களில் குழந்தைகள் வருகிறார்கள். நம்மிடம் அந்தப்பொருட்களின் சிறப்புகளைப்பற்றி ஒரு விஞ்ஞானியைப் போல ஆனால் குழந்தைத்தனத்துடன் எடுத்துரைக்கிறார்கள். அத்தோடு அந்தப்பொருள்தான் உலகத்திலேயே சிறந்த பொருள் என்றும் அதை வாங்குவதின் மூலமே பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமையை செய்ததாக, அர்த்தமாகும் என்று எமோசனலாக, செண்டிமெண்டலாக, மனதைத்தொடுகிறார்கள் பல விளம்பரங்களின் முடிவில் பெருமிதமான உணர்வில் கண்கலங்கும் பெற்றோர்களின் குளோசப் முகங்களும், மகிழ்ச்சியில் திளைக்கும், பெற்றோர்களை நன்றிப்பெருக்கோடு அணைத்து மகிழும் குழந்தைகளின் குளோசப்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் மனநிலையும் குழந்தைகளின் மன நிலையும் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சாதாரணமாக எந்தப்பொருள் வாங்கினாலும் அந்தப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் நம்மிடம் கிடையாது. விளம்பரம் செய்தால் போதும் அது நல்ல பொருள்தான் அதிலும் சினிமா, கிரிக்கெட். நடசத்திரங்கள், குழந்தைகள், பெண்கள் வந்து சிபாரிசு செய்தால் அது கண்டிப்பாக மிகச்சிறந்த பொருளாகத்தான் இருக்கும் என்ற மூடநம்பிக்கை பெரும்பான்மையோருக்கு இருக்கிறது மூடநம்பிக்கை எதில் வேண்டுமானாலும் வரலாமே உடனே அந்தப்பொருளை வாங்கிக் குழந்தைக்குக் கொடுப்பதில் ஒரு ஆனந்தம், சாக்லேட், பி°கட், கோக், பெப்சி, பற்பசை, கொசுவர்த்தி, சோப், நகைகள், கார், கணினி, ஹெல்த் டிரிங்க்°, ஜங்க் புட்°, என்று எல்லாவற்றிற்கும் குழந்தைகள் வருகிறார்கள். பெற்றோர்களும் அகமகிழ்ந்து அவரவர் வசதிக்கேற்ப வாங்கித் தருகிறார்கள். பின்பு பெருமையுடன் “சாப்பிடும் போது எம்பையனுக்கு எப்பவும் கோக் இருக்கணும்..... என்ன சொல்ல முடியுது இந்தக்காலத்து பிள்ளைங்ககிட்ட..... என்றோ” இவ.... “இந்த சேவு மிக்சர் எல்லாம் சாப்பிட மாட்டா.... ஒன்லி சாக்லேட், பர்கர், பிட்ஸா, சாண்ட்விச்... அவ படிக்கிற °ஸ்கூல் இண்டர்நேஷனல் °ஸ்கூலாச்சே.... அதான்.....”

என்றோ பெருமையுடன் பேசுகிற பெற்றோர்களும், குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடி, ஆங்கிலக்கனவானாக வளர்க்க நினைக்கும் பள்ளிக்கூடங்களும் தாய்மொழியை வேலைக்காரர்களின் மொழி என்று நினைக்கிற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் சூழலும் சில பல தலை முறைகள் தமிழ் வாசிக்கத் தெரியாமலும், எழுதத்தெரி யாமலும், அப்படியே எழுதத்தெரிந்தாலும் எழுத்துப் பிழைகளும் அர்த்த விபரீதங்களும் நிறைந்ததாக எழுதுகிற தலைமுறைகள் வந்திருப்பதற்கு பெற்றோர்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற போதம் இல்லாமல் எதிர்காலத்தலைமுறைகளை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

கோக், பெப்சியில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட், ஹைட்ரேகுளோரிக் ஆசிட்டினால் இரைப்பையில் அரிப்பு, புண்கள் ஏற்படும் என்று தெரியாதா? சாக்லேட்டில் உள்ள கோக்கோவினால் குழந்தைகளின் பற்கள் சொத்தை விழுவது மட்டுமல்ல, பிடிவாத குணமும் அதிகரிக்கும் என்று தெரியாதா? ஜங்க்புட்°களால் உடல்பருமனும், சிலருக்கு கேன்சரும் வரும் என்றுதான் தெரியாதா? இப்படிக்கேட்டால் நிறைய்யப்பேர் அய்யய்யோ...உண்மையில் தெரியாது என்று சொல்வார்கள் இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் விளம்பரக்காட்சிகளின் மனோவியல் தாக்குதல்களுக்கு முன்னால் எப்போதோ கேட்கவோ, வாசிக்கவோ நேர்கிற அறிவார்ந்த, பகுத்தறிவு பூர்வமான விளக்கங்கள் எடுபடுவது சிரமம்தான்.

ஆனால் குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கிற மனோநிலையை மாற்றலாம். கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலை விபரீதமான, முரட்டுத்தனமான, பிடிவாத குணத்தைக்குழந்தைகளிடம் வளர்க்காதா? ஏற்கனவே கூட்டுக்குடும்பங்கள் சிதைந்த நிலைமையில் உறவுகளே இல்லாத நிலையில், இத்தகைய பிடிவாத மனநிலை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுயோசித்திருக்கிறோமா? இந்தக்குழந்தைகள் பெரியவர்களாகி வெளியுலகை சந்திக்க நேர்கிற போது, ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தச் சமூகத்தின் குரூரம் முகத்திலறையும் போது என்ன ஆவார்கள் என்று யோசித்திருக்கிறோமா? எனவே குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கித் தருகிற, அங்கீகரிக்கிற மனநிலையைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். குழந்தைகளிடம் மறுக்க வேண்டும். பக்குவமாக, மென்மையாக, ஆனால் அழுத்தமாக மறுக்க வேண்டும். குழந்தைகள் முதலில் ஏமாற்றமடையலாம். அழுது புலம்பலாம். ஆர்ப்பாட்டம் செய்யலாம், மௌனமாக ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் பெற்றோர்களுக்கு மறுக்கின்ற பக்குவம் வேண்டும். நல்ல விஷயங்கள் எது எது என்று பெற்றோர்கள் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளிடம் கெட்ட விஷயங்களைப் பற்றி விளக்க முடியும். இதமான மனநிலையில் குழந்தைகளிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அவர்களுக்கு உண்டு. சொல்கிற விஷயம் குறித்து நமக்கு சந்தேகம் இருக்கக் கூடாது. தெளிவாக, பெருமிதமான உணர்வோடு அவற்றைப்பற்றி எடுத்துச்சொல்லும்போது அதே பெருமித உணர்வும் தெளிவும், பக்குவமும் குழந்தைகளிடம் ஏற்படும். தங்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு நல்ல விஷயங்களையேச் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை வளரும். அதற்கு முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுவரவேண்டும். அந்த விழிப்புணர்வைப் பெற பெற்றோர்கள் முன்வரவேண்டும் வருவார்களா?

Wednesday, 23 May 2012

விளையாட்டே வாழ்க்கை

 

உதயசங்கர்

 

இளம் பருவத்தில் எல்லா உயிரினங்களும் ஓடி, குதித்து, பாய்ந்து, விளையாடித், தங்களுடைய உடலை உறுதி செய்கின்றன. உள் உறுப்புகளை இதயம், நுரையீரல், சிறுநீரகம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்று எல்லாப்பகுதிகளும் சீராக இயங்கவும், வெளி உருவான எலும்புகள், தசைகள், அவற்றின் சக்தி, வலிமை கூடவும் விளையாட்டை உயிரினங்களின் உள்ளுணர்வோடு இணைத்து விட்டிருக்கிறது இயற்கை. குழந்தையும் அப்படித்தான். பிறந்த குழந்தை தன் கை கால்களை உதைப்பதில் துவங்கி அழுவது வரை தன் உடலின் எல்லாப்பகுதிகளையும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சியே. இந்த முயற்சிகளின் விளைவாகவே குழந்தை வேகமாகவும், திடமாகவும் தன் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து போகிறது. குழந்தையின் தன்னம்பிக்கையும் வளர்கிறது.

பொதுவாக குழந்தை இருந்த இடத்தை விட்டு நகராமல் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருக்கும் வரை பெற்றோர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். ஆனால் எப்போது குழந்தை இருந்த இடத்திலிருந்து அசைய ஆரம்பிக்கிறதோ அப்போதே அவர்களைக் கவலை வந்து தொற்றிக்கொள்கிறது. குழந்தை அசையாமல் ஒரே இடத்தில் இருந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தை அசைய ஆரம்பித்ததும் அவர்கள் கவனம் முழுவதும் குழந்தைகயின்பால் திரும்பிவிடுகிறது. அங்கே போகாதே, இங்கே போகாதே அதை எடுக்காதே இதை எடுக்காதே என்றோ பாத்து பாத்து கீழே விழுந்துரப் போற.. அடிகிடி பட்டா என்ன செய்யமுடியும்... என்றோ எச்சரித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதெல்லாம் குழந்தையின் மீது பெரியவர்கள் கொண்டிருக்கும் அபரிமிதமான அன்பின் விளைவு தான் என்றாலும் குழந்தைக்குத் தன்னுடைய சுதந்திரமான சுயேட்சையான வளர்ச்சியில் ஏற்படும் இடையூறாகவேத் தெரியும். தன் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் தன் உடலில், மனதில் புதிய,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தித் தன் கண்டு பிடிப்புகளினால் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறது குழந்தை. திரும்பிக் குப்புறப்படுக்க முயற்சி செய்கிறது, அதற்காக நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து முயற்சித்து தன் உடலையே தூக்கித் திருப்பிப் போடுகிறது. அதோடு தன் தலையையும் நிமிர்த்துகிறது. அதே போலவே தவழ ஆரம்பிப்பது தன் முதுகெலும்பு உரம்பெற உரம் பெற உட்கார முயற்சிப்பது, உட்கார்ந்த பிறகு எழுந்து நிற்க முயற்சிப்பது, நின்றபிறகு ஒவ்வொரு அடியாக தத்தக்கா பித்தக்கா என்று நடக்க முயற்சிப்பது பிறகு எழுந்து குழந்தை தன் உள்ளுணர்வின் வழியே கிடைத்த தூண்டுதல்களினால் புதிதாகக் கண்டு பிடித்து பெருமகிழ்ச்சி கொள்கிறது. எல்லா தூண்டுதல்களையும் இயற்கையாகவே குழந்தை பெற்றிருக்கிறது.

பெரியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தையின் செயல்களுக்கு இடையூறு செய்யாமலிருப்பது தான் குழந்தையிடம் அவநம்பிக்கையான வார்த்தைகளைப் பேசாமல், குழந்தையின் இயல்பான முயற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். குழந்தை விழுவது, எழுவது இயல்பு. தன்னுடைய ஒவ்வொரு செயலின் மூலமும் அதன் விளைவின் மூலமும் குழந்தை ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்கிறது என்பதை பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே குழந்தை என்ன செய்தாலும் அல்லது குழந்தைக்கு என்ன நேர்ந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கள் என்று சொல்வதாக அர்த்தமில்லை..play

பெரும்பாலான பெரியவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போய் விளையாடுவதில் சம்மதமில்லை. வீட்டிற்குள்ளேயே விளையாட வேண்டும், வீட்டில் பெரியவர்கள் வாங்கிக்கொடுத்திருக்கும், கார், பைக், ஹெலிகாப்டர், °பைடர்மேன், ஹீமேன், பார்பி, டெடிபியர், நாய்க்குட்டி போன்ற பொம்மைகளை வைத்துக் கொண்டு அமைதியாக சமர்த்தாக சத்தம் போடாமல் ஓடி ஆடாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே யாருக்கும் தொந்தரவு செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது இந்த கண்டிஷன்கள்! பெரியவர்களான நம்மாலேயே ஒரு இடத்தில் ஒரே மாதிரி ஐந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார முடிவதில்லை. அப்படி இருக்கும் போது குழந்தைகளிடம் வைக்கிற இந்தக் கோரிக்கைகள் எவ்வளவு மோசமானவை. தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் புதிது புதிதாய் பரவசத்தின் உச்சநிலையிலேயே அனுபவிக்கத் துடிக்கும் குழந்தைகளை இப்படியான கட்டுப்பாடுகளால் கட்டிப் போடுவது சரியாக இருக்குமா?

ஏன் குழந்தைகளை வெளியே சென்று விளையாடவிடுவதில் பெருந்தயக்கம்? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகளிடம் பெற்றோர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அறிவியல் பார்வையற்ற அன்பு, வெறி, பாசம், பொசசிவ்னெஸ், என்று சொல்லலாம். இந்த உணர்வுகளின் விளைவாகக் குழந்தையின் பாதுகாப்பையே பிரதானப் படுத்துகிறார்கள். இதனால் குழந்தை எப்போதும் தங்களுடைய கண்முன்னால், கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குழந்தை வெளியே சென்று விளையாடினால் ஏதாவது நிகழ்ந்து விடுமோ? என்ற நிரந்தர அச்சம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தாய்மார்கள் இந்தப் பதட்டம் காரணமாக நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு உளவியல் ரீதியாக வேறொரு காரணமும் இருக்கிறது. முன்பு எல்லாக் குடும்பங்களிலும் மூன்றுக்கு மேள்பட்ட குழந்தைகள் இருந்ததினாலும், சமூக, பொருளாதார வசதிக்குறைவினாலும் குழந்தைகள் மீது இப்போதிருக்கும் அளவுக்கு அக்கறை செலுத்த பெரியவர்களால் முடியவில்லை. ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்ததை விட வெளியில், தெருவில், மைதானத்தில் இருந்தது அதிகம். இதனால் ஏழ்மையின்,இல்லாமையின் நெருக்கடிகளினூடேயும் குழந்தைகள் சற்று சுதந்திரமாக இருக்க முடிந்தது. ஆனால் இப்போது அநேகமாக எல்லா குடும்பங்களிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. மத்தியதர வர்க்கத்தினரின் சற்றே மேம்பட்ட சமூகப்பொருளாதார வசதியும், தாங்கள் தங்களுடைய இளம் வயதில் அனுபவிக்காதது, ஆசைப்பட்டது, எல்லாவற்றையும் தங்களுடைய குழந்தைகள் அநுபவிக்கவேண்டும் என்ற ஆசையும் சேர்ந்து குழந்தைகளின் சுதந்திரத்தை அதிலும் குறிப்பாக விளையாடும் சுதந்திரத்தை பறித்துவிட்டது. இந்தச் சித்திரம் முழுமையானதில்லை. இன்னமும் மைதானங்களில், கிராமங்களில் தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதென்பது கவலையளிக்கிற விஷயமாக இருக்கிறது.

குழந்தைகள் வெளியே சென்று விளையாடி அடிபட்டால், காயம்பட்டால், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கெட்டுப்போய் விட்டால், விளையாட்டிலேயே கவனம் குவிந்து படிப்பில் அக்கறை குறைந்து போய் விட்டால், என்று ஏராளமான பயங்கள் பெரியவர்களுக்கு. எனவே என்ன செய்கிறார்கள் தெரியுமா? பேசாமல் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் உட்கார வைத்து விடுகிறார்கள். கார்ட்டுன் சேனலோ, சுட்டியோ, போகோவோ, ஏதோ ஒரு சேனலின் கையில் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு அதோடு கையில் டைரி மில்க், எக்ளேர், சாக்லேட் வகையறா, குர்க்குறே, லே°, லிட்டில் °கார்ட்ஸ்° வகையறா என்று எல்லாவித பாக்கெட் நொறுக்குத் தீனிகளையும் கையில் கொடுத்துவிட்டு °°..... அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் இயல்பான இயற்கைத் தூண்டுதல்களுக்கு மாறாக ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல எந்த உடல் உழைப்புமின்றி சர்க்கரையும், எண்ணெயும் கொழுப்பும், புரதமும் கூடவே அன்பளிப்புகளாக கெமிக்கல்ஸ் லையும் உட்கொண்டு குண்டாகிக்கொண்டே வருகிறார்கள். தாங்கள் தங்கள் அருமைக்குழந்தைகளை எதிர்கால நோயாளிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் பெரியவர்கள் குழந்தைகளின் பருமனை “கொழுகொழுன்னு எப்படி இருக்கு குழந்தை” என்று மற்றவர்கள் பாராட்டைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓடியாடி விளையாடாமல் உடலில் சேரும் சர்க்கரையும், கொழுப்பும் எப்படி வளர்சிதை மாற்றமடையும்? உடலோடு சேர்ந்து உரம் தருமா? யோசிக்கவேண்டாமா? பள்ளிக்கூடங்கள் அதிலும் பல மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களின் உளவியலை தெரிந்து கொண்டதால் மைதானங்கள் இல்லாமல் பள்ளிக்கூடங்களைக் கட்டுகின்றனர். பி.டி. பீரியட், என்ற வகுப்பு அட்டவணையில் மட்டும் இருக்கிறது. பெற்றோர்களும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. குழந்தைகள் தான் பாவம் தவித்துப்போகிறார்கள். குழந்தைகள் நம்முடைய எதிர்கால சமுதாயம் என்பதை முதலில் பெரியவர்கள் உணரவேண்டும். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை மிக்க, தீரமிக்க, சமூகம் ஆரோக்கியமான, தீரமிக்க, குடிமகன்களாலேயே உருவாகும். இன்றைய குழந்தைகள்தான் நாளைய குடிமக்கள் என்பதை உணர்ந்து அவர்கள் ஆரோக்கியமாக வளர அவர்களை விளையாட விடுங்கள். வீணான பயங்களை விரட்டியடியுங்கள்.

Wednesday, 16 May 2012

குழந்தையின் ஆளுமை

father  

“மிகவும் நெருங்கிப் பழகி வருவதன் காரணமாக, குழந்தையிடம் மறைந்து கிடக்கும் பெருமை வெளிக்குத் தெரிவதில்லை. குழந்தை சிரிக்கிறது. அழுகிறது ஆனால் வெளிப்படையாகத் தெரியும் இந்தச் சிரிப்புக்கும், அழுகைக்கும் மறைவில் எத்தனையோ குணபாவங்கள் இருக்கின்றன..”

- மரியா மாண்டிசோரி

சமூகம் நமக்குக் கற்றுக் கொடுத்த கள்ளமும் கபடமும் கொண்டே நாம் இந்த உலகத்திடம் வேற்றுமை பாராட்டுகிறோம். ஆனால் குழந்தை இந்த உலகத்தில் பிறந்த கணம் முதல் எல்லோரின் மீதும், எல்லாவற்றின் மீதும் வேற்றுமை பாராத அன்பைச் செலுத்துகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்புணர்வோடு எறும்பிடமும் அன்பு செலுத்துகிறது. மரப்பாச்சி பொம்மையிடமும் தன் அன்பைத் தெரிவிக்கிறது. அதற்குத் தான் பணக்காரன் என்றோ ஏழை என்றோ, தான் பிறந்த சாதிபற்றியோ, மதம் பற்றியோ அதன் தன்மைகள் குறித்தோ, விளைவுகள் குறித்தோ தெரியாது. தான் முட்டாள் என்றோ அறிவாளி என்றோ தெரியாது. தன் வீடு சிறியது என்றோ பெரியது என்றோ தெரியாது. தன்னுடைய பெற்றோர்கள், உற்றவர்கள் நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ தெரியாது. இந்த உலகம் எவ்வளவு கொடியது என்றோ எவ்வளவு அற்புதமானது என்றோ தெரியாது. ஆனால் குழந்தைக்கு ஒன்று மட்டும் தெரியும். தான் காணும் உணரும் எல்லாவற்றின் மீதும் தீவிரமான அன்பைச் செலுத்தத் தெரியும்.

இப்படி பரிசுத்தமான, களங்கமற்ற குழந்தையிடம் தான் பெரியவர்கள் எல்லாவிதமான கபடங்களைச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். தான் பிறந்த மதம், சாதி பற்றிச் சொல்கிறார்கள். அது எவ்வளவு உயர்வானது அல்லது எவ்வளவு இழிவானது என்று சொல்கிறார்கள். குழந்தையை சுற்றியுள்ள உலகத்தை குழந்தைக்கு எதிர்மறையாகவே அறிமுகப்படுத்துகிறார்கள். எல்லாப்பொருட்களையும் எல்லா மனிதர்களையும், வெளிச் சூழலையே விரோதியாகக் காட்டுகிறார்கள். குழந்தை முதன்முதலாக பயப்படுகிறது. எல்லாவற்றின் மீதும் அதற்குச் சந்தேகம் வருகிறது. யாரையும் நம்பமுடியாமல் இந்த உலகத்தையே அவநம்பிக்கையோடு பார்க்கிறது. களங்கமில்லாத அதன் அன்பின் அடித்தளம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிச் சிதைகிறது. பயமும், பாதுகாப்பின்மையும் பொங்க இந்த உலகத்தையே வெறுக்கத் தொடங்குகிறது. சமூகம் ஒருபோதும் இதை உணர்வதில்லை. பெரியவர்களும் இதை உணர்வதில்லை. அவர்கள் குழந்தைக்கு அறிவூட்டிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் குழந்தையிடம் ஊட்டப்பட்ட இந்த வெறுப்பு உள்ளே கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களிடம் ஆளுமைச் சிதைவை ஏற்படுத்துகிறது. உண்மையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? குழந்தைக்கு அறிவூட்டுவதல்ல. குழந்தை பிறந்தது முதலே கற்றுக் கொண்டேயிருக்கிறது. தன் அறிவைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அழுகை, சிரிப்பு என்ற இரண்டு உணர்ச்சி வெளிப்பாடுகளிலிருந்து இன்னும் நுட்பமான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தெரிந்து கொள்கிறது. பயம், கோபம், ஏக்கம், நிராதரவு, திருப்தி, ஆவல், உற்சாகம் என்று பல விதமான உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துகிறது. எனவே கற்றுக் கொண்டேயிருக்கும் குழந்தைக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும், குழந்தையின் முன்னால் செய்யத் தகாதனவற்றை செய்யாமலிருப்பதும் எல்லாவற்றுக்கும் மேல் குழந்தையின் ஆளுமையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வேண்டும்.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவமிக்க ஒரு ஆளுமை உள்ளே மறைந்திருக்கிறது. அந்த ஆளுமை தனக்கான தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தக்க சூழ்நிலைக்காக துளிர்க்கவோ, பூக்கவோ வேண்டி மறைந்திருக்கிறது.

விதைக்குள் அடங்கியிருக்கும் விருட்சமாய் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆளுமையை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். எல்லாக்குழந்தைகளிடமும் உடனே தெரிந்து விடும் அளவில் இல்லாமலிருக்கலாம். சில குழந்தைகளின் ஆளுமையைக் கண்டு பிடிக்க சிறிது சிரமம் ஏற்படலாம். சிறிது காலம் ஆகலாம். ஆனால் எல்லாக்குழந்தைகளிடமும் ஒரு ஆளுமை ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டு பிடித்து வெளிக்கொணர வேண்டும். அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் துணை நிற்க வேண்டும். அதற்குத் தேவையான ஒளியையும், காற்றையும், நீரையும் தரவேண்டியது நம் கடமை. வளரும் போது ஒவ்வொரு ஆளுமையும் இந்த பூமிக்கு தன்னுடைய பங்களிப்பை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதற்கான வழிமுறைகளை பள்ளிக்கூடமும், பெற்றோர்களும் சமூகமும் யோசிக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது நம் சமூகத்தில்? யாருமே குழந்தையின் ஆளுமை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்வது இல்லை. அப்படியொன்று இருப்பதாகக்கூட நினைப்பது இல்லை. அப்படியே குழந்தைகளின் ஆளுமைத்திறன் துளிர்த்து வெளிப்பட்டாலும் அதைத் துடிக்கத் துடிக்கக் கிள்ளி எறிந்து விடுகிறோம். ஏனென்றால் செம்மறியாட்டு கூட்டத்தை விட மோசமான மந்தை புத்தி கொண்டவர்களாக பெரியவர்கள் இருப்பது தான். வாய் திறந்து மழலை பேசும் பருவத்திலேயே குழந்தையிடம் நம்முடைய ஆசைகளைத் திணித்து விடுகிறோம். அப்போதும் என்ன இப்படியா ஒரு சமூகம் முழுக்க ஒரே விதமான ஆசையைக் கொண்டிருக்கும்? பாருங்கள் எல்லா குழந்தைகளும் கிளிப்பிள்ளையைப் போல தாங்கள் இஞ்ஜினீயர் ஆக வேண்டும் என்றோ அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்றோ ஒப்பிக்கும். அந்தக் குழந்தைகளுக்கு பொறியாளர் என்றால் யார் என்றோ, மருத்துவர் என்றால் யார் என்றோ சற்றும் தெரியாத பருவத்தில் நம் ஆசையை அப்படிக்கூடச் சொல்ல முடியாது, மந்தைபுத்தியின் விளைபொருளான நம் ஆசையை குழந்தையிடம் திணக்கிறோமே. இதை விட வேறு என்ன அவலம் வேண்டும்?

உலகம் பூரா வெறுமனே பொறியாளர்களும், மருத்துவர்களும் மட்டும் நிறைந்து விட்டால் போதுமா? ஏன் இப்படி? நம்முடைய சமூக அமைப்பு சில திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் பொறியாளர், மருத்துவர் என்ற கல்வியை மதிப்புமிகு வியாபாரப் பொருட்களாக்கி அதை விற்பனை செய்யும் தந்திரங்களில் ஒரு சமூகத்தையே சிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு சமூகத்துக்கு அறிவியல் அறிஞர்கள் தேவையில்லையா? ஓவியர்கள் தேவையில்லையா? கணித மேதைகள் தேவையில்லையா? கட்டடக்கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தேவையில்லையா? இயற்கையியலாளர்கள் தேவையில்லையா? வரலாற்று ஆய்வாளர்கள் தேவையில்லையா? தொல்லியல் அறிஞர்கள் தேவையில்லையா?

சுற்றுச்சூழல் அறிஞர்கள் தேவையில்லையா? நிர்வாகவியல் அறிஞர்கள் தேவையில்லையா? வேளாண்துறை விஞ்ஞானிகள் தேவையில்லையா? மெக்கானிக்குகள் தேவையில்லையா? விளையாட்டு வீரர்கள் தேவையில்லையா? இது போல எண்ணற்ற துறைகளும் தானே இந்த உலகம். அப்புறம் எப்படி இந்த மந்தைபுத்தி உருவாகிறது?

குழந்தைகள் வளரும் போதே அவர்களது ஆளுமைத் திறனின் முளைகள் மலரத்தான் செய்யும். அது ஓவியத்தில் இருக்கலாம். பிரித்து இணைக்கும் செயல்பாடாக இருக்கலாம். கணிதத்திலாக இருக்கலாம். கதை சொல்வதாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இடையூறு செய்யாமல், அடக்கி ஒடுக்காமல், அந்தந்தத் துறையில் வளர்வதற்கான உதவிகள் புரிந்தாலே போதும். குழந்தைகளின் அடிப்படையான அன்பு எல்லோரையும் எல்லாப் பொருட்களையும் நேசிக்கிற மனோபாவம் எந்தக் காயமுமின்றி அடக்குதலும் இன்றி வெளிப்படும். எல்லாத் துறைகளிலும் சாதனைகள் படைக்கும் புதிய சமுதாயம் மலரும். அதிக மதிப்பெண் என்ற தந்திரவதைக்கூடத்துக்குள் குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்காதீர்கள். ஒரே வகை மாதிரியான ஜெராக்ஸ்   சமூகத்தை உருவாக்காதீர்கள்....

Sunday, 6 May 2012

அன்பின் உருவம் அர்ப்பணிப்பின் சிகரம்

images

பெரியவர்களிடம் இற்றுத் தூர்ந்துபோன ஊற்றுக்கண்களான அன்பும், அர்ப்பணிப்பும் குழந்தைகளிடம் பொங்கிப் பிரவகிக்கின்றன. அப்படியென்றால் பெரியவர்களிடம் அன்பென்ற பொருளே இல்லையா? அர்ப்பணிப்பின் அழகே இல்லையா? இருக்கின்றன. எல்லாம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நடைமுறைத் தந்திரமாக வெளிப்படுகின்றன. பிரதிபலன் நோக்கி வெளிப்படுகின்றன. சுயநலம் சார்ந்து செயல்படுகின்றன. தன்னை முன்னிறுத்தத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி, பிரதிபலன் பார்க்காது, தன்னை முன்னிறுத்தும் அவசியமின்றி அன்பைக் குழந்தைகளே வெளிப்படுத்துகின்றன. அது எப்படி? குழந்தைகள் மீது பெற்றோர்கள் தானே பேரன்பு செலுத்தி பேணிப்பாதுகாத்து வளர்க்கிறார்கள் என்ற கேள்வி வருகிறதே. தாயை விட அன்பிற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல முடியுமா? என்று யோசிக்கலாம். உண்மைதான், தாயன்பு பேரன்பு தான். ஆனால் அதிலும் குழந்தையிடம் போலன்றி சிறிது எதிர்பார்ப்பு இருக்கிறது. உயிரியல் தூண்டுதலினாலும், சமூகத்தின் உள்ளுணர்வுத் தொகுப்பினாலும் ஒரு தாய் தன் குடும்பத்தைப் பேணிப்பாதுகாக்க முற்படுகிறாள். அதன் வழியாகவே குழந்தை வளர்ப்பும் நிகழ்கிறது.

குழந்தைக்கு அப்படியில்லை. எந்த எதிர்பார்ப்புமின்றியே இந்த பூமிக்கு வருகிறது. கண் திறந்தபொழுது தொடங்கி காணும் பொருட்கள், உயிர்கள் யாவற்றையும் நேசிக்கத் தொடங்குகிறது. அன்பின் அலைகளால் மூழ்கடிக்கிறது. அம்மாவை விட்டு அகல மறுக்கிறது. தூங்கும் அப்பாவின் மீது விழுந்து புரள்கிறது. மரப்பாச்சியோ, பார்பியோ எப்போதும் கூட்டிக்கொண்டே அலைகிறது. அதன் எல்லாக் காரியங்களிலும் அன்பு ததும்புகிறது. இந்த அன்பிற்கும் பெரியவர்களின் அன்பிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் அர்ப்பணிப்புணர்வுதான். அர்ப்பணிப்புடன் கூடிய அன்புப் பெருவெள்ளத்தில் எல்லாவற்றையும் மூழ்கடிக்கிறது. அதனால்தான் தான் நம்பும் பெரியவர்கள் என்ன சொன்னாலும் கேட்கிறது குழந்தை. குதி என்று சொன்னால் சற்றும் யோசிக்காமல் குதிப்பதற்குக் காரணம் அர்ப்பணிப்புதான் ஒவ்வொரு சின்னச் சின்னக் காரியத்தையும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் செய்கிறது குழந்தை. எறும்பின் பாதையைப் பின் தொடர்வதாக இருக்கலாம், கைகளிலிருக்கும் பொருட்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். புதிதாக அது கண்டு பிடித்த ஒரு சொல்லாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் அதைச் செய்கிறது. குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள். நாம் செய்கிற எந்தக் காரியத்திலும் அன்பும் அர்ப்பணிப்பும் செலுத்த முடிந்தால் அந்தக் காரியமே பேரழகு பெற்று ஒளிரும்.

பெரியவர்கள் தங்களுடைய வசதிக்கேற்பவே குழந்தைகளிடம் தங்கள் அன்பைச் செலுத்துகிறார்கள். தங்கள் ஓய்வு நேரத்தின்போது சில நேரம் கடமையாக சில நேரம் குழந்தையின் வற்புறுத்தல் அல்லது தொந்தரவு தாங்க முடியாமல், சிலநேரம் குழந்தையை ஏமாற்ற இப்படி அவர்களுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கு யாதொரு பங்கமும் வராதவண்ணம் குழந்தைகளை நேசிக்கிறார்கள். என்றாவது ஏதாவது இடையூறு, தொந்தரவு நேர்ந்து விட்டால் போச்சு, அதைத் தாங்கள் குழந்தைக்காக செய்த மிகப்பெரிய தியாகமாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். குழந்தைகள் தங்களுடைய இயல்பான வளர்ச்சியை இடையூறு செய்யும் பெரியவர்களை ஒரு நாளும் குறை சொல்வதில்லை. மாறாக தீராத நேசத்தைக் காட்டுகிறார்கள்.

குழந்தைகள் உறங்கும்போது தூக்கிக் கொஞ்சுகிறார்கள். தீவிரமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது இடையூறு செய்து தூக்கிக்கொண்டு போய் விடுகிறார்கள் பெரியவர்கள். குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாகப் பெரியவர்களின் வசதியே கணக்கில் கொண்டு குழந்தைகளை வளர்க்கிறார்கள். இவற்றால் எல்லாம் இயல்பான குழந்தையின் மனதில் அதன் வளர்ச்சிப் போக்கில் புண்படுத்தப்பட்டு பெரியவர்களின் கட்டளை அல்லது எண்ணம் புகுந்து விடுகிறது. அப்போது குழந்தை தடுமாறுகிறது. செய்யலாமா? வேண்டாமா? என்று தயங்குகிறது. போகலாமா வேண்டாமா? என்று யோசிக்கிறது. எப்போதும் பெரியவர்களின் அதட்டும் குரலினைக் கொண்ட கடுமையான முகமே அதனைப் பயமுறுத்துகிறது. தன் சொந்த இயல்பான உள்ளுணர்வைப் பின்பற்றத் தவறி விடுகிறது. பாதை தடுமாறி ஒரே நேரத்தில் குழந்தையாகவும், பெரியவர்களாகவும் இருக்க நேர்கிற நெருக்கடியைச் சந்திக்கிறது. இத்தகைய நெருக்கடியின் விளைவாக அதன் ஆளுமையில் சின்னச் சின்ன கீறல்கள் ஏற்படுகின்றன.

ஏனெனில் குழந்தைகள் பெரியவர்களை அலட்சியப்படுத்த முடியாது. பெரியவர்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் தாண்டி குழந்தைகள் அவர்களை நேசிக்கிறார்கள். அளவற்ற நேசத்தின் விளைவாகவே பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். அதன்படி நடக்க வேண்டும் என்ற பேரவா குழந்தைகளுக்கு எழுகிறது. அதன் விளைவாகவே தன் இயல்பூக்க உணர்வை கைவிட்டுவிட்டு பெரியவர்களின் சொல்படி கேட்கத் தொடங்குகிறது.

அதுமட்டுமல்லாமல் குழந்தை பெரியவர்களின் மீது கொண்ட பேரன்பினால் அவர்களை உற்றுக் கவனிக்கிறது. அவர்களைப் போலவே நடந்து கொள்ள விரும்புகிறது. இது குழந்தைக்கு அளவிலா மகிழ்ச்சி ஊட்டுகிற காரியமாக இருக்கிறது. பெரியவர்களின் சட்டையைப்போடுவது, பெரியவர்களின் செருப்புகளைப் போட்டு நடப்பது, போன்ற காரியங்களில் குழந்தைக்கு ஏற்படும் உற்சாகத்தைப் பாருங்கள். உணர்ச்சிகள் மட்டுமே ததும்பி நிற்கும் பருவத்தில் குழந்தையின் மொழியே அன்புதான். பெற்றோர், உற்றோர், நாய், பூனை, மாடு, ஈ, எறும்பு, பொம்மை, செப்புச் சாமான்கள் என்று உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் மீது இந்த அன்பினால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது இந்தக் குழந்தை. குழந்தையின் அன்பில் வேற்றுமை கிடையாது. சுனையூற்றின் நீர்போல தூய்மையானதாக அது திகழ்கிறது. குழந்தையே அன்பின் உருவமாக ஒளிவீசுகிறது. அதன் ஒவ்வொரு செல்லிலும் தன்னை அர்ப்பணிக்கும் அன்பு ததும்பி நிற்கிறது. அதனாலேயே குழந்தை எல்லோரையும் தன்னுடனேயே இருக்கச் சொல்கிறான். எப்போதும் பெரியவர்களுடன் இருந்து பெரியவர்கள் பேசுவதை, செய்வதைக் கவனிக்க விரும்புகிறான். ஆனால் பெரியவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்களுக்கு வேலை இருக்கும்போது குழந்தையும் வேறுவேலைகள் செய்யவேண்டும். அவர்கள் உறங்கும்போது குழந்தையும் உறங்கவேண்டும். அவர்கள் சாப்பிடும்போது குழந்தையும் சாப்பிட வேண்டும். மொத்தத்தில் பெரியவர்களுடைய பெரிய வாழ்க்கையை குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.

இந்தத் திணிப்பை எதிர்த்துக் குழந்தைகள் கலகம் செய்கிறார்கள். எப்படியாவது பெரியவர்களுக்குப் புரிய வைத்துவிட முயற்சிக்கிறார்கள். அவர்கள் புரிந்து கொண்டு விடமாட்டார்களா என்று ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கிறார்கள். ளநேசம் பொங்கும் முகத்துடன் பெரியவர்களைத் தொட்டு உணர்த்த விரும்புகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்! எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! என்று மன்றாடுகிறார்கள்.

ஆனால், நடைமுறை வாழ்வின் கொடூரமான பற்சக்கரங்களில் கிழிபட்டு நார்நாராகிக் கொண்டிருக்கும் அதற்கான காரணங்களையே புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை எனும்போது தொலைந்துபோன நுட்பமான உணர்வுகளின் ததும்புதலில் திளைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? குழந்தைகள் தங்களுடைய அன்பையும் அர்ப்பணிப்பையும் பெறுவதற்கு யாருமின்றி விசும்புகிறார்கள். அந்த விசும்பல் சத்தம் கேட்கிறதா?

Tuesday, 1 May 2012

அன்பின் வழியது

 

அழும் பொம்மைகளை

குழந்தைகளுக்குப் பிடிக்காது

அழும் குழந்தைகளுக்கு

பிடித்து விடுகின்றன

பொம்மைகளை

- அ. வெண்ணிலா

குழந்தைகள் பெரியவர்களின் உதவிகளை நாடாது தன் காரியங்களைத் தானாகவே செய்வதற்கு முயற்சிகள் செய்யும்போது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. குழந்தைகள் இப்பூவுலகில் பிறந்ததிலிருந்து தன்னுடைய உடல், மனம் இரண்டின் இடையறாத உழைப்பின் வழியாகவே தன்னை மனிதனாக உருமாற்றும் ரசவாதத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவன் சுற்றிலுமுள்ள சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறான். அதற்கு முதலில் பெரியவர்களின் உதவிகள் தேவைப்படுகிறது. அதனால் பெரிதும் பெரியவர்களைச் சார்ந்தே அவன் வாழ்கிறான். அவர்களைப் போல் செய்கிறான். ஆனால் மனமும் உடலும் வளர வளர பெரியவர்களைப் போல் செய்யாமல் தானாகவே எல்லாவற்றையும் செய்து பார்க்க ஆவல் அவனுக்குள் கிளர்ந்து எழுகிறது. அது எத்தனை அழகற்றதாக இருந்தாலும் எத்தனை ஒழுங்கற்று இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த செயல் அவனாகவே தன் முழு மனதையும் உடலியக்கத்தையும் ஒன்றிணைத்து செய்த செயலல்லவா? மனிதப் பிறவியான உள்ளுணர்வு அவனை வழிநடத்துகிறது.

பெரியவர்களைப் பின்பற்றித் தானாகவே சீப்பை எடுத்து தலைமுடியை வாருகிறான். தன் சட்டையைத் தானே போட முயல்கிறான். முகப்பவுடரை மேலும் கீழும் சிந்தி கொஞ்சம் முகத்திலும் போட்டுக்கொள்கிறான். இப்படி ஒவ்வொரு செயலை ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் அவனுக்குள் ஒரு பெருமித உணர்வு பொங்குகிறது. பெரிய சாதனை புரிந்து விட்ட மகிழ்ச்சியில் கைகளைத் தட்டுகிறான். குதித்தாடுகிறான். சிரிப்பு பொங்குகிறது. அவனைப் பொறுத்தமட்டில் அது மிகப்பெரிய சாதனை தான். தலைமுடி நட்டக்குத்தலாக நிற்கிறது. முகத்தில் பவுடர் திட்டுத்திட்டாக இருக்கிறது. சட்டையின் ஒரு கை போடப்படவேயில்லை. டவுசரை ஒரே காலில் நுழைத்திருக்கிறான். அதனால் என்ன? இதெல்லாம் யாருடைய உதவியுமின்றி அவனாகவே செய்த காரியங்களல்லவா?

இங்கே தான் பெரியவர்கள் வந்து குழந்தைகளிடம் தகராறு செய்கிறார்கள். எல்லாவற்றையும் செய்து முடித்த அவனுடைய பெருமிதஉணர்வில் அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள். அவன் செய்த அலங்காரத்தைக் குலைத்து அலங்கோலம்(!) செய்கிறார்கள். தலைமுடி வாருதல், பவுடர் போடுதல், உடை உடுத்தல் எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்து விடுகிறார்கள். குழந்தையின் மனம் எதிர்க்கிறது. முரண்டு பிடிக்கிறது. எதிர்ப்புணர்வை வளர்க்கிறது.

அதேபோல் குழந்தைகள் யதார்த்த உலகத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்? தொடு உணர்வின் மூலமே தங்கள் புலனுணர்வினை கூர்மைப்படுத்திக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மனம் என்ற ஒன்றில் அனுபவங்கள் சேகரமாகி அறிவின் கிரணங்கள் ஒளிவீசத் தொடங்குகின்றன. எனவே எல்லாப் பொருட்களையும் தொட்டுத்தடவி, உணர்கிறார்கள். ஆனால் பெரியவர்களோ, குழந்தைதான் என் உயிர், குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறார்களேயொழிய, குழந்தை வீட்டில் ஒரு பொருளைத் தொட்டு விட்டாலோ, எடுத்துவிட்டாலோ கூப்பாடு போடுகிறார்கள். இந்தச் சத்தத்தைக் குழந்தையால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எதுக்கு இந்த ஆள் இந்தக் கூப்பாடு போடறான்? நான் தொடத்தானே செஞ்சேன்.. என்று ஆச்சரியப்படுகிறான். இயல்பாகவே பெரியவர்களின் தற்காப்புணர்வு குழந்தை பொருட்களை உடைத்து விடுவானோ, அழுக்காக்கி விடுவானோ, பாழாக்கி விடுவானோ என்று பயம் கொள்கிறது. உடனே என்னதான் நேசம் இருந்தாலும் எஜமான மனோபாவம் தலையெடுத்து விடுகிறது. அவர்கள் சொல்படி குழந்தை கீழ்ப்படியவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கூலி வேலை செய்கிற சாதாரண மக்கள் தங்கள் மழலைகளைத் திட்டி, அறைந்து, வீதிக்கு விரட்டி விடுகிறார்கள். அந்தக் குழந்தையை விட மூத்த குழந்தையிடம் பொறுப்பினை விட்டுவிட்டு தன் வாழ்விற்கான போர்க்களத்தை எதிர்கொள்ளப் போய் விடுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கிறவர்களாக இருந்தால் கிரஷ்ஷிலோ, ஆயாக்களிடமோ குழந்தைகளை விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். கிரஷ்ஷிலும் சரி, ஆயாக்களும் சரி குழந்தைகள் எப்போதும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை விட தூங்கிக்கொண்டிருப்பது உத்தமம் என்று நினைத்து விடுகிறார்கள். எனவே குழந்தைக்கு தேவையில்லை என்ற போதிலும் குழந்தையைத் தூங்க வைக்கிறார்கள். பெற்றோர்களுக்குமே இந்த விதமான மனநிலை இருப்பது துரதிர்ஷ்டவசம்தான் குழந்தை அங்கும், இங்கும் ஓடக்கூடாது. சாமான்களைத் தொடக்கூடாது, சத்தம் போடக்கூடாது. எந்த ஒரு காரியத்தையும் திரும்பத் திரும்பச் செய்யக்கூடாது. படியேறி ஏறி இறங்குதல், தாழ்ப்பாளைப்போட்டு போட்டு இழுத்தல், ஓடி ஓடிச் சத்தம் எழுப்புதல், இப்படி எதையும் செய்யக்கூடாது. குழந்தைகள் சாப்பிடவேண்டும். உறங்க வேண்டும், அமைதியாக உட்கார்ந்து விளையாடவேண்டும். டி.வி சத்தம், எப்.எம் சத்தம், பக்கத்துவீட்டுச் சத்தம், தெருச்சத்தம், ரோட்டுச்சத்தம் எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிற பெரியவர்களால் குழந்தைகள் போடுகிற சத்தத்தை மட்டும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதற்காக அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது அன்பில்லை என்று சொல்லமுடியாது. அறியாமைதான் காரணம்.

குழந்தை சிறியவனாய் இருக்கும்போது அவனை ஒரு பொருள் மாதிரி போகும் இடங்களுக்கெல்லாம் தூக்கிக் கொண்டு அலைந்து பெருமை பாராட்டுவார்கள் பெரியவர்கள். ஆனால் அவனே நடக்கப்பழகி நடக்க ஆரம்பித்து விட்டால் வெளியே விடுவதில்லை. எதிர்பாரா ஆபத்துகளிலிருந்து அவனைக்காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவனுடைய எல்லா நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதென்பது நல்லதல்ல. அவனது உடல் மன ஆரோக்கியத்திற்கு உகந்ததும் அல்ல. குரங்கிலிருந்து மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியில், கைகளைப் பயன்படுத்தியதும் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடந்ததும் தீர்மானகரமான பங்கு வகித்துள்ளது. குட்டிமனிதனான குழந்தையும், தன் கைகளையும், கால்களையும் ஓயாது பயன்படுத்தவே விழைகிறான். அதன் மூலமே தனக்குள் மறைந்து கிடக்கும் மனிதனை வளர்த்தெடுக்க முனைகிறான்.

குழந்தையின் இயக்கம் என்பது தானாக அல்லது தற்செயலாக நடப்பதில்லை. அது குழந்தைக்குள் உறைந்திருக்கும் மனிதனின் உள்ளுணர்வின் வழிகாட்டுதலின் படியே நடக்கின்றன. அவை எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. குழந்தை தானாகவே, தனக்குப் பிரியமான வேலையைத் தானே தேர்ந்தெடுத்து நிறைவேற்றுகிறது. சும்மா ஓடவோ, குதிப்பதோ அல்லது காரணமில்லாமல் பொருட்களைக் கையில் எடுப்பதோ, கலைத்துப் போடுவதோ அல்ல. பெரியவர்கள் செய்வதைப் பார்த்து தானாக அந்தச் செயலைப் படைக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவே அப்படி நடந்து கொள்கிறான்.

குழந்தையிடம் தோன்றுகிற உழைக்கும் உணர்வை முதலில் நாம் மதிக்கவேண்டும். பல நேரங்களில் சிறு சிரமங்களை அது ஏற்படுத்தினாலும், குழந்தைகளின் மன வளர்ச்சியினை உத்தேசித்து சில தியாகங்களைப் பெரியவர்கள் செய்யவேண்டும். குழந்தை விரும்பிச் செய்கிற செயலின் சூழ்நிலையை அவனிடமே ஒப்படைத்து விடவேண்டும். அவன் சிரமப்படுவானோ என்று நினைத்துத் தலையிடுகிற பெரியவர்களை அவன் விரும்புவதில்லை. ஏனெனில் அவனுடைய அனுபவ நிகழ்வில் ஏற்படும் எந்தக் குறுக்கீடும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவதில்லை. பெரியவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மீது அன்பு என்பது அவனது தேவைகளைக் கவனித்துக் கொள்வது என்பது மட்டுமல்ல, அவன் மனிதனாக வளர்வதற்கான சூழலை உருவாக்குவதும், அந்தச் சூழலுக்குள் அவசியமின்றி தலையிடாமல் இருக்கவும் வேண்டும். அப்போது குழந்தைக்குள் உறைந்து இருக்கிற மனிதன் மெல்ல முகிழ்ப்பான்

dep_2432274-Children-Art

Sunday, 15 April 2012

அதிசயமனம்

art_2 இந்தப் பூவுலகில் பிறந்ததிலிருந்தே குழந்தையின் மனம் வளரத் தொடங்கி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உடலும் மனமும் புற உலகத்தைக் கண்டு உணர்கின்றன. தனக்கும் புற உலகத்துக்கும் இடையில் அழகிய ஒருதொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது. எல்லாவற்றையும் அறிந்துகொள்ள புரிந்துகொள்ள மனதில் இருத்திக்கொள்ள ஒவ்வொரு சிறு சிறு முயற்சியாகச் செய்து பார்க்கிறது. அதன் முயற்சிகளே அதற்கு ஆனந்தத்தைத் தருவதாக அமைகிறது. இந்த ஆனந்தம் தான் அதன் வெற்றி. இப்படி ஒரு வெற்றியிலிருந்து மற்றொரு வெற்றிக்கு பயணப்படுகிறது குழந்தை. இதனால் ஏற்படும் அனுபவப் பதிவுகளை மனதில் இருத்திக்கொள்கிறது. தன்னிடம் அன்பு மீதூற ஒலி எழுப்பிக் கொஞ்சுவோர்களிடம் புன்னகைக்கிறது. தாயாரின் தாலாட்டில் தன்னை மறந்து உறங்குகிறது. திரும்பத் திரும்ப ஒலிக்கும் பதச்சேர்க்கையின் இசைக்கோர்வை குழந்தையின் ஆழ்மனதில் ஒரு அமைதியை உருவாக்கி அதனிடம் முழுமையான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் உளப்பதிவுகள் ஆரம்பத்தில் பார்வை மூலமே உருவாகிறது. எனவே காட்சி பிம்பங்களை பலமுறை உற்றுப்பார்த்த பின்னரே குழந்தை அதைப் புரிந்து கொள்ளவும், அதற்கு எதிர்வினை புரியவும் தொடங்குகிறது. இதனால் குழந்தைக்கு ஒழுங்கின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறது. அந்த இடத்தில் அந்தப் பொருள் இருப்பதையே மனம் பதிவு செய்து கொள்வதால் அந்தப்பொருள் இடம் மாறும்போது மனப் பதிவில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் உணர்ச்சிகளில் மாறுதல் நிகழ்கிறது. குழந்தை அந்தப் பொருளை அதே இடத்தில் வைக்கும்வரை அமைதியிழந்து அழுகிறது. பல்வேறு அறிவியல் சோதனைகளில் கண்டறியப்பட்ட இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

பொதுவாகக் குழந்தைகள் ஒழுங்கற்றவர்கள் என்றும், அவர்களால் பொருட்களைச் சிதறடிக்கத்தான் முடியும் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவார்கள். ஆனால் குழந்தையின் ஒழுங்கமைவான அகஉலகத்தில் நாம் நம் விருப்பத்திற்கேற்ப குழந்தையின் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து விடுகிறோம். குழந்தைகள் தங்கள் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பையும் கலகத்தையும் செய்கிறார்கள். ஆனால் நாம் குழந்தையின் அக மனதைப்பற்றி அறியாததினால், “என்ன அட்டகாசம்! என்ன சேட்டை... பிள்ளையா இது...”

என்று அங்கலாய்க்கிறோம். மொழியறிவு இல்லாத பருவத்தில் குழந்தை தன் அதிருப்தியை அழுகையின் மூலமே வெளிப்படுத்துகிறது. அந்த அதிருப்தியின் காரணத்தை அறியமுடியாத அவசரத்திலோ. அகங்காரத்திலோ, பலவீனத்திலோ நாம் இருக்கிறோம்.

ஒழுங்கின் மீதான கவனம் ஈர்ப்பு குழந்தையின் மனதை உருவாக்குவதற்கான இயல்பான, அடிப்படைத் தேவையாகவே இருக்கிறது. இதையே தானே உருவாக்கிக்கொள்ளும் விளையாட்டுகளிலும், தன்னுடன் மற்றவர்கள் விளையாடும் விளையாட்டுகளிலும் எதிர்பார்க்கிறது. கையால் முகத்தை மூடிக்கொண்டு திடீரென திறந்து உற்சாக ஒலி எழுப்பும் படுக்காளி விளையாட்டும் கண்ணாமூச்சி விளையாட்டும் குழந்தைகளிடம் ஒழுங்கு குலைதலும் ஒழுங்கை மீட்டலுமான செய்கையால் மனங்கவரப்படுகிறது. ஒழுங்கு பற்றிய கூர்மையான உணர்ச்சியை இயற்கையிலேயே குழந்தை பெற்றிருக்கிறது. புறவயமான உலகில் உள்ள ஒழுங்கு என்பது மட்டுமல்ல, அகவயமான தன் உலகிலும் இந்த ஒழுங்கைப் பாதுகாத்துவைத்திருக்கிறது. அதே நேரம் ஒழுங்கை நாம் உணர்வது போல் குழந்தைகள் உணர்வதில்லை. ஏற்கனவே உருவாக்கி விட்ட உலக ஒழுங்கு பற்றியே நம்முடைய கவனம் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தங்கள் மனதில் படைப்பூக்கமாக ஒரு ஒழுங்கைப் புதிதாக உருவாக்குகிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தமட்டில் இது ஒன்றுமில்லாததில் இருந்து புதிதாக ஒன்றைப் பிரகாசிக்கச் செய்வதும் ஆக குழந்தை படைப்பின் உச்சத்தில் இருக்கிறது. நுண்ணிறிவின் வளர்ச்சியினால்தான் குழந்தை நம் கண்ணுக்குப் புலனாகாத அசையும் உயரினங்களையும், (எறும்பு, புழு, பூச்சி) அசையாத பொருட்களையும் (தூசி, துரும்பு) கண்டு களிபேருவகைக்கொள்கிறது.

இவற்றையெல்லாம் உணராத பெரியவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களில் மூழ்கி குழந்தையின் அவதானிப்புகளை அலட்சியம் செய்கிறார்கள். குழந்தையின் நுண்ணறிவு வளர்ச்சியைப் பற்றித் தெரியாததினால் இடையூறு செய்கிறார்கள். இதன் மூலம் குழந்தையின் அக உலக வளர்ச்சியில் பெரும்பாதகத்தை ஏற்படுத்துகிறார்கள். பிற்காலத்தில் குழந்தைகளின் ஆளுமைத்திறன்கள் பாதிக்கப்படவும் ஏதுவாகிறது.

குழந்தையின் மனமானது பெரியவர்களுக்குத் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது. அவர்களுக்கு அது ஒரு மாயம்போல தெரிகிறது. குழந்தையின் ஒவ்வொரு நடத்தைக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. குழந்தையின் ஒவ்வொரு எதிர்வினையையும் கண்டறிந்து கொள்ளும்போது குழந்தையின் மனஉலகம் பற்றிய ஒரு புதிய புரிதல் ஏற்படுகிறது. குழந்தையிடம் ஒரு ஆசிரியரைப் போல அதிகாரம் செலுத்திய நாம் குழந்தையின் மாணவர்களாகி விடுவோம்.

குழந்தைகள் தங்களுடைய அவதானிப்பால் ஒவ்வொரு பொருளின் நுட்பமான பகுதியையும் உற்று நோக்குகின்றனர். தொட்டுப்பார்க்கின்றனர். முகர்ந்து உணர்கின்றனர். ருசித்துப் பார்க்கின்றனர். இதன்மூலம் அந்தப் பொருளின் எல்லாவித சூட்சுமங்களையும் அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படி அறிந்து கொண்ட அனுபவங்களின் மூலம் தங்கள் மன உலகின் அடிக்கட்டுமானத்தைக் கட்டுகின்றனர். அற்பம் என்றோ அற்புதம் என்றோ குழந்தைகள் உலகில் இல்லை. எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் தீராத பயணத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் உற்சாகமின்மை இல்லை. அவர்களிடம் விரக்தியில்லை. அவர்கள் முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்கள். திரும்பிப் பார்ப்பதற்கு அவர்களுக்கு எந்த வருத்தங்களோ, துயரங்களோ இல்லை. படைப்பின் முழுச்சக்தியோடு அவர்கள் இயங்குகிறார்கள்.

சோர்ந்து, வருந்தி, விரக்தியுற்று, கவலையின் வலையில் சிக்கி, நம்முடைய எல்லாச் சக்தியையும் இழந்த நாம் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறோம். குழந்தைகள் நம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள்....

Thursday, 12 April 2012

குட்டி உலகத்தின் குட்டி மனிதர்கள்

-indian-children-near-yellow-wall-in-the-village-of-kanyakumari-anastasiia-kononenko குட்டி உலகத்தின் குட்டி மனிதர்கள்..

குட்டித் தலையணை, குட்டிப்போர்வை

குட்டி டம்ளர் மற்றும்

குட்டிக் கொட்டாவியுடன்

குழந்தைகள் உருவாக்குகிறார்கள்

ஒரு குட்டி உலகத்தை

அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு

குட்டிக் கவளங்களைச் செய்யும்

பயிற்சியைத் தருகிறார்கள்.

- முகுந்த் நாகராஜன்.

உலகமெங்கிலும் குழந்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய முறையில் அவர்கள் புரிந்து கொள்ளப்படுவதில்லை. குழந்தைகள் இயற்கையின் அற்புதப்படைப்பு. அபூர்வமான பரிசு என்று உணர்ந்து கொள்வதில்லை. அது மட்டுமல்ல நாம் உருவாக்கிய, உருவாக்கிக்கொண்டிருக்கிற இந்த உலகம், சமூகம், குழந்தைகளின் கைகளுக்குத்தான் வரப்போகிறது, என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை. அப்படி யோசித்திருந்தால் உரியமுறையில் குழந்தைகளை, அவர்களுடைய உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்திருப்போம்.

பெரும்பாலோர் குழந்தைகளை பயிற்சி கொடுக்கப்படாத, பழக்கப்படுத்தப்படாத மானுட விலங்குகள் என்று நினைக்கிறார்கள். ஆதலால் குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியம் காட்டுகிறார்கள். ஆனால் பூமியில் பிறந்த கணத்திலிருந்து தன் இடைவிடாத உழைப்பினால் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்துகொள்கிறது. அதன் மனதின் அகஉலக கட்டமைப்பு உருவாகத் தொடங்கி விடுகிறது. பேசத் தெரியாவிட்டாலும், எல்லாவித உணர்வு நிலைகளையும், அனுபவித்து அதைச் சேகரமாக்கிக்கொள்கிறது. இதற்கு இயற்கை உணர்வும், இயல்பாக உள்ள மரபணுக்களின் தூண்டுதல்களும், புறவயமான சூழ்நிலைகளும் துணை புரிகின்றன. நாளும் பொழுதுமாய் குழந்தைகள் அறிதலின் மூலமே வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இருட்டும் நிசப்தமும் நிறைந்த தாயின் கருவறையிலிருந்து வெளிச்சமும் இரைச்சலும் மிகுந்த இந்த உலகத்தைக் கண்டு ஏற்படும் அதிர்ச்சிதான் குழந்தைகளின் இளம் மனதில் ஏற்படும் முதல் பதிவு. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் தன் புலனுணர்வுகள், அவற்றில் ஏற்படும் சுகம், வலி, வேதனை மூலம் இந்த உலகத்தை உள்ளுணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றன. பிறப்பிலிருந்தே குழந்தையின் புலன் உறுப்புகள் கூர்மையானவையாக இருக்க, அதிலும் குறிப்பாக தொடு உணர்வும், ஒலி எழுப்பும் மற்றும் கேட்கும் உணர்வும் அதிகக் கூர்மையுடன் இருக்கின்றன. எனவே தங்கள் உணர்வுகளை பசி, தாகம், வலி, வேதனை, அதிருப்தி, கலகம் இப்படி எல்லாவற்றையும் அழுகையின் மூலமாகவே வெளிப்படுத்துகின்றன. தொடு உணர்வின் மூலம் மென்மையை, முரட்டுத்தனத்தை, சுகத்தை, வலியை உணர்கின்றனர். இந்த அனுபவங்களை இன்னும் தளிராக உள்ள மூளையின் இளம் பரப்புகளில் பதிவு செய்கின்றன. இந்தப் புதிவுகளின் மூலம் தான் குழந்தைகள் இன்பம், துன்பம் என்ற இருவேறு பிளவுபட்ட உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர்.

இவையெல்லாமே உள்ளுணர்வின் மூலமாகவே ஆழ்மனதில் மூழ்கிச் சேர்ந்துவிடுகின்றன. இப்படிச் சேகரமாகிற உள்ளுணர்வின் அனுபவங்களை வளர்ந்த பிறகு அதன் பிரதிபலிப்புகளை அவ்வளவு எளிதில் விளக்கி விடமுடியாது. ஆனால், குழந்தைகளின் ஆளுமைத் திறனை உருவாக்குவதில் உணர்வுநிலையில் இந்தப்பருவம் மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்தப்பருவத்தில், குழந்தைகளை அலட்சியப்படுத்துவதோ புறக்கணிப்பதோ, அவமானப் படுத்துவதோ, பயமுறுத்துவதோ அவர்களுடைய ஆளுமைத் திறனைப் பெரிதும் பாதிக்கும்.

குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற அனுபவங்களை தாங்கள் கண்டறிகிற புதிய விஷயங்களை முழுவதுமாக அறிந்து கொள்ளும் வரை, அதன் நினைவுக்கிடங்கில் பதிகிற வரை அந்த விஷயங்களை திரும்பத் திரும்ப செய்யவே விரும்புகிறது. அந்த அனுபவத்தின் மூலம் விளைகிற பலனை உணர்ந்த பின்னரே அடுத்த அனுபவத்திற்குப் பயணப்படுகிறது. தவழும்போது அதன் பார்வைத் திறன் கூர்மையால், நம் கண்ணுக்குத் தெரியாத சிறு எறும்பின் பின்னால் தொடர்ந்து சென்று தொட்டுப்பார்க்கிறது குழந்தை. இப்படிப்பட்ட கூடுணர்ச்சிகள் மிக்க புலன்திறனோடு வளர்கிற, குழந்தைகளின் முன்னால் பெற்றோர்களும் சரி, பெரியவர்களும் சரி இதெல்லாம் குழந்தைக்குப் புரியாது, என்று அப்பாவித்தனமாய் ஏமாந்து போகிறார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகளின் முன்னால் பேசப்படுகிற, நிகழ்த்தப்படுகிற, செயல்களின் முழுமையான அர்த்தம் தெரியாமல் போனாலும், அதன் அடிப்படையான உணர்வு நிலைகளை குழந்தைகள் புரிந்துகொண்டு விடும். அந்த உணர்வுநிலைகள் அதன் அக உலகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

குழந்தைகளின் குட்டி உலகத்திற்குள் பெற்றோர்களாயினும், மற்றவர்களாயினும், பிரம்மாண்டமான தங்கள் ஆகிருதியுடனோ, அதிகாரத்துடனோ நுழைவதை குழந்தைகள் ஒருபோதும் விரும்புவதில்லை. குழந்தைகளுக்காக குட்டியான ஒரு பால்பாட்டில் குட்டியான ஒரு சங்கு, குட்டியான கிலுக்கு, குட்டியான படுக்கை, தொட்டில் என்று உருவாக்கி அவர்களை அங்கே சுதந்திரமாக திரியவிடுகிறோம். அதன்பிறகு அவர்களுடைய உலத்திற்குள் அத்துமீறி நுழைந்து நம் அதிகாரத்தின் கொடியைப் பறக்கவிடக்கூடாது. குழந்தைகளிடம் ஒரு குழந்தையைப் போலவே, கூடுவிட்டு கூடு பாய்ந்து மாறிச் செல்லவேண்டும். குழந்தைகளிடம் குழந்தையாகவே பேசிப்பழக வேண்டும். குழந்தைகளின் அறிதிறன் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தவோ, இடையூறு செய்யவோ கூடாது. அவர்களின் செயல்பாடுகளின் சுதந்திரம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சிறுசிறு அசௌகரியங்கள் நேரலாம். படுக்கைத்துணி ஈரமாகலாம். புத்தகத்தின் பக்கங்கள் கிழியலாம். கண்ணாடி பாட்டில்கள் உடையலாம். குழந்தையின் உடலெங்கும் அசுத்தமாகலாம். இந்த அசௌகரியங்களைக் கண்டு பொதுவாக பெரியவர்கள் முகஞ்சுளிப்பதும், அதட்டுவதும், மிரட்டுவதும், சிலநேரம் கோப மிகுதியால் அடிப்பதும் கூட நிகழ்கிறது. குழந்தைகளுக்குத் தாங்கள் செய்த காரியங்களை விட, அதனால் கிடைத்த விளைவு ஆழ்மனதில் பதிந்துவிடும். பயந்து நடுங்குகிற அதன் உள்ளம் பிற்காலத்திலும் தன் வாழ்நாள் முழுவதிலும் அந்த நடுக்கத்தை மறப்பதில்லை.

குழந்தைகளின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தவேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். புதிய புதிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச்செய்ய வேண்டும். அதோடு குழந்தைகள் முன்னால் தகாத எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் இந்த உலகத்தில் வந்திறங்கியவுடன், அவர்களுக்கு முதலில் இந்த உலகத்தை அறிமுகப்படுத்துகிறவர்கள், உணரவைக்கிறவர்கள், பெற்றோர்கள் தான். குழந்தைகள் பெற்றோர்களைத்தான் முதலில் கவனிக்கின்றனர். உற்றுநோக்குகின்றனர். எனவே குழந்தைகளின் முன்னால் பெற்றோர்கள் நடந்துகொள்கிற நடவடிக்கைகளைப் பொறுத்தே குழந்தைகளின் அகஉலக அடிக்கட்டுமானம் கட்டப்படுகிறது.

குழந்தைகளின் செயல்பாடுகளை உற்றுநோக்குங்கள், அதில் தெரியும் ஆவேசம், அர்ப்பணிப்பு, தீவிரம், பேராவல். இடைவிடாத முயற்சி, சிறிய முன்னேற்றத்திலும் கொள்ளும் உவகை. பிரச்னைகளைப் புதிய கோணங்களில் அணுகுகிற அணுகுமுறை, பொறுமை, லாவகம், குழந்தைகள் படைப்பூக்கத்தின் பரிபூரண வடிவமாக திகழ்கிறார்கள். பெரியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களும் கற்றுக்கொள்கிறார்கள். உண்மையில் குழந்தைகள் வளர்ந்த மனிதர்களைப் படைக்கிறார்கள் என்றால் மிகையில்லை....