Friday 31 July 2015

ஒரு கணமேனும்…….

 

உதயசங்கர்

 

revolution 2 அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்க்கையில் அளப்பரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், போக்குவரத்து, என்று சகல தேவைகளிலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப்புரட்சிக்கு முன்பு அரிசி உணவு ஆடம்பரமான உணவாக இருந்தது. மேல்சாதியினரின் அன்றாட உணவாக, அரசு அலுவலர்களின் அல்லது மாதச்சம்பளம் வாங்குபவர்களின் அன்றாட உணவாகவும் இருந்த காலமும் இருந்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில், தீபாவளி, பொங்கல், பண்டிகைகளில் மட்டும், இட்லி, தோசையும், அரிசி சாப்பாடும் கிடைத்தது. அப்போது இட்லி தோசை பற்றியும் அரிசிச்சோறு பற்றியும் வந்த கதைகள் ஏராளம். அரிதாக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியே எல்லோர் வீடுகளிலும் உணவு. அதனாலேயே ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி என்ற வாக்குறுதி சாமானியமக்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளலாம். அப்படியானால் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவாக இன்று சிறு தானியங்கள் என்று பதவிசாக சொல்லப்படுகிற கம்பு, கேப்பை, குதிரைவாலி, சாமை, தினை, போன்ற தானியங்களும், கீரை வகைகளும், இறைச்சி வகைகளும் கிழங்கு வகைகளும், உணவாக இருந்தன. காய்கறிகள் இப்போது போல எக்காலமும் தாராளமாக கிடைத்ததில்லை. பசுமைப்புரட்சி வந்த பிறகு இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. புதிய குறுகிய கால நெல் வகைகளும், எக்காலமும் விளையும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்பட்டன. அதற்கான இரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டன. மக்களுக்கு எல்லாமும் எக்காலமும் கிடைத்தது.

வருடத்தில் பெரும்பாலான காலம் வெப்பமாக இருப்பதினால் விவசாயிகள் காடுகரைகளில் விவசாய வேலைகள் செய்யும் போது கோவணமோ, லங்கோடோ, ( இன்றைய ஜட்டி மாதிரியான துணியை டிசைன் செய்த ஒரு அரையாடை ) உடுத்தியிருப்பார்கள். மற்ற நேரங்களில் இடுப்பில் நாலுமுழ கைத்தறி வேட்டியும் தோளில் துண்டும் அணிந்திருப்பார்கள். பெண்களும் கைத்தறிச் சேலை மட்டுமே உடுத்தியிருப்பார்கள். அப்போதும் அரசு அலுவலர்கள், மேல்சாதியினர் மட்டுமே சட்டை, போட்டிருந்தார்கள். வெள்ளைக்காரர்களின் உபயத்தால் பேண்டும் போட ஆரம்பித்தார்கள். கைத்தறியாக இருந்த தொழில் மிஷின் தறியாக மாறியது. துணி உற்பத்தி செய்யும் மில்கள் அதிகமாயின. விதவிதமான துணிகளும் வந்தன. டெரிலின், டெரிகாட்டன், புல்வாயில், நைலக்ஸ், நைலான், பாலிஸ்டர், ஸ்பன்பாலிஸ்டர், என்று இயற்கை நூலிழைகளாலும், செயற்கை நூலிழைகளாலும் செய்யப்பட்ட விதவிதமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. எல்லோரும் சட்டை போட்டனர். எல்லோரும் பேண்ட் அணிந்தனர். கோவணமும், லங்கோடும் போய் ஜட்டிகள் வந்தன. இப்போது தான் மக்கள் நாகரிகமடைந்திருப்பதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். வேட்டி கட்டியிருப்பவரை ஏளனமாகப் பார்க்கிற மனோபாவமும் வளர்ந்தது. ஆக நாம் உடையிலும் தன்னிறைவு பெற்றோம்.

ஒட்டு வீடுகளே நகரங்களில் அதிகம். காரை வீடுகள் பெரும்பணக்காரர்களுக்கு மட்டும். கூரை வீடுகள் தான் கிராமங்களிலும் நகரங்களின் எல்லைப்பகுதிகளிலும் இருந்தன. மழைக்கு ஒழுகும் வீடுகள்,. வெயிலுக்கு அனல் கக்கும் வீடுகள். மரங்கள், சத்திரங்கள், மக்களின் புகலிடமாக இருந்தன. சிமெண்ட் ஆலைகள் வந்தன. செங்கல் சூளைகள் அதிகமாயின காங்கிரிட் வீடுகள், மாடி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வாஸ்துவின் ஸ்டிரிக்டான விதிமுறைகளின் படியே கட்டப்படுகின்றன. அக்னி மூலை, வாயுமூலை, ஈசானமூலை, என்று மூலைகள் பெருகி வாசலில் கக்கூஸோ, நடு ஹாலில் செப்டிக் டேங்கும் வைக்கிற கோமாளித்தனங்களையும் செய்கிறோம். இதற்கெல்லாம் அறிவியல்பூர்வமான விளக்கம் தர விற்பன்னர்கள் வந்து விட்டார்கள். இப்போதும் ஓட்டு வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் தெரியத்தான் செய்கின்றன. கூரை வீடுகள் அருகியே விட்டது. மரங்களும் நிழலும் குறைந்து விட்டன. வீடுகளில் குளிர்சாதன வசதிகள் வந்து விட்டன. வீடுகளில் தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், கேஸ் அடுப்பு, சோஃபாக்கள், கம்ப்யூட்டர், லேப்டாப்புகள், ஒன்றுக்கு நாலு செல்ஃபோன்கள், மிக்சி, கிரைண்டர், குக்கர், சாப்பர், டப்பர்வேர், என்று நவீன சாதனங்களால் வீடுகள் திணறிக்கொண்டிருக்கிருக்கிறன. தண்ணீர் மிக அரிதான ஒரு பொருள். ஒருவாளித்தண்ணீரில் குளியல். அல்லது குளம் குட்டை, கண்மாயில்,குளியல், கிணற்று நீர், குளத்து நீர், அடிபைப்பு தண்ணீர் தான் குடிப்பதற்கு, மண்பானை, பித்தளைப்பானைகள், தகரக்குடங்கள், குடி தண்ணீருக்காக பெரிய வரிசைகளில் காத்திருந்த காலம் இருந்தது. தண்ணீருக்காக நடந்த சண்டைகள், வழக்குகள், தாக்குதல்கள் ஏராளம். அப்போது நிலத்தடி நீருக்காக போர் போடுவது அரசாங்கத்தால் மட்டுமே முடியும். நாம் முன்னேறினோம். சொந்த வீடுகள் கட்டிய யாவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை விட ஒருவர் ஆழமாக, அகலமாக, போர் போட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் ஐநூறு அடி போட்டால், நாம் எழுநூற்றம்பது அடி போட்டோம். நிலத்தடி நீரை எக்குத்தப்பாய் செலவு செய்தோம். மழைநீர் ஒரு சொட்டு கூட மண்ணில் இறங்கி விடக்கூடாதென வீடெங்கும் தளம் போட்டோம். மரமோ, செடியோ, வளர்த்தால் தரையைப் பெயர்த்து விடும் என்று குரோட்டன்ஸ் செடிகளை தொட்டிகளில் வளர்த்தோம். நிலத்தடி நீர் உவர்ப்பாக இருந்ததால் ஆர்.ஓ. எனப்படும் உப்புநீர் சுத்திகரிப்பு சாதனத்தையும், குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தையும் வீட்டில் வைத்தோம். நிலத்தடி நீர் வற்றி, கார்ப்பொரேஷன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து தண்ணீர் பிடிக்காத போது மினரல் வாட்டர் கேன்களை வாங்கிக் குடித்தோம். வெளியே எங்கு போனாலும் பொதுக்குடிநீரைக் குடித்துக் கொண்டிருந்த நாம் சுகாதார விழிப்புணர்வு அடைந்த பிறகு கோக்கோ கோலா கம்பெனியின் கின்லே வாட்டர் பாட்டிலோடு அலைந்து கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் தன்பங்குக்கு குடி தண்ணீரை விற்று லாபம் பார்க்கிறது.

சைக்கிள் வாங்குவது பிரம்மபிரயத்தனமாக இருந்த காலமும் ஒன்றிருந்தது. சைக்கிள் கடைக்காரர் பையன்களுக்கு தெய்வமாகத் தெரிந்தார். சைக்கிள் ஓசிக்கு ஓட்டுவதற்கு கொடுப்பவனே உண்மையான நண்பன், உறவினர், உற்றார் என்றெல்லாம் பேசப்பட்டது. சைக்கிளில் முக்காப்பெடல், அரைப்பெடல், பாரில் உடகார்ந்து ஸ்டைலாக செல்வது, ஒரு கையை விட்டு ஓட்டுவது, இரண்டு கைகளையும் விட்டு ஓட்டுவது, கேரியரில் உட்கார்ந்து செல்வது, ஊர் விட்டு ஊர் சைக்கிள் பிரயாணம் என்று சைக்கிளில் ஒரு கனவின் பல வண்ணமாக மிளிர்ந்த காலம் அது. மற்றபடி ஒரு கிலோ மீட்டரோ, பத்து கிலோ மீட்டரோ எல்லோரும் நடை தான். நடப்பதற்கு சளைப்பதில்லை யாரும். கிராமத்து மக்களும் நகரத்து மக்களும் சரி அத்தனை தலைச்சுமைகளும் சுமந்து கொண்டு நடையாய் நடந்து தேசமெங்கும் திரிந்தார்கள், அறிவியல் வளர்ச்சியால் மொபெட்டுகளும், மோட்டார் சைக்கிள்களும், கார்களும், பெருகி விட்டன. அனைத்து மத்திய தர வர்க்கத்தினரிடமும் குறைந்தது இரண்டு டூ வீலர்கள் எனப்படும் ( இந்தக்கணக்கில் சைக்கிள் வராது என்பதைக் கவனத்தில் கொள்க ) வண்டிகள் இருக்கும். அடுத்த கட்டமாக கார் வாங்குவதற்கான முயற்சியும் இருக்கும். இப்போதெல்லாம் ஊருக்குள் ஆடு, மாடு மந்தைகள் ஊர்ந்து செல்வதைப் போல இந்த மொபெட்டுகளும், மோட்டார்சைக்கிள்களும், கார்களும், செல்வதை காலை மாலை வேளைகளில் பார்க்கலாம். நடந்து செல்பவர்களை எண்ணி விடலாம். சைக்கிள் கண்ணிலேயே தெரியாது. எல்லோரும் அவசரம் அவசரமாக ஒரு எமர்ஜென்சிக்காக செல்வதைப் போல ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, ஒரு நிமிடம் கூட நிற்கப் பொறுமையில்லாமல் பறந்து கொண்டிருக்கிறோம்.

தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இன்று அத்தியாவசியப் பொருட்களாகி விட்டது. வீட்டில் உள்ள பெண்களின் மன அழுத்தத்தை தொலைக்காட்சி சீரியல்கள் அதிகப்படுத்துகிற பொறுப்பை எடுத்துக் கொள்ள, குழந்தைகளின் மனதை கெடுக்கிற அத்தனை சாதனங்களும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு கம்யூட்டர் உதவி செய்ய சமூக அறம் சார்ந்த அனைத்து நடைமுறைகளையும் கை கழுவிக்கொண்டிருக்கிறோம். நம்மை நல்வழிப்படுத்த எப்போதும் எல்லாத்துறைகளிலும் தேவதூதர்கள் அவதரித்து வர வேண்டுமென்றும் அதுவரை நாம் அனைவரும் இப்படி இருப்பது இயல்பு தான் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

நம்மை இதுவரை யார் வழி நடத்தியிருக்கிறார்கள் என்று ஒரு கணமேனும் யோசித்ததில்லை. இப்போதும் நம்மை யார் வழி நடத்துகிறார்கள் என்றும் யோசிக்க வில்லை. ஆனால் கண்களை விற்று சித்திரம் வாங்கும் விநோதத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். நோய்களுக்காக நடைப்பயிற்சி செய்வது எப்படி எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் என்று ஃபீஸ் கட்டி ஆலோசனைகள் கேட்கிறோம். நோய்கள் வந்த பிறகு உணவு குறித்து அக்கறைப்படுகிறோம். இயற்கை வேளாண்மை உற்பத்தி பொருட்களை, சிறுதானியங்களை, காய்கறிகளைத் தேடுகிறோம். ஊரெங்கும் புகை கக்கி நம் ஒவ்வொருவர் பங்குக்கும் ஒரு மி.மி. அளவாவது ஓசோனை ஓட்டை போட்டு விட்டு சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுகிறோம். சகமனிதர்களோடு போட்டி போடுவதையே வாழ்வின் லட்சியமாக வைத்துக் கொண்டு ஊருக்கு அறம் பற்றி உபதேசிக்கிறோம். அளவுக்கு மீறிய பேராசையால் நம்மை மறந்து நம் சமூகத்தை மறந்த நாம் ஒழுக்கம், அறம், சமூகம் என்று பூஜ்யஸ்ரீயிடமோ, ஓஷோ, ஈசோ விடமோ யார் யாரிடமோ பணத்தையும் அறிவையும் இழக்கிறோம். யார் என்ன சொன்னாலும் நம்புகிறோம். விளம்பரங்களையே உண்மையாக நினைக்கிறோம். சினிமா கலைஞர்களை இன்னமும் கடவுளாக பாவிக்கிறோம். அவர்களை நம்மை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கிறோம். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் பிரித்தாள கையாண்ட பிராமணிய தந்திரமான சாதியத்தை இன்னமும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறோம். சமாதான வாழ்வைச் சீர்குலைக்கிறார்கள் என்று தெரிந்தே மதவெறிச் சக்திகளுக்கு ஆதரவளிக்கிறோம். நம்மிடம் எங்கோ கோளாறு இருக்கிறதா?

என்ன செய்யப் போகிறோம் நாம்?

ஏன் இப்படி இருக்கிறோம்?

ஒரு கணமேனும் நாம் சிந்திக்கிறோமா?

சிந்திப்போமா?

Thursday 30 July 2015

மருத்துவத்தின் அரசியல்

மருத்துவத்தின் அரசியல்

உதயசங்கர்


மனிதன் எப்போதும் நோயின்றி வாழவே விரும்புகிறான். சிறு தும்மல் வந்தாலும் தன் உடல்நலத்தைப் பற்றிச் சந்தேகம் வந்து விடுகிறது. உடனே மருத்துவரைத் தேடி ஓடுகிறான். தன் உடல்நலத்தைப் பேணுவதற்காக எவ்வளவு பணமும் செலவழிக்கத் தயாராக இருக்கிறான். ஆதியில் மருத்துவம் என்பது சேவைத்தொழிலாக இருந்தது. காலனிய ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக அது பணத்தொழிலாக உருப்பெற்றது. இன்று கொஞ்சநஞ்சம் இருந்த சேவை என்ற குணாதிசயம் முற்றிலும் முற்றிலும் பணம் கொழிக்கும் தொழிற்சாலையாக மாறியிருக்கிறது. இந்த மருத்துவத்தொழிற்சாலையின் முதலாளிகள் மருந்துக் கம்பெனிகள் தான். அதன் ஊழியர்களாக நவீன மருத்துவர்கள், தொழிற்சாலை கருவிகளாக புதிய புதிய மருந்துகள், அந்த கருவிகளில் பயன்படுத்துகிற கச்சாபொருட்களாக அப்பாவி நோயாளிகள். நோய்களைக் குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் பதட்டத்தை நோயாளிகளிடம் ஏற்படுத்தி அவர்களிடம் மருந்துகளைப் பயன்படுத்தி ஏற்படும் விளைவாக கொள்ளை லாபம் பன்னாட்டு உள்நாட்டு மருந்துக்கம்பெனிகளுக்குப் போகிறது. திறமையாக மருந்துகளைக் கையாண்டு மருந்துக்கம்பெனிகள் லாபம் கொழிக்க உதவிய அதன் ஊழியர்களான நவீன மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், பரிசு, என்று ஏராளமான சலுகைகள். ஆக நோயாளிகள் அவருடைய நோயைக் கண்டுபிடிக்கிற ( இப்போதெல்லாம் பெரும்பாலும் மருத்துவ உபகரணங்கள் தானே நோயைக் கண்டுபிடிக்கின்றன? ) மருத்துவருக்கும் அவர் பரிந்துரைக்கிற மருந்துகளுக்கும் சேர்த்து பணம் செலவழிக்கிறார்.
நோய்க்கான காரணிகள் என்னென்ன? பொதுச்சுகாதாரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்று அரசு சார்ந்தும், தனிமனித பழக்கவழக்கங்கள், சுகாதாரவிழிப்புணர்வின்மை, என்று தனிமனிதர்கள் சார்ந்தும் சொல்லலாம். இந்திய மக்களில் சரிபாதிக்கு மேல் கிட்டத்தட்ட 60 கோடிபேருக்கு மேல் கழிப்பறைவசதி கிடையாது. இவர்கள் திறந்த வெளியில் மலம்கழிக்கும் பழக்கத்தினால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் நிமோனியா, வயிற்றாலை ( டையோரியா )போன்ற நோய்களினாலும் ஊட்டச்சத்துக்குறைபாட்டினாலும் தினம் 5000 குழந்தைகள் இறந்து போகிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் தடுக்கக்கூடியது.
அதே போல ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் ஏற்படும் இரத்தசோகை நோயினால் இந்தியப்பெண்களில் 20 முதல் 40 சதவீதம் வரை குழந்தைபேற்றில் இறந்து போகிறார்கள். அது மட்டுமல்ல உலகளவில்  இரத்தசோகையினால் ஏற்படும் இறப்புகளில் 50 சதவீதத்துக்கும் மேல் இந்தியாவில் நிகழ்கிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் சமீப ஆய்வறிக்கையில் இதய நோய்கள், நீண்டகால சுவாச மண்டல நோய்கள், சர்க்கரை நோய், புற்று நோய் ஆகிய தொற்று அல்லாத நோய்களினால் 60 சதவீதம் மக்கள் இறக்க நேரிடுகிறது. இத்துடன் சேர்த்து யு.என்.டி.பி. ( UNITED NATION DEVELOPMENT PROGRAMME ) யின் 2014 ஆம் ஆண்டு அறிக்கையின்படி மனித நலவாழ்வு குறியீட்டில் உள்ள 187 நாடுகளில் இந்தியா 137 ஆவது இடத்தில் இருக்கிறது என்பது பெருமைக்குரியதில்லையே.
இந்தியாவில் வறுமை காரணமாக கிராமங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 1995 ல் 15 சதவீதம் என்றால் 2014 ல் 30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதே போல தங்களுடைய நோய்களுக்கு சிகிச்சை எடுக்க மருத்துவமனைகளில் சேர நகரப்புறங்களில் 31 சதவீதம் பேரும் கிராமப்புறங்களில் 47 சதவீதம் பேரும் கடன் வாங்குகிறார்கள் அல்லது தங்களுடைய சொத்துகளை விற்கிறார்கள். இதற்கான முக்கியமான காரணம் என்ன?
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு உலக சுகாதார நிறுவனம், மற்றும் யுனிசெப் உதவியுடன் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஆண்டி பயோடிக்ஸ், மகராஷ்டிரா ஆண்டி பயோடிக்ஸ், கர்நாடகா ஆண்டிபயோடிக்ஸ், இந்தியன் டிரக்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், கேரளா ஸ்டேட் டிரக்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், நோய்த்தடுப்பு மருந்து நிறுவனங்களாக செண்டிரல் ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட், பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா , சென்னை பி.சி.ஜி தடுப்பு மருந்து லேபோரட்டரி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இந்திய மக்களுக்குத் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் கொடுத்தன. 1978 ல் இந்திய மருந்துக்கொள்கையும் 1979 ல் இந்திய மருந்து விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கையும் அறிவிக்கப்பட்டது. இதனால் உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தன. உலகமயமாக்கலுக்குப் பின்னால் இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களைச் செயலிழக்கச் செய்தன. இந்தியாவின் மருந்துக் கொள்கைகளும், மருந்து விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கைகளும் கூட செயலிழந்து வருகின்றன. இதனால் மருந்துகளின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டன. அரசின் கைவசமிருந்த மருத்துவக்கல்வியும் தனியார் வசம் போய்விட்டது. அதோடு சேவையும் போயே விட்டது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களுக்கு ஆகும் மருத்துவச்செலவில் 78 சதவீதம் எதிர்கொள்கிறார்கள். இதுவே இலங்கையில் 53 சதவீதம், தாய்லாந்தில் 31 சதவீதம் பூடானில் 29 சதவீதம், மாலத்தீவில் 14 சதவீதம் மட்டுமே செலவழிக்க நேர்கிறது. மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச்செலவில் உலகிலேயே மிகக்குறைந்த பங்களிப்பு செய்யும் கடைசி மூன்று நாடுகள், இந்தியா, ஹைத்தி, சியாராலியோ. அதே போல நாட்டின் ஒட்டு மொத்த சுகாதாரச்செலவில் அரசின் பங்காக செலவழிக்கப்படும் தொகையில் இங்கிலாந்து 96 சதவீதம் எத்தியோப்பியா 36 சதவீதம், பாகிஸ்தான் 23 சதவீதம் செலவு செய்கின்றன. ஆனால் இந்தியா வெறும் 16 சதவீதம் தான் செலவு செய்கிறது. தூய்மை இந்தியா மூலம் சுகாதாரம், ஆரோக்கியம், மக்கள் நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டிருக்கிற நமது இந்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைவாக பொதுச்சுகாதாரநிதி ஒதுக்கியிருப்பது ஒரு முரண்நகை..
இந்தியாவில் உள்ள பாரம்பரியமான மருத்துவமுறைகளும் மாற்று மருத்துவ முறைகளும் அரசினால் பாராமுகமாக நடத்தப்படும் நிலையில் சாமானிய இந்தியனின் உயிர் இன்று பன்னாட்டு மருந்துக்கம்பெனிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த மருந்துக்கம்பெனிகள் தயாரிக்கும் புதிய மருந்துகளை சோதனை செய்யும் சோதனைச்சாலையாக இந்தியா உருவாகியிருக்கிறது. இந்திய மருந்துக்கொள்கைகள் குறித்தும், மருந்து விலைக்கட்டுப்பாடுக்கொள்கைகள் குறித்தும், பொதுச்சுகாதாரம் குறித்தும் அதில் அரசின் பங்கேற்பு குறித்தும் உரத்துப் பேச வேண்டிய நேரம் இது. ஏனெனில் இது மக்களின் உயிர்ப்பிரச்னை.




Wednesday 29 July 2015

சுற்றுலா போன கட்டெறும்பு

சுற்றுலா போன கட்டெறும்பு

உதயசங்கர்

சுட்டிக்கருப்பன் என்று அந்தக்கட்டெறும்புக்கு எப்படி பெயர் வந்தது தெரியுமா? அவன் எப்போதும் கூட்டத்தோடு இருக்க மாட்டான். எல்லோரும் ஒரு வழி போனால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு மட்டும் தனிவழி போவான். அதனால் எல்லோரும் சுட்டிக்கருப்பன் என்று அவனைத் திட்டுவார்கள். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அவன் சுற்றித்திரிந்து பார்த்த இடங்களைப் பற்றி புற்றுக்குள் வந்து கதை கதையாகச் சொல்வான். அவன் காணாமல் போகும்போது திட்டுகிற எல்லோரும் அவன் கதை சொல்லும்போது அவனைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கண்ணிமைக்காமல் அவனுடைய பாவனை நடிப்பையும் அவனுடைய பேச்சையும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் மட்டும் சிரிக்க மாட்டான். அவன் கடுமையாக சுட்டிக்கருப்பனைத் திட்டுவான். ஆனால் சுட்டிக்கருப்பன் அதைப் பற்றி கவலைப்படமாட்டான். காலில் பட்ட தூசியைத் தட்டிவிடுவது மாதிரி தட்டி விடுவான்.
அன்றும் அப்படித்தான். உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் அதிகாலையிலேயே சுட்டிக்கருப்பனின் உணர்கொம்புகளைத் தட்டி,
“ டேய் ஒழுங்கா கூட்டத்தோட வரணும்… அங்க இங்க போனே தோலை உரிச்சிருவேன்… எம்பின்னாடியே தான் வரணும்.. இன்னிக்கு மக்காச்சோளம் விளைஞ்சிருக்கிற மேகாட்டுக்குப் போறோம்… இன்ன.. தெரிஞ்சிதா?..”
என்று சொல்லியது. சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு குதியாட்டம் போட்டுகிட்டு ஆளுக்கு முன்னாடி மேகாட்டுக்குக் கிளம்பியது. தலைவன் முன்னால் போனான். அவனுக்குப் பின்னால் அணிவகுத்து அனைவரும் வரிசை மாறாமல் காடுமேடு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அடிக்கடி தனக்குப் பின்னால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு தலைவன் போனான்.
. கொஞ்ச தூரத்தில் இருந்த மக்காச்சோளக் காட்டில் ஒரு இயந்திரம் விளைந்த மக்காச்சோளக்கதிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தது.. அறுவடை நடக்கிறது என்றால் நிறைய மக்காச்சோளம் சிந்தும். அவற்றை சேகரித்துக் கொண்டு வந்து விடலாம். வேலை எளிதாக முடிந்து விடும். ஆனால் மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இயந்திரமும் மேலும் கீழும் வரும். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
சுட்டிக்கருப்பன் அறுவடை நடந்து கொண்டிருந்த  மக்காச்சோளக்காட்டின் குறுக்கே மறுக்கே நடந்தான். ஓடினான். அலைந்து திரிந்தான். ஒரு முறை ஒரு மனிதனின் காலில் மிதிபடத் தெரிந்தான். ஒரு முறை ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தின் அருகிலேயே போய் விட்டான். நல்லவேளை… தப்பித்து விட்டான். ஆடி ஓடிக் களைத்த சுட்டிக்கருப்பன் அருகிலிருந்த ஒரு புளிய மரத்தின் நிழலுக்குப் போனான். புளிய மரத்தின் அடியில் புளியம்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. ஒவ்வொரு புளியம்பூவின் இதழ்களையும் துழாவினான். அதில் ஒட்டியிருந்து இத்துணூண்டு தேனை உறிஞ்சினான். அப்படியே குடித்துக் குடித்து கொட்டாம்பெட்டி மாதிரி வயிறு நிறைந்து விட்டது. தேன் குடித்த மயக்கத்தில் அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் வயர்க்கூடைக்குள் புகுந்தான். அவ்வளவு தான் தெரியும் சுட்டிக்கருப்பனுக்கு.
சிலுசிலுவென காற்று முகத்தில் அடித்தது. அதுவரை கிறங்கிப் போயிருந்த சுட்டிக்கருப்பன் கண்விழித்தான். அவன் இருந்த வயர்க்கூடை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. மெல்ல காற்றை எதிர்த்து வந்து கூடையின் மேல் நின்று பார்த்தான். ஆகா அவன் இருந்த கூடை ஒரு சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் காற்றில் பறந்து விடுவான் போல சைக்கிள் பறந்தது. சுட்டிக்கருப்பன் பயந்து போய் விட்டான். ஐய்யய்யோ.. நம்ம கூட்டத்தை விட்டு வந்து விட்டோமே… கூட்டத்தலைவனும் ராணியும் சிக்கினால் தோலை உரித்து விடுவார்களே! என்ற பயமும் வந்தது. அப்போது சைக்கிள் ஒரு இடத்தில் நின்றது. கூடையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு சிறிய ஓட்டு வீட்டுக்குள் கீழே வைத்தான் சைக்கிளை ஓட்டியவன். உடனே ஒரு குழந்தை “ப்பா…ப்பா..ப்பா…” என்று மழலையில் பேசிக் கொண்டே கூடைக்கருகில் தவழ்ந்து வந்தது. கூடையை அப்படியே கவிழ்த்தது குழந்தை. கூடையிலிருந்த தூக்குவாளி, துண்டு அழுக்குச்சட்டை எல்லாவற்றையும் இழுத்துப் போட்டது. கூடை கவிழ்ந்ததுமே ஆகா..செத்தோம்… என்று பயந்த சுட்டிக்கருப்பன் உள்ளேயே பதுங்கியது. கூடையில் தின்பண்டத்தை எதிர்பார்த்த குழந்தை தின்பண்டம் இல்லை என்றதும் அழத்தொடங்கியது. அப்போது கூடையின் அடியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சுட்டிக்கருப்பனைப் பார்த்து விட்டது. உடனே சுட்டிக்கருப்பனைப் பிடிக்க உள்ளே கையை விட்டது. ஐயோ  சுட்டிக்கருப்பனைத் தொட்டே விட்டது…..
நல்லவேளை அந்தக்குழந்தையின் அம்மா குழந்தையைத் தூக்கி விட்டாள். உடனே குழந்தை பெரிதாக அழத்தொடங்கியது.
 “ பிள்ளைக்கு திம்பண்டம் வாங்கிட்டு வரணும்னு தெரிய வேண்டாமா.. அப்படியே வீசுன கையும் வெறுங்கையுமாவா வர்ரது… பாருங்க எப்படி அழுதான்னு..போங்க போய் உடனே பிஸ்கட் வாங்கிட்டு வாங்க…..”
என்று குழந்தையின் அம்மா சத்தம் போட்டதும் சைக்கிளில் வந்தவர் மறுபடியும் வயர்க்கூடையை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு கிளம்பினார். ஒரு ரெண்டு தெரு தாண்டியிருக்கும் சைக்கிள். அங்கே ஒரு பலசரக்குக் கடைக்கு முன்னால் போய் நின்றது. கூடையைக் கீழே வைத்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுட்டிக்கருப்பன் பாய்ந்து பலசரக்குக் கடைக்குள் நுழைந்து விட்டான்.
அடடா.. என்ன வாசனை! புளி, சீரகம், மிளகு, வெல்லம், சீனி, அரிசி, கோதுமை, பிஸ்கட் பாக்கெட்டுகளில் உள்ள மணமூட்டிகளின் வாசனை. சேவு, மிக்சர், சீவல், இவற்றின் எண்ணெய் வாசனை, என்று எல்லாம் காற்றில் கலந்து ஒரு கலவையான வாசனை வந்தது. உணர்கொம்புகளை நீட்டி வாசனைகளை முகர்ந்த படியே ஒவ்வொரு பொருளாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குஷியில் இரண்டு கால்களால் நின்று கொண்டு ஆடியது. நமது கூட்டத்தை இங்கே கூட்டிகிட்டு வந்து விட்டால் போதுமே… ஆகா..ஆனந்தமே…! அப்போது சுட்டிக்கருப்பன் மீது பெரிய போர்வையைப் போல இருட்டு மூடியது. சுட்டிக்கருப்பனுக்கு எதுவும் புரியவில்லை. ஆள் நடமாட்டமும் இல்லை. இருட்டில் விதவிதமான பூச்சிகளும், எறும்புகளும், கரப்பான்பூச்சிகளும், சுண்டெலிகளும், கடைக்குள் சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டிருந்தன. சுட்டிக்கருப்பன் வெளியே வரவில்லை. அப்படியே அது ஏறிய வெல்லம் இருந்த மூடையில் கிடந்தது. இப்போது தான் கூட்டத்தை விட்டு வெளியேறியதற்காக முதல் முறையாக வருத்தப்பட்டது. இனி எக்காரணம் கொண்டும் நமது கூட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது. என்று நினைத்தது. பிழைச்சிருந்தா மறுபடியும் நம்ம கூட்டத்தைப் பார்ப்போம். என்று நினைத்த படியே உறங்கி விட்டது.
மறுநாள் கண்விழிக்கும் போது சுட்டிக்கருப்பனைச் சுற்றி அவனுடைய தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எப்படி தெரியுமா? காலையில் பலசரக்குக்கடைக்கு வந்த கடைக்காரர் கம்மங்கஞ்சிக்கு வெல்லம் வாங்கினார். வெல்லத்தில் சுட்டிக்கருப்பனும் இருந்தான். சைக்கிள்காரருக்கு இன்று சுட்டிக்கருப்பன் கூட்டத்தினர் இருந்த பகுதியில் தான் உழவு வேலை. அவர் கம்மங்கஞ்சியைச் சாப்பிட வெல்லம் எடுத்தபோது அதில் கிறங்கிக் கிடந்த சுட்டிக்கருப்பனை எடுத்து வெளியில் வீசினார். நேற்றிலிருந்து காணாமல் போன சுட்டிக்கருப்பனைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்த வெல்லத்தின் வாசனையில் அருகில் வந்தால் அங்கே கிடக்கிறான் சுட்டிக்கருப்பன்!
அப்புறம் என்ன?
விடிய விடிய சுட்டிக்கருப்பன் அவன் சுற்றுலா  போன கதையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.

  

Monday 27 July 2015

பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்

பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்

உதயசங்கர்

இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. மொட்டை வெயிலில் பீடங்களாக காய்ந்து கொண்டிருந்த அய்யனார்களும், கருப்பசாமிகளும், மாடசாமிகளும், அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன், இசக்கியம்மன், காளி, என்று உக்கிரமான நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வக்கோவில்களின் ஆகம விதிகளின்படி மாற்றியமைக்கப்படுகின்றன. கோவில் கோபுரங்கள், துணை தெய்வங்கள், உருவாக்கப்படுகின்றன. கோவில் மதில் சுவர்கள் கட்டப்படுகின்றன. சுற்றுப்பிரகாரங்கள் அமைத்து அதில் பெருந்தெய்வங்கள் குடியமர்த்தப்படுகின்றன. நாட்டார் தெய்வங்களில் ஆண் தெய்வங்களை சிவனின் அவதாரங்கள் அல்லது ஏவல் கணங்கள் என்றும் பெண் தெய்வங்களை பார்வதி, லெட்சுமி, அம்சங்கள் என்றும் கற்பிக்கப்படுகின்றன. முன்பு ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பங்குனி உத்திரம், ஆடிக்கொடை, என்று திருவிழாக்கள் நடந்து கொண்டிருந்த நாட்டார் கோவில்களில் இப்போது அனுதினமும் விளக்கு ஏற்றப்பட்டு பூஜை, புனஸ்காரங்கள் நடைபெறத்தொடங்கியிருக்கின்றன. முன்பு நினைத்தவுடன் குடும்பத்துடன் போய் குலதெய்வம் அல்லது நாட்டார் கோவில்களுக்குச் சென்று நேரடியாக கும்பிட்ட நிலைமை மாறி விட்டது. ஊருக்கு அருகில் இருக்கிற நாட்டார் கோவில்களில் ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவரே நாட்டார் தெய்வங்களுக்கும் ஏஜெண்டாக மாறி விட்டார். உண்டியல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நைவேத்தியம் படைக்கப்படுகின்றது. மஞ்சளும் குங்குமம் பூசி வெள்ளிக்கண் பதித்து உக்கிரமாகக் காட்சியளித்த நாட்டார் தெய்வங்கள் இப்போது சாந்தசொருபியாக உத்தரியம், பட்டு வேட்டி தரித்து அம்மாஞ்சியாக முழிக்கிறார்கள். முன்பிருந்ததை விட புரோகிதர் தொழிலுக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. நிறைய பிராமண இளைஞர்கள் பஞ்சகச்சமும், மேல் உத்தரியமும் குடுமியும் வைத்துக் கொண்டு மொபெட்டுகளிலும், பைக்குகளிலும் சுற்றுகிறார்கள். முன் காலத்தில் போலவே பிராமணர்களை சாமி என்று அழைக்கும் குரல்கள் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிவராத்திரி, பங்குனி உத்திரம், அஷ்டமி, நவமி, பாட்டிமை, பிரதோஷம் நாட்களில் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. முகூர்த்த நாட்களில் மட்டும் தான் கூட்டம் கூட்டமாகக் கல்யாணங்கள் நடக்கின்றன. எல்லா விஷேச நாட்களிலும் புரோகிதர்கள் கிடைப்பது மிக மிக அரிதாகி விட்டது. ஃபீஸ் எவ்வளவு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு இருபத்தியையாயிரம் வரை ஃபீஸ் வாங்கும் புரோகிதர்கள் பெருகி விட்டனர். இப்போது சமஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை.
அதே போல உணவு விஷயத்திலும் அசைவ உணவை கீழ்த்தரமானதாகவும் சைவ உணவை மேல்நிலையாக்கமாகவும் உருவாக்கி விட்டிருக்கிறது. அதில் அசைவ உணவிலும் மாட்டுக்கறி, பன்னிக்கறி சாப்பிடுபவர்கள் மிகக்கேவலமானவர்களாக அதாவது சாதியமைப்பில் கீழானவர்களாக கருதுகிற நிலைமை இன்றும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைமுறையில் இருக்கிற வர்ணாசிரம அமைப்பும், மனுதர்ம சாத்திர விதிகளும் மக்களின் பொதுப்புத்தியில் ஆழமாக வேரோடியிருக்கிறது. எனவே தங்களுடைய உணவுப்பழக்கத்தைக் கூட வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலைமையை உருவாக்கி விட்டிருக்கிறது. எனவே காலங்காலமாக மாட்டுக்கறி, பன்னிக்கறி சாப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்களே இப்போதெல்லாம் நாங்கள் மாட்டுக்கறி, பன்னிக்கறி, சாப்பிடுவதில்லை என்று சொல்வதும், இன்னும் உச்சமாக நாங்கள் சைவம் என்று சொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. கீழ்த்தட்டிலிருந்து பொருளாதாரரீதியாக மத்திய தரவர்க்கமாக மாறுகின்ற குடும்பங்களில் டான்ஸ் கற்றுக்கொள்வது, ஸ்போக்கன் இங்கிலிஷ், ஹிந்தி, சங்கீதம் யோகாசனம், கற்றுக்கொள்வது சாதாரண விஷயமாகி விட்டது. இப்போது யோகாசனத்தை இந்தியாவே கடைப்பிடிக்கிற உளவியல் நெருக்கடி வந்து விட்டது. பயிற்சி என்பது போய் இந்து மதத்தின் அடையாளமாக மாற்றப்பட்டு விட்டது.
மிக முக்கியமான திருநாட்கள் மட்டுமே கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த காலம் போய் இன்று காலண்டரில் போடப்பட்டிருக்கிற அத்தனை பிராமணிய, பஞ்சாங்க, விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. குளிகை, எமகண்டம், நல்ல நேரம், தோஷம், சூலம், பரிகாரம், என்று அனைத்து நாட்காட்டிகளும் நிரம்பி வழிகின்றன. நல்ல நேரம் குறிக்காமல் ராக்கெட்டோ, ஏவுகணையோ கூட ஏவப்படுவதில்லை. வீடுகளில் குடும்பத்தினரின் நலன் ஒன்றையே தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டு தன்னைத் தியாக தீபமாக கற்பித்துக் கொண்டு வாழ்கிற பெண்களை இந்த எல்லாச்சடங்குகளையும் முன்னெடுக்கிறார்கள். அவர்களே சுமங்கலி பூஜை, லட்சுமி பூஜை, விளக்கு பூஜை, ஐஸ்வரிய பூஜை என்று விதவிதமான பூஜைகள் மூலம் அணி திரள்கிறார்கள். நெற்றியில் மட்டும் இருந்த குங்குமம் இப்போது தலைமுடி வகிடு நெடுக பரவியிருக்கிறது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து வெளியூர் கோவில் விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் எப்படி பெண்கதாநாயகி, பெண்வில்லன்களே நிறைந்த சீரியல்களைப் பார்க்கிறார்களோ அதே மாதிரி பார்த்து பரவசமடைகிறார்கள். கோவில்களுக்குச் செல்வதை தங்களுக்கான ஒரு புழங்குவெளியாக, ஒரு கொண்டாட்டமாக பார்க்கிற உளவியல் பெண்களிடம் இருக்கிறது. தொலைக்காட்சி மூலம் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அதன் மூலம் தாங்களும் தங்கள் குடும்பமும் மேல்நிலையாக்கத்தை அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
மேல்நிலையாக்கம் என்பது முன்னேற்றம் என்று எடுத்துக் கொண்டால் சைக்கிள் வைத்திருக்கும் ஒருவர் மோட்டார்சைக்கிள் வாங்குவது கார் வாங்குவது என்று எடுத்துக் கொள்ளலாம். குடிசையில் இருப்பவர் வீடு கட்டி குடியேறுவது, இப்படி தங்களுடைய பௌதீகச்சூழலில் ஏற்படும் முன்னேற்றத்தையும் மேல்நிலையாக்கம் என்று சொல்லலாம். பௌதீகச்சூழலை மிக நவீனமான, விஞ்ஞான சாதனங்களை, பொருட்களை, வாங்கிக்கொள்வதன் மூலம் தங்களை மேல்நிலையாக்கம் செய்து கொள்கிறவர்கள் ஆன்மீகச்சூழலில் ஏன் மூவாயிரம் ஆண்டு பழமையான சநாதனமான, பிற்போக்குத்தனமான, சமத்துவமற்ற, சர்வாதிகாரமான,  வேதங்களையும், மனுதர்மத்தையும், வர்ணாசிரமக்கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள்? பௌதீகச்சூழலில் நவீனத்தைத் தேர்ந்தெடுக்கிற பெரும்பாலான மக்கள் உளவியல்ரீதியாக மிகப் பிற்போக்கான பிராமணிய மேல்நிலையாக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களே ஏன்?
இந்திய சமூகத்தில் மிகச்சிறிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் பிராமணியம் தன் ஆட்சியை விஸ்தரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குத் தேவையான நிரந்தர, தற்காலிக நடைமுறை உத்திகள் அதன் கருவிலேயே இருக்கின்றன. பிராமணியம் வேதகாலம் தொடங்கி தன்னை மாறி வரும் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொண்டேயிருக்கிறது. புத்தரை விஷ்ணு அவதாரமாக்கியது தொடங்கி இந்து மதத்தின் சீர்த்திருத்தவாதிகளான ராமனுஜர், வள்ளலார், பசவண்ணர், நாராயணகுரு, அய்யன் காளி, அய்யா வைகுண்டர், வரை இந்து மத எதிர்ப்பாளர்களான சார்வாகரை எரித்தும், அம்பேத்கரைச் சொந்தம் கொண்டாடியும், பெரியாரை எதிர்த்தும், இப்படி எல்லோரையும் விழுங்கி செரித்து அவர்களை வெறும் அடையாளங்களாக மாற்றியது வரை ஒரு நீண்ட நெடிய ஆக்கிரமிப்பு வரலாறு பிராமணியத்துக்கு இருக்கிறது. மத்தியதரவர்க்கம் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இந்த பிராமணியமயமாக்கலை தங்கள் வர்க்கத்தின், சமூகத்தின், சாதியின், மேல்நிலையாக்கம் என்று கருதுகின்றனர். கெடுவாய்ப்ப்பாக. பிராமணியமாக்கலையே இந்திய சமூகம் தன்னுடைய உச்சபட்ச உயர்ந்த நிலையாகக் கற்பிதம் செய்திருக்கிறது. வேதகாலசநாதனத்தைப் போலவே பகுத்தறிவுக்கும் வேதகால சார்வாகர் தொடங்கி ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பகுத்தறிவு இயக்கம் அவ்வப்போது எழுச்சி பெற்றாலும் பதுங்கிப் பாயும் பிராமணியம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
பிராமணிய மேல்நிலையாக்கத்தினால் நம் சமூகத்தின் தனித்துவமான பன்முகச்சூழல் அழிந்து ஒற்றைக் கலாச்சார சர்வாதிகாரம் உருவாகிறது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு இனக்குழுவின், உழைக்கும் மக்களின், கோவில்கள், முன்னோர் வழிபாடு, குலதெய்வங்கள், உணவுப்பழக்கம், இயற்கையோடு இயைந்த தனித்துவமான பண்பாட்டு அசைவுகள், ஆன்மீகவிழாக்கள், எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பௌதீகச்சூழல் முன்னேற்றத்தினால் வாழ்க்கைத்தரத்தில் உயர்வு வரும். ஆனால் பிற்போக்கான இந்தப்பிராமணியமாக்கலினால் சமூகத்தின் வரலாற்றுச்சக்கரம் பின்னோக்கித் தள்ளப்படுகிற ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனவே பிராமணிய மேல்நிலையாக்கத்தின் ஆக்கிரமிப்பையும் நம்முடைய பண்பாட்டு அசைவுகளையும் பிரித்தறிய வேண்டியுள்ளது. வைதீக ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து உழைக்கும் மக்களின் எளிய ஆன்மிகத்திருவிழாக்களை மீட்டெடுத்து தங்கள் பண்பாடு குறித்த பெருமிதத்தை நிலை நாட்ட வேண்டியுள்ளது. இதற்கான பரப்புரையை தீவிரமாக நிகழ்த்த வேண்டியுள்ளது. இது தற்காலிக நடைமுறையுத்தி. நீண்ட கால யுத்தியாக அறிவியல் பூர்வமான பகுத்தறிவு இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. வரலாற்று அறிஞர் பேரா.கே.என்.பணிக்கர், பண்பாட்டில் தலையீடு செய்கிறோம் ஆனால் பண்பாட்டுத்தலையீடு செய்கிறோமா? என்ற ஆழமான கேள்வியைக் கேட்கிறார்.
ஆதிக்கம் செலுத்துகிற பண்பாட்டுநிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியான தலையீடுகள் செய்வது, அதன் மூலம் வெகுமக்களிடம் ஒரு விமர்சன விழிப்புணர்வை உருவாக்குவது என்ற அளவில் பலகீனமாகவேனும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர் மேலாதிக்கமாக மாற்றுப் பண்பாட்டு நிகழ்ச்சி நிரலை நாம் உருவாக்கியிருக்கிறோமா? நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் இது தான். இதைத் தனியாக இடது சாரி பண்பாட்டு அமைப்புகள் மட்டும் செய்து விட முடியாது. மாற்றுப்பண்பாடு குறித்த ஒத்த கருத்துடைய அமைப்புகளின் மிகப் பெரிய அணி திரட்டல் தேவைப்படுகிறது. காலம் விடுக்கும் கோரிக்கை இது!