Sunday 21 July 2019

ஒரு சொட்டு தண்ணீர்


ஒரு சொட்டு தண்ணீர்
உதயசங்கர்

” நிகி! நேரமாயிடுச்சிம்மா சீக்கிரம் பாத்ரூம்லர்ந்து வெளியே வா. கம் குயிக் .”
நிகிதாவின் அம்மா பத்து நிமிடமாகக் கூப்பிட்டுக்கொண்டேயிருந்தார். அதற்கு நிகிதா,
“ வாரேம்மா.. இன்னும் குளிச்சி முடியல.. “
என்று பதில் கொடுத்தாள் நிகிதா. இன்றைக்கு அம்மா அப்பா தம்பி பிரிஜேஷ் நிகிதா எல்லோரும் ரயிலில் திருநெல்வேலி வரை போகிறார்கள். நிகிதாவுக்கும் பிரிஜேஷுக்கும் ஸ்கூல் யூனிபார்ம், பேக், சூஸ், என்று எல்லாம் வாங்கப்போகிறார்கள். ரயிலில் அதிகம் போனதில்லை. எப்போதும் காரில் தான் பயணம். இந்த முறை அப்பா தான் ரயிலில் போகலாம். ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார். நிகிதாவுக்கு குளிப்பது என்றால் அப்படி பிடிக்கும். குறைந்தது அரை மணிநேரமாவது பாத்ரூமில் இருப்பாள். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை கூடக் குளிப்பாள். கோடையோ குளிர்காலமோ அவர்களுடைய வீட்டில் தண்ணீர் வற்றாமல் வரும். வீட்டிலுள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும். யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.
ஒருவழியாக நிகிதா வெளியே வரும்போது எல்லோரும் தயாராக இருந்தார்கள். அவளும் அவசர அவசரமாகப் புறப்பட்டாள்.
ரயில் பயணம் புதிய அநுபவமாக இருந்தது. முதலில் ரயிலின் சத்தம். கடகடா படபடா சடசடா என்று சத்தமே அவளை உற்சாகப்படுத்தியது. தம்பியும் ரயிலைப்போலவே சத்தம் கொடுத்தான். நிகிதா சன்னலுக்கு வெளியே பார்த்தாள். பின்னால் ஓடிக்கொண்டிருந்த தரை.  வீடுகள், செடிகள், கொடிகள், மரங்கள், மனிதர்கள். வெட்டவெளி. பொட்டல் காடு. கடுமையான வெயிலினைத் தாங்க முடியாமல் பாளம் பாளமாக வெடித்துக் கிடந்த கருப்புமண். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு மரங்கள். நிழல் மாதிரி நடமாடும் மனிதர்கள். நிகிதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. வேறு ஒரு உலகமாக இருந்தது. அவள் உள்ளே திரும்பிப் பார்த்தாள்.
ஒரே பெட்டியில் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேசிக்கொண்டே வந்தார்கள். நிறைய வியாபாரிகள் கடலை, வெள்ளரிக்காய், முறுக்கு, சுண்டல், காபி, டீ, போண்டா, வடை, போளி, என்று விதவிதமான தின்பண்டங்களைக் கொண்டு வந்தார்கள். பிரிஜேஷ் அம்மாவிடம் வடை வேண்டும் என்றான். அம்மா வாங்கவில்லை. நிகிதாவுக்கும் போளி சாப்பிட ஆசை இருந்தது. அம்மாவின் முகத்தைப் பார்த்து பேசாமல் இருந்து விட்டாள். ரயில் பெட்டியிலேயே டாய்லெட் இருந்தது. வெளியே ஒரு வாஷ் பேசினும் இருந்தது. விசித்திரமாக இருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தாள் நிகிதா.
இப்படி ஒரு உலகம் இருப்பதே அவளுக்குத் தெரியாது. அவள் இருக்கும் நகரத்தில் எல்லாம் நாகரீகம். அவள் படிக்கும் பள்ளிக்கூடம் குளிர்சாதன வசதி கொண்டது. அவளுடைய வீட்டிலும் படுக்கையறைகள் குளிர்சாதன வசதி கொண்டது. .வீட்டில் பள்ளியில் எல்லாம் பாதுகாக்கப்பட்ட ஓசோனைஸ்டு குடிநீர்.  ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள், ஹைஜீனிக் உணவு. அம்மா எல்லாவற்றிலும் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள். வீடு விட்டால் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடம் விட்டால் வீடு என்று அவளுடைய உலகம் மிகவும் சின்னது. இப்போது பார்க்க பார்க்க அவளுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.
ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. உடனே வெளியிலிருந்து சத்தம் கேட்டது.
“ நீ அந்தப் பெட்டிக்குப் போ.. பெரிய குடத்தை எடுத்துக்கோ.. வாளியில பிடி… சிந்தாமப்பிடி… “ என்று குரல்கள் கேட்டது. எல்லாப்பெட்டிகளிலும் குடங்கள், பானைகள், வாளிகளை எடுத்துக் கொண்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஏறினார்கள். வாஷ் பேசின், டாய்லெட், என்று நுழைந்து அவர்கள் கொண்டுவந்த குடங்களிலும் வாளிகளிலும் தண்ணீர் பிடித்தார்கள். நிகிதா அங்கும் இங்கும் தண்ணீருக்காக அலைபாய்ந்து கொண்டிருந்த ஆட்களைப் பார்த்தாள். தம்பி பிரிஜேஷ் பயந்து போய் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டான். அப்போது நிகிதாவை விட சின்னப்பிள்ளையாக இருந்த ஒரு பெண்குழந்தை கையில் சிறிய வாளியில் தண்ணீரைப் பிடித்து குடங்களில் நிறைத்துக் கொண்டிருந்தது. அப்படி நிறைத்த குடத்தை கீழே பிளாட்பார்மில் இருந்தவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தது. அப்படி செய்யும்போதே அந்தக் குழந்தை நிகிதாவைக் கண்கொட்டாமல் பார்த்தது. அவளைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தது.
நிகிதாவும் சிரித்தாள். அந்தப்பிள்ளை அவளைத் தாண்டிப் போகும்போது,
“ எதுக்கு இந்தத் தண்ணியைப் பிடிக்கிறீங்க..” என்று நிகிதா கேட்டாள். அதற்கு அந்தக்குழந்தை வேகமாக,
“ எங்கூர்ல தண்ணியே கிடையாது.. இந்தத்தண்ணி தான் குடிக்கிறதுக்கு, குளிக்கிறதுக்கு, சமைக்க, எல்லாத்துக்கும்…  நாளைக்கு இந்த வண்டி வர்றவரைக்கும் இதான் எங்களுக்கு.. உன்னோட சட்டை அழகா இருக்கு “ என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப் போனாள். போகும்போது வெளியே வாசல்பக்கம் இருந்த வாஷ்பேசின் குழாயில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. உடனே அதை இறுக்கி அடைத்து விட்டுப் போனாள் அந்தக் குழந்தை. ரயில் கிளம்பிவிட்டது. சன்னல் வழியே வெளியே பார்த்தாள் நிகிதா. வரிசையாக குடங்கள், வாளிகள், பானைகள், சின்ன டப்பாக்கள், என்று எல்லாவற்றிலும் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள் மக்கள். அவள் அந்தப் பெண்குழந்தையைத் தேடினாள். ரயில் வேகம் எடுத்து விட்டது. அமைதியாக யோசித்துக் கொண்டே வந்தாள்.
மறுநாள் நிகிதா ஐந்து நிமிடத்தில் குளித்தாள். வீட்டிலுள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டாமல் இறுக மூடினாள். பள்ளியிலும் அவளுடைய நண்பர்களிடம் சொன்னாள். அந்த ரயில் அநுபவத்தை ஒரு கதையாக எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள். இரவில் அவளுடைய நோட்டை எடுத்தாள். நோட்டை விரித்ததும் அந்தப் பெண்குழந்தையின் வெட்கம் கலந்த சிரிப்பு ஞாபகத்துக்கு வந்தது. நீர் சொட்டிக்கொண்டிருந்த குழாய் கண்முன்னே தெரிந்தது. கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? என்று யோசித்தாள். சிறிது நேரத்துக்குப் பின்னர் நிகிதா எழுதினாள்.
 “ ஒரு சொட்டு தண்ணீர்..”

நன்றி - வண்ணக்கதிர்

Thursday 18 July 2019

சிட்னி எங்கே?


சிட்னி எங்கே?
பாவ்லா பிக்காசோ
தமிழில் – உதயசங்கர்
சிட்னி ஒரு சிறிய ரெட்டைவால் குருவி. அதனுடைய இறகுகளில் அழகிய நீலநிறம் படர்ந்திருந்தது. அதன் மார்பு வெண்மை நிறத்தில் இருந்தது. எல்லா இரட்டைவால் குருவிகளையும் போல சிட்னியும் உயரே உயரே பறக்கவும் வட்டமடிக்கவும் விரும்பியது.
வசந்த காலத்தில் பிறந்த சிட்னி, கோடைகாலம் நெருங்க நெருங்க பறப்பதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றது. கோடைகாலம் இலையுதிர்காலமாக மாறிய போது சிட்னி மிகுந்த தைரியமும் துணிச்சலும் கொண்ட பறவையாக மாறிவிட்டது. வானத்தில் மிக லாகவமாகப் பறந்து விளையாடியது. அதனுடைய பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன்,
“ இன்றுமாலை நாம் அனைவரும் நீண்ட பிரயாணம் போகிறோம். நீ எங்கும் போய்விடாதே..”
“ கவலைப்படாதீர்கள்.. நான் தூரமாய் எங்கும் போக மாட்டேன்..” என்று சிட்னி சொன்னது. தொலைபேசிக்கம்பிகளில் மற்ற இரட்டைவால் குருவிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்து கொண்டிருந்தன.
அவர்கள் போகவேண்டிய வழியைப் பற்றிச் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்தப்பிரயாணம் மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. திடீரென்று சிட்னியின் கண்களில் ஏதோ தெரிந்தது. அருகிலிருந்த மாடி மீது பளீரென்ற நிறத்தில் ஒரு தும்பி.
ஒரு புகைபோக்கியிலிருந்து மற்றொரு புகைபோக்கிக்குப் பறந்து கொண்டிருந்தது. அப்படி அது பறக்கும்போது சூரியன் தும்பியின் சிறகுகளில் வானவில்லின் அத்தனை நிறங்களையும் அள்ளித்தெளித்து விளையாடினான். சிட்னி அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. பின்னர் மாடியிலிருந்து கிளம்பி தும்பியை விரட்டியது. தும்பி எப்படியெல்லாம் பறக்கிறதோ அப்படியெல்லாம் பறந்து அதைப் பழிப்புக் காட்ட முயற்சித்தது. ஆனால் ஒரு நொடி அதன் கண்கள் வேறுபக்கம் திரும்பியபொழுதில் தும்பி எங்கோ மறைந்து விட்டது.
“ ஓகோ கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறதா..? “
என்று நினைத்துக் கொண்ட சிட்னி கட்டிடத்தின் தாழ்வாரத்தில் இருக்கிறதா என்று பார்க்க தலைகீழாகப் பாய்ந்து சென்றது.
“ ஒருவேளை அந்தப் புகைபோக்கிக்குழாய்க்குள் ஓளிந்திருக்குமோ..” என்று நினைத்தது. உடனே நீண்ட மூச்சிழுத்து விட்டு தலைகீழாக புகைபோக்கிக்குள் பாய்ந்தது. திடீரென்று எல்லாம் கருப்பாகி விட்டது. சிட்னியின் கண்களில் கரிப்புகை சூழ்ந்து விட்டது. மேகம் போன்ற கனமான புகை வானத்தை நோக்கி புரண்டு எழுந்து வந்து சிட்னியின் வாய்க்குள் போய்விட்டது. ஒரு நொடி அந்த இரட்டைவால் குருவிக்கு மூச்சு விடவே முடியவில்லை. புகைபோக்கியின் பக்கச்சுவர்களில் மோதி அதனுடைய சிறகுகளில் காயம் ஏற்பட்டது. அதற்கு தான் எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இதிலிருந்து வெளியே போகவேண்டுமானால் வெளிச்சம் வரும் திசையை நோக்கிப் பறக்கவேண்டும் என்று உணர்ந்தது. ஒன்றிரண்டு தடவை முயற்சித்தபிறகு ஒரு வழியாக சிட்னி அங்கிருந்து விடுதலையாகி வெளியே வந்தது.
நீண்ட பெருமூச்சு விட்டு சுற்றும் முற்றும் பார்த்தது. திடுக்கிட்டுப்போனது. நினைத்ததை விட பெரிய கஷ்டத்தில் அது மாட்டிக்கொண்டது.. நகரத்திலிருந்த ஏராளமான புகைபோக்கிகளில் வேறு ஏதோ ஒரு புகைபோக்கி வழியே வெளியேறிவிட்டது. அது நகரம் முடிகிற இடம். இதுவரை அந்த இடத்துக்கு சிட்னி வந்ததே இல்லை. அதனால் சிட்னியின் அப்பா, அம்மாவையும் நண்பர்களையும் பார்க்கமுடியவில்லை. வேறு ஏதேனும் இரட்டைவால் குருவிகளைப் பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சிட்னி காணாமல் போய்விட்டது. சிட்னிக்கு அழுகை அழுகையாக வந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை அடுக்குமாடிக்கட்டிடங்களும் தொலைக்காட்சி ஆண்டெனாக்களும் தான் தெரிந்தது. பின்னால் மேகத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி தோன்றியது. சிட்னி அதனிடம் பறந்து சென்றது.
“ நீ வேறு ஏதாச்சும் இரட்டைவால் குருவிகளைப் பார்த்தாயா? “
“ நீ எதற்காக அதைக் கேட்கிறாய்? “
“ நாங்கள் அனைவரும் இன்று இரவு தொலைபேசிக்கம்பிகளில் கூடி வேறு நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம்…”
என்று விளக்கமாகக் கூறியது. உடனே சிட்டுக்குருவி,
“ நீ இரட்டைவால் குருவி இல்லையே நீ ஒரு காகம்..”
என்று ஏளனமாகச் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டுப் பறந்து போனது. சிட்னி திடுக்கிட்டது. பின்பு ஒரு கருப்புப்பறவையிடம் போய் எங்காவது இரட்டைவால் குருவிகளைப் பார்த்ததா என்று கேட்டது.
“ கருப்புப்பறவையான நீ ஏன் அதைக் கேட்கிறாய்? “ என்று அந்தக்கருப்புப்பறவை கேட்டது. ஆனால் சிட்னிக்கு அந்தக் கருப்புப்பறவை என்ன சொல்கிறது என்று புரியவில்லை. சிட்னி கவலைப்பட்டது. அதன் பெற்றோர்கள் அது வீடு சென்று சேரும்போது கோபப்படுவார்களே.
அதைவிட மோசம்! ஒருவேளை அவர்கள் அனைவரும் அதனை விட்டு விட்டு பறந்து போயிருந்தால்? சிட்னியால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பயந்து விட்டது. பறந்து சென்று நிலாவைப் பார்த்து ஆடிக்கொண்டிருந்த ஒரு ஆந்தையின் அருகில் சென்று அமர்ந்தது. உடனே ஆந்தை,
“ யார் நீ..? “ என்று கேட்ட ஆந்தை.
“ உன்னை ஒரு தடவை நன்றாகப்பார்..” என்று கூச்சலிட்டது.
“ நான் நான் ஒரு இரட்டைவால் குருவி..” என்று சிட்னி பதில் அளித்தது.
“ உன்னைப்பார்த்தால்.. நீ காகத்தைப்போலவே இருக்கிறாய்…உன்னுடைய அழகிய நீலநிற வெள்ளைநிற இறகுகள் முழுவதும் கரிப்புகை மூடியிருக்கிறது…” என்று கூறியது ஆந்தை.
பெருங்குழப்பத்தில் மாட்டிக்கொண்டோம். தன்னுடைய குடும்பத்தாரால் கூடத் தன்னை அடையாளம் காணமுடியாது என்று நினைத்தது. துயரத்தோடு பறந்து போய்க்கொண்டிருந்தது அந்தச் சிறிய இரட்டைவால் குருவி. ஒரு குன்றின் உச்சிமீது பறந்தபோது அதற்கு தன்னுடைய பெற்றோரும் நண்பர்களும் இருக்கிற இடம் தெரிந்தது. எங்கே அது பிரிந்து வந்ததோ அதே இடத்திலேயே அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.
கரிப்புகை இறகுகளோடு இருந்த சிட்னியை அம்மா உடனே அடையாளம் கண்டுகொண்டது. மற்ற இரட்டைவால் குருவிகளும் மகிழ்ச்சியில் கீச்சிட்டன. தங்களுடைய இறகுகளைச் சிலுப்பிப் பிரயாணத்துக்கு தயாராகின.
கடைசியில் சிட்னிக்கு ஏன் இரட்டைவால் குருவிகள் தங்களுடைய நீண்ட பிரயாணத்தைச் சேர்ந்து மேற்கொள்கின்றன என்று புரிந்தது. அந்தக் கணத்திலிருந்து அது எப்போதும் ஒற்றுமையே பாதுகாப்பு என்ற விஷயத்தை மறப்பதே இல்லை.
நன்றி - மாயாபஜார்


Sunday 14 July 2019

சூசாவின் சாகசம்


சூசாவின் சாகசம்

உதயசங்கர்

மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் இருந்த குற்றியாறு காட்டில் ஏராளமான காட்டுப்பன்றிகள் வாழ்ந்தன. பெரிய எதிரிகள் என்று யாரும் கிடையாது. புலி கிடையாது. சிறுத்தை கிடையாது. ஓநாய் கிடையாது. காட்டுநாய் கிடையாது. காட்டுப்பூனை கிடையாது. மலைப்பாம்பு கிடையாது. எனவே காட்டுபன்றிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
அந்த மலையில் காட்டுப்பன்றிக்கூட்டத்துக்கான உணவும் தாராளமாகக் கிடைத்தன. புற்களைச் சாப்பிட புல்வெளிகள், சாறும் சுவையும் உள்ள தண்டுகள், தளிர் இலைகள் நிறைந்த செடிகள், இனிப்பான கிழங்குகள் உள்ள வேர்கள், என்று ஏராளமான உணவு இயற்கையில் இருந்தது. எனவே கவலை இல்லாமல் வாழ்ந்தன காட்டுப்பன்றிகள்.
ஒரு காட்டுப்பன்றிக் கூட்டத்துக்கு சூசா என்ற பெண்பன்றி தலைவியாக இருந்தது. சூசா தன்னுடைய கூட்டத்துக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டது. ஒவ்வொரு முறையும் ஐந்து அல்லது ஆறு குட்டிகளை சூசா ஈணும். அந்தக்குட்டிகளைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கும். அப்படித்தான் போன நவம்பர் மாதம் சூசா குட்டிகளை அழைத்துக்கொண்டு இரை தேடப்போனது. புதரில் அது கட்டியிருந்த விட்டில் இருந்து புறப்படும்போது ஆறு குட்டிகள் இருந்தன. கொஞ்ச தூரம் போனபிறகு பார்த்தால் ஐந்து தான் இருந்தன. சூசா குரல் கொடுத்தது. ம்ஹெஹே என்ற சத்தத்தைக் கேட்டதும் ஐந்துகுட்டிகளும் தாயின் அருகில் ஓடி வந்து நின்றன. ஆனால் ஆறாவது குட்டியைக் காணவில்லை. மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தது. அன்று சூசா இரவு முழுவதும் தூங்கவில்லை.
மறு நாள் மற்ற குடும்பத்தில் உள்ள தாய்மார்களும் அவர்களுடைய குட்டிகளில் ஒன்றைக் காணோம் என்று சூசாவிடம் வந்து சொன்னார்கள். சூசாவுக்குப் புரியவில்லை. எப்படிக் காணாமல் போகும்? யாராவது புதிய எதிரிகள் வந்திருக்கிறார்களா? என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொண்டிருந்தது.
இப்போது குட்டிகளை முன்னால் விட்டு சூசா பின்னால் போனது. கோரைக்கிழங்குச் செடியை வளைந்து நீண்ட தன்னுடைய கோரைப்பல்லால் குனிந்து நோண்டி மண்ணைக் கிளைத்தது. நிமிர்ந்து பார்த்தால் ஐந்தில் ஒரு குட்டியைக் காணவில்லை. சூசா கோபத்தில் கத்தியது. அது கத்தியவுடன் மற்ற காட்டுப்பன்றிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன. காடு அதிர்ந்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே போகவில்லை. வீட்டுக்கு அருகில் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு சுற்றிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது காற்று திசை மாறியது. மோப்பசக்தியில் கில்லாடியான சூசாவின் மூக்கில் ஒரு வாசனை வந்து மோதியது. அது..அது.. ஒரு புலியின் வாசனை…..
என்னது புலியா? இந்தக்காட்டில் புலியா? சூசாவால் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உடனே அருகில் இருந்த அயினி மரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு அணிலிடம்,
“ டேய் தம்பி உண்மையா இது? “
டபக்கென்று திரும்பி வாலை ஆட்டிய காட்டு அணில்,
“ எது உண்மையா? “
“ அதான் நம்ம காட்டில் புலி இருக்கா? “
“ ஓ அதுவா? எங்கிருந்தோ ஒரு கிழட்டுப்புலி வந்திருக்கு.. அதுக்கு ஓடவும் முடியல.. நிக்கவும் முடியல.. எங்கேயாச்சும் ஓடாமக்கொள்ளாம வேட்டையாடிக்கிட்டு இருக்கு.. ஏன் கேக்கிறே சூசாக்கா? “
சூசா தன்னுடைய குட்டிகள் இரண்டு காணாமல் போனாமல் போன கதையைச் சொன்னது. காட்டு அணிலுக்குப் பாவமாக இருந்தது.
“ பார்த்து பத்திரமா இருங்க சூசாக்கா? “ என்று சொல்லி படக்கென்று திரும்பி வாலை ஆட்டி விட்டு மரத்தில் ஏறியது. சூசா யோசித்தது. அப்படியென்றால் இங்கே தான் அருகில் எங்கேயோ இருக்க வேண்டும் அந்தக்கிழட்டுப்புலி.
இரவில் புதருக்கு அருகில் இருந்த ஆம்பல் குளத்தில் போய் சகதியில் குளித்தது. விடிய விடிய அதிலேயே ஊறிக்கிடந்தது. சூசாவின் உடம்பில் சகதி ஒட்டி ஒட்டி பயங்கரமாக ஆகிவிட்டது. காலையில் அது புதருக்கு வரும்போது நீண்ட அதன் பல்லைத்தவிர சூசாவின் உடல் எங்கும் கருப்பு நிறத்தில் சகதி படிந்து ஒரு புதிய வடிவத்தில் இருந்தது.
சூசாவின் வீட்டுக்கருகில் இருந்த ஒரு பெரிய புதரில் தான் அந்தக்கிழட்டுப்புலியும் இருந்தது. சூசா தைரியத்துடன் அந்தப்புலியின் வாசனையை மோப்பம் பிடித்து அந்தப் புதரில் போய் நின்று கடூரமாய் ஒரு குரல் கொடுத்தது.
“ யாரடா அது என்னோட ஏரியாவில் வந்து வேட்டையாடிக் கிட்டிருக்கறது..”
புதரில் இருந்து வெளியே வந்த புலி சூசாவின் உருவத்தைப் பார்த்து பயந்து போனது. அதோடு சகதியின் நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டது.
“ நான் நான் தெரியாம வந்துட்டேன்.. நாளைக்குப் போயிடறேன்.. “
“ என்னது நாளைக்கா? ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா.. உன்னை இப்பவே குத்திக்கிழிச்சி குடலை உருவி காலை டிபனாச்சாப்பிடலை… என் பேரு சாசூ..ஊஊஊ.. இல்லை..”
புலி பயந்து போனது. ஆனால் இடத்தை விட்டு அசைய வில்லை. சூசா இரண்டடி முன்னால் எடுத்து வைத்து கோரைப்பல்லை தரையோடு தேய்த்தது. தரையில் அரையடி ஆழத்துக்குக் கோடு விழுந்தது. அவ்வளவு தான் புலி எடுத்தது ஓட்டம். சூசா விடவில்லை. பின்னாலேயே விரட்டிக்கொண்டு ஓடியது. புலிக்கு பின்னால் துரத்திக்கொண்டு வந்த அந்த பயங்கர மிருகத்தை விட அதனுடைய நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. தலைகுப்புற விழுந்து ஓடி குற்றியலூர் காட்டை விட்டே மறைந்து போனது. நல்லவேளை. புலி திரும்பிப்பார்க்கவில்லை. சூரியவெளிச்சத்தில் சூசாவின் மீது ஒட்டியிருந்த சகதி எல்லாம் உதிர்ந்து போய் அதன் மாறுவேடம் கலைந்து போயிருந்ததைப் பார்த்திருக்கும்.
சூசாவின் தந்திரம் பலித்து விட்டது. அதன்பிறகு அந்தக்காட்டில் காட்டுப்பன்றிகள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.
நன்றி - வண்ணக்கதிர்