Monday 31 October 2016

தூரம் அதிகமில்லை -நூல்மதிப்புரை

நூல் மதிப்புரை
உதயசங்கர் எழுதிய
தூரம் அதிகமில்லை
சிறுகதைகள்
பேரா.பெ.விஜயகுமார்
தமிழ்ச்சிறுகதை ஜாம்பவான்கள் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, தொடங்கி இன்று அதன் தொடர்ச்சியாக உதயசங்கர் வரை எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லாத ஊர் கோவில்பட்டி. அதிலும் உதயசங்கர் தமிழ்ச்சிறுகதை மரபை அதன் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார். சிறுகதைகள் மட்டுமின்றி உதயசங்கரின் கட்டுரைகளும் வாசகர்களை வாஞ்சையுடன் ஈர்க்கக்கூடியன. ” முன்னொரு காலத்திலே…” மற்றும் ” நினைவு எனும் நீள்நதி “ ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகளும் அவரின் காத்திரமான படைப்புகள். நிறைய மலையாளப் படைப்புகளையும் உருது எழுத்தாளர் சதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
நகைச்சுவை உதயசங்கருக்கு மிகவும் இயல்பாக கைவரப்பெற்ற வரம். எப்போதுமே உதயசங்கரின் படைப்புகளில் அவருக்கும் அவர் வாசகர்களுக்கும் இடைவெளி இருப்பதில்லை. ஆங்கில இலக்கியத்தில் சார்லஸ் லாம்ப் ( Charles lamb ) இவ்வாறு இடைவெளியின்றி எழுதிச் செல்பவர். எலியா என்ற புனைபெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் வாசகர்களுடன் மிகுந்த நட்புடன் தோளில் கைபோட்டுக் கொண்டு பேசிச் செல்வார். கட்டுரைகளைப் படிக்கும்போது ஏதோ அவர் நம்முடன் பேசிக்கொண்டே வருவது போல் இருக்கும். இத்தகு அநுபவமே உதயசங்கரின் கதைகளையும் கட்டுரைகளையும் படிக்கும்போது ஏற்படுகிறது.
“ தூரம் அதிகமில்லை “ உதயசங்கரின் சமீபத்தியச் சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பில் உள்ள பதிமூன்று கதைகளிலும் பளிச்சென்று மிளிர்வது நகைச்சுவை. நடுத்தரவர்க்க மக்களின் அன்றாடப்பிரச்னைகளே கதைகளின் கருப்பொருள். அவர்களின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், இவைகளுக்கிடையே உள்ளார்ந்திருக்கும் அன்பு, அறம், வெகுளித்தனம், என அனைத்தையும் எழுதி நிறைவு செய்கிறார்.
வீடு கட்டுதல் என்பது நடுத்தரவர்க்கத்தினரின் மிகப்பெரும் கனவு. இந்தக் கனவை நனவாக்க அவர்கள் படும்பாடு சொல்லித்தீராதது. இவர்களின் இந்த ஆசையை வளர்த்துக் கொள்ளை லாபம் அடித்து குபேரர்கள் ஆகும் ரியால்டர்கள் எனப்படும் புதுவகை வியாபாரிகள் பெருநகரங்களில் பெருகியுள்ளனர். “ நகரின் மையமான பகுதியில் வீட்டுமனை “ அல்லது “ ”நகரப்பேரூந்து நிலையத்திற்கு மிக அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பு “ என்ற இவர்களின் பகட்டான விளம்பரங்களில் ஏமாந்துபோய் மனைகளையும், குடியிருப்புகளையும் வாங்கித் தவிப்பவர்கள் ஏராளம். இத் தொகுப்பில் நான்கு கதைகள் இந்த அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. கஷ்டப்பட்டு கட்டிய வீட்டையே காணாது தவிக்கிறார் “ தொலைந்தது “ கதையின் நாயகன். போதாததற்கு அவர் மனைவியும் இந்த வேதனை தாங்காது தன் தாய் வீட்டிற்குச் சென்று விடுகிறார். ஒரே வீட்டு மனையை ஈவு இரக்கமின்றி இருவருக்கு விற்று பணம் சம்பாதிக்கும் கும்பலால் பாதிக்கப்படும் தம்பதியரை இக்கதையில் காட்சிப்படுத்துகிறார் உதயசங்கர். “ தூரம் அதிகமில்லை “ கதையில் கருணையானந்தம் சொந்த வீடு கட்டுவதில் அதிக லாபம் இல்லை அதில் பிரச்னைகள் தான் மிஞ்சும் என்ற எண்ணம் கொண்டவன். நண்பர்களிடம் எல்லாம் “ வீடு கட்டுவதைப்போல ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட் வேறு ஏதும் கிடையாது..” என்று சொல்லி வந்தவன் தான். இருப்பினும் அவன் மனைவி சாந்தலெட்சுமி விடுவதாக இல்லை. இருவரும் ஊரெல்லாம் அலைந்து திரிந்து வீட்டுமனை வாங்குகிறார்கள். வாங்கிய மனையில் வீடு கட்டலாம் என்ற ஆசையில் இஞ்சினியர் நண்பனைக் கூட்டிக் கொண்டு போகும்போது தான் தெரிகிறது “ தூரம் அதிகமில்லை “ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வாங்கிய மனை வெகுதூரத்தில் இருப்பது. அந்த மனையில் வீடு கட்டுவதே சாத்தியமில்லை என்று சொல்லி அடுத்த இடியையும் இறக்குகிறான் இஞ்சினியர் நண்பன். பாவம் நடுங்கி ஒடுங்குகிறார்கள் தம்பதியர்கள்.
இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளின் படிப்பு அனுபவம் அலாதியானது.
வெளியீடு – கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை,
தி.நகர்.,
சென்னை-600 017
விலை – 120/-
தொடர்புக்கு – 044-24345641



Wednesday 19 October 2016

அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

அய்யாச்சாமி தாத்தாவும்
ஆட்டுக்கல் மீசையும்
மதிப்புரை
தமிழில் சிறுவர் பாடல்கள் வெளிவந்த அளவிற்கு சிறுவர் கதைகள் வெளிவரவில்லை. அப்படி வெளிவந்த ஒரு சில சிறுவர் கதை நூல்களும் ஆசிரியர்களின் மேதாவிலாசத்தைக் காட்டுவதாக இருக்கிறதே தவிர, சிறுவர்களின் மனதை பற்றிப் படரும் வகையைச் சார்ந்ததாக இல்லை.
சிறுவர்களுக்காக எழுதுகிறவர்கள் சிறுவர்களை அறிந்திருந்தால் மட்டும் போதாது; சிறுவர்களோடு இணைந்து சிந்திக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் இந்த நூல் சிறுவர்களைத் தனதாக்கிக் கொள்ளும் சிறப்புக்குரியதாகும்.
மலையாள எழுத்துலகில் சிறுவர்களுக்காக எழுதிக் குவித்த மாலி இந்த நூலை மலையாளத்தில் எழுத, மூலத்தின் ரசனை குறையாமல் அழகு தமிழில் பிரபல எழுத்தாளர் உதயசங்கர் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
‘அய்யாச்சாமி தாத்தாவின் பலாமரம்’, ‘ஆட்டுக்கல் மீசை’, ‘சங்கரநாராயணனும் கிங்கர யானையும்’, ‘பல்லின் வேலை நிறுத்தம்’, ‘தாமரைப் பூவும் வண்டும்’, ‘சொர்க்கமும் நகரமும்’, ‘கொண்டையில்லாத சேவல்’, ‘அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும்!’, ‘திருடன் கொண்டுபோன நாய்க்குட்டி’, ‘ரேடியோ பல்லி’, ‘பறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன?’, ‘மந்திரமும் தந்திரமும்’, ‘கயிறு இழுக்கும் போட்டி’, ‘பழிக்குப் பழி’, ‘வௌவாலுக்கு நன்றி’, ‘நெருப்போடு விளையாடினால்?’, ‘ஓநாயை ஏமாற்றிய முயல்’, ‘கடல் பிரயாணத்தில் அதிசயங்கள்’ என மொத்தம் 18 கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் அமைந்திருப்பதும், குழந்தைகள் படித்துப் படித்துச் சிரித்து மகிழும் வகையிலிருப்பதும் இந்த நூலின் தனித்துவமாகும்.
இந்த நூலின் முதல் கதையான ‘அய்யச்சாமி தாத்தாவின் பலாமரம்’ என்ற கதையில் அய்யாச்சாமி தாத்தாவின் தலைமுடியும் தாடியும் வைக்கோல் நிறத்தில் அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது. அவருக்கு பலாப்பழம் என்றால் கொள்ளை ஆசை. ஒருமுறை அய்யாச்சாமி தாத்தா கொட்டையுடன் பலாச் சுளையைச் சாப்பிட்டு விடுகிறார். அவருடைய வயிற்றில் அந்தக் கொட்டை செடியாக வளர்ந்து அவருடைய காது வழியாக கிளை பரப்பி மரமாக வளர்ந்து விடுகிறது. இதற்கு மேலும் இந்தக் கதையைப் படிக்கும் சிடு மூஞ்சிகள் கூட சிரிக்காமல் இருக்க முடியாது.
என்னுடைய பேத்தி யூ.கே.ஜி. படிக்கிறாள். சனியும் ஞாயிறும் மதிய வேளையில் அவளுக்கு நான் கதை சொல்ல வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அவளுக்கு அய்யாச்சாமி தாத்தா காதில் பலாமரம் வளர்ந்த கதையை நான் சொன்ன போது என் பேத்தி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
சில மேதாவிகள் இப்படியெல்லாம் கற்பனை செய்து குழந்தைகளுக்கு எதார்த்தத்தைப் புரியவிடாமல் செய்யலாமா? என்பர். வயதுக்கு வந்தவர்களே சிரிப்பைத் தொலைத்துவிட்டு வாழுகின்ற காலமிது! அதனால் முதலில் குழந்தைகளைச் சிரிக்க வைப்போம்; அதன்பின் குழந்தைகளே சிந்திக்கத் தொடங்கி விடுவர்.
மனிதன் தெய்வங்களைப் படைத்தபோது பிள்ளையாருக்கு எலியை வாகனமாகவும், முருகனுக்கு மயிலை வாகனமாகவும் வைத்தானே எதற்கு? எலி பிள்ளையாரைச் சுமக்குமா? மயில் முருகனைத் தாங்குமா? என்று எந்த பக்திமானும் நினைப்பதில்லை. பக்திமான்களின் நெஞ்சங்களில் தெய்வங்களைப் பதியவைப்பதற்கு இந்தக் கற்பனை இன்றும் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது. அதே போன்று சிறுவர்கள் மனதில் கதைகளைப் பதிவு செய்ய இந்த நூலாசிரியர் கைக்கொண்டிருக்கும் யுக்தி சிறப்பானதாகும்.
சிறுவர்கள் மட்டுமல்ல; பெரியவர்களும் இந்தக் கதைகளைப் படிப்பதன் வழியாக தாங்கள் மறந்துபோன சிரிப்பை மறுபடியும் கற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற நூல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்; அதன் வழியாக சிறுவர்களின் முகங்களில் சிரிப்பைக் காணலாம்.
- பாரதி லெனின்
நன்றி-மேன்மை
அக்-16

Friday 7 October 2016

குழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..

குழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..

உதயசங்கர்

குழந்தை இலக்கியமா அல்லது சிறுவர் இலக்கியமா இதிலேயே நிறைய்யப் பேருக்குக் குழப்பம். ஏனெனில் குழந்தை என்றால் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் சிறுவர் என்றால் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் நம்முடைய பொதுப்புத்தியில் ஆழப்பதிந்து விட்டது. ஆனால் இது வரை வெளிவந்துள்ள நம்முடைய குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இப்படியான எந்த விவாதங்களோ உரையாடல்களோ இல்லை எனலாம். இன்னும் சொல்லப்போனால் இப்போது தான் குழந்தை இலக்கியத்தின் மீது சிறிது வெளிச்சம் படர ஆரம்பித்திருக்கிறது. அதனால் இனிமேல் தான் விவாதங்களும் உரையாடல்களும் உருவாக வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு ஒரு நூறு புத்தகங்களாவது வெளிவந்தால் மட்டுமே ( மொழிபெயர்ப்பு நூல்களைத் தாண்டி ) அடுத்த கட்டத்தை நோக்கி சிறுவர் இலக்கியம் நகரும் என்று நம்புகிறேன். அது விரைவில் நிகழும் என்ற நம்பிக்கையை இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இளைஞர் குழாம் அளிக்கிறார்கள்.
மனிதமனம் கதைகளால் கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக இருந்தபோது கேட்ட கதைகளே அவனுடைய ஆழ்மனதில் அவனுடைய அக உலகைத் தீர்மானிக்கிற அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் தன்னுடைய குழந்தைப்பருவத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே அவன் தன் அநுபவங்களை கதைகளாகச் சொல்கிறான். சினிமா பார்க்கிறான். பத்திரிகைகள் படிக்கிறான். உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை வாசித்துக் கொண்டிருக்கிறான். மனிதனுடைய மொழி அடிப்படையில் கதை மொழி. அதனால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒவ்வொரு கதையாக மாறுகிறது. இந்த வெளியெங்கும் இப்படியான கதைகளே மிதந்து கொண்டிருக்கின்றன. இந்தக்கதைகள் தான் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால மதிப்பீடுகளையும், எதிர்காலக்கனவுகளையும் மனித மனதில் விதைத்துக் கொண்டேயிருக்கின்றன. 
குழந்தைகளின் மிக உயர்ந்த படைப்பூக்கியாகக் கதைகளே செயல்படுகின்றன. கதைகள் மீதான குழந்தைகளின் பிரியமே அவர்களிடம் எதையும் எதிர்கொள்ளும் திறனையும், நம்பிக்கையையும், அன்பையும் உருவாக்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல குழந்தைகள் கதைகளின் மீது மொய்க்கிறார்கள். கனவுகளின் வண்ணங்களைப்பூசிக் கொண்டு அவர்கள் கட்டற்ற கதையுலகில் பறந்து திரிகிறார்கள். அவர்களின் பறத்தல் எல்லையில்லாதது. கவிஞர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், அறிவொளி இயக்க செயல்பாட்டாளர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் என்று பன்முகப்பரிமாணம் கொண்ட மு.முருகேஷின் சிறுவர் கதைப்புத்தகம் ” பறக்கும் பப்பி பூவும், அட்டைக்கத்தி ராஜாவும் ” என்ற நூல் அகநி வெளியீடாக வெளிவந்துள்ளது.  
சிறுவர் கதைப்புத்தகத்தின் மிக முக்கியமான அம்சம் குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில் அட்டைப்படமும், வடிவமைப்பும், ஓவியங்களும் அமைவது தான். பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் நூலின் வடிவமைப்பும் கதைகளுக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்களும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்திலுள்ள பனிரெண்டு கதைகளிலும் மு.முருகேஷ் புதிய மதிப்பீடுகளை குழந்தைகளிடம் உருவாக்குகிறார். சமகால சமூகச் சூழல்களுக்கேற்ப புதிய அறவிழுமியங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறார்.
’ காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி “ கதையில் உருவத்தை வைத்தோ, நிறத்தைவைத்தோ, ஒருவரைக் குறைத்து எடை போடக் கூடாது என்ற மதீப்பீட்டை குழந்தைகள் மனதில் பதியும்படி சொல்கிறார் மு.முருகேஷ். கல்யாணியின் மோதிர வளையல் கதையில் பழைய முடிச்சேயானாலும் மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான கதைகளை எழுதுவதின் மூலம் குழந்தைகள் தங்களின் படைப்பூக்கத்தைக் கூர் தீட்ட முடியும். எலி ராஜாவுக்குக் கலியாணம் கதையில் உள்ள கதைப்பயணம் மிகுந்த சுவாரசியமுள்ளது.  உயிர்க்குரல் கதையில் சமகால சமூகத்தில் மிக முக்கியமான விழுமியம் நிலைநிறுத்தப்படுகிறது. சில நாரைகளும் ஒரு நண்டு அக்காவும் கதை திருட்டைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றைய குடும்பத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியதை ஒரு காட்சியின் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். நாங்க நகரத்தைப் பார்க்கப் போறோம்… என்ற கதையில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து அல்லல்பட்டு திரும்ப கிராமத்துக்கே போகத்துடிக்கும் எளிய உயிர்களைப் பற்றி கவலைப்பட வைக்கிறார். அலுவலகவேலைக்காரர்களை உயர்வாகவும் உடலுழைப்பை. தாழ்வாகவும் மதிக்கும் எண்ணம் மிகுந்த சமூகம் நம்முடைய சமூகம். இந்த மதிப்பீட்டைத் தகர்த்து நொறுக்கிறது பாதி முட்டாளும் முழுச்சம்பளமும் என்ற கதை. பறக்குது பார் பச்சோந்தி அவரவர் திறமைகளை உணர்ந்து கொள்ளச் சொல்கிறது. நான்குபங்கு திருடர்கள் பேராசையினால் ஒருவருக்கொருவர் கொன்றுவிடக்கூடிய அளவுக்குப் போவதைச் சொல்கிறது. குட்டி முயலின் சமயோசிதத்தை புதிய முறையில் விவரிக்கும் டாம் மச்சான்..டூம் ம்ச்சான் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் கதையில் வழக்கம்போல் ராஜா மூடனாக இருக்கிறது. ராஜாக்களைப் பற்றிய இப்படியான கதைகள் ராஜாக்களைப் பற்றிய கதைகள் மட்டுமில்லை என்று புரிந்து கொண்டால் கதை வேறு வேறு தளங்களுக்கு விரிவதைப் பார்க்க முடியும்.
பனிரெண்டு கதைகளில் பெரும்பாலான கதைகளில் மிருகங்கள், பறவைகளே கதை மாந்தர்களாக வந்து கதைகளை சுவாரசியமாக்குகின்றனர். கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான எளிய மொழியில் எழுதியிருக்கிறார் மு.முருகேஷ். சமீபத்தில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் ஒரு காத்திரமான புத்தகமாகத் திகழ்கிறது. வாசிக்கும் குழந்தைகளின் சிறகுகள் விரியும். பப்பி பூக்களைப் போல பறந்து திரிவார்கள் கதை வானில்……….

வெளியீடு – அகநி வெளியீடு
வந்தவாசி
விலை 40/

நன்றி – புத்தகம் பேசுது அக்16

Tuesday 4 October 2016

மாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது

மாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருது என்னுடைய மாயக்கண்ணாடி சிறுவர் கதைகள் நூலுக்குக் கிடைத்துள்ளது. 
புத்தகத்தை அற்புதமாக வடிவமைத்த நூல்வனம் பதிப்பாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கும் அன்பும் நன்றியும்.
நூலைத் தேர்வு செய்த தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தேர்வுக்குழுவினருக்கு மிக்க நன்றி!