Tuesday 31 March 2020

பறவைகள் பலவிதம்


பறவைகள் பலவிதம்

உதயசங்கர்

குட்டிப்பாப்பா காலையில் சீக்கிரம் எழுந்து விடுவாள். இல்லையில்லை. தோட்டத்திலிருந்து கூவும் புள்ளிக்குயில் தான் எழுப்பிவிடும். கூக்கூகூகூகூ குக்கூகூ என்ற சத்தத்தைக் கேட்டு துள்ளிக்குதித்து எழுந்து விடுவாள். இது ஒரு பழக்கம். எப்போது தூங்கி எழுந்தாலும் துள்ளிக்குதித்து எழுந்திரிப்பது குட்டிப்பாப்பாவுக்கு வழக்கம். அதே மாதிரி எழும்போதே சிரித்துக் கொண்டே எழுந்திரிப்பாள். இப்போதும் அப்படித்தான் குயிலின் குரலைக் கேட்டதும் சிரித்துக்கொண்டே எழுந்த குட்டிப்பாப்பா
“ அடடா அதுக்குள்ளே விடிஞ்சிருச்சா..இரு இதோ வாரேன்.. “ என்று சொல்லியபடியே எழுந்து வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்துக்குப் போனாள். மாமரத்திலிருந்து தான் குயிலின் சத்தம் கேட்கும். ஆனால் இது வரை குட்டிப்பாப்பா அதை முழுசா பார்த்ததில்லை. வாலைப் பார்த்திருக்கிறாள். சிறகுகளைப் பார்த்திருக்கிறாள். அது இலைகளுக்கு நடுவில் ஒளிந்துகொள்ளும். குட்டிப்பாப்பாவைப் பார்க்க வெட்கப்பட்டு ஒளிந்து கொள்கிறதோ. குட்டிப்பாப்பா க்ளுக் என்று சிரித்தாள்.
குயில் கூவும்போதே ஒரு காகத்தின் குரல் கேட்டது.
” கா காகா கா காக்க்கா….” உடனே இன்னொரு காகத்தின் குரல் கேட்டது. அதைத்தொடர்ந்து மற்றொரு காகத்தின் குரல்.. இப்போது நாலைந்து காகங்கள் சேர்ந்து கத்தின. குட்டிப்பாப்பாவின் அப்பா சொல்லியிருக்கிறார். காலையில் எழுந்தவுடன் காகங்கள் எல்லாம் வரிசையாக உட்கார்ந்து காக்காப்பள்ளிக்கூடம் நடத்தும். அவளுடய பள்ளிக்கூடத்திலும் வனிதா மிஸ் சொல்லுவதை பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கோரசாகச் சொல்லுவார்கள். குட்டிப்பாப்பாவுக்கு வேடிக்கையாக இருந்தது. காக்காவைப் பார்த்து தான் பள்ளிக்கூடம் வந்திருக்குமோ? உடனே அதை அப்பாவிடம் சொல்லவேண்டும். குட்டிப்பாப்பா என்ன சொன்னாலும் அப்பா அவளைப் பாராட்டுவார். அப்பா நல்ல அப்பா.
” கீச் கீச் கீச் கீச் க்கீச் க்க்கீச்கீச்ச்ச்ச்“ ஒரே சத்தம். குட்டிப்பாப்பா திரும்பிப்பார்த்தாள். வேப்பமரத்திலிருந்து கூட்டமாய் தவிட்டுக்குருவிகள் கீழே இறங்கின. ஈரமாக இருந்த மண்ணைக் கிளறி புழுக்களைத் தேடின. ரொம்ப கோபக்காரக்குருவிகள். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். கிக்க்கீச் க்கீச்ச் ஐயோ மறுபடியும் சண்டை ஆரம்பித்து விட்டது.
“ எப்பயும் சண்டை போட்டுகிட்டிருக்கீங்களே உங்களுக்குப் போரடிக்கலையா? “ என்று அவற்றை கண்டித்தாள் குட்டிப்பாப்பா. திரும்பும்போது அவளுடைய கண்ணில் செம்பருத்திச்செடிக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்த வாய்க்காலில் செம்பழுப்பு நிறத்தில் ஏதோ தெரிந்தது. அவள் மெல்ல அடியெடுத்து வைத்துப் பின்னால் போனாள்.
அங்கே ஒரு செம்போத்து வாய்க்காலில் இரை தேடிக்கொண்டிருந்தது. என்ன அழகு! அது நிமிர்ந்து பார்த்தபோது கண்கள் ரத்தச்சிவப்பாக இருந்தன. குட்டிப்பாப்பாவுக்கு பயமாக இருந்தன. ஆனால் பாவம் செம்போத்து. குட்டிப்பாப்பாவின் காலடிச்சத்தம் கேட்டதுமே சடசடவென பறந்து போய் விட்டது. இன்னும் மெதுவாக வந்திருக்கவேண்டும் என்று குட்டிப்பாப்பா நினைத்துக் கொண்டாள்.
செம்பருத்திப்பூவில் விர்ர்ர்ர்ரென சிறகுகள் அடிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். குட்டியாய் கருநீல நிறத்தில் இரண்டு தேன்சிட்டுகள் செம்பருத்திப்பூவுக்குள் தங்களுடைய நீண்ட அலகுகளை நுழைத்து தேன் குடித்துக் கொண்டிருந்தன. அவள் கண்கொட்டாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே மாதிரி இன்னொரு சத்தம் பக்கத்திலிருந்த தேக்கு மரத்திலும் கேட்டது. இது யார்றாது? குட்டிப்பாப்பா அண்ணாந்து பார்த்தாள். அட! தையல் சிட்டு. தேக்கிலையை ஒரு பொட்டலம் மாதிரி சுருட்டி தைத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சிவப்புக்கொண்டைக் குருவி ட்ட்வீக் ட்ட்வீக் ட்வீக் என்று சத்தம் கொடுத்து தான் இருப்பதைச் சொன்னது. குட்டிப்பாப்பா தினம் அதைப் பார்த்து விடுவாள். அதுவும் அவளைப் பார்த்து “ இன்னிக்கும் வந்துட்டியா? “ என்று கேட்கும். குட்டிப்பாப்பா ஆமாம் என்று தலையாட்டுவாள்.
நாலைந்து சிட்டுக்குருவிகள் தரையில் அங்குமிங்கும் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருந்தன. க்யா கிய்ய் க்யா கிய்ய் என்று கோழிக்குஞ்சுகளைப் போலவே சத்தமிட்டுக்கொண்டு திரிந்தன.
உடனே குட்டிப்பாப்பாவுக்கு கோழிக்குஞ்சுகளின் ஞாபகம் வந்து விட்டது. தோட்டத்துமூலையில் வைத்திருந்த கோழிக்கூண்டைத் திறந்து விட்டாள். அம்மாக்கோழியும் ஐந்து கோழிக்குஞ்சுகளும் வெளியே வந்தன. கருப்புவெள்ளைப் புள்ளிகளுடன் அம்மாக்கோழி கெக்க்கேக்க்கே என்று கேறிக் கொண்டு குஞ்சுகளைக் கவனமாகப் பார்த்தது. செவலைக்குஞ்சு, கருப்புக்குஞ்சு,வெள்ளைக்குஞ்சு, கரும்புள்ளிக்குஞ்சு, செம்புள்ளிக்குஞ்சு எல்லாம் அம்மாவின் ஒவ்வொரு சத்தத்தையும் கவனித்து அதற்கு ஏற்றபடி நடந்து கொண்டன. சமர்த்துக்குஞ்சுகள்! குட்டிப்பாப்பா மாதிரி! குட்டிப்பாப்பா அவளை அவளே பாராட்டிக் கொண்டாள். உடனே ஒரு கர்வம் முகத்தில் வந்து விட்டது. அருகில் இருந்த பஞ்சாரத்தைத் திறந்து சேவலைத் திறந்து விட்டாள். வண்ணவண்ணமாய் இற்குகளும் சிவப்பு நிறத்தில் பூக்கொண்டையும், தாடியும் வைத்திருந்த அந்தச் சேவல் வெளியே வந்ததும் கொக்கரக்கோ கோ என்று கொக்கரித்தது.
அட அசடு! விடிந்து ரொம்ப நேரமாயிருச்சு தெரியலையா உனக்கு? என்று செல்லமாய் கோபித்தாள் குட்டிப்பாப்பா. இன்னொரு முறை கூவலாமா என்று நினைத்த கொண்டைச்சேவல் குட்டிப்பாப்பாவின் முகத்தைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு இரை தேட நடைபோட்டது.
நம் வீட்டில் எத்தனை பறவைகள்! என்று ஆச்சரியப்பட்டாள். இன்று அவள் பார்த்த பறவைகளைப் பற்றி அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லவேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு பறந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. இறக்கைகளைப் போல கைகளை விரித்து வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்.
“ ஸ்கூலுக்கு நேரமாகலையா? “ என்று அம்மாவின் சத்தம் கேட்டது.
“ நான் பறந்து போயிருவேன்..” என்று குட்டிப்பாப்பா சிரித்துக் கொண்டே சொன்னாள்.



Monday 30 March 2020

அஞ்சு வண்ணம்


அஞ்சு வண்ணம்

உதயசங்கர்

குட்டிப்பாப்பாவுக்கு வானத்தில் பறக்கவேண்டும். யோசித்தாள். என்ன செய்யலாம்? யாரிடமாவது கேட்டால் என்ன? வீட்டின் பின்புறம் போனாள். அங்கே இருந்த மாமரத்தில் உட்கார்ந்திருந்த கிளியிடம் கேட்டாள்.
கிளியக்கா கிளியக்கா எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
கீ கீ கீ கிக்கீ குட்டிப்பாப்பா நீ பறக்கணும்னா நீ தான் முயற்சிக்கணும்.. வேணுமின்னா நான் என்னோட ஒரு இறகைத் தாரேன்..’
என்று சொல்லி விட்டு தன்னுடைய சிறகிலிருந்து நீளமான ஒரு பச்சை நிற இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா கிளி கொடுத்த பச்சை இறகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த வேப்பமரத்திற்குப் போனாள்.  வேப்பமரத்தில் உட்கார்ந்து தலையைச் சாய்த்து குட்டிப்பாப்பாவை குர்ரென்று பார்த்துக் கொண்டிருந்த காகத்திடம் கேட்டாள்,
காக்கையண்ணே காக்கையண்ணே.. எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
கா கா கா க்ர்ர் எனக்குத் தெரியாது பாப்பா வேணும்னா நான் என்னோட இறகு ஒண்ணு தாரேன்…’ என்று சொல்லி தன்னுடைய சிறகிலிருந்து ஒரு இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா தோட்டத்தில் வேலிக்கு அருகில் இருந்த இலந்தை மரப்புதரில் தன்னுடைய சிவந்த கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த செம்போத்து பறவையிடம் போனாள்.
செம்போத்தே செம்போத்தே நான் பறப்பதற்கு ஒரு வழி சொல்லேன்..’
கூ கூகூகூ எனக்குத் தெரியாது.. வேணும்னா நான் ஒரு இறகைத் தாரேன்..’ என்று சொல்லி தன் சிறகிலிருந்து ஒரு சிவப்பு இறகை எடுத்து கொடுத்தது.
குட்டிப்பாப்பா தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த மைனாவைப் பார்த்து கை தட்டினாள். மைனா உடனே குட்டிப்பாப்பாவின் முன்னால் இறங்கியது. உடனே குட்டிபாப்பா,
மைனா.. மைனா.. எனக்கு பறக்கணும் ஒரு வழி சொல்லேன்..’
என்று கேட்டாள். மைனா குட்டிப்பாப்பாவைப் பார்த்தது.
கீ க்வ் க்ளவ்.. கீச் கீச் அய்ய்ய்யோ அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா.. வேணும்னா என்னோட சிறகு ஒண்ணு தாரேன்..’
என்று சொல்லி அதன் சிறகிலிருந்து வெள்ளை இறகை எடுத்துக் கொடுத்ததுகுட்டிபாப்பா குப்பையில் மேய்ந்து கொண்டிருந்த கொண்டைச்சேவலின் அருகில் போனாள். சேவல் அவளைக் கவனிக்காமல் குனிந்து இரை எடுத்துக் கொண்டிருந்தது. குட்டிப்பாப்பா கொக்கரக்கோ என்று கத்தினாள். கோபத்துடன் நிமிர்ந்து பார்த்த சேவல், அங்கே குட்டிப்பாப்பாவைப் பார்த்ததும் சாந்தமானது. ஏனென்றால் குட்டிப்பாப்பா தான் அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து ஒரு குத்து அரிசியை எடுத்துக் கொண்டு வந்து சேவலின் குடும்பத்துக்குப் போடுவாள். அவளிடம் கோபப்பட முடியுமா?
க்கொ க்கோ என்ன குட்டிப்பாப்பா ? ‘
சேவல் மாமா சேவல் மாமா எனக்குப் பறக்கணும்.. ஒரு வழி சொல்லேன்..’
எனக்கே கூரைக்கு மேலே பறக்க முடியாதுஎங்கிட்டே கேக்கிறீயே.. வேணும்னா என்னோட வாலிலிருந்து ஒரு இறகைத் தாரேன்…’ என்று சொல்லி வாலில் இருந்து பலவண்ண இறகை எடுத்துக் கொடுத்தது.
குட்டிப்பாப்பா கையில் ஐந்து இறகுகள் இருந்தன. கிளியின் பச்சைச்சிறகு, காகத்தின் கருப்புச் சிறகு, மைனாவின் வெள்ளைச் சிறகு, செம்போத்தின் சிவப்பு இறகு, சேவலின் கருஞ்சிவப்பு இறகு. எல்லா இறகுகளையும் ஒரு நூலில் கட்டினாள் குட்டிப்பாப்பா. அதை முதுகில் கட்டிக் கொண்டு,
நான் பறக்கிறேன்நான் பறக்கிறேன்.. ‘ என்று மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டு தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். கிளியும், காகமும், செம்போத்தும், மைனாவும், சேவலும் அதைப் பார்த்து சிறகுகளடித்து கூவின.

Sunday 29 March 2020

தேன்சிட்டின் பாடல்


தேன்சிட்டின் பாடல்

உதயசங்கர்

எப்போதும் போல தேன்சிட்டு அதிகாலையில் எழுந்து விட்டது.. எழுந்ததும் சிறகுகளை விரித்து சோம்பல் முறித்தது. கிழக்கில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. லேசான குளிரும் கதகதப்பும் சேர்ந்த காற்று வீசியது. தேன்சிட்டுக்கு உற்சாகம். உடனே அந்த வேப்பமரத்தின் கிளகளில் அங்கும் இங்கும் துள்ளிக்குதித்தது.  கருநீலநிறத்தில் இருந்த அந்தக் குட்டித் தேன்சிட்டு தன் சிறகுகளை விர்ரெனெ அடித்து வானத்தில் ஒரு சுற்று சுற்றித் திரும்பியது. ஆகா. எவ்வளவு ஆனந்தம்! உடனே தேன்சிட்டு பாட ஆரம்பித்தது.

“ ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்
விர்ரெனெப் பறப்பேனே ட்வீக் ட்வீக்
சர்ரெனக் குதிப்பேனே ட்வீக் ட்வீக்
பூக்களைப் பார்ப்பேனே ட்வீக் ட்வீக்
தேன் துளி குடிப்பேனே ட்வீக் ட்வீக்
ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்”

என்று பாடிக்கொண்டே அங்கும் இங்கும் பறந்தது. அப்போது அருகில் ஒரு கரகரத்த குரல் கேட்டது.
“ கா கா கா கா கா.. யார்ராது காலையிலே பாடி பிள்ளைக தூக்கத்தைக் கெடுக்கிறது..”

அருகிலிருந்த வேப்பமரத்தின் உச்சியில் கூடு கட்டியிருந்த காகத்தக்கா தான் அப்படிக் குரல் கொடுத்தது. உடனே தேன்சிட்டு தன் பாடலை நிறுத்திவிட்டது. ஒரே இடத்தில் சிறகுகளை அடித்துக் கொண்டே என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தது.  தேன்சிட்டுக்குப் பசிப்பது போல இருந்தது. வேப்ப,மரத்தில் பூக்கள் கொய்யென பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. அந்தப் பூக்கள் தேன்சிட்டை தலையாட்டி தலையாட்டி அழைத்தது.

“ வா வா தேன்சிட்டே சொய்ங் சொய்ங்
வண்ணப்பூந்தேன்சிட்டே சொய்ங் சொய்ங்
துளித்துளியாய் தேனிருக்கு சொய்ங் சொய்ங்
அள்ளிப்பருகிப் பறந்து போ சொய்ங் சொய்ங்”

என்று ஆடியபடி அழைத்தன வேப்பம்பூக்கள். வேப்பம்பூக்களில் உள்ள தேன் கொஞ்சம் கசக்கும். அதனால் தேன்சிட்டு பாடியது.

“ ஆயிரம் பூக்கள் இங்கே இருக்கு ட்வீக் ட்வீக்
எனக்கு வேண்டாம் கசப்புத்தேன் ட்வீக் ட்வீக்
மதுரத்தேனை உறிஞ்சிக்குடிப்பேன் ட்வீக் ட்வீக்
மகரந்தச்சேர்க்கையை செய்து பறப்பேன்..ட்வீக் ட்வீக் “

என்று சொல்லிவிட்டு தேன்சிட்டு பூக்களைத் தேடிப் பறந்து சென்றது.

ஒரு மல்லிகைத் தோட்டத்துக்குச் சென்றது. அங்கே மல்லிகைப்பூக்கள் இன்னும் பூக்கவேயில்லை. எல்லாம் மொட்டுகளாக இருந்தன.

“ மல்லியக்கா மல்லியக்கா ட்வீக் ட்வீக் ட்வீக்
தேன் கொடுங்க மல்லியக்கா ட்வீக் ட்வீக் ட்வீக்
பசிக்குதக்கா பசிக்குதக்கா ட்வீக் ட்வீக் ட்வீக்
பசியாறப் பரிமாறுங்க மல்லியக்கா ட்வீக் ட்வீக் ட்வீக் “

மல்லிகை மொட்டுகள் பதில் சொல்லவில்லை. எல்லாம் அமைதியாக இருந்தன. தேன்சிட்டு தோட்டம் முழுதும் சுற்றி வந்தது. ஒரு பூ கூட பூக்கவில்லை.

தேன்சிட்டு அங்கிருந்து விர்ரெனப் பறந்து ஒரு ரோஜாத்தோட்டத்துக்கு சென்றது. அங்கே வெள்ளைரோஜா, சிவப்புரோஜா, மஞ்சள்ரோஜா, இளம்சிவப்பு ரோஜா, என்று எல்லாவண்ணங்களிலும் ரோஜாச்செடிகள் இருந்தன. ஆனால் அங்கேயும் மலர்ந்த பூக்கள் ஒன்று கூட இல்லை. எல்லாப்பூக்களையும் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள். செடிகளில் மிகச்சிறிய மொட்டுகளே இருந்தன. தேன்சிட்டு பாடியது.

” மொட்டுகளே மொட்டுக்களே ட்வீக் ட்வீக்
என்னைக்கொஞ்சம் பாருங்க ட்வீக் ட்வீக்
பசியினால் வாடுறேன் ட்வீக் ட்வீக்
துளியளவு தேனாவது தாருங்க.ட்வீக் ட்வீக்.”

வெள்ளைரோஜா மொட்டின் அருகில் சென்று பாடியது. வெள்ளைரோஜா மொட்டு பதில் சொல்லவில்லை. சிவப்பு ரோஜாமொட்டின் அருகில் சென்று பாடியது. சிவப்புரோஜா மொட்டு பதில் சொல்லவில்லை. மஞ்சள் ரோஜா மொட்டின் அருகில் சென்று பாடியது. மஞ்சள்ரோஜா மொட்டு பதில் சொல்லவில்லை. இளம்சிவப்பு ரோஜா மொட்டின் அருகில் சென்று பாடியது. இளம்சிவப்பு ரோஜா மொட்டும் பதில் சொல்லவில்லை. தேன்சிட்டின் பசி அதிகமாகி விட்டது. களைப்புடன் அங்கிருந்து சர்ரெனப் பறந்தது.

வழியில் செண்பகப்பூ மரத்தைப் பார்த்தது. அதில் பூக்களே இல்லை. தங்க அரளிச் செடியைப் பார்த்தது. அது காய்ந்து போயிருந்தது.

அடுக்குமல்லிச்செடி துளிர் விட்டிருந்தது.

பிச்சியில் ஒரு இலை கூட இல்லை. சம்பங்கிப்பூ காய்ந்து போய் விட்டது.  சாமந்திப்பூக்களில் பூவிதழ்கள் காய்ந்து உதிரத்தொடங்கியிருந்தன.

தேன்சிட்டின் பசி அதிகமாகி விட்டது. உடல் சோர்ந்து விட்டது. சிறகுகளை அடிப்பதே சிரமமாக இருந்தது. நாக்கு வறண்டு விட்டது. எப்படியாவது ஒரு துளி தேன் குடிக்கவேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். தேன்சிட்டு களைத்து சோர்ந்து தான் புறப்பட்ட வேப்பமரத்துக்கே திரும்பி வந்தது. அப்போதும் வேப்பம்பூக்கள் காற்றில் தலையாட்டி பூச்சிகளையும், வண்டுகளையும், எறும்புகளையும் அழைத்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த தேன்சிட்டுக்கு வெட்கமாக இருந்தது. 
அது தயக்கத்துடன்,

“ வேம்பு மாமா வேம்பு மாமா
தேன் தருவீங்களா?
குட்டி வயிறு பசிக்குது
தேன் தருவீங்களா? “
என்று கேட்டது. வேப்பம்பூக்கள் அதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளித்துள்ளி ஆடின.

       ” வா வா தேன்சிட்டே
       விரைந்து வா தேன்சிட்டே
கசப்பும் ஒருசுவை தேன்சிட்டே
கனிவுடன் பருகு தேன்சிட்டே “

தேன்சிட்டு தன்னுடைய நீண்ட அலகுகளால் வேப்பம்பூக்களில் ஊறியிருந்த தேன் துளிகளை உறிஞ்சிக் குடித்தது. இப்போது அந்தத்தேன் கசக்கவில்லை. இனித்தது.