Sunday 8 April 2018

இந்துத்வாவின் சுயரூபம்


இந்துத்வாவின் சுயரூபம்

உதயசங்கர்
பார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அவர்களுடைய பாசிசக்குணத்துக்கான வேர்கள் தென்படுகிறது. கி.மு.1500-லிருந்து ஆரிய இனக்குழுக்கள் வட இந்தியாவின் வடமேற்குப்பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்கள். ஈரான், பெர்சியப்பகுதிகளிலிருந்து நாடோடிகளாக சொந்த நிலம் இல்லாதவர்களாக, ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி அலைந்தார்கள், சூரிய சந்திரர், நட்சத்திரங்கள், வானம் இவற்றின் மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவர்கள் அவர்கள். போகும் இடமெல்லாம் நெருப்பைச் சுமந்தார்கள். ஆரிய இனக்குழுக்களின் அறிவு, தெய்வங்கள், கலாச்சாரம்,எல்லாம் வானம் சார்ந்தே இருந்தது. எனவே தான் அவர்களுடைய கடவுள்களான இந்திரன், அக்னி, வாயு, வருணன், இடி, மின்னல், சூரியன், சந்திரன், ராகு, கேது, என்று எல்லோரும் வானத்திலேயே இருந்தார்கள். வானத்தில் இருக்கும் அவர்களை வணங்க நெருப்பை வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி வழிபட்டனர். ரிக் வேதப்பாடல்களில் எல்லாம் யாகச்சடங்குகளைப் பற்றிய விவரணைகள் இருப்பது யதார்த்தமானதில்லை.
ஆரிய இனக்குழுக்கள் இரவு நேரங்களில் தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக, சமைப்பதற்காக நெருப்பை வளர்த்தார்கள். அந்த நெருப்பை உருவாக்கவும், பாதுகாக்கவும், சிலர் நியமிக்கப்பட்டார்கள். அப்படி நியமனமான நெருப்புப்பாதுகாவலர்கள் தான் புரோகிதர்களாக பின்னர் உருவெடுக்கிறார்கள். வளர்ந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து, ஆடிப்பாடி, அவர்களுடைய பூர்வசரித்திரம், கலாச்சாரம், தெய்வ வழிபாடுகள், வாழ்க்கைவட்டச்சங்குகள், பிறப்பு, இறப்பு, பழக்கவழக்கங்களை பாடல்களாக மனனம் செய்து பாடிய ஒரு கூட்டமாக புரோகிதர்கள் மாறினார்கள். இப்படி மாறிய புரோகிதர்களே வேதங்களை இயற்றினர்.
இந்த ஆரிய இனக்குழுக்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். சிந்துசமவெளி, நதிக்கரை நாகரிகம், நதி, மண், செழுமை, வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், செடி,கொடி, பயிர், விளைச்சல், பெண் தெய்வங்கள், விவசாயம், என்று முழுக்க முழுக்க பூமித்தாயின் பன்மைத்தன்மையுடன் சிறந்து விளங்கிய நாகரிகம். ஒற்றைத்தன்மையுடைய நிரந்தரச்சூன்யமான, எல்லையற்றதான வான்வெளியும், உயிர்த்துடிப்புள்ள மாறிக்கொண்டேயிருக்கிற பன்மைத்தன்மை கொண்ட பூமியும் எதிர் எதிராக நின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் பன்மைத்தன்மையைக் கண்டு பொறாமை கொண்ட ஆரிய இனக்குழுக்கள் தங்களுடைய ஒற்றைத்தன்மையும், பாழ்வெளியுமான வானத்தை உயர்வாக, புனிதமாக, கற்பிதம் செய்தனர். அதனால் தான் பல்லுயிரைப் பெருக்கும் பூமியை, மண்ணை, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களைத் தாழ்வாக, தீட்டாகக் கற்பிதம் செய்தனர். அவர்களைச் சூத்திரப்பிரிவினராகவும், தீண்டத்தகாதப்பிரிவினராகவும், திட்டமிட்டு பிரித்தனர்.
எனவே தான் இன்றும் பார்ப்பனீயம் யாகச்சடங்குகளை முதன்மையாகக்கருதுகிறது. அவற்றைப்புனிதச்சடங்குகளாக மக்கள் மனதில் நிலைகொள்ள வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. மண் சார்ந்த பண்பாட்டுச்சடங்குகளை தாழ்வான இடத்தில் வைப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
எல்லாமதங்களிலும் பிரபஞ்சத்தின் தோற்றம், பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம், மனிதகுலத்தோற்றம், எல்லாவற்றைப்பற்றியும் கதைகள் இருக்கும். ஆரியமதத்திலும் அத்தகைய கதை ரிக்வேதப்பாடல்கள் பத்தாவது தொகுதியில் 129 – ஆவது பாடலாக ” படைப்பு குறித்த பாடல் “  இயற்றப்பட்டிருக்கிறது. அதில் ஒரு ஏகம் உருவமற்ற பருப்பொருள் இருந்தது. அதுவே வெப்பத்தினாலும் காமத்தினாலும் தன்னை ஒருபிரபஞ்சமாக உருமாற்றிக்கொண்டது.
வர்ணாசிரமக்கோட்பாடுகளுக்கு ஆதரவாக பின்னால் இடைச்செருகலாக ரிக்வேதப்பாடல்களில் சொருகப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிற புருஷ சூக்தா ஒரு யாகச்சடங்காகவே தொடங்குகிறது. தேவர்கள் சேர்ந்து புருஷன் என்ற மகாமனிதனை யாகத்தில் பலியிட, அந்த யாகவேள்வியிலிருந்தே இந்தப்பிரபஞ்சமும், உலகமும், உயிர்களும், மனிதர்களும் தோன்றினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிச்சொல்லும்போதே நான்கு வர்க்கங்களும்( பின்னால் வருணங்கள் ) தோன்றின என்று சொல்வதன் மூலம் வர்ணாசிர்மக்கோட்பாடுகளுக்கு ஒரு பழமையையும், பாரம்பரியத்தையும் உருவாக்குவதற்கான முயற்சியும் நடக்கிறது.
கி.மு.1500-வாக்கில் உள்ளே வந்த ஆரிய இனக்குழுக்கள் கி.மு. 1900- வாக்கில் வேதங்களை எழுதுகிறார்கள். அதற்கு முன்னால் அவை வாய்மொழிப்பாடல்களாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கலாம். ஏகம் என்றால் கடைசி உண்மை ஒன்று. ஆரிய இனக்குழுக்களின் தத்துவார்த்தமாக இன்றுவரை கடைப்பிடிக்கின்றனர். கி.மு.700-ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கிய உபநிடதங்களில், தங்களைப்பற்றிய உயர்வு, புனிதம், தனித்துவம், ஆகிய உள்ளடக்கமாகக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீக இனக்குழுக்களிடமிருந்து தங்களுடைய தனித்துவத்தைப்பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் தங்களைப்புனிதமானவர்களாகக் காட்டிக் கொண்டார்கள்.
எண்ணற்ற இனக்குழுக்களில் கரைந்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சம் காரணமாக அகமணமுறையை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். தன்னைப் புனிதமாக உருவகிக்கும்போது இயல்பாக மற்றவர்களை புனிதமற்றவர்களாக வரையறுத்தது. ஏகம், அத்வைதம் என்ற தத்துவநிலைபாட்டை நிலைநிறுத்தும்போது, மற்றவற்றை பன்மைத்துவமானது எனவே தாழ்ந்தவை என்றும் கூற முற்பட்டது. பூர்வீக இனக்குழுக்களுக்கும் தாந்திரீகம், சாருவாகம் ஆசீவகம், சமணம், பௌத்தம், போன்ற மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தன. இந்த மதங்களிலெல்லாம் பன்மைத்துவம் பேசப்பட்டது. ஏகத்தத்துவத்தை மறுத்தது. இவற்றுக்கு இடையில் வாதப்பிரதிவாதங்களும் நடந்thaது ஏகத்தத்துவம் வருண அமைப்பு முறையைக் கண்டுபிடித்தது. அதன் மூலம் தன்னுடைய பிரம்மம், நிரந்தரம், புனிதம், என்ற கோட்பாடுகளை மக்களிடம் நடைமுறைப்படுத்தியது.
பக்தி இயக்கத்தின் எழுச்சியில் மீண்டும் பன்மைத்துவம் மெலெழுந்து வந்தது. ஏராளமான கடவுளர்கள், ஏராளமான வழிபாட்டு முறைகள், வட்டார அடையாளங்கள், குறியீடுகள், பண்பாட்டு நடைமுறைகள், வளர்ந்தன. யாகச்சடங்குகளையும், பார்ப்பனீயத்தலைமையையும், வேதங்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தன. ஏராளமான கடவுள்கள் சுயம்புவாகத் தோன்றினார்கள். இதைச் சூத்திர எழுச்சியாகப் புரிந்து கொண்ட பார்ப்பனீயம், இந்த எழுச்சியின் விளைவுகளை அங்கீகரிப்பது போல அங்கிகரித்து அப்படியே தன்னுடைய, ஏகத்தத்துவம், புனிதங்களுக்குள் ஸ்வாகா செய்து கொண்டது. முருக வழிபாடு, காளி வழிபாடு, போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
பிரம்மம் என்பதை தனிப்பெரும் தத்துவமாக கூறும் அறிவுஜீவிகள் பிரம்மத்தின் உள்ளீடு சாதியமைப்பு முறையை சூட்சுமக்கருத்துக்களாகச் சொல்வதை வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகின்றனர். உலகின் மிக உயர்ந்த உண்மையான பிரம்மத்திற்கும் உலகிற்கும் தீட்டு நிலவுகிறது என்று வேதாந்தம் சொல்வது தத்துவமல்ல. கர்மக்கோட்பாடு, சத்வ,ரஜச,தமச, குணங்கள் பற்றிய கோட்பாடுகள், புருஷசூக்தத்தில் சொல்லப்படுகிற வருண அமைப்பு முறை, தீட்டுக்கொள்கை போன்றவை நேரடியாகவே வருணாசிரம-சாதிக்கோட்பாடுகளோடு தொடர்புடையவையல்லாமல் வேறென்ன?
பிரம்மம் தன்னில் தானே நிலை கொள்ளவேண்டும். பிறவற்றோடு கலக்கக்கூடாது, அப்படிக்கலந்தால் தீட்டாகி விடும், எனவே பிரம்மம் உறுதியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தனது நிரந்தரத்தை, புனிதத்தை நிறுவுவதற்காக உலகம் மாயை, உடல் மாயை, உடலுழைப்பாளர்கள் மாயை, நிலம், இரும்பு, ரத்தம், பிறப்பு, இறப்பு, எல்லாம் மாயை என்றும் நிலத்தில், இரும்பில், ரத்தம் சம்பந்தமான வேலை செய்பவர்கள் ( மருத்துவர்) தோல் பதனிடுபவர்கள், பறை அடிப்பவர்கள், பௌதீகமாகச் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், என்று பலவேறு உழைப்பாளிகளை அது தீட்டுக்குரியவர்கள் என்று சொல்கிறது. இவற்றில் எல்லாம் கலந்து விடாமல் இருப்பதே பிரம்மத்தின்புனிதம் என்கிறது. பிரம்மம் என்று வருகிற இடங்களில் எல்லாம் பார்ப்பனீயம் என்று வாசித்துப்பாருங்கள். முடைநாற்றம் எடுக்கும் வருணாசிரம- சாதிக்கோட்பாடுகளின் அழுகிய முகம் தெரிகிறதா?
அரசியல் அதிகாரம் என்று வரும்போது எந்த சமரசத்துக்கும் தயாராகும் பார்ப்பனீயம் வெகுமக்களின் கடவுள்களையும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் அவர்களது பன்மைத்தத்துவத்தையுமே கூட கபளீகரம் செய்து மீண்டும் ஏகத்தத்துவத்தை எல்லாவற்றிலும் ( வேதம்- வருணாசிரமம் – சமஸ்கிருதம் ஜனரஞ்சகமாக ஹிந்தி ) நிலை நாட்ட போரிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆன்மீக(?) உண்மைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினால் மட்டுமே மீண்டும் மீண்டும்  பார்ப்பனீயத்துக்கு மக்கள் இரையாகாமல் பாதுகாக்க முடியும்.
ஆதார நூல்கள் –
1.   இந்தியக்கதை-ஏகம் அநேகம் சாதியம் – ந.முத்துமோகன்
2.   இந்தியா உருவான விதம் – ஷிரீன் மூஸ்வி ( டிச 17- ஜன 18 மார்க்சிஸ்ட் )

நன்றி - வண்ணக்கதிர்





Tuesday 3 April 2018

மீனாளின் நீல நிறப்பூ


மீனாளின் நீல நிறப்பூ

உதயசங்கர்


பத்து நிமிடங்களுக்கும் மேலாக ராகவன் காலிங் பெல்லை அடித்துக்கொண்டே வாசலில் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கும்போது மீனாள் உள்ளே சமையலறையில் மளிகைச்சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்பின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.. காலிங்பெல் அடித்து கொண்டேயிருந்தது. அவளுக்கும் கேட்டது. ஆனால் அவளுக்கு முன்னால் கண்ணாடி பாட்டிலில் இருந்த கடுகு அவளிடம்
“ அதெல்லாம் உன் பிரமை.. காலிங் பெல் அடிக்கவில்லை.. நீயே யோசித்துப்பார். சின்னவயசில் ராத்திரி தூங்கிக் கொண்டிருக்கும் போது இரண்டு மிருகங்களின் உறுமல் சத்தம் கேட்டது என்று அலறியிருக்கிறாய்… அப்போதெல்லாம் உன் அம்மா திட்டியிருக்கிறாளே.. என்னடி பிரமையா உனக்கு? என்று திட்டினாளே! மறந்து விட்டாயா?.....”
“ எனக்கென்னவோ நிஜமாவே காலிங் பெல் சத்தம் கேட்கிற மாதிரியே இருக்கு..”
கடுகுக்குக் கோபம் வந்து முகத்தைத் திருப்பிக் கொண்டது. இப்படித்தான் மீனாள் சொல்வதை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள். அருகில் இருந்த துவரம்பருப்பு தன்னுடைய குரலை உயர்த்தியது.
“ ஏம்மா மீனா என்னையை மறந்துட்டீயே… நாளைக்கு ஒரு நாள் சாம்பார் வைக்கலாம்.. அவ்வளவுதான் இப்பவே வாங்கி வச்சுக்கோ.. உன் மாமனார் கிட்டே வாங்கிட்டு வரச்சொல்லி ஞாபகப்படுத்திக்கோ.. சும்மா அசடு மாதிரி ஷெல்பை பார்த்துகிட்டே நிற்காதே..”
“ காலிங் பெல் சத்தம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கேட்குதில்லை.?.”
” ஆமா கேக்கும்.. கேக்கும்.. இவளுக்கு மட்டும் தனியா கேக்கும்..”
அவள் உடனே து.பருப்பு பாட்டிலை எடுத்துப் பார்த்தாள். அவளுடைய முந்தானையால் பாட்டிலை ஒரு தடவை துடைத்தாள். பாட்டிலைத் தூக்கி வெளிச்சத்தில் பார்த்தாள். உண்மைதான் ஒரு நாளுக்குத்தான் சாம்பார் வைக்கலாம். அவளுடைய விரல் பட்ட இடத்தில் ரேகையின் தடம் படிந்திருந்தது. உடனே அதற்காகவே வைத்திருந்த துணியை எடுத்துத் துடைத்தாள். மறுபடியும் சன்னல் வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தாள். முகத்தில் ஒரு சிறு திருப்தி. இருந்த இடத்தில் து.பருப்பு பாட்டிலை வைக்கும்போது து.பருப்பு
“ என்ன பதிலைக்காணோம்..” என்று கேட்டது. ஒரு கணம் அடுக்களை வாசல்பக்கம் முகத்தைத்திருப்பி காதைத் தீட்டினாள். இப்போதும் காலிங்பெல் சத்தம் கேட்டது. தலையை ஆட்டி அந்தச் சத்தத்தை விரட்டினாள். து.பருப்பு இன்னமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
 ” எனக்கு மாமாவைப் பார்த்தாலே பயம்மாருக்கு… அவர் பார்க்கும்போது உடம்பில ஏதோ ஊர்ற மாதிரி இருக்கு… எதேச்சையா காப்பியோ.. பாலோ.. கொடுக்கும்போது அவர் விரல் பட்டாலே அதில ஒரு கெட்ட எண்ணம் என்னைத் தொட்டுப் பேசுது..”
என்ற அவளைப்பார்த்து தொலி உளுந்து கெக்கெக்கே என்று சிரித்தது.
“ மீனா.. உனக்கு எல்லாமே பிரமை தான் உன்னோட ஆறு வயசில ஒரு நாள் மதியம் பக்கத்து வீட்டு ஆண்ட்டி வீட்டுக்குப் போயிருந்தே.. ஆண்ட்டி இல்லை..ஆனால் அங்கிள் வா அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாம்னு சொல்லி ஒரு சாக்லேட் கொடுத்தாரு.. விளையாடிகிட்டிருக்கும் போதே கவுனை அவுக்கச்சொன்னாரு.. அங்கிள் உன்னோட உடம்பை முரட்டுத்தனமா அமுக்கினாரு.. உனக்கு உடம்பு வலித்தது… அழுகையா வந்துச்சி.. நீ அழ ஆரம்பித்தபோது…. ஆண்ட்டி வந்துட்டாங்க.. அவங்க போட்ட  சத்தத்துல நீ கூப்பாடு போட்டு அழுதுட்டே.. பத்து நாள் காய்ச்சல் வந்து கிடந்தே.. டைபாய்டு காய்ச்சல்னு சொல்லி ஆசுபத்திரியில் சேர்த்து மறுபடியும் வந்தே… அதுக்கப்புறம் அப்பா தொட்டாக்கூட உனக்கு அந்த அங்கிள் தொட்ட மாதிரியே இருந்துச்சி.. அருவெறுப்பா.. ஐய்யோ…உவ்வே… அந்த அங்கிள் பண்ணினதையே இன்னமும் நீ நினைச்சிகிட்டே இருக்கே…”
மறுபடியும் காலிங்பெல் சத்தம் கேட்டது. மீனாள்,
“ எனக்குக் குழப்பமா இருக்கு.. காலிங்பெல் சத்தம் கேட்டுகிட்டேயிருக்கே..”
“ நீ எப்ப குழப்பம் இல்லாம இருந்தே..? இல்லாட்டி கலியாணம் முடிஞ்சி ஒரு வாரத்துக்கு ராகவனைத் தொடவிடலையே… எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. எனக்கு ஒரு மாதிரி இருக்குன்னு சொல்லியே பக்கத்தில அண்டவிடலை… அவன் கடைசியில என்ன செய்ஞ்சான்..வலுக்கட்டாயமா உன்னோட உறவு வச்சுகிட்டான்..”
என்று ப்ரு காபித்தூள் சொன்னதைக் கேட்ட மீனாளின் கண்களில் கண்ணீர் திரண்டது.
“ நான் என்ன பண்ணட்டும்… எனக்கு ஆம்பிளகளைக் கண்டாலே பிடிக்கல… பிளஸ் டூ படிக்கும்போது டியூஷன் போய்க்கிட்டிருந்தேன்… முத்தாரம்மன் கோயில் பக்கத்தில இருந்த ஒயின்ஷாப்பிலேர்ந்து வெளியே வந்த ஒரு பொறுக்கி நடுரோட்டில என்னைக்கட்டிப்பிடிச்சி…அதுதான் எனக்குத்தெரியும்.. நான் கத்திக்கூப்பாடு போடறேன்… ரோட்டில போற ஒருத்தர் கூட பக்கத்தில வரலை.. நானே மல்லுக்கட்டி அவங்கிட்டேருந்து பிடுங்கிட்டு ஓடினேன்… வீட்டுக்குப்போகிற வரை அழுதுகிட்டே போனேன்.. அம்மாட்ட சொன்னேன்.. அதுக்கு அவ நீ ஏண்டி அந்தத்தெரு வழியே போனேங்கிறா…. அப்பாவோ.. ஒம்மக ஒழுங்கா போயிருக்க மாட்டாங்கிறாரு… “
முந்தானையால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள். பெருமூச்சு வந்தது. குக்கர் விசிலடித்தது. அவளுக்கு அந்தச்சத்தம் எப்போதும் பிடிக்கும். ஒவ்வொரு விசிலும் வருவதற்கு முன்னால் சுர்ர் சுர்ர்னு சிணுங்கிக்கிட்டிருக்கும் போது எந்தச் சிணுங்கலுக்கப்புறம் விசில் வரப்போகிறதென்று அவள் சரியாகச்சொல்லிவிடுவாள். சிலசமயம் அந்த விசிலோடு சேர்ந்து அவளும் விசிலடிப்பாள். ஐந்து விசில் வந்துவிட்டது. அடடா.. நாலு விசிலுக்கு மேலே வைத்தால் இந்த அரிசி கொஞ்சம் குழைந்து விடுகிறது. எல்லாம் இந்தப் ப்ரூ பாட்டிலிடம் பேசியதால் வந்த வினை. குக்கர் இருந்த பெரிய பர்னரை அணைத்தாள். சின்ன பர்னரில் இருப்புச்சட்டியைப் போட்டு எண்ணெய் ஊற்றினாள். எண்ணெய் அப்படியே சூடாக சூடாக குமிழ்குமிழாக நுரை வந்தது. நுரை அடங்கியதும் எடுத்து வைத்திருந்த கடுகு உளுந்தம்பருப்பைப் போட்டாள். கருப்பு வெள்ளை நிறத்தில் அடடா… டப் டிப் டப் டிப் என்று கடுகு வெடித்தது. சின்னதாக நறுக்கி வைத்திருந்த சின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் போட்டு கண்ணகப்பையால் கிண்டினாள். வெங்காயம் பொன்னிறமாய் பொரிந்ததும் பாகற்காய் சீவல்களைப் போட்டு புரட்டி விட்டுக்கொண்டேயிருந்தாள். பச்சை நிறம், கருப்பு, வெள்ளை, வெளிறிய ரோஸ் நிறம், கரும்பச்சை என்று நிறங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக தெரிந்த நிறம் மீனாளுக்குப் பிடித்திருந்தது. அவள் காய்கறி நறுக்கும்போது ஒவ்வொரு நிறமாக அருகருகில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பாள். காரட்டின் சிவப்புக்குப் பக்கத்தில் வெண்டைக்காயின் பச்சை. பீட்ரூட்டின் கருஞ்சிவப்புக்கு அருகில் வெண்பச்சை முட்டைக்கோஸ், என்று நிறங்களின் அழகை ரசித்துக் கொண்டேயிருப்பாள்.
ஒவ்வொரு பொருளாய் போடப்போட நிறம் மாறிக்கொண்டிருந்தது. பாகற்காயில் ரெண்டு உப்பையும் போட்டாள். மாமாவுக்கு அன்றாடம் பாகற்காய் வேண்டும். டையபடிக்ஸ். லேசாய் நீர் தெளித்து மூடி வைத்தாள். அப்படி நிமிரும்போதுதான் “ மீனா “ என்ற சத்தம் கேட்டது. உண்மையில் கேட்கத்தான் செய்கிறது. அவள் திரும்பும் போது அடுக்களைச்சுவரில் ஒட்டியிருந்த டைல்ஸிலிருந்து ஒரு முகம் தோன்றியது. கோரமாய் இருந்த அந்த முகத்தில் இருந்த புள்ளிகள் அம்மை தழும்புகள் விழுந்த மாதிரி மேடும் பள்ளமுமாய் தெரிந்தன. அந்த முகத்தைப் பார்த்தமாதிரியும் இருந்தது. பார்க்காதமாதிரியும் இருந்தது.
எப்போதும் அடுக்களை டைல்ஸைத் துடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அந்த வழுவழுப்பும் பளபளப்பும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது அதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்த முகத்தைப் பார்க்கப்பிடிக்கவில்லை. அதனால் நிமிர்ந்து பார்க்காமல் இருப்பு சட்டியிலிருந்த பாகற்காயை மீண்டும் மீண்டும் கிண்டிக்கொண்டேயிருந்தாள். கரண்டியில் எடுத்து ஒரு துண்டை நசுக்கிப் பார்த்தாள். நசுக்கிப்பார்த்த துண்டை வாயில் போட்டாள். வெந்து விட்டது.  அப்பாடா சமையல் முடிந்து விட்டது என்று ஆசுவாசமும் வந்தது. அய்யய்யோ அதற்குள் முடிந்து விட்டதே என்ற ஏக்கமும் வந்தது. கேஸ் ஸ்டவ்வை அணைத்தாள். பாத்திரங்களை கழுவப்போட்டாள். பாத்திரங்களின் கணங்..கணங்..சத்தம் அவளுக்கு உற்சாகமாக இருந்தது. திரும்பவும் பாத்திரங்களை எடுத்துப் போட்டாள். அதே சத்தம். அவள் முகத்தில் புன்னகை தோன்றியது. சிங்கில் இருந்த பைப்பைத் திறந்து விட்டாள். தண்ணீர் நுரையாகப் பொங்கியது. அந்த நுரைத்தண்ணீரில் கைகளை நீட்டினாள். கைகளில் தண்ணீர் படுகிற உணர்வேயில்லை. மேலே கரண்டிகள் வைத்திருந்த ஸ்டாண்டிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“ எவ்வளவு நேரமா கத்திக்கிட்டிருக்கேன்…. கதவைத் திறக்காளான்னு பாரு..”
அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். உயரே ஓடிக்கொண்டிருந்த ஃபேன் மிக மெலிதான சத்தத்தில் முனகியது.
“ என்னைச் சுத்தம் செய்ஞ்சி எவ்வளவு நாளாச்சி..”
அவள் நிமிர்ந்து பார்க்க ஃபேன் தன் மீது படிந்துள்ள தூசியைக் காட்டியது. உயரே சுவரின் மூலையில் சிறிய நூலாம்படை இருந்தது. அவள் முகத்தில் அதிருப்தியின் ரேகை ஓடியது. அவளுக்குத் தூசியோ, நூலாம்படையோ, அழுக்குத்துணிகளோ, இருக்கக்கூடாது. அவளே ஒரு நாளைக்கு நாலுவேளை குளிப்பாள். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் துணிகளைத் துவைப்பாள்.
சமையலறை அவளுக்கு பாதுகாப்பாக இருந்தது. இது அவளுடைய உலகம். இந்த உலகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைவதில்லை. அவளுக்கு மட்டும் தான் தெரியும். எப்போது சிலிண்டர் காலியாகும்? கோதுமை மாவு எத்தனை சப்பாத்திக்கு வரும்? எவ்வளவு உப்பு போட்டால் சாம்பார் மணக்கும்? கொத்துமல்லித்துவையலுக்கு எவ்வளவு புளி வைக்க வேண்டும்? பொன்னி அரிசிக்கு எத்தனை விசில் வைக்க வேண்டும்? டிகாஷன் காப்பித்தூள் எப்படி இருக்க வேண்டும்? இதெல்லாம் அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
இரவில் இருண்டு அழுது வடிந்து கொண்டிருக்கிற அடுக்களை அவள் நுழைந்ததும் தாயைக்கண்ட சேயைப் போல பொங்கிச் சிரிக்கும். அவளும் சிரிப்பாள். சில நாட்களில் நடுராத்திரி கூட படுக்கையறையிலிருந்து எழுந்து வந்து அடுக்களை விளக்கை எரிய விட்டு பார்த்துக் கொண்டே நிற்பாள். அங்கே இருக்கும்போது அவளுக்குள் ஒரு கதகதப்பு தோன்றும். அவளுடைய அம்மாவின் மடியில் தலை புதைக்கும்போது தோன்றுமே அதே மாதிரி.
அவள் கைகளைக் கழுவத் தண்ணீரைத் திறந்து விட்டாள். தண்ணீர் அவளிடம் சளசளவென்று,
“ நேத்திக்கி போட்ட மோட்டார்.. மறந்துராதே.. இன்னக்கி மோட்டார் போடணும்…”
என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கியது. அவள் தெரியும் தெரியும் என்று தலையாட்டினாள். கைகளை சேலையில் துடைத்துக் கொண்டே தரையில் கால்களை நீட்டி உட்கார்ந்தாள். இப்போதெல்லாம் கீழ்முதுகில் வலி சுளீரென்று வந்து வந்து போகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையை எடுத்து விட்டபிறகு தான் இந்த வலி. முதுகைச் சுவரோடு சேர்த்து அழுத்தினாற்போல உட்கார்ந்தால் கொஞ்சம் பரவாயில்லை. உட்கார்ந்து நீண்ட பெருமூச்சு விட்டாள். தலை கிர்ரென்றது. அப்படியே மார்போனைட் ஒட்டிய தரையில் தலை சாய்த்தாள்.
அவளுடைய கன்னத்தில் மார்போனைட்டில் இருந்த நீலநிறப்பூ மென்மையாகத் தொட்டது. உடம்பே குளிர்ந்தமாதிரி சில்லிட்டது. அவள் கிறங்கிப்போய் கண்களை மூடினாள். அவள் ஒரு பூந்தோட்டக்கடலில் மிதந்து கொண்டிருந்தாள். வண்ண வண்ண நிறங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தன. விதவிதமான பூச்சிகளின் ரீங்காரம் காதுகளை நிறைத்தது. மஞ்சள் நிறவண்ணத்துப்பூச்சிகள் கூட்டமாய் பறக்கவும் பூக்களில் உட்காரவுமாய் இருந்தன. தேன்சிட்டுகளின் கீச்சட்டம் ஏற்ற இறக்கங்களோடு இசையென இசைத்தது. அவள் எல்லையில்லாத அந்தத் தோட்டத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடைய முதுகில் முளைத்திருந்த சிறகுகள் அவள் பறக்கும் பூக்களின் வண்ணங்களில் பிரதிபலித்தது. அவளுடைய முகத்தில் அபூர்வமான ஒரு அழகு மிளிர்ந்தது. அவள் பூக்களின் தேனைக் குடிக்க விரும்பினாள். அந்தத் தேன்சிட்டைப்போல விர்ரென்று காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்க விரும்பினாள். தூக்கணாங்குருவிக் கூட்டில் படுத்து உறங்க விரும்பினாள்.மூடிய இமைகளுக்குள் மீனாளின் கண்பாப்பாக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. நெற்றி சுருங்கிச் சுருங்கி விரிந்தது. மீனாள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவள் முகத்தில் அழகிய புன்னகை பூத்திருந்தது. அது நீலநிறத்திலிருந்தது.

வெளியே கூட்டம் கூடி கதவை உடைத்துக் கொண்டிருந்தார்கள்.

நன்றி - செம்மலர்




Sunday 1 April 2018

பஞ்சு மிட்டாய்


பஞ்சு மிட்டாய்

உதயசங்கர்

இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று புலவர்கள் எழுதி வைத்தனர். அதை தினமும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தன. எந்த ராஜா ஆட்சியிலாவது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழமுடியுமா? உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? சரிதான். இடியூர் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்களேன்.
இடிராஜா திடீர் திடீரென்று தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேசுவார். அவர் தொலைக்காட்சியில் வருகிறார் என்றால் மக்கள் பயந்து நடுங்குவார்கள். அவர் தொலைக்காட்சியில் தோன்றி பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான். ஒரே இடிமின்னலைப்போல கர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுவார். தன்னுடைய அகன்ற மார்பை விரித்து சுருக்கி கை கால்களை ஆட்டிப்பேசுவார்.
“நாடு நீங்கள் பிறப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நீங்கள் இருப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நீங்கள் வாழ்வதற்குத் தேவையான காற்று நீர் எல்லாம் கொடுத்திருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் நாட்டுக்கு என்ன செய்தீர்கள்? எண்ணிப்பாருங்கள்! இன்று முதல் உங்களுடைய ஒரு வேளை உணவை நாட்டுக்காகத் தியாகம் செய்யுங்கள்! “
என்று ஒரு இடியை இறக்கி விடுவார். இன்னொரு தடவை உங்கள் ஒரு நாள் வருமானத்தைத் தியாகம் செய்யுங்கள் என்பார். உங்கள் ஒரு உடையைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் முடியைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் நகையைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் கனவைத்தியாகம் செய்யுங்கள். அதைத் தியாகம் செய்யுங்கள். இதைத் தியாகம் செய்யுங்கள். என்று இடிகளாகப் பொழிவார். பாவம். மக்கள் !
ஏற்கனவே விவசாயம் பொய்த்து விவசாயிகள் கடன் தொல்லையினால் எல்லாவற்றையும் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே தொழிலாளர்கள் கிடைக்கும் கூலி போதவில்லை. பலநாட்கள் ஒருவேளையோ இரண்டு வேளையோ உணவைத் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
நாட்டுநிலைமை இப்படி இருந்தது.
ஆனால் இடிராஜாவின் அரண்மனையில் தினம் ஆறுவேளையும் விருந்து நடக்கும். இடிராஜாவின் சட்டை மட்டும் பல லட்சம் பொன் விலைக்குப் போகும். இடிராஜா எப்போதும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறந்து போய்க்கொண்டேயிருப்பார்.
ஒருநாள் இடிராஜா கிமெரிக்கா நாட்டுக்குப்பயணம் போய் விட்டுத் திரும்பினார். அவருடைய அரண்மனைக்குள் நுழைய முடியவில்லை. ஒரே கூட்டம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், எல்லோரும் சேர்ந்து உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தார்கள்.
” வாழவழியில்லை ராஜாவே!
வழி சொல்லுங்க ராஜாவே! “
இடிராஜாவுக்குக் கோபம் வந்தது. கூடியிருந்த மக்களைப்பார்த்து,
“ என்ன வழியில்லை வழியில்லை என்று அழுது கொண்டிருக்கிறீர்கள். பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து பிழையுங்கள். போங்கள். எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது..”
என்று சொல்லி விட்டார். அப்படியும் மக்கள் கலையவில்லை. உடனே குதிரைப்படையை அனுப்பிக் கலைக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். குதிரைப்படை வந்து மக்களை விரட்டியடித்தது.
மறுநாள் நாடுநகரம் எங்கும் பஞ்சுமிட்டாய் விளம்பரம் செய்யப்பட்டது. அரண்மனை வங்கிகளில் இருந்து பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்வதற்குக் கடன் கொடுத்தார்கள். மக்கள் வரிசை வரிசையாக நின்று கடன் வாங்கினார்கள். எல்லோர் வீட்டிலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இயந்திரம் இருந்தது. எல்லோரும் பஞ்சு மிட்டாய் தயாரித்தார்கள். குச்சிகளில் சொருகப்பட்டப் பஞ்சு மிட்டாய்களை எடுத்துக்கொண்டு விற்பதற்காகத் தெருக்களில் அலைந்தார்கள்.
ஆனால் வாங்குவதற்கு ஆளில்லை. மக்கள் எல்லோரும் பஞ்சு மிட்டாய்களைத் தயாரித்து விற்றால் யார் வாங்குவார்.? குப்புசாமி தான் தயாரித்த பஞ்சுமிட்டாயை பக்கத்து வீட்டில் இருந்த வடிவேலனிடம் கொடுத்தார். உடனே வடிவேலன் தான் தயாரித்த பஞ்சு மிட்டாயை குப்புசாமியிடம் கொடுத்தார். வேறு என்ன செய்ய? அவரவர் தயாரித்த பஞ்சு மிட்டாய்களை அவர்களே தின்று தீர்த்தனர்.
ஆனால் அரண்மனை வங்கிகள் சும்மா இருக்குமா? கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டனர். வியாபாரம் ஆனால் தானே வட்டி கட்டமுடியும்? மக்கள் மறுபடியும் இடிராஜாவின் அரண்மனைக்குப்போனார்கள். இடிராஜா மக்களிடம்
“ அதனால் என்ன? நாம் பஞ்சு மிட்டாய்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம். “
அதைக்கேட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்குப் போனார்கள். ஆனால் மறுநாள் பெரிய அதிர்ச்சி!
வெளிநாட்டு கம்பெனிகள் இடியூர் நாட்டில் விதவிதமான வெளிநாட்டு பஞ்சு மிட்டாய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர்.
மக்கள் அழுதனர். அவர்களுடைய அழுகுரல் கேட்டு மூன்று தேவதைகள் வந்தார்கள். நீலநிறத்தேவதை நீலநிறப்பொடியைத் தூவினாள். இடிராஜாவின் அரண்மனை சிறியதாகி, சிறியதாகி, குடிசையாகி விட்டது. கருப்பு நிறத்தேவதை கருப்புநிறப்பொடியைத் தூவினாள். இடிராஜாவின் முட்டாள்தனங்கள் எல்லாம் மக்களுக்குப் புரிந்து விட்டது. சிவப்பு நிறத்தேவதை சிவப்பு நிறப்பொடியைத் தூவினாள். அரண்மனை வங்கிகளில் இருந்த பணம் எல்லாம் எல்லோரிடமும் சரிசமமாக பகிர்ந்து கொடுக்கப்பட்டது. மக்கள் மகிழ்ந்தனர். நாடும் செழித்தது.
நன்றி - வண்ணக்கதிர்