Monday 28 May 2018

கனிதல்


கனிதல்

உதயசங்கர்

அறிவியல் ஆசிரியர் தவசிக்குக் கோபம் கொப்பளித்தது. சிவ்வென்று முகத்தில் ரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. அறையிலிருந்த பெரிய சன்னல் வழியே அந்த அதிகாலையில் வீசிய குளிர்ந்த காற்று கூட அவருடைய கோபத்தின் தணலைக் குறைக்க முடியவில்லை. மறுபடியும் அந்த ரிகார்டு நோட்டின் முதல்பக்கத்தைத் தன்னிச்சையாகவே திருப்பினார். அதில் பெயரோ, வரிசை எண்ணோ எழுதப்படவில்லை. வெள்ளைத்தாள் அவரைப் பார்த்துச் சிரித்தது. முன்னும் பின்னும் ரிகார்டு நோட்டின் பக்கங்களை விரித்துப் பார்த்தார். எந்த அடையாளமும் இல்லை. என்ன தைரியம்? பேர், வரிசை எண், எழுதாமல் வைத்து விட்டால் கண்டுபிக்க முடியாதா? யாருன்னு சிக்கட்டும். அப்புறம் இருக்கு மண்டகப்படி! அவர் அந்த ரிகார்டு நோட்டைமட்டும் தனியாக எடுத்து வைத்தார்.
புத்தம்புது நோட்டு. அழகாக காக்கி நிற அட்டை போட்டு பார்க்க நேர்த்தியாக இருந்தது. மறுபடியும் உள்ளே திருப்பி அந்தப்படத்தைப்பார்த்தார். செம்பருத்திப்பூவின் படமும் அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் படமும் அவ்வளவு நேர்த்தியாக இல்லாவிட்டாலும் பார்க்கும்படியாக இருந்தது. வலதுபுறம் சாய்ந்த கையழுத்தில் பாகங்கள் குறிக்கப்பட்டிருந்தன. சுமாரான விலை குறைந்த பென்சிலாக இருக்க வேண்டும். பென்சிலும் சரியாகப் பதியவில்லை. கூர் தீட்டப்படவில்லை. யாராக இருக்கும்? எங்கே கண்டுபிடி? பார்க்கலாம். என்கிற மாதிரி அந்தப்படத்திற்குக் கீழே கையெழுத்து. அவருடைய கையழுத்து. அவர் போடாத அவருடைய கையெழுத்து அவரைப்பார்த்து கேலியாகச் சிரித்தது. அவருடைய கையெழுத்தைப் போட்டே ரிகார்டு நோட்டை அவரிடமே கொடுக்க வேண்டும் என்றால் என்ன நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்.
ஆசிரியர் தவசியின் மனதில் அவருடைய வகுப்பில் உள்ள பையன்களின் முகம்  நழுவுப்படக்காட்சி போல ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரின் முகத்திலும் ஒரு கள்ளப்புன்னகை இருந்ததாக இப்போது தெரிந்தது. யாரையும் நம்பமுடியவில்லை.  ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே தான் ஒரு முன்மாதிரியான ஆசிரியராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டங்களைத் தாண்டி கற்பித்தல் சம்பந்தமாக பல நல்ல நூல்களைத் தேடித்தேடி வாசித்தார். கிஜூபாய் பகேகேயின் பகல் கனவு, டோட்டோசான் ஜன்னலில் ஒரு சின்னஞ்சிறுமி, ஜான் கோல்ட்டின் குழந்தைகள் எப்படி கற்கிறார்கள்? எளிய அறிவியல் நூல்கள் குழந்தை இலக்கிய நூல்கள், என்று பல நூல்களைத் தேடித்தேடிப் படித்தார். கல்லூரிக்காலத்தில் கவிதை எழுதுகிற பழக்கம் இருந்தது. சிலகவிதைகள் பிரசுரம் ஆகியிருந்தது. அந்த வாசனையினால் இலக்கியப்பரிச்சயமும் இருந்தது. பொது நூலகங்களில் இலக்கிய நூல்களைத் தேடித்தேடி வாசித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து முடித்ததுமே ஒரு லட்சிய ஆசிரியராக தன்னை மாற்றுகிற முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய பள்ளிக்காலத்தில் அவருக்கு ஒரு லட்சிய ஆசிரியர் இருந்தார். அவர் கனகசுந்தரம் ஐயா.
கனகசுந்தரம் ஐயா பள்ளிக்கூடத்தில் நுழைந்து விட்டால் போதும் மாணவர்கள் அவரை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள். அவருடைய சுத்தமான கைத்தறி ஆடை, கம்பீரமான நடை, இசை போன்ற பேச்சு, எப்போதும் புன்னகை சிந்தும் முகம், அகன்று விரிந்த நெற்றி என்று பார்த்தவுடன் ஒரு வார்த்தையாவது பேசவேண்டும் என்று தோன்றும். அவர் கோபப்பட்டு மாணவர்கள் பார்த்ததில்லை என்பார்கள். ஆனால் கோபம் வரும்படி யார் நடந்தாலும் அவர் அந்தப்பையனைத் தனியாகக் கூப்பிட்டுப் பேசுவார். ஒரு வார்த்தை கூட அவன் செய்த தவறைப் பற்றிப் பேசாமல் அவனுடைய நேர்மறையான நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். அவருடைய மென்மையான பேச்சும் மாணவனின் தோளில் அரவணைக்கிற மாதிரியான தொடுதலும் எந்தப்பையனையும் அசைத்து விடும். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் கண்களில் கண்ணீர் கோர்க்கும். கடைசிவரை அவனுடைய தவறைப் பற்றிப் பேசாத பெருந்தன்மையின் வெம்மையில் அவன் புடம் போட்டவனாகி விடுவான். அவர் அவனைப் போகச்சொல்லும் போது அவனாகவே நாத்தழுதழுக்க,
“ இனிமே அப்படிச் செய்ய மாட்டேன் ஐயா..” என்று சொல்லுவான்.
அவர் அப்போதும் முகம் நிறைந்த சிரிப்போடு அவன் தோளில் தட்டுவார். அவ்வளவு தான். மாணவர்களை எதற்கெடுத்தாலும் மிரட்டவோ, உருட்டவோ, செய்ய மாட்டார். அந்த வயதுக்குரிய குறும்புகளை அவரும் ரசித்துச் சிரிப்பார். மற்றவர்களை எந்த வகையிலும் புண்படுத்தாத நகைச்சுவைகளைக் கைதட்டி ரசிப்பார். அவருடைய கையில் பிரம்பை மாணவர்கள் பார்த்ததேயில்லை. அவர் மீது மாணவர்கள் அவ்வளவு அன்பு செலுத்தினார்கள். அந்த அன்பை எப்படியாவது காண்பித்து விடவேண்டும் என்று ஆலாய்ப் பறப்பார்கள். கிராமத்துப்பையன்கள் அவருக்கு நிறைய தானியங்கள், காய்கறிகள், கொண்டுவருவார்கள். நகரத்துப்பையன்கள் வீட்டிலிருந்து பண்டம்பலகாரங்கள் என்று கொண்டுவருவார்கள். அவருக்குத்தெரியும். அந்த எளிய பள்ளியில் யார் யார் ஒருவேளை மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடத்துக்கு வருபவர்கள் என்று. அவர் அந்தப்பையன்களை அழைத்து அவருக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவந்த மாணவன் கையால் கொடுக்கச் சொல்வார். சிலசமயம் அவரே எல்லோருக்கும் சமமாய் பிரித்துக் கொடுத்து விடுவார். அதேபோல பண்டம் பலகாரங்களை எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவார். எப்போதும் மாணவர்களின் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கும். மாதம் ஒரு நாள் விடுப்பு அன்று மாணவர்கள், ஆசிரியர்கள், எல்லோரும் சேர்ந்து பள்ளியைச் சுத்தம் செய்வார்கள். அன்று ஒரே பாட்டும் கூத்துமாய் இருக்கும். பொழுது கழிவதே தெரியாது. எல்லோரும் சேர்ந்து அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்த சாப்பாட்டை ஆளுக்கொருவாய் சாப்பிடுவதில் என்ன இன்பம்! கனக சுந்தரம் ஐயா சின்னப்பிள்ளைகள் மாதிரி ஓடி ஓடி வேலை செய்வார். இவ்வளவு சீக்கிரம் பொழுது போய் விட்டதே என்று வருத்தமாக இருக்கும். தவசி வீட்டில் ஒரு துரும்பை எடுத்துப் போடமாட்டான். ஆனால் பள்ளியில் அவ்வளவு வேலைகளைச் செய்வான். அதன் பிறகு வீட்டிலும் வேலைசெய்ய ஆரம்பித்தான்.
அப்போதே அவனுக்குள் அவன் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று தீர்மானமாகி விட்டது. எப்போதும் ஆசிரியராவதைப் பற்றிய கனவிலேயே இருந்தான். பள்ளியில் தானே எதிர்காலச் சமூகம் உருவாகிறது. அந்தச் சமூகத்தின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு எத்துணை மகத்தானது! ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரிந்ததுமே அவனுடைய கனவுகள் நனவாகும் சந்தர்ப்பம் கைகூடி வந்ததை நினைத்து மகிழ்ந்தான். அவன் நினைத்தமாதிரியே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியே கிடைத்தது. பள்ளியில் சேர்ந்து ஆறுமாதத்திலேயே ஆசிரியர் தவசி மாணவர்களிடம் பெயர் பெற்று விட்டார். எல்லாமாணவர்களையும் ஐயா என்றே அழைத்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தார். வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பாடங்களை நடத்தினார். பலவீனமான மாணவர்களுக்கு என்று தனியாக வகுப்புகள் நடத்தினார். ஏன் மாணவர்களின் குடும்பப்பிரச்னைகளைக் கேட்டு அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசினார். அவருடைய சக்திக்கு உட்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு சொன்னார். அதனால் ஊர்மக்களிடமும் மதிப்பு உயர்ந்தது. எப்போதும் மாணவர்கள் ஆசிரியர் தவசி பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தனர். இந்த வகுப்பு தான் என்றில்லை எல்லாவகுப்பு மாணவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். உடன் வேலை பார்த்த பல ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. சிலர் பின்னால் பேசினார்கள். சிலர் ஆசிரியர் தவசியிடம் வந்து
“ சார் உண்டானதைச் சொல்லிக்கொடுங்க.. போதும் அதுக்குத்தான் சம்பளம் தர்ராங்க… நீங்க கூடுதலா வேலைபாக்கறீங்கன்னு எக்ஸ்டிராவா அலவன்ஸு எதுவும் கொடுக்கமாட்டாங்க.. சார்.. இதுகளை எல்லாம் படிக்க வைச்சிரமுடியும்னு நெனைக்கிறீங்க..”
என்று சொல்லிச் சிரித்தனர். அவர்களிடம் தவசி அமைதியாக,
“ சார் கற்பித்தலை நான் ஒரு வரமா நினைக்கிறேன்.. அது என் லட்சியமும் கூட.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லோரும் நினைச்சிருந்தா அப்துல்கலாமோ, அண்ணாதுரையோ, நம்முடைய பெயர் சொல்லியிருக்க முடியாது.. இது கொஞ்சம் நாடகத்தனமாக்கூட இருக்கலாம்.. ஆனால் யதார்த்தமான உண்மை..”
என்று சொன்னார். அதைக்கேட்டு சில ஆசிரியர்கள் தவசியைப்போலவே இன்னும் கூடுதலாக சிரத்தை எடுத்தனர். பழனிச்சாமி தவசியுடன் சேர்ந்து தவசியைப்போலவே மாறிவிட்டார். இப்படி வந்த ஆறுமாதத்தில் அந்தப்பள்ளியின் பெயர் கல்விமாவட்டத்தில் பேசுபொருளாக மாறும்படி செய்து விட்டார். ஆனால் இந்தச்சூழ்நிலை அவருடைய சுயமரியாதையைக் கேள்வி கேட்டது.
அவருடைய கை தன்னையறியாமலேயே முன்னால் கொத்தாகக் கிடந்த தலைமுடியை சுருட்ட ஆரம்பித்தது. அவருடைய சிந்தனையில் என்னென்னெவோ தாறுமாறாய் ஓடியது. இன்று வகுப்பு தேர்வு இருக்கிறது. அதற்கு கேள்விகளை எழுதவில்லை. துணைத்தலைமையாசிரியர் டி.இ.ஓ. ஆபீசுக்கு கடந்த ஐந்து வருடங்களின் பத்தாவது வகுப்பு தேர்ச்சி விகிதாச்சாரத்தை அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவருக்கு மிகவும் பிடித்த அறிவியலறிஞர் டார்வினின் பரிணாமக்கோட்பாடு பற்றிய பாடத்தை அனுபவித்து நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடத்தைத் தாண்டிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். என்றெல்லாம் நேற்றிரவு யோசித்து வைத்திருந்தார்.
கடிகாரத்தின் மணி ஏழு அடித்தது. எப்போதும் முதல் ஆளாய் பள்ளிக்குள் நுழைந்து விடுவார். ரிகார்டு நோட்டுகளில் வரிசையாகக் கையெழுத்து போட்டு விட்டு அந்தக் குறிப்பிட்ட நோட்டை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துக் கொண்டார். இந்தப் பிரச்னையைச் சாதாரணமாக விடவும் முடியவில்லை. பெரிய பிரச்னையாக்கவும் முடியவில்லை. பேசாமல் தலைமையாசிரியரிடம் ரிப்போர்ட் செய்து விட்டு ஒதுங்கி விடலாம் என்று நினைத்தார். தலைமையாசிரியர் சந்திரமோகன் தவசி மீது அபரிமிதமான மரியாதையும் அன்பும் கொண்டவர். அதனால் அளவுக்கு அதிகமாக விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுவாரோ என்று பயமாக இருந்தது. தானும் என்ன செய்ய முடியும்? யாரோ ஒரு பையனின் குறும்பு என்று விட்டு விடவும் முடியவில்லை. கண்டுகொள்ள வில்லையென்றால் எல்லோரிடமும் ஒரு அலட்சியமும் இளக்காரமும் தோன்றிவிடும் அபாயம் இருக்கிறது. அளவான தண்டனை கொடுக்க வேண்டும். தவசிக்கு இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொள்வோம் என்று நினைக்கவேயில்லை. ஒருவேளை தன்னுடைய ஆசிரியர் கனகசுந்தரம் ஐயாவுக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பார்? தவசிக்குக் குழப்பமாக இருந்தது. தலை வலித்தது. எழுந்து பள்ளிக்குக் கிளம்பினார்.
பள்ளிக்கூடத்தில் எல்லாம் வழக்கம் போலவே நடந்தன. அவருடைய வகுப்பில் நுழையும்போது பிள்ளைகளின் முகம் மலர்ந்த சிரிப்புடன் கூடிய முகமனைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார். ஒவ்வொருவர் முகமாய் ஆராய்ந்தார். இவனாக இருக்குமோ? அவனாக இருக்குமோ? சரி. ரிகார்டு கொடுத்து விடலாம். யார் என்று தான் பார்க்கலாம் என்று மனதில் முடிவு செய்து கொண்டு ஒவ்வொரு மாணவரின் பெயரையும் அழைத்து ரிகார்டு நோட்டுகளைக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அந்த ரிகார்டு நோட்டைப் பற்றி சில வார்த்தைகள் நல்ல விதமாகக்கூறி இன்னும் நன்றாகச் செய்ய ஊக்குவித்தார். எல்லோருடைய நோட்டுகளையும் கொடுத்து முடிந்தபிறகு, தனியாக எடுத்து வைத்திருந்த அந்த ரிகார்டு நோட்டை எடுத்தார்.
“ யாருக்கு ரிகார்டு நோட்டு வரலை… எழுந்து வாங்கையா..”
ஒரு கணம் வகுப்பறை அமைதியாக இருந்தது. வகுப்பில் நான்காவது பெஞ்சில் மூன்றாவதாக இருந்த வேலுமணி எழுந்தான். அவனைப்பார்த்ததும் ஆசிரியர் தவசிக்கு அதிர்ச்சி. அவர் அவனாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வகுப்பில் ரொம்ப அமைதியான பையன். படிப்பதில் முன்னேறிக்கொண்டிருக்கிற பையன். அவனுடைய வீட்டுச்சூழ்நிலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிற பையன். அவருடைய கண்கள் அவனையே நம்ப முடியாமல் பார்த்தன. அவருடைய கைகள் அவனை அழைத்தன.
வேலுமணி எழுந்தவுடனேயே ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று உணர்ந்து கொண்டான். தவசி ஐயாவின் கண்களில் இருந்த கடுமையைக் கண்டதும் அவனுடைய கண்கள் கலங்க ஆரம்பித்தன. அவன் பெஞ்சில் இருந்து விலகி ஆசிரியரின் மேஜைக்கு அருகில் சென்றான். வகுப்பறை அமைதியாக இருந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. அவன் அருகில் வந்ததும்,
“ இது உங்க ரிகார்டு நோட்டுதானாய்யா..” என்று கேட்டார் ஆசிரியர் தவசி.
உலர்ந்த அந்த வார்த்தைகளில் இருந்த உணர்ச்சியின்மை வேலுமணியை ஏதோ செய்தது. அவன் கண்களில் திரையிட்டிருந்த கண்ணீரின் வழியே தன்னிச்சையாக மேஜை மீது தனியாக வைக்கப்பட்டிருந்த அந்த ரிகார்டு நோட்டினைப் பார்த்தான். ஆம் என்று தலையை அசைத்தான்.
தவசி அந்த ரிகார்டு நோட்டினைத் திருப்பி படம் வரைந்திருந்த பக்கத்தை அவன் பக்கமாகத் திருப்பினார். விரலால் அந்தக் கையெழுத்தைச் சுட்டிக்காட்டியபடியே,
“ என்னய்யா இது ? “
என்று கேட்டார். அதைப்பார்த்தானோ இல்லையோ வேலுமணி சத்தமாய் அழ ஆரம்பித்தான். ஆசிரியர் தவசி எதுவும் சொல்லவில்லை. அவருடைய முகம் இளகியது. மனதில் கனகசுந்தரத்தின் சிரித்த முகம் ஒருகணம் தோன்றி மறைந்தது. அப்போது தான் கவனித்தார் வேலுமணி அவரை மாதிரியே தலைமுடியைச் சீவியிருந்தான். எப்போதும் அவர் பின்னால் சுற்றும் பலபேரில் அவனும் ஒருத்தனாய் இருந்தான் என்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் எழுந்து வேலுமணியின் அருகில் சென்றான். அவர் அப்படி எழுந்திரிப்பதறகாகவே காத்திருந்தது போல வேலுமணி அவருக்கு அருகில் வந்து அணைந்து கொண்டான். அவனைச் சேர்த்தணைத்துக் கொண்ட தவசி குனிந்து அவனுடைய கண்ணீரைத் துடைத்து விட்டார். அவனுடைய கண்களில் இருந்த பயத்தைத் தன்னுடைய சிரிப்பினால் துடைத்தார். அவனுடைய முதுகில் மெல்லத் தட்டிக்கொடுத்த படி
“ போய் அழிரப்பரை எடுத்துட்டு வா..”
என்று மென்மையாகச் சொன்னார். வேலுமணிக்கு நடந்து கொண்டிருப்பதை நம்ப முடியாதவன் போல நின்று கொண்டிருந்தான். அவர் இன்னமும் அவனுடைய தலைமுடியைக் கோதி விட்டார். அவருடைய மனம் நிறைந்திருந்தது. கண்களில் அன்பின் ஒளி வீசியது. என்ன நடந்தது என்று தெரியாத அந்த வகுப்பில் அன்பின் மணம் வீசியது. மாணவர்களின் முகத்தில் அபூர்வமான நிறைவு பூத்திருந்தது.
நன்றி - காணிநிலம் .


Monday 7 May 2018

கவிதை உறவு இலக்கிய விருது

கவிதை உறவு இலக்கிய விருது

கவிதை உறவு இலக்கிய அமைப்பு 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் வரிசையில் பேய், பிசாசு, இருக்கா? நூலுக்கு முதல் பரிசை வழங்கியிருக்கிறார்கள்.
வெளியீடு - வானம் பதிப்பகம்
தொடர்பு - 9176549991
கேள்வி கேட்பது என்பது மனித இயல்பு. அதனால் தான் அறிவியல் வளர்ந்தது. அறிவியல் மட்டும் அல்ல. வரலாறு, புவியியல், உயிரியல், என்று ஏராளமான துறைகள் உருவாகவும், வளரவும் காரணமாக இருந்தது கேள்விகள் தான். எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டான் மனிதன். பகுத்தறிவின் விதைகள் இவைதான்.
தாய் மொழி பேசப்படித்தவுடனேயே குழந்தைகள் அது என்ன? இது என்ன? என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதில் புரியாவிட்டாலும் கேட்டுக்கொள்கின்றனர். ஆனாலும் புரியவில்லை என்று பெரிதாகக் கவலைப்படுவதில்லை. கேள்விகள் வெள்ளம் என சீறி வந்து கொண்டே இருக்கின்றன.
பத்து வயதுக்கு மேல் குழந்தைகள் தங்கள் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்க்கின்றனர். அதுவும் பொறுப்பான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உண்மையான பதில்களை எதிர்பார்க்கின்றனர். சின்னஞ்சிறு பிராயத்தில் பெரியவர்களால் உண்டான பயம், சந்தேகங்களை விளங்கிக் கொள்ள நினைக்கின்றனர்.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
பேய் பிசாசு இருக்கா?
மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு?
பல்லி பலன் சொல்லுமா?
பூனை குறுக்கே போனால் போகிற காரியம் கெட்டுப்போகுமா?


இப்படி நிறையக் கேள்விகள் பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களே இந்தக் கட்டுரைகள். இந்தப்பதில்கள் உண்மையில் பதில்கள் இல்லை. ஒரு மாற்று சிந்தனை முறையின் அறிமுகம். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவின் துவக்கம்.

Sunday 6 May 2018

யாருக்கு உரிமை?


யாருக்கு உரிமை?

உதயசங்கர்

தென்னூர் என்னும் ஊரில் நான்கு நண்பர்கள் பசவண்ணன், வள்ளல், ராமன், நாராயணன், வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். நான்குபேரும் சேர்ந்து நான்கு நிலங்களை அடுத்தடுத்து இருக்கிற மாதிரி வாங்கினார்கள். நான்கு நண்பர்களும் கலந்து ஆலோசனை செய்தனர். மேட்டில் இருந்த பசவண்ணன் வாங்கிய நிலத்தில் ஒரு கிண்று தோண்ட வேண்டும். அந்தத் தண்ணீரைக்கொண்டு மற்ற நிலங்களில் உழுது பயிர் செய்ய வேண்டும். விளைச்சலை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் இந்த ஆலோசனை பிடித்திருந்தது. 
பசவண்ணன் நிலத்தில் நால்வரும் சேர்ந்து கிணறு தோண்டினார்கள். தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து கிணறு கிடுகிடுவென நிரம்பிவிட்டது.
 மற்ற நண்பர்கள் வள்ளல், ராமன், நாராயணன், எல்லோரும் தங்களுடைய நிலத்தை உழுது பயிரிட்டார்கள். எல்லாநிலங்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது பசவண்ணன் பொறுப்பு. நாராயணனும், ராமனும், வள்ளலும்  நிலத்தை உழுது சீர் செய்தார்கள்.. நிலம் விதைப்பதற்குத் தயாராக மிடுக்காக இருந்தது. எல்லோரும் சேர்ந்து பாடுபட்டு உழைத்து பயிர் செய்து அறுவடை செய்தார்கள். அறுவடை செய்த தானியங்களை நான்குபேரும் சரிசமமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள். இப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
அப்போது அவர்களுடைய நிலத்துக்கு எங்கிருந்தோ ஒரு குரங்கு வந்தது. அங்கிருந்த புளியமரத்தில் குடியேறிது. முதலில் அது பேசாமல் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களும் ஐயோ பாவம் என்று அவர்கள் சாப்பிடும்போது ஒரு உருண்டை சோற்றை குரங்கிற்குக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த சோற்றை கைகளில் வாங்கி அப்பாவி மாதிரி சாப்பிட்டது குரங்கு. சில நாட்கள் கழிந்தபிறகு அவர்கள் சாப்பிடும்போது அவர்களுடைய கைகளில் இருந்து எடுத்துத் தின்ன ஆரம்பித்தது. அவர்களுக்குக் கோபம் வந்தாலும் சரி பாவம் வாயில்லாப்பிராணி தானே என்று பொறுத்துக் கொண்டார்கள். அப்புறம் இன்னும் சில நாட்கள் கழித்து அவர்கள் சாப்பிட வருவதற்கு முன்னாலேயே அவர்களுடைய சாப்பாட்டை எடுத்து சட்டவட்டமாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தது
அதைப்பார்த்த பசவண்ணன், நாராயணன், வள்ளல், ராமன், எல்லோரும் சேர்ந்து குரங்கினை விரட்டினார்கள். குரங்கு அவர்களைப்பார்த்து வக்கணையாகப் பல்லைக் காட்டிக்கொண்டே ஓடிப்போய் விட்டது.
மறுநாள் பசவண்ணன் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வந்தான். அவன் வள்ளல் நிலத்துக்கு மடை திறந்து விடும் போது ஒரு குரல் கேட்டது.
” ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி…ஏமாளியப்பாரு
எல்லாத்தையும் கொடுக்கும் இந்தக் கோமாளியைப்பாரு
ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி…ஏமாளியப்பாரு
எல்லாத்தையும் கொடுக்கும் இந்தக் கோமாளியைப்பாரு”
அந்தச் சத்தத்தைக் கேட்ட பசவண்ணன் சுற்றிலும் பார்த்தான். புளியமரத்தின் மீது அந்தக்குரங்கு உட்கார்ந்திருந்தது. பசவண்ணன் அந்தக்குரங்கைப்பார்த்து,
“ நீயா இப்பப் பாடுனே? “ என்று கேட்டான். குரங்கு ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டே,
“ உன்னை மாதிரி ஏமாளி யாரும் இல்லையே..”
என்று கூறியது. பசவண்ணன் கோபத்துடன்,
“ ஏய் முட்டாள் குரங்கே! ஏதாவது உளறிக்கிட்டிருக்காதே..! “
“ உன்னுடைய நிலத்தில் இருந்து தானே தண்ணீர் பாய்ச்சுகிறாய்… தண்ணீர் இல்லை என்றால் நிலத்தில் என்ன செய்ய முடியும்? அது தரிசாக்கிடக்க வேண்டியது தானே.. உனக்கும் அவர்களுக்கும் சமப்பங்கா? என்ன கொடுமை பசவண்ணா! “
பசவண்ணன் யோசித்தான். அப்போது வள்ளலும் நாராயணனும், ராமனும் வந்தார்கள். அவர்களைப் பார்த்த உடன் பசவண்ணன்,
“ இனிமே பாதி அறுவடை எனக்குக் கொடுக்கணும்.. அப்பத்தான் நான் தண்ணீர் தருவேன்…” என்று சொன்னான்.
நண்பர்களுக்கு அதிர்ச்சி. திடீரென ஏன் இப்படிப் பேசுகிறான்? அவர்கள் பதில் பேசாமல் போய்விட்டார்கள்.
மறுநாள் வள்ளல் நிலத்திற்கு வந்தான். அப்போது அந்தக்குரங்கு வள்ளலிடம் பேசியது.
“ நிலம் இல்லாமல் தண்ணீரை மட்டும் வைத்துக்கொண்டு பயிர் வைக்கமுடியுமா? அதுவும் தண்ணீர் பாய்கிற முதல்நிலம் உன்னுடைய நிலம். விளைச்சல் அதிகம். நீ எல்லாவற்றையும் சமமாகக் கொடுக்கிறாய்..ஐயோ பாவம்! “
வள்ளல் குரங்கு பேசுமா என்று கூட நினைக்கவில்லை. உடனே மற்ற நண்பர்களிடம் போய் ” விளைச்சலில் பாதி எனக்கு வேண்டும்.. இல்லை என்றால் இனி நிலத்தில் பயிர் வைக்கப்போவதில்லை. ” என்றான்.
ராமனும், நாராயணனும் கூட சண்டை போட்டார்கள். கடைசியில் நண்பர்கள் பிரிந்து விட்டார்கள். நிலம் பாழாகி விட்டது. கிணற்றை யாரும் பயன்படுத்தவில்லை. நீரூற்று அடைத்து விட்டது. கையில் இருந்த தானியங்களும் காலியாகி விட்டன. உணவுக்கு வழியில்லாமல் போனது. நண்பர்கள் எல்லோரும் கூலி வேலைக்குப் போனார்கள். பாடுபட்டு உழைத்தும் சரியாகச் சாப்பிடமுடியவில்லை.
ஒரு நாள் நான்கு நண்பர்களும் தங்களுடைய நிலங்களைப் பார்க்கலாம் என்று போனார்கள். அங்கே கூட்டம் கூட்டமாக குரங்குகள் குடியிருந்தன. அதைப்பார்த்த நான்கு நண்பர்களுக்கும் கோபம் வந்தது.
நான்கு பேரும் சேர்ந்து அந்தக்குரங்குகளை அடித்து விரட்டினார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கின் பேச்சைக்கேட்டு நாம் இப்படி மோசம் போனோமே என்று வருந்தினர். ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். பின்பு அவர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தில் பயிர் செய்ய ஆரம்பித்தார்கள்.
அப்புறம் என்ன?
அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?



Saturday 5 May 2018

சூரியனின் கோபம்


சூரியனின் கோபம்

உதயசங்கர்

பூமியின் அந்தப்பக்கத்திலிருந்து இந்தப்பக்கத்துக்குச் சூரியன் வரும்போதே கோபத்துடன் வந்தான். மொட்டையூர் நாட்டு ராஜா மொட்டையன் அந்த நாட்டிலிருந்த மரங்களையெல்லாம் மொட்டை அடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டான். முன்னால் எல்லாம் காடும், வனமும், தோட்டமும், வயல்வெளிகளும் மொட்டையூர் நாட்டில் பரந்து விரிந்து கிடக்கும். சூரியனுக்கே பார்க்கும்போது ஆசையாக இருக்கும். மொட்டையூர் நாட்டை விட்டுப் போக மனசே வராது. இன்னுங்கொஞ்சநேரம், இன்னுங்கொஞ்சநேரம் என்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பான். அப்படி ஆசை ஆசையாக இருக்கும். எங்கும் நீர் நிறைந்து தொப் தொப்புன்னு இருக்கும். ஆற்றில் வருடம் முழுவதும் நீர் ஓடும். குளம், கம்மாய், குட்டை, ஓடை, எல்லாம் நீர் எப்போதும் இருக்கும். மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், புதர்கள், குத்துச்செடிகள், என்று எத்தனை எத்தனை!
நெல்லில் தான் எத்தனை வகை! மிளகுச்சம்பா, காட்டுச்சம்பா, கொட்டாரச்சம்பா, புழுதிச்சம்பா, சீரகச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, புல்லில் தான் எத்தனை வகை! அருகம்புல், கோரைப்புல், சுக்குநாறிப்புல், எலுமிச்சம்புல், சீமைப்புல்! மரங்கள் ஆல், வேல், அரசு, வேம்பு, மருதம், மலைவேம்பு, கருங்காலி, தேக்கு, சந்தனம்,, செம்மரம்,, மஞ்சணத்தி, மா, பலா, கொய்யா, நாவல், அத்தி, விளா, கிளா, என்று மரங்களும் நிறைந்து இருக்கும். வானத்திலிருந்து மேகங்கள் ஆசைப்பட்டு மரங்களின் உச்சியில் வந்து எட்டிப்பார்க்கும். மேலே இருந்து சூரியன் பார்க்கும்போது அப்படியே பச்சைப்போர்வை போர்த்திக் கண்ணைப்பறிக்கும். சூரியன் என்ன செய்தாலும் அந்தப்பச்சைப் போர்வையைத் தாண்டி உள்ளே நுழைய முடியாது.
நினைத்ததும் மழை பெய்யும். நான்கு மரங்கள் ஆடினால் போதும். உடனே அதன் உச்சியிலிருக்கும் மேகங்கள் பொல பொலன்னு தண்ணீரை ஊற்றி விடும். அதைப்பார்த்த மற்ற மரங்களும் வேகமாகத் தலையாட்ட பெரிய மழை பெய்யும். அப்படி இருந்த நாடு மொட்டையூர் நாடு. திடீரென என்ன ஆச்சு?
யாரோ சொன்னார்கள் என்று ராஜா மொட்டையன் மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்ப ஆரம்பித்தான். ராஜாவே மரங்களை வெட்டி அனுப்பும்போது மந்திரிகளால் சும்மா இருக்க முடியுமா? மந்திரிகள் வெட்டினார்கள். துணை மந்திரிகள் வெட்டினார்கள். தளபதிகள் வெட்டினார்கள். சிப்பாய்கள் வெட்டினார்கள். புலவர்கள் வெட்டினார்கள். கடைசியாக மக்களும் வெட்டினார்கள். இப்படி எல்லோரும் வெட்டி வெட்டி அந்த வனவனாந்திரம் ஒரு மரமோ, ஒரு செடியோ, ஒரு கொடியோ, ஒரு புதரோ, ஒரு புல்லோ, இல்லாமல் மொட்டைமொழுக்கட்டையாகி விட்டது.
இப்போது மொட்டையூரைப் பார்க்கச் சகிக்கவில்லை. பாலைவனம் போல எங்கும் மண்ணும் கல்லும் பாறையும் காரையும் இருந்தன. காய்ந்து வறண்ட பூமியில் குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லை. சூரியனுக்குக் கோபம். சூரியன் கோபப்பட்டால் என்ன ஆகும்? வெயில் கொளுத்து கொளுத்து என்று கொளுத்தியது. மொட்டையூர் ராஜா மொட்டையன் அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. பூமியில் பாதாள அறைக்குள் அடைந்து கிடந்தான். மந்திரிகள் மாளிகையை விட்டு வரவில்லை. தளபதிகள் பங்களாக்களை விட்டு வரவில்லை. காவலர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. மக்களும் தங்களுடைய குடிசைகளை விட்டு வரவில்லை. யாராவது வெளியில் வந்தால் அவர்களைச் சுட்டுப் பொசுக்கி விட வேண்டும் என்று சூரியன் நினைத்திருந்தான்.
அப்போது தெருவில் ஆனந்தன் என்ற சிறுவனும் அமுதா என்ற சிறுமியும் அடிக்கிற வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அமுதாவிடம் ஒரு சிறு குடம் இருந்தது. ஆனந்தன் கையில் எதையோ தாங்கியபடி மெல்ல நடந்து வந்தார்கள். அவர்களுடைய தலையிலிருந்து கால்வரை வியர்த்து ஒழுகியது. நாக்கு வறண்டது. சூரியன் விடவில்லை. ஆனாலும் அவர்கள் வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஊரின் எல்லையில் காய்ந்து கிடந்த கம்மாய்க்கரையில் உட்கார்ந்து வறண்ட நிலத்தைத் தோண்டினார்கள். ஐந்து குழிகளைத் தோண்டினார்கள். ஆனந்தன் அவனுடைய ஆச்சியிடம் இருந்து வாங்கி வந்திருந்த ஆல், வேல், வேம்பு, மருதம், அரசு, மரங்களின் கன்றுகளை அந்தக்குழிகளில் ஊன்றினான். அமுதா அந்தக்குழிகளில் தான் வெகுதூரம் சுமந்து வந்திருந்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக்குழிகளில் ஊற்றினாள்.
அவர்களுக்குப் பின்னால் வந்த சூரியன் வெட்கப்பட்டான். அடடா! இந்தக்குழந்தைகளைப் போய் சுட்டுப்பொசுக்க நினைத்தோமே என்று வருத்தப்பட்டான். வருத்தத்தில் அவன் கண்களை மூடினான். உடனே வெயில் மறைந்தது. மேகங்கள் கூடிப்பேசின. மின்னல் வெளிச்சம் போட்டது. இடி பின்னணி இசை இசைத்தது. ஆனந்தனுக்காகவும், அமுதாவுக்காகவும் மழை மொட்டையூர் நாட்டில் இறங்கியது. மழையைப் பார்த்த மக்கள் வெளியே வந்தனர்.
அப்புறம் என்ன?
மொட்டையூர் நாட்டில் இப்போது மரம் நடுவிழா மழையில் நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா?