Thursday 31 October 2019

கிளிமரம்



கிளிமரம்

மலையாளத்தில் - கிரேஸி

தமிழில் - உதயசங்கர்


அடி முதல் நுனிவரை கசக்கின்ற மரமாக இருந்தது அந்த மரம். பூக்கவோ, காய்க்கவோ இல்லை. அதனால் அந்த மரம் வருத்தத்தில் இருந்தது. ஒரு கிளி கூட அந்த மரத்தின் கிளைகளில் பறந்து வந்து ஓய்வெடுத்ததில்லை. தன்னுடைய பிறவி இப்படி பாழாகி விட்டதே என்று நினைத்து அந்த மரம் நீண்ட பெருமூச்சு விட்டது. கூட்டத்திலிருந்து தப்பி வந்த ஒரு கிளிக்கு அந்த மரத்தின் வருத்தம் புரிந்தது. அந்தக்கிளி மரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கேட்டது,
“ நீ எதற்காக இவ்வளவு வருந்துகிறாய்? “
மரத்திடம் இதுவரை யாரும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதில்லை. மகிழ்ச்சியினால் மரத்தின் கண்கள் நிறைந்தன. இரண்டு துளி கண்ணீர் வடித்த மரம் சொன்னது,
“ நான் ஒரு கசப்பு மரம். நான் எப்படி இப்படியானேன் என்று எனக்குத் தெரியவில்லை… இந்த வழியாகப் பறந்து போகிற கிளிகள் யாரும் என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எல்லா மரங்களையும் தழுவிச் செல்லும் காற்று கூட என்னை மறந்து விட்டுப்போவது தான் வழக்கம்..”
கிளி நேராகப் பறந்து சென்று ஒரு கிளையில் போய் உட்கார்ந்தது. மரம் புளகாங்கிதமடைந்தது. அது கிளியிடம்,
“ ஆகா ஒரு கிளியின் தொடுகை எவ்வளவு சுகம் என்று எனக்கு இப்போது தான் புரிந்தது.. மிக்க நன்றி நண்பா..”
கிளி தூரமாய் பார்த்து எதையோ நினைத்து மௌனமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு சொன்னது,
“ இனிமேல் நாம் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம்.. நான் உன்னுடைய கிளையில் தங்கியிருந்து உனக்காகப் பாடுவேன்..”
மரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. மரம் கேட்டது,
“ நீ வடக்கேயிருந்து தானே வருகிறாய்? உன்னுடைய நாட்டில் குளிர்காலம் கழிந்த பிறகு நீ உன்னுடைய கூட்டத்திடம் திரும்பிப் போய்விடுவாய் இல்லையா? “
“ ஓ “
கிளி வேறு வழியின்றி சொன்னது,
“ எனக்கு யாருமில்லை.. அப்பாவோ அம்மாவோ கூடப்பிறந்தவர்களோ, ஒருவருமில்லை. அதனால் இங்கே உன்னோடு தங்கி இருப்பதில் ஒரு பிரச்னையுமில்லை..”
அப்போது மரத்தின் தொண்டை தழுதழுத்தது.
“ ஒத்தையில் இருப்பதின் துயரத்தை என்னைப் போல யாருக்குத் தெரியும்? ஆனாலும் நண்பா, நீ திரும்பிப் போகத்தான் வேண்டும்.. அதுவரை இங்கே தங்கியிருந்து எனக்காக பாட்டுகள் பாடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..”
கிளி கண்களை மூடிக்கொண்டு தியானித்தது. பின்னர் மிக மிக இனிய குரலில் கசப்பு மரத்துக்காக பாடத்தொடங்கியது. அத்தனை இனிய ஒரு இசையை அந்தக் காடு அதுவரையும் கேட்டதில்லை. மற்ற மரங்களிலிருந்து சளசளத்துக்கொண்டிருந்த பறவைகள் எல்லாம் சட்டென்று அமைதியாகி விட்டன. அந்த வழியாக பயணம் போன பறவைகளும் அருகில் இருந்த மரங்களில் இறங்கி சிறகுகளை மடக்கி காது கொடுத்தன. சில மிருகங்கள் கூட கசப்பு மரத்தின் கீழே வந்து வாயைத் திறந்து மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. பாட்டுக்காரனான கிளி இதையெல்லாம் அறியாமல் இசை கூட்டி இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தது.
பாட்டு முடிந்தபோது மரம் சொன்னது,
“ என்னுடைய ஆன்மாவில் துளியூண்டு இனிமை கலந்து விட்டதாக தோணுது.. ஒருவேளை உன்னுடைய பாட்டைக் கேட்டு நான் ஒரு கசப்பு மரமாக இல்லாமல் மாறிவிடுவேன் என்று தோணுது..”
நனைந்த கண்களோடு கிளி சொன்னது,
“ அப்படி நடந்தால் நான் தான் அதிக மகிழ்ச்சியடைவேன்..”
கிளி இடையிடையில் எங்கேயோ பறந்து சென்று இரை தேடி விட்டு வேகமாய் அந்தக் கிளைக்குத் திரும்பி வந்தது. அது புதிய புதிய பாட்டுகளை மரத்திற்காக இனிமையினிமையாகப் பாடியது. அதைக் கேட்டு கேட்டு மரத்தின் கசப்பு மாறியது. ஆத்மாவில் தெளிவு உண்டாகியது. ஒரு அதிகாலையில் மரம் வெடித்துச் சிதறிப் பூத்தது. அது ஆனந்தத்துடன் அழைத்துக் கூவியது,
“ ஆகா என்னுடைய கிளைகளில் எல்லாம் பூக்கள் பூத்திருக்கின்றன…”
சோர்ந்து போய் மரக்கிளையில் உட்கார்ந்து கிறங்கிப்போயிருந்த கிளியோடு மரம் சொன்னது,
“ பிரியமுள்ள நண்பா! இந்தப் பூக்கள் அத்தனையும் உனக்குத்தான்..”
திடுக்கிட்டு முழித்த கிளியின் கண்களில் பூக்களின் நிறம் தெரிந்தது. மெல்லிய குரலில், அது சொன்னது,
“ எனக்கு மிகவும் மகிழ்ச்சி! மகிழ்ச்சி! “
அப்போது மரம் சொன்னது
“ நண்பா உன்னுடைய சத்தம் மிகவும் பலகீனமாகி விட்டதே.. கண்டிப்பாக ஏதோ ஒரு துயரம் உன்னை வாட்டுகிறது… நீ என்னுடைய கசப்பை மாற்றியதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.. இனிமேலாவது நீ உன்னுடைய கூட்டத்திற்குத் திரும்பிப்போகணும்..”
கிளி எதுவும் பேசாமல் சிறகுகளை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அப்போது ஆனந்த ஆரவாரத்துடன் ஒரு கிளிக்கூட்டம் வடக்கு நோக்கிப் பறந்து போவதை மரம் பார்த்தது. அது கிளியிடம் சொன்னது,
“ பாரு! உன்னுடைய கூட்டமெல்லாம் வடக்கு நோக்கிப் பறக்கிறாங்க.. போ.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கோ..”
கிளி கொஞ்சமும் உற்சாகமில்லாமல் சொன்னது,
“ அது முதல் கூட்டம்.. இன்னம் கூட்டம் கூட்டமாக வருவார்கள்..”
பூக்களில் உள்ள தேனை எடுக்க வந்த தேனீக்களின் கூட்டத்தின் ரீங்காரத்துக்கு இடையில் இரண்டாவது கிளிக்கூட்டம் வடக்கு நோக்கி பறக்கிற சத்தத்தை மரம் கேட்டது. அது பரிதவிப்புடன், சொன்னது,
“ நண்பா! இதோ இரண்டாவது கூட்டமும் பறந்து போகிறதே! நீ வேகமாக அவங்க பின்னால போ..”
கிளி அமைதியாக தன்னுடைய கூட்டாளிகள் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. அதன் மனதில் என்ன இருக்கிறது என்று மரத்தினால் படிக்க முடியவில்லை. அது கண்ணீரோடு தொடர்ந்து சொன்னது,
“ கஷ்டம்! நீ என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறாய்.. இனியும் நீ இங்கேயிருந்து போகவில்லையென்றால் இந்தக் காடு முழுவதும் என்னைக் குற்றம் சொல்லும்.. என்னுடைய சுயநலத்துக்காக நான் உன்னை இங்கே நிறுத்தியிருக்கிறேன் என்று குற்றம் சொல்லுவார்கள். பாரு! இந்தப் பூக்களெல்லாம் முதிர்ந்து காய்களாகும்..பின்னர் அவையெல்லாம் பழுக்கும்.. அதையெல்லாம் சாப்பிட ஏராளமான பறவைகள் வந்து சேரும். ஆனால் உனக்காக என்னுடைய கிளையில் நான் ஒரு பழத்தை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்..”
அப்போது மூன்றாவது கிளிக்கூட்டம் பறந்து செல்கிற சத்தம் மரத்தின் காதுகளில் வந்து மோதியது.
“ ஹா ஒருவேளை இதுவே கடைசிக் கூட்டமாக இருக்கலாம் பிரியமுள்ள நண்பா! இன்னமும் அசமந்தமாக இருக்காதே.. போ..வேகமாகப் போ..”
அப்போதும் கிளி அசையாமல் இருப்பதைப் பார்த்து விசும்பி அழுதது.
“ மற்றவர்களுக்காக வாழ்வதில் உள்ள மகிழ்ச்சியை நீ தானே எனக்குச் சொல்லித் தந்தாய்.. அப்படின்னா இப்போ என்னுடைய சங்கடத்தினால் இந்தப் பூக்கள் எல்லாம் உதிர்ந்து விடும்.. அப்போது எப்படி என்னால் பறவைக்கூட்டத்துக்கு உணவு கொடுக்க முடியும்? “
கிளி மரக்கிளையில் உருகிப்போய் நின்றது. பிறகு சிறகுகளை மெல்ல விரித்தது. வானத்தில் குதிப்பதற்கு முன்னால் மரத்தை ஒரு தடவை சுற்றி வந்தது. பலகீனமாக இருந்தாலும் இனிமையான குரலில் மரத்துக்கு விடை கொடுத்து மறைந்து போனது.
மரத்தில் காய்களெல்லாம் முதிர்ந்து பழுத்து விட்டன. மற்ற எந்தப் பழத்திலுமில்லாத இனிமை கொண்ட பழங்களைச் சாப்பிட காடான காடுகளிலிருந்து பறவைகள் பறந்து வந்தன. மரம் மகிழ்ச்சியோடு கிளைகளை தாழ்த்தி அவர்களை வரவேற்றது. ஆனாலும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு பழத்தை தன்னுடைய இதயத்துடன் சேர்த்து பாதுகாத்து வைத்திருந்தது.
ஆனால், அந்த பாட்டுக்காரக்கிளி பின்னர் ஒருபோதும் வரவில்லை. அதை நினைத்து வருந்திய மரத்திடம் மற்ற பறவைகள் ,
“ அந்தக்கிளி கண்டிப்பாக வேறு ஏதாவது மரத்தின் கசப்பை மாற்றப் போயிருக்கும்..” என்று சொல்லின.
நன்றி - மாயாபஜார்

Wednesday 30 October 2019

விளையாட்டுத்தோழன்


விளையாட்டுத்தோழன்


உதயசங்கர்
சசிக்குப் போரடித்தது. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. அம்மா இன்னும் அலுவலகம் முடிந்து வரவில்லை. அப்பாவும் வெளியூர் போய் இருக்கிறார். வழக்கமாகவே இரண்டு பேரும் வீட்டுக்கு வர மாலை ஆறு மணிக்கு மேலாகி விடும். ஐந்தாவது வகுப்பு படிக்கும் சசி பள்ளிக்கூடம் விட்டதும் பேருந்தில் வீட்டுக்கு வந்து அவனிடம் இருக்கும் இன்னொரு சாவியால் வீட்டைத்திறந்து உள்ளே போய் பூட்டிக் கொள்வான். பையைத் தூக்கி வீசி விட்டு ஃபிரிட்ஜைத் திறந்து ஐஸ்கிரீமையோ, சிப்ஸ் பாக்கெட்டையோ எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவான்.
அவன் வீட்டுக்குப் பின்னால் உள்ள தெருவில் பையன்கள் விளையாடும் சத்தம் கேட்கும். அவ்வப்போது அந்த சத்தத்தை வைத்து கிரிக்கெட், புட்பால், கபடி, எறிபந்து, கிட்டிப்புள், என்று தெரிந்து கொள்வான். இந்த விளையாட்டுகளை அவன் வேடிக்கை பார்த்திருக்கிறான். அவ்வளவுதான். அவன் விளையாண்டதில்லை. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மாவிடம் அனுமதி கேட்பான். அவனுடைய உடல்நலத்தைப் பற்றி, தெருப்பையன்களின் சேட்டைகளைப் பற்றி பேசி
“ வேண்டாம் சசி.. நீ வீட்டிலேயே அப்பா கூட விளையாடு..” என்று முடித்து விடுவாள். அப்பா ஒருநாளும் விளையாண்டதில்லை. அதனால் கேட்பதை சசி விட்டு விட்டான்.
அம்மாவும் அப்பாவும் வரும்வரை சசி கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருப்பான். இல்லையென்றால் தொலைக்காட்சியில் போகோ, கார்ட்டூன் நெட் ஓர்க், சுட்டி, டிவி என்று ஏதாவது ஒன்றில் அனிமேஷன் படம் பார்த்துக் கொண்டிருப்பான்.
இன்றும் அப்படித்தான் கம்ப்யூட்டரில் கார் ரேஸ் விளையாடினான். எவ்வளவு ஒழுங்காக ஓட்டிச் சென்றாலும் இரண்டு முறையும் அவனால் வெற்றி பெறமுடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்து விட்டது. அடுத்தமுறை காரை பயங்கர வேகத்தில் ஓட்டினான். பிளாட்பாரத்தில் ஏற்றினான். விளக்குக்கம்பங்களைச் சாய்த்தான். சாலையில் குறுக்கே போகிறவர்களின் மீது காரை வைத்து மோதினான். அவன் வெற்றி பெறும்வரை இதையே திரும்பத்திரும்பச் செய்தான். வெற்றி பெற்றதும் அந்த விளையாட்டு சலித்து விட்டது.
தீவிரவாதிகளை வேட்டையாடும் விளையாட்டிலும் அப்படித்தான். தீவிரவாதிகளை மட்டுமல்ல சாதாரண மக்களையும், வீடுகளையும் சுட்டான். தீவிரவாதிகளை எல்லாம் சுட்டபிறகு தான் அவனுடைய வேகம் அடங்கியது. தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப பார்த்த அனிமேஷன் தொடர்களே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. எழுந்து போய் கம்பிக்கதவின் வழியாக வெளியே பார்த்தான். வாசல் கதவு ஆடிக்கொண்டிருந்தது. யாராவது வந்திருப்பார்களோ?
ஒரு அணில் அந்தக் கதவின் மீது ஏறி ஓடியது. கதவு ஆடியது. பின்னால் அதை விரட்டி வந்த காகம் கதவில் உட்கார்ந்தது. கதவு ஆடியது. சசிக்குச் சிரிப்பு வந்தது. அப்படியே கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தான். வீட்டுக்குள் திரும்புகிற சமயம்,
“ சசி! “ என்று ஒரு பையனின் குரல் கேட்டது. சசி பார்த்தான். வாசலில் ஒரு பையன் அவன் வயது தான் இருக்கும். நின்று கொண்டிருந்தான். ஒல்லியாக இருந்தான். அவனுடைய கைகள் கதவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தன. விளையாடிக்கொண்டிருந்த பையன் விளையாட்டைப் பாதியில் விட்டு விட்டு வந்த மாதிரி இருந்தான்.
“ சசி விளையாட வர்றியா? “ என்று கேட்டான் அந்தப்பையன்.
“ அம்மா வெளியே போய் விளையாடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..”
“ சரி. வீட்டுக்குள்ளே விளையாடுவோம்..”
சசி யோசித்தான். அந்தப் பையனை வீட்டுக்குள்ளே கூப்பிடவா வேண்டாமா? அம்மா என்ன சொல்வாள்? அப்பா திட்டுவாரா? அந்தப் பையனை அவன் பார்த்தது கூட இல்லை. அந்தப் பையனை மட்டுமில்லை. அவன் வகுப்பில் படிக்கும் பையன்களைத் தவிர வேறு யாரையும் அவனுக்குத் தெரியாது. கொஞ்சநேரம் அப்படியே நின்று கொண்டிருந்தவன் திரும்பி உள்ளே போய் சாவியை எடுக்கப்போனான். சாவியை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தப்பையன் வீட்டுக்குள் இருந்தான்.
“ எப்படி வந்தே? “ என்று கேட்க நினைப்பதற்குள் அவன்
“ எங்கேன்னாலும் நான் வந்துருவேன்.. குமாரா கொக்கா? சரி கண்ணாமூச்சி விளையாடலாமா? செஸ் விளையாடலாமா? கேரம் விளையாடலாமா? “
என்று அடுக்கினான். சசி ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை தெரிந்த மாதிரியும் இருந்தது. தெரியாத மாதிரியும் இருந்தது.
குமாரும் சசியும் கண்ணாமூச்சி விளையாடினார்கள். குமார் சசியைச் சுலபமாகக் கண்டுபிடித்தான். ஆனால் சசியால் அவனுடைய வீட்டில் ஒளிந்திருந்த குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சசியின் முகம் வாடுகிற மாதிரி இருக்கும்போதெல்லாம் குமாரே முன்னால் வந்து அவுட்டாகி விடுவான்.
கேரம் விளையாண்டார்கள். அதில் சசி தான் ஜெயித்துக் கொண்டேயிருந்தான். ஒரு தடவை கூட குமாரால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் குமார் அசராமல்
“ அடுத்த ஆட்டம் பாரேன்.. நான் தான் ஜெயிக்கிறேன்.. “ என்று சொல்லுவான். அப்படித்தான் செஸ்ஸிலும். குமார் ஒரு தடவை செக்மேட் வைத்தால் சசி ஒரு தடவை செக்மேட் வைப்பான். கலகலவென பேசிக்கொண்டேயிருந்தான் குமார். சசி கெக்கேபிக்கே என்று சிரித்துக் கொண்டேயிருந்தான். அதுவும் அவனுடைய பள்ளிக்கூடத்தில் நடந்த காமெடிகள்! அப்பப்பா?
சசிக்கு மனதும் உடலும் மிதந்தது. அவன் குமாரிடம்,
“ தினமும் நீ வா! நாம விளையாடலாம்..” என்றான். குமார் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,
“ உங்க அப்பா அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாங்களா? “ என்று கேட்டான். அதைக்கேட்டதும் சசிக்கு அப்பா அம்மா ஞாபகம் வந்து விட்டது.
வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சசிக்கு பயம் வந்து விட்டது. குமாரை வீட்டுக்குள் கூட்டி வந்து விளையாடியதற்கு அம்மா திட்டுவார்களோ என்று யோசித்தான். பூட்டிய கதவைத் திறப்பதற்கு சாவியை எடுத்துக் கொண்டு ஓடினான்.
அம்மா உள்ளே வந்ததும் சசி,
“ அம்மா.. ஒரு விஷயம் சொல்வேன்.. நீங்க திட்டக்கூடாது..”
“ என்னடா செல்லம்! “ என்று சொல்லியபடியே அம்மா ஹாலுக்கு வந்தாள். அவள் பின்னாலே வந்த சசிக்கு ஆச்சரியமாக இருந்தது.
குமாரைக் காணவில்லை. அவன் அடுக்களை, படுக்கையறை, சாமான்கள் அறை, கழிப்பறை, என்று எல்லா இடங்களிலும் போய் பார்த்து விட்டு வந்தான். ஒவ்வொரு இடத்திலும் போய் குமார் குமார் என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.
குமாரைக் காணவில்லை. எப்படிப் போயிருப்பான்?
அம்மாவின் குரல்,
“ என்ன சேட்டை பண்ணினே! நான் திட்டமாட்டேன்.. சொல்லு..” அவன் காதுகளில் விழுந்தது. அவன் சிரித்துக் கொண்டே,
“ சாக்லேட் ஐஸ்கிரிமைத் தின்னுட்டேன்..” என்று சிரித்தான். அம்மாவும் சிரித்துக் கொண்டே,
“ உனக்குத் தானடா அது..” என்று சொன்னாள். காலையில் பள்ளிக்கூடப்பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, தோளில் பையுடன் குமார் சாலையில் போய்க்கொண்டிருந்தான்.
சசி அவனைப் பார்த்து, “ குமார்..” என்று கத்தினான். குமார் திரும்பிப்பார்க்காமல் அவன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.
 சசி அம்மாவிடம் எப்படியாவது கேட்டு இனிமேல் வெளியில் போய் பையன்களோடு சேர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்தான்.

நன்றி - வண்ணக்கதிர்






Monday 28 October 2019

மாயாவின் பொம்மை


மாயாவின் பொம்மை

உதயசங்கர்
மாயாவின் கையில் எப்போதும் அந்த பொம்மை இருந்தது. அழகான மரப்பொம்மை. போனமாதம் அவள் அப்பா, அம்மாவுடன் டெல்லிக்குச் சுற்றுலா போயிருந்தாள். கன்னோட்பிளேஸ் என்ற இடத்தில் இருந்த கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் அந்தப் பொம்மையைப் பார்த்தாள். பார்த்தவுடன் அந்தப் பொம்மையை மாயாவுக்குப் பிடித்து விட்டது. அது ஒரு ஆதிவாசிப்பெண்ணின் பொம்மை. கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை, என்று எல்லா வண்ணங்களும் அதன் முகத்தில் பூசப்பட்டிருந்தது. அகன்று விரிந்த வெள்ளைக்கண்களில் கருவிழி நேரில் பார்ப்பதைப் போல இருந்தது. கண்ணாடித்துண்டுகள் பதித்த ஆடை அணிந்த அந்தப்பொம்மை மாயாவுக்கு மிகவும் பிடித்து விட்டது.
இந்த ஆண்டு பள்ளியிறுதி வகுப்பு போகிறாள் மாயா.  பள்ளிக்கூடம் போய்வரும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் மாயா அந்தப்பொம்மையைத் தூக்கிக் கொண்டு அலைந்தாள். அதைக் குளிப்பாட்டினாள். அதற்கு ஒப்பனை செய்தாள். சோறு ஊட்டுவதாகப் பாவனை செய்தாள். எப்போதும் அந்தப் பொம்மையுடன் பேசிக்கொண்டிருந்தாள். படுக்கும்போதும் பொம்மையை அருகில் படுக்கவைத்துக் கொண்டாள்.
ஒரு நாள் இரவில் மாயா கழிப்பறை போவதற்காக எழுந்தபோது லேசான அழுகைச் சத்தம் கேட்டது. அவள் விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சத்தம் எதுவும் இல்லை. கழிப்பறை போய்விட்டு வந்து படுத்தாள். உறங்கி விட்டாள். காலையில் அம்மாவிடம்,
“ அம்மா ராத்திரி யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சிம்மா.. எந்திரிச்சி லைட்டைப் போட்டுப் பார்த்தேன்.. ஒண்ணும் கேட்கலை..” என்றாள். அம்மா சிரித்துக் கொண்டே
“ ஏதாவது கனவு கண்டிருப்பேம்மா.” என்று சொன்னார்கள். மாயாவும் அப்படித்தான் நினைத்தாள். அப்புறம் இரண்டு நாட்கள் கழிந்தது. அன்று பௌணர்மி. முழுநிலா ஒளி வீசிக்கொண்டிருந்தது. அன்று இரவில் மாயாவின் காதுக்கருகில் யாரோ சிரித்ததைப் போலிருந்தது. மாயா கண் விழித்தாள். அருகில் படுக்கவைத்திருந்த அந்தப்பொம்மையைக் காணோம். விளக்கைப் போட்டு கட்டிலுக்கடியில் தேடினாள். மேசையில் தேடினாள். அவளுடைய பீரோவில் தேடினாள். அவளுடைய பையில் தேடினாள். எங்கும் இல்லை. தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டேயிருந்தாள். அப்படி யோசிக்கும்போது வேறெங்கும் போகவில்லை. அந்தப்பொம்மை சன்னலில் நின்று வெளியே பௌணர்மி நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்தாள். அப்படியே தூங்கி விட்டாள்.
என்ன ஆச்சரியம்! காலையில் முழித்துப் பார்க்கிறாள். பக்கத்தில் கிடக்கிறது அந்தப்பொம்மை. கையில் அந்தப்பொம்மையை எடுத்து உற்றுக்கவனித்தாள். அந்தப் பொம்மையின் ஆடையில் கண்ணாடித்துண்டுகளுக்கு நடுவே பச்சை நிறத்தில் செடிகளும் கொடிகளும் மரங்களும் வரையப்பட்டிருந்தன. மாயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இன்னொரு நாள் நடுஇரவில் மழை பெய்தது. அப்போது மாயா எழுந்திரிக்கவில்லை. ஆனால் காலையில் பார்த்தால் அந்தப்பொம்மையின் ஆடை நனைந்திருந்தது.
மாயாவின் வீடு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. சுற்றிலும் மரங்களோ, செடிகளோ, இல்லை. கீழே இருந்த ஒரு பூங்காவில் மட்டுமே குரோட்டன்ஸ் செடிகளைப் பார்க்கலாம். மாயா அந்தப் பொம்மையுடன் பூங்காவுக்குப் போய் வரும் நாளில் அழுகையோ, சிரிப்போ, கேட்பதில்லை. மாயா அப்பாவிடம் சொல்லி சிறு தொட்டிகளில் செடிகளை வாங்கி வைத்தாள். அவளுடைய அறையில் ஓரமாக வெளிச்சம் படுகிற இடத்தில் அந்தச் செடிகளை வைத்துத் தண்ணீர் விட்டாள்.
அடுக்கு மாடிக்குடியிருப்பின் கீழே அப்பாவிடம் சொல்லி வேம்பு, ஆல், அரசு, என்று விருட்சங்களின் கன்றுகளை வைக்கச் சொன்னாள். அந்தக் கன்றுகளை ஊன்றி வைத்த அன்று இரவு மாயா ஒரு கனவு கண்டாள். அந்தக் கனவில் அந்த ஆதிவாசிப்பொம்மை வந்தது. அவளுடைய அம்மாவைப் போலவே முகம் இருந்தது.
“ என் அருமை மக்களே! இப்பத்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு.. இயற்கை இல்லாம மனிதர்கள் இல்லை.. நானும் ஒரு விருட்சம் தான்.. அருணாச்சலப்பிரதேசக்காட்டில் நூறாண்டுகளுக்கு மேல் சுதந்திரமாக இருந்தேன்.. எங்கோ அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக என்னை வெட்டினார்கள்… அன்றிலிருந்து தினம் அழுது கொண்டேயிருப்பேன்… இனிமேல் எனக்குக் கவலையில்லை.. மகளே! நீ செய்த காரியத்தை ஒவ்வொரு மனிதரும் தினமும் செய்தால் போதும்… இயற்கை அழியாது… மனிதர்களும் அழிய மாட்டார்கள்..”
என்று குனிந்து மாயாவின் நெற்றியில் முத்தமிட்டது. திடுக்கிட்டு முழித்த மாயா அருகில் பார்த்தாள் அந்த ஆதிவாசிப்பெண் பொம்மை அப்படியே கிடந்தது. மாயா அவளுடைய நெற்றியைத் தொட்டாள்.
முத்தமிட்ட ஈரம் கையில் பட்டது.

நன்றி - பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ்




Saturday 26 October 2019

மாயச்சிறகு


மாயச்சிறகு

உதயசங்கர்

ரொம்ப நாளாக அறிவழகனுக்கு பறக்கவேண்டும் என்று ஆசை. பாலர் வகுப்பு படிக்கும்போதே பறந்து கொண்டிருக்கும் பறவைகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பான். கைகளைத் தட்டிச் சிரிப்பான். அவனுடைய வீட்டுக்கு அருகில் இருந்த வேப்பமரத்தில் உட்கார்ந்திருக்கும் காகங்களை வேடிக்கை பார்ப்பான். அவை சிறகுகள் விரித்துப் பறப்பதையும் அழகாக கிளைகளில் வந்து அமர்வதையும் பார்த்துக் கொண்டேயிருப்பான்.
அவன் சாப்பிடும் தின்பண்டங்களை கீழே தரையில் வீசுவான். சில காகங்கள் மட்டும் கா கா எனக் கரைந்து கொண்டே வந்து இரை எடுக்கும்.  சில காகங்கள் சந்தேகத்துடன் தலையைச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே மரக்கிளையிலே இருக்கும். அவன் தினம் உணவு போட்டுப் போட்டு காக்கைகளைப் பழக்கம் பிடித்துக் கொண்டான். இப்போது அவன் வீட்டை விட்டு வெளியில் வந்தால் போதும் உடனே காகங்கள் கரைய ஆரம்பித்து விடும்.
கீழே வந்து இரை எடுத்த காகங்களில் ஒரு வயதான காகம் இருந்தது. உடம்பிலும், சிறகுகளிலும் உள்ள இறகுகள் உதிர்ந்து லேசாகத் தள்ளாடியபடியே நடக்கும். மேல் அலகு முனையில் உடைந்திருந்தது. ஒரு கண்ணால் மட்டுமே பார்த்தது. அது மரத்திலிருந்து கீழே மெல்லப் பறந்து வரும். அது இறங்கி விட்டால் மற்ற காகங்கள் ஓரமாய் ஒதுங்கி நின்று கா கா கா கா என்று கரைந்து கொண்டிருக்கும்.
ஒரு நாள் அந்த வயதான காகம் அறிவழகனிடம் பேசியது.
‘ கா கா கா ஏன் தம்பி தெனமும் எங்களுக்கு தீனி போடறே..’
இது தான் சமயம் என்று அறிவழகன் அந்தக் காகத்திடம்,
’ தாத்தா.. தாத்தா… எனக்கும் உங்கள மாதிரி பறக்க ஆசையா இருக்கு.. பறக்கறது எப்படி இருக்கும் தாத்தா..’
என்று கேட்டான். உடனே தலையைச் சாய்த்து அவனைப் பார்த்தது தாத்தாக்காகம். மெல்ல இரண்டு எட்டு எடுத்து வைத்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தது.
‘ கா கா கா பறக்கறது எப்படி இருக்கும்? ம்ம் நல்லா இருக்கும் காத்துல லேசான மாதிரி உடம்பே இல்லாத மாதிரி இருக்கும். கீழே இருக்கிற எல்லாத்தையும் பாக்கலாம் .காத்து நம் உடம்புவழியா போகும்போது நாமே காத்தானது மாதிரி.. ம்ம் பறக்கற மாதிரியே இருக்காது… மேகங்கள் உரசிக்கிட்டு போகும். அப்புறம் அப்புறம் கீழே சின்னப்பசங்க கையில் வைச்சிருக்கிற வடை கூட தெரியும்.. தனியாச் சுத்தற கோழிக்குஞ்சு தெரியும்…. ம்ம்ம் அது ஒரு காலம்.. எனக்கு இப்ப வயசாயிருச்சு.. ரொம்ப உயரத்தில பறக்க முடியல… ‘ என்று சொல்லி மூச்சு வாங்கியது.  தாத்தாக்காகம் சொல்வதை ஆ வென வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த அறிவழகன்,
‘ எனக்கும் பறக்கணும்னு ஆசையா இருக்கு தாத்தா.. எப்படிப் பறக்கணும்னு சொல்லித் தாங்க தாத்தா…’
என்று கெஞ்சும் குரலில் கேட்டான். அதைக் கேட்ட தாத்தாக்காகம் அவனை தன்னுடைய ஒரு கண்ணால் உற்றுப் பார்த்தது. அப்புறம் உடைந்த அலகால் சிறகுகளைக் கோதி விட்டது. காலால் தலையைச் சொறிந்தது. பின்னர் அறிவழகனைப் பார்த்து,
‘ கா கா கா எனக்குத் தெரியலையே தம்பி..’ என்று சொன்னது.
‘ தெரியாமலா நீங்க பறக்கிறீங்க…’
‘ கா கா கா நாங்க பொறந்ததிலிருந்தே பறக்கிறோம்… எங்களுக்கு ரெக்கை இருக்கு.. உனக்கு ரெக்கை இருக்கா…’ என்று தாத்தாக்காகம் கேட்டது. பின்னர் அவனைச் சுற்றி மெல்ல சிறகுகள் அடித்துப் பறந்தது. அறிவழகன் முகம் வாடியதைப் பார்த்து எங்கே நமக்கு லகுவாகக் கிடைக்கிற தீனி கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில்,
‘ கா  கா  க்ர்ர்ர்ர்ர் பொறு..பொறு..ரெக்கை இல்லாம பறக்க முடியுமான்னு என்னோட நண்பன் கிட்ட கேட்டுட்டு வாரேன்.. அப்புறம்.. எனக்கு இட்லி, தோசை, மாதிரி தீனி கொண்டுட்டு வா.. சேவு.. மிக்சர், பிஸ்கட் எல்லாம் சின்னப்பசங்களுக்கு கொடு… வயசாருச்சில்ல..’
‘ சரி தாத்தா..’ என்று உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே அறிவழகன் போனான். மறுநாள் தாத்தாக்காகத்துக்குத் தனியாக இட்லித் துண்டுகளைப் போட்டான். தாத்தாக்காகம் டபக் டபக்கென்று விழுங்கியது. வயிறு நிறைந்ததும்,
‘ கா கா கா… யப்பா வயிறு நிறைஞ்சிருப்பா.. க்ர்ர் ‘ என்று ஏப்பம் விட்டது. அறிவழகன் ஆவலுடன் தாத்தாக்காகத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல தொண்டையைச் செருமிக் கொண்டு,
‘ தம்பி நான் என் நண்பனிடம் கேட்டேன்.. அவன் என்ன சொல்றான்னா ரெக்கை இல்லாம யாராலும் பறக்க முடியாது.. ஆனா பறக்கிறது ஒரு செயல் மட்டுமில்லை.. அது ஒரு உணர்வு.. அதைப் பறக்காமலே கூட பெற முடியும்…அப்படிங்கிறான்..’
அறிவழகன் ஒண்ணும் புரியாமல் முழித்தான். அதைப் பார்த்த தாத்தாக்காகம்,
‘ ஒண்ணும் புரியலல்ல.. எனக்கும் தான் புரியல…கிறுக்குப்பய அவன் இப்படித்தான் ஏதாச்சும் உளறிக்கிட்டே இருப்பான்.. நான் கழுகண்ணன்கிட்ட கேக்கிறேன்.. அவன் தான் சூரியன்கிட்டேயே பறந்து போவான்.. நாளைக்கு தோசை கொண்டுட்டு வர்றியா…’
என்று சொல்லி விட்டு மெல்ல பறந்து வேப்பமரத்தில் கீழே இருந்த கிளையில் போய் உட்கார்ந்தது. அறிவழகன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டே பள்ளிக்கூடத்துக்குப் போனான்.
போகும்வழியில் இருந்த சாக்கடைக்குள் இருந்து,
‘ ம்ஞீம்…ம்ம்ஞீம்… ‘ என்று சத்தம் கேட்டது. அறிவழகன் எட்டிப் பார்த்தான். கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்று நடக்க முடியாமல் சாக்கடையில் புரண்டு கொண்டிருந்தது. கன்னங்கரேலென்று உடம்பில் சாக்கடை நீர்வழிய பார்க்கப்பாவமாக இருந்தது. அப்படியே விட்டால் அது செத்துப்போய் விடும். அறிவழகன் தோளில் இருந்த புத்தகப்பையைக் கீழே வைத்தான். குனிந்து அந்த நாய்க்குட்டியை எடுத்தான். நாய்க்குட்டி ஈனக்குரலில் அழுதது. அவன் கைகளில் சாக்கடை ஒட்டிக் கொண்டது. அறிவழகன் தூக்கியவுடன் பயத்தில் உடம்பை உதறியது. சட்டையெல்லாம் சாக்கடைத்துளிகள் தெறித்தன. ஆனால் அறிவழகன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. சுற்றிலும் பார்த்தான். கொஞ்சதூரத்தில் ஒரு அடி பைப்பு இருந்தது. தண்ணீர் அடித்து நாய்க்குட்டியைக் கழுவினான். வெள்ளை வெளேரென நாய்க்குட்டி துலங்கியது. ரொம்பநேரம் தண்ணீரில் இருந்த்தால் குளிரில் அதன் உடல் நடுங்கியது. அவனுடைய டிராயர்பையில் வைத்திருந்த கைக்குட்டையால் அதன் உடலைத் துடைத்தான். அந்த வெள்ளை நாய்க்குட்டி தன்னுடைய குட்டி நாக்கால் அவனுடைய கையை நக்கியது.
அவன் திரும்பி வேகமாக வீட்டுக்கு ஓடினான். ஒரு சணல்சாக்கை எடுத்து விரித்து அதில் படுக்கவைத்தான். அம்மாவிடம் சொல்லி ஒரு சிறு கிண்ணத்தில் பால் ஊற்றி நாய்க்குட்டியின் முன்னால் வைத்தான். நாய்க்குட்டி சளப் சளப் என்று பாலை நக்கியது. அம்மாவிடம் அதைப் பார்த்துக் கொள்ளச் சொன்னான். வேகமாக சீருடை மாற்றினான். அம்மா அவனுடைய செய்கைகளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விட்டது. ஓடிப்போனால் தான் நேரத்துக்குப் போகமுடியும்.
அவன் வீட்டை விட்டு வெளியே வந்து ஓட கால்களை எடுத்தான். அவன் முதுகில் ரெக்கைகள் முளைத்திருந்தன. மெல்ல வானத்தில் ஏறி அவன் பறந்து போனான். வேப்பமரத்தில் மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என்று அண்ணாந்து யோசித்துக் கொண்டிருந்த தாத்தாக்காகம் அறிவழகன் பறப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
நன்றி - பொம்மி தீபாவளி மலர்




Thursday 24 October 2019

கடவுளின் காதுகள்


கடவுளின் காதுகள்

உதயசங்கர்
அம்மா சுத்தமாய் தூங்குவதில்லை. விடிய விடிய முழித்துக்கொண்டிருந்தாள். பகலில் உட்கார்ந்தபடியே கோழித்தூக்கம் போட்டாள். அவ்வளவு தான். மற்றபடி அன்றாட நடைமுறைப் பழக்கவழக்கங்களில் எந்த மாற்றமுமில்லை. ஆனாலும் எனக்குப் பயமாக இருந்தது. தொடர்ந்து தூங்காமல் இருந்தால் மனநிலையின் சமநிலை மாறிவிடும் ஆபத்து இருப்பதாகப் படித்திருந்த செய்திகள் சொல்லியிருந்தன. அப்படி எதுவும் அம்மாவின் மனதில் ஏதும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கிறதா. நான் அம்மாவைப் பார்த்தேன். அவள் பூஜை அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் அகல்விளக்கின் வெளிச்சத்தில் சாந்தமாக சுவரில் மாட்டப்பட்டிருந்த சாமிப்படங்களைப் பார்த்தபடி படுத்திருந்தாள். அந்த மங்கலான மஞ்சள் விளக்கின் ஒளி அவளுடைய முகத்தில் படர்ந்து தனியழகைக் கொடுத்தது. அம்மாவின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்ததா அல்லது ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருந்தாளா என்று தெரியவில்லை. நான் ஹாலில் உள்ள விளக்கைப் போட்டு என்னுடைய லேப்டாப்பை பார்க்கிற சாக்கில் அம்மாவைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.
போனவாரம் தான் என்னுடைய தங்கை சாலாவின் வீட்டிலிருந்து அம்மாவை அழைத்து வந்திருந்தேன். அப்பா இறந்ததிலிருந்து அவளாக விரும்பித்தான் சாலாவின் வீட்டுக்குப் போனாள். அதோடு என்னுடைய இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் அவளைக் கவனித்துக்கொள்வதில் ஆவலாதிகள் வரலாம் என்று நினைத்தேன். அம்மா சாலா வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னதும் உண்மையில் நானும் ஏஞ்சலும் நிம்மதிப்பெருமூச்சு விட்டோம். போனவாரம் சாலா பேசியபிறகு உடனே பதில் சொல்லவில்லை. ஏஞ்சல் அம்மாவை கூட வைத்துக்கொள்ளலாம் என்று தான் ஒரு இரவுக்கூடலில் சொன்னாள். அதைச் சொல்வதற்கு நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டாள். ஏன் என்று எனக்குத்தெரியும். நானும் ஏஞ்சலும் காதல் திருமணம் செய்ததை அப்பாவும் அம்மாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பா அவருடைய முகத்திலேயே முழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். நான் காதலித்துத் திருமணம் முடித்ததைவிட நான் மதம் மாறி வேங்கடேஷ் என்ற என்னுடைய பெயரை ஜோசப் என்று மாற்றியதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காதலின் காய்ச்சலில் எந்த மருந்தையும் தின்பதற்குத் தயாராக இருந்த நான் சாதி, மதத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
எங்கள் திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து அப்பா இறந்த அன்று தான் என்னுடைய வீட்டில் நான் கால் வைத்தேன். அப்பா கண்ணாடிப்பெட்டிக்குள் தன்னுடைய பிடிவாதமான இறுகிய முகபாவத்துடன் என் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியபடி கிடந்தார். அவருக்கு குடும்பத்தில் யார் மீதும் திருப்தியில்லை. நான் எஞ்சினீயரிங்கில் கம்ப்யூட்டர் சையின்ஸ் எடுத்துப் படித்ததில் திருப்தியில்லை. படித்து முடித்து பிளேஸ்மெண்ட் ஆன கம்பெனியில் திருப்தியில்லை. எனக்குக் கிடைத்த சம்பளத்தில் திருப்தியில்லை. நான் மாதாமாதம் வீட்டுக்கு அனுப்பிய பணத்தில் திருப்தியில்லை. என் மீது என்றில்லை. அவருக்கு யார் மீதும் திருப்தியில்லை. சாலா விஷயத்திலும் அப்படித்தான். நான் அவருடைய அதிருப்தியான முகத்தைப் பார்த்து வருந்துவேன். எப்படியாவது ஒரு விஷயத்திலாவது அவரைத் திருப்தியடைய வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. ஆனால் சாலா கவலையே படமாட்டாள். அவள் வெடுக் வெடுக்கென்று பேசிவிடுவாள். இப்போதும் அப்படித்தான் கண்ணாடிப்பெட்டிக்குள் இந்த உலகத்தின் மீதே அதிருப்தியுடன் படுத்திருந்தார். அருகில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த அம்மாவின் கண்களில் ஈரப்பசையே இல்லை. உலர்ந்த கண்களுடன் அப்பாவின் முகத்தைப் பார்ப்பதும் உடனே திரும்பிக்கொள்வதுமாக இருந்தாள். ஏன் அப்பா அப்படி இருந்தார் என்று எனக்குப் புரியவில்லை.
அம்மா பேசிக்கொண்டேயிருப்பாள். யாரும் கேட்கிறார்களா? அதற்குப் பதில் சொல்கிறார்களா என்று கவலைப்படமாட்டாள். திருமணத்துக்கு முன்னால் அம்மாவின் குடும்பம் சிவகாசியில் பத்து வீட்டுக் காம்பவுண்டில் இருந்தது. அந்தத்தெருவில் குறைந்தது ஏழெட்டு காம்பவுண்ட் வீடுகள் இருக்கும். எல்லாம் ஒரு தட்டு இரண்டு தட்டு குச்சு வீடுகள். வீட்டில் பாதி தீப்பெட்டிக்கட்டைகளும், குச்சிகளும், தீப்பெட்டி அட்டைகளும், பசைச் சட்டிகளும், அடைந்து கிடக்கும். அம்மா சுப்புலட்சுமியின் வீட்டில் ஒரு கிளி இருந்தது. கிளிக்கு ஒரு பெயரும் இருந்தது. சுப்புவுக்குப் பிடித்த சிவாஜிபடமான பட்டிக்காடா பட்டணமா படத்தில் வருகிற ராக்கு என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. அம்மாவின் அப்பா ராமச்சந்திரன் அதாவது என்னுடைய தாத்தா எம்ஜிஆர் ரசிகர் இல்லை வெறியர். அவர் ஒரு தீப்பெட்டிக்கம்பெனியில் கணக்கப்பிள்ளையாக வேலைபார்த்தார். ஒரு பக்கம் வீட்டுச்சுவரே தெரியாமல் முழுக்க எம்ஜிஆரின் சினிமாப் படங்களாக ஒட்டி வைத்திருப்பார். இன்னொரு பக்கம் அம்மா சிவாஜி படங்களாக ஒட்டி வைத்திருப்பாள். வீட்டின் வெளிப்புறத்தில் அவளுடைய தம்பி ஜெய்குமார் ஜெய்சங்கர் படங்களாக ஒட்டி வைத்திருப்பான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், எல்லோருமே ரத்தக்களறியாக இருப்பார்கள். சுவரில் ஊர்ந்து செல்லும் மூட்டைப்பூச்சிகளை அப்படியே நசுக்கி நசுக்கி எல்லோரும் ரத்தக்காயங்களோடு இருப்பார்கள்.
சுப்புலட்சுமியைப் போல அந்தக்கிளியும் வாயாடி. ஏதாவது பேசிக்கொண்டிருக்கும். அம்மா பேசுவதை அப்படியே திருப்பிச்சொல்லும். அமைதியாக இருந்தால்,
” ஏ.. சுப்பு.. ஏ சுப்பு…” என்று கூப்பிடும். பிள்ளைகள் கேட்பதைபோல
“ கதை சொல்லு.. கதை சொல்லு.. “ என்று கத்தும். .ராத்திரியாகிவிட்டால் காம்பவுண்டுக்கு வெளியே இருக்கும் நடைபாதையில் தான் அந்தக்காம்பவுண்டில் உள்ள மொத்தக் குடும்பமும் கிடக்கும். எல்லோரும் சுப்புலட்சுமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுப்புலட்சுமிக்கு அருகில் ராக்குவும் இருக்கும். அவள் சிவாஜி படங்களின் கதைகளை அதுவும் குறிப்பாக பாசமலர், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி போன்ற படங்களை ஒரு சீன் விடாமல் அப்படியே சொல்லுவாள். கேட்பவர்கள்,
“ சுப்பு.. நீ சொல்றதைக் கேட்டால் சினிமாவே பார்க்க வேண்டாம்…” என்று சொல்லுவார்கள். அவளுடைய கதையைக் கேட்டு கண்னீர் சிந்துபவர்களும் உண்டு. அவ்வளவு தத்ரூபமாகச் சொல்லுவாள். அவ்வப்போது எம்ஜிஆர் படக்கதைகளையும் சொல்லுவாள். ஆனால் கதை சொல்லும்போதே கேலி, கிண்டல், செய்து கொண்டேயிருப்பாள். விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ராமாயாணம், மகாபாரதக் கதைகளையும் சொல்வாள். அவளிடம் பார்ப்பதையும், கேட்பதையும் படிப்பதையும் உள்ளதை விட விரித்துச் சொல்லும் திறமை இருந்தது. பௌர்ணமியில் இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தெருவில் கதாகாலட்சேபம் நடக்கும். சுப்பு தண்ணீர் குடிக்காமல் பேசுவாள். எல்லோருக்கும் வேலை செய்வதே தெரியாது. மூத்திரம் வந்தால்கூட எழுந்து போக மனம் வராமல் உட்கார்ந்து கதை கேட்பார்கள். அவரவர் வேலையை முடித்து விட்டு சுப்புலட்சுமியின் வேலைக்கும் உதவி செய்வார்கள். அந்தக்காம்பவுண்டில் எந்த ஒளிவு மறைவுக்கும் இடமில்லை. எப்போதும் சத்தக்காடாகக் கிடக்கும். சுப்புவின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். யாரிடமாவது பேசிக்கொண்டேயிருப்பாள்.
“ கொஞ்சநேரமாவது வாய் சும்மா இருக்குதான்னு பாரு..” என்று சுப்புவின் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் சொல்வாள். பள்ளியிறுதி வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்கள். ஆனால் சுப்பு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் அந்தக்காம்பவுண்டுக்கு மட்டுமல்ல தெருவுக்கே செல்லப்பிள்ளையாக இருந்தாள். அவளைப் பார்த்துப் பேசாதவர்களோ, அவள் பார்த்துப் பேசாதவர்களோ யாருமே இருக்கமாட்டார்கள். சுப்புவின் பத்தொன்பதாவது வயதில் அவளுடைய அத்தை மகன் மகாலிங்கத்துடன் கலியாணம் முடிந்தது. அவள் சிவகாசியிலிருந்து கோவில்பட்டிக்குக் குடிபெயர்ந்தாள். போகும்போது அந்தக்கிளியையும் கொண்டு போனாள். கிளியைப் பார்த்து அதிருப்தியில் முகம் சுளித்தான்.மகாலிங்கம். அவன் கோவில்பட்டி லாயல்மில்லில் வேலை பார்த்தான். ஷிஃப்ட் வேலை. வேலைக்குப்போன நேரம் போக மற்றநேரங்களில் தூங்கிக் கொண்டேயிருந்தான். அவன் தூங்கும்போது ஏதாவது சத்தம் கேட்டால் பழியாகக் கோபம் வந்துவிடும். அதனால் கிளிக்கூண்டை வீட்டுக்கு வெளியே  இருந்த வேப்பமரத்தில் தொங்கவிட்டாள். ராக்கு ஏதோ காட்டுக்குள் விட்டமாதிரி கூப்பாடு போடும். நல்லவேளை அந்தச் சத்தம் அவனை எழுப்புகிற அளவுக்கு இல்லை. அவன் முழிக்கும் நேரங்களில் சுப்பு பேசினாள். அவன் முகத்தைச் சுளித்தான். பதில் சொல்லவில்லை. காது கேட்காத மாதிரி இருந்தான். அவளைப் பொருட்படுத்தவில்லை. ஒரு நாளைக்கு ஒரு அதிகமாகப் பத்து வார்த்தை பேசினான். அவள் பேச ஆரம்பித்ததும் அவன் தூங்கி விடுவான். சுப்பு ஒருமுறை கேட்டதுக்கு,
“ எனக்குப் பிடிக்கலை.. நீ சளசளன்னு ஓலைப்பாயில நாய் மோண்டமாதிரி பேசுறது பிடிக்கலை.. “ என்றான். ஆனால் அதற்கெல்லாம் சுப்பு அசரவில்லை. அவன் தூங்கும்வரை பேசினாள். பேசாமல் அவளால் இருக்கமுடியாது. அவன் வேலைக்குப் போனபிறகு கிளிக்கூண்டை எடுத்து ராக்குவை வெளியே விடுவாள். ராக்கு அவளுடைய தோளில் உட்கார்ந்து கொள்ளும். அவள் பேசிக்கொண்டேயிருப்பாள். அது ம் கொட்டும். இல்லையென்றால் பேசிக்கொண்டேயிருக்கும் அவள் பின்னாலேயே நடந்து போய்க் கொண்டேயிருக்கும். அவள் இருந்தது தனிவீடென்பதால் பக்கத்தில் இருந்தவர்களே வெகுதூரத்தில் இருந்தார்கள். ஒரு நாள் அவள் அடுக்களையில் பேசிக்கொண்டே வேலை பார்க்கும்போது பின்னாலிருந்த ராக்குவின் ம் கொட்டலைக் கேட்காமல் திரும்பிப்பார்த்தாள். வாசலைத்தாண்டி ஒரு பூனையின் வாயில் ராக்கு தொங்கிக் கொண்டிருந்தது. அவள் பின்னாலேயே ஓடினாள். ஆனால் பூனை ராக்குவின் உயிரற்ற உடலைத் தூக்கிக் கொண்டு ஓடியே போய் விட்டது. அழுதாள். அழுதாள். அப்படி அழுதாள். அப்போதும் மகாலிங்கம் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான். இப்படி ஒரு ஊமைக்கோட்டானுடன் குடும்பம் நடத்த முடியாது என்று அவனோடு கோபித்துக்கொண்டு சிவகாசி போய்விட்டாள். அவன் கூப்பிட வரவில்லை.
திரும்பி வந்த கொஞ்சநாட்களுக்கு அவளும் அவனை மாதிரியே பேசாமல் இருந்து பார்த்தாள். நெஞ்சில் ஏதோ பாரத்தை வைத்த மாதிரியிருந்தது. நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. மறுபடியும் பேச ஆரம்பித்து விட்டாள். அவன் பதில் சொல்வதைப் பற்றிக் கவலைப்படாமல் பேச ஆரம்பித்து விட்டாள். குழந்தைகள் பிறந்தபோது சிலவருடங்களுக்கு குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். திருமணவாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என்றால் அவை தான். குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகும்வரை நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடம் போகத்தொடங்கியவுடன் குழந்தைகளின் பேச்சும் குறைந்து விட்டது. அதோடு வீட்டில் பேச்சு அப்பாவின் தூக்கத்தைக் கலைத்து விடும் என்ற பயமும், சேர்ந்து பேச்சின்றி ஆகி விட்டது. அம்மா என்ன பேசினாலும் அப்பாவைப்போலவே வெங்கடேஷும் சாலாவும் பதில் சொல்வதில்லை.
அப்பா இருந்தவரைக்கும் அவர் பேசுகிறாரோ இல்லையோ அம்மா பேசிக் கொண்டிருப்பாள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு தான் சாலாவின் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அம்மாவுடன் பேச ஆளில்லை. சாலாவின் வீட்டில் பூஜையறைக்குள் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டாள். அதன்பிறகு அம்மா தன்னுடைய வாயை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் அவள் உள்ளுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய நடுங்கும் உதடுகள் காட்டிக்கொடுத்தன. அந்தச் சமயத்தில் தான் அம்மாவின் முகத்திலும் பாதத்திலும் சிறிய வெண்புள்ளிகள் தோன்றியிருக்கின்றன.
சாலா என்னிடம் பேசியபோது சொன்னாள். அம்மாவின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிகிறது. இரவில் பூஜையறைக்குள்ளிருந்து பேசுகிற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவளுடைய கணவன் கேட்டிருக்கிறான். அவன் சாலாவிடம் சொல்லி இரண்டுபேரும் பூஜையறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அம்மா சம்மணம் போட்டு உட்கார்ந்து அங்கேயிருந்த ராமர் பட்டாபிஷேகம், திருச்செந்தூர் முருகன், இருக்கண்குடி மாரியம்மன், அவர்களுடைய குலதெய்வமான நடுக்காட்டு கருப்பசாமி, சித்தி விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, படங்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பேசிக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை.
நான் என்னுடைய வீட்டுக்கு அம்மாவை அழைத்து வருமுன்னால் ஸ்டோர் ரூமாக இருந்த ஒரு அறையை பூஜை அறையாக மாற்றினேன். அம்மாவுக்காக சாமிப்படங்களையும் ஒரு குத்து விளக்கையும், அகல்விளக்குகளையும் வாங்கி வைத்தேன். என்னுடைய வீட்டில் எந்தச் சாமிப்படங்களும் கிடையாது. ஏஞ்சலின் கழுத்தில் தொங்கும் சிலுவையைத் தவிர மத அடையாளங்கள் எதுவும் கிடையாது. நான் நாத்திகன் இல்லை என்றாலும் அனுதினமும் கடவுளரை வணங்குவது தான் ஆத்திகம் என்றால் நான் ஆத்திகனும் இல்லை. வருடத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ சர்ச்சுக்கும், சுற்றுலா சென்றால் அங்கேயிருக்கும் கோயில்களுக்கும் செல்கிற நடைமுறை மனிதன். ஏஞ்சலின் அலுவலகத்துக்கு மூன்று மதங்களின் சாமிகளும் இருக்கிற மாதிரி ஒரு படம் வேண்டும் என்றாள். அதையும் சேர்த்து வாங்கியிருந்தேன்.
அம்மா வீட்டுக்கு வந்ததும் முதல்வேலையாக பூஜையறையை ஒழுங்குபடுத்தினாள். என்றால் நான் மாட்டியிருந்த சாமிகளின் வரிசையை மாற்றினாள். விளக்கு வைத்திருந்த திசையை மாற்றினாள். தரையை மொழுகி கோலம் போட்டாள். ஊதுபத்தி, சாம்பிராணி, சூடன், இவைகளைப் பயன்படுத்தினாள். தோட்டத்தில் இருந்த செவ்வரளிச்செடியிலிருந்து பூக்களைப் பறித்துக் கட்டினாள். என்னிடம் விளக்குத்திரியும் எண்ணெயும் வாங்கி வரச்சொன்னாள். குத்துவிளக்கின் நான்கு திசைகளிலும் திரிகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி தீபங்களை ஏற்றினாள். சாமிப்படங்களுக்கு சந்தனமும் குங்குமமும் வைத்தாள். எல்லாப்படங்களின் தலையிலும் ஒரு செவ்வரளிப்பூவைச் சூட்டினாள். எப்போதும் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. முகத்தில் ஒரு அபூர்வமான திருப்தி இருந்தது. இந்த ஏற்பாட்டில் ஏஞ்சலின் அலுவலகத்துக்கென்று வாங்கியிருந்த மும்மதப்படமும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டது. அம்மாவின் முகத்தில் அந்தப் படங்களைப் பற்றி எந்த உணர்வுமில்லை. அவளுடைய உரையாடலில் யேசுவும், அல்லாவும் சேர்ந்து கொண்டார்கள். நான் அதைக் கழட்டி விடலாம் என்று ஏஞ்சலிடம் சொன்னேன். அவள் ஏற்கனவே அம்மாவின் பக்தி நடவடிக்கைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அம்மா செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் மிகுந்த பவித்திரத்தோடு அனுசரித்தாள். அதனால் அந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை அவள் நிராகரித்தாள். பதிலாக அவளும் பூஜையறையில் நின்று எல்லாசாமிகளையும் கும்பிட ஆரம்பித்தாள்.
என்னுடைய வீட்டுக்கு அம்மா வந்த பிறகு அவளுடன் தினம் கொஞ்சநேரம் செலவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்படியே முயற்சியும் செய்தேன். அம்மாவிடம் பேச முயற்சித்தபோது அம்மா கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னாள். உடனே அந்த இடத்தை விட்டு போகவேண்டும் என்பதைப்போலவோ, விட்டு விட்டுப்போன உரையாடலைத் தொடர வேண்டும் என்ற அவசரத்துடனோ தான் பேசினாள். பலநேரம் இருவருக்குமிடையில் கனத்த மௌனம் உட்கார்ந்திருந்தது. எனக்குச் சலிப்பு வந்தது. அம்மாவை அவள் போக்கில் விட்டு விட்டேன். அம்மாவின் உடலில் வெண்புள்ளிகள் பரவ ஆரம்பித்தன. அம்மா அந்த வெண்புள்ளிகளைக் கண்டுகொள்ளவில்லை. எனக்கு அம்மாவின் கோதுமை நிறம் மாறி சிறுத்தைப்புலி மாதிரி புள்ளிகளுடன் இருக்கிற விநோதமான தோற்றம் ஒவ்வாமலிருந்தது. தோல் நோய் நிபுணரிடம் சென்று காட்டினோம். அவர் வெண்புள்ளி நோயைப் பற்றி ஒரு வகுப்பு எடுத்தார். அம்மா அவர் முகத்தையே பார்க்கவில்லை. அங்கே மாட்டியிருந்த கோகுலகிருஷ்ணன் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
அம்மா மங்கலான அந்த மஞ்சளொளியில் முகம் மலர்ந்து காணப்பட்டாள். அவளுடைய முகம் ஒவ்வொரு சாமியையும் நோக்கித் திரும்பியது. உதடுகளிலிருந்து ஏதேதோ சொற்கள் இடையறாத அருவியைப் போலக் கொட்டிக்கொண்டிருந்தன. என்ன பேசுகிறாள் என்று தெளிவாகவில்லை. அவ்வப்போது ஒரு தியானம் போல கண்களை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பேசுவதற்கிடையில் சிறு இடைவெளி விடுவாள். அந்த இடைவெளிக்கப்புறம் சரிதான் என்பதைப் போல தலையாட்டுவாள். சிலசமயம் புன்முறுவல் பூப்பாள். சிலசமயம் புருவங்களை உயர்த்துவாள். சிலசமயம் முகத்தைச் சுளிப்பாள். அவள் முகத்தின் அபூர்வமான பாவங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமோ தெரியாதோ அம்மா சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாதமாதிரி அவள் ஒரு தனி உலகத்தில் இருந்தாள்.
அன்று இரவு பூஜையறையில் படுத்து கடவுளரோடு பேசிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பினேன். அம்மா எழுந்து உட்காராமல் படுத்தபடியே,
“ என்னடா வெங்கி..”
“ என்னம்மா பண்ணிகிட்ருக்கே? “
“ பேசிக்கிட்டிருக்கேன்..”
“ யாரோட பேசிக்கிட்டிருக்கே? “
“ இது கூட தெரியலையா.. கடவுளோட பேசிக்கிட்டிருக்கேன்..”
“ கடவுளோடயா? “
“ ஆமாடா.. ஏஞ்சலோட கடவுளோட கூட பேசினேன்..”
“ அவங்க பேசுறாங்களா? “
“ அப்புறம்? “
“ ஏம்மா ராத்திரியில தூங்குற சாமிகளைத் தொந்திரவு பண்றே..? “
“ டேய் நான் எங்க தொந்திரவு பண்றேன்.. அவங்களுக்குத் தூக்கம் வராமத்தான் என்னையக் கூப்பிட்டுப் பேசச்சொல்றாங்க.. மத்தவுங்க மாதிரி இல்லைடா.. சொல்றதை காது கொடுத்துக் கேக்கறாங்கடா ” அதைச் சொல்லும்போது அம்மாவின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.
எனக்குக் கண்ணில் உப்புக்கரித்தது.

நன்றி - தமிழ் இந்து தீபாவளி மலர்




Thursday 3 October 2019

ஹேங்க் ஓவர்


ஹேங்க் ஓவர்
உதயசங்கர்
அதிகாலை நான்கு மணி அலாரம் அடித்தது. விநாயகத்துக்கு எங்கேயோ தூரத்தில் கேட்பதைப் போலிருந்தது. விழிப்பு வந்து விட்டது. ஆனால் கண்களைத் திறக்கமுடியவில்லை. தலை கிறுகிறுத்தது. படுக்கையில் எழுந்து உட்காரமுடியவில்லை. விநாயகம் தலையை உலுக்கினான். கண்களை இறுக்கிப்பூட்டிக் கொண்டதைப்போல இருந்தது. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தால் எதிரே இருந்த பொருட்கள் எல்லாம் சுற்றிக் கொண்டிருந்தன. இன்னக்கி பேப்பர் போட்ட மாதிரி தான். லேட்டாகிவிட்டால் ஏஜெண்ட் சிங்காரம் மூஞ்சியைத் தூக்கி முகரையில் வைத்துக் கொள்வான். அலாரம் தானாக அடித்து ஓய்ந்தது. கண்களைக் கசக்கினான். சீரான மூச்சு விடமுடியவில்லை. மூக்குத்துவாரத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்த மாதிரி உணர்வு. விரல்களால் துழாவினான். கையில் ஒரு பூந்தி சிக்கியது. நேற்று இரவு செம பார்ட்டி. குணாளனுக்கு வேலை கிடைத்ததற்காக நண்பர்களுக்குக் கொடுத்தான். விலையுயர்ந்த  விஸ்கி. பேர் கூட எதோ பகார்டியோ சிக்னேச்சரோ. போதை ஏறுவதே தெரியவில்லை. உட்கார்ந்திருந்தவரை சாதாரணமாக இருந்தது. எழுந்தால் அப்படியே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் லாத்தியது. இரண்டு புல்லை மூன்று பேர் சேர்ந்து குடித்தால் பின்ன எப்படி இருக்கும்?
எப்படியும் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு காரணத்துக்காகப் பார்ட்டி நடக்கும். குணாளனுக்குப் பிடித்த கதநாயகி நடித்த படம் வந்தால் பார்ட்டி. ராஜாவின் வீட்டுக்கு எதிர்வீட்டு ஆண்ட்டி அவனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டாள் என்று பார்ட்டி. அவன் அந்த ஆண்ட்டியை இரண்டு வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். விநாயகம் பேப்பர் போடும்போது ரோஸ்லின் எதிரே வந்து அவனிடம் பேப்பரை வாங்கிவிட்டால் பார்ட்டி. வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டால் பார்ட்டி. அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையில் பார்ட்டி. யாருக்கும் காதல் செட்டாகவில்லையென்று பார்ட்டி. சனிக்கிழமை வந்தால் பார்ட்டி. சிலநேரம் காரணமே இல்லாமலும் பார்ட்டி நடக்கும். அநேகமாக அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் பார்ட்டியைப் பற்றிப் பேசுவார்கள் அல்லது பார்ட்டியைப் பற்றிப் பேசுவதற்காகச் சந்திப்பார்கள். ஆனால் நேற்று சரியான சரக்கு என்று நினைத்துக் கொண்டான். ராஜா கூட எழுந்து நடப்பதற்கே சிரமப்பட்ட விநாயகத்தை
” ழேய்.. படுத்துட்டு காலைல போழா.தாயோளி “ என்று சொன்னான். விநாயகம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கச்சுவரில் போய் முட்டிக்கொண்டு,
“ பேப்பர் யார்ழா போடுவா பேக்கூதி…” என்று சொன்னான். அதைக்கேட்ட குணாளன்,
“ கவிதை..கவிதை..ஹா ஹா ஹ்ஹாஹா “ என்று சிரித்துக்கொண்டே அப்படியே மிக்சர், பூந்தி, சிதறலுக்கு மேலேயே :சாய்ந்து உடனே குறட்டை விட்டான்.
விநாயகம் சைக்கிளை எடுத்துக் கொண்டு மிதித்தான். எப்படியோ நள்ளிரவில் சாக்கடைஓரம் மேய்ந்து கொண்டிருந்த பன்னி மேல் விடாமல்., அவன் சைக்கிளில் வருகிற சீரைப்பார்த்து குலைத்த நாயினைப் பார்த்து விடாமல். தெருவில் முதல் வீட்டிலிருந்த அன்னமக்கா வீட்டுச் சுவரில் முட்டாமல், தெருவில் கட்டில் போட்டு படுத்திருந்த சுப்புத்தாத்தா மேல் விடாமல் வீட்டுக்கு முன்னாலிருந்த சாக்கடையில் விழாமல். வீட்டு வாசலுக்கு முன்னால் சைக்கிளைக் கீழே போட்டு விழுந்தான். விழுந்த இடத்தில் செமிக்காததைத் தின்ற நாய் கத்தலும் கதக்கலுமாக கக்குவதைபோல ஓங்கரித்து கொஞ்சம் வாந்தியெடுத்தான். அவ்வளவு தான். எப்படியோ அவன் கதவைத்திறந்து உள்ளே போய்விட்டான். அரவம் கேட்டு முழித்த அம்மாவின் கேள்விக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டு தரையில் எதையும் விரிக்காமலேயே விழுந்து உறங்கிவிட்டான்.
எழுந்து நடக்கும்போது லேசாகத் தள்ளாடத்தான் செய்தது. பின்வாசலுக்குப் போய் முகத்தில் தண்ணீரை அடித்தான். கொஞ்சம் தன் உஷார் வந்தது. பல்லைத்தேய்த்தான். கக்கூஸ் போனான். முக்கி முக்கிப்பார்த்தும் ஒன்றும் ரிசல்ட் இல்லை. வயிறு கல் மாதிரி இருந்தது. போட்டிருந்த பேண்டையும் சட்டையையும் கழட்டி கொடியில் போட்டு விட்டு சார்ட்ஸையும், டி சர்ட்டையும் எடுத்துப்போட்டான். வீட்டை விட்டு வெளியே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தான். தெருவிளக்கின் ஒளி மங்கத்தொடங்கியிருந்தது. வானத்தில் சாம்பலைக் கரைத்துத் தெளித்த மாதிரி திட்டுத்திட்டாய் வெள்ளைநிறம் படரத்தொடங்கியிருந்தது. தெரு முக்கில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் குனிந்து மார்பைக் காட்டிக் கொண்டிருந்த நாயகியைப்  பார்த்ததும் ரோஸ்லின் ஞாபகம் வந்தது. அவள் ஒல்லிக்குச்சி. மார்பே இல்லாதது போல தட்டையாக இருப்பாள். ஆனால் முகம் அவ்வளவு லட்சணம். அவ்வளவு சாந்தம். பெரிய கண்களும், அளவான மூக்கும், செதுக்கி வைத்தமாதிரி உதடுகளும், ஓவியப்பெண்ணின் முகம் மாதிரி இருக்கும். அவளுடைய சாந்தமான முகபாவம் ஒரு ஆழ்ந்த உணர்வைத்தரும். ஏதோ மிகப்பெரிய ரகசியங்கள் அவள் பாதுகாப்பில் இருப்பதைப் போல தன்னம்பிக்கையுடன் அவளுடைய பார்வை இருக்கும். அவள் கண்களைப் பார்க்க அவனுக்குக் கூசும். பேப்பரை வாங்க நீட்டும் மெலிந்த கையையும் பிஞ்சாய் நீளும் விரல்களையே பார்த்திருக்கிறான். அந்த விரல்களுக்குரியவள் நிச்சயமாய் நல்லவளாகத்தான் இருப்பாள்.
ஐந்து மணிக்கு கட்டைப்பிரித்து எடுத்துக்கொண்டு ஏரியாவுக்குப் போனால் நூத்தைம்பது பேப்பர்களையும் போட்டு விட்டு வருவதற்கு ஏழு மணியாகிவிடும். வந்து குளித்துச் சாப்பிட்டு விட்டு கமிஷன் கடைக்குப்போய் சிட்டையை எடுத்துக்கொண்டு வசூலுக்குப் போகவேண்டும். இராத்திரி எட்டு மணிவரை வசூல் தான். அதன்பிறகு அவன் உலகம் தனி.
       எல்லாப்பொருட்களும் மங்கலாகத் தெரிந்தன. எல்லாம் அசைந்து கொண்டேயிருந்தன. எதுவும் ஓரிடத்தில் நிற்கவில்லை. நல்லவேளை தெருத்திருப்பத்தில் ரோட்டில் கிடந்த ஒருவனின் மீது சைக்கிளை ஏற்றி விட்டிருப்பான். கடைசி நொடியில் பிரேக் பிடித்து நின்று விட்டான். ஊரே போதையில் இருப்பதைப்போல இருந்தது. சிரித்துக்கொண்டான். சைக்கிளை மிதித்துக்கொண்டே அவனுக்குப் பிடித்த சினிமாப்பாட்டை முணுமுணுத்தான்.
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்
மயக்கமென்ன காதல் வாழ்க!
அவன் கண்முன்னால் ரோஸ்லினின் முகம் தெரிந்தது. சைக்கிள் வலதுபக்கம் திரும்பி மெயின்ரோட்டுக்குப் போகவேண்டும். ஆனால் சைக்கிள் இடது பக்கம் திரும்பியது. அருகில் இருந்த மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் திரும்பியது. அதிலிருந்து வெளியே வந்தால்  அன்னமக்கா வீடுதான் முதலில் வரும். கொஞ்சதூரத்தில் சுப்புத்தாத்தா கட்டிலில் படுத்திருந்தார். நாய் நிமிர்ந்து பார்த்து விட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டது. சைக்கிள் அவனுடைய வீட்டின் முன்னால் போய் நின்றது. அவன் தலையைக் குலுக்கிக் கொண்டு அடச்சே.. என்ன யோசனை? மறுபடியும் வீட்டுக்கு வந்து நிக்கிறேன். என்று நினைத்தபடி சைக்கிளைத் திருப்பினான். மறுபடியும் அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே போனான்.
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்
மயக்கமென்ன காதல் வாழ்க!
மயக்கமென்ன என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சைக்கிள் வலது பக்கம் திரும்புவதற்குப் பதில் இடது பக்கமே திரும்பியது. மறுபடியும் மதுரைக்காரங்க வளவு இருந்த சந்து வழியாக அன்னமக்கா வீடு , கட்டிலில் படுத்திருந்த சுப்புத்தாத்தா தலையை மட்டும் தூக்கும் நாய், என்று சுழன்றது. அவன் சைக்கிளை வீட்டுக்கு முன்னால் நிறுத்தினான். போதையினால் தான் இப்படி ஒரே இடத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோமா. நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது. தெருவின் இரண்டு முனைகளையும் உற்றுப்பார்த்தான். நடந்து போய் திரும்பினான். வலது பக்கம் மெயின்ரோடு தெரிந்தது. வாகனங்கள் போவது தெரிந்தது. கந்தன் டீக்கடையிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. இடது பக்கம் பார்த்தான். மதுரைக்காரங்க வளவிலிருந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது. திரும்பி வந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பாட்டை பாடாமல் மிதித்தான். ஆனால் மனம் அந்த இசையை விடாமல் உள்ளுக்குள் இசைத்துக் கொண்டிருந்தது. சரியாக மயக்கமென்ன என்ற வார்த்தையின் இசைத்துணுக்கு வரும்போது சைக்கிள் இடது பக்கமே திரும்பியது. மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் நுழைந்தது. அன்னமக்கா வீட்டு வழியே, சுப்புத்தாத்தாவைக் கடந்து நாயைத்தாண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது.
அவன் குழம்பிப்போனான். சைக்கிளை நிறுத்திவிட்டு விளக்குக்கம்பத்தின் அடியிலிருந்த திண்டில் உட்கார்ந்தான். தெளிவாக யோசித்தான். எல்லாம் சரிதான். சைக்கிள் தன்னிச்சையாக யோசித்து முடிவெடுக்கிறதா. அவனுடைய போதையின் குழப்பமா? இந்த முறை மிகக்கவனமாக அடிமேல் அடிவைத்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனான். ஆனால் மறுபடியும் இடது பக்கமே திரும்பினான். வீட்டுக்கு முன்னால் வந்ததும் ஆத்திரமும் கோபமும் வந்தது. உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
“ ங்ஙோத்தாலோக்க… என்னடா நடக்குது?.. “
என்று கத்தினான் விநாயகம். அப்போது தெருவின் வலது பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது.
“ எவண்டா என்னைய திட்டுனது…ஒம்மாளோக்க..” ஒரு ஆள் தள்ளாடித் தள்ளாடி தெருவை அளந்து கொண்டே வந்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரம் நிப்பமா விழுவமா என்கிற மாதிரி இருந்தது. மேலே இருந்த பச்சை நிற வார்ப்பெல்ட்டினால் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மேலே சட்டை முழுவதும் சாக்கடை ஒட்டியிருந்தது. ஒருவேளை தெருமுக்கில் விழுந்து கிடந்த ஆளோ. முன்பின் பார்த்திராத ஆளாகத் தெரிந்தான். அவனுடைய முகம் சுமூகமாக இல்லை. வயிற்றில் ஏற்பட்ட எரிச்சல் முகத்தில் தெரிந்தது. விநாயகம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். நேரே அவனுக்கு முன்னால் வந்து,
“ ஏலே மயிராண்டி இங்க என்னல பண்றே.. என் வீட்டுக்கு முன்னால உனக்கென்னலே சோலி..”
என்று கத்தினான். விநாயகம்,
“ அண்ணே இது என் வீடுண்ணே… போங்கண்ணே உங்க வீட்டைத் தேடுங்க..”
“ அதைத்தான்லே இவ்வள நேரம் தேடிக் கண்டுபிடிச்சிருக்கேன்.. திரும்பப்போய் தேடச்சொல்றியா..ங்ஙோத்தா.”
விநாயகத்துக்கு எரிச்சலாக வந்தது. ஏற்கனவே தெருவை விட்டு வெளியேற முடியவில்லை என்ற ஆத்திரம் வேறு. ஞாயிற்றுக்கிழமை பேப்பர் போகவில்லையென்றால் அவ்வளவு தான். பெரிய கலவரமே நடந்து விடும்.
“ கொஞ்சம் பேசாம போறீங்களா.. நானே கடுப்பில இருக்கிறேன்..” என்று சொல்லி முடிக்கும் முன்னால் அந்த ஆள் இடுப்பில் இருந்து எதையோ உருவி அவனை வயிற்றில் சொருகி விட்டான்.
“ கடுப்பில இருக்கானாம் மயிரு.. யார்ட்ட..”
விநாயகத்துக்கு வயிற்றின் இடது பக்கம் கூரான வலி பெருகி ரத்தம் களகளவென வழிந்தது. அவன் வயிற்றைப்பிடித்துக் கொண்டே,
“ ஐயோ யாராச்சும் வாங்களேன்.. அம்மா.. அப்பா.. “
என்று கத்தினான். விநாயகத்தின் சத்தத்தைக் கேட்டு அவன் கையில் இருந்த கத்தியை மறுபடியும் வீசினான். அது ரோட்டில் படுத்திருந்த நாயின் மீது விழுந்தது. அது காள் என்று கத்திக்கொண்டு எழுந்து ஓடியது.. அந்த ஆள் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டைக் கழட்டினான். விநாயகத்தை மாறி மாறி அடித்தான்.
“ என்னலே சவுண்டு விடுறே.. தேவடியாமவனே..”
விநாயகம் கதறினான். அவனால் எழுந்து நடக்க முடியவில்லை. இருந்த இடத்திலேயே அப்படியே நகர்ந்து விழுகிற பெல்ட் அடிகளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தான். நல்லவேளை. அந்த ஆளுக்கு கை ஓய்ந்து விட்டது. கீழே விழுந்த சாரத்தை எடுக்கக் குனிந்தான். அதை எடுத்ததாக நினைத்து பாவனையாக இடுப்பில் சொருகினான்.
“ ராத்திரியிலிருந்து என் தெருவையும் வீட்டையும் காணோம்… ஓத்தலக்க எங்க போச்சுன்னு தெரியல.. இவனுங்க வேற.. “ என்று புலம்பிக்கொண்டே போனான்.
விநாயகத்துக்கு மயக்கம் வந்தது. கடகடவென பொழுது புலர்ந்து விட்டது. வெளிச்சம் பரவியது. விநாயகத்தின் கண்ணிமைகளை யாரோ இழுத்து மூடுவதைப் போலிருந்தது. விநாயகம் கடைசியாக கண்களைத் திறந்து பார்க்கும்போது அவன் போடுகிற பேப்பர் ஏஜெண்ட் சிங்காரத்தின் பெயர்ப்பலகை அடித்த கதவுகளைப் பார்த்தான்.
அந்த எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே வந்தன.

நன்றி - சொல்வனம் இணைய இதழ்