Thursday, 14 May 2026

சிந்திக்கும் ஆற்றல்

 

குழந்தைகளுக்கான த த்துவம் 2

சிந்திக்கும் ஆற்றல்




சிந்திக்கும் ஆற்றல் எனறால் என்ன?

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் அதாவது மரம் என்ற ஒன்றை அறிந்து கொள்வது முதல் செயல். பிறகு அதைப்போன்ற தோற்றங்களுடன்   ஆனால் தனித்துவமாக இருக்கக்கூடிய புளிய மரம், மருத மரம், கொய்யாமரம், முருங்கை மரம், ஆலமரம், அரசமரம் இவை அனைத்தும் மரங்கள் என்று புரிந்து கொள்வது இரண்டாவது செயல்.

ஒன்றை ஒன்றுடன் இணைத்துப் பார்ப்பதும் வேறுபடுத்திப் பார்ப்பதும் தான் அறிதல் என்று சொல்கிறோம். அறிதலின் வழியே ஒரு பொதுக்கருத்து உருவாகிறது அதாவது மரம் என்ற ஒன்று இருக்கிறது அதற்குள் தனிக்கருத்தும் உள்ளடக்கியிருக்கிறது. அதாவது வேப்பமரம், புளியமரம் என்ற தனித்த மரங்களும் அடங்கும்.

ஒன்றை அறிதல் என்பது முதல்படி. அறிந்ததுடன் வேறுபட்ட ஒன்றை இணைப்பது இரண்டாவது படி.

நாம் இப்போது நினைப்பது போல அத்தனை எளிதாக இந்தச் செயல் நடக்கவில்லை. மனிதமூளையில் சிந்தனை என்ற இரசாயனச்செயல் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின.

மனிதன் மட்டும் தான் சிந்திக்கின்றானா?

இல்லை.

இயற்கையில் உயிருள்ள அனைத்தும் சிந்திக்கின்றன.

 தாவரங்களோ, விலங்குகளோ, பறவைகளோ, பூச்சிகளோ, எந்த உயிராக இருந்தாலும் சிந்திக்கின்றன. அவை சிந்திப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் வேறு வேறு வழிகளைத் தங்களுடைய பரிணாமவளர்ச்சியில் கண்டுபிடித்திருக்கின்றன.

என்ன மாதிரியான வழிகள் என்பதைப் பார்ப்போமா?

கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத உயிர்கள் அனைத்துமே புலன்களின் வழியே உயிர்வாழ்பவை.

உடல் என்ற ஒன்றின் வழியே உயிருடன் இருப்பவை.

அப்படி என்றால் உயிர் என்றால் என்ன? என்ற கேள்வி வருகிறதா?

உயிர் என்றால் உடலை இயக்குகிற சக்தி. அந்த சக்தி உடலின் மூலமாகவே உருவாக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று சார்ந்திருப்பது. பின்னிப்பிணைந்திருப்பது என்று சொல்லலாம்.

ஆச்சரியமாக இருக்கிறதா? சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சிச் சேனல்களிலும் உயிர் ஒரு ஒளியைப் போலத் தனியே பிரிந்து செல்வதாகக் காட்சிகளைக் காட்டியிருப்பார்கள்.

அது எல்லாம் கப்சா! பொய்!

உயிர் என்ற ஒன்று தனியே கிடையாது.

அது ஒரு சக்தி. உடல் இயங்குவதற்காக உருவான சக்தி.

சரியா?

அதனால் உடல் இல்லாத உயிர் கிடையாது.

உலகின் முதல் உயிரினமான சையானோ என்ற பாசியிலிருந்து மனிதர்கள் வரை உடலும் உயிரும் இணைந்து இயங்குவதன் மூலமே வாழ்கிறார்கள்.

உயிர்ப்பட்டியலில் மிகக்குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் தன்னுடைய உடலின் வழியே சிந்திக்கின்றன. இயற்கைச் சூழல் தான் அந்த உயிர்களின் சிந்தனையைத் தீர்மானிக்கிறது.

அவை உயிர் வாழ்வதைப் பற்றியும் தன் இனத்தைப்பெருக்குவது பற்றியும் மட்டுமே சிந்திக்கின்றன.

அது இயற்கையின் எழுதப்படாத விதி. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான விதி.

எனவே தான் சாதகமான சூழல் இல்லாதபோது குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் அமைதியாக மடிந்து விடுகின்றன.

மறைந்து விடுவதில்லை. தன் விதைகளை அல்லது எச்சத்தை உறக்கநிலையில் பாதுகாத்து வைத்துக் கொள்கின்றன.

மீண்டும் சாதகமான சூழல் வரும்போது அவை உயிர்த்தெழுகின்றன.

பாசி, புல், பூச்சிகள், புழுக்கள் என்று நிறையச் சொல்லமுடியும். சில தாவரங்கள் இயறகையில் உயிர் பிழைத்திருக்க பலவிதமான சிக்கலான திட்டங்களை வைத்திருக்கின்றன.

உதாரணத்துக்கு பூச்சிகளைச் சாப்பிடும் தாவரம். பூச்சிகள் சாப்பிடாமல் இருக்க ஒரு திரவம் சுரக்கும் தாவரம், தொட்டால் சுருங்கிக் கொள்ளும் தாவரம், என்று சில உதாரணங்களைச் சொல்லலாம்.

நீங்களும் கூட வேறு என்னென்ன தாவரங்கள் எப்படியெல்லாம் சிந்திக்கின்றன என்று ஆராய்ச்சி செய்யுங்களேன்.

தான் வாழ்வதற்காக இயற்கையுடன் அனுசரித்துச் செல்கின்றன தாவரங்கள். அதேநேரம் தனக்கென தனியான குணாதிசயங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இந்த அளவுக்குத் தான் அவற்றின் சிந்தனை இருக்கிறது.

உயிர் வாழ்வதைத் தவிர வேறு சிந்தனை கிடையாது. ( அதுவும் அதன் கையில் நூறு சதவீதம் கிடையாது.)

இது தான் அதன் தத்துவம்.

அந்தச் சிந்தனையின் எல்லைகள் மிகக்குறுகியவை. அவை இயற்கையுடன் பிணைக்கப்பட்டது. இயற்கையைப் பிரதிபலிப்பது.

புரியலையே!

ஆமாம். கொஞ்சம் கடினம் தான்.

மூளையின் நுட்பமான, மற்றும் சிக்கலான இரசாயனச்செயல்பாடு தான் சிந்தனை. இந்த அளவுக்குப் புரிந்து கொண்டால் போதும்.

என்ன விளையாடுகிறீர்களா?

எங்களுக்கு வேறு வேலை கிடையாதா? என்று கோபம் வருகிறதா?

சரி. சரி. கொஞ்சம் எளிமையாகச் சொல்லமுடியுமா என்று பார்க்கலாம்.

உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலைகளைக் கிள்ளித் துண்டாக்கிக் கொண்டே இருந்தால், அந்த இலை துண்டிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் அதிர்வலைகள் செடியின் வேர் முதல் நுனிவரை சென்று சேர்கின்றன. அந்த அதிர்வலைகள் தான் ஞாபகப்பதிவாகிறது. அந்த ஞாபகப்பதிவுகள் யாராவது அந்தச் செடியைத் தொட்டாலே பிரதிபலிப்புகளை உருவாக்குகிறது. அது அதிர்ந்து நடுங்குகிறது. மின்காந்த அலைகளின் வழியே எதிர்வினை புரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அப்படி என்றால் விலங்குகள், பூச்சிகள், பறவைகள், புழுக்கள் எப்படிச் சிந்திக்கின்றன?

( தத்துவம் அறிவோம் )

 

 நன்றி - iyal.net