Thursday, 17 September 2026

ஆயிரத்தொரு கொக்குகள்

 

ஆயிரத்தொரு கொக்குகள்

உதயசங்கர்



இன்று சரளாவுக்குப் பிறந்த நாள். எப்போதும் போலக் காலையிலேயே எழுந்து விட்டாள்.  பல் தேய்த்துக் கொண்டே மொட்டை மாடிக்கு வந்தாள். அவளுடைய வீட்டு மொட்டைமாடியில் நின்று சுற்றிலும் தெரியும் மரங்களையும், வானத்தில் கூட்டமாய் குவிந்து கிடக்கும் வெண்மேகங்களையும் பறவைகளின் சத்தத்தையும் கேட்டுக் கொண்டே பல் தேய்த்து வாய்க்கொப்பளித்துக் கொண்டிருந்தாள்.

தெனமும் அப்படி மொட்டை மாடியில் பராக்கு பார்க்க என்ன இருக்கு? “ என்று அம்மா கத்துவது காதில் விழுந்தது. அவள் அப்போது சிறகுகளை விரித்துப் பறக்கும் ஒரு பறவை மேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த மேகம் சிறிது சிறிதாகக் கரைந்து சிறு புள்ளியானது. சரளா கீழே போவதற்காக படியிறங்கப் போனாள். அப்போது திடீரென வானத்தில் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் தோன்றின. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே நேரத்தில் இத்தனை புள்ளிகள் எப்படித் தோன்றின? இப்போது அந்தப் புள்ளிகள் இன்னும் அருகில் வந்தன. அருகில் வர வர அந்தப் புள்ளிகள் கொக்குகளாக மாறின.

அட! கொக்குகள்.

ஒரு கொக்கு. இரண்டு கொக்குகளில்லை. நூற்றுக்கணக்கான கொக்குகள் ஒன்றுபோலப் பறந்து வந்தன. சரளாவுக்கு ஆச்சரியத்தில் வாய் திறந்தது. இவ்வளவு கொக்குகளை இப்போது தான் முதல்முறையாகப் பார்க்கிறாள். ஒரு பெரும் கூட்டமே இடம் பெயர்ந்து போகிறது. அவளுக்குக் கொக்குகளை அப்படிப் பிடிக்கும். அதன் வெண்மை நிறம் அவ்வளவு அழகாக இருக்கும். அமைதியின் நிறம் வெண்மைதானே. பள்ளிக்கூடம் போகும்வழியில் குளத்தின் ஓரத்தில் அசையாமல் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கும் கொக்குகளைப் பார்த்திருக்கிறாள். வீட்டிலும் கூட விளையாட்டாக அப்படி ஒற்றைக்காலில் நின்று பார்ப்பாள். சில நொடிகளுக்குப் பிறகு முடியாது. வானத்தில் கூட்டமாய் பறக்கும்போது அதன் ஒழுங்கைப் பார்த்திருக்கிறாள். நேர்த்தியாகவிவடிவத்தில் பறப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.

இதை எல்லாம் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கொக்குகள் எல்லாம் சரளாவின் மொட்டைமாடியை நோக்கியே பறந்து வந்தன. முதலில் சரளாவுக்குப் பயமாக இருந்தது. கொக்குகளின்கர்ர்ர்க் கிர்ர்ரக்என்ற சத்தங்கள் பெரிதாகக் கேட்டன. அவ்வளவு கொக்குகளும் மொட்டைமாடியில் இறங்கினால் என்ன ஆகும்? என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பாவிடம் சொல்லலாமா?

அவள் யோசிப்பதற்குள் அந்தக் கொக்குகள் விரிந்த சிறகுகளை மடக்கி  மொட்டை மாடியில் இறங்கின.

அட! என்ன ஆச்சரியம்! எல்லாம் காகிதக் கொக்குகள். திபு திபுவென காகிதக் கொக்குகள் குவிந்தன. சரளாவின் கண்கள் இமைக்கவில்லை. காகிதக் கொக்குகள் வரிசையாக நின்றன. கீழே இறங்கும்வரை கொக்குகளாக இருந்தன. இறங்கியதும் காகிதங்களாக எப்படி மாறின? எல்லாக்கொக்குகளின் வாயிலும் அமைதியின் அடையாளமான ஆலீவ் மரக்கிளை. சரளாவுக்குப் புரியவில்லை. ஏதோ மாயாஜாலம் போல இருந்தது. அப்போது அந்தக் காகிதக்கொக்குகளில் ஒரு கொக்கு பேசியது.

சரளா.. உனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! நீடூழி வாழ்க! “

என்றது. சரளா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

எப்படி என்னுடைய பிறந்த நாள் உனக்குத் தெரியும்? “

இந்த உலகத்திலுள்ள அத்தனை குழந்தைகளின் பிறந்த நாளும் எங்களுக்குத் தெரியும். ஆனால்….”

என்று சொல்லிவிட்டு அமைதியாக நின்றது.

ஆனால் என்ன கொக்கே? “

உனக்குச் சடாகோவைத் தெரியுமா?  

சரளா உதட்டைப் பிதுக்கினாள்.

நாங்கள் ஜப்பானிலிலுள்ள ஹிரோஷிமா நகரிலிருந்து வருகிறோம்இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு விழுந்தபோது சடாகோவுக்கு இரண்டு வயது.. அவளுக்கு ஏராளமான கனவுகள் இருந்தன. நிறையப் படிக்க வேண்டும். இந்த உலகத்திலுள்ள அத்தனை நாடுகளையும் சுற்றிவரவேண்டும். குழந்தைகளுக்கான கதைகள் எழுத வேண்டும். உலகக் குழந்தைகள் மாநாடு நடத்த வேண்டும். ஆனால் பனிரெண்டு வயதிலேயே அவளுடைய கனவுகள் கருகி விட்டன. இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா போட்ட அணுகுண்டுக்கதிர்வீச்சு அவளைக் கொன்று விட்டது. ”

என்று சொல்லிவிட்டு காகிதக்கொக்கு அஞ்சலி செலுத்துவதைப் போல அமைதியாக நின்றது. சரளாவும் சோகமாக நின்றாள்.

சடாகோ தான் எங்களை உருவாக்கினாள். அவளுடைய தோழி சசுகோ, ஆயிரம் கொக்குகளைச் செய் சடாகோ.. கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று சொன்னதைக் கேட்டு ஆயிரம் காகிதக்கொக்குகளைச் செய்தாள். நம்பிக்கையுடன் செய்தாள். அவள் ஒவ்வொரு காகிதக் கொக்கைச் செய்து முடிக்கும்போதும் கடவுளே நான் நீண்ட நாள் வாழவேண்டும்.. இந்த உலகில் போரே வரக்கூடாது.. குழந்தைகளுக்கு அமைதியான உலகம் வேண்டும் என்று வேண்டிக் கொள்வாள். ஆனால் அவளுடைய எந்த வேண்டுதல்களையும் கடவுள் கேட்கவில்லை. சடாகோவைக் கை விட்டு விட்டார்கடவுள் கை விட்டாலும் சடாகோவின் நம்பிக்கையை நாங்கள் சுமந்து கொண்டு பறக்கிறோம்… “

கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.. இப்போதும் காசாவில், உக்ரைனில், போர் நடந்து கொண்டு தானே இருக்கிறதுஎல்லா இடங்களிலும் குழந்தைகள் தான் முதலில் இறந்து போகிறார்கள்

ஆமாம்.. நாங்கள் இப்போது அங்கே தான் போகிறோம்எங்கு எல்லாம் போர் நடக்கிறதோ அங்கே சடாகோவின் பொறுமை. அமைதி. நம்பிக்கை என்ற செய்தியைக் கொண்டு செல்கிறோம்.. போர் இல்லாத அமைதியான உலகத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்அதுதான் சடாகோவின் கனவுஎன்றது காகிதக்கொக்கு.

சரளாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

இந்த பூமியில் பிறக்கும் குழந்தைகள் நீண்ட காலம் வாழ்ந்து வயதாகி இயற்கையாக இறக்க வேண்டும்..”

என்று முணுமுணுத்தாள் சரளா. அப்போது எங்கிருந்தோ ஒரு காகிதம் பறந்து வந்து சரளாவின் காலுக்குக் கீழே விழுந்தது. சரளா அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்தாள். அந்தக் காகிதத்தில் குழந்தைகளின் சிரித்த முகங்கள் தெரிந்தன.

சரளாவின் கைகள் தானாகவே மடிக்கத் தொடங்கின. சில நொடிகளில் அவள் கையில் ஒரு காகிதக்கொக்கு.

சடாகோவின் காகிதக் கொக்கு. இல்லை சரளாவின் காகிதக் கொக்கு.

சரளாவின் கையிலிருந்து மெல்லச் சிறகுகள் விரித்துப் பறந்தது அந்தக் கொக்கு. அப்போது அதன் வாயிலும் ஆலீவ் மரக்கிளை.

கீழே தரையில் காத்துக் கொண்டிருந்த ஆயிரம் கொக்குகளின் கூட்டத்தில் சேர்ந்தது சரளாவின் கொக்கு.

இப்போது ஆயிரத்தொரு கொக்குகளும் மெல்ல எழும்பிக் காற்றில் பறக்க ஆரம்பித்தன. அப்போது தான் அந்த ஒலியைக் கவனித்தாள் சரளா.

அமைதி அமைதி அமைதி

யுத்தமில்லாத உலகம். மகிழ்ச்சியான குழந்தைகள் என்ற சடாகோவின் கனவும் மெல்லச் சிறகுகள் விரித்துப் பறந்தது.

நன்றி - விஞ்ஞானத்துளிர்

 

 

  

Monday, 14 September 2026

யார் இந்தப் பிள்ளையார்?

 

யார் இந்தப் பிள்ளையார்?

உதயசங்கர்




இந்து மதம் என்ற அழைக்கப்படும் வைதீக மதம் கடவுளரை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். உயர்நிலைத் தெய்வங்களான பிரம்மன், சிவன், விஷ்ணு, இந்திரன், போன்றவர்கள் ஒருவகை என்றால் இவர்களுக்குச் சேவை செய்யும் தெய்வங்களாக அனுமான், சண்டீகேஸ்வரன், சனி, சூரியன், சந்திரன்,ராகு, கேடு வகையறாக்கள் வெளியில் பரிவாரத் தெயவங்களாக இருக்கிறார்கள். பழைய காலத்தில் இவ்விரண்டு வகைத் தெய்வங்களையும் உயர்சாதியினரைத் தவிர சாமானியர்கள் நெருங்கமுடியாது. கோவில்களுக்குள் நுழைய முடியாது. எனவே உழைப்பாளிகள் தங்கள் வாழ்விலிருந்து நாட்டார் தெய்வங்களை உருவாக்கி வழிபட்டார்கள். ஆதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இயற்கையை வழிபட்டார்கள். மரம், செடிம் கொடி, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், என்று அனைத்து இயற்கைப் படைப்புகளையும் வழிபட்டார்கள்.

 ஆதிப்பூர்வக்குடிகள் இயற்கையை வழிபடுவதன் மூலம் தங்களுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்போது ஆதிமனிதனின் பகுத்தறிவு குழந்தைப்பருவத்தில் இருந்தது. அப்போது தான் தொன்மங்களை இயற்கையிலிருந்து உருவாக்கினார்கள். தொன்மங்கள் என்பவை ஆதி மனிதனின் குழந்தைப் பருவக்கனவுகள் எனலாம். அந்தக் கனவுகளில் தான் எலி, புலி, யானை, கழுகு, குரங்கு, அணில், என்று விலங்குகளும், பறவைகளும், குலதெய்வங்களாகவும் குலக்குறியீடாகவும் மாறின.

எல்லாவற்றையும் பகிர்ந்து வாழும் இனக்குழு வாழ்க்கைக்காலம் முடிந்து நிலவுடமைக்காலம் தொடங்கும் போது தனியுடைமை உருவானது. குலங்களுக்களிடையே யுத்தங்கள் நடந்தன. வென்றவர்கள் தோற்றவர்களை மட்டுமல்ல, அவர்களுடைய குலதெய்வங்களையும் அடிமை கொண்டார்கள். இப்போது இயற்கை மையமாக இருந்த வழிபாட்டுமுறை மனிதமையமாக மாறியது. முன்னோர்கள், குலம் காத்த வீரர்கள், இனம் காத்த வீரர்கள், பழி வாங்கப்பட்டப்பட்டவர்கள், அகாலமரணம் அடைந்த பெண்கள், குழந்தைகள், என்று அவர்களுடைய வாழ்வில் எதிர்கொண்ட மரணங்களைத் தெய்வ உருவாக்கி வழிபட்டார்கள். அது மட்டுமில்லை. அரசுகள் உருவாகி பேரரசுகளாக வளர்ந்தபோது தங்கள் அரசை நிலை நிறுத்திக்கொள்ள வெகுமக்கள் வணங்கி வழிபட்ட நாட்டார் தெய்வங்களையும் பெருந்தெய்வ மதத்துக்குள் இணைக்கும் வழக்கமும் இருந்தது. இதன் வழியாக ஆளும் வர்க்கம் இத்தாலிய கம்யூனிச அறிஞர் கிராம்ஷி குறிப்பிடுகிற கலாச்சாரமேலாண்மையைப் ( மக்களின் ஒத்திசைவை ) பெறுகிறார்கள். அப்படி உருவான ஒரு நாட்டார் தெய்வமான யானையின் தலையும் மனித உடலும் கொண்ட பிள்ளையார் எப்படி பெருந்தெய்வ வழிப்பாட்டுக்குள் வந்தார்?

ஆரம்பத்தில் வைதீகமதம் பிள்ளையாரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிள்ளையாருக்கு வெகுமக்களிடம் மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டபிறகு சாமானிய மக்களின் வீடுகளிலும், தெருக்களிலும், முச்சந்திகளிலும் பிள்ளையார் தெய்வவழிபாடு பெருகியது. எந்தவொரு நாட்டார் தெய்வம் மக்களிடம் செல்வாக்கு செலுத்துகிறதோ அந்தத் தெய்வத்தை வைதீக மதக்கடலில் கரைத்து விடும் வைதீக மதத்தந்திரமே பிள்ளையாரையும் ஏன் முருகனையும் கூட வைதீக மதத்துடன் இணைத்தது. சிவன், பார்வதி தம்பதியினரின் புதல்வர்களாக மாற்றியது. ஏன் அவர்களை பிரம்மனின் புதல்வர்களாகவோ, விஷ்ணுவின் புதல்வர்களாகவோ மாற்றவில்லை என்ற கேள்வி வேறு ஒரு ஆய்வுக்குக் கூட்டிச் செல்லும்.

வைதீக மதத்துடன் இணைப்பதற்காக அதீத புனைவுகளை உருவாக்கி பிள்ளையாரை மேல்நிலையாக்கம் செய்தார்கள்.

கதை 1. – பார்வதி குளிக்கும் போது தன் உடலிலிருந்த அழுக்கை உருட்டி ஒரு மனித உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த அழுக்கோடு பார்வதியின் நறுமணத்தைலம் கலந்து அந்த உருவம் கரைந்து தண்ணீரோடு போய் கங்கையில் கலந்து விட்டது. கங்கை  கடலில் கலக்குமிடத்தில் அந்த தண்ணீரை மாலினி என்ற யானைத்தலையரக்கியைக் குடிக்கச் செய்தாள். அதனால் கருவுற்ற மாலினி பிள்ளையாரைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையை பார்வதி எடுத்துச் சென்று தன் மகனாக வளர்த்தாள்.

கதை 2. – பார்வதிக்குப் பிறந்த ஆண்குழந்தை சனியின் பார்வை பட்டு பிறந்தவுடனே தன்னுடைய தலையை இழந்து விட்டது. இதனால் வருந்திய பார்வதியைக் கண்டு இரக்கம் கொண்ட விஷ்ணு ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்து ஒட்டி உயிர் கொடுத்தார். இப்படியும் பிள்ளையார் பிறந்திருக்கிறார்.

கதை 3. – இமயமலை அடிவாரத்தில் சிவனும் பார்வதியும் யானை உருவம் கொண்டு கலவி செய்தார்கள். அதனால் யானைத்தலையுடன் பிள்ளையார் பிறந்தார். இப்படியும் பிறந்திருக்கிறார்.

கதை 4. – பார்வதியின் வயிற்றில் கருவாக இருக்கும் போது சிந்துரோன் என்ற அரக்கன் கருப்பையில் புகுந்து அந்தக் குழந்தையின் தலையைத் தின்று விட்டான். தலையில்லாமல் பிறந்த அந்தக் குழந்தை கஜசூரன் என்ற யானைத்தலை அரக்கனின் தலையைக் கொய்து தன் உடலில் பொருத்திக் கொண்டது. இப்படியும் பிள்ளையார் பிறந்திருக்கிறார்.

கதை 5 – மரகதமுனிவர் தன்னுடைய தவம் கலைந்து கண்களைத் திறந்தவுடன் அவர் கண்ட யானைகளின் கலவி அவருடைய உணர்ச்சிகளைத் தூண்டி அப்போது அங்கே வந்த விபுதை என்ற அசுரக்குலப்பெண்ணை யானையாக உருமாற்றி கலந்தார். இதனால் கஜமுகாசுரன் பிறந்தான். இவனைப் பிள்ளையார் கொன்று அவனுடைய தலையைக் கொய்து தன்னுடைய உடலில் பொருத்திக் கொண்டார். அவனைப் பெருச்சாளியாக்கித் தன்வாகனமாக்கினார். இப்படியும் பிள்ளையார் பிறந்தார்.

கதை 6---  சிவன் ஆசையுடன் பார்வதியைப் பார்க்கவரும்போது பார்வதி தன் உடல் அழுக்கில் உருவாக்கிய இளைஞனைக் காவலுக்கு நிறுத்தியிருந்தாள். அந்த இளைஞன் சிவனுக்கு அனுமதி மறுக்க அவனுடைய தலையை வெட்டி வீழ்த்தினார். செய்தி அறிந்த பார்வதி அழுது புலம்ப, சிவன் தன் சிவ கணங்களிடம் பார்க்கும் முதல் உயிர்னத்தின் தலையை வெட்டிக் கொண்டுவரச் சொன்னார். சிவகணங்கள் முதலில் யானையைப் பார்த்ததால், அதன் தலையை வெட்டிக் கொண்டு வந்து அந்த இளைஞனின் தலையில் பொருத்தினார்கள். அதனால் அந்த இளைஞன் கண ஈசன் கணேசன் அதாவது கணங்களின் தலைவன் ஆனான். இப்படியும் பிள்ளையார் பிறந்தார்.

இந்த எல்லாக்கதைகளினூடாக இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிள்ளையார் யானைத்தலையையுடையவராக இருப்பதற்கான காரணம். இரண்டு எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணம்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்புவரை பிள்ளையார் வழிபாடு இருந்ததற்கான குறிப்புகள் வேதங்களிலோ, புத்தமத இலக்கியத்திலோ இல்லை. முதன்முதலாக குப்தர்கள் காலத்தில் ( கி.பி.320 – கி.பி. 551 ) தான் பிள்ளையார் உருவங்கள் தெரிவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கணபதி என்றால் கணங்களைக் காப்பவன், கணங்களின் தலைவன் எனலாம். ரிக் வேதத்தில் கணபதி என்ற வார்த்தை இருப்பதாக மேற்கத்திய ஆய்வாளர் குறிப்பிடுகிறார். கணம் என்றால் குலம் என்று கொள்ளலாம்.

மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாக இருந்திருக்கிறது. யானைக்கு மாதங்கி என்ற பெயரும் உணடு. தமிழ்நாட்டிலும் மாதங்கம் என்ற கூட்டம் உள்ளது. நீலகிரி மலையிலுள்ள குருபர்களின் உட்பிரிவில் ஒரு கூட்டத்துக்குப் பெயர் யானை.

அதேபோல எலிக்குலம் இருந்திருக்கிறது. மூசிகக்குலம் என்றால் எலிக்குலம் என்று அர்த்தம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்ட பழங்குடிக்குலம் எலியைக் குலக்குறியாகக் கொண்ட பழங்குடிக்குலத்தை வெற்றி கொண்டபோது தோற்ற குலத்தின் குலக்குறியை தங்கள் கடவுளின் வாகனமாக மாற்றியிருக்கிறது. வெற்றி பெற்ற பழங்குடிக்குலம் அரசாக விரிவடைந்தபோது யானை மனிதக்கடவுளாக மாறி விட்டது.

ஆனாலும் பிள்ளையாரை அவ்வளவு எளிதாக பார்ப்பனியம் ஏற்றுக் கொள்ளவில்லை. பிள்ளையாரை சூத்திரர்கள் கடவுள் என்று தான் விலக்கி வைத்திருந்தார்கள்.

மனுதர்மம் 3:164 –ல் நாய் வளர்ப்பவன், பறவைகளை விற்பவன், கன்னிப்பெண்ணைக் கெடுப்பவன், பிறரைத் துன்புறுத்துவோன், சூத்திரத்தொழில் செய்பவன், கணபதி போன்ற சிறு தெய்வங்களுக்கு யாகம் செய்பவன் இவர்கள் பித்ருக்களுக்குச் செய்யும் இழவு விருந்திலிருந்து விலக்கப்பட வேண்டும்.

கிரக சூத்திரத்தில் கண்பதியை தீமை செய்யும் கடவுளாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் வெகுமக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சாதி வேறுபாடின்றி அனைவரும் மிக எளிதாக அணுகக்கூடிய கடவுளாக, அவர்களே உருவாக்கிக்கொள்கிற கடவுளாக, அவர்களே அழித்து விடுகிற கடவுளாக, அவர்களின் வேண்டுதல்களைக் கேட்கிற கடவுளாக, அவர்கள் எடுக்கிற எல்லாமுயற்சிகளையும் தொடங்கி வைக்கிற கடவுளாக, மழை பெய்யாவிட்டால் தண்டிக்கிற கடவுளாக, குழந்தைகளின் அன்புக்குரிய கடவுளாக, பிள்ளையார் இருக்கிறார். வைதீக மதத்தில் வெளிவட்டத்திலிருந்த பிள்ளையாரை அரசியலுக்குள் இழுத்து வந்தது வைதீகப்பார்ப்பனீயம். அதன் மூலம் வெகுமக்களை தங்களுடைய இந்துத்துவ வலைக்குள் சிக்கவைத்து பிளவு படுத்துகிற தந்திரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 நம்முடைய பிள்ளையார் நன்மை தரும்பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் சாப்பிடுகிற பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் ஆசை ஆசையாகக் கொழுக்கட்டைச் சாப்பிடும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் சாணியிலும் வெல்லத்துண்டிலும், பச்சரிசி மாவிலும் இருக்கிற பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் குழந்தைகளுக்கு அட்சரம் சொல்லிக் கொடுக்கும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் குழந்தைகளுக்குப் பரீட்சையில் மார்க்கு வாங்கித் தருகிற பிள்ளையார்

நம்முடைய பிள்ளையார் காவியங்களை எழுதும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் அரசமரத்தையும் வேப்பமரத்தையும் காப்பாற்றும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் அனைத்து மக்கள் மீதும் நேசமும் ,பாசமும், அன்பும் நிறைந்த பிள்ளையார்.

பிள்ளையார் அரசியலிலிருந்து பிள்ளையாரைக் காப்போம்.

அரசியலிலிருந்து கடவுளரைக் காப்போம்.

நம் மக்களைக் காப்போம்.  

ஆதார நூல்கள் – 1. பிள்ளையார் அர்சியல்- .சிவசுப்பிரமணியன்

2. மனிதசமூக சாரம்ஜார்ஜ் தாம்சன்

3. மனுதர்ம சாஸ்திரம்