Sunday, 30 August 2026

அதிகாரத்தின் தத்துவம்

 



சதுரங்கவாழ்க்கை 10 

அதிகாரத்தின் தத்துவம்

அந்த வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்த கதிரின் தலைக்குப் பின்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அவன் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஒளிவட்ட த்துக்கு நடுவில் அவன் முகத்தில் தெரிந்த அந்தத் தெளிவும் என்னைப் பார்த்ததுமேற்பட்ட புன்னகையும் ஒரு அதிருப்தியைக் கொடுத்தது. ஏனென்று தெரியவில்லை. நான் என்னையறியாமலேயே பெருமூச்சு விட்டேன். ஒருவேளை நான் ஒவ்வொருமுறையும் மோசமானதை எதிர்பார்க்கிறேனா? அவன் சீக்கிரம் நன்றாகிவிட வேண்டுமென எதிர்பார்ப்பதைப் போல அவன் மோசமாகிவிடுவானோ என்ற அச்சமும் எனக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. மனதின் இருகூரான நாக்கு வாழ்வையும் மரணத்தையும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்துகிறது. மனதின் ஆழத்தில் அவன் இறந்து போவானென்றோ, அல்லது இறந்து போக வேண்டுமென்றோ ஒரு எதிர்பார்ப்பு இருள் வான மின்னல்க்கீற்றாய் கண்சிமிட்டிப் போகிறது.

அவனுடைய புன்னகையின் ஓரத்தில் மரணம் ஒளிந்திருக்கிறதோ என்று கூடத் தோன்றும். அதே புன்னகை முகத்துடன் அவன் கண்ணாடிச்சவப்பெட்டியில் படுத்திருப்பதைப் போல ஒரு காட்சி பளிச்சென தோன்றி மறைந்தது. ச்சே! என்ன மனமிது? நான் தலையை உலுக்கி அந்தக் காட்சியை விரட்டினேன். ஆனால் அது மறையவில்லை. ஒளிந்து கொண்டது. அவ்வளவு பிடிவாதம். என் முகத்தில் எந்தக் கலவரத்தையும் காட்டக்கூடாதென நினைத்தேன். பல நேரங்களில் உரையாடல் நம் உள்ளத்தின் உணர்ச்சிகளுக்குத் திரைபோட்டுக் காப்பாற்றிவிடும். மேடையில் நடிக்கும் நடிகனாக மாறிவிடுகிறோம். பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றும்.

நடிப்பென்று சொல்வது போலியாக என்ற அர்த்தத்திலில்லை. அப்படி நடித்தால் மட்டுமே நம்முடைய சமூகம் ஒப்புரவுடன் இயங்குமென்றும் தோன்றுகிறது. சமூக  இயக்கத்திற்கான அடிப்படையே சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் பாவனை தான். தனக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி சமூகம் சொல்கிற விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதென்றும் சொல்லலாம். பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிக்கும்போது அது இயல்பான நடைமுறையாக மாறுகிறது. அந்த இயல்புகள் காலம் காலமாகத் தொடரும்போது பண்பாடாக, மரபாக, பாரம்பரியமாக, சடங்குகளாக, சாங்கியங்களாக, சம்பிரதாயங்களாக மாறிவிடுகிறது. அதுவே பொதுப்புத்தியாகவும் மாறிவிடுகிறது. அதுதான் சிவில் சொசைட்டியின் பலமும் பலவீனமும்.

எப்போதுமே பொதுச்சமூகத்தில் சாமானியர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. அதிகாரமில்லாத இடத்தில் மனிதனின் குணம் பணிந்து விடுகிறது. அதுவும் பாவனை தான். உண்மையைப் போன்ற நடிப்பு தான். ஆனால் பொதுச்சமூகத்தில் சிறிது அதிகாரம் கிடைத்தாலும் சாத்தான் தன் வாலை ஆட்டிப் பார்க்கிறது. பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாதி மதத்தலைவர்கள், ரவுடிகள், எல்லாருமே அவரவருக்குரிய இடத்தைப் பொறுத்து சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ அதிகாரத்தை ருசிப்பவர்களாக.  இருக்கிறார்கள். அதிகாரத்தை ருசிக்க மிக முக்கியமான தேவை. அந்த அதிகாரத்தைப் பிரயோகித்துப் பார்க்க இன்னொருவர்  தேவைப்படுகிறார். எனவே தான் இத்தனை சட்டங்கள், விதிகள், தண்டனைகள், என்று நினைக்கிறேன். சாமானியர்களுக்குத் தான் சட்டங்கள். அதிகாரமிக்கவர்களுக்கு விதிமீறல் தான் விதிகள்.

அதிகாரம் ஒரு அமைப்பினுடைய அல்லது ஒரு தனிமனிதனின் உடமையாக இருப்பதில்லை அது ஒரு செயல்முறை உறவாக இருக்கிறது. எல்லாரிடமும் அதிகாரம் செயல்படுகிறது. இடம் பொருள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். அரசு நிர்வாகம், தொழில்நிறுவனங்கள், நீதி, சட்டம், காவல், ராணுவம், பள்ளி, கல்லூரி, மதம், சாதி அமைப்புகளே கூட அறிவுத்துறைகளே கூட அதிகாரத்தைக் கட்டமைக்கின்றன. அதிகாரம் மற்றும் எதிர்ப்பு இரண்டும் தொடர்புடையவை

 

அதிகாரம் நிலையான ஒன்றல்ல. அதிகார உறவுகள் மாறிக்கொண்டே இருப்பதால் அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளும் உருவாகின்றன. எப்படி உட்கார வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் போன்ற சமூக ஒழுங்குகள் கூட அதிகாரத்தின் நுண்ணிய செயல்பாடுகளாக இருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம். உடலே அதிகாரத்தின் முக்கிய தளம். அதனால் தான் ஆண் உடல் பெண் உடலின் மீது அதிகாரம் செலுத்துகிறது. ஆசிரியர் மாணவர்களின் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார். மருத்துவர் நோயாளிகளின் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார்.  பெரியவர்கள் குழந்தைகள் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள்.  போலீஸ் கைதிகளின் உடல்களின் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள்.  அதிகாரம் வெறும் சட்டங்களின் மூலம் சமூகத்தை மட்டுமல்லாமல் தனி மனிதர் உடல்களின் மீது செயல்படுகிறது.

 

இது ஒரு இருண்மையான நிலை. ஒருவர் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்துபவராகவும் அதிகாரத்தினால் பாதிக்கப்படுபவராகவும் இருக்கிறார். இந்த இருண்மை நிலைதான் அதிகாரத்தின் தத்துவம்.

அதனால் தான் அனைவருமே அதிகாரத்துக்கு ஆசைப்படுகிறார்கள். தன் வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தை அடைவதையே தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அதிகாரத்துக்கு ஆசைப்படவேண்டும்? அதிகாரம் மற்றவர்களின் உடலையும் , மனதையும், கட்டுப்படுத்துகிறது. அரூப ரூபத்திலோ, சாத்வீகமாகவோ, பலவந்தமாகவோ, பலப்பிரயோகம் செய்வதே அதிகாரத்தின் ஒரே வேலைத்திட்டமாக இருக்கிறது.

அதனால் தான் மனிதர்கள் இந்த அதிகாரத்துக்காகத் தான் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு இட த்தில் அதிகாரம் படைத்தவர் இன்னொரு இட த்தில் சாமானியராக மாறிவிடுவார். ஒரு இடத்தில் சாமானியராக இருப்பவர் இன்னொரு இடத்தில்  அதிகாரமிக்கவராக மாறிவிடுவார். இந்தப் கள்ளன்போலீஸ் விளையாட்டுத் தான் ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் ஓட்டத்தைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறதோ?

என்னால் கட்டுப்படுத்தமுடியாத எண்ணச்சுழலில் சிக்கிக் கொண்டேன். எதிரில் கதிர் உட்கார்ந்திருக்கிறான். நான் அவனைப் பார்த்துச் சிரிக்க முயற்சிக்கிறேன். ஆனால் முகம் குழப்பத்தை வெளிப்படுத்துகிறது. கதிர் என்னை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் ஏதாவது பேசுவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். நான் இந்தச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சுழல் மேலும் மேலும் தன்னுடைய ஆழத்துக்குள் இழுக்கிறது..

சாமானியர்கள் அவருக்கு எங்கே இடம் கிடைக்கிறதோ வீடு, அடுக்களை, படுக்கையறை, பள்ளி, அலுவலகம், வேலைத்தளம், என்று அங்கே அதிகாரத்தின் கொடியைப் பறக்க விடுகிறார்கள். என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்த கடைநிலை ஊழியனின் இணையர் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்து அந்த ஊழியரின் மேலதிகாரியிடம் சொன்ன புகார்,

சார்.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே அவர் கொண்டுவர்ற சாப்பாட்டுப் பையை வாங்கறதுக்குக் காத்திருக்கணும் சார்.. அவர் சட்டையைக் கழட்டினா.. அதை வாங்கி மாட்டணும் சார்.. தண்ணீயோ, சாப்பாடோ, அவர் எங்கே இருக்காரோ அங்கே கொண்டுபோய் கொடுக்கணும் சார்சொல்றத உடனேச் செய்யலன்னா.. அவ்வளவு தான்.. நான் மெமோ கொடுப்பேன்கிறாரு.. சும்மா சும்மா அடிச்சிக்கிட்டேருக்காருஇங்கே வான்னுக் கூப்பிட்டு எந்தக் காரணமுமில்லாமல் அடிக்கிறாரு.. பிள்ளைகள் அவரைப் பார்த்தாலே ஒண்ணுக்கு வெளிக்கி போய்ராங்க.. சார்.. மூச்சுக்கு முன்னூறு தடவை நான் வீட்டு அதிகாரி.. வீட்டு அதிகாரி.. என்று சொல்லிக்கிட்டேருக்காரு..அதிகாரின்னா அப்படித்தான் இருக்கணும்.. நீங்க ஒரு வார்த்தைப் பதில் பேசக் கூடாதுன்னு சொல்லி அடிக்கிறாரு சார்சின்னப்பிள்ளைக கூட அன்பா ஒரு வார்த்தைப் பேசறதில்ல.. இதுல தண்ணியைப் போட்டாச்சுன்னா நாங்க யாரும் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாதுசார்.. நீங்க தான் அவருக்கு நல்ல புத்தி சொல்லணும்..சார்..”

என்றார். அதைக் கேட்ட எங்களுக்கு ஒரே சிரிப்பு. அடக்கமுடியாமல் சிரித்தோம். அந்த அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. அதிகாரி ஞே ன்னு முழித்துக் கொண்டிருந்தார். அந்த அதிகாரி எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த ஊழியரைக் கூப்பிட்டு முதுகில் அடிப்பார். கையில் கிள்ளுவார். அவர் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. கோபமாக இருந்தாலும் சரி. அதைப் பார்க்கும் எங்களுக்கு அருவருப்பாக இருக்கும். அந்த ஊழியரிடமே சொன்னோம்.

ஒரு தடவை.. இப்படியெல்லாம் செய்யாதீங்கன்னு சொல்லிருங்க.. பால்பாண்டி.. இல்லைன்னா ஒரு தடவை பதிலுக்கு ஒரு வப்பு வைச்சிருங்க..”

ஐயோ.. சார்.. அவர் என்னை ஊரை விட்டுத் தூக்கிருவாரு.. மெமோ கொடுத்துருவாரு..”

என்று அப்பாவியாகச் சொன்னார்.

எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மனிதர்கள் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதிகாரம் எப்போது தோன்றியிருக்கும்? எப்படித் தோன்றியிருக்கும்? உயிரின் இயல்பே அதிகாரம் தானா? அதிகாரம் இல்லாமல் வாழமுடியாதா? யோசித்துப் பார்த்தால் விலங்குகள் பறவைகள் உலகத்தில் இணை சேர்வதற்கான அதிகாரத்துக்காக ஒரே குழுவைச் சேர்ந்த விலங்குகளே சண்டையிட்டு மடிகின்றன. அந்த அதிகாரத் தேட்டத்தின் பரிணாம வளர்ச்சி தான் மனிதர்களிடமும் வந்திருக்குமோ.

தன்னுடைய இனப்பெருக்கச்சக்தியால் முதலில் பெண்கள் குழுவை வழிநடத்தும் அதிகாரத்தைப் பெற்றார்கள். வேட்டைச் சமூகம், ஆதிப்பொதுவுடமைச் சமூகம் பெண்களின் வழிகாட்டுதலில் நடந்தது. ஒரு சிறிய அளவிலான பொறுப்புள்ள அதிகாரம் அந்தச் சமூகத்துக்குத் தேவையாக இருந்தது. அந்த அதிகாரம் தான் வழிகாட்டியது. அதுவும் அதிகாரம் தானென்றாலும் அது யாரையும் அடிமைப்படுத்தவில்லை. அடக்கி ஒடுக்கவில்லை.  தங்கள் இனக்குழுவைத் தக்கவைத்துக் கொள்ள மட்டுமே பயன்பட்டது. ஏன் நிலவுடமைச்சமூகம் தோன்றுவதற்கு முன் உருவான இனக்குழுச் சமூகத்தில் கூட ஆதிப்பொதுவுடமையின் எச்சங்களிருந்தன. இனத்தைக் காக்கும் வீரம் மட்டுமே தலைமையேற்கத் தகுதியாகக் கருதப்பட்டது. போரிட்டு மடிந்த வீரர்களே நடுகற்களாக வணங்கப்பட்டார்கள். தெய்வங்கள் எங்கிருந்தோ வரவில்லை. அவர்களுடன் வாழ்ந்து மறைந்தவர்களே தெய்வங்களானார்கள். அப்போதும் தலைவன் என்றொருவன் இருந்தாலும் அவன் தனிப்பெரும் அதிகாரம் படைத்தவனாக இல்லை. அந்த அதிகாரம் இனத்தைக் காப்பாற்றவும், வழிநடத்தவும், மட்டுமே பயன்பட்டது.

எப்போது நிலவுடமைச் சமூகம் தோன்றியதோ தனி மனிதர்கள் தன்னுடைய இனத்தையே அடிமைப்படுத்தவும் தன்னுடைய சுயலாபத்துக்காக மற்றவர்களை அடிமைப்படுத்தவும் தொடங்கிய போது மனிதர்களிடம் வர்க்கம் தோன்றிவிட்டது. மேல் கீழ், உயர்வு தாழ்வு, ஆண்டான் அடிமை, பண்ணையார், கூலி, போன்ற சொற்கள் மொழியில் சேர்ந்து அதிகாரத்தை நிலை நிறுத்தின.  முதலில் தங்களுடைய இனக்குழுவைக் காப்பாற்றுவதற்காக நட த்தப்பட்ட போர்கள் பின்னர் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.

நிலவுடமைச் சமூகத்தின் உச்சபட்ச அதிகாரம் அரசர்களையே கடவுளராக்கியது. அதிகாரம் பரம்பரை பரம்பரையாகக் கைமாற்றப்பட்டது. மக்கள் அதிகாரத்தின் கொடுந்தீயில் வெந்து மடிந்து கொண்டேயிருந்தார்கள். அதன் நவீன வடிவமாகத் தான் முதலாளித்துவம் தோன்றி நாடுகளைச் சந்தைகளாக்கும் வெறி உருவாகியது. ஹிட்லர் தொடங்கி தற்கால அரசியல் வாதிகள் வரை மனிதகுலத்துக்குப் பேரழிவை உருவாக்கும் போர்களை நடத்துவது எதனால்? அதிகார வெறியினால் தானே. அதிகார உணர்வு தானே சுரண்டலையே உருவாக்குகிறது. சுரண்டலுக்கான ஆயுதமாக இருப்பதும் அதிகாரம் தானே. எனக்கென்னவோ மனித குலம் இன்னும் என்னென்ன மாற்றங்களைக் கண்டடைந்தாலும் அதன் ஆதாரமான பிரச்னையாக அதிகாரமே இருக்கப்போகிறது என்று தோன்றுகிறது.

அதிகாரம் தான் வன்முறையை உணர்வை வளர்க்கிறது. பயங்கரவாதங்களை தியாகங்களாகப் போற்றுகிறது. தனிநபர் வன்முறை, அரசவன்முறை இரண்டுமே வாழும் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. தேசியம், தேசபக்தி என்ற வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருப்பது அதிகாரமே. இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று, இவற்றுக்கும் இனவெறி, மதவெறி, சாதிவெறி, மொழிவெறி, தேசவெறி  இவற்றுக்குமிடையில் ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. பற்று வெறியாக மாற ஒரு நொடி போதும். பகுத்தறிவு குருட்டுத்தனமான மூடநம்பிக்கையாக மாற ஒரு வதந்தி போதும். யோசித்துப் பார்த்தால் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும் பெண்களும் தானே. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கோரக்காட்சிகளை மறக்க முடியுமா? யுத்தத்தினால் தன் உயிரைக் காப்பாற்ற நிர்வாணமாய் ஓடி வரும் வியட்நாம் குழந்தையின் புகைப்படம் உலகின் மனசாட்சியை உலுக்கவில்லையே. ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டினால் நோய்வாய்ப்பட்ட இறந்த சடாகோவின் அமைதிக்கொக்கு உலகில் அமைதியைக் கொண்டுவரவில்லையே. ஹிட்லரின் கொலைமுகாமுக்கு இருநூறு அனாதைக் குழந்தைகளுடன் சென்று விஷவாயுக்குடோனில் உயிரைவிட்ட ஜேனஸ் கோர்ச்சக்கின் அமைதி உலகின் மனசாட்சியை அசைக்கவில்லையே. இலங்கையில் உக்ரைனில், காஸாவில் காரணமே தெரியாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் குரல் இந்த பூமியை நடுங்கச் செய்யவில்லையே. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் அதிகாரம் தானே. ஒரு பட்டனில் உலகை அழிக்கும் அணுகுண்டுகளை வைத்திருக்கும் மனம் எத்தகைய மனம்? கொடுங்கோலர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். வரலாற்றுப்புத்தகங்களில் குழந்தைகளின் பெண்களின் இரத்தம் படியாத பக்கங்கள் இருக்கிறதா?

ஒவ்வொரு கொடுங்கோலனும் ஒரு நாள் அழிந்தே போவானென்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் அதிகாரம் ஒவ்வொருவரையும் கொடுங்கோலனாக்குகிறது. குண்டூசி முனையளவு அதிகாரம் கிடைத்தால் இங்கே ஒவ்வொருவரும் ஹிட்லர் தான் என்ற மனுஷ்யபுத்திரனின் கவிதையின் சாரம் ஞாபகத்துக்கு வருகிறது. ஆமாம். அந்தக் கொடுங்கோலன் அழிவதற்கு முன்னால் எத்தனை ஆயிரம் எத்தனை லட்சம் சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள், தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். அந்தக் கொடுங்கோலர்களின் அதிகாரவெறியின் அடிப்படை வெறுப்பு தானே. மற்றமை குறித்த வெறுப்பை மனிதமனதில் விதைக்கிறார்கள். மற்றமை! ஆமாம். இனத்தால் வேறுபட்டவர்கள், நிறத்தால் வேறுபட்டவர்கள், மதத்தால் வேறுபட்டவர்கள், மொழியால் வேறுபட்டவர்கள், வர்க்கத்தால் வேறுபட்டவர்கள், பாலினத்தால் வேறுபட்டவர்கள், உயிரினத்தால் வேறுபட்டவர்கள்.

தன்னைத் தவிர மற்றவர்களை வெறுக்கும் மனித குணம் மரபணுவிலேயே இருக்கிறதா? தன்னைத் தவிர மற்றவர்களை இழிவுபடுத்தும் இயல்பை எப்படிப் பெறுகிறார்கள். மனிதன் உயிரியல்பிலேயே வன்முறையாளனா? அதிகாரவெறி கொண்டவனா? ஆதிக்கவுணர்வுள்ளனா? அன்பு, அமைதி, பாசம், நேசம், நட்பு எல்லாம் பாவனைகள் தானா? அல்லது பயன் கருதிப் போடுகிற வேடங்கள் தானா? தனிமனிதனாக நியாயவான்களாகத் தெரிகிற மனிதர்கள் கும்பலாகச் சேர்ந்தால் எப்படி பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள்? கொலைகாரர்களாக மாறுகிறார்கள்? அப்போது அவர்களுடைய மனதில் என்ன ரசாயன மாற்றம் ஏற்படுகிறது? எந்த உணர்வு அவர்களை ஆட்டிப்படைக்கிறது? அருள் வந்த பூசாரி பலி கொடுக்கும் ஆட்டை பரவசத்துடன் பார்ப்பதைப் போல தன் முன்னால் உயிர்ப்பிச்சைக் கேட்கும் மனித உயிரைப் பார்க்கும்போது ஏற்படுமோ? கலவியின் உச்சத்தில் வரும் இன்ப உணர்வைப் போன்ற உணர்வு ஒரு குழந்தையைக் கொலை செய்யும் போது தோன்றுமோ? கர்ப்பிணியின் வயிற்றிலிருக்கும் குழந்தையைக் குத்தி வெளியில் எடுக்கும் அந்த மனிதனிடம் கேட்க வேண்டும். அப்போது உன் மனதில் என்ன நினைத்தாய்?

எது மனிதர்களின் ஆன்மாவை ஆட்டிப்படைக்கிறது? கடவுள் சாத்தான் என்ற இருண்மை நிலையெல்லாம் மனிதர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள உருவாக்கிய புனைவுகள். மனிதனுடைய அடிப்படை உணர்வே தானென்ற ஆதிக்க உணர்வு தான். தன்னைத் தவிர வேறு எதுவும் யாரும் முக்கியமில்லை. தனிமனிதனாகவும் சரி, கூட்டமாகவும் சரி . உண்மையில் சனநாயகமென்பதும் கூட புனைவு தானோ. நாகரீகம் என்பதெல்லாம் மனிதர்கள் அணியும் ஆடைகள் தானோ. ஆடைகளைக் களைந்தால் உள்ளே இருக்கும் மனிதன் யார்?

தனிமனிதனைச் சரி செய்தால் உலகம் சரியாகும். உலகைச் சரி செய்தால் தனிமனிதன் சரியாவான். மனித குலத்தின் எட்ட முடியாத இலக்காகவே இருக்கிறதோ.

எனக்கு எப்போதுமே குழப்பமாக இருக்கும். நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை. நம்பிக்கை இழக்கவும் முடியவில்லை. மனிதன் மட்டும் தான் இந்த பூமியின் விநோதமான உயிரி.

எனக்கு மேலே யாரும் கிடையாது. எனக்குக் கீழே யாரும் கிடையாது என்ற அம்பேத்கரின் சொற்களின் பின்னாலிருக்கும் வரலாற்றில் இழிவுபடுத்தப்பட்ட மனிதர்களில் குரல் கேட்கவில்லையா? தன் தலைக்கு மேலே ஆயிரம் கால்கள் மிதித்துக் கொண்டிருந்தாலும் தான் மிதிப்பதற்கு ஒரு தலை வேண்டுமென்ற ஆசை எப்படித் தோன்றுகிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சொல்ல வேண்டிய அவசியம் எப்படி வந்தது? இந்த ஆதிக்கவுணர்வினால் தானே வந்திருக்கும். இதனால் மனித குலம் ஏதாவது நன்மை அடைந்திருக்கிறதா? இதனால் இந்த பூமி வளம் பெற்றிருக்கிறதா? மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? இன்னும் கொடியவர்களாக, இன்னும் குரூரமிக்கவர்களாக, இன்னும் கொடுங்கோலர்களாகத் தானே மாறியிருக்கிறார்கள்.

இத்தனை தத்துவங்கள்! இத்தனை மதக்கோட்பாடுகள்! இத்தனை கண்டுபிடிப்புகள்! இத்தனை நாகரீகங்கள்! மனிதர்களிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லையே.

என்ன விசித்திரம்!

ஒரு சிலரின் அதிகாரவெறிக்காக பலருடைய வாழ்க்கை சூறையாடப்படுவதை மக்கள் உணரவில்லையா? விஷமென்று தெரிந்தும் அதை அருந்தும் மனதை எப்படிக் கணிப்பது? மனிதர்கள் உண்மையில் கெட்டவர்கள் தானா? சுயநலம், அதிகாரம், ஆதிக்கம், சுரண்டல், வன்முறை, இவற்றின் மொத்த உருவமாகத்தான் மனிதர்கள் இருக்கிறார்களா? அதனால் தான் வாழ்நாள் முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்புகிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்த குணங்களை செயல்படுத்துகிறார்கள். செய்முறைப்பயிற்சிக்கு வீட்டில் பெண்களும் குழந்தைகளும் இலவசமாகக் கிடைக்கிறார்கள்.

இயற்கை அனைத்துயிர்களையும் இயற்கையாக  மரணமடையவே படைக்கிறது. ஆனால் மனிதன் பெரும்பாலான உயிர்களையும் அற்பாயுசிலேயே மரணப்பள்ளத்தாக்கில் தள்ளுகிறான். உணவின்றி சாகிறவர்கள், குடிநீரின்றி சாகிறவர்கள், தங்க இடமின்றி சாகிறவர்கள், மருத்துவ வசதியின்றிச் சாகிறவர்கள், வன்முறையால் சாகிறவர்கள், யுத்தத்தால் சாகிற உயிர்கள், யுத்தம் மனிதர்களின் மீது மட்டுமல்ல, இயற்கையின் மீதும் தொடுக்கப்படும்போது இயற்கையிலிருந்தே அழிந்து போகிற உயிர்கள், யோசித்துப் பார்த்தால் ஹோமோசேப்பியன்ஸ் என்ற பகுத்தறிவுள்ள மனித இனம் தோன்றாமலிருந்தால் இயற்கை இன்னும் அழகாக இருக்குமோ.

தலையை உதறி அந்தச் சுழலை விரட்டினேன். எல்லாம் ஒரு நிமிடம் தான்.  என் மனதில் ஓடிய எண்ணங்களின் சித்திரத்தை எப்படி கதிர் உணர்ந்தானோ தெரியவில்லை.

நாட்டில வன்முறை அதிகமாயிருச்சில்ல.. எங்க பார்த்தாலும் வன்முறை தான். ஏன் மனிதர்கள் இப்படிச் சண்டை போட்டு தங்கள் இன்னுயிரை அழித்துக் கொள்கிறார்களோ. மருத்துவமனையில் பத்து நாள் இருந்தால் உயிரின் அருமை தெரியும்..”

என்றான். அப்போது அவன் முகம் கனிந்திருந்தது. கண்களில் உயிரின் ஒளி நட்சத்திரமாய் மின்னியது.

நான் தான் அவனை உற்சாகப்படுத்த எங்கள் இளமைக்கால நினைவுகளைத் தூண்ட நினைத்தேன்.

டேய்.. கண்ணனை உனக்கு ஞாபகமிருக்கா? “

எந்தக் கண்ணன்? “

அதாண்டா.. ஸ்கொயர் கட் கண்ணன்

எதையோ ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சிப்பவன் போல நெற்றியைச் சுருக்கினான். டக்கென்று கண்கள் பிரகாசமாக,

யாரு அந்த அய்யர்பிள்ளையைச் சுத்திக்கிட்டிருந்தவனா? “

அதைச் சொல்லும்போதே சிரித்தான். அந்தச் சிரிப்பு அபூர்வமாக இருந்தது. உயிரின் ஆனந்தம் சிரிப்பு தானே.

( தொடரும் )

 

 

 


Thursday, 27 August 2026

“விரால் மீனின் சாகசப் பயணம்” – அமுதன் தேவேந்திரன்

 “விரால் மீனின் சாகசப் பயணம்” – நூல் அறிமுகம்

எல்லோருக்கும் ஓர் இடம்



தடிமனான புத்தகங்களை வாசித்து கொஞ்சம் சோர்வாக இருந்தது. (நானும் கனமான புத்தகங்களை வாசிக்கிறேன் என்று இந்த இலக்கிய உலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டாமா!) அதனால் கொஞ்சம் ரிலாக்ஸாக சிறார் இலக்கியம் வாசிக்கலாம் என்று நினைத்தேன்.

ரெட்டில்ஸ் கிளை நூலகத்தில் தேடியபோது என் கண்ணில் பட்டது ‘விரால் மீனின் சாகசப் பயணம்’. புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். “அட… யார் எழுதியது?” என்று பார்த்தால் நம்ம உதயசங்கர் தோழர்!

உடனே நூலகப் பதிவேட்டில் பதிவு செய்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் புத்தகத்தைப் பிரித்து ஒரு கதையை வாசிக்கத் தொடங்கினேன். கதையின் தலைப்பு — ‘எல்லோருக்கும் ஓர் இடம்’.

குழந்தைகளுக்காக எழுதுவது என்பது குழந்தைகளைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல; குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து, அவர்களோடு சேர்ந்து வியந்து, சிரித்து, ஓடி, விளையாடி, கனவு கண்டு எழுதுவதுதான்.

அந்த வகையில் உதயசங்கர் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.

‘விரால் மீனின் சாகசப் பயணம்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘எல்லோருக்கும் ஓர் இடம்’ கதையில் சிவப்புத்தான் எறும்புக்கும் கருப்புத்தான் எறும்புக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வழியாக மிகப் பெரிய சமூகத் தத்துவத்தை மிக இயல்பாகக் குழந்தைகளிடம் கொண்டு செல்கிறார்.

“நண்பா, இந்த உலகத்தில் நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கிறது. ஒருவரை ஒருவர் சாராமல் வாழ முடியாது. சமாதானம், சகோதரத்துவம், சக வாழ்வு — இதுதான் நாம் வாழும் இந்தப் பூமி நமக்குச் சொல்வது. இயற்கை உன்னைச் சிவப்பாகவும், என்னைக் கருப்பாகவும் படைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது, நண்பா…”

எறும்புகளின் உரையாடலாகத் தொடங்கும் கதை, நிறப் பாகுபாடு, இடம், உரிமை, மனித உறவு, சக வாழ்வு என்று பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது.

“இந்த இடம் யாருக்குச் சொந்தம்?” என்ற கேள்வி எழும்போது, நாளை அந்த இடமே வேறொரு விதமாக மாறக்கூடும் என்பதை கதை உணர்த்துகிறது. இன்று நமக்கான இடமாக இருக்கும் ஒன்று நாளை இன்னொருவருக்கான இடமாக மாறலாம். இந்த உலகில் யாரும் நிரந்தரமாக எதற்கும் உரிமையாளர்கள் அல்ல.

அதனால், இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் இருக்கிறது. அந்த இடத்தைப் பிடுங்கிக் கொள்வதல்ல வாழ்க்கை; ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து, அன்போடும் ஒற்றுமையோடும் வாழ்வதுதான் உண்மையான சக வாழ்வு.

குழந்தைகளுக்கான கதை என்று நினைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கிய என்னிடம், போகிற போக்கில் இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டுப் போகிறார் நமது உதயசங்கர் தோழர்.

சிறார் இலக்கியத்தின் பலமே இதுதான்.

குழந்தைகளுக்குக் கருத்துரை சொல்லாமல், அவர்களின் உலகத்திற்குள் சென்று, ஒரு எறும்பின் உரையாடலில்கூட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சக வாழ்வையும் விதைத்துவிட முடியும்.

‘விரால் மீனின் சாகசப் பயணம்’ — குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமல்ல; குழந்தைகளின் வழியாக பெரியவர்களும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்.

வாசிக்க வாசிக்க இன்னும் கொஞ்சம் குழந்தையாக மாறிக்கொண்டிருக்கிறேன்.

நன்றி - புக் டே.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:விரால் மீனின் சாகசப் பயணம்
ஆசிரியர்:உதயசங்கர்
வெளியீடு:
வானம் பதிப்பகம்
விலை:₹.80
  


Sunday, 23 August 2026

தீபாவளிக்கடவுள்

 

சதுரங்கவாழ்க்கை 9

தீபாவளிக்கடவுள்

உதயசங்கர்



கதிர் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். காம்பவுண்டுக்குள் வாசலுக்கு நேர் எதிரில் இருந்த மாமரத்தின் கீழ் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். முன்பு பார்த்ததற்கு முகத்தில் சிறிது வெளிச்சம் அலை பாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. அடர்த்தியான மாமரம் அவனுக்குப் பின்னால் கரும்பூதம் போல நின்று கொண்டிருந்தது. அன்று காற்றேயில்லை. ஆனால் புழுக்கமாகவுமில்லை. லேசான குளிர்மையின் இதம் சூழ்நிலையை மனதுக்கு உகந்ததாக மாற்றியிருந்தது. நான் எப்போதும் இல்லாமல் கதிரின் கைகளைப் பிடித்துக் குலுக்கினேன். அவனுக்குக் கூச்சமாக இருந்திருக்கவேண்டும். அவன் வெட்கத்துடன் சிரித்தான். நண்பர்களிடம் பார்மாலிட்டிக்காகக் கைகுலுக்கும் பழக்கமில்லை. அந்தச் சிரிப்பைப் பார்த்த அவனுடைய மனைவி செண்பாவுக்கு கண்ணீர் துளிர்த்திருக்கவேண்டும். அவள் யாருக்கும் தெரியாமல் குறிப்பாக கதிர் அறியாமல் கைகளால் கண்களைத் தேய்த்துக் கொண்டாள். உடனே வீட்டுக்குள்ளே திரும்பியும் சென்றாள். சன்னல் வழியே அவனுடைய அப்பா பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை நான் உணர்ந்தேன்.

கதிரின் அப்பாவுக்கு மூன்று குழந்தைகள்.ஆனால் கதிரைப் போல மற்ற குழந்தைகளைக் கவனித்திருப்பாரா என்பது சந்தேகம். கதிர் கேட்டதெல்லாம் கிடைத்தது. நாங்கள் கால்நடையாய் நடக்கும்போது கதிர் சைக்கிளில் போனான். அதுவும் ராலே சைக்கிள் தான் வேண்டுமென்று அடம் பிடித்து வாங்கினான். புதிய ராலே சைக்கிளில் அவன் பள்ளிக்கு வந்த நாளில் எல்லாரும் அவன் சைக்கிளைச் சுற்றிச் சுற்றி வந்த தைப் பார்த்த கதிரின் முகத்திலிருந்த பெருமித உணர்வு இப்போதும் கண்களில் தெரிகிறது. ஒரு வாரத்துக்குள் அந்தப் பவுசு போய்விட்டது. புதிதாய் வாட்டர்பாட்டில் வாங்கி பள்ளிக்கு வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். நாங்கள் பள்ளியில் எவர்சில்வர் டிரம்மிலிருக்கும் தண்ணீரைச் சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருக்கும் டம்ளரில் குடித்துக் கொண்டிருக்கும்போது அவன் வகுப்பில் காலுக்கடியில் வைத்திருந்த வாட்டர்பாட்டிலை எடுத்து அவ்வப்போது ஒரு மடக்குக் குடிப்பான். சில சமயம் குடிக்க வேண்டுமென்பதற்காகவே குடிப்பான். அவனுடைய பெஞ்சில் இருந்தவர்கள் அவனை ஏக்கத்துடன் பார்ப்பார்கள். இரண்டு மூன்று நாட்களில் அந்தப் புதுமை பழசாகி விட்டதற்கு இன்னும் பல மாணவர்கள் வாட்டர்பாட்டில்களுடன் வந்ததும் ஒரு காரணம்.

பிறகு அவன் தான் முதன்முதலில் பென்சில் சீவும் கட்டர் கொண்டு வந்தான். முழுப்பென்சிலும் அழிரப்பரும் கொண்டு வந்தான். அந்த அழிரப்பரைக் கையில் எடுத்தாலே மணந்தது. என் வீட்டில் முழுப்பென்சில் வாங்கி அதை இரண்டாக வெட்டி தான் கொடுப்பார் அம்மா. அதைச் சீவுவதற்கு அப்பா ஷேவிங் செய்து மொட்டை மழுங்கையான ஒரு அரைப்பிளேடு. கொடுத்தனுப்புவார். இரண்டே நாட்களில் பென்சில் புழுக்கையாகி விடும். விரலில் பிடிக்க முடிந்தவரை அதை வைத்துத் தான் எழுத வேண்டும். ஆனால் கதிர் எப்போதும் புதிய நீண்ட பென்சில்களாக க் கொண்டுவருவான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறத்தில் பென்சில். அப்சரா என்று சொல்லுவான். நடராஜ் என்று சொன்னான். எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அவன் கட்டருக்குள் பென்சிலைச் செருகிச் சுருள் சுருளாக பென்சிலின் மாம்பழத்தோலை நைசாக உரிப்பதைப் போல உரித்தான்.

பூ மாதிரி சுருண்ட அந்தப் பென்சில் சீவல்களை பையன்கள் போட்டி போட்டுக் கொண்டு பொறுக்கினார்கள். பென்சிலின் நிறமும் மரத்தின் நிறமும் கலந்து ஒரு வித விதமான பூக்களின் இதழ்களைப் போல அழகாக இருந்தன. கருப்பசாமி அந்தச் சுருள்களை எடுத்து பூ மாதிரியே அடுக்கிக் காட்டினான். அப்படியே ரோஜாப் பூ மாதிரியே இருந்தது. கதிர் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறான். அவன் யாரிடமிருந்து கற்றுக் கொள்வானோ தெரியாது. ஆனால் திடீரென்று அவனுடைய உடை, மாறும். அப்போது பள்ளிச்சீருடை என்று எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதைப் பற்றி மாணவர்களோ, பள்ளியோ கவலைப்படாத காலம். அதனால் பெரும்பாலும் என்னுடைய வீடு மாதிரி பொருளாதாரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் வீடுகளில் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ, சித்திரைத் தீர்த்தத்துக்கோ, ரோட்டோரம் போட்டிருக்கும் ரெடிமேட் கடைகளில் காடியான ஊதா நிறத்தில் டிராயரும், வெள்ளைக்கலர் சட்டையும் வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கே முதல்நாள் இரவு வரை போராட வேண்டும்.

தீபாவளி, பொங்கல், என்றால் மட்டும் தான் புதுச்சட்டை, டவுசர், பெரும்பாலும் அந்தப்புதுச்சட்டையும், டவுசரும், பள்ளிக்கூட சீருடையாகவே தான் வீட்டில் எடுப்பார்கள். ஏற்கனவே இருக்கிற சீருடை கந்தலாகி தன் உயிரை விடுகிறாப்பில் இருக்கிற போது தான் அடுத்த புதுத்துணி கிடைக்கும். அதுவரை இரண்டு பக்கமும் குண்டியில் கிழிந்த பித்தான் இல்லாத சாயம்போன அரணாக்கயித்தில் தொங்கிக்கொண்டு மானத்தைக் காப்பாத்திக் கொண்டிருக்கிற டவுசரும், சட்டைப்பை கிழிந்து, வெள்ளைநிறம் தன் குணத்தை மாற்றி அழுக்கு நிறத்தில் ஜொலிக்க பித்தான்கள் இல்லாமல் சட்டையில் ஏதோ ஒரு இடத்தில் குத்தியிருந்த ஊக்கு உடம்பையே கண்காட்சியாகக் காட்டும் சட்டையும் தான். பத்து நாளுக்கு ஒருமுறை காதியில் வாங்கிய மஞ்சள்நிற பார்சோப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் ஸ்னானம் நடக்கும். வேறுவழி கிடையாது. அவ்வளவு தண்ணீர் கஷ்டம். எட்டாவது வகுப்பு தாண்டுகிறவரை நாங்கள் யாரும் சட்டை, டவுசரைப்பத்தி கவலைப்படுவதில்லை.

எங்கள் ஊரில் இரண்டு பெரிய ஸ்பின்னிங் மில்கள் இருந்தன. இரண்டிலும் குறைந்தது ஒரு ஐயாயிரம் தொழிலாளிகள் வேலை பார்த்தனர். அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டால் போதும். ஊருக்குள் மில்வேலைக்காரர்களை யார் பார்த்தாலும் என்ன தீபாவளி போனஸ் எப்போ? என்பது மட்டும் தான் கேள்வியாக இருக்கும். போதாத குறைக்கு சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டியாபீசுகளும், வேட்டாபீசுகளும் அதிகமாக இருந்த காலம். மில் போனசைத்தான் பஜாரில் இருக்கிற பெரிய கடைக்காரர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். தீப்பெட்டியாபீசு, வேட்டாபீசு போனஸையெல்லாம் நடுத்தர, பிளாட்பாரக்கடைக்காரர்களுக்கு விட்டு விடுவார்கள். கடனுக்கு வியாபாரம் செய்வது அவர்கள் தான். அதேபோல கிராமத்து ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுமுழுவதும் அவர்களுடைய குடும்பங்களில் வரும் கலியாணம், சடங்கு, காதுகுத்து, நல்லது பொல்லது, செய்முறை, சீர், செனத்தி, சடங்கு, சாங்கியம், சம்பிரதாயம், இப்படி எதற்கென்றாலும் ஜவுளிகளைக் கொடுக்கும் கடைகள் பிளாட்பாரக்கடைகள் தான். ஆற அமர கீழே விரிக்கப்பட்டிருக்கும் கயத்தாறு கோரம்பாயில் உட்கார்ந்து பாடுபழமைகளைப் பேசிக் கொண்டு, மழை, தண்ணி, வெள்ளாமை, விளைச்சல், குடும்பப் பிரச்னைகளை ஏதோ சொந்தக்கார ர்களிடம் சொல்வதைப் போலச் சொல்லி ஆத்தாமையைத் தீர்த்துக் கொண்டு, கடைக்காரரைக் குடும்ப உறுப்பினரைப் போலவே நினைத்துப் பேசுவதும், கடைக்காரும் எல்லாவற்றுக்கும் உச்சுக் கொட்டி, ஆலோசனைகள் சொல்லி, அவர் பாட்டையும் சொல்லி இலாபம் குறையாமல் பார்த்துக் கொள்வதையும் பார்ப்பதற்கு ஒரு ரசமன நாடகம் நடப்பதைப் போல இருக்கும். எப்படியோ கடைக்கார ரிடம் பேசி விலை குறைத்து வாங்கிவிட்டோமென்ற திருப்தியுடன் மக்களும், எப்படியோ இந்த ஆண்டுக்கான வரும்படியைத் தக்கவைத்துக் கொண்டோமென்ற திருப்தியுடன் கடைக்காரரும் பிரியாவிடை கொடுக்கும் காட்சியில் தமிழ்ச்சினிமா தோற்றுப்போகும்.

பெரிய ஜவுளிக்கடைகளில் இப்படிப் பேசிப்பழகி எடுக்க முடியுமா? என்னுடைய அம்மாவுக்குப் பிடித்த கடை சண்முகம் செட்டியார் மொத்த ஜவுளி வியாபாரம் என்ற போர்டுடன் பத்துக்கு நாலு நீள அகலமுள்ள பிளாட்பாரக்கடை தான். எனக்கு அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட ஆவுடையப்பன் ஜவுளி மாளிகையில் பகலிலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க அத்தனை விதவிதமான வண்ண வண்ணத்துணிகளைப் பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும். அம்மாவிடம் எவ்வளவோ நச்சரித்தும் அவர் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்,

சண்முகம் அண்ணாச்சியிடன் பதினைஞ்சி வருசமா ஜவுளி எடுக்கோம்.. அவரு நம்ப குடும்பத்துல ஒருத்தரு.. அப்படியெல்லாம் பட்டுனு ஒறவ முறிச்சிர முடியாதுஒழுங்கா அங்க துணி எடுக்கறதுன்னா வா.. இல்ல.. துணியே கெடையாது பாத்துக்க..”

என்று சொல்லிவிட்டார்.

 வளர்ந்து கொண்டிருக்கும் சிறிய நகரமான எங்களுடைய ஊரில் பொதுவாக அமந்து அங்கொன்றும் இங்கொன்றும் ள் நடமாட்டத்துடன் வெறிச்சோடிப்போய் இருக்கும் கடைவீதி மில்லில் போனஸ் போட்டாச்சு என்ற மூன்று வார்த்தைகளில் ஏதோ மாயாஜாலம் நடந்த மாதிரி மாறிவிடும். கூட்டம்கூட்டமாக மக்கள் அலைமோதுவார்கள். சிறிசுகள், பெரிசுகள், குமருகள், அவுகளைப்பாக்கதுக்கு குமரன்கள் என்று கடைவீதி மக்கள் திரளாகிவிடும். மகிழ்ச்சி, கோபம், வசவு, வெட்கம், சிரிப்பு, அழுகை, பரிதவிப்பு, அடிபுடி, என்று மனித உணர்வுகளின் அத்தனை கலவையும் பஜாரில் கொட்டிக்கிடக்கும். ஒரு நாடகமேடையில் நடக்கும் காட்சிகளனைத்தும் அங்கே நடக்கும்.

எட்டாவது வகுப்பு தாண்டிய பிறகு தான் துணி எடுத்து தைக்கக்கொடுக்கிற வழக்கம் வந்தது. முதலில் அப்பா வழக்கமாக தன்னுடைய சட்டைகளை அவருடைய நண்பரான  கம்யூனிஸ்ட்தையல்காரரிடம் தான் கொடுப்பார். தோழர் எத்தனை மாதம் கழித்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். முதலில் நானும் அவரிடமே கொடுத்தேன். அவர் அளவு எல்லாம் எனக்கு எடுத்ததில்லை. சீத்தக்குஞ்சி மாதிரி இருந்த எனக்கு எதுக்கு அளவு என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அது எனக்கு கௌரவக்குறைச்சலாக இருந்தது. பின்னே புதுத்துணியை தையல்காரர் மஞ்சள்பையிலிருந்து எடுத்து அவர் வைத்திருக்கும் இஞ்ச் டேப்பினால் அளந்து நம்மை ஒரு பார்வை மேலும் கீழும் பார்த்து, டேப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் அளவு எடுத்து சட்டைப்பை ஒண்ணு போதுமா? இரண்டு வேணுமா? என்று கேட்க வேண்டும். உடனே இரண்டு பை, தோள்பட்டையில் இரண்டுபக்கமும் பிளாப்புகள் சட்டை பின்னால் ரவுண்டாய் வரணும். டவுசரும் கொஞ்ச டைட்டாய் இடுப்பில் பெல்ட் லூப்புகள் வைக்க வேண்டும். இப்படி இல்லாத நொரநாட்டியம் எல்லாம் சொல்லிட்டு வந்தால் தான் திருப்தி.

அதனால் அழுது புரண்டு என்னுடைய சட்டை, டவுசரை மட்டும் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்திலிருந்த ராஜ் டெய்லர்ஸ் கடையில் கொடுத்தேன். ஓனர் கம் டெய்லர் இளைஞர். எப்போதும் சிரித்தமுகம். என்னைச் சுத்திச் சுத்தி வந்து சட்டை, டவுசருக்கு அளவு எடுத்தார். ஒரு கொயர் நோட்டில் என்னவோ நம்பர்களை எழுதினார். பெயரைக் கேட்டு எழுதிக்கொண்டார். ரெம்பப்பெருமையாக இருந்தது. அப்புறம் போட்டாரே ஒரு குண்டை. ” தம்பி..தீவாளிக்கு முதநா ராத்திரி எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கோஅதுவரை இருந்த கம்பீரம் போய்விட்டது. “ அண்ணே..அண்ணே.. சீக்கிரம் கொடுங்கண்ணே.. தீபாவளிக்கு ஊருக்கு போய்ருவம்ணே..” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லிப்பார்த்தேன். அவர் தெளிவாய் சொல்லி விட்டார். “ துணி ஏகப்பட்டது கெடக்கு.. எப்படி முடிக்கப்போறேன்னு தெரியல.. தம்பி தெரிஞ்ச பையனா இருக்கேன்னு தான் வாங்குறேன்…” என்று பிகு பண்ணினார். என்ன செய்ய முடியும்? ஒருவேளை முடியாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டால்? “ அண்ணே தீவாளி முதநா கரெக்டா எட்டு மணிக்கு வந்திருவேன்..ரெடியா வைச்சிருங்கண்ணே..” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். தீபாவளி வர இருந்த ஒரு வாரமும் இதே சிந்தனை தான்.

அங்கே போவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றாலும் சும்மா கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்தின் வழியாகப்போவேன். ராஜ் டெய்லர்ஸில் வேலை ரெம்பப்பிசியாக நடந்து கொண்டிருக்கும். அந்தக்கடை ஓனர் என்னைப்பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவருடைய வேலையிலேயே கவனமாக இருப்பார். அப்படியே ஏகதேசமாக என்னைப் பார்த்தாலும் எப்போதும் சிரித்த முகமென்பதால் என்னைப் பார்த்துத் தான் சிரித்தாரென்று நினைத்துக் கொண்டேன்.  அப்பாடா ஞாபகம் வந்துரும். இப்படியே தீபாவளியும் நெருங்கிவிட்டது. தீபாவளிக்கு முதல்நாள் மதியத்துக்கு மேல் ஊருக்கே ஒரு பரபரப்பு வந்து விட்டது. மக்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியின் ஒளி பாய்ந்திருக்கும்.

ஆனால் எனக்கு நாம் எடுத்துக் கொடுத்த துணி எப்படி சட்டையாக, டவுசராக மாறுது? அப்படி மாறிய துணியின் கௌரவமே உயர்ந்து விடுமே. தையல் தொழில் எப்பேர்ப்பட்ட கலை! எனக்கு என்னுடைய துணிகளின் உருமாற்றத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஏழு,ஏழரைக்கெல்லாம் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்துக்கு அருகில் போய்விட்டேன். கோவிலுக்கு முன்னால் தெருவிளக்கு வெளிச்சத்தில் பம்பரக்குத்து விளையாடிக் கொண்டிருந்த பையன்களை வேடிக்கை பார்த்தேன். பின்னர் நானாக காலத்தைக் கணித்து கடைக்கு முன்னால் போய் நின்றேன். பார்த்தால் என்னை மாதிரி ஒரு பத்துப்பேர் கடையை அடைச்ச மாதிரி அங்கே நின்று கொண்டிருந்தார்கள். தையல் மெஷின்களின் சத்தம் வேகமாகக் கேட்டது. நான் முண்டி முன்னால் போய் டெய்லர் கண்ணில் படுகிற மாதிரி நின்றேன். ஆளாளுக்கு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் தையல் மிஷினில் வேலை செய்து கொண்டே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போதே நம்பிக்கை குறைந்து விட்டது. என்றாலும் முற்றிலும் போய்விடவில்லை. எப்படியும் நமக்கு தைச்சி வச்சிருப்பார், நாம தான் ஒரு வாரத்துக்கு முன்னால் கொடுத்திருக்கிறோமே என்ற என் எண்ணத்தை நசுக்கிக் கொண்டு ஒரு குரல் கேட்டது.

பதினைஞ்சி நாளைக்கு முன்னால கொடுத்தது அப்பவே முடியாதுன்னு சொல்லியிருந்தா வேற டெய்லரைப்பாத்திருப்பம்ல. “

அவ்வளவு தான் எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது. நான் அழுகிற குரலில்,

 அண்ணே என்னோட துணி தைச்சாச்சா? “ என்று கேட்டேன்.

அவர்என்ன துணி? “ என்றார்.

சுமதி என் சுந்தரி ஆரஞ்சு கலர் கட்டம்போட்ட சட்டை, ஊதாக்கலர் டவுசர்,..” என்று அவசர அவசரமாகச் சொன்னேன்.

அவர் காஜா போட்டுக்கொண்டிருந்த பையனிடம்,

 டேய் தம்பி சொல்ற துணியைப் பார்ரா..” என்று சொன்னார். சில நிமிடங்களில் அப்படியே அலுங்காம குலுங்காம என் துணியைத் தூக்கிக்கிட்டு வந்து எங்கிட்டே காண்பித்துஇதாஎன்றான்.

நான் தலையாட்டினேன். எனக்கு அழுகை வரத்தொடங்கியது.

எப்பண்ணே கிடைக்கும் ? “ என்று கேட்டேன்.

அப்போது அவர் எனக்கு கடவுளாகத்தெரிந்தார். அவருடைய ஒரு வார்த்தையில் தான் என்னுடைய எதிர்காலம் இருக்கப்போவதைப்போல அவர் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இறுக்கமான முகத்திலிருந்த வாயைத் திறந்து,

காலையில் ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கோ

என்று சொன்னார். நான் எதுவும் பேசாமல் அழுகையை அடக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் சொன்னேன். அவ்வளவு தான் என்னுடைய என்னை வசவுக்காடு உரித்து விட்டார்கள். அத்துடன் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு ராஜ் டெய்லர்ஸ் கடைக்குப் போய் அந்த டெய்லருக்கு வசவுன்னா வசவு அந்த வசவு. அப்போதெல்லாம் எங்கள் நகரம் தண்ணீர்ப்பஞ்சத்துக்குப் பெயர்போன நகரம். தண்ணீருக்கான சண்டையில் பெண்களிடன் ஒரு புதிய மொழி தோன்றியிருந்தது. அந்த மொழியில் ஒரு வாக்கியத்தைக் கூட ஆண்கள் கேட்க முடியாது. அதனால் அம்மா தொடங்கியது தான், டெய்லர் அண்ணன் பயந்து விட்டார்.

எல்லாவேலையையும் நிறுத்தி விட்டு என் துணியை எடுத்து வெட்ட ஆரம்பித்தார். அப்படியே

எக்கா நீங்க வீட்டுக்குப்போங்க..தம்பி இருக்கட்டும்..கொடுத்து விடுதேன்..”

என்று சொல்லி என்னுடைய அம்மாவை அனுப்பி வைத்தார். அதன் பிறகு இரண்டு மணிநேரம் இருந்து வாங்கிட்டு தான் வந்தேன்.. புது சட்டை டவுசரை வாங்கிட்டு வீட்டுக்கு வரும்போது அம்மா பலகாரம் சுட அடுப்பில் சட்டியைப் போட்டிருந்தாள். சும்மா சொல்லக்கூடாது. அவசர அவசரமாகத் தைத்திருந்தாலும் அம்சமாக தைத்திருந்தார் அந்த அண்ணன். அதற்குப் பிறகு கல்லூரி முடியும் வரை அவரிடம் தான் என்னுடைய துணிகளைத் தைத்தேன். என்றாலும் அந்தத் தீபாவளிக்கு நான் அடைந்த பதட்டமும் கிடைத்தபிறகு நான் அடைந்த மகிழ்ச்சியும் இன்று வரை அடைந்ததில்லை.

ஆனால் கதிர் எதிர்காலத்துக்குப் போய்விட்டான். ஆமாம். பள்ளியிலேயே ஆயத்த ஆடையை உடுத்திய முதல் மாணவன் அவன் தான். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. நம்மை நேரில் பார்க்காமலேயே எங்கோ ஒரு தையல்காரர் நமக்கான டவுசர், சட்டையைத் தைத்துத் தயாராக அனுப்பி வைப்பார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. கண்முன்னே காலம் மாறிக் கொண்டிருந்தது.  மொத்த மனிதர்களையே அளவுகளால் பிரித்து ஏற்கனவே தைக்கப்பட்ட துணிகளுக்குள் மனிதர்கள் புகுந்து கொள்கிற காலம். ஆனால் ஒவ்வொருவருடைய தனித்துவமான உடல் அளவுகளுக்கு ஏற்ப அளந்து அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலில் தைத்து கொடுக்கிற தையல் கலைஞர்களை மட்டுமல்ல..அவர்களுக்கும் சமூகத்துக்கும் இடையில் இருந்த உறவையும் கூட ஆயத்த ஆடைகள் அருகிப்போகச் செய்து விட்டன. இப்போதும் ராஜ் அண்ணன் இருக்கிறார். பழைய கிழிசல்களைத் தைத்துக் கொண்டு..பழைய துணிகளை ஆல்டர் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் கண்களில் பழைய கனவுகளின் சாயம் நிறமிழந்து விட்டது. அவரும் ஒரு காலத்தில் கலைஞனாக இருந்திருக்கிறார் என்ற சாயல் அவர் பழைய துணிகளிலும் செய்கிற ஜாலங்களில் தெரியும்.

காலமாற்றத்தை எங்களுக்குக் கண்முன்னே காட்டுபவனாக கதிர் இருந்தான்

( தொடரும் )