சதுரங்க வாழ்க்கை 11
கவாஸ்கரின் ஸ்கொயர்கட்டும்
கண்ணனின் காதலும்
களங்கமற்ற கதிரின் சிரிப்பில் எங்கள் கல்லூரி நாட்கள்
ஞாபகத்துக்கு வந்தன.
அப்போது நான், குமரேசன், மணி, கண்ணன் எல்லாரும் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். எல்லோரையும்
போல எங்களோடு சேர்ந்து ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்த கண்ணன். திடிரென்று கிரிக்கெட்
விளையாடத் தொடங்கி விட்டான். அப்போது அந்த விளையாட்டே யாருக்கும் தெரியாது. ரேடியோவில் டெஸ்ட் மேட்ச்
நடக்கும்போது கய்யாமுய்யா என்ற இரைச்சலுடன் கெக்கரே பிக்கரே என்று வர்ணனையாளரின்
குரலில் தான் கிரிக்கெட் விளையாட்டு குடியிருந்தது. சார் ரன் பஜே என்ற வாக்கியம்
பெரும்கூச்சலுக்கிடையில் கேட்கும்போது நான்கு ரன்கள் என்று புரிந்து கொள்வோம். நேரில் பார்க்காத, விதிமுறைகள் தெரியாத, ஆமையைப் போல ஐந்து
நாட்கள் மெதுவாக விளையாடுகிற அந்த விளையாட்டின் மீது எனக்கெல்லாம் ஆர்வம் வரவில்லை. ஆனால் கண்ணன் திடீரென
கிரிக்கெட்டின் பக்கம் சாய்ந்து விட்டான்.
அந்த விளையாட்டுக்கு
எங்களையெல்லாம் கூப்பிடவுமில்லை.
ஹாக்கி விளையாடும் போது எப்போதும் எங்களோடயே சுத்துற கண்ணன்
கிரிக்கெட் விளையாடப் போகும்போது மட்டும் யாரையுமே கூப்பிடவில்லை. தனியாக எங்கோ காணாமல்
போனான். திடீரென்று
முளைத்து வந்தான். எங்கே போய் விளையாடுகிறானென்று யாருக்கும் தெரியவில்லை. கதிர் தான் அந்த
ரகசியத்தைக் கண்டுபிடித்துச் சொன்னான். அவன் கூட படிக்கிற ஹரி தான் சொல்லியிருக்கிறான். கண்ணன் அவர்களுடைய
தெருவில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறான்.
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேட்டுத்தெரு மிகவும்
குறுகலானது. ஓடவோ ஓடியாரவோ முடியாது. அங்கே போய் எப்படி இவன் விளையாடுகிறான்? ஒருநாள் நானும் கதிரும்
குமரேசனும் அந்த மேட்டுத்தெருவுக்குப் போனோம். ஹரியிடம் ஒரு நோட்ஸ் வாங்குகிற
சாக்கில் அங்கே போனோம். அந்தத் தெருவின் கடைசியிலிருந்த
சுந்தரேசனின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். கூட இரண்டு
சின்னப்பசங்கள். சும்மா பேட்டை வைத்து தட்டித் தட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மைதானம் முழுவதும்
ஓடியாடி விளையாடும் ஹாக்கி எங்கே?
ஒரே இடத்தில் நின்று கொண்டு தட்டிக் கொண்டிருக்கும்
கிரிக்கெட் எங்கே? கண்ணன் எங்களை எதிர்பார்க்கவில்லை. எங்களைப் பார்த்ததும் அசடு வழியச் சிரித்துக் கொண்டே,
“ சும்மா சுந்தரேசன் கூட்டுட்டே இருந்தான்.. அதான்..” என்றான்.
சுந்தரேசன் கூடப் படிக்கிறவன் தான். அந்த மேட்டுத்தெரு முழுவதும்
பிராமணர்கள் குடித்தனம். எங்களுடன்
பேசிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய கண்கள் அடிக்கடி சுந்தரேசனின் மாடிவீட்டையே
முட்டி மோதிக் கொண்டேயிருந்தது. கதிர் அதைக் கவனித்து விட்டான். மாடியில் ஒரு தாவணி திடீர் திடீரென்று தோன்றி மறைந்தது.
“ சரி சரி.. நீங்க போங்கடா.. நான் வாரேன்..” என்று எங்களை அனுப்புவதில்
குறியாக இருந்தான். அப்போது நின்று நின்று பார்த்து
விட்டு அந்தச் சின்னப்பசங்கள்,
“ கண்ணண்ணா.. அந்த ஸ்கொயர் கட் சொல்லிக் கொடுங்கண்ணா.. ஆத்திலே போய் பிராக்டிஸ் பண்றோம்..”
என்று கேட்டார்கள். எங்களுக்கு ஆச்சரியம். ஸ்கொயர்
கட்டா? கிரிக்கெட்டே இப்போது தான்
இவனுக்குத் தெரியும். அதற்குள் டெக்னிகல்
ஷாட்டெல்லாம் கற்றுக் கொண்டானா?
“ இதோ வர்ரேன்… நீ போய் ஃஃப்ளிக் ஷாட் அடிச்சிப் பிராக்டீஸ் பண்ணு… “ என்று சொல்லி அனுப்பி வைத்தான். கதிர் அந்த நீலநிறத் தாவணியை மீண்டும் எதிர்பார்த்து பார்வையை அங்கேயே
பதியமிட்டிருந்தான். அதன்பிறகு நீலநிறம்
தெரியவேயில்லை.
எங்கள் செட்டில் தான் முதன்முதலாக கோஎஜூகேஷன்
ஆரம்பித்தது. அதனால் கல்லூரியில் ரெம்பக் கண்டிப்பு. பெண்கள் வரும்போது நிமிர்ந்து
கூடப் பார்க்கக் கூடாது. வாத்தியார்கள் எல்லோரும் கண்கொத்திப் பாம்பாக அலைந்து திரிந்து எங்களைக்
கண்காணித்துக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் கைகால்களைக் கட்டிப்போட்ட மாதிரி இருந்தது. அதுமட்டுமல்ல சாதாரணமாக
நிமிர்ந்து பார்க்கும் பழக்கமே போய் விட்டது. எல்லோரும் தலையைக் குனிந்தபடியே
ஓரக்கண்ணால் பார்த்தபடியே கல்லூரிக்குள்ளும் திரிந்தனர். எங்களை விட பெண்பிள்ளைகள்
கொஞ்சம் சுதந்திரமாக இருந்தார்கள்.
எங்கள் ஓரக்கண் பார்வை
வேறு ஒரு சிக்கலையும் ஏற்படுத்தியது. பல பேர் இந்தப்பார்வையைக் கவனித்து விட்டு தவறாக
நினைத்துக் கொண்டு போகவும், சிலர் என்ன கண்ணுல ஏதும் கோளாறா? என்று கேட்கும்படியும் ஆயிற்று. கல்லூரியிலும் கண்ணனின்
நடவடிக்கையில் பெரும் மாற்றங்களைக் கவனித்தோம். ஏனோதானோவென்று நடையும் உடையும்
கொண்டிருந்தவன், ரெம்பக் கோளாறா உடை உடுத்த ஆரம்பித்தான். தன்னுடைய கருத்த முகத்துக்கு
மூன்று வேளையும் லக்மே காலமைன் கிரீம் பூசி எப்பவும் மூஞ்சியில் வெள்ளையடிச்ச
மாதிரி திரிந்தான். ஸ்டைலாக இருப்பதற்காக குளித்து ஈரத்தலையில் சீப்பை வைத்து வரிவரியாக வளைவுகளை
ஏற்படுத்த மெனக்கெட்டான். அது கழுதை காய்ஞ்சதும் மறுபடியும் சிலுப்பிக்கிட்டுதான் நின்னது. நாங்கள் சந்தேகப்பட்டோம். பய எங்கினியோ
கவுந்துட்டான் போல இருக்கே.. அதுக்கு இன்னோர் காரணமும் இருந்தது. இப்பல்லாம் கண்ணன் எங்க கூட சேர்ந்து இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும்
சுந்தரேசன் பய கூடத் தான் சுற்றினான்.
கிரிக்கெட்..கிரிக்கெட் கிரிக்கெட்
எப்ப பார்த்தாலும் கிரிக்கெட் தான்.
ஒரு நாள் காலையில் ஆறரை
மணி இருக்கும். கெமிஸ்ட்ரி நோட்டு வாங்குவதற்கு கண்ணனுடைய வீட்டுக்குப் போனேன். அவன் அங்கு இல்லை. அவனுடைய அம்மா அவன்
சுந்தரேசன் வீட்டுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். இவ்வளவு சீக்கிரமாகவா? அன்று கல்லூரியில் அவனிடம்
கேட்டபோது காலை ஆறு மணியிலிருந்து சுந்தரேசன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பயிற்சி
எடுப்பதாகச் சொன்னான். அதேபோல மாலை கல்லூரி விட்டு வந்தவுடன் போய் விடுவான். அவனுக்கு உண்மையிலேயே
கிரிக்கெட் மீது ஆர்வம் வந்து விட்டதோ என்ற சந்தேகமும் வராமலில்லை.
கல்லூரி நூலகத்திலிருந்து டோனி கிரேக் எழுதிய பேட்டிங் சம்பந்தமான
புத்தகத்தைக் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தான். அதிலிருந்து தான் ஸ்கொயர் கட், லாஃஃப்டிங், ஃஃப்ளிக், என்று வித விதமான
டெக்னிகல் ஷாட்டுகளைத் தெரிந்து கொண்டிருந்தான்.
அப்போது பத்திரிகைகள், ரேடியோவைத் தவிர செய்திகளைத் தெரிந்து கொள்ள வேறு மீடியாக்கள் கிடையாது. எப்போதாவது தான் நேர்முக
வர்ணனையை ரேடியோவில் கேட்க முடியும். அதுவும் ஆங்கிலம் பதினைந்து நிமிடங்கள் என்றால்
ஹிந்தியில் அரைமணிநேரம் வர்ணனை ஒலிபரப்பாகும். கண்ணன் அந்த நேர்முகவர்ணனையைத்
தவற விடுவதேயில்லை. அதிலும் சுனில் கவாஸ்கர் விளையாடுகிறார் என்றால் இன்னும் சிரத்தையோடு கேட்டுக்
கொண்டிருப்பான். என்ன விளங்கியதோ என்னவோ அவன் ஒரு நேர்முகவர்ணனையை எங்களுக்குச் சொல்லுவான். நாங்களும் அவன்
சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவோம்.
வேறு வழி?
எங்களூக்குத் தான் விளையாட்டே தெரியாதே. அவன் செய்ஞ்ச அலட்டலைத்
தாங்கமுடியவில்லை. குமரேசன் தான்
‘ எல இது சரிப்பட்டு வராது.. நாமளும் இறங்கிற வேண்டியதான் “ என்று
சொன்னான்.
அப்புறம் என்ன? நாங்களும் கிரிக்கெட்
விளையாடப்போனோம். அப்ப தான் பய வண்டவாளம் எங்களுக்குத் தெரிஞ்சது. சுந்தரேசன் வீட்டுக்கொல்லைப்புறத்திலிருந்து
பார்த்தால் சுந்தரேசன் வீட்டு மாடி தெரிந்தது. மாடியில் அதுக்குத் தான் ஐயா
இந்த உடை உடுத்தி, அலங்காரம் பண்ணிகிட்டு, அலட்டிக்கிட்டிருந்திருக்கான். அன்னிக்கு
முழுதும் கண்ணனைக் கேலி செய்து கொண்டேயிருந்தோம். எல்லோரையும் போல முதலில் மறுத்தவன், கடைசியில் உண்மையை
ஒத்துக் கொண்டான். நாங்களும் அவனை உற்சாகப்படுத்தினோம். அவன் கிரிக்கெட் விளையாட வந்ததென்னவோ நீலநிறத்தாவணிக்காகத்
தான் என்றாலும் கிரிக்கெட் அவனைப் பிடித்துக் கொண்டது. கிடைத்த நேரங்களில் எல்லாம்
கிரிக்கெட் பயிற்சி எடுத்தான். பின்னால் அந்த நீலநிறத்தாவணியின் பெயர் நளினி என்று நாங்கள் தெரிந்து
கொண்டோம்.
ஒரு முறை ரேடியொ நேர்முக
வர்ணனையில் கவாஸ்கர் ஸ்கொயர்கட் த பால் டு த ஃபென்ஸ் என்ற வார்த்தைகளைக் கேட்டதும்
கண்ணனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்த ஸ்கொயர்கட் என்ற வார்த்தை அவனைப் பிடித்துக்கொண்டது. டோனி கிரேக்கின்
புத்தகத்தில் அதற்கான விளக்கம் படத்தோடு இருந்தது. ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே
போகிற பந்தை ஃபேக்புட் போய் பேட்டை ஸ்கொயரான கோணத்தில் பிடித்து வருகின்ற பந்தை
மிடில் ஆஃப் த பேட்டில் படுகிறமாதிரி கட் செய்கிற போது பந்து கல்லி திசைக்கும்
பாயிண்ட் திசைக்கும் இடையில் பாம்பைப் போல சரசரவென ஓடிப் போகும். இதைப் படித்ததிலிருந்து
கண்ணன் பயிற்சியின் போதெல்லாம் ஸ்கொயர்கட் ஷாட் அடிப்பதற்கே முயற்சித்துக்
கொண்டிருந்தான். ஆனால் அது அவ்வளவு சுலபமாக வரவில்லை.
கல்லூரி கிரிக்கெட்
டீமில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினான். பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான
கிரிக்கெட் போட்டி எங்களுடைய கல்லூரியில் நடந்தது. அந்தபோட்டியில் முதல் முறையாகக்
கலந்து கொண்டிருந்தது எங்கள் கல்லூரி. போட்டி நடந்த போது நளினி தவறாமல் ஆஜரானாள். கண்ணனுக்கு உற்சாகம்
பொங்கிவிட்டது. அவனுக்காகத் தான் அவள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருகிறாள் என்று
எங்களிடம் சொன்னான். நாங்களும் நம்பினோம். போட்டியில் அபாரமாக விளையாடியது எங்கள் கல்லூரி. அந்த ஆண்டு பல்கலைக்கழகக்
கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இதைக் கல்லூரியின் ப்ரேயரின்
போது அறிவித்த முதல்வர் அந்த அணியில் விளையாடியவர்களை கூப்பிட்டுப் பாராட்டினார். அன்று மாலை கல்லூரி
முடிந்தபிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நளினி கண்ணனுக்கு வாழ்த்துக்களைச்
சொல்லியிருக்கிறாள். அது போதாதா? கண்ணனுக்குத் தலைகால் புரியவில்லை. அதுக்கப்புறம் பெரும்பாலான நேரங்களில் சுந்தரேசன்
வீட்டுக்கொல்லைப்புறம் தான் அவனுடைய வாசஸ்தலமாக இருந்தது. இவனுடைய நோக்கும்போக்கும்
சுந்தரேசனுக்குத் தெரியாமலில்லை. அவனுக்கு ஒரு நம்பிக்கை. இந்தக் கருவாப்பயலப்போய்
நளினி காதலிப்பாளா? அதனால் பெருந்தன்மையாக இருந்து விட்டான். ஆனால் அவனுடைய வீட்டில் அப்படி
இருப்பார்களா என்ன? அவர்கள் சுந்தரேசனுக்குக் கொடுத்த கொடையில் சுந்தரேசன் கிரிக்கெட்டையே மறந்து
விட்டான். இதற்குள் ஊருக்குள் ஒரு முக்கியமான கிரிக்கெட் விளையாட்டு வீரனாகிவிட்டான்
கண்ணன். கோவில்பட்டி
கிரிக்கெட் கிளப் அணியில் சேர்ந்து வெளியூர் அணிகளோடு போட்டிக்குப் போய் வந்து
கொண்டிருந்தான்.
மற்ற நேரங்களில்
சுந்தரேசன் வீட்டுக்கு முன்னால் ரோட்டில் இருந்த ஆலமரத்தடியில் இருந்தான். படிப்பதும் அங்கே தான். வேறு சில பையன்களைச்
சேர்த்துக் கொண்டு அந்த மரத்தடியிலேயே கிரிக்கெட் பயிற்சியும் செய்தான். அப்போதும் கவாஸ்கரின்
ஸ்கொயர்கட்டை விடாமல் பயிற்சி செய்தான். அத்துடன் ஒரு கண்ணை நளினியின் வீட்டில்
வைத்திருந்தான். அவளூடைய வீட்டில் சின்ன அசைவு தெரிந்தாலும் உடனே அங்கே பார்ப்பான். நளினி எங்காவது வெளியே
போனால் கூடவே போனான். அவளுடைய கடைக்கண் பார்வைக்காக அந்த ஆலமரத்தடியில் தவம் கிடந்தான். சில நாட்களில்
எங்களுக்குப் போரடித்து விட்டது.
கதிர் தான்
” எல எள்ளு எண்ணெய்க்குக் காயுது..
நாம எதுக்குல எலிப்புழுக்கை மாதிரி காயணும்..”
என்று சொல்லி எங்களைத் தடுத்து விட்டான். ஆனாலும் வானிலை அறிக்கை
மாதிரி அவ்வப்போது கண்ணன் எங்களிடம் அன்னன்னைய நிலவரத்தைச் சொல்லி ஆலோசனைகள்
பெற்றுக் கொள்வான்.
நளினி சினிமாவுக்குப்
போனால் அவனும் சினிமாவுக்குப் போனான். அவள் ஃபேன்சி ஸ்டோருக்குப் போய் ஹேர்பின்னோ, வளையலோ வாங்கினால் இவன்
பின்னாலேயே போய் சேஃப்டி பின் வாங்கினான். இரண்டு பேருமே தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி நடந்து
கொண்டிருந்தார்கள். அவளுடைய ஒவ்வொரு
நடவடிக்கையையும் வந்து எங்களிடம் சொல்லி விளக்கம் கேட்பான். நாங்களும் அவனவனுக்குத்
தோணிய மாதிரி விளக்கம் அளிப்போம்.
ஆனால் எல்லா விளக்கமும் அவனுக்குச் சாதகமாக இருக்கும்படி
பார்த்துக் கொள்வோம். அப்போது தான் அவனுடைய அன்னிய பொருளாதார நிலைமைக்கேற்ப செட் புரோட்டாவோ, வெறும் டீயோ கிடைக்கும். எனவே அவனுடைய காதல் ஜோதி
அணையாமல் பார்த்துக் கொண்டோம். எவ்வளவோ பொழுதுகளை இது குறித்துப் பேசியே கழித்திருக்கிறோம். பரீட்சை முடிந்தபிறகு
நளினியிடம் லெட்டர் கொடுத்து விட வேண்டியது தான் என்று சொல்லிக் கொண்டிருந்தான்
கண்ணன்.
கதிர் தான் அவ்வப்போது அவனை எச்சரித்துக்
கொண்டேயிருப்பான்.
“ ஏல.. ரொம்ப
நோங்கிக்கிட்டிருக்காதேல… அய்யர்வீட்டுப்புள்ள.. அவ எண்டெர்டெயின்மெண்டுக்கு நீ பலியாயிராதே… ஒரு நாள் டாட்டா காட்டிட்டுப்
போயிருவா..”
ஆனால் கண்ணனுக்கு எந்தச் சந்தேகமுமில்லை.
எங்கள் பரீட்சையெல்லாம்
முடிந்து விட்டது. ரிசல்ட் வரும்வரை முழு நாளும் எங்களுக்குத் தான். ஒன்றாகவே ஊர் சுற்றிக்
கொண்டிருந்தோம். துலுக்கபட்டியில் உள்ள சிமிண்ட் ஃபேக்டரி அணியுடன் போட்டியென்று ஒரு
ஞாயிற்றுக்கிழமை கண்ணன் கோவில்பட்டி கிரிக்கெட் கிளப் அணியோடு துலுக்கபட்டி போய்
விட்டான். அந்தப் போட்டியில் இன்ஸ்விங் ஆகி வந்த பந்தை ஸ்கொயர்கட் செய்யப்போகிற மாதிரி
ஆஃப் ஸ்டெம்ப்புக்குக் குறுக்கே போக பந்து மாயம் போல நாடியில் வந்து தாக்கியது. அவ்வளவு தான். பந்திலுள்ள தையல் வெட்டி
ரத்தம் களகள வெனக் கொட்டியது. உடனே மருத்துவமனைக்குப் போய் தையல் போட வேண்டியதாகி விட்டது. அன்னிக்கு வீட்டிலும் வசவு
உரித்தெடுத்து விட்டார்கள். அதனால் இரண்டு நாட்களாக ஆலமரத்தடிப்பக்கம் போகவில்லை. மூன்றாவது நாள் கன்ணன்
அங்கே போனான். நளினியின் வீட்டில் எந்த அரவமும் இல்லை. அது மட்டுமில்லை வீடு
பூட்டியிருந்தது. எங்கோ ஊர்வழி போயிருப்பார்கள் என்று நினைத்தானாம் முதலில். எதுக்கும் கேட்டு
வைப்போம் என்று தற்செயலாக அந்தப்பக்கம் சுந்தரேசனிடம் கேட்டிருக்கிறான். அவன்,
“ உங்கிட்ட சொல்லலியா… அவா எல்லாம் குடும்பத்தோட காலி பண்ணிண்டு பெங்களூர் போயிட்டா “
என்று சொல்லி விட்டுப் போனானாம்.
போகும்போது ஒரு நமுட்டுச் சிரிப்பு வேறு
சிரித்திருக்கிறான். கண்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே இடிந்து போய்
உட்கார்ந்திருந்த சமயத்தில் தான் நான் அவனைத் தேடிப் போனேன். அவன் அழுகிற மாதிரி
எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்தத் தெருவில் கண்ணனுடைய
கிரிக்கெட் விளையாட்டுச் சேக்காளியான கிச்சான் வந்தான். கண்ணனிடம்,
“ அண்ணா ஸ்கொயர்கட் பிராக்டீஸ் பண்ணுவோமா? “ என்று கேட்டான்.
அதைக் கேட்ட எனக்குச் சிரிப்பு வந்தது. கண்ணன் என்னைப் பார்த்து
முறைத்தான். நான் நளினி இருந்த மாடியைப் பார்த்துத் திரும்பிக் கொண்டேன்.
அந்தக் காட்சியைச் சொல்லும்போது நான் விழுந்து
விழுந்து சிரித்தேன். கதிரும் சிரித்தான். கதிர் தொடர்ந்து சிரித்தது அது தான் முதல் முறை. லேசான இருமல் கூட வந்தது. ஆனால் கதிர் அதைப்
பற்றிக் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.
லேசான இருமல் மெல்ல மெல்ல உக்கிரமடைந்தது. கதிரின் முகத்தில்
ரத்தம் பாய்ந்தது. அடிவயிற்றைப் பிடித்தபடி பலமாக இருமத் தொடங்கினான். உடனே அவனுடைய மனைவி செண்பா, அப்பா ஓடி வந்தார்கள். தண்ணீர் குடிக்க
வைத்தார்கள். கண்களில் கண்ணீர் வழிய மெல்ல மூச்சு வாங்கிக் கொண்டிருந்த கதிர் என்னைப்
பார்த்து புன்னகைக்க முயற்சித்தான்.
” போதும்..”
என்று முணுமுணுத்துக் கொண்டே நாற்காலியிலிருந்து
எழுந்து உள்ளே போனான். அவனுடன் செண்பாவும் அப்பாவும் அவனைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு
போனார்கள். நான் சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
எனக்கு எதிரே இருளில் தலைவிரித்துப் போட்டபடி
வேப்பமரம் நின்றிருந்தது.
( தொடரும் )


