Sunday, 17 May 2026

சிந்தனை விதை எப்படி உருவானது?

 

தத்துவம் அறிவோம் 4

சிந்தனை விதை எப்படி உருவானது

உதயசங்கர்



இந்த உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்தும், இயற்கையின் மீது மிகக்குறைந்த அளவில் செயல்புரிந்தும் உயிர் வாழ்ந்தன. அவை இயற்கையுடன் இணைந்து இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்தன. அந்த உயிரினங்களுக்கு வறட்சியோ, வெள்ளமோ, புயலோ, மழையோ, இயற்கைப் பேரிடர் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டன. அதன் மீது அவற்றிற்கு எந்தப் புகாருமில்லை.

ஏன் இப்படி நடக்கிறது?

தெரியாது.

இதை மாற்ற முடியுமா?

தெரியாது.

இந்தப் பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா?

தெரியாது.

ஏனெனில் அவற்றிற்கு இயற்கையையும் தங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. இயற்கையின் செயல்களுக்குக் காரணகாரியம் தெரியாது. அதைப் பற்றிச் சிந்திக்குமளவுக்கு அவற்றின் மூளை வளர்ச்சியடையவில்லை.

பரிணாமக்கோட்பாட்டின் படி இயற்கையான வாழ்நிலையில் மாற்றம் இல்லாதபோது எந்த உயிரும் மாற்றமடைவதில்லை. புரிகிறதா?

வாழ்நிலை என்றால் உணவு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, சூழல், இவற்றில் மாற்றம் நிகழாதபோது அந்த உயிரினங்களும் மாறவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.  எனவே தான் ஒரு புலி புலியாகவே இப்போதும் இருக்கிறது. அல்லது கரப்பான்பூச்சி இன்னமும் கரப்பான்பூச்சியாகவே தான் இப்போதும் இருக்கிறது.

இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது  வாழ்நிலை என்பது தான் ஒவ்வொரு உயிரின் இருப்பைத் தீர்மானிக்கிறது.

வாழ்நிலை தான் அந்த உயிரின் உணர்வையும், அறிவையும் முடிவு செய்கிறது. வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உயிர்களின் வாழ்வும் கேள்விக்குள்ளாகிறது.

ஒரு புலி காட்டில் வாழ்கிறது. ஏனெனில் காட்டில் அதற்கான உணவு கிடைக்கிறது. இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. பாதுகாப்பு இருக்கிறது.  சுதந்திரமாக இருக்க முடிகிறது. அதனால் புலி காட்டில் வாழ்கிறது.

சரியா?

ஆனால் காடு அழியும்போது என்ன நடக்கிறது?

உணவு கிடைக்காது.  இனப்பெருக்கம் செய்ய முடியாது., பாதுகாப்பு இல்லை.

புலி என்ற இனம் அழிந்து விடும்.

நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

ஏன் புலி மரங்களை நட்டு காட்டை உருவாக்கக்கூடாது?

நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வருகிறது இல்லையா?

கார்ட்டூன் படங்களிலோ, அனிமேஷன் படங்களிலோ அப்படி நடக்கலாம். உண்மையில் புலிக்கு அப்படி எல்லாம் செய்யமுடியும் என்று கனவில் கூடத் தெரியாது. வாழ்வதற்குச் சாதகமான சூழல் இருந்தால் வாழும். இல்லையென்றால் அழிந்து விடும். இயற்கையை மாற்ற முடியும் என்று தெரியாது.

யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகிறதே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

உண்மை தான் யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகின்றன. ஆனால் யானை தன்னுடைய சாணத்தின் வழியே விதைகளையும் கொட்டைகளையும் வெளியேற்றும் போது நான் மரம் நடுகிறேன். நான் காட்டை உருவாக்குகிறேன் என்று யோசித்துச் செய்கிறதா?

அல்லது

வண்ணத்துப்பூச்சி நான் மகரந்தச் சேர்க்கை மூலம் மரங்களின் செடிகளின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறேன் என்று தெரிந்து ஒவ்வொரு பூவாகப் போய் உட்காருகிறதா?

இல்லையே.

யானைக்கோ, வண்ணத்துப்பூச்சிக்கோ தாம் செய்வது தெரியாது. தங்களுடைய செயலால் காடு உருவாகும் என்று சுத்தமாகத் தெரியாது.

 அவற்றின் உயிரியல் இயல்பும், உடலியல் செயலும் இயற்கையாக நடப்பவை.

அப்படி என்றால்?  

அவை சிந்தித்துச் செயல்படவில்லை.

மனிதன் மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிறான்.

மனிதனும் திடீரென சிந்திக்கவில்லை. அவனும் மற்ற விலங்குகளைப் போலவே இயற்கையோடு இயற்கையாகக் கலந்தே இருந்தான்.

எப்படி அவன் சிந்திக்கத் தொடங்கினான்?

எப்போது அவன் சிந்திக்கத் தொடங்கினான்?

அவனிடம் சிந்தனைவிதையை ஊன்றியது எது?

என்ற கேள்விகள் வருகிறதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். சிந்தனை என்றால் அது மூளையின் செயல்பாடு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் மனிதனின் முதல் சிந்தனை தோன்றியது எங்கே தெரியுமா?

அவனுடைய கை விரல்களில் இருந்து தான்.

கேளுங்கள்!

எப்படி?

( தத்துவம் அறிவோம் )

நன்றி - இயல் சிறார் மின்னிதழ்

 

Saturday, 16 May 2026

விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சிந்திக்குமா?



 

குழந்தைகளுக்கான தத்துவம் 3 

விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சிந்திக்குமா?

உதயசங்கர்


தாவரங்களும் சிந்திக்கின்றன. அதற்கும் ஒரு தத்துவம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அதே மாதிரி தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் சிந்திக்கின்றன.

உயிர் வாழ்தல்

இனப்பெருக்கம்

உயிர் வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல் அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளுதல்.

தன்னைப் பாதுகாத்தல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்குதல்.

அடுத்தது இனப்பெருக்கம். இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவி செய்வது, போன்றவற்றிற்கு இனப்பெருக்கம் அவசியம்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் விலங்குகள் மறைந்துவிடும்.

மேய்ச்சல் விலங்குகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணி விலங்குகள் மறைந்து விடும்.

ஒரு மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம்.

ஆனால் மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்?

மான்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக அனைத்துத் தாவரங்களையும் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள் மறைந்து விடும். அந்தப் பூச்சிகளை புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்து விடும்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இயற்கை ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. எவ்வளவு சிறிய வைரஸாக இருந்தாலும் சரி உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு தனித்தனியான குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம், இவற்றைக் கொடுத்திருக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதகேற்ப சிறப்பு குணங்களை பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன.

ஒரு இலைவெட்டி எறும்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்கிறது.  ஒரு கரப்பான்பூச்சி இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில் கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது.

அதை நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் நாம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது. அந்த உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாய் மாற்றங்களைச் சந்தித்திருக்க வேண்டும். இல்லையா?

இந்த மாற்றங்கள் தானாக உருவானதா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா?

உண்மை என்ன?.

புலனுணர்விலும் அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது.

அந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் உயிர்வாழும் உள்ளுணர்வு  ( Survival Instict ) அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு.

அதே போல புதிய உயிர்கள் தோன்றுவதும் மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது சிதைவு தான் காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஹோமோ சேப்பியன்ஸ் என்ற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியது கூட மரபணுக்களில் ஏற்பட்ட சிதைவினால் தான் ( Chromosome Mutations ) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

ஆக விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமே கூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவை இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா?

இவற்றிலிருந்து மனிதன் மட்டும் மாறுபடுகிறான்.

எப்படி?

( தத்துவம் அறிவோம் )

நன்றி - இயல் மின்னிதழ்