Sunday, 12 April 2026

புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா?

 

 

புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா?

உதயசங்கர்





இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டதால்  மக்கள் மனதில் இதிகாசங்கள் ஊறிப்போய் விட்டன. அந்தக் கதைகளில் வருகிற கதாபாத்திரங்களின் மீது தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டு தெய்வங்களின் அவதாரங்களென்று வழிபடப்பட்டதாலும்  யாரும் கேள்விகள் கேட்பதில்லை. ஏன் கேள்விகள் கேட்கலாமென்று எண்ணம் கூட வருவதில்லை.

பற்றாத தற்கு பெரியவர்களுக்காக எழுதுகிற எழுத்தாளர்களும் இதிகாசக்கதைகளை மறுவாசிப்பு என்ற பெயரில் மீண்டும் மீண்டும் எழுதி ( அப்படி எழுதுவதில் ஒரு வசதி இருக்கிறது, மக்கள் மனதில் ஏற்கனவே நிலைபெற்றிருப்பதால் அவர்களிடம் சுலபமாக விற்றுவிட முடியும் ) வருவதால் இதிகாசங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சமூகமாக மாறியிருக்கிறோம்.

இதிகாசங்கள் ஏன் உருவாயின?

முதலில் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் வரலாறு அல்ல என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் வரும் சம்பவங்களோ கதாபாத்திரங்களோ உண்மையானவர்களில்லை. அவை கதைகள். கற்பனை கலந்தவை. துளியூண்டு உண்மையின் மீது காலங்காலமாகச் சொல்லப்பட்ட கற்பனைக் கதைகள். புளுகு மாளிகைகள். அவை நாட்டார் கதைகளாக உருவாகி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பிறகு எழுதப்பட்ட காவியங்கள்.

மூலப்பிரதியை எழுதியது வியாசராகவோ, வால்மீகியாகவோ, இருந்தாலும் பின்னால் ஏராளமான இடைச்செருகல்களும் உருப்பெருக்கங்களும், மாறிவரும் புதிய சமூகச்சூழ்நிலைகளுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் அறவிழுமியங்களும், விளக்கங்களும் சேர்ந்து ஊதிப் பெருத்தவை.

ஒரே நேரத்தில் ஆரிய சமூகத்தில் இரண்டு விதமான பிரச்னைகள் எழுந்தன. முதலாவது வேத சமயத்துக்கெதிராக இந்தியாவில் உருவான இரண்டு சமயங்களான பௌத்தமும் சமணமும். அவை அரசுகளின் ஆதரவு பெற்ற சமயங்களாக மாறியதால் வேத சமயத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு. அதன் விளைவாக அதுவரை யாகங்களின் பெயரைச் சொல்லி மக்களிடம் செலுத்தி வந்த ஆன்மீக அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.  அதை எதிர்கொள்ள வேண்டிய நிலையும், இரண்டாவது ஆரியச்சமூகத்துக்குள் இருந்த பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல். அரசு அதிகாரத்தையும் ஆன்மீக அதிகார த்தையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடுகள். அத்துடன் வெகுமக்களிடம் வர்ணப்பாகுபாடுகளை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். ஏன் இந்த நிலைமை உருவானது?.

அதுவரை  இனக்குழுக்களாக இருந்த சமூகங்கள் உபரி உற்பத்தியின் வழியே நிலவுடமைச் சமூகமாக மாறிக் கொண்டிருந்த காலம். ஒரு நிலையான அரசாக உருவான காலம்.

அரசனின் வானாளவிய அதிகார த்தைச் சமூகம்  ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.  அதனால் தான் அரசனை கடவுளின் பிரதிநிதியாகவும், கடவுளாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்த எழுதப்பட்ட இலக்கியப்பிரதிகளே புராணங்களும் இதிகாசங்களும்.

. . இன்னும் சரியாகச் சொல்லப்போனால் புராண இதிகாசங்களின் வழியே ஏற்கனவே சொன்ன இரண்டு பிரச்னைகளை ஆரிய சமூகம் தீர்த்துக் கொண்டது.  பார்ப்பனர்கள் தங்களுக்கு அடுத்த நிலையிலுள்ள சத்திரியர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.  அதாவது அரசு அதிகாரத்தை சத்திரியர்கள் வைத்துக்கொள்ளவும் ஆன்மீக அதிகாரத்தை பார்ப்பனர்கள் வைத்துக்கொள்ளவுமான ஏற்பாடு நிகழ்ந்த து.  அதில் ஏற்படும் சமரசங்களையும்  மகாபாரததத்தையும் இராமாயணத்தையும் நுட்பமாக வாசித்தால் தெரியும்.

அதேபோல வர்ணப்பாகுபாட்டை உருவாக்கியது அதாவது மனிதர்களை நான்கு வர்ணங்களாகவும் அவர்களுக்கான உணவு, உடை, தொழில், இருப்பிடம் ஆகியவற்றை வரையறைத்துக் கொடுத்த து கடவுளே எனும் கருத்தாக்கத்தை மிக சுலபமாக மக்களிடம் பரப்பவும் இந்தப் புராண இதிகாசங்கள் பேருதவி செய்தன.

 

இதிகாசக்கதைகள் உருவானதின் தத்துவப்பின்புலம் என்ன?

வேதங்களை மட்டுமேஅபௌருஷ்யேஅதாவது காற்றிலே பிறந்த து என்று வணங்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் தங்களுடைய சமயத்தை வளர்க்க, வெகுசனமயமாக்க உருவ வழிபாட்டை நோக்கி நகரும்போது புராணக்கதைகளை உருவாக்கினார்கள். வேதங்களில் யாகங்களைப் பற்றியும், எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டுதல்கள், சூளுரைகள், இவையே பெரும்பாலும் இருந்த போது, இந்தியாவில் வளர்ந்த பௌத்தமும் சமணமும் வாழ்க்கை குறித்தும் வாழ்வின் அர்த்தம் குறித்தும் தத்துவத்தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது பார்ப்பனச் சமயத்துக்கு ஏற்பட்ட தேவை காரணமாகவே பிரமாணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், உபநிட தங்கள் உருவாயின.

அப்போது வாழ்ந்த வெகுமக்கள் குலதெய்வ வழிபாடு அல்லது நாட்டார் தெய்வ வழிபாடுகளின் வழியே தங்களுடைய முன்னோர்களை வழிபட்டார்கள். தங்கள் வாழ்க்கையுடன் ஒன்று கலந்த இந்த மண்ணில் வாழ்ந்த முன்னோர் வழிபாடு மிகப்பிரபலமாக இருந்த போது அந்த மக்களைக் கவர் கைலாயம், வைகுண்டம் என்று கற்பனையான அப்பாலை உலகங்களையும் தெய்வங்களையும் உருவாக்கினார்கள். அவர்களுக்கான கதைகளை உருவாக்கினார்கள். அவர்களை இங்கிருக்கும் நாட்டார் தெய்வங்களுடன் இணைத்தார்கள். உதாரணத்துக்கு முருகன். உழைப்பாளி மக்களின் தெய்வங்களுக்கு பூணூல் அணிவித்தார்கள்.அவர்களை மேல்நிலையாக்கம் செய்தார்கள். அதாவது பார்ப்பன, சத்திரிய குலத்துக்கு மாற்றினார்கள். அவர்களுக்கு பெண் கொடுத்தார்கள். பெண் எடுத்தார்கள். எல்லாம் கதைகளில் மட்டும் தான் என்பதை மறக்க க் கூடாது.

காலம் காலமாக இந்தக் கதைகளை வாய்மொழியாகச் சொல்லியும் அப்போதைய இந்தியாவிலிருந்த ஐம்பத்தியாறு  நாடுகளில் மக்களிடம் புழங்கிக் கொண்டிருந்த நாட்டார்கதைகளை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை இணைத்து ஊதிப்பெருக்கி ( இன்னமும் கூட அந்தத் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது ) இதிகாசங்களாகப் புனைந்தார்கள்.

அந்த இதிகாசங்களில் சொல்லப்படும் கதைகளின் கருத்தியல் என்ன? அவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்ல லாமா?

இருபெரும் இதிகாசங்களும் வாய்மொழி நாட்டார்கதையாக எப்படியிருந்ததோ தெரியாது. ஆனால் எழுதப்பட்டபோது அது மனுநீதியை, அதாவது மக்களை வர்ணங்கள் என்று சொல்லப்படுகிற பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பெருந்தொகுதிகளாகவும், சங்கர சாதிகள் என்ற சிறு தொகுதிகளாகவும் பிரித்த தை நியாயப்படுத்தும் விதமாகவே எழுதப்பட்ட து. அதாவது மக்களைப் பிறப்பால் மேல் கீழ் சாதிகளாகப் பிளவுபடுத்தும் வர்ணாசிரமத்தர்மத்தை  நிலைநிறுத்துவதற்காக, எழுதப்பட்டவை.

இந்தப் பெரும் பிரிவுகளுக்குள் வராத ஒரு பெரும்திரள் பூர்வகுடிமக்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்ட த்தகாதவர்களாகவும் ஊரை விட்டு, சமூகத்தை விட்டு வெளியேற்றி பார்த்தால் தீட்டு, தொட்டால் பாவம் என்று  ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்திய மனுநீதியை நியாயப்படுத்துகிற கதைகள்.

 ஹிந்து தர்மம், ப்ராமண தர்மம், சத்திரிய தர்மம், சூத்திரர் தர்மம் என்று ஒரே தர்மநியாயங்கள் கொட்டிக்கிடக்கும். இவற்றை இன்றைய குழந்தைகளுக்குச் சொல்லும்போது என்ன மாதிரியான உளவியல் பாதிப்பு ஏற்படும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டாமா? இந்தப் பிரிவுகளுக்குள் வராத பழங்குடி மக்கள், பூர்வகுடி மக்கள் மேலே குறிப்பிட்ட பிரிவினர்களுக்குச் சேவை செய்யவும், உயிர்த்தியாகம் செய்யவும் பிறந்தவர்கள் என்பது போன்ற கருத்தியல்களைச் சொல்ல லாமா?

இன்றைய நவீன சனநாயகயுகத்தில் இவற்றுக்கான பொருத்தப்பாடு என்ன என்பதை யோசிக்க வேண்டாமா?

 

மகாபாரதம், ராமாயணம் இரண்டுமே அரசர்களைப் பற்றிய, அவர்களது குடும்பங்களைப் பற்றிய, அவர்களுக்கிடையில் நடந்த காம, குரோத, காதல், அன்பு, தயை, ஈகை, கருணை, துரோகம், வஞ்சகம், இவற்றைப் பற்றிய கதைகள். இவற்றைச் சிறுவயதிலே தெரிந்து கொள்வதால் குழந்தைகளுக்கு என்ன பயன்?

 

மகாபாரதம் பழமையானது. அது ஒரே இனக்குழுவைச்சேர்ந்த இரண்டு பங்காளிகள், தாயாதிகள், வகையறாக்கள், கிளைகள், பிரிவுகள், இவர்களுக்கிடையே நிகழ்ந்த நிலத்துக்கான சண்டை. சுற்றியலைந்து கொண்டிருந்த நாடோடிகள் ஒரு இடத்தில் நிலையாக இருந்து அங்கிருந்த மக்களை சாம, தான, தண்ட, பேதங்களினால் உருட்டி, மிரட்டி, கொலைசெய்து, நிர்வாகம் செய்யத் தொடங்கிய காலம். குறிப்பாக இரண்டு இதிகாசங்களிலும் அவர்களை எதிர்த்த பூர்வகுடிகளைக் கொன்றழித்து ஆட்சியை நிலைநிறுத்தியதைப் பெருமையாகப் பேசுகிறது.

அப்படியா என்று கேட்பவர்களுக்கு, மகாபாரதத்தில், ஏகலைவன் கதை, இடும்பன்கதை, தொடங்கி இந்திரப்பிரஸ்த நகரத்துக்காக நாகர்களை அழித்தகதை அரக்கு மாளிகையில் தீக்கிரையான பழங்குடிகள் கதை, என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன. அதேபோல ராமாயணத்திலும் ராவணன், தாடகி, சூர்ப்பனகை, வாலி, சுக்ரீவன், ஜடாயு என்று கதைகளிருக்கின்றன.

யார் அந்த பூர்வகுடிகள் என்று யோசித்துப்பார்த்திருக்கிறோமா?

 

விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தவர்கள் எல்லாரும் அரக்கர்கள், காட்டுமிராண்டிகள், விலங்குகள், நாகரீகமற்றவர்கள், என்று இரண்டு இதிகாசங்களிலும் சித்தரித்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் யார்? என்று யோசித்திருக்கிறோமா?

 

இரண்டு இதிகாசங்களிலும் வருகிற குடும்ப உறவுகள், குழந்தைப்பேறுகள், குறித்த உண்மைகளைச் சொல்லமுடியுமா? இன்றைய அறிவியல்யுகத்தில் குழந்தைகளிடம் வரத்தினால் குழந்தை பிறக்கும், மாம்பழம் அல்லது பாயாசம் குடித்தால் பிள்ளை பிறக்கும் என்று சொல்வது அறிவுடமையாகுமா? பெண்ணடிமைத்தனத்தின் உச்சமாக இருக்கும் இரண்டு இதிகாசங்களைக் கேட்கும் ஆண் குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? பெண்குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

 

இதிகாசங்களிலும் வருகிற போர், துரோகம், வஞ்சகம், கருணை, பழிக்குப்பழி, சபதம், எல்லாம் குழந்தைகளுக்குத் தேவையா? மனிதமனவிசித்திரங்களைப் பற்றிச் சிறுவயதில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

 

வாய்மையைக் கடைப்பிடித்தல், கீழ்ப்படிதல், செய்ந்நன்றி, குருபக்தி, என்று ஆயிரம் வியாக்கியானங்களைச் சொன்னாலும் அவற்றுக்கு எதிரானதும் அவற்றில் இருக்கின்றன என்பதும், காலத்தின் துருவேறி இற்றுப்போன விழுமியங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமா?  அப்படிப் புதுப்பிப்பதினால் யாருக்கு பலன் என்று யோசிக்க வேண்டாமா? 80-களில் தொடங்கிய மகாபாரத, ராமாயணத் தொலைக்காட்சித்தொடர்கள் எப்படி சநாதனத்தையும் சடங்குகளையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்தானே.

புராண இதிகாசங்கள் வயது வந்தவர்களுக்கான இலக்கியம். கடந்த காலத்தின் அருங்காட்சியகம். நம்முடைய முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? என்பதற்கான இலக்கிய ஆதாரம். மனித மனவிகாரங்களின் கண்காட்சி. ஆனால் இப்போது அந்தக் காலத்துக்குத் திரும்பவோ, அதில் வாழவோ முடியாது.

அதனால் தான் இப்படியான பழமையான இலக்கியப்பிரதிகளுக்குள்  நுழைய வயது வரம்பு வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் வாசிக்கவும் தெரிந்து கொள்ளவுமான இலக்கியம். குழந்தைகளிடம் இவற்றைப் பற்றிச் சொல்வதோ, குழந்தைகளை வாசிக்க வைப்பதோ என்பது நாமே குழந்தைகளின், குழந்தைமையை ஆளுமைத்திறனின் சுதந்திரமான வளர்ச்சியைச் சிதைப்பதாகும்.

 

உலகம் முழுவதுமே இதே நிலைமைதான். முற்றான அதிகாரத்தை கடவுள், அரசன், இவர்களை மையமாகக் கொண்டே காவியங்களும், புராணங்களும், இதிகாசங்களும், பாடல்களும் புனையப்பட்டன.

 

இவையெல்லாம் உலக முழுவதுள்ள அனைத்து மதங்களுக்குமே பொருந்தக் கூடியவை. எந்த மதமும் கேள்விகளை அனுமதிப்பதில்லை. நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.

 

. இவற்றைப் படிப்பதற்கு வயது வரம்பு தேவைப்படுகிறது. ஏனெனில்  கடந்த காலத்தில் நிலவிய, பெண்ணடிமைத்தனம், அரசவழிபாடு, தந்திரம், துரோகம், பழிக்குப்பழி, இவற்றையே விழுமியங்களாகக் கொண்டிருப்பவை என்பதாலேயே எச்சரிக்கைத் தேவைப் படுகிறது.

நம்முடைய குழந்தைகளின் ஆளுமையை நிகழ்காலமும் எதிர்காலமும் தான் உருவாக்க வேண்டும்.

இறந்த காலக் கட்டுக்கதைகள் அல்ல.


நன்றி - புக் டே

 

Saturday, 11 April 2026

ஆதனின் பொம்மை - திரைக்கலைஞர் ரோகிணி


 மிக்க நன்றி - தோழர்..ரோகிணி

Common folks

சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

  சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

உதயசங்கர்



 குழந்தைகள் குட்டி மனிதர்கள். அவர்கள் பிறந்த து முதல் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டற்ற அவர்களது படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகத்தை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இடையறாத உடல், மற்றும் மூளைச் செயல்பாடுகளினால் புற உலகைப் புரிந்து கொள்கிறார்கள். படைப்பூக்கத்தின் மிக முக்கியமான கூறான வெகுளித்தனம் அல்லது இன்னொசென்ஸ் அதற்கு உதவுகிறது. கலையிலும் அந்த இன்னொசென்ஸ் இருப்பதினால் தான் குழந்தைகள் கலைஞர்களாகவே வளர்கிறார்கள். அப்படி எல்லையற்ற கற்பனை வானத்தில் சிறகடித்துப் பறக்கும் சிறார்களுக்கான இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளுக்கு எப்படிப் பட்ட இலக்கியத்தைக் கொடுக்க வேண்டும்? அல்லது அவர்களுக்கு எது பிடிக்கும்? அல்லது எதை விரும்புவார்கள்?

 

.      எல்லா உயிர்களின் அடிப்படை இலட்சியம் இன்பமாக வாழவது தான். அந்த இன்பத்துக்காகத்தான் இந்த பூமியின் அத்தனை உயிர்களும் வாழ்நாள் முழுவதும் போராடுகின்றன. கலையும் இலக்கியமும் மனிதர்களின் உணர்வுத்தளத்தில் அந்த இன்பத்தைக் கொடுப்பதற்காகப் பிறந்தவை. அதே நேரத்தில் கலையும் இலக்கியமும், இந்த வாழ்க்கை அனுபவங்களை, சிந்தனைகளை, கருத்துகளை, அழகியலோடு சொல்ல முயற்சிக்கிறது.  அனைத்துக் கலைவடிவங்களும் ஏதோ ஒரு கருத்தியலைப் பரப்புரை செய்கின்றன. ஆனால் பரப்புரை செய்வதெல்லாம் கலையாகி விடாது.

அப்படியென்றால் நேரடியான கருத்துப்பரப்புரைக்கும் கலைக்குமிடையில் பாரதூரமான வேறுபாடு இருக்கிறது. பரப்புரை அறிவில் செயலாற்றுகிறது. கலை மனதில் அல்லது உணர்வுநிலைகளில் ஊடாடுகிறது. அதனால் தான் கலைவடிவங்கள் சக்தி வாய்ந்த ஆயுதங்களாக எல்லாக்காலத்திலும் இருக்கின்றன.

ஆகவே குழந்தைகளுக்கான படைப்புகளிலும் அத்தகைய கலை இன்பம் முக்கியமானது மட்டுமல்ல அடிப்படையானதும் கூட.. இது பொது இலக்கியத்துக்கும் பொருந்தும் எந்தப் படைப்புகள் குழந்தைகளுக்கு கலைமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்புகளே சிறார்கள் விரும்பும் படைப்புகள்.

இன்பம் என்பது நகைச்சுவை என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

பெரும்பாலான சிறார் கதைகள் அதன் தலைப்புகளிலேயே ஒரு அறநெறி/நன்னெறி,/நீதிநெறி/அறிவூட்டும்/ கதைகளாகவே வெளிவருகின்றன. இந்த உலகத்திலேயே அறிவுரைகளால் தாங்கமுடியாத துன்பத்தை அடைகிறவர்கள் குழந்தைகள் தான்.

 

எப்போதும் அதைச் செய்யாதே இதைச் செய்யாதே அல்லது அதைச்செய் இதைச்செய் இப்படிக் கட்டளைகளால் அல்லது முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துகளால் குழந்தைகள் மீது மிகப்பெரிய வன்முறை நிகழ்த்தப்படுகிறது. குழந்தைகளின் இயல்பான எதையும் ஆராயும் ஆர்வம், அறியும் ஆர்வம், மாற்று சிந்தனைகள், மாற்று செயல்வடிவங்கள் எதையுமே வளரவிடாமல் முளையிலேயே சொன்னதைக் கேட்கும் கீழ்ப்படிதல் உளவியலை நமது சமூகம் திணிக்கிறது.

 

 உண்மையில் கலை மகிழ்ச்சி என்பது ஒரு படைப்பை வாசிக்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் ஒரு உணர்வு. ஒரு நிறைவு. அறிதலின் மலர்ச்சி. ஒரு புன்னகை. ஒரு சிரிப்பு. ஒரு புல்லரிப்பு. ஒரு இன்பமான உணர்வு. ஒரு மறக்கவியலாத துயரம்.

. துயரமும் கலை இன்பம் தான். நம்முடைய மனம் துயர்மிகு தருணங்களிலிருந்தும் ஏதோ ஒரு மனநிறைவை, உள்ளார்ந்த அமைதியை, புதிய அறிதலை, கொந்தளிக்கும் எழுச்சியை அடைகிறது. எனவே கலைமகிழ்ச்சி என்பதை சுபமான கதைகள் அல்லது கலை வடிவங்களென்று புரிந்து கொள்ளக் கூடாது.

 

சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

 

முதலில் சிறார்களுக்கான படைப்புகள் எந்த வயதினருக்காக இருந்தாலும் குழந்தைகளின் மொழியில் எழுத வேண்டும். அந்தந்த வயதுக்குழந்தைகளின் மொழிப்பழக்கம், சொற்பழக்கம், வாசிப்புத்திறன் குறித்த ஞானம் எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும். மொழி எளிமையானதாக இருப்பது மட்டுமல்ல அழகாகவும் இருக்க வேண்டும். வாசிக்கும்போது குழந்தைகளின் மனதில் ஆன ந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அறுதப்பழசான சொற்களையோ அல்லது வழக்கொழிந்த சொற்களையோ ( உதாரணத்துக்கு செல்வந்தர், தனவந்தர், குடியானவர், ) பயன்படுத்தக் கூடாது. அந்தச் சொற்களில் இளமை ததும்பவேண்டும். புதுமை இருக்க வேண்டும். துடிதுடிப்பு இருக்க வேண்டும்.

 

மொத்த த்தில் சிறார்களுக்கான படைப்புகளில் குழந்தைமையின் குதூகலம், ஆர்வம், தூண்டுதல், கேள்விகள், பதில்கள், அறிதல், புரிதல், இருக்க வேண்டும்.

 

சிறார் படைப்புகளில் குழந்தைமையின் வெகுளித்தனமும் யாரும் சிந்தித்திராத புதிய கோணங்களும் மிகவும் முக்கியம். வழக்கமான சூத்திரக்கதைகளை எழுதக் கூடாது. அவற்றை வாசித்தாலும் குழந்தைகள் மனதில் நிலைக்காது. மேலும் ஒரே மாதிரியான கதைகள் குழந்தைகளிடம் சிந்தனை வறட்சியை ஏற்படுத்திவிடும்.

 

அதீத புனைவுப்படைப்புகளில் எழுதும்போது நம்பமுடியாததை எழுதும்போது அதற்குப் பின்னால் அதன் நம்பகத் தன்மையும் இருக்க வேண்டும். உதாரணம் ஆலிசின் அற்புத உலகம். குட்டி இளவரசன், ஹாரிபாட்டர். எந்த மூடநம்பிக்கைகளையும், உதாரணத்துக்கு விதி, தலையெழுத்து, அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், போன்ற எந்தக் கருத்துகளையும் எழுதக்கூடாது. குழந்தைகளின் கேள்விகளை, தன்னம்பிக்கையை, முயற்சிகளைக் குறைத்துவிடும். ஊழையும் உப்பக்கம் காணும் உழைப்பை மட்டுப்படுத்திவிடும்.

சிறார் படைப்புகளில் அறிவியல் மனப்பாங்கு இருக்க வேண்டும்.

அறிவியல் மனப்பாங்கு என்பதை அறிவியல் தகவல்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. குழந்தைகளிடம் புதிய சிந்தனைகளை, புதிய கற்பனைகளை, எதையும் ஏன் எதற்கு என்று கேட்கும் படைப்புகளையே அறிவியல் நோக்குள்ள படைப்புகளென்று சொல்லலாம்.  .

 

      சமூகத்தின் பலவேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், அவர்களுடைய வாழ்வின் நம்பிக்கை, துயரம், முயற்சிகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களில் எழுதப்படும் படைப்புகளைச் சிறார் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

 

      அனைவரும் சேர்ந்து வாழ்வதின் மகிழ்ச்சி. அனைவரையும் இணைத்துக் கொண்டு வாழ்வதின் மகத்துவம். அனைத்துயிர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறித்த படைப்புகள். வாழ்வின் அனைத்து நிலைகளையும் அதாவது அனைத்து மதங்களைச் சார்ந்த குழந்தைகளின் வாழ்க்கை, மாற்றுத்திறன்களுடன் பிறக்கும் குழந்தைகள், தீராத நோய்களுடன் வாழும் குழந்தைகள், மரணத்துடன் போராடும் குழந்தைகள், என்று அனைத்துக் குழந்தைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகள்.எழுதப்பட வேண்டும்.

 

 வாழ்க்கை குறித்த கேள்விகள், வாழ்வதின் நோக்கம், வாழ்வதின் பயன், இருத்தலின் மகிழ்ச்சியும் துயரமும், பகுத்தறிவின் மகத்துவம், சுயமாகச் சிந்திப்பதின் அவசியம், இவற்றைப் பற்றியெல்லாம் சிறார் மொழியில் பேசுகிற படைப்புகள் ( குட்டி இளவரசன் ) உருவாக்கப்பட வேண்டும்.

நன்மை தீமைக்கு இடையிலான போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? தீமையின் பாதையிலிருந்து எப்படி விலகி நன்மையின் பாதையில் பயணிப்பது என்பதையெல்லாம் சாகசக்கதைகளாகச் சொல்லும் படைப்புகள். ( (ஹாரிபாட்டர்)

இளையோருக்கான துப்பறியும் கதைகள் சமூகப்பிரச்னைகளை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட வேண்டும். உதாரணம் சத்யஜித் ரேயின் பலூடா கதைகள். மிக முக்கியமானது இதெல்லாம் கலைப்படைப்பாக உருவாக வேண்டும். வெறும் பரப்புரையாகவோ, வறண்ட கருத்துக்குவியலாகவோ இருக்கக் கூடாது.

இப்ப்டியும் இன்னமும் கலையின் நூறு வண்ணங்களைப் பிரதிபலிக்கும் படைப்புகள் எழுதப்பட வேண்டும். வாசிக்கும் குழந்தைகளைக் கலை தன் மாயக்கம்பளத்தில் அமரவைத்து பறக்கச் செய்ய வேண்டும். வண்ண மயமான, நுட்பமான வேலைப்பாடுகள் மிகுந்த, பார்த்தாலே பரவசமூட்டும்படியாக அந்த மாயக்கம்பளம் இருக்க வேண்டும். அதற்காக படைப்பாளிகள் தீவிரமாக உழைக்க வேண்டும்.

சிறார் இலக்கியம் தானே என்ற அலட்சியமில்லாமல் பெரியவர்களுக்கு எழுதும்போது எப்படித் தீவிரமான உழைப்பைச் செலுத்துகிறோமோ அத்தகைய உழைப்பைக் கொடுத்துப் படைக்கும்போது தமிழிலும் உலகச் சிறந்த படைப்புகள் உருவாகும்.

அதற்கான காலம் மிக அருகில் வந்து விட்டது.

நன்றி - புக் டே