புதிய நாவல்
சதுரங்க வாழ்க்கை
உதயசங்கர்
வாழ்வும் மரணமும் விளையாடும் சதுரங்க விளையாட்டில் மரணத்தை ஏமாற்ற எத்தனை தந்திரங்கள்? எத்தனை குயுக்திகள்? எத்தனை முறை சமநிலையில் மரணத்தை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது வாழ்க்கை. ஆனால் எப்போதும் தப்பிக்க முடியாது. மரணம் பதுங்கிக் காத்திருக்கிறது வேட்டையாட...
1.
இதுவரை
கதிரைப் பற்றி எதுவும் மோசமாக கேள்விப்படவில்லை. ஒருவேளை அப்படி எதுவும் நடந்திருந்தாலும் தெரியாதவரை அவன் உயிரோடிருக்கிறான் என்றே நினைத்துக் கொண்டிருக்கலாம். அவன் இறந்து போயிருந்தாலும் தான் என்ன செய்ய முடியும்? எப்படியானாலும் நான் நீங்கள் அவன் அவர்கள் எல்லோரும் ஒரு நாள் மரணிக்க வேண்டியவர்கள் தானே. உண்மையில் நம் எல்லோர் வாழ்க்கையின் மீது கட்டற்ற அதிகாரத்தை மரணம் தன்னுடைய கையில் வைத்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் என்ன ஆட்டம் போட்டாலும் கடைசியில் மரணம் தான் வெற்றிப்புன்னகையை விரிக்கிறது. என்ன கஜகரணம் அடித்தாலும் சரி. எத்தனை மருத்துவம், பணிவிடைகள், வசதிகள், இருந்தாலும் கடைசியில் மனிதன் மரணத்தின் முன்னால் தலைகுனிந்து அநாதரவாய் நிற்கவும் கைகளை விரித்து தன்னை ஏற்று விடுதலை கொடுக்கும்படி மன்றாடவும் வேண்டியதிருக்கிறது. வாழ்வைப்போலவே மரணமும் இயற்கையானது தானே என்று சிலர் வாய்வார்த்தைகளில் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளில் இருக்கும் நடுக்கத்தை அதைச் சொல்லும்போதே உணரமுடியும். மற்ற ஜீவராசிகள் எப்படியோ ஆனால் மனிதன் மரணத்தை விரும்புவதில்லை. ஏனெனில் நம்முடைய கலாச்சாரத்தில் மரணம் ஒரு கொடிய தண்டனையைப் போலவும் வாழ்வது இனிய பரிசு போலவும் கற்பிதம் உருவாகி விட்டது. வாழ்க்கை முழுவதும் உறவுகள், உணர்ச்சிகள், இன்பதுன்பங்கள், பொருட்சேர்க்கைகள், கடன் தொல்லைகள், செய்ய வேண்டிய கடமைகள், லட்சியங்கள், என ஓயாத
அலைகளில் நீங்கள் பயணித்துக் கொண்டேயிருக்கலாம். மேலும் கீழும் ஆடிக்கொண்டிருப்பதில் தான் உயிர்த்துடிப்பு.
மரணம்
தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆனபின்னால் மனிதன் மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது? இதைப்புரிந்து கொள்ள மனிதன் கடும்பிரயத்தனங்களைச் செய்கிறான். சொல்லப்போனால் அத்தனை மதக்கோட்பாடுகளும் மரணத்தை வைத்தே தத்துவவிசாரங்களைச் செய்கின்றன. நல்ல வருமானமும் கிடைக்கிறது. வேதகாலநசிகேதன் முதல் என்னுடைய நண்பன் கதிர் வரை மரணத்தைப் புரிந்து கொள்ளவே எல்லோரும் அவரவர் சக்திக்கேற்ப முயற்சிக்கிறார்கள். இல்லாத கேள்விக்கு விடை தேடியே மனவெளியில் அலைந்து திரிகிறார்கள்.
என்னைப்
பொறுத்தவரை கதிர் உயிரோடு இருப்பதான கற்பனையே போதுமானது. ஆனால் கதிர் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானதே என்பது அவனைத் தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். அவனுக்கும் கூட தெரிந்திருக்கலாம். தெரியாதமாதிரி பாவனை செய்திருக்கலாம். வாழ்வின் ஒவ்வொரு துளியையும் சொட்டு சொட்டாக ருசிக்கவேண்டுமென்று எப்போதும் ஏங்கிக்கொண்டிருந்த அவன் மரணத்தின் அறிவிப்பை எப்படி ஏற்றுக் கொள்வான். வாழ்வதற்கான பெருவிருப்பத்துடன் கதிர் இருந்தான். அவன் சாவதற்கான வயதுமில்லை. மரணத்துக்கு இது ஒரு ஆடுபுலி ஆட்டமோ, சதுரங்கமோ, தாயக்கட்டமோ, பாம்புக்கட்டமோ, தெரியவில்லை. அன்றாடம் அதன் கோரப்பசிக்கு பூவுலகின் ஜீவராசிகள் இரையாகிக் கொண்டேயிருக்கிறார்கள். மனிதனைத் தவிர மற்றவற்றிற்கு மரணம் ஒரு பிரச்சினையில்லையோ என்னவோ. மிருகங்களும் பறவைகளும் பிறந்ததிலிருந்தே மரணத்தின் நிழல் பின் தொடர கிடைத்த வாழ்க்கையை கொண்டாடித் தீர்க்கின்றன. மனிதன்
மட்டும் தான் பிறந்ததிலிருந்தே மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான அனைத்து உபாயங்களையும் செய்து கொண்டிருக்கிறான். உயிரைத்தக்க வைக்க இயற்கைக்கு மாறான அனைத்து ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறான். இப்படிச் சொல்வதால் எனக்கு சாவதற்கு விருப்பமா என்று கேட்காதீர்கள். நானும் மனிதன் தானே.
மரணம்
என்பது முடிவா? இல்லை தொடக்கமா? ஒருவேளை மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டால் இவ்வளவு அச்சம் இருக்காதோ. ஆனால் யார் சொல்லுவார்கள்? அப்படியே சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ளுமா? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஆன்மீகமும், அறிவியலும் தொடர்ந்து ஆய்வு செய்து சொன்னவற்றையெல்லாம் மனிதன் ஏற்றுக்கொண்டு விட்டானா?
ஏன்
மனிதர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். மரணத்திற்குப் பின்னும் ஏன் வாழ ஆசைப் படுகிறார்கள்? அதனால் தான் வேறு ஒரு உலகம் வேறு ஒரு வாழ்க்கை என்று கற்பனை செய்கிறார்களா? மரணத்தின் வழி எதைக் கடக்கிறார்கள்? புராணங்கள் சொல்கிற பிறவிப்பெருங்கடலையா? ஜீவாத்மாக்களின் இறுதி யாத்திரையா? ஜீவாத்மாக்கள் மரணத்துக்குப் பின் பரமாத்மாவுடன் தான் கலந்து முக்தியடையும் என்பதற்கு என்ன அத்தாட்சி? யார் அப்படி பரமாத்மாவுடன் கலந்து முக்தியடைந்து வந்து சொன்னவர்கள்? இல்லை யாராவது மரணத்துக்குப்பின் பெருவாழ்வு உண்டென நிருபித்திருக்கிறார்களா? எதனால் ஒரே நேரத்தில் மரணத்துக்கு எதிராகப்போராடவும் அதைக் கண்டு அஞ்சி நடுங்கவும், இயலாதபோது மரணத்தை ஆதூரத்துடன் வரவேற்கவும் செய்கிறார்கள் மனிதர்கள்?
மரணம்
ஒரு புதிரா? புதிரின் வழியா? வாழ்வைப்
போலவே அதுவும் ஒரு புனைவா? இல்லை யாரோ நடத்தும் நாடகத்தில் நம்முடைய கதாபாத்திரத்தின் முடிவா? திரை இறங்கி நம்மைச் சுற்றி இருள் சூழ தனித்து பாழ்வெளியில் நடந்து போக விதிக்கப்பட்டவர்களா? எங்கே சென்றாலும் ஒரு முறைக்கு நூறுமுறை போகும் இடம் பற்றி விசாரித்து உறுதி செய்கிற நாம் மரணப்பாலையில் மட்டும் செல்லும் முன் எதையும் விசாரிப்பதில்லை. அப்படி விசாரிப்பதான பாவனைகள் தான் புராண, இதிகாச, கட்டுக்கதைகளா? சொர்க்கமும் நரகமும் ஏன் பூமியின் சாயலில் இருக்க வேண்டும்? ஏன் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் ஒரே மாதிரியான சொர்க்க நரகத்தில் இல்லை? இந்துக்களின் சொர்க்கமும் நரகமும் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது. எருமையின் மீது ஏறி கொடூரமான மீசையுடன் வலம் வரும் எமதரும ராஜா அவருடைய கணக்கப்பிள்ளையான சித்திரகுப்தனிடம் தான் பாவ புண்ணியக் கணக்குகளைக் கேட்கிறார். சித்திரகுப்தன் கணக்கை ஏறுமாறாக எழுதி விட்டால் அவ்வளவு தான் எண்ணெய் சட்டிகளும், தோலுரிக்கும் சாட்டைகளும் தயாராக இருக்கும். கிறித்துவர்கள் ஜட்ஜ்மெண்ட் நாளன்று அவர்கள் பிதாவின் முன்பு பாவங்களும் மன்னிப்புகளுமாக நிற்கிறார்கள்? எப்போதும் பாவங்களைச் செய்யவும் அதற்கு மன்னிப்பு கேட்கவும் அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இசுலாமியர்கள் இறைத்தூதரின் முன் அவர்கள் செய்த ஹராம்களுக்கேற்ற வசிப்பிடத்தைப் புக்கிங் செய்ய வரிசையில் நிற்கிறார்கள். விடுமுறைக்காலத்தைக் கழிப்பதற்காக புக்கிங் செய்யும் சாதாரண, அசாதாரண, ஒரு, இரு, மூன்று, நான்கு, ஐந்து நட்சத்திர விடுதிகளைப் போல சொர்க்கமும் நரகமும் இருக்குமோ? அப்படியென்றால் இங்கே வசதியானவர்களுக்குத்தான் நட்சத்திரவிடுதிகளின் யோகம் கிடைக்கும். அங்கே எப்படியோ? யாருக்குத் தெரியும்? கண்டவர் விண்டிலர்.
ஒருவேளை
மரணம் ஒரு விடுமுறை காலமோ? அலுவலகத்தில் முப்பது வருடங்கள் நகலெடுத்தோ, கணிணியின் பொத்தான்களைத் தட்டியோ நாற்காலியின் இருக்கையை தேய்த்தோ வேலை பார்த்த சாதனைக்கு நன்றி சொல்லி ஓய்வு கொடுத்து நீண்ட விடுமுறையில் அனுப்புகிறார்களே அதே மாதிரி நாம் வாழ்ந்து கிழித்த சாதனையை வாழ்த்தி நீண்ட விடுமுறை கொடுத்து மரணம் அனுப்பி வைக்கிறதோ? அப்படியென்றால் கம்முட்டேஷன், கிராஜுவிடி, பென்ஷன், எல்லாம் கிடைக்குமா? கிண்டலா பண்றே பாரு உனக்கு இருக்குடி எண்ணெய்ச்சட்டி, சிலுவை, கசாப்பு, என்று இந்து, கிறித்துவ, இசுலாமிய நரகங்களிலிருந்து குரல் கேட்கிறதோ? நான் தத்துவவாதி இல்லை. ஆன்மீகத்திலும் நம்பிக்கையில்லை. சாதாரணமானவன். மிகச் சாதாரணமானவன். வாழ்க்கையை துளியும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக அநுபவிக்கத்துடிக்கும் அற்பன்.
அப்புறம்
ஏன் இப்படி? எதுக்கு இவ்வளவு வியாக்கியானங்கள்? கேலி, கிண்டல், ஏகடியம், ஏத்தாப்பு, என்று கேட்க நினைக்கும் வாசகர்களுக்கு என்னுடைய தாழ்மையான பதில் நான் அறியாதவன். அறிதொறும் அறியாமை உறுத்துகிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். எனவே மரணத்தைப் பற்றி யோசிக்கிறேன். இது நீரைப் போல எளிமையானது. மலையைப்போல உண்மையானது. வானத்தைப் போல தெளிவானது. நான் சந்தித்த மரணங்கள். பலருடைய மரணப்பாதையில் அவர்களுடைய கைகளைக் கோர்த்துக் கொண்டு நடந்திருக்கிறேன். அவர்களை மரணத்தின் வாசல் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பியிருக்கிறேன். ஏன் நானே கூட மரணம் என்னைக் கவனிக்காத சமயத்தில் அதைத் தொட்டுப்பிடித்து விளையாடியிருக்கிறேன்.
இந்தப்பிரபஞ்சத்தில்
உயிருள்ள ஒவ்வொன்றும் பிறக்கும்போதே வாழ்வு ஒரு முகமாகவும் மரணம் இன்னொரு முகமாகவும் கொண்டே பிறக்கின்றன. பிறந்த பிறகு வாழ்வும் மரணமும் நிழலும் நிஜமுமாக ஒன்றையொன்று துரத்திக் கொண்டேயிருக்கின்றன. எது நிழல்? எது நிஜம்? என்பதில் தான் குழப்பம். அதனால் தான் மௌனி தன் கதையில் எவற்றின் நிழல்கள் நாம்? என்று கேட்டார். வாழ்வதில் தான் மரணத்திற்கு அர்த்தம் கிடைக்கிறது. அதே போல மரணத்தில் தான் வாழ்வும் விகசிக்கிறது. வாழ்வோடு பிறக்கிற மரணம் வாழ்வு முழுவதும் உடன் பயணிக்கிறது. வாழ்வு ஒவ்வொரு கணமும் மரணத்தையும் மரணம் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையையும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும். வாழ்வும் மரணமும் விளையாடும் இந்தச் சதுரங்க விளையாட்டில் எப்போதும் மரணமே ஜெயிக்கிறது. ஆனால் வாழ்நாள் முழுவதும் மரணம் வைக்கின்ற ஒவ்வொரு செக்கிலிருந்தும் வாழ்வு தன்னிலிருந்து எதையாவது இழந்து அல்லது பலி கொடுத்து மரணத்தின் ஆலிங்கனத்திலிருந்து தப்பிக்கிறது. மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக விலகி ஓடுகிறபோதே மரணத்தின் அருகில் சென்று கொண்டிருக்கிற விந்தை நிகழ்கிறது. இந்த விந்தை யே வாழ்வை
வசீகரப்படுத்துகிறது. எப்போதும் எல்லோரையும் நிழலெனப் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிற மரணம் சிலருடைய வாழ்வின் முன்னால் அபத்தமாகி விடுகிறது. மரணம் நிரந்தரமானது என்றாலும் அதை விட நிரந்தரமான வாழ்க்கையைச் சிலர் வாழ்ந்து விடுகிறார்கள். எல்லோரையும் வெற்றி கொள்ளும் மமதைமுகம் கொண்ட மரணம் அப்போது தோற்றோடிக் கொண்டிருக்கிறது.
பெரும்போலோர்
மரணத்துடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டே கழிக்கிறார்கள். பிறந்ததிலிருந்து புரிந்து கொள்ள முடியாத வாழ்வின் சிடுக்குகள் பிரியும் வேளை மரணம் தரிசனம் தருகிறது. அப்போது மனிதன் எனக்கு வாழ்வென்றால் என்னவென்று புரிந்து விட்டது. இன்னும் ஒரு தடவை வாழமுடிந்தால் சரியானபடி வாழ்வேன் என்று மரணத்திடம் தவணை கேட்கிறான். கண்களோ, காதுகளோ, அறிவோ இல்லாத முரட்டு யந்திரம். யுத்தமாகவோ, வெறுப்பாகவோ, நோய்மையாகவோ, தூக்குக்கயிறாகவோ, அரிவாளாகவோ, விஷமாகவோ, தூக்கமாத்திரையாகவோ, கொடுங்கரங்களாகவோ, கத்தியாகவோ, ஏன் இந்த உலகிலுள்ள அத்தனை அதிகாரங்களும் மரணத்தின் ஏவலாட்கள் தானே. மரணத்துக்குத் தன்னைப் பற்றியும் தெரியாது. வாழ்வைப்பற்றியும் தெரியாது. குழந்தைகள் என்றும் இளைஞர் என்றும் பெண்கள் என்றும் முதியவர்கள் என்றும் அது பிரித்துப் பார்ப்பதில்லை. அதற்குக் கண்களில்லை. காதுகளில்லை. உருவமற்ற அதன் இருப்பு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. கடவுளை விட யதார்த்தமானது. மரணம் மரணமாகவேயிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றியவுடனேயே அதுவும் தோன்றிவிட்டது. உயிர் பரிணாமவளர்ச்சி பெற்று மாறிக் கொண்டேயிருந்தாலும் மரணம் மாறவே இல்லை. அதன் வழிகள் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்கின்றன.. அத்தனை வழிப்பெருக்கத்தையும் மனிதனே ஏற்படுத்திக் கொடுத்தான். தன் வாலை தான் விழுங்கும் பாம்பென வாழ்வு மரணத்தை விழுங்கி அதனை இல்லாமல் செய்து விடப்பார்க்கிறது. ஆனால் கெடுவாய்ப்பாக தன்னையே முழுங்கி தானில்லாமலாகிறது.
கடைசியாக
கதிரின் வாழ்வின் அந்திமநாட்கள், நிமிடங்களில் வாழ்வின் துடிதுடிப்பையும், மரணத்தின் பேரமைதியையும் கண்டு உணர்ந்திருக்கிறேன். இப்போது அவனுடன் மரணம் விளையாடுகிறது. எப்போது வேண்டுமானாலும் என்னுடனோ உமாசங்கருடனோ, சந்திரமௌலியுடனோ, யாருடன் வேண்டுமானாலும் விளையாடலாம். மரணம் விளையாடும் விளையாட்டின் விதிமுறைகள் அதற்கு மட்டுமே தெரிந்தவை. அதனால் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவுட் ஆகலாம். மரணத்தின் விதிமுறைகள் நிரந்தரமானவையுமில்லை. மனிதனுடனான விளையாட்டில் சாலிப்பு ஏற்படும்போது அது விதிமுறைகளை மாற்றிக்கொள்ளும். கணந்தோறும் உருமாறும் கொலைக்கருவியான மரணத்தின் முன்னால் மனிதனுக்கு நிச்சயமான தோல்வி தான். ஆனாலும் எவ்வளவு நப்பாசை! இன்னமும் கூட மரணத்தை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையோ ஏமாற்றித் தப்பித்து விடலாம் என்ற பேராசையோ மனிதனை அலைக்கழிக்கத்தானே செய்கிறது.
என்னுடைய
நாற்பத்தைந்து வயதில் இப்படியான சிந்தனைகள் வருவதற்கு அதுவரை நான் கண்ட மரணங்களின் புதிர். அதிலும் கதிருடனான கடைசி நாட்கள். அந்த உரையாடல்கள். கதிர் இறந்திருப்பான் என்பதை நம்ப மறுக்கிற அந்த உரையாடல்களின் வழி. வாழ்வையும், மரணத்தையும் சமதூரத்தில் வைத்து நாங்கள் நடத்திய சதுரங்க விளையாட்டு.
( விளையாடுவோம் )
