Thursday, 3 September 2026

எங்கிருந்து வந்தன இத்தனை சாதி மதங்கள்?

 

 

எங்கிருந்து வந்தன இத்தனை சாதி மதங்கள்?

க.கண்ணன்





    மனிதனின் பரிணாம வளர்ச்சியென்பது குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதே அறிவியல் சான்று.அவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன் அவனின் உணவுத் தேவைகளுக்காக முதலில் வேட்டைச் சமூகமாகவும்,மரங்களிலும் செடி கொடிகளிலும் கிடைக்கும் பழங்களையும் தானாக பூமிக்கடியில் விளைந்து கிடக்கும் கிழங்குகளையுமே உண்டு வாழ்ந்தான்.அதன் பின்பு தான் ஒரு வேளாண் சமூகமாக உருவெடுத்தான்.அந்த சூழலில் அனைவரும் ஒரே சமூகமாகவே இருந்தார்கள் மற்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.இதில் எங்கிருந்து வந்தது இத்தனை சாதி,மதங்கள் என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழுகிறது? எழ வேண்டும்.

    ஆரியர்களின் வருகைக்கு பின்னரே தலையிலிருந்து பிறந்தவன் பார்ப்பனன் தோளிலிருந்து பிறந்தவன் சத்ரியன் தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன் பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டனர். இவ்வர்ண பகுப்பு நான்காண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியதாகவே இருந்தது. அதன் பின்பு தான் நாவர்ணங்களுக்கு ஏற்றார் போல் ஆசிரமங்களும் உருவாகின.இதன் அடிப்படையில் தான் வர்ணாசிரம கோட்பாடு உருவாகியது. குருகுலத்தில் பயிலும் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்றார் போல் சிறந்து விளங்கினர்.

    இதை அடிப்படையாக வைத்தே ஆசிரமத்தின் குருவானவர் அவர்களுக்கு பூணூல் அணுவித்து வர்ணங்களை ஒதுக்கினார். அப்பொழுதும் அதில் மேல் கீழ் உயர்வு தாழ்வு என்றில்லை. எல்லோரும் ஒன்றாகவே கலந்திருந்தனர். இவ்வாறு ஒதுக்கப்பட்ட வர்ணங்கள் நீண்ட ஆண்டுகளுக்கு கடைபிடிக்கும்படியானது. அதனால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை வர்ணம் மாறுவது அழிந்து போனது. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் வேறு வேறு வர்ணங்களாகவே இருந்தனர். இதனால் பார்ப்பனர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ள குருகுல ஆசானிடமிருந்து வர்ணங்கள் ஒதுக்கும் முறையே தாங்களே பெற்றுக் கொண்டு தந்தை எவ்வர்ணமோ அதுவே அவர்களின் வாரிசுகளுக்கும் உரியதென்று தக்க வைத்துக் கொண்டனர்.

    பின் தீண்டாமை தீட்டென்று பார்ப்பனர்கள் சூத்திரர்களை தொடக்கூடாது, அதே போன்று சூத்திரர்களும் பார்ப்பனர்களை தொடக்கூடாதென்று அவர்களை அவர்களே ஒதுக்கி வைத்துக் கொண்டனர்.அப்படி பார்த்தால் பார்ப்பனர்களும் தீண்டத்தகாதவர்கள் தானே ?

    இதில் பார்ப்பனர்கள் யாகங்கள் வளர்ப்பது மந்திரங்கள் ஓதுவது பலியிடுவது போன்ற காரியங்களை செய்பவர்களாகவும் சத்ரியர்கள் போர் செய்பவர்களாகவும் வைசியர்கள் வணிகம் பொருளாதாரம் போன்றவற்றில் ஈடுபவர்களாகவும் சூத்திரர்கள் இவர்கள் அனைவருக்கும் உழைத்து கொடுக்கும் ஒரு தொழிலாளர்களாகவே பகுக்கப்பட்டனர்.

    இயற்கையை கும்பிட்டு வந்த மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது இறந்து போனாலோ அது ஆவிகளின் மூலமாக செயல்படுவதாகவும் அதைக் கட்டுப்படுத்த மந்திரங்கள் உதவும் என்றும் அதை பார்ப்பனர்களே செய்தாக வேண்டுமென்றும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அது இன்றளவும் நாம் கடைபிடித்துக்கொண்டு வருகின்றோம்.

    உடலில் ஏதோ ஒரு பாகம் செயலிழந்து போனால் அதைப்போலவே “போலச் செய்வது” போன்ற சம்பிரதாயங்கள் உதாரணமாக கண்ணில் எதாவது குறைபாடு வந்தால் கண் வாங்கி வைப்பது,குழந்தைப்பேறு இல்லையென்றால் தொட்டில் வாங்கி கட்டுவது,திருமணம் ஆகவில்லையென்றால் தாலி கயிறு கட்டுவது போன்ற பழக்கங்கள் உண்டாகின.

    புதிதாக வீடு கட்டினாலோ,ஒரு பெண் பூப்படைந்தாலோ,திருமணமோ, பிறப்போ அல்லது இறப்போ‌ இது போன்ற பல காரியங்களில் தீட்டு கழித்தால் தான் நல்லதென்று நம் புத்திக்குள் புகுத்தியதோடு, இடது கை மற்றும் வெள்ளிக்கிழமையானால் காசு குடுத்தல் கூடாது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களையும் நமக்குள் பழக்கப்படுத்தி அதோடு தான் நாம் இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    அதோடு மட்டுமல்லாமல் இந்த சமூகம் தாய்வழி சமூகமாகவே இருந்தது. பார்ப்பனர்கள் பெண் என்பவள் வீட்டிலேயே இருந்து அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டுமென்றும் அவள் தீட்டு என்பதோடு மட்டுமல்லாமல் வெளியில் அவளது தொடர்பு இல்லாமலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் பெண்களே கடைபிடிக்குமளவு பழக்கப்படுத்தி அவர்களை ஒரு ஆணாதிக்க சூழ்நிலையிலேயே வைத்திருந்தார்கள்.அதற்கு பெண்களும் பழகியிருந்தார்கள். இப்பொழுதும் அது பழக்கத்திலேயே இருக்கிறது.இதற்கு பின்பு தான் பார்ப்பனர்கள் இதை ஆண் வழிச் சமூகமாக மாற்றினார்கள்.இதற்காகத் தான் பெரியார் சடங்கு சம்பிரதாயங்களை மறுத்ததோடு மட்டுமல்லாமல் பெண் அடிமைத்தனத்தையும் உடைத்தெறிந்தார்.

    இச்சடங்கு முறைகளை உடைத்தெறிந்த பௌத்த சமணத்தவரையும் புஷ்யமித்ர சுங்கன் என்பவரின் ஆட்சிக்காலத்தில் அவர்களை ஒடுக்கியதோடு அச்சமயத்தில் பார்ப்பனர்கள் அவர்களுக்கு இணங்க மனுஸ்மிருதி என்ற சட்ட புத்தகத்தை இயற்றினார்கள். மனுஸ்மிருதியில் பெண்கள் அவர்களுக்கான சுதந்திரத்தை பெற்றுவிடக்கூடாதென்றும் அவர்கள் கல்வி கற்று அறிவை பெறக்கூடாதவர்களாகவும் அவள் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்ல வைப்பவள் என்றும் பெண்களை பெரும்பாலும் கட்டுக்குள் வைத்திருக்கும் படியே அதில் இருந்தது. இதன் பொருட்டே அவள் சொந்தமாக யோசிக்க கூடாதென்று சிறுவயதில் திருமணமும் மறுமணம் செய்து கொள்ள உரிமையின்றி கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்களும் இருந்தன. இதனாலேய டாக்டர் அம்பேத்கர் நான் இந்துவாக பிறந்தாலும் ஒரு இந்துவாகவே இறக்க மாட்டேனென்று சொன்னார்.அவர் பௌத்த மதத்தையும் கடைபிடித்தார். இதற்காகவே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நாம் இன்றளவும் கொண்டாடும் சட்டங்களை வகுத்தார்.

    மனுஸ்மிருதி எழுதப்படுவதற்கு முன்பு புறமணமுறை இருந்திருக்கிறது.இதில் யார்‌ யாரை வேண்டுமானாலும் மணமுடித்துக் கொள்ளலாம் இதில் உயர்வு தாழ்வு மேல் கீழ் என்றில்லை.இதில் அனைவரும் கலந்திருந்தார்கள்.ஆனால் பார்ப்பனர்கள் தாங்கள் பார்ப்பனர்களாகவே இருக்க வேண்டுமென்று புறமணமுறையே தவிர்த்து அகமணமுறையே கையாண்டனர்.பார்ப்பனர்களாலேயே வர்ணங்கள் பிரிக்கப்பட்டு அதன் மூலம் பல சாதிகள் உருவாகின.இன்று நாம் எல்லா சடங்கு முறைகளையும் ஏற்றுக் கொண்டு சாதிகளையும் உயர்வாக நினைத்துக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டியும் தாக்கியும் சண்டையிட்டுக் கொள்கிறோம்.

    ஆகவே நாம் குரங்கிலிருந்து தோன்றிய மனிதனைப் போல் எந்த சமூகமும் இல்லாமல் ஒரே சமூகமாக இருந்ததைப் போலவே இப்பொழுது மக்களும் சாதி மதமின்றி அனைவரும் சமம் என்றும்,ஒன்றோடொன்று கலந்து இணைந்திருத்தலே வேண்டுமென்றும் சடங்கு சம்பிரதாயங்களை முடிந்த அளவு புறக்கணிக்க வேண்டுமென்றும் இப்புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

    சாதிகளின் உடலரசியல் சாதிகளை உடைப்பதோடு மட்டுமல்லாமல் சம்பிரதாயங்களையும் உடைத்து நாம் முன்பு எப்படி இருந்தோம் என்பதையும் சிந்திக்க வைக்கிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு

விவரம்

நூலின் பெயர்:

சாதிகளின் உடலரசியல்

ஆசிரியர்:

உதயசங்கர்டே

வெளியீடு:

நூல் வனம் / 9751549992

விலை:

₹.75

அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கண்ணன்.க
வல்லம்பட்டி
விருதுநகர் மாவட்டம்

நன்றி -புக் டே

 

Tuesday, 1 September 2026

சாதிகளின் உடலரசியல் – வாசகப்பார்வை

 

சாதிகளின் உடலரசியல் வாசகப்பார்வை

.ஷெரீப்



 

தோழர் உதயசங்கர் அவர்களது சாதிகளின் உடலரசியல் என்ற கட்டுரைத் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. வரலாற்றை பின் நோக்கி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது குறித்த தகவல்களை விரும்பி படிப்பேன்.தந்தை பெரியார் அவர்கள் எதையும் ஏன்,எதற்கு, எப்படி என கேள்வி கேட்க வேண்டும் என்பார். தத்துவ ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் கலீலியோ கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சி கோடபாட்டை மனித சமூக வளர்ச்சிக்கு உட்படுத்தி ஆய்வு செய்து மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்றவையெல்லாம் மாறக் கூடியது என்றும் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை கண்டுபிடித்தார். உழைப்பினால் தான் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொன்னார். பொருள் முதல்வாதம் என்றால் இந்த உலகத்தில் பொருள் தான் முதலில் தோன்றியது. அதன் பிறகு தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு உயிரினம் தோன்றியது. முதல் உயிரிணத்திலிருந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் மனித உயிரினம் சிம்பன்ஸி குரங்கிலிருந்து தோன்றியது. இதிலிருந்து தான் மனித உயரினம் பல்கிப் பெருகியது.மனிதனின் முதல் நிலை ஆதிப் பொதுவுடமைச் சமூகமாக இருந்தது.. இதன் பிறகு ஏற்பட்ட மனித சமூக வளர்ச்சினக்குப் பின்பு தான் சாதி தோற்றம் குறித்து இந்நூல் பேசுகிறது.

மனிதன் இயற்கை உற்பாதங்களுக்கான காரணங்களை அறியாததினால் தன்னை மீறிய சக்தினை கட்டுப்படுத்த மந்திரங்களை,சடங்குகளை கண்டுபிடித்தான்.

முற்போக்கு சக்திகளும் மௌ சாட்சிகளாக மக்களின் பொதுப்புத்தியில் தலையிடும் திட்டங்களின்றி அமைதியாக இருக்கின்றன. அறிவியலின் மகத்தான சாதனைகள் எதுவும் மக்களுடைய பொது புத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

மனிதன் இறந்த பின்பு சடலத்தை எரிப்பதற்காக ஒரு சட்டியில் தீக்கங்கை போட்டு அதற்கு கொள்ளிச்சட்டி என பெயரிட்டான். அந்த காலத்தில் கொள்ளிச்சட்டி தேவைப்பட்டது. ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சியில் தீப்பெட்டி, மின்சாரம் என வந்து விட்ட பின்பும் இன்றும் கொள்ளிச்சட்டி எடுத்துச் செல்கிறான். கேட்டால் சாஸ்திரம் என சொல்லி அறியாமையிலிருந்து விடுபட மறுக்கிறான்.

உடல், உடை, உணவு, இருப்பிடம் எல்லாவற்றிலும் தீட்டு என்கிற தீண்டாமையைக் கற்பித்து அதை மக்கள் மனங்களில் அவர்களின் ஒப்புதலோடு ஏற்றுக் கொள்ள வைத்தது தான் பிராமணியத்தின் வெற்றி.

தீட்டு என்கிற ஒன்றை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பிராமணியமும், மனுதர்மமும் நிலைத்திருக்கும். வரை

வாழ்கிற வரை கம்யூனிஸ்டாக மட்டுமே மற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட தோழர்கள் மரணமடைந்தவுடன் அவருடைய சாதியைச் சார்ந்தவராக,அவருடைய மதத்தைச் சார்ந்தவராக அடையாளப்படுத்தப் படுகிறார்.

பெண்களின் புழங்குவெளியை வீடாகச் சுருக்கியது மட்டுமன்றி வீட்டிலும் கூட மூலையில் இருண்டதொரு சமையலறையில் சமையல்,தாலி, கற்பு,குடும்பம்,சாங்கியம்,சாஸ்திரம்.சடங்குகள் என்ற குறுகிய வட்டத்தின் மூலம் பெண்களின் அறிவு சுதந்திரத்தையும், முடக்கினர்.

வேட்டைச் சமூகம் மறைந்து வேளாண் சமூகம் உருவாகத் துவங்கும் போது குடிமைச் சமூகத்தில் வேலைப்பிரிவினைகள் தோன்றின.

பிராமணியம் தாங்கள் கைப்பற்றிய ஆன்மிக அதிகாரத்தின் துணையோடு இறுகச் செய்தது.வேலைப்பிரிவினைகளை பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் கொண்டு வந்தது.

சடங்குகள் இருக்கும் வரை தீட்டு, தீண்டாமை இருக்கும், சாதிகள் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும்.

தங்களுக்கு மேல் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை. ஆனால் தங்களுக்கு கீழ் ஒருவராவது இருக்க வேண்டுமென்கிற ஆதிக்க மனநிலையும் தான் பிராமணியத்தை அப்பழுக்கற்று பின்பற்றச் செய்யும் கருவிகள். இதனால் சடங்கு, சம்பிராதயம், சாஸ்திரம் என்ற பிராமணியத் தந்திரங்களை பண்பாடு என்று புரிந்து கொண்டு பண்பாட்டை காக்கிறோம்.

மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து தான் முளைவிட்டு பரவியிருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்த பிறகும் இனம்,மொழி, மதம், சாதி என்று வேறுபாடுகளை கடைபிடிப்பதும் அதை வெறியாக வளர்த்தெடுப்பதும் மட்டும் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பூமியின் உயிர்கள் அனைத்தும் உடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடையவை என்ற மதிப்புக்குரிய தீண்டுதல் சாதி, இனம்,மொழி,மதம், என்ற வெறுபாடுகளையும் கடந்த தீண்டுதல்,நான்,நீ, என்ற வேறுபாடு ஆண்,பெண்,மாற்றுப்பாலினம்,சிறு பாலினம் என்ற வேறுபாடுகள் இல்லாத தீண்டுதல். அது தான் மனித குலத்தின் இன்றைய தேவை முடிக்கிறார் தோழர் உதயசங்கர்..

உண்மையில் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

தோழமையுடன்,

க.ஷெரீப்

நன்றி - ஜெகன்

சாதிகளின் உடலரசியல்

வெளியீடு - நூல்வனம்

தொடர்புக்கு - 97515 49992

Sunday, 30 August 2026

அதிகாரத்தின் தத்துவம்

 



சதுரங்கவாழ்க்கை 10 

அதிகாரத்தின் தத்துவம்

அந்த வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்த கதிரின் தலைக்குப் பின்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அவன் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஒளிவட்ட த்துக்கு நடுவில் அவன் முகத்தில் தெரிந்த அந்தத் தெளிவும் என்னைப் பார்த்ததுமேற்பட்ட புன்னகையும் ஒரு அதிருப்தியைக் கொடுத்தது. ஏனென்று தெரியவில்லை. நான் என்னையறியாமலேயே பெருமூச்சு விட்டேன். ஒருவேளை நான் ஒவ்வொருமுறையும் மோசமானதை எதிர்பார்க்கிறேனா? அவன் சீக்கிரம் நன்றாகிவிட வேண்டுமென எதிர்பார்ப்பதைப் போல அவன் மோசமாகிவிடுவானோ என்ற அச்சமும் எனக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. மனதின் இருகூரான நாக்கு வாழ்வையும் மரணத்தையும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்துகிறது. மனதின் ஆழத்தில் அவன் இறந்து போவானென்றோ, அல்லது இறந்து போக வேண்டுமென்றோ ஒரு எதிர்பார்ப்பு இருள் வான மின்னல்க்கீற்றாய் கண்சிமிட்டிப் போகிறது.

அவனுடைய புன்னகையின் ஓரத்தில் மரணம் ஒளிந்திருக்கிறதோ என்று கூடத் தோன்றும். அதே புன்னகை முகத்துடன் அவன் கண்ணாடிச்சவப்பெட்டியில் படுத்திருப்பதைப் போல ஒரு காட்சி பளிச்சென தோன்றி மறைந்தது. ச்சே! என்ன மனமிது? நான் தலையை உலுக்கி அந்தக் காட்சியை விரட்டினேன். ஆனால் அது மறையவில்லை. ஒளிந்து கொண்டது. அவ்வளவு பிடிவாதம். என் முகத்தில் எந்தக் கலவரத்தையும் காட்டக்கூடாதென நினைத்தேன். பல நேரங்களில் உரையாடல் நம் உள்ளத்தின் உணர்ச்சிகளுக்குத் திரைபோட்டுக் காப்பாற்றிவிடும். மேடையில் நடிக்கும் நடிகனாக மாறிவிடுகிறோம். பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றும்.

நடிப்பென்று சொல்வது போலியாக என்ற அர்த்தத்திலில்லை. அப்படி நடித்தால் மட்டுமே நம்முடைய சமூகம் ஒப்புரவுடன் இயங்குமென்றும் தோன்றுகிறது. சமூக  இயக்கத்திற்கான அடிப்படையே சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் பாவனை தான். தனக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி சமூகம் சொல்கிற விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதென்றும் சொல்லலாம். பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிக்கும்போது அது இயல்பான நடைமுறையாக மாறுகிறது. அந்த இயல்புகள் காலம் காலமாகத் தொடரும்போது பண்பாடாக, மரபாக, பாரம்பரியமாக, சடங்குகளாக, சாங்கியங்களாக, சம்பிரதாயங்களாக மாறிவிடுகிறது. அதுவே பொதுப்புத்தியாகவும் மாறிவிடுகிறது. அதுதான் சிவில் சொசைட்டியின் பலமும் பலவீனமும்.

எப்போதுமே பொதுச்சமூகத்தில் சாமானியர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. அதிகாரமில்லாத இடத்தில் மனிதனின் குணம் பணிந்து விடுகிறது. அதுவும் பாவனை தான். உண்மையைப் போன்ற நடிப்பு தான். ஆனால் பொதுச்சமூகத்தில் சிறிது அதிகாரம் கிடைத்தாலும் சாத்தான் தன் வாலை ஆட்டிப் பார்க்கிறது. பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாதி மதத்தலைவர்கள், ரவுடிகள், எல்லாருமே அவரவருக்குரிய இடத்தைப் பொறுத்து சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ அதிகாரத்தை ருசிப்பவர்களாக.  இருக்கிறார்கள். அதிகாரத்தை ருசிக்க மிக முக்கியமான தேவை. அந்த அதிகாரத்தைப் பிரயோகித்துப் பார்க்க இன்னொருவர்  தேவைப்படுகிறார். எனவே தான் இத்தனை சட்டங்கள், விதிகள், தண்டனைகள், என்று நினைக்கிறேன். சாமானியர்களுக்குத் தான் சட்டங்கள். அதிகாரமிக்கவர்களுக்கு விதிமீறல் தான் விதிகள்.

அதிகாரம் ஒரு அமைப்பினுடைய அல்லது ஒரு தனிமனிதனின் உடமையாக இருப்பதில்லை அது ஒரு செயல்முறை உறவாக இருக்கிறது. எல்லாரிடமும் அதிகாரம் செயல்படுகிறது. இடம் பொருள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். அரசு நிர்வாகம், தொழில்நிறுவனங்கள், நீதி, சட்டம், காவல், ராணுவம், பள்ளி, கல்லூரி, மதம், சாதி அமைப்புகளே கூட அறிவுத்துறைகளே கூட அதிகாரத்தைக் கட்டமைக்கின்றன. அதிகாரம் மற்றும் எதிர்ப்பு இரண்டும் தொடர்புடையவை

 

அதிகாரம் நிலையான ஒன்றல்ல. அதிகார உறவுகள் மாறிக்கொண்டே இருப்பதால் அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளும் உருவாகின்றன. எப்படி உட்கார வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் போன்ற சமூக ஒழுங்குகள் கூட அதிகாரத்தின் நுண்ணிய செயல்பாடுகளாக இருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம். உடலே அதிகாரத்தின் முக்கிய தளம். அதனால் தான் ஆண் உடல் பெண் உடலின் மீது அதிகாரம் செலுத்துகிறது. ஆசிரியர் மாணவர்களின் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார். மருத்துவர் நோயாளிகளின் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார்.  பெரியவர்கள் குழந்தைகள் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள்.  போலீஸ் கைதிகளின் உடல்களின் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள்.  அதிகாரம் வெறும் சட்டங்களின் மூலம் சமூகத்தை மட்டுமல்லாமல் தனி மனிதர் உடல்களின் மீது செயல்படுகிறது.

 

இது ஒரு இருண்மையான நிலை. ஒருவர் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்துபவராகவும் அதிகாரத்தினால் பாதிக்கப்படுபவராகவும் இருக்கிறார். இந்த இருண்மை நிலைதான் அதிகாரத்தின் தத்துவம்.

அதனால் தான் அனைவருமே அதிகாரத்துக்கு ஆசைப்படுகிறார்கள். தன் வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தை அடைவதையே தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அதிகாரத்துக்கு ஆசைப்படவேண்டும்? அதிகாரம் மற்றவர்களின் உடலையும் , மனதையும், கட்டுப்படுத்துகிறது. அரூப ரூபத்திலோ, சாத்வீகமாகவோ, பலவந்தமாகவோ, பலப்பிரயோகம் செய்வதே அதிகாரத்தின் ஒரே வேலைத்திட்டமாக இருக்கிறது.

அதனால் தான் மனிதர்கள் இந்த அதிகாரத்துக்காகத் தான் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு இட த்தில் அதிகாரம் படைத்தவர் இன்னொரு இட த்தில் சாமானியராக மாறிவிடுவார். ஒரு இடத்தில் சாமானியராக இருப்பவர் இன்னொரு இடத்தில்  அதிகாரமிக்கவராக மாறிவிடுவார். இந்தப் கள்ளன்போலீஸ் விளையாட்டுத் தான் ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் ஓட்டத்தைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறதோ?

என்னால் கட்டுப்படுத்தமுடியாத எண்ணச்சுழலில் சிக்கிக் கொண்டேன். எதிரில் கதிர் உட்கார்ந்திருக்கிறான். நான் அவனைப் பார்த்துச் சிரிக்க முயற்சிக்கிறேன். ஆனால் முகம் குழப்பத்தை வெளிப்படுத்துகிறது. கதிர் என்னை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் ஏதாவது பேசுவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். நான் இந்தச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சுழல் மேலும் மேலும் தன்னுடைய ஆழத்துக்குள் இழுக்கிறது..

சாமானியர்கள் அவருக்கு எங்கே இடம் கிடைக்கிறதோ வீடு, அடுக்களை, படுக்கையறை, பள்ளி, அலுவலகம், வேலைத்தளம், என்று அங்கே அதிகாரத்தின் கொடியைப் பறக்க விடுகிறார்கள். என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்த கடைநிலை ஊழியனின் இணையர் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்து அந்த ஊழியரின் மேலதிகாரியிடம் சொன்ன புகார்,

சார்.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே அவர் கொண்டுவர்ற சாப்பாட்டுப் பையை வாங்கறதுக்குக் காத்திருக்கணும் சார்.. அவர் சட்டையைக் கழட்டினா.. அதை வாங்கி மாட்டணும் சார்.. தண்ணீயோ, சாப்பாடோ, அவர் எங்கே இருக்காரோ அங்கே கொண்டுபோய் கொடுக்கணும் சார்சொல்றத உடனேச் செய்யலன்னா.. அவ்வளவு தான்.. நான் மெமோ கொடுப்பேன்கிறாரு.. சும்மா சும்மா அடிச்சிக்கிட்டேருக்காருஇங்கே வான்னுக் கூப்பிட்டு எந்தக் காரணமுமில்லாமல் அடிக்கிறாரு.. பிள்ளைகள் அவரைப் பார்த்தாலே ஒண்ணுக்கு வெளிக்கி போய்ராங்க.. சார்.. மூச்சுக்கு முன்னூறு தடவை நான் வீட்டு அதிகாரி.. வீட்டு அதிகாரி.. என்று சொல்லிக்கிட்டேருக்காரு..அதிகாரின்னா அப்படித்தான் இருக்கணும்.. நீங்க ஒரு வார்த்தைப் பதில் பேசக் கூடாதுன்னு சொல்லி அடிக்கிறாரு சார்சின்னப்பிள்ளைக கூட அன்பா ஒரு வார்த்தைப் பேசறதில்ல.. இதுல தண்ணியைப் போட்டாச்சுன்னா நாங்க யாரும் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாதுசார்.. நீங்க தான் அவருக்கு நல்ல புத்தி சொல்லணும்..சார்..”

என்றார். அதைக் கேட்ட எங்களுக்கு ஒரே சிரிப்பு. அடக்கமுடியாமல் சிரித்தோம். அந்த அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. அதிகாரி ஞே ன்னு முழித்துக் கொண்டிருந்தார். அந்த அதிகாரி எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த ஊழியரைக் கூப்பிட்டு முதுகில் அடிப்பார். கையில் கிள்ளுவார். அவர் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. கோபமாக இருந்தாலும் சரி. அதைப் பார்க்கும் எங்களுக்கு அருவருப்பாக இருக்கும். அந்த ஊழியரிடமே சொன்னோம்.

ஒரு தடவை.. இப்படியெல்லாம் செய்யாதீங்கன்னு சொல்லிருங்க.. பால்பாண்டி.. இல்லைன்னா ஒரு தடவை பதிலுக்கு ஒரு வப்பு வைச்சிருங்க..”

ஐயோ.. சார்.. அவர் என்னை ஊரை விட்டுத் தூக்கிருவாரு.. மெமோ கொடுத்துருவாரு..”

என்று அப்பாவியாகச் சொன்னார்.

எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மனிதர்கள் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதிகாரம் எப்போது தோன்றியிருக்கும்? எப்படித் தோன்றியிருக்கும்? உயிரின் இயல்பே அதிகாரம் தானா? அதிகாரம் இல்லாமல் வாழமுடியாதா? யோசித்துப் பார்த்தால் விலங்குகள் பறவைகள் உலகத்தில் இணை சேர்வதற்கான அதிகாரத்துக்காக ஒரே குழுவைச் சேர்ந்த விலங்குகளே சண்டையிட்டு மடிகின்றன. அந்த அதிகாரத் தேட்டத்தின் பரிணாம வளர்ச்சி தான் மனிதர்களிடமும் வந்திருக்குமோ.

தன்னுடைய இனப்பெருக்கச்சக்தியால் முதலில் பெண்கள் குழுவை வழிநடத்தும் அதிகாரத்தைப் பெற்றார்கள். வேட்டைச் சமூகம், ஆதிப்பொதுவுடமைச் சமூகம் பெண்களின் வழிகாட்டுதலில் நடந்தது. ஒரு சிறிய அளவிலான பொறுப்புள்ள அதிகாரம் அந்தச் சமூகத்துக்குத் தேவையாக இருந்தது. அந்த அதிகாரம் தான் வழிகாட்டியது. அதுவும் அதிகாரம் தானென்றாலும் அது யாரையும் அடிமைப்படுத்தவில்லை. அடக்கி ஒடுக்கவில்லை.  தங்கள் இனக்குழுவைத் தக்கவைத்துக் கொள்ள மட்டுமே பயன்பட்டது. ஏன் நிலவுடமைச்சமூகம் தோன்றுவதற்கு முன் உருவான இனக்குழுச் சமூகத்தில் கூட ஆதிப்பொதுவுடமையின் எச்சங்களிருந்தன. இனத்தைக் காக்கும் வீரம் மட்டுமே தலைமையேற்கத் தகுதியாகக் கருதப்பட்டது. போரிட்டு மடிந்த வீரர்களே நடுகற்களாக வணங்கப்பட்டார்கள். தெய்வங்கள் எங்கிருந்தோ வரவில்லை. அவர்களுடன் வாழ்ந்து மறைந்தவர்களே தெய்வங்களானார்கள். அப்போதும் தலைவன் என்றொருவன் இருந்தாலும் அவன் தனிப்பெரும் அதிகாரம் படைத்தவனாக இல்லை. அந்த அதிகாரம் இனத்தைக் காப்பாற்றவும், வழிநடத்தவும், மட்டுமே பயன்பட்டது.

எப்போது நிலவுடமைச் சமூகம் தோன்றியதோ தனி மனிதர்கள் தன்னுடைய இனத்தையே அடிமைப்படுத்தவும் தன்னுடைய சுயலாபத்துக்காக மற்றவர்களை அடிமைப்படுத்தவும் தொடங்கிய போது மனிதர்களிடம் வர்க்கம் தோன்றிவிட்டது. மேல் கீழ், உயர்வு தாழ்வு, ஆண்டான் அடிமை, பண்ணையார், கூலி, போன்ற சொற்கள் மொழியில் சேர்ந்து அதிகாரத்தை நிலை நிறுத்தின.  முதலில் தங்களுடைய இனக்குழுவைக் காப்பாற்றுவதற்காக நட த்தப்பட்ட போர்கள் பின்னர் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.

நிலவுடமைச் சமூகத்தின் உச்சபட்ச அதிகாரம் அரசர்களையே கடவுளராக்கியது. அதிகாரம் பரம்பரை பரம்பரையாகக் கைமாற்றப்பட்டது. மக்கள் அதிகாரத்தின் கொடுந்தீயில் வெந்து மடிந்து கொண்டேயிருந்தார்கள். அதன் நவீன வடிவமாகத் தான் முதலாளித்துவம் தோன்றி நாடுகளைச் சந்தைகளாக்கும் வெறி உருவாகியது. ஹிட்லர் தொடங்கி தற்கால அரசியல் வாதிகள் வரை மனிதகுலத்துக்குப் பேரழிவை உருவாக்கும் போர்களை நடத்துவது எதனால்? அதிகார வெறியினால் தானே. அதிகார உணர்வு தானே சுரண்டலையே உருவாக்குகிறது. சுரண்டலுக்கான ஆயுதமாக இருப்பதும் அதிகாரம் தானே. எனக்கென்னவோ மனித குலம் இன்னும் என்னென்ன மாற்றங்களைக் கண்டடைந்தாலும் அதன் ஆதாரமான பிரச்னையாக அதிகாரமே இருக்கப்போகிறது என்று தோன்றுகிறது.

அதிகாரம் தான் வன்முறையை உணர்வை வளர்க்கிறது. பயங்கரவாதங்களை தியாகங்களாகப் போற்றுகிறது. தனிநபர் வன்முறை, அரசவன்முறை இரண்டுமே வாழும் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. தேசியம், தேசபக்தி என்ற வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருப்பது அதிகாரமே. இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று, இவற்றுக்கும் இனவெறி, மதவெறி, சாதிவெறி, மொழிவெறி, தேசவெறி  இவற்றுக்குமிடையில் ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. பற்று வெறியாக மாற ஒரு நொடி போதும். பகுத்தறிவு குருட்டுத்தனமான மூடநம்பிக்கையாக மாற ஒரு வதந்தி போதும். யோசித்துப் பார்த்தால் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும் பெண்களும் தானே. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கோரக்காட்சிகளை மறக்க முடியுமா? யுத்தத்தினால் தன் உயிரைக் காப்பாற்ற நிர்வாணமாய் ஓடி வரும் வியட்நாம் குழந்தையின் புகைப்படம் உலகின் மனசாட்சியை உலுக்கவில்லையே. ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டினால் நோய்வாய்ப்பட்ட இறந்த சடாகோவின் அமைதிக்கொக்கு உலகில் அமைதியைக் கொண்டுவரவில்லையே. ஹிட்லரின் கொலைமுகாமுக்கு இருநூறு அனாதைக் குழந்தைகளுடன் சென்று விஷவாயுக்குடோனில் உயிரைவிட்ட ஜேனஸ் கோர்ச்சக்கின் அமைதி உலகின் மனசாட்சியை அசைக்கவில்லையே. இலங்கையில் உக்ரைனில், காஸாவில் காரணமே தெரியாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் குரல் இந்த பூமியை நடுங்கச் செய்யவில்லையே. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் அதிகாரம் தானே. ஒரு பட்டனில் உலகை அழிக்கும் அணுகுண்டுகளை வைத்திருக்கும் மனம் எத்தகைய மனம்? கொடுங்கோலர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். வரலாற்றுப்புத்தகங்களில் குழந்தைகளின் பெண்களின் இரத்தம் படியாத பக்கங்கள் இருக்கிறதா?

ஒவ்வொரு கொடுங்கோலனும் ஒரு நாள் அழிந்தே போவானென்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் அதிகாரம் ஒவ்வொருவரையும் கொடுங்கோலனாக்குகிறது. குண்டூசி முனையளவு அதிகாரம் கிடைத்தால் இங்கே ஒவ்வொருவரும் ஹிட்லர் தான் என்ற மனுஷ்யபுத்திரனின் கவிதையின் சாரம் ஞாபகத்துக்கு வருகிறது. ஆமாம். அந்தக் கொடுங்கோலன் அழிவதற்கு முன்னால் எத்தனை ஆயிரம் எத்தனை லட்சம் சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள், தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். அந்தக் கொடுங்கோலர்களின் அதிகாரவெறியின் அடிப்படை வெறுப்பு தானே. மற்றமை குறித்த வெறுப்பை மனிதமனதில் விதைக்கிறார்கள். மற்றமை! ஆமாம். இனத்தால் வேறுபட்டவர்கள், நிறத்தால் வேறுபட்டவர்கள், மதத்தால் வேறுபட்டவர்கள், மொழியால் வேறுபட்டவர்கள், வர்க்கத்தால் வேறுபட்டவர்கள், பாலினத்தால் வேறுபட்டவர்கள், உயிரினத்தால் வேறுபட்டவர்கள்.

தன்னைத் தவிர மற்றவர்களை வெறுக்கும் மனித குணம் மரபணுவிலேயே இருக்கிறதா? தன்னைத் தவிர மற்றவர்களை இழிவுபடுத்தும் இயல்பை எப்படிப் பெறுகிறார்கள். மனிதன் உயிரியல்பிலேயே வன்முறையாளனா? அதிகாரவெறி கொண்டவனா? ஆதிக்கவுணர்வுள்ளனா? அன்பு, அமைதி, பாசம், நேசம், நட்பு எல்லாம் பாவனைகள் தானா? அல்லது பயன் கருதிப் போடுகிற வேடங்கள் தானா? தனிமனிதனாக நியாயவான்களாகத் தெரிகிற மனிதர்கள் கும்பலாகச் சேர்ந்தால் எப்படி பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள்? கொலைகாரர்களாக மாறுகிறார்கள்? அப்போது அவர்களுடைய மனதில் என்ன ரசாயன மாற்றம் ஏற்படுகிறது? எந்த உணர்வு அவர்களை ஆட்டிப்படைக்கிறது? அருள் வந்த பூசாரி பலி கொடுக்கும் ஆட்டை பரவசத்துடன் பார்ப்பதைப் போல தன் முன்னால் உயிர்ப்பிச்சைக் கேட்கும் மனித உயிரைப் பார்க்கும்போது ஏற்படுமோ? கலவியின் உச்சத்தில் வரும் இன்ப உணர்வைப் போன்ற உணர்வு ஒரு குழந்தையைக் கொலை செய்யும் போது தோன்றுமோ? கர்ப்பிணியின் வயிற்றிலிருக்கும் குழந்தையைக் குத்தி வெளியில் எடுக்கும் அந்த மனிதனிடம் கேட்க வேண்டும். அப்போது உன் மனதில் என்ன நினைத்தாய்?

எது மனிதர்களின் ஆன்மாவை ஆட்டிப்படைக்கிறது? கடவுள் சாத்தான் என்ற இருண்மை நிலையெல்லாம் மனிதர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள உருவாக்கிய புனைவுகள். மனிதனுடைய அடிப்படை உணர்வே தானென்ற ஆதிக்க உணர்வு தான். தன்னைத் தவிர வேறு எதுவும் யாரும் முக்கியமில்லை. தனிமனிதனாகவும் சரி, கூட்டமாகவும் சரி . உண்மையில் சனநாயகமென்பதும் கூட புனைவு தானோ. நாகரீகம் என்பதெல்லாம் மனிதர்கள் அணியும் ஆடைகள் தானோ. ஆடைகளைக் களைந்தால் உள்ளே இருக்கும் மனிதன் யார்?

தனிமனிதனைச் சரி செய்தால் உலகம் சரியாகும். உலகைச் சரி செய்தால் தனிமனிதன் சரியாவான். மனித குலத்தின் எட்ட முடியாத இலக்காகவே இருக்கிறதோ.

எனக்கு எப்போதுமே குழப்பமாக இருக்கும். நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை. நம்பிக்கை இழக்கவும் முடியவில்லை. மனிதன் மட்டும் தான் இந்த பூமியின் விநோதமான உயிரி.

எனக்கு மேலே யாரும் கிடையாது. எனக்குக் கீழே யாரும் கிடையாது என்ற அம்பேத்கரின் சொற்களின் பின்னாலிருக்கும் வரலாற்றில் இழிவுபடுத்தப்பட்ட மனிதர்களில் குரல் கேட்கவில்லையா? தன் தலைக்கு மேலே ஆயிரம் கால்கள் மிதித்துக் கொண்டிருந்தாலும் தான் மிதிப்பதற்கு ஒரு தலை வேண்டுமென்ற ஆசை எப்படித் தோன்றுகிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சொல்ல வேண்டிய அவசியம் எப்படி வந்தது? இந்த ஆதிக்கவுணர்வினால் தானே வந்திருக்கும். இதனால் மனித குலம் ஏதாவது நன்மை அடைந்திருக்கிறதா? இதனால் இந்த பூமி வளம் பெற்றிருக்கிறதா? மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? இன்னும் கொடியவர்களாக, இன்னும் குரூரமிக்கவர்களாக, இன்னும் கொடுங்கோலர்களாகத் தானே மாறியிருக்கிறார்கள்.

இத்தனை தத்துவங்கள்! இத்தனை மதக்கோட்பாடுகள்! இத்தனை கண்டுபிடிப்புகள்! இத்தனை நாகரீகங்கள்! மனிதர்களிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லையே.

என்ன விசித்திரம்!

ஒரு சிலரின் அதிகாரவெறிக்காக பலருடைய வாழ்க்கை சூறையாடப்படுவதை மக்கள் உணரவில்லையா? விஷமென்று தெரிந்தும் அதை அருந்தும் மனதை எப்படிக் கணிப்பது? மனிதர்கள் உண்மையில் கெட்டவர்கள் தானா? சுயநலம், அதிகாரம், ஆதிக்கம், சுரண்டல், வன்முறை, இவற்றின் மொத்த உருவமாகத்தான் மனிதர்கள் இருக்கிறார்களா? அதனால் தான் வாழ்நாள் முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்புகிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்த குணங்களை செயல்படுத்துகிறார்கள். செய்முறைப்பயிற்சிக்கு வீட்டில் பெண்களும் குழந்தைகளும் இலவசமாகக் கிடைக்கிறார்கள்.

இயற்கை அனைத்துயிர்களையும் இயற்கையாக  மரணமடையவே படைக்கிறது. ஆனால் மனிதன் பெரும்பாலான உயிர்களையும் அற்பாயுசிலேயே மரணப்பள்ளத்தாக்கில் தள்ளுகிறான். உணவின்றி சாகிறவர்கள், குடிநீரின்றி சாகிறவர்கள், தங்க இடமின்றி சாகிறவர்கள், மருத்துவ வசதியின்றிச் சாகிறவர்கள், வன்முறையால் சாகிறவர்கள், யுத்தத்தால் சாகிற உயிர்கள், யுத்தம் மனிதர்களின் மீது மட்டுமல்ல, இயற்கையின் மீதும் தொடுக்கப்படும்போது இயற்கையிலிருந்தே அழிந்து போகிற உயிர்கள், யோசித்துப் பார்த்தால் ஹோமோசேப்பியன்ஸ் என்ற பகுத்தறிவுள்ள மனித இனம் தோன்றாமலிருந்தால் இயற்கை இன்னும் அழகாக இருக்குமோ.

தலையை உதறி அந்தச் சுழலை விரட்டினேன். எல்லாம் ஒரு நிமிடம் தான்.  என் மனதில் ஓடிய எண்ணங்களின் சித்திரத்தை எப்படி கதிர் உணர்ந்தானோ தெரியவில்லை.

நாட்டில வன்முறை அதிகமாயிருச்சில்ல.. எங்க பார்த்தாலும் வன்முறை தான். ஏன் மனிதர்கள் இப்படிச் சண்டை போட்டு தங்கள் இன்னுயிரை அழித்துக் கொள்கிறார்களோ. மருத்துவமனையில் பத்து நாள் இருந்தால் உயிரின் அருமை தெரியும்..”

என்றான். அப்போது அவன் முகம் கனிந்திருந்தது. கண்களில் உயிரின் ஒளி நட்சத்திரமாய் மின்னியது.

நான் தான் அவனை உற்சாகப்படுத்த எங்கள் இளமைக்கால நினைவுகளைத் தூண்ட நினைத்தேன்.

டேய்.. கண்ணனை உனக்கு ஞாபகமிருக்கா? “

எந்தக் கண்ணன்? “

அதாண்டா.. ஸ்கொயர் கட் கண்ணன்

எதையோ ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சிப்பவன் போல நெற்றியைச் சுருக்கினான். டக்கென்று கண்கள் பிரகாசமாக,

யாரு அந்த அய்யர்பிள்ளையைச் சுத்திக்கிட்டிருந்தவனா? “

அதைச் சொல்லும்போதே சிரித்தான். அந்தச் சிரிப்பு அபூர்வமாக இருந்தது. உயிரின் ஆனந்தம் சிரிப்பு தானே.

( தொடரும் )