மிக்க நன்றி - தோழர்..ரோகிணி
Common folks
உதயசங்கர்
. எல்லா உயிர்களின் அடிப்படை இலட்சியம் இன்பமாக வாழவது தான். அந்த இன்பத்துக்காகத்தான் இந்த பூமியின் அத்தனை உயிர்களும் வாழ்நாள்
முழுவதும் போராடுகின்றன. கலையும் இலக்கியமும் மனிதர்களின்
உணர்வுத்தளத்தில் அந்த இன்பத்தைக் கொடுப்பதற்காகப் பிறந்தவை. அதே நேரத்தில்
கலையும் இலக்கியமும், இந்த வாழ்க்கை
அனுபவங்களை, சிந்தனைகளை, கருத்துகளை, அழகியலோடு
சொல்ல முயற்சிக்கிறது. அனைத்துக்
கலைவடிவங்களும் ஏதோ ஒரு கருத்தியலைப் பரப்புரை செய்கின்றன. ஆனால்
பரப்புரை செய்வதெல்லாம் கலையாகி விடாது.
அப்படியென்றால் நேரடியான
கருத்துப்பரப்புரைக்கும் கலைக்குமிடையில் பாரதூரமான வேறுபாடு இருக்கிறது. பரப்புரை
அறிவில் செயலாற்றுகிறது. கலை மனதில்
அல்லது உணர்வுநிலைகளில் ஊடாடுகிறது. அதனால் தான் கலைவடிவங்கள் சக்தி வாய்ந்த
ஆயுதங்களாக எல்லாக்காலத்திலும் இருக்கின்றன.
ஆகவே குழந்தைகளுக்கான படைப்புகளிலும் அத்தகைய
கலை இன்பம் முக்கியமானது மட்டுமல்ல அடிப்படையானதும் கூட.. இது பொது
இலக்கியத்துக்கும் பொருந்தும் எந்தப் படைப்புகள் குழந்தைகளுக்கு கலைமகிழ்ச்சியை
ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்புகளே சிறார்கள் விரும்பும் படைப்புகள்.
இன்பம் என்பது நகைச்சுவை என்று மேலோட்டமாகப்
புரிந்து கொள்ளக்கூடாது.
பெரும்பாலான சிறார் கதைகள் அதன் தலைப்புகளிலேயே
ஒரு அறநெறி/நன்னெறி,/நீதிநெறி/அறிவூட்டும்/ கதைகளாகவே
வெளிவருகின்றன. இந்த
உலகத்திலேயே அறிவுரைகளால் தாங்கமுடியாத துன்பத்தை அடைகிறவர்கள் குழந்தைகள் தான்.
எப்போதும் அதைச் செய்யாதே இதைச் செய்யாதே
அல்லது அதைச்செய் இதைச்செய் இப்படிக் கட்டளைகளால் அல்லது முன் தீர்மானிக்கப்பட்ட
கருத்துகளால் குழந்தைகள் மீது மிகப்பெரிய வன்முறை நிகழ்த்தப்படுகிறது. குழந்தைகளின்
இயல்பான எதையும் ஆராயும் ஆர்வம், அறியும் ஆர்வம், மாற்று
சிந்தனைகள், மாற்று
செயல்வடிவங்கள் எதையுமே வளரவிடாமல் முளையிலேயே சொன்னதைக் கேட்கும் கீழ்ப்படிதல்
உளவியலை நமது சமூகம் திணிக்கிறது.
உண்மையில் கலை
மகிழ்ச்சி என்பது ஒரு படைப்பை வாசிக்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் ஒரு உணர்வு. ஒரு நிறைவு. அறிதலின்
மலர்ச்சி. ஒரு புன்னகை. ஒரு சிரிப்பு. ஒரு புல்லரிப்பு. ஒரு இன்பமான உணர்வு. ஒரு
மறக்கவியலாத
துயரம்.
. துயரமும் கலை இன்பம் தான். நம்முடைய மனம் துயர்மிகு
தருணங்களிலிருந்தும் ஏதோ ஒரு மனநிறைவை, உள்ளார்ந்த அமைதியை, புதிய அறிதலை, கொந்தளிக்கும்
எழுச்சியை அடைகிறது. எனவே கலைமகிழ்ச்சி என்பதை சுபமான கதைகள்
அல்லது கலை வடிவங்களென்று புரிந்து கொள்ளக் கூடாது.
சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
முதலில் சிறார்களுக்கான படைப்புகள்
எந்த வயதினருக்காக இருந்தாலும் குழந்தைகளின் மொழியில் எழுத வேண்டும். அந்தந்த
வயதுக்குழந்தைகளின் மொழிப்பழக்கம், சொற்பழக்கம், வாசிப்புத்திறன்
குறித்த ஞானம் எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும். மொழி
எளிமையானதாக இருப்பது மட்டுமல்ல அழகாகவும் இருக்க வேண்டும். வாசிக்கும்போது
குழந்தைகளின் மனதில் ஆன ந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அறுதப்பழசான
சொற்களையோ அல்லது வழக்கொழிந்த சொற்களையோ ( உதாரணத்துக்கு செல்வந்தர், தனவந்தர், குடியானவர், ) பயன்படுத்தக்
கூடாது. அந்தச் சொற்களில் இளமை ததும்பவேண்டும். புதுமை இருக்க
வேண்டும். துடிதுடிப்பு
இருக்க வேண்டும்.
மொத்த த்தில் சிறார்களுக்கான படைப்புகளில் குழந்தைமையின் குதூகலம், ஆர்வம்,
தூண்டுதல், கேள்விகள், பதில்கள்,
அறிதல், புரிதல், இருக்க
வேண்டும்.
சிறார் படைப்புகளில் குழந்தைமையின்
வெகுளித்தனமும் யாரும் சிந்தித்திராத புதிய கோணங்களும் மிகவும் முக்கியம். வழக்கமான
சூத்திரக்கதைகளை எழுதக் கூடாது. அவற்றை வாசித்தாலும் குழந்தைகள்
மனதில் நிலைக்காது. மேலும் ஒரே மாதிரியான கதைகள் குழந்தைகளிடம்
சிந்தனை வறட்சியை ஏற்படுத்திவிடும்.
அதீத புனைவுப்படைப்புகளில் எழுதும்போது
நம்பமுடியாததை எழுதும்போது அதற்குப் பின்னால் அதன் நம்பகத் தன்மையும் இருக்க
வேண்டும். உதாரணம்
ஆலிசின் அற்புத உலகம். குட்டி
இளவரசன், ஹாரிபாட்டர். எந்த
மூடநம்பிக்கைகளையும்,
உதாரணத்துக்கு விதி, தலையெழுத்து, அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், போன்ற எந்தக்
கருத்துகளையும் எழுதக்கூடாது. குழந்தைகளின் கேள்விகளை, தன்னம்பிக்கையை, முயற்சிகளைக் குறைத்துவிடும். ஊழையும்
உப்பக்கம் காணும் உழைப்பை மட்டுப்படுத்திவிடும்.
சிறார் படைப்புகளில் அறிவியல் மனப்பாங்கு
இருக்க வேண்டும்.
அறிவியல் மனப்பாங்கு என்பதை அறிவியல் தகவல்கள்
என்று புரிந்து கொள்ளக்கூடாது. குழந்தைகளிடம் புதிய
சிந்தனைகளை, புதிய
கற்பனைகளை, எதையும் ஏன்
எதற்கு என்று கேட்கும் படைப்புகளையே அறிவியல் நோக்குள்ள படைப்புகளென்று சொல்லலாம். .
சமூகத்தின் பலவேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகளைப் பற்றிய படைப்புகள்,
அவர்களுடைய வாழ்வின் நம்பிக்கை, துயரம்,
முயற்சிகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், மகிழ்ச்சி
என்று பல பரிமாணங்களில் எழுதப்படும் படைப்புகளைச் சிறார்
எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.
அனைவரும் சேர்ந்து வாழ்வதின் மகிழ்ச்சி. அனைவரையும்
இணைத்துக் கொண்டு வாழ்வதின் மகத்துவம். அனைத்துயிர்களுக்குமுள்ள
முக்கியத்துவம் குறித்த படைப்புகள். வாழ்வின் அனைத்து நிலைகளையும் அதாவது அனைத்து
மதங்களைச் சார்ந்த குழந்தைகளின் வாழ்க்கை, மாற்றுத்திறன்களுடன்
பிறக்கும் குழந்தைகள், தீராத நோய்களுடன் வாழும் குழந்தைகள்,
மரணத்துடன் போராடும் குழந்தைகள், என்று அனைத்துக் குழந்தைகளையும்
பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகள்.எழுதப்பட
வேண்டும்.
வாழ்க்கை குறித்த கேள்விகள்,
வாழ்வதின் நோக்கம், வாழ்வதின் பயன், இருத்தலின் மகிழ்ச்சியும் துயரமும், பகுத்தறிவின்
மகத்துவம், சுயமாகச் சிந்திப்பதின் அவசியம், இவற்றைப் பற்றியெல்லாம் சிறார் மொழியில் பேசுகிற படைப்புகள் ( குட்டி
இளவரசன் ) உருவாக்கப்பட வேண்டும்.
நன்மை தீமைக்கு இடையிலான போராட்டத்தை எப்படி
எதிர்கொள்வது? தீமையின் பாதையிலிருந்து எப்படி விலகி நன்மையின் பாதையில் பயணிப்பது என்பதையெல்லாம்
சாகசக்கதைகளாகச் சொல்லும் படைப்புகள். ( (ஹாரிபாட்டர்)
இளையோருக்கான துப்பறியும் கதைகள்
சமூகப்பிரச்னைகளை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட வேண்டும். உதாரணம்
சத்யஜித் ரேயின் பலூடா கதைகள். மிக முக்கியமானது இதெல்லாம்
கலைப்படைப்பாக உருவாக வேண்டும். வெறும் பரப்புரையாகவோ, வறண்ட
கருத்துக்குவியலாகவோ இருக்கக் கூடாது.
இப்ப்டியும் இன்னமும் கலையின் நூறு வண்ணங்களைப்
பிரதிபலிக்கும் படைப்புகள் எழுதப்பட வேண்டும். வாசிக்கும் குழந்தைகளைக் கலை தன் மாயக்கம்பளத்தில்
அமரவைத்து பறக்கச் செய்ய வேண்டும். வண்ண மயமான, நுட்பமான
வேலைப்பாடுகள் மிகுந்த, பார்த்தாலே பரவசமூட்டும்படியாக அந்த
மாயக்கம்பளம் இருக்க வேண்டும். அதற்காக படைப்பாளிகள் தீவிரமாக உழைக்க
வேண்டும்.
சிறார் இலக்கியம் தானே என்ற அலட்சியமில்லாமல்
பெரியவர்களுக்கு எழுதும்போது எப்படித் தீவிரமான உழைப்பைச் செலுத்துகிறோமோ அத்தகைய
உழைப்பைக் கொடுத்துப் படைக்கும்போது தமிழிலும் உலகச் சிறந்த படைப்புகள் உருவாகும்.
அதற்கான காலம் மிக அருகில் வந்து விட்டது.
நன்றி - புக் டே
ஆவி கடவுள் பேய் பிசாசு?
1. ஆதியில்
மனிதன் இயற்கையை வழிபட்டான்.
நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்
என்று 4000 ஆண்டுகளுக்கு
முன்பே தொல்காப்பியம் இயற்கையை முன்வைத்து பேசுகிறது. இதுதான் தமிழ்மரபு.
2. அறிவியலறிவு
வளர்ச்சியடையாத காலத்தில் பஞ்சபூதங்களை வழிபட்டு அவற்றிற்கு படையல் செய்வதின்
மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தான்.
3. ஆதி இனக்குழு
சமூகமும் ஆதி வேளாண் சமூகமும் செடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள் என்று எல்லாவற்றிலும் ஆவி
குடியிருப்பதாக நம்பியது. எனவே ஒவ்வொரு இனக்குழுவும் தனக்கான செடி, கொடி, மரம், பூ, விலங்கு, பறவை, ஆகியவற்றை
புனிதமாகக் கருதி வழிபடுவதின் மூலம் தங்களுடைய இனக்குழுவுக்கு நன்மை
கிடைக்குமென்று நம்பினார்கள்.
4. கனவில் வரும்
இறந்தவர்கள் எங்கேயோ உயிருடன் இருப்பதாக நம்பினார்கள். அதனால் அந்த உலகத்தில்
அவர்கள் நன்றாக வாழ்வதற்காக, நெல், பொன், பொருள்
ஆகியவற்றை ஈமத்தாழிகளில் இட்டு புதைத்தார்கள்.
5. இனக்குழுவுக்காக
போரிட்டு மடிந்த வீரர்களை நடுகல் வழிபாடு மூலம் தெய்வமாக்கினார்கள். முருகனே
நடுகல் வீரன் தான்.
6. உற்பத்தி, மறு உற்பத்தி
ஆகியவற்றின் மூலகாரணமான பெண்களைத் தாய்த்தெய்வமென வணங்கினார்கள். எவையெல்லாம்
உற்பத்திக்கு காரணமாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் வளமைத்தெய்வங்களாகப்
போற்றினார்கள். நிலம், நீர், இயற்கை, பெண், எல்லோரையும்
வணங்கினார்கள்.
7. இனக்குழுவின்
இனவிருத்தி, பாதுகாப்பு
ஆகியவற்றுக்காக வீரத்தையும், காதலையும் போற்றினார்கள். உதாரணம்- சங்கப்பாடல்கள்.
8. இப்படி உருவான
ஆவி வழிபாடே தொன்ம அடையாளங்களின் மூலம் தெய்வங்களாக உருமாறின.
நிலவுடமைச்சமூகத்தின் வளர்ச்சியில் தெய்வங்களில் உயர்வு தாழ்வு, பெருந்தெய்வம்
நாட்டார் தெய்வம் என்று வர்க்கக்கடவுள்கள் உருவானார்கள்.
9. இந்தத்
தெய்வங்களிலும் உழைப்பாளிகளின் , விவசாயிகளின், தெய்வங்களைப்
பேய்த்தெய்வங்களாக்கினார்கள். வாசலில் , சுற்றுப்புறங்களில் காவலுக்கும்
பணியாளர்களாகவும், அடியாட்களாகவும்
மாற்றினார்கள்.
10. எளிய மக்களின்
முன்னோர் வழிபாட்டை வைதீகம் வழிப்பறி செய்து பெருந்தெய்வ அவதாரங்களுடன் சேர்த்துக்
கதைகட்டினார்கள். முருகன், மதுரைவீரன், காத்தவராயன், கருப்பசாமி, முத்துப்பட்டன், போன்றவர்களைச்
சொல்லலாம்.
11. எளிய மக்கள்
அகாலமாய், கொலையுண்டோ, நோயுற்றோ, பிரசவத்திலோ
இறந்த பெண்களை அம்மன்களாக்கி வழிபட்டனர். அந்த மரணங்களின் தன்மையைப் பொறுத்து
அவர்கள் பேய்களாகவோ, பிசாசுகளாகவோ, ரத்தக்காட்டேரிகளாகவோ
முனிகளாகவோ, கருப்புகளாகவோ
மாற்றப்பட்டனர்.
12. மக்கள்
செல்வாக்கு மிக்க பெண்தெய்வங்களை
பெருந்தெய்வ பெண்தெய்வங்களுடன் இணைத்தனர்.
13. இப்படியே ஆவி, பேய், பிசாசு, கடவுள் என்று
அந்தந்தக் காலத்தில் ஆள்பவர்கள் மக்களைச் சுரண்டும் பண்பாட்டுக் கருவிகளாக ஆவி, பேய், பிசாசு, கடவுள், ஆகியவற்றை
மாற்றுகிறார்கள்.
14. மக்களின்
அடிப்படைப் பிரச்னைகள் ஆயிரம் இருக்க ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி ராமர்
கோவிலைக் கட்டி குறளிவித்தை காட்டுகிறார்கள்.
15. அறிவியல்
மனப்பான்மையும், பகுத்தறிவுப்
பார்வையும் குறையக் குறைய மூடநம்பிக்கைகள் பெருகுமென்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.