Wednesday, 24 June 2026

காக்கா கொண்டு போச்சு

 https://youtube.com/shorts/Bk7W1TSjlZI?si=xgQ4UdV-5UazZzLC



நன்றி - தோழர். ஆயிஷா நடராஜன்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

சங்க காலத்தமிழர் வாழ்வியலை இளையோருக்கு அறிமுகப்படுத்தும் பறம்பின் பாரி –

சங்க காலத்தமிழர் வாழ்வியலை இளையோருக்கு அறிமுகப்படுத்தும் பறம்பின் பாரி

ஞா.கலையரசி




    கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்நாவல் விவரிக்கின்றது.

    எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் இளையோர் நாவல்களில் தொடர்ச்சியாக வரும் கதாநாயகன் கேப்டன் பாலுவே, இதிலும் நாயகன். பாலுவுக்கு இப்போது மீசை முளைத்துவிட்டது.  கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பயிலும் பாலு, தமிழின் தொன்மையைப் படித்துப் பெருமிதமும், வியப்பும் அடைகிறான்.

    பாலு ஒரு நாள் “பாரி பாரியென்று பல ஏத்தி’ என்ற கபிலரின் பாடலை வாசிக்கிறான். அவன் மனத்தைக் கபிலர், பாரியின் நினைவுகள் ஆக்கிரமிக்கின்றன. மூவேந்தர்களைத் தனியொருவனாகக் களத்தில் சந்தித்து, மண்ணைக் கவ்வ வைத்த பாரியின் வீரமும், துணிச்சலும் பாலுவை வியப்புக்கு உள்ளாக்குகிறது.   

    பாரியின் நினைவுகளுடன் தூங்கிவிட்ட பாலுவின் அருகில், ஆதன் தோன்றுகின்றான். ஏற்கெனவே ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலில், பாலுவை ஆதன் தான், சிந்துசமவெளி நாகரிகக் காலத்துக்குக் கூட்டிச் சென்று, தமிழர்களின் நாகரிகத் தொன்மையை விளக்கியவன்.

    இந்நாவலிலும் ஆதன் கேப்டன் பாலுவை பாரியின் இளமை காலத்துக்குக் கூட்டிச் செல்கின்றான். பாலு பழங்கால உடையுடுத்திய திரையனாகவும் ஆதன் சாத்தனுமாக மாறுகின்றனர். பாரியும் பதின்பருவத்து இளைஞனாக இருக்கின்றான். அப்போது பாரியின் தந்தை வேள் எவ்வி, வேளிர்குலத் தலைவனாக இருக்கின்றான்.

    பச்சை மலைத்தொடரின் இயற்கையழகு, வேளிர்குடிகளுக்கு இருந்த குலச்சின்னங்கள், குடிகள் இயற்கையை வழிபடும் விதம், வெட்சிப்போர்,  கரந்தைப் போர், கொற்றவைப் பாட்டு, வெறியாட்டம், சேவல் போர் போன்ற சங்ககாலத் தமிழரின் வாழ்வியலையும், இளையோர் தெரிந்து கொள்ளும் விதமாக ஆசிரியர் இந்நாவலில் விவரிக்கின்றார்.   

    பாரியின் உற்ற தோழர்களாகத் திரையனும், சாத்தனும் இருக்கின்றார்கள். இளைஞர்கள் மூவரும் சிறு விலங்குகளை வேட்டையாடும் சமயம், சிலர் காட்டுக்குள் நுழைந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகின்றனர். பாரி சிவிங்கிப்புலிகளின் உதவியுடன் அவர்களை உயிருடன் பிடிக்கின்றான். சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், வறுமையினால் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதையறிந்து, அவர்களை மன்னிப்பதுடன், பக்கத்தில் இருக்கும் கற்குகைகளில் தங்கி விவசாயம் செய்யவும், பாரி சம்மதம் தெரிவிக்கின்றான்.

    இந்த நிகழ்வின் மூலம், மனுவின் பெயரால், இப்போது இருக்கும் சாதிப் பாகுபாடுகளின் வேர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன என்பதையும், ஆசிரியர் இந்தச் சம்பவம் மூலம் இளையோர்க்குச் சொல்லியிருக்கின்றார்.

    கரந்தைப் போர் என்ற அத்தியாயம், பறம்பு மலைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற பாண்டிய வீரர்களிடமிருந்து ஒரு மனித உயிரைக் கூடக் கொல்லாமல், பாரி எப்படிச் சிறப்பாக போர் வியூகம் அமைத்து, வெற்றி காண்கிறான் என்பதைச் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் விவரிக்கிறது.  

    இளமையிலேயே பாரி பறம்பு மலையின் இயற்கையோடு இரண்டறக் கலந்திருந்தான் என்பதையும், அம்மலையின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குத் தெரிந்திருந்தது என்பதையும், இரக்க குணமும் மனிதநேயமும் கொண்டவனாக பாரி இருந்தான் என்பதையும், இந்நாவல் மூலம் இளையோர்க்கு ஆசிரியர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். பாரி குறித்து மட்டுமின்றி, பழந்தமிழர் வாழ்வியல் குறித்தும் இளையோர் தெரிந்து கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

பறம்பின் பாரி

இளையோர் நாவல்

ஆசிரியர்:- உதயசங்கர்

வெளியீடு:- வானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991

விலை ரூ 120/-

 தொடர்புக்கு - +91 97515 49992


Sunday, 21 June 2026

இருளும் ஒளியும்

 

இருளும் ஒளியும்

உதயசங்கர்



அவனும் அவனுடைய தம்பியும் இடிந்த கட்டிடத்துக்குள்  நுழையும் போது ஏற்கனவே அங்கே இருள் இருந்தது. தம்பி பயந்து போய் விட்டான். அவன் அண்ணனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். எதுவும் தெரியவில்லை. கீழே என்ன இருக்கிறது? எதிரில் என்ன இருக்கிறது? தரையில் தான் நடக்கிறோமா? அடுத்துப் பள்ளம் இருக்கிறதா? மேடு இருக்கிறதா? எதுவுமே தெரியவில்லை.

இருள். ஒரே இருள். கன்னங்கரேலென்று அப்பியிருந்தது. அண்ணனுக்கும் பயம் தான். ஆனால் அவன் பயப்படுவது தெரிந்தால் தம்பி அழத் தொடங்கிவிடுவான். அதனால் மனதைத் திடப்படுத்திக் கொண்டு கண்களை விரித்துப்பார்த்தான். சுருக்கிப்பார்த்தான்.

சிறிய வெளிச்சமாவது தெரிகிறதா?

இல்லை. வெளிச்சத்தின் ரேகை கூடத் தெரியவில்லை. அண்ணன் கீழே தரையில் உட்கார்ந்தான். கைகளால் துழாவினான். ஏதாவது தட்டுப்படுகிறதா? ஒருவேளை ஏதாவது பூச்சி பொட்டு இருந்தால்? ஒரு கணம் கைகளை விருட்டென்று எடுத்தான். ஆனால் வேறுவழி?

பகல் முழுவதும் வானிலிருந்து விழுந்த குண்டுவீச்சுகளுக்குப் பயந்து ஒளிந்து ஒளிந்து ஓடினார்கள். இரவில் எங்காவது தலைசாய்க்க வேண்டும். எங்கும் இடிந்த கட்டிடங்களும் இருளும் தான் மிச்சமிருந்தன..

எப்படியாவது வெளிச்சம் வேண்டுமே. இங்கே ஒரு தீப்பெட்டியோ, விளக்கோ இருக்கலாம்.  அதை எடுத்துவிட்டால் இந்த இருளை விரட்டி விடலாம். முழுவதுமாக விரட்ட முடியவில்லை என்றாலும் ஒரு மூலையில் பதுங்கச் செய்யலாம் இல்லையா?

இந்த யுத்தம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அப்படி முடியும்போது யாராவது உயிருடன் இருப்பார்களா என்றும் தெரியவில்லை. அப்படியே சிலர் உயிருடன் இருந்தாலும் குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை.

ஹ்ஹ்ஹா ஹ்ஹ்ஹாஇருள் சிரித்தது. அதன் சிரிப்பு இன்னும் பயமுறுத்துவது போல இருந்தது. அண்ணன் கைகளால் துழாவிக் கொண்டே முன்னேறிப் போய்க் கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே அண்ணனின் சட்டையைப் பிடித்தபடி தம்பியும் போனான். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. முடிவற்ற இந்த இருளை விரட்ட முடியுமா?

அவனுக்குச் சோர்வாக இருந்தது. ஒருவேளை இந்த இருள் அவனையும் தம்பியையும் அப்படியே விழுங்கி விடுமோ? திரும்பிப்பார்த்தான். அவன் எந்தப் பாதை வழியே வந்தான் என்று தெரியவில்லை. எந்தத் திசையிலிருந்து வந்தான் என்று தெரியவில்லை. அவன் முன்னேப் போகப்போக இருள் போர்வையால் போர்த்தியது போல இருந்தது. வெகுதூரம் வந்து விட்டோமோ?

வெளிச்சத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால்? அப்படியே இருளுக்குள் மூழ்கி விட வேண்டியது தான்.

மீண்டும் இருளின் சிரிப்பு கேட்டது.

திடிரென்று கைகளில் எதுவோ தட்டுப்பட்டது.

ஆமாம். அது ஒரு தீப்பெட்டி. உடனே மனதில் புது உற்சாகம் பிறந்தது.

விரல்களால் தீப்பெட்டியைத் திறந்து உள்ளே துழாவினால் இரண்டே இரண்டு குச்சிகள் மட்டுமே இருந்தன. மெல்ல ஒரு குச்சியை எடுத்து தீப்பெட்டியில் உரசினான் அண்ணன்.

திடுக்கென்று ஒளிச்சுடர் தோன்றியது. ஒளிச்சுடரைக் கண்டதும் சட்டென்று இருள் அந்த இடத்திலிருந்து ஓடியது. ஆனால் சும்மா இருக்கவில்லை. வெளியில் வீசிக் கொண்டிருந்த காற்றை அழைத்தது.. காற்று ஊஊஊஊ என்று ஊளையிட்டபடி ஓடி வந்தது. தீக்குச்சியின் ஒளிச்சுடர் காற்றில் ஆடியது.

அண்ணன் கைகளால் அதைக் காப்பாற்ற நினைத்தான். அணைவதற்குள் சுற்றிப் பார்த்தான். நேரே மூலையில் ஒரு விளக்கு இருந்தது. அப்படியே அந்த விளக்கை நோக்கி தவழ்ந்து போனான். தீக்குச்சி அணைந்தாலும் அதன் கங்கு மினுமினுங்கிக் கொண்டிருந்தது. கைவிரல் சுடும்வரை குச்சியைக் கையில் பிடித்துக் கொண்டு நகர்ந்தான்.

விளக்கை நெருங்கி விட்டான். விளக்கில் எண்ணெய் இருக்க வேண்டும். அந்த விளக்கினை ஆட்டிப் பார்த்தான். அடித்தூரில் லேசாய் அசைவு தெரிந்தது. அதுபோதும்.

இருள் இப்போது முன்னைவிட வேகமாக வந்து மூடியது. அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போவதைப் போல தலை முதல் கால்வரை சுருட்டி எடுத்தது..

இதுவரை தைரியமாக இருந்த தம்பி அழத்தொடங்கினான்.

அண்ணே பயமாருக்குண்ணே..”

அண்ணன் தம்பியின் கையை ஆறுதலாய் பிடித்தான். இருளுக்கு இன்னமும் கோபம் தீரவில்லை. தன்னுடைய பெரிய வாயைத் திறந்து கொண்டு அவர்களை நெருங்கியது.

இதோ விழுங்கப் போகிறேன். விழுங்கப்போகிறேன் என்று அருகில் வந்தது.

அண்ணன் இன்னொரு தீக்குச்சியைப் பற்ற வைத்தான். குச்சியில் எரிந்த சுடரைப் பத்திரமாக விளக்குக்கு மாற்றினான்.

அந்தச் சுடரை அப்படியே விளக்கு சிந்தாமல் சிதறாமல் வாங்கிக் கொண்டது.

அந்த இடமே ஒளியினால் துலங்கியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று இருள் கைகளைப் பிசைந்து கொண்டு தூரமாய்ப் போய் பதுங்கிக் கொண்டது. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சுடர் அணைந்து விடும். அப்போது இருவரையும் விழுங்கிவிடலாம் என்று நினைத்தது. காற்றிடம் அந்தச் செய்தியைச் சொல்லி அனுப்பியது.

காற்று வேகமாக வந்து சுடரின் மீது மோதியது. சுடர் ஆடியது. அலைக்கழிந்தது. அணையப் போவது போல மங்கியது.  அண்ணன் தைரியமாகக் காற்றை மறித்தான்.  தம்பியும் தன் பிஞ்சுக்கைகளால் சுடரைச் சுற்றி வேலி போட்டான். காற்றினால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்வாங்கிச் சென்று இருளிடம் முறையிட்ட து. இருள்பொறு நேரம் வரட்டும்என்றது.

தம்பியின் கைகள் சோர்ந்து விட்டன. அண்ணன் திரும்பி இருள் பதுங்கியிருப்பதைப் பார்த்தான். வெளியே பார்த்தான். விடிவெள்ளி தெரிந்தது.

தம்பியிடம் சொன்னான்.

தம்பி! இன்னும் கொஞ்ச நேரம் தான். வெளிச்சம் வந்து விடும்

தம்பியின் முகத்தில் புன்னகை பூத்தது.

அந்தப் புன்னகையின் ஒளியைப் பார்த்த இருள் அவமானத்தால் அப்படியே மறையத் தொடங்கியது.

 நன்றி - வண்ணக்கதிர்