Sunday, 1 February 2026

“என்றுமுள இசை” - சொற்கள் பறவைகளாய் பறந்தலையும் வெளி -சாரதி

 

         

 

       


  




 

 தனது நீண்ட இலக்கிய வாழ்வனுபவத்தில் தன்முனைப்பில் பரிணமித்து தேர்ந்த சிறுகதையாளனாக, கவிஞனாக சிறகசைத்து ஒரு ஒழுங்கமைப்போடு பறந்து திரிந்த அவரின் வனாந்திர வெளியில், அழகு வர்ணங்களில் பூத்து குலுங்கும் அதிசய பூக்களெல்லாம்…. யாருமே சொல்லாத இரவுக் கதைகளை நட்சத்திரங்களிடம் சொல்லிச் சொல்லி, கதைகள் நிரம்பிய மேகக் கூட்டின் வழியே வடிந்த மழைத்துளிகளில் நினைந்த பூமிக் குழந்தைகளை கும்மாளமிடச் செய்த அவரின் சிறார் கதைகளில்………புதிய எல்கையை தொட்டுக் காண்பித்தவர் எழுத்தாளர் உதயசங்கர் என்பதே மறுக்க முடியாத உண்மை.

தமிழ் சிறுகதைகள், குறுங்கதைகளில் அகவெளியும் புறவெளியும் இணைந்து பிறப்பிக்கும் கதைவெளியில்…………. வார்த்தைகளாகவோ, மெளனமாகவோ, இசையாகவோ, கோட்டுச் சித்திரமாகவோ வாசகனின் ஆழ் மனதில் ஒரு கதா அனுபவத்தை கட்டமைத்து, அதன் அனுபவச் செறிவும், கணமும்அகமன உணர்வின் ஒத்திசைவில் அது சிறுகதையா? அல்லது குறுங்கதையா? என்பதை தன் இயல்பிலேயே தேர்வு செய்து மேலோங்கி நிற்கச் செய்கிறது.

உதயசங்கர் தமிழுக்கு புதிதாக நுண் குறுங்கதைகள் என்ற ஏற்கனவே அதிகமாக பரிச்சயமில்லாத வடிவத்தை பரிசோதனை முயற்சியாக 49 குறுங்கதைகளை ஒரு அழகான கையடக்கமான புத்தக வடிவில் வெளிக் கொண்டு வந்திருப்பது ஒரு சந்தோசமான வரவேற்பை அளித்திருக்கிறது  என நம்புகிறேன்.

 நுண் குறுங்கதை என்பதை குறுங்கதைக்கும் கவிதைக்கும் இடைப்பட்ட வடிவம் எனலாம்.  குறுங்கதையில் ஒரு சிறிய நிகழ்வனுபவம் புறவயமான விஸ்தரிப்பில் மன உணர்வில் சட்டென ஒரு மின்னல் வந்து போகும் நிகழ்வினை நிகழ்த்தும். அது போல் கவிதையோ அகமனத்தோடு வாழ்வின் பிடிபடாத நுட்பத்தின் விசாரணையை மி்ன்னல் ஒளியில் படர்ந்து முடிவற்று நிகழ்த்தும். ஆனால், நுண் குறுங்கதைகள் அகவய விஸ்தரிப்பில் மின்னல் ஒளிச் சிதறலின் தெறிப்பில் விழுந்த மின்னல் துகள்கள்………. தத்துவார்த்த விசாரணையையோ, தர்க்க விசாரணையையோ அகமன நுட்ப நுனியில் வாசகனிடம் பண்முகப்பார்வையில் செயல்படுத்தும் என்பதே……  இவரின்என்றுமுள இசைகுறுங்கதை தொகுப்பில் நுகர்ந்த…….  என் வாசக அனுபவம்.

  இத்தொகுப்பிலுள்ள அத்தனை குறுங்கதைகளும் என்னை பாதித்தது எனச் சொல்லவில்லை. ஆனால் சில குறுங்கதைகள் ஆச்சரியப்படுத்தியது. சிலவைகள் என்னை அதிசயப்படுத்தயது. இன்னும் சில மனதில் ஒரு கிளர்ச்சியை, உளவியல் விசாரணையை, தத்துவ விசாரணையை, உணர மட்டுமே செய்யும் ஒருவித உணர்வை.. இப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது.

இவருடைய எட்டிப்பார்த்த மரணம்என்ற முதல் குறுங்கதையே உளவியல் ரீதியான தீராத மனோ விசாரணையை ஏற்படுத்துகிறது. மனித கண்களுக்கு ஒரு புள்ளிக்கு அப்பால் புலப்படாத இருள், தூரதூரமான அடர் இருளாய் மரணத்தின் வாசல் கதவை தட்டிய போது வாழ்வின் வெளிச்சத்தில் மூச்சு விடுகிறேன். காலகாலமான இருளும், மரணமும், ஒளியும் என்றுமே புலப்படாத மனப்பிரமையா.. மனக்கற்பிதமா? இப்படியான கேள்விகளை பல அடுக்குகளில் இந்த குறுங்கதை என்னை நகற்றுகிறது.

அது போல், “இறுதியுணர்வுஎன்ற குறுங்கதையில் கோதமனுக்கு வேட்டுவனிடம் பிச்சையாய் பெற்ற பன்றியிறைச்சி சீரணமாகாமல்.. மரண தியானத்தில் இருந்த போது, வாழ்க்கையை பற்றிய தத்துவத்தில் முக்கியமான ஒன்றைச் சிந்திக்க மறந்து விட்டேன்.“உழைப்பு”. உழைப்பு எதனையும் செரித்து தன்வயமாக்கிச் கொள்ளும். என்னைப் போல் சீரணமாகாமல் வெளித்தள்ளாது எனவும், மரண இறுதியில் கோதமனின் கடைசிப் புன்னகையில் பன்றிறைச்சியை  கொடுத்த வேட்டுவனின்  முகம் தெரிவதாக முடிக்கிறார். அது தத்துவ சிந்தனை மரபில் ஒன்றை புரட்டுகிறது போல் உணர்கிறேன்.

அதுபோல் சொற்கள் பறவைகளாய் மாறி பறந்து கொண்டிருக்கின்றன.  நட்சததிரங்கள் போல் நிரந்தரமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன…..என சொற்கள் என்ற  குறுங்கதையில் சொற்களின் மாபெரும் வலிமையை  உணர்ந்த போது என் காதுகளில்இன்குலாப் சிந்தாபாத்என பலமுறை ஓங்கி ஒலிக்கிறது.

மனித உறவுகளின் அர்த்தத்தை  வேறு வேறு நிலைகளில் புரிதலின் கோலங்கள்…… காட்சிப்பிழையாய் கண்முன் நகர்கிறது.

எவற்றின் இயல்பு அது. எவற்றிடமிருந்து கற்றது. கொடூர அவஸ்தை. அன்பின் வலிதனை உணர்த்தும் இப்படி ஒரு குறுங்கதை விளையாட்டு”.

  

அவரவர் திரைச்சீலைக்குப் பின்னால் அவரின் யாரோ வாழ்நாள் முழுவதும்கண்ணாமூச்சியாய் தோன்றி மறைகிறார்கள். என் திரைச்சீலைக்குப் பின்னாலும் ஏதோ ஒன்று என்னை நகர்த்துகிறது. வாழ்க்கை நகர்கிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பல குறுங்கதைகள் அவரவர் உலகத்தை ஆச்சரியப்படுத்தும். அழகு படுத்தும். பன்முகத் தன்மையில் வேறுவேறான படிமநிலையில் உங்கள் மனதோடு பேசும்.


வெளியீடு - செவ்வியல் பதிப்பகம்

தொடர்புக்கு - 9488406868


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, 30 January 2026

கேட்காத அசரீரி

 

கேட்காத அசரீரி

உதயசங்கர்





"ஹே... ராம்..." என்ற கூவலுடன் மகாத்மா நடைபாதையிலிருந்து பின்புறமாக புல்தரையில் மடங்கி விழுந்தார். நெஞ்சில் தாங்க முடியாத வலி.சூடான இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. சுதந்திர அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து முடித்து சில நாட்களே ஆகியிருந்தன. உடல் பலமிழந்து காற்றாகி விட்டிருந்தது. சுற்றிலும் கலவரமான குரல்கள் கேட்டன. மெல்ல நினைவு தப்பிக் கொண்டிருந்தது. அவர் வெகுகாலமாகவே எதிர்பார்த்திருந்தது போலவும், இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேன்டும் என்பதை ஏற்கனவே ஒத்திகை பார்த்திருந்தது போலவும் அமைதியாகக் கிடந்தார். வேதனைக் கூக்குரலோ, உடல் அலட்டலோ இல்லை. மிகுந்த மனநிறைவுடன் உறங்கச் செல்லும் ஒருவரைப் போலவே படுத்திருந்தார். உதடுகளில் கூட இனிய கனவினைக் காணும் ஒரு குழந்தையினைப் போல ஒரு சிரிப்பு நெளிந்து நின்றது.சுடப்பட்டு கீழே விழும்போது தன்னைச் சுட்டவனை, தன்னையறியாமலேயே கையை உயர்த்தி ஆசிர்வதித்தது. அவருக்கே திருப்தியளித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

வாழ்க்கையும், கடவுள் மீதான தீவிர நம்பிக்கையும் அவருக்களித்த அந்த ஆசிர்வாதம் உண்மையில், பிடிவாதமான அவருடைய துறவு ஆன்மீகபலம் தானா அல்லது நோயினால் படுக்கையில் படுத்து, அவஸ்தைக்குள்ளாக்கி, எப்போது இந்தக் கிழவர் போய்ச்சேருவார் என்று படுக்கைப் புண் வந்து உயிரின் வேதனையில் கூக்குரலிட்டு, எல்லோரையும் எல்லோரும் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு அலைகிற சூழ்நிலையை மாற்றியமைத்தற்காகவா? என்று அவருக்கே தெரியவில்லை. அது தன்னிச்சையாகவே நடந்து விட்டது. ஒரு வேளை குனிந்து கால்களைத் தொடவிரும்பிய அவனை ஆசிர்வாதம் செய்வதற்காக ஏற்கனவே உயர்த்த நினைத்த கை இப்போது இதுவரை கம்பீரமாக வெளியுலகிற்கு காட்டியிருந்த ஆன்மீக பலத்தையும் வெளிக்காட்டி விட்டது.



தன்னிச்சையாக நடந்த அந்த நிகழ்வு, அவர் எதிர்பார்த்தத்திற்கும் மேலாக ஒரு பரிபூரணமான நிகழ்வாக நடந்து முடிந்து விட்டது என்று நினைத்தார். பிரிவினைக்குப் பிறகு இப்படியான ஒரு விபத்தை எப்போதும் எதிர்நோக்கியிருந்தார் என்பது உண்மைதான். இதை தன் பேத்தி மனுவிடம் அடிக்கடி சொல்லவும் செய்திருக்கிறார்.அதனால் தான் காவல்துறைத் தலைவர் காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காவலர்களை அனுப்புவதாகச் சொன்னபோது அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். பிரார்த்தனையின்போது இறந்து போவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்றார். எந்த விநாடியிலும் தான் இறந்து போக நேரிடலாம் என்பதை அவரே தெரிந்து வைத்திருந்தார். ஆனால் அவரைச் சுட்டவனின் கண்கள். அதில் தெரிந்த வெறுப்பின் தீர்க்கம். எந்த சஞ்சலமுமில்லாத கசப்பின் வன்மம். தான் செய்கிற காரியத்தைப் பற்றி, அதன் பின் விளைவுகளைப் பற்றி முற்றிலும் தெரிந்த ஒருவனின் உறுதியான அந்த முகம். அதைக்கண்டு தான் அவர் உண்மையில் பயந்தார். உணர்ச்சிமயத்தினால் உந்தப்பட்டு, நிறையப் பேர் அவருடைய அமைதி யாத்திரையின் போது இடையூறு செய்திருக்கிறார்கள். பிரிவினையின்போது, கல்கத்தாவில் அவர் இருந்த ஹைதாரி இல்லத்தில் கூட அவர்மீது தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல், கற்களையும், செருப்புகளையும் எறிவதை அவர் எதிர்கொண்டிருக்கிறார். அப்போது உடனிருப்பவர்களின் எந்த எச்சரிக்கை வார்த்தையையும் அவர் கேட்டதில்லை. ஏனென்றால் எந்த கும்பலின் உணர்ச்சி வெள்ளத்தையும் வடிய வைக்கிற மந்திரசக்தி அவரிடம் இருந்தது. அங்கமாலியை எதிர்கொண்ட புத்தரைப் போல அவர் அவர்களுக்கு நடுவே போனார். அவர்களை தன் கண்களால் நேருக்கு நேர் பார்த்தார். அந்தக் கண்களில் இருந்த வெறுப்பை, கசப்பை, விரக்தியை, கோபத்தை தன் அன்பென்னும் மாய ஒளியினால் மாற்றி விடுவார்.

ت நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அவர் பேசும் வார்த்தைகளின் வலிமை அவர்களுடைய காயங்களுக்கு மருந்து தடவும் சில விநாடிகளிலேயே அவர்களைத் தன் வசப்படுத்தி விடுவார்.


அவர்கள் எத்தகைய கொலைவெறியோடு வந்திருந்தாலும் சரி மாயம் போல அவர்களை மாற்றி ஆயுதங்களைக் கீழே போடவைத்து, அவருடன் சேர்ந்து ராட்டையைச் சுற்ற வைத்து விடுவார். சுற்றும் ராட்டையின் கிளிக்கிளிக் சத்தத்தில் அன்பின், சகிப்புத்தன்மையின் பெருந்தியைப் பிரவகிக்கச் செய்து விடுவார்.



ஆனால் இப்போது அவரைச் சுட்டவனின் கண்களை அவர் கண்கள் சந்தித்தபோது, அது உணர்ச்சியற்று பளிங்கினைப் போலத் தெளிவாக இருந்தது. இத்தனை ஆண்டு கால பிரார்த்தனையில் அவர் ஈட்டியிருந்த தவவலிமை, அருகில் யார் வந்தாலும் வசீகரித்து தன்வசப்படுத்தும் மந்திர சக்தி, அவருடைய ஒளிவீசும் மனஉறுதி, உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் வெளிக்கிளம்பும் மகத்துவமான அன்பு எல்லாம் அவன் கண்களில் முட்டி மோதி வீழ்ந்தன. கருங்கற் சுவர் போல உணர்ச்சியின் எந்த பாவமுமில்லாமலிருந்தன அந்தக் கண்கள்.



காலம் காலமாக விஷத்தை ஊற்றி வளர்த்த விரோதத்தின் கூர்மையான வாளை அவர் அந்தக் கண்களில் பார்த்தார். அந்த விரோதம் அவர் மீதான விரோதம் என்று அவர் நினைக்கவில்லை. அது மனிதகுலத்தின் மீதான விரோதமாக இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இன்று நேற்றல்ல, காலம் காலமாக மனித இனத்தின் விரோதிகள் வளர்த்து வந்த துவேஷம். அது நேற்று கூட இட்லர் என்ற உருவத்தில் உலகில் உலா வந்தது. அன்பு, தியாகம், ஒற்றுமை, சகிப்புத்தன்மை எல்லாவற்றுக்கும் எதிராகத் தனது அதிகாரக் கொடுவாளினை வீசுகிற துவேஷம். அதுதான் அவரை மிகவும் பயமுறுத்தியது.



அவர் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் ஆன இந்த விரோதத்தையும் இதற்குப் பின்னாலிருக்கக் கூடிய விரோதம் வளர்க்கக் கூடிய அமைப்பைப் குறித்தும், அவருக்கு முதன்முதலாகப் பயம் வந்தது. சுட்டவன் யார்? எதற்காகச் சுட்டான் என்பதை சுடுகின்ற அந்தக் கணத்திலேயே அவர் உணர்ந்துகொண்டார்.



சாதாரணமாக, பிரிவினையின் கொடுஞ்செயல்களால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு அப்பாவி இந்தியன் அல்லது பாகிஸ்தானி உணர்ச்சிக் கொந்தளிப்பில் இந்தக் காரியத்தைச் செய்திருந்தால் அவர் பயந்திருக்கமாட்டார். ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லையே.



ஏற்கனவே அவனும் அவனது அமைப்பும் விதைத்திருந்த விஷ விதைகள் இந்த மண்ணை மரணபூமியாக்கியிருந்தன. அப்பாவி ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் தாங்கள் எதற்காகக் கொல்லப்படுகிறோம் என்பது தெரியாமலேயே செத்துப்போனார்கள். அவர்களுடைய உயிரைப் படுபாதகங்களைச் செய்யச் சொல்லி எந்தக் கடவுள் ஆசிர்வதித்தார். பறிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தார்கள்? இப்படிப்பட்ட இந்தக் கேள்விகளின் தார்மீகத்தையெல்லாம் தன் அதிகார ஆசையினால் வெட்டித் தள்ளிய அமைப்பின் பிரதிநிதி என்பதை புரிந்து கொண்டதனால் ஒரு சிறு நடுக்கம் மகாத்மாவின் உடலில் ஏற்பட்டது.



அவருடைய அரசியல் வாரிசுகளிடம் இப்போது அதிகாரத்தை ருசிக்கின்ற ஆசை வந்து விட்டது. வழி நடத்தவேண்டிய தலைவர்களே கருத்து வேறுபாட்டில் வழி பிரிந்து நடக்கிறார்கள். விடுதலை பெற்ற சில மாதங்களிலேயே நிலைமை இப்படியென்றால் எதிர்காலத்தில்? விடுதலையடைந்ததும் காங்கிரசைக் கலைத்துவிடவேண்டும் என்று தான் எழுதியது எவ்வளவு சரியான விஷயம். பதவிகள் தரும் சுகத்திற்காக எந்த சமரசத்துக்கும் தயாராக இவர்களே இருக்கிறபோது, இவர்களுடைய வாரிசுகள் எத்தகைய அரசியல் ஊசலாட்டத்தில் இருப்பார்கள். அதன் விளைவுகள் என்னவாகும்? என்று யோசித்தபோது முதல்முறையாக மகாத்மாவுக்கு இறந்து போவதில் விருப்பமில்லாமல் போனது. அதுவும் இப்போது.உயிர்வாழவேண்டும் என்று விரும்பினார். கை விரல்களை அசைத்து மனுவைக் கூப்பிட நினைத்தார்.



உன்ணா விரதங்களின் போது ஆபத்தான நிலைமையில் அவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோதெல்லாம், அவர் அமைதியாக,



என்னை எப்போது அழைக்க வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும்.... அவர் முடிவு செய்துவிட்டால் யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது... அப்படியில்லையென்றால் யாராலும் என்னைக் கொல்லவும் முடியாது..."

என்று சொல்லியிருக்கிறார். கடவுள் இப்போது முடிவு செய்து விட்டாரா. இப்போது அவருக்கே குழப்பமாய் இருந்தது. நினைவு சிறிது சிறிதாக மங்கிக்கொண்டே வந்தது. கடவுள் அவசரப்பட்டு விட்டாரோ. அவர் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் எல்லாம் அவருடைய அந்தராத்மாவில் கேட்கும் குரலுக்காகக் காத்திருப்பார். அது ஒரு அசரீரி போல ஒலிக்கும். இதுவரை அந்தக் குரலின் அசரீரி அவரைக் கை விட்டதேயில்லை. சரியான திசையிலேயே வழிநடத்திச் சென்றிருக்கிறது. இப்போது அவர் வேண்டினார். அந்த அசரீரியின் குரலைக் கேட்க விரும்பினார்.



இன்னும் கொஞ்ச நாள் இருந்தால், இந்த விரோத உணர்வை அன்பின் மூலம் சகிப்புத்தன்மையின் மூலம் மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம். இல்லையென்றால், வேரோடு வெட்டி வீழ்த்தும் ஆன்மீகபலத்தையும் அரசியல் உறுதியையும் இந்தியா பெறுகின்றவரை கொஞ்சநாள் உயிரோடிருக்க வேண்டும். ஏன் இன்னும் என் அந்தராத்மாவின் ரகசியக்குரல் கேட்கவில்லை.

 

என் நினைவு கீழேயே போய்க் கொண்டேயிருக்கிறதே. மூடிக்கொண்டே வருவது? என் வேண்டுகோள் உன் காதுகளில் ஐயோ கடவுளே... யார் அது மாயப்போர்வையால் கால்களிலிருந்து விழவில்லையா... எங்கே போனது என் அந்தராத்மா? யார் என் தலையை வருடிக்கொண்டிருப்பது மனுவா... மனு... என் பிரியத்துக்குரிய மனு.. உன்னிடமாவது சில வார்த்தைகளைச் சொல்ல ஆசைப்படுகிறேன் மனு. என்னைச் சுட்டவனின் கண்களைப் பற்றி, அந்தக் கண்களின் வெறுப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். அந்த வெறுப்பு இந்தியா முழுவதும் தீயை பரப்புகிற வெறுப்பு. ஆனால் மனு என் வாயைத் திறக்க முடியவில்லையே. என் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டேயிருந்த அந்த அசரீரி இப்போது என்னைக் கைவிட்டுவிட்டது மனு. கடவுள் என்னை அழைத்துக் கொள்ள முடிவுசெய்து விட்டார் போல. மனு இன்னுங் கொஞ்சநாள் இருந்தால் நான் ஏதாவது அறியாமல் தவறுகள் செய்திருந்தால் அதைக்கூட மாற்றிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்தக் கண்களின் வெறுப்பை பார்க்கும் போது நான் ஏதோ தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றுகிறது மனு... உனக்காவது என் அந்தராத்மாவின் அசரீரி கேட்கிறதா... மனு... என் நிழலாக இருந்தாயே... உனக்குக் கூட கேட்கவில்லையா. ஐயோ... எதிர்காலத்தில் என்னவாகும் என் அருமை இந்தியா... கடவுளே... இன்னும் கொஞ்சநாள்... மகாத்மா கண்களைத் திறக்க முயற்சி செய்தார்.



'ஓர் முக்கிய அறிவிப்பு. டெல்லியிலுள்ள பிர்லா மாளிகையின் தோட்டத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாலை 5.17 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவன் ஒரு இந்து

செய்தி வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.

( உதயசங்கர் சிறுகதைகள் )