Wednesday, 1 April 2026

எது சிறார் இலக்கியம்?

 எது சிறார் இலக்கியம்?



1. எந்தப் படைப்புகள் குழந்தைகளுக்கு கலைமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவை சிறார் இலக்கியம். ( இது பெரியவர்கள் இலக்கியத்துக்கும் பொருந்தும் )
2. கலை மகிழ்ச்சி என்றால் கருத்துகளைச் சொல்வது கிடையாது. அது வாசிக்கும்போது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் உணர்வு. ஒரு புன்னகை. ஒரு சிரிப்பு. ஒரு இன்பம், சில சமயங்களில் துயரம்.
3. துயரமும் கலை இன்பம் தான். நம்முடைய மனம் துயர்மிகு தருணங்களிலிருந்தும் ஏதோ ஒரு மனநிறைவை, உள்ளார்ந்த அமைதியை, கொந்தளிக்கும் எழுச்சியை அடைகிறது.
4. சிறார்களுக்கான படைப்புகள் எந்த வயதினருக்காக இருந்தாலும் குழந்தைகளின் மொழியில் எழுத வேண்டும். அந்தப் படைப்பில் குழந்தைமையின் குதூகலம், ஆர்வம், தூண்டுதல், கேள்விகள், பதில்கள், அறிதல், புரிதல், இருக்க வேண்டும்.
5. குழந்தைமையின் வெகுளித்தனமும் யாரும் சிந்தித்திராத புதிய கோணங்களும் மிகவும் முக்கியம். வழக்க்மான சூத்திரக்கதைகளை வாசித்தாலும் குழந்தைகள் மனதில் நிலைக்காது.
6. அறிவியல் மனப்பாங்கை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் ( கவனிக்க - அறிவியல் தகவல்களை மட்டும் சொல்வதல்ல ) குழந்தைகளிடம் ஒரு கியூராசிட்டியை ஏற்படுத்தும் படைப்புகள்.
7. சமூகத்தின் பலவேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், அவர்களுடைய வாழ்வின் நம்பிக்கை, துயரம், முயற்சிகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களில் எழுதப்படும் படைப்புகள்.
8. சேர்ந்து வாழ்வதின் உன்னதம், அனைவரையும் இணைத்துக் கொண்டு வாழ்வதின் மகிழ்ச்சி, அனைத்துயிர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறித்த படைப்புகள்.
9. வாழ்வின் அனைத்து நிலைகளையும் அதாவது அனைத்து மதங்களைச் சார்ந்த குழந்தைகளின் வாழ்க்கை, மாற்றுத்திறன்களுடன் பிறக்கும் குழந்தைகள், தீராத நோய்களுடன் வாழும் குழந்தைகள், மரணத்துடன் போராடும் குழந்தைகள், அனைத்துக் குழந்தைகளும் பங்கு பெறும் படைப்புகள்.
10. வாழ்க்கை குறித்த கேள்விகள், வாழ்வதின் நோக்கம், வாழ்வதின் பயன், இருத்தலின் மகிழ்ச்சியும் துயரமும், பகுத்தறிவின் மகத்துவம், சுயமாகச் சிந்திப்பதின் அவசியம், இவற்றைப் பற்றியெல்லாம் சிறார் மொழியில் பேசுகிற படைப்புகள் ( குட்டி இளவரசன் )
11. நன்மை தீமைக்கு இடையிலான போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? தீமையின் பாதையிலிருந்து எப்படி விலகி நன்மையின் பாதையில் பயணிப்பது என்பதையெல்லாம் சொல்லும் படைப்புகள். ( (ஹாரிபாட்டர்)
12. மிக முக்கியமானது இதெல்லாம் கலைப்படைப்பாக உருவாக வேண்டும். வெறும் பரப்புரையாகவோ, வறண்ட கருத்துக்குவியலாகவோ இருக்கக் கூடாது.
13. எல்லாம் கலையின் மாயக்கம்பளம் மறைந்திருக்க வேண்டும். வண்ண மயமான, நுட்பமான வேலைப்பாடுகள் மிகுந்த, பார்த்தாலே பரவசமூட்டும்படியாக அந்த மாயக்கம்பளம் இருக்க வேண்டும்.
14. சிறார் படைப்புகளைப் பெரியவர்கள் வாசிக்கும்போது அவர்களுக்கும் வெளிச்சம் தருவதாக புதுமையானதாக இருக்க வேண்டுமென்பதும் மிக மிக முக்கியம்.

Tuesday, 31 March 2026

வானில் பறப்போம் வா தோழா

 வானில் பறப்போம் வா தோழா…

அமுதன் தேவேந்திரன்



இயல் கூடுகை நிகழ்வைப் பார்த்ததிலிருந்து, குழந்தைகளுக்கான இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் முளைத்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக, சிறார் கதைகளின் அற்புத உலகத்தில் பயணித்து வருகிறேன்.
“குழந்தைகளுக்கான புத்தகங்களை பெரியவர்கள் வாசிக்கலாமா?” என்று யாராவது கேட்டால், என் பதில் தெளிவு முதலில் பெரியவர்களே வாசிக்க வேண்டும்.
குழந்தைகளைப் புரிந்து கொள்ள, அவர்களுடன் பழகுவது மட்டும் போதாது; அவர்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கவும் வேண்டும். அப்போதுதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளின் உலகை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய “விசிலடிக்கும் சைக்கிள்” கதைகளை இன்று வாசித்தேன். மொத்தம் பத்து கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அவர் சொல்வதுபோலவே, குழந்தைகளின் மாயப்புனைவு உலகத்தை கண்முன்னே கொண்டு வரும் அற்புதக் கதைகள் இவை.
சூரியன், மேகம், ரயில், சைக்கிள், பந்து, மரம் — இவை எல்லாம் குழந்தைகளுக்காக ஒரு வேறு உலகை உருவாக்குகின்றன. அந்த உலகில் நாம் வாசிப்பவர்களாக நுழையும் போது, நம் சொந்த பால்ய நினைவுகளும் மெதுவாக உயிர் பெறுகின்றன.
இந்த பத்து கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை:
० ஒரே ஒரு கொய்யா
० நீலாக்குட்டியின் சந்தேகம்
० கரையான் படித்த புத்தகம்
० ரயில்வண்டி
“ஒரே ஒரு கொய்யா” கதையில், வைகைப் பாப்பாவுக்காக காத்திருக்கும் கொய்யா மரம்..“அவளை பார்த்தால் சொல்லுங்கள்” என்று முடிவடையும் அந்த வரிகள் மனதில் நீண்ட நேரம் தங்குகின்றன.
அந்த கொய்யா மரம் மட்டும் அல்ல,
இந்த “விசில் அடிக்கும் சைக்கிள்” கதைகள் அனைத்தும் ஏதோ ஒரு குழந்தைக்காக இந்த உலகில் காத்திருக்கின்றன போல.
“நீலாக்குட்டியின் சந்தேகம்” கதையில் காக்கா சொல்வது:
“ஐயோ ஐயோ அசடு! இது கூட தெரியாதா?
எங்க பள்ளிக்கூடம் மரத்தில்தான் நடக்கும்.
எங்களுக்கு தனியா டீச்சர் கிடையாது நாங்க எல்லாரும் டீச்சர் தான்.
எல்லாரும் பேசுவோம்… எல்லாரும் கேட்போம்…”
இந்த வரிகளை வாசிக்கும் போது, சுவர்களில்லாத பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களில்லாத வகுப்பறைகளும் இருந்தால் எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.
“கரையான் படித்த புத்தகம்” கதையில், ஒரு சிறு உயிர் கூட படிக்க வேண்டும், தன் வரலாற்றை அறிந்து எழுத வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்களில் எத்தனை பேருக்கு அந்த எண்ணம் இருக்கிறது? என்ற கேள்வி சிரிப்பையும் சிந்தனையையும் ஒன்றாகத் தருகிறது.
இந்த உலகிலுள்ள கரையான்களும், கரப்பான் பூச்சிகளும், விலங்குகளும் வாசிக்கத் தொடங்கினால் உலகமே எப்படி மாறும் என்று கற்பனை செய்து நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படமும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
நிச்சயமாக, இந்த புத்தகத்தை வாசிக்கும் போது உங்கள் முகத்தில் ஒரு சிறு புன்னகை மலரும். அதுவே இந்த புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி.
குழந்தைகளின் மகிழ்ச்சியோடு, பெற்றோரின் மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க வேண்டும். வாசிப்பவர்கள் இந்த புத்தகத்தை வாசிப்பதோடு மட்டும் அல்லாமல், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டும் அதுவே உண்மையான வாசிப்பு மகிழ்ச்சி.

வெளியீடு: வானம் பதிப்பகம்

Monday, 30 March 2026

மாயக்கண்ணாடி’

 மாயக்கண்ணாடி’ –

அதிகாரத்தின் முகத்தை காட்டும் சிறுவர் கதைகள்.

அமுதன் தேவேந்திரன்



இன்று குடிநீர் கொண்டு வர பக்கத்து கிராமத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு இரண்டு பிரபல அரசியல் தலைவர்களின் சிலைகள் தலை மட்டும் துணியால் கட்டி மூடப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கிவிட்டதால், அவர்களின் முகங்கள் தெரிந்தால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று அரசு கூட நினைத்திருக்கலாம்!
அந்த காட்சி மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, உதயசங்கர் எழுதிய ‘மாயக்கண்ணாடி’ சிறுவர் கதைகள் வாசிக்க நேர்ந்தது.
இந்த புத்தகத்தின் அட்டைப்படமே என்னை முதலில் கவர்ந்தது. இதுவரை நான் பார்த்த எந்த அட்டையிலும் இல்லாத தனித்துவம் ஒரு சிறிய கண்ணாடி. அது உண்மையிலேயே “மாயக்கண்ணாடி”தானோ என்ற கேள்வி எழுந்தது.
திரைப்படங்களில் மாயக்கண்ணாடி முன் நின்றவுடன் மனிதர்கள் மறைந்து போவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்தை வாசித்த பிறகு, அந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன். சில நிமிடங்களில் அது எனக்கே சில மாயங்களை காட்டத் தொடங்கியது.
இந்த மாயக்கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் நம்மை ஆளும் அரசர்களின் சட்டங்களையும் உத்தரவுகளையும் நையாண்டியாக வெளிப்படுத்துகிறது. அந்த மடத்தனங்கள் நிஜ வாழ்க்கையிலும், இன்றைய அரசியல்வாதிகளிடமும் தொடர்கின்றன என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.
ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான உணர்வை கொடுக்கிறது.
“நானும் ஒரு தனி மனிதன்” என்ற உணர்வு.
அந்த உணர்வே சவால்களை எதிர்கொள்ளும் துணிவை உருவாக்குகிறது.
‘புதிய அகராதி’, ‘காற்றில் கரைந்த பூதம்’, ‘தொலைந்து போன மழை விதைகள்’, ‘ஜங் ஃபுட் தேசம்’, ‘மறந்த சிரிப்பு’, ‘பறவைகள் பறந்து போய்விட்டன’ போன்ற கதைகள் மூலம் மனிதர்களையும் இயற்கையையும் நேசிக்க கற்றுத்தருகிறார்.
உதாரணமாக ‘ஜங் ஃபுட் தேசம்’ கதையில்,
ஐந்து பைசாவுக்கு டர்கர், பத்து பைசாவுக்கு கூட்சா, மூன்று பைசாவுக்கு குளிர்பானம் என்ற கற்பனை உலகம் மூலம் இன்றைய உணவு கலாச்சாரத்தை நகைச்சுவையாகவும் கூர்மையாகவும் சாடுகிறார்.
‘மாயக்கண்ணாடி’ கதையில், தினமும் கண்ணாடியை பார்க்கும் முன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஒரு எளிய வரியில் உடல்நலத்தின் முக்கியத்துவத்தையும் சொல்கிறார்.
இந்த கதைகள் அரசர்களை மட்டும் அல்ல ;
அதிகாரத்தின் அகந்தையையும், மக்கள் மீதான அநீதிகளையும், சோம்பேறித்தனத்தையும் நையாண்டி செய்கின்றன.
ஒரு காலத்தில் மாயக்கண்ணாடி அரசர்களிடமே இருந்தது.
இன்று அது குழந்தைகளின் கைகளில் வந்திருக்கிறது.
இந்த மாயக்கண்ணாடி ஒவ்வொரு வாசிப்பிலும்
புதிய கதவுகளைத் திறக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருப்பது நம் முகமா?
அல்லது சமூகத்தின் உண்மையான முகமா?

Friday, 27 March 2026

அறியப்படாத குழந்தைகள் உலகம்

 

 

அறியப்படாத குழந்தைகள் உலகம்

உதயசங்கர்



உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நேற்றிருந்த வாழ்வியல் நடைமுறைகளும், பண்பாட்டு விழுமியங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி எல்லாம் மாறும் போது குழந்தைகளின் உலகம் மட்டும் மாறாதா என்ன? ஆம். மாறியிருக்கிறது. தலைகீழாக அந்த அத்தத்திலிருந்து இந்த அத்தத்திற்கு இடம் மாறியிருக்கிறது. முன்பு குழந்தைகள் வெறும் எண்ணிக்கை மட்டுமே. வீட்டில் வளர்ந்ததை விட தெருக்காடுகளில் வளர்ந்தது தான் அதிகம். படிப்போ, சோறோ, துணிமணியோ எதுவும் ஒரு பொருட்டில்லை. யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமுடியாத அளவுக்கு வீட்டில் பொருளாதார நெருக்கடி, எண்ணிக்கை நெருக்கடி. பிள்ளைகள் எப்படியாவது எங்கிட்டாவது கஞ்சி குடிச்சி வளர்ந்து விடும் என்று நம்பினார்கள் பெற்றோர்கள். தன்னுடைய குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே பல தகப்பன்மார்களுக்குத் தெரியாது. வீட்டின் வறுமையிருளைப் போக்க எப்போது வேண்டுமானாலும் பள்ளியிலிருந்து குழந்தைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு வேலைக்கு அனுப்பப்படுவார்கள். பல நேரங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களே இந்தப் பணியைச் செவ்வனே செய்து விடுகிறார்கள். நீயெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்து ஏண்டா உயிரை வாங்கறே.. மாடு மேய்க்கப் போக வெண்டியதானே.. என்றோ பேசாம தீப்பெட்டிக் கம்பெனிக்குப் போய் வேலை பாத்து வீட்டுக்கு நாலு காசு சம்பாதிச்சுக் கொடுக்கலாம்ல.. ஏண்டா எங்கழுத்த அறுக்கிறே.. என்றோ நாலு நல்ல வார்த்தைகளை நிதமும் உடல் ரீதியான வன்முறைப் பிரயோகங்களுடன் சொல்லிக் கொண்டேயிருந்தால் எந்தப் பையன் தான் பள்ளிக்கூடத்துக்கு வருவான்?

அப்படி இதெல்லாம் ஒண்ணும் ரெம்ப மாறிவிடவில்லை என்ற முணுமுணுப்பு கேட்கிறது. இப்படியான நிலைமை இன்னமும் சிறு நகரங்கள், கிராமங்களில் நீடித்து வருவது நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும்  வேறுவகையில் மாற்றங்கள் உருவாகியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நேற்று குழந்தைகளாக இருந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இன்று ஒரு மத்தியதர வாழ்க்கை வாழக்கூடிய பெரியவர்கள் குழந்தைகள் மீது செய்கிற அழிம்பு தாங்க முடியவில்லை. முன்பு சொன்னது இல்லாமையினால், போதாமையினால் என்றால் இப்போது நடந்து கொண்டிருப்பது குழந்தைகளைப் பற்றிய அறியாமையால். தனக்குக் கிடைக்காதது, தான் ஆசைப்பட்டு ஏமாந்தது, ஏங்கித் தவித்தது, கனவு கண்டது, எல்லாவற்றையும் குழந்தைகள் மீது வரைமுறையின்றித் திணித்து குழந்தைகளை சூப்பர் ரோபோக்களாக மாற்றுகிற அவலமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதை நன்கு உணர்ந்து கொண்ட உலகமய முதலாளிகள் குழந்தைகள் வர்த்தகத்தில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். அனைத்துப் பொருட்களையும் குழந்தைகள் மனதில் வைக்கும் விதமாக விளம்பரங்கள். அந்தப் பொருட்களின் தன்மை என்ன? அதன் விளைவுகள் என்ன? பின் விளைவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையோ விசாரணையோ இல்லாமல் குழந்தை கேட்டு விட்டது என்ற ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கோக், பெப்சி, போன்ற அமிலங்கள் நிறைந்த குளிர்பானங்கள், பல்சொத்தை, பிடிவாதம் போன்றவற்றை உருவாக்கும் சாக்லேட் வகைகள், கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் ஜங்க்புட் வகையறாக்கள்,என்று உணவைப் பற்றி எந்த அக்கறையுமின்றி குழந்தைகளை பொத் பொத்தென்று குட்டி ஜெயிண்டுகளாக வளர்த்து வருகிற கொடுமை ஒரு புறமென்றால்,

தன் கனவுகளின் கிட்டங்கியாக, தன் நிறைவேறா ஆசைகளை நிறைவேற்ற வந்த தெய்வப்பிறவி, தன் எதிர்கால வைப்புநிதி, என்றெல்லாம் குழந்தைகளை நினைத்து வீட்டை விட்டு வெளியில் விடாமல் வீட்டிற்குள் பாடப்புத்தகம், ரேங்க், என்ற பைத்தியக்காரத்தனமான வதைக்கூடத்துக்குள் குழந்தைகளைத் தள்ளி சித்திரவதை செய்கிற மனோபாவம் வளர்ந்து வருகிறது. இந்தச் சித்திரவதையைப் பொறுத்துக்கொள்வதற்காகச் சின்னஞ்சிறு வயதிலேயே லஞ்சமும் ஊழலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீ ஹோம் ஒர்க் முடிச்சா சாக்லேட் தர்ரேன்.. என்றோ நீ அந்தப் பாடத்தை படிச்சி ஒப்பிச்சா கார்ட்டூன் சேனல் பாக்க விடுவேன் என்றோ பெற்றோர்கள் பேரம் பேசுகிறார்கள். இப்படித்தான் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இவையும் இது போன்ற பல குழந்தைகள் பிரச்னைகளையும் பேச வேண்டியதிருக்கிறது. விவாதிக்க வேண்டியதிருக்கிறது.

குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவர்களை அணுகுவதற்கும் கையாள்வதற்கும் தனித்துவமான திறன் கொண்டவர்களாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாறவேண்டும். 

அவர்களின் எதிர்காலமென்பது இந்த உலகின் எதிர்காலம். 

இந்த பூமியின் எதிர்காலம்.