Sunday, 24 May 2026

நம் சிந்தனை நம் கைகளில்

 

தத்துவம் அறிவோம் 7

நம் சிந்தனை நம் கைகளில்

உதயசங்கர்



மனிதனுடைய சிந்தனை அவனுடைய விரல்களில் தான் தொடங்கியது.

எப்படி?

டார்வின் என்ற அறிவியலறிஞர் பரிணாமக்கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். அப்படி என்றால்?

பட்டெனச் சொல்வதாக இருந்தால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று முதலில் சொன்னவர் டார்வின் தான்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லாம் என்றால்

 இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் எப்படி தோன்றின?

எப்படி எல்லாம் உருமாறின?

எவை எல்லாம் அழிந்தன?

ஏன் அழிந்தன?

எவை எல்லாம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன?

இயற்கையின் விதிகள் என்ன? என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சொன்னார்.

அப்படி என்றால் மனிதனை, இந்த பூமியில் உள்ள விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள், மீன்கள் இன்னபிற உயிர்களை எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கடவுள் படைத்தார் என்று சொல்லப்படுகிறதே அது சரியா? என்று நீங்கள் சந்தேகப்பட்டால் நீங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அறிவியல் என்பது ஒன்றை ஆராய்ந்து நிரூபிக்கும் உண்மை.

நம்பிக்கை என்பது எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புவது அல்லது ஏற்றுக் கொள்வது என்று சொல்லலாம்.

.டார்வினின் பரிணாமக்கோட்பாட்டின் ஒவ்வொரு உயிரும் இயற்கைச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்து கொண்டன. அப்படி தகவமைத்துக் கொண்டதால் உயிர் வாழ்ந்தன. தகவமைத்துக் கொள்ள முடியாத உயிரினங்கள் அழிந்து விட்டன.

தகவமைதல் என்றால் என்ன?

இயற்கையின் காலநிலை மாற்றம், கிடைக்கும் உணவுப்பொருட்கள், உணவுப்பொருட்களுக்கு ஏற்ற தனித்துவமான உடலமைப்பு, எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், இனவிருத்தித் திறன், இவற்றில் வெற்றி பெறுதல் தான் தகவமைதல் என்கிறோம்.

வெற்றிகரமாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்ட உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு பூமியின் முதல் உயிரினமான சையானோ இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு மேல் கரப்பான் பூச்சி வாழ்கிறது.

ஒன்றரைக் கோடி ஆண்டுகளாய் இலைவெட்டி எறும்பு வாழ்கிறது.

இப்படி தாவரங்கள், பூச்சிகள், பிரைமேட் என்று அழைக்கப்படுகிற குரங்கின மூதாதையர்கள் எல்லோரும் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.

ஆனால் எந்த உயிரினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு.

அது தான் சிந்தனை.

மூளையின் செயல்பாடுகளில் ஒன்றான சிந்தனை நம்முடைய கட்டைவிரலிலிருந்து பிறந்தது.

என்னது கட்டை விரலா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

ஆமாம். மனிதக்குரங்குகளைப் பார்த்திருக்கிறீர்களா?

அவற்றின் கட்டைவிரல் மற்ற நான்கு விரல்களுடன் ஒட்டியே இருக்கும். மனிதக்குரங்குகள் கட்டைவிரலை அதிகம் பயன்படுத்துவதுமில்லை. ஆனால் முதன்முதலாக எப்போது ஒட்டியிருந்த கட்டைவிரலை ஹோமோ சேப்பியன்ஸ் விரித்தார்களோ அப்போதே சிந்தனை தோன்றத் தொடங்கிவிட்ட து.

அது எப்படி?

அதுவரை மரங்களில் ஏறித் தாவித்திரிந்த குரங்குகள் தரைக்கு மனிதக்குரங்குகளாக மாறி வந்த போது கைகளுக்கும் வாலுக்கும் வேலையில்லை. அவை விடுதலை அடைந்தன.

இயற்கையில் கிடைத்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோமோசேப்பியன்ஸ் கூட்டத்துக்கு உணவுப்பஞ்சம் வந்த போது அதைச் சமாளிக்க வேறு ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.

அப்போது இயற்கையில் கீழே கிடக்கும் கற்களை எடுத்து எறிந்து சிறு பிராணிகளைக் கொன்று சாப்பிடுகிறார்கள். பிறகு கற்களைத் தீட்டிக் கூர்மையாக்கி எறிகிறார்கள். வேட்டை இன்னும் சிறப்பாக இருக்கிறது. இப்படி கல்லின் மீது தங்களுடைய உழைப்பைச் செலுத்தும் போது இயல்பாக கட்டைவிரல் தனியாகப் பிரிகிறது.

கட்டைவிரல் பிரிந்தவுடன் உழைப்பு இன்னும் எளிதாகிறது, அதாவது கற்களைத் தீட்டி ஆயுதங்களாக்குவது எளிதாகிறது. உணவுப்பஞ்சம் இல்லை. தாவர உணவை விட மாமிச உணவில் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் அதிகமாகவும் நேரிடையாகவும் கிடைக்கிறது.

அதன் விளைவாக மூளையில் பல புதிய ரசாயன மாற்றங்கள் நடக்கின்றன. அந்த மாற்றங்களின் விளைவாக மனிதன் சிந்திக்கத் தொடங்கினான்.

அதாவது மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தன. இயற்கை மற்ற உயிர்களைக் கட்டுப்படுத்தியது. தகவமைத்தது. அந்த உயிர்களும் வாழ்வதற்கான அடிப்படைச் சிந்தனைகளை மட்டுமே கொண்டிருந்தன.

ஆனால் மனிதன் மட்டும் தான் இயற்கையை, ஆராய்ந்தான். அதன் காரண காரியங்களை ஆராய்ந்தான். புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தான்.

இயற்கையின் விதிகளை அறிந்து அதைக் கட்டுப்படுத்தினான்.

தான் வாழ்வதற்காக இயற்கையைத் தகவமைத்தான்.

தன் வாழ்வினைத் தானே தீர்மானித்தான்.

அதற்குக் காரணம் மனிதனின் சிந்தனை அல்லது பகுத்தறிவு.

அது மனிதனையும் இந்த உலகத்தையும் சூழலையும் தனித்தனியேப் பிரித்துப் பார்க்க வைத்தது. அவனுக்கு இந்த உலகம் குறித்து ஒரு நோக்கு உருவானது. அவனுடைய வாழ்க்கை குறித்து யோசிக்க வைத்தது.

பிறப்பு, இறப்பு குறித்து ஆராய வைத்தது.

தத்துவம் பிறந்தது.

இப்போது சொல்லுங்கள்!

நம்முடைய சிந்தனை உருவானதுக்கு எது காரணம்?

கட்டைவிரல்.

அதுமட்டுமா?

மனிதனின் உழைப்பு தான் 

சிந்தனைக்குக் காரணம்.

சரியா!.

( தத்துவம் அறிவோம் )

நன்றி - இயல் சிறார் மின்னிதழ்