Tuesday, 7 April 2026

ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்?

 

1.          ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்?

uu    உதயசங்கர்



u

 

குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மீது பொதுவாகச் சில கருத்துகள் தமிழ் அறிவுச்சமூகத்தில் நிலவுகின்றன. முதலாவதாக அது எளிமையானது அல்லது எளிமையாகச் சொல்லப்படுவது, அடுத்தது குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்குப் பயிற்றுவிப்பது, மூன்றாவதாக இயற்கையை, உலகத்தை, சமூகத்தை அறிமுகப்படுத்துவது, நான்காவதாக அவர்களுக்கு அறநெறி/நன்னெறி/ நீதிநெறி/விழுமியங்கள் ஆகியவற்றைப் போதிப்பது ஐந்தாவதாக குழந்தை இலக்கியத்துக்கு மெனக்கிடல் தேவையில்லை.

இப்படியும் இன்னும் பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இந்தக் கருத்துகள் குழந்தைகள் இலக்கியத்தை தாழ்வாகப் பார்க்கிறதும் ஒருவகையில் அறிவுச்சமூகத்தின் முக்கியமான போக்குகளிலிருந்து ஓரங்கட்டப்படுவதும், குழந்தைகள் இலக்கியத்தின் மீது தீண்டாமையைப் பிரயோகிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப் பாராமுகமாக இருப்பதனால் பாதிக்கப்படுவது நம்முடைய குழந்தைகள் தானென்பதை மிக எளிதாக மறந்து விடுகிறோம். ஏனெனில் சிறார் இலக்கியம் என்பது ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. அப்படியென்றால் முதலில் கவலைப்பட வேண்டியது குழந்தை இலக்கியம் பற்றியல்லவா?

சிறார் இலக்கியத்தின் அவசியம்

குழந்தைகள் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தான் இந்த உலகத்தை அறிந்து கொள்கிறார்கள். தாங்கள் புலனுணர்வால் உணர்ந்த உலகத்துக்கும் யதாரத்தமான உலகத்துக்குமிடையிலான உறவையும் முரணையும் உணர்ந்து கொள்கிறார்கள். அதன் வழியே உண்மையைத் தேடும் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

குழந்தைகளின் உணர்வுகளில் கிளர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் கற்பனைத்திறனை சிறார் இலக்கியம் வளர்க்கிறது. அந்தக் கற்பனைத்திறன் அவர்களுடைய சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கிறது.

ஒரு நிகழ்வை, ஒரு அனுபவத்தை ஒருங்கிணைக்க சிந்திக்கும் ஆற்றல் உதவுவதின் மூலம் பகுதி உண்மையிலிருந்து முழு உண்மையை நோக்கி குழந்தையின் சிந்தனைத்திறன் பயணம் செய்கிறது.

சிறார் இலக்கியம் வாசிப்பதின் வழியே குழந்தைகள் பல்வேறு அனுபவங்களை கற்பனையாக அனுபவிக்கிறார்கள். கோபம், ஆத்திரம், அழுகை, சாகசம், தேடல், தீரம், குற்றம், தண்டனை, அன்பு, துணிச்சல், தைரியம் போன்ற அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் உணர்ந்திராத பல்வேறு உணர்வுகளை அனுபவிக்கிறார்கள். அந்த உணர்வுகள் அவர்களுடைய மனதிற்குப் பயிற்சியாக அமைகிறது. அதாவது உண்மையாக அனுபவித்திராத கற்பனை அனுபவங்களின் நிழலுணர்வுகள் அவர்களிடம் ஒரு உணர்வுச்சமதளத்தை உருவாக்குகிறது.

சிறார் நூல்களிலுள்ள ஏற்ற இறக்கமான கற்பனை அனுபவங்கள் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் அதிலிருந்து மீண்டு மறுபடியும் முன்னேறிச் செல்லும் தைரியத்தையும் கொடுக்கிறது. எனவே புத்தகங்கள் அவர்களுடைய யதாரத்த வாழ்க்கையில் வழிகாட்டும் வழிகாட்டிகளாகவும் இருக்கின்றன.  இன்னொரு வகையில் அவர்களை ஆற்றுப்படுத்துகிற நல்ல மனநல மருத்துவராகவும் இருக்கின்றன.

சிறார் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் குழந்தைகளிடம் நல்லுணர்வுகளையும் மெல்லுணர்வுகளையும் வளர்க்கிறது. மறைமுகமாக ஒரு ஆசிரியரைப் போல மனதோடு உரையாடுகிறது. மனதில், அறிவில், மாற்றங்களை உருவாக்குகிறது. அந்த மாற்றங்களின் வழியே குழந்தைகள் தங்களுடைய ஆளுமையைக் கட்டமைக்கும் உத்வேகத்தைப் பெறுகிறார்கள்.

சிறார் புத்தகங்கள் சிறார்களின் எதையும் ஆராய்ந்து அறியும் மனோபாவத்தை வளர்க்கின்றன சமூகத்துடன் இயைந்து வாழும் இயல்பைக் கற்றுக் கொடுக்கின்றன. இயற்கை அறத்தையும் பிரபஞ்ச அன்பையும் கற்றுக் கொடுக்கின்றன. தான் மட்டும் தான் உலகம் என்று வளரும் குழந்தை, எல்லோருக்குமானது இந்த உலகமென்று உணரும் சூட்சும அறிவைப் புத்தகங்கள் கொடுக்கின்றன.

குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கும்போது மொழித்திறன் வளர்கிறது. சொற்களின் வழியே புதிய உணர்வை அடையும் போது அந்தச் சொற்கள் அவர்களுடைய மொழிவங்கியில் சேகரமாகிறது. மொழிவளம் மிக்க குழந்தைகள் தங்களுடைய சிந்தனைகளை, உணர்ச்சிகளை மிக எளிதாக, வலிமையாக, கூர்மையாக வெளிப்படுத்துகிறாகள். அது அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும்போது அவர்களுடைய உணர்ச்சித்தளம் விரிவடைகிறது. ஆழமாகிறது. அதன் வழியே அவர்கள் உணர்ச்சிகளைக் கையாளும் பயிற்சி பெறுகிறார்கள். இதனால் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை நிதானமாக அணுகும் திறனைப் பெறுகிறார்கள். அந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.

புத்தகங்களை வாசிக்கும் போது குழந்தைகள் தாங்கள் வாழும் சமூகத்தின், வரலாறு, பண்பாடு, ப்ழக்கவழக்கங்கள், நடைமுறைகள், நன்மை தீமைகள், பலம், பலவீனங்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.

எனவே தான் குழந்தைகளின் வாசிப்பு என்பது நம்முடைய எதிர்காலத்துடன் தொடர்புடையது.

மனிதகுலத்துடன் தொடர்புடையது.

இந்த பூமியின் எதிர்காலத்துடன் தொடர்புடையது.

நன்றி - புக் டே

 

Saturday, 4 April 2026

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?

 

1.          பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?

உதயசங்கர்

    பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட அந்தக் கதைகளைக் சிறார்களுக்கானது தான் என்று நம்புகிறார்கள். பஞ்ச தந்திரக்கதைகளை அப்படியே பிரதியெடுத்து நூற்றுக்கணக்கான புத்த கங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நூலகங்களையும் அதை தன்னுடைய சொந்தப்படைப்பாக் கணக்கிடும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த து பத்திருபது பஞ்ச தந்திரக்கதைகள் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 பஞ்ச தந்திரக்கதைகளின் தோற்றம்

 பஞ்ச தந்திரக்கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாய்மொழிக்கதைகளாக இருந்து கி.மு 2 நூற்றாண்டிலிருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் சமஸ்கிருதச் செய்யுள்களாக எழுதப்பட்டிருக்கலாமென்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காஷ்மீர் அல்லது தென்மேற்கு ராஜ்ஜியத்தின் அரசன் அமரசக்தி. அவருடைய மூன்று புதல்வர்களான பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி, ஆகியோர் கல்வியிலும் அரசியலிலும் நாட்டமில்லாமல் இருந்தார்கள். விஷ்ணு சர்மா என்ற எண்பது வயது முதியவர் ( இது புனைபெயராகவும் இருக்கலாம் ) அவர்களுக்கு அரசநீதி, அரசியல் சூழ்ச்சி, அரசியல் தந்திரம், அரசியல் உத்தி, அரசியல் ரகசியங்கள் ஆகியவற்றைப் போதிக்க விலங்குகளை உருவகமாக க் கொண்டு சொன்ன கதைகள் தான் பஞ்ச தந்திரக்கதைகள்.

ஐந்து அரச நீதிகளான, மித்ர பேதம் ( நட்புப் பிரிவினை ), மித்ர லாபம் ( நட்புப்பேறு ), காக்க கோலூகீயம் ( அடுத்துக்கெடுத்தல் ), லப்தப்பிராணசம் ( பெற்றதை இழத்தல் ), அபரீக்‌ஷீதாகாரகம் ( அடாவடியான செயல் ) இவற்றை அடிப்படையாக க் கொண்டே பஞ்ச தந்திரக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

ஐந்து பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளில் விலங்குகள் கதாபாத்திரங்களாக இருந்தாலும் அவை மனிதப்பெயரும் மனித குணமும், மனித சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாகவும்  சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

 இந்தக் கதைகள் வைணவ சமயத்தின் பிரதியாகக் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் இந்து சமயத்தின் அரசியல் சிந்தனைகளின் கருவூலமாகவே இருக்கின்றன.

பஞ்ச தந்திரக்கதைகள் கிட்ட த்தட்ட 200 விதமான பாடபேதங்களுடன் உலகமெங்கும் பரவியிருக்கிறது. எந்த ஒரு இட த்திலும் இந்தக் கதைகள் குழந்தைகளுக்கான கதைகளென்று குறிப்பிடப்படவில்லை.

விலங்குகளும் பறவைகளும் வருவதாலேயே குழந்தைகளுக்கான கதைகளென்று நம்பி இன்று வரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய நிலவுடமைச் சமூகத்தின் அரசியல் நீதி நெறிமுறைகளைச் சொல்லும் கதைகளை இப்போது குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்தக் கேள்வி பஞ்ச தந்திரக்கதைகளுக்கு மட்டுமானதில்லை. தெனாலிராமன், பீர்பால், மரியாதை ராமன், முல்லா கதைகள், யேசு கதைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கதைகளுக்கும் பொருந்தும்.

எனவே பஞ்ச தந்திரக்கதைகள் குழந்தைகளுக்கானதில்லை.

நன்றி - புக் டே.

Friday, 3 April 2026

ஏன் சிறார் இலக்கியம்?

 ஏன் சிறார் இலக்கியம்?

உதயசங்கர்



1. குழந்தைகள் பேசும் முன்பே பாடுகிறார்கள், நடக்கும் முன்பே ஆடுகிறார்கள் எழுதும் முன்பே வரைகிறார்கள் என்று பிலிசியா ராத் சொல்கிறார்.
2. கலையே மனித இனத்தின் ஆதாரமாக இருக்கிறது. அறிவியல், வரலாறு, என்று எந்த த்துறையை எடுத்துக் கொண்டாலும் கற்பனை தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது.
3. கற்பனை அல்லது புனைவு தான் இன்றுவரை வேறு வேறு பெயர்களில் மனிதர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
4. இன்னும் சொல்லப்போனால் ஹோமோ சேப்பியன்ஸின் கற்பனை மீதான நம்பிக்கை தான் அவனை மற்ற மனித குரங்கினங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
5. இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை மற்ற விலங்குகள் வாழும்போது மனிதனின் கற்பனை தான் கேள்விகளை உருவாக்கியது. அந்தக் கேள்விகள் தான் அவனைப் பகுத்தறிவுள்ளவனாக்கியது. இன்றுவரை அந்தக் கற்பனைக் கேள்விகள் தான் அவனுடைய நன்மைக்கும் தீமைக்கும் காரணங்களாக இருக்கின்றன.
6. இயற்கையாகக் கிடைத்த கல்லைக் கூர் தீட்டினால் வேட்டை இன்னும் சுலபமாகுமென்பதை முதலில் கற்பனையில் தோன்றியதனால் தான் யதார்த்த த்தை மாற்ற முடியுமென்ற நம்பிக்கை அவனுக்குப் பிறந்த து.
7. கலை இலக்கியத்தின் அடிப்படைப்பண்புகளாக மாற்றி யோசித்தல், உற்றுநோக்கல், உணர்ச்சிகளை உருவாக்குதல், உணர்ச்சிகளை மிகைப்படுத்துதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதலின் மூலம் மாயமான ஒரு யதார்த்த த்தை கற்பனை உருவாக்குகிறது.
8. அந்த மாய யதார்த்தம் தான் இன உணர்வு, மொழியுணர்வு, சாதியுணர்வு, மதவுணர்வு, தேசபக்தி, போன்ற கற்பனைகளை உருவாக்குகிறது. அது தமிழ்த்தேசியம், இந்திய தேசியம், மொழித்தேசியம், என்று மனிதர்களை ஆட்கொள்கிறது.
9. அனைத்துத் தேசியங்களும் கற்பனையானவை தான். ஆனால் மனிதர்கள் ஒரு சமூகமாக சேர்ந்து வாழ, தங்களுடைய இருத்தலைக் காப்பாற்ற, நியாயப்படுத்த இந்த மாய யதார்த்த த்தின் மீது வெறியூட்டுகிறார்கள்.
10. இன்னொரு வகையில் இந்த மாய யதார்த்தம் தான் மனிதர்களை ஒன்றிணைக்கிறது. ஒற்றுமைப்படுத்துகிறது. பாதுகாப்பு தருகிறது. ஆற்றுப்படுத்துகிறது. எழுச்சி கொள்ள வைக்கிறது. மாய யதார்த்த த்துக்காக உயிரையே மாய்த்துக் கொள்ள வைக்கிறது.
11. மனித சமூகமே இந்த மாய யதார்த்த த்தின் புதிர்ப்பாதைகளின் வழியே தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
12. எப்போது உபரி தோன்றியதோ, எப்போது தனியுடமைச் சிந்தனை தோன்றியதோ அப்போதிருந்து இந்த மாய யதார்த்த த்தைத் திட்டமிட்டு ஆளும் வர்க்கம் உருவாக்கத் தொடங்கிவிட்ட து. அதை மக்களிடம் பரப்பி அவர்களைத் தன்வசப்படுத்திச் சுரண்டலைத் தொடர்கிறது.
13. இந்தச் சுரண்டும் மாய யதார்த்தத்துக்கு எதிராக விமரிசனக்கண்ணோட்ட த்தை வளர்ப்பதும், புதிய மாய யதார்த்த த்தை உருவாக்கி அதை மக்களிடம் பரப்புவதும் தான் இப்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி.
14. இந்தப் பிரபஞ்சமும், பால்வெளிகளிகளும் லட்சக்கணக்கான சூரியன்களும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் எப்போதும் முடிவிலியாக இருக்கும் உண்மை கூட மாய யதார்த்த மாகத்தான் தோன்றுகிறது.
15. மாய யதார்த்தம் அல்லது கலை அல்லது கற்பனை அல்லது Believing in Nonsense இல்லையென்றால் மனிதன் அழிந்து விடுவான்.