Monday, 4 May 2026

கண்ணாமூச்சி ஆடும் புனைவுகள்

 கண்ணாமூச்சி ஆடும் புனைவுகள்

உதயசங்கர்



தமிழ் நாவல் இலக்கியம் 1876-ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரத்தில் தொடங்கி இன்று வரை எத்தனையோ மேடுபள்ளங்களைக் கடந்து சமீபகாலத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களின் படைப்புக்களமாக மாறியிருக்கிறது

இன்று ஒரு தமிழ் இலக்கிய வாசகன் பெருமையோடு குறைந்தது பத்துப்பேரையாவது நாவல் இலக்கியத்தில் சாதித்தவர்கள் என்று சொல்ல முடியும். நவீன நாவல் இலக்கிய வடிவம் வெறும் புனைவைத் தாண்டி எழுத்தாளனிடம் வேறு பல விஷயங்களையும் வற்புறுத்துகிறது. வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், இனவரைவியல், என்று நவீன அறிவுலகின் தரவுகள் அனைத்தையும் தன்னுடைய புனைவிலக்கியத்தில் நெய்வதன் மூலம் படைப்பின் அடர்த்தியையும், ஆழத்தையும், பரப்பளவையும், நம்பகத்தன்மையையும், கலையாளுமையையும், செழுமைப்படுத்துகிறான்

இன்றைய நாவலாசிரியன் தன்னுடைய புனைவெழுத்தை உண்மையைப் போல புனைவையும், புனைவு போல உண்மையையும் குழப்பித்தருவதன் மூலம் வாசகனுக்கு கலைப்பரவசத்தை அளிக்கிறான். கலைஞனே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தன் படைப்பில் முன்னுணர்ந்து வடிவமைக்கிறான். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வுகளைக்கூட சில வரலாற்றுக்குறிப்புகளின் துணையோடு வாசகனின் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி விடுகிறான். இதிகாசங்கள், புராணங்கள், நாட்டுப்புறக்கதைகளில் உள்ள பேசப்படாத பக்கங்களைப் பேச வைக்கிறான். வெளிச்சம் படாத கதாபாத்திரங்களை பிரம்மாண்டமாய் உருப்பெருக்குகிறான். ஏற்கனவே நிலைநிறுத்திய மதிப்பீடுகளை மறுவாசிப்பு செய்கிறான். இண்டு இடுக்குகளில் நுழைந்து கலையின் ஒளியினால் நமக்கு வேறொன்றாகக் காட்டுகிறான்.

மனித மனதின் கோடிக்கணக்கான விசித்திரங்களையே உலகெங்குமுள்ள படைப்பாளிகள் கோடிக்கணக்கான பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கலைடாஸ்கோப்பின் சித்திரங்களைப் போல ஒரு சிறு சலனத்தில் அற்புதமான சித்திரங்களை உருவாக்கும் மனித மனம் எழுதித்தீராத மர்மங்களைக் கொண்டிருக்கிறது

வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு தொல்லியல் சான்றுகள் மட்டும் போதாது. நம்முடைய இனக்குழுவின் ஆதிக்கிழவி தன்னுடைய உடலெங்கும் கதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் கதைகளால் உருவாக்கப்பட்டவள் தான் அந்த ஆதிக்கிழவி. அவளுடைய சடைபிடித்த தலைமயிரில் எத்தனை லட்சம் கதைகள் ஈரும் பேனுமாய் அடைந்து கிடக்கின்றன. அவைகள் எப்போதும் கதைக்குஞ்சுகளைப் பொரித்துக் கொண்டேயிருக்கின்றன. அவளுடைய உடல் சுருக்கங்களிலிருந்தும், மீன்செதில் பாய்ந்த தோல் பரப்பிலிருந்தும் கதைகள் உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன

ஆதிக்கிழவி தலைமுறைகள் தோறும் பண்பாடு, பழக்கவழக்கம், தொன்மங்கள், வழியாக உருவாகும் கதைகளைச் சேகரித்து தன்னுடம்பில் ஒளித்து வைத்துக் கொண்டேயிருக்கிறாள். அந்தக்கதைகளின் மூலமே எத்தகைய இடரையும் மனித இனம் தன் ஆன்மபலத்தினால் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எத்தனை விஞ்ஞானங்கள், புதிய கண்டுபிடிப்புகள் இந்தப்புவியில் வந்தாலும் என்றும் கதைகளுக்கு அழிவில்லை. மற்றொரு வகையில் சொல்லப்போனால் கதைகள் இந்தப்பூமியில் என்று அழிந்து போகிறதோ அன்று மனித இனமே அழிந்து விடும்

அதனால் தான் இந்தப்பூமியெங்கும் அலைந்து திரிந்து ஆதிக்கிழவி கதைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் காலம் பிழைத்தவள். நித்தியமானவள். அதனால் அந்தக்கிழவியிடமிருந்து கடந்த காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். எதிர்காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். அவளுடைய கதைகள் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. ஆனால் உண்மைகளும் உள்ள புனைவுகள். புனைவுகளுக்குள் உண்மையை உருமாற்றி கண்ணாமூச்சி ஆடுகிறாள் ஆதிக்கிழவி. ஏன் தெரியுமா? சில நேரம் உண்மை குரூரமானது. உணர்ச்சியற்றது. சாய்வில்லாதது. நேரடியானது. ஒரு கொலைக்கருவியைப் போல. அதனால் மனித இனமே கூட அழிந்து போய்விடலாம். ஆதிக்கிழவிக்குத் தெரியும். அதனால் தன் குழந்தைகளைக் காப்பாற்ற புனைவுகளை கலந்து வைக்கிறாள். இந்தப் புனைவுகளே மனிதகுலம் இன்னும் நம்பிக்கையோடு மேலும் மேலும் முன்னேறக் காரணமாக இருக்கிறது.

( சு.வெங்கடேசனின் சந்திரஹாசம் கிராஃபிக் நாவலுக்கு எழுதிய மதிப்புரையிலிருந்து )

Sunday, 3 May 2026

அறிவின் சுடரை ஏற்றும் பதின்பருவத்தினருக்காக

 

அறிவின் சுடரை ஏற்றும் பதின்பருவத்தினருக்காக 





மனித இனத்தின் மிக அற்புதமான பருவம் குழந்தைப்பருவம் தான். குழந்தைகள் இந்த உலகைப்புரிந்து கொள்ளத் தொடங்கும் விதமே குழந்தைமையின் அதீதக்கற்பனையின் வழியாகத்தான். கற்பனையின் எல்லையற்ற வெளியில் குழந்தைகள் எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு யதார்த்தமான புற உலகம் ஒருபொருட்டேயில்லை. அவர்களால் வண்ணக்கனவுகளை நெய்ய முடியும். நூற்றுக்கணக்கான வர்ணங்களில் சிறகுகள் விரித்துப் பறக்கமுடியும். எப்போதும் கனவுகளில் மிதக்கிற கண்களோடு அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். பெரியவர்களுக்கு முக்கியம் என்று தோன்றுவதெல்லாம் குழந்தைகளுக்கு முக்கியமில்லாதவையாகத் தெரிகிறது. குழந்தைகள் கவித்துவம் பொங்கித்ததும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பருவத்தில் தான் குழந்தைகளின் ஆளுமைத்திறனில் உணர்வுகளின் அடித்தளம் கட்டியெழுப்பப்படுகிறது.

குழந்தைகள் தங்களுடைய பதின்பருவம் வரை எல்லாவற்றையும் நம்புகிற, ஏற்றுக்கொள்கிற, பின்பற்றுகிற, சார்ந்திருக்கிற, குழந்தைமையின் கவித்துவஅறியாமையில் இருப்பார்கள். இந்தக் கவித்துவ அறியாமை தான் விலங்குகளும் பறவைகளும் புழுக்களும் பூச்சிகளும் பேசுவதை கிஞ்சித்தும் சந்தேகப்படாமல் நம்பச்செய்யும்., மாயக்கம்பளங்களையும், பூதங்களையும் ராட்சசர்களையும் இளவரசர்களையும், இளவரசிகளையும் உண்மையே போல நம்பி உணர்ச்சியலைகளில் நீந்திக்கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் பதின்பருவம் தொடங்கும்போது அறிவின்மலரில் இதழ்கள் ஒவ்வொன்றாய் விரியத் தொடங்கும்போது மெல்ல மறையத் தொடங்கும். குழந்தைமை தனது மாயக்கம்பளத்தைச் சுருட்டிக்கொண்டு ஆழ்மனதுக்குள் உறையத் தொடங்கும். கேள்விகளின் அக்கினிக்குஞ்சுகள் அறியாமையின் மீது தன் வெளிச்சத்தைப் பாய்ச்ச பதின்பருவத்தின் அறிவுப்பருவம் வாழ்வின் மர்மங்களைக் கண்டறிய முயற்சிக்கும்.

வாழ்வின் மர்மங்கள் எப்போதும் கேள்விகளையே அருவியெனக் கொட்டிக்கொண்டிருக்கும். பொங்கிவரும் அந்தக் கேள்விகளை எதிர்கொண்டு மர்மங்களைக் கண்டுபிடிக்க பதின்பருவத்துக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுமே முயற்சிகளைச் செய்வார்கள். நான் யார்? நான் எப்படி வந்தேன்? இந்த உலகம் எப்படி வந்தது? உயிர் என்றால் என்ன? மரணம் என்றால் என்ன? கடவுள் இருக்கிறாரா? ஏன் உலகம் முழுவதும் ஏக்கச்சக்கமான கடவுள்கள் இருக்கிறார்கள்? நம்பிக்கை என்றால் என்ன? மூடநம்பிக்கை என்றால் என்ன? என் ஊர், என் நாடு, என்மொழி, என் இனம், இவையெல்லாம் என்ன? ஏன் மனிதர்களிடம் ஏற்றதாழ்வுகள் இருக்கின்றன? இப்படி எண்ணிலடங்காக்கேள்விகள் கொட்டிக் கொண்டேயிருக்கும். அப்படித் தோன்றிக்கொண்டேயிருக்கும் கேள்விகளோடு பதின்பருவத்தினர் பள்ளி, கல்லூரிகளுக்குப் போகின்றனர். சினிமாக்களுக்குப் போகின்றனர். அரசியல் கூட்டங்களுக்குப் போகின்றனர். பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், இணையம், என்று அவர்கள் சுற்றியலைந்து பெரும்பாடு பட்டே ஏதோ சில விஷயங்களில் வழிகாட்டுதல் பெறுகின்றனர். பதின்பருவத்தினரை சரியான வழிகளில் மடைமாற்ற நம்மிடம் புனைவுகள் இல்லை. அபுனைவுகள் இல்லை. திரைப்படங்கள் இல்லை. பத்திரிகைகள் இல்லை. புத்தகங்கள் இல்லை. அவர்கள் வேறுவழியில்லாமல் யார் கிடைக்கிறார்களோ அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் காட்டும் வழிகளில் சென்று விடுகிறார்கள். இதற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய சூழலில் பதின்பருவத்தினருக்கான புனைவு மிக முக்கியமானதாகிறது. அந்த வகையில் புலிக்குகை மர்மம் என்ற இந்த நாவல் பதின்பருவத்தினருக்கான சாகசத்தை முன்வைக்கிறது. வெறும் சாகசமாக மட்டுமல்லாமல் அதில் ஒரு சமூகக்காரணத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. இதில் வரும் கேப்டன்பாலு என்ற கதாநாயகன் மிகச்சாதாரணமான பையன் தான் எப்படி அவன் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சிபெற்று ஒரு லட்சியக்கதாநாயகனாக மாறுகிறான் என்பதை தொடர்ந்து வெளிவரப்போகும் நாவல்களில் நீங்கள் வாசிக்கலாம். இந்த நாவலில் அறிமுகமாகும் கேப்டன்பாலு தொடர் நாயகனாக வலம் வரப்போகிறான். பதின்பருவத்தினரின் பிரதிநிதியாக அவனை உலவ விட வேண்டும் என்ற எண்ணத்தில் இதில் உருவாக்கப்பட்டிருக்கிறான். அவனைச் சந்தியுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவனைப்பிடிக்கும். அவனுக்கும் உங்களைப் பிடிக்கும். எல்லோருக்கும் பிடிக்கும்.

புலிக்குகை தன் வாயைத் திறந்து அழைக்கிறது! அதற்குள் இருக்கும் மர்மம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்!

வெளியீடு - வானம் பதிப்பகம்

தொடர்புக்கு - 9751549992