Tuesday, 21 April 2026

கலையும் யதார்த்தமும்

 கலையும் யதார்த்தமும்

உதயசங்கர்




 
குழந்தைகள் பேசத்தொடங்குமுன் பாடுகிறார்கள். குழந்தைகள் எழுதத்தொடங்குமுன் ஓவியம் வரைகிறார்கள். குழந்தைகள் நடக்கத் தொடங்குமுன் ஆடுகிறார்கள். மனித உணர்வுகளின் அடிப்படையே கலை தான். “

------ பிலிசியா ரஸாத்

கலையே மனித இனத்தின் ஆதாரமாக இருக்கிறது. யதார்த்த உலகினை உள்வாங்கி யந்திரமயமாக அல்லாமல் தன்னுடைய தனித்துவமான படைப்பூக்கத்துடன் பிரதிபலிக்கிறான். இந்தப் படைப்பூக்கம் தான் மனித அறிவு வளர்ச்சியில் மிக முக்கியமான திருப்புமுனை என்று சொல்ல லாம். படைப்பூக்கம் மனிதர்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, உழைப்பு, பயிற்சி, முயற்சி ஆகியவற்றைப் பொறுத்து மிகத் தீவிரமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. அறிவியல், வரலாறு, என்று எந்த த்துறையை எடுத்துக் கொண்டாலும் கற்பனை தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது.

படைப்பூக்கத்தின் வேறு பெயர்களான கற்பனை அல்லது புனைவு தான் இன்றுவரை வேறு வேறு பெயர்களில் மனிதர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கும். யதார்த்த உலகைப் புரிந்து கொள்ள, அதன் மீது வினையாற்ற, சமூகத்தை முன்னேற்ற, அதை மாற்றியமைக்கத் தூண்டுகிற கிரியாவூக்கியாக படைப்பூக்கமே இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் மனித குல வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால்

ஹோமோ சேப்பியன்ஸின் கற்பனை மீதான அசைக்க முடியாத நம்பிக்கை தான் அவனை மற்ற மனித குரங்கினங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இந்தக் கற்பனை அவனுடைய மரபணுவில் கல்வெட்டாய் பதிந்து விட்ட து. கற்பனை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள்

  மற்ற விலங்குகள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து கொண்டிருந்தன. இயற்கை மாற்றங்களுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டன. அப்படி மாற்றிக் கொள்ள முடியாதபோது அழிந்து விட்டன. ஆனால் மனிதன் மட்டும் தான் இயற்கையைத் தனக்காகத் தகவமைத்தான். இயற்கையின் மீது வினைபுரிந்து தான் வாழ இயற்கையை மாற்றினான்.

இந்த த் தூண்டுதலுக்குக் காரணமாக அமைந்த து மனிதனின் படைப்பூக்கம் அல்லது கற்பனை தான். அது தான் யதார்த்த உலகத்தையும் தன்னையும் பிரித்து உணரும் அதிசயத்தை நிகழ்த்தியது. அது தான் கேள்விகளை உருவாக்கியது. அந்தக் கேள்விகள் தான் அவனைப் பகுத்தறிவுள்ளவனாகவும் நாகரீகமுள்ளவனாகவும் மாற்றியது.

 இயற்கையாகக் கிடைத்த கல்லைக் கூர் தீட்டினால் வேட்டை இன்னும் சுலபமாகுமென்பதைத் தற்செயல் நிகழ்வில் கண்டுபிடித்த தைப் பிறகு கற்பனை செய்யத் தொடங்குகிறான். அந்தக் கற்பனையே அவனைச் செயலூக்கம் மிக்கவனாக மாற்றுகிறது. அந்தச் செயலூக்கம் தான் அவனுக்கு இந்த உலகத்தை மாற்ற முடியுமென்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.

. இங்கே தான் கலை இலக்கியத்தின் அடிப்படைப்பண்புகளா மாற்றி யோசித்தல், உற்றுநோக்கல், உணர்ச்சிகளை உருவாக்குதல், உணர்ச்சிகளை மிகைப்படுத்துதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாய யதார்த்தத்தை படைப்பூக்கம் அல்லது கற்பனை உருவாக்குகிறது.

. இந்த மாய யதார்த்தம் மனிதனுக்கு இந்த உலகத்தைப் பர்றிய, இயற்கையைப் பற்றிய அறிவைக் கொடுக்கும்போதே உணர்வுத்தளத்தில் இந்த மாய யதார்த்தம் மனிதர்களை ஒன்றிணைக்கிறது. ஒற்றுமைப்படுத்துகிறது. பாதுகாப்பு தருகிறது. ஆற்றுப்படுத்துகிறது. எழுச்சி கொள்ள வைக்கிறது. மாய யதார்த்த த்துக்காக உயிரையே மாய்த்துக் கொள்ள வைக்கிறது. வர்க்க உணர்வு, இன உணர்வு, மொழியுணர்வு, சாதியுணர்வு, மதவுணர்வு, தேசபக்தி, போன்ற கற்பனையான யதார்த்தங்களை உருவாக்குகிறது. இந்த மாய யதார்த்தம் மனிதர்கள் ஒரு சமூகமாக சேர்ந்து வாழ, தங்களுடைய இருத்தலைக் காப்பாற்ற, நியாயப்படுத்த உணர்வுரீதியாக ஒன்றுபட பேருதவி புரிகிறது.

கலையும் இலக்கியமும் தனிமனிதனின் உணர்வுத்தளத்தில் ஒரு வெளிப்பாடாகத் தோன்றினாலும் குழுச்செயல்பாட்டில் அது சமயச்செயல்பாட்டின் வழியே தான் வேரூன்றியது. தொல்சமயச்செயல்பாடுகள் அந்தக் குழுவின் உணர்வுநிலைகளைக் கட்டுப்படுத்தவும், வளர்த்தெடுக்கவும், நம்பிக்கை கொள்ள வைக்கவும் உளவியல் மருந்துகளாகவும் செயல்பட்டன. இப்போது வரை கலையும் இலக்கியமும் அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து கொண்டே வருகின்றன.

எப்போது உபரி தோன்றியதோ, எப்போது தனியுடமைச் சிந்தனை தோன்றியதோ அப்போதிருந்து இந்த மாய யதார்த்த த்தைத் திட்டமிட்டு ஆளும் வர்க்கம் உருவாக்கத் தொடங்கிவிட்ட து. அதை மக்களிடம் பரப்பி அவர்களைத் தன்வசப்படுத்தி பொருளாதாரச் சுரண்டலைத் தொடர்கிறது.

 

இந்தச் சுரண்டும் மாய யதார்த்தத்துக்கு எதிராக விமரிசனக்கண்ணோட்ட த்தை வளர்ப்பதும், புதிய எதிர் மாய யதார்த்தத்தை உருவாக்கி அதை மக்களிடம் பரப்புவதும் தான் இப்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இதை சிறார் இலக்கியத்திலிருந்தே தொடங்க வேண்டும்.

நன்றி - புக் டே

 

Sunday, 19 April 2026

வாசிப்பு என்ன செய்யும்? -

 

உலகபுத்தக தினம் 2026


வாசிப்பு என்ன செய்யும்?



 

1. வாசிக்கும்போது உங்கள் அறிவு விசாலமடையும்.

 

2. வாசிக்கும்போது உங்கள் மனம் அன்பில் திளைக்கும்.

 

3. வாசிக்கும்போது நீங்கள் அறியாத பல விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

 

4. வாசிக்கும்போது உங்களுக்கு புரியாத பல விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

 

5. வாசிக்கும் போது எது வரலாறு? எது கட்டுக்கதை? என்பது தெரிந்துவிடும்.

 

6. வாசிக்கும்போது எது பண்பாடு? எது மரபு? எது சனாதனம்? என்று புரிந்துவிடும்.

 

7. வாசிக்கும் போது உலகத்தில் உள்ள அத்துணை மனிதர்களும் நம்முடைய சகோதரர்கள் என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 

8. வாசிக்கும் போது சாதி மதம் இனம் மொழி போன்ற பேதங்களை நான் எளிதில் கடந்து விட முடியும்.

 

9. வாசிக்கும்போது இந்த உலகின் அத்தனை கண்டங்களிலும் உள்ள வெவ்வேறு மொழி பேசக்கூடிய வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கையை நாம் அனுபவிக்க முடியும்.

 

10. வாசிக்கும்போது மனித உறவுகளின் காம குரோத நேச பாவனைகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 

11. எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மனிதர்களுடைய உணர்வு நிலைகளில் உள்ள ஒற்றுமையை நாம் உணர முடியும்.

 

12. வாசிக்கும்போது இந்த பிரபஞ்சம் இந்த எப்படி தோன்றியது? எப்படி இயங்குகிறது? என்று புரிந்து கொள்ள முடியும்.

 

13. வாசிக்கும் போது பிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலம், சந்திர சூரியர்கள் கோள்கள் என்று நாம் அறிந்து கொள்ளும் போது  இந்த வாழ்வின் முக்கியத்துவம் என்ன என்று நாம் உணர முடியும்.

 

14. . மானுட வாழ்வின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளும்போது நம்மிடம் உள்ள அற்பமான சுயநலம்,சுரண்டல், பொறாமை, குரூரம், குரோதம், விரோதம், பகை , பாகுபாடு போன்ற உணர்வுகளை கடந்து அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் பேருவகை நிலையை நாம் அடைந்து விட முடியும்.

 

15. வாசிக்கும்போது இந்தப் பிரபஞ்சத்தையே ஆரத்தழுவி அன்பு செய்யும் மனதைப் பெறமுடியும்.