Saturday, 28 February 2026

அதிகாரத்தைப் பகடி செய்ய………

 அதிகாரத்தைப் பகடி செய்ய………




குழந்தைகள் வாசிப்பதற்காக நான் எழுதிய பூனை குறுக்கே போனா? என்ற கட்டுரையை என்னுடைய வலைப்பூவில் பிரசுரித்திருந்தேன். அதற்கு குழந்தைகள் இலக்கியம் என்று பெயரிட்டிருந்தேன். அதை வாசித்த ஒரு வாசகர் இது குழந்தை இலக்கியமா? என்று கேள்வி கேட்டிருந்தார். யோசித்துப்பார்த்தால் அதில் நியாயமும் இருக்கிறது. ஏனெனில்  ஆங்கிலத்தில் சில்ட்ரன்ஸ் லிட்டேரேச்சர் என்ற ஒரே பதத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட, ஐந்திலிருந்து பத்து வயதுக்குட்பட்ட, பத்திலிருந்து வளரிளம் பருவத்து சிறார் வரைக்குமான அனைத்து வயது குழந்தைகளுக்குமான இலக்கியத்தை குறிப்பிட்டு விடுகிறார்கள். ஆனால் தமிழில் பொதுவாக எல்லோரும் குழந்தை இலக்கியம் என்ற ஒரே பதத்தில் குறிப்பிடும்போது வாசகருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில் நமது பொதுப்புத்தியில் பத்து வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே குழந்தைகள் என்று சொல்கிறோம். பத்து வயதுக்கும் மேல் வளரிளம் பருவத்தில் உள்ளவர்களை சிறுவர் அல்லது சிறார் என்றே சொல்கிறோம். அப்படியானால் பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதைகளும், கட்டுரைகளும் குழந்தை இலக்கிய வகைப்பாட்டுக்குள்ளும், பத்து வயதுக்கு மேல் வளரிளம் பருவம் வரையிலான சிறுவர்களுக்கான கதைகளும், கட்டுரைகளும் சிறுவர் இலக்கியம் என்ற வகைப்பாட்டிற்குள்ளும் வரவேண்டும். எல்லாக்கதைகளையும் எல்லாக்கட்டுரைகளையும் குழந்தை இலக்கியம் என்ற வகைப்பாட்டில் கொண்டு வரும்போது எல்லோருக்கும் குழப்பம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தையின் உளவியலில் நம்ப முடியாத கற்பனைகளும், அதிசயங்களும் அற்புதங்களும் இன்பத்தை ஏற்படுத்துகின்றன. கிளர்ச்சியடைய வைக்கின்றன. மனதில் திருப்தியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் படைப்பூக்கத்தைத் தூண்டி விடுகின்றன. குழந்தைகளின் தனித்துவமான ஆளுமைக்கு அஸ்திவாரம் போடுகின்றன. வண்ணங்களும், விசித்திரமான, கோமாளித்தனமான, நம்பமுடியாத, கதாபாத்திரங்களும் கதைகளும் குழந்தையின் உணர்வு உலகை விரிக்கின்றன. குழந்தைகள் யதார்த்தத்தில் போலச்செய்வதின் மூலம் தன் படைப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. அந்தக்கதைகளில் உள்ள கருத்துகளும், அறவிழுமியங்களும் குழந்தைகளின் ஆழ்மனதில் மறைமுகமான கல்வெட்டாய் பதிந்து விடுகின்றன.

பத்து வயதிலிருந்து தர்க்க அறிவு முளைவிடத்தொடங்கிறது. அது வரை உணர்ச்சிமயமாக இருந்த குழந்தைகள் இப்போது தங்களுடைய அறிவு முளைவிடுவதைப் பார்க்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் துணையுடன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளத்தொடங்குகின்றனர். உலகைப்பற்றி, சமூகம்பற்றி, வாழ்க்கையைப் பற்றி, தனக்கு நேரும் அநுபவங்களைப் பற்றி நல்லது கெட்டது பற்றி கருத்துகளை உருவாக்கத் தொடங்குகின்றனர். வாழ்க்கை, சமூகம், உறவுகள், இவற்றிலுள்ள நுண் அரசியலைப் புரிந்து கொள்ளத்தொடங்குகின்றனர். உடலும் உள்ளமும் உரம் பெறும் பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய தன்னுணர்வு அதிகமாகிறது. அதுவரை யாரையாவது சார்ந்தே இருந்த குழந்தை தன்னை ஒரு தனிமனிதனாக, தனித்துவமுள்ளவனாக உணரத்தொடங்குகிறது. அந்தத் தன்னுணர்வு  சாகசத்தையும், சவால்களையும், சாதனைகளையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகின்றன. அதற்கேற்ற கதைகளையும், படைப்புகளையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதிகாரம் மோசமானது. அதிலும் அளவற்ற அதிகாரம் மிகமிக மோசமானது. இந்த உலகம் அதிகாரத்தின் படிநிலைகளால் கட்டப்பட்டிருக்கிறது. அரசு, சமூகம், குடும்பம், அனைத்திலுமே அதிகாரம் நிரம்பிவழிகிறது. அதிகாரத்தைப் பற்றிய உணர்வின்றி எல்லோரையும் அதிகாரம் செய்ய வைக்கிற நுட்பம் அதிகாரத்துக்கு இருக்கிறது. அதிகாரத்தின் மீதான பேரவா எல்லோர் மனதிலும் ஊற்று நீரென பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் குழந்தைப்பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது அல்லது உணர்த்தப்படுகிறது.

பிறந்தவுடன் குழந்தைக்குத் தாயிடமிருந்து கிடைக்கும் அன்பு குழந்தை எதிர்கொள்ளும் முதல் நல்லுணர்வு. என்றால் அதற்கு நேரெதிரான தீய உணர்வாக அதிகாரத்தின் கொடுக்குகளால் கொட்டப்பட்டுக்கொண்டிருப்பது தான். சார்ந்து இருப்பதினாலேயே அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பது சின்னஞ்சிறு பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. அந்தக்குழந்தைப் பருவத்திலிருந்தே எல்லா இடங்களிலும், எப்போதும், ஏதாவது ஒரு வகையில் அதிகாரத்தின் கோமாளித்தனங்களையும், கொடூரங்களையும் அநுபவிப்பவர்களாக குழந்தைகள் ஆகின்றார்கள்.  இதைச் செய்யாதே, இதைச்செய், என்று அதிகாரம் ஆணையிட்டுக்கொண்டேயிருக்கிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், வயது மூத்தவர்கள், போவோர், வருவோர், எல்லோரும் குழந்தைகள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். கெடுவாய்ப்பு என்னவென்றால் இதை குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகச் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் குழந்தைகள் தங்களிடம் உள்ள இயல்பான படைப்பூக்கத்தினால் இந்த அதிகாரத்தைப் பகிடி செய்கிறார்கள். வக்கணை செய்கிறார்கள். அதிகாரமே வெட்கப்படும் அளவுக்கு அவர்கள் கேலி செய்கிறார்கள்.

மாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள்.

அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சிக்கிற கதைகள். அதன் மூலம் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த யத்தனிக்கும் கதைகள்

அந்த விழிப்புணர்வே அன்பெனும் பெருநதியில் குழந்தைகள் எப்போதும் மூழ்கித்திளைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதைகள்

வெளியீடு - வானம் பதிப்பகம்
தொடர்புக்கு - 9751549992

Friday, 27 February 2026

குழந்தைமையின் மாயாஜாலம்

 

குழந்தைமையின் மாயாஜாலம்



பொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதுவும் உண்மையாகவே நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, உருமாறுகிறது. மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்த்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.

இந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.

குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். குழந்தை இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தை இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும்.  குழந்தை இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த குழந்தை இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் குழந்தை இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ஆலிசின் அற்புத உலகம் ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் குழந்தை இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

மற்ற பாணி இலக்கியவகைகளும் இருந்தாலும் ஃபேண்டசிவகை இலக்கியத்துக்கு ஒரு தனீ ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஃபேண்டசியில் குழந்தைகளின் கற்பனையின் எல்லை விரிகிறது. புதிய கற்பனைகள், மாயாஜாலங்கள் முதலில் குழந்தைகளின் படைப்பூக்க நுண்ணுணர்வைத் தூண்டி விடுகின்றன. நம்ப முடியாததை நம்புகிற உணர்வு குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. யதார்த்த உலகத்தில் இல்லாத, நடைமுறைப்படுத்த முடியாத, மாய உலகம் குழந்தைகளின் மன உலகில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆதிமனிதன் தன் குழந்தைப்பருவத்தில் தன்னால் அறியமுடியாததை எல்லாம் தொன்மமாக மாற்றினான். அந்தத் தொன்மங்களின் வழியே யதார்த்தத்தை மாற்றிவிடமுடியும் என்று நம்பினான். மாயமந்திரங்களை தொன்மங்களில் ஏற்றினான். அதன் மூலம் மனிதனின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்த முடியும் என்று நடைமுறையில் கண்டான். அதில் மகிழ்ச்சியடைந்தான். அவற்றைக் கொண்டாடினான். அந்தக் கொண்டாட்ட மனநிலையே முக்கியம்.

குழந்தை இலக்கியம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் கொண்டாட்டம் இல்லாத, மகிழ்ச்சியளிக்காத, கறாரான ஆசிரியரைப் போன்று, பரீட்சைக்காக மட்டுமே படிக்கிற பாடப்புத்தகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மலையாள எழுத்தாளர் மாலி எழுதிய அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால் தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.

வெளியீடு - வானம் பதிப்பகம்

தொடர்புக்கு - 9751549992