கரிசல் இலக்கியத்தின்
அபூர்வமான தொடர்ச்சி
உதயசங்கர்
கரிசல் இலக்கியத்தின்
தொடர்கண்ணியாக இப்போதும் புதிய புதிய எழுத்தாளர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். கரிசல் வாழ்க்கை அள்ள அள்ளக்
குறையாமல் மக்களின் வாழ்க்கையிலிருந்து இலக்கியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கா.சி.தமிழ்க்குமரன் மிகச்சிறந்த
சிறுகதை எழுத்தாளர். கரிசல் வாழ்க்கையில் யாரும் தொடாத பல அனுபவங்களை
எழுதிப்பார்த்தவர். கைவிடப்பட்ட கரிசல் கிராமங்களில் கைவிடப்பட்ட
முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் காட்சிகளைப் பற்றி அவரளவுக்கு யாரும் எழுதவில்லையெனலாம்.
நவீன வாழ்க்கை கையில் ஒட்டிய கொம்மையை உதறுவது போல விவசாயத்தைச் சுளுவாக
தட்டி உதறிவிட்டு நகரங்களை நோக்கி நகர்ந்து சென்றதைப் பதிவு செய்திருக்கிறார்.
குலதெய்வ வழிபாட்டுக்கோ, கோலமழிந்திருக்கும் முதியோர்களை
அவர்களிடம் மீந்திருக்கும் சொத்துகளுக்காகவோ வந்து பார்த்துவிட்டுப் போகும் புதிய தலைமுறையைப்
பதிவு செய்திருக்கிறார்.
ஆனாலும் சொல்லித்தீராதது
கரிசல் வாழ்க்கை. இன்னமும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சம்சாரிகள், அவர்களை இப்போதும் ஏமாற்றிப் பிழைக்கும் மழையென்று தொடரும் அந்தக் கதையைச்
சொல்லத்தானே வேண்டும். இலக்கியத்தின் மிகமுக்கியமான கச்சாப்பொருள்
நோஸ்டால்ஜியா எனப்படும் பழமை பாடுதல் அல்லது பழமை போற்றுதல். அந்தப் பழமையைச் சொல்லும்போது நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோமென்பதும் இப்போது
எப்படி வாழ்கிறோமென்பதும் எப்படி வாழக்கூடாதென்பதும் புரியும். கா.சி.தமிழ்க்குமரன் தன்னுடைய பாலியகாலத்திலிருந்து
ஒவ்வொரு தேக்கரண்டியாக கரிசல் மண்ணை அள்ளி நம்மிடம் காட்டுகிறார்.
இந்தத் தொகுப்பிலும்
அவருடைய கதைகள் தனித்துவத்தைத் தேடிக் கண்டடைய முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘கேனி’ கதையில் வருகிற சொடக்கு என்கிற ஊருக்கு இளைத்த அப்பாவி இளைஞனை ஏகடியம் செய்யும்
ஊரைப் பார்க்கும்போது நமக்குச் சிரிப்பு வருகிறது. அட கோட்டிக்காரப்பயலே
என்று நாம் புன்னகையுடன் முணுமுணுக்கிறோம். ஆனால் அந்தக் கதை
நம்முன்னால் இருக்கும் கண்ணாடி என்பதை மறந்து விடுகிறோம். நாமும்
கூட ஏதோ ஒரு இடத்தில் சொடக்காக வாழ்கிறோமென்பதை மறந்து விடுகிறோம். கதாபாத்திரங்களின் வழியாக அந்தக் காலச்சமூகத்தைச் சித்தரிப்பதில் கை தேர்ந்தவர்
கா.சி.தமிழ்க்குமரன்.
‘கொக்கரவல்லி’
கதையில் கரிசல் வெளியின் பிரதான தொழிலான ஆடு மேய்த்தலைப் பற்றியும் கிடை
போடுவது, ஆடுகளுக்கும் மனிதனுக்குமிடையிலான அபூர்வமான உறவு பற்றியும்
நுட்பமான தகவல்களுடன் நம்முடைய கிராமத்தின் ஒரு காட்சியைச் சித்திரமாகத் தீட்டியதைப்
போல உருவாகி எழுகிறது. தலைப்பு ஒரு குறீயீடாகவும் அமைந்திருப்பது
கதைக்கு வலு சேர்க்கிறது.
‘முறுவல்’ கதை நாம் காணும் முகங்களைப் பற்றிய கதையாகத் தொடங்கி ஒரு மனிதரிடம் சென்று முடிகிறது. அந்த மனிதரைப் பற்றிய நம்முடைய கணிப்புகளைப் பொய்யாக்குகிறது. தோற்றப்பிழையாக நாம் மனிதர்களை மட்டுமல்ல வாழ்க்கையையே பார்த்துக் கொண்டிருக்கிறோமென்று உறுத்தும் கதை.
இந்த வாழ்க்கை மாறிக் கொண்டேயிருக்கிறது. நேற்றிருந்த வாழ்க்கை இன்றில்லை. இன்றுள்ள வாழ்க்கை நாளையில்லை. மனிதர்களும் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். மாற்றம் சில அனுபங்களை மறக்கச் செய்கிறது. சில அனுபவங்களை நினைக்கச் செய்கிறது. கரிசல் காட்டில் பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்வதொன்றும் புதியதில்லை. ஒரு காலகட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சம் வந்து மக்கள் கரிசலின் அத்தனை திசைகளிலும் அலைந்து திரிந்திருக்கிறார்கள். கி.ரா., கு.அழகிரிசாமி, பூமணி, பா.ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் கதைகளில் அதற்கான சாட்சியங்களைப் பார்க்க முடியும். அப்படிப்பட்ட மற்றுமொரு சாட்சியமாக ‘நன்றியறிதல்’ கதை அமைந்திருக்கிறது. என்றாலும் கதை அதைப் பற்றியதில்லை. மாறும் மக்கள் மனதைப் பற்றிய கதை. ஒரு வகையில் மக்களின் மீதான விமரிசனத்தைச் சொல்லும் கதை.
மனித வாழ்க்கையில் இளமைக்காலத்தில் ஏற்படும் ஆண்பெண் காதலைப் பற்றி எத்தனை காவியங்கள், நாவல்கள், கதைகள் எழுதினாலும் தீரவே தீராத அரும்பெரும் புதையலாகவே இருக்கிறது. எங்கே இருக்கிறதென்று தெரியாவிட்டாலும் வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் தோண்டுவதில்லையா? அப்படித்தான். நெனச்சது கதையில் வரும் பிள்ளைப்பருவம் முதல் வளரும் காதலைப் பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். காதல் கதைகளில் எப்போதும் பெண் கதாபாத்திரங்கள் அபூர்வமாய் அமைந்து விடுகின்றன. பெண்ணின் மீதான் பரிவும் அன்பும் எழுத்தாளர்களுக்குத் தானாக ஊற்றெடுக்கும். அப்படி ஊற்றெடுத்து நம்மை உணர்ச்சி மயமாக்கும் கதை ‘உளைச்சல்’.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமாக இருந்தபோது 1987-88 காலகட்டத்தில் திருவண்ணாமலையில் தமிழ்ச்சமூகத்துக்கு ஒரு பண்பாட்டுக் கொடையாக உருவாகி 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பரவிய கலை இலக்கிய இரவின் உருவாக்கத்தில் நானும் அச்சிறு கை நீர் அளாவியிருக்கிறேனென்றாலும் அந்தக் கலை இலக்கிய இரவைப் பற்றி எந்தப் புனைவும் எழுதியதில்லை. அநேகமாக தமிழ்நாட்டில் யாருமே கதையாக எழுதியதில்லை என்று தான் நினைக்கிறேன். கா.சி.தமிழ்க்குமரன் ‘வந்தார் பிடல்’ கதையின் வழியே அந்தப் பெருமையை அடைந்திருக்கிறார். கதையை வாசிக்கும்போது கலை இலக்கிய இரவு நடத்தும்போது இருந்த உணர்வு நிலைக்குப் போய் மீண்டு வர முடிந்தது. பிடல் காஸ்ட்ரோ கலை இரவுக்கு வருகிறார் என்ற புனைவை மிக நேர்த்தியாக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் கா.சி.தமிழ்க்குமரன்.
நாம் அன்பென்றும் பாசமென்றும் நினைப்பது மற்றவர்களுக்குக் காரியமாகத் தெரிந்தால் என்ன செய்வது? காலம் மாற மாற விழுமியங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ‘நினைப்பு’ கதையில் அதை உணரும் பெரியசாமியின் கண்ணீரில் அன்பைத்தவிர வேறென்ன இருக்கிறது? கணவன் உயிருடன் இருந்த போது வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக் கொண்டே இருந்தவருக்கு காலம் வறட்டு கௌரவத்துக்காக வாழ முடியாது என்று உணர்த்துகிறது. அவர் யதார்த்த்தைப் புரிந்து கொள்ளும் கதை தான் ‘மெப்பனை’.
கா.சி.தமிழ்க்குமரனின் கதைகளில் கரிசல் வாழ்க்கையின் நாடி நரம்பெல்லாம் துல்லியமாகத் தெரியும்படியான சித்தரிப்பு இருக்கிறது. அதன் ரத்தநாளங்களில் ஓடும் இரத்தத்தின் துடிப்பை வாசகருக்குக் கடத்திவிடும் வல்லமை கொண்டவராக இருக்கிறார். வட்டாரமொழிக்கு ஒவ்வொரு தொகுப்பிலும் புதிய புதிய சொற்களைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கிறார். ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் ஒரு சமூகத்தின் அனுபவப் புதையல் இருப்பதை உணர்த்துகிறார். கதைகளில் வரும் கரிசல் மனிதர்கள் விவசாயத்தினால் ஏமாற்றப்படுகிறார்கள். இயற்கையினால் ஏமாற்றப்படுகிறார்கள். சகமனிதர்களினால் ஏமாற்றப்படுகிறார்கள். வாழ்க்கையினால் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் பிடிவாதமாய் வாழ்கிறார்கள். ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்கிறார்கள்.
தன்னை உணர்தல் என்பது வாழ்க்கையின் மிகப் பெரும் தரிசனம். அப்படி உணரச் செய்வதையே இலக்கியம் தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறது. தனிமனிதர்களை, சமூகத்தை உணரச் செய்வதற்காகத்தான் எழுத்தாளர்கள் தங்கள் ஊணையும் உயிரையும் உருக்கி எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வாழ்க்கையை, இந்த மனிதர்களை.
கா.சி.தமிழ்க்குமரனும் தன்னுடைய தொடர்ந்த எழுத்துப்பயணத்தில் அச்சு அசலான கரிசல் வாழ்க்கையைத் தந்து கொண்டேயிருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் அப்படிப்பட்ட மனிதர்களுடனும் கதைகளுடனும் தமிழிலக்கியத்துக்கும் கரிசல் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்திருக்கிறார். இன்னமும் அவர் கரிசல்காட்டை உழுது கொண்டிருக்கிறார். இன்னும் தமிழிலக்கியத்துக்கு யாருக்கும் கிடைக்காத வெள்ளாமையைக் கொண்டு வந்து சேர்ப்பார். வலுவான எழுத்துக்கையான என் அன்பு நண்பர் கா.சி.தமிழ்க்குமரனுக்கு அன்பு வாழ்த்துகள்.
வெளியீடு - தேநீர் பதிப்பகம்
