Sunday, 20 September 2026

உடலும் உயிரும்

 

சதுரங்கவாழ்க்கை 13

உடலும் உயிரும்

உதயசங்கர்





மணி எப்போதும் டீ குடிக்கும்போது இரண்டு டீக்களை அடுத்தடுத்து வாங்கிக் குடிப்பான். அப்படிக் குடித்தால் தான் அவனுக்குத் திருப்தியாக இருக்கும். நான் மணியிடம்,

நாளைக்கு சாயங்காலம் வந்துருல.. போய் கதிரை எட்டிப் பாத்துட்டு வந்துர்லாம்.. ஏதாச்சிம் வேலை அது இதுன்னு சொல்லிக்கிட்டிருக்காதீங்க..”

என்றேன். அவன் தலையாட்டினான். சிகரெட்டை வாயில் வைத்து புகையை இழுத்து விட்டான். கதிரைத் தவிர மற்ற எல்லாரும் சிகரெட் குடிப்போம். நான் சிகரெட்டை வாயில் வைத்து மூச்சை முழுதாய் இழுத்து புகையை எக்கச்சக்கமாக வெளியே விடுவேன். மணி சிகரெட்டை வாயில் வைத்து நாதஸ்வரம் ஊதுகிற மாதிரி வாய்க்குள்ளேயே புகையை வைத்து வெளியே விடுவான். குமரேசன் ஒரு முழு சிகரெட்டில் மூன்று பஃப்புகளுக்கு மேல் இழுக்க மாட்டான். ஆனால் அரை மணிநேரம் சிகரெட் விரல்களிலே தொங்கிக் கொண்டிருக்கும். அதிலும் புதிய பறவை சிவாஜி கணேசன் மாதிரி குடங்கைக்குள் சிகரெட்டின் நுனியை வைத்துக் கொண்டு ஸ்டைலாக இழுப்பான். மாரியப்பனுக்கு இந்தச் சிகரெட் போக்குவரத்துகள் பிடிக்காது. பீடி தான் அவனுடைய ஃபேவரைட்.

அன்று டீக்கடையிலேயே எங்களுடைய ஜமா கூடியது. ஒரு மணி நேரத்துக்கொருமுறை டீயும் சிகரெட்டுகளும் எல்லாரையும் கட்டிப் போட்டது. அப்போது முத்துச்சாமி வந்தான். கட்டுமஸ்தான உடல். ஜிம் பாடி. எப்போதும் பால் மட்டும் தான் குடிப்பான். உடம்பை அப்படிப் பேணிப்பாதுகாப்பான். எங்களைப் பார்த்தாலே ஓரமாய் ஒதுங்கி விடுவான்.

பார்ரா தொப்புளான் நம்மைப் பாத்ததும் பம்முறான்..” என்று சிரித்தான் மாரியப்பன். தொப்புளான் என்ற பட்டப் பெயர் பொதுவாக பலூன் மாதிரி தொப்புள் இருக்கும் குழந்தைகளைத் தொப்புளான் அழைப்பார்கள். ஆனால் முத்துச்சாமிக்கு வைத்த பெயர் அதற்காக இல்லை. மனிதர்கள் தான் எத்தனை விநோதமானவர்கள். அவன் இன்னும் கலியாணம் முடிக்கவில்லை. அவனுக்கு நெருக்கமான நண்பனான ஜவகரிடம் சொல்லியிருக்கிறான்.

அழகான தொப்புள் இருக்கிற பெண்ணாகப் பார்க்கணும்.. எது இருக்கோ இல்லையோ தொப்புள் அழகா இருக்கணும்.. ” என்று சொல்லியிருக்கிறான்..அதுமட்டுமில்லை. அவன் யாருக்கும் தெரியாமல் வீட்டில் தொப்புளைக் காட்டுகிற நடிகைகளின் படங்களாகச் சேகரித்து வைத்திருப்பதை ஜவகரிடம் காட்டியிருக்கிறான். அவன் சிரிக்காமல்,

தொப்புள்ள என்னடா அழகு? அது ஒரு வடு தானே.. தாயிடமிருந்து குழந்தைக்கு உணவு செல்லும் ஒரு குழாய் தானே.. பிறந்த போது இருக்கிற மாதிரி எப்போதுமிருக்காது.. மாறிக் கொண்டேயிருக்கும்.. நம் உடல் வளர்ந்து தேய்வதில்லையா? அவ்வளவு தாண்டா.. அதைப் போய் பெரிசுபடுத்திக்கிட்டிருக்கே.. “ என்று சொன்னதெதுவும் அவன் காதுகளில் ஏறவில்லை. அவன் பார்க்கிற ஒவ்வொரு பெண்ணின் இடுப்பையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். யார் ?  எந்த வயது? என்று எந்தக் கணக்குமில்லை.

மனம் இளகிய ஒரு தருணத்தில் ஜவகரிடம் அவன் சொல்லியிருக்கிறான்.

அவன் எட்டாவது வகுப்பு படிக்கும்போது தென்காசியிலுள்ள அத்தை வீட்டுக்குப் போயிருந்த சமயத்தில் அத்தை உடை மாற்றும்போது பார்த்திருக்கிறான். அன்று இரவு ஒத்தைத்தட்டு வீட்டில் எல்லாரும் அடுத்தடுத்துப் படுத்திருக்கும்போது முத்துச்சாமி நடுராத்திரியில் அத்தையின் வயிற்றைத் தடவித் தொப்புளில் கை வைத்துப் படுத்திருந்திருக்கிறான். அவனுக்கு விநோதமான உணர்வைக் கொடுத்திருக்கிறது… அத்தைக்கு இது எதுவும் தெரியாது. நாள் முழுவதும் வேலைகளினால் அயத்துத்  தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்திருக்கிறாள். அவ்வளவு தான். அதிலிருந்து கிறுக்குப் பிடிச்ச மாதிரி தொப்புள்களின் படங்களைச் சேகரித்து வைக்க ஆரம்பித்திருக்கிறான்.

நேரிலே யாராவது ஒருபெண்ணின் அழகான தொப்புளைப் பார்த்தாலே எனக்கு ஆர்கசம் வந்துரும் மச்சான்..”

என்றும் சொல்லியிருக்கிறான். ஜவஹர் அதைக் கேட்டுவிட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகி விட்டான். நாங்கள் ஒருநாள் டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது எங்களிடம் பேச்சு வாக்கில் சொல்லிவிட்டான். உடனே மாரியப்பன் தான் தொப்புளான் என்ற பட்டப்பெயரை வைத்து விட்டான்.

ஒருமுறை அவன் வரும்போது மாரியப்பன் சத்தமாய்,

டேய் தொப்புளான் வராண்டா.. “ என்று சொல்லிச் சிரித்தான். முத்துச்சாமி அதைக் கேட்டானா இல்லையா என்று தெரியாது. ஆனால் எங்களைப் பார்த்ததுமே அவனுடைய முகம் மாறிவிட்டது.  அதிலிருந்து எங்களைப் பார்த்தாலே ஒதுங்கிப் போக ஆரம்பித்தான். இப்போதும் அப்படித்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு ஏதோ தோன்றியது.

உடல் அவ்வளவு முக்கியமாடா? “ என்று கேட்டேன். என்னுடைய கேள்வி முதலில் யாருக்கும் புரியவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு மணி,

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ன்னு பட்டினத்தார் பாடியிருக்காரே..”

உயிரற்ற பொருளிலிருந்து தானே உயிர் தோன்றியிருக்கிறது.. உயிர் தானே உடலை உருவாக்கியிருக்கிறது.. இல்லையா? உயிர் போனதும் உடலும் மறைந்து விடுகிறதுஉயிரைச் சுமந்து திரியும் வாகனம் தான் உடலா? அல்லது உடலை இயக்குவதற்கான சக்தியா உயிர்? பிறந்த உடல் அப்படியே இருப்பதில்லை.. வயோதிகமாகி மறைகிறது. இந்த மாற்றங்களையும் உயிர் உருவாக்குகிறதா? உடல் உருவாக்குகிறதா? இந்த ஒரு உடலுக்குள் ஒரு உயிர் தான் இருக்கிறதா? அல்லது இந்த ஒரு உயிர் ஒரு உடலுக்கு மட்டும் சொந்தமானதா? யோசித்துப் பார்த்தால் உயிர் அழிந்தால் உடல் அழியும். உடல் அழிந்தால் உயிர் அழியும். இரண்டும் இருத்தலுக்குத் தேவை தானே.. “

யெப்பா தத்துவச்சாமி.. எதையெடுத்தாலும் தத்துவமா? நீ கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமான பதில் இருக்கிறது. உயிரற்ற பொருளில் இயக்கம் தோன்றும்போது சக்தி பிறக்கிறது. சக்தியே அந்தப் பொருளின் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி உடலாக உருமாறுகிறது. ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு உயிரை மட்டும் தாங்கி இருப்பதில்லை. அந்த உடலுக்குள் ஏராளமான ஒட்டுண்ணிகளின் உயிர்களையும் சேர்ந்தே சுமக்கிறது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள், புழுக்கள், பூச்சிகள், என்று எத்தனை உடல்களுக்கு நாம் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? இயற்கையின் அதிசயமே அது தான் ஒரே நேரத்தில் ஒட்டுண்ணியாகவும் ஒட்டுண்ணிகளின் உடல்களுக்கு உயிர் தருவதாகவும் ஒவ்வொரு உயிரையும் படைத்திருக்கிறதுநாம் உயிருடன் இருக்கிறோமென்றால் நம்முடன் லட்சக்கணக்கான உயிர்களும் நமது உடலில் வாழ்கின்றன. நமது உடல் நமது உடல் அல்ல. பல உடல்களின் வாடகைவீடு,, நமது உயிர் ஒரே உயிர் அல்ல. பல உயிர்களின் ஒப்புரவுச்சாலை

என்றான் மணி. அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த மாரியப்பன் பீடிப்புகையை வாயை உயர்த்தி ஊதிக் கொண்டே,

டேய்.. இதுக்குத்தான் இம்புட்டுப் பாடா? உடலை அழகாக்குகிறேன்.. என்று பெண்களும் உடலை உறுதிப்படுத்துகிறேன் என்று ஆண்களும் இந்தப் பாடு படுகிறார்கள்… உலகமுழுதும் மருத்துவத்துக்கு இணையாக காஸ்மேடிக்ஸ் வியாபாரமும் மானாவாரியாகப் பணத்தை அள்ளுகிறார்கள்.. ஜிம் பாடிகளும் பணத்தை அள்ளுகிறார்கள்

என்றான். நான் சிரித்தேன். அப்போது மணி மீண்டும்,

மாரி.. அப்படி மொத்தமாக நாம் இதைத் தள்ளிவிட்டுற முடியுமா என்று தெரியவில்லை.. அழகுணர்ச்சி என்பது இயற்கையின் ஒரு உணர்வு தானென்று நினைக்கிறேன்இயற்கைத் தன்னைத்தானே விதவிதமாக அழகு படுத்திக் கொள்வதில்லை. யோசித்துப் பாரே.ன் எத்தனை விதமான உயிர்கள், எத்தனை விதமான வண்ணங்கள், எத்தனை விதமான வடிவங்கள், எத்தனை விதமான குணங்கள், இவையெல்லாமும் இயற்கை பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறது  ஒரு மாயத்தச்சனைப் போல தனித்துவமான உடல்களைப் படைத்து அந்தத் தனித்துவத்துக்குள் தனித்துவமாக ஒரே இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உடலையும் தனித்துவமாகப் படைத்திருப்பதென்பது சாதாரணமான விஷயமா? அணுஅணுவாகத் தன்னைப் பார்த்துப் பார்த்து அழகுபடுத்திக் கொண்டிருக்கிறதே. ஏதோ ஒரு அரூபமான அழகுணர்ச்சி இயற்கையை இயக்கிக் கொண்டேயிருக்கிறது. அதனால் தான் இத்தனை மெனக்கிடல். இல்லையென்றால் பொத்தாம் பொதுவாக மொத்தையாக எல்லா உயிர்களையும் படைத்திருக்கலாமே இல்லையா? எவ்வளவு நுட்பம்! எவ்வளவு அழகு! எவ்வளவு நுண்ணுணர்வுகள்! நேரெதிரான வாழ்க்கைமுறைகளின் ஒருங்கிணைப்பு, உயிர் வாழ்வதற்காக, பாதுகாத்துக் கொள்வதற்காக, பாய்வதற்காக, இணைசேர்வதற்காக, என்று ஒவ்வொரு உயிரும் கற்பனை கூடச் செய்ய முடியாதபடி படைக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும்  பரிணாம வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி விடமுடியுமா? ஏம்பா கண்ணுக்குத் தெரியாத வைரஸ்களோ பாக்டீரியாக்களோ கூட விதவிதமான வடிவங்களுடன் புதிது புதிதாய்ப் பிறக்கிறதே. அதனால் தான் பூர்வகுடிகள் இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து வழிபட்டிருக்கிறார்கள். நினைக்கும்போதே சிலிர்க்கிறது

என்று சொல்லி முடிக்கும்போது உண்மையில் உடம்பை ஒரு ஆட்டு ஆட்டினான். நானும் அந்த வார்த்தைகளின் கதவுகளைத் திறந்து கொண்டிருந்தேன். எனக்கு மட்டுமல்ல என்பதை அங்கே நிலவிய அமைதி பறையடித்தது.

 டேய் விலங்குகள், பறவைகள் ஏன் பூச்சிகள் எல்லாத்துக்குமே அழகுணர்ச்சி இருக்குன்னு நெனைக்கிறேன்.. இல்லைன்னா எல்லா ஆண்களுடனும் பெண்னினம் இணை சேர்வதில்லையே.. அதே போல எல்லாப்பெண்களுடனும் ஆணினம் இணை சேர்வதில்லையே.. தன்னுடைய இனத்தின் தொடர்ச்சிக்காகத் தான் இணை சேர்தலென்றால் அனைத்து ஆண்களுடனும், அனைத்துப் பெண்களுடனும் இணை சேர வேண்டியது தானே. எல்லாம் தேர்ந்தெடுக்கின்றன. எதை வைத்து தேர்ந்தெடுக்கின்றன?.. ஒன்று குரலுக்காக, ஒன்று நிறங்களுக்காக, ஒன்று நடனத்துக்காக, ஒன்று வீடு கட்டியதற்காக, ஒன்று சண்டை போட்டதற்காக, இப்படி எத்தனை எத்தனை விதமான தேர்வுகள்! யோசித்துப் பாரேன்.. எல்லாம் வெளித்தோற்றத்தை வைத்துத் தானே.. அல்லது ஏதோ சில செயல்முறைகளை வைத்து தானே.. ஆனால் இந்த உணர்ச்சிகளின் அடிப்படை இணை சேர்வதற்காக, இணை சேர்தல் என்பது தன்னுடைய பரம்பரைத் தொடர்ச்சியை இந்தப் பூமியில் உருவாக்குவதற்காக… எப்படி இருக்கு? ”

என்று மணி சொன்னான்.

அப்படியென்றால் இயற்கையின் உயிருக்குள்ளேயே அழகுணர்ச்சியின் உள்ளுணர்வுகள் இருக்கின்றன அப்படின்னா மனிதர்களுக்கு மட்டும் அது ஏன் இருக்கக் கூடாது. எனக்கென்னமோ தொப்புளானின் அழகுணர்ச்சி தப்பில்லையென்று தோன்றுகிறது. ”

என்று மாரியப்பன் சொன்னான். நான் வாயைத் திறந்தேன்.

டேய்.. அழகுணர்ச்சி தப்பில்லை.. இன்னும் சொல்லப்போனால் இயற்கையான உள்ளுணர்வுகளால் மட்டுமல்ல, சமூகம் கற்பிக்கும் அழகுணர்ச்சிகளாலும் நாம் பாதிக்கப்படுகிறோம்அழகுணர்ச்சி மனிதனுக்கு மனிதன் நுண்மையாக மாறுபடுவதைப் போல இனத்துக்கு இனம், சமூகத்துக்குச் சமூகம் மாறுபட்டுக் கொண்டேயிருக்கும்.. நாட்டுக்கு நாடு மாறுபடும்.. ஆனால் வலிந்து இது தான் உலகளாவிய அழகுணர்ச்சியென்றும் நம்ப வைக்கப்படும்போது வியாபாரநோக்கம் வந்து விடுகிறது. இதெல்லாம் எப்போது பிரச்னையாகுமென்றால் அதனால் ஒரு தனி மனிதரோ, இனமோ, சமூகமோ பாதிப்புக்குள்ளாகும்போது அதைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம்… “

நான் பேசி முடிக்கிறதுக்காகவே காத்திருந்ததைப் போல மாரியப்பன் அவனுடைய மெலிந்த குரலில் பேசினான்.

வக்காலி நீங்க சொல்ற இந்த அழகெல்லாம் உடம்புக்கு ஏதாச்சிம் வராம இருக்கற வரைக்கும் தான்.. நோய் வந்துருச்சின்னா அவ்வளவு தான்.. என்ன தான் ழகுணர்ச்சியாகப் பேசினாலும் சரி.. அறிவியலாப் பேசுனாலும் சரி உடல் எவ்வெளவு முக்கியமென்று மதுரை எர்ஸ்கின் ஆசுபத்திரியில் இருந்தபோது தான் தெரிந்தது.. எத்தனை விதமான மனிதர்கள்? எத்தனை விதமான நோய்கள்? மனித உடல் வெறும் சதைப்பிண்டமாக அலைவதைப் பார்க்கலாம்.. அந்த உடல்களைப் பார்க்கும்போது இந்த உடலையா நாம் போற்றுகிறோம் என்று தோன்றும். நாம் கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு நோய்களைச் சுமந்து கொண்டு வந்த மனிதர்களைப் பார்த்தேன்.. பயங்கரம்

என்று சொல்லும்போது மாரியப்பனின் கண்கள் தூரத்தில் நிலை கொண்டது..

அதான் பீடிக்கட்டுகளைப் புகைச்சுத் தள்றீயாக்கும்..” என்ற மணிக்குப் பதிலடி கொடுத்தான் மாரியப்பன்.

நீங்க பெரிய யோக்கிய மயிராக்கும்.. சிகரெட் குடிச்சா வைட்டமின்னா உடம்புல சேருது..”

சரி சரி.. எல்லாவனும் சீக்கிரம் இந்தக் கருமங்களை விட்டுறணும்..  இன்னொரு டீ சொல்லவா? “ என்றேன் நான்.

ஆமல விட்டுறணும்னு சொல்லிட்டு டீ சொல்லு.. பின்னாடியே சிகரெட்டும் கூட நடந்து வரும்.. நல்ல பயலுவலே..” என்றான் மணி.

எங்கள் கூட்டம் கலையும் போது மணி எட்டாகி விட்டது. மாரியப்பனுக்கு அடுத்த தெருவில் தான் வீடு. அவன் மெல்ல எழுந்து நடந்தான். ஹெர்னியா ஆபரேஷன் பண்ணியதால் மெதுவாகத் தான் நடப்பான். இருபது வருடங்களுக்கு முன்பே அந்த ஆபரேஷன் முடிந்து விட்ட து. ஆனாலும் அவனுக்குத் தான் இன்னமும் இயல்பாக நடக்க முடியவில்லையென்ற எண்ணம் நிலை கொண்டு விட்டது. மதுரை எர்ஸ்கின் அரசு மருத்துவமனையில் தான் ஆபரேஷன் நடந்தது.

 அப்போது அவனுக்கு வயது இருபது இருக்கும். அடுத்த தெருவிலிருந்த சுமதியைச் சைட் அடித்துக் கொண்டு அலைந்த காலம். நோஞ்சான் மாதிரி இருப்பதாக நினைத்து உடம்பைத் தேற்ற வேண்டுமென்று பகத்சிங் உடற்பயிற்சிக்கழகத்துக்குப் போய் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். யாரோ ஒரு பெரியண்ணன் தூக்கிப் பழக வைத்திருந்த 100 கிலோ வெயிட்டைத் தூக்க முயற்சித்தான். ம்ம்ஹூம் முடியவில்லை. முடியவில்லை. திரும்ப முக்கித் தூக்கினான். நெஞ்சு வரைத் தூக்கும்போதே இடுப்பில் கூர்மையான வலி தாக்கியது. வலி தாங்க முடியாமல் அப்படியே கீழே போட்டான். இடது காலை எடுத்து வைக்க முடியவில்லை.

மறுநாள் ஊரிலிருந்த ஆஸ்பத்திரிக்குப் போனபோது ஆபரேஷன் தான் செய்யவேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். மதுரை எர்ஸ்கின் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக வேலை பார்க்கும் அப்பாவின் அண்ணன் சிதம்பரத்தின் ஞாபகம் வந்தது. மறுநாளே அப்பாவுடன் பெரியப்பா சிதம்பரம் வீட்டுக்குப் போனார்கள். அன்றே ஆஸ்பத்திரியில் டெஸ்ட் எடுத்தார்கள். உடல் பரிசோதனை செய்தார்கள். ஆபரேஷனுக்கும் தேதி குறித்து உள்ளே வார்டில் அட்மிஷன் போட்டுவிட்டார்கள். பெட் இல்லாத தால் ஒரு பாயைக் கொடுத்து கீழே படுக்கச் சொன்னார்கள். வார்டு வேதனை, வலி, கூப்பாடு, ஓலம், அழுகையால் நிரம்பி வழிந்தது. அந்தச் சூழலே மரணபயத்தைக் கொடுத்தது. மாரியப்பனின் கலவரமான முகத்தைப் பார்த்த அவனுக்கருகிலிருந்த கட்டிலில் படுத்திருந்தவர்,

தம்பிக்கு என்ன பிரச்னை? “ என்று பேச்சுக் கொடுத்தார். அப்போது தான அவரை நன்றாகப்பார்த்தான் மாரியப்பன். இடதுபக்க வயிற்றிலும் வலது முழங்கையிலும் பெரிய கட்டுடன் சிவாஜியைப் போலத் திருத்தமான முகத்துடன் இருந்தார். வேட்டியும் வேட்டிக்கு மேல் பெரிய பக்கில்ஸ் வைத்த தோல் பெல்ட்டும் போட்டிருந்தார். பாரியான உடம்பு. சுருள் சுருளான அவருடைய தலைமுடி தனி வசீகரத்தைக் கொடுத்தது. அவனைப் பற்றியும் அவன் எதற்காக வந்திருக்கிறானென்பதையும் கேட்ட அவர்,

தம்பி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. இளந்தாரிப்பிள்ளை தைரியமா இரு.. இங்க இருக்கப்பிடிக்கலன்னா.. ராத்திரி எட்டுமணிக்கு அட்டெண்டென்ஸ் எடுப்பாங்க.. அப்புறம் நீ பாட்டுக்கு வீட்டுக்குப் போய்ட்டு காலைல ஏழு மணிக்குள்ளே வந்துரு.. நான் அப்படித்தான் பண்ணுவேன்.. நாளைக்கு ஆபரேஷன்ங்கிறதால இன்னைக்குப் போகலை..”

இயல்பான அவருடைய பேச்சு மாரியப்பனைச் சுமூகமான மனநிலைக்குக் கொண்டு வந்தது. அப்போது ஒரு வயதானவர் கட்டியிருந்த வேட்டிக்குக் கீழே தொங்கும் டியூப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பெட்டாகப் போய்ப் பேசிக் கொண்டிருந்தார். அவர் போகும் பாதையெல்லாம் சிறுநீர் சொட்டுச் சொட்டாகச் சொட்டிக் கொண்டிருந்தது. மாரியப்பனுக்கு அதைப் பார்த்த தும் குமட்டிக் கொண்டு வந்தது. 

யோவ்.. பெர்சு.. சும்மா ஒரு இடத்துல இருக்க மாட்டியா? மோண்டுகிட்டே திரியறே.. போய் உம்பெட்டில இரு.. இல்ல கொண்ட்டே போடுவேன்..”

என்றார். அதைக் கேட்டதும் அந்த வயதானவர் அவரைப் பார்த்துச் சிரித்தபடி கும்பிடு போட்டார். தன்னுடைய பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அடுத்த பெட்டுக்குப் போனார். அவருக்குத் திருப்தியானதும் தன்னுடைய பெட்டுக்குப் போய் உட்கார்ந்தார்.பெட்டுக்குக் கீழேயிருந்த ஒரு பாட்டிலுக்குள் மூத்திரக்குழாயைச் செருகினார்.

மாரியப்பன் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த பக்கத்துப் பெட்டிலிருந்தவர்,

“ பெர்சுக்குச் சாமனைக் கட் பண்ணிட்டாங்க.. அதான் டியூப்பைத் தொங்க விட்டுக்கிட்டு அலையுது பெர்சு.. “

என்று சொல்லியபடியே சிரித்தார்.  மாரியப்பனுக்கு முதலில் புரியவில்லை. ஆனால் அவனுக்குப் புரிந்தபோது பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தான். பெரியவர் கட்டிலில் உட்கார்ந்து அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை.. என்று சினிமா பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அழகான குரல்வளம். நன்றாகவே பாடினார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த மாரியப்பனைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தார். மாரியப்பனுக்குத் தான் என்னவோ போல் இருந்தது.

( தொடரும் )