மலைகளும் குகைகளும் பூத்திருக்கும் கதைகள்
உதயசங்கர்
தமிழ்ச்சிறார் இலக்கியம் முன்னோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. சரியான பாதையில் கம்பீரமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறதென்று உறுதியாகச் சொல்லாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த எழுத்தாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது. நிறையப் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். நிறையக் குழந்தைகள் எழுத வந்திருக்கிறார்கள். முன்பு பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட காலம் மாறி இப்போது தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்கும், உலக மொழிகளுக்கும் தமிழ்ச்சிறார் இலக்கிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசே சிறார்களுக்காக நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டு அரசுப்பள்ளி நூலகங்களுக்குக் கொண்டு சேர்க்கிறது. சிறார் இலக்கியத்துக்கான விருதுகள் அதிகமாகியிருக்கின்றன. சிறார் இலக்கியம் பொது இலக்கிய நீரோட்டத்தில் பேசுபொருளாக மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களுக்குச் சங்கம் உருவாகி தமிழ்நாடெங்கும் கிளைகளை உருவாக்கி சிறார் கலை இலக்கியத்தைக் கொண்டு செல்கிறது.
இப்படியான பாரதூரமான மாற்றங்களைக் கண்ட டைந்திருக்கிற சிறார் இலக்கியத்தில் இன்னும் புதிய புதிய வகைமைகள், உத்திகள், வடிவங்கள், சொல்முறைகள் வரவேண்டும். இதோ வட்டார இலக்கியத்துக்கு முன்னத்தி ஏர் ஓட் டிய கரிசல் மண்ணிலிருந்து சிறார் இலக்கியத்திலும் முன்னத்தி ஏராக கோட்டேர் போட்டிருக்கிறது ஜெ.பொன்னுராஜின் புதிய சிறார் கதைத்தொகுப்பு.
பருத்திக்காடு என்ற முதல் சிறுகதை நூலை வாசித்து கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்.கி.ராஜநாராயணனும், மறைந்த எழுத்தாளர். பா.ஜெயப்பிரகாசமும் வாழ்த்தி மகிழ்ந்தார்கள். இதுவரை மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் ஒரு நாவலும் எழுதி வெளியிட்டு தமிழிலக்கியத்தில் தடம் பதித்திருக்கும் பொன்னுராஜ் சிறார் இலக்கியத்திலும் தன் முதலடியை ஆழமாகப் பதித்திருக்கிறார். பல வகைகளில் முன்மாதிரியான கதைகளாக இந்த த் தொகுப்பில் உள்ள கதைகள் திகழ்கின்றன.
பொதுவாக சிறார் கதைகளின் களம் வீடு, பள்ளி, தெரு, நகரம் என்பதாகவே இருக்கும். அதிலும் அந்தக் களங்களைப் பற்றிப் பெரிதாக எந்தச் சித்தரிப்பும் இருக்காது. சூழல் வர்ணனை இருக்காது. அந்தக் கதை நடக்கும் நிலம் பற்றி எந்த த் துப்பும் இருக்காது. மண்ணில் கால்பாவாமல் மிதக்கின்ற கதைகளாகவே இருக்கும். அந்தக் கதையை எந்த இட த்திலும் பொருத்திக் கொள்ள முடியும்.
ஆனால் பொன்னுராஜின் இந்தச் சிறார் கதைகள் மண்ணில் காலூன்றி கம்பீரமாக மலைகளைப் போல எழுந்து நிற்கின்றன. மலைகளில் இருக்கும் பொடவுகள் அல்லது சிறு குகைகளைப் போல நுட்பமாக சூழலைப் பதிவு செய்கின்றன. அந்த ச்சூழலில் குழந்தைகள் எப்படித் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்களென்பதை அழகாகச் சொல்கின்றன. ஆரவாரமில்லாமல் பூமியிலிருந்து ஊற்று களக் புளக் என்று பொங்கி ஓடையாக ஓடுவதைப் போல ஓடுகின்றன. சுவையான தூய்மையான அந்த நீரை அள்ளிக் குடிக்கும்போது அத்தனை புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அப்படி ஒரு புத்துணர்ச்சியை பொன்னுராஜின் கதைகளை வாசிக்கும்போதும் உணரமுடிகிறது.
மிக இயல்பாகத் தொடங்கி இயல்பாகத் முடியும் கதைகளில் நம் கண்ணுக்குத்தெரியாமல் திடீரென்று ஒரு மாயாஜாலம் நடக்கிறது. பெரிய சம்பவங்களோ, திருப்பங்களோ, சாகசங்களோ, அதிர்ச்சியான முடிவுகளோ, குறிப்பாக அறிவுரைகளோ இல்லை. அதிகபட்சம் கதைகளில் வருகிற விலங்குகள் நன்றாகப்படியுங்கள் என்று சொல்கின்றன. அவ்வளவுதான்.
வாசிக்கும்போது வாய்க்குள் ஒதுக்கிச் சப்பிக் கொண்டேயிருக்கும் தேன்மிட்டாய் போல இனிக்கத் தொடங்கிவிடுகின்றன. அநேகமாக எல்லாக்கதைகளிலும் மலைகள் வருகின்றன. குகைகள் வருகின்றன. விலங்குகள் வருகின்றன. தாவரங்கள், மரங்கள், நீரூற்றுகள், குளம், ஓடை வருகின்றன. எறும்புதின்னி, கிளி புலி கரடி, செந்நாய்க்கூட்டம், முள்ளம்பன்றி, வரையாடு, வாத்து செம்போத்து, என்று விலங்குகள் கதாபாத்திரங்களாக வருகின்றன. குழந்தைகளிடம் தங்களை அறிமுகப்படுத்துகின்றன. குழந்தைகளிடம் பேசுகின்றன. குழந்தைகளுக்கு வழி காட்டுகின்றன. குழந்தைகளைப் பாதுகாக்கின்றன. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி அன்பு செலுத்துகின்றன.
மொத்தக் கதைகளின் அடிநாதமாக இயற்கையுடன் இணக்கமான நட்பு, பரஸ்பர மரியாதை பூமியின் சகல உயிர்களின் மீதும் அன்பு இவை தான் முக்கியம் என்று சொல்லாமல் சொல்கிற படைப்புகள்.
கதைகளில் மலைகளும் குகைகளும் காட்டுப்பூக்களைப் போல் புத்துக் குலுங்குகின்றன. அந்தக் காட்டுப்பூக்களின் மணமாக இயற்கை குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் வித த்தில் எழுத்தாளர்.பொன்னுராஜின் எழுத்து விளங்குகிறது.
இவை நாட்டார் கதைகளல்ல. நம் காலத்தின் கதைகள். இந்தக் கதைகளின் தனித்துவமே அது மண்ணில் காலூன்றி மாயாஜாலத்துக்குள் குழந்தைகளைக் கூட்டிச்செல்லும் விந்தை தான். சிறார் இலக்கியத்துக்கு புத்தம் புதிய வரவாக வரும் இந்தச் சிறார் கதை நூல் மிக முக்கியமான ஒரு போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வட்டாரக்குழந்தை இலக்கியத்தின் முன்னோடிப்படைப்பாக வெளிவரும் இந்த நூலை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.
இன்னும் இந்த நிலத்தை ஆழமாகவும் அகலமாகவும் உழுது பயிர் செய்து வெள்ளாமையைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று எழுத்தாளர்.ஜெ.பொன்னுராஜை கரிசல் வெயில் போல வாழ்த்துகிறேன்.
வெளியீடு - குருமலை தவசி தம்பிரான்
தொடர்புக்கு - 8667257941
