Sunday, 2 August 2026

நினைவுகளின் நிலவறை

 

 சதுரங்கவாழ்க்கை 6

நினைவுகளின் நிலவறை

உதயசங்கர்



சனிக்கிழமைக் காலையிலேயே குமரேசனின் போன் வந்ததென்றால் நந்தினிக்குத் தெரிந்து விடும். அவள் என்னைப் பார்க்கும்பார்வையில் இருப்பதும் கோபமா? இளக்காரமா? என்று பிரித்துச் சொல்ல முடியாது. நான் ஒரு அசட்டுச்சிரிப்புடன் போனைக் காதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் தூரமாகப் போய்விடுவேன். நாங்கள் பேசுவதை அவள் கேட்க க்கூடாதென்பது தான் நோக்கமாக இருந்தாலும் நாங்கள் பேசியதை அப்படியே எழுத்துப்பிசகாமல் நந்தினி சொல்லிவிடுவாள். எப்படி அப்படியே சொல்கிறாள் என்று ஆச்சரியமாக இருந்தாலும் அந்த அளவுக்குத்தான் எங்கள் உரையாடல் ஒரே மாதிரி இருக்கிறதென்ற சலிப்பும் ஏற்படும். நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஏதோ இன்று தான் கலியாணம் முடிந்த தைப் போல. அன்று முழுவதும் அவள் மனம் கோணாமல் நடக்கவேண்டுமே என்ற கவலை வேறு வந்து அப்பிக் கொள்ளும். உடனே சாதாரணமாக இருப்பதை விட கூடுதல் பாவனைகளைச் செய்து கொண்டிருப்பேன். அடிக்கடி கொஞ்சுவது, அவள் அன்று சொல்லும் வேலைகளையும் சொல்லாத வேலைகளையும் கூடச் செய்வது, என்று மிகக் கவனமாக இருப்பேன். நந்தினிக்குத் தெரியும். எதற்கு இந்தக் கொறச்சாலம் போடுகிறேனென்று. அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்.

மாலை நெருங்க நெருங்க எனக்குக் காய்ச்சல் வரும்போல சூடு ஏறும். ஒரு பரபரப்பு மரத்தைச் சுற்றும் கொடி போல உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பற்றி ஏறும். ஏழுமணிக்கு நந்தினியின் முகத்தைப் பாவம்போல பார்ப்பேன். அனாதையான நாய்க்குட்டி ரோட்டில் போவோர் வருவோர் எல்லாரையும் தலையைத் தூக்கி அண்ணாந்து அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி திரும்பிப் பார்ப்பதைப் போல அவளைப் பார்ப்பேன். அவள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தாலும் பார்க்காத மாதிரியே அசட்டையாக நடந்து கொள்வாள்,

ராத்திரிக்கு என்ன செய்யணும்? “

எனக்கு வேண்டாம்.. நந்து..”

ஏன் என்ன பசிக்கலையா? “

இல்லை.. நான் வெளியில சாப்பிட்டுக்கிறேன்..”

என்ன திடீர்னு வெளியில..”

குமரேசன் ஊரிலேர்ந்து வந்துருக்கான்.. முக்கியமான குடும்ப ப் பிரச்னையாம்.. பேசணும் வா.ன்னுச் சொல்லிருக்கான்.. போய்ட்டுச் சீக்கிரம் வந்துருவேன்..”

என்று பம்மிப் பம்மிப் பேசுவேன். அவள் சில கணங்கள் பேசாமலிருப்பாள். வேறொன்றும் சொல்லாமல்,

பார்த்துப் போயிட்டு வாங்க..” என்று சொல்லும் வார்த்தைகளில் அவ்வளவு அர்த்தமிருக்கும். நான் என்னுடைய மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமலிருக்க கடுமையாக முயற்சித்துக் கொண்டே,

சரி.. சீக்கிரம் வாரேன்..” என்று சொல்லிவிட்டு மெதுவாக வண்டியை எடுத்து முடுக்குவேன். அவ்வளவு தான் அடுத்த ஐந்து நிமிடங்களில் குமரேசனின் அறையில் தான் வண்டி நிற்கும்.

குமரேசன் அறை என்பது எங்களுக்கு வாரம் ஒரு முறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைச் சந்தித்து கொஞ்சம் மது, நிறைய உரையாடல் என்று வெளியுலகின் அத்தனை அழுத்தங்களையும் கொட்டித் தீர்க்கும் பாப மன்னிப்பு அறையாகவும் கனவுகளை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் அறையாகவும், பழம் நினைவுகளை அசைபோட்டு ஆனந்தமடையும் அறையாகவும் இருந்தது. அதனாலேயே அந்த அறை எப்போதெல்லாம் அழைக்கிறதோ அப்போதெல்லாம் என்னுடைய மொத்த ஆன்மாவும் அந்தக் குரலுக்கு வசியமாகி விடும். குமரேசனுக்கு மதுரையில் குடும்பம் இருந்த து. இருந்தாலும் சொந்த ஊரின் பால்வாசனையிலிருந்து அவனால் விடுபட முடியாத தால் இங்கேயும் ஒரு அறை எடுத்து அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தான். அவன் வரும்போது கூடவே மதுவையும் அழைத்து வந்தான்.

நான் போனபோது அங்கே ஏற்கனவே மணியும், மாரியப்பனும் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் மதுவும் உட்கார்ந்திருந்தது. ஜானிவாக்கர் ரெட் லேபிள் சிரித்துக் கொண்டிருந்தது.

வா.. வா.. சரவணா.. உனக்காகத் தான்.. காத்துக்கிட்டிருக்கான் ஜானி..” என்று சொல்லிச் சிரித்தான். நானும் சிரித்துக் கொண்டே உட்கார்ந்தேன். இப்போது அந்த அறைக்கு மெல்ல இறகுகள் முளைக்கத் தொடங்கியிருந்தது. மெல்ல பஞ்சு ரோமங்களாய் முளைத்து மெல்ல பெரிதானபோது நாங்கள் பறக்கத் தொடங்கினோம். எங்கள் கூட்ட த்தில் கதிரும் அவ்வப்போது வந்து போவான். ஆனால் முகர்ந்து பார்ப்பது போலச் சாப்பிட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பான். ஒரு வார்த்தை பேசமாட்டான். ஏற்கனவே அவன் வார்த்தைகளைத் தேடித் தேடித் தான் பேசுவான். குமரேசன் உளறுவான். அவனிடம் எந்த ஒளிவுஎமறைவுமிருக்காது. விதம் விதமாக இட்டுக்கட்டி பெரிது பெரிதாக் கற்பனைக்கதைகளைச் சொல்வான் மாரியப்பன். எப்போதுமே கோட்பாடுகளைப் பேசுவேன் நான்.

என்ன தத்துவவாதி பேச்சைக் காணோம்.. ஏதாச்சும் தத்துவம் சொல்லுடா..”

 என்னுடைய மனதில் கதிரைச் சந்தித்துவிட்டு வந்த நாள் அப்படியே உறைந்திருந்தது. மனம் ஒரு விசித்திரமான உயிர் தான். நம்முடைய உடலில் இருந்தாலும் அது தனியாகச் சுதந்திரமாகச் செயல்படுகிறது. வேண்டாமென நினைப்பதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. மறக்கவே கூடாதென நினப்பதை மறக்கச் செய்கிறது. நான் கதிரைப் பற்றிச் சொன்னதும் அங்கே ஒரு அமைதி பெரும் மலையைப் போல முளைத்தது. யாரும் எதுவும் பேசவில்லை. உறைந்திருக்கும் மலையை உடைக்க வேண்டும். நான் ஒரு மடக்கு மதுவைக் குடித்தேன். பட்டறைச்சேவைக் கடித்துக் கொண்டே,

டேய்.. மாரி.. கதிர் முதல்முறையாக குடித்தானே அன்னிக்கு என்ன நடந்த துன்னு ஞாபகமிருக்கா? “

என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். அதைக் கேட்ட தும் குமரேசன் சத்தம் போட்டுச் சிரித்தான். மாரிக்கும் சிரிப்பு வந்து விட்டது.

கல்லூரி முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த காலம். ஒவ்வொரு நாளும் விரக்தியின் முட்கிரீடம் சுமந்த தலைகளுடன் எந்த மருந்தினால் இந்த வேலையின்மை குணமாகுமென்று புரியாமல் யார் என்ன சொன்னாலும் செய்து கொண்டிருந்தோம். கல்லூரியில் படிக்கும்போது இருந்த கர்வம் தலைகுப்புற விழுந்து மண்டையை உடைத்துக் கொண்ட து. பார்க்கிறவர்களின் சாதாரணச்  சொற்களின் சேர்க்கை தூக்குக்கயிறாக மாறியது. ஒவ்வொரு நாளும் தூக்கிலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் துளைக்கப்பட்ட மனதை எப்படிக் காப்பாற்றுவது? கொடும்பாலையில் தன்னந்தனியே விடப்பட்டதைப் போலத் திரிந்தோம். சேர்ந்தே இருந்தாலும் சேர்ந்தே இல்லை.  

இந்த உலகம் எங்களை ஏமாற்றிவிட்டதாக நினைத்தோம். இந்தக் கல்வி, இந்த ஊர், வீடு, எல்லாரும் சேர்ந்து சதி செய்ததாகத் தோன்றியது. ஏதோ ஒரு வகையில் எங்களை ஆற்றுப்படுத்த வேண்டும். யாரோ சொன்னார்களென்று ஸ்டார் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் டைப்ரைட்டிங்க்கும் ஷார்ட் ஹேண்டும் படித்துக் கொண்டிருந்தோம். அந்த ஓனரே ஹிண்டு பேப்பர் ஏஜெண்டாகவுமிருந்தார். எனவே நானும், குமரேசனும் ஹிண்டு பேப்பரும் போட்டுக் கொண்டிருந்தோம். காலையில் நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை ஹிண்டு பேப்பர் போட்டுவிட்டு, பத்துமணிக்கு இங்கிலீஷ் டைப்ரைட்டிங் முடித்து, தெருவிலிருந்த மிகப் பெரிய அரச மரத்தடியில் உட்கார்ந்து போட்டித் தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டு, மீண்டும் மாலை நான்கு மணிக்கு ஷார்ட் ஹேண்ட் பயிற்சி முடித்து கொஞ்சநேரம் பால் பேட்மிட்டன் விளையாடி விட்டு நண்பர்களை நாயர் கடையில் சந்தித்து டீ குடித்துவிட்டு அன்றாடப் பொறணிகளைப் பேசி எல்லாரும் தூங்கிய பிறகு வீட்டுக்குப் போய்ப் படுத்துறங்கி மீண்டும் நான்கு மணிக்குப் பேப்பர் போட எழுந்திரிச்சு…… ச்சே! என்ன வாழ்க்கை! மாற்றத்தை மறுதலிக்கும் வாழ்க்கை நடைமுறை எனக்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சாயங்காலங்களில் நண்பர்கள் வரவில்லையென்றால் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வாசலில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு வந்து போகும் பெண்களைப் பார்த்துக் கொண்டு, இல்லையென்றால் யாரிடமாவது கடன் வாங்கி சினிமாக்களைப் பார்த்துக் கொண்டும் திரிந்தோம்.

ஒருநாள் முருகன் தான் இன்ஸ்டிடியூட்டின் வேலை நேரம் முடிந்தபிறகு,

சரக்கு அடிப்பமா? “ என்று கேட்டான். அப்போது மதுவிலக்கு அமுலிலிருந்த காலம். உள்ளுக்குள் பயமும் ஆர்வமும் முளைத்துக் கிளைவிட்டது. ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டோம். ஏதோ அவன் சொல்வதைக் கேட்காத து மாதிரி கதிர் ரெமிங்டன் டைப் மிஷினில் டொக் டொக் என்று அடித்துக் கொண்டிருந்தான். குமரேசன் தான்,

எப்படிர்ரா.. சரக்கு தான் இப்ப கிடைக்காதே..”

ஏன் கிடைக்காது? சாராயம்.. வேலுகிட்ட சொன்னா கொண்டு வந்து கொடுத்துருவான்.. பாட்டில் அஞ்சு ரூபாய்இருந்தா போதும்..”

அவன் சொல்லச் சொல்ல எல்லாருக்கும் ஆசை வந்தாலும் பணம்? உடனே குமரேசன் டைப்ரைட்டிங்க் அடித்து கட்டுக்கட்டாக இருந்த பேப்பர்களை எடுத்தான். அப்போது அங்கே வேலையும் பார்த்துக் கொண்டிருந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு போனவன் நான்கு ரூபாயுடன் திரும்பி வந்தான். மற்றவரகள் அனைவரும் கையிலிருந்த பத்துபைசா, இருபது பைசா வைத்தேத்தி அஞ்சு ரூபாய் இருபது பைசாவாக மாற்றினோம்.

மேஜையில் எங்கள் முன்னால் ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் மாதிரி சாராயம் எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. நான் எடுத்து மூக்குக்கருகில் கொண்டு போனேன். அவ்வளவுதான். சாராயத்தின் கடும்நெடி மூக்கிலேறித் தும்மல் வந்தது. தண்ணீர் குடிக்க வைத்திருந்த டம்ளரை எடுத்து முருகன் ஊற்றிக் கொடுத்தான். ஒவ்வொருவருக்காய் கொடுத்தான். வாயில் ஊற்றியதும் வாய் வெந்து தொண்டை எரியத் தொடங்கியது. ஓங்கரித்துக் கொண்டு வந்தது. கதிர் தொண்டைக்குப் போனதைத் துப்பிவிட்டான்.

குமரேசன் அவன் மத்தியானச் சாப்பாட்டுக்கு வாங்கி மீதம் வைத்திருந்த ஊறுகாய் மட்டையை எடுத்தான். அதிலிருந்து காரமான ஊறுகாயைத் தொட்டு நாக்கினடியில் தேய்த்தான். ஓங்கரிப்பு அப்படியே நின்றுவிட்டது. உடம்பு வியர்க்கத் தொடங்கியது. கதிர் துப்பி விட்டாலும் கண்கள் கிறங்க அப்படியே உட்கார்ந்திருந்தான்.

என்னடா ஒண்ணுமே தெரியல.. ” என்று சொல்லிக் கொண்டே எழுந்த குமரேசன் அப்படியே வலப்பக்கமாகச் சாய்ந்தான். மீண்டும் உடலை நேராக க் கொண்டுவர முயற்சி செய்து கொண்டே,

அட.. குப்ப்ன்னு ஏறிடுச்சி..தலை கிர்ர்ருன்னு சுத்துது..” என்று சொல்லிக் கொண்டே வாசல் கதவைத் திறந்தான். முருகன் சிரித்துக்கொண்டே சட்டைப்பயிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தான். கதிர் அசையவில்லை. எனக்குக் கண்கள் காந்தின. உடம்பெல்லாம் சூடு பரவி எரியத் தொடங்கியது.  உடல் முழுவதும் மத மதப்பாய் தடிமனாய் மாறியது. கைகளும் சரி கால்களும் சரி தன்னுசாரில்லை. ஒரே நேர த்தில் மிகக்கனமாகவும், மிக லேசாகவும் இருந்தன. மாரி லேசாக க் கையை அசைத்தான். அருகிலிருந்த காட்ரேஜ் மிஷின் கீழே விழுந்தது. அதைப் பார்த்த முருகன் சிரித்தான்.

முழுமையான போதையில் எல்லாருமே தள்ளாடினோம். தலையைத் தூக்கி வைக்க முடியவில்லை. கண்முன்னால் தெரு ஓடியது. சாலை ஓடியது. நடந்து கொண்டிருந்த மனிதர்கள் சினிமாத் தியேட்டரில் அறுந்த பிலிம் மாதிரி ஓடினார்கள். எதுவுமே இருந்த இடத்தில் இல்லை. எல்லாமே ஆட்ட த்திலிருந்தன.

நல்லாருக்குல்ல.. “ என்றான் மணி.

எனக்குப் பழ்ம்மாருக்குடா.. யாராது கழ்ண்டுபிடிச்சிட்டா..” என்றேன் நான். குமரேசன்,

ஏண்டா ஒளறுத..” என்றான் மணி. அப்போது முருகன் தான்,

டேய் சினிமாக்குப் போவோம்.. இரண்டு மணிநேர த்திலே போதை இறங்கிரும்.. அப்புறம் வீட்டுக்குப் போயிரலாம்..”

என்றான்.

காசு.? “ என்றான் கதிர்,

நீ ஒளிச்சி வைச்சிருக்கியே எடுர்ரா..”

எங்கிட்ட இல்லை..”

தெரியும்டா மயிறுசட்டை மடிப்புல அஞ்சு ரூபா சொருகி வைச்சிருக்க.. நான் பாத்துட்டேன்.. ”

கதிர் எதுவும் சொல்லாமல் முருகனை முறைத்தான்.

புரோட்டா செட் சாப்பிடும்போது எடுக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா நீங்க ஒழுங்கா சாப்பிட்டுக்கிட மாட்டீங்க.. வாங்க.. கோபால் தியேட்டர்ல பழைய எம்ஜிஆர் படம் போட்டிருக்கான்.. “

அப்படியே ஆடிக் கொண்டே பஜார் வழியே எல்லாரும் நடந்து போனோம். இரவு பத்துமணிக்கு மேலாகி விட்டதால் ஆள்நடமாட்டமில்லை. திடீரென மணி ரோட்டில் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் அலம்பினான். முருகன் ஹோஹோஹொ என்று கத்தினான்.

கதிர்,

வாங்கடா.. வாங்க.. ஒத்தைக்கு ஒத்தைக்கு வாங்கடா..” என்று யாருமில்லாத சாலையைப் பார்த்துக் கத்தினான். எனக்கு மூளை இளகியதைப் போல இருந்தது. ஏதோ நான் காற்றில் மிதந்து கொண்டிருந்தமாதிரி இருந்தது. கால்களால் சாலையை அளைந்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னால் இப்படி ஒரு அனுபவமில்லாத தால் எல்லாருமே அனுபவித்தோம். இறுக மூடிய மனதின் கதவுகள் மெல்ல உருகி ஒன்றுமில்லாமல் வெட்டவெளியில் நிற்பதைப் போல இருந்தது. திடீரென கருமேகம் கூடியதைப் போல துயரம் பொங்கியது. வீடும், அப்பா, அம்மா, தங்கை, தம்பி எல்லாரும் கண்முன்னால் தெரிந்தார்கள். ஏன் காயத்ரி கூடத் தெரிந்தாள். எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. இந்த ஊரைப் பிடிக்கவில்லை. இந்த உலகத்தைப் பிடிக்கவில்லை. கசப்பூறிக் கொண்டேயிருந்த து. காரிக் காரித் துப்பினேன். ஓவென அழவேண்டும் என்று நினைவு வரும்போதே அழத் தெரியுமா என்ற சந்தேகமும் வந்தது. அப்போது விளங்கமுடியாத சத் த்துடன் ஒரு ஈளக்கம் கேட்ட து. மாரி சாலையின் ஓரத்தில் உட்கார்ந்து ஓங்கரித்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் அழுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். தொண்டையிலிருந்து சத்தம் மேலெழுந்து வரவில்லை. முகம் மட்டும் கோணியது. உதடுகள் பிதுங்கின. கண்களை இறுக்கி இறுக்கி மூடித் திறந்தாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. மணி நடுரோட்டில் நின்று கொண்டு, கத்தினான்.

நான் இந்த உலகத்தின் மீது ஒண்ணுக்கடிக்கிறேன்..”

அதைக் கேட்ட தும் தானாகவே சிரிப்பு வந்தது. நாங்கள் எல்லாரும் சிரித்தோம். கண்ணீர் வரும்வரை சிரித்தோம். மாரி ரோட்டில் உருண்டு சிரித்தான். என்னால் நிற்கமுடியவில்லை. அப்படியே உட்கார்ந்து விட்டேன். எங்களுடைய சிரிப்பிலிருந்த கைப்பு இரவின் கருமையை இன்னும் அதிகப்படுத்தியது.

 

( தொடரும் )