Tuesday, 11 August 2026

எச்சரிக்கை! எச்சரிக்கை!. எச்சரிக்கை!.

 

எச்சரிக்கை! எச்சரிக்கை!.  எச்சரிக்கை!.  


உதயசங்கர்



காட்டின் நடுவில் அதிகாலைச் சூரியனின் அழகை ரசித்துக் கொண்டிருந்தது ஒரு அருகம்புல். அதன் மீது உருண்டு திரண்டிருந்த பனித்துளியில் சூரிய ஒளி பட்டுத் தெறித்தது. அப்போது தான் அது நடந்தது.  உடனே அருகம்புல் அதைச் சொன்னது. அதைக் கேட்டதும், ஒரு நடுக்கம் காடு முழுவதும் பரவியது. அருகம்புல், கோரைப்புல், சுக்குநாறிப்புல், எலுமிச்சைப்புல், ஒட்டுப்புல், இஞ்சிப்புல், கீரைப்புல், கவைப்புல், உப்புக் கோரைப்புல், எல்லாம் நடுங்கின.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

அந்தப் புற்களிலிருந்த பூச்சிகள் , கருவண்டு, பொன்வண்டு, பட்டுப்பூச்சி, கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, கும்பிடுபூச்சி, பொரிவண்டு, வண்ணத்துப்பூச்சி, பட்டாம்பூச்சி, கொசுக்கள், தீப்பூச்சி, போன்றவை நடுங்கின. அவற்றின் முட்டைகள் நடுங்கின. முட்டைகளிலிருந்து வெளியே வந்த புழுக்கள் நடுங்கின.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

அந்தப் பூச்சிகள் விளையாடும் கொடிகள் நடுங்கின. மூக்கிரட்டைக் கொடி, திராட்சைக்கொடி, பாகல்கொடி, அவரைக்கொடி, காட்டுக்கொடி, கோவைக்கொடி, ஓமவல்லிக்கொடி, சங்குப்பூக்கொடி, சுரைக்காய் கொடி, தர்பூசணிக்கொடி, பசலைக்கொடி, முசுமுசுக்கை கொடி, போன்ற கொடிகள் நடுங்கின. அந்தக் கொடிகளில் அப்போது தான் முளைத்த இளம் தளிர்கள் நடுங்கின.

எச்சரிக்கை! எச்சரிக்கை!  

அந்தக் கொடிகள் படர்ந்திருந்த மரங்கள் நடுங்கின. மருதமரம், கடம்பமரம், வன்னிமரம், வேங்கை மரம், சந்தன மரம், தேக்கு மரம், கருங்காலி மரம், ஆனைப்புளி மரம், அத்தி மரம், அகில் மரம், அரச மரம், ஆலமரம், இலவமரம், ஏழிலைப்பாலை மரம், கருவேல மரம் போன்ற மரங்களின் நடுங்கின. மரங்களில் இருந்த கிளைகள் நடுங்கின.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

மரங்களின் கிளைகளில் கூடுகள் கட்டியிருந்த பறவைகள் நடுங்கின. மயில், குயில், காகம், கிளி, சிட்டுக்குருவி, புறா, கொக்கு, நாரை, பருந்து, மரங்கொத்தி, தேன்சிட்டு, தையல்சிட்டு, கழுகு, ஆந்தை, கௌதாரி, கொண்டலாத்தி, தவிட்டுக்குருவி, மீன்கொத்தி, போன்ற பறவைகளின் கூடுகள் நடுங்கின. கூடுகளிலிருந்த முட்டைகள் நடுங்கின. முட்டைகளில் இருந்து வெளியே வந்து உணவுக்காக வாயை வாயைத் திறந்து கொண்டிருக்கும் குஞ்சுகள் நடுங்கின.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

பறவைகளின் நடுக்கம் காற்றில் பரவியது. காற்று நடுங்கியது.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

காற்றின் நடுக்கத்தை விலங்குகள் உணர்ந்த விலங்குகள் நடுங்கின. காட்டெருமை, யானை, காட்டுப்பூனை, புலி, காட்டெலி, சிறுத்தை, முயல், மான், நரி, அனைத்து விலங்குகளும் நடுங்கின.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

ஆமாம். காட்டுக்குள் ஒரு மனிதன் காலடி எடுத்து வைத்துவிட்டான்.

முதலில் புல்லைப் பிடுங்கினான்.

பூச்சிகள் அழிந்தன.

செடிகொடிகளைப் பிடுங்கினான்

பூக்கள் அழிந்தன

மரங்களைப் பிடுங்கினான்

பறவைகள் அழிந்தன.

காட்டை அழித்தான்.

விலங்குகள் அழிந்தன.

காற்று அழிந்தது.

மேகங்கள் அழிந்தன.

மழை அழிந்தது.

ஆறு அழிந்தது.

 

கடல் அழிந்தது.

பூமியும் அழிந்தது. .

அருகம்புல் ஓஓஓஓ என்று ஓலமிட்டு நடுநடுங்கியது. அது கண்களைத் திறந்தது. அருகில் இருந்த தும்பைச்செடி ,

ஏன் நடுங்குகிறாய்? இன்னும் பூங்கா திறக்கவில்லை..அதன்பிறகுதான் மனிதர்கள் வருவார்கள். குழந்தைகள் வருவார்கள். புற்களைக் கிள்ளுவார்கள். செடிகளை ஒடிப்பார்கள், இலைகளைக் கிழிப்பார்கள் அதுவரை நிம்மதியாகத் தூங்கு..சும்மா கத்திக் கொண்டிருக்காதே

என்று சலிப்புடன் சொன்னது. அதைக் கேட்ட அருகம்புல்,

 அட! இதெல்லாம் கனவா? நம் குழந்தைகள் பூமியை அழிய விட மாட்டார்கள் என்று நினைத்தது.

ஆனாலும் இன்று பூங்காவுக்கு வரப்போகிற குழந்தைகளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தது.

குழந்தைகளே எச்சரிக்கை! எச்சரிக்கை!

 

 நன்றி - விஞ்ஞானத்துளிர்