Wednesday, 17 June 2026

குழந்தைகளிடம் அன்பை விதைக்கும் இலக்கிய விதைகள்

 குழந்தைகளிடம் அன்பை விதைக்கும் இலக்கிய விதைகள் 

சரிதா ஜோ





    சமீப காலங்களில் தமிழ்ச் சிறார் இலக்கியம் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு புதிய பரிமாணங்களை நோக்கி பயணித்து வருகிறது. தொடர்ந்து பல புதிய படைப்பாளர்கள் சிறார் இலக்கியத் துறைக்குள் நுழைந்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கும், வரவேற்கத்தக்க நிகழ்வாகும். சிறார்களுக்காக பல்வேறு வகைமைகளில் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், சமூகப் பிரச்சினைகள், மனிதநேயக் கருத்துகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற முக்கிய அம்சங்களும் சிறார் இலக்கியத்தின் வழியாக பேசப்பட்டு வருகின்றன.


    தமிழில் நவீன சிறார் இலக்கியத்தின் தொடக்கம் 2000ஆம் ஆண்டிலிருந்து என்று சொல்லலாம். கொரோனாவுக்கு பிறகு புதிய வேகத்தைப் பெற்றதாகக் கருதினால் கூட, அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்ந்து இயங்கி வரும் முக்கியமான படைப்பாளிகளில் எழுத்தாளர் உதயசங்கர் குறிப்பிடத்தக்கவர். சிறார் இலக்கியத்தில் புதிய சாத்தியங்களையும், புதுமையான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் படைப்பாளராக அவர் திகழ்கிறார்.

    அவரது நீண்டகால இலக்கியப் பணிகளில் மிக முக்கியமான சாதனையாக நான் கருதுவது, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பாகும். தற்போது அந்தச் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் அவர், தனது இடையறாத முயற்சிகள் மற்றும் களப்பணிகளின் மூலம் தமிழகம் முழுவதும் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கிளைகள் உருவாக வழிவகுத்துள்ளார். இது சிறார் இலக்கிய வளர்ச்சிக்கான அரிய பணியாகக் கருதப்பட வேண்டியது.

    நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத் துறையில் இயங்கி வரும் உதயசங்கர், சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு வகைமைகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரது படைப்பாற்றலுக்காக விகடன் விருது, தமிழ்ப் பேராயம் விருது, தாமுஎகச விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் அவரை வந்தடைந்துள்ளன. 2023ஆம் ஆண்டு வெளியான ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்காக இந்திய ஒன்றிய அரசின் உயரிய பால சாகித்ய புரஸ்கார் விருதையும், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதையும் பெற்றுள்ளார்.

    அவரது சிறார் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைந்து கதைகள், கத்திரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் என்ற தொகுப்பாக இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் கற்பனை வளம், மொழிநடை, சிறார் மனங்களைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அவரது பங்களிப்பை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது சிறந்த அறிமுக நூலாக அமைகிறது.

அண்டா மழை :

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் அவசியம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை எளிமையாக எடுத்துரைக்கும் சிந்தனைமிக்க கதை. உறங்கிக் கொண்டிருக்கும் மன்னர் பொறுப்பற்ற ஆட்சியின் உருவகமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் குழந்தைகள் மாற்றத்தின் நம்பிக்கையாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். மரங்கள் அழிவதும், நீர்நிலைகள் சுரண்டப்படுவதும் மனிதர்களின் தவறான செயல்களின் விளைவுகளை நினைவூட்டுகின்றன. இறுதியில் மக்கள் தாமாகவே ஒன்றிணைந்து இயற்கையைப் பாதுகாக்க முன்வருவது கதையின் மிகப்பெரிய பலம். குழந்தைகளுக்கான கதையாக இருந்தாலும், பெரியவர்களுக்கும் ஆழமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் செய்தியை வழங்குகிறது.

ஒரு சொட்டு தண்ணீர் 

     தண்ணீரின் மதிப்பை உணர்த்தும் எளிமையான ஆனால் தாக்கமிக்க கதை. தண்ணீரை வீணாக்கும் சிறுமியின் மனமாற்றம் இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு ரயில் நிலையத்தில் நிகழும் சிறிய சந்திப்பு, நீர்ப்பற்றாக்குறையின் கடுமையான உண்மையை குழந்தைகளின் மனதில் பதிக்கிறது. குறிப்பாக, தண்ணீர் பிடிக்கும் சிறுமியின் உருவம் கதையின் நாயகியாக வரும் நிகிதாவின் நினைவில் நிலைத்திருப்பது கதையின் உணர்ச்சி ஆழத்தை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு நீர் சேமிப்பின் அவசியத்தை போதனை இல்லாமல் உணர்த்தும் சிறந்த விழிப்புணர்வுக் கதை

குட்டி எறும்பும் சுமதிப்பாப்பாவும் :

    சிறிய உயிரினங்களின் உலகத்தை குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்தும் கற்பனைமிக்க கதை. எறும்புகளின் வாழ்க்கை, ஒற்றுமை மற்றும் உழைப்பை எளிமையாகக் காட்டுகிறது. சுமதியின் ஆர்வமும், எறும்பின் விளக்கமும் குழந்தைகளிடம் உயிரினங்களின் மீது கருணையையும் புரிதலையும் வளர்க்கின்றன. அறிவியல் உண்மைகளையும் கற்பனையையும் இணைத்து, இயற்கையை மதிக்க வேண்டும் என்ற கருத்தை அழகாக எடுத்துரைக்கும் இனிய குழந்தைகள் கதை.

    சுற்றுலா போன சுண்டைக்காய் 

     குழந்தைகளின் கற்பனையைத் தூண்டும் வேடிக்கையான கதை. சாதாரண சமையலறைப் பொருட்களையே சாகச உலகமாக மாற்றும் எழுத்தாளரின் கற்பனை பாராட்டத்தக்கது. கதையின் இடையிடையே வரும் பாடல் குழந்தைகளுக்கு வாசிக்கும் போது சலிப்பில்லாமல் வாசிக்க ஏதுவாக இருக்கும். ஒரு சிறிய சுண்டைக்காயின் பயணத்தின் மூலம், குழந்தைகளுக்கு ஆர்வமும் மகிழ்ச்சியும் தரும் இனிய கதை இது.

பப்பியின் வீடு :

    வயதாகிவிட்டதால் கைவிடப்பட்ட ஒரு நாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு மனிதநேயம் என்றால் என்ன என்பதைக் கேட்கும் மனதை நெகிழ்விக்கும் கதை இது.

பயன் இருந்தபோது அன்பு காட்டியவர்களுக்கும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அரவணைத்த குழந்தைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை அழகாகச் சுட்டிக்காட்டுகிறது.

பப்பியின் பார்வையில் குழந்தைகள் தங்கச் சிறகுகள் முளைத்த தேவதைகளாகத் தோன்றும் காட்சி கதையின் உச்சம்.

கருணை, நன்றி, முதுமை, புறக்கணிப்பு ஆகியவற்றை எளிய மொழியில் ஆழமாகப் பேசும் நெகிழ்ச்சியான படைப்பு.

முடித்த பிறகும் மனதில் நீண்ட நேரம் தங்கும் ஒரு அன்பின் கதை.

மாயாவின் பொம்மை :

    ஒரு சாதாரண பொம்மையை மையமாகக் கொண்டு இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை குழந்தைகளின் மனதுக்குப் புரியும் வகையில் அழகாகச் சொல்லும் கதை இது.

பொம்மையின் கண்ணீர் வெட்டப்பட்ட மரங்களின் வலியாக மாறும் புனைவு மிகவும் புதுமையானது.

அருணாச்சலப் பிரதேசக் காட்டிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பின் உலகம் வரை விரியும் கதை, வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை சந்திக்கும் இழப்புகளை சுட்டிக்காட்டுகிறது.

மாயாவின் சிறிய செயல் பெரிய மாற்றங்களுக்கு விதையாக அமைய முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை போதனையாக அல்லாமல் உணர்வுபூர்வமாகக் கடத்தும் சிறந்த படைப்பு.

கதையின் இறுதியில் மாயாவிற்கு பொம்மை கொடுக்கும் முத்தத்தின் ஈரம் இயற்கையின் மீது மனிதன் காட்ட வேண்டிய அன்பின் குறியீடாக மனதில் பதிகிறது.

தாத்தாவுக்குத் தாத்தா :

    கரப்பான் பூச்சி போன்ற பலர் வெறுக்கும் ஒரு உயிரை மையமாக வைத்து, இயற்கையில் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்குப் புரியவைக்கும் சிந்தனையூட்டும் கதை.

பயத்திலிருந்து புரிதலுக்குச் செல்லும் கயலின் பயணம் மிகவும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

“மனிதனுக்குப் பயன்படாதது பயனற்றது அல்ல” என்ற ஆழமான கருத்தை எளிமையாகச் சொல்கிறது.

இயற்கையை மதிக்கவும், அனைத்து உயிர்களையும் கருணையுடன் பார்க்கவும் கற்றுத் தரும் அருமையான படைப்பு.
குழந்தைகளின் பகுத்தறிவைத் தூண்டும் அழகான சுற்றுச்சூழல் கதை.

ஜூ ஜூ யானை :

    ஜூஜூவின் கதை ஒரு பறக்கும் யானையின் அதிசயத்தைப் பற்றியது மட்டுமல்ல; கனவும் கருணையும் சேர்ந்தால் சாத்தியமற்றதும் சாத்தியமாகும் என்பதைக் கூறும் அழகான உவமை.

பிறரால் புரிந்துகொள்ளப்படாத ஒரு ஆசையை ஜூஜூ விடாமல் துரத்துகிறான்.

ஒரு சிறு உயிரைக் காப்பாற்றிய கருணையே அவனுக்கு இறக்கைகளாக மாறுகிறது.

புதுமையை முதலில் சந்தேகிக்கும் சமூகத்தின் மனநிலையையும் கதை மென்மையாக பிரதிபலிக்கிறது.

“உயரப் பறக்கச் செய்வது இறக்கைகள் அல்ல; நல்ல மனமும் விடாமுயற்சியும்தான்” என்ற கருத்தை எளிமையாகச் சொல்லும் மனம் தொடும் கதை.

அம்மா எங்கே? :

    காட்டின் வழிகளை மறந்தது யானைகள் அல்ல; அவர்களின் முன்னோர் பாதைகளை மறைத்த மனித உலகம்தான் என்பதை இந்தக் கதை வலியுடன் பதிவு செய்கிறது.

அப்புவின் “அம்மா எங்கே?” என்ற அழைப்பு, தாயைத் தேடும் ஒரு குட்டியின் குரல் மட்டுமல்ல; வாழ்விடத்தை இழந்த காட்டு உயிர்களின் கூட்டு ஓலமாகவும் ஒலிக்கிறது.

பிரிவின் வலியையும், மனித வளர்ச்சியின் மறுபக்க விளைவுகளையும் குழந்தையின் கண்ணீரில் கதை செதுக்குகிறது.

எளிய மொழியில் சொல்லப்பட்டாலும், இயற்கைக்கும் உயிர்களுக்கும் நாம் ஏற்படுத்தும் காயங்களை நினைவூட்டும் ஆழமான படைப்பு இது.

காட்டுப் பள்ளிக்கூடம் :

    இந்தக் கதை காட்டைப் பற்றிப் பேசுவது போலத் தோன்றினாலும், உண்மையில் கல்வி, அதிகாரம், சமத்துவம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள இன்றைய சமூகப் போராட்டங்களை நுட்பமாகப் பதிவு செய்கிறது.

ஒவ்வொருவரின் தனித்திறமையையும் மதிக்கும் கல்வி முறையை அழித்து, ஒரே அளவுகோலால் அனைவரையும் அளக்க முயலும் அதிகார மனப்பான்மையின் அபத்தத்தை கதை கூர்மையாக வெளிப்படுத்துகிறது.

நரியின் தந்திரம், அறிவை தனியுரிமையாக்கி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் சக்திகளின் உருவகமாக நிற்கிறது.

இறுதியில் வெல்வது வலிமையோ அதிகாரமோ அல்ல; பல்வகைமையையும் சமத்துவத்தையும் காக்க ஒன்றுபட்ட அறிவுதான் என்பதை கதை ஆழமாக உணர்த்துகிறது.

யாருடைய முட்டை? :

    சுள்ளானின் தேடல் ஒரு முட்டையின் உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்கான பயணம் மட்டுமல்ல; பிறர் இழப்பைத் தன் பொறுப்பாக ஏற்றுக்கொள்ளும் கருணையின் பயணமும் ஆகும்.

அலட்சியமாகக் கடந்து செல்லக்கூடிய ஒரு சிறு உயிரின் கவலையை, அவன் மனசாட்சி பெரிதாக்கிப் பார்க்கிறது.

தன்னைவிட பெரிய உலகில் ஒரு சிறிய எறும்பு செய்த இந்தச் செயல், அன்பும் பொறுப்புணர்வும் அளவால் அல்ல, உள்ளத்தால் அளக்கப்படுகின்றன என்பதை உணர்த்துகிறது.

“சேர வேண்டியதை அதன் இடத்தில் சேர்ப்பதே உயர்ந்த அறம்” என்ற எளிய உண்மையை மென்மையாகச் சொல்லும் அழகான கதை இது.

பல வகையான பறவைகளையும் அவற்றின் முட்டைகளையும் பற்றிய அறிமுகமும் கதைக்கு பலம்.

கால்களில் ஒரு காடு :

    கூட்டுப்புழுவின் உறக்கம், மாற்றத்திற்கான இயற்கையின் அமைதியான தயாரிப்பாகவும், வண்ணத்துப்பூச்சியின் பிறப்பு தன்னறிதலின் கொண்டாட்டமாகவும் இந்தக் கதை விரிகிறது.

இலையை மட்டுமே அறிந்திருந்த ஒரு சிறு உயிர், வானத்தின் அகலத்தை அறியும் தருணத்தை கதை கவித்துவமாகப் பதிவு செய்கிறது.

பயத்தைத் தாண்டி வெளியே வந்த அந்த ஒரு கணமே, வாழ்வின் உண்மையான பிறப்பு என்பதைக் தேவதையின் குரல் மென்மையாக உணர்த்துகிறது.

ஒவ்வொரு உயிரினுள்ளும் மறைந்திருக்கும் மாற்றத்தின் அதிசயத்தையும், ஒரு சிறிய சிறகில் கூட ஒரு காடு எதிர்காலமாக உறங்குகிறது என்பதையும் சொல்லும் அழகிய உருவகக் கதை இது.

கேப்பைக்கூழும் கருவாட்டுக் குழம்பும் சாப்பிட்ட புலி :

    இந்தக் கதை புலியை ஒரு பயங்கர விலங்காக அல்ல, மனிதனின் பேராசையால் வாழ்விடம் இழந்த அகதியாகச் சித்தரிக்கிறது.

பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மரங்கள் என எண்ணற்ற உயிர்களின் பெயர்கள் கதையில் பின்னிப் பிணைவது, இயற்கை என்பது தனித்தனி உயிர்களின் கூட்டமல்ல; ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் பெரும் உயிர்ச் சங்கிலி என்பதை நினைவூட்டுகிறது.

லட்சுமிக்கும் புலிக்கும் இடையேயான உரையாடல், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான மறந்துபோன உரையாடலின் உருவகமாக மாறுகிறது.

உணவுச் சங்கிலி சிதைவது என்பது ஒரு உயிரின் இழப்பு மட்டுமல்ல; ஒரு உலகத்தின் சமநிலை குலைவதென்பதை கதை நுட்பமாக உணர்த்துகிறது.

குழந்தைகளுக்கான எளிய கதையாகத் தோன்றினாலும், சுற்றுச்சூழல் அழிவின் வலியை ஆழமாகப் பதிவு செய்யும் சமகால இயற்கை இலக்கியமாக இது திகழ்கிறது.

விதைகளின் பயணம் :

    இந்தக் கதை விதைகளின் பயணத்தை மட்டும் சொல்லவில்லை; ஒவ்வொரு உயிருக்கும் அதன் இலக்கை அடைவதற்கு முன் அனுபவிக்க வேண்டிய உலகத்தின் அகலத்தையும் கொண்டாடுகிறது.

முளைப்பது என்பது வெறும் உயிரியல் நிகழ்வு அல்ல, காலமும் காத்திருப்பும் அனுபவங்களும் சேர்ந்து உருவாக்கும் ஒரு பிறப்பு என்பதை கதை அழகாக உணர்த்துகிறது.

சேர வேண்டிய மண்ணை அடைவதற்கு முன் விதைகள் கண்ட பயணம், வாழ்க்கையின் அலைச்சல்களும் அர்த்தமற்றவை அல்ல என்பதைக் குறிக்கிறது.
இறுதியில் வேரூன்றுவது ஒரு நெல்விதை மட்டுமல்ல; பயணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஒரு உயிரின் கனவும் கூட.

யார் நீ ? :

    இந்தக் கதை வேறுபட்ட தோற்றத்தால் ஒதுக்கப்படும் ஒரு குஞ்சின் வலியைச் சொல்வதோடு, இயற்கையின் சிக்கலான சமநிலையையும் மென்மையாக வெளிப்படுத்துகிறது.

“நான் யார்?” என்ற அந்தச் சிறு குஞ்சின் கேள்வி, அடையாளத்தைத் தேடும் எல்லா உயிர்களின் அமைதியான தேடலாக ஒலிக்கிறது.

குயிலும் தவிட்டுக் குருவியும் இடையேயான உறவு, இயற்கையில் நன்மை–தீமை என்ற எளிய கோடுகளைத் தாண்டி வாழ்வின் பல அடுக்குகளைப் புரிந்துகொள்ள அழைக்கிறது.

குழந்தையின் ஆச்சரியப் பார்வையின் வழியே, தீர்ப்பளிப்பதை விட கவனித்து அறிதலே அறிவின் முதல் படி என்பதை கதை உணர்த்துகிறது.

வழி தவறிய கோழி குஞ்சு :

    வழி தவறிய கோழிக்குஞ்சின் பயணம், இருளில் தொலைந்த ஒரு குழந்தையின் பயம் மட்டுமல்ல; உலகை அறிந்துகொள்ளும் முதல் அடிகளின் அனுபவமும் ஆகும்.

புழு, எலி, பாம்பு என சந்திக்கும் ஒவ்வொரு உயிரும், வாழ்க்கையின் பல முகங்களை அதற்கு அறிமுகப்படுத்துகின்றன.

இறுதியில் மின்மினிப் பூச்சிகளின் சிறு வெளிச்சம் தாயிடம் கொண்டு சேர்ப்பது, பெரும் இருள்களைக் கூட சில நேரங்களில் சிறிய நம்பிக்கைகளே வெல்லும் என்பதற்கான அழகிய உருவகமாகிறது.

எளிமையான மொழியில் சொல்லப்பட்டாலும், அன்பும் நம்பிக்கையும் வழிகாட்டும் பாதையைப் பற்றிய மென்மையான குழந்தை இலக்கியப் படைப்பு இது.

ஜங்க் புட் தேசம் :

    இந்தக் கதை ஒரு கற்பனை நாட்டின் வரலாறாகத் தோன்றினாலும், பொருளாதாரக் கொள்கைகள், உணவு இறையாண்மை, மற்றும் பண்பாட்டு நினைவழிவு பற்றிய ஆழமான அரசியல் உருவகமாக வாசிக்கப்படுகிறது.

உடனடி வசதிகளும் மலிவு விலைகளும் மக்களை கவர்ந்தபோது, அவர்கள் இழந்தது வெறும் உணவுப் பழக்கங்கள் அல்ல; பல தலைமுறைகளின் அறிவும் தன்னிறைவும் என்பதைக் கதை கூர்மையாகச் சுட்டிக்காட்டுகிறது.

வெளிநாட்டு முதலீட்டின் பெயரில் உற்பத்தியும் லாபமும் வெளியேற, மக்கள் நுகர்வோர்களாக மட்டுமே மாற்றப்படுவது கதையின் மைய விமர்சனமாக அமைகிறது.

தொல்லியல் ஆய்வின் மூலம் தங்கள் சொந்த உணவுகளைத் தேடும் இறுதிக் காட்சி, வளர்ச்சி என்ற பெயரில் மறக்கப்பட்ட அடையாளங்களை மீட்டெடுக்கும் சமூகத்தின் துயரமான உருவகமாக நிற்கிறது.

எளிய நகைச்சுவைத் தொனியில் சொல்லப்பட்டாலும், “ஒரு நாடு தனது உணவையும் விவசாயத்தையும் இழந்தால், அதன் சுதந்திரத்தின் ஒரு பகுதியையும் இழக்கிறது” என்ற எச்சரிக்கையை ஆழமாகப் பதிவு செய்யும் கதை இது.

மாயக்கண்ணாடி :

    இந்தக் கதை கண்ணாடியைப் பற்றியது அல்ல; தன்னைத் தானே எதிர்கொள்ள மறுக்கும் மனித மனதைப் பற்றிய நுட்பமான உருவகம்.

உண்மையை காட்டிய கண்ணாடியை உடைத்த ராஜா, தனது குறையை அல்ல, அதன் பிரதிபலிப்பையே எதிரியாகக் கருதும் அதிகார மனப்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மாற்றத்தை உருவாக்கியது கட்டாயமோ தண்டனையோ அல்ல; தன்னைப் பார்க்கும் பழக்கமும் சுயஅறிவும் என்பதைக் கதை அழகாக உணர்த்துகிறது.

“உலகத்தை மாற்றுவதற்கு முன், கண்ணாடியில் தெரியும் மனிதனை மாற்ற வேண்டும்” என்ற ஆழமான கருத்தை நகைச்சுவையுடன் சொல்லும் சிறந்த உருவகக் கதை இது.

கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் :

    கத்திரிக்காய்க் குள்ளனின் பயணம், வலிமையால் அல்ல; பகிர்வாலும் இரக்கத்தாலும் வெற்றியை அடையும் நாட்டுப்புற அறிவின் கொண்டாட்டமாகும்.

தன்னிடம் இருந்த சிறிய பொருட்களைக் கூட பிற உயிர்களின் தேவைக்காக வழங்கிய அவன், உதவி என்பது இழப்பு அல்ல, எதிர்கால விதைப்பு என்பதை நிரூபிக்கிறான்.

எறும்பு, வெட்டுக்கிளி, எலி ஆகிய சிறு உயிர்கள் இணைந்து பூதத்தை வெல்வது, கூட்டுச் செயலின் சக்தியை அழகாக வெளிப்படுத்துகிறது.

எளிய நாட்டுப்புறக் கதையாக இருந்தாலும், “நன்மை செய்த கை ஒருநாளும் வெறுமையாகத் திரும்பாது” என்ற ஆழமான வாழ்வியல் உண்மையை தாங்கி நிற்கும் கதை இது.

இர்ஃபானின் வண்ணப் பென்சில் :

    இந்தக் கதை போரின் அரசியலைப் பற்றி அல்ல; பசியும் பயமும் நடுவே கூட கனவு காணத் துணியும் ஒரு குழந்தையின் உள்ளத்தைப் பற்றியது.

இர்ஃபானின் கையில் கிடைத்த சிவப்பு பென்சில், ஒரு எழுதுகோல் மட்டுமல்ல; சிதைந்த உலகத்தை மீண்டும் வரைய முயலும் நம்பிக்கையின் குறியீடாக மாறுகிறது.

உணவு, தங்கை, அமைதி—ஒரு குழந்தையின் மிக எளிய ஆசைகளே போரின் கொடூரத்தை மிகத் தீவிரமாக வெளிப்படுத்துகின்றன.

இறுதியில் சிவப்பு பட்டம் வானில் பறப்பது, குண்டுகளால் சிதைக்க முடியாத குழந்தைப் பருவத்தின் கனவுகளுக்கும் மனிதநேயத்திற்கும் கதை எழுப்பும் அமைதியான அஞ்சலியாக நிற்கிறது.

உளுந்து வடையின் ஓட்டம் :

    இந்தக் கதை ஒரு உளுந்து வடையின் பயணத்தைச் சொன்னாலும், சுதந்திரத்தின் பரவசத்திற்கும் அதன் எல்லைகளுக்கும் இடையேயான விளையாட்டான உரையாடலாக மாறுகிறது.

பாடிக்கொண்டே உலகைச் சுற்றும் வடை, குழந்தை மனத்தின் எல்லையற்ற ஆர்வத்தையும் அலைந்து திரியும் கற்பனையையும் பிரதிபலிக்கிறது.

கதை முழுவதும் பின்னப்பட்டுள்ள பாடல்கள், நாட்டுப்புறக் கதைகளின் வாய்மொழி மரபை உயிர்ப்புடன் மீட்டெடுக்கின்றன.

இறுதியில் எவ்வளவு தூரம் உருண்டாலும் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வருவது, பயணத்தின் மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் வட்டச் சுழற்சியையும் மென்மையாக நினைவூட்டுகிறது.

முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம் :

    நசீராவின் கடிதம் ஒரு சிறுமியின் தனிப்பட்ட துயரமாக மட்டும் இல்லாமல், போரால் சிதறடிக்கப்பட்ட எண்ணற்ற குழந்தைகளின் கூட்டு சாட்சியமாக மாறுகிறது.

கடவுள், பள்ளிக்கூடம், வீடு, தம்பி என அன்றாட வாழ்க்கையின் எளிய கனவுகள் கூட போரின் முன் எவ்வளவு நொறுங்குகின்றன என்பதை கதை இதயத்தைப் பிளக்கும் எளிமையுடன் பதிவு செய்கிறது.

“குழந்தைகள் இல்லாத உலகத்தில் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி, அரசியலுக்கும் மதத்திற்கும் அப்பால் மனிதகுலத்தின் மனசாட்சியை நேரடியாக விசாரிக்கிறது.

இது போருக்கு எதிரான ஒரு கதையல்ல; குழந்தையின் கண்ணீரை வரலாறு மறக்கக் கூடாது என்று எழுதப்பட்ட ஒரு அமைதியான குற்றப்பத்திரிகை.

சேவல் முட்டை :

    சேவலின் வெற்றி அதன் வலிமையில் இல்லை; ஆபத்தான சூழ்நிலையிலும் சிந்திக்கத் தெரிந்த அறிவில்தான் இருக்கிறது.

நம்பிக்கையையும் பேராசையையும் பயன்படுத்தி நரியை ஏமாற்றும் சேவல், தந்திரத்தை எதிர்கொள்ள சில நேரங்களில் புத்திசாலித்தனமே சிறந்த ஆயுதம் என்பதை உணர்த்துகிறது.

அறிவில்லாத ஆசை எவ்வளவு எளிதில் ஏமாறுகிறது என்பதையும் கதை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறது.

சிறுவர் நாட்டுப்புறக் கதையின் எளிமையில், “சமயோசித அறிவு உயிரைக் காக்கும்” என்ற வாழ்வியல் உண்மையை அழகாக விதைக்கிறது.

புத்தகம் பேசுது 

    இந்தக் கதை ஒரு புத்தகத்தைப் பற்றியது மட்டுமல்ல; வாசிப்பின் மூலம் திறக்கப்படும் எண்ணற்ற உலகங்களின் கதவுகளைப் பற்றியது.

பரிசுகளில் சாதாரணமாகத் தோன்றிய புத்தகமே, அபிக்கு மிகப் பெரிய சாகசத்தின் நுழைவாயிலாக மாறுகிறது.

புத்தகங்கள் காகிதமும் எழுத்துகளும் அல்ல; பறவைகளின் குரல், காடுகளின் மணம், புதிய உலகங்களின் அனுபவம் என்பதை கதை குழந்தை மனத்திற்கு நெருக்கமாகச் சொல்கிறது.

“ஒரு புத்தகத்தைத் திறப்பது, ஒரு புதிய உலகத்தைத் திறப்பதற்குச் சமம்” என்ற வாசிப்பின் மாயத்தை அழகாகக் கொண்டாடும் கதை இது.

கஞ்சராஜாவின் கணக்கு :

    இந்தக் கதை கஞ்சராஜாவின் பேராசையை நகைச்சுவையுடன் சித்தரித்தாலும், உழைப்பின் மதிப்பையும் கணிதத்தின் சக்தியையும் ஆழமாக வெளிப்படுத்துகிறது.

சிறியதாகத் தோன்றும் “ஒரு பைசா” கூட தொடர்ச்சியான வளர்ச்சியில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதை கதை சுவாரஸ்யமாகக் காட்டுகிறது.

தொழிலாளர்களின் கோரிக்கை வெறும் சம்பளப் போராட்டமல்ல; உழைப்புக்கு உரிய மரியாதையைப் பெறும் சமூக நீதிக்கான குரலாகவும் ஒலிக்கிறது.

நாட்டுப்புறக் கதையின் எளிமையில், பேராசையை வெல்வது வலிமை அல்ல; அறிவும் கணக்கும் என்பதை நினைவூட்டும் படைப்பு இது.

    இந்த 25 சிறார் கதைகளும் வெவ்வேறு உலகங்களைப் பேசினாலும், அவற்றின் மையத்தில் இருப்பது மனிதநேயம், இயற்கை, கற்பனை, சமத்துவம், மற்றும் நம்பிக்கை என்பவையே.

    யானை பறப்பதிலிருந்து விதையின் பயணம் வரை, வழி தவறிய கோழிக்குஞ்சிலிருந்து போரால் பாதிக்கப்பட்ட குழந்தை வரை, ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கு உலகத்தை ஆச்சரியத்தோடும் கருணையோடும் பார்க்கக் கற்றுக்கொடுக்கிறது.

    இந்தக் கதைகள் அறிவுரைகளை நேரடியாகச் சொல்லாமல், விலங்குகள், பறவைகள், விதைகள், புத்தகங்கள், மற்றும் குழந்தைகளின் அனுபவங்கள் வழியாக வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை இயல்பாக விதைக்கின்றன.

    இயற்கையைப் பாதுகாப்பது, பிற உயிர்களை மதிப்பது, அறிவை வளர்த்துக் கொள்வது, அநீதியை எதிர்ப்பது, மற்றும் கனவுகளை கைவிடாமல் இருப்பது போன்ற மதிப்புகளை இக்கதைகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

    சில கதைகளில் பறவைகள்,விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடி, கொடிகள் இவற்றின் எண்ணிக்கைகளை வாசிக்கும் போது இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது மிக முக்கியம் என்று தோன்றியது.

    மொத்தத்தில், இவை வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல; குழந்தைகளின் மனதில் கேள்விகளையும் கருணையையும் கற்பனையையும் விதைத்து, நல்ல மனிதர்களாக வளரச் செய்யும் இலக்கிய விதைகள்.

வெளியீடு - இந்து தமிழ் திசை

விலை - 150/

தொடர்புக்கு - 7401296562 / 7401329402

நன்றி - புக் டே

Tuesday, 16 June 2026

நம் குழந்தைகள் விளையாடட்டும்

 

நம் குழந்தைகள் விளையாடட்டும் 





1.  விலங்குகள், பறவைகள், பூச்சிகள் முதல் மானுட சமூகம் வரை கூடி வாழ்தல் என்பது இயற்கையின் உள்ளுணர்வினால் விளைந்த செயல்பாடு.

2.   கூடி வாழ்தலில் தான் ஒரு சமூகம் உயிர்த்திருக்கிறது. கூடி வாழ்வதற்கான,  உளவியல் பயிற்சிகளை, குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டின் மூலம் மானுட இனம் சமூகத்துக்குப் பயிற்றுவிக்கிறது.

3.  விளையாட்டு குழந்தைகளின் மனதுக்கும், உடலுக்கும் உரமூட்டுவதாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக சமூகத்தின் அங்கத்தினராக குழந்தைகள் உருவாக ஒவ்வொருவரையும் பண்படுத்துகிறது.

4.  கூடி விளையாடும் விளையாட்டுகளில் குழந்தைகளின் மனம் களிப்புறுகிறது. எந்த கட்டுப்பாடுமின்றி தன்னைத் தானாகவே உணர்ந்து, தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்துகிறார்கள்.

5.  புறஉலகின் எல்லா நெருக்கடிகளிலிருந்தும், பெற்றோர்களின், ஆசிரியர்களின், வீட்டுப்பாடச்சுமையின், மதிப்பெண் பூதங்களிலிருந்து விடுபட்டு தங்களுடைய இயல்பான படைப்பூக்க உணர்வை (CREATIVE) மீட்டெடுக்கவே குழந்தைகள் விளையாடுவதற்கு பேராவல் கொள்கின்றனர்.

6.  படைப்பூக்க உணர்வை மீண்டும் மீண்டும் மீட்டெடுப்பதின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அனுபவிக்கவே விளையாடத் துடிக்கின்றனர்.

7.  அத்துடன் சமூகத்தில் அவர்கள் இயைந்து வாழ விளையாட்டுகள் அவர்களை பண்படுத்துகிறது. தன் வயதொத்த குழந்தைகளோடு கூடி விளையாடும்போது கூட்டுச்செயல்பாட்டுக்கான விவேகமும், கூட்டுணர்வும் ஏற்படுகிறது.

8.  கூடிச்சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்யும்போது  ஒரு தார்மீக நெருக்கமும், செய்யும் செயலில் அழகியலும் தோன்றுகிறது.

9.  விளையாடும் கூட்டுச்செயல்பாட்டிலேயே தனித்துவம் காணும் தனிப்பாணியும் உருவாகிறது.

10.     கூட்டுச் செயல்பாட்டை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பும் குழந்தைகளிடம் இயல்பாகவே தோன்றுகிறது.

11.     இந்தத் தலைமைப்பண்பின் தனித்தகுதியாக எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்கிற திறன் வளர்கிறது.

12.     ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பொறுமை, ஒருவரையொருவர் மதிக்கும் பண்பு, வளர்கிறது.

13.     குழந்தைகளிடம் அன்பும், நட்பும் பெருகித் தழைக்கிறது. விளையாட்டுச் சண்டை என்பது விளையாட்டுச் சண்டையாகவே முடிந்து விடுகிறது.

14.     குழந்தைகளால் நீண்ட நேரத்திற்குக் கோபத்தையும், வெறுப்பையும், கசப்பையும் வளர்க்க முடியாது. சிறிது நேரத்திலேயே பழம்விட்டு சேர்ந்து கொள்வார்கள். யார் பக்கம் நியாயம் என்று தர்க்கரீதியாக யோசிக்காமல் யார் அதிகமாகப் புண்பட்டிருக்கிறார்களோ, யார் அதிகம் வருத்தமடைந்திருக்கிறார்களோ அவர்களுக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

15.     குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து இயைந்து வாழ்கிற பண்பு விளையாட்டின் மூலமே கிடைக்கிறது. இதற்கேற்ப இருவர் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து பத்துபேர் விளையாடும் விளையாட்டுகள் வரை அந்தந்தக் கால தட்பவெப்ப நிலைமைகளுக்கேற்பவும், அந்தந்தப் பகுதி மண், வளம், வாய்ப்புகளுக்கேற்பவும் இருக்கின்றன.

16.      கிட்டிப்புள், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, கிளியாந்தட்டு, தாச்சி, ஓடு அடுக்குதல், எறி பந்து, கல்லாமண்ணா, பாண்டி, கள்ளன்போலீசு, கபடி, மரம் ஏறுதல், பச்சைக் குதிரை, செதுக்குமுத்து, குலைகுலையா முந்திரிக்கா, போன்ற ஓடி ஆடும் விளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், ஆடுபுலி, ஒத்தையா ரெட்டையா, போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளுமாய் எத்தனை எத்தனை விளையாட்டுகள்! காலத்திற்கும், பருவத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற மாதிரியான உள்விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகை வகையாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இப்போது காணவில்லை.

17.     மேலே குறிப்பிடப்பட்ட விளையாட்டுகள் எதுவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில்லை. ஆனால் பெரிய அளவில் பொருளாதார வசதி தேவைப்படாத விளையாடுபவர்களின் நோக்கத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கக்கூடிய விளையாட்டுகள்.

18.     விளையாட்டுகளில் ( உள்விளையாட்டாக இருந்தாலும் சரி, வெளிவிளையாட்டாக இருந்தாலும் சரி) ஏற்படும் வெற்றி, தோல்விகள், குழந்தைகள் மனதில் நீண்டகாலம் நிற்பதில்லை. அவை குழந்தைகளின் மனதை பிற்கால சமூகவாழ்க்கைக்குத் தயார்படுத்துகின்றன.

19.     விளையாட்டுகள் லட்சியவெறியையும், விடாப்பிடியான மனநிலையையும் கூட உருவாக்குகின்றன.

20.     விளையாட்டின் வெற்றி, தோல்விகளை ருசித்துப்பழக்கப்பட்ட குழந்தைகள் சமூகவாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனைப் பெறுகின்றனர்.

21.     தற்கொலை, வன்முறைச்சிந்தனை, தலைதூக்காமல் தடுக்க விளையாட்டு உதவுகிறது.

22.     மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற வீடியோ கேம்ஸிலும், கம்யூட்டர் கேம்ஸிலும் உள்ள பிரத்யேகமான தன்மை குழந்தை தன்னைப்போன்ற இன்னொரு குழந்தையோடு விளையாடுவதைத் தடுக்கிறது. அது பிரதிமையோடு விளையாடத் தூண்டுகிறது.

23.     அந்தக் காட்சிப் பிரதிமைகள் எப்படி இருக்கின்றன? கார்பந்தயம், வேட்டையாடுதல், பைக் ஓட்டுதல் போன்ற குழந்தையின் மனநிலைக்கும், யதார்த்தத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லாத விளையாட்டுகளே குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.

24.     அந்த விளையாட்டுகளில் எந்தக் கூட்டுச் செயல்பாடும் இல்லை. விட்டுக்கொடுத்தல் இல்லை. தலைமைப்பண்பு தேவையில்லை. அன்போ, நட்போ, பாசமோ, தேவையில்லை. அதில் ஒரே குறிக்கோள் தான். வெற்றிபெறவேண்டும் நிறைய்ய பாயிண்டுகள் எடுக்கவேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். தனிமையில் விளையாடும் இந்த விளையாட்டு குழந்தையிடம் பிடிவாதத்தை வளர்க்கிறது. சுயநலவெறியை கிளப்புகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.

25.     கார் பந்தயம் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை எதிர்ப்படும் தடைகளை முறியடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறான். சாலையோரத் தடுப்பைத் தகர்க்கிறான். விளக்குக் கம்பங்களை வீழ்த்துகிறான். எந்த சிக்னலையும் மதிக்காமல் விரைகிறான். குறுக்கே எதிர்ப்படும் எவரையும் காரை ஏற்றிக் கொல்கிறான். சில நேரம் பிளாட் பாரத்தில் நடந்து போய் கொண்டிருப்பவர்கள் மீதும் காரை ஏற்றுகிறான். அது பிரதிமையே என்றபோதிலும் குழந்தையின் முகத்தில் ஒரு ஆபத்தான தீவிரமும், வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியையும்.ஏற்படுத்துகிறது.

26.     எதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளான இன்றையக்குழந்தைகளை விளையாட விடுங்கள். அப்போதுதான் நலமான சமூகம் உருவாகும்.