Sunday, 19 July 2026

உயிரின் ஆசை

 

சதுரங்க வாழ்க்கை 4

உயிரின் ஆசை



அலைபேசியில் கதிர் பேசும்போதும் காற்றின் அலைவரிசை போல கீச் கீச்சென்றது. கதிருக்கு ஏற்கனவே மெலிந்த குரல். இப்போது மருத்துவத்துக்குப் பிறகு இன்னும் மெல்லிசாக துரும்பாகி விட்டது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே கேட்கும் அளவுக்கு சக்தியிழந்த காற்றை ஊதுவதைப் போலக் கேட்டது. சில வார்த்தைகள் கேட்கவேயிலை.  கேட்காத வார்த்தைகளை நானே உருவாக்கி அந்த கோடிட்ட இடத்தை நிரப்பினேன்.

அவனிடம் பேசிய பிறகு இன்னும் வேகமாக வேலையை முடுக்கினேன். இந்த அறிக்கைகள் தயாரிப்புகள் எல்லாம் பொய்யானது ஜோடிக்கப்பட்டது என்று கீழே வேலை பார்க்கும் கிளார்க்கிலிந்து மேலே அமைச்சர் வரை தெரியும். ஏன் எதிர்க்கட்சியினருக்கும் தெரிந்த பரம ரகசியம். ஆனாலும் வேறு வழியில்லை. ஏற்கனவே போன வருடம் எடுத்த பட்டியலோடு புதிதாக சில பெயர்களைச் சேர்த்தோ, சில பெயர்களை நீக்கியோ அரசாங்கம் விரும்புகிறபடி புதிய பட்டியலை மெயில் பண்ண வேண்டும். இது காலங்காலமாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. என்ன முந்தைய காலத்தில் பேப்பர் ஒர்க்காக இருக்கும். ஃஃஃபைல்களாக மாறி அலுவலக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இப்போது மின்னஞ்சலாக மாறியிருக்கிறது. வித்தியாசம் அவ்வளவு தான்.

அப்படியும் எல்லாப்பஞ்சாயத்துகளிலிருந்தும் பட்டியலைத் தொகுத்து அனுப்புவதற்கு இரவு எட்டுமணி ஆகிவிட்டது. அலுவலகம் விட்டு வெளியில் வந்து முகைதீன் பாய் கடையில் ஒரு டீ குடித்து விட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருக்கும் போது தான் கதிர் வரச்சொன்னது ஞாபகம் வந்தது. உடனே சிகரெட்டை அணைத்துவிட்டு ஒரு மிட்டாயை வாயில் போட்டு ஒதப்பிக் கொண்டு சிகரெட் வாசனையை அடக்க முயற்சித்தேன். என்னுடைய டி.வி.எஸ். எக்செல் வண்டியை முடுக்கிக் கிளம்பினேன்.

கதிர் வீட்டில் விளக்கெரிந்தால் சந்திப்போம். இல்லையென்றால் அப்படியே திரும்பி விடலாம் என்று யோசித்தபடியே போய்க்கொண்டிருந்தேன். அவன் கோவில்பட்டியின் புறநகர் பகுதியில் வீடு கட்டியிருந்தான். இன்னும் அதிகமான வீடுகள் அந்தப்பகுதியில் வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்திருந்தன. அதனால் அவன் வீட்டுக்கு ஒரு பரந்த மைதானத்தின் குறுக்காகவே செல்ல வேண்டும். நான் அந்த மைதானத்தின் முகப்பை அடைந்த போதே தூரத்தில் கதிரின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். கொஞ்சம் அயர்ச்சியாக இருந்தது. இவ்வளவு நேரம் அலுவலகத்தில் மல்லுக்கட்டியதால் உடலும் மனதும் சோர்வாக இருந்தது. விளக்குகள் எரிவதைப் பார்த்ததும் வலிந்து உருவாக்கிய உற்சாகத்தோடு அவன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினேன். புது வீட்டின் கருக்கு இன்னும் குலையவில்லை. தர்சனா இல்லம் என்ற எழுத்துகள் வீட்டு முகப்பில் பெரிய எழுத்துகளில் மிளிர்ந்தது. வாசல் இரும்புக்கதவில் கட்டிப்போட்டிருந்த ரோசி குலைக்கும் சத்தம் கேட்டதும் வாசலுக்கு கதிரினுடைய அப்பா சண்முகநாதன் ஓடி வந்தார்.

ஏய் ரோசிசும்மா இரிஎல்லாம் நம்மாளு தான்நீங்க வாங்கதம்பிவாங்க…”

என்றார். நான் சற்று தயங்கினேன். அவர் உடனே ரோசியைக் கட்டியிருந்த சங்கிலியை கழற்றி பின்பக்கமாக இழுத்துக் கொண்டு போனார். ரோசி குலைப்பை நிறுத்தவில்லை. ஆனால் குலைப்பின் வேகம் குறைந்திருந்தது. நான் வாசலில் தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன். பின்பக்கத்தில் ரோசியைக் கட்டிப்போட்டு விட்டு வந்த கதிரினுடைய அப்பாவிடம்,

  நீங்க எப்படி இருக்கீங்கப்பா?..கதிர் எப்படி இருக்கான்?… ”

அவர் ஏதோ சொல்ல வந்தவர் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.

உள்ளே வாங்க..”

வீட்டுக்குள் எல்லோரும் என்னை வரவேற்கக் காத்திருந்தார்கள். வராந்தாவில் கதிர் அவனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அருகில் அவனுடைய மனைவி செண்பகம், அவனுடைய மகள் சுஹானா நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் கதிரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு லேசான பயம் வந்தது. ஒருவேளை மறுபடியும் உடம்புக்கு ஏதாவது……. ஆனால் அதற்கு என்னைக் கூப்பிட வேண்டியதில்லையே. நான் சிரித்துக் கொண்டே,

என்ன கதிர் எப்படிர்ரா இருக்கே…” என்று கேட்டேன்.

என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் சிறு வெளிச்சம் தோன்றி மறைந்தது. அவன் சிரிப்பதான பாவனையில் உதட்டை நெளித்துக் கொண்டே,

 பரவால்லஉங்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று சொன்னான். அதைச் சொல்வதற்குள் அவன் சிரமப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அதுவரை பேசக்கூடாது என்று அடக்கி வைத்த மாதிரி நின்று கொண்டிருந்த செண்பகம்,

காலையிலிருந்து சரவணன் கிட்டே பேசணும்.. சரவணன் கிட்டே பேசணும்.. அப்படின்னு சொல்லிக் கிட்டேயிருக்காரு….  நாங்க என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கிறாருண்ணாஉங்க கிட்ட தான் பேசணுமாம் என்று சொன்னாள்.

 நான் அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே,

என்னடாஎன்று கேட்டேன்.

ஒரு கணம் அந்தச் சாய்வு நாற்காலியிலிருந்தது கதிர் இல்லை. வேறு யாரோ போல இருந்தது. என்னுடைய மனம் திடுக்கிட்டது. அவனுடைய பழைய உருவத்தின் சாயல் மட்டும்தான் அங்கே இருந்தது. அவனுக்குப் பிடித்த பொடிக்கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தான். எப்போதும் கட்டம் போட்ட துணியை எடுத்துத் தான் சட்டைகள் தைத்தான். அவன் சிறுவயதாக இருக்கும்போது பார்த்த சுமதி என் சுந்தரி படம் முழுவதும் சிவாஜிகணேசன் கட்டம் போட்ட சட்டைகளைப் போட்டிருப்பார். கதிர் சிவாஜி ரசிகன். அன்று முதல் கட்டம்போட்ட சட்டையில் தான் அவனைப் பார்க்கமுடியும். கட்டம் போட்ட சட்டை இல்லையென்றால் அது கதிரில்லையென்று அடித்துச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு கட்டங்களின் மீது அவனுக்குப் பைத்தியக்கார மனநிலை இருந்தது. இப்போது அவன் அரக்குக்கலரில் வெள்ளைக்கட்டங்கள் போட்ட சட்டையணிந்திருந்தான்.

அது ஒரு காலத்தில் அவனுக்குச் சரியாக இருந்திருக்கும். இப்போது சின்னப்பிள்ளைகள் தொளதொளவென இருக்கும் அப்பாவின் சட்டையைப் போட்டுக் கொண்டு கைகளை விரித்துத் திரிவதைப் போல அவனுடைய சட்டை உடலின் மீது கொடித்துணி போல ஃஃபேன் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. முன்னைப்போலவே பவுடர் போட்ட முகத்துடனிருந்தான். ஆனால் அதில் நேர்த்தியில்லை. ஆங்காங்கே சில பவுடர்திட்டுகள் தேமல் போல தெரிந்தன. பவுடர் போடாத கதிரை யாரும் பார்த்திருக்க முடியாது. கல்லூரி காலத்தில் அவனுடைய வீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணியைச் சேமித்து ஸ்னோ, பவுடர், கைச்சீப்பு வாங்கி வைத்திருப்பான். அவனுடைய முகத்தில் சில கரும்புள்ளிகள் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியுமளவுக்கு இருந்தன. ஆனால் அந்தக் கரும்புள்ளிகளுக்காக அவன் அவ்வளவு கவலைப்படுவான். ஒருநாளைக்கு பத்து தடவையாவது முகம் சோப்பு போட்டு முகம் கழுவுவான். அவன் முகம் துடைப்பதைப் பார்க்கும்போது முகத்தின் தோல் தனியாகக் கழன்று வந்து விடுமோ என்று கூடத் தோன்றும். டாக்டரிம் சென்று அந்தக் கரும்புள்ளிகள் மறைய மருந்துகள் கேட்டான். அவர்கள் கொடுத்த களிம்பினைப் போட்டுப்பார்த்தான். எதுவும் செட்டாகவில்லை. கடைசியில் லக்மே காலமைன் என்ற முகப்பூச்சை நாடகக்கலைஞர்கள் போட்டுக் கொள்வதைப் போலப் போட்டுக் கொண்டு திரிந்தான். அவனுடைய நிறம், உயரம், உருவம் எல்லாவர்றின் மீதும் ஒரு அதிருப்தி இருந்த து. கண்ணாடியைப் பார்த்து விட்டால் போதும். அவனையறியாமல் இம்பல்ஸிவ்வாகப் போய் நின்று விடுவான்.

இன்னமும் அதன் ரேகைகள் மறையவில்லை. அவனுக்கு அருகிலேயே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுமிருந்தது. எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனைப் போல கிரில் கம்பிகள் வழியே தெரிந்த இருளை வெறித்துக் கொண்டிருந்தான்.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதே நேரமாகி விட்ட து. வீட்டில் ந்தினிக்குப் பதில் சொல்லவேண்டும். காலையில் சீக்கிரமே ஆபீஸ் போகவேண்டும். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பி.டி.. லஞ்சப்பிசாசாக இருக்கிறான். அவன் வருகைப்பதிவேட்டில் மட்டும் தான் இலவசமாகக் கையெழுத்து போடுவான்.  இப்படி ஏதேதோ என் மண்டையில் போட்டி போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன. ஒரு கணம் தலையை உலுக்கிக் கொண்டு அவனைப் பார்த்தேன்.

 அவன் கொஞ்சம் பெருமூச்சு வாங்கினான். பின்னர் திரும்பி சுற்றியிருந்த எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான். அந்தப்பார்வையில் என்ன புரிந்ததோ எல்லோரும் வீட்டுக்குள் போய் விட்டார்கள். கதிர் என்னிடம் திரும்பினான்.

எனக்கு ஒரு சந்தேகம்இந்த நோய் திரும்ப வருமா? நிரந்தரமா குணப்படுத்த முடியுமா? வேற மருத்துவ முறைகள் ஏதாச்சும் இருக்காநீ முன்னாடியே ஹோமியோபதி பற்றிச் சொல்லியிருக்கே…. அதான் உங்கிட்ட கேப்பமேன்னு வரச்சொன்னேன்….சரவணாஎனக்குப் பயமாருக்கு….”

என்று சொன்னான். அவனுடைய முகம் இருட்டாயிருந்தது. ஏற்கனவே இருந்த கரும்புள்ளிகள் இப்போது இன்னும் பெரிதாகத் தெரிந்தன. அவன் சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு அருகிலோ அல்லது பின்னாலோ யாரோ நின்று கொண்டிருப்பதாக அரிச்சல் அவனுக்குத் தோன்றியது போலும். கிரில் கம்பிகளில் அவனுடைய நிழல் கோடாகத் தெரிந்தது. அதைத்தான் அவன் திரும்பிப்பார்த்தானோ என்னவோ. எனக்கு எதுவும் தெரிய வில்லை. ஆனால் வேறொரு சுவாசத்தை உணரமுடிந்தது. அந்த சுவாசக்காற்றில் அழுகிய பழவாடை வீசியது. எனக்கு கதிரே அந்நியன் போலத் தெரிந்தான். அந்நியனின் இருப்பு ஏற்படுத்தும் அசௌகரியத்தை நான் உணர்ந்தேன். கதிர் அந்த வெளிச்சத்தில் ஒரு நிழலைப் போல ஆடிக்கொண்டிருந்தான். எனக்கு அவனைப் பார்க்கும்போது நோயினால் வாடி வதங்கி வற்றலாகியிருந்த உடலின் சக்தியெல்லாம் கண்களில் தேக்கி வைத்திருந்தான் என்று தோன்றியது. கண்கள் மட்டும் சிறுசுடர்போல ஓளிர்ந்தது. உள்ளே பொந்துகளில் ஒடுங்கியிருந்த அந்தக் கண்களில் வாழ்வதற்கான வேட்கை படபடத்துக்  கொண்டிருந்தது. நான் தொண்டையைச் செருமிக் கொண்டேன்.

ஏண்டா.. அப்படி நினைக்கிறேஎல்லா நோய்களும் திரும்பத் திரும்ப வராது.. அதோடு உன்னுடைய மெடிகல் ரிப்போர்ட்டில் நோய் குணமாகி விட்டதாகத் தான் எழுதியிருக்கு.. வேணுமின்னா மாற்று மருத்துவத்தையும் பார்க்கலாம்நீ தான் முடிவு பண்ணனும்..”

என்று சொல்லும்போது அவன் கண்களைப் பார்க்கவில்லை. அலைபாய்ந்த கண்களை வீட்டுக்குள் திருப்பினேன். உள்ளே எந்த அரவமுமில்லை. கதிர் நான் சொன்னதைக் கேட்டு முகத்தில் எந்தப் பிரதிபலிப்பையும் காட்டவில்லை. இன்னும் ஏதோ அவனுக்குத் தேவையாக இருந்தது. நான் பேசத் தொடங்கினேன்.

கதிர்சில அடிப்படையான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உயிருள்ள அனைத்துக்கும் நலக்குறைவு ஏற்படும். அந்த நலக்குறைவு என்பது ஒருவகையில் நாம் உயிருடன் இருப்பதை நமக்கே உரக்கச் சொல்லும் அடையாளம். உண்மையில்  அதற்காக நம் உடலுக்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்.. உடல் பேசும். மனம் அல்லது மூளை மட்டும் தான் சிந்திக்குமென்றில்லை கதிர். நம்முடைய உடலும் சிந்திக்கும். நம்முடன் உரையாடும். உன் உடல் அப்படி உன்னுடன் உரையாடியிருக்கிறது. அந்த உரையாடலை நீ கவனித்து அதற்குப் பதில் சொல்லியிருக்கிறாய்உன்னுடைய பதிலை உடல் ஏற்றுக் கொண்டதா? இல்லையா? இனிமேல் தான் தெரியும்.. “

என்று சொல்லிவிட்டு நிறுத்தினேன். கதிர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒரு ஏக்கம். இன்னும் சொல்லு என்பதான ஏக்கம். எப்போதுமே நலமாக இருக்கும்போது எல்லாருமே வலிய வலிய வந்து பேசுவார்கள். வேண்டாத நேரங்களிலும் பேசுவார்கள். ஆனால் மனமும் உடலும் சோர்வுற்ற நோயராக இருக்கும்போது யாருமே பேசமாட்டார்கள். அந்தத் தனிமைக்காட்டில் திக்குத்திசை தெரியாமல் அலைகிற மனதை என்ன சொல்லித் தேற்றமுடியும்? திடீரென எனக்குள் ஒரு குறளி பேசுவது போல அந்த த் தனிமைக்காட்டிலிருந்து கதிரை ஏன் மீட்க க் கூடாது? என்று தோன்றியது.

கதிர்..உடலின் உரையாடல் தான் வலி, வேதனைகளை உருவாக்குகிறது..  உடலுக்குள் நடக்கும் மாற்றங்களைச் சொல்லும் மொழி. அதைத் தான் நாம் நோய்கள் என்கிறோம்இந்த பூமியில் தோன்றும் உயிர்களின் இறுதி இலட்சியம் என்னவாக இருக்கும்? சொல்லேன்.. “

என்று சொல்லி நிறுத்தினேன். அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கவனத்தையெல்லாம் என் வாயிலிருந்து அடுத்துவரப்போகும் சொற்களை வரவேற்பதற்காகக் குவித்திருந்தான். என்னுடைய கேள்வியால் கொஞ்சம் குழம்பியது போலச் சிரித்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. மெல்லத் தலையாட்டினான் மேலே சொல்லும்படி.

நான் உற்சாகமாகி விட்டேன். எனக்கு எப்போதுமே உரையாடுவதில் விருப்பம் அதிகம். உரையாடும்போது நம் சிந்திக்கும் திறன் தன் முழு வீச்சை எட்டுகிறது. தெரிந்ததும் தெரியாததும் அறிந்ததும் அறியாததும் புணர்ந்து நம்மை இதுவரை நாமே கண்டிராத புதிய வெளிகளுக்குக் கூட்டிச் செல்கிறது. அங்கே கிடைக்கும் புதிய தெறிப்புகள் புதிய சிந்தனைகளாக உருமாற்றம் கொள்கின்றன. குறைந்தபட்சம் புதிய சிந்தனைகளின் லார்வாக்களாவது கிடைக்கின்றன. இந்த லார்வாக்களை வளர்த்தெடுக்க அதற்குத் தீனி போட, கூட்டுப்புழுக்களாக மாறி அடைகாப்புக் காலம் முடிந்தபிறகு புத்தம் புதிய வண்ணத்துப்பூச்சிகளாக உருமாற்றம் அடையும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்காகவே உரையாட வேண்டும். எப்போதும் இப்படி நடப்பதில்லை. பல சமயம் உரையாடல்கள் குறைப்பிரசவமாகவோ, மேல்மண் விதையாகவோ, குழப்பமான கனவாகவோ, சொந்த உணர்ச்சித் ததும்பல்களாகவோ மாறிவிடும்.

அத்துடன் உரையாடல் நாம் மனிதர்கள் என்பதை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும் உயிரியல்பு. மனதை ஆற்றுப்படுத்தும் சிகிச்சை. கிரேக்கத் தத்துவங்கள் உருவானது உரையாடல் வழி தான். ஏன் இந்தியாவிலும் பௌத்தம், சமணம், சாங்கியம், ஆசீவகம், வேதம், உபநிடதம் எல்லாம் உருவானது உரையாடல் வழி தானே. இப்படி என் மனம் எங்கெங்கோ பாய்ந்து கொண்டிருந்தது. வேலையில்லாமல் சுற்றித்திரிந்த  காலத்தில் கொஞ்சம் இலக்கியம், தத்துவம், அரசியல், மருத்துவம் சம்பந்தமான நூல்களைப் படித்து விடிய விடிய விவாதித்ததின் பலன் இன்றும் புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது கதிரும் எங்களுடனிருந்தான் என்றாலும் அவனுக்கு உரையாடலில் ஆர்வம் கிடையாது. வாசிப்பது, விவாதிப்பது, உரையாடுவது எல்லாம் நேரப்போக்கு என்றே கருதினான்.

ஆனால் எனக்கு அது தான் நான் உண்மையாகவே உயிருடன் இருப்பதற்கான அறிகுறி என்று நம்பினேன். அதனால் சமயம் கிடைக்கும் போது வாசிக்கவும் பொருத்தமான நண்பர்கள் கிடைக்கும்போது உரையாடவும் அதன் மூலம் இந்த வாழ்வின் உண்மையை நோக்கி ஒரு அங்குலமாவது நெருங்கிச் செல்வதற்கு முயற்சிக்கிறேன். அப்படி உண்மை, பொய்மையென்றெல்லாம் எதுவும் கிடையாது என்று உமாசங்கர் சொல்வான். இந்த வாழ்க்கையின் அர்த்தம் உயிருடன் இருப்பது மட்டும் தான். சந்திரமௌலியோ மிகச் சாதாரணமாக, “ டேய்.. வாழ்க்கை ஒரு வெங்காயம்..” என்பான்.

பின்னால் ஏதோ சத்தம் கேட்டது.

அண்ணே டீ குடிப்பீங்கள்ள..”

எனக்கு அந்த நேரத்தில் மிக மிகத் தேவையாக இருந்தது.

செண்பகம் இரண்டு பீங்கான் கோப்பைகளில் குடிப்பதற்காக எனக்கு டீயும் கதிருக்குப் பாலும் கொண்டு வந்தாள். கதிர் அந்தக் கோப்பையை இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். நான் கோப்பையைக் கையில் வாங்கிக் குடிக்க ஆரம்பித்து விட்டேன். மெலெழுந்து வந்த தாகமும், பசியும், கொஞ்சம் அமைதியாயின. கதிர் ஒரே ஒரு மடக்குக் குடித்து விட்டு அப்படியே கோப்பையை முன்னாலிருந்த டீப்பாயின் மீது வைத்தான்.

அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் என்னுடைய டீயைச் சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு மிடறும் என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது. என் முகத்தில் புன்னகைக்கு முன்வரும் வெளிச்சம் தோன்றியது. ஏதோ உறுத்துவதுபோல நிமிர்ந்து பார்த்தேன். கதிருடைய பார்வையின் கூர்மை என்னைத் துளைத்துக் கொண்டிருந்தது. நான் நிமிர்ந்து

நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலியே.. “

என்று அவனையும் உள்ளே இழுத்தேன். அவன் சிரிக்க முயற்சித்துக் கொண்டே,

தெரியலடா.. நீயே சொல்லு..” என்று அவசர அவசரமாகச் சொன்னான். அப்போது அவன் முகத்தில் என்னை விட்டு விடக் கூடாது என்ற எண்ணமே இருந்தது.

இந்து பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களின் அடிப்படை லட்சியம் இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒண்ணு இன்பமாக இருக்கவேண்டும். இன்பமென்றால் அனைத்துவகையான இன்பமும் என்று வைத்துக் கொள்ளலாம். உணவு, இருப்பிடம், உறக்கம், இணைசேருதல், இப்படி எல்லாம் உயிரின் உள்ளுணர்வுகளின் வழிகாட்டுதலில் நடப்பவை.. பகுத்தறிவுள்ள நாம் இந்த அடிப்படைகளை மேலும் வளர்த்திருக்கிறோம்.. கலை, இலக்கியம், அறிவியல், புதிய கண்டுபிடிப்புகள், சமூக மாற்றம், கொள்கை, லட்சியம், என்று நம்முடைய எல்லைகளை விரித்திருக்கிறோம். உயிர்களின் இரண்டாவது அடிப்படை தன்னுடைய பரம்பரையை உருவாக்குவது. தன்னுடைய தனித்துவமான மரபணுக்களின் தொடர்ச்சியை இந்த பூமியில் நிலைபெறச் செய்வது. இதை எந்த உயிரும் தன்னுணர்வுடன் செய்வதில்லை. இணைவிழைச்சின் வழியே இயற்கை தந்திரமாக இதைச் செய்கிறது. எனவே தான் மனிதர்கள் மட்டுமல்ல அனைத்துயிர்களும் பசிக்காவும் இணைவிழைச்சுக்காகவும் வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்றன….. ”

கொஞ்சம் மூச்சு வாங்கினேன். கதிர் எதிரே தெரிந்த சுவரைப் பார்த்தான். சுவரில் ஒரு பல்லி இன்னொரு பல்லியை விரட்டிக் கொண்டிருந்தது. நானும் அதைப் பார்த்தேன். கதிரின் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு. பல்லி சென்ற திசைகளில் அவனுடைய கண்களும் அலைபாய்ந்தது. நான் சொன்னதையெல்லாம் கேட்டானா? குழப்பம் தலைகாட்டத் தொடங்கியபோது வேகமாக ஓடிக் கொண்டிருந்த பல்லி திடுமென நின்றது. பறந்து வந்து உட்கார்ந்த ஒரு பூச்சியை லபக்கென்று விழுங்கியது.

பசி எல்லாத்தையும் விட முதன்மையானது.. இல்லையா சரவணா! “

என்று முணுமுணுத்தான் கதிர்.

 

( தொடரும் )