Saturday, 4 April 2026

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?

 

1.          பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?

உதயசங்கர்

    பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட அந்தக் கதைகளைக் சிறார்களுக்கானது தான் என்று நம்புகிறார்கள். பஞ்ச தந்திரக்கதைகளை அப்படியே பிரதியெடுத்து நூற்றுக்கணக்கான புத்த கங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நூலகங்களையும் அதை தன்னுடைய சொந்தப்படைப்பாக் கணக்கிடும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த து பத்திருபது பஞ்ச தந்திரக்கதைகள் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 பஞ்ச தந்திரக்கதைகளின் தோற்றம்

 பஞ்ச தந்திரக்கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாய்மொழிக்கதைகளாக இருந்து கி.மு 2 நூற்றாண்டிலிருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் சமஸ்கிருதச் செய்யுள்களாக எழுதப்பட்டிருக்கலாமென்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காஷ்மீர் அல்லது தென்மேற்கு ராஜ்ஜியத்தின் அரசன் அமரசக்தி. அவருடைய மூன்று புதல்வர்களான பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி, ஆகியோர் கல்வியிலும் அரசியலிலும் நாட்டமில்லாமல் இருந்தார்கள். விஷ்ணு சர்மா என்ற எண்பது வயது முதியவர் ( இது புனைபெயராகவும் இருக்கலாம் ) அவர்களுக்கு அரசநீதி, அரசியல் சூழ்ச்சி, அரசியல் தந்திரம், அரசியல் உத்தி, அரசியல் ரகசியங்கள் ஆகியவற்றைப் போதிக்க விலங்குகளை உருவகமாக க் கொண்டு சொன்ன கதைகள் தான் பஞ்ச தந்திரக்கதைகள்.

ஐந்து அரச நீதிகளான, மித்ர பேதம் ( நட்புப் பிரிவினை ), மித்ர லாபம் ( நட்புப்பேறு ), காக்க கோலூகீயம் ( அடுத்துக்கெடுத்தல் ), லப்தப்பிராணசம் ( பெற்றதை இழத்தல் ), அபரீக்‌ஷீதாகாரகம் ( அடாவடியான செயல் ) இவற்றை அடிப்படையாக க் கொண்டே பஞ்ச தந்திரக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

ஐந்து பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளில் விலங்குகள் கதாபாத்திரங்களாக இருந்தாலும் அவை மனிதப்பெயரும் மனித குணமும், மனித சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாகவும்  சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

 இந்தக் கதைகள் வைணவ சமயத்தின் பிரதியாகக் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் இந்து சமயத்தின் அரசியல் சிந்தனைகளின் கருவூலமாகவே இருக்கின்றன.

பஞ்ச தந்திரக்கதைகள் கிட்ட த்தட்ட 200 விதமான பாடபேதங்களுடன் உலகமெங்கும் பரவியிருக்கிறது. எந்த ஒரு இட த்திலும் இந்தக் கதைகள் குழந்தைகளுக்கான கதைகளென்று குறிப்பிடப்படவில்லை.

விலங்குகளும் பறவைகளும் வருவதாலேயே குழந்தைகளுக்கான கதைகளென்று நம்பி இன்று வரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய நிலவுடமைச் சமூகத்தின் அரசியல் நீதி நெறிமுறைகளைச் சொல்லும் கதைகளை இப்போது குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்தக் கேள்வி பஞ்ச தந்திரக்கதைகளுக்கு மட்டுமானதில்லை. தெனாலிராமன், பீர்பால், மரியாதை ராமன், முல்லா கதைகள், யேசு கதைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கதைகளுக்கும் பொருந்தும்.

எனவே பஞ்ச தந்திரக்கதைகள் குழந்தைகளுக்கானதில்லை.

நன்றி - புக் டே.

Friday, 3 April 2026

ஏன் சிறார் இலக்கியம்?

 ஏன் சிறார் இலக்கியம்?

உதயசங்கர்



1. குழந்தைகள் பேசும் முன்பே பாடுகிறார்கள், நடக்கும் முன்பே ஆடுகிறார்கள் எழுதும் முன்பே வரைகிறார்கள் என்று பிலிசியா ராத் சொல்கிறார்.
2. கலையே மனித இனத்தின் ஆதாரமாக இருக்கிறது. அறிவியல், வரலாறு, என்று எந்த த்துறையை எடுத்துக் கொண்டாலும் கற்பனை தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது.
3. கற்பனை அல்லது புனைவு தான் இன்றுவரை வேறு வேறு பெயர்களில் மனிதர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
4. இன்னும் சொல்லப்போனால் ஹோமோ சேப்பியன்ஸின் கற்பனை மீதான நம்பிக்கை தான் அவனை மற்ற மனித குரங்கினங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
5. இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை மற்ற விலங்குகள் வாழும்போது மனிதனின் கற்பனை தான் கேள்விகளை உருவாக்கியது. அந்தக் கேள்விகள் தான் அவனைப் பகுத்தறிவுள்ளவனாக்கியது. இன்றுவரை அந்தக் கற்பனைக் கேள்விகள் தான் அவனுடைய நன்மைக்கும் தீமைக்கும் காரணங்களாக இருக்கின்றன.
6. இயற்கையாகக் கிடைத்த கல்லைக் கூர் தீட்டினால் வேட்டை இன்னும் சுலபமாகுமென்பதை முதலில் கற்பனையில் தோன்றியதனால் தான் யதார்த்த த்தை மாற்ற முடியுமென்ற நம்பிக்கை அவனுக்குப் பிறந்த து.
7. கலை இலக்கியத்தின் அடிப்படைப்பண்புகளாக மாற்றி யோசித்தல், உற்றுநோக்கல், உணர்ச்சிகளை உருவாக்குதல், உணர்ச்சிகளை மிகைப்படுத்துதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதலின் மூலம் மாயமான ஒரு யதார்த்த த்தை கற்பனை உருவாக்குகிறது.
8. அந்த மாய யதார்த்தம் தான் இன உணர்வு, மொழியுணர்வு, சாதியுணர்வு, மதவுணர்வு, தேசபக்தி, போன்ற கற்பனைகளை உருவாக்குகிறது. அது தமிழ்த்தேசியம், இந்திய தேசியம், மொழித்தேசியம், என்று மனிதர்களை ஆட்கொள்கிறது.
9. அனைத்துத் தேசியங்களும் கற்பனையானவை தான். ஆனால் மனிதர்கள் ஒரு சமூகமாக சேர்ந்து வாழ, தங்களுடைய இருத்தலைக் காப்பாற்ற, நியாயப்படுத்த இந்த மாய யதார்த்த த்தின் மீது வெறியூட்டுகிறார்கள்.
10. இன்னொரு வகையில் இந்த மாய யதார்த்தம் தான் மனிதர்களை ஒன்றிணைக்கிறது. ஒற்றுமைப்படுத்துகிறது. பாதுகாப்பு தருகிறது. ஆற்றுப்படுத்துகிறது. எழுச்சி கொள்ள வைக்கிறது. மாய யதார்த்த த்துக்காக உயிரையே மாய்த்துக் கொள்ள வைக்கிறது.
11. மனித சமூகமே இந்த மாய யதார்த்த த்தின் புதிர்ப்பாதைகளின் வழியே தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
12. எப்போது உபரி தோன்றியதோ, எப்போது தனியுடமைச் சிந்தனை தோன்றியதோ அப்போதிருந்து இந்த மாய யதார்த்த த்தைத் திட்டமிட்டு ஆளும் வர்க்கம் உருவாக்கத் தொடங்கிவிட்ட து. அதை மக்களிடம் பரப்பி அவர்களைத் தன்வசப்படுத்திச் சுரண்டலைத் தொடர்கிறது.
13. இந்தச் சுரண்டும் மாய யதார்த்தத்துக்கு எதிராக விமரிசனக்கண்ணோட்ட த்தை வளர்ப்பதும், புதிய மாய யதார்த்த த்தை உருவாக்கி அதை மக்களிடம் பரப்புவதும் தான் இப்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி.
14. இந்தப் பிரபஞ்சமும், பால்வெளிகளிகளும் லட்சக்கணக்கான சூரியன்களும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் எப்போதும் முடிவிலியாக இருக்கும் உண்மை கூட மாய யதார்த்த மாகத்தான் தோன்றுகிறது.
15. மாய யதார்த்தம் அல்லது கலை அல்லது கற்பனை அல்லது Believing in Nonsense இல்லையென்றால் மனிதன் அழிந்து விடுவான்.

Thursday, 2 April 2026

சிறார் இலக்கிய முயற்சிகள் வெற்றியடைந்திருக்கிறதா?

 அன்புத்தோழர் போஸ்கோவின் கேள்வி

இந்த முயற்சியை தொடங்குவதும், தொடர்வதும், எந்தளவு வெற்றி கிடைத்துள்ளது தங்களுக்கு..?
எப்படி இப்படியான ஒரு பெரு முயற்சி இங்கு...?
தோழருக்கு எனதன்பும் வாழ்த்தும்.
சரியா? கலை இலக்கிய ஆய்வு மய்யம், வடலூர்.





தோழருக்கு வணக்கம்.
சிறார் இலக்கியம் பற்றி ஒரு சிறு சலனம் உருவாகியிருக்கிறது என்று நம்புகிறேன். 2017 -ல் தொடங்கி சின்னச்சின்ன உரையாடல்கள், படைப்புகள் வழியே சிறார் இலக்கியத்தின் மீது கவனம் குவியத் தொடங்கியிருக்கிறது.
இதற்கு தமிழ்நாட்டு அரசின் முயற்சிகளும் முக்கியமான காரணம். குழந்தைகள் மீது அக்கறையும் அன்பும் கொண்ட பல ஆசிரியர்களும் காரணம்.
பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த தை விட இப்போது சிறார் எழுத்தாளர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.
குழந்தைகளே எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள்.
ஏராளமான பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள்.
சிறார் இலக்கியக்கருத்தரங்கங்கள் நடக்கின்றன.
அரசிடம் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறது.
வரும் தேர்தலில் கூட சிறார் இலக்கியக் கோரிக்கை சாசனம் அனைத்துக் கட்சிகளிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிறார் இலக்கிய விருதுகள் அதிகமாகியிருக்கின்றன.
சிறார் இலக்கிய விருதுகள் குறித்த சர்ச்சைகளும் அதிகமாகியிருக்கின்றன.
சிறார் இலக்கியம் என்றால் என்ன விலை என்று கேட்டுக் கொண்டிருந்த இலக்கிய உலகில் சிறார் இலக்கியப் புறணிகளும் அதிகமாகியிருக்கின்றன.
சிறார் இலக்கிய நூல்கள் லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் விற்பனையாகும் சூழல் உருவாக்கியிருக்கிறது.
உதாரணம் - ஆயிஷா, கயிறு, மாயக்கண்ணாடி, ஆதனின் பொம்மை, மரப்பாச்சி சொன்ன ரகசியம், ஒற்றைச்சிறகு ஓவியா , விழியனின் அனைத்து நூல்கள், சீர் பதிப்பகம் வெளியிடும் இளையோர் நூல்கள்,
அனைத்துப்பதிப்பகங்களும் சிறார் நூல்களைப் ( நூலக ஆணை சுலபமாகக் கிடைக்குமென்ற வணிக நோக்கமிருந்தாலும் )பதிப்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
கல்விப்புலத்தில் பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆய்வுப்புலத்துக்குள் நுழைந்திருக்கிறது.
ஆனால் இவையெல்லாம் கல்வீசிய குளத்தின் அலைகள் தான்
ஏனெனில் சிறார் இலக்கியத்தை பெரியவர்கள் வாசிக்க வேண்டியதில்லை என்ற பொதுப்புத்திச் சிந்தனை நீக்கமற நிறைந்திருக்கிறது.
காரணம் சிறார் இலக்கியம் எளிமையானது, அதிலிருந்து உணர்ந்து கொள்ள, அறிந்து கொள்ள எதுவுமில்லை என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.
அதனால் தீவிர இலக்கிய உலகத்திலும் சரி, முற்போக்கு இலக்கிய உலகத்திலும் சரி தமிழ் அறிவுச்சமூகத்திலும் சரி, சிறார் இலக்கியம் ஒதுக்கப்பட்டே வருகிறது.
அனைத்து இலக்கிய அமைப்புகளும் அறிவுச்சமூகமும் அனைத்து ஊடகங்களும் தங்களுடைய நிகழ்ச்சி நிரலில் சிறார் இலக்கியத்தை பேசுபொருளாக்க வேண்டும்.
வாசித்து விமரிசனம் செய்து, புதிய படைப்புகளை உருவாக்கும்போது சிறார் இலக்கியம் இன்னும் வேகமாக முன்னேறிச் செல்லும். மிகச் சிறந்த படைப்புகள் வெளிவரும்.
இந்தத் தருணத்தில் ஓசூரில் எழுத்தாளர். பா.வெங்கடேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் புரவி என்ற இலக்கிய அமைப்பின் கூடுகையில் சிறார் இலக்கியம் பற்றிய ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த து. விஷ்ணுபுரம் சரவணன், ந.பெரியசாமி, நான் மூன்றுபேரும் கலந்து கொண்டோம்.
இதை ஒரு மிக மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதுகிறேன்.
இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் தான்.
பயணம் நெடியது, பாதையும் கரடு முரடானது ஆனாலும் பயணத்தைத் தொடர்கிறோம்!
மிக்க நன்றி தோழர்.போஸ்கோ

Wednesday, 1 April 2026

எது சிறார் இலக்கியம்?

 எது சிறார் இலக்கியம்?



1. எந்தப் படைப்புகள் குழந்தைகளுக்கு கலைமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவை சிறார் இலக்கியம். ( இது பெரியவர்கள் இலக்கியத்துக்கும் பொருந்தும் )
2. கலை மகிழ்ச்சி என்றால் கருத்துகளைச் சொல்வது கிடையாது. அது வாசிக்கும்போது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் உணர்வு. ஒரு புன்னகை. ஒரு சிரிப்பு. ஒரு இன்பம், சில சமயங்களில் துயரம்.
3. துயரமும் கலை இன்பம் தான். நம்முடைய மனம் துயர்மிகு தருணங்களிலிருந்தும் ஏதோ ஒரு மனநிறைவை, உள்ளார்ந்த அமைதியை, கொந்தளிக்கும் எழுச்சியை அடைகிறது.
4. சிறார்களுக்கான படைப்புகள் எந்த வயதினருக்காக இருந்தாலும் குழந்தைகளின் மொழியில் எழுத வேண்டும். அந்தப் படைப்பில் குழந்தைமையின் குதூகலம், ஆர்வம், தூண்டுதல், கேள்விகள், பதில்கள், அறிதல், புரிதல், இருக்க வேண்டும்.
5. குழந்தைமையின் வெகுளித்தனமும் யாரும் சிந்தித்திராத புதிய கோணங்களும் மிகவும் முக்கியம். வழக்க்மான சூத்திரக்கதைகளை வாசித்தாலும் குழந்தைகள் மனதில் நிலைக்காது.
6. அறிவியல் மனப்பாங்கை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் ( கவனிக்க - அறிவியல் தகவல்களை மட்டும் சொல்வதல்ல ) குழந்தைகளிடம் ஒரு கியூராசிட்டியை ஏற்படுத்தும் படைப்புகள்.
7. சமூகத்தின் பலவேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், அவர்களுடைய வாழ்வின் நம்பிக்கை, துயரம், முயற்சிகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களில் எழுதப்படும் படைப்புகள்.
8. சேர்ந்து வாழ்வதின் உன்னதம், அனைவரையும் இணைத்துக் கொண்டு வாழ்வதின் மகிழ்ச்சி, அனைத்துயிர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறித்த படைப்புகள்.
9. வாழ்வின் அனைத்து நிலைகளையும் அதாவது அனைத்து மதங்களைச் சார்ந்த குழந்தைகளின் வாழ்க்கை, மாற்றுத்திறன்களுடன் பிறக்கும் குழந்தைகள், தீராத நோய்களுடன் வாழும் குழந்தைகள், மரணத்துடன் போராடும் குழந்தைகள், அனைத்துக் குழந்தைகளும் பங்கு பெறும் படைப்புகள்.
10. வாழ்க்கை குறித்த கேள்விகள், வாழ்வதின் நோக்கம், வாழ்வதின் பயன், இருத்தலின் மகிழ்ச்சியும் துயரமும், பகுத்தறிவின் மகத்துவம், சுயமாகச் சிந்திப்பதின் அவசியம், இவற்றைப் பற்றியெல்லாம் சிறார் மொழியில் பேசுகிற படைப்புகள் ( குட்டி இளவரசன் )
11. நன்மை தீமைக்கு இடையிலான போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? தீமையின் பாதையிலிருந்து எப்படி விலகி நன்மையின் பாதையில் பயணிப்பது என்பதையெல்லாம் சொல்லும் படைப்புகள். ( (ஹாரிபாட்டர்)
12. மிக முக்கியமானது இதெல்லாம் கலைப்படைப்பாக உருவாக வேண்டும். வெறும் பரப்புரையாகவோ, வறண்ட கருத்துக்குவியலாகவோ இருக்கக் கூடாது.
13. எல்லாம் கலையின் மாயக்கம்பளம் மறைந்திருக்க வேண்டும். வண்ண மயமான, நுட்பமான வேலைப்பாடுகள் மிகுந்த, பார்த்தாலே பரவசமூட்டும்படியாக அந்த மாயக்கம்பளம் இருக்க வேண்டும்.
14. சிறார் படைப்புகளைப் பெரியவர்கள் வாசிக்கும்போது அவர்களுக்கும் வெளிச்சம் தருவதாக புதுமையானதாக இருக்க வேண்டுமென்பதும் மிக மிக முக்கியம்.

Tuesday, 31 March 2026

வானில் பறப்போம் வா தோழா

 வானில் பறப்போம் வா தோழா…

அமுதன் தேவேந்திரன்



இயல் கூடுகை நிகழ்வைப் பார்த்ததிலிருந்து, குழந்தைகளுக்கான இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் முளைத்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக, சிறார் கதைகளின் அற்புத உலகத்தில் பயணித்து வருகிறேன்.
“குழந்தைகளுக்கான புத்தகங்களை பெரியவர்கள் வாசிக்கலாமா?” என்று யாராவது கேட்டால், என் பதில் தெளிவு முதலில் பெரியவர்களே வாசிக்க வேண்டும்.
குழந்தைகளைப் புரிந்து கொள்ள, அவர்களுடன் பழகுவது மட்டும் போதாது; அவர்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கவும் வேண்டும். அப்போதுதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளின் உலகை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய “விசிலடிக்கும் சைக்கிள்” கதைகளை இன்று வாசித்தேன். மொத்தம் பத்து கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அவர் சொல்வதுபோலவே, குழந்தைகளின் மாயப்புனைவு உலகத்தை கண்முன்னே கொண்டு வரும் அற்புதக் கதைகள் இவை.
சூரியன், மேகம், ரயில், சைக்கிள், பந்து, மரம் — இவை எல்லாம் குழந்தைகளுக்காக ஒரு வேறு உலகை உருவாக்குகின்றன. அந்த உலகில் நாம் வாசிப்பவர்களாக நுழையும் போது, நம் சொந்த பால்ய நினைவுகளும் மெதுவாக உயிர் பெறுகின்றன.
இந்த பத்து கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை:
० ஒரே ஒரு கொய்யா
० நீலாக்குட்டியின் சந்தேகம்
० கரையான் படித்த புத்தகம்
० ரயில்வண்டி
“ஒரே ஒரு கொய்யா” கதையில், வைகைப் பாப்பாவுக்காக காத்திருக்கும் கொய்யா மரம்..“அவளை பார்த்தால் சொல்லுங்கள்” என்று முடிவடையும் அந்த வரிகள் மனதில் நீண்ட நேரம் தங்குகின்றன.
அந்த கொய்யா மரம் மட்டும் அல்ல,
இந்த “விசில் அடிக்கும் சைக்கிள்” கதைகள் அனைத்தும் ஏதோ ஒரு குழந்தைக்காக இந்த உலகில் காத்திருக்கின்றன போல.
“நீலாக்குட்டியின் சந்தேகம்” கதையில் காக்கா சொல்வது:
“ஐயோ ஐயோ அசடு! இது கூட தெரியாதா?
எங்க பள்ளிக்கூடம் மரத்தில்தான் நடக்கும்.
எங்களுக்கு தனியா டீச்சர் கிடையாது நாங்க எல்லாரும் டீச்சர் தான்.
எல்லாரும் பேசுவோம்… எல்லாரும் கேட்போம்…”
இந்த வரிகளை வாசிக்கும் போது, சுவர்களில்லாத பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களில்லாத வகுப்பறைகளும் இருந்தால் எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.
“கரையான் படித்த புத்தகம்” கதையில், ஒரு சிறு உயிர் கூட படிக்க வேண்டும், தன் வரலாற்றை அறிந்து எழுத வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்களில் எத்தனை பேருக்கு அந்த எண்ணம் இருக்கிறது? என்ற கேள்வி சிரிப்பையும் சிந்தனையையும் ஒன்றாகத் தருகிறது.
இந்த உலகிலுள்ள கரையான்களும், கரப்பான் பூச்சிகளும், விலங்குகளும் வாசிக்கத் தொடங்கினால் உலகமே எப்படி மாறும் என்று கற்பனை செய்து நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படமும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
நிச்சயமாக, இந்த புத்தகத்தை வாசிக்கும் போது உங்கள் முகத்தில் ஒரு சிறு புன்னகை மலரும். அதுவே இந்த புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி.
குழந்தைகளின் மகிழ்ச்சியோடு, பெற்றோரின் மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க வேண்டும். வாசிப்பவர்கள் இந்த புத்தகத்தை வாசிப்பதோடு மட்டும் அல்லாமல், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டும் அதுவே உண்மையான வாசிப்பு மகிழ்ச்சி.

வெளியீடு: வானம் பதிப்பகம்

Monday, 30 March 2026

மாயக்கண்ணாடி’

 மாயக்கண்ணாடி’ –

அதிகாரத்தின் முகத்தை காட்டும் சிறுவர் கதைகள்.

அமுதன் தேவேந்திரன்



இன்று குடிநீர் கொண்டு வர பக்கத்து கிராமத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு இரண்டு பிரபல அரசியல் தலைவர்களின் சிலைகள் தலை மட்டும் துணியால் கட்டி மூடப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கிவிட்டதால், அவர்களின் முகங்கள் தெரிந்தால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று அரசு கூட நினைத்திருக்கலாம்!
அந்த காட்சி மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, உதயசங்கர் எழுதிய ‘மாயக்கண்ணாடி’ சிறுவர் கதைகள் வாசிக்க நேர்ந்தது.
இந்த புத்தகத்தின் அட்டைப்படமே என்னை முதலில் கவர்ந்தது. இதுவரை நான் பார்த்த எந்த அட்டையிலும் இல்லாத தனித்துவம் ஒரு சிறிய கண்ணாடி. அது உண்மையிலேயே “மாயக்கண்ணாடி”தானோ என்ற கேள்வி எழுந்தது.
திரைப்படங்களில் மாயக்கண்ணாடி முன் நின்றவுடன் மனிதர்கள் மறைந்து போவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்தை வாசித்த பிறகு, அந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன். சில நிமிடங்களில் அது எனக்கே சில மாயங்களை காட்டத் தொடங்கியது.
இந்த மாயக்கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் நம்மை ஆளும் அரசர்களின் சட்டங்களையும் உத்தரவுகளையும் நையாண்டியாக வெளிப்படுத்துகிறது. அந்த மடத்தனங்கள் நிஜ வாழ்க்கையிலும், இன்றைய அரசியல்வாதிகளிடமும் தொடர்கின்றன என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.
ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான உணர்வை கொடுக்கிறது.
“நானும் ஒரு தனி மனிதன்” என்ற உணர்வு.
அந்த உணர்வே சவால்களை எதிர்கொள்ளும் துணிவை உருவாக்குகிறது.
‘புதிய அகராதி’, ‘காற்றில் கரைந்த பூதம்’, ‘தொலைந்து போன மழை விதைகள்’, ‘ஜங் ஃபுட் தேசம்’, ‘மறந்த சிரிப்பு’, ‘பறவைகள் பறந்து போய்விட்டன’ போன்ற கதைகள் மூலம் மனிதர்களையும் இயற்கையையும் நேசிக்க கற்றுத்தருகிறார்.
உதாரணமாக ‘ஜங் ஃபுட் தேசம்’ கதையில்,
ஐந்து பைசாவுக்கு டர்கர், பத்து பைசாவுக்கு கூட்சா, மூன்று பைசாவுக்கு குளிர்பானம் என்ற கற்பனை உலகம் மூலம் இன்றைய உணவு கலாச்சாரத்தை நகைச்சுவையாகவும் கூர்மையாகவும் சாடுகிறார்.
‘மாயக்கண்ணாடி’ கதையில், தினமும் கண்ணாடியை பார்க்கும் முன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஒரு எளிய வரியில் உடல்நலத்தின் முக்கியத்துவத்தையும் சொல்கிறார்.
இந்த கதைகள் அரசர்களை மட்டும் அல்ல ;
அதிகாரத்தின் அகந்தையையும், மக்கள் மீதான அநீதிகளையும், சோம்பேறித்தனத்தையும் நையாண்டி செய்கின்றன.
ஒரு காலத்தில் மாயக்கண்ணாடி அரசர்களிடமே இருந்தது.
இன்று அது குழந்தைகளின் கைகளில் வந்திருக்கிறது.
இந்த மாயக்கண்ணாடி ஒவ்வொரு வாசிப்பிலும்
புதிய கதவுகளைத் திறக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருப்பது நம் முகமா?
அல்லது சமூகத்தின் உண்மையான முகமா?

Friday, 27 March 2026

அறியப்படாத குழந்தைகள் உலகம்

 

 

அறியப்படாத குழந்தைகள் உலகம்

உதயசங்கர்



உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நேற்றிருந்த வாழ்வியல் நடைமுறைகளும், பண்பாட்டு விழுமியங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி எல்லாம் மாறும் போது குழந்தைகளின் உலகம் மட்டும் மாறாதா என்ன? ஆம். மாறியிருக்கிறது. தலைகீழாக அந்த அத்தத்திலிருந்து இந்த அத்தத்திற்கு இடம் மாறியிருக்கிறது. முன்பு குழந்தைகள் வெறும் எண்ணிக்கை மட்டுமே. வீட்டில் வளர்ந்ததை விட தெருக்காடுகளில் வளர்ந்தது தான் அதிகம். படிப்போ, சோறோ, துணிமணியோ எதுவும் ஒரு பொருட்டில்லை. யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமுடியாத அளவுக்கு வீட்டில் பொருளாதார நெருக்கடி, எண்ணிக்கை நெருக்கடி. பிள்ளைகள் எப்படியாவது எங்கிட்டாவது கஞ்சி குடிச்சி வளர்ந்து விடும் என்று நம்பினார்கள் பெற்றோர்கள். தன்னுடைய குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே பல தகப்பன்மார்களுக்குத் தெரியாது. வீட்டின் வறுமையிருளைப் போக்க எப்போது வேண்டுமானாலும் பள்ளியிலிருந்து குழந்தைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு வேலைக்கு அனுப்பப்படுவார்கள். பல நேரங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களே இந்தப் பணியைச் செவ்வனே செய்து விடுகிறார்கள். நீயெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்து ஏண்டா உயிரை வாங்கறே.. மாடு மேய்க்கப் போக வெண்டியதானே.. என்றோ பேசாம தீப்பெட்டிக் கம்பெனிக்குப் போய் வேலை பாத்து வீட்டுக்கு நாலு காசு சம்பாதிச்சுக் கொடுக்கலாம்ல.. ஏண்டா எங்கழுத்த அறுக்கிறே.. என்றோ நாலு நல்ல வார்த்தைகளை நிதமும் உடல் ரீதியான வன்முறைப் பிரயோகங்களுடன் சொல்லிக் கொண்டேயிருந்தால் எந்தப் பையன் தான் பள்ளிக்கூடத்துக்கு வருவான்?

அப்படி இதெல்லாம் ஒண்ணும் ரெம்ப மாறிவிடவில்லை என்ற முணுமுணுப்பு கேட்கிறது. இப்படியான நிலைமை இன்னமும் சிறு நகரங்கள், கிராமங்களில் நீடித்து வருவது நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும்  வேறுவகையில் மாற்றங்கள் உருவாகியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நேற்று குழந்தைகளாக இருந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இன்று ஒரு மத்தியதர வாழ்க்கை வாழக்கூடிய பெரியவர்கள் குழந்தைகள் மீது செய்கிற அழிம்பு தாங்க முடியவில்லை. முன்பு சொன்னது இல்லாமையினால், போதாமையினால் என்றால் இப்போது நடந்து கொண்டிருப்பது குழந்தைகளைப் பற்றிய அறியாமையால். தனக்குக் கிடைக்காதது, தான் ஆசைப்பட்டு ஏமாந்தது, ஏங்கித் தவித்தது, கனவு கண்டது, எல்லாவற்றையும் குழந்தைகள் மீது வரைமுறையின்றித் திணித்து குழந்தைகளை சூப்பர் ரோபோக்களாக மாற்றுகிற அவலமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதை நன்கு உணர்ந்து கொண்ட உலகமய முதலாளிகள் குழந்தைகள் வர்த்தகத்தில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். அனைத்துப் பொருட்களையும் குழந்தைகள் மனதில் வைக்கும் விதமாக விளம்பரங்கள். அந்தப் பொருட்களின் தன்மை என்ன? அதன் விளைவுகள் என்ன? பின் விளைவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையோ விசாரணையோ இல்லாமல் குழந்தை கேட்டு விட்டது என்ற ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கோக், பெப்சி, போன்ற அமிலங்கள் நிறைந்த குளிர்பானங்கள், பல்சொத்தை, பிடிவாதம் போன்றவற்றை உருவாக்கும் சாக்லேட் வகைகள், கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் ஜங்க்புட் வகையறாக்கள்,என்று உணவைப் பற்றி எந்த அக்கறையுமின்றி குழந்தைகளை பொத் பொத்தென்று குட்டி ஜெயிண்டுகளாக வளர்த்து வருகிற கொடுமை ஒரு புறமென்றால்,

தன் கனவுகளின் கிட்டங்கியாக, தன் நிறைவேறா ஆசைகளை நிறைவேற்ற வந்த தெய்வப்பிறவி, தன் எதிர்கால வைப்புநிதி, என்றெல்லாம் குழந்தைகளை நினைத்து வீட்டை விட்டு வெளியில் விடாமல் வீட்டிற்குள் பாடப்புத்தகம், ரேங்க், என்ற பைத்தியக்காரத்தனமான வதைக்கூடத்துக்குள் குழந்தைகளைத் தள்ளி சித்திரவதை செய்கிற மனோபாவம் வளர்ந்து வருகிறது. இந்தச் சித்திரவதையைப் பொறுத்துக்கொள்வதற்காகச் சின்னஞ்சிறு வயதிலேயே லஞ்சமும் ஊழலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீ ஹோம் ஒர்க் முடிச்சா சாக்லேட் தர்ரேன்.. என்றோ நீ அந்தப் பாடத்தை படிச்சி ஒப்பிச்சா கார்ட்டூன் சேனல் பாக்க விடுவேன் என்றோ பெற்றோர்கள் பேரம் பேசுகிறார்கள். இப்படித்தான் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இவையும் இது போன்ற பல குழந்தைகள் பிரச்னைகளையும் பேச வேண்டியதிருக்கிறது. விவாதிக்க வேண்டியதிருக்கிறது.

குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவர்களை அணுகுவதற்கும் கையாள்வதற்கும் தனித்துவமான திறன் கொண்டவர்களாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாறவேண்டும். 

அவர்களின் எதிர்காலமென்பது இந்த உலகின் எதிர்காலம். 

இந்த பூமியின் எதிர்காலம்.