Showing posts with label நூல்வனம். Show all posts
Showing posts with label நூல்வனம். Show all posts

Monday, 10 August 2026

அய்யம்பெருமாள் என்றொரு மனிதர்

அய்யம்பெருமாள் என்றொரு மனிதர் – மனிதனான கதை

 

ம.மணிமாறன்

 

மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவரவர்களுக்கான ஆசைகளை சுமந்தலையும் விசித்திர மனம் கொண்டலையும் தனித்த உயிரிகள் மனிதர்கள். அன்பு, கருணை,இரக்கம் போன்ற கல்யாண குணங்களோடு மட்டும் அலைபவன் இல்லை மனிதன். நித்தமும் எதிர்படும் தன் சக மனிதர்களின் மீது வெறுப்பை உமிழ்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்போதாவது பளிச்சென வெளிப்படும் இந்த காரிருள், பலசமயங்களில் மனம் எனும் இருட்குகைகக்குள் பதுங்கித்தான் கிடக்கிறது. அவனுக்கோ அல்லது அவளுக்கோ இருண்ட மனதின் பக்கம் என ஒன்று நிச்சயம் இருக்கும். அந்த இருள் பக்கங்களைப் பொதுவெளியில் பளிச்சென திறந்து காட்டிடும் துணிச்சல்தான் அவர்களுக்கு இருக்காது. மனதை இறுக்கிப் பிடித்து வெளித்தெரியாமல் காட்டிட விதவிதமான திறைமறைவுச் சட்டைகளை அவர்கள் போட்டுக் கொள்கிறார்கள்.

 

நேர்கண் கொண்டு பார்க்கிறபோது புரிதலுக்குள்ளாக சாத்தியமற்றது மனித மனம். ஏன் தெரியுமா?. இங்கு சரிபாதிக்கும் மேலானோர் இருட்டறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள் தன்னையும் தன் மனதையும். வெகுசிலர் இதுதாண்டா நான். இப்படித்தான் நான் இருந்தேன். இனிமேலும் இப்படித்தான் இருப்பேன் என தன்னை மிக மிக வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இப்படியானவர்களை இந்த உலகம் நேர்மறையாக எதிர்கொள்வதில்லை. ‘அவனை அகங்காரம் பிடித்தவன் என்றோ,கொழுப்பெடுத்தவ, என்ன பேச்சு பேசுறா பாரு எனவோ,இவந்திமிர அடக்க எங்கிருந்தாவது ஒரு ஆள் வராமலா போயிரும்’ என்றோ பொறுமுகிறார்கள். இப்பிடி சகலரின் வெறுப்பிற்கும் ஆளான பூஞ்சை மனிதனின் கதையே அய்யம்பெருமாள் என்றொரு மனிதர். இவர் மிக வெளிப்படையானவர். தோற்றத்திலும் நடவடிக்கையிலும் பூச்சற்று இருந்த மனிதன். அதனாலேயே அவரை அறிந்த எல்லோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவர். அவருடைய வாழ்வின் பக்கங்களை எழுத்தாளர் உதயசங்கர் அவருடையா பெயரிலேயே அய்யம்பெருமாள் என்றொரு மனிதர் எனும் சிறுகதையாக எழுதியிருக்கிறார்.

 

எழுத்தாளர் உதயசங்கர் தமிழகத்தின் நவீன இலக்கியத்தின் தனித்த அடையாளமாக எல்லோராலும் பார்க்கப்படுகிற கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கோவில்பட்டிக்கு சாகித்ய அகாடமி விருதினைக் கொடுவந்து சேர்த்த எழுத்தாளர்கள் படைவரிசையைச் சேர்ந்தவர். அவர் பின்னாளில் தீவிரமாக கவனிக்கத் துவங்கிய சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர். இளையோர் நாவல் எனும் வகையில் எப்போதும் எழுத்தாளர் உதயசங்கரின் ‘ஆதனின் பொம்மை’ எனும் நூலுக்குத் தனித்த இடமுண்டு. அந்த புத்தகத்திற்காகவே அவர் சாகித்ய விருதினையும் பெற்றார். கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தமிழில் தற்காலத்தில் கவனம் பெறத் துவங்கியிருக்கும் குறுங்கதைகள், கலாச்சார பண்பாட்டு உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டுரைகள் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துபவர் எழுத்தாளர் உதயசங்கர் ,என்றபோதும் அவருடைய இலக்கிய பங்களிப்புகளில் மிக மிக தனித்தவை அவருடைய சிறுகதைகள்.



யாவர் வீட்டிலும், மறதியின் புதைசேறு துவங்கி புத்தாயிரத்தில் அவர் எழுதிய துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் வரையிலுமாக நூற்றி மூன்று சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தமிழ் கிளாசிக்கல் சிறுகதைகளின் வரிசையில் இடம் பிடிக்கத் தகுதிபெற்ற பல சிறுகதைகளை எழுத்தாளர் உதயசங்கர் எழுதியிருக்கிறார். டேவிட் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல், மறதியின் புதைசேறு, பால்ய சிநேகிதி, தூரம், அடி, பயணம், ஆனைக்கிணறு தெரு, மீனிளின் நீல நிறப்பூ, அப்பாவின் கைத்தடி, கிருஷ்ணனின் அம்மா என பலதைகளை தமிழ்ச்சிறுகதைத் துறைக்கு கொடையென வழங்கியவர் எழுத்தாளர் உதயசங்கர். அவருடைய ஆகச்சிறந்த கதைகளில் தனித்தது அய்யம் பெருமாள் என்றொரு மனிதர் எனும் சிறுகதை.

எழுத்தாளரும் அவருடைய நண்பருமாக பேசிக்கொள்ளும் தன்மையில் கதையை வடிவமைத்திருக்கிறார். அவரும், அவருடைய நண்பரும் இலக்கியம், அரசியல்,ஊர் நடப்பு என சகலவற்றையும் பேசிக் கழிக்கும் பேச்சு சேக்காளிகள். அப்படியான பேச்சு வெளியினில்தான் அய்யம் பெருமாளை சந்திக்கிறார்கள் இருவரும். அதிலும் எப்படித் தெரியுமா? பிணமாக. அதிலும் குறிப்பாக அநாதைப்பிணமாக. ஒலைப் பாயில் சுருட்டி எடுத்து நால்வர் பிணமாக அய்யம்பெருமாளை சுமந்து செல்லும் காட்சி கதையை வாசித்துக் கடக்கும் ஒவ்வொரு நொடியிலும் வாசகனுடனே வருகிறது. அத்தனை அழுத்தமாக அந்தக் காட்சி வாசக வசமாகிறது. ஏன் தெரியுமா. அநாதைப் பிணமாகப் போகிறாரே அய்யம்பெருமாள் இவர் யார் தெரியுமா, என்றே கதை விரிவு கொள்கிறது. பார்ப்பதற்கு தோற்றத்தில் எந்த வசீகரமும் அற்றவர் அந்த மனிதன். நெடு நெடுவென வளர்ந்து கருத்துக்கிடக்கும் தோல்பொம்மை போலானவர். எப்போதும் திறந்த வாயை மூடமுடியாத அளவிற்கு பல் எத்திக்கிடக்கும் அவருக்கு. தன்னுடைய போதாமைகள் இவை என புரிந்து கொண்ட பலரும் எல்லோரையும் தனக்கு எதிரிகளாக்கி விடுகின்றனர்.

 

ஆனால், அவருடைய மனைவியோ அதற்கு நேர் எதிராக அழகே வடிவாக அமைந்தவர்..இருவருக்கும் கல்யாணமாகி எட்டு வருசமாக குழந்தையும் இல்லை. பிறகென்ன வாயத் திறந்தாலே வசவுதான். தெருவில் ஒரு ஆம்பளைப் பையனையும் நடக்க விடமாட்டாரு அய்யம் பெருமாள். ஒரே கெட்ட கெட்ட வார்த்தையில வசவுதான். ஆனா அந்த அம்மா அய்யம் பெருமாளைப் போல இல்லை. எல்லோரிடமும் அன்பும் பிரியமுமாகப் பழகுவார். சின்னப் பையன்கள் அய்யம்பெருமாள் இல்லாத நேரத்தில் அந்த டீக்கடையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். கதையைப் பேசிக் கொண்டிருக்கும் இருவரும் அங்கே விளையாடிக் கொண்டலைந்தவர்களே. அய்யம்பெருமாள் கோபக்காரர் மட்டுமல்ல, கருமியும்கூட. பத்து பைசா யாருக்கும் ஈய்ய மாட்டாரு. அதற்கு எழுத்தாளர் கண்டுபிடிக்கும் காரணமும்கூட முக்கியமானது.

 

 அய்யம்பெருமாள் அவருடைய குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்குப் பிறகு நாண்காவது பிள்ளை. அதிலும் அண்ணன்களால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டவர். புறக்கணிப்பின் வலி எளிதில் ஆறுமா?. புறக்கணிப்பது மட்டுமல்ல, அய்யம்பெருமாளை அவமானப்படுத்துவதையும் குறைவில்லாமல் செய்து வந்தார்கள் அவருடைய அண்ணன்கள். எதுவெல்லாம் மனதின் பக்கங்களில் தடுப்பேறி,தடுப்பேறி அவரை இப்படி ஆக்கியிருக்கிறது என்பதும் புரிதலுக்குள்ளாகிறது. புறக்கணித்த உறவுகளை, சமூகத்தை போட்டி போட்டு தோற்கடிக்கவே சொத்துக்களைச் சேர்க்கத் துவங்கினார்.

 

எழுத்தாளரின் நண்பர் தான் அய்யம்பெருமாளை இருபது வருடம் கழித்து ஊர்க்கோவிலில் பார்த்த காட்சியைச் சொல்கிறார். அதைக் கேட்பதற்கே கவலையாகத்தான் இருக்கிறது. கோவில் வாசலில் தேங்காய் விடலையைப் பொறுக்கித் திங்க அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவர்களோடு போட்டி போட்டு தெருப் புழுதியில் புரண்டு எழுந்திருக்கிறார் அவர். அத்தோடு அந்த சிறுவர்களை காதால் கேட்க முடியாத வசவுகளால் திட்டவும் செய்திருக்கிறார். அந்த வசவுகள்தான் நண்பருக்கு அது அய்யம்பெருமாள் என்பதைக் காட்டியிருக்கிறது. எப்பிடி வைராக்கியமா வாழ்ந்த மனுஷன் இப்பிடி கோட்டிக்காரனா போயிட்டாரே என வருத்தப்பட்டு இருவரும் கலைகின்றனர். கதை இத்துடன் முடியவில்லை. இனிமேல்தான் கதையே துவங்குகிறது.

 

என்னதான் நடந்திருக்கும் என நண்பர்கள் இருவரோடு கதை வாசித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே யோசிக்கிறோம். எழுத்தாளர் கதையின் முடிச்சை நண்பரின் துணை கொண்டு மெதுவாக அவிழ்க்கிறார். அய்யம்பெருமாளின் மனைவி அவருடைய டீக்கடைக்கு பால் ஊத்த வந்த பால்க்காரனோடு தலைமறைவாகியிருக்கிறார். போகும் போது அந்த அம்மா தனியாகப் போகவில்லை. அதுவரையிலும் அய்யம்பெருமாள் சேர்த்து வைத்திருந்த பணம் நகை என எல்லாவற்றையும் கையோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

 

அய்யம் பெருமாளுக்கு புத்தியும், காலும் நிலை கொள்ளவில்லை. ஊர் ஊராக நாடோடியைப் போல அலைகிறார். நித்தமும் தேடி அலைவதும், எங்கும் தட்டுப்படவில்லை என திரும்பி வருவதும் தொடர் கதையாகவே நீடிக்கிறது. கீகாட்டில் ரெண்டுபேரும் டீக்கடை நடத்துகிறார்கள் எனும் செய்தி அவருக்கு கிடைக்கிறது. அவளிடம் எதுக்காக இப்பிடி செஞ்ச நீ என ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும். அந்த ஒரு கேள்வியை நேருக்கு நேராக பார்த்து கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்பிடி அலையோ அலை என அலைந்து கொண்டேயிருக்கிறார் அய்யம்பெருமாள்.

 

காலையிலேயே கிளம்பியவரின் மனதிற்குள் இருவரும் தனக்கிழைத்த துரோகத்தின் காட்சிகள் படமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஊரை நெருங்கி அவர்களுடைய இருப்பிடத்திற்கு மிக அருகில் வந்துவிட்டார். தூரத்தில் இருந்து பார்க்கிறார். இவருடைய டீக்கடைக்கு பால் ஊற்றிய பால்க்காரன் அங்கே டீ ஆத்திக் கொண்டிருக்கிறான்.பத்து வருசமா தேடி அலைஞ்ச துக்கம் அய்யம்பெருமாளுக்கு தொண்டைய அடைக்குது. விடக்கூடாது இவுங்க ரெண்டு பேரையும் எனும் வைராக்கியம் அவருக்கு மேலேறி வருகிறது. கடையை நெருங்கி விட்டார். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என எல்லோரும் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்குள் இருந்து எட்டு வயது சின்னப்பெண் வெளியே வருகிறாள். இவரும் அந்தப் பெண் குழந்தையைத்தான் பார்க்கிறார்.

 

இவருக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அச்சு அசலாக அவருடைய மனைவியைப் போலான தோற்றம் குழந்தைக்கு. கையில் அந்தப்பெண் கர்சீப்பில் எதையோ பொதிந்து கொண்டு வருகிறாள். வந்தவள் அந்தப் பொதிமூட்டையை அய்யம்பெருமாளின் முன் திறக்கிறாள். அவருடைய வீட்டில் இருந்து எடுத்துப் போன பணமும் நகையுமே அந்த விரிப்பில் கிடக்கின்றன. அய்யம்பெருமாள் எதுவும் சொல்லவில்லை. எதுவும் கேட்கவில்லை. அந்த குழந்தையின் தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கிறார். ‘நல்லா இரு மகளே’ என வாழ்த்திய மறுநொடியிலேயே அங்கிருந்து கிளம்பியும் விட்டார். அந்த வீட்டின் சன்னலோரத்தில் இருந்து அழுது விசும்பும் சத்தம் கேட்கிறது. அய்யம்பெருமாள் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருக்கிறார். மனிதன் மகத்தானவன் என்று கதையை முடிக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர்.

 

மனிதன் மனிதனாக வாழ்வதற்கான நொடித்துளிகளை வாழ்க்கை எப்போதும் அவன்முன் திறந்து வைத்துக்கொண்டேதான் இருக்கிறது. தருமியாக வாழ்ந்தவன். துரோகத்தை எதிர்கொண்டே தீர்வது என உறுதியாக இருந்தவனின் மனதிற்குள்தான் அன்பும் வற்றாத கருணையும் முகிழ்த்து வந்திருக்கிறது.

மனிதன் மகத்தானவன்தான். அவனுடைய கீழ்மையான குணக்கேடுகளையும் சேர்த்தே.

  நன்றி - மதுரைச்செய்தி

Friday, 31 July 2026

மண்டோ’ என்ற பேராளுமை

 

மண்டோ’ என்ற பேராளுமை

 சுகன்யா ராமநாதன் 



உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சதத் ஹாசன் மண்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கதைகள் கொண்ட தொகுப்பு ‘நிர்வாணக் குரல்கள்’. நூல்வனம் வெளியீட்டில் எழுத்தாளர் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஓர் தாக்கம் தரும் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது.

 

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலங்களின் கொடுமைகளை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியவர் எழுத்தாளர் மண்டோ. ஒரு மனிதர் தன் சக மனிதரை மதம் கொண்டு பிரித்துப் பார்ப்பதென்பது எப்படி நிகழ்கிறது? உற்ற நண்பர்கள், அண்டை வீட்டார், பழகிய மனிதர்களை, யாரோ பரப்பும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பலியாகி, சுய சிந்தனையை இழக்க வைப்பது எது?

பிரிவினை என்பது வரலாற்றின் வடு கிடையாது. அது ரத்தமும் சீழும் வழிந்தோடுகிற ஆறாத புண். துள்ளத் துடிக்க இன்றும் உயிர்களைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லி. மனித மனங்களில் வெறுப்பு என்னும் நெருப்பை அணையாமல் காத்து நின்று, அன்பை அண்டவிடாமல் தடுக்கும் எரிபொருள். அரசு அதிகாரம், அறிவுஜீவிகளின் கட்டுக்கதைகள், ஊடகங்களின் பிரச்சாரம், கண்கள் கட்டப்பட்ட நீதிமன்றங்கள், செல்லாகாசான அநேக ஜனநாயகக் கருவிகள் என்று சூழல் அச்சுறுத்துவதாக இருந்த போதிலும், எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றன.

மண்டோவின் குரலை தமிழில் ஒலிக்கச் செய்திருக்கும் எழுத்தாளர் உதயசங்கர் இருண்ட காலத்தில் ஒளி பாய்ச்சி இருக்கிறார். பிரிவினைக் காலத்தின் ஆழம் அகலம் என்று ஒரு பரந்த விரிந்த கால சாட்சியாக அமைந்திருக்கிறது மண்டோவின் எழுத்துகள்.

இந்த கதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளும், மனித மனங்களின் உண்மைக் காட்சிச் சித்திரங்கள். மண்டோவின் கதாபாத்திரங்கள், பாசாங்கு இல்லாமல் முரண்களுடன் உலவுகிறார்கள். முக்கால் நூற்றாண்டை கடந்தும் நமது இன்றைய காலத்தின் உடைகளை உடுத்திக்கொண்டு, இன்றைய சூழலுக்கு பொருந்திப் போய்விடுகிறார்கள். நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள், நம்மை சிரிக்க வைக்கிறார்கள், முகம் சுளிக்கச் செய்கிறார்கள், நம்மை அவர்களின் விசிறிகளாகச் செய்கிறார்கள். இந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவது மண்டோவின் எழுத்துகள்.

‘பிஸ்மில்லா’ கதையில் வரும் பெண், வினோதமான பெயர் கொண்டவளாகவும், ஒரு ஆழ்ந்த சோகத்தைச் சுமந்த கண்களுக்குச் சொந்தக்காரியாகவும் இருக்கிறாள். அவள் சோகத்தின் காரணம் கதையின்
இறுதியில் வெளிப்படுகிறது. ஒரு பெரும் சமூகக் கோரத்தை நம் மனதில் கடத்திவிடுகிறது ஒரு தனிமனிதப் பார்வையில் விரியும் கதை.

‘மெழுகுவர்த்தியின் கண்ணீர்’ கதை பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை, ஒரு சக்கரத்தைப் போல எப்படி தன் குழந்தைகளின் வாழ்வையும் நசுக்கிச் சுழல்கிறது என்று காட்சிப்படுத்துகிறது.

‘நிர்வாணக் குரல்கள்’ மனதை உலுக்கியெடுக்கும் கதை. ஒரு சமூகம் சிதையுண்டு போகும் போது இறந்தவர்களைப் பற்றியும், நாசம் அடைந்தவர்களின் வாழ்க்கையையும் பேசும் ஆட்களுக்கே குறைவிருக்கும் போது, தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்க்கைப்  பாடுகளைப் பாடுபவராகவும் மண்டோ இருந்திருக்கிறார், எப்படியோ பிழைப்பு நடத்தி, கலியாணம் முடித்து, பிள்ளைகள் பெற்று வாழ்க்கை ஓடாத்தான் செய்கிறது பெரும்பகுதியினருக்கு. கூருணர்வு கொண்ட சிலர் இந்த மனசாட்சி செத்த சமூகத்தில் மனம் பிறழ்கிறார்கள்.

பிரிவினைக்குப் பிந்தைய பகைமையின் காரணமாக சிந்து நதி நீர்வள அரசியலைப் பற்றி பேசும் கதை 'யாசித்'. உள்நாட்டிலும் ஆறுகளை ஆயுதமாக்கும் அரசியல் கேவலங்களை நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். மனித மனங்கள் விரியாதவரை மண்டோவின் எழுத்துகள் சமகாலத்திய எழுத்துகள் தான்.

சமூக அரசியல் சூழ்நிலைகளை பேசும் மண்டோ, மனிதர்களின் மனங்களில் எழும் நுண் உணர்வுகளுக்கும் தன் எழுத்துகள் மூலம் வடிவம் கொடுக்கிறார். சமூகக் கொடுமைகளின் தோற்றுவாய் ஒரு வகையில் பார்த்தால் தனி மனித மனம் தான். அதில் எழும் உணர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டும். மனக் கசடுகளை வடிக்கட்டும் ஒரு வகை வடிகட்டி தான் இலக்கியம்.

‘கோழை’ கதை, காதல் காம உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஒரு ஆணின் மன சஞ்சலங்களைப் பேசுகிறது. ‘கேள்விக்குறியான கௌரவம்’ என்ற கதையில் வரும் மம்மது பாய் தாதா கருணை உள்ளம் கொண்ட ஒரு ரௌடி. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மீது பொறுப்பேற்றுக் கொள்ளும் பண்புடையவன். கதையின் கடைசியில் தன் மீசையை இழக்க நேர்ந்ததை நினைத்து கதறி அழுகிறான். இந்த கதையில் மண்டோவின் நகைச்சுவை உணர்வை நாம் ரசிக்கலாம். இந்த இரண்டு கதைகளுமே ஆண் பாலினம் என்ற பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் பலவீனங்களை, அதன் இயல்பான குணாதிசயங்களுடன் காட்டுகிறது.     

‘தோற்றுக்கொண்டே இருப்பவனின்’ கதை நுட்பமான மனித பாசாங்குகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.   

‘ஆறுதல்’ கதை, ஒரு சிறு வயது விதவையின் பன்முக சித்திரவதைகளைப் பேசுகிறது. பெண்கள் கூட தூற்றி ஒதுக்கும் சமூக விலக்கு மற்றும் அவளின் நிலையை சாதகமாக எடுத்துக்கொள்ளும் ஆண்களின் பார்வை ஒருபுறம், இன்னொரு புறம் இளமையின் தனிமை வாட்டியெடுக்கும் கொடுமைக்கு ஆறுதல் தேடும் மனம் என்று ஒரே கதையில் பல பார்வைகளை முன்வைக்கிறார்.  

 

‘ஷாடோலின் எலி’ என்ற கதை மதங்களின் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளுக்கு பலியாகும் குழந்தைகளின் கதை. பட்டறிவு, பகுத்தறிவு, இயற்கை உள்ளுணர்வு இவை அனைத்தும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது தானே! பிறகு எப்படி கட்டுக்கதைகளை நம்பி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற ஆழமான கேள்வியை இந்தக் கதை நம் மீது வீசுகிறது.

ரசிகர் மனநிலை, பிரபலத்தின் மனநிலை, அவ்விரண்டிற்கும் இடையே இழையோடும் தொடர்பையும் சொல்லும் ஒரு இயல்பான கதை ‘நூர்ஜஹான்’.

உண்மைகளின் மேல் கட்டமைக்கப்பட்ட புனைவின் மாளிகையில் அரசனாக அமர்ந்து ஆட்சி செய்கிறார் மண்டோ. அந்த மர்ம மாளிகையில் ஏராளமான காட்சிப் பிழைகளின் பிம்பங்களை வாசகர்கள் தரிசிக்கலாம். தங்களைப் பொருத்திப் பார்த்து தம்தம் மனதின் இருண்ட மூலைகளை கண்டடையலாம்.

இந்த தொகுப்பின் மொழி பெயர்ப்பு மூல மொழியில் வாசிப்பது போன்ற அனுபவத்தை கொடுத்தது. முன்னுரை ‘மண்டோ’ என்ற பேராளுமை பற்றிய ஒரு அருமையான அறிமுகத்தை கொடுத்து, தொகுப்பிற்குள் வழிவிடுகிறது.




 

நூல்: நிர்வாணக் குரல்கள்

எழுத்தாளர்: சதத் ஹாசன் மண்டோ

தமிழில்: உதயசங்கர்

விலை: 220/-

பக்கம்:144

வெளியீடு: நூல்வனம்

தொடர்பு: +91 9751549992

நன்றி - தோழர்.சுகன்யா ராமநாதன்

 

Tuesday, 28 July 2026

ரத்தக்காயங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் -- சரிதாஜோ

 மண்டோவின் நிர்வாணக்குரல்கள்

தமிழில் : உதயசங்கர்



பதிப்பகம் : நூல்வனம்
விலை : 220
பக்கங்கள் : 144
மொழிபெயர்ப்பு (சிறுகதை தொகுப்பு)
தொடர்புக்கு - +91 97515 49992
நூலுக்குள்..
எழுதுங்கள் என் கல்லறையில்
இங்கே கிடக்கிறான் சதத் ஹாசன் மண்டோ அவனுடன் சேர்ந்து சிறுகதைக் கலையின் அத்தனை மர்மங்களும் கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்...
இந்த வாசகத்தை இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் கூறிவிட்டு இன்று அந்த மாபெரும் உன்னத எழுத்தாளன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவன் எழுத்துக்கள் இன்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தால் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சாமானிய மனிதர்களுக்கு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இடதுசாரி ஆகவும் சோஸலிஸ்ட்டாகவும் முற்போக்கு வாதியாகவும் இருந்த மண்டோ எழுதிய முதல் கதை தமாஷா என்ற ஜாலியன் வாலாபாக் பற்றிய கதை.
சினிமாவிற்கு எழுதிய முதல் கதை தோல்வி. ஆனாலும் தொடர்ந்து சினிமாவிற்கு கதை எழுதினார். பத்திரிகைகளில் எழுதினார். 1940ல் முதல் தொகுப்பும் 1942ல் இரண்டாம் தொகுப்பு 1943 மூன்றாம் தொகுப்பு பிறகு வாழ்நாளில் இரு பெரும் இழப்புகள்.
அம்மாவையும் மூத்த மகனையும் இழந்தபின் அந்த இழப்பின் வலியை வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்தபடியே வாழ்ந்தார்.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் மண்டோ மனைவி குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்குப் போய்விட்டார்.
1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை மிகத் தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு கதை என்ற வீதத்தில் எழுதி இருக்கிறார்.
ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையின் முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். இப்படி புது புது யுக்திகளை தன்னுடைய கதைகளில் நுழைத்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த பகைமை தீவிரமாக இருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் மனதின் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் அதீத குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் மண்டோ.
குடி வெற்றி கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநல மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். உணர்ச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமாதானப்படுத்தி இருக்கிறார். அதற்கு குடி தேவைப்பட்டிருக்கிறது.
அவரை சதாகாலமும் போலியான மனித சமூக மனிதர் இருந்த நாகரிகமான ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் அழுகிய புண்களின் வடிந்து கொண்டிருக்கும் சீல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
அவருடைய கதைகளுக்கு நீதிமன்றத்தில் ஏறி இருக்கிறார்.
ஒருமுறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் நடந்த இருண்ட காலத்தின் கதைகளை மட்டுமே மண்டோ பதிவு செய்திருக்கிறார்.
மண்டோவின் கதைகள் நுட்பங்கள் நிறைந்தது. இருளை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது.
ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகம் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது.
எல்லா கதைகளும் துல்லியமான விவரங்களை நேர்த்தியான கதை சொலலுடன் அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதமைக்குச் சான்று.
மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே புது சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டு உணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். முன்போதிலும் காட்டிலும் இப்பொழுது மண்டோ அதிகம் தேவைப்படுகிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் நிர்வாணக் குரலுக்கு எழுதிய இந்த முன்னுரை மண்டோவின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
கதைகளுக்குள்..
பிஸ்மில்லாவைப் பற்றி கூறியாக வேண்டும். திரைப்படத் தயாரிப்புக்காக ஜாகீரைச் சந்திக்கச் செல்கிறார் சையத். இருவரும் விரைவில் நண்பர்களாகி விடுகிறார்கள். ஜாகிரின் மனைவி பிஸ்மில்லாதான் அவர் எடுக்கவிருக்கும் படத்தின் கதாநாயகி என்று கூறுகிறார்.
பிஸ்மில்லாவின் அந்த பெரிய கண்களில் சோகம் ஒளிந்து இருப்பதை சையத் உணர்கிறார்.
அந்த சோகம் நிறைந்த கண்களுக்குள் பலமுறை பாய்ந்து விழுந்திருக்கிறான் சையத்.
அவனை பல முறை மூழ்கடித்ததும் அவளுடைய பெரிய சோகமான கண்கள்தான். கண்களில் உள்ள சோகத்தின் எல்லாத் தடயங்களையும் கழுவி சுத்தப்படுத்தும் வரை அந்த கண்களை முத்தமிட வேண்டும் என்று தீராத ஆசை அவனுக்கு.
அந்த பெரிய சோகம் நிறைந்த கண்கள் எப்பொழுதும் தூக்க கலக்கத்துடனே இருப்பதை சையத் கவனிக்கிறான். அன்றும் அப்படித்தான் ஜாஹிரே காணச் சென்ற சையத் பிஸ்மில்லாவோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பிஸ்மில்லா உறங்கி விடுகிறார்.
அடுத்த நாள் அவர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுது பிஸ்மில்லாவைப் பற்றி ஊர் மக்கள் பேசியதும் ஜாகிரை போலீஸ் பிடித்ததும் இந்தக் கதையின் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவாக இருக்கும்?
****†***
ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமானம் அதன் பிறகான ஆறுதல் வரிகளும் அந்த ஆறுதல் படுத்தும் பொழுது பேசிய பேச்சுக்களும் உளவியல் ரீதியாக நுட்பமாக மனதை படம்பிடித்தது மிக சரியான வார்த்தைகள்.
ஆறுதல் என்பது என்றுமே மிகப்பெரிய தத்துவம் நிறைந்த வார்த்தைகளைத் தேடுவதில்லை.
மிக எளிமையான அன்பு கூறும் வார்த்தைகளையே எதிர்பார்க்கிறது. சில நேரங்களில் மௌனம் கூட ஆறுதல் ஆகிவிடும். சில நேரங்களில் காது கொடுத்தலே அவர்களுக்கு ஆறுதலாகிவிடும்.
நிர்வாணக் குரல்கள் கதை வியப்பின் உச்சம். இப்படி கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? கட்டில்கள் பேசுமா? குரல்கள் துரத்துமா? காமம் ஒரு மனிதனை இப்படி அலைக்கழிக்குமா? ஒரு மனித வாழ்வில் காமத்திற்கான இடம் என்ன?
சுற்றி இருந்து எழுப்பும் குரல்கள் ஒருவனை இப்படித் துரத்துமா? முடிவில் அவனுக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்துமா? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதை.
*********
ஒரு மனிதன் எல்லா இடங்களிலும் பயம் கொண்டே இருக்கிறான். தெனாலி படத்தில் வருவது போல எதற்கெடுத்தாலும் அவனுக்கு பயம் பயம் பயம்.
இந்த பயத்தை எல்லாம் உடைத்து ஒரு நாள் பாலியல் தொழிலாளியிடம் செல்ல நினைக்கிறான். முடிவில் போவானா போவானா என்ற பதட்டத்தோடு கதையை நகர்த்துகிறார். எதுக்குடா இப்படி பயப்படுற என்று நமக்குள்ளே கேள்விகள் எழும் அளவிற்கான கதை நகர்த்துதல்..
அவன் மனது செல்கிறது. அதை அவன் தடுத்துப் பார்க்கிறேன் முடியவில்லை முடிவில் அந்த பயத்தை உடைத்து சென்றானா?
என்பதை அறிய கோழைக்கதை..
***********
திருமணம் ஆகி 5 வருடம் குழந்தை இல்லாத நிலையில் சலிமாவிடம் அவள் தோழி ஒரு கோயிலைப் பற்றிக் கூறுகிறார். அந்தக் கோயிலுக்குச் சென்று எனக்கு பிறக்கும் முதல் குழந்தையை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்று கூறுகிறார்.
அந்தக் குழந்தை சிறிய தலையுடன் பிறக்கும் என்று கூறுகிறார். சலிமா வேண்டிக் கொள்கிறார். அது போலவே அவளுக்கு குழந்தை பிறக்கிறது.
கன்னத்தில் கருப்பு நிற மசாசத்துடன். வலியோடும் வேதனையோடும் அந்தக் குழந்தையை அந்தக் கோவிலில் கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும் அந்தக் குழந்தையின் நினைவு அலைக்கழிக்கிறது. திரும்பவும் சென்று அங்கு பார்க்கிறார்.
ஆனால் அந்தக் குழந்தை அங்கு இல்லை. அதன் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் அந்தக் கன்னத்தில் மச்சத்தோடு பிறந்த குழந்தையை மறக்க முடியாத வலியோடும் வேதனையோடும் சுற்றித் திரியும் பொழுது, அந்த ஊருக்கு வித்தை காண்பிக்க வருகிற ஒரு வித்தைக்கார சிறுவனைப் பார்க்கிறாள். அந்த வித்தைக்கார சிறுவன் கன்னத்தில் கருப்பு நிற மச்சத்தோடு இருக்கிறான்.
யாரவன்?.
குழந்தை இல்லை என்பதற்காக முதல் குழந்தையை தருகிறேன் என்று வேண்டிக் கொண்டாலும் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தையின் இழப்பு என்பது ஒரு தாயின் மனதை எவ்வளவு அலைக்கழிப்பை ஏற்படுத்தும் என்று நுட்பமான உளவியலை உணர்ந்து ஒவ்வொரு வரியிலும் வலியையும் வேதனையும் கடத்தி இருக்கிறார் மண்டோ.
*********
தோற்றுக் கொண்டிருப்பவன் எல்லாவற்றையும் ஜெயித்த பிறகு அதையெல்லாம் தொலைத்து விடுவதில் மகிழ்ச்சி அடையும் ஒருவனான கதையின் நாயகன்.
அவன் எப்பொழுதும் ஜெயிப்பதற்கு கஷ்டப்படவே இல்லை.
ஆனால் அதை இழப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இதை படிக்கும் பொழுது அருணாச்சலம் படத்தில் ரஜினியிடம் கொடுக்கப்பட்ட பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது அதை செலவழிக்க ரஜினி படம் நினைவுக்கு வருகிறது.
ஆனால் இந்த கதையின் நாயகனுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் இவர் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணங்களைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருக்கிறார் .அதற்காக எவ்வளவு மெனக்கடல்களையும் செய்வார். ஆனாலும் இவருக்கு செல்வம் குவிந்து கொண்டிருக்கிறது.
தினமும் கண்டிப்பாக 200 ரூபாயை சூதாட்டத்தில் இழந்தே ஆக வேண்டும் என்று என்ற ஒரு கட்டுப்பாட்டை தனக்குள்ளே விதைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சூதாட்டத்திற்கு போகும் வழியில் ஒரு அசிங்கமான முகத்துடன் கூடிய பாலியல் தொழிலாளி பெண்ணைப் பார்க்கிறார் இனிமேல் நீ இதில் ஈடுபடக்கூடாது நீ சம்பாதிப்பதற்கு மேல் நான் பணம் தருகிறேன் என்று கூறி தினமும் பத்து ரூபாயை அவருக்குக் கொடுக்கிறார்.
ஒரு வாரம் அந்த பெண் அந்த விளக்கிற்கு கீழே வந்து அமரவில்லை ஒரு வாரத்திற்கு பின் வழக்கம்போல தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைக்கும் இடமான அந்த விளக்கு கம்பத்துக்கு கீழ் வந்து அமர்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்து கோபத்தோடு அவளிடம் சென்று கேட்கிறான்.
அப்பொழுது அந்த பாலியல் தொழிலாளி கைக்காட்டும் இடத்தில் ஏராளமான விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
**************
யாசித் அதை இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு நடந்த மறைமுகமான யுத்தத்தை பற்றிய கதை.
இந்தியாவிலிருந்து ஆற்று நீரை பாகிஸ்தானுக்கு வர அனுமதிக்க மறுக்கிறார்கள் இந்தியர்கள் என்ற ஒரு செய்தி பாகிஸ்தானுக்குப் பரவுகிறது.
அங்கு இருக்கும் மக்கள் இந்தியாவில் இருக்கும் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரே ஒருவர் மட்டும் அப்படி பேசக்கூடாது எனும்பொழுது அவரை எதிர்த்து அனைவரும் பேசுகிறார்கள்.
அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது வீட்டிற்கு வந்து குழந்தையைப் பார்த்தவுடன் அந்தக் குழந்தைக்கு யாசித் என்ற பெயர் வைக்கிறார். அந்த யாசிப் அங்கு இருக்கும் புராணக் கதைகளில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்.
பெயரைக் கேட்டதும் மனைவி அதிர்ந்து போக அந்த யாசித் அப்படி இருந்தால் என்ன இந்த ஆசை ஒரு வேலை ஆற்றிலிருந்து நீரை வர வைக்கும் நல்லவனாக இருப்பானோ என்று கூறுகிறார்.
**********
கேள்விக்குறியான கௌரவம் படிக்கும் பொழுது நகைச்சுவை உணர்வு தழும்பி ஓடினாலும் கடைசியாக மீசைக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு மீசையை இழந்தவுடன் அவருடைய கௌரவம் முற்றிலும் அழிந்து விட்டதாக நினைப்பது.
மீசை என்பது மம்மது பாய்க்கு வெறும் மயிர் அல்ல அது அவரின் கௌரவம்..
***************
இப்படி இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம்.
மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளையும் உளவியல் ரீதியான பல்வேறு சிக்கல்களையும் அந்த சிக்கலுக்குள் மனித மனங்கள் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் வாசிக்கும் பொழுது மண்டோ ஒரு மகத்தான எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மகத்தான உன்னதமான மனிதனும் கூட என்பதை உணர முடிகிறது.
குறிப்பாக பெரும்பாலான கதைகளில் விளக்கு வந்து செல்கிறது ஒளி அற்றவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் வருகிறது.
இந்த விளக்காவது அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் தரும் என்று நினைத்தாரோ என்னவோ.
மனதைக் குத்தி கிழிக்கும் நேரத்தில் தெறித்த ரத்தக்காயங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மண்டோ படைப்புகள்.
மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு.
வாசிக்க வாசிக்க ஆக்டோபஸ் கரங்களால் கதைகள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கின்றன.

Friday, 30 January 2026

கேட்காத அசரீரி

 

கேட்காத அசரீரி

உதயசங்கர்





"ஹே... ராம்..." என்ற கூவலுடன் மகாத்மா நடைபாதையிலிருந்து பின்புறமாக புல்தரையில் மடங்கி விழுந்தார். நெஞ்சில் தாங்க முடியாத வலி.சூடான இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. சுதந்திர அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து முடித்து சில நாட்களே ஆகியிருந்தன. உடல் பலமிழந்து காற்றாகி விட்டிருந்தது. சுற்றிலும் கலவரமான குரல்கள் கேட்டன. மெல்ல நினைவு தப்பிக் கொண்டிருந்தது. அவர் வெகுகாலமாகவே எதிர்பார்த்திருந்தது போலவும், இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேன்டும் என்பதை ஏற்கனவே ஒத்திகை பார்த்திருந்தது போலவும் அமைதியாகக் கிடந்தார். வேதனைக் கூக்குரலோ, உடல் அலட்டலோ இல்லை. மிகுந்த மனநிறைவுடன் உறங்கச் செல்லும் ஒருவரைப் போலவே படுத்திருந்தார். உதடுகளில் கூட இனிய கனவினைக் காணும் ஒரு குழந்தையினைப் போல ஒரு சிரிப்பு நெளிந்து நின்றது.சுடப்பட்டு கீழே விழும்போது தன்னைச் சுட்டவனை, தன்னையறியாமலேயே கையை உயர்த்தி ஆசிர்வதித்தது. அவருக்கே திருப்தியளித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

வாழ்க்கையும், கடவுள் மீதான தீவிர நம்பிக்கையும் அவருக்களித்த அந்த ஆசிர்வாதம் உண்மையில், பிடிவாதமான அவருடைய துறவு ஆன்மீகபலம் தானா அல்லது நோயினால் படுக்கையில் படுத்து, அவஸ்தைக்குள்ளாக்கி, எப்போது இந்தக் கிழவர் போய்ச்சேருவார் என்று படுக்கைப் புண் வந்து உயிரின் வேதனையில் கூக்குரலிட்டு, எல்லோரையும் எல்லோரும் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு அலைகிற சூழ்நிலையை மாற்றியமைத்தற்காகவா? என்று அவருக்கே தெரியவில்லை. அது தன்னிச்சையாகவே நடந்து விட்டது. ஒரு வேளை குனிந்து கால்களைத் தொடவிரும்பிய அவனை ஆசிர்வாதம் செய்வதற்காக ஏற்கனவே உயர்த்த நினைத்த கை இப்போது இதுவரை கம்பீரமாக வெளியுலகிற்கு காட்டியிருந்த ஆன்மீக பலத்தையும் வெளிக்காட்டி விட்டது.



தன்னிச்சையாக நடந்த அந்த நிகழ்வு, அவர் எதிர்பார்த்தத்திற்கும் மேலாக ஒரு பரிபூரணமான நிகழ்வாக நடந்து முடிந்து விட்டது என்று நினைத்தார். பிரிவினைக்குப் பிறகு இப்படியான ஒரு விபத்தை எப்போதும் எதிர்நோக்கியிருந்தார் என்பது உண்மைதான். இதை தன் பேத்தி மனுவிடம் அடிக்கடி சொல்லவும் செய்திருக்கிறார்.அதனால் தான் காவல்துறைத் தலைவர் காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காவலர்களை அனுப்புவதாகச் சொன்னபோது அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். பிரார்த்தனையின்போது இறந்து போவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்றார். எந்த விநாடியிலும் தான் இறந்து போக நேரிடலாம் என்பதை அவரே தெரிந்து வைத்திருந்தார். ஆனால் அவரைச் சுட்டவனின் கண்கள். அதில் தெரிந்த வெறுப்பின் தீர்க்கம். எந்த சஞ்சலமுமில்லாத கசப்பின் வன்மம். தான் செய்கிற காரியத்தைப் பற்றி, அதன் பின் விளைவுகளைப் பற்றி முற்றிலும் தெரிந்த ஒருவனின் உறுதியான அந்த முகம். அதைக்கண்டு தான் அவர் உண்மையில் பயந்தார். உணர்ச்சிமயத்தினால் உந்தப்பட்டு, நிறையப் பேர் அவருடைய அமைதி யாத்திரையின் போது இடையூறு செய்திருக்கிறார்கள். பிரிவினையின்போது, கல்கத்தாவில் அவர் இருந்த ஹைதாரி இல்லத்தில் கூட அவர்மீது தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல், கற்களையும், செருப்புகளையும் எறிவதை அவர் எதிர்கொண்டிருக்கிறார். அப்போது உடனிருப்பவர்களின் எந்த எச்சரிக்கை வார்த்தையையும் அவர் கேட்டதில்லை. ஏனென்றால் எந்த கும்பலின் உணர்ச்சி வெள்ளத்தையும் வடிய வைக்கிற மந்திரசக்தி அவரிடம் இருந்தது. அங்கமாலியை எதிர்கொண்ட புத்தரைப் போல அவர் அவர்களுக்கு நடுவே போனார். அவர்களை தன் கண்களால் நேருக்கு நேர் பார்த்தார். அந்தக் கண்களில் இருந்த வெறுப்பை, கசப்பை, விரக்தியை, கோபத்தை தன் அன்பென்னும் மாய ஒளியினால் மாற்றி விடுவார்.

ت நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அவர் பேசும் வார்த்தைகளின் வலிமை அவர்களுடைய காயங்களுக்கு மருந்து தடவும் சில விநாடிகளிலேயே அவர்களைத் தன் வசப்படுத்தி விடுவார்.


அவர்கள் எத்தகைய கொலைவெறியோடு வந்திருந்தாலும் சரி மாயம் போல அவர்களை மாற்றி ஆயுதங்களைக் கீழே போடவைத்து, அவருடன் சேர்ந்து ராட்டையைச் சுற்ற வைத்து விடுவார். சுற்றும் ராட்டையின் கிளிக்கிளிக் சத்தத்தில் அன்பின், சகிப்புத்தன்மையின் பெருந்தியைப் பிரவகிக்கச் செய்து விடுவார்.



ஆனால் இப்போது அவரைச் சுட்டவனின் கண்களை அவர் கண்கள் சந்தித்தபோது, அது உணர்ச்சியற்று பளிங்கினைப் போலத் தெளிவாக இருந்தது. இத்தனை ஆண்டு கால பிரார்த்தனையில் அவர் ஈட்டியிருந்த தவவலிமை, அருகில் யார் வந்தாலும் வசீகரித்து தன்வசப்படுத்தும் மந்திர சக்தி, அவருடைய ஒளிவீசும் மனஉறுதி, உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் வெளிக்கிளம்பும் மகத்துவமான அன்பு எல்லாம் அவன் கண்களில் முட்டி மோதி வீழ்ந்தன. கருங்கற் சுவர் போல உணர்ச்சியின் எந்த பாவமுமில்லாமலிருந்தன அந்தக் கண்கள்.



காலம் காலமாக விஷத்தை ஊற்றி வளர்த்த விரோதத்தின் கூர்மையான வாளை அவர் அந்தக் கண்களில் பார்த்தார். அந்த விரோதம் அவர் மீதான விரோதம் என்று அவர் நினைக்கவில்லை. அது மனிதகுலத்தின் மீதான விரோதமாக இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இன்று நேற்றல்ல, காலம் காலமாக மனித இனத்தின் விரோதிகள் வளர்த்து வந்த துவேஷம். அது நேற்று கூட இட்லர் என்ற உருவத்தில் உலகில் உலா வந்தது. அன்பு, தியாகம், ஒற்றுமை, சகிப்புத்தன்மை எல்லாவற்றுக்கும் எதிராகத் தனது அதிகாரக் கொடுவாளினை வீசுகிற துவேஷம். அதுதான் அவரை மிகவும் பயமுறுத்தியது.



அவர் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் ஆன இந்த விரோதத்தையும் இதற்குப் பின்னாலிருக்கக் கூடிய விரோதம் வளர்க்கக் கூடிய அமைப்பைப் குறித்தும், அவருக்கு முதன்முதலாகப் பயம் வந்தது. சுட்டவன் யார்? எதற்காகச் சுட்டான் என்பதை சுடுகின்ற அந்தக் கணத்திலேயே அவர் உணர்ந்துகொண்டார்.



சாதாரணமாக, பிரிவினையின் கொடுஞ்செயல்களால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு அப்பாவி இந்தியன் அல்லது பாகிஸ்தானி உணர்ச்சிக் கொந்தளிப்பில் இந்தக் காரியத்தைச் செய்திருந்தால் அவர் பயந்திருக்கமாட்டார். ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லையே.



ஏற்கனவே அவனும் அவனது அமைப்பும் விதைத்திருந்த விஷ விதைகள் இந்த மண்ணை மரணபூமியாக்கியிருந்தன. அப்பாவி ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் தாங்கள் எதற்காகக் கொல்லப்படுகிறோம் என்பது தெரியாமலேயே செத்துப்போனார்கள். அவர்களுடைய உயிரைப் படுபாதகங்களைச் செய்யச் சொல்லி எந்தக் கடவுள் ஆசிர்வதித்தார். பறிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தார்கள்? இப்படிப்பட்ட இந்தக் கேள்விகளின் தார்மீகத்தையெல்லாம் தன் அதிகார ஆசையினால் வெட்டித் தள்ளிய அமைப்பின் பிரதிநிதி என்பதை புரிந்து கொண்டதனால் ஒரு சிறு நடுக்கம் மகாத்மாவின் உடலில் ஏற்பட்டது.



அவருடைய அரசியல் வாரிசுகளிடம் இப்போது அதிகாரத்தை ருசிக்கின்ற ஆசை வந்து விட்டது. வழி நடத்தவேண்டிய தலைவர்களே கருத்து வேறுபாட்டில் வழி பிரிந்து நடக்கிறார்கள். விடுதலை பெற்ற சில மாதங்களிலேயே நிலைமை இப்படியென்றால் எதிர்காலத்தில்? விடுதலையடைந்ததும் காங்கிரசைக் கலைத்துவிடவேண்டும் என்று தான் எழுதியது எவ்வளவு சரியான விஷயம். பதவிகள் தரும் சுகத்திற்காக எந்த சமரசத்துக்கும் தயாராக இவர்களே இருக்கிறபோது, இவர்களுடைய வாரிசுகள் எத்தகைய அரசியல் ஊசலாட்டத்தில் இருப்பார்கள். அதன் விளைவுகள் என்னவாகும்? என்று யோசித்தபோது முதல்முறையாக மகாத்மாவுக்கு இறந்து போவதில் விருப்பமில்லாமல் போனது. அதுவும் இப்போது.உயிர்வாழவேண்டும் என்று விரும்பினார். கை விரல்களை அசைத்து மனுவைக் கூப்பிட நினைத்தார்.



உன்ணா விரதங்களின் போது ஆபத்தான நிலைமையில் அவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோதெல்லாம், அவர் அமைதியாக,



என்னை எப்போது அழைக்க வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும்.... அவர் முடிவு செய்துவிட்டால் யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது... அப்படியில்லையென்றால் யாராலும் என்னைக் கொல்லவும் முடியாது..."

என்று சொல்லியிருக்கிறார். கடவுள் இப்போது முடிவு செய்து விட்டாரா. இப்போது அவருக்கே குழப்பமாய் இருந்தது. நினைவு சிறிது சிறிதாக மங்கிக்கொண்டே வந்தது. கடவுள் அவசரப்பட்டு விட்டாரோ. அவர் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் எல்லாம் அவருடைய அந்தராத்மாவில் கேட்கும் குரலுக்காகக் காத்திருப்பார். அது ஒரு அசரீரி போல ஒலிக்கும். இதுவரை அந்தக் குரலின் அசரீரி அவரைக் கை விட்டதேயில்லை. சரியான திசையிலேயே வழிநடத்திச் சென்றிருக்கிறது. இப்போது அவர் வேண்டினார். அந்த அசரீரியின் குரலைக் கேட்க விரும்பினார்.



இன்னும் கொஞ்ச நாள் இருந்தால், இந்த விரோத உணர்வை அன்பின் மூலம் சகிப்புத்தன்மையின் மூலம் மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம். இல்லையென்றால், வேரோடு வெட்டி வீழ்த்தும் ஆன்மீகபலத்தையும் அரசியல் உறுதியையும் இந்தியா பெறுகின்றவரை கொஞ்சநாள் உயிரோடிருக்க வேண்டும். ஏன் இன்னும் என் அந்தராத்மாவின் ரகசியக்குரல் கேட்கவில்லை.

 

என் நினைவு கீழேயே போய்க் கொண்டேயிருக்கிறதே. மூடிக்கொண்டே வருவது? என் வேண்டுகோள் உன் காதுகளில் ஐயோ கடவுளே... யார் அது மாயப்போர்வையால் கால்களிலிருந்து விழவில்லையா... எங்கே போனது என் அந்தராத்மா? யார் என் தலையை வருடிக்கொண்டிருப்பது மனுவா... மனு... என் பிரியத்துக்குரிய மனு.. உன்னிடமாவது சில வார்த்தைகளைச் சொல்ல ஆசைப்படுகிறேன் மனு. என்னைச் சுட்டவனின் கண்களைப் பற்றி, அந்தக் கண்களின் வெறுப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். அந்த வெறுப்பு இந்தியா முழுவதும் தீயை பரப்புகிற வெறுப்பு. ஆனால் மனு என் வாயைத் திறக்க முடியவில்லையே. என் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டேயிருந்த அந்த அசரீரி இப்போது என்னைக் கைவிட்டுவிட்டது மனு. கடவுள் என்னை அழைத்துக் கொள்ள முடிவுசெய்து விட்டார் போல. மனு இன்னுங் கொஞ்சநாள் இருந்தால் நான் ஏதாவது அறியாமல் தவறுகள் செய்திருந்தால் அதைக்கூட மாற்றிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்தக் கண்களின் வெறுப்பை பார்க்கும் போது நான் ஏதோ தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றுகிறது மனு... உனக்காவது என் அந்தராத்மாவின் அசரீரி கேட்கிறதா... மனு... என் நிழலாக இருந்தாயே... உனக்குக் கூட கேட்கவில்லையா. ஐயோ... எதிர்காலத்தில் என்னவாகும் என் அருமை இந்தியா... கடவுளே... இன்னும் கொஞ்சநாள்... மகாத்மா கண்களைத் திறக்க முயற்சி செய்தார்.



'ஓர் முக்கிய அறிவிப்பு. டெல்லியிலுள்ள பிர்லா மாளிகையின் தோட்டத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாலை 5.17 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவன் ஒரு இந்து

செய்தி வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.

( உதயசங்கர் சிறுகதைகள் )