Saturday 23 February 2013

வெற்றி தோல்வி என்பது சமகால மதிப்பீடு அல்ல!

எழுத்தாளர் உதயசங்கருடன் ஒரு நேர்காணல் – திருவுடையான்DSC01583

( எட்டு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து கவிதைத் தொகுதிகள்,குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று,ஐம்பதுக்குமேற்பட்ட மொழிபெயர்ப்புப் புத்தகங்கள், குழந்தை இலக்கியத்தில் முக்கியப்பங்களிப்பு, என இயங்கி வரும் எழுத்தாளர் உதயசங்கர் சமகாலத்தில் உரிய கவனிப்பு பெறாதவர் என விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். தமிழின் ஆகச் சிறந்த கதைகள் பலவற்றுக்குச் சொந்தக்காரரான உதயசங்கர் ஒரு படைப்பிலக்கியவாதியின் வெற்றி-தோல்வி என்பது சமகால மதிப்பீடு அல்ல என்கிறார். இவரது திரைக்கதை,வசனம்,பாடல்களில் உருவான நினைவோடு கலந்து விடு என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. )

1 . 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இப்பயணம் பல வெற்றி - தோல்விகளைக் கொண்டதாக இருக்கும். இதில் சலிப்பில்லாமல் பயணிக்கும் துணிச்சலை எவ்வாறு பெற்றீர்கள்?

30 ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதை மிக அதிகமான காலம் என்று நான் நினைக்கவில்லை. எழுத்து என்னைத் தன்வயப்படுத்திய பின் எழுதிக் கொண்டிருப்பது என் வாழ்வின் அர்த்தம் என்று நான் இயல்பாகவே எடுத்துக்கொண்டேன். மகத்தான மானுடவாழ்வின் இருண்ட பக்கங்களையும், ஒளிவீசும் நம்பிக்கைகளையும் கலை இலக்கியத்தைத் தவிர வேறு எதனால் சொல்லிவிட முடியும். மனிதமனதின் அத்தனை சலனங்களை, ஆசைகளை, லட்சியங்களை, குரூரங்களை, அன்பை, நேசத்தை, வெறுப்பை கசப்பை, எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் மீண்டும் அந்த மனிதமனதின் முன் எடுத்தியம்புகிறார்கள். மனிதன் உள்ளும்புறமுமாக தன்னை ஒருமுறை திரும்பிப்பார்த்துக்கொள்கிறான். தன் மேன்மைகளையும் கசடுகளையும் அறிந்து கொள்கிறான். அதன் மூலம் தன்னையும் வாழ்வையும் புரிந்துகொள்கிறான். இலக்கியவாதி இத்தகைய மகத்தான காரியத்தைச் செய்யவே தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். அதில் அவன் எந்த அளவுக்கு வெற்றியடைகிறான் அல்லது தோல்வியடைகிறான் என்பது வேறு விஷயம். பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா. எம்.வி.வி, கரிச்சான்குஞ்சு, தொடங்கி இன்று வரை இலக்கியவாதிகள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மானுடவாழ்வுக்காக அர்ப்பணித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். எழுத்தில் இயங்குவதில் எனக்குச் சலிப்பேற்பட்டதில்லை. அது இன்னும் இன்னும் தாகமேற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.

இலக்கியத்தில் வெற்றி தோல்வி என்று கணிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் இது பந்தயப்போட்டி இல்லையே. பரவலான வாசிப்பு அதன் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதுவும் சந்தேகத்துக்குரியதே. ப.சிங்காரம் எழுதிய காலத்தில் அவருடைய புயலிலே ஒரு தோணி பேசப்படவில்லை. ஆனால் பின்னர் பேசப்பட்டது. கொண்டாடப்பட்டது. அதே போல வணிகப்பத்திரிகைகளில் எழுதிப் பரபரப்பாகப் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் அந்தக்காலத்திற்குப் பிறகு மறைந்து போயிருக்கின்றன. எனவே இப்போது பரவலாக வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் படைப்புகள் உன்னதமானவை என்றோ பரவலாக வாசிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத படைப்புகள் சாதாரணமானவையென்றோ சொல்லி விட முடியாதென்றே அஞ்சுகிறேன்.

அந்த வகையில் என்னுடைய இலக்கியப்பயணத்தில் சில படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் சில படைப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. அங்கீகரிக்கப்படும்போது எவ்வளவு உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு அடுத்த படைப்பை நோக்கி பயணிக்கிறேனோ அதே போல அலட்சியப்படுத்தப்படும்போதும் அதே தீவிரமான வலியோடு அடுத்த படைப்பை நோக்கிப் பயணிக்கிறேன்.

2. கவிதை - சிறுகதை - மீண்டும் கவிதை, குறுநாவல்கள்- மொழிபெயர்ப்பு- குழந்தை இலக்கியம்- மீண்டும் சிறுகதைகள்- நான் பிக்சன் - திரைக்கதை உருவாக்கம் என ஒரு மாதிரியான ‘ரைட்டா- தப்பா?’ விளையாட்டு போல ஒன்றுக்கு ஒன்று ரிலீஃபாக இருந்ததா?

கவிதை, சிறுகதை, குறுநாவல், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, என்ற எல்லாவகைமைகளும் இலக்கியத்தின் உள்ளடங்குபவை தானே. எழுத்தாளன் என்பவன் அவனுக்கு விருப்பமிருந்தால் மேலே குறிப்பிட்ட இன்னும் குறிப்பிடப்படாத எல்லா இலக்கியவகைமைகளையும் கைக்கொள்கிறவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அத்துடன் ஒருவன் ஏன் எழுதுகிறான்? என்ற கேள்விக்குப் பின்னால் ஆயிரம் காரணகாரியங்கள் இருந்தாலும் மிக அடிப்படையான ஒரு காரணம் இருக்கிறது. அவனுக்கென்று பிரத்யேகமாக இந்த உலகத்தைப்பற்றி, மனித வாழ்வைப்பற்றிச் சொல்வதற்கு ஏதோ இருக்கிற காரணத்தினால் தான் அவன் எழுதுகிறான் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தான் சொல்ல விரும்புவதை எந்த இலக்கியவகைமையில் சொன்னால் அது வாசகரைப் பாதிக்கும் என்று நினைக்கிறானோ அந்த வகைமையில் சொல்ல அவன் அதை பழகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாரதி, புதுமைப்பித்தன் தொடங்கி ஏராளமான எழுத்தாளர்கள் பல இலக்கிய வகைமைகளில் எழுதியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மேலே சொன்ன காரணங்களோடு என் படைப்புகள் கவனிக்கப்படாமல் போகிறபோது ஏற்படும் சோர்வினால் நான் மூழ்கி விடாமல் அடுத்த இலக்கிய வகைமைக்குள் பயணம் செய்து என்னை மீட்டெடுத்துக் கொள்வேன். அதன் மூலம் எனக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றிக் கொள்வேன். இதுவா அல்லது அதுவா என்ற ஒற்றைநிலையை விட இதுவும் அதுவும் என்ற பன்முகநிலை என் மனதுக்கு உகந்ததாக இருக்கிறது

3. 1980 களின் பொற்காலம் என அழைக்கப்பட்ட கோவில்பட்டி உங்களுக்குக் கொடுத்தது என்ன?

கோவில்பட்டி என்ற சிறுநகரம் தன்னுடைய கந்தகபூமியின் வெம்மையையும், விருவோடிக்கிடக்கும் கரிசக்காட்டின் சுழன்றடிக்கும் பெருமூச்சை எங்களுக்குத் தந்தது. தீப்பெட்டியாபீஸ்களிலும், வேட்டாபீஸ்களிலும், தங்கள் உயிரைப் பணயம் வைத்த மக்களின் அழுகையையும் சிரிப்பையும் எங்களுக்குள் கடத்தியது. பாரதி, வ.உ.சி., என்று போராளிகள் நடந்து திரிந்த மண்ணாக இருந்தது. விவசாயிகளின் எழுச்சிக்களமாக இருந்தது கோவில்பட்டி. எனவே இடதுசாரிகள் இந்த மண்ணில் வேரூன்றினார்கள். இளமைப்பருவத்தில் எங்களுக்கு அரசியல்,தத்துவம், இலக்கியம், என்று எல்லாவற்றையும் போதித்த ஞானமரமாக கோவில்பட்டி இருந்தது. நாங்கள் வாழ்வை எதிர்கொள்ள தைரியமளித்தது. காருக்குறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சாமிகள்,கு.அழகிரிசாமி, கி.ரா,, போன்ற கலைஞர்கள் தங்கள் இருப்பினாலேயே எங்களுக்கு உத்வேகமளித்தார்கள். தயக்கமும், தாழ்வுமனப்பான்மையுமிக்க என்னை வாரியணைத்து பால்வண்ணம், தேவப்பிரகாஷ், பாலு, நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, சிவசு, , போன்ற சகதோழர்களை எனக்களித்தது கோவில்பட்டி தான். பூமணி, தேவதச்சன், அப்பாஸ், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், தமிழ்ச்செல்வன், கோணங்கி, சோ.தர்மன், அப்பணசாமி, மாரீஸ், போன்ற இலக்கியவாதிகளை தமிழிலக்கியத்துக்குக் கொடுத்ததும் கோவில்பட்டிதான். இன்னும் சொல்லப்போனால் என்னை இங்ஙனம் ஆக்கியது என் ஊர் என்றால் . மிகையில்லை

4. இப்போது திரும்பிப் பார்க்கையில் எதிர்பார்த்ததை கோவில்பட்டி வழங்கியதாக நினைக்கிறீர்களா? அல்லது தமிழ் இலக்கியத்துக்கு கோவில்பட்டி வழங்கிய கொடை என்ன?

எல்லோரிடமும் அவரவர் ஊர் பேசிக்கொண்டிருக்கிறது. அதன் மொழி புரியாதவர்களுக்கு அந்த ஊரின் ரகசியங்களோ, செல்வங்களோ, புதையல்களோ, சாபங்களோ, தெரியாது. 80-களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கொடுத்தது கோவில்பட்டி. உலக இலக்கியவாதிகளை கோவில்பட்டித் தெருக்களில் அலைய விட்டது. தகிக்கும் எங்கள் விவாதங்களின்போது தெருக்களில், டீக்கடைகளில், கீழே சிதறி விழுந்த சொற்களை தன்இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டு எங்களை ஆற்றுப்படுத்தியது.. எங்கள் பண்பாட்டு நடவடிக்கைகளை, வீதி நாடகங்கள், பிக்காசோ நூற்றாண்டு கண்காட்சி, கார்ட்டூன் கண்காட்சி, யுத்த எதிர்ப்புக்கண்காட்சி, சமாதானக்கண்காட்சி, ஊக்குவித்தது. தமிழகத்தின் எல்லாத்திசைகளிலிருந்தும் கலைஞர்களை ஈர்த்தது. குறுகிய காலவர்த்தமானங்களைக் கடந்த ஊராக கோவில்பட்டி திகழ்ந்தது. தமிழிலக்கியத்துக்கு யாராலும் புறக்கணிக்க முடியாத படைப்பாளிகளான கு.அழகிரிசாமி, கி.ரா, பூமணி, தேவதச்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, சோ.தர்மன் போன்றவர்களைக் கொடையாகக் கொடுத்திருக்கிறது. அதேபோல நாவல், சிறுகதை, கவிதை, என்று எல்லாவகைமைகளிலும் தமிழிலக்கியத்துக்கு குறிப்பிடத்தகுந்த படைப்புகளைப் பங்களித்திருக்கிறது.

5) உங்கள் சிறுகதைகள் குறித்த சிறந்த மதிப்பீட்டினை க.நா.சு போன்றவர்கள் அளித்தனர். ஆனால் அந்த அளவுக்கு நீங்கள் நெருக்கமாகச் செயல்படும் இயக்கங்கள் உங்கள் படைப்புகள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன் வைத்ததா?

என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியான யாவர் வீட்டிலும் வெளியான போது க.நா.சு. அதைப்பாராட்டி எழுதியிருந்தார். அவருக்கு அந்தத் தொகுதியைக் கொடுத்தது வெங்கட்சாமிநாதன் என்று கேள்விப்பட்டேன். பின்னர் வெங்கட்சாமிநாதன் சாகித்ய அகாடமி வெளியிட்ட தமிழ்ச்சிறுகதைகளின் ஹிந்தி மொழிபெயர்ப்பு நூலிலும் என்னுடைய இரண்டாவது சிறுகதைத்தொகுதியான நீலக்கனவு நூலிலிருந்து அய்யம்பெருமாள் என்றொரு மனிதர் என்ற கதையைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துச் சேர்த்திருந்தார். நீலக்கனவு தொகுதிக்கு லில்லிதெய்வசிகாமணி சிறப்புப்பரிசும் கிடைத்தது. நான் சார்ந்திருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களான மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், அவ்வப்போது என் படைப்புகள் குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அமைப்பிலிருந்து எந்த ஒரு எழுத்தாளருக்கும் விமர்சனம் செய்வதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.

6. அதிகம் மறுக்கப்பட்ட (கவனிக்கப்படாத) சிறுகதை எழுத்தாளராகச் அதிகமாகச் சொல்லப்படுகிறீர்கள்.. ஏன் கவனிக்கப்பட வில்லை?

அப்படி மொத்தமாகக் கவனிக்கப்படாத எழுத்தாளர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் போதுமான அளவுக்குக் கவனிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதோடு இதெல்லாம் ஒருவகையில் ரிலேட்டிவ்வான விஷயம். இதில் இன்னும் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு படைப்பாளிக்கும் தான் முழுவதும் கவனிக்கப்பட்டதாகவோ, தன் படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவோ திருப்தி வராது. மற்றொன்று இன்றையச் சூழ்நிலையில் ஒரு படைப்பாளி கவனிக்கப்படுவதற்கு அவருடைய எழுதினால் மட்டும் போதாது. அதாவது எழுதுவது, புத்தகம் போடுவது,என்பதோடு மட்டும் முடிந்துபோவதில்லை. அதை புரோமோட் செய்ய அந்தப்படைப்பாளியே எல்லாமுயற்சிகளையும் எடுக்க வேண்டியிருக்கிறது. இலக்கிய நண்பர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு விமர்சகர்களுக்கு, அனுப்பி அவர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பது, கூட்டங்கள் நடத்துவது, மதிப்புரைகளை எழுதி வாங்கி அதை சரியான பத்திரிகைகளில் வரவழைப்பது, என்று படைப்பாளியே தன்முனைப்புடன் இறங்கி வேலை செய்யவேண்டும். எல்லாம் சரியாக அமைந்து, அந்தப்படைப்பும் நல்ல படைப்பாக அமைந்து விட்டால் பரவலாக கவனிக்கப்படுதலும் அங்கீகரித்தலும் நடைபெறுகிறது. இன்றைய உலகமயச்சூழலுக்கு ஏற்ப இது போட்டிப்பந்தயமாகவே மாறி விட்டது. எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். என்னைப்போல தன்முனைப்பு குறைவான எழுத்தாளர்களுக்கு தற்செயலாக ஏதாவது நடந்தால் தான் உண்டு

7. சோஷலிச யதார்த்த வாதம் கிட்டத்தட்ட காலாவதி ஆகிவிட்ட இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வாழ்க்கையை இசங்களுக்குள் அடக்க முடியாது. ஆனால் வாழ்க்கையில் எல்லா இசங்களுக்கும் இடமிருக்கிறது. அதுதான் இந்த வாழ்க்கையை வசீகரமிக்கதாக ஆக்குகிறது. எனவே சோசலிசயதார்த்தவாதம் முற்றிலும் காலாவதி ஆகிவிடாது என்று நினைக்கிறேன். மானுடவாழ்வில் பொருளில்லாமை, ஏற்றத்தாழ்வு, சமநிலையின்மை, இருக்கும்வரை சோசலிசயதார்த்தவாதம் இருந்து கொண்டேயிருக்கும் மாறியுள்ள சூழலுக்கேற்ப தன்னை புணருத்தாரணம் செய்து கொள்ளும்..

8. நீண்டகாலமாக தமுஎச போன்ற அமைப்பில் செயல்படுகிறீர்கள். ஒருகாலத்தில் புதுமைப்பித்தனையே வறட்டு இலக்கியவாதி என்றனர். கு.ப.ரா போன்ற மேதைகளை நச்சிலக்கியம் என்றனர். புதுக்கவிதை எழுதுபவர்கள், சிறுபத்திரிகை ஆதரவாளர்கள், வீதி நாடகம் போடுபவர்களை சி ஐ ஏ ஏஜண்ட் என்றனர். இப்போது அந்தத் தடமே இல்லாமல் மாறியிருக்கிறது. இந்த மாற்றத்தை அமைப்பு ஏற்றுக்கொள்கிறதா? ஒரு உண்மையான கலைஞன் இவற்றைச் சகித்துக் கொள்வதெப்படி?

படைப்பாளிகளும் பண்பாட்டு ஊழியர்களும் கொண்ட கலாச்சார அமைப்பில் கலை இலக்கிய,பண்பாட்டு விஷயங்களை விட பொருளாதார அரசியல் காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாலும், அமைப்பு அப்போது தான் பாலபருவம் தாண்டியிருந்ததாலும் முதிர்ச்சியின்மையானாலும் சில விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. சில விஷயங்கள் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டன. ஆனால் அமைப்புக்குள்ளிருந்து நடந்த போராட்டங்களினால் வெகுசீக்கிரத்திலேயே தவறான தன் புரிந்துகொள்ளலை சரிசெய்து கொண்டது. சரி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்தக்காலத்திலும் அமைப்பிலுள்ள படைப்பாளிகளைக் கட்டுப்படுத்தியதோ, படைப்பு சுதந்திரத்தில் தலையிட்டதோ இல்லை. இன்றையச்சூழலில் இத்தகையதொரு பண்பாட்டு அமைப்பின் தேவையை கட்டாயம் எல்லோரும் உணரமுடியும்.

9. தற்போது இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் அடையாளம் சார்ந்ததாக, சாதி, மொழி மற்றும் இனக்குழு என்ற வட்டங்களுக்குள் சிக்குண்டிருக்கிறது. அல்லது கட்சி சார்ந்த அதிகார அரசியலை மையப்படுத்தியதாக உள்ளது. இந்த வட்டங்களுக்குள் இல்லாத ஒரு படைப்பாளி காணாமல் போகும் நிலை உள்ளது? (விருப்பம் இருந்தால் பதிலளிக்கலாம்.)

90-களுக்குப்பின் எழுந்து வந்த பின்நவீனச்சூழல் சமூகத்தை அடையாள அரசியலால் கூறு போட்டது. அதன் விளைவாக சாதிய, இன, மொழி சார்ந்த முக்கியத்துவம் முன்னுக்கு வந்தது. சமூகத்தின் விளைபொருளான இலக்கியமும் அதன் தாக்கத்திற்கு உள்ளானது. இன்று குழுசார்ந்த படைப்பாளிகளும் அதிகாரமையம் சார்ந்த படைப்பாளிகளும் தங்களுடைய அடையாளம் சார்ந்த படைப்புகளை முன்னிறுத்துகின்றனர். இன்று மதிப்பீடுகளை நீங்கள் விலைக்கு வாங்கி விடலாம். உருவாக்கலாம். விற்கலாம். இத்தகையச் சூழலில் எந்தக்குழுவையும் சாராமல், எந்த அடையாள அரசியலின் வலையிலும் சிக்காமல் ஒருபடைப்பாளி இருப்பதென்பது மிகப்பெரிய சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியாமல் படைப்பாளிகள் ஏதாவது ஒரு அடையாளக்குழுவில் இணைந்து கொள்கிறார்கள். இன்றைய நவீன வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பிரதிபலிக்கிற படைப்பாளிகள் இந்த நெருக்கடிகளின் வேரைத் தேடிச் செல்ல விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழலைப்புரிந்து கொள்வதற்கும், படைப்பியக்கத்தில் இயங்குவதற்கும் மார்க்சியம், துணை செய்யும் என்று நம்புகிறேன்.

10. இன்றைய முக்கியப் பண்பாட்டு விழுமியங்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

இன்றைய முக்கியமான பண்பாட்டு விழுமியம் என்று சொல்லும்போது அடையாள அரசியலின் விளைவாக மக்களை சிறு சிறு கூறுகளாக பிரித்து வைத்திருக்கும் சாதிய அடையாள பண்பாட்டு அரசியல் தான் முக்கியமானதாகத் தோன்றுகிறது.90-களில் சாதிய அரசியல் முன்னுக்கு வந்ததின் விளைவு பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக சிந்தனையாளர்கள் சாதியத்துக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்த முற்போக்கு ஜனநாயக உணர்வை சடுதியில் மாற்றி விட்டது. இதில் விநோதம் என்னவென்றால் எந்த சாதியம் ஓழிய தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்களோ அந்தத் தலைவர்களை சாதிய அடையாளக் கட்சிகளே தங்கள் பதாகைகளில் பொறித்துக் கொண்டனர். இப்போது சாதியத் தூய்மை பற்றிப் பேசவும் அதற்காக சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கவும் துணிந்துள்ளனர். தொல்காப்பியக்காலத்திலிருந்தே உருவாகி வர்ணாசிரமக்கோட்பாடு முறை இன்னும் தன் இளகவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒரே நேரத்தில் உலகமயமாக்கலின் விளைவாக உணவு, உடை, பழக்கவக்கங்கள் ஆகியவற்றில் மேற்கத்திய மனதையும், உள்ளே அழுகிப் புழு வைத்த சாதிய மனமும் கொண்டு இன்றைய சிவில் சமூகம் இருக்கிறது. இத்தனை சீக்கிரமாய் இது மீண்டும் உயிர்த்தெழ வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இடதுசாரிகளிடம் பண்பாட்டு விழுமியங்கள் குறித்த அக்கறையின்மை, சாதியத்தை எதிர்கொள்ள திட்டமின்மை, பண்பாட்டுத்தளத்தில் பிற மாற்றுப்பண்பாட்டுச் சிந்தனையாளர்களுடன் ஒருங்கிணைப்பின்மை என்று சொல்லலாம். ஒரு விரிந்த அளவில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், பெரியாரியவாதிகள், பெண்ணியவாதிகள், பாலினச்சிறுபான்மையினர், சமூகமாற்றத்தில் அக்கறையுள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள், உண்மையான ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள், என மாற்று பண்பாட்டு ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து பண்பாட்டுத் தளத்தில் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். இன்று உடனடியாக செய்ய வேண்டிய காரியம் இது என்று உணர்கிறேன்.

11. மொழிபெயர்ப்பில் ஈடுபட நேர்ந்தது எப்படி?

மலையாளத்திலிருந்து வைக்கம் முகமது பஷீரின் சப்தங்கள், மலையாளச்சிறுகதைகள், எம்.டி.வாசுதேவன் நாயரின் தயா, மாதவிக்குட்டி கதைகள், முல்லக்கோயாவின் லட்சத்தீவின் ராக்கதைகள், லட்சத்தீவின் கிராமியக்கதைகள், கிரேஸியின் சிறுகதைகள், குழந்தைகளுக்கான சிறிய படக்கதைகள் ஐம்பது புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். 80-களில் இலக்கியநூல்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மலையாள இலக்கியத்தின் மீதும், வங்க இலக்கியத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. குறிப்பாக பஷீரின் இளம்பருவத்துத்தோழியும், பாத்தும்மாவின் ஆடும், எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, என்னை மிகவும் கவர்ந்தன. எனக்கு வேலை கிடைத்து சேர்ந்த ரயில்வே ஸ்டேஷனில் என்னுடன் பணிபுரிந்த சகாவான டி.என்.வெங்கடேஸ்வரனிடம் அட்சரம் கற்றுக்கொண்டு மலையாளம் படித்தேன். பின்னர் நெய்வேலி மூழிக்குளம் ஆர்.சசிதரனும், குறிஞ்சிவேலனும் என்னுடைய மொழிபெயர்ப்பு முயற்சிகளில் உதவியவர்கள்.

12.மண்டோ மொழிபெயத்த அனுபவம்..?

மண்ட்டோ நம் காலத்தின் கலைஞன். இருபதாம் நூற்றாண்டின் மனசாட்சியின் குரல். வாழ்வின் குரூரங்களை யாருக்கும் அஞ்சாமல் உரத்துச் சொன்ன உண்மையான கலைஞன். மனிதமனதின் அழுக்குகளை வெளிக்கொண்டுவந்தவன். கொந்தளிக்கும் சமூகச்சூழ்நிலையில் கொந்தளிக்கும் மனநிலையோடு நிலைதப்பி வாழ்ந்த கலைஞன் மண்ட்டோ. அவர் அவருடைய கதைகளில் எழுதிச் சென்ற மதவெறிப்பைத்தியநிலை இப்போதும் அழிந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னும் பயங்கரமாகியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எங்கு உரசினாலும் தீப்பற்றிக் கொள்ளும் நிலைமையிலேயே இருக்கிறது. இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு.

1990-களிலே முதன்முதலாக மண்டோ கதையை மொழிபெயர்த்தேன். இப்போதும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அவரது கதைகளை மொழிபெயர்க்கும்போது. அவருடைய கலைஆளுமையை வியக்காமல் இருக்க முடியாது. இப்போதும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய படைப்பாளியாக மண்ட்டோ இருக்கிறார். அவரை வாசிப்பதன் மூலமே நாம் மதவெறிப்பைத்திய நோய்க்கு ஆளாகாமல் நம்மை நிதானமாக பகுத்தறிவோடு வைத்துக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.

12. திரைக்கதை அமைத்த அனுபவம்?

திரைப்படத்துறை அநுபவம் தற்செயலானது தான். நாடகக்கலைஞர் அன்புத்தம்பி முருகபூபதி பாண்டிச்சேரி நாடகப்பள்ளியில் அவருடன் படித்த அவருடைய நண்பரான அஜித் எம்.கோபிநாத் ஒரு திரைப்படம் எடுக்கவிருக்கிறார் என்றும் அதற்கு உதவ முடியுமா என்று கேட்டு அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்குப்பின் நினைவோடு கலந்துவிடு என்ற அந்தத் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஏற்கனவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரசாத் திரைப்படக்கல்லூரியில் திரைக்கதை பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்ததாலும், உலக இந்திய சினிமாக்களை அவ்வப்போது பார்த்து வந்ததாலும் எனது திரைப்பட அநுபவம் இனிமையாகவே இருந்தது. நிறையக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது. அனைத்துக் கலைகளும் சங்கமிக்கும் ஒரு கலையாக திரைப்படம் இருப்பதாலேயே எல்லோரையும் அது ஈர்க்கிறது. அதை இன்னும் வலிமையாக சமூக மாற்றத்தில் அக்கறையுள்ளோர் பயன்படுத்த வேண்டும்.

14.உங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் எவை?

இது வரை அப்படி ஏதும் மிக முக்கியமாக ஏதும் நிகழவில்லை. இனிமேல் தான் நிகழவேண்டும்.

15. தற்போதைய புனைவிலக்கியம் எவ்வாறு இருக்கிறது?

பொதுவாகச் சொல்வதென்றால் இன்றைய புனைவிலக்கியம் மிக ஆரோக்கியமாக இருக்கிறது. இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கும் அளவிலும், ஏன் அதை விட மேலாகவும் நம்முடைய புனைவிலக்கியம் இருக்கிறது என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம். பின்நவீனத்துவம் புனைவிலக்கியத்தில் சிலபல தடைகளை உடைத்தறிந்திருக்கிறது. விரிந்து பரந்த இது வரை இலக்கியம் கண்டிராத புதிய புதிய பிரதேசங்களை புனைவிலக்கியம் பதிவு செய்திருக்கிறது. வணிகப்பத்திரிகைகளிலும் சிறந்தபடைப்புகள் வருவது இந்தக்காலகட்டம் தான். ஆனாலும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிறு பத்திரிகைகளில் ஒரே மாதிரியான பாலியல் சார்ந்த அநுபவங்களைப் பேசும் கதைகளே பெரும்பாலும் வருகின்றன. முற்போக்கு எழுத்தாளர்கள் நவீனத்துவத்தின் புதிய சூழலை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். இன்றைய உலகமய, பழமைவாதச்சூழல் படைப்பாளிகள் முன் புதிய சவால்களை வைக்கிறது. அதை எதிர்கொள்ள தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி- த சண்டே இந்தியன் மார்ச் 2013.

Tuesday 19 February 2013

சுயசாதி நிராகரிப்புப் போராட்டம்

images (5) உதயசங்கர்

80 களில் இடதுசாரி அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்ட போது எங்களுடைய ஏராளமான சந்தேகங்களுக்கு தொடர்ந்து நடந்த தத்துவார்த்த

வகுப்புகள் விளக்கமளித்தன. அது மட்டுமல்லாமல் தோழர்களுடனான தொடர்ந்த உரையாடல்கள், விவாதங்களினால், சமூகம், மனிதகுல

வரலாறு, மதம், சாதிகளின் தோற்றம் வளர்ச்சி, எல்லாவற்றைக் குறித்தும் எங்களுக்குத் தெளிவு கிடைத்தது. வாசிப்பு வெறியென எங்களைக்

கவ்வியிருந்த காலம் அது. புரிந்ததோ புரியவில்லையோ வாசித்தோம். வாசிப்பில் கிடைத்த அரைகுறை அறிவோடு தோழர்களோடு விவாதம்

செய்தோம். அப்போது தோழர்கள் எந்த சாதியிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. அதைப் பற்றிக் கவலைப்பட்டதுமில்லை.

எனக்கு எப்போதுமே சாதிஅபிமானமோ, சாதி உணர்வோ இருந்ததில்லை. கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் எங்கள் வீட்டில்

தேவைகளுக்காக எல்லோரும் தீப்பெட்டி கட்டை அடுக்கியோ, தீப்பெட்டி ஒட்டியோ உழைத்துக் கொண்டிருந்தோம். அதனால் பெரிதாய் ஒன்றும்

சாதி பற்றிய பெருமிதம் இல்லை. அப்பா மில் தொழிலாளி. அவருக்கு எல்லாசாதியிலும் ஆப்த நண்பர்கள் இருந்தனர். என் அப்பாவின் பெயரை

யார் கேட்டாலும் சரி எங்கு எழுதினாலும் சரி பின்னால் சாதிவாலைச் சேர்த்துச் சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை. யாராவது வற்புறுத்திக்

கேட்டால் மட்டுமே சொல்வதுண்டு. ஆனால் சாதி எப்படி சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை உணர வைக்கும் சம்பவங்கள்

நடந்தன. 1977-ல் பள்ளியிறுதி வகுப்பு முடிந்து கல்லூரிக்கு புகுமுகவகுப்புக்குச் செல்லும் போது டவுசர் அணிந்து கொண்டு தான் போனேன்.

என்னை மாதிரி இன்னும் சிலர் வந்திருந்தார்கள். மற்ற எல்லோரும் பேண்ட் அணிந்திருக்க நாங்கள் வித்தியாசமாக உணர்ந்தோம். கல்லூரி

ஆசிரியர்கள் பேண்ட் போட்டுத் தான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். உடனே பேண்டுக்கு எங்கே போவது? அப்பாவுக்கு

பத்தாம் தேதி சம்பளம் வந்தால் தான் பார்க்கலாம் என்று அம்மா சொல்லி விட்டார்கள். பக்கத்து வீட்டில் இருந்த மாமாவிடம் அவருக்குத்

தேவைப்படாத பழைய பேண்டை வாங்கி அதில் ஒட்டுத்துணி கொடுத்து ராக்கெட் பேண்டாக்கி போட்டுக் கொண்டு கல்லுரிக்குப் போய்க்

கொண்டிருந்தேன். ஏற்கனவே மிகுந்த தயக்கம் கொண்ட என்னைக் கல்லூரியின் புதிய சூழலும் ஆங்கிலவழிப்போதனையும் இன்னும்

வெருட்டியது. யாரிடமும் பேசாமல் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியே இருந்தேன். அப்போது ஒரு நாள் சகமாணவன் ஒருவன் என்னிடம் வந்து,

 

 

“ ஏன் யார் கிட்டயும் பேசாம ஒதுங்கி ஒதுங்கிப் போறே.. நீ என்ன எஸ். சி.யா? “

 

என்று கேட்டான். முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் உடனே என் சாதியைச் சொல்லி முணுமுணுத்தேன். ஆனால் மனதில் அவன்

என்னை ஏதோ இழிவாகச் சொல்லிவிட்டான் என்று வருந்தினேன். அவனிடம் வெகுநாள் பேசாமலும் இருந்தேன். அப்போது சாதி குறித்தெல்லாம்

எதுவும் அறியாதபருவம்.

நாங்கள் கல்லூரி முடிக்கின்ற பருவத்தில் அறிமுகமான இடதுசாரித் தோழர்கள் அறிமுகப்படுத்திய பாட்டாளி வர்க்க பண்பாடு எங்களை மிகவும்

ஈர்த்தது. தோழர்களும் தங்களுடைய மத்தியதர வர்க்க குணாதிசயங்களை நிராகரிக்கும் முயற்சியில் இருந்தனர். எப்போதும் விமர்சனக்

கண்ணோட்டத்துடனும் விழிப்புணர்வோடும் தங்கள் சொந்த வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் அணுகினர். பெட்டி பூர்ஷ்வா என்ற

சொல் அடிக்கடி விமர்சனமாகப் பேசப் பட்டுக் கொண்டேயிருந்தது. அருகில் நெருங்கி விட்டது புரட்சி என்ற உணர்வுடனே இருந்தோம். எனவே

நாங்களும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டைப் பயில வேண்டும் என்று சில முயற்சிகள் செய்தோம். தட்டி போர்டுகளை எழுதி தூக்கிக்

கொண்டுபோய் நாங்களே கட்டுவது, போஸ்டர்களை ஒட்டுவது, டீக்கடையில் பெஞ்சில் உட்கார்ந்து டீ குடிக்காமல் கீழே தரையில் குத்துக்காலிட்டு

உட்கார்ந்து டீ குடித்து பீடி இழுத்துப் பார்ப்பது, என்று பல முயற்சிகள் செய்து பார்த்தோம். கீழே உட்கார்ந்திருந்த போது தான் உலகம் வேறு

மாதிரியாகத் தெரிந்தது. எல்லோரும் உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள். எல்லாவற்றையும் அண்ணாந்து பார்க்க வேண்டியதிருந்தது.

எல்லோருடைய பார்வையிலும் ஒரு அலட்சியம், அவமதிப்பு, இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெஞ்சில் உட்காருவதிலிருந்து ஏன்

தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. இதெல்லாம் வேறெந்த ஊரிலோ, கண்காணாத தேசத்திலோ செய்யவில்லை. எங்கள் தெருமுக்கில்

இருந்த டீக்கடையில் செய்தோம். தெரிந்தவர்கள் எல்லோரும் டீக்கடைக்காரர் உட்பட விசித்திரமாகப் பார்த்தார்கள். முதலில் ஒரு சிறிய சங்கட

உணர்வு தோன்றியதென்னவோ உண்மை தான். ஆனால் அப்போது நமது தோழர்கள் இருந்தார்கள். நாங்கள் தனியாக இல்லை என்ற தெம்பு

வந்தது. ஒரு புதிய பண்பாட்டு விழுமியத்தை நோக்கிய சிறு தப்படி என்ற கர்வம் இருந்தது. எங்கள் சொந்த வர்க்கத்தை நிராகரிக்கும் ஒரு செயல்

என்ற பெருமிதம் இருந்தது. உண்மையில் அப்போது பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைப் பற்றி எங்களுக்கு பெரிய அளவுக்கு ஒன்றும் தெரியாது.

 

. இடதுசாரிச் சிந்தனைகளின் தாக்கத்தினால் சாதிய எதிர்ப்புணர்வு வளர்ந்தது. யாராவது சாதி குறித்து பேசினால் அருவெறுப்பாய் இருந்தது.

பின்நவீனத்துவச் சிந்தனைகள் தமிழ்ச் சிந்தனையுலகில் நுழையவில்லை. அடையாள அரசியல் கிடையாது. சாதிகளின் எழுச்சி கிடையாது.

பிணக்குகள் இருந்தன. ஆனால் பெருமிதங்களில்லை. அப்போது எங்களுக்கு அறிமுகமான ஒரு தோழர் எல்லோரையும் அவரவர் சாதியைச்

சொல்லியே பேசினார். என்ன நயினா வந்தாச்சா? செட்டியாரை இன்னும் காணும்? பிள்ளைவாள்கிட்ட பேசி மீள முடியுமா? எங்களுக்கானால்

எரிச்சல். என்ன இந்தத் தோழர் எல்லோரையும் இப்படி அருவெறுப்பாய் கூப்பிடுகிறார் என்று நினைத்தோம். அதிலும் அவர் ஒரு தலித் தோழர்

என்று அறிந்தபோது இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது. ஒரு நாள் அந்தத் தோழரிடம் கேட்டேன்,

 

” ஏன் தோழர் எல்லோரையும் சாதியைச் சொல்லியே பேசுகிறீர்கள்..?”

 

” தோழர் நான் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் இருபத்திநாலு மணி நேரமும் நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்று இந்தச் சமூகம்

எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது.. கொஞ்சம் நான் அயத்து மறந்தாலும் தண்டனை தான்.. நான் சாதியாகவே தான் தோழர் அறியப்படுகிறேன்.

எனக்கு இந்தச் சமூகமும் சாதியாகவே தான் தெரிகிறது.. இந்தக் கொடுமையை அநுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்..தோழர்”

 

எனக்கு அவர் சொல்லியதைக் கேட்டபோது வலித்தது. உண்மை தான் மற்ற சாதியினர் யாரும் எங்கும் எப்போதும் தங்கள் சாதியை நினைத்துக்

கொண்டேயிருப்பதில்லை. அதைக் குறித்து தயக்கமோ, அவமானமோ, அச்சமோ, இருப்பதில்லை. ஆனால் சாதி தலித்துகளுக்கு அச்சமூட்டும்

கொடிய தண்டனை. எந்த ஒரு விநாடியும் அதை அவர் மறக்கமுடியாது. தோழர்கள் எல்லோரும் அவர் அப்படிக் கூப்பிடுவதை தவறாக எடுத்துக்

கொள்ளவில்லை. மாறாக எல்லோரும் சுயசாதியைக் கிண்டல் செய்து கேலி பேசி மகிழ்ந்ததைப் பார்த்தேன். அவரும் அங்கே சுதந்திரமாய்

மற்றெல்லாசாதியினரையும் கேலி செய்தார். எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது.

 

நான் வேலைக்குச் சென்ற பிறகு எங்கு டூட்டிக்குப் போனாலும் போன கொஞ்ச நேரத்திலேயே உடன் வேலை பார்க்கிற சகதொழிலாளிகள் நான்

என்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை அறிவதில் குறியாய் இருந்தார்கள். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. என்னுடைய உருவமும்,

நிறமும், இயல்பும் அந்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம். முக்கியமாக எல்லோரும் நான் தலித்தா இல்லையா என்று அறிந்து கொள்ள

ஆசைப்பட்டார்கள். அதைப் பொறுத்து அணி சேர்க்கை வைத்து கொள்ளும் திட்டம் தான். நேரிடையாகக் கேட்க முடியாத அளவுக்கு நாகரீகமாக

இருந்தார்கள் அவ்வளவு தான். மற்றபடி சுற்றி வளைத்து சொந்த ஊர், வசிக்கும் ஏரியா, அப்பாவின் பெயர், இன்னாருக்கு நீங்கள் என்ன வேண்டும்

என்றோ, இன்னாரை உங்களூக்குத் தெரியுமா என்றோ கேள்விகள் கேட்டு மண்டையைக் கீறுவார்கள். நீங்கள் தலித்தாக இருந்தால்

மற்றவர்களின் பழக்கத்திலேயே ஒரு விலக்கம் தெரியும். பார்வையிலே ஒரு அலட்சியம் தெரியும். வர்க்க அரசியலில் எதிரியான முதலாளித்துவ

வர்க்கத்தோடு மோதுவதற்குப் பதில் சொந்த வர்க்கத்துடனேயே மோதுகிற அவலம் தொழிலாளி வர்க்கச் சிந்தனையில் ஏற்பட்டிருக்கிறது.

இது ஒரு புறம் என்றால் இன்னொரு புதிய முறையும் வர்க்கமாக அணி திரண்ட தோழர்களிடம் தோன்றியிருக்கிறது. அடையாள அரசியலின்

மூலம் மறுபடியும் வர்ணாசிரமக்கோட்பாடு நவீன முகமூடியை அணிந்து கொண்டு சாதிய அணிதிரட்டலை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

சாதிய அணிதிரட்டலின் மூலம் ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இடத்தைத் தக்கவைப்பது மட்டுமல்ல ஆண்டபரம்பரை.. ஆண்டு

கொண்டிருக்கும் பரம்பரை..ஆளப்போகும் பரம்பரை என்று வர்ணாசிரப்படிநிலையில் மேல்நிலையாக்கத்துக்கு செல்ல முயற்சி செய்து

கொண்டிருக்கிறது. இதனால் வர்க்க ரீதியில் அமைப்பாக அணி திரண்ட தொழிலாளிகளும் பாதிப்படைய நேரிடுகிறது. ஏற்கனவே பாட்டாளி

வர்க்கப் பண்பாட்டுவெளியில் நிகழ்ச்சிநிரல் எதுவுமே இல்லாததால் வர்க்கமாக அணி திரண்ட தொழிலாளிகளும் அடையாள அரசியலின்

சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டியுள்ளது.

தங்கள் குடும்பங்களுக்குள் தோழர்கள் ஊடாடுவதில் பெருந்தயக்கம் இருக்கிறது. தாங்கள் மிக முற்போக்காக இருந்து கொண்டு, ஆனால் குடும்பம்

சாதியப்பிடிமானம் உள்ள குடும்பமாக இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவது வசதியாக இருக்கிறது. எனவே புதிய பண்பாட்டு

விழுமியங்களை உருவாக்குவதில் அக்கறை வருவதில்லை. அது மட்டுமல்லாமல் குடும்பத்தின் பிற்போக்கான குணாதிசயத்தினால் தங்கள்

குழந்தைகளின் சாதிமறுப்புக்காதலை மறுக்கிற நிலைமை ஏற்படுகிறது. இல்லையென்றால் பூனைக்கும் தோழனாய் பாலுக்கும் காவலாக

இருப்பதைப் போல தோழர்களிடையே தங்கள் சொந்த சாதி பார்த்து சம்பந்தம் பேசித் தலைவர்களை அழைத்து முற்போக்கான திருமணங்களை

நடத்தி விடுகிறார்கள். இல்லையென்றால் காலையில் சநாதனமாய் புரோகிதர் சகிதம் ஹோமகுண்டம் வளர்த்து அக்னிசாட்சி, அருந்ததி சாட்சி

என்று எல்லாச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்து முடித்து அந்தச் சூடு ஆறுமுன்னே மாலையில் தலைவர்களை அழைத்து

முற்போக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி விடுகிறதும் உண்டு. இதற்கு தோழர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. முற்போக்கு

பண்பாட்டுவெளியில் நாம் வலுவாகச் செயல்படாதாதும், தோழமை என்கிற மகத்தான சர்வதேசிய, வர்க்கபேதமற்ற, சாதி பேதமற்ற

வாழ்வியல்நெறியைச் செழுமைப்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவும் தான் காரணம் என்று தோன்றுகிறது.

 

எப்படியானாலும் சாதியும் வர்ணாசிரமமும் குடும்பங்களின் வழியே தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன. அடுத்தடுத்த தலைமுறைக்கும் அதை

கொண்டு செல்லும் வழியைக் கண்டு பிடித்து விடுகின்றன. இதற்குப் பண்பாட்டு வெளியில் இருக்கிற வெறுமையும் ஒரு காரணம்.

இங்கிருக்கக்கூடிய சட்டம், நீதி, கலை, இலக்கியம், ஊடகங்கள், எல்லாமே மதங்களின் சட்டங்களையே பெரும்பாலும் பிரச்சாரம் செய்கின்றன.

கடைப்பிடிக்கின்றன. பெரியாருக்குப் பின்னால் மாற்றுப்பண்பாட்டுவெளியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது. முற்போக்கான

மாற்றுப்பண்பாட்டு வெளியில் நூறுபூக்கள் மலர வேண்டும். புதிய முற்போக்கு பண்பாட்டு விழுமியங்களை உருவாக்குவதின் மூலமே நாம்

மார்க்சிய வாழ்வியல் நெறியைச் செழுமைப்படுத்த முடியும். சுயசாதி நிராகரிப்பை தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்த முடியும். இது ஒரு

தொடர்ச்சியான போராட்டம். தொடர்ந்த விழிப்புணர்வும், விமர்சனமும் சுய விமர்சனமும் மட்டுமே இந்தப் புதிய பண்பாட்டு விழுமியங்களை

முன்னெடுத்துச் செல்ல உதவும். அதன் மூலமே மக்களிடம் ஒரு புதிய முற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்டு செல்லவும்,

அதனால் அவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தவும் முடியும். அது தான் இன்றையத் தேவை.DSC03548

Thursday 14 February 2013

குழந்தைகளின் அற்புத உலகில்-23

கனவாய் ஒரு பள்ளி டோமாயி

உதயசங்கர்dotochan

பெரும்பாலும் நமது சமூகத்தில் நாம் குழந்தைகள் எல்லோரையும் ஒன்று போலவே தான் கருதுகிறோம். ஒவ்வொரு குழந்தையும்

ஒவ்வொரு தனித்தன்மையுடன் வளர்கிறார்கள். அவர்களுடைய தனித்தன்மைகளை கண்டறிவதற்கான பொறுமை நமக்கில்லை.

அப்படியே கண்டறிந்தாலும் அதை வளர்ப்பதற்கான முயற்சிகளும் நம்மிடம் இல்லை. ஏனெனில் நாம் குழந்தைகளின் எதிர்காலம்

குறித்து அச்சப்படுகிறோம். அவர்களுடைய வாழ்க்கையை வடிவமைத்து சீராக்கிக் கொடுக்க வேண்டியது நமது பொறுப்பு என்று

பெற்றோர்கள் கருதுகிறார்கள். ஆகவே சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ள வேலை, சம்பளம், பாதுகாப்பு, என்பதைக் குறித்த

அளவுகடந்த எச்சரிக்கையினால் குழந்தைகளின் தனித்தன்மைகளை அலட்சியப்படுத்துகிறோம். அல்லது அடக்கி ஒடுக்குகிறோம்.

குழந்தைகளை வசக்கி வழிக்குக் கொண்டுவரவே குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கிறோம். பள்ளிக்கூடமும்

குழந்தைகளின் தனித்தன்மையை எப்பாடுபட்டாவது அழிக்க நினைக்கிறது. பெரும்பாலும் பள்ளிகள் அந்த முயற்சியில் வெற்றி பெற்று

விடுகின்றன. ஏனெனில் பள்ளிக்கூடங்களின் கையில் உடல்ரீதியான, மனரீதியான துன்பங்களைத் தருவதற்கான அதிகாரம்

இருக்கிறது. பள்ளிக்கூடத்தால் அப்படி வசக்க முடியாதபோது அது அந்தக்குழந்தையை அவமானப்படுத்தி பள்ளியை விட்டு

நிறுத்துவதற்கான எல்லாவேலைகளையும் செய்கிறது. குழந்தைகளும் பயந்து தாழ்வுமனப்பான்மையினால் ஒடுங்கி பள்ளியை விட்டு

நின்று விடுகின்றன. இப்படி இடைநிற்றலாய் பள்ளிப்படிப்பை விட்ட குழந்தைகள், பள்ளிக்கூடமே வீட்டுக்கு அனுப்பிய குழந்தைகள்,

மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோருக்குமான ஒரு ஜப்பான் பள்ளி தான் டோமாயி. அந்தப் பள்ளியைப் பற்றி அந்தப்பள்ளியில்

படித்த டெட்சுகோ குரோயாநாகி எழுதிய புத்தகம் டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி. சு.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன் இருவரின்

மொழிபெயர்ப்பில் தமிழில் நேஷனல் புக் டிரஸ்டின் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் குழந்தைக்கல்வியில், நாம் எவ்வளவோ

தூரம் போக வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது. இது கல்வித்துறை சார்ந்த புத்தகம் அல்ல. இது ஒரு அற்புதமான

கதைப்புத்தகம். வாசிக்க வாசிக்க குழந்தைகளுக்கு ஆனந்தத்தையும், பெரியவர்களுக்கு ஏக்கத்தையும் தருகிற புத்தகம்.

ஜப்பானியக்கல்வியியலாளர், சோசாகு கோபயாஷி 1937 ஆம் ஆண்டு துவங்கிய பள்ளி தான் டோமாயி. குழந்தைகளின் சுயமரியாதையையும்,

தனித்தன்மையையும் வளர்க்கச் சுதந்திரமான பாடத்திட்டத்தை அவர் தேர்ந்தெடுத்தார். குழந்தைகள் அனைவருமே பிறக்கும்போது உள்ளார்ந்த

நல்லியல்புகளுடனும், திறமையுடனும் தான் பிறக்கிறார்கள். அவர்கள் வளரும் சூழலும் பெரியவர்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின்

பொய்மையும், பாசாங்கும் தான் அவர்களுடைய இயல்பான நல்லுணர்வுகளையும், திறமையையும் அழித்து விடுகிறது. இந்த நல்லுணர்வுகளை

பாதுகாத்து வளர்க்கவும், அவர்களுடைய தனித்தன்மையை வளர்க்க உதவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் டோமாயி என்ற பள்ளி

உருவானது. பழைய ரயில்பெட்டிகள் தான் வகுப்பறைகள். இயற்கையான சூழல். குழந்தைகளின் உள்ளார்ந்த விருப்பங்களை, அவர்களின்

தனித்தன்மைகளை, கண்டறியும் விதமான பாடத்திட்டங்களை, குழந்தைகள் தாங்கள் விரும்பியபடியே நடந்து கொள்ள வாய்ப்பு, என்று

அந்தப்பள்ளியைப் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது.

இந்தக்கதையை எழுதிய டெட்சுகோ குரோயாநாகி என்ற டோட்டோ சான் கோபயாஷி நடத்திய தான் கல்வி பயின்ற கதையைத் தான்

எழுதியிருக்கிறார். அவரும் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும்போதே அவருடைய சேட்டையைத் தாங்கமுடியாமல் பள்ளியிலிருந்து

நீக்கப்பட்டார். ஆனால் டோமாயியில் அவர் கல்வி பயின்று பின்னாளில் ஜப்பான் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடத்துநராக

மாறினார். வாழ்வில் அவர் அடைந்த அத்தனை புகழுக்கும் முன்னேற்றத்துக்கும் டோமாயியில் கோபயாஷியிடம் கல்வி கற்றது தான் காரணம்

என்று சொன்னார். அந்தக் கல்விமுறை தான் அவரை மிகுந்த தன்னம்பிக்கையுள்ளவராக மாற்றியது. காரணம் கோபயாஷியின் பள்ளியில்

குழந்தைகள் தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கும் செய்ல்படுத்துவதற்கும் முழுச்சுதந்திரம் இருந்தது. இந்தப் புத்தகம் ஜப்பானில் வெளியான

ஆண்டே நாற்பந்தைந்து லட்சம் பிரதிகள் விற்றது. அதன் பிறகு உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகம். டோட்டா சான்

ஜன்னலில் ஒரு சிறுமி.

அந்தப்பள்ளியில் கற்பது காலை வேளையில் அதுவும் குழந்தைகளின் விருப்பப்படியே நடக்கும். மாலையில் இயற்கையை உற்று நோக்கல்,

உலாவச்செல்லுதல், தாவரங்களைச் சேகரித்தல், படம் வரைதல், பாடுதல், தலைமையாசிரியரின் உரை கேட்டல், என்று திட்டமிடப்பட்டு

நடத்தப்பட்டது. அந்தப்பள்ளியின் தலைமையாசிரியரான கோபயாஷி இந்த நூலை எழுதிய டோட்டோ சானைப் பார்க்கும் போதெல்லாம் நீ

உண்மையிலேயே நல்லபெண் தான். உனக்குத் தெரியுமா? என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது டோட்டோ சானுக்கு அவ்வளவு

தன்னம்பிக்கையை ஊட்டியது. எல்லாக்குழந்தைகளிடமும் அவ்வாறே அவர் சொல்லியிருந்தார். அதன் மூலம் நேர்மறைச்சிந்தனைகளை மனதில்

விதைக்கும் அவருடைய நல்லெண்ணம் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியில் படித்த எல்லோருமே ஏதாவதொரு துறையில் சிறந்து

விளங்கினார்கள்.

டோமோயிப் பள்ளியில் பள்ளிநேரம் முடிந்த பின்னும் யாரும் வீட்டுக்குப் போக விரும்புவதில்லை. அதே போல காலையில் பள்ளிக்கு

வருவதற்கும் கொஞ்சமும் தாமதிப்பதில்லை. டோமாயி பள்ளி அப்படிப்பட்டதாக இருந்தது என்று டெட்சுகோ கூறுகிறார். அதைக் கேட்கும்போது

நமது பள்ளிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. காலையில் எழுந்தவுடனேயே பள்ளிக்கூடத்துக்குப் போகவேண்டுமே என்ற

கவலையுடனும், மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் சிறையிலிருந்து விடுதலையான உணர்வுடனும் வருகிற நமது குழந்தைகளையும்

நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆரம்பக்கல்வியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. 1930-களிலேயே உலகம் முழுவதும்

இப்படியான சிந்தனைகள் எப்படி பரவியிருந்தன என்பதைத் தான் டோட்டோ சானும் சொல்கிறார்.

நம்முடைய குழந்தைகள் சுயமரியாதையுள்ளவர்களாக, சுயசிந்தனையுள்ளவர்களாக, தன்னம்பிக்கை மிக்கவர்களாக, நல்லுணர்வு மிக்கவர்களாக,

திறமையானவர்களாக வளர்வதற்கும், வாழ்வை எதிர்கொள்வதற்கும் அவர்களுடைய ஆரம்பக்கல்வியில் பெரும்புரட்சியே செய்ய

வேண்டியுள்ளது. அதன் முதல்படி குழந்தைகளும், பெற்றோரும், ஆசிரியர்களும், மற்றவர்களும் டோட்டா சான் சன்னலில் ஒரு சிறுமியை

வாசிக்க வேண்டும். வாசித்து யோசிக்க வேண்டும்.

நன்றி- இளைஞர் முழக்கம்