Showing posts with label இடதுசாரிகள். Show all posts
Showing posts with label இடதுசாரிகள். Show all posts

Wednesday, 13 May 2015

சுருங்கி விட்டதா பொது வெளி?

revolution 3 

உதயசங்கர்

ஜனநாயகயுகத்தில் பொதுவெளி என்று சொல்லும்போது சுதந்திரமான பொதுக்கருத்துக்கள், விவாதங்கள், கண்டடைதல்கள், வெளிப்படுத்தும் இடம் என்று சொல்லலாம். இவை அமைப்புகள் சார்ந்தும் சாராமலும் தனிநபர்கள் கூடி உருவாக்குவதாகவும் இருக்கலாம். இந்தப் பொதுவெளியில் எல்லோருக்கும் கருத்துரிமை உண்டு. சமூகத்தைப்பற்றி, அரசைப் பற்றி, அதன் கொள்கைகள், நடைமுறைகள், எதிர்காலத்திட்டங்கள், இவற்றைப் பற்றியெல்லாம் விமரிசனம் செய்யக்கூடியதாக இந்தப் பொதுவெளி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நமது வரலாறு, கலாச்சாரம், சாதி,மதங்கள், அறிவியல், என்று சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தைப் பற்றியும் விவாதிக்கிற, களமாக இந்தப் பொதுவெளி இருக்கும். இந்த விமரிசனக் கருத்துக்களிலிருந்து அவரவருக்கு இணக்கமான கருத்துகளையோ, விவாதங்களையோ ஏற்றுக் கொள்ளவும் இணக்கமில்லாத கருத்துக்களோடு முரண்படவும் செய்யலாம். இந்தப் பொதுவெளி அதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் எல்லோருக்கும் தருகிற ஒன்றாகத் திகழும்.

என்னுடைய கல்லூரிக்காலத்தில் நாங்கள் நண்பர்கள் கூடி இப்படியான ஒரு பொதுவெளியை உருவாக்கியிருக்கிறோம். சமூகம், அரசியல், தத்துவம், சினிமா, சாதி, மதம், இலக்கியம் என்று எல்லாவற்றையும் பற்றி பேசியிருக்கிறோம். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் எங்களுக்கு முகைதீன் பாய் டீக்கடை இப்படியான பொதுவெளியாக மாறியது. எங்களுடன் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்தார்கள். ஜோதிபாசு சலூனே ஒரு பொதுவெளியாக மாறியிருந்தது. அங்கே எப்போதும் ஒரு விவாதம், உரையாடல், நிகழ்ந்து கொண்டேயிருந்தது. காலையில் தினசரிகளைப் படித்து விட்டு விவாதம் செய்கிற நண்பர்கள் இருந்தார்கள். மாலையில் தொழிற்சங்க வாதிகள், கூடிப்பேசி விட்டு போன பிறகு, அரசியல் கட்சி நண்பர்கள் வருவார்கள். பின்பு இலக்கியவாதிகள், இளம் எழுத்தாளர்கள் வருவார்கள். இரவுகளில் காந்திமைதானம் விவாதங்களின் வெப்பத்தினால் புழுதி பறந்தது. மார்க்ஸும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் மோதிக்கொண்டனர். லெனினும் கிராம்ஷியும் தங்கள் நடைமுறைக்கோட்பாடுகள் குறித்து வேறுபட்டு நின்றனர். சோல்ஜெனிட்சனும் மாக்சிம் கார்க்கியும் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தனர். அத்வைதமும் பௌத்தமும் சமணமும் கிறித்துவமும், இஸ்லாமும் கலந்து குழம்பின. காந்தியும் நேருவும், இந்திராகாந்தியும், இ.எம்.எஸ்ஸும், டாங்கேயும் தங்களைப்பற்றிய விமரிசனங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பெரியாரும் அண்ணல் அம்பேத்காரும் அங்கே எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி எப்போதும் விவாதித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கிற நண்பர்கள் சுதந்திரமான கருத்துரிமை வழங்கிய ஒரு பொதுவெளியை உருவாக்கினார்கள் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் அந்தக்காலகட்டத்தில் திராவிடக்கட்சிகள் நமது மொழி, இனம், பண்பாடு, மதம், மூடநம்பிக்கைகள் குறித்த பொதுவிவாதங்களை தங்களுடைய பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றனர். இடதுசாரிகள் அரசியல், சமூகமாற்றம் குறித்த விவாதங்களையும் விமரிசனங்களையும் முன் வைத்தனர். இந்தக் கருத்துகள் அதன் சார்புநிலை தாண்டி மாற்றுக்கருத்துகளையும் மக்கள் மதிக்கின்ற பக்குவத்தைக் கொடுத்தன. வாரந்தோறும் அரசியல்கூட்டங்கள் நடந்தன. ஒருவருக்கொருவர் பதில் சொல்லினர். புதிய விவாதங்களை உருவாக்கினர். கூட்டங்களில் பத்துப்பேரோ, நூறுபேரோ கவலைப்படவில்லை. டீக்கடைகளும் சலூன்களும் புத்தகக்கடைகளும் படிப்பகங்களும், முச்சந்திகளும், மைதானங்களும், கூட்டங்களும், பத்திரிகைகளும் தான் பொதுக்கருத்துக்களை உருவாக்குகிற பொதுவெளியாக இருந்தன.எல்லா ஊர்களிலும் இப்படியான பொதுவெளிகள் இருந்திருக்கும். இந்தப் பொதுவெளிகள் ஜனநாயகப்பண்புகள் கொண்டதாக, இருந்தது. ஆராய்ந்து, பகுத்தறிவுடன் தங்கள் விவாதங்களை வைக்கிற வெளியாக இருந்தது. இதன் தாக்கம் சமூகவெளியெங்கும் பிரதிபலித்தது. அதனால் தான் பெரியார், அண்ணா, போன்ற பகுத்தறிவாளர்களும், ஜீவா, பி.ராமமூர்த்தி, போன்ற இடதுசாரிகளும் தங்கள் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணரவைக்க முடிந்தது.

ஆனால் இன்று அத்தகைய பொதுவெளிகள் சுருங்கி விட்டன. சுதந்திரமான, கருத்துரிமைக்கான வாய்ப்புகளை மின்னணு ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்கள் பறித்துக் கொண்டன. திட்டமிட்ட முறையில் கருத்துக்களை உற்பத்தி செய்து அதைப் பரப்புகிற வியாபாரிகளாக ஊடகங்கள் மாறிவிட்டன. இன்று பிரம்மாண்டமான அரசியல் கூட்டங்களைத் தவிர சிறிய அளவிலான கூட்டங்கள் குறைந்து விட்டன. டீக்கடைகளும் சலூன்களும் உணவகங்களும், ஹை டெக் ஆகி சுதந்திரமான உரையாடல் களத்தை விலக்கி வைக்கின்றன. ஆக பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகப்பண்புகள் மிக்க அறிவியல் பார்வை கொண்ட சுதந்திரமான கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகளை பழமைவாதம் அபகரித்துக் கொண்டது. மீண்டும் சநாதனமான மனுசாஸ்திரம் கோலோச்சத் துவங்கியுள்ளது. சடங்குகளும் சாஸ்திரங்களும், பூஜை புனஸ்காரங்களும், நாள் நட்சத்திரங்களும், ஆண்டு முழுவதும் சோதிடப்பலன் புத்தகங்களும், மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. சமூகத்தைப் பின்னோக்கி தள்ளுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ,இதற்கு பழமைவாதச்சிந்தனையிலிருந்த சமூகத்தில் பகுத்தறிவையும், ஜனநாயகப் பண்புகளையும், புரட்சிகரச் சிந்தனைகளையும் விதைத்த திராவிடக்கட்சிகளும் இடதுசாரிகளுமே இந்தப் பொதுவெளிகளைக் காப்பாற்றவோ, வளர்த்தெடுக்கவோ தவறியதும் ஒரு முக்கியக் காரணம். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நேர்ந்த விபத்துக்கு பொதுக்கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகள் சுருங்கியதும் கூட காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இன்று கணினியில் சில மறைவெளிகள் ( VIRTUAL ) உருவாகியுள்ளன. முகநூல், வாட்ஸப், வலைப்பூ, டிவிட்டர், இது போன்ற பொதுவெளிகளில் விவாதங்கள், உரையாடல்கள், நடக்கின்றன. கூர்மையான விமர்சனங்களும், அறிவார்ந்த கேலிகளும், கிண்டல்களும், தகவல்களும், செய்திகளும், கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, அரசியல், மருத்துவம், உடல்நலம், சுற்றுச்சூழல், உதவிகள், என்று வேறு விதமான ஒரு சமூகப்பொதுவெளிகள் உருவாகியிருக்கின்றன. இவைகள் சிறு குழுக்களாகவும், பெருங்குழுக்களாகவும் ஒருங்கிணைகின்றன அல்லது ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தப் பொதுவெளிகள் மறைவெளிகளாக இருப்பதால் இதுவரை பேசாத பலகுரல்கள் பேசுகின்றன. இது ஒரு நேர்மறையான அம்சம் என்றாலும் இந்த மறைவெளியைத் தாண்டி பலரும் வருவதில்லை.

மக்களின் கருத்திசைவை திட்டமிட்டு உருவாக்குவதற்காகவே இன்று பெருமுதலாளிகள் ஊடகங்களை விலைக்கு வாங்கி நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்கின்றனர். இப்படி ஊடகங்கள் பொதுவெளிகளின் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தி தங்களுடைய வர்க்க நலன்களுக்கேற்ற மேலாண்மையை உருவாக்குகின்றனர். இது பேரலகு ( MACRO ) என்றால் இதற்கு மாற்றாக ஏராளமான சிற்றலகுகளை ( MICRO) உருவாக்குவதின் மூலமே வெளிப்படையான விமரிசனங்கள், கூர்மையான அறிவுசார்ந்த பொது விவாதங்கள், ஆய்வுகள், உரையாடல்கள், கொண்ட ஆரோக்கியமான சிந்தனைக்களங்களாக பொதுவெளிகளை புதிது புதிதாக உருவாக்க வேண்டும். அப்போது தான் பகுத்தறிவும் அறிவியல்பார்வையும் கொண்ட அறிவார்ந்த ஒரு எதிர்காலத்தலைமுறை உருவாகும். சமத்துவமிக்க சமூகம் உருவாகும்.

Tuesday, 19 February 2013

சுயசாதி நிராகரிப்புப் போராட்டம்

images (5) உதயசங்கர்

80 களில் இடதுசாரி அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்ட போது எங்களுடைய ஏராளமான சந்தேகங்களுக்கு தொடர்ந்து நடந்த தத்துவார்த்த

வகுப்புகள் விளக்கமளித்தன. அது மட்டுமல்லாமல் தோழர்களுடனான தொடர்ந்த உரையாடல்கள், விவாதங்களினால், சமூகம், மனிதகுல

வரலாறு, மதம், சாதிகளின் தோற்றம் வளர்ச்சி, எல்லாவற்றைக் குறித்தும் எங்களுக்குத் தெளிவு கிடைத்தது. வாசிப்பு வெறியென எங்களைக்

கவ்வியிருந்த காலம் அது. புரிந்ததோ புரியவில்லையோ வாசித்தோம். வாசிப்பில் கிடைத்த அரைகுறை அறிவோடு தோழர்களோடு விவாதம்

செய்தோம். அப்போது தோழர்கள் எந்த சாதியிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. அதைப் பற்றிக் கவலைப்பட்டதுமில்லை.

எனக்கு எப்போதுமே சாதிஅபிமானமோ, சாதி உணர்வோ இருந்ததில்லை. கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் எங்கள் வீட்டில்

தேவைகளுக்காக எல்லோரும் தீப்பெட்டி கட்டை அடுக்கியோ, தீப்பெட்டி ஒட்டியோ உழைத்துக் கொண்டிருந்தோம். அதனால் பெரிதாய் ஒன்றும்

சாதி பற்றிய பெருமிதம் இல்லை. அப்பா மில் தொழிலாளி. அவருக்கு எல்லாசாதியிலும் ஆப்த நண்பர்கள் இருந்தனர். என் அப்பாவின் பெயரை

யார் கேட்டாலும் சரி எங்கு எழுதினாலும் சரி பின்னால் சாதிவாலைச் சேர்த்துச் சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை. யாராவது வற்புறுத்திக்

கேட்டால் மட்டுமே சொல்வதுண்டு. ஆனால் சாதி எப்படி சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை உணர வைக்கும் சம்பவங்கள்

நடந்தன. 1977-ல் பள்ளியிறுதி வகுப்பு முடிந்து கல்லூரிக்கு புகுமுகவகுப்புக்குச் செல்லும் போது டவுசர் அணிந்து கொண்டு தான் போனேன்.

என்னை மாதிரி இன்னும் சிலர் வந்திருந்தார்கள். மற்ற எல்லோரும் பேண்ட் அணிந்திருக்க நாங்கள் வித்தியாசமாக உணர்ந்தோம். கல்லூரி

ஆசிரியர்கள் பேண்ட் போட்டுத் தான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். உடனே பேண்டுக்கு எங்கே போவது? அப்பாவுக்கு

பத்தாம் தேதி சம்பளம் வந்தால் தான் பார்க்கலாம் என்று அம்மா சொல்லி விட்டார்கள். பக்கத்து வீட்டில் இருந்த மாமாவிடம் அவருக்குத்

தேவைப்படாத பழைய பேண்டை வாங்கி அதில் ஒட்டுத்துணி கொடுத்து ராக்கெட் பேண்டாக்கி போட்டுக் கொண்டு கல்லுரிக்குப் போய்க்

கொண்டிருந்தேன். ஏற்கனவே மிகுந்த தயக்கம் கொண்ட என்னைக் கல்லூரியின் புதிய சூழலும் ஆங்கிலவழிப்போதனையும் இன்னும்

வெருட்டியது. யாரிடமும் பேசாமல் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியே இருந்தேன். அப்போது ஒரு நாள் சகமாணவன் ஒருவன் என்னிடம் வந்து,

 

 

“ ஏன் யார் கிட்டயும் பேசாம ஒதுங்கி ஒதுங்கிப் போறே.. நீ என்ன எஸ். சி.யா? “

 

என்று கேட்டான். முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் உடனே என் சாதியைச் சொல்லி முணுமுணுத்தேன். ஆனால் மனதில் அவன்

என்னை ஏதோ இழிவாகச் சொல்லிவிட்டான் என்று வருந்தினேன். அவனிடம் வெகுநாள் பேசாமலும் இருந்தேன். அப்போது சாதி குறித்தெல்லாம்

எதுவும் அறியாதபருவம்.

நாங்கள் கல்லூரி முடிக்கின்ற பருவத்தில் அறிமுகமான இடதுசாரித் தோழர்கள் அறிமுகப்படுத்திய பாட்டாளி வர்க்க பண்பாடு எங்களை மிகவும்

ஈர்த்தது. தோழர்களும் தங்களுடைய மத்தியதர வர்க்க குணாதிசயங்களை நிராகரிக்கும் முயற்சியில் இருந்தனர். எப்போதும் விமர்சனக்

கண்ணோட்டத்துடனும் விழிப்புணர்வோடும் தங்கள் சொந்த வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் அணுகினர். பெட்டி பூர்ஷ்வா என்ற

சொல் அடிக்கடி விமர்சனமாகப் பேசப் பட்டுக் கொண்டேயிருந்தது. அருகில் நெருங்கி விட்டது புரட்சி என்ற உணர்வுடனே இருந்தோம். எனவே

நாங்களும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டைப் பயில வேண்டும் என்று சில முயற்சிகள் செய்தோம். தட்டி போர்டுகளை எழுதி தூக்கிக்

கொண்டுபோய் நாங்களே கட்டுவது, போஸ்டர்களை ஒட்டுவது, டீக்கடையில் பெஞ்சில் உட்கார்ந்து டீ குடிக்காமல் கீழே தரையில் குத்துக்காலிட்டு

உட்கார்ந்து டீ குடித்து பீடி இழுத்துப் பார்ப்பது, என்று பல முயற்சிகள் செய்து பார்த்தோம். கீழே உட்கார்ந்திருந்த போது தான் உலகம் வேறு

மாதிரியாகத் தெரிந்தது. எல்லோரும் உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள். எல்லாவற்றையும் அண்ணாந்து பார்க்க வேண்டியதிருந்தது.

எல்லோருடைய பார்வையிலும் ஒரு அலட்சியம், அவமதிப்பு, இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெஞ்சில் உட்காருவதிலிருந்து ஏன்

தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. இதெல்லாம் வேறெந்த ஊரிலோ, கண்காணாத தேசத்திலோ செய்யவில்லை. எங்கள் தெருமுக்கில்

இருந்த டீக்கடையில் செய்தோம். தெரிந்தவர்கள் எல்லோரும் டீக்கடைக்காரர் உட்பட விசித்திரமாகப் பார்த்தார்கள். முதலில் ஒரு சிறிய சங்கட

உணர்வு தோன்றியதென்னவோ உண்மை தான். ஆனால் அப்போது நமது தோழர்கள் இருந்தார்கள். நாங்கள் தனியாக இல்லை என்ற தெம்பு

வந்தது. ஒரு புதிய பண்பாட்டு விழுமியத்தை நோக்கிய சிறு தப்படி என்ற கர்வம் இருந்தது. எங்கள் சொந்த வர்க்கத்தை நிராகரிக்கும் ஒரு செயல்

என்ற பெருமிதம் இருந்தது. உண்மையில் அப்போது பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைப் பற்றி எங்களுக்கு பெரிய அளவுக்கு ஒன்றும் தெரியாது.

 

. இடதுசாரிச் சிந்தனைகளின் தாக்கத்தினால் சாதிய எதிர்ப்புணர்வு வளர்ந்தது. யாராவது சாதி குறித்து பேசினால் அருவெறுப்பாய் இருந்தது.

பின்நவீனத்துவச் சிந்தனைகள் தமிழ்ச் சிந்தனையுலகில் நுழையவில்லை. அடையாள அரசியல் கிடையாது. சாதிகளின் எழுச்சி கிடையாது.

பிணக்குகள் இருந்தன. ஆனால் பெருமிதங்களில்லை. அப்போது எங்களுக்கு அறிமுகமான ஒரு தோழர் எல்லோரையும் அவரவர் சாதியைச்

சொல்லியே பேசினார். என்ன நயினா வந்தாச்சா? செட்டியாரை இன்னும் காணும்? பிள்ளைவாள்கிட்ட பேசி மீள முடியுமா? எங்களுக்கானால்

எரிச்சல். என்ன இந்தத் தோழர் எல்லோரையும் இப்படி அருவெறுப்பாய் கூப்பிடுகிறார் என்று நினைத்தோம். அதிலும் அவர் ஒரு தலித் தோழர்

என்று அறிந்தபோது இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது. ஒரு நாள் அந்தத் தோழரிடம் கேட்டேன்,

 

” ஏன் தோழர் எல்லோரையும் சாதியைச் சொல்லியே பேசுகிறீர்கள்..?”

 

” தோழர் நான் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் இருபத்திநாலு மணி நேரமும் நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்று இந்தச் சமூகம்

எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது.. கொஞ்சம் நான் அயத்து மறந்தாலும் தண்டனை தான்.. நான் சாதியாகவே தான் தோழர் அறியப்படுகிறேன்.

எனக்கு இந்தச் சமூகமும் சாதியாகவே தான் தெரிகிறது.. இந்தக் கொடுமையை அநுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்..தோழர்”

 

எனக்கு அவர் சொல்லியதைக் கேட்டபோது வலித்தது. உண்மை தான் மற்ற சாதியினர் யாரும் எங்கும் எப்போதும் தங்கள் சாதியை நினைத்துக்

கொண்டேயிருப்பதில்லை. அதைக் குறித்து தயக்கமோ, அவமானமோ, அச்சமோ, இருப்பதில்லை. ஆனால் சாதி தலித்துகளுக்கு அச்சமூட்டும்

கொடிய தண்டனை. எந்த ஒரு விநாடியும் அதை அவர் மறக்கமுடியாது. தோழர்கள் எல்லோரும் அவர் அப்படிக் கூப்பிடுவதை தவறாக எடுத்துக்

கொள்ளவில்லை. மாறாக எல்லோரும் சுயசாதியைக் கிண்டல் செய்து கேலி பேசி மகிழ்ந்ததைப் பார்த்தேன். அவரும் அங்கே சுதந்திரமாய்

மற்றெல்லாசாதியினரையும் கேலி செய்தார். எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது.

 

நான் வேலைக்குச் சென்ற பிறகு எங்கு டூட்டிக்குப் போனாலும் போன கொஞ்ச நேரத்திலேயே உடன் வேலை பார்க்கிற சகதொழிலாளிகள் நான்

என்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை அறிவதில் குறியாய் இருந்தார்கள். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. என்னுடைய உருவமும்,

நிறமும், இயல்பும் அந்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம். முக்கியமாக எல்லோரும் நான் தலித்தா இல்லையா என்று அறிந்து கொள்ள

ஆசைப்பட்டார்கள். அதைப் பொறுத்து அணி சேர்க்கை வைத்து கொள்ளும் திட்டம் தான். நேரிடையாகக் கேட்க முடியாத அளவுக்கு நாகரீகமாக

இருந்தார்கள் அவ்வளவு தான். மற்றபடி சுற்றி வளைத்து சொந்த ஊர், வசிக்கும் ஏரியா, அப்பாவின் பெயர், இன்னாருக்கு நீங்கள் என்ன வேண்டும்

என்றோ, இன்னாரை உங்களூக்குத் தெரியுமா என்றோ கேள்விகள் கேட்டு மண்டையைக் கீறுவார்கள். நீங்கள் தலித்தாக இருந்தால்

மற்றவர்களின் பழக்கத்திலேயே ஒரு விலக்கம் தெரியும். பார்வையிலே ஒரு அலட்சியம் தெரியும். வர்க்க அரசியலில் எதிரியான முதலாளித்துவ

வர்க்கத்தோடு மோதுவதற்குப் பதில் சொந்த வர்க்கத்துடனேயே மோதுகிற அவலம் தொழிலாளி வர்க்கச் சிந்தனையில் ஏற்பட்டிருக்கிறது.

இது ஒரு புறம் என்றால் இன்னொரு புதிய முறையும் வர்க்கமாக அணி திரண்ட தோழர்களிடம் தோன்றியிருக்கிறது. அடையாள அரசியலின்

மூலம் மறுபடியும் வர்ணாசிரமக்கோட்பாடு நவீன முகமூடியை அணிந்து கொண்டு சாதிய அணிதிரட்டலை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

சாதிய அணிதிரட்டலின் மூலம் ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இடத்தைத் தக்கவைப்பது மட்டுமல்ல ஆண்டபரம்பரை.. ஆண்டு

கொண்டிருக்கும் பரம்பரை..ஆளப்போகும் பரம்பரை என்று வர்ணாசிரப்படிநிலையில் மேல்நிலையாக்கத்துக்கு செல்ல முயற்சி செய்து

கொண்டிருக்கிறது. இதனால் வர்க்க ரீதியில் அமைப்பாக அணி திரண்ட தொழிலாளிகளும் பாதிப்படைய நேரிடுகிறது. ஏற்கனவே பாட்டாளி

வர்க்கப் பண்பாட்டுவெளியில் நிகழ்ச்சிநிரல் எதுவுமே இல்லாததால் வர்க்கமாக அணி திரண்ட தொழிலாளிகளும் அடையாள அரசியலின்

சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டியுள்ளது.

தங்கள் குடும்பங்களுக்குள் தோழர்கள் ஊடாடுவதில் பெருந்தயக்கம் இருக்கிறது. தாங்கள் மிக முற்போக்காக இருந்து கொண்டு, ஆனால் குடும்பம்

சாதியப்பிடிமானம் உள்ள குடும்பமாக இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவது வசதியாக இருக்கிறது. எனவே புதிய பண்பாட்டு

விழுமியங்களை உருவாக்குவதில் அக்கறை வருவதில்லை. அது மட்டுமல்லாமல் குடும்பத்தின் பிற்போக்கான குணாதிசயத்தினால் தங்கள்

குழந்தைகளின் சாதிமறுப்புக்காதலை மறுக்கிற நிலைமை ஏற்படுகிறது. இல்லையென்றால் பூனைக்கும் தோழனாய் பாலுக்கும் காவலாக

இருப்பதைப் போல தோழர்களிடையே தங்கள் சொந்த சாதி பார்த்து சம்பந்தம் பேசித் தலைவர்களை அழைத்து முற்போக்கான திருமணங்களை

நடத்தி விடுகிறார்கள். இல்லையென்றால் காலையில் சநாதனமாய் புரோகிதர் சகிதம் ஹோமகுண்டம் வளர்த்து அக்னிசாட்சி, அருந்ததி சாட்சி

என்று எல்லாச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்து முடித்து அந்தச் சூடு ஆறுமுன்னே மாலையில் தலைவர்களை அழைத்து

முற்போக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி விடுகிறதும் உண்டு. இதற்கு தோழர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. முற்போக்கு

பண்பாட்டுவெளியில் நாம் வலுவாகச் செயல்படாதாதும், தோழமை என்கிற மகத்தான சர்வதேசிய, வர்க்கபேதமற்ற, சாதி பேதமற்ற

வாழ்வியல்நெறியைச் செழுமைப்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவும் தான் காரணம் என்று தோன்றுகிறது.

 

எப்படியானாலும் சாதியும் வர்ணாசிரமமும் குடும்பங்களின் வழியே தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன. அடுத்தடுத்த தலைமுறைக்கும் அதை

கொண்டு செல்லும் வழியைக் கண்டு பிடித்து விடுகின்றன. இதற்குப் பண்பாட்டு வெளியில் இருக்கிற வெறுமையும் ஒரு காரணம்.

இங்கிருக்கக்கூடிய சட்டம், நீதி, கலை, இலக்கியம், ஊடகங்கள், எல்லாமே மதங்களின் சட்டங்களையே பெரும்பாலும் பிரச்சாரம் செய்கின்றன.

கடைப்பிடிக்கின்றன. பெரியாருக்குப் பின்னால் மாற்றுப்பண்பாட்டுவெளியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது. முற்போக்கான

மாற்றுப்பண்பாட்டு வெளியில் நூறுபூக்கள் மலர வேண்டும். புதிய முற்போக்கு பண்பாட்டு விழுமியங்களை உருவாக்குவதின் மூலமே நாம்

மார்க்சிய வாழ்வியல் நெறியைச் செழுமைப்படுத்த முடியும். சுயசாதி நிராகரிப்பை தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்த முடியும். இது ஒரு

தொடர்ச்சியான போராட்டம். தொடர்ந்த விழிப்புணர்வும், விமர்சனமும் சுய விமர்சனமும் மட்டுமே இந்தப் புதிய பண்பாட்டு விழுமியங்களை

முன்னெடுத்துச் செல்ல உதவும். அதன் மூலமே மக்களிடம் ஒரு புதிய முற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்டு செல்லவும்,

அதனால் அவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தவும் முடியும். அது தான் இன்றையத் தேவை.DSC03548

Wednesday, 30 January 2013

க.நா.சு.வும் சி.ஐ.ஏ.வும்

உதயசங்கர்ka-na-su

இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னால் சிரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இலக்கியம் என்பது தமிழாசிரியர்களின் டிபார்ட்மெண்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் காரணம் இருந்தது. எங்கள் வீடு இருந்த கன்னி விநாயகர் கோவில் தெருவிலிருந்து காந்திமைதானம் ஐம்பதடி தூரத்தில் தான் இருந்தது. கோவில்பட்டியில் நடைபெறும் அத்தனை முக்கியமான அரசியல் கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள் எல்லாம் அங்கே தான் நடைபெறும். எல்லாக்கூட்டங்களிலும் மேடைக்கு முன்னால் புழுதி பரப்பியபடி சிறுவர்கள் நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். பலசமயம் கூட்டம் ஆரம்பித்த பிறகும் கூட எங்கள் அட்டகாசம் தொடரும். யாராவது பெரியவர்கள் வந்து சத்தம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். நாங்கள் அசரணுமே. மிரட்டல்களும், சிலசமயம் அடிகளும் கூட கிடைக்கும்.

இலக்கியக்கூட்டங்கள் என்றால் பட்டிமன்றங்கள் தான். புலவர்கள், பேராசிரியர்கள் என்று பழந்தமிழ் இலக்கியப்பாடல்களை செந்தமிழில் பாடவும், பேசவும் செய்வார்கள். அவர்கள் பேசுகிற மொழியே எங்களுக்குப் புதியதாக இருக்கும். அப்படியே வாயைப் பிளந்தபடியே பேசுகிறவர்களின் வாயை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே உட்கார்ந்திருப்போம். ஆக இலக்கியம் என்றால் அது வேறு மொழியில் இருக்கும் போல என்று தான் நினைத்திருந்தேன். ஏனெனில் நான் மற்ற பயல்களுடன் பேசுகிற மொழியில் அது இல்லை. ஆனால் அந்த மேடைப்பேச்சு கவர்ச்சியாக இருந்தது. அதைப்போல தெருவில் பேசி பகடி செய்திருக்கிறேன். பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரியில் படிக்கும்போது கூட எதுகை மோனையோடு எழுதப்படாத கவிதைகளைக் கவிதைகள் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனவே நானும் எதுகைமோனையோடு கவிதைகளை எழுதி கவிதாதேவியை அர்ச்சனை செய்து வந்தேன். நல்லவேளை மாரீஸ் கவிதாதேவியைக் காப்பாற்றினான். எப்படித்தெரியுமா?

நீலக்குயில் என்று ஒரு இலக்கியப்பத்திரிகை நான் சிறுபையனாக இருந்தபோது திரு.அண்ணாமலை என்னும் பெரியவரால் நடத்தப்பட்டு முக்தியடைந்த பிறகு மாரீஸின் வடிவமைப்பில் ( அப்போது டெடில் பிரஸ் தான் ) வித்யாஷங்கரை ஆசிரியராக கொண்டு எண்ணங்கள் என்ற பத்திரிகை வெளிவந்தது. அந்தப் பத்திரிகைக்கு என்னுடன் கூடப்படித்த பாவத்துக்காக என்னிடம் கவிதை தரும்படி கேட்டான் மாரீஸ். கவிதைகளால் நோட்டுகளை சிறுகாலியிடம் கூட விடாமல் நிரப்பிக் கொண்டிருந்த நான் உடனே எதுகை மோனை உருவகம், உவமை, உவமேயம் என்று வார்த்தைகளை நெருக்கி அடுக்கி எண்ணங்கள் வாழ்க வண்ணங்கள் எழுக என்கிற மாதிரி ஒரு மகத்தான கவிதையை அடித்தல் திருத்தல் இல்லாமல் நாலு பேப்பரை வேஸ்ட்டாக்கி எழுதிக் கொண்டு போய் கவிஞனுக்கேயுரிய கம்பீரத்துடன் நீட்டினேன். மாரீஸ் வாங்கிப் படித்துவிட்டு ஒரு மர்மப்புன்னகையுடன் சரி ஆசிரியரிடம் கொடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டான். எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். கவிதையைப்படித்தவுடன் கண்டேன் கவிதையை என்று என்னைக் கட்டித்தழுவிப் பாராட்டி ( கொஞ்சம் ஓவரா இருக்கோ ) முதல்பக்கத்தில் பிரசுரித்து விடுவோம் என்று சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தேன். சரி. பரவாயில்லை. அவனுக்குத் தெரியாவிட்டால் போகட்டும். எப்படியும் ஆசிரியர் படித்துவிட்டு என்னைத் தேடி வருவார் என்று நினைத்தபடி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.

இரண்டு நாட்களுக்குப்பிறகு எண்ணங்கள் ஆசிரியர் என்னைப் பார்க்கவிரும்புவதாக மாரீஸ் சொன்னான். உற்சாகமாக தெரு முக்கிலிருந்த டீக்கடைக்குப் போனேன். அங்கே வித்யாஷங்கர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி என் தோளில் கையைப் போட்டு மென்மையாக தம்பி நீ எழுதியிருக்கறது கவிதையில்லையே என்றார். எனக்கு அப்போதே கவிதைகள் நிரம்பிய என்னுடைய நோட்டுகள் என்னைச் சுற்றிக் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டன. அவர் கவிதையைப்பற்றி நிறையச் சொன்னார். எனக்கு அவர் பேசியது ஒரு அட்சரம் கூடப்புரியவில்லை. கடைசியில் அவர் கையில் வைத்திருந்த அபியின் மௌனத்தின் நாவுகள் என்ற கவிதைப்புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதற்குப் பிறகுதான் கலைகளின் அரசியான கவிதாதேவியை எவ்வளவு புண்ணாக்கியிருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது. அந்தச் சமயத்தில் மட்டும் மாரீஸ் என்னிடம் கவிதை கேட்காமலோ, வித்யாஷங்கர் என்னைத் தேடிவந்து அபியின் கவிதை நூலைத் தராமலோ போயிருந்தால் என்னவாயிருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பார்க்கிறேன். உடல் நடுங்குகிறது. என் வீடு முழுவதும் நோட்டுகளில் நிரம்பிய கவிதைகள் நெருக்கடி தாளாமல் மூச்சுத்திணறி கூட்டம் கூட்டமாக செத்துப்போயிருக்கும். நானும் அவைகள் செத்தது தெரியாமல் புத்தகங்களாக அச்சிட்டு தமிழ்கூறு நல்லுலகத்தில் ஊர்வலம் போகச்செய்திருப்பேன். நல்லவேளையென்று நீங்கள் பெருமூச்சு விடுவது எனக்குத் தெரிகிறது.

இப்படி ஆரம்பித்த இலக்கியப்பெரும்பயணத்தின் துவக்கத்திலிருந்து என்னை அரவணைத்தது இடதுசாரிகள் தான். எமர்ஜென்சிக்குப் பிறகு எழுந்த ஜனநாயக எழுச்சியினால் இடதுசாரிகள் புத்துணர்ச்சி பெற்றிருந்த தருணம். மீண்டும் லட்சியவாதம் தன் பதாகையை உயர்த்திக் கொண்டிருந்தது. புரட்சிக்கு அணுவும் குறையாத கனவு இடதுசாரிகளிடம் தினசரி பூத்துக் கொண்டிருந்தது. நாங்கள் ருஷ்ய இலக்கியங்களையும், சீன இலக்கியங்களையும், வாசித்தோம். சோவியத்தின் சோசலிச இலக்கியக்கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தோம். தமிழில் முற்போக்கு இலக்கியப்படைப்புகளைப் படித்தோம். அந்தக்காலகட்டத்தில் தான் இலக்கியத்தில் இருக்கிற அரசியல் பற்றி எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. கோவில்பட்டியிலேயே வேறு ஒரு இலக்கிய அணியும் இருப்பது தெரியவந்தது. அவர்கள் தான் முதன்முதலில் க.நா.சு. என்ற பெயரை உச்சரித்தார்கள். உலகத்துச்சிறந்த நாவல்கள் குறித்த க.நா.சு.வின் புத்தகம் வாசிக்கக்கிடைத்தது. அந்த நாவல்களின் அறிமுகத்தில் வேறொரு உலகம் விரிந்தது.

நான் பழகிக் கொண்டிருந்த இடதுசாரிகளிடம் க.நா.சு.வைப்பற்றிக் கேட்டன். அவர்கள் க.நா.சு. கலை கலைக்காக என்ற கொள்கைவாதி. அவர் ஒரு சி.ஐ.ஏ. ஏஜெண்ட். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். நான் முதலில் நம்பினேன். பிறகும் நம்பினேன். ஆனால் இடதுசாரிகள் புதுமைப்பித்தனை அவநம்பிக்கைவாதியென்றும், , பூமணியை போலீஸ் இன்பார்மர் என்றும், கிராம்ஷியை ஐரோப்பிய குறுங்குழுவாதகம்யூனிஸ்ட் என்றும், புதுக்கவிதையை பெட்டிபூர்ஷ்வாக்களின் கலை வடிவமென்றும் வீதி நாடகங்களை தீவிரவாத வடிவமென்றும் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை குத்தியபோது சந்தேகப்பட்டேன். இடதுசாரிகளின் தியாக உணர்வும், அர்ப்பணிப்பும், போராட்டகுணமும் மகத்தானது. இன்றும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை அவர்கள் தான். அவர்கள் அரசியல், பொருளாதாரக்காரணிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை கலை, இலக்கிய,பண்பாட்டுக்காரணிகளுக்குக் கொடுக்காததினால் வந்த விளைவு என்று நினைத்தேன். அதனால் மாற்றுக்கருத்துகளிடமிருந்து தங்களையும் தங்கள் ஆதரவாளர்களையும் பாதுகாத்துக் கொள்ள இந்த முத்திரைகளைப் பயன்படுத்தினர். இதைத் தங்களுடைய சொந்தத் தோழர்களிடமும் பயன்படுத்தினர் என்பது இன்னும் பெரிய சோகம்.

ஆனால் இதற்கு எதிராக உள்ளிருந்து பெரும்போராட்டம் நடந்தது என்பதும், உலகச்சூழல் மாறியதும் இடதுசாரிகளின் வறண்டபார்வை மாறுவதற்கு உதவின என்று சொன்னால் மிகையாகாது என்று தான் நினைக்கிறேன்.

க.நா.சு. என்ற தனிமனிதர் இல்லையென்றால் தமிழ் இலக்கிய உலகத்துக்கு நிலவளம் எழுதிய நட் ஹாம்சனைத் தெரிந்திருக்காது. அவமானச்சின்னம் எழுதிய நதானியல் ஹாதர்னைத் தெரிந்திருக்காது. தாசியும் தபசியும் எழுதிய அனடோல் பிரான்ஸைத் தெரிந்திருக்காது. மந்திரமலை எழுதிய தாமஸ் மன்னைத் தெரிந்திருக்காது. சித்தார்த்தனை எழுதிய ஹெர்மன் ஹெஸையைத் தெரிந்திருக்காது. விலங்குப்பண்ணை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல்லைத் தெரிந்திருக்காது. தேவமலர் எழுதிய செல்மா லாகர் லவ்வைத் தெரிந்திருக்காது. இன்னும் எட்கர் ஆலன்போவை, காஃப்காவை, சோல்ஜெனித்சனை, என்று உலக இலக்கியங்களை தமிழ் இலக்கியப்பரப்பில் பார்வைக்கு வைத்தவர். உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவ விட்டவர். நாங்கள் அவருடைய உலக இலக்கிய வரிசை நூல்களைத் தேடித்தேடிப் போட்டி போட்டுக் கொண்டு படித்தோம். ( உபயம் – கோணங்கி ) மிகப்பரந்த வாசிப்பும், மிகச்சிறந்த ரசனையும் கொண்ட, இலக்கியத்துக்காகவே வாழ்ந்து தீர்த்த க.நா.சு.வை எது இங்ஙனம் செய்யும்படி எது இயக்கியது? கடைசிக்காலம் வரை அவருடைய ஒரே துணையான அந்த டைப்ரைட்டர் அவரிடம் என்ன சொல்லியிருக்கும்?. தன்னை விளம்பரப்படுத்தும் கலைநுட்பம் மலிந்த இன்றைய இலக்கிய உலகில் அவருடைய படைப்புகளின் மதிப்பீடு என்ன? காற்றில் அலையும் கேள்விகள்!

பொய்த்தேவு என்ற அவருடைய நாவல் அன்று நான் முதலில் படித்த க.நா.சு.வின் படைப்பு. இப்போது யோசித்துப்பார்க்கும்போது தமிழில் அது முதல் இருத்தலியல் நாவலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சோமு என்ற மேட்டுத்தெரு ஜீவனின் வாழ்க்கைச் சித்திரம் தான் அந்த நாவல். சோமுவின் பரிணாம வளர்ச்சி எப்படியெல்லாம் அந்தந்த காலநேர சமய சந்தர்ப்பங்களுக்கேற்றபடியெல்லாம் மாறுகிறது என்பதை கவனிக்கும் போது அவன் வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பின்னால் எந்த தர்க்கநியாயமும் இல்லை என்றும் புரிகிறது. நாவலின் வளரும்போது சோமுவின் வளர்ச்சியும் வாசகன் எதிர்பாராத திசைகளில் வளர்ந்து கொண்டே போகிறது. சோமு, அவனுடைய அம்மா, ராயர், ராயரின் மகள், தாசி சகோதரிகள், என்று க.நா.சு.என்னும் கதைசொல்லியின் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தோடு இயைந்தும், யதார்த்தத்தை மீறியும், வளர்கின்றனர். தமிழிலக்கியத்தில் சோமுவுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் க.நா.சு. படைப்பிலக்கியத்தில் தனக்கும் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

சி.ஐ.ஏ. ஏஜெண்ட் தான் என்று நான் நம்பிய க.நா.சு, அமெரிக்காவின் டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகையில் எழுதிய க.நா.சு., அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களை மட்டுமே உயர்த்திப்பிடித்த க.நா.சு, ருஷ்ய, சோவியத் இலக்கியங்களைப் பற்றிப் பேசாத க.நா.சு, முற்போக்கு இலக்கியங்களை கலைவறட்சி மிகுந்த பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளிய க.நா.சு, எனக்கு நேரிடையாகவே ஒரு அதிர்ச்சியைத் தந்தார். 1988 – ஆம் ஆண்டு என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியான ‘ யாவர் வீட்டிலும் ’ வெளியானது. வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே தினமணியில் தமிழ்ச்சிறுகதை வளம் என்ற தலைப்பில் க.நா.சு. என்னுடைய சிறுகதைத்தொகுதி பற்றியும், கௌதமசித்தார்த்தன் எழுதிய மூன்றாவது சிருஷ்டி என்ற சிறுகதைத்தொகுதி பற்றியும் பாராட்டி எழுதியிருந்தார். எப்படியிருக்கும் பாருங்கள்! என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. க.நா.சு. பற்றிய என்னுடைய பழைய மதிப்பீடுகள் தகர்ந்த தருணம் அது. தமிழிலக்கியத்தில் க.நா.சு. என்ற ஆளுமை மட்டும் இல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ற கேள்விக்கு ஒரு நண்பர் பதில் சொன்னார். ஒரு ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருக்கும்.

நான் ஒரு தோழரிடம் க.நா.சு. எழுதிய கட்டுரையைப் படிக்கக் கொடுத்திருந்தேன். படித்து முடித்த அவர் தீவிரமான முகபாவத்துடன் அருகில் வந்தார்.

” தோழர் ஜாக்கிரதையா இருங்க.. சி.ஐ.ஏ. ஒங்கள குறி வைச்சிட்டாங்க ” என்று சொல்லி விட்டுப்போனார்.

க.நா.சு. வின் சிரிப்புச் சத்தம் கேட்கிறதா உங்களூக்கு?.

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

Monday, 31 December 2012

ஆபத்தான சமூகமா? ஆபத்தான காலமா?

1 nature scenery (www  

உதயசங்கர்

 

சமீபகாலமாக நமது சமூகத்தில் நடந்து வருகிற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாம் வாழும் இந்தக் காலம் ஆபத்தானதாக மாறியிருக்கிறதா? இல்லையெனில் நமது சமூகமே ஆபத்தானதாக மாறி விட்டதா? என்ற அச்சம் தோன்றுகிறது. ஆபத்தான காலகட்டம் என்றால் நாம் அதைப் போராடிக் கடந்து விடலாம். ஏனெனில் இந்தக் காலகட்டம் மாறுவதற்கான, மாற்றுவதற்கான, காரணிகள் காலத்தின் கர்ப்பத்திலேயே உருக்கொண்டுவிடும். ஆனால் சமுகமே ஆபத்தானதாக மாறிவிட்டால் பெரும்நாசம். சீரழிவு. பெரும்பான்மை சமூகம் மனசாட்சியற்றுப் போய் விட்டதோ என்ற பயம் தோன்றுகிறது. எப்போதுமே சமூகத்த்தின் மேன்மை குறித்து சிந்திக்கும் முற்போக்கான சக்திகள் செயல்திட்டமின்றி செயலிழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதி, மத வேறுபாடுகள் மீண்டும் எழுச்சி கொண்டிருக்கிறன. உலகமயமாக்கலின் நவீன நுகர்வுக்கலாச்சாரத்தினால் நமது அறமாண்புகள் இழிவுப்படுத்தப்படுகின்றன. பழமைவாதத்தையும் நவீனத்தையும் தனித்தனியே போற்றிப் பாதுகாப்பாய் நமது மனங்களில் கொலுவிருக்கச் செய்வதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பழமைவாதத்தை, சாதிவேர்களை, வர்ணாசிரமத்தை, பெண்ணடிமைத்தனத்தைக் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெண்களே செய்கிற அவலத்தைக் கண்கூடாகக் காணமுடிகிறது. நாம் எங்கே நிற்கிறோம்? காட்டுமிராண்டிக்காலத்திலா? கற்காலத்திலா? மனிதமனதில் இத்தனை நூற்றாண்டுகளாக உருவாகிவந்த அறம், தயை, நேசம், அன்பு, கருணை, எல்லாம் எங்கே போயின? எந்த ஒரு கணத்திலும் மனிதன் விலங்காக இப்படிச் சொல்வதுகூட தவறு, கொடூரமான காட்டுமிராண்டியாக மாறி விடுகின்ற சந்தர்ப்பங்களைப் பார்க்கும்போது மனித இனத்தின் பெரும் அவநம்பிக்கை தோன்றுகிறது. இப்படி ஒரு இனம், சமுகம் இல்லாதொழியட்டும் என்று சாபமிடத் தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஏகாதிபத்தியத்தின், வேட்டைக்காடாக நமது சமுகத்தை மாற்றுகிற வேலையை நமது ஆட்சியாளர்கள் திறம்பட செய்து கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியநாடுகள் எதை விற்றாலும் வாங்குவதற்குத் தயாராக இந்தியா இருக்கிறது. அதில் ஒன்று தான் அணு உலை விற்பனையும். ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு அரசமைப்பு, அரசு நிர்வாகம், முதலாளித்துவ ஊடகங்கள், அரசியல் கட்சிகள் எல்லாம் அந்த ஒத்திகையின் அட்சரம் பிசகாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் அச்சத்தை விட அந்நிய நாட்டு நலன் முக்கியமானதாக போய்விட்டது. தங்களூக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தின் பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் கூடங்குள மக்களின் மகத்தான போராட்டம் ஓராண்டைத் தாண்டியும் அதற்கான எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அடக்குமுறைகளால் அந்த மக்களின் போரட்ட உணர்வை அழித்து விட நினைக்கும் அரசு நிர்வாகம் அந்த ஊரைத் தனித்தீவாக்கி போகும் பாதைகளிலெல்லாம் அடக்குமுறை யந்திரங்களை நிறுத்தி பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரமுகத்தை அங்கே பார்க்கமுடிகிறது., சமுகத்தின் வாழ்வு, தங்கள் வாழ்வாதாரம், அழிந்துவிடும் என்ற அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீது தேசத்துரோக வழக்குகள், சதி வழக்குகள் லட்சக்கணக்கில் போடப்பட்டுள்ளன. எந்த அரசியல், பொருளாதாரப்பின்புலமற்ற அந்த எளிய மக்களின் போராட்டம் நமது சமூகத்தின் மனசாட்சியை ஏன் உலுக்கவில்லை. எல்லா நிகழ்வுகளும் நமக்கு சாயங்காலநேரத்து ஸ்னாக்ஸ் ஆகி விட்டதா? பயமாக இருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

அடையாள அரசியலின் ஒரு முகமாக சாதி அரசியல் முன்னெப்போதையும் விட இப்போது நமது சமூகத்தில் ஓங்கியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த சாதி அரசியலை அதன் ஆரம்பகாலத்தில் ஊக்குவித்து அதற்குத் தத்துவார்த்தபின்புலத்தை நமது அறிவுஜீவிகளில் இலக்கியவாதிகளில் பலர் கொடுத்ததை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே வர்ணாசிரமக் கோட்பாட்டினால் ஈராயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு சமுகத்தில் இந்தச் சாதி அரசியல் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழ் அறிவுஜீவிகள் முன்னுணரவில்லை. தங்களை முன்னிறுத்தும் போராட்டகளத்தில் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தன்வாழ்நாள் முழுவதும் வர்ணாசிரமத்துக்கு எதிராக, பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய நமது சமுகத்தின் கலகக்காரச் சிந்தனையாளர் பெரியாரின் அத்தனை உழைப்பையும் மிகச் சில வருடங்களிலே துடைத்தழித்து விட்டது சாதி அரசியல். விளைவு சாதிகள் தோறும் புதிய மனிதக்கடவுள்களின் தோற்றம், வழிபாடு, அந்தக் கடவுள்களின் பெயரால் வன்முறை, கொலை, கொள்ளை. சமுகத்தின் மனசாட்சி என்னவாயிற்று? பரமக்குடி, மதுரை, சம்பவங்களின் உள்ளர்த்தம் இது தானே.

அகமணமுறையின் மூலமே சாதியத் தூய்மையைக் காப்பாற்ற முடியும் என்ற மனுதர்மசிந்தனையை யார் யாருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்? ஆனால் சமுகம் அதைக் கடைப்பிடிக்கிறதே. அதுவும் சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிற சாதிகளுடனான திருமணம் என்றால் ரத்தம் கொதித்து, கௌரவக்கொலை தொடங்கி, தருமபுரியில் நடந்திருப்பதைப் போல கூட்டுக்கொள்ளை, என்று சமூகமே திரண்டு நடத்திய வன்முறை அரங்கேற்றத்தைப் பார்க்கும்போது நாம் மீண்டும் நமது கற்காலத்திற்குத் திரும்பி விட்டோமா? என்ற அச்சம் எழுகிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

தனித்தனியாக இருக்கும்போது எத்தனை நல்லவனாக அறவுணர்ச்சி மிக்கவனாக, சமூகமனிதனாக, அன்பு, தயை, கருணை, மிக்கவனாக இருக்கிறான் மனிதன்! ஆனால் கும்பலாக மாறும்போது அவனிடம் காட்டுமிராண்டித்தனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் போகிறதே. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மானுடம் தன் அநுபவத்தின் வழியாகக் கற்றுணர்ந்த நாகரீகம், பண்பாடு, அறவிழுமியங்கள் எல்லாம் வேஷம் தானோ? இல்லை போர்வை போர்த்திய காட்டுமிராண்டி தானோ மனிதன்? பண்பாட்டு அறிஞர் கே.என். பணிக்கர் மதச்சார்பின்மைக்கான கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றிப் பேசும்போது எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எல்லாமத, இன, மொழி, மக்களையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்புகளை உருவாக்கி பரஸ்பரம் அந்நியோன்யத்துடன் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகள், என்று உறவுகளைப் பலப்படுத்தச் சொல்லுவார். ஆனால் தருமபுரியில் நடந்த பொருளாதார அழித்தொழிப்பு சம்பவத்தை நடத்தியிருப்பது எங்கிருந்தோ வந்த வேற்று மனிதர்களல்ல. அந்தந்த ஊர்களின் வழியே போய்வந்து கொண்டிருக்கும், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், என்று உறவுகளைக் கொண்டிருந்தவர்கள் தான். வன்முறை நடக்கும் போது ஒரு பெண் கேட்கிறார், “ ஐயா, பழகுன ஆட்களே இப்படிச் செய்யுறீங்களே..” அதற்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்த மனிதர் சொல்லியிருக்கிறார், “ பழகுனா சம்பந்தம் பண்ணிக்க முடியுமா..” அங்கே பிராமணர்கள் யாரும் கிடையாது. பிராமணியம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. வேதங்கள் என்றால் என்னவென்றோ, மனுதர்மம் என்றால் என்னவென்றோ தெரியாது. வருணாசிரமக் கோட்பாட்டின் படி தான் எந்த இடத்தில் இருக்கிறோம். தன்னுடைய சாதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியாது. மனுதர்மத்தில் எப்படியெல்லாம் தான் இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம் என்றும் தெரியாது. ஆனால் அவருடைய பொதுப்புத்தியில் வருணாசிரமும், மனுதர்மமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறதே. அது தான் அவரை இப்படிப் பேசச் சொல்கிறது. அது தான் அவருடைய கட்சித்தலைவரையும் பேசச்சொல்கிறது. தன்னுடைய அரசியல் பதாகைகளில் பெரியாரையும், அம்பேத்கரையும், காரல்மார்க்ஸையும், வைத்துக் கொண்டே பிராமணியத்தின் கொடிய நடைமுறையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. சமூகமும் இந்த பலவேசத்தைப் பார்த்து வாளாவிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

சமீபத்தில் மறைந்த இனவெறி அரசியலின் பிதாமகர் பால்தாக்கரேயின் அரசியல் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய வெறுப்புஅரசியலை நடத்திய அவருடைய இறுதி நிகழ்ச்சிக்கு ஐந்திலிருந்து பத்து லட்சம் பேர் கூடியிருந்தார்கள் என்ற செய்தி உண்மையில் அதிர்ச்சியளித்தது. அதை விட பெரிய அதிர்ச்சி. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இடதுசாரிகளைத் தவிர மற்றவர்கள் அவர் ஏதோ நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவரைப் போல எந்த விமர்சனமுமின்றி உரைச்சித்திரம் நிகழ்த்தியது அதை விட பெரிய கொடுமை. எல்லோருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறானா? சந்தேகமாயிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

இது எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவது. பெண் பிறப்பதற்கு முன்பே கருவாக இருக்கும்போதே அவளுடைய போராட்டம் தொடங்கி விடுகிறது. பிறந்து, நோய், ஊட்டச்சத்துக்குறைபாடு, குடும்பத்தில் அலட்சியம், அவமானம், வீட்டுவேலைகள் என்ற ஆபத்துகளோடு வளரும்வரை குடும்பத்தோடு போராட்டம் என்றால் கல்வி கற்கத் தொடங்குவதிலிருந்து தன் இறுதிக் காலம் வரை சமூகத்தோடு போராட்டம். ஒரு சமூகத்தையே எதிர்த்து வளர்கிறாள். பிறந்ததிலிருந்தே ஆண்சமூகம் அவளை ஒரு பாலியல்கருவியாக நினைக்கிற அவலத்தை என்னவென்று சொல்ல? தந்தை, சகோதரன், சொந்தக்காரன்கள், அக்கம்பக்கத்துகாரன்கள், பழகியவன்கள், அந்நியன்கள், எங்கும் ஒரு பெண்ணுக்கு எதிரிகளாகவே இருக்கிற சமூகம் உயிர்வாழ வேண்டுமா? திரைப்படம், பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள், என்று எங்கும் பெண் உடல் காட்சிப்பொருளாய் மாற்றப்பட்டுள்ள, அதற்கு எதிராக ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காத இந்த ஆணாதிக்கக்குடிமைச் சமூகம் உயிர்வாழத்தான் வேண்டுமா?

டெல்லியில் நிர்பயா, தாதன்குளத்தில் புனிதா, இன்னும் இன்னும் தினசரிகளில் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல்வன்முறைகளைக் கேள்விப்படும் போது உடல் நடுங்குகிறது. இப்போது தான் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் படிக்கவும், மிகக்குறைந்த சதவீதமானவர்கள் வேலைக்குச் செல்லவும், சற்றே பொருளாதார ரீதியாகச் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் பெண்ணுடலைச் சிதைத்து அவர்களை மீண்டும் முடமாக்க நினைக்கிற இந்த ஆணாதிக்கச் சமூகம் உயிர் வாழத்தான் வேண்டுமா? இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

குடிமைச்சமூக மக்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. போலி அரசியல்வாதிகள் பின்னால் அணிதிரள்கிறார்கள். பொருளாதாரச்சுரண்டல் என்றால் என்னவென்று தெரியாது. தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் முதலாளியாகி விட நினைக்கிறார்கள். குறுக்குவழியில் சம்பாதிக்க ஓடுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லையென்று குவாட்டருக்கும் பணத்துக்கும் ஓட்டளிக்கிறார்கள். இனவெறி, மதவெறி, சாதிவெறி, என்று எல்லா வெறிகளுக்கும் மிகச்சுலபமாக பலிகடா ஆகிறார்கள். தன்னைத்தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லையென்ற எண்ணத்திலோ, இருக்கக்கூடாதென்ற ஆசையிலோ சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப்பற்றிக் கவலைப்படாதவர்களாக, ஏழ்மை, இல்லாமை, சமூக அவலங்கள் இதைப் பற்றிக் கவலைப்படாதர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவற்றவர்களாக, மூடநம்பிக்கையின் முடைநாற்றமெடுப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மை எது? பொய் எது? என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எளிமை கண்டு இகழ்கிறார்கள். ஆடம்பரத்தைக் கண்டு பிரமிக்கிறார்கள். கேளிக்கைகளில் மூழ்குபவர்களாக, குடிகாரர்களாக, அறமற்றவர்களாக, பண்பாடற்றவர்களாக, நாகரீகத்தைப் பவுடர் பூச்சைப்போல பூசிக் கொள்பவர்களாக, கொடியவர்களாக, வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுபவர்களாக, பிறர் சொத்தை அபகரிப்பவர்களாக, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களாக, மலைகளை உடைப்பவர்களாக, மணல்கொள்ளையர்களாக, பல்லுயிரிகளைக் கொல்பவர்களாக, இயற்கைச் சமன்பாட்டை குலைப்பவர்களாக, சகமனிதன் மீது குரோதம் கொண்டவர்களாக, குடிநீரை விற்பவர்களாக, விவசாயத்தை மதிக்காதவர்களாக, மனோதிடமில்லாதர்களாக, கோழைகளாக, அடிமைகளாவதற்குத் தயாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்திரளைக் கொண்ட இந்தக் குடிமைச் சமூகம் ஆபத்தான சமூகமா இல்லையா?

ஒரு ஆபத்தான காலகட்டத்தில் ஒரு ஆபத்தான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னும் ஒரு ஆண்டு கழிந்து விட்டது. காலத்தின் பேராற்றில் ஒரு துளி. நம்முடைய வாழ்நாளில் முந்நூற்றுஅறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. எல்லா ஆண்டுகளையும் போல இனி வரும் ஆண்டும் கருப்பு ஆண்டாகவே மலருமா? சமூகத்தின் அத்தனை கொடுமைகளும் இப்படியே மாறாமல் கூடிக் கொண்டே போகுமா? நாம் நம்முடைய எதிர்காலச்சந்ததியினருக்கு எந்த மாதிரியான சமூகத்தைக் கொடுக்கப் போகிறோம்? நமக்கு முன்னால், நம் மனசாட்சியின் முன்னால் இந்தக் கேள்வி பெரும்பாறையென நிற்கிறது. உண்மையில் இப்போது நெருக்கடி முற்றிவிட்டதென்றே தோன்றுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமூகத்தை மாற்ற வேண்டும் என்று லட்சியம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தங்கள் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டிய காலம் இது. இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், பெண்ணியவாதிகள், சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், உண்மையான ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள், பாலினச்சிறுபான்மையினர், என்று எல்லோரும் இணைந்து பொதுத்தளத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி சமூகத்தின் பொதுப்புத்தியில் தலையிட வேண்டும். குறைந்தபட்ச பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த ஆபத்தான காலத்திலுள்ள நம்முடைய ஆபத்தான சமூகத்தை மாற்ற முடியும். இது தான் நம்முடைய இன்றைய தலையாயக்கடமை. காலமும் கழிந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டும் நமக்கு விடுக்கும் செய்தி. காலமும் வரலாறும் அழைக்கிறது நம்மை. அதன் குரலுக்குச் செவிமடுப்போம்.