Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Sunday, 16 February 2025

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

 

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

உதயசங்கர்



கலை  தானே அறியாத சில ரகசியங்களை தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளவே கலைஞன் மீண்டும் மீண்டும் கலையைப் படைக்கிறான். அந்த ரகசியங்கள் அவனுக்குக் கிளர்ச்சியூட்டுகின்றன. அவனுடைய ஆசையைத் தூண்டுகின்றன. அவனை மேலும் மேலும் முன்னேறச்சொல்கின்றன. இருளும் ஒளியும் முயங்கி விசித்திரமான விலங்குகளும் தேவதைகளும் வாழும் காட்டுக்குள் அவன் முன்னேறுகிறான். விட்டு விலகமுடியாத வசீகரமும், அதற்குள்ளேயே வெளியேற வழியில்லாத புதிர்க்குகைகளும் அவனை அங்கேயே சுற்றிச் சுற்றி அலைக்கழிக்கின்றன. அந்த ரகசியங்கள் முதல் காதலின் பரிசுத்தமான ஏக்கத்தைப் போல மனதின் அடியில்போய்த் தங்கி விடுகின்றன. களங்கமற்ற குழந்தையின் சிரிப்பொலி காற்றில் என்றும் நிலைத்திருப்பதைப் போல ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு முறை எழுதும்போதும் அந்த ஏக்கம் காற்றில் அலைக்கழியும் சுடரொளி அணையும் முன் ஒருகணம் பளீரெனத் தெரிகிற காட்சியைப் போல தெரிகிறது. கண்ணை மறைத்த இருளில் காட்சியின் தடயங்கள் அப்படியே தங்கி விடுகிறது. அந்தத் தடயங்கள் இன்னும் ஆவேசமூட்டுகின்றன. இன்னும் ஆர்வமூட்டுகின்றன. அந்த இருளின் ஒளியில் அவன் மேலும் மேலும் முன்னேறுகிறான். எப்படியாவது அந்த ரகசியத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்பதே அவனுடைய அவா. அது என்னவாக இருக்கும்? அது எப்படி இருக்கும்? அது ஏன் அப்படி ரகசியமாக இருக்கிறது? அவற்றை தெரிந்து கொள்ளாவிட்டால் தன்னுடைய தலையே வெடித்து விடும்போல அவன் நினைக்கிறான். அதற்காகவே உன்மத்தம் பிடித்தவன் போல எழுதி எழுதிப் பார்க்கிறான்.

எழுத எழுத அவன் தேடிய அந்த ரகசியங்கள் அவனுடைய மனதுக்குள்ளேயே இருப்பதைக் காணமுடிகிறது. அவை இந்த யதார்த்த வாழ்க்கையிலிருந்து தான் உருவானவை என்பதை உணரமுடிகிறது. மானுட உண்மைகளின் ஒளிக்கீற்றுகளே அந்த ரகசியங்களென்று புரிந்து கொள்ளமுடிகிறது. ஆதிக்குகை ஓவியத்திலிருந்து இன்றுவரை கலை அதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கலையின் ஆதாரம் மனித வாழ்க்கையெனும்போது கலைஞன் அந்த வாழ்வை எழுதிப்பார்க்கிறான். அவன் எழுத எழுத வாழ்க்கை அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது. வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களின் மனப்போக்குகளை, மனம் செயல்படும் விதங்களை, மனதின் தந்திரங்களை, மனதின் குரூரங்களை, மனதின் பேரன்பை, ஆசாபாசங்களை, மனதின் இயக்கவியலை, மீண்டும் மீண்டும் வேதாளத்தைச் சுமந்த விக்கிரமாதித்தன் போல தன் படைப்புகளில் எழுதிப்பார்க்கிறான் கலைஞன். மனிதர்களைப் பற்றிய அனைத்தும் புரிந்து விட்டது போலத் தெரிகிறது. ஆனால் ஒரு கணத்தில் எல்லாம் மாறிவிடுகிறது. மனித வாழ்க்கை விசித்திரமானதாகத் தெரிகிறது. மனிதர்கள் விந்தையாகி நிற்கிறார்கள். மனிதமனம் புதிர் நிறைந்த தோட்டமாகத் தெரிகிறது. அங்கே பல அபூர்வமான, அதிசயமான உணர்வுகள் பூக்கின்றன. காரணமின்றியே பல முட்களும் பூக்கின்றன. ஏனென்று தெரியவில்லை. யதார்த்தவாழ்க்கை மனிதர்களை ஆழிப்பேரலை போலச் சுற்றிச் சுற்றி சுழட்டியடிக்கிறது. அந்தப் பேரலையில் சிக்கிய மனிதர்கள் அதன் வீச்சுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறார்கள். கலைஞனும் அந்தப் பேரலையில் சிக்கியவன் தான். அதனால் தான் மானுடவாழ்வின் தீராத பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்கிறான்.

கு. அழகிரிசாமியெனும் மகத்தான கலைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவருடைய இளமைக்காலத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியதும், வாழ்க்கை குறித்த பொருள்முதல்வாதக்கண்ணோட்டம் கொண்டிருந்ததும் மிக முக்கியமான காரணம். அதனால் தான் வாழ்வின் அத்தனை சிடுக்குகளுக்கும் காரணம் புறவயமான யதார்த்தச் சிக்கல்களும் அதன் விளைவான உளவியல் பாதிப்புகளும் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் கு.அழகிரிசாமி.

மானுட உண்மைகளில் விலங்குணர்ச்சிகளான பசியும், தாகமும், காதலும், காமமும் மட்டுமல்ல மானுடம் தன்னுடைய நீண்ட பயணத்தில் உருவாக்கிய தார்மீகநெறிகளான அன்பும், பாசமும், நேசமும், சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் மிக முக்கியமான பங்கைச் செலுத்துகின்றன. அடிப்படை விலங்குணர்வுகளும் தார்மீக நெறிகளும் ஒன்றுக்கொன்று முரண்படும் மையங்களிலெல்லாம் அதைப் புரிந்து கொள்ள கலைஞன் முயற்சிக்கிறான். அப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்யாத எழுத்தாளர்களே கிடையாது.

ஆனால் அந்த முரண்கள் ஒரு கட்டத்தில் தெளிந்த நீரோடும் ஆற்றின் ஆழத்தை அறிய முடியாததைப் போல மயக்குகிறது. மர்மமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது எளிமையானதாகத் தெரியும். சுலபமாய் அவிழ்த்துவிடும் சிடுக்கைப் போலத் தெரியும். கறாரான நாகரீக சமூகத்தின் மாறிக் கொண்டேயிருக்கும் விதிமுறைகளைக் கொண்டு தீர்க்கமுடியாத ஆழ்ந்த பிரச்னை என்று புரியும்.

கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிற பெண்கள் அத்தனை எளிமையானவர்கள். அத்தனை ஆழமானவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தே அவர்கள் மீளமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணங்களாக ஆண்களே இருக்கிறார்களென்பதை அறிந்தவர்கள். இதுவரையிலும் கூட யாரும் சொல்லாத வாழ்க்கையை கு.அழகிரிசாமியின் கதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவருடைய கதைகளை வாசிக்கும்போது கலைடாஸ்கோப்பை எத்தனை முறை திருப்பிப் பார்த்தாலும் அத்தனை முறையும் பன்முக வண்ணச்சித்திரங்களைக் காட்டுவதைப் போல பெண் கதாபாத்திரங்கள் மிளிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பல கதைகளில் ஆண்களின் உலகத்தில் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் வியப்பூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் அதிர்ச்சியூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இந்த சமூகத்தின் முகத்திலறைபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் ஏதும் செய்யவியலாதவர்களாக இருக்கிறார்கள். பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது, அவர்கள் மர்மமானவர்கள் என்ற தேய்வழக்குகளுக்கு மாறாக அவர்களுடைய குணாதிசயங்கள் யதார்த்தச்சூழலிலிருந்து உருவாகின்றன என்பதை கு.அழகிரிசாமி அற்புதமாகத் தன்னுடைய கதைகளில் படைத்திருக்கிறார்.

 

பொருள்வயின் துயருரும் பெண்கள்

1942 – ல் எழுதப்பட்ட வள்ளியின் வாழ்க்கை கதையில் வரும் துப்புரவுத்தொழிலாளியான வள்ளி அதிகாலையிலேயே வந்து இருபது வீடுகளுக்கும் மேலாக வாசல் தொளித்து விட்டு கல்லுடைக்கப் போக வேண்டும். தாமதமாகப் போனால் மேஸ்திரி பூணிட்ட கம்பால் அடிக்கவும் செய்வார். கையில் காயத்துடன் தன்னுடைய வேலையைச் செய்யும் வள்ளியைப் பார்த்து அனுதாபப்படும் இளைஞன் யோசிக்கிறான்.

“ பனி, வெயில், பசி, தாகம் இவற்றை உணரும் ஒரு மனித உடலை சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்! “ கணவன் திருட்டுப்பழியினால் சிறையிலிருக்கிறான். அவளுடைய மகன் ஒரு ஹோட்டலிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறானென்பதை அவள் மகிழ்ச்சியுடன் சொல்கிறாள். ஏழைகள் வாழ்வதற்கு ஏதாவதொரு பற்றுக் கோடு தேவைப் படுகிறது. வள்ளி தன்னுடைய மகனைப் பற்றுக்கோடாக்கிக் கொண்டு பனியிலும் வெயிலிலும் கருமமே கண்ணாக வேலை செய்கிறாள். வள்ளியின் ஒரு நாள்க்காலைப் பொழுதை நம் கண்முன்னால் காட்சிப் படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த வள்ளிகளின் வாழ்வையே உணரச்செய்கிறார் கு.அழகிரிசாமி.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட பித்தளை வளையல் கதையில் வரும் கோமதியின் ஏழ்மை பொன் முலாம் பூசப்பட்ட பித்தளைவளையல்களை வாங்குவதறகு மட்டுமே அனுமதிக்கிறது. அந்தப் பித்தளை வளையலை அணிந்து கொண்டு அவள் செல்லும்  விசேஷ வீட்டில் மற்ற பணக்காரப் பெண்களால் அவமானப்படுத்தப்படுகிறாள். வறுமையின் மீதான கோபத்துடன் இருப்பவளை கணவன் சமாதானம் செய்கிறான். இந்தபொன்மேனிக்கு நிகராக எந்தப் பொன்னும் நிற்க முடியுமோ என்று காதல்வசனம் பேசிச் சமாதானம் செய்கிறான்.

யதார்த்தத்தில் இந்த வார்த்தைகளால் அவளுடைய வளையல்கள் பொன்னாக மாறப்போவதில்லையென்றாலும், வறுமையின் விளைவாக உருவான வெறுமையை இட்டு நிரப்புகின்றன அந்தச் சொற்கள். அந்த நேரத்தில் அவர்களிருவருக்கும் தேவைப்படும் சொற்களாக இருக்கின்றன. கோமதி அந்தச் சொற்களைக் கொண்டு அவளுடைய மனப்புண்ணை ஆற்றுகிறாள்.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட குழந்தையின் தியாகம் கதை தொடங்கும் போது முக அமைப்பினால் எப்போதும் சிரிப்பதைப் போலவே தோற்றமளிக்கும் சின்னி கணவனை இழந்து கைக்குழந்தையுடன் குமாரபுரம் பண்ணையாரின் வயலில் வேலை செய்கிறாள். காட்டு வேலைக்குப் பழக்கமில்லாத அவளுடைய உடல் நோவுகளால் குழந்தையும் நோய்வாய்ப்படுகிறான். பணம் கொடுத்த அதிகாரத்தினால் எதையும் எள்ளலும் ஏகடியுமாகப் பார்க்கும் பண்ணையார் ராமசாமிக்கு சின்னியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டாலும் அவளாக கனிந்து வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவனுடைய லட்சியத்தினால் சின்னியின் குழந்தை இறந்துவிட ராமசாமி செயலற்று சின்னியைப் பயபக்தியுடன் பார்ப்பதாக்க் கதை முடிகிறது. வறுமையின் கோரத்தினால் சின்னியின் குழந்தைத் தன்னைத் தியாகம செய்து தாயின் கௌரவத்தைக் காப்பாற்றுகிறது.

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதை, கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றெனச் சொல்லலாம். கி.ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் அவர்களுடைய கதைகளில் பஞ்சகாலத்தைப் பற்றியும் அந்தக்காலத்தில் மனிதர்கர்கள் வாழ்ந்த அவலமான வாழ்க்கையைக் குறித்தும் எழுதிச் சென்றிருக்கிறார்கள். அழகிரிசாமியின் திரிபுரம் கதையில் பஞ்சத்தினால் புலம்பெயர்ந்து செல்லும் தாயும் மகளும் படும் துயரத்தைக் கொதிக்கும் மனதுடன் சொல்கிறது. பஞ்சமும் பசியும் பட்டினியும்  மனிதர்களை எத்தகைய இழிநிலைக்குத் தள்ளி விடுகிறதென்பதையும், மண்ணில் கிடந்த வெள்ளரிக்காய்க்காகத் தாயும் மகளும் இடும் கௌரவச்சண்டையும், பசியைப் போக்க  தன் மகளையே சோரம் போகவைக்கும் நிலையையும் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கதை முடிவில் உரத்த குரலில் தன் கண்டனத்தையும் பதிவு செய்கிறார்.

வெங்கட்டாமாவினால் நிலை கொள்ளமுடியவில்லை. அம்மா கடையை விட்டு அப்பால் நகர்ந்ததும் அம்மாவிடமிருந்து அவ்வளவு பணத்தையும் வாங்கினாள். வலது கையிலிருந்து இடது கையில் பணத்தைப் போட்டாள்.  இடது கையிலிருந்து வலது கையில் போட்டாள். வியந்து வியந்து பார்த்தவண்ணம் பணத்தைக் கையில் போட்டுக் குலுக்கினாள். எவ்வளவு எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதை நினைக்கும்போது அவளால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. உரக்கச் சிரித்தாள். விட்டு விட்டுப் பலமுறை சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பொற்பிரம்படியைப் போல அவள் சிரித்த சிரிப்பு எங்கெல்லாம் பிரதிபலிக்க இருந்ததோ அவளுக்குத் தெரியாது. அவள் மனிதன் கட்டிய ஒழுக்கத்தை நோக்கிச் சிரித்தாள். ஒழுக்கக் கேட்டை நோக்கிச் சிரித்தாள். நாகரிகத்தையும் அநாகரித்தையும் பார்த்துச் சிரித்தாள். பணக்காரர்களை, ஏழைகளை, ஆண்களை, பெண்களை, பஞ்சத்தை – இப்படி எத்தனையோ அடங்கிய உலகத்தையே நோக்கிச் சிரித்தாள். இது வெங்கட்டம்மாவுக்குத் தெரியுமோ என்னவோ?

சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான். இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ? அதை இப்போது யார்தான் அறிவார்கள்? அந்தக் காலத்துப் புத்தி மான்களும் கூட ஏழை அழுத கண்ணீருக்குத்தான் வாளை உபமானமாகச் சொன்னார்களே ஒழிய ஏழை சிரித்த சிரிப்பைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லையே! “

கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றான ராஜா வந்திருக்கிறார் (1950) கதையில் வரும் தாயம்மாளும் மங்கம்மாவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் திகழ்கிறார்கள். மேலெல்லாம் சொறிசிரங்குடன் வரும் அனாதைச் சிறுவனைக் குளிப்பாட்டும் தாயம்மா எல்லாம் சரியாகி விடும்.. இனி எல்லாம் சரியாகி விடும்.. என்று சொல்லும் போது தாய்மையின் அன்பில் ஒளிவீசுகிறாள். அவளே அந்தச் சிறுவனுக்கு உடுத்திக் கொள்ள துணியேதுமில்லையே என்று தவிக்கும்போது மங்கம்மா

“ பாவம் அந்தத் துண்டைக் கொடு அம்மா “ என்று சொல்லும்போது உன்னதமான மானுடத்தருணத்தை கு.அழகிரிசாமி நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறார். அந்த ஏழ்மையிலும் அன்பை வரமென நமக்களித்து பாடம் போதிக்கிறார்கள் அந்த இரண்டு பெண்கள்.

1952 – ல் எழுதிய பாலம்மாள் கதையில் தாங்கை ஆசையாய் வாங்கிக் கொடுத்த புஷ்பராகக் கம்மலை குடும்பத்தின் தேவைக்காக மீண்டும் மீண்டும் அடகு வைத்து மீண்டும் மீண்டும் மீட்டு கடைசியில் அவளுக்கு வயதான பிறகு அவற்றைக் காதில் போடுகிற வாய்ப்பு கிடைக்கிறது. பாலம்மாள் போட்டுக் கொண்டாலும் ஊர் அவள் காதுபடவே,

“ கிழவிக்கு ஆசையைப் பார்த்தாயா? பாட்டி. நல்ல வாலிப மாப்பிள்ளை ஒருவன் இருக்கிறான். கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? “

என்று பேசுகிறார்கள். காலங்கடந்த அவளுடைய ஆசை நிராசையாகவே போய் விட்டது. வறுமையினால் கையில் கிடைத்த கம்மல்களும் கூட அவளைக் கேலி பேசுகின்றன. அந்தக் கம்மல்கள் வாழ்வில் அவள் பலவற்றையும் குறியீடாகச் சொல்வதாகவும் வாசிக்கமுடியும்.

இப்படி யதார்த்த வாழ்வெனும் தீராத கடலலைகளில் சிக்கித் தவித்து அல்லலுறும் பெண்களின் சித்திரங்களை அற்புதமாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

 

பெண்மனக்கடலில் ஒயாது வீசும் அலைச்சித்திரங்கள்

மிகுந்த கூருணர்வு மிக்கவர்கள் பெண்கள். அவர்களுடைய தியாகம், அன்பு, கருணை, இரக்கம், வலி, வேதனை, துன்பம், துயரம் ஆகியவற்றாலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்களின் சட்டங்களுக்கும், தர்மநியாயங்களுக்கும் இன்றுவரை தங்களைப் பலி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பெண்களின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆண்களே தீர்மானிக்கிறார்கள். அவற்றின்படி நடக்க பெண்களை நிர்ப்பந்திக்கிறார்கள். பெண்ணை பத்தினியாகவும், பரத்தையாகவும் ஆணே மாற்றுகிறான். பெண்களுக்கென்று தனியே உணர்வுகள், ஆசைகள், காதல், காமம், இல்லையா என்று கேட்டால் பெண்கள் பதில் சொல்வதில்லை. அந்தக் கேள்வியை மர்மமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

மர்மமான அந்தப் புன்னகைதான் எழுத்தாளனை வசீகரிக்கிறது. அவன் அந்தப் புன்னகையில் இருக்கும் மர்மத்தைக் கண்டு பயப்படுகிறான். மகிழ்ச்சியடைகிறான். உவகை கொள்கிறான். அந்த மர்மத்தைக் கட்டுடைக்க அவரகளிடமே இறைஞ்சுகிறான். அதனால் தான் மகத்தான படைப்பாளிகளான டால்ஸ்டாய் கிரெய்ஸர் சோனட்டாவை  எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளை எழுதுகிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஜமீலாவை எழுதுகிறார். செகாவ் டார்லிங்கை எழுதுகிறார். அலெக்சாந்தர் குப்ரின் மாணிக்கக்கங்கணத்தை எழுதுகிறார். துர்கனேவ் ஆஸ்யாவை எழுதுகிறார். மாணிக் பந்தோபாதயாயா நீலகண்டபறவையை எழுதுகிறார். கு.ப.ரா, சிறிது வெளிச்சத்தையும், ஆற்றாமையையும் எழுதுகிறார். தி.ஜானகிராமனும் மோகமுள்ளையும் மரப்பசுவையும், அம்மா வந்தாளையும், செம்பருத்தியையும் எழுதுகிறார். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல எண்ணற்ற எழுத்தாளர்கள் இன்றும் பெண்களின் அந்த மர்மமான புன்னகைக்குப் பின்னால் ஊர்வலமாகப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.

கு.அழகிரிசாமியும் காலத்தால் அழியாத பெண்களைப் படைத்திருக்கிறார். அழகிரிசாமியின் பெண்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஏழ்மையின் காரணமாகத் தியாகம் என்னும் இருள்பள்ளத்துக்குள் தள்ளிவிடப்பட்டவர்கள், தன்னுடைய அறியாமையினால் தன் வாழ்க்கையை இழந்தவர்கள், ஆண்களின் செயல்களுக்குப் பார்வையாளர்களாக இருப்பவர்கள், அன்பும் கருணையும் உருவானவர்கள் என்று சொல்லலாம்.

1942 – ல் எழுதப்பட்ட இரவு கதையில் நண்பனின் அழகற்ற மனைவியுடன் த்ற்செயலாகத் தனியே இருக்கும் கதைநாயகனுக்கு இரவில் மட்டுமே மனவிகாரம் தோன்றுவதும் அது குறித்த விசாரமும் தான்.  கதை எதைப் பற்றிப் பேசப்போகிறதென்பதை கதையின் முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார் ஆசிரியர்.

சாயங்கால நேரம். பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த பகல்செல்வன் இரவுப் பெண்ணைத் தழுவி ஐக்கியமாகும் வேளை. என்ன வேண்டியிருக்கிறது. காதலாம் தழுவலாம். பகல் செல்வனுக்கு வெறி பிடித்ததும் சரி. இரவுப்பெண் இருட்டில் வந்ததும் சரி. இல்லாவிட்டால் தன்னுடைய அழகுக்கு அவன் அந்த இரவுப்பெண்னின் அவலஷ்ணத்தைப் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் பார்த்திருந்தால் அவளைத் தழுவ இசைந்திருப்பானா? 

கதையில் இரவும் ஒரு கதாபாத்திரமாக வருகிறஹு. இந்தக் கதை முழுவதும் பெண்ணைச் சுற்றியே நடந்தாலும் அவள் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவருடைய உணர்வுகளைப் பற்றியோ, கணவனின் செயல் மீதான எதிர்வினையோ எங்கும் பதிவாகவில்லை. கதை முடிந்த பின்னும் அந்தப் பெண் கதாபாத்திரம் இன்னொரு கதையை நமக்குச் சொல்கிறார்.

1942 –ல் எழுதிய வனஜம் கதையில் வயதுக்கு வராத பதினான்கு வயது சிறுமியிடம் காதல்வயப்பட்ட ஆணைப் பற்றிய கதையாக இருந்தாலும் கதை நெடுக வனஜமே ஆக்கிரமிக்கிறாள். வனஜத்தின்  வெகுளித்தனமும், பாலீர்ப்பற்ற உரையாடல்களும் ஆணைக் குழப்புகினறன. சிறுமியாக இருந்த வனஜம் ஒரு கணத்தில் பெரிய பெண்ணாக மாறுகிற தருணத்தை அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் கு.அழகிரிசாமி. அதுவரை இருந்த கள்ளங்கபடற்ற அந்தக் குழந்தை மனதில் கல் விழுந்து விட்டது. பதட்டத்துடன் போங்கள் போங்கள் என்று விரட்டுகிறாள். இனி என் பக்கத்தில் நீங்கள் வரக்கூடாது என்று பெரிய மனுஷியாகப் பேசுகிறாள். நுட்பமான உணர்வு மாற்றத்தைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் போல வேறொரு கதை தமிழில் வந்திருக்கிறதாவென்று தெரியவில்லை.

1948 – ல் எழுதிய சிரிக்கவில்லை கதை கு.அழகிரிசாமியின் கலையின் மிக முக்கியமான கல்வெட்டு என்றுச் சொல்லலாம். ராஜாராமன் மீதான ஆர்வத்தாலும் பாலீர்ப்பு என்று அறியாமலும் வருகிற வெகுளியான பாப்பம்மாள் ராஜாராமனைப் பார்ப்பதற்காகவே சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒருமுறை ராஜாராமனிடம் முத்தமும் பெறுகிறாள். ஆனால் அதை அவள் விகல்பமில்லாமல் ஏற்றுக் கொள்கிறாள்.

“ ராஜாரமனுக்கு முத்தத்தில் சுகானுபவம் பொதிந்திருந்தது. பாப்பம்மாளுக்கோ முத்தம் குஷியாகத் தான் இருந்தது. அவளைப் பொறுத்த மட்டிலும் முத்தத்திற்காகத்தான் முத்தம். வேறு எதற்காகவும் அல்ல! “

ராஜாராமன் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடித்து வரும்போதும் அதே வெகுளித்தனத்துடன் வளைய வளைய வருகிறாள். ஆனால் ராஜாராமனுக்குக் குழனந்தை பிறந்ததும் தான் அவளுக்கு யதார்த்தம் புரிகிறது. ராஜாராமனைப் போலவே இருந்த குழந்தை அவளுடைய ஏதோ ஒரு நம்பிக்கையை அடியோடு சாய்த்து விட்டது. இனி ராஜாராமன் அவனுடைய மனைவிக்கு மட்டுமே சொந்தம் என்பதைக் குழந்தை ஒவ்வொரு கணமும் சிரித்துச் சிரித்து நிரூபித்தது.

அவள் யாருடனும் பேசாமல் அழத் தொடங்குகிறாள். கு.அழகிரிசாமி கதையை இப்படி முடிக்கிறார்,

“ அவளுடைய மானசீகப்பற்றுவரவுக் கணக்கி. ஒரு பெரிய தப்பு விழுந்து விட்டது. பற்று வரவுக் கலங்களில் வரவு வைக்கவேண்டியதைப் பற்று என்றோ, பற்று எழுத வேண்டியதை வரவு என்றோ பதிவு செய்து விட்டாள். கணக்குப் பார்த்தால் மாறி மாறித் தப்பு விழுந்து கொண்டிருந்தது. “

பாப்பம்மாளின் உளவியல் மாற்றம் குறித்தோ, மனதில் என்ன நிகழ்ந்ததென்றோ வாசகர் அறியமுடியாத புதிராக முடித்து பெண் மனம் மர்மமானது. கடலை விட ஆழமானது. என்றெல்லாம் கதை விடவில்லை கு.அழகிரிசாமி.

பாப்பம்மாளின் உளவியல் மாற்றத்தை  நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார். வாசகருக்குத் தெளிவாகத் தெரிவிக்கவிரும்புகிறார். எனவே தான் பற்றுவரவுக்கணக்காகத் தருகிறார். கு.அழகிரிசாமியின் வாழ்க்கைப்பார்வையை இதிலிருந்து அறிந்து கொள்ள முடியுமென்பது சிறப்பு. 

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதையில் வரும் தாயும் மகளும் அதுவரை தமிழ்ச்சிறுகதைகளில் சித்தரிக்கபடாத கதாபாத்திரங்கள். பசியும் வறுமையும் மனிதர்களின் மாண்புகளையும் மனித உறவுகளையும் கீழ்மையானதாக மாற்றிவிடுவதைப் நம் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கீழே மண்ணில் கிடந்த வெள்ளரிக்காயை எடுத்து அது என்ன காய் என்று கேட்பதிலுள்ள பாசாங்கைக் கண்டு மகள் தாயுடன் சண்டையிட்டு இருவரும் ரத்தம் வர பிறாண்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் மனம் ஆறாத தாய் பின்னர் வந்து காலில் மிதிபட்டு மேலும் நசுங்கியிருந்த அந்த வெள்ளரிக்காயைத் தின்கிறாள்.

“ வெள்ளரிக்காயை ஊதினாள். கடைசியில் தின்றே விட்டாள். ஒரு மட்டும் அவளுக்கு நிம்மதி பிறந்தது. ஏதோ இனி யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் போல அவளுக்குத் தோன்றியது.. சந்தோஷத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டாள். “

யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் என்ற வரிகளில் அந்தக் கதாபாத்திரத்தித்தின் மனதை அப்படியே தருகிற கு.அழகிரிசாமி அதற்கடுத்த பத்தியிலேயே யதார்த்த நிலைமையை அவளுக்குப் புரிய வைக்கிறார்.  அவர்களிருவரும் சண்டையிடுவதும் பின்னர் குரூரமான யதார்த்தத்துக்கு முன்னால் மண்டியிட நேர்வதையும் கலையழகுடன் காட்சிப்படுத்துவதில் கு.அழகிரிசாமி மிளிர்கிறார்.

1952 – க்கு முன் எழுதிய் கதையில் வரும் ராஜம் சின்னஞ்சிறு பெண். அவளைக் குழந்தைப் பேற்றை நோக்கித் தள்ளிவிட்ட குற்றவுணர்ச்சியில் தவிக்கும் கணவனைத் தன் ஒற்றைச் செய்கையால் தான் இன்னும் குழந்தையல்ல என்பதை உணர்த்துகிற பெண்ணைக் காட்டுகிறார். பெண்கள் எந்தக் கணத்தில் பெரிய மனுஷிகளாக மாறுகிறார்களென்பதை எழுதிப்பார்க்கிறார் கு.அழகிரிசாமி.

1952 – க்கு முன் எழுதிய காதல்போட்டி கதையில் பூனை எலியாகவும் எலி பூனையாகவும் மாறி மாறி ஒருவரையொருவர் வெறுத்தும் விரும்பியும் நெருங்கியும் விலகியும் நாடகத்தை அழகாக எழுதியுள்ள கு.அழகிரிசாமி. இருவரின் அன்புக்குமிடையில் நிலவுகிற ஈகோ போட்டியையும் அதன் விளைவாக ஏற்படுகிற அனர்த்தத்தையும் விரிவாகச் சொல்லிச் செல்கிறார். கடைசியில் இருவருமே அந்தப் போட்டியில் தோற்றுப் போகிறார்கள். இறுதி வரிகளில்

“ பாமா திரும்பிப் பார்த்தாள்.

ராகவனுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

பாமாவுக்கோ உடம்பு முழுவதுமே நடுங்கியது. “

என்று கவித்துவத்துடன் முடித்திருப்பார் கு.அழகிரிசாமி. இப்படி பெண்ணின் எண்ணவோட்டங்களை அழகின் விலை கதையிலும் சித்தரித்திருப்பார் கு.அழகிரிசாமி. காலகண்டி கதையில் வருகிற கிழவி நாடகத்தில் காலகண்டியாக நடிக்கிற தன் மகனைப் பற்றி சுற்றிலுமிருக்கிற பெண்கள் சாபமிடும் போதெல்லாம் கோபமும் ஆங்காரமும் கொள்கிறாள். ஆனால் எதுவும் பேசாமல் ஒவ்வொரு பெண் பேசும்போதும் அந்தத் திசை நோக்கி ஆக்ரோஷத்துடன் வெறித்துப் பார்த்து வாயை மென்று கொண்டேயிருக்கிறாள். உச்சகட்டத்திம் தாளமுடியாத கிழவி அந்தப் பெண்களுடன் சண்டையிட்டு புழுதியில் புரள்கிறாள். மகன் மீதுள்ள பாசம் அவளை ஆங்காரம் கொள்ள வைத்ததென்றாலும், காலகண்டியாக நடித்த நடிகரின் தத்ரூபமான கலைத்திறனே அப்படி பேச வைத்ததென்பதையும் சொல்லிச்செல்கிறார். தாயின் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறுவதைச் சொல்லும்போது அழகிரிசாமியின் கலை உச்சத்துக்குப் போகிறது. கலைக்கும் யதார்த்தக்குமான போராட்டமென குறியீட்டு வடிவமும் கொள்கிறது.

1952 – முன் எழுதிய அழகம்மாள் கதை கு.அழகிரிசாமியின் கதைகளின் உச்சம் என்று சொல்லலாம். மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்களே கதை. அத்தனை மனப்போராட்டங்களும் அழகம்மாளைச் சுற்றியே நடக்கின்றன. கிருஷ்ணக்கோனாரின் மீதான பரிவுடன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிற அழகம்மாள் மகன் கோபால் வந்ததும் முற்றிலும் வேறொரு பெண்ணாக மாறிவிடுகிறாள். தியாகம் என்ற பெயரில் தான் இழந்தை வாழ்க்கையை எப்படியாவது மீட்டெடுக்க அலைபாய்கிறாள். விதவிதமான சேலைகள், அலங்கராம் என்று மற்றவர்களின் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல் அலைந்து திரிகிறாள். கோபாலுக்கு சங்கடமாக இருக்கிறது. நாசூக்காகச் சொல்லியும் காட்டுகிறான். தன் சொந்த மகனாக இருந்தாலும் கோபால் வந்து விட்டால் கிருஷ்ணக்கோனார் புழுவாய்த்துடிக்கிறார். அழகம்மாள் அத்தனை வன்மத்துடன் அவரிடம் நடந்து கொள்கிறாள். நகரத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகனைத் தேடி வருகிற பெரியவர்கள், பண்ணையார்களைப் பார்த்து அவளுக்குத் தன்னை மகனின் கௌரவத்துக்கு ஈடாக மாற்றும் எண்ணமோ, கழிந்த வாழ்க்கையின் கசப்புத்துளிகளின் சுவையை இனிப்பாக மாற்றுகிற முயற்சிகளையோ செய்து பார்க்கிறாள். அதன் உச்சமாகத்தான் ஒரு சேலை விவகாரத்தில் அவள் வெடித்துச் சிதறுகிறாள்.

சேனைத்தனத்தோட – உன்னை

சேர்ந்திருக்கக் கிட்டலையே

என்று ஒப்பாரி வைக்கிறாள் அழகம்மாள். பயந்து போன கோபால் கதவைத்தட்டி அழைக்கிறான். அம்மா கதவைத் திறந்ததும் அம்மா அம்மா என்னம்மா? என்று கேட்கும்போது பத்து வருடங்களுக்கு முன்னால் இறந்து போன அப்பாவை நினைத்து அழுவதாகச் சொல்கிறாள். அவள் உண்ஐயைச் சொல்லவில்லை என்று கோபாலுக்கும் தெரியும். வெளியே அப்பாவும் கேவிக் கேவி அழுது கொண்டிருக்கிறார்.

மூன்று பேரும் சேர்ந்து மூன்று பேருக்கும் தெரிந்த ஒன்றை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மறைத்தார்கள். மறைந்து நிற்கும் ரகசியம் மூன்று பேரின் பேச்சுக்கு நடுவிலே வந்து முள்ளைப் போலக் குத்திக் கொண்டிருந்தது.

தமிழ்ச்சிறுகதைகளில் அழகம்மாளுக்கு இணையாக இன்னொரு கதை இன்னமும் எழுதப்படவில்லை. கு.அழகிரிசாமியின் கலை மேதைமை ஒளிரும் சிகரம் என்று அழகம்மாள் கதையைச் சொல்லலாம்.

முடிவுரை

கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் கிராமத்துப் பெண்கள் துயர் மிக்க தங்களுடைய வாழ்க்கையினால் அல்லலுற்றாலும் தங்கள் அடையாளத்தை இழக்காதவர்கள். வறுமையால் வாடினாலும் கருணை மிக்கவர்கள். கணவனால் கைவிடப்பட்டாலும் தொடர்ந்து போராடுபவர்கள். ஆண்களின் அசட்டுத்தனத்தைப் பார்த்துச் சிரித்தபடியே பெரிய மனுஷி போல பெருந்தன்மையுடன் ஆண்களை அரவணைத்துக் கொள்பவர்கள். காலங்கடந்த தங்கள் ஆசையைக் குழி தோண்டி புதைத்துவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்பவர்கள். வாழ்க்கையில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரணப்பெண்கள் தான். ஆனால் குழகிரிசாமியின் கலைமேதைமையொளியால் அவர்கள் அசாதாரணமான பெண்களாக மாறுகிறார்கள்.

மனிதவாழ்வை மேன்மைப் படுத்துவதே கலையின் லட்சியம் என்று கொண்டோமானால் கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தங்களை மேலும் ஒளி கூட்டுகிறார்கள்.

கு.அழகிரிசாமியின் கதைகள் தோற்றத்துக்கு எளிமையாகத் தோன்றினாலும் அந்த எளிமைக்குப் பின்னாலிருக்கும் ஆழம் நமக்குள் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் உள்ளேயிழுத்துக் கொண்டேயிருக்கும். தமிழ்ச்சிறுகதைகளில் தனக்கென தனித்துவமான பாணியைக் கைக்கொண்ட கு.அழகிரிசாமியின் கதைகள் என்றென்றும் வாசிக்க வாசிக்கப் புதுமையாகத் திகழ்பவை. காலங்களைக் கடந்தும் நம்முடன் அவை உரையாடிக் கொண்டேயிருக்கும்.

நன்றி - புக் டே

 

 

 

Monday, 31 December 2012

ஆபத்தான சமூகமா? ஆபத்தான காலமா?

1 nature scenery (www  

உதயசங்கர்

 

சமீபகாலமாக நமது சமூகத்தில் நடந்து வருகிற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாம் வாழும் இந்தக் காலம் ஆபத்தானதாக மாறியிருக்கிறதா? இல்லையெனில் நமது சமூகமே ஆபத்தானதாக மாறி விட்டதா? என்ற அச்சம் தோன்றுகிறது. ஆபத்தான காலகட்டம் என்றால் நாம் அதைப் போராடிக் கடந்து விடலாம். ஏனெனில் இந்தக் காலகட்டம் மாறுவதற்கான, மாற்றுவதற்கான, காரணிகள் காலத்தின் கர்ப்பத்திலேயே உருக்கொண்டுவிடும். ஆனால் சமுகமே ஆபத்தானதாக மாறிவிட்டால் பெரும்நாசம். சீரழிவு. பெரும்பான்மை சமூகம் மனசாட்சியற்றுப் போய் விட்டதோ என்ற பயம் தோன்றுகிறது. எப்போதுமே சமூகத்த்தின் மேன்மை குறித்து சிந்திக்கும் முற்போக்கான சக்திகள் செயல்திட்டமின்றி செயலிழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதி, மத வேறுபாடுகள் மீண்டும் எழுச்சி கொண்டிருக்கிறன. உலகமயமாக்கலின் நவீன நுகர்வுக்கலாச்சாரத்தினால் நமது அறமாண்புகள் இழிவுப்படுத்தப்படுகின்றன. பழமைவாதத்தையும் நவீனத்தையும் தனித்தனியே போற்றிப் பாதுகாப்பாய் நமது மனங்களில் கொலுவிருக்கச் செய்வதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பழமைவாதத்தை, சாதிவேர்களை, வர்ணாசிரமத்தை, பெண்ணடிமைத்தனத்தைக் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெண்களே செய்கிற அவலத்தைக் கண்கூடாகக் காணமுடிகிறது. நாம் எங்கே நிற்கிறோம்? காட்டுமிராண்டிக்காலத்திலா? கற்காலத்திலா? மனிதமனதில் இத்தனை நூற்றாண்டுகளாக உருவாகிவந்த அறம், தயை, நேசம், அன்பு, கருணை, எல்லாம் எங்கே போயின? எந்த ஒரு கணத்திலும் மனிதன் விலங்காக இப்படிச் சொல்வதுகூட தவறு, கொடூரமான காட்டுமிராண்டியாக மாறி விடுகின்ற சந்தர்ப்பங்களைப் பார்க்கும்போது மனித இனத்தின் பெரும் அவநம்பிக்கை தோன்றுகிறது. இப்படி ஒரு இனம், சமுகம் இல்லாதொழியட்டும் என்று சாபமிடத் தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஏகாதிபத்தியத்தின், வேட்டைக்காடாக நமது சமுகத்தை மாற்றுகிற வேலையை நமது ஆட்சியாளர்கள் திறம்பட செய்து கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியநாடுகள் எதை விற்றாலும் வாங்குவதற்குத் தயாராக இந்தியா இருக்கிறது. அதில் ஒன்று தான் அணு உலை விற்பனையும். ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு அரசமைப்பு, அரசு நிர்வாகம், முதலாளித்துவ ஊடகங்கள், அரசியல் கட்சிகள் எல்லாம் அந்த ஒத்திகையின் அட்சரம் பிசகாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் அச்சத்தை விட அந்நிய நாட்டு நலன் முக்கியமானதாக போய்விட்டது. தங்களூக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தின் பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் கூடங்குள மக்களின் மகத்தான போராட்டம் ஓராண்டைத் தாண்டியும் அதற்கான எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அடக்குமுறைகளால் அந்த மக்களின் போரட்ட உணர்வை அழித்து விட நினைக்கும் அரசு நிர்வாகம் அந்த ஊரைத் தனித்தீவாக்கி போகும் பாதைகளிலெல்லாம் அடக்குமுறை யந்திரங்களை நிறுத்தி பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரமுகத்தை அங்கே பார்க்கமுடிகிறது., சமுகத்தின் வாழ்வு, தங்கள் வாழ்வாதாரம், அழிந்துவிடும் என்ற அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீது தேசத்துரோக வழக்குகள், சதி வழக்குகள் லட்சக்கணக்கில் போடப்பட்டுள்ளன. எந்த அரசியல், பொருளாதாரப்பின்புலமற்ற அந்த எளிய மக்களின் போராட்டம் நமது சமூகத்தின் மனசாட்சியை ஏன் உலுக்கவில்லை. எல்லா நிகழ்வுகளும் நமக்கு சாயங்காலநேரத்து ஸ்னாக்ஸ் ஆகி விட்டதா? பயமாக இருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

அடையாள அரசியலின் ஒரு முகமாக சாதி அரசியல் முன்னெப்போதையும் விட இப்போது நமது சமூகத்தில் ஓங்கியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த சாதி அரசியலை அதன் ஆரம்பகாலத்தில் ஊக்குவித்து அதற்குத் தத்துவார்த்தபின்புலத்தை நமது அறிவுஜீவிகளில் இலக்கியவாதிகளில் பலர் கொடுத்ததை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே வர்ணாசிரமக் கோட்பாட்டினால் ஈராயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு சமுகத்தில் இந்தச் சாதி அரசியல் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழ் அறிவுஜீவிகள் முன்னுணரவில்லை. தங்களை முன்னிறுத்தும் போராட்டகளத்தில் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தன்வாழ்நாள் முழுவதும் வர்ணாசிரமத்துக்கு எதிராக, பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய நமது சமுகத்தின் கலகக்காரச் சிந்தனையாளர் பெரியாரின் அத்தனை உழைப்பையும் மிகச் சில வருடங்களிலே துடைத்தழித்து விட்டது சாதி அரசியல். விளைவு சாதிகள் தோறும் புதிய மனிதக்கடவுள்களின் தோற்றம், வழிபாடு, அந்தக் கடவுள்களின் பெயரால் வன்முறை, கொலை, கொள்ளை. சமுகத்தின் மனசாட்சி என்னவாயிற்று? பரமக்குடி, மதுரை, சம்பவங்களின் உள்ளர்த்தம் இது தானே.

அகமணமுறையின் மூலமே சாதியத் தூய்மையைக் காப்பாற்ற முடியும் என்ற மனுதர்மசிந்தனையை யார் யாருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்? ஆனால் சமுகம் அதைக் கடைப்பிடிக்கிறதே. அதுவும் சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிற சாதிகளுடனான திருமணம் என்றால் ரத்தம் கொதித்து, கௌரவக்கொலை தொடங்கி, தருமபுரியில் நடந்திருப்பதைப் போல கூட்டுக்கொள்ளை, என்று சமூகமே திரண்டு நடத்திய வன்முறை அரங்கேற்றத்தைப் பார்க்கும்போது நாம் மீண்டும் நமது கற்காலத்திற்குத் திரும்பி விட்டோமா? என்ற அச்சம் எழுகிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

தனித்தனியாக இருக்கும்போது எத்தனை நல்லவனாக அறவுணர்ச்சி மிக்கவனாக, சமூகமனிதனாக, அன்பு, தயை, கருணை, மிக்கவனாக இருக்கிறான் மனிதன்! ஆனால் கும்பலாக மாறும்போது அவனிடம் காட்டுமிராண்டித்தனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் போகிறதே. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மானுடம் தன் அநுபவத்தின் வழியாகக் கற்றுணர்ந்த நாகரீகம், பண்பாடு, அறவிழுமியங்கள் எல்லாம் வேஷம் தானோ? இல்லை போர்வை போர்த்திய காட்டுமிராண்டி தானோ மனிதன்? பண்பாட்டு அறிஞர் கே.என். பணிக்கர் மதச்சார்பின்மைக்கான கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றிப் பேசும்போது எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எல்லாமத, இன, மொழி, மக்களையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்புகளை உருவாக்கி பரஸ்பரம் அந்நியோன்யத்துடன் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகள், என்று உறவுகளைப் பலப்படுத்தச் சொல்லுவார். ஆனால் தருமபுரியில் நடந்த பொருளாதார அழித்தொழிப்பு சம்பவத்தை நடத்தியிருப்பது எங்கிருந்தோ வந்த வேற்று மனிதர்களல்ல. அந்தந்த ஊர்களின் வழியே போய்வந்து கொண்டிருக்கும், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், என்று உறவுகளைக் கொண்டிருந்தவர்கள் தான். வன்முறை நடக்கும் போது ஒரு பெண் கேட்கிறார், “ ஐயா, பழகுன ஆட்களே இப்படிச் செய்யுறீங்களே..” அதற்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்த மனிதர் சொல்லியிருக்கிறார், “ பழகுனா சம்பந்தம் பண்ணிக்க முடியுமா..” அங்கே பிராமணர்கள் யாரும் கிடையாது. பிராமணியம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. வேதங்கள் என்றால் என்னவென்றோ, மனுதர்மம் என்றால் என்னவென்றோ தெரியாது. வருணாசிரமக் கோட்பாட்டின் படி தான் எந்த இடத்தில் இருக்கிறோம். தன்னுடைய சாதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியாது. மனுதர்மத்தில் எப்படியெல்லாம் தான் இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம் என்றும் தெரியாது. ஆனால் அவருடைய பொதுப்புத்தியில் வருணாசிரமும், மனுதர்மமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறதே. அது தான் அவரை இப்படிப் பேசச் சொல்கிறது. அது தான் அவருடைய கட்சித்தலைவரையும் பேசச்சொல்கிறது. தன்னுடைய அரசியல் பதாகைகளில் பெரியாரையும், அம்பேத்கரையும், காரல்மார்க்ஸையும், வைத்துக் கொண்டே பிராமணியத்தின் கொடிய நடைமுறையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. சமூகமும் இந்த பலவேசத்தைப் பார்த்து வாளாவிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

சமீபத்தில் மறைந்த இனவெறி அரசியலின் பிதாமகர் பால்தாக்கரேயின் அரசியல் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய வெறுப்புஅரசியலை நடத்திய அவருடைய இறுதி நிகழ்ச்சிக்கு ஐந்திலிருந்து பத்து லட்சம் பேர் கூடியிருந்தார்கள் என்ற செய்தி உண்மையில் அதிர்ச்சியளித்தது. அதை விட பெரிய அதிர்ச்சி. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இடதுசாரிகளைத் தவிர மற்றவர்கள் அவர் ஏதோ நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவரைப் போல எந்த விமர்சனமுமின்றி உரைச்சித்திரம் நிகழ்த்தியது அதை விட பெரிய கொடுமை. எல்லோருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறானா? சந்தேகமாயிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

இது எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவது. பெண் பிறப்பதற்கு முன்பே கருவாக இருக்கும்போதே அவளுடைய போராட்டம் தொடங்கி விடுகிறது. பிறந்து, நோய், ஊட்டச்சத்துக்குறைபாடு, குடும்பத்தில் அலட்சியம், அவமானம், வீட்டுவேலைகள் என்ற ஆபத்துகளோடு வளரும்வரை குடும்பத்தோடு போராட்டம் என்றால் கல்வி கற்கத் தொடங்குவதிலிருந்து தன் இறுதிக் காலம் வரை சமூகத்தோடு போராட்டம். ஒரு சமூகத்தையே எதிர்த்து வளர்கிறாள். பிறந்ததிலிருந்தே ஆண்சமூகம் அவளை ஒரு பாலியல்கருவியாக நினைக்கிற அவலத்தை என்னவென்று சொல்ல? தந்தை, சகோதரன், சொந்தக்காரன்கள், அக்கம்பக்கத்துகாரன்கள், பழகியவன்கள், அந்நியன்கள், எங்கும் ஒரு பெண்ணுக்கு எதிரிகளாகவே இருக்கிற சமூகம் உயிர்வாழ வேண்டுமா? திரைப்படம், பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள், என்று எங்கும் பெண் உடல் காட்சிப்பொருளாய் மாற்றப்பட்டுள்ள, அதற்கு எதிராக ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காத இந்த ஆணாதிக்கக்குடிமைச் சமூகம் உயிர்வாழத்தான் வேண்டுமா?

டெல்லியில் நிர்பயா, தாதன்குளத்தில் புனிதா, இன்னும் இன்னும் தினசரிகளில் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல்வன்முறைகளைக் கேள்விப்படும் போது உடல் நடுங்குகிறது. இப்போது தான் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் படிக்கவும், மிகக்குறைந்த சதவீதமானவர்கள் வேலைக்குச் செல்லவும், சற்றே பொருளாதார ரீதியாகச் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் பெண்ணுடலைச் சிதைத்து அவர்களை மீண்டும் முடமாக்க நினைக்கிற இந்த ஆணாதிக்கச் சமூகம் உயிர் வாழத்தான் வேண்டுமா? இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

குடிமைச்சமூக மக்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. போலி அரசியல்வாதிகள் பின்னால் அணிதிரள்கிறார்கள். பொருளாதாரச்சுரண்டல் என்றால் என்னவென்று தெரியாது. தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் முதலாளியாகி விட நினைக்கிறார்கள். குறுக்குவழியில் சம்பாதிக்க ஓடுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லையென்று குவாட்டருக்கும் பணத்துக்கும் ஓட்டளிக்கிறார்கள். இனவெறி, மதவெறி, சாதிவெறி, என்று எல்லா வெறிகளுக்கும் மிகச்சுலபமாக பலிகடா ஆகிறார்கள். தன்னைத்தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லையென்ற எண்ணத்திலோ, இருக்கக்கூடாதென்ற ஆசையிலோ சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப்பற்றிக் கவலைப்படாதவர்களாக, ஏழ்மை, இல்லாமை, சமூக அவலங்கள் இதைப் பற்றிக் கவலைப்படாதர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவற்றவர்களாக, மூடநம்பிக்கையின் முடைநாற்றமெடுப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மை எது? பொய் எது? என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எளிமை கண்டு இகழ்கிறார்கள். ஆடம்பரத்தைக் கண்டு பிரமிக்கிறார்கள். கேளிக்கைகளில் மூழ்குபவர்களாக, குடிகாரர்களாக, அறமற்றவர்களாக, பண்பாடற்றவர்களாக, நாகரீகத்தைப் பவுடர் பூச்சைப்போல பூசிக் கொள்பவர்களாக, கொடியவர்களாக, வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுபவர்களாக, பிறர் சொத்தை அபகரிப்பவர்களாக, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களாக, மலைகளை உடைப்பவர்களாக, மணல்கொள்ளையர்களாக, பல்லுயிரிகளைக் கொல்பவர்களாக, இயற்கைச் சமன்பாட்டை குலைப்பவர்களாக, சகமனிதன் மீது குரோதம் கொண்டவர்களாக, குடிநீரை விற்பவர்களாக, விவசாயத்தை மதிக்காதவர்களாக, மனோதிடமில்லாதர்களாக, கோழைகளாக, அடிமைகளாவதற்குத் தயாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்திரளைக் கொண்ட இந்தக் குடிமைச் சமூகம் ஆபத்தான சமூகமா இல்லையா?

ஒரு ஆபத்தான காலகட்டத்தில் ஒரு ஆபத்தான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னும் ஒரு ஆண்டு கழிந்து விட்டது. காலத்தின் பேராற்றில் ஒரு துளி. நம்முடைய வாழ்நாளில் முந்நூற்றுஅறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. எல்லா ஆண்டுகளையும் போல இனி வரும் ஆண்டும் கருப்பு ஆண்டாகவே மலருமா? சமூகத்தின் அத்தனை கொடுமைகளும் இப்படியே மாறாமல் கூடிக் கொண்டே போகுமா? நாம் நம்முடைய எதிர்காலச்சந்ததியினருக்கு எந்த மாதிரியான சமூகத்தைக் கொடுக்கப் போகிறோம்? நமக்கு முன்னால், நம் மனசாட்சியின் முன்னால் இந்தக் கேள்வி பெரும்பாறையென நிற்கிறது. உண்மையில் இப்போது நெருக்கடி முற்றிவிட்டதென்றே தோன்றுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமூகத்தை மாற்ற வேண்டும் என்று லட்சியம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தங்கள் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டிய காலம் இது. இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், பெண்ணியவாதிகள், சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், உண்மையான ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள், பாலினச்சிறுபான்மையினர், என்று எல்லோரும் இணைந்து பொதுத்தளத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி சமூகத்தின் பொதுப்புத்தியில் தலையிட வேண்டும். குறைந்தபட்ச பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த ஆபத்தான காலத்திலுள்ள நம்முடைய ஆபத்தான சமூகத்தை மாற்ற முடியும். இது தான் நம்முடைய இன்றைய தலையாயக்கடமை. காலமும் கழிந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டும் நமக்கு விடுக்கும் செய்தி. காலமும் வரலாறும் அழைக்கிறது நம்மை. அதன் குரலுக்குச் செவிமடுப்போம்.