Showing posts with label கு.அழகிரிசாமி. Show all posts
Showing posts with label கு.அழகிரிசாமி. Show all posts

Sunday, 16 February 2025

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

 

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

உதயசங்கர்



கலை  தானே அறியாத சில ரகசியங்களை தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளவே கலைஞன் மீண்டும் மீண்டும் கலையைப் படைக்கிறான். அந்த ரகசியங்கள் அவனுக்குக் கிளர்ச்சியூட்டுகின்றன. அவனுடைய ஆசையைத் தூண்டுகின்றன. அவனை மேலும் மேலும் முன்னேறச்சொல்கின்றன. இருளும் ஒளியும் முயங்கி விசித்திரமான விலங்குகளும் தேவதைகளும் வாழும் காட்டுக்குள் அவன் முன்னேறுகிறான். விட்டு விலகமுடியாத வசீகரமும், அதற்குள்ளேயே வெளியேற வழியில்லாத புதிர்க்குகைகளும் அவனை அங்கேயே சுற்றிச் சுற்றி அலைக்கழிக்கின்றன. அந்த ரகசியங்கள் முதல் காதலின் பரிசுத்தமான ஏக்கத்தைப் போல மனதின் அடியில்போய்த் தங்கி விடுகின்றன. களங்கமற்ற குழந்தையின் சிரிப்பொலி காற்றில் என்றும் நிலைத்திருப்பதைப் போல ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு முறை எழுதும்போதும் அந்த ஏக்கம் காற்றில் அலைக்கழியும் சுடரொளி அணையும் முன் ஒருகணம் பளீரெனத் தெரிகிற காட்சியைப் போல தெரிகிறது. கண்ணை மறைத்த இருளில் காட்சியின் தடயங்கள் அப்படியே தங்கி விடுகிறது. அந்தத் தடயங்கள் இன்னும் ஆவேசமூட்டுகின்றன. இன்னும் ஆர்வமூட்டுகின்றன. அந்த இருளின் ஒளியில் அவன் மேலும் மேலும் முன்னேறுகிறான். எப்படியாவது அந்த ரகசியத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்பதே அவனுடைய அவா. அது என்னவாக இருக்கும்? அது எப்படி இருக்கும்? அது ஏன் அப்படி ரகசியமாக இருக்கிறது? அவற்றை தெரிந்து கொள்ளாவிட்டால் தன்னுடைய தலையே வெடித்து விடும்போல அவன் நினைக்கிறான். அதற்காகவே உன்மத்தம் பிடித்தவன் போல எழுதி எழுதிப் பார்க்கிறான்.

எழுத எழுத அவன் தேடிய அந்த ரகசியங்கள் அவனுடைய மனதுக்குள்ளேயே இருப்பதைக் காணமுடிகிறது. அவை இந்த யதார்த்த வாழ்க்கையிலிருந்து தான் உருவானவை என்பதை உணரமுடிகிறது. மானுட உண்மைகளின் ஒளிக்கீற்றுகளே அந்த ரகசியங்களென்று புரிந்து கொள்ளமுடிகிறது. ஆதிக்குகை ஓவியத்திலிருந்து இன்றுவரை கலை அதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கலையின் ஆதாரம் மனித வாழ்க்கையெனும்போது கலைஞன் அந்த வாழ்வை எழுதிப்பார்க்கிறான். அவன் எழுத எழுத வாழ்க்கை அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது. வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களின் மனப்போக்குகளை, மனம் செயல்படும் விதங்களை, மனதின் தந்திரங்களை, மனதின் குரூரங்களை, மனதின் பேரன்பை, ஆசாபாசங்களை, மனதின் இயக்கவியலை, மீண்டும் மீண்டும் வேதாளத்தைச் சுமந்த விக்கிரமாதித்தன் போல தன் படைப்புகளில் எழுதிப்பார்க்கிறான் கலைஞன். மனிதர்களைப் பற்றிய அனைத்தும் புரிந்து விட்டது போலத் தெரிகிறது. ஆனால் ஒரு கணத்தில் எல்லாம் மாறிவிடுகிறது. மனித வாழ்க்கை விசித்திரமானதாகத் தெரிகிறது. மனிதர்கள் விந்தையாகி நிற்கிறார்கள். மனிதமனம் புதிர் நிறைந்த தோட்டமாகத் தெரிகிறது. அங்கே பல அபூர்வமான, அதிசயமான உணர்வுகள் பூக்கின்றன. காரணமின்றியே பல முட்களும் பூக்கின்றன. ஏனென்று தெரியவில்லை. யதார்த்தவாழ்க்கை மனிதர்களை ஆழிப்பேரலை போலச் சுற்றிச் சுற்றி சுழட்டியடிக்கிறது. அந்தப் பேரலையில் சிக்கிய மனிதர்கள் அதன் வீச்சுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறார்கள். கலைஞனும் அந்தப் பேரலையில் சிக்கியவன் தான். அதனால் தான் மானுடவாழ்வின் தீராத பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்கிறான்.

கு. அழகிரிசாமியெனும் மகத்தான கலைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவருடைய இளமைக்காலத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியதும், வாழ்க்கை குறித்த பொருள்முதல்வாதக்கண்ணோட்டம் கொண்டிருந்ததும் மிக முக்கியமான காரணம். அதனால் தான் வாழ்வின் அத்தனை சிடுக்குகளுக்கும் காரணம் புறவயமான யதார்த்தச் சிக்கல்களும் அதன் விளைவான உளவியல் பாதிப்புகளும் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் கு.அழகிரிசாமி.

மானுட உண்மைகளில் விலங்குணர்ச்சிகளான பசியும், தாகமும், காதலும், காமமும் மட்டுமல்ல மானுடம் தன்னுடைய நீண்ட பயணத்தில் உருவாக்கிய தார்மீகநெறிகளான அன்பும், பாசமும், நேசமும், சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் மிக முக்கியமான பங்கைச் செலுத்துகின்றன. அடிப்படை விலங்குணர்வுகளும் தார்மீக நெறிகளும் ஒன்றுக்கொன்று முரண்படும் மையங்களிலெல்லாம் அதைப் புரிந்து கொள்ள கலைஞன் முயற்சிக்கிறான். அப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்யாத எழுத்தாளர்களே கிடையாது.

ஆனால் அந்த முரண்கள் ஒரு கட்டத்தில் தெளிந்த நீரோடும் ஆற்றின் ஆழத்தை அறிய முடியாததைப் போல மயக்குகிறது. மர்மமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது எளிமையானதாகத் தெரியும். சுலபமாய் அவிழ்த்துவிடும் சிடுக்கைப் போலத் தெரியும். கறாரான நாகரீக சமூகத்தின் மாறிக் கொண்டேயிருக்கும் விதிமுறைகளைக் கொண்டு தீர்க்கமுடியாத ஆழ்ந்த பிரச்னை என்று புரியும்.

கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிற பெண்கள் அத்தனை எளிமையானவர்கள். அத்தனை ஆழமானவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தே அவர்கள் மீளமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணங்களாக ஆண்களே இருக்கிறார்களென்பதை அறிந்தவர்கள். இதுவரையிலும் கூட யாரும் சொல்லாத வாழ்க்கையை கு.அழகிரிசாமியின் கதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவருடைய கதைகளை வாசிக்கும்போது கலைடாஸ்கோப்பை எத்தனை முறை திருப்பிப் பார்த்தாலும் அத்தனை முறையும் பன்முக வண்ணச்சித்திரங்களைக் காட்டுவதைப் போல பெண் கதாபாத்திரங்கள் மிளிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பல கதைகளில் ஆண்களின் உலகத்தில் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் வியப்பூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் அதிர்ச்சியூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இந்த சமூகத்தின் முகத்திலறைபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் ஏதும் செய்யவியலாதவர்களாக இருக்கிறார்கள். பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது, அவர்கள் மர்மமானவர்கள் என்ற தேய்வழக்குகளுக்கு மாறாக அவர்களுடைய குணாதிசயங்கள் யதார்த்தச்சூழலிலிருந்து உருவாகின்றன என்பதை கு.அழகிரிசாமி அற்புதமாகத் தன்னுடைய கதைகளில் படைத்திருக்கிறார்.

 

பொருள்வயின் துயருரும் பெண்கள்

1942 – ல் எழுதப்பட்ட வள்ளியின் வாழ்க்கை கதையில் வரும் துப்புரவுத்தொழிலாளியான வள்ளி அதிகாலையிலேயே வந்து இருபது வீடுகளுக்கும் மேலாக வாசல் தொளித்து விட்டு கல்லுடைக்கப் போக வேண்டும். தாமதமாகப் போனால் மேஸ்திரி பூணிட்ட கம்பால் அடிக்கவும் செய்வார். கையில் காயத்துடன் தன்னுடைய வேலையைச் செய்யும் வள்ளியைப் பார்த்து அனுதாபப்படும் இளைஞன் யோசிக்கிறான்.

“ பனி, வெயில், பசி, தாகம் இவற்றை உணரும் ஒரு மனித உடலை சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்! “ கணவன் திருட்டுப்பழியினால் சிறையிலிருக்கிறான். அவளுடைய மகன் ஒரு ஹோட்டலிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறானென்பதை அவள் மகிழ்ச்சியுடன் சொல்கிறாள். ஏழைகள் வாழ்வதற்கு ஏதாவதொரு பற்றுக் கோடு தேவைப் படுகிறது. வள்ளி தன்னுடைய மகனைப் பற்றுக்கோடாக்கிக் கொண்டு பனியிலும் வெயிலிலும் கருமமே கண்ணாக வேலை செய்கிறாள். வள்ளியின் ஒரு நாள்க்காலைப் பொழுதை நம் கண்முன்னால் காட்சிப் படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த வள்ளிகளின் வாழ்வையே உணரச்செய்கிறார் கு.அழகிரிசாமி.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட பித்தளை வளையல் கதையில் வரும் கோமதியின் ஏழ்மை பொன் முலாம் பூசப்பட்ட பித்தளைவளையல்களை வாங்குவதறகு மட்டுமே அனுமதிக்கிறது. அந்தப் பித்தளை வளையலை அணிந்து கொண்டு அவள் செல்லும்  விசேஷ வீட்டில் மற்ற பணக்காரப் பெண்களால் அவமானப்படுத்தப்படுகிறாள். வறுமையின் மீதான கோபத்துடன் இருப்பவளை கணவன் சமாதானம் செய்கிறான். இந்தபொன்மேனிக்கு நிகராக எந்தப் பொன்னும் நிற்க முடியுமோ என்று காதல்வசனம் பேசிச் சமாதானம் செய்கிறான்.

யதார்த்தத்தில் இந்த வார்த்தைகளால் அவளுடைய வளையல்கள் பொன்னாக மாறப்போவதில்லையென்றாலும், வறுமையின் விளைவாக உருவான வெறுமையை இட்டு நிரப்புகின்றன அந்தச் சொற்கள். அந்த நேரத்தில் அவர்களிருவருக்கும் தேவைப்படும் சொற்களாக இருக்கின்றன. கோமதி அந்தச் சொற்களைக் கொண்டு அவளுடைய மனப்புண்ணை ஆற்றுகிறாள்.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட குழந்தையின் தியாகம் கதை தொடங்கும் போது முக அமைப்பினால் எப்போதும் சிரிப்பதைப் போலவே தோற்றமளிக்கும் சின்னி கணவனை இழந்து கைக்குழந்தையுடன் குமாரபுரம் பண்ணையாரின் வயலில் வேலை செய்கிறாள். காட்டு வேலைக்குப் பழக்கமில்லாத அவளுடைய உடல் நோவுகளால் குழந்தையும் நோய்வாய்ப்படுகிறான். பணம் கொடுத்த அதிகாரத்தினால் எதையும் எள்ளலும் ஏகடியுமாகப் பார்க்கும் பண்ணையார் ராமசாமிக்கு சின்னியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டாலும் அவளாக கனிந்து வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவனுடைய லட்சியத்தினால் சின்னியின் குழந்தை இறந்துவிட ராமசாமி செயலற்று சின்னியைப் பயபக்தியுடன் பார்ப்பதாக்க் கதை முடிகிறது. வறுமையின் கோரத்தினால் சின்னியின் குழந்தைத் தன்னைத் தியாகம செய்து தாயின் கௌரவத்தைக் காப்பாற்றுகிறது.

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதை, கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றெனச் சொல்லலாம். கி.ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் அவர்களுடைய கதைகளில் பஞ்சகாலத்தைப் பற்றியும் அந்தக்காலத்தில் மனிதர்கர்கள் வாழ்ந்த அவலமான வாழ்க்கையைக் குறித்தும் எழுதிச் சென்றிருக்கிறார்கள். அழகிரிசாமியின் திரிபுரம் கதையில் பஞ்சத்தினால் புலம்பெயர்ந்து செல்லும் தாயும் மகளும் படும் துயரத்தைக் கொதிக்கும் மனதுடன் சொல்கிறது. பஞ்சமும் பசியும் பட்டினியும்  மனிதர்களை எத்தகைய இழிநிலைக்குத் தள்ளி விடுகிறதென்பதையும், மண்ணில் கிடந்த வெள்ளரிக்காய்க்காகத் தாயும் மகளும் இடும் கௌரவச்சண்டையும், பசியைப் போக்க  தன் மகளையே சோரம் போகவைக்கும் நிலையையும் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கதை முடிவில் உரத்த குரலில் தன் கண்டனத்தையும் பதிவு செய்கிறார்.

வெங்கட்டாமாவினால் நிலை கொள்ளமுடியவில்லை. அம்மா கடையை விட்டு அப்பால் நகர்ந்ததும் அம்மாவிடமிருந்து அவ்வளவு பணத்தையும் வாங்கினாள். வலது கையிலிருந்து இடது கையில் பணத்தைப் போட்டாள்.  இடது கையிலிருந்து வலது கையில் போட்டாள். வியந்து வியந்து பார்த்தவண்ணம் பணத்தைக் கையில் போட்டுக் குலுக்கினாள். எவ்வளவு எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதை நினைக்கும்போது அவளால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. உரக்கச் சிரித்தாள். விட்டு விட்டுப் பலமுறை சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பொற்பிரம்படியைப் போல அவள் சிரித்த சிரிப்பு எங்கெல்லாம் பிரதிபலிக்க இருந்ததோ அவளுக்குத் தெரியாது. அவள் மனிதன் கட்டிய ஒழுக்கத்தை நோக்கிச் சிரித்தாள். ஒழுக்கக் கேட்டை நோக்கிச் சிரித்தாள். நாகரிகத்தையும் அநாகரித்தையும் பார்த்துச் சிரித்தாள். பணக்காரர்களை, ஏழைகளை, ஆண்களை, பெண்களை, பஞ்சத்தை – இப்படி எத்தனையோ அடங்கிய உலகத்தையே நோக்கிச் சிரித்தாள். இது வெங்கட்டம்மாவுக்குத் தெரியுமோ என்னவோ?

சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான். இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ? அதை இப்போது யார்தான் அறிவார்கள்? அந்தக் காலத்துப் புத்தி மான்களும் கூட ஏழை அழுத கண்ணீருக்குத்தான் வாளை உபமானமாகச் சொன்னார்களே ஒழிய ஏழை சிரித்த சிரிப்பைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லையே! “

கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றான ராஜா வந்திருக்கிறார் (1950) கதையில் வரும் தாயம்மாளும் மங்கம்மாவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் திகழ்கிறார்கள். மேலெல்லாம் சொறிசிரங்குடன் வரும் அனாதைச் சிறுவனைக் குளிப்பாட்டும் தாயம்மா எல்லாம் சரியாகி விடும்.. இனி எல்லாம் சரியாகி விடும்.. என்று சொல்லும் போது தாய்மையின் அன்பில் ஒளிவீசுகிறாள். அவளே அந்தச் சிறுவனுக்கு உடுத்திக் கொள்ள துணியேதுமில்லையே என்று தவிக்கும்போது மங்கம்மா

“ பாவம் அந்தத் துண்டைக் கொடு அம்மா “ என்று சொல்லும்போது உன்னதமான மானுடத்தருணத்தை கு.அழகிரிசாமி நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறார். அந்த ஏழ்மையிலும் அன்பை வரமென நமக்களித்து பாடம் போதிக்கிறார்கள் அந்த இரண்டு பெண்கள்.

1952 – ல் எழுதிய பாலம்மாள் கதையில் தாங்கை ஆசையாய் வாங்கிக் கொடுத்த புஷ்பராகக் கம்மலை குடும்பத்தின் தேவைக்காக மீண்டும் மீண்டும் அடகு வைத்து மீண்டும் மீண்டும் மீட்டு கடைசியில் அவளுக்கு வயதான பிறகு அவற்றைக் காதில் போடுகிற வாய்ப்பு கிடைக்கிறது. பாலம்மாள் போட்டுக் கொண்டாலும் ஊர் அவள் காதுபடவே,

“ கிழவிக்கு ஆசையைப் பார்த்தாயா? பாட்டி. நல்ல வாலிப மாப்பிள்ளை ஒருவன் இருக்கிறான். கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? “

என்று பேசுகிறார்கள். காலங்கடந்த அவளுடைய ஆசை நிராசையாகவே போய் விட்டது. வறுமையினால் கையில் கிடைத்த கம்மல்களும் கூட அவளைக் கேலி பேசுகின்றன. அந்தக் கம்மல்கள் வாழ்வில் அவள் பலவற்றையும் குறியீடாகச் சொல்வதாகவும் வாசிக்கமுடியும்.

இப்படி யதார்த்த வாழ்வெனும் தீராத கடலலைகளில் சிக்கித் தவித்து அல்லலுறும் பெண்களின் சித்திரங்களை அற்புதமாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

 

பெண்மனக்கடலில் ஒயாது வீசும் அலைச்சித்திரங்கள்

மிகுந்த கூருணர்வு மிக்கவர்கள் பெண்கள். அவர்களுடைய தியாகம், அன்பு, கருணை, இரக்கம், வலி, வேதனை, துன்பம், துயரம் ஆகியவற்றாலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்களின் சட்டங்களுக்கும், தர்மநியாயங்களுக்கும் இன்றுவரை தங்களைப் பலி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பெண்களின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆண்களே தீர்மானிக்கிறார்கள். அவற்றின்படி நடக்க பெண்களை நிர்ப்பந்திக்கிறார்கள். பெண்ணை பத்தினியாகவும், பரத்தையாகவும் ஆணே மாற்றுகிறான். பெண்களுக்கென்று தனியே உணர்வுகள், ஆசைகள், காதல், காமம், இல்லையா என்று கேட்டால் பெண்கள் பதில் சொல்வதில்லை. அந்தக் கேள்வியை மர்மமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

மர்மமான அந்தப் புன்னகைதான் எழுத்தாளனை வசீகரிக்கிறது. அவன் அந்தப் புன்னகையில் இருக்கும் மர்மத்தைக் கண்டு பயப்படுகிறான். மகிழ்ச்சியடைகிறான். உவகை கொள்கிறான். அந்த மர்மத்தைக் கட்டுடைக்க அவரகளிடமே இறைஞ்சுகிறான். அதனால் தான் மகத்தான படைப்பாளிகளான டால்ஸ்டாய் கிரெய்ஸர் சோனட்டாவை  எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளை எழுதுகிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஜமீலாவை எழுதுகிறார். செகாவ் டார்லிங்கை எழுதுகிறார். அலெக்சாந்தர் குப்ரின் மாணிக்கக்கங்கணத்தை எழுதுகிறார். துர்கனேவ் ஆஸ்யாவை எழுதுகிறார். மாணிக் பந்தோபாதயாயா நீலகண்டபறவையை எழுதுகிறார். கு.ப.ரா, சிறிது வெளிச்சத்தையும், ஆற்றாமையையும் எழுதுகிறார். தி.ஜானகிராமனும் மோகமுள்ளையும் மரப்பசுவையும், அம்மா வந்தாளையும், செம்பருத்தியையும் எழுதுகிறார். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல எண்ணற்ற எழுத்தாளர்கள் இன்றும் பெண்களின் அந்த மர்மமான புன்னகைக்குப் பின்னால் ஊர்வலமாகப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.

கு.அழகிரிசாமியும் காலத்தால் அழியாத பெண்களைப் படைத்திருக்கிறார். அழகிரிசாமியின் பெண்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஏழ்மையின் காரணமாகத் தியாகம் என்னும் இருள்பள்ளத்துக்குள் தள்ளிவிடப்பட்டவர்கள், தன்னுடைய அறியாமையினால் தன் வாழ்க்கையை இழந்தவர்கள், ஆண்களின் செயல்களுக்குப் பார்வையாளர்களாக இருப்பவர்கள், அன்பும் கருணையும் உருவானவர்கள் என்று சொல்லலாம்.

1942 – ல் எழுதப்பட்ட இரவு கதையில் நண்பனின் அழகற்ற மனைவியுடன் த்ற்செயலாகத் தனியே இருக்கும் கதைநாயகனுக்கு இரவில் மட்டுமே மனவிகாரம் தோன்றுவதும் அது குறித்த விசாரமும் தான்.  கதை எதைப் பற்றிப் பேசப்போகிறதென்பதை கதையின் முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார் ஆசிரியர்.

சாயங்கால நேரம். பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த பகல்செல்வன் இரவுப் பெண்ணைத் தழுவி ஐக்கியமாகும் வேளை. என்ன வேண்டியிருக்கிறது. காதலாம் தழுவலாம். பகல் செல்வனுக்கு வெறி பிடித்ததும் சரி. இரவுப்பெண் இருட்டில் வந்ததும் சரி. இல்லாவிட்டால் தன்னுடைய அழகுக்கு அவன் அந்த இரவுப்பெண்னின் அவலஷ்ணத்தைப் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் பார்த்திருந்தால் அவளைத் தழுவ இசைந்திருப்பானா? 

கதையில் இரவும் ஒரு கதாபாத்திரமாக வருகிறஹு. இந்தக் கதை முழுவதும் பெண்ணைச் சுற்றியே நடந்தாலும் அவள் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவருடைய உணர்வுகளைப் பற்றியோ, கணவனின் செயல் மீதான எதிர்வினையோ எங்கும் பதிவாகவில்லை. கதை முடிந்த பின்னும் அந்தப் பெண் கதாபாத்திரம் இன்னொரு கதையை நமக்குச் சொல்கிறார்.

1942 –ல் எழுதிய வனஜம் கதையில் வயதுக்கு வராத பதினான்கு வயது சிறுமியிடம் காதல்வயப்பட்ட ஆணைப் பற்றிய கதையாக இருந்தாலும் கதை நெடுக வனஜமே ஆக்கிரமிக்கிறாள். வனஜத்தின்  வெகுளித்தனமும், பாலீர்ப்பற்ற உரையாடல்களும் ஆணைக் குழப்புகினறன. சிறுமியாக இருந்த வனஜம் ஒரு கணத்தில் பெரிய பெண்ணாக மாறுகிற தருணத்தை அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் கு.அழகிரிசாமி. அதுவரை இருந்த கள்ளங்கபடற்ற அந்தக் குழந்தை மனதில் கல் விழுந்து விட்டது. பதட்டத்துடன் போங்கள் போங்கள் என்று விரட்டுகிறாள். இனி என் பக்கத்தில் நீங்கள் வரக்கூடாது என்று பெரிய மனுஷியாகப் பேசுகிறாள். நுட்பமான உணர்வு மாற்றத்தைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் போல வேறொரு கதை தமிழில் வந்திருக்கிறதாவென்று தெரியவில்லை.

1948 – ல் எழுதிய சிரிக்கவில்லை கதை கு.அழகிரிசாமியின் கலையின் மிக முக்கியமான கல்வெட்டு என்றுச் சொல்லலாம். ராஜாராமன் மீதான ஆர்வத்தாலும் பாலீர்ப்பு என்று அறியாமலும் வருகிற வெகுளியான பாப்பம்மாள் ராஜாராமனைப் பார்ப்பதற்காகவே சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒருமுறை ராஜாராமனிடம் முத்தமும் பெறுகிறாள். ஆனால் அதை அவள் விகல்பமில்லாமல் ஏற்றுக் கொள்கிறாள்.

“ ராஜாரமனுக்கு முத்தத்தில் சுகானுபவம் பொதிந்திருந்தது. பாப்பம்மாளுக்கோ முத்தம் குஷியாகத் தான் இருந்தது. அவளைப் பொறுத்த மட்டிலும் முத்தத்திற்காகத்தான் முத்தம். வேறு எதற்காகவும் அல்ல! “

ராஜாராமன் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடித்து வரும்போதும் அதே வெகுளித்தனத்துடன் வளைய வளைய வருகிறாள். ஆனால் ராஜாராமனுக்குக் குழனந்தை பிறந்ததும் தான் அவளுக்கு யதார்த்தம் புரிகிறது. ராஜாராமனைப் போலவே இருந்த குழந்தை அவளுடைய ஏதோ ஒரு நம்பிக்கையை அடியோடு சாய்த்து விட்டது. இனி ராஜாராமன் அவனுடைய மனைவிக்கு மட்டுமே சொந்தம் என்பதைக் குழந்தை ஒவ்வொரு கணமும் சிரித்துச் சிரித்து நிரூபித்தது.

அவள் யாருடனும் பேசாமல் அழத் தொடங்குகிறாள். கு.அழகிரிசாமி கதையை இப்படி முடிக்கிறார்,

“ அவளுடைய மானசீகப்பற்றுவரவுக் கணக்கி. ஒரு பெரிய தப்பு விழுந்து விட்டது. பற்று வரவுக் கலங்களில் வரவு வைக்கவேண்டியதைப் பற்று என்றோ, பற்று எழுத வேண்டியதை வரவு என்றோ பதிவு செய்து விட்டாள். கணக்குப் பார்த்தால் மாறி மாறித் தப்பு விழுந்து கொண்டிருந்தது. “

பாப்பம்மாளின் உளவியல் மாற்றம் குறித்தோ, மனதில் என்ன நிகழ்ந்ததென்றோ வாசகர் அறியமுடியாத புதிராக முடித்து பெண் மனம் மர்மமானது. கடலை விட ஆழமானது. என்றெல்லாம் கதை விடவில்லை கு.அழகிரிசாமி.

பாப்பம்மாளின் உளவியல் மாற்றத்தை  நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார். வாசகருக்குத் தெளிவாகத் தெரிவிக்கவிரும்புகிறார். எனவே தான் பற்றுவரவுக்கணக்காகத் தருகிறார். கு.அழகிரிசாமியின் வாழ்க்கைப்பார்வையை இதிலிருந்து அறிந்து கொள்ள முடியுமென்பது சிறப்பு. 

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதையில் வரும் தாயும் மகளும் அதுவரை தமிழ்ச்சிறுகதைகளில் சித்தரிக்கபடாத கதாபாத்திரங்கள். பசியும் வறுமையும் மனிதர்களின் மாண்புகளையும் மனித உறவுகளையும் கீழ்மையானதாக மாற்றிவிடுவதைப் நம் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கீழே மண்ணில் கிடந்த வெள்ளரிக்காயை எடுத்து அது என்ன காய் என்று கேட்பதிலுள்ள பாசாங்கைக் கண்டு மகள் தாயுடன் சண்டையிட்டு இருவரும் ரத்தம் வர பிறாண்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் மனம் ஆறாத தாய் பின்னர் வந்து காலில் மிதிபட்டு மேலும் நசுங்கியிருந்த அந்த வெள்ளரிக்காயைத் தின்கிறாள்.

“ வெள்ளரிக்காயை ஊதினாள். கடைசியில் தின்றே விட்டாள். ஒரு மட்டும் அவளுக்கு நிம்மதி பிறந்தது. ஏதோ இனி யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் போல அவளுக்குத் தோன்றியது.. சந்தோஷத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டாள். “

யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் என்ற வரிகளில் அந்தக் கதாபாத்திரத்தித்தின் மனதை அப்படியே தருகிற கு.அழகிரிசாமி அதற்கடுத்த பத்தியிலேயே யதார்த்த நிலைமையை அவளுக்குப் புரிய வைக்கிறார்.  அவர்களிருவரும் சண்டையிடுவதும் பின்னர் குரூரமான யதார்த்தத்துக்கு முன்னால் மண்டியிட நேர்வதையும் கலையழகுடன் காட்சிப்படுத்துவதில் கு.அழகிரிசாமி மிளிர்கிறார்.

1952 – க்கு முன் எழுதிய் கதையில் வரும் ராஜம் சின்னஞ்சிறு பெண். அவளைக் குழந்தைப் பேற்றை நோக்கித் தள்ளிவிட்ட குற்றவுணர்ச்சியில் தவிக்கும் கணவனைத் தன் ஒற்றைச் செய்கையால் தான் இன்னும் குழந்தையல்ல என்பதை உணர்த்துகிற பெண்ணைக் காட்டுகிறார். பெண்கள் எந்தக் கணத்தில் பெரிய மனுஷிகளாக மாறுகிறார்களென்பதை எழுதிப்பார்க்கிறார் கு.அழகிரிசாமி.

1952 – க்கு முன் எழுதிய காதல்போட்டி கதையில் பூனை எலியாகவும் எலி பூனையாகவும் மாறி மாறி ஒருவரையொருவர் வெறுத்தும் விரும்பியும் நெருங்கியும் விலகியும் நாடகத்தை அழகாக எழுதியுள்ள கு.அழகிரிசாமி. இருவரின் அன்புக்குமிடையில் நிலவுகிற ஈகோ போட்டியையும் அதன் விளைவாக ஏற்படுகிற அனர்த்தத்தையும் விரிவாகச் சொல்லிச் செல்கிறார். கடைசியில் இருவருமே அந்தப் போட்டியில் தோற்றுப் போகிறார்கள். இறுதி வரிகளில்

“ பாமா திரும்பிப் பார்த்தாள்.

ராகவனுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

பாமாவுக்கோ உடம்பு முழுவதுமே நடுங்கியது. “

என்று கவித்துவத்துடன் முடித்திருப்பார் கு.அழகிரிசாமி. இப்படி பெண்ணின் எண்ணவோட்டங்களை அழகின் விலை கதையிலும் சித்தரித்திருப்பார் கு.அழகிரிசாமி. காலகண்டி கதையில் வருகிற கிழவி நாடகத்தில் காலகண்டியாக நடிக்கிற தன் மகனைப் பற்றி சுற்றிலுமிருக்கிற பெண்கள் சாபமிடும் போதெல்லாம் கோபமும் ஆங்காரமும் கொள்கிறாள். ஆனால் எதுவும் பேசாமல் ஒவ்வொரு பெண் பேசும்போதும் அந்தத் திசை நோக்கி ஆக்ரோஷத்துடன் வெறித்துப் பார்த்து வாயை மென்று கொண்டேயிருக்கிறாள். உச்சகட்டத்திம் தாளமுடியாத கிழவி அந்தப் பெண்களுடன் சண்டையிட்டு புழுதியில் புரள்கிறாள். மகன் மீதுள்ள பாசம் அவளை ஆங்காரம் கொள்ள வைத்ததென்றாலும், காலகண்டியாக நடித்த நடிகரின் தத்ரூபமான கலைத்திறனே அப்படி பேச வைத்ததென்பதையும் சொல்லிச்செல்கிறார். தாயின் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறுவதைச் சொல்லும்போது அழகிரிசாமியின் கலை உச்சத்துக்குப் போகிறது. கலைக்கும் யதார்த்தக்குமான போராட்டமென குறியீட்டு வடிவமும் கொள்கிறது.

1952 – முன் எழுதிய அழகம்மாள் கதை கு.அழகிரிசாமியின் கதைகளின் உச்சம் என்று சொல்லலாம். மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்களே கதை. அத்தனை மனப்போராட்டங்களும் அழகம்மாளைச் சுற்றியே நடக்கின்றன. கிருஷ்ணக்கோனாரின் மீதான பரிவுடன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிற அழகம்மாள் மகன் கோபால் வந்ததும் முற்றிலும் வேறொரு பெண்ணாக மாறிவிடுகிறாள். தியாகம் என்ற பெயரில் தான் இழந்தை வாழ்க்கையை எப்படியாவது மீட்டெடுக்க அலைபாய்கிறாள். விதவிதமான சேலைகள், அலங்கராம் என்று மற்றவர்களின் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல் அலைந்து திரிகிறாள். கோபாலுக்கு சங்கடமாக இருக்கிறது. நாசூக்காகச் சொல்லியும் காட்டுகிறான். தன் சொந்த மகனாக இருந்தாலும் கோபால் வந்து விட்டால் கிருஷ்ணக்கோனார் புழுவாய்த்துடிக்கிறார். அழகம்மாள் அத்தனை வன்மத்துடன் அவரிடம் நடந்து கொள்கிறாள். நகரத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகனைத் தேடி வருகிற பெரியவர்கள், பண்ணையார்களைப் பார்த்து அவளுக்குத் தன்னை மகனின் கௌரவத்துக்கு ஈடாக மாற்றும் எண்ணமோ, கழிந்த வாழ்க்கையின் கசப்புத்துளிகளின் சுவையை இனிப்பாக மாற்றுகிற முயற்சிகளையோ செய்து பார்க்கிறாள். அதன் உச்சமாகத்தான் ஒரு சேலை விவகாரத்தில் அவள் வெடித்துச் சிதறுகிறாள்.

சேனைத்தனத்தோட – உன்னை

சேர்ந்திருக்கக் கிட்டலையே

என்று ஒப்பாரி வைக்கிறாள் அழகம்மாள். பயந்து போன கோபால் கதவைத்தட்டி அழைக்கிறான். அம்மா கதவைத் திறந்ததும் அம்மா அம்மா என்னம்மா? என்று கேட்கும்போது பத்து வருடங்களுக்கு முன்னால் இறந்து போன அப்பாவை நினைத்து அழுவதாகச் சொல்கிறாள். அவள் உண்ஐயைச் சொல்லவில்லை என்று கோபாலுக்கும் தெரியும். வெளியே அப்பாவும் கேவிக் கேவி அழுது கொண்டிருக்கிறார்.

மூன்று பேரும் சேர்ந்து மூன்று பேருக்கும் தெரிந்த ஒன்றை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மறைத்தார்கள். மறைந்து நிற்கும் ரகசியம் மூன்று பேரின் பேச்சுக்கு நடுவிலே வந்து முள்ளைப் போலக் குத்திக் கொண்டிருந்தது.

தமிழ்ச்சிறுகதைகளில் அழகம்மாளுக்கு இணையாக இன்னொரு கதை இன்னமும் எழுதப்படவில்லை. கு.அழகிரிசாமியின் கலை மேதைமை ஒளிரும் சிகரம் என்று அழகம்மாள் கதையைச் சொல்லலாம்.

முடிவுரை

கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் கிராமத்துப் பெண்கள் துயர் மிக்க தங்களுடைய வாழ்க்கையினால் அல்லலுற்றாலும் தங்கள் அடையாளத்தை இழக்காதவர்கள். வறுமையால் வாடினாலும் கருணை மிக்கவர்கள். கணவனால் கைவிடப்பட்டாலும் தொடர்ந்து போராடுபவர்கள். ஆண்களின் அசட்டுத்தனத்தைப் பார்த்துச் சிரித்தபடியே பெரிய மனுஷி போல பெருந்தன்மையுடன் ஆண்களை அரவணைத்துக் கொள்பவர்கள். காலங்கடந்த தங்கள் ஆசையைக் குழி தோண்டி புதைத்துவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்பவர்கள். வாழ்க்கையில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரணப்பெண்கள் தான். ஆனால் குழகிரிசாமியின் கலைமேதைமையொளியால் அவர்கள் அசாதாரணமான பெண்களாக மாறுகிறார்கள்.

மனிதவாழ்வை மேன்மைப் படுத்துவதே கலையின் லட்சியம் என்று கொண்டோமானால் கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தங்களை மேலும் ஒளி கூட்டுகிறார்கள்.

கு.அழகிரிசாமியின் கதைகள் தோற்றத்துக்கு எளிமையாகத் தோன்றினாலும் அந்த எளிமைக்குப் பின்னாலிருக்கும் ஆழம் நமக்குள் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் உள்ளேயிழுத்துக் கொண்டேயிருக்கும். தமிழ்ச்சிறுகதைகளில் தனக்கென தனித்துவமான பாணியைக் கைக்கொண்ட கு.அழகிரிசாமியின் கதைகள் என்றென்றும் வாசிக்க வாசிக்கப் புதுமையாகத் திகழ்பவை. காலங்களைக் கடந்தும் நம்முடன் அவை உரையாடிக் கொண்டேயிருக்கும்.

நன்றி - புக் டே

 

 

 

Tuesday, 31 August 2021

களங்கமின்மையின் சுடர்

 

களங்கமின்மையின் சுடர் –


கு.அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்

உதயசங்கர்

“ உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “

குழந்தைகளின் உலகம் எளிமையானது. கபடோ, பாசாங்கோ, கள்ளத்தனங்களோ, அற்றது. அந்தந்தக்கணங்களில் வாழ்கிறவர்கள் குழந்தைகள். வாழும் அந்தத் தருணங்களில் முழு அர்ப்புணிப்புடன் தங்களை ஈடு கொடுப்பவர்கள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காதவர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து குழப்பமடையாதவர்கள். இயல்பானவர்கள். எந்த உயிர்களிடத்தும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்காதவர்கள். பெரியவர்களாகிய நாம் சொல்லிக்கொடுக்காதவரை உயர்வு தாழ்வு என்ற சிந்தனை இல்லாதவர்கள். அவர்களுடைய போட்டியும் பொறாமையும் குழந்தைமையின் ஒரு பண்பு. அந்தக் குணங்கள் அவர்களிடம் வெகுநேரம் நீடிப்பதில்லை. எந்தச் சண்டையையும் நீண்ட நேரத்துக்கு போடாதவர்கள். காயும் பழமுமாக அவர்களுடைய வாழ்க்கையை வண்ணமயமாக்குபவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அன்பால் நிறைந்தவர்கள். குழந்தைமை என்பதே வெகுளித்தனமும், களங்கமின்மையும், கபடின்மையும் தான். ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த பெரியவர்கள் வளரும்போது அந்தக் குழந்தைமையைத் தொலைத்து விடுகிறார்கள். தங்களுடைய பரிசுத்தமான உணர்ச்சிகளால் நிறைந்த அப்பாவித்தனமான இளகிய இதயத்தை வளர வளர இரும்பாக்கி விடுகிறார்கள். ஒருவகையில் இலக்கியம் அந்த மாசற்ற அன்பைப்பொழியும் களங்கமின்மையை மீட்டெடுக்கிற முயற்சி தான்.

 குழந்தைகள் உலகை தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி,  ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன. சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜாவந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. கு.அழகிரிசாமியின் எளிமையான கலைவெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.  

கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால் அன்றாட வாழ்க்கையின் அன்றாடக்காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால் உற்று நோக்க நோக்க அந்த ஓவியத்தின் அழகும், ஆழமும், கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்து கொள்ளும் போது வாசகனுக்குத் திடீரென தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும். அதுவரை கெட்டிதட்டிப்போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும்.

அப்போது தான் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசகமனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின்  கதைகளில் பெரிய தத்துவவிசாரமோ, ஆன்மீக விசாரமோ, செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால் அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளியமொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும்.

ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும். தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார்.

1950 – ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன் தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும் போதே இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும், அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும் அந்த ஊரிலேயே பெரிய தனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள்.

 ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில் மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம் ஐயா வந்து விட்டாரா? என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச்சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு என்று மங்கம்மாள் கேட்கிறாள்.

இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழைமரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா, இல்லாத அநாதையான சிரங்கும் பொடுகும், நாற்றமும் எடுக்கும் தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும் போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும் போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளை படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

 மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும் போது ராஜாவுக்கு என்ன செய்ய என்று தாயம்மாள் குழம்பி நிற்கும் போது மங்கம்மாள் தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்க சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை

“ எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப்போட்டியை நினைத்துக் கொண்டு,

“ ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்… எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..

என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும் போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக்கதையை வாசிக்க வாசிக்க வாசகமனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.

எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையை பார்க்கும் பார்வையை இதை விடச்சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித்ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீகநேசத்தைச் சொல்லியிருப்பார்.

 கு.அழகிரிசாமி ராஜா வந்திருக்கிறார் கதையில் தன்னுடைய அம்மாவுக்கு கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக்காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச்சிறுகதைச் சிகரங்களில் ஒன்று  ராஜா வந்திருக்கிறார்.

வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்து விடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உனர்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடு கட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும். சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு.அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம். மிகச்சாதாரணமாகா ஆரம்பிக்கிற கதை எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது. வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பது தான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது.

பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தைகளும் அவன் மீது அளவில்லாத பிரியம் கொண்டிருக்கின்றன. அவனை வயது மூத்தவனாகக் கருதாமல் தங்களுடைய சமவயது தோழனாகக் கருதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளென்று விடிந்து வெகுநேரமாகியும் தூங்கிக் கொண்டிருக்கிற அவனை முதுகில் அடித்து எழுப்புகின்றன குழந்தைகள். குழந்தைகள் வாசிப்பதற்காக அவன் வாங்கிக்கொண்டு வருவதாகச் சொன்ன புத்தகங்களுக்காக வீட்டை கந்தர்கோளமாக ஆக்கிவிடுகின்றனர். அவனும் அவர்களுக்கு சமமாக விளையாடி கொண்டு வந்த புத்தகங்களைக் கொடுக்கிறான்.

அவன் தாயாரோடு இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அவனுக்குப் பரிச்சயமான சித்ராவும் சுந்தர்ராஜனும் எப்போதும் முதல் உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவனும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான். மற்ற குழந்தைகளும் அதை நியாயம் தான் என்று நினைக்கும் போது சாரங்கராஜன் மட்டும் ஏங்குகிறான். அதற்காக வால்ட்விட்மேனின் கவிதை நூலை வாசிக்கக் கேட்கிறான். அதை மறுக்கும்போது அழுகிறான். அடுத்து அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிருந்தாவுக்குக் காய்ச்சல் கண்டு படுத்திருப்பதைக் கேள்வி கேட்டு அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறான். பிருந்தா அவனைப் பார்த்ததும் மாமா மாமா என்று புலம்புகிறாள். கொஞ்சம் தெளிவடைகிறாள். அப்போது சாரங்கனும் தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான். அதன்பிறகு இரண்டு டைரிகளைக் கொண்டுவந்தவன் சித்ராவுக்கும் சுந்தர்ராஜனுக்கும் மட்டும் கொடுக்கிறான். அப்போதும் சாரங்கன் ஏமாந்து போகிறான்.

ஏற்கனவே சொன்னபடி ஞாயிற்றுக்கிழமையன்று சாரங்கனின் வீட்டுக்குப் போகும் கதாநாயகனுக்கு உப்புமா காப்பியெல்லாம் கொடுத்து உபசரிக்கிறான் சாரங்கன். பின்னர் மெல்ல அவனுடைய டவுசர் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவனுக்கு முன்னால் வைத்து எழுதச் சொல்கிறான் சாரங்கன்.

என்ன எழுத? என்று கேட்கும் அவனிடம், சொல்கிறான் சாரங்கன்.

என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு “

குழந்தைகளின் களங்கமற்ற அன்பைச் சொல்கிற மிகச் சிறந்த கதை. குழந்தைகளிடம் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கற்பிக்கும் கதை அன்பளிப்பு. இந்தக் கதைக்குள் ஓரிடத்தில் கதையின் கதாநாயகன் நினைப்பதாக கு.அழகிரிசாமி எழுதுகிறார்.

“ உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “

உண்மையிலேயே குழந்தைகளின் உலகத்தில் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்பவரால் மட்டுமே இப்படியான கவனிப்பைச் சொல்ல முடியும். இந்தக்கதை 1951-ல் சக்தி அக்டோபர், நவம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது.

ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இரண்டு கதைகளும் தமிழிலக்கியத்துக்கு கு.அழகிரிசாமி கொடுத்துள்ள கொடை என்று சொல்லலாம்.

1959 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட தம்பி ராமையா கதையில் அப்போதே கல்வியினால் தங்களுடைய குடும்பம் உய்த்து விடும் என்று நம்பி காடுகரைகளை விற்று மூத்தமகனான சுந்தரத்தை படிக்கவைக்கிறார் கிராமத்து விவசாயியான பூரணலிங்கம். ஆனால் மகன் படித்து முடித்து நான்கு வருடங்களாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருக்கும் அவலத்தைப் பார்த்து கல்வியின் மீதே வெறுப்பு வருகிறது. ஊரிலுள்ள மற்ற பேர்கள் தங்களுடைய குழந்தைகளைப் படிக்கவைப்பது குறித்து பேசும்போது பூரணலிங்கம் படிப்பினால் எந்தப் பிரயோசனமுமில்லை என்று வாதிடுகிறார். இந்த நிலைமையில் மதுரையில் நண்பன் ஒருவன் மூலம் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குப் போன சுந்தரம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி மாதாமாதம் ஐந்து ரூபாய் சேமித்து ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வருகிறான். ஊருக்கு வரும்போது தம்பி தங்கைகளுக்குத் துணிமணிகள், பலகாரங்கள், வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையின் கையில் முப்பதோ, நாற்பதோ பணமும் கொடுக்கிறான். அவன் ஊரில் இருக்கும் சில நாட்களுக்கு தினமும் விருந்துச்சாப்பாடு நடக்கிறது. இதைப்பார்த்த தம்பி ராமையா அண்ணனுடன் ஊருக்குப் போனால் தினம் பண்டம் பலகாரம் புதுத்துணி, பொம்மை என்று வசதியாக இருக்கலாம்.  ஆனால் அண்ணன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக மறுக்கிறான் என்று நினைத்து அண்ணன்மீது வெறுப்பு வளர்ந்து அவன் ஊருக்குப் போகும்போது அலட்சியப்படுத்துகிறான்.

அண்ணனால் தம்பியின் வெறுமையான பார்வையைத் தாங்க முடியவில்லை. ஆனால் வீட்டிலுள்ளோருக்குப் புரியாமல் தம்பி ராமையாவை அதட்டி உருட்டி அண்ணனை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். ராமையா அண்ணனுக்கு  விடைகொடுக்க கையைக்கூட அசைக்கவில்லை.

அப்போது சுந்தரம் நினைக்கிறான்,

“ ராமையா நான் உன்னை நடுக்காட்டில் தவிக்க விட்டுவிட்டு இன்பலோகத்துக்கு வந்து விடவில்லையடா. நான் வேறொரு நடுக்காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீயாவது என்னை வெறுப்பதன் மூலம் ஆறுதலைத் தேடிக்கொண்டாய்.. எனக்கோ எந்த ஆறுதலும் இல்லை….. தினம் தினமும் உன்னையும் உன் ஏக்கத்தையும் இப்போது உன் வெறுப்பையும் எண்ணி எண்ணித் துயரப்படுவதற்குத் தான் மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீ நினைப்பது போல் நான் ஈவு இரக்கமற்ற பாவியில்லை..

தம்பிராமையா என்ற ஏழுவயது சிறுவனின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற கதை. அண்ணன் சுந்தரத்தின் வழியே கதையை நடத்தும் கு.அழகிரிசாமி அந்தக் காலத்தைப் பற்றிய சமூக விமரிசனத்தையும் கல்வி குறித்த விமரிசனத்தையும் முன்வைக்கிறார். இந்தக் கதை பல தளங்களில் வைத்துப் பேசப்படவேண்டிய கதை.

கு.அழகிரிசாமியின் வர்க்க அரசியலை வெளிப்படையாக உணர்த்துகிற கதை தெய்வம் பிறந்தது. ராமசாமிக்குத் திருமணமாகி நீண்ட பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு பிறக்கிறான் குழந்தை ஜகந்நாதன். அவர் அவனை இந்த உலகின் அனைத்து தர்மநியாயங்களும் அறிந்த உத்தமனாக வளர்க்க நினைக்கிறார். அதற்காக அவர் அவனுக்கு எல்லாவிதமான நீதிநெறிகளையும் நன்னெறிகளையும் சொல்லிக்கொடுக்கிறார். அவர் சொன்னபடியே கேட்டு நடக்கிறான் ஜகந்நாதன். அப்பாவுக்கு ஷவரம் செய்ய வரும் வேலாயுதத்தை வணங்கி மரியாதை செய்கிறான்.

வீட்டில் காந்தியின் படத்தை மாட்டும்போது அவர் சமூகத்துக்குச் செய்த சேவையைப் பற்றி ஜகந்நாதனிடம் சொல்கிறார். அப்போது அவன் அபப்டியென்றால் சாமிப்படங்களை ஏன் மாட்ட வேண்டும் என்று கேட்கிறான். இந்த உலகை, இயற்கையைப் படைத்துக் காப்பாற்றுகிற சாமிப்படங்களை மாட்டி வைக்கலாம் என்று சொன்னதும் கேட்டுக் கொள்கிறான். ராமசாமிக்கு ஒரு குடும்பப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க ஆசை. அதற்காகப் பிரயத்தனப்பட்டு போட்டோ ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்து கண்ணாடிச் சட்டமிட்டு சுவரில் மாட்டுகிறார். அப்போதும் குழந்தை ஜகந்நாதன் கேள்வி கேட்கிறான். நம்முடைய போட்டோவை எதுக்கு நம் வீட்டில் மாட்டவேண்டும் என்கிறான். தந்தையால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி, சாமிப் படங்களை மாட்டியிருப்பதற்குச் சொன்ன பதிலையே அவன் திரும்பக் கேள்வியாகக் கேட்கிறான். நமக்கு நன்மை செய்கிறவர்களின் படங்களைத் தான் மாட்டவேண்டுமென்றால் நம்முடைய வீட்டுக்கு வருகிற துணி வெளுக்கிற கோமதி நாயகம், ஷவரம் செய்கிற  ஐயாவு, வேலாயுதம், காய்கறிக்காரர், இவர்களுடைய படங்களை ஏன் மாட்டவில்லை? என்று கேட்கிறான் குழந்தை. அந்தக்கேள்வியைக் கேட்ட ராமசாமி சிலிர்த்து மகனைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தி, என் வயிற்றிலும் தெய்வம் பிறக்குமா? பிறந்து விட்டதே! என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு மனைவியைத் தேடிப்போகிறார்.

பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய குழந்தைகள் நீதிமான்களாக நியாயவான்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் தான். அந்த நியாயமும், நேர்மையும் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாதவரையில் குழந்தைகளுக்கு நன்னெறி, நீதிநெறி, ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். தெய்வம் பிறந்தது கதையில் வருகிற ராமசாமி குழந்தையின் கேள்வியில் புளகாங்கிதமடைகிறார். அந்தக் கேள்வியின் தாத்பரியத்தைக் கண்டு அகமகிழ்கிறார். கு.அழகிரிசாமி தன்னுடைய அரசியல் சார்பு நிலையை ஜகந்நாதன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று சொல்லலாம். இயல்பு மாறாமல் குழந்தையின் கேள்விகளை திறம்பட புனைவாக்கித் தந்து கதை முடிவில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.

1960 – ஆம் ஆண்டு தாமரை பொங்கல் மலரில் வெளியான கதை தெய்வம் பிறந்தது.

மேலே சொன்ன கதைகளுக்கு மாறாக குழந்தைகளின் பேதமையைப் பற்றி எழுதிய் கதை பேதமை. 1960- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலைக்கதிர் பத்திரிகையில் வெளியான கதை. வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் கதை.

தெருவில் கடைக்காரரால் மிருகத்தனமாக அடிக்கப்பட்டு கதறிக் கொண்டிருக்கும் இரண்டு கந்தலுடையில் அழுக்காக இருந்த ஏழைச்சிறுவர்களை அந்த அடியிலிருந்துக் காப்பாற்றுகிற கதாநாயகன் சற்று நேரத்துக்கு முன்னால் அவனே அடிக்க வேண்டும் என்று நினைத்தவன் தான். வீடு வீடாகச் சென்று பிச்சைச்சோறு வாங்கி வந்து கொண்டிருந்த வயதான குருட்டுப்பிச்சைக்காரரின் தகரக்குவளையில் அந்த இரண்டு சிறுவர்களும் மண்ணையள்ளிப் போட்டு விட்டுச் சிரிக்கிறார்கள். அதைப்பார்த்த எல்லோருக்குமே ஆத்திரம் வந்தது. ஆனால் கடைக்காரர் அந்த ஆத்திரத்தை கண்மண் தெரியாமல் காட்டி விட்டார். குழந்தைகளின் அவலக்குரலைத் தாங்க முடியாமல் அவரிடமிருந்து அவர்களை மீட்டு அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஊருக்கு வெளியே இருந்த குடிசையில் அவனுடைய அம்மா மட்டுமல்ல அக்கம்பக்கத்திலிருந்த குடிசைகளிலிருந்தவர்களும் கூட அந்தக் குழந்தைகளை அடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்ப்போது கூட குழந்தைகளின் பேதமையை நினைத்து, இப்படியொரு கொடூரமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கத் தானே எண்ணம் வரும் என்றெல்லாம் யோசிக்கிறார் கதாநாயகன். ஆனால் அந்த இடத்தை விட்டுப் புறப்படும்போது அந்தக் குடிசைக்குத் தட்டுத்தடுமாறி இன்னொரு குருட்டுப்பிச்சைக்காரன் ஒரு கையில் குவளையும். ஒரு கையில் தடியுடன் வந்து சேர்கிறான். அவன் தான் அந்தக் குழந்தைகளின் தந்தை. அதைப் பார்த்ததும் கதாநாயகனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது. குருடன் பெற்ற பிள்ளைகள் தான் குருடன் சோற்றில் மண்ணள்ளிப் போட்டுச் சிரித்தவர்கள்.

துயரம் தாங்க முடியாமல் கடைசி வரியில் குழந்தைகளே! என்று விளிக்கிறார் கதாநாயகன்.

புறவயமான சமூகச்சூழலின் விளைவாக இருந்தாலும் இந்தக் கதையில் வரும் குழந்தைகளின் பேதமையை யாராலும் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை.

குழந்தைகளைப் பற்றிய இன்னுமொரு கதை இருவர் கண்ட ஒரே கனவு.

கு.அழகிரிசாமியின் கலை உன்னதங்களை மட்டுமல்ல, கீழ்மைகளையும் நமக்குக் காட்டுகிறது. அவரளவுக்கு நுட்பமாக குழந்தைகளின் உலகை வெளிப்படுத்தியவர்கள் தமிழில் மிகவும் குறைவு.

இருவர் கண்ட ஒரே கனவு கதையில் ஏழைத்தாய் காய்ச்சலினால் இறந்து போய் விடுகிறாள். அவளுடைய இரண்டு பையன்களும் இரண்டு மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்த்து இரக்கப்பட்டு கஞ்சி கொடுக்கிறார் விவசாயத்தொழிலாளியான வேலப்பன். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாதென்ற அம்மாவின் கண்டிப்பினால் ஆசைப்பட்டு கஞ்சியை வாங்கிவந்த சின்னவனிடம் பெரியவன் சண்டைபோட்டு கஞ்சியைக் கீழே கொட்டி விடுகிறார்கள். அம்மாவிடம் புகார் சொல்வதற்காக ஓடிவந்தால் அம்மா இறந்து கிடக்கிறாள். எப்போதும் அவள் விளையாடும் விளையாட்டென்று நினைத்து அவளை அடித்துக் கிள்ளி எழுப்புகிறார்கள். அம்மாவின் இழப்பைக் கூட உணரமுடியாத பிஞ்சுக்குழந்தைகள். முன்னர் கஞ்சி கொடுத்த வேலப்பன் தன் வீட்டில் அவர்களைத் தங்கவைக்கிறான். இரவில் இரண்டு குழந்தைகளும் ஏக காலத்தில் அம்மா என்றலறி எழுந்திரிக்கிறார்கள். கேட்டால் இருவருக்கும் ஒரே கனவு. அவர்களுடைய அம்மா வந்து தான் உடுத்தியிருந்த சேலையை அவர்கள் மீது போர்த்திவிட்டு நான் சாகவில்லை.. என்று சொல்லிவிட்டுப் போவதாக கனவு வந்து அம்மாவை தேடுவதாகக் கதை முடிகிறது.

கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மட்டுமல்ல அநாதரவான குழந்தைகள், ஏழைச்சிறுவர்கள், திரும்பத்திரும்ப கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிறார்கள். அவர்களுடைய மனநிலையை அவ்வளவு யதார்த்தமாகச் சித்தரிக்கிறார். கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் அழியாத சித்திரங்களாக அமைந்து விடுகிறார்கள். கதையின் முக்கியக்கதாபாத்திரங்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய இருப்பை கு.அழகிரிசாமி அபூர்வமான வண்ணத்தில் தீட்டி விடுகிறார். குழந்தைகளின் மீது அவர் கொண்ட பேரன்பும் பெருநேசமும் அவரை அப்படி எழுத வைத்திருக்கிறது.

தரிசனம் என்ற கதையிலும் முத்து என்ற ஒரு ஆதரவற்ற கிழவரும், ஆண்டியப்பன் என்ற அநாதையான சிறுவனும் வருகிறார்கள். முதியவருக்கு உணர்வுகள் மரத்துப் போய் விடுகிறது. எதுவும் நினைவிலில்லை. சித்தசுவாதீனமில்லாதவர் என்று ஊரார் சொல்கிறார்கள். ஆனால் அவர் அன்றாடம் கூலிவேலைக்குப் போய் கிடைக்கும் கூலியைத் தூரத்து உறவினரான ஆறுமுகத்திடம் கொடுத்து அவனிடமும் அவன் மனைவியிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு திண்ணையில் முடங்கிக் காலத்தைக் கழிக்கிறார். ஆண்டியப்பனுக்கோ தாயும் தந்தையும் இறந்து ஆதரவின்றி அந்த ஊர் பெரிய தனக்காரரிடம் வேலை பார்த்துக் கொண்டு தொழுவத்தில் படுத்துக் கிடக்கிறான்.  பத்து நாட்களாக விடாமல் பெய்யும் மழை சிறுவனையும் திண்ணைக்குத் தள்ளுகிறது. இருவரும் திண்ணையில் இரவுப்பொழுதைக் கழிக்கிறார்கள். அப்போதுதான் திண்ணையின் மூலையில் ஒரு குருவிக்கூடிருப்பதைப் பார்க்கிறார் கிழவர் முத்து. அது தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காமல் தட்டழிவதைப் பார்க்கிறார். வெளியே மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

மழையினால் கூலி வேலையில்லையென்பதால் ஆறுமுகத்தின் மனைவி வைது கொண்டே சோறு போடுகிறாள். அவள் போடும் சோற்றில் பாதியை ஒரு காகிதத்தில் எடுத்து வந்து தாய்க்குருவி கண்ணில் படும் இடத்தில் வைத்து விடுகிறார். தாய்க்குருவி சோற்றை எடுத்துக்கொண்டு போய் குஞ்சுகளுக்கு ஊட்டுகிற காட்சியைப் பார்த்து கிழவர் தெய்வ தரிசனத்தைக் கண்டமாதிரி கண்களில் கண்ணீர் வழிய கும்பிடுகிறார்.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன் தொழவேண்டியது அவரையல்லவா என்று அவரைக் கும்பிடுகிறான்.

இந்தக்கதை முழுவதும் கிழவர் முத்துவைச் சுற்றியே வந்தாலும் ஆண்டியப்பன் என்ற கதாபாத்திரமும் தரிசிக்கிறது. இரண்டுபேரும் இரண்டு தரிசனங்களைப் பார்க்கிறார்கள். இரண்டு தரிசனங்களின் வழியாக வாசகர்களுக்கு வேறொரு தரிசனத்தைத் தருகிறார் கு.அழகிரிசாமி.

எளியவர்களின் வழியாகவே வாழ்க்கையின் உன்னதங்களை உணர்த்துகிறார் கு.அழகிரிசாமி. குழந்தைகளின் இயல்புணர்வை அவரளவுக்கு பதிவு செய்தவர்களும் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குக் கதைகளில் குழந்தைகள் வந்து செல்வதையும் பார்க்கும்போது, எந்தளவுக்கு கு.அழகிரிசாமியின் மனதில் குழந்தைகளின் மீதான பிரியமும் பேரன்பும் இருக்கிறது என்பது புரியும். 

எங்கள் அன்புக்குரிய கலைஞன் கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்த புறக்கணிப்பைத் தாங்களே சரி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் சிடுக்குகளை எளிதாக அவிழ்த்து விடுகிறார்கள். தங்களுடைய நேசத்தினாலும் பரிவினாலும் இந்தப் பிரபஞ்சத்தையே பற்றியணைக்கும் வல்லமை கொண்டவர்களாகிறார்கள்.

அவர்கள் யாவரும் கு.அழகிரிசாமியே! எங்கள் மூதாயே!

நன்றி - புக் டே



 

 

Friday, 27 August 2021

கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும்

 

கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும் –

இரண்டு சிறுகதைகளை முன்வைத்து


உதயசங்கர்.

உலக இலக்கியத்தில் ரயில் நிலையம் போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. அன்னா ரயிலில் பாய்ந்தே தற்கொலை செய்து கொள்கிறாள். அஸ்தபோ ஸ்டேஷனில் டால்ஸ்டாய் தன்னந்தனியராக தன் இறுதிக்கணங்களைக் கழிக்கிறார். நதானியல் ஹாதர்னின் சுவர்க்க சாலை என்ற சிறுகதை இரும்புக்குதிரையை அதாவது ரயில் எஞ்சினை முன்வைத்து ஜான் பனியனின் பயணியின் முன்னேற்றம் என்ற நாவலை கேலி செய்து எழுதப்பட்டது.  இந்திய இலக்கியத்திலும் மிக முக்கியமான பங்கை ரயில்களும், ரயில்வே ஸ்டேஷன்களும் வகிக்கின்றன. ரஸ்கின் பாண்டின் கதைகளில் குழந்தைகளின் அன்புக்குரியதாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷனும் வருவதைப் பார்க்கலாம். அப்படி தமிழிலக்கியத்திலும் கு.ப.ரா.வின் விடியுமா என்ற சிறுகதை முழுவதும் ஓரிரவு ரயில்பயணத்தில் நடக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமமாக, உணர்ச்சிகளின் குவிமையமாக, வாழ்க்கை பற்றிய அடிப்படையான பார்வையை உருவாக்குகிற இடமாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.

தமிழ்ச்சிறுகதை மேதைகளில் ஒருவரான கு.அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளில் தகப்பனும் மகளும் , குமாரபுரம் ஸ்டேஷன், ஆகியவற்றில் ரயிலையும் ரயில்வே ஸ்டேஷனையும் முக்கியமான களமாகவும் கதாபாத்திரமாகவும் சித்தரித்திருக்கிறார். அதில் தகப்பன் மகளும் கதையில் ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் இரண்டு இளைஞர்களிடமிருந்து தன்னுடைய சிறுமியான மகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுமியின் தந்தை செய்கிற கோணங்கித்தனங்களே அவரை ஒரு அற்பனாகக் காட்டுகிற கதை. பொதுவாக கு.அழகிரிசாமி வாழ்க்கையின் யதார்த்தமான காட்சிகளையே சித்தரிக்கிறார். அந்தக் காட்சிச் சித்தரிப்பில் மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற மனவிகாரங்கள், விசித்திரங்கள், மானுடத்தருணத்தின் ஒளிக்கீற்றுகள், ஆகியவற்றையே அவர் நமக்குத் தரிசனங்களாகத் தருகிறார். எளிமையான வாழ்க்கையை எளிமையான சொற்களால், எளிமையான வடிவத்தில், எளிமையான கலையாக செதுக்குகிறார் கு.அழகிரிசாமி. அவருடைய தனித்துவமென்பது சாமானியர்களின் வாழ்வை சாதாரணமாகச் சொல்வது தான். அந்த சாதாரணத்துவத்துக்குள்  தார்மீகமான அறவிழுமியங்களைத் தேடுகிறார்.

தான் கண்டடைந்த மானுடத்தார்மீக அறவிழுமியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வாசகர்கள் முன் காட்டுகிறார் கு.அழகிரிசாமி. குழந்தையின் களங்கமின்மையும், தான் கண்டுபிடித்ததை உடனே காட்டிவிடும் வெள்ளந்தித்தனமும், கபடின்மையும் தான் கு.அழகிரிசாமியின் கலைத்துவம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கண்டெடுக்கும் உடைந்த பொம்மையோ, அறுந்து விழுந்த பொத்தானோ, துருப்பிடித்த ஆணியோ, பழைய பாசிமணியோ, உண்மையான முத்துகளோ, பவளங்களோ, எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் சமமான மதிப்புடனே அவர்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் கு.அழகிரிசாமியும் தான் கண்ட அனைத்திலும் உள்ளுறைந்திருந்த மானுடநாடகத்தைத் தன்னுடைய கதைகளில் நிகழ்த்தினார்.

ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு நிகழ்ச்சி, ஒரு உணர்ச்சியைச் சுற்றி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு எழுதப்படும் நவீனச்சிறுகதைகளுக்கு மாறாக கு.அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் பல சம்பவங்கள், பல தருணங்கள், ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல கதாபாத்திரங்கள், பல உணர்ச்சிச்சுழல்கள், எல்லாம் இயல்பாக ஒன்று கூடி ஒரு மானுடத்தரிசனத்தை உருவாக்குகிறது. அந்தத் தரிசனம் இந்த வாழ்வைக் கனிவுடன் சாந்தமாக உற்று நோக்குகிறது. கு.அழகிரிசாமி அந்தக்கனிவின் சிகரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

கோவில்பட்டி என்ற சிறுநகரத்துக்கு அருகில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் தமிழிலக்கியத்தின் இரண்டு மேதைகள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், உருவானார்கள். அவர்கள் அண்டைவீட்டுக்காரர்கள் என்பதும் சமவயதினர் என்பதும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இரண்டு பேரும் கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் இரண்டு பேரும் இசைமீது பெரும்பித்து கொண்டவர்கள் என்பதும், பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் தமிழிலக்கியத்தில் பாரதூரமான தாக்கங்களை உருவாக்கியவர்கள் என்பதும் சாதாரணமான விஷயங்களில்லை.

23-9-1923 அன்று கு.அழகிரிசாமி பிறந்தார். ஆரம்பக்கல்வியை கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை வ.உ.சி. அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவனாகவே இருந்தார் கு.அழகிரிசாமி. உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போன கி.ரா. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமியுன் அத்யந்த நட்பு கொண்டிருந்தார். இருவரின் பாலிய காலத்தைப் பற்றி விரிவாக கி.ரா. நிறைய எழுதியிருக்கிறார்.

இடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம் ஊரில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த  எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற கரிசல்க்காட்டு சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார். அவரையே தன் இலக்கியகுருவாக கு.அழகிரிசாமி வரித்துக் கொண்டார். அவரிடமிருந்த இலக்கியநூல்களை அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும் கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும் அப்போது இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். கு.அழகிரிசாமி சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார். கி.ரா. இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கோவில்பட்டி கவிஞர் கந்தசாமிச்செட்டியார் மூலம் கவிதையில் ஈடுபாடு கொண்டு கவிதைகளை எழுதினார். பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும் அரசு வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.  பத்திரப்பதிவுத்துறையில் வேலை கிடைத்து ஆரம்பத்தில் சுரண்டையிலும் பின்னர் தென்காசியிலும், நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார்.. தென்காசியில் வேலைபார்த்தபோது ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார். அவருடைய நன்மதிப்பைப் பெற்று ரேடியோவில் கவியரங்க நிகழ்ச்சியில் ரசிகமணியுடன் இணைந்து பங்கேற்றார்.

1943 –ல் கு.அழகிரிசாமியின் முதல்கதையான உறக்கம் கொள்ளுமா? என்ற கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு பிரசண்டவிகடனில் உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பிறகு தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார். பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்மணி, தமிழ்நேசன், நவசக்தி, தமிழ்வட்டம், சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். 1952 –ல் அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு 13 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர் நூல்கள், 2 நாடகங்கள், 11 மொழிபெயர்ப்புகள், 4 பதிப்பு நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.

கம்யூனிச இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை அவர் கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களில் காணமுடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாங்கி அனுப்பும்படியும், ஜீவாவின் சிங்கக்கர்ஜனையைப் பொதுக்கூட்டத்தில் கேட்டதாகவும், அந்தக்கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களான ராமநாதன், ராமகிருஷ்ணன், சிண்டன், எம்.ஆர்.வி, போன்றோர் கலந்து கொண்டு பேசியதாகவும் எழுதியிருந்தார். பி.ராமமூர்த்தியின் பேச்சைக் கேட்க ஆவலாக இருந்ததாகவும் அவர் வராத குறையை ஜீவா தீர்த்துவைத்ததாகவும், மறுநாள் பாமினிதத்தின் பேச்சைக் கேட்க போகப்போவதாகவும், ஜனசக்தி, பீப்பிள்ஸ் ஏஜ், தவறாமல் வாசிப்பதாகவும், முடிந்தவரை இயக்கம் சார்ந்த செய்திகளை அவர் வேலை பார்க்கும் பத்திரிகையில் முடிந்தவரை பிரசுரிக்க முயற்சிப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

1962 –ல் எழுத்து பத்திரிகை எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில் கு.அழகிரிசாமி எழுதும்போது,

“ நான் மனிதனாக வாழவிரும்புகிறேன்.. நான் மனிதனாக சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. நான் முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில் சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்…..

பிரசாரத்துக்காக எழுதவில்லையா, நிர்ப்பந்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா, வாழ்க்கைச் செலவுக்காக எழுதவில்லையா என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும் நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள் எவையாக இருந்தாலும் என் குறிக்கோள் மாறிவிடவில்லை. ஒருவேளை உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை. மாறாது. எனவே சந்தர்ப்பத்தேவைகளையோ, புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம் தவறும்போது தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை முழுக்காரணங்கள் ஆக்க முடியும்… இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான் பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்.. ( எழுத்து மே, 1962 )

தான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு எழுத்தாளனின் சுயவாக்குமூலம் இது. கு.அழகிரிசாமியே சொல்லியிருக்கிறபடி மனிதன் என்ற அந்த மகத்தான சொல்லின் முழு அர்த்தத்திலேயே தன்னுடைய கலைக்கொள்கையை வகுத்து அதைப் பின்பற்றினார். எல்லாவித நிர்ப்பந்தங்களுக்கேற்றபடியும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியும் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய தார்மீகமான மானுட அறவிழுமியங்களின் பாதையிலேயே தன்னுடைய பயணத்தை அமைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள 105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. சிரிக்கவில்லை, தவப்பயன், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், அன்பளிப்பு, பாலம்மாள் கதை, அழகம்மாள், பெரியமனுஷி, திரிவேணி, காலகண்டி, தம்பி ராமையா, சுயரூபம், குமாரபுரம் ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு, பேதமை, போன்ற கதைகளை மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.

இந்தக்கட்டுரையில் 1960-ல் அவர் எழுதி கல்கியில் வெளியான குமாரபுரம் ஸ்டேஷன் என்ற கதையைப் பற்றியும் 2002 – ல் நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதையைப் பற்றியும் பேசிப்பார்க்கலாம்.

குமாரபுரம் ஸ்டேஷன் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன் என்ற முதல்வரியுடன் தொடங்குகிறது கதை. சுற்றிலும் ஊரோ, ஆள் நடமாட்டமோ இல்லாத ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனின் வரலாற்றிலேயே முதன்முதலாக வந்திறங்குகிறார் முக்கியஸ்தர் சுப்பராம ஐயர். கோவில்பட்டியில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான அவர் தன்னுடைய பாலியகால நண்பரான குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரோடு மூன்று நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் மகனின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட வந்திருந்த ஒரே விருந்தினர். குமாரபுரம் ஸ்டேஷனின் அலாதியான தனிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது வந்துபோகும் ரயில்வண்டிகள், பயணிகள் யாரும் வராமல் தண்ணீர்ப்பந்தலாக நின்று கொண்டிருக்கும் ஸ்டேஷன் என்று சுப்பராம ஐயர் அலட்சியமாக நினைக்கிறார். ஆனால் தவநிலையில் அந்தக் கரிசக்காட்டில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் குமாரபுரம் ஸ்டேஷனின் வழியே உலகத்தைப் பார்க்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.

இரண்டு நாட்கள் அங்கே தங்கிய பிறகு, மூன்றாவது நாளில் குமாரபுரம் ஸ்டேஷன் அவருக்கு வேறொன்றாகத் தெரிகிறது. அடுத்து பத்து கி.மீ. தூரத்திலிருந்த கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு வருகிற இருபது நிமிடப்பயணத்திலும் சுப்பராம ஐயருக்கு ஞானம் கிடைக்கிறது. தான் இருக்குமிடத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும் ஞானம் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர். சூதுவாதில்லாமல் உரக்கப்பேசிக்கொண்டிருக்கும் கிராமத்துவாசிகள், ஊர்க்குழந்தைகளையும் தன்னுடைய குழந்தையோடு மேல் படிப்புக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து வந்த பெரியவர், மேல்படிப்புக்காக அந்தக்குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஆசிரியர், ரயிலில் வருகிற திருநெல்வேலி பங்கஜ விலாஸ் ஹோட்டல் முதலாளியான பூதாகாரமானவர் தனக்குக் குழந்தையில்லையென்றால் என்ன? தன்னுடைய ஹோட்டலில் சாப்பிடுகிற அத்தனை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று சொல்லும் உரிமை. இடைசெவல் குழந்தைகளையும் கல்லூரிக்கு வரும்போது தன்னுடைய ஹோட்டலில் தான் வந்து சாப்பிடவேண்டும் என்ற வேண்டுகோளோடு வழியனுப்புகிற அன்பு, கோவில்பட்டியில் அந்தப்பையன்களுடைய ஊர்க்காரரான போர்ட்டரின் விருந்தோம்பல், எல்லாக்காட்சிகளையும் கண்ணுற்ற சுப்பராம ஐயர் பரவசமடைகிறார். குமாரபுரம் ஸ்டேஷனை மிகப்பெரிய பள்ளிக்கூடமென்று நினைக்கிறார்.

ஒரு மகத்தான மானுட தரிசனத்தை குமாரபுரம் ஸ்டேஷனில் மிக லகுவாக நிகழ்த்துகிறார் கு.அழகிரிசாமி. கலையமைதியின் உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது குமாரபுரம் ஸ்டேஷன். அடுத்தடுத்த காட்சிகளில் சுப்பராம ஐயருக்கு மட்டுமல்ல நமக்கும் மானுடமேன்மையின் உன்னதம் தெரிகிறது. எளிய மனிதர்களின் எளிய உரையாடல்கள், எளிய வாழ்க்கைச் சித்திரங்களின் மூலம் கதையினை பல அர்த்தத்தளங்களுக்குக் கொண்டுபோகிறார் கு.அழகிரிசாமி.

முதலில் ஸ்டேஷன் பற்றிய வர்ணனை. ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடல். ஸ்டேஷனின் தனிமை ஏற்படுத்தும் உணர்வு. ரயில் வரும் முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் உயிர் பெற்று எழுந்து நாடகக்காட்சிகளைத் தொடங்குகிறது. அந்த மானுட நாடகம் ரயிலிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்துகிறார் கு.அழகிரிசாமி. அதனால் ஏற்கனவே குமாரபுரம் ஸ்டேஷன் தங்கலில் மனம் மாறத்தொடங்கியிருந்த சுப்பராம ஐயர், ரயில் பயணத்தில் முற்றிலும் மாறிவிடுகிறார். சுப்பராம ஐயரின் மன ஆழத்திலிருந்து பேரூணர்வு எழுந்து அவரைப் பரவசப்படுத்துகிறது. அதே பரவசத்தை கிராம்த்துப்பெரியவரும் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் அடைகிறார்கள். சுப்பராம ஐயர் குமாரபுரம் ஸ்டேஷனை ஞானம் தந்த போதிமரமாக நினைக்கிறார்.

கு.அழகிரிசாமியின் கலை செகாவியன் பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின் வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின் வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு எழுப்பப்படுவது, கொஞ்சம் அசந்தாலும் அவருடைய கலையின் சூட்சுமம் பிடிபடாமல் போய் விடும் வாய்ப்பு உணடு. அதனால் கதைகள் சாதாரணமானதாகத் தோற்றமளிக்கும் ஆபத்தும் நேரிடும். கு. அழகிரிசாமியிடம் திருகுமுருகலான வலிந்தெழுதும் மொழி இல்லை. வாசகர்களை மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை. விநோதமான கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள் இருக்கின்றன. அவர் காட்டுகிற காட்சிகள் சாதாரணமானவை தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின் வழியாக மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும் அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம் இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின் வழியே தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப் பரிமளிக்கச்செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக அவர் உரக்கப்பேசுவதில்லை. ஆனால் அவருடைய முணுமுணுப்பை உற்றுக் கேட்காவிடில் கு.அழகிரிசாமியின் மேதைமை நமக்குப் புரியாது.

குமாரபுரம் ஸ்டேஷன் கதையை தான் எழுதியதைப் பற்றி கு.அழகிரிசாமி கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963 – ல் தாமரையில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“ குமாரபுரம் ஸ்டேஷனுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தான் கரு. என் சொந்த கிராமமாகிய இடைசெவலுக்கு அருகில் உள்ள இந்த ஸ்டேஷன் தான் நான் முதன்முதலில் பார்த்த ரயில்வே ஸ்டேஷன். நடுக்காட்டில் ஒரு கட்டடம். கிராமத்தில் காணும் எந்த வீட்டையும் விட அழகும் வசதியும் வாய்ந்தது. அதை ஒட்டி சில வீடுகள். சுகமான மனோரம்யமான வாழ்க்கை! நடுக்காட்டில் உள்ள வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது, தினந்தோறும் வனபோஜனம் சாப்பிடும் இன்பானுபவமாகத் தோன்றியது. ஸ்டேஷன் மாஸ்டரின் வாழ்க்கை கிராமத்து ஜனங்களின் வாழ்க்கையை விட கவர்ச்சிகரமாக அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது மனசைக் கவர்ந்த ஒரு இன்ப உலகமாகக் காட்சியளித்த அந்த குமாரபுரம் ஸ்டேஷன் அந்த “ முதற்காதல் “ – எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகுகூட உள்ளத்தைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஸ்டேஷனை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். பல வருஷங்களுக்குப் பிறகு எழுதினேன். காதல் நிறைவேறியது போல் இருந்தது. எனக்குப் பிடித்த என் சிறுகதைகளில் குமாரபுரம் ஸ்டேஷனும் ஒன்று “

இந்தக் கதையை கு.அழகிரிசாமி எழுதிய காலம் நாடு விடுதலையடைந்து வாழ்வில் தேனும் பாலும் தெருக்களில் ஓடும் என்று அரசியல் கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்த காலம். நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மறைந்து நவீன காலத்தின் புதிய மதிப்பீடுகள் உருவான காலம். கல்வியினால் கடைத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை பெருகிய காலம். நம் கண்ணெதிரே ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற நம்பியிருந்த காலம். அந்தக் காலத்தில் கிராமத்து வெகுளித்தனமும், அன்பும், பரிவும் எப்படி நவீன சமூகத்தின் அடையாளமாக அங்கே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த குமாரபுரம் ஸ்டேஷனையும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அங்கே அலட்சியமாக வந்து தங்கியிருந்த பள்ளியின் தலைமையாசிரியரான சுப்பராம ஐயரையும் மாற்றுகிறது. நவீன சமூகம் எந்தப் பாதையில் போகவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரித்தத்துவத்திலும் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த கு.அழகிரிசாமியின் கலைக்கொள்கையை மையப்படுத்திய கதை என்று குமாரபுரம் ஸ்டேஷன் கதையைச் சொல்லலாம். கு.அழகிரியிசத்தைப் புரிந்து கொள்வதற்கு குமாரபுரம் ஸ்டேஷன் கதையை வாசிக்காமல் கடந்து செல்லமுடியாது.

 குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் மார்க்கத்தில்  அமைந்திருக்கிறது. அருகில் எந்த ஊரும் கிடையாது. கு.அழகிரிசாமி எழுதியிருப்பதைப் போல அது ஒரு காட்டு ஸ்டேஷன் தான். எப்போதாவது பகலில் ஆடு, மாடு, மேய்க்கும் பையன்களோ, கரிசல்க்காடுகளில் வேலை செய்பவர்களோ வந்து தாகம் தீர்க்கவும் அங்கிருக்கும் வேப்பமரம், புளிய மரம், பன்னீர் மரம், பிள்ளைவளத்தி மரம், விளாமரம், கருவை, மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதும் உண்டு. நான் குமாரபுரம் ஸ்டேஷனில் 1999 – லிருந்து 2018 – வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்தேன். எங்கு மாறுதல் தந்தாலும் மீண்டும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வந்து விடுவேன். குமாரபுரம் ஸ்டேஷன் அப்படி என்னை ஈர்த்திருந்தது. அது மட்டுமல்ல அதன் ஏகாந்த அமைதியும் அவ்வப்போது வீசும் ஊ ஊ ஊ என்று கூப்பிடும் குருமலைக்கணவாய் காற்றும் எதிரே விரிந்திருக்கும் குறும் புதர்களும், காடை, கௌதாரி, காட்டுப்புறா, மணிப்புறா, மயில், காகம், கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, தவிட்டுக்குருவி, செம்போத்து, போன்ற பறவைகளின் சுதந்திரமான நடமாட்டமும், இரவில் கூகை, ஆந்தை, குள்ளநரி, கருநாகம் தொடங்கி அத்தனை விதமான பாம்புகள், நட்டுவாக்காலி, தேள், பொரிவண்டு, உள்ளங்கையகலம் இருக்கும் மரவண்டுகள், தீப்பூச்சி, நாற்றமெடுக்கும் பச்சைப்பூச்சி, என்று எல்லாவிதமான உயிரினங்களையும் தரிசிக்கலாம். காலையில் கௌதாரி தன் குஞ்சுகளுடன் காலாற இரைதேடிப் போவதைப் பார்க்கலாம். இணையைச் சேருவதற்காக மயில் தோகைவிரித்து சிலிர்த்தாடுவதைக் காணலாம்.

இப்படிப்பட்ட ஸ்டேஷனை விட்டுப்போக யாருக்கு மனம் வரும்? அதுவும் கு.அழகிரிசாமியைப் போன்ற ஆளுமையின் கதை பெற்ற ஸ்தலமான குமாரபுரம் ஸ்டேஷன் என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. 1960-ஐப் போலவே அந்த ஸ்டேஷன் கிராசிங்குக்காகவே உருவாக்கப்பட்டிருந்ததென்பதால் வேறு எந்தத் தொந்திரவும் கிடையாது. ரயில்கள் போய் விட்டால் நம்மருகில் தனிமை வந்து தானாக நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும். அப்படியொரு அமைதி.

1992 –ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியாவே ரணகளமாகி மக்களின் மனதில் மதவெறி விஷவிதையெனத் தூவப்பட்டு விருட்சமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். அன்றாடம் மக்களைப் பதட்டத்தில் வைத்திருந்த காலம். அமைதியென்பதே இனி வராதோ என்றிருந்த காலம். தங்களுடைய பொருளாதாரக்கஷ்டங்களுக்கு விடிவு காலம் கிடையாதோ என்று பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் திடீர் திடீரென்று தண்டவாளங்களின் வழியே ஆட்கள் நடந்து வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அழுக்கான உடையுடன். தாடி, முடியெல்லாம் சடைபிடித்து, அழுக்குப்பையுடன், அழுக்கான தேகத்துடன் எதையோ வெறித்த கண்களுடன் எங்கேயாவது தப்பித்துப் போய் விடவேண்டுமென்ற வேகத்துடன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கியும் போய் வருவார்கள்.

லாரி கேலின்ஸ் – டொமினிக் லேப்பியர் இணைந்து எழுதிய FREEDOM AT MIDNIGHT என்ற நூல் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பில் நள்ளிரவில் சுதந்திரம் என்று அலைகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்த நாட்களில் என் மனம் நிலை கொள்ளவில்லை. எப்போதும் வன்முறைக்காட்சிகள் கண்முன்னால் தோன்றிக் கொண்டேயிருந்தன. உடலில் ஒரு விறைப்புத்தன்மை கூடிக் கொண்டிருந்தது. தனியே இருக்கும்போது பயம் கிளை கிளையாய் விட்டது. காதுகளில் ஓலம். பெண்களின், குழந்தைகளின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது. மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

அந்த நேரத்தில் தான் நான் திடீரென்று ஒருநாளிரவு குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே வெறி பிடித்ததைப் போல எழுதத்தொடங்கினேன். இரவு முழ்வதும் எழுதினேன். எப்படி ரயிலகள் வந்தன: போயின என்று எனக்குத் தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிக்குத் தொடங்கிய எழுத்து காலை ஆறு மணிக்குத் தான் முடிந்தது. ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல, ஏதோ ஒரு ஆசுவாசம் என்னிடம் தோன்றியது.  மனம் இளகியிருந்தது.  அதன்பிறகு ஒரு வாரகாலத்திற்குப் பிறகு மீண்டும் வாசித்துபார்த்து செம்மை செய்தேன்.

குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு கதையில் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன் இரவுப்பணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் விரிந்து கிடக்கிறது. எதிரே காட்டின் உயிர்த்துடிப்பு, மின்மினிப்பூச்சிகள், இராப்பூச்சிகளின் சங்கீதமென கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். குமாரபுரம் ஸ்டேஷனின் வெளிச்சத்தை நோக்கி அத்தனை உயிரினங்களும் கலங்கரை விளக்காக நினைத்துக் கொண்டு பாய்ந்து வருகின்றன. மின்சாரம் தடைபட்டு அந்தக் குறுக்காட்டில் இன்னொரு புதராக குமாரபுரம் ஸ்டேஷன் இருக்கிறது. அப்போது இருளிலிருந்து முளைத்து வந்தவனைப் போல ஒருவன் அவர் முன்னல் நிற்கிறான். அவன் கையேந்தியபடி நிற்கிறான். அவனுக்கு டீ கொடுக்கச்சொன்ன நாராயணன் உள்ளே ரயில் வருவதற்கான அனுமதியைக் கொடுக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மர்ம மனிதனைக் காணவில்லை.

மீண்டும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகத்தை வாசிக்கும் போது புத்தகத்திலிருந்த எழுத்துகள் அவரைச் சரித்திரத்தின் சுழலுக்குள் இழுத்துச் செல்கிறது. அங்கே அமிர்தசரஸ் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்காக நின்று கொண்டிருக்கிறார். பிரிவினைக் கலகங்களும் வன்முறைகளும் வெடித்து விட்டன. லாகூரிலிருந்து வருகிற ரயில் முழுவதும் பிணங்கள் வருகின்றன. அதைப் பார்த்த சீக்கியர்கள் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அன்வரை ஸ்டேஷன் மாஸ்டரின் வேண்டுகோளையும் மீறி இழுத்துச் சென்று கொலை செய்கின்றனர். நடந்து கொண்டிருந்த சம்பவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சானிசிங் மயங்கிச் சரிகிறார்.

குமாரபுரம் ஸ்டேஷனின் நாராயணனை அவருடைய உதவியாளர் எழுப்பி என்ன சார் அழுறீங்க? என்கிறார். நாராயணன் எழுந்து வெளியே பார்க்கிறார். பொழுது விடிந்து விட்டது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காடு சலம்பிக் கொண்டிருக்கிறது. டீ குடிக்கும் போது முந்தின நாளிரவு பார்த்த அதே மர்மமனிதன் திடீரென வந்து டீ கேட்கிறான். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனுடைய பெயரைக் கேட்கிறார். அவன் சானிசிங், அமிர்தரஸ் ஸ்டேஷன் மாஸ்டர் என்று சொல்கிறான்.

இந்தக் கதை வரலாற்றின் பக்கங்களுக்குள் சென்று இன்றைய நிலைமையின் பயங்கரத்தை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு சூசகமாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறது.

ஒரே இடம் வெவ்வேறு காலகட்டத்தின் இரண்டு எழுத்தாளர்களின் கருப்பொருளாக மாறி வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதென்பது தமிழிலக்கியத்தில் முன்னெப்போதுமில்லாததொரு விஷயம்.

இரண்டு கதைகளிலும் குமாரபுரம் ஸ்டேஷன் மாறவில்லை. அதன் ஏகாந்தம் மாறவில்லை. அதன் அழகு மாறவில்லை. ஆனால் நாற்பதாண்டு கால இடைவெளியில் சமூகத்தின் சூழல் மாறிவிட்டது. 1960-களில் சமூகம் இருந்த நிலைமையை வைத்து கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ஸ்டேஷன் கனிவின் ஒளியில் மனிதர்களைக் காட்டியது என்றால் 2002 –ல் இருந்த சமூகநிலைமையை வைத்து நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதை ஒரு நம்பிக்கைக்காக, ஒரு கருத்துக்காக மனிதர்கள் பைத்தியம் பிடித்ததைப் போல மாறி ஒருவரையொருவர் கொலை செய்வதை, குரூரத்தின் கொடிய இருளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது.  நம்முடைய இருண்டகாலத்தின் கடந்த காலப்பயணத்தை ஞாபகப்படுத்துகிறது.

குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் கு.அழகிரிசாமி காட்டுகிற மானுட கரிசனத்தின், மகத்தான அன்பின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்க வைக்கிறது.

கு.அழகிரிசாமியே! என் மூதாதையே!

நன்றி - புக் டே