Sunday 23 November 2014

இயற்கைவழி வாழ்க்கை நோக்கும் கவி

devadevan உதயசங்கர்

 

காணும்போதெல்லாம் அதிசயிக்க வைக்கிற அற்புதம் இயற்கையல்லவா? இந்த பூமியெனும் உயிர்ப்பரப்பை எப்படிப் புரிந்து கொள்வது? எத்தனை புற்கள்! எத்தனை பூக்கள்! எத்தனை செடிகள்! எத்தனை மரங்கள்! எத்தனை மலைகள்! எத்தனை கடல்கள்! எத்தனை புழுக்கள்! எத்தனை பூச்சிகள்! எத்தனை பறவைகள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனை வாழ்க்கை! எந்த ஒரு மனிதனும் மற்றவரைப் போலில்லையே! எந்த ஒருவருடைய வாழ்க்கையும் மற்றவருடைய வாழ்க்கையைப் போலில்லையே! ஆகா இந்த பூமியில் வாழ்வது பேரானந்தமல்லவா!

வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ருசித்துக் குடிக்க வேண்டாமா? இத்தனை அபூர்வமான இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தால் எத்தனை இன்பம் மனிதா? கவிஞர். தேவதேவன் இயற்கையை வாழ்க்கையின் குறீயீடாக்குகிறார். ஒன்றை மற்றொன்றால் குறிப்பது குறியீடென்றால் இயற்கையின் வழி மனிதவாழ்க்கையை குறியீடாக்கி புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

ஒரு புல்லின் உதவி கொண்டு

பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரித்தேன்

ஒரு மரக்கிளையின் உதவி கொண்டு

புள்ளினங்கள் கொஞ்சும்

ஒரு பள்ளத்தாக்கை எழுப்பினேன்

ஒரு கூழாங்க்கல்லின் உதவி கொண்டு

மலையடுக்குகளையும் அருவிகளையும் உருவாக்கினேன்

ஒரு தேன்சிட்டின் ஆலோசனை கொண்டு

விண்ணிலோர் மாளிகை அமைத்தேன்

ஒரு கண்ணீர்த்துளி கொண்டு

வானமெங்கும் கார்மேகங்களைப் படரவிட்டேன்.

தேவதேவன் தன்னுடைய கவிதைகளில் உணர்ச்சிகளின் வழியே அநுபவங்களை செவ்வியலும் புனைவும் கலந்து படைக்கும் போது வாசகனுக்கு அது புதிய கவிதாநுபவமாகிறது. அன்றாட வாழ்வின் காட்சிரூபங்களை தத்துவ தரிசனமாக்கிவிட விழையும் கவிஞர், தத்துவ தரிசனங்களை அன்றாட வாழ்வில் கண்டு வாசகனுக்குச் சொல்லுகிறது. மற்ற கவிஞர்களிடமிருந்து தேவதேவனை எது வேறுபடுத்துகிறது? சொல்லாமல் சொல்லிச் செல்லும் பாங்கும், பல பரிமாணங்கள் கொண்ட குறியீட்டுத்தன்மையும் ஆகும். மரங்களைப் பற்றிய இவருடைய கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

அறியாது

ஒரு செடியை மண்ணிலிருந்து பிடுங்கி விட்டேன்

திசைகள் அதிரும் தனது பெருங்குரலால்

அது மரமாகி விட்டது என் கையில்

அந்தரவெளியில் துடிதுடித்து

ஆதரவுக்குத் துழாவின அதன் வேர்கள்

பாய்ந்து போய் அதனை அணைத்துக் கொண்டது பூமி

கொலைக்கரத்தின் பிடிதகர்த்து

மேல் நோக்கி பாய்ந்தது புது ரத்தம்

கழுத்தில் பட்ட தழும்புடனே

பாடின தலைகள்.

என்ற கவிதையில் ஒரு உயிரின் பரிதவிப்பைச் சொல்கிறார் கவிஞர். அதே மாதிரி மனிதர்களின் பார்வையில் இயற்கையைக் காண்பதை விட்டு இயற்கையின் கண்கொண்டு நோக்கும்போது மரத்தின் உருவம் எப்படித்தெரிகிறது தெரியுமா?

மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து

தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்து கொண்டிருந்தது

இதுவரை நான் அதன் காலடி என்று நினைத்திருந்த நிலத்தை

அது தன் கழுத்தென்று சொன்னதும்

கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்.

தேவதேவனின் கவிதைகளில் புதுமையும் ஆழ்ந்த அர்த்தமும் இணைந்தே வாசகனை யோசிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு

அசையும் போது தோணி,

அசையாத போதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்.

காதலைப் பாடாத கவிஞர்கள் உண்டோ. கவிஞர் தேவதேவனும் காதலைப் பாடுகிறார். மெல்லிய ரீங்காரத்துடன் ஆரம்பிக்கும் இசை தன் உடலை ஒரு நதியென பரப்பிக் கொண்டு தன் ஆழ அகலங்களினால் மனதை நிரப்பி புத்தம் புதிதாய் மணம் வீசி ஒரு ஆழ்ந்த தியானத்தைப் போல கடலில் சென்று சேர்வதைப் போல இவருடைய கவிதையும் சாதாரணமாக ஆரம்பித்து ஆழங்களை நோக்கிப் பாய்கிறது.

காதல் என்பது ஒரு சந்திப்பு

காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்

காதல் என்பது ஒரு இறையனுபவம்

காதல் ஒரு குதூகலம்

காதலுக்குக் காலம் கிடையாது

எந்தச் சொற்களாலும்

உணர்த்தி விட முடியாதது

காதல் மட்டுமே காதலை அறியும்

காதல் கொண்ட இதயத்தில்

காதல் மட்டுமே இருக்கிறது

காதலின் தனிச்சிறப்பு அது

மரணமறியாதது

அது அதீதப் பேதமையின்

பொங்கும் இன்பம்

பௌர்ணமிப் புன்னகை

வாழ்வு தன்னைத்தானே

கண்டுகொண்டு விட்ட திகைப்புக் கொண்டாட்டம்

ஆனந்தக்கிறக்கம் தணிந்த

ஆழ்ந்த நிதானம்

பேரமைதி

மௌனம்

மீப்பெருஞ் செயல்பாட்டுக் களஞ்சியம்

அளப்பரிய செல்வம்.

இன்று முதல் வாழ்வைக் காதலியுங்கள். கவிதை பிடிக்கும். கவிதை பிடித்தால் தேவதேவனையும் பிடிக்கும்.

நன்றி_ அகில இந்திய வானொலி நிலையம்

Thursday 20 November 2014

மழை வரும் பாதையில் மலர்ந்த கவிஞர் கிருஷி

உதயசங்கர்Krishi

மனிதர்கள் தான் இந்த உலகத்தைப் பற்றிய விளக்கம் அளிக்கிறார்கள். அவர்களே இந்தப் புவியில் உள்ள பொருட்களுக்கும் உயிர்களுக்கும் இடையில் உள்ள உறவுகளை இனம் காணுகிறார்கள். இல்லையென்றால் பொதிகையில் தோன்றிய காலத்திலிருந்து எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணிக்கு தான் யார் என்று தெரியாது. ஒரு ஆலமரத்துக்கு தான் ஆலமரம் என்று தெரியாது. ஒரு மல்லிகைப்பூவுக்கு தான் மல்லிகை என்று தெரியாது. வானத்துக்குத் தான் வானம் என்றோ மழைக்கு தான் மழை என்றோ நேற்று பெய்த மழையில் முளைத்த புல்லுக்கு தான் ஒரு சிறிய புல் என்று கூடத் தெரியாது. நாம் வீட்டில் வளர்க்கும் டைகருக்கு தான் ஒரு நாய் என்றும் தெரியாது. ஆக மொத்தத்தில் இந்த உலகத்தில் எல்லாம் அதது பாட்டுக்கு இருக்கின்றன. இணைந்தும் பிரிந்தும் தங்கள் வாழ்வதற்கேற்ற பரிணாமச்சூழலை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதன் தான் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் இடையில் உள்ள உறவுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். அவன் தான் மரத்தை மரம் என்று சொல்கிறான். அவன் தான் அதை வேப்பமரம் என்று வகை பிரிக்கிறான். மனிதன் இல்லையேல் உறவுகள் இல்லை.

கலைப்படைப்புகள் இந்த உறவுகளைப் பற்றியே பேசுகின்றன. இந்த உறவுகளை இன்னும் மேன்மையுறச் செய்ய மனித மனதின் அழகையும், சந்தோஷத்தையும், துக்கத்தையும், துன்பத்தையும் அசிங்கத்தையும் குரூரத்தையும், தியாகத்தையும், பேராசையையும் சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்கின்றன. மனிதர்களை மகான்களாக்கவே சதா கலைப்படைப்புகள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கவிஞர் கிருஷியும் தன்னுடைய கவிதைகளில் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அவர் புரிந்து கொண்டதை நம்மிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறார்.

நிறை சூலியாய் நிற்கும்

வேம்பின் வாசத்தில்

வயல்வெளிக்கு மேல்

கை வீசி வரும்

நிலவைப் பார்த்தபடி

குத்த வைத்திருக்க வேண்டும்

கொஞ்ச நேரம் முதுகைச்

சாய்த்தபடி மண்சுவற்றில்.

என்று முடிகிற கவிதையிலாகட்டும்,

என்றாலும்

இன்னும் ஒளி

வற்றி விடவில்லை

பனித்துளியில்

காற்றில் அசைகிறது புல்

நிலவை வருடியபடி

சிறகடிக்கிறது

வண்ணத்துப்பூச்சி

இசையின் லயத்துடன்.

இயற்கையை வாசகருக்கு விளம்புகின்ற கவிஞர் கிருஷி தன்னைப்பற்றியும் சொல்கிறார் இப்படி

ரசம்

புழுதியில் கிடக்கும் வெறும்

கண்ணாடிச்சில் என்று தானே

நினைக்கிறாய்

ஒரு துண்டு கண்ணாடி என்றாலும்

முகம் காட்ட

மறுப்பதில்லை ஒருபோதும்

நண்பனே..ரசமற்ற

கண்ணாடி அல்லவே நான்

சிற்றுயிரான எறும்புகளுக்கு உள்ள நேசம் கூட மனிதர்களிடையே இல்லாமல் போனதையும் வாழ்வின் அவசர கதியில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டு போவதைப் பற்றி ஏதேனும் ஒரு கவிதையில் சொல்கிறார். எறும்புகளின் வாழ்நிலை பற்றிச் சொல்லிக் கொண்டே வரும் கவிஞர். கிருஷி,

பனித்துளியின் உயிர்க்கருவோ

இந்த எறும்பின் வெண்முட்டைகள்

மழையை முன்னுணர்ந்து

புலம்பெயரும் ஞானம்

சிற்றெறும்பின் மூளைக்கு

எங்ஙனம் வாய்த்தது

வரிசை தவறுவதில்லை-என்றும்

தனிமைத்துயருமில்லை

ராஜ்யபரிபாலனம்- இதுபோல்

எங்கும் கண்டதில்லை

எவ்வளவு காலப்பழக்கம் நமக்குள்

ஏதேனும் ஒரு புள்ளியில்கூட

சந்திக்க முடிவதில்லையே

இப்போதெல்லாம் நண்பனே.

இவருடைய கவிதைகளில் மழையும் வானும் நட்சத்திரங்களும், பனித்துளியும், நதியும், குழந்தைகளும் பூக்களும் மீண்டும் மீண்டும் வந்து கவிஞரின் பரிசுத்தமான மனதின் ஏக்கங்களைப் பேசுகின்றன.

பொழுதடைந்த பின்

கரிசல் காட்டிலிருந்து திரும்பிய

எங்கம்மா சொன்னாள்

பாம்படம் அசைய

இன்னும் ஒரு மழை

பெஞ்சா போதுமய்யா

மொளச்ச பயிர்

பிழைச்சுரும்

இவருடைய கவிதை மழையில் நனையும்போது காய்ந்து வறண்ட நம் மனசிலும் மொளச்ச பயிர்கள் பிழைச்சிரும். இவருடைய கவிதைகளைப் பற்றி கவிஞர். கல்யாண்ஜி சொல்வது எவ்வளவு அழகாகப் பொருந்தி வருகிறது!

தன்னைத்தானே ஏந்திக் கொண்டு கவிஞர்.கிருஷி அவருடைய கவிதைகளில் வருகிறார். எந்த ஒரு வரியின் மீதும் அவருடைய சாயல் இருக்கிறது. ஒரு எளிய ஆரஞ்சு பட்டுப்பூச்சி போல நம் வீட்டு அந்தி மந்தாரைச் செடிகளின் மீது பறந்து விட்டுச் செல்கிறார். புதுத்தீப்பெட்டியின் முதல் குச்சி உரசலுக்குப் பின் மருந்துப் பட்டியில் தீக்குச்சியின் ஒற்றை உரசல் பதிந்திருப்பது போல ஒரு வரி. அரசுப்பொது மருத்துவமனைப் பக்கத்து வேப்பமர நிழலின் கீழ் கவலையோடு உட்கார்ந்திருக்கிற ஒரு பெரிய மனுஷியின் பக்கத்தில் அவள் கொண்டு வந்திருக்கிற தண்ணீர் பாட்டிலுக்குள் புகுந்து வெளியேறுகிற மாதிரி சில வரிகள். உல்லாசப் பயணத்துக்கு அழைத்துப்போன பள்ளிக்கூடப் பிள்ளைகளில் மற்ற பிள்ளைகள் எல்லாம் ஓடியாடி இரைச்சலுடன் விளையாடிக் கொண்டிருக்க, ஓடுகிற தண்ணீருக்குள் கிடக்கும் கூழாங்கற்களைப் பார்த்து அசையாது அமர்ந்திருக்கும் ஒரே ஒரு பையனின் சிகையைக் கோதி விடுகிற ஆசிரியர் போல நெகிழ்ந்து போன வரிகள் சில. அனறைக்கு நிகழ்ந்த அடையாள வேலை நிறுத்தத்தின் போது எழுப்பிய கோஷங்களை, சாலைத்தெரு திருப்பத்தில் டீ குடித்துக் கொண்டே மீண்டும் வாசித்துப் பார்ப்பது போலச் சில……..

வாழ்க்கையைப் போலவே கவிஞர் கிருஷியின் கவிதைகளும் வசீகரமானவை. சுழித்தோடும் தாமிரபரணியின் வண்ணக்கனவுகள் போல.

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Tuesday 18 November 2014

மௌனத்தின் எதிர்ப்பதமாய் மாறிய கவிஞன்

AthavanTheedchanya உதயசங்கர்

அறிவியலும், கலை, இலக்கியமும், தத்துவங்களும் இந்தப் பூமியில் ஏன் பிறந்தன. மனிதகுலம் நோய்நொடி, வறுமை, துயரம், ஏற்றத்தாழ்வுகள் இன்றி எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்கவே இவை பூமியில் பிறந்தன என்றால் மறுப்பாருண்டோ. இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, பேச்சு, என்று பல வடிவங்கள் இருக்கின்றன. எல்லாவடிவங்களிலும் கவிதையே ஆகச் சிறந்ததென்றும் ஆதிக் கலை வடிவமென்றும் சொல்கிறார்கள். கவிதை மொழியின் செறிவும், அழகும், சேர்ந்து இசையின் சாயலோடு பிறக்கும் வடிவம். லயமும் சுதியும் அர்த்தபாவத்துடன் வாழ்வைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி ஆழமாக விளங்க வைக்கும் அதிர்வுச்சுழல். இடைவிடாத வாழ்வலைகளிலிருந்து கவிஞன் தன் உள்ளங்கையில் எடுத்த குட்டி அலையின் இரைச்சல். விரிப்பினும் அகாதமாய் விரியும். குறுக்கினும் கடுகெனவே குறுகும் அதிசய நிழல். வெயிலில் அலைந்துதிரிந்து வந்து சேர்பவர்களுக்கு குளிர்ந்த மண்பானை நீராகும் குளிர்மை. எப்படியோ கவிதையோ, கதையோ, கட்டுரையோ, சக மனிதர்களிடம் உரையாடக் கிடைத்த ஒரு விசேஷமான கருவி. இந்த உரையாடல் வழியே கலைஞனோ, கவிஞனோ, கதைஞனோ, தான் கண்ட வாழ்வநுபங்களின் சாராம்சத்தைச் சொல்ல முயற்சிக்கிறான்.

பலருக்கு கலையோ, கதையோ, கவிதையோ, வேறு வேலையில்லாதவர்களின் பொழுதுபோக்கு. ஆனால் நம் வாழ்வின் அணுகணமும் கலையின்றி இருப்பதில்லை. உண்பது உடுத்துவது உறைவது உடை பழக்கவழக்கம், என்று எல்லாமும் கலாப்பூர்வமானதாகவே இருக்கிறது. இந்த வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத கலை இந்த வாழ்க்கையைப் பற்றித் தானே பேசும். அப்படி பேசுகிற கவிஞனாக ஆதவன் தீட்சண்யா பிரகாசிக்கிறார். அவர் மௌனத்தின் உள்ளே அடர்ந்திருக்கும் வலி, வேதனை, மகிழ்ச்சி, எல்லாவற்றையும் நம்மோடு உரத்த குரலில் பகிர்ந்து கொள்கிறார்.

மடக்கி மடக்கி

மாடி வீடு கட்டினோம்

வாழ்க்கை வற்றி

வராண்டாவில் முடிந்தது

மத்திய தரவர்க்கத்தின் ஆசையின் விளைவை பகிடி செய்கிறார் ஆதவன் தீட்சண்யா.

முற்றுப்பெறாத டைரிக்காகவும்

அத்யந்த சினேகிதர்களுக்காகவும்

வெளுக்கப்போட்ட சட்டையில்

எடுக்கப்படாது நைந்த துண்டுச்சீட்டாக

செய்திகளிருக்கும் இன்னமும்

செத்தவர்களிடத்தில்

……………………………………………………………..

பேசி விட்டுச் சொல்கிறேன்

எப்படி அவர்கள் வாழ்ந்தார்களென்றும்

நாம் எப்படி இறக்கக்கூடாதென்றும்

என்று இறந்தவர்களிடம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்டு சொல்வதாய் சொல்கிறார் கவிஞர். இயங்கிக் கொண்டிருக்கும் வரை தானே மனம். இயங்காமல் நின்று விட்டால் அது ஜடமல்லவா. இதை குறுங்கவிதையாகச் சொல்கிறார் ஆதவன் தீட்சண்யா.

மனம்

அலையும் பெண்டுலத்திற்கு

அமைதி தேவையாம்

கடிகாரம் நின்று விடுமே.

சமூகத்தின் நிலவும் பெண்குழந்தைகளுக்கு எதிரான மனநிலை கண்டு கொதித்தெழுகிறார் ஆதவன் தீட்சண்யா. அவருடைய வார்த்தைகளில் முரணும், நகையும், கோபமும் கொப்பளிக்கிறது.

ஆத்தா மகமாயி

உம் புண்ணியத்தில பையனாப் பொறந்துட்டா

கெடா வெட்டிப் பொங்க வைக்கிறேன்

இது பக்தனின் குரல். இதற்கு பதில் சொல்கிறாள் ஆத்தா மகமாயி

ஏண்டா கும்பிடறதுக்குப் பொம்பிளசாமி

கொழந்த மட்டும் ஆம்பளயா

எனக்கு உங்கெடாவும் வேண்டாம்

ஒரு மயிரும் வேண்டாம்.

ஆத்தா மகமாயியாலேயே இந்தக் கொடுமையைத் தாங்க முடியவில்லை. அதே போல ஆதவன் தீட்சண்யாவின் எழுதுகோல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் இக்காலத்தில் விவசாயத்தைப் பற்றி எழுதியுள்ள கவிதையைக் கேளுங்கள்.

ஆறும் குளமும் அலையும் கடலும்

அவிஞ்சு கிடக்குது பாலையா

ஓடும் மேகத்த ஒதைச்சி இழுத்துவா

உலகம் குளிரணும் பெருமழையில்

என்று மேகங்களை அடித்து இழுத்து வந்து வயக்காட்டில் மழை பொழியச் செய்து கரம்பக்காடாக இருக்கும் மண்ணை திமிறும் காளைகளைப் பூட்டி தலைகீழாகப் புரட்டணும் என்கிறார். அதோடு நம்முடைய முப்பாட்டன் வைத்திருந்த பாரம்பரிய விதைநெல்லை எடுத்து காத்தாட்டம் வீசி பயிர் வளர்க்கணும். பூச்சிப்புழு அரிக்கத்துடிக்கும் பயிரைப் போராடித்தான் வளர்க்கணும்.

பயிருக்காகவே வயலிருந்தாலும்

பச்சை நிறத்துல களைங்களூமிருக்கும்

அட எழுந்து வாங்கடா வெள்ளாமக்காட்டுக்கு

களையப் பிடுங்கணும் கவனமா.

அறுவடைக்காலம் நெருங்கி வரும் போது கதிர் அறுக்கும் அருவாளைத் தீட்டிப் பதமாக வைக்க வேண்டும்.களத்து மேட்டில் கதிர்கள் மலையாகக் குவியணும்.

அட அள்ளியெடுங்கடா ஆளாளூக்கு

அவரவர் தேவைக்கு வேண்டியதை

கொண்டு வாங்கடா சாட்டை சவுக்கை

சொடுக்கி முடுக்கணும் காலத்தை.

என்று ஒரு விவசாயக்காலத்தை நம் முன் கொண்டு வந்து காட்டுகிறார். கவிதை ஒன்றை பலவாறாக அர்த்தப்படுத்தும் என்ற நோக்கில் வாசிக்கும்போது இந்தக் கவிதையிலும் அவரவர் வேறு வேறு அர்த்தங்களையும் உணரமுடியும். ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள். ஆம். மௌனங்களை எதிர்ப்பதமாய் மாற்றி உரத்தகுரலில் பேசும் ஒரு கவிஞரையும் அவருடைய கவிதைகளையும் கண்டு விட்டோம் என்று.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 16 November 2014

தனித்துவமிக்க பெண்குரல்

உதயசங்கர்

vennila

இன்றிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப்பாடல்களை எழுதிய புலவர்களுள் பெண்பால் புலவர்கள் ஏராளம். அப்போதே பெண்கள் கல்வி கேள்விகளில் சிறந்து கவிதை இயற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்திற்குப் பின்னர் காரைக்காலம்மையார், ஆண்டாள் குறிப்பிடத்தக்க கவிஞர்களாக தமிழிலக்கிய வரலாற்றில் பதிவானார்கள். அதன் பிறகு நீண்ட இடைவெளி. 90 களுக்குப் பின்னால் உலகளாவிய அளவில் உருவான இலக்கியப் போக்குகளின் தாக்கத்தில் இப்போது நவீன கால தமிழிலக்கியத்தில் பெண் கவிஞர்களின் குரல் பதிவாகத் தொடங்கியுள்ளது.

இப்புவியில் சரி பாதியாகத் திகழும் பெண்கள் அந்தச் சமத்துவத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. தாங்கள் யார்? இந்தப் பூமியில் தங்களுக்கான இடம் என்ன? தங்களின் பங்களிப்புகள் என்று எதுவும் இல்லையா? மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு தங்களுடைய பரிணாம வளர்ச்சி என்ன? சமூகத்தில் இனவிருத்தியைத் தவிர வேறு முக்கியத்துவம் தனக்கில்லையா? சம மதிப்புடன் நடத்தப்படுகிறோமா? சமமான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதா? இப்படி ஏராளமான கேள்விகள் பெண்களுக்குத் தோன்றின. அதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தற்காலத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தங்களுக்கான அடையாளத்தைத் தேடும்போதே பெண்கவிதை உருவாகிறது. இந்த உலகத்தைப் பற்றி, தங்களைப் பற்றி, தங்களுடைய தேடல் பற்றி தங்களுடைய விடுதலை பற்றி, பாலினச்சமத்துவம் பற்றியெல்லாம் பெண்களுக்கென்று பிரத்யேகமான பார்வை இருக்கிறது. அவர்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய உலகத்தை வெளிப்படுத்தத் துவங்கினார்கள். அப்படி எழுதிக் கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் அ.வெண்ணிலா முக்கியமானவர்.

தேவதையைப் போல் வேடமணிந்த

சிறு வயது புகைப்படமொன்று

உங்கள் சேமிப்பில் இருந்தால்

நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்

பத்து வயதில்

முறிந்து விழும் சிறகுகள்

பனிரெண்டு வயதில்

பால்பற்கள் விழுந்து

விஷப்பற்கள் முளைக்கும்

குழந்தை முகம் மாறும்

பதினைந்து வயதில்

விருப்பத்தைப் பொருட்படுத்தாது

சாத்தான் உங்களைத் தேடும்

இருபது வயதில்

குழப்ப ரேகைகள்

முகத்தில் வளரும்

பிறகு

புன்னகைக்க மறப்பீர்கள்

முகம் இறுகிப் பாறையாகும்

தலையில் இரண்டு கொம்புகள் முளைத்து

முட்டிக் கொண்டிருப்பீர்கள்

எதிர்ப்படுபவர்களை

ரத்தம் குடித்து

ரத்தம் கொடுத்து

விகாரமாகிப் போன

உங்கள் முகத்தின் கோரம்

அருவெறுப்பூட்டும்

நிச்சயம் உங்களுக்கு உதவக்கூடும்

உங்களின் சிறுவயது புகைப்படமொன்று.

காலம் குழந்தைமையின் முகத்தைக் கோரமாக்கி விடும் கொடூரத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.வெண்ணிலா. அன்றாட வாழ்வின் நெருக்கடிகளில் சிக்கிய பெண்மொழி தனக்கான தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறது.

கை நிறைய மௌனத்தை அள்ளி

இரவின் முகத்தில் வீசினேன்

இருளை ஒரு கோப்பைத் தேநீராக்கி

பருகச்சொல்லித் தந்தது இரவு.

கவிதை மட்டுமே என்னிடம் நிரந்தரக் கையிருப்பாக உள்ளது. வாழ்க்கை உருட்டித்தள்ளி விடும் மேடு, பள்ளங்களில் விழுந்து எழும் நேரங்களில் ஒவ்வொரு முறையும் இழப்பவை ஏராளம். என்னைத் தொலைக்கும் உறவுகள், நான் தொலைக்கும் நண்பர்கள், சில பிறப்பு, சில இறப்பு, துக்கம், அமைதி, மௌனம், என என்னைக்கடக்கும் ஒவ்வொரு கணத்திலும் கவிதை என்னுடனே பயணிக்கிறது. என்று சொல்லும் வெண்ணிலா குழந்தைகளின் உலகம் பற்றி எழுதியுள்ள கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை.

கால் தவறி

லேசாக மிதித்து விட்டேன்

பொம்மையை

அடித்ததை விட

அதிகமாக அழுகிறாள்

குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்ட கவிஞரான வெண்ணிலா. குழந்தைகளின் உலகத்தை நுட்பமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்.

அழும் பொம்மைகளை

குழந்தைகளுக்குப் பிடிக்காது

அழும் குழந்தைகளுக்கு

பிடித்து விடுகின்றன

பொம்மைகளை.

தாயும் குழந்தையுமாக உரையாடல் வடிவாக வெண்ணிலா எழுதியுள்ள கவிதைகளில் பெண்ணுலகம் பற்றிய அவரது சிந்தனைகள், கேள்விகளாக, தெறிப்புகளாக வெளிப்படுகின்றன. இந்தப் பன்முகக்குரலே வெண்ணிலாவின் தனித்துவம். அதுவே அவரை தமிழின் முக்கியமான கவிஞராக அடையாளப்படுத்துகிறது.

புறா ஏம்மா உயரமா

பறக்க மாட்டேங்குது

ஏன் கண்ணு

பாரு பயந்து பயந்து

மாடி மேல் உட்கார்ந்துக்கிது

இது வீட்டுப்புறாப்பா

இவ்வளவு தான் பறக்கும்

வீட்டுப்புறான்னா

உயரப்பறக்காதா

ஆமாம் கண்ணு

பறக்க முடியும்னு வீட்டுப்புறாக்கு

மறந்திடுச்சி

உன்னையும் என்னையும் போல.

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Wednesday 12 November 2014

காலவெளியில் நடமிடும் கவிதைகள்

உதயசங்கர்

devathassan

மனித குல வரலாற்றில் ஆதியில் தோன்றிய கலை வடிவம் குகைச்சுவர் ஓவியங்கள் தான் என்றாலும் மனிதர்கள் ஆதிச்சடங்குகளின் போது உச்சரித்த மந்திரச்சொற்களே கவிதைக்கான மூலம் எனலாம். திரும்பத் திரும்ப உச்சரித்த ஒரே மாதிரியான சொற்கள் மனதில் விளைவித்த உளவியல் மாற்றமே மந்திரச்சடங்குகளும் மந்திரப்பாடல்களும் உருவாகக் காரணம். இந்த மந்திரப்பாடல்களிலிருந்து வாழ்வியல் பாடல்களும் பின்னர் கவிதைகளும் தோன்றின என்று மானிடவியலாளர்கள் கருதுகின்றனர். எனவே ஆதியில் தோன்றிய பாடல்களே தற்போது நவீனக்கவிதைகளாக மாறியிருக்கின்றன. பாம்பு தன் சட்டையை உரித்து உரித்து தன்னைப் புதுசாக்கிக் கொள்வதைப் போல கவிதையும் கால,தேச, வர்த்தமானக்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தில் கவிதை மொழியின் ஓசை நயத்துடன் கூடிய சந்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இடைவெளிகள் நிறைந்த மௌன வாசிப்பின் வழியே காட்சிகளைப் படைத்து நம் புனைவின் எல்லைகளை விரிக்கின்றனர்.இதோ தமிழின் முக்கியமான கவிஞரான தேவதச்சன் தன் கவிதையில் காட்டும் இடைவெளியப் பாருங்கள்.

காற்றில் வாழ்வைப்போல

விநோத நடனங்கள் புரியும்

இலைகளைப் பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்

இலையைப் பிடிக்கும் போது

நடனம் மட்டும் எங்கோ

ஒளிந்து கொள்கிறது.

அந்த வாழ்வின் நடனங்களைப் புரிந்து கொள்ளவே மீண்டும் மீண்டும் மனிதன் இலைகளைப் பிடிக்கிறான் இல்லையா? நிலக்காட்சிகளும் யதார்த்தமான அன்றாடக் காட்சிச்சித்தரிப்புகளும் தேவதச்சனின் கவிதையை எளிமை போல காட்டும் ஈர்ப்பு விசைகள். அந்த ஈர்ப்பின் வழியே நம்மை ஆழ்கடலின் அதிசயங்களைக் காணச்செய்கிறார்.

கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி

வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்

கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்

தொலைதூரத்து எந்திரம் ஒன்றின் குது குதுகுது மந்திரம்

பருத்தி பறித்து மடித்துணியில் துருத்திக் கொண்டிருக்கும் பார்வதி

அவளோடு சேர்ந்து குனிந்திருக்கும் அத்துவானவெளி

யாரும் அழைக்காது திரும்பிக் கொண்டிருக்கும் காலம்.

இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் காலம். மாறிக் கொண்டேயிருக்கும் காட்சிகள். வாழ்க்கை ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. உறைந்து நிற்பதுமில்லை. ஆனால் கவிஞருக்குக் காட்சிப்பிழையாக காலமும் காட்சியும் உறைந்து நின்று வேறொரு காலமும் காட்சியும் தெரிகிறது.

காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை

காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்

காட்டைத்தூக்கிக் கொண்டு அலைகின்றன

வெட்டவெளியில் ஆட்டிடையன் ஒருவன்

மேய்த்துக் கொண்டிருக்கிறான்

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை

மற்றும் சில ஆடுகளை.

கனடா நாட்டு இலக்கிய விருதான விளக்கு விருதையும், இயல் விருதையும் தன் கவிதை நூல்களுக்காகப் பெற்றுள்ள கவிஞர் தேவதச்சன் உலகின் உள்ளார்ந்த உண்மையை உணர்வதற்காக தன் புனைவுகளின் மூலம் சில ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறார். நாம் தினசரி கண்ணாடி பார்க்கிறோம். கண்ணாடி பார்க்காதவர்கள் உண்டா என்று நீங்கள் கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? இப்போது கவிஞர் தேவதச்சன் திரும்பவும் கேட்கிறார் உண்மையில் நீங்கள் கண்ணாடியைத் தான் பார்க்கிறீர்களா?

எனக்கு ஏழுகழுதை வயசாகியும்

கண்ணாடியை நான் பார்த்ததில்லை

ஒவ்வொரு முறையும் எதிரில்

நிறகையில் என் முகரக்கட்டை தான் தெரிகிறது.

கண்ணாடியைக் காணோம்

உடைத்தும் பார்த்தேன்

உடைந்த ஒவ்வொரு துண்டிலும்

ஒரு உடையாத கண்ணாடி

லேசான வெட்கம் எனக்கு

பார்க்க முடியாத கண்ணாடியைத் தான்

பார்க்க முடிகிறது.

ஆக யாரும் கண்ணாடியைப் பார்ப்பதில்லை. கண்ணாடியில் தன்னைத்தான் பார்க்கிறார்கள். தன்னைப் பார்க்காமல் வெறுமனே கண்ணாடியைப் பார்க்க முடியுமா? முடிந்தால் உண்மையை உணர முடியும். எல்லாமனிதர்களுக்கும் உள்ள பேராசை என்னவென்றால் தான் நிரந்தரத்துவம் பெற வேண்டுமென்பது தான். முடிவிலாத இந்த உலகத்தில் மனிதன் மட்டுமே தான் ஏதேனும் ஒரு வகையில் என்றென்றும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த உலகத்தின் படைப்புகள் அனைத்தும் இந்த ஆவலின் விளைவாக எழுந்தவை தான்.

சாய்வாக நான் எறிந்த

ஓட்டுச்சில்

நடனமாடுகிறது தண்ணீரில்

அந்தச் சின்ன விநாடியில்

என்னோடு சேர்ந்து

எல்லாக்காடுகளும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தன

தண்ணீரே தண்ணீரே

உன்னைத் தொட்டுத் தொட்டுப்

பறக்கும் கல்பூச்சியின்

கல்லைத்தான்

உன்னால் பிடிக்க முடியும்

அது உன்மேல் தூவிய

எழுத்துகளை

என்ன செய்ய முடியும்

உன்னால் என்ன செய்ய முடியும்?

காலத்தின் ஓட்டத்தில் படைப்பாளி மறைந்து போகலாம் ஆனால் அவனுடைய படைப்புகள் என்றும் மறையாது. அது தான் அவன் காலத்தின் முன் வைக்கும் சவால். அந்தச் சவாலை கவிஞர் தேவதச்சனின் கவிதைகள் எதிர்கொண்டு காலவெளியில் நடமிடுகின்றன.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 9 November 2014

குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்ள ஒரு கவிஞன்

உதயசங்கர்

MukundhN

நமது சமூகத்தில் சரியாகப் புரிந்து கொள்ளப் படாதவர்கள் குழந்தைகள். பெரும்பாலும் நாம் குழந்தைகளை பயிற்சி கொடுத்து பழக்குகிறோம். சர்க்கசில் பழக்கப்படுத்துகிற விலங்குகளைப் போல. குழந்தைகள் இந்த பூமியின் புத்தம் புது மலர்கள் என்பதையோ அவர்கள் பூமியின் வண்ணக்கனவுகள் என்பதையோ எதிர்காலத்தின் சொந்தக்காரர்கள் என்பதையோ மறந்து போகிறோம். குழந்தைகள் குட்டி மனிதர்களே. குழந்தைகளின் மனவுலகம் ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்தது. தரையில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வரிசையைக் கண்டு குதூகலிக்கிற மனம். தீப்பெட்டிகளைக் கோர்த்து ரயிலாக்கி அந்த ரயிலில் சென்னை, மும்பை, டெல்லி, என்று பயணம் போகிற மனம். கைகளினால் ஸ்டியரிங் செய்து பஸ் ஓட்டும் சந்தோசம். மற்றவர்களுக்கு சாதாரணமாய் தெரிகிற ஒன்று குழந்தைகளுக்கு அசாதாரணமாய் தெரியும் நாமும் அந்த அற்புதங்களைக் கடந்து வந்தவர்கள் தான். ஆனால் வாழ்க்கை நெருக்கடியில் நம்முடைய குழந்தைத்தனத்தை இழந்து விட்டோம். குழந்தைகள் ஒரு போதும் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. அவர்களுடைய டூ வும் சேக்கா வும் நிரந்தரமானதில்லை. குழந்தைகள் அன்பும் கருணையும் மிக்கவர்கள். இயல்பிலேயே மிக நல்லவர்கள். இந்தக் குழந்தைகளின் அதிசய உலகத்துக்குள் பெரியவர்களான பிறகு நுழைவதென்பது அவ்வளவு எளிதானதில்லை. ஏனெனில் பெரியவர்களின் உலகம் பெரிதும் பொருளியல் சார்ந்தது. அந்த உலகத்தில் எல்லாம் அவசரம். ஆனால் கவிஞர். முகுந்த் நாகராஜன் மிக எளிதாக குழந்தைகளின் உலகத்துக்குள் சென்று அங்கிருந்து முத்துகளையும், வைர, வைடூரியங்களையும் எடுத்து வருகிறார்.

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போது தான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கே தான் இருக்கிறதாம்

இதெல்லாம் ஒரு காரணமா…?

சரிதானே. ஓடும் பஸ்ஸில் ஜன்னல் சீட் வழியே பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கும் மரங்களையும், கட்டிடங்களையும் இப்போது தான் பார்க்க வாய்ப்பு வந்தது. அதற்குள் இறங்கு என்றால் வீடு அதற்குள் வர வேண்டுமா? என்று குழந்தை ஆதங்கப்படத்தானே செய்யும். குட்டி மனிதர்களான அவர்களைப் பற்றிய முகுந்த் நாகராஜனின் ஒரு குட்டிக் கவிதையைக் கேளுங்களேன்.

குட்டி

குட்டித் தலையணை, குட்டிப்போர்வை

குட்டி டம்ளர் மற்றும்

குட்டிக் கொட்டாவியுடன்

குழந்தைகள் உருவாக்குகிறார்கள்

ஒரு குட்டி உலகத்தை

அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு

குட்டிக் கவளங்களைச் செய்யும்

பயிற்சியைத் தருகிறார்கள்

இந்த குட்டி உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அதில் வளர்ந்து வரும் குழந்தைகளின் உளவியல் எப்படி இருக்கும்? குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது எல்லா வீடுகளிலும் அதை எடுக்காதே… அங்கே வைக்காதே.. உடைச்சிராதே கிழிச்சிராதே கீழே போட்டுராதே என்று குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் விதமாகவே பெரியவர்கள் பேசுகிறார்கள். இது குழந்தைகளைப் பாதிக்கவும் செய்கிறது. இந்தப் பழியிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தைகள் ஏதேதோ சொல்கிறார்கள். இதோ கோப்பையை உடைத்த ஒரு குழந்தை என்ன சொல்கிறதென்று கேளுங்கள்.

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை

விளையாட்டில் வீட்டுப்பொருட்களை

காலம் காலமாக

உடைத்து வருகின்றனர் குழந்தைகள்

உடைந்த சத்தத்துக்கும்

ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்

நடுவில் இருக்கும் மௌனத்தில்

சிதறிய துண்டுகளில் இருந்து

தப்பிக்கும் வாக்கியங்களை இயற்றுகிறார்கள்

போனவாரம் கண்ணாடிக்கோப்பை ஒன்றை

கை தவறி உடைத்த அதிமதுரா

அவள் அம்மாவுக்கு

சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சி

என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்

உடைந்த கோப்பை இருந்த இடத்தில்

அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து

வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்

காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.

கவிஞர் முகுந்த் நாகராஜனின் நுட்பமான கவித்துவமான பார்வைக்கு இதை விட என்ன வேண்டும்? பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகளை இந்தச் சமூகத்தில் வாழ்வதற்குத் தகுதியானவர்களாக்குவதற்காகவே சிரமப் படுகிறார்கள். குழந்தைகள் இதைப் புரிந்து கொள்ள மாட்டேனென்கிறார்களே என்பது தான் அவர்களுடைய ஆதங்கம். ஆனால் கவிஞர். முகுந்த் நாகராஜன் பெரியவர்களைக் கவலைப்பட வேண்டாம் என்கிறார். அவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்வார்கள் என்கிறார். எப்படி என்று கேட்க நினைக்கிறீர்களா?

விளையாட்டாய்

ஓடுவது, துரத்துவது

வீசி எறிவது

குறி பார்த்து அடிப்பது

பிடிப்பது, தப்பிப்பது

மறைந்து கொள்வது

சுற்றுவது, சறுக்குவது

மூச்சு வாங்குவது என

விளையாடி வாழ்க்கைக்குத்

தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்

சிறுவர், சிறுமியர்.

உண்மை தானே. யாரும் துணியாத ஒரு புதிய உலகைப் பற்றி எழுதிய கவிஞர். முகுந்த் நாகராஜனை வாழ்த்துவோம்!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 2 November 2014

குழந்தைகளும் நோய்களும்

உதயசங்கர்

child-obesity

பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் எப்போதும் விளம்பரப்படங்களில் வருகின்ற குழந்தைகளைப் போல புஷ்டியாக, சிரித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குழந்தைகள் அழுதாலே டென்ஷன் ஆகிற அப்பா, அம்மாக்கள் நிறைய. இப்படி இருக்கும்போது ஏதாவது நோய் வந்து விட்டால் என்ன ஆவது? குழந்தைகளின் மூக்கு ஒழுகக்கூடாது. சளி பிடிக்கக்கூடாது, இருமல், தும்மல் வரக்கூடாது, வயிற்றாலை போகக்கூடாது. காய்ச்சல் வரக்கூடாது. கொடுப்பதையெல்லாம் சாப்பிட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டு சிரித்துக் கொண்டு அப்பா, அம்மா தூங்கும்போது தூங்கி அவர்கள் எந்திரிக்கும்போது எழுந்து எல்லாக்கடமைகளையும் ஒழுங்காகச் செய்து முடிக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைக்கிற பெற்றோர்கள் ஒன்றை முக்கியமாக மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் குட்டி மனிதர்கள். அவர்களுக்கென்று விருப்பு, வெறுப்புகள், வெளிப்பாடுகள்,எல்லாம் அவர்களுக்கென்றே பிரத்யேகமான மொழியில் வெளிப்படுத்தவே செய்வார்கள். வெளிக்காற்றில் சென்று வந்தபிறகு ஜலதோஷம் பிடிக்கிறதா? பெற்றோர்கள் பதட்டப்படக்கூடாது. புதிதாகக் கொடுத்த உணவு பிடிக்காமல் வயிற்றாலை போகிறதா பதறக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல், தோன்றி விட்டதா. டாக்டரிடம் உடனே ஓடக்கூடாது. அப்புறம் என்ன செய்ய? முதலில் சந்தோஷப்படுங்கள். உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு ராணுவம் வேலை செய்யத் தொடங்கி விட்டது. பாதுகாப்பு படைவீரர்கள் யுத்தம் நடத்தத்தொடங்கி விட்டார்கள். அவர்களுடைய யுத்தத்தின் விளைவே இந்தச் சளி, இருமல், தும்மல், காய்ச்சல், வயிற்றாலை எல்லாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

யோசித்துப்பாருங்கள். தாயிடமிருந்து பிரிந்து இந்தப்பூவுலகிற்கு வந்ததிலிருந்தே குழந்தைகள் எண்ணற்ற வைரஸ், பாக்டீரியாக்களினால் பாதிக்கப்படத்தான் செய்கிறார்கள். வளர்ந்த மனிதர்களே வாழத்தகுதியானதாகவா நமது ஊர்களும், நகரங்களும் இருக்கின்றன. தூசு, சாக்கடை, கலப்படம், ஒலிமாசு, புகை, குப்பை, கழிவுகள், என்று ஊரே ஒரு குப்பைத்தொட்டி போலத்தானே இருக்கிறது. இதிலிருந்து பிறக்கும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான வைரஸ்கள் ஊரெங்கும் பரவத்தானே செய்யும். அவை பாஸ்போர்ட், விசா, இல்லாமல் எல்லோர் உடலுக்குள்ளும் சென்றடையத் தான் செய்யும். ஆனாலும் எல்லோரும் நோய்வாய்ப்படுவதில்லை. காரணம் நம்முடைய வலிமையான நோய் எதிர்ப்புசக்தி தான். அதேதான் குழந்தைகளுக்கும் நமது உடலின் இயற்கையான உள்கட்டமைப்பான அந்த நோய் எதிர்ப்பு சக்தி தான் குழந்தைகளை எண்ணற்ற வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது. ஆக நோய் என்பது ஒரு வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதி. ஏனெனில் நோய் வந்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தியும் வந்திருக்கிற வைரஸ்கள், பாக்டீரியாக்களின் ஆயுதங்களுக்கேற்ப தங்களை அப்டேட் செய்து கொள்ளவும், மீண்டும் வந்தால் அவற்றை அழிப்பதற்கான ஃபார்முலாவை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியும்.

அப்படியில்லாமல் எடுத்ததற்கெல்லாம் டாக்டரிடம் சென்று மாத்திரை, ஊசி, சிரப்புகள், டானிக்குகள், ஆண்டிபயாடிக்குகள் என்று வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்கிறீர்களா? நீங்கள் முதலில் உங்கள் குழந்தையின் நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தையின் இயற்கையான உள்க்கட்டமைப்பான பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துங்கள். அதற்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள். எடுத்ததற்கெல்லாம் மருந்துகளிடம் சரணாகதி அடையக்கூடாது. அதனால் குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி நிரந்தரமான பாதிப்புக்குள்ளாகும்.நீங்கள் ஒவ்வொரு முறை மருந்துகளைக் கொடுக்கும்போது செயற்கையான அல்லது கடன் வாங்கப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியை குழந்தைக்குக் கொடுக்கிறீர்கள். அந்த செயற்கையான தற்காலிகமான நோயெதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அந்த நோய்க்குக் காரணமான வைரஸ்களையோ, பாக்டீரியாக்களையோ அழித்தபிறகு உடலிலிருந்து வெளியேறிவிடும். அதனால் குழந்தைகள் மீண்டும் நோயினால் தாக்கப்படும்போது மீண்டும் மருந்துகளையே நாட வேண்டியதிருக்கும். அதற்குப்பதில் இயற்கையான நோயெதிர்ப்பு அமைப்புக்கு நாம் இயற்கையான முறையில் உதவி செய்வதன் மூலம் மீண்டும் அந்த வைரஸ்கள் பாதிக்காமல் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது மருத்துவரிடம் போகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவா என்று நீங்கள் ஆவேசப்படுவது தெரிகிறது. அப்படியெல்லாம் இல்லை. குழந்தைகளோ, பெரியவர்களோ, மருந்துகளின் உதவி தேவைப்படும் நோய்களும் வரத்தான் செய்யும். அதற்கு மருத்துவரிடம் கண்டிப்பாகப் போய்த்தான் தீர வேண்டும். ஆனால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவரிடம் செல்வது குழந்தைக்கு ஊறு விளைவிக்கும். ஆங்கில மருத்துவ முறையில் நோய்களை உருவாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மருந்துகளினால் அழிக்கப்படுகின்றன. ஆனால் இயற்கையான பாதுகாப்பு அமைப்புக்கு எந்தப் பலனுமில்லை. ஆனால் மாற்றுமருத்துவ முறைகளில் குழந்தைகளின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பையே பலப்படுத்தவும், அதன் மூலமே வைரஸ்களையும் பாக்டீரியாக்களையும் அழித்து விடலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகழ் பெற்ற சீனப்பழமொழி ஒன்று இப்படிச் சொல்கிறது. பசித்திருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுக்கும்போது அவனுக்கு ஒரு வேளை உணவு தந்தவர் ஆவீர்கள். ஆனால் அதற்குப் பதில் மீன் பிடிப்பது எப்படியென்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தீர்களானால் அவனுடைய வாழ்நாள் முழுவதும் உணவளித்தவர் ஆவீர்கள். அப்படித்தான் குழந்தைகள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் மருந்துகளைக் கொடுத்து செயற்கையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தருவதென்பது ஒரு வேளைக்கு உணவளிப்பதைப் போல. ஒவ்வொரு சமயமும் குழந்தைகள் நோய்ப்படும்போதும் மருந்துகளின் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அதே குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பின் சக்தியைப் பலப்படுத்துவது என்பது மீன் பிடிக்கக்கற்றுக் கொடுப்பதைப் போன்றது. அது நிரந்தரமாக குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நாம் குழந்தைகளுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தரப்போகிறோமா? இல்லையென்றால் ஒரு நாளைக்கு உணவளிக்கப் போகிறோமா?

நன்றி- தீக்கதிர் வண்ணக்கதிர்

Saturday 1 November 2014

மோனோலிசாவும் குடும்பத் தலைவியும்

உதயசங்கர்Balakrishnan

இத்தாலி நாட்டு கலை அறிவியல் மேதையான லியார்னாடோ டாவின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோனோலிசா. அந்த ஓவியப்பெண்ணின் அழியாத புன்னகை இன்றும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. எந்தக் கவலையுமில்லாத அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? அந்தப் புன்னகையில் தெரிவது இந்த உலகை வென்ற கர்வமா? முன்பின் தெரியாதவர்களிடம் அளந்து சிந்துகிற முறுவலா? உன்னால் என்றுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற மர்மமா? உதட்டுச்சுழிப்பில் படைத்தவனையே அதிசயிக்கப்பண்ணிய படைப்பாக மலர்ந்த அகங்காரமா? என்னை விட எளிய பெண்ணை நீங்கள் இப்புவியில் எங்கும் காண முடியாது என்ற அடக்கமா? எது அந்தப் புன்னகையின் அர்த்தம்? ஏன் அந்தப்புன்னகை? மோனோலிசாவின் புன்னகை சிந்தும் ஒப்பற்ற அந்த ஓவியம் குறித்தும் லியார்னாடோ டாவின்சி குறித்தும் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நமது வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் வீட்டு நிர்வாகம் செய்கிறார்கள். அலுவலக வேலையென்றால் கூட குறிப்பிட்ட நேரம் மட்டும் தான். அத்துடன் விடுப்புகளும், விசேட அநுமதிகளும் உண்டு. அதற்கு சம்பளமும் உண்டு. ஆனால் வீட்டு நிர்வாகம் இருபத்திநாலுமணி நேரத்தையும் வற்புறுத்தி வாங்கி விடும். வீட்டைத்தவிர வேறு எந்த சிந்தனையும் நமது பெண்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம். எங்கேயும் எப்போதும் வீட்டு ஞாபகம் தான். வீடு என்றால் வெறும் வீடல்லவே. வீட்டில் உள்ள உறவுகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்களுக்கான சேவைகள், என்று நமது குடும்பத்தலைவி செய்யும் வேலைகள் கணக்கிலடங்காதவை. இதில் வேலைக்கும் சென்று விட்டு வீட்டையும் நிர்வாகம் செய்யும் பெண்கள் எவ்வளவு பதற்றத்திலும், அழுத்தத்திலும் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

உலகப்புகழ் பெற்ற மோனோலிசாவும் நமது குடும்பத்தலைவியும் சந்தித்தால் எப்படி இருக்கும்?

மொட்டைக்கோபுரம் என்ற கவிதை நூல் வழியே தமிழ் கவிதையுலகில் பிரசன்னமாகியிருக்கிற நமது கவிஞர் பிரதீபன் இரண்டு பேரையும் சந்திக்க வைக்கிறார். சந்தித்த வேளையில் தன் புன்னகை உதடு பிரித்து மோனோலிசா பேசும் முன்னரே நமது குடும்பத்தலைவி பேசுகிறாள்,

உனக்கென்னம்மா

எப்போதும் இப்படிச்

சிரித்துக் கொண்டிருப்பாய்

பிள்ளையா குட்டியா

குடும்பமா பிடுங்கலா

கோவில் குளமென்று ஓடவும் வேண்டாம்

ஆஸ்பத்திரி, மார்க்கட்டுக்கு

அலையவும் வேண்டாம்

மாமி, நாத்தி

சீர் செனத்தி என்று

எதிலும் மாட்டிக்கொள்ளாத

மகராசி நீ

மாறாத புன்னகை

இருக்காதா பின்னே.

கவிஞர் பிரதீபனின் கற்பனையில் இரு வேறு உலகங்கள் எப்படி வேறுபட்டு தெரிகிறது பாருங்கள்! எளிய சொற்களால் நமது பெண்களின் நிலையை இத்தனை கிண்டலுடன், ஆற்றாமையுடன் யார் சொல்லியிருக்கிறார்கள்? இப்போது புகழ முடியுமா மோனோலிசாவின் புன்னகைஅதிசயத்தை. இங்கே இதோ நமது பெண்கள் நிற்கிறார்களே பிரமாண்டமாய்…..இல்லையா.

அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவசர அவசரமாய் தூங்கி எழுந்து, அவசர அவசரமாய் பல் விளக்கி, குளித்து, உடை உடுத்தி, அவசர அவசரமாய் அவரவர் வேலைகளுக்குச் சென்று அவசர அவசரமாய் வேலை பார்த்து, அவசர அவசரமாய் வீடு திரும்பி உண்டு முடித்து உறங்கி விடுகிறோம். மீண்டும் அவசர அவசரமாய் ஒரு நாளை எதிர்பார்த்து. ஒரு நாளும் நமது தலைக்கு மேலே ஒரு வானம், குட்டி குட்டியாய் மேகங்கள், சூரியன் வரையும் அற்புத ஓவியங்கள், தென்றல் வீசும் மரங்கள், மலர்ந்து மணம் வீசும் மலர்கள், இரவில் நமது கோடிக்கணக்கான ஆசைகளைப் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தெருக்களில் தண்ணொளி வீசி நிலாச்சோறு சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் நிலவு, இப்படி எதையுமே ஆற அமர அநுபவிக்காமல் வாழும் வாழ்க்கை எல்லோரையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. கவிஞர் பிரதீபனுக்கு இந்த நெருக்கடி ஒரு கவிதையை எழுதிச் செல்கிறது.

குறுநிழல் ஒன்று

குறுக்கே ஊர்ந்து செல்கிறது

தலைக்கு மேலே

வண்ணத்துப்பூச்சி பறக்கிறது போலும்

நிமிர்ந்து பார்க்க நேரமில்லை

அலுவலகத்துக்கு

இன்னும் ஐந்தே நிமிஷம்.

நாமே ஏற்படுத்திக் கொண்ட அவசரத்திற்கு நாமே அவசர அவசரமாய் மாட்டிக் கொண்ட பிறகு வாழ்க்கையை நின்று பார்க்க நேரம் கிடைக்குமா? அவசரத்தை அவசர அவசரமாய் விட்டு விட்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவோம். வாழ்வு இனியது!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 26 October 2014

காற்றில் கரைந்த பூதம்

உதயசங்கர்

raja 1

மண்டியா தேசத்து ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று நாட்டு மக்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். தூங்குவது, சாப்பிடுவது, திரும்பவும் தூங்குவது, சாப்பிடுவது என்று விடாமல் செய்து கொண்டிருந்ததால் ராஜா குண்டாகி விட்டார்.

அதோடு ராஜா படு சோம்பேறி வேறு. அவர் நடக்க வேண்டுமென்றால் அவருடைய வலது காலைத் தூக்கி வைக்க ரெண்டு பேர் வலது பக்கம் இருப்பார்கள். அதேபோல இடது காலை தூக்கி வைக்க இடது பக்கம் ரெண்டு பேர் இருப்பார்கள். சிம்மாசனத்தில் உட்கார வேண்டுமென்றால் நாலு பேர் அவரைத் தூக்கி சிம்மாசனத்தில் உட்கார வைப்பார்கள். உடலுழைப்பு இல்லாததினால் உடலில் கொழுப்பு சேர்ந்து கொழுப்பு கட்டிகள் அங்கங்கே உண்டாகி விட்டன. ராஜா அரண்மனை வைத்தியர்களை அழைத்து உடனே இந்தக் கட்டிகள் கரைய மருந்துகள் கண்டு பிடிக்கும்படி ஆணையிட்டார்.

அரண்மனை வைத்தியர்களுக்குத் தெரிந்து விட்டது. ராஜா ஒரு உணவுப்பிரியர். அவரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்ல முடியாது. எனவே ஒரு வாரகாலம் ஆலோசித்தனர். பின்னர் ராஜாவிடம் வந்து,

“ மன்னர்மன்னா… உங்கள் உடலில் வந்துள்ள இந்தக் கட்டிகள் கொழுப்புபூதம் உங்கள் உடலில் புகுந்திருப்பதினால் தான் வந்திருக்கின்றன. எனவே இந்தப் பூதத்தை விரட்ட ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. சாப்பாட்டின் வழியே உங்கள் உடலுக்குள்ளே புகுந்துள்ள இந்தப் பூதத்தை சாப்பாட்டின் வழியே தான் விரட்ட முடியும்… நீங்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு தினம் மூன்று வேளையும் நீராகாரமும், பழங்களும் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன் நாங்கள் தருகிற இந்த மருந்தை தினம் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் பிரபோ..”

இதைக் கேட்டதும் ராஜாவுக்கு திடுக்கென்றது.

“ என்ன.. நெய்யில் பொரித்த ஜாங்கிரியும், லட்டு, சிலேபி, பலகாரங்கள், சாப்பிடக்கூடாதா… கோழியும், ஆடும்.. சாப்பிடாமல் எப்படி என்னால் இருக்க முடியும்..? இல்லை வைத்தியர்களே.. வேறு ஏதாவது வைத்தியம் சொல்லுங்கள்…”

” இல்லை மன்னா.. இன்னொரு வைத்தியம் இருக்கிறது.. அதை நீங்கள் செய்ய முடியுமா என்று எங்களுக்குச் சந்தேகம்…”

“ என்ன அது..”

“ தூங்கி எழுந்தவுடன் பல் விளக்காமல் நாங்கள் தரும் மருந்தைச் சாப்பிட்டு விட்டு ஒரு பத்து மைல் தூரம் ஓடிப் போய் வர வேண்டும்…..அவ்வளவு தான் மன்னா..”

“ என்னது.. பத்து மைலா…என்னால முடியாது.. என்னால முடியாது…எதுவும் வேண்டாம் நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் ”

“ இல்லை மன்னா இப்போது உங்கள் உடலில் புகுந்துள்ள கொழுப்பு பூதம் வளர்ந்து வளர்ந்து உங்களையேச் சாப்பிட்டு விடும்……இப்போதே இதை விரட்டி விடுவது நல்லது…”

ராஜா யோசித்தார். யோசித்தார். யோசித்தார்.

நடப்பதற்கே சோம்பேறியான ராஜாவா பத்து மைல் ஓட முடியும்..கடைசியில் ராஜா முதலில் சொன்ன வைத்திய முறைக்கே ஒத்துக் கொண்டார். மறுநாளிலிருந்து அரண்மனை முழுவதும் மூன்று வேளையும் நீராகாரமும் பழங்களும் தான் எல்லோருக்கும் சாப்பாடு. அது போக கொள்ளுப்பயறும் கருப்பட்டியும் சேர்த்து செய்த மருந்தையும் கொடுத்தார்கள் அரண்மனை வைத்தியர்கள்.

மூன்று மாதங்களில் ராஜாவின் உடலில் இருந்த கொழுப்பு பூதம் காற்றில் கரைந்து விட்டது. இப்போதும் ராஜா நடப்பதில்லை. ஆனால் ஓடுகிறார். எல்லோரும் அவர் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

Saturday 25 October 2014

தோற்றப்பிழை

 Neem உதயசங்கர்

ஜன்னல் வழியே பார்க்கும்போது காற்றில் வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.

பார்க்கும்போது காற்றில் வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.

காற்றில் வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

வேப்பமரத்தின் கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

கிளையிலுள்ள இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

இலைகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

நடனமாடிக் கொண்டிருக்கின்றன

ஆடிக் கொண்டிருக்கின்றன

Friday 24 October 2014

அன்றாடங்களின் முகவிலாசம் மாற்றிய கவிஞன் கலாப்ரியா

உதயசங்கர்kalapriya

இது கவிஞர் கலாப்ரியாவின் நாள். இதோ இனிமையாய் காலைப்பொழுது விடிகிறது. கிணிங் கிணிங் என்று மணியடித்தபடி பால்க்கார அண்ணாச்சியோ உப்போய் உப்பு என்று கூவிக் கொண்டு போகும் உப்பு விற்பவரோ, ஒரு லாவகத்துடன் தினசரி நாளிதழை வீட்டுக்குள் வீசி விட்டுப் போகும் பேப்பர் போடும் பையனோ கீரை வாங்கலியோ கீரை என்ற சத்தத்துடன் செல்லும்கீரைக்கார அம்மாவோ, தான் இந்தக் காலைப்பொழுதைத் துவக்கி வைக்கிறார்கள். அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வீடுகள் முழித்துக் கொள்கின்றன. ஒரு புதிய நாளுக்கான சக்தியைச் சேகரித்துக் கொண்ட பெண்கள், அடுக்களையில் பாத்திரங்களைப் புழங்கும் சத்தம் கேட்கத் துவங்குகிறது. பெண்களும், ஆண்களும், குழந்தைகளும், இந்த நாளை, இந்த உலகத்தை இயக்கத் தொடங்குகிறார்கள். இனிமை, கசப்பு, வெறுப்பு, அன்பு, காதல், கருணை, அதிகாரம், நேசம், என்று எல்லாச்சுவைகளோடும் இந்த நாள் கழிகிறது. மாலையில் சூரியன் மங்கத்தொடங்கும் போது எல்லோரும் அப்பாடா இன்னும் ஒரு நாள் கழிந்தது என்று ஆனந்தமும் பெருமூச்சும் விடுகிறார்கள். இந்த நாளில் என்ன விசேசம்? எல்லா நாளையும் போல இன்னுமொரு நாள். அப்படியா? அப்படித்தானா? நேற்றைப் போலவா எல்லாம் நடந்தது! இல்லையே. நேற்றின் சாயல் இருப்பதினால் மட்டும் நேற்றும் இன்றும் ஒன்றாகி விடுமா? நேற்றை விட இன்று எவ்வளவு அழகு? எவ்வளவு உயிர்த்துடிப்பு? நேற்று இந்த வேம்பு பூக்கத்தொடங்கவில்லை. இன்றானால் கொத்துக் கொத்தாய் வெள்ளைச் சிரிப்புடன் மரமே மலராய் மலர்ந்து நிற்பதைப் பாருங்கள்! நேற்று இந்த நாய் குட்டிகளுடன் இல்லை. இன்று தாய்மையின் பூரிப்புடன் தன் குட்டிகளை அணைத்துக் கொண்டு கிடப்பதை பாருங்கள்! நேற்று பள்ளிக்கூடம் செல்ல அழுது அடம் பிடித்த குழந்தை இன்று சிரித்துக் கொண்டே அம்மைக்கு டாட்டா சொல்வதைப் பாருங்கள்! இப்போது சொல்லுங்கள்! எல்லா நாளும் ஒன்றா?

கவிதை என்றால் தனிமையில் உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்த மோனத்தில் மூழ்கி கற்பனை உலகத்திலிருந்து காவியமாக சொற்களைத் தேர்ந்தெடுத்து அழகான மாலையாகத் தொடுத்து கொடுப்பதல்ல. மிகச் சாதாரணமான நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கவித்துவமான தருணங்களே கண்டுகொள்ளும் கவி மனம் வேண்டும். கவி மனம் என்றால் வேறொன்றுமில்லை. குழந்தையின் மனம் வேண்டும்.. அந்த மனம் தான் கவிஞர்களின் மனம். அந்தச் சாதாரண சம்பவங்களின் கவித்துவமான தருணங்களை தன் மொழியால் கவிதையாக்கி அசாதாரணமான ஒரு உண்மையை, ஒரு உணர்வை, ஒரு அழகை, ஒரு அநுபவத்தை, தருகிற கவிஞர். கலாப்ரியா. கலாப்ரியாவின் கவிதைகளில் தினசரி சம்பவங்களே கவிதை உருக்கொள்கின்றன என்றாலும் அது வாசித்ததும் மறந்து போகும் செய்தியாக இல்லை. அன்றாட சம்பவங்களிலிருந்து ஒரு ஆச்சரியத்தை, ஒரு அழகைக் கண்டுபிடிக்கிறார் கவிஞர்.கலாப்ரியா. வாழ்வின் ஆனந்தத்தையும் அழகையும், அற்புதத்தையும், நகை முரணையும் துயரத்தையும் நம் மனம் விம்மச் சொல்கிறார்.

கொலு வைக்கும்

வீடுகளில்

ஒரு குத்து சுண்டல்

அதிகம் கிடைக்குமென்று

தங்கையைத்

தூக்க முடியாமல்

தூக்கி வரும்

அக்காக்குழந்தைகள்

யதார்த்த உலகில் நடக்கும் சம்பவம் கவிஞரின் பார்வையில் வேறொன்றாகத் தெரிகிறது. குழந்தைகளின் மனதை கவிஞர்களன்றி யாரால் புரிந்து கொள்ள முடியும்? அதனால் தான் சினிமா தியேட்டரில் ஒரு டிக்கெட்டில் இரண்டு பேரை எப்போதாவது அனுமதிக்கும் அண்ணாச்சி இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு போகிறான். எதற்கு?

தம்பிக்கு

அப்பா தந்த

நாலணாவைப்

பத்திரமாய்

தான் வாங்கி

வைத்துக் கொண்டு

அண்ணன்கள்.

அப்படி அநுமதித்து விட்டால் அந்த நாலணாவில் வாங்கித் திங்கலாமே என்ற ஆசை. எளிய மனிதர்களின் எளிய ஆசைகள். இளம்பருவக் காதலை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் கவிஞர் கலாப்ரியா பாருங்கள்;

பேனாவும்

நோட்டுகளும் என்னைப்

பெரியவனாக்கிய போது

சிலேட்டுகளை

நெஞ்சில் அணைத்து

கழுத்தைச் சாய்த்து

மூக்கையுறிஞ்சி

உன்னருகே நின்று

மனக்கணக்குப் போடுகிற

சுகமொன்று மறுக்கப்பட்டது

பூக்களின் காதல்

நினைத்துதிர்கிற புண்ணியங்கள்

இலைகளுக்கன்றி

மரங்களுக்கில்லை..சசி

தமிழ்க்கவிதையுலகின் மிக முக்கியமான கவிஞரான கலாப்ரியா பலதலைமுறைக் கவிஞர்களைத் தன் கவிதைகளால் பாதித்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அவருடைய கவிதைகளுக்குள் ஒரு கதை இருக்கும். காட்சிச்சித்திரங்களின் வழியே நம் வாழ்வின் யதார்த்தத்தை வலிமையாகச் சொல்வதில் கலாப்ரியாவுக்கு ஈடு இணை கிடையாது எனலாம்.

அழுது தொலைச்சிராதள்ளா

மானம் போயிரும்

நொடிக்கொரு தரம்

மகளை ( சத்தம் வெளிவராமல் )

அடக்கிக் கொண்டு

தானும் அழுகையை

ஜெயித்துக் கொண்டு

செத்துப்போன சிசுவைத் துணியில்

சுற்றி

கழுத்து தொங்கவிடாமல்

கவனமாக

வற்றிப்போன

மார்போடு அணைத்துக் கொண்டு

ஜெனரல் ஆஸ்பத்திரி

வாசலில்

டவுன் பஸ்ஸுக்காக

அம்மாவும்

அம்மாவும்.

கவிஞர் கலாப்ரியாவின் கலை மேதைமையைச் சொல்ல இதை விட வேறென்ன வேண்டும்?

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Wednesday 22 October 2014

என்றும் வாழ்க்கையை நேசிக்கும் கவிஞன்

உதயசங்கர்SAMAYAVEL_thumb[7]

சதா வாழ்க்கை என்னும் பேராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேராற்றில் முங்காச்சி போட்டு எந்திரிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அநுபவம். சிலருக்கு ஜீவ அமுதமாய் ஆறு உடலிலும், மனதிலும் ஒரு பேரானந்தத்தை உண்டுபண்ணுகிறது. சிலருக்கு அது ஒரு தியானம். மூச்சடக்கி ஒவ்வொரு கணத்தையும் இந்தப் பிரபஞ்சத்தின் காலவெளியில் கலந்து விடுகிற தியானம். சிலருக்கு நீர் உடலில் பட்டதும் அதுவரை உறங்கிக் கொண்டிருந்த புலன்கள் சட்டென கண்களைத் திறக்கும் தருணம். சிலருக்கு இத்தனை காலமும் யார் யாரோ முங்கி எழுந்த ஆற்றில் தானும் முங்கி எழும்போது ஏற்படும் எளிய உணர்வு. சிலருக்கு இந்தப் பேராற்றில் அள்ளிய ஒரு துளி நீர் தான் தன்னுடைய வாழ்க்கை என்ற அடக்கம். சிலருக்கு இந்த முங்காச்சி வெறுமனே ஒரு அன்றாடக்கடமை. சிலருக்கு தாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக் கிடைத்த ஒரு இடைவெளி. சிலருக்கு மனமும் உடலும் ஒடுங்கி பேரமைதியில் கலந்து விடும் காலத்துளி. சிலருக்கு அன்றாடச் சில்லரைப்பிரச்னைகளை செலவிடக்கிடைத்த பெட்டிக்கடை. சிலருக்கு வெஞ்சினத்தை கூர் தீட்ட கிடைத்த சாணைக்கல். சிலருக்கு நேசம் வளர்க்கும் பூந்தோட்டம். சிலருக்கு தங்கள் ஆத்தாமையைச் சொல்லி மனசாறக் கிடைத்த நட்பு. சிலருக்கு எப்போதும் யார் மீதாவது புகார் சொல்லிக் கொண்டேயிருக்க ஒரு புகார் பெட்டி. யார் யாருக்கு எப்படியெப்படி அநுபவங்கள் கிடைத்தாலும் வாழ்க்கை தன்பாட்டில் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

இந்த வாழ்வெனும் பேராற்றில் தான் சமயவேல் என்ற கவிஞரும் முங்காச்சி போட்டு எந்திரிக்கிறார். ஆனால் அவர் வாழ்க்கையை ஒரு தோல்வியாகவோ, அவநம்பிக்கையாகவோ, தடையாகவோ , பாவமாகவோ, பார்க்கவில்லை.

வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்

உன்னதம் தேடுவதை

ஒரு போதும் நிறுத்தேன்

உண்மையை மேலும் மேலும்

காதலிப்பேன்

நேசம் விதைத்த காட்டில்

நெருப்பு முளைத்தாலும்

பிடுங்கி எறிந்து விட்டு

உழுது விதை விதைப்பேன்

இதோ இந்த வாழ்க்கை எல்லாவிதமான அற்புதங்கள் நிறைந்ததே. இந்த வாழ்க்கை ஒரு அதிசயச் சுரங்கம் , இந்தச் சுரங்கத்தில் அபூர்வமான வைரங்களும் வைடூரியங்களும் தங்கமும் கொட்டிக்கிடக்கின்றன. கூடவே குப்பை கூளங்களும். யார் எவ்வளவுக்கெவ்வளவு சுரங்கத்தைத் தோண்டுகிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவுக்கவ்வளவு வெகுமதிகள் கொடுக்கத் தயாராக உள்ளது. ஆனால் நாம் தயாராக வேண்டுமே. இந்த வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஒளிந்து ஓடாமல் எதிர் கொள்ள வேண்டுமே. கவிஞர் சமயவேலும் நம்மை வாழ்க்கையை எதிர் கொள்ளச் சொல்கிறார். தன்னுடைய எளிய கவிதைக்காட்சியின் வழியாக.

என்றும்..

கூரை முகட்டுப்பட்சிகளின் கரைதல்களுடன்

இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்

இளங்காலை

ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்

நேற்றின் அயர்வுகள்

வாசலைத் தாண்டி

உப்புக்காரனின் குரலோடு

ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது

குளிக்க, சாப்பிட, வேலைக்கென

கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை

இன்றும் நேசிப்பேன்.

நேசம் ஒன்று தான் இந்த வாழ்வினை அர்த்தப்படுத்துவது. இந்த பூமிப்பந்திலுள்ள ஒவ்வொரு உயிரையும் நேசியுங்கள். உங்கள் வாழ்க்கையையும் நேசியுங்கள். நேசத்தின் வழியாகவே நம்முடைய அனைத்து அயர்ச்சிகளையும் போக்க முடியும். இத்தகைய மகத்தான ஞானத்தை தன் எளிய கவிதை வரிகளில் சொல்லியிருக்கிறார் கவிஞர் சமயவேல். காற்றின் பாடல், அகாலம், என்ற கவிதை நூல்களின் மூலம் தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றுள்ள கவிஞர் சமயவேல் தன்னுடைய எளிய, நம்பிக்கையூட்டும் கவிதை வரிகளால் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இவருடைய கவிதைகளை வாசிக்கும் தோறும் நம் மனதில் ஒளி பெருகும். ஒவ்வொரு நாள் காலையும் புத்தம் புதிதாக புலரும். இன்றும் அப்படிப் புலரட்டும்.

 

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 19 October 2014

கவிஞர்களின் கவிஞர் பிரமிள்

piramil உதயசங்கர்

நவீன தமிழ் இல க்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை தருமு சிவராமு என்ற பிரமிள்.ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த பட்சத்தை எட்டியுள்ளது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமையானவராக இருந்தார். இவரது ஆன்மீக ஈடுபாடு இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. படிமக்கவிஞர் என்று சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம் இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதை வரலாற்றில் தனித்துவம் மிக்கதாகும்.

பழங்கவிதைகளில் உருவம், உருவகம், உவமை, எதுகை, மோனை, என்ற அலகுகளைப் போல நவீன கவிதைகளில் படிமம் என்பது கவிதையில் சொல்ல வருகிற பொருளை பன்முகத்தோற்றத்துடன் வாசகனின் சிந்தனைகளைத் தூண்டி விடவும், அவனுக்கு, கவித்துவ இன்பளிக்கவும் படைக்கப்படுகிறது. அப்படி நவீன கவிதைகளில் படிமத்தை பிரமிள் பயன்படுத்திய அளவுக்கு வேறெந்த கவிஞரும் பயன்படுத்தியதில்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஒரு விடியலைப் பற்றி எப்படியெல்லாம் கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்.

விடிவு

பூமித்தோலில்

அழகுத்தேமல்

பரிதி புணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ

இருளின் சிறகை

தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்

மிதக்கும் குருவி.

அதே போல மின்னலை அவர் படிமமாக்கி மகிழ்வதைப் பாருங்கள்.

மின்னல்

ககனப்பறவை

நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்

எறியும் பார்வை

கடலுள் வழியும்

அமிர்தத்தாரை

கடவுள் ஊன்றும்

செங்கோல்.

அடடா என்ன அழகாய் படிமங்களை அடுக்குகிறார் கவிஞர். எல்லாக்கலைகளும், தத்துவங்களும், மனித வாழ்வின் அர்த்தத்தையே தேடி ஆராய்கின்றன. இந்த வாழ்வெனும் பெருங்கடலில் மிதக்கும் சிறு துரும்பான நான் யார்? எதற்காக இந்த புவியில் பிறந்தேன்? நான் பிறந்ததற்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? என்று சாதாரண மனிதர்களிலிருந்து ஞானிகள் வரை கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளைப் பின் தொடர்ந்து போகிறவர்கள் அவரவர் கண்ட ரகசியங்களை சமூகத்திடம் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரமிளுக்கும் அந்தத் தேடல் தீவிரமாக இருந்திருக்கிறது.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.

என்ற கவிதையிலாகட்டும்,

குமிழிகள்

இன்னும் உடையாத ஒரு

நீர்க்குமிழி

நதியில் ஜீவிக்க

நழுவுகிறது

கைப்பிடியளவுக் கடலாய்

இதழ்விரிய

உடைகிறது

மலர்மொக்கு.

வாழ்வின் இறுதி நிகழ்வான மரணத்தைப் பற்றிய கவிதையிலும் சரி வாழ்க்கை பற்றிய இவருடைய விசாரம் வாழ்வின் மீதான நம்பிக்கையை, பிடிப்பை நமக்குத் தெரிவிக்கிறது.

இறப்பு

சிறிதில் பெரிதின் பளு

பாழின் இருளைத் தொட்டுன்

நுதலில் இட்ட பொட்டு

பார்வைக் கயிறு அறுந்து

இமையுள் மோதும் குருடு

ஒன்றும் ஏதுமின்றி

இன்மை நிலவி விரிதல்

வண்டியை விழுங்கும் பாலம்

மஞ்சம் கழித்த பஞ்சு

கூட்டை அழிக்கும் புயல்

புயலில் தவிக்கும் புள்

வாழ்வின் சூழலைத் துறந்து

என்றோ இழந்த வாசக்காற்றுள்

வீழும் ரோஜா

துணியே நைந்து இழையாய்

பஞ்சாய் பருத்தித் திரளாய்

பின்னே திருகும் செய்தி

காற்றை விழுங்கும் சுடர்

சுடரை உறிஞ்சும் திரி

வினையில் விளைவின் விடிவு

விளையாவிடிவின் முடிவு

தொடங்காக் கதையின் இறுதி

நிறுத்தப்புள்ளிகளிடையே

அச்சுப்பிழைத்து

அழித்த வசனம்

வெறும் வெண் தாள் சூன்யம்.

கற்பனையின் எல்லையிலிருந்து காட்சி ரூபங்களை படைத்து அதில் வாழ்வின் அநுபவச்சாற்றைப் பிழிந்து சூத்திரம் போல் கவிதை படைக்கும் பிரமிள் கவிஞர்களின் கவிஞர் என்பதில் வியப்பேது?

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Saturday 18 October 2014

புதுமைகளின் முதல் குரல்

உதயசங்கர்

pudumaippithan

நவீன தமிழிலக்கியத்தினை உலக இலக்கியத்துக்கு இணையாகப் பேச வைத்த படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன். இலக்கியத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலை ஆளுமை. தமிழ்ச்சிறுகதைகளின் போக்கையே மாற்றியமைத்தவர். யாரோடும் ஒப்பிட முடியாத சுயம்புவான படைப்பாளி புதுமைப்பித்தன். அவருடைய எழுத்தின் வேகத்திலும் அறச்சீற்றத்திலும் உண்மை சுடர் விடும். அவர் முழுமையுமாய் ஒரு கலைஞனாக இருந்தார். இலக்கியத்தைத் தன் வாழ்வென நினைத்து வாழ்ந்து மறைந்தவர்.

காலத்தைக் கண்ணாடியெனக் கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலப்பேரருவியில் கலைஞன் அள்ளும் கை நீரே அவனுடைய படைப்புகள். படைப்பை வாசிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித் தோற்றங்கள், மனித மனதில் வாழ்க்கை மதிப்பீடுகளை, சமூக உணர்வை ஏற்படுத்துகிறது.

சோகை பிடித்திருந்த தமிழ்ச்சிறுகதைகளுக்குப் புது ரத்தமும் புது வேகமும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். எல்லோரும் எழுதத் தயங்கிய விஷயங்களைத் துணிச்சலாக எழுதி அந்தக்காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். அவருடைய பொன்னகரம், சங்குத்தேவன் தர்மம், மகாமசானம், கயிற்றரவு, கபாடபுரம், சித்தி, செல்லம்மாள், துன்பக்கேணி, இன்னும் பல கதைகளும் புதுமைப்பித்தனை இன்றளவும் தமிழ்ச்சிறுகதை மேதை என்று கொண்டாட வைப்பவை. தமிழ்ச்சிறுகதைகளில் மட்டுமின்றி கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், என்று எல்லாத்துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தனின் காலம் சுதந்திரப்போராட்ட காலம். உணர்ச்சிக் கொந்தளிப்பான காலம். ஆனால் உண்மையும் பொய்மையும் கலந்து மாயமான் தோற்றம் கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தையே புதுமைப்பித்தன் தன் கூரான எழுத்துகளால் பகிடி செய்தார். பொய்மையின் முகத்திரையைக் கிழித்தெறிய தன்னுடைய எழுத்தைப் பயன்படுத்தினார். முக தாட்சண்யம் சற்றுமில்லாமல் அவர் காட்டிய வேகத்தைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். கதை, கவிதை, கட்டுரை, என்று எல்லாவற்றிலும் அவருடைய மேதமை ஒளி வீசியது.

உணர்ச்சியும் , வேகமும், கருத்தும் கொண்ட அவருடைய ” ஓடாதீர் “ கவிதையைக் கேளுங்கள்.

ஓகோ உலகத்தீர் ஓடாதீர்

சாகா வரம் பெற்ற

சரஸ்வதியார் அருள் பெற்ற

வன்னக்கவிராயன் நானல்ல

உன்னிப்பாய் கேளுங்கள்

ஓடாதீர்

வானக்கனவுகளை

வக்கணையாகச் சொல்லும்

உண்மைக் கவிராயன்

நானல்ல

சத்தியமாய் சொல்லுகிறேன்

சரஸ்வதியார் நாவினிலே

வந்து நடம் புரியும்

வளமை கிடையாது

உம்மைப்போல் நானும்

ஒருவன் காண்

உம்மைப்போல் நானும்

ஊக்கம் குறையாமல்

பொய்கள் புனைந்திடுவேன்

புளுகுகளைக் கொண்டும்மை

கட்டி வைத்துக் காசை

ஏமாந்தால்

கறந்திடுவேன்

என்று கவிஞனையும், கவிதையையும், வாசகனையும் பகிடி செய்யும் கவிதை கடைசியில் சமூகத்தின் பொய்மை முகமூடியை கிழிக்கிறது.

இத்தனைக்கும் மேலே

இனி ஒன்று

ஐயா நான்

செத்ததற்குப் பின்னால்

நிதிகள் திரட்டாதீர்

நினைவை விளிம்பு கட்டி

கல்லில் வடித்து

வையாதீர்

வானத்து அமரன்

வந்தான் காண்

வந்தது போல்

போனான் காண்

என்று புலம்பாதீர்

அத்தனையும் வேண்டாம்

அடியேனை விட்டு விடும்

………………………………………………………………………..

……………………………………………………………………………..

சொல்லுக்குச் சோர்வேது

சோகக்கதை என்றால்

சோடி இரண்டு ரூபா

காதல் கதை என்றால்

கை நிறையத் தரவேணும்

ஆசாரக் கதை என்றால்

ஆளுக்கு ஏற்றாற் போல்

பேரம் குறையாது

பேச்சுக்கு மாறில்லை

ஆசை வைத்துப் பேசி எமை

ஆட்டி வைக்க முடியாது

காசை வையும் கீழே

பின் கனவு தமை வாங்கும்

இந்தா

காலத்தால் சாகாது

காலத்தின்

ஏலத்தால் மலியாது

ஏங்காணும்

ஓடுகிறீர்

ஓடாதீர்

உமைப்போல நானும்

ஒருவன் காண்

ஓடாதீர்!

சமூகத்தின் பொய்மைகளை புதுமைப்பித்தன் அளவுக்கு சாடியவர்கள் உண்டா என்பது சந்தேகம். அவருடைய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் பளீரென மின்னலைப் போல ஒளிர்கிறது. வாசிக்க வாசிக்க வேகம் எடுக்கிறது. போலித்தனத்தைச் சாடி கேலி பேசுகிறார் .தமிழிலக்கியத்தில் சாகாவரம் பெற்ற கலைஞர்களின் வரிசையில் புதுமைப்பித்தனுக்கு தனி இடம் உண்டு.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Friday 17 October 2014

அன்பின் பெருங்காட்டினுள் ஒரு கவிஞன்

vannadasan உதயசங்கர்

 

சைக்கிளில் வந்த

தக்காளிக்கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளில்

பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை.

தமிழிலக்கிய வாசகப்பரப்பில் தன்னுடைய கதைகளாலும், கவிதைகளாலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள கல்யாண்ஜி என்ற வண்ணதாசன், தன் இலக்கியக் கோட்பாடாக சகமனித நேசத்தையே முன்வைக்கிறார். சமூகமாக வாழ்வதற்கு விதிக்கப்பட்ட மனிதர்கள் ஏன் தனித்தனித் தீவுகளாக மாறுகிறார்கள். சகமனித துயரம் கண்டு இரங்காமல், கை தூக்கி விடாமல், உதவி செய்யாமல், மனிதர்கள் எப்படி சுயநல மூட்டையாக மாறிப்போனார்கள்? சகமனித சகவாழ்வு மறந்து போனதற்குக் காரணம் என்ன? சாதாரணக்காட்சியிலிருந்து அசாதாரணமான உண்மையை கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார் கல்யாண்ஜி.

வாழ்வின் நெருக்கடிகள் தான் கவிஞர்களைத் தூண்டுகின்றன. எல்லாக்கவிஞர்களுமே அதை வேறு வேறு விதமாகச் சொல்லிப் பார்க்கிறார்கள். வாழ்வின் சிடுக்குகளைப் புரிந்து கொள்ளவும், அவிழ்த்து விடவும் முயற்சிக்கிறார்கள். கல்யாண்ஜியின் கவிதையுலகு யதார்த்தமான வாழ்க்கைச் சித்திரங்களின் வழியே தன்னையும் வாழ்வையும் விசாரிக்க முயல்கிறது.

அலைச்சல்

இக்கரைக்கும் அக்கரைக்கும்

பரிசல் ஓட்டிப்

பரிசல் ஓட்டி

எக்கரை

என்கரை என்று

மறக்கும்

இடையோடும் நதி மெல்லச்

சிரிக்கும்.

வாழ்நாள் முழுவதும் எதைத் தேடி? எதற்காக? எங்கே ? என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து வாழ்வெனும் பெருநதி சிரிக்காமல் என்ன செய்யும்?

பேசும் பாரென் கிளியென்றான்

கூண்டைக் காட்டி வாலில்லை

வீசிப் பறக்கச் சிறகில்லை

வானம் கைப்பட வழியில்லை

பேசும் இப்போது பேசுமென

மீண்டும் மீண்டும் அவன் சொல்ல

பறவையென்றால் பறப்பதெனும்

பாடம் முதலில் படியென்றேன்.

கவி மனதின் கவிதை வெளிப்பாடுகள் ஒரு வாசகருக்கு வாழ்வின் வெம்பரப்பில் நம்பிக்கை தருகின்றன. விருட்சத்தின் நிழல் போல, தீராத தாகத்தின் போது கிடைத்த சுனை நீர் போல, அவரை ஆசுவாசப்படுத்துகிறது. அவரை யோசிக்க வைக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஆராயவும் அதை எதிர்கொள்ளும் மனதினைப் புரிந்து கொள்ளவும் தூண்டுகின்றன. கவிதை நேரடியான செய்தியாக இல்லாமல் பூடகமான, உருவகமான, மறைமுகமான, அநுபவங்களைச் சொல்லி விளங்க வைக்கின்றன. இதோ கல்யாண்ஜியின் இந்தக் கவிதையைக் கேளுங்கள்:

இந்த நுனியும் இன்னொரு நுனியும்

எனக்குள் ஒரு காடு இருந்தது

சில மிருகங்களூம் இருந்தன

வேட்டையாடத் தெரியவில்லை

அதற்குப் பதிலாகக்

காட்டையே அழிக்க வேண்டியதாயிற்று

காற்றுக் காலங்களில் இப்போது

என்மீது மகரந்தம் படிவதில்லை

இனப்பெருக்கப் பெயர்ச்சியில்

வெளிப்பறவைகள் முட்டையிட

எனக்குள் ஊடுருவிச் சிறகடிப்பதில்லை

கலவிக்கால அழைப்புடன் திரியும்

புலிகளின் மோக உறுமல்கள்

காதில் விழுவதில்லை

கிளர்ச்சியுற்ற இரவுகளில்

உச்சிநிலா வெளிச்சத்தில் வாசிக்கும்படி

கானகத்தின் கவிதை எழுதப்பட்ட சருகுகள்

காலருகில் நகர்ந்து வருவதில்லை

வனப்பூ சூடிய கூந்தலுடன்

தாண்டிச் செல்ல யாருமில்லை

மண்புழுக்கள் துளைத்து துளைத்து

மனதில் செம்மண் பூப்பதில்லை

மழைக்காலம் முடிந்ததும்

ஆதி விதைகள் பூமி கீறி எழும்

அநுபவத்தின் பரவசம் வாய்ப்பதில்லை

மூங்கில் தீ தொலைந்து விட்டது

முற்றிலுமாக.

இன்னொரு நுனியில் காடு இல்லாமல்

இந்த நுனியில் வீடு மட்டும் இருந்து

என்னசெய்ய?

மனமெனும் காட்டில் இயற்கையெனும் காட்டையே அழித்து விட்ட பின்பு எப்படி வாழ்வு சிறக்கும்? கவிதையின் ஒவ்வொரு வரிகளும் தருகின்ற பரவச அநுபவம் நம்மை நெகிழ வைக்கிறது. ஆற்றாமை கொள்கிறது. சிந்திக்க வைக்கிறது. வாழ்வைப் புரிந்து கொள்ளவும், அதை மேன்மைப்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது அத்துடன் இத்தகையக் கவிதைகளை எழுதிய கவிஞர் கல்யாண்ஜியை மனமார வாழ்த்துகிறது.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Thursday 16 October 2014

மரங்களும் மனிதர்களும்

உதயசங்கர்sundararamasamy

நமது வாழ்க்கை அநுபங்களால் கட்டமைக்கப்பட்டது. அநுபவங்கள் மூலமாக நமது அறிவு வளமை பெறுகிறது. நமது அறிவு வளத்தினால் வாழ்வில் எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வது எளிதாகிறது. ஒவ்வொருவரும் அவரவர் அநுபங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்போது கவிஞர் மட்டுமே அதைப் பொதுவானதாக்கி உலகத்தீரே என்று விளித்துச் சொல்கிறான். அதை கவிதை மொழியில் சொல்கிறான். கண்ணுக்குப் புலனாகாக் கிருமி எப்படி நுண்பெருக்கிக் கண்ணாடி வழியே பார்க்கும் போது எப்படிப் புலப்படுகிறதோ அப்படி இந்த வாழ்வின் அநுபவங்களின் வழியே வாழ்க்கையின் சாராம்சத்தைச் சொல்ல முயற்சிக்கிறான். எத்தனையோ தருணங்கள் கவித்துவத் தருணங்களாக எல்லோருக்கும் வாய்க்கின்றன. நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கும் லட்சியங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் மனதில் ஏற்படுத்துகின்ற சலனங்கள் அலைஅலையாய் முட்டி மோதுகின்றன.

இந்தச் சலனங்களை வெளிப்படுத்தவியலாத ஒரு கணத்தின் துளியில் மனம் நிறைகிற ஒரு ததும்பல். ததும்பி வழிகிற நிறைவை மொழியில் உருவகப்படுத்திப் பகிர்ந்து கொள்ள விழைகிற ஆவல். இந்த ஆவலின் வெளிப்பாடே கலையாக, கவிதையாகப் பரிணமிக்கிறது.

இயற்கையின் கொடையான மனிதன் அந்த இயற்கையினை தன் பேராசையெனும் கரண்டியினால் சுரண்ட ஆரம்பித்து விட்டான். இயகையின் அங்கமான மனிதனும் இயற்கையே. இதை உணராததால் இயற்கையை விட தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம் மேலோங்கி பூமிப்பந்தில் காயங்களை ஏற்படுத்துகிறான். இயற்கை விம்முகிறது. படைப்பே படைப்பாளியை அவமதிக்கிற செயலை எப்படிப் பொறுத்துக் கொள்ளும்?

தன் கவிதைகளாலும், கதைகளாலும், நாவல்களாலும், சிந்தனைத் தெறிப்பு மிக்க கட்டுரைகளாலும் தமிழிலக்கியத்தின் திசையைத் தீர்மானிப்பவராக இருந்த பசுவய்யா என்ற சுந்தரராமசாமி இயற்கை போலும் மனிதன் வாழ்வது பேரானந்தம் என்கிறார். அவருடைய கவிமனம் மரங்களோடு மனிதர்களை ஒப்பிடுகிறது. ” ஏண்டா மரம் மாதிரி நிற்கிறே “ என்ற உண்மைக்குப் புறம்பான நடைமுறையை மாற்றுகிறார் மரம் மாதிரி நிற்க முடியவில்லையே என்ற ஏக்கம் வரும் கவிதை இதோ:

விருட்ச மனிதர்கள்

மரங்கள் போல வாழ்வு என்று கிடைக்கும்?

மோனமும் அழகும் அங்கு கூடி நிற்கின்றன

கவலை இல்லை

விபத்தும் நோயும் வறுமையும் உண்டு

கவலை இல்லை

செடிகளின் வறுமை பற்றி யோசித்திருக்கிறோமா?

மிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள்

இவற்றின் துக்கங்களைப் பற்றி யோசித்திருக்கிறோமா?

இவற்றையும் சேர்ந்து யோசிக்கும்போது

நம் கஷ்டங்கள் தீரும்

மனிதனுக்காக ஜீவன்கள் அழிந்து கொண்டிருக்கும்

வரையிலும்

என்னை சந்தோஷமாக வை என்று

மனிதன் எப்படி யாரிடம் கேட்க முடியும்?

மரங்கள் உன்னதமானவை

கம்பீரமான எளிமை

நிர்மலமான இதயம்

மேலே மேலே செல்லும் அவா

சூரியக்கிரணங்களில் குளிப்பதில் மோகம்

மண்ணை எப்போதும் மறக்காத தன்மை

மௌனம்.

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்.

கவிஞரின் மெல்லிதயம் செடிகளின் வறுமையைப் பற்றி, மிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள் இவற்றின் துக்கங்களை யோசிக்கச் சொல்கிறார். மனிதர்கள் தங்கள் கஷ்டங்களைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு மற்றெல்லா உயிர்களின் கஷ்டத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டுகிறார். அதோடு மரங்களை மனிதர்களின் லட்சியமாக மாற்றி உருவகப்படுத்துகிறார். மனிதர்களை விருட்சமாக மாறத் தூண்டுகிறார். கவிதையை வாசித்து முடிக்கும் போது மரங்களின் மீது மரியாதை தோன்றுகிறது. மதிக்க வேண்டும் என்ற ஆவலும் அவற்றின் மீது அன்பும் பிறக்கிறது. அந்த அன்பு இயற்கையின் மீதான பேரன்பாக மாறி இந்த பூமிப்பந்தை நேசிக்கத்தூண்டுகிறது. நேசம். நேசம் மட்டும் தான். ஆம். நேசத்தை தவிர இந்த உலகில் எது மிஞ்சப்போகிறது?

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Wednesday 8 October 2014

காட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை

உதயசங்கர்

pichamurthy

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் அழகு குறையாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இன்னமும் இளமை குன்றாத தமிழ்க்கவிதை மரபின் தொடர்ச்சியாக புதுக்கவிதையாக பரிணமித்தது ந.பிச்சமூர்த்தி என்ற கவிஞரால். கவிதைக்கென்று இறுக்கமான இலக்கண வரையறைகள் இருந்த காலம் ஒன்று இருந்தது. சொல்லும் பொருளை விட சொல்லும் விதத்திற்கென கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. தளைகள் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்குத் தடையாக இருந்தன. மேற்கத்திய இலக்கியப் பரிச்சயம் புதிய வடிவங்களை நோக்கிய தேடலைத் தூண்டியது. எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வம் கொண்டு வந்து சேர்க்க புதிய படித்த மத்திய தர வர்க்கம் முனைந்தது. புலவர்களும், பண்டிதர்களும் பாதுகாப்பாக இலக்கணக்கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த கவிதைக்கு இந்த புதிய மத்திய தர வர்க்கம் சுதந்திரம் தந்து விரிந்த வான்வெளியில் பறக்க விட்டது. இன்றைக்கும் தன் சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கும் நவீன கவிதையின் பிதாமகன் என்று கவிஞர். ந.பிச்சமூர்த்தியைச் சொல்லலாம்.

ஒன்றை இன்னொன்றாக மாற்றிச் சொல்வது கவிதை. ஒன்றில் மற்றொன்றை ஏற்றிச் சொல்வது கவிதை. ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் சுட்டிச் செல்வது கவிதை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து வருவது கவிதை. ஆகக் கவிதையின் அழகே அதன் மறைபொருள் தான். எந்த மொழியில் கவிதைகள் அதிகம் எழுதப் படுகின்றனவோ அந்த மொழி இன்னும் வளமுடனும் இளமையுடனும் வாழ்கிறது என்று பொருள். மொழியின் நுட்பமும் அழகும் கவிதையில் தன் உச்சத்தை எட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் மொழி தன் அழகைத் தானே வியந்து அழகு பார்க்கவே கவிதையைப் படைக்கிறது என்று சொல்லலாம்.

ந.பிச்சமூர்த்தி காட்டு வாத்தின் வழியாக நம் வாழ்வை உருவகப்படுத்துகிறார்.

பூட்டியிருந்தால்

பேர்த்தெறிய முயலாதே

குடைக்கம்பி தேடாதே

கட்டிடம் கட்ட வரும் கடப்பாரையை

ஆயுதமாக்காதே

ரத்தத்துளியைப்

போர்க்கொடியின்

ஊடும் பாவுமாய் ஆக்காதே

புரட்டி எறியும் வெறும் வேலை

உனக்கில்லை

உலகைத் திருத்தும் உத்தமச்செய்கை

உனக்கேனப்பா?

என்று தொடரும் கவிதையில் லட்சிய வாதத்தின் பொய்மை கேலி செய்யப்படுகிறது. வாழ்வின் முரண்களான பொய், சூது, கபடம், நயவஞ்சகம், பழி, என்ற அனைத்தையும் சமூக நலன் என்று மயக்கு மொழிகள் கூறி வாழ்வை பாழாக்கும் வஞ்சகரைப் பழிக்கிறது.

உழைப்பாளியின் கையில் காசிருக்கும்

எனில் வயிறு கொடியில் உலரும்

பட்டினிச் சலிப்பின்

குறை தீர்க்கும் குளத்தில்

பெற்றோர்கள் குழந்தைகளுடன்

விழுந்து மிதந்த கதை

பத்திரிகை பேய்ப்பசிக்கு

பொரியாகிப் பெருமை தரும்

என்று சமூக நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் கவிதை

அன்றொரு நாள் வேடந்தாங்கலில்

அந்தி விழும் நேரம்

கடலலை போல நீர்ப்பரப்பு

நாற்கரையும் கவிந்த மரம்

நடுவில் மரத்தலைகள்

எண்திசையும் சிரிப்பது போல

சிறகடிக்கும் சத்தம்

………………………………………………………………..

………………………………………………………………

வேடந்தாங்கலில்

தண்ணீரில் மூழ்கிய தலைமயிர்

போல் விரிந்திருக்கும்

ஏரி நடு மரத்தில்

கூடு கட்டி வீடு கண்டு

முட்டை இட்டு குஞ்சு கண்டு

உயிரின் இயக்கத்தை

விண்டு வைக்கும் காவியத்தைக்

கண்டபின்னும் உன் வழியைக் காணாயோ?

என்று சைபீரியக் காட்டு வாத்தின் வலசை வரும் உள்ளுணர்வை வியந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டு வாத்தாகிச் சிறகை விரி. வாழ்வு வேடந்தாங்கலாகும். என்று முடியும் கவிதையில் கவிஞர். காட்டு வாத்தின் இயற்கையான உள்ளுணர்வை ஏற்று மனிதர்களின் சிறகுகளை விரிக்கச்சொல்கிறார். இந்தக் கவிதை தான் நவீன கவிதையின் சர்வ லட்சணங்களுடன் வெளியான முதல் கவிதை எனலாம். அந்த வகையில் கவிஞர். ந.பிச்சமூர்த்தி தமிழ்க்கவிதை வரலாற்றில் தனியிடம் பிடித்து விட்டார். பிச்சமூர்த்தி தொடங்கி வைத்த புதுக்கவிதை இயக்கம் இன்று ஆல் போல் பரவி விருட்சமாகி இந்தியாவின் அனைத்து மொழிக்கவிதைகளுக்கும் ஈடாக கவிதைகள் படைக்கும் பெருங்கவிஞர் குழாமை உருவாக்கி விட்டது என்றால் மிகையில்லை. கவிதை காட்டு வாத்தாகி இலக்கிய வானில் சிறகுகளை விரிக்கிறதே…நவீன கவிதையின் பிதாமகரே பிச்சமூர்த்தியே உங்களுக்கு வந்தனம்..

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Monday 6 October 2014

நவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன்

 barathi உதயசங்கர்

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.

தமிழிலக்கியத்தின் நவீன காலத்தை கவிதை, கதை, வசன கவிதை, பத்திரிகை, கேலிச்சித்திரம், நாடகம், என்று எல்லாத்துறைகளிலும் கட்டியம் கூறி வரவேற்ற எட்டையபுரத்து மகாகவி தான் பாஞ்சாலி சபதம் முன்னுரையில் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார். புலவர்களின் இலக்கணச் சிறையிலிருந்து கவிதையுணர்ச்சியை விடுதலை செய்து சுதந்திரமாக மனச்சிறகுகளை விரித்து கவிதை வானில் முதன்முதலில் பறக்கவிட்டவர் நம்முடைய பாரதி. தமிழின் வாழ்வுள்ள வரைக்கும் பாரதியின் கவிதைகள் தமிழர்களின் வீடுகள் தோறும் முழங்கும்.

ஒருமுறை பாரதி எட்டையபுரம் மன்னருடன் மதுரை சென்றிருந்த போது மன்னர் அவருக்கு வேண்டிய பொருள் வாங்குவதற்கு ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். பாரதி எட்டையபுரம் திரும்புகிறார். அவருடைய துணைவியார் செல்லம்மாள்பாரதி காண வீட்டுக்கு முன்னால் வண்டியிலிருந்து மூட்டை மூட்டையாய் சாமான்கள் இறங்குகின்றன. துணையாருக்கோ மகிழ்ச்சி. நிறைய துணிமணிகளும் வெள்ளிப்பாத்திரங்களும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று பூரிக்கிறார். பாரதி உள்ளே வந்து மூட்டைகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கிறார். அத்தனை மூட்டைகளிலும் புத்தகங்கள்! புத்தகங்கள்! புத்தகங்கள்! ஆங்கிலம் தமிழ், சமஸ்கிருதம் தமிழ் என்று புத்தகங்களைக் குவிக்கிறார். செல்லம்மாளின் முகம் வாடுகிறது. உடனே ஒரு சேலையை எடுத்து அவரிடம் நீட்டுகிறார் பாரதி. செல்லம்மாளின் முகம் மலர்கிறது. புத்தகங்கள் நமது அறிவை விசாலப்படுத்துகின்றன. புத்தகங்களே நமது மனதை விரிவுபடுத்துகின்றன. புத்தகங்களே நம்மை ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய மனிதர்களாக்குகின்றன.

இதோ பாரதியின் கவிதையைக் கேளுங்கள். இயற்கையை எளியபதங்களால் எப்படி வர்ணிக்கிறான். அதில் வாழ்வின் அர்த்தத்தையும் ஏற்றுகிறான் என்று பாருங்கள்.எதிரே நிற்கும் காற்றுடனான அவருடைய உரையாடலைக் கேளுங்கள்.

காற்றே வா, மெதுவாக வா

ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே

காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே

அலமாரிப்புத்தகங்களைக் கீழே தள்ளி விடாதே

பார்த்தாயா இதோ தள்ளி விட்டாய்

புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து விட்டாய்

மறுபடி மழையைக் கொண்டு வந்து சேர்த்தாய்

வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை

பார்ப்பதிலே நீ மகாசமர்த்தன்

நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை

நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்

நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத்தேவன் புடைத்து

நொறுக்கி விடுவான்

சொன்னாலும் கேட்க மாட்டான்

ஆதலால் மானிடரே வாருங்கள்

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்

கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்

உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்

உயிரை வலிமையுற நிறுத்துவோம்

உள்ளத்தை உறுதி செய்வோம்

இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகி விடுவான்

காற்று மெலிய தீயை அவித்து விடுவான்

வலிய தீயை வளர்ப்பான்

அவன் தோழமை நன்று

அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

ஞாயிறு, தீ, காற்று, காட்சி, சக்தி, என்று உலகத்தின் அத்தனை காட்சிகளையும், வாழ்வின் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய கவிதைகளில் எப்படியெல்லாம் ஏற்றிச் சொல்கிறான். ஒவ்வொரு வரியிலும் வாசிப்பவனின் மன விசாலத்திற்கேற்ப எத்தனை ஆழம்! எத்தனை அகலம்! பாரதியை வாசிக்கும் தோறும் நம் தமிழ்மொழியின் வளம் நம்மைத் திக்குமுக்காடச்செய்கிறது. வாசியுங்கள் பாரதியை! நேசியுங்கள் நம் தாய்மொழித்தமிழை!

வாழ்க பாரதி எங்கள் முன்னத்தி ஏரே! வாழ்க! உம்புகழ்!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Thursday 2 October 2014

நானும் பூச்சியும்

உதயசங்கர்

insects

நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

என் கவிதையை ஒரு பூச்சி வாசித்துக் கொண்டிருந்தது

எச்சரித்தும் அது விடாமல் என் கவிதையை

பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது

கைகளால் தட்டி விட்டும்

வாயினால் ஊதித்தள்ளியும்

விரட்டி விட யத்தனித்தேன்

என் கவிதையில் என்ன கண்டதோ தெரியவில்லை

மீண்டும் மீண்டும் வந்து எழுத்துகளின் மீது விழுந்தது

என் கவிதை பிடிக்காமல்

திடீரென அது என்னை வந்து கடித்து விட்டால்

உடனே கைகளால் தட்டி

காலினால் மிதித்து நசுக்கி விட்டேன்

நான் நசுக்கும்போது அதுவும்

கால்களினால் என்னை நசுக்கி விட்டது

இப்போது சாகாவரம் பெற்றது என் கவிதை.

Saturday 27 September 2014

விளாடிமீர் நீ எங்கே இருக்கிறாய்?

உதயசங்கர்

DSC01926

இந்த ஆண்டும் சைபீரியாவில் குளிர் காலம் துவங்கும் அறிகுறிகள் தோன்றிவிட்டன. காத்யா என்ற செங்கால்நாரை அவளுடைய அம்மாவுக்காகக் காத்திருந்தாள். வெளியே இரை தேடப்போன அவளுடைய அம்மா இரண்டு நாட்களாகியும் இன்னும் திரும்பவில்லை. அவளுடைய பாய்ஃப்ரெண்டு விளாடிமீர் வேறு காத்யாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவன் அவளிடம், “ வா.. நாம் போகலாம் உன் அம்மா பின்னால் வந்து விடுவாள்..” என்று சொல்லிச் சமாதானப்படுத்துகிறான். ஆனால் காத்யாவுக்கு அவளுடைய அம்மாவை விட்டு விட்டு வர மனமில்லை. அவள் விளாடிமீரிடம் “ ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்.. இன்னும் கொஞ்ச நேரம்.பார்க்கலாம்.” என்று கெஞ்சுகிறாள். பனியின் அடர்த்தி கூடி காற்று கனத்து வருகிறது. இன்னும் தாமதித்தால் பனி அடர்ந்த காற்றில் பறக்க முடியாது. விளாடிமீர் காத்யாவிடம் உறுதியாகச் சொல்கிறான்.

“ காத்யா..இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கும் ஆபத்து.. உன் அம்மா பின்னால் வந்து சேர்ந்து கொள்வாள்.. நம்பு..”

ஆனால் காத்யாவுக்குப் புரிந்து விட்டது. இனி ஒருபோதும் அம்மா திரும்பி வரமாட்டாள். துக்கத்துடன் விளாடிமீரைப் பார்த்தாள். அந்தப் பார்வையிலிருந்து என்ன புரிந்ததோ விளாடிமீர் தன் சிறகுகளை விரித்து ஒரு உலுப்பு உலுப்பிவிட்டு காற்றில் முன்னேறத் தொடங்கினான். நீண்ட பெருமூச்சுடன் காத்யாவும் விளாடிமீரைப் பின் தொடர்ந்தாள். இனி நீண்ட நெடிய பயணம் தான். சில நாட்களுக்குப் பின் காத்யாவும் தற்காலிகமாகத் தன் துக்கத்தை மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஆண்டுக்கு முன்னால் போன திசை எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது. ஏதோ நேற்று போய்வந்த மாதிரி இருக்கிறதே. எத்தனை விதமான நிலங்கள். எத்தனை விதமான பறவைகள். எத்தனை விதமான தப்பவெப்ப நிலைகள்..அடடா..

எத்தனை நாட்கள் கழிந்தன என்று தெரியவில்லை. கனவில் பறப்பது போலவே இருந்தது காத்யாவுக்கு. தன்னுடன் பறந்து வரும் தன் உறவினர்களான செங்கால்நாரை கூட்டத்தாரைப் பார்த்தாள். அவர்கள் அனைவரும் ஒரு தியானநிலையில் ஒரே குறிக்கோளுடன் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்த பயணத்திட்டம் அவர்களுடைய இனத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடியது என்ற சிந்தனை எல்லோரிடமும் இருந்தது. ஒரே சீராக சிறகுகளைக் காற்றில் விரித்து மிதந்தபடி எப்போதாவது சிறகுகளை அசைத்து காற்றின் நுட்பத்தையும் வலிமையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பறத்தலின் வேகத்தையும், தன்மையையும் மாற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்தார்கள்.

லேசான வெப்பக்காற்று வீசத்தொடங்கியது. இந்தியாவுக்குள் நுழைந்து விட்டோமென்று புரிந்தது. இது வரை சற்றும் முன்னும் பின்னுமாக பறந்து கொண்டிருந்த விளாடிமீர் இப்போது காத்யாவுடன் இணைந்து பறந்தான். அவ்வப்போது காத்யாவைக் காதலுடன் பார்த்து ” க்ர்ர்ர்க்க் ” என்று சிரித்தான். அவனுடைய காதலைப் புரிந்து கொண்ட விதமாக காத்யாவும் “ க்ர்ர்ர்க்க்” என்று பதில் சொன்னாள். தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி தென்கோடியை நோக்கிப் பறந்தனர். பார்க்கப் பார்க்க பழைய ஞாபகங்கள் அப்படியே பொங்கி வந்தன.

அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடம் ஒரு பெரிய குளம். தண்ணீர் கெத்து கெத்தென்று அலையடித்துக் கொண்டிருக்கும். கரையோரம் எங்கும் முள்மரங்கள் அடர்ந்து செறிந்திருக்கும். இதமான தப்பவெப்பம். நல்ல உயரமான முள் மரத்தைப் போனவுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நடாஷா பொறாமை பிடித்தவள். பேராசை கொண்டவள். தனக்கு மட்டும் தான் எல்லாம் வேண்டும் என்று நினைப்பாள். அவள் கண்படாமல் ஒதுங்கி ஒரு மரத்தில் கூடு கட்ட வேண்டும். விளாடிமீர் நல்ல ஆண்மகன். சிறந்த கூடு கட்ட உதவுவான். அந்தக் கூட்டில் நான் முட்டையிட்டு அதை அடை காப்பேன். எனக்குப் பசிக்கும்போது நான் இரை தேடப்போவேன். அப்போது விளாடிமீர் அடைகாப்பான். அவன் நல்ல தகப்பனாகவும் இருப்பான். நாங்கள் இருவரும் சேர்ந்து குஞ்சுகளை நன்றாக வளர்ப்போம். ஆம் பலசாலியாக. மறுபடியும் ஐயாயிரம் மைல் தூரம் போக வேண்டுமே. அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தக் குளத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு மீன்கள் இருக்குமே. அங்கே இந்தப்பருவத்தில் வந்து சேர்கிற நூற்றுக்கணக்கான பறவைகளுக்கான மீன்களைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கும் அந்தக் குளம். எத்தனை தலைமுறைகளைப் பார்த்திருக்கும் அந்தக் குளம். எத்தனை ஆயிரம் பறவைகள் தங்கள் இணையோடு வந்து குஞ்சுகளோடு குடும்பமாகத் திரும்பிப் போவதைப் பார்த்து ஆசீர்வதித்திருக்கும் அந்தக் குளம். இதையெல்லாம் நினைத்துப் பார்த்த காத்யாவுக்குக் கண்ணீர் பொங்கியது.

அப்போது திடீரென குழப்பமான குரல்கள் கேட்டன. ஒரே புலப்பமும், கோபமும், அழுகையுமாய் பறவைகளின் குரல்கள் ஒலித்தன. ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாதபடி குரல்கள் கலந்து ஒரே கூப்பாடாய்க் கேட்டது. அருகில் நெருங்கிப் பார்த்த காத்யாவுக்கும், விளாடிமீருக்கும், அவர்களுடைய கூட்டத்தாருக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தலைமுறை தலைமுறையாய் சைபீரியாவிலிருந்து வந்து இறங்குகிற அள்ளியள்ளி மீன்களைத் தின்னத் தருகிற அந்தக் குளம் அங்கே இல்லை. அந்தக் குளத்தைச் சுற்றி காடாய் வளர்ந்த முள் மரங்களும் அங்கே இல்லை. ஏன் அப்படியெல்லாம் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை.. அங்கே பதினைந்து தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு விரிந்து படர்ந்திருந்தது. அதன் நிழல் கூட கீழே விழவில்லை. காத்யாவுக்கு எதுவும் புரியவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அவளுடைய கனவுகள் எல்லாம் சில கணங்களிலேயே மடிந்ததை நினைத்து கரைந்தாள்.

நூற்றுக்கணக்கான பறவைகள் அழுது கரைந்தபடி அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அந்தப் பறவைகளின் அழுகுரலைக் கேட்டுப் பயந்து போன குடியிருப்பு வாசிகள் வனத்துறைக்குத் தகவல் சொன்னார்கள். வனத்துறையும் பொறுப்பாக வந்து இந்த நூற்றுக்கணக்கான பறவைகளை விரட்ட வழி தெரியாமல் பட்டாசு வெடித்தார்கள். கொடூரமான அந்தச் சத்தத்தினால் பயந்து அலறிய பறவைகள் திக்குத் தெரியாமல் பறந்தலைந்தன. அந்தக் களேபரத்தில் காத்யா விளாடிமீரைத் தொலைத்து விட்டாள். அவள் மட்டுமல்ல. இன்னும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்தங்களைத் தவற விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாயாஜாலம் போல அந்தக் குளமும் முள்மரங்களும் மறுபடியும் தோன்றி விடாதா ?

இப்போது காத்யாவும் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். சைபீரியாவை அவள் மறந்து விட்டாள். அவளுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் என்றாவது விளாடிமீர் வருவான். வந்து அவளை சைபீரியாவுக்கு அழைத்துக் கொண்டு போவான் என்று காத்திருக்கிறாள் காத்யா.. இரவின் அமைதியில் அவள் அழைத்துக் கொண்டிருக்கிறாள். விளாடிமீர்..என் அன்பே…நீ எங்கே இருக்கிறாய்? விளாடிமீர்..!…. …நீ எங்கே இருக்கிறாய்? அவளுடைய ஈரமான குரல் ஈரமில்லாத அந்தக் காங்கிரீட் அடுக்குமாடிக்கட்டிடத்தில் மோதிக் கொண்டேயிருக்கிறது….இன்னமும்…

 

DSC00207

Wednesday 17 September 2014

நவீனபுத்தம்

உதயசங்கர்buddha1

ஒரு போதும் ஒரு வார்த்தையும்

உதிர்க்காமல் உறைந்திருப்பதற்கு

ஒரு வார்த்தையேனும் பேசுங்கள்

ஒரு போதும் ஒரு செயலும்

செய்யாது வாளாவிருப்பதை விட

ஏதையேனும் செய்யுங்கள்

ஒரு போதும் ஒரு கனவும்

காணாது உறங்குவதை விட

ஒரு கனவையேனும் காணுங்கள்

ஒரு போதும் ஒருவரையேனும்

காதலிக்காதிருப்பதை விட

ஒரு முறையேனும் காதலியுங்கள்

ஒரு போதும் கருணைநதியில்

கை நனையாதிருப்பதை விட

ஒரு முறையேனும் காருண்யம் செய்யுங்கள்

ஒரு போதும் ஒரு துளிஅன்பையும்

யார் மீதும் வைக்காதிருப்பதை விட

ஒரு முழக்கயிற்றில் தொங்கி விடுங்கள்

உலகம் பிழைக்கட்டும்.

Tuesday 16 September 2014

புதிய அகராதி

உதயசங்கர்

Mohan Das (98)

மண்டியா தேசத்து ராஜா ஒரு குண்டக்கமண்டக்க ஆள். அவர் நினைப்பது போலத்தான் மண்டியா தேசத்து மக்களும் நடக்க வேண்டும். பாவம் மக்கள். ஒரு நாள் மண்டியா தேசத்து மண்டு ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு எப்போதும் அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். சிலநேரம் தூங்கி மறுநாள் காலையில் எழுந்திரிப்பதும் நடக்கும். அதிலொன்றும் விசேஷமில்லை. ஆனால் காலையில் எழுந்து சாயந்திரம் எழுந்தது மாதிரியே நடந்து கொள்வார். அரண்மனையில் விளக்கேற்றச் சொல்வதும் காலை பத்து மணியை இரவு பத்து மணியென்று நினைத்து மறுபடியும் தூங்கப் போய் விடுவார். சிலசமயம் இப்படியே ஒரு வாரம் வரை கூட இரவும் பகலும் மண்டுராஜாவுக்கு மாறி விடும். அதனால் என்ன என்கிறீர்களா? அவருக்கு மாறி விட்டதென்றால் மண்டியா தேசத்துக்கே மாற வேண்டும். அதான் பிரச்னை. மண்டுராஜா ஏதாவதொரு நாள் ஏதாவதொரு காலப்பொருத்தத்தில் மறுபடியும் சரியான சுழற்சியில் வரும்வரை மண்டியா மக்களும் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்க வேண்டியதிருக்கும்.

இப்பேர்ப்பட்ட மண்டு ராஜாவைப் பார்க்க அரண்மனைக்கு ஒரு நாள் மத்தியானம் ஒரு செந்நாப்புலவர் வந்தார். அப்போது தான் ராஜா ஏப்பம் விட்டு விட்டு வெத்திலையை அரைத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். செந்நாப்புலவரோ எப்படியாவது மண்டுராஜாவிடம் தன் மொழிப்புலமையெல்லாம் காட்டி ஏராளமான வெகுமதிகள் வாங்கிச் செல்லலாம் என்று ஆசைப்பட்டார். அதனால் ராஜாவைப் பார்த்து,

“பானை வயிறோனே

யானை நடையழகா

அறிவிற் சிறந்த அமுதோனே

அழகிற் சிறந்த அழகனே

இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார் புலவர். ராஜாவுக்கோ தூக்கம் வந்து விட்டது. அதோடு அவருடைய அழகைப் பற்றியும், அறிவைப் பற்றியும் அவருக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே செந்நாப்புலவர் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் கிண்டல் செய்கிறார் என்றும் நினைத்துக் கோபம் வந்தது. உடனே செந்நாப்புலவருக்கு ராஜாவைக் கேலி செய்ததற்காக நூறு கசையடி கொடுப்பதோடு இப்போது இருக்கிற மொழி அகராதியை மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்க வில்லையென்றால் அவருடைய தலையை சீவி விடும் படியும் ஆணையிட்டார்.

பாவம் செந்நாப்புலவர்! கெஞ்சிக் கதறி கசையடியிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஆனால் அகராதி எழுத வேண்டுமே. என்ன செய்ய… ஒரு முடிவு செய்தார். முட்டாள் என்றால் அறிவாளி என்று மாற்றினார். வருகிறேன் என்றால் வரமாட்டேன் என்று மாற்றினார். இப்படி எல்லாவற்றையும் நேரெதிராக மாற்றி எழுதி ராஜா கையில் கொடுத்து விட்டு மண்டியா தேசத்தை விட்டு ஓடியே போய் விட்டார். பொழுது போகாமல் இருந்த ராஜாவுக்கு இந்த அகராதி ரெம்பப் பிடித்துப் போய் விட்டது. உடனே நாட்டு மக்களுக்கு இந்த அகராதிப்படியே இனி பேசவேண்டும். எழுதவேண்டும் என்று ஆணையிட்டார். மன்னர் ஆணையாச்சே மீற முடியுமா? எல்லோரும் பள்ளிக்கூடம், வீடு, கடை, சாலை, எல்லாவற்றிலும் புதிய அகராதிப்படியே எல்லாம் மாற்றப்பட்டது. எப்படி?

வா என்று கூப்பிட்டால் போய் விடவேண்டும். போ என்று சொன்னால் வர வேண்டும். அதே போல தா என்றால் தரக்கூடாது. தராதே என்றால் தர வேண்டும். வேண்டும் என்றால் வேண்டாம் என்று அர்த்தம். வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம். மக்கள் குழம்பிப் போனார்கள். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாங்க என்று சொன்னால் அவர்கள் கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள். கடைகளில் பொருள் வேண்டும் என்று சொன்னால் வேண்டாம் என்று நினைத்து தரவில்லை. வேண்டாம் என்று சொன்னதையே தந்தார்கள். ராஜாவுக்கு ஜாலியாக இருந்தது. தினசரி அரண்மனை வேலையாட்களிடம் இந்தப் புதிய அகராதி விளையாட்டை விளையாடினார். அவர்கள் குழம்பிப் போய் ராஜா அழைத்தால் போவதா இல்லையா அழைக்காமலிருந்தால் அவரிடம் போய் நிற்க வேண்டுமா என்று புரியாமல் ராஜாவையேச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நாடே குழம்பிப் போயிருந்தது.

இந்த நேரத்தில் அருகிலிருந்த பிங்கிஸ்தான் நாட்டு ராஜா மண்டியா தேசத்தின் மீது போர் தொடுக்கப்போவதாக ஓலை அனுப்பியிருந்தார். மண்டியா தேசத்து ராஜா பயந்தாங்குளி அதுவும் போர் என்றால் அவ்வளவு தான். உடனே மந்திரியிடம் பதில் அனுப்பச் சொன்னார். மந்திரியும் பிங்கிஸ்தான் நாட்டுக்கு மண்டியா தேசத்து புதிய அகராதியின் படி ஓலை அனுப்பினார்.

“ நாங்கள் பலசாலி. போருக்குத் தயாராக இருக்கிறோம். உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்ட மாட்டோம். நீ ஒரு கோழை. போருக்கு வா..”

அவர் எழுதிய ஓலையைப் படித்த பிங்கிஸ்தான் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? மண்டியா தேசம் பிங்கிஸ்தானிடம் சரணடைந்தது. அப்போது தான் தெரிந்தது ஓலையின் புதிய மொழி அகராதி விவகாரம். மொழிபெயர்ப்பாளர் சொன்னார்.

“ நாங்கள் பலவீனமானவர்கள். போருக்குத்தயாராக இல்லை. உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்டி விடுகிறோம். நீ ஒரு பலசாலி. போருக்கு வர வேண்டாம்..”

பிங்கிஸ்தான் ராஜாவும் அந்த நாட்டு மக்களும் சிரிக்கிற சத்தம் கேட்கிறதா?

Monday 15 September 2014

ஜங்க் ஃபுட் தேசம்

உதயசங்கர்

child-obesity

மண்டியா தேசத்து ராஜா அரசவையில் உள்நாட்டு முதலாளிகளிடமும், வெளிநாட்டு முதலாளிகளிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார். எல்லா முதலாளிகளும் தங்களுக்குக் கிடைக்கும் லாபம் போதவில்லை. இன்னும் அதிகமான லாபம் கிடைக்க மண்டியாவில் சில சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராஜாவைச் சந்திக்க வந்திருந்தார்கள். இதெல்லாம் மந்திரிகளின் ஏற்பாடுதான். ஏனெனில் மந்திரிகளே வேறு ஆட்களின் பெயர்களில் நிறைய தொழிற்சாலைகளையும், கம்பெனிகளையும் நடத்தி வந்தார்கள். ராஜாவுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. முதலாளிகளின் வேண்டுகோளை ஏற்று பொருட்களின் விலையை ஏற்றுவதற்கு சம்மதித்தார். அதற்கான சட்டங்களில் கையெழுத்து போடப் போகும்போது அரண்மனைக்கு வெளியே கூச்சல், குழப்பம் கேட்டது.

ராஜா எழுந்து அரண்மனை உப்பரிகைக்குச் சென்று பார்த்தார். கூட்டம் கூட்டமாக விவசாயிகள் அரண்மனையின் வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். உடனே மந்திரியிடம் அவர்களை உள்ளே அனுப்பும்படி ஆணையிட்டார். அவ்வளவு பேரையும் உள்ளே அனுப்பினால் தாங்காது என்று நினைத்த மந்திரி ஒரு இருபது பேரை மட்டும் உள்ளே அழைத்து வர சேவகர்களுக்கு ஆணையிட்டார் மந்திரி. இருபது விவசாயிகள் ராஜாவைப் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ராஜா அவர்களிடம்

“ உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்.. மாதம் மும்மாரி பெய்கிறதல்லவா.. மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கிறதல்லவா?..”

என்று அப்பாவியாய் கேட்டார். அதற்கு அந்த விவசாயிகள் “ ராஜாதிராஜாவே.. மழை பெய்து இரண்டு வருடங்களாகி விட்டது… விவசாயம் பொய்த்து விட்டது..விவசாய நிலங்கள் அழிந்து வீடுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏதோ கொஞ்சநஞ்சம் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது… அதுவும் அழிந்து விடும் போல இருக்கிறது…நாங்கள் வாழ வழியின்றி தவிக்கிறோம்..”

என்று கண்ணீர் விட்டனர். அதைக் கேட்ட ராஜா மந்திரியைப் பார்த்தார். மந்திரி தலையைக் குனிந்து கொண்டார். ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் ராஜா மந்திரியிடம் மாதம் மும்மாரி பெய்கிறதா என்று கேட்கும்போது அவர் ஆமாம் ராஜாவே என்று பதில் சொல்லுவார். ராஜா விவசாயிகளை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே வந்தார்.

வெளிநாட்டு முதலாளிகளிடம் “ உங்கள் லாபம் அதிகரிக்க இன்னொரு புது வழி இருக்கிறது. கொஞ்சநஞ்சம் நடந்து கொண்டிருக்கிற விவசாயத்தையும் நிறுத்தி விடச் சொல்கிறேன்.. ஆனால் உங்கள் கம்பெனியிலிருந்து விலை மலிவாக என் நாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியுமா…”

என்று கேட்டார். உடனே அந்த முதலாளிகள் ஈயென்று பல்லைக் காட்டிய படியே, “ அப்படியே ராஜா.. உங்களுக்கு இலவசமாக ஆண்டு முழுவதும் உணவு கொடுத்து விடுகிறோம்.. ஏதோ ஏழை நாடுகளுக்கு எங்களால் இயன்ற சேவை….” என்று சொன்னார்கள். ராஜாவுக்கும் மகிழ்ச்சி. உடனே நாடெங்கும் முரசறையச் சொன்னார்.

ஐந்து பைசாவுக்கு டர்கரும், பத்து பைசாவுக்கு கூட்சாவும், ஏழு பைசாவுக்கு பாண்ட்விச்சும் மூன்று பைசாவுக்கு காக்கா, டூப்சி, குளிர்பானங்களும் இருபத்திநாலு மணி நேரமும் வீட்டுக்கு வீடு கொண்டு வந்து கொடுக்கப்படும். வீட்டிலிருந்த படியே கூப்பிடுவதற்கு அல்லைபேசி இலவசமாகத் தரப்படும். ஆனால் அதிலிருந்து அழைக்கப்படும் ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். உணவுப்பொருட்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்ப்பதற்கு வீட்டுக்கு வீடு விலையில்லா தொல்லைக்காட்சிப் பெட்டியொன்று வழங்கப்படும். ஆனால் அதில் விளம்பரங்களைத் தவிர வேறு எதுவும் ஒளிபரப்பாகாது. அப்படி நிகழ்ச்சிகள் இல்லாத சமயத்தில் தொல்லைக்காட்சிப் பெட்டியின் திரையில் கூட்சா தின்ற படி இருக்கும் ராஜாவின் அகன்ற முகம் மட்டுமே தெரியும். அதைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

இப்படியான அறிவிப்புகளை வெளிநாட்டு கம்பெனிகள் செய்ததைப்பார்த்து ராஜாவே மகிழ்ந்து போனார். இப்போது மக்கள் மூன்று வேளையும் கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, குருளைக்கிழங்கு சிப்ஸ், டப்பைக்கிழங்கு ஃபிங்கர்சிப்ஸ், என்று விதவிதமாகச் சாப்பிட்டுக் கொண்டு வீட்டிலேயே கிடந்தனர். விளம்பரங்கள் புதிது புதிதாக வந்தன. விளம்பரங்களில் மண்டியா தேசத்து மக்களின் மனங்கவர்ந்த சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் நடித்தனர். அவர்கள் சாப்பிடுவதனாலேயே மக்களும் அதைச் சாப்பிட்டனர். வியாபாரம் பெருகியது.

ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நம்முடைய பாரம்பரிய உணவுமுறைகளை மாற்றக்கூடாது. வெளிநாட்டு உணவுப்பொருட்களால் புதிய நோய்கள் உருவாகும் என்று மன்றாடினர். ஆனால் ராஜா கேட்கவில்லை. மந்திரியும் கேட்கவில்லை.

மண்டியா தேசத்தில் ஜங்க்ஃபுட் வியாபாரம் கொழித்து நடப்பதைக் கண்ட மற்ற வெளிநாட்டு முதலாளிகளும் இங்கே கடை விரித்தனர். ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைத்தனர். ராஜாவுக்கும் மக்களுக்கும் கொண்டாட்டம். ஆனால் நாட்டில் விவசாயம் இல்லை. ஒரு உணவுப்பொருள் கூட உற்பத்தி ஆகவில்லை. நாளாக நாளாக அரசாங்கத்தின் கஜானாவும், மக்களின் கைப்பணமும் கரைந்தது. சரியாக அந்த நேரத்தில் எல்லாவெளிநாட்டுக் கம்பெனிகளும் தங்களுடைய உணவுப்பொருட்களுக்கு விலையை ஏற்றி விட்டனர். மக்களால் வாங்க முடியவில்லை.

அதோடு இந்த கூட்சாவையும், டர்கரையும், பாண்ட்விச்சையும், காக்காவையும், டூப்சியையும் சாப்பிட்டு எல்லோரும் குண்ண்ட்ட்டாகி விட்டனர். சதை மலைகளைப் போல அசைந்து கொண்டிருந்தனர். உடல் மெலிய வெளிநாட்டு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்போது மண்டியாவின் பாரம்பரிய மருத்துவர் ஒருவர் எல்லோரும் மெலிவதற்கான மருந்துகளைச் சூத்திரமாக எழுதி வைத்திருக்கிறார் என்று ஒரு ரகசியப்பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. உடனே அந்த செய்தி மக்களிடம் பரவியது. பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுங்கள். உணவே மருந்து மருந்தே உணவு இதுவே மந்திரம்.மக்கள் இதைப் படித்தார்கள். என்றாலும்  மண்டியா நாட்டுக்குச் சொந்தமான, பாரம்பரியஉணவுப்பொருட்கள் என்னவென்றே எல்லோருக்கும் மறந்து போனது. அந்த கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, போன்ற உணவுப்பொருட்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். அதைச்சாப்பிடாமல் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

உங்கள் நாட்டில் அப்படியெல்லாம் இல்லை அல்லவா? அதற்கப்புறம் அந்த மண்டியா நாட்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா.. அந்த ஜங்க் ஃபுட் தேசம் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமையாகி விட்டது. அந்த நாட்டு தொல்பொருள்ஆய்வாளர்கள் மண்டியா நாட்டு பாரம்பரியமான உழவுத்தொழில் பற்றியும், உணவுப்பொருட்கள் பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…

Sunday 14 September 2014

நோயும் ஆரோக்கியமும் - ஒரு உளவியல் மற்றும் தத்துவப்பார்வை

 

உதயசங்கர்

abstract-landscape-paintings-common-thread 

நோய் என்பது ஒரு வெளிப்பாடு, ஒரு இருத்தல் நிலை, ( state of being ) ஒரு குறிப்பிட்ட நெருக்கடியான சூழ்நிலையில் உடலும் மனமும் மேற்கொள்ளும் செயல். அந்த வெளிப்பாடு அல்லது செயலின் மூலமாகவே உயிரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். உயிர் வாழ்வததொன்றே உயிரின் உச்சபட்ச லட்சியம். அந்த லட்சியத்துக்காக புறவயமாகவும், அகவயமாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது உயிரியக்கம். அந்த மாற்றங்களையே நாம் பொதுவாக நோய் என்கிறோம் இந்த மாற்றங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அகவயமான, புறவயமான நெருக்கடிகள் ஒட்டு மொத்த உயிரியக்கத்தில் நிரந்தரமாக ஏற்படுத்தும் மாற்றங்கள். ( chronic ) இரண்டாவது அவ்வப்போது தற்காலிகமாக புறவயமாக ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க உடலோ மனமோ மேற்கொள்ளும் செயல்கள். ( acute ). மூன்றாவது விபத்து, அறுவைச்சிகிச்சை, போன்ற வெளிப்படையான தாக்குதல்களுக்கு ( mechanical injuries ). ஈடு கொடுத்து உயிரியக்கம் ஏற்படுத்தும் மாற்றங்கள்.

நோய் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவதாக ஒட்டுமொத்த உயிரியக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள், அடுத்ததாக குறிப்பிட்ட இடங்களில், உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது நெருக்கடியில் உயிரியக்கம் உயிர் மீட்சிக்காக எடுக்கும் நடவடிக்கையினால் மட்டுமே அந்த உயிர் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிய உதாரணமாக தூசி நிறைந்த காற்றைச் சுவாசிக்கும் போது உயிரியக்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் நுரையீரல்களைப் பாதுகாக்கவும் எடுக்கும் நடவடிக்கையான தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை அந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை. அது நோய் அல்ல. அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கை. இந்தச் செயலுக்கு மருந்துகளோ, இதைச் சரி செய்ய வேண்டிய அவசியமோ கிடையாது.

ஒரு குறிப்பிட்ட நெருக்கடிநிலையில் உயிரியக்கம் அந்த நெருக்கடி நிலையிலும், அந்த நெருக்கடிநிலையிலிருந்து மீண்ட பிறகும் உயிர் வாழ வேண்டியுள்ளது. இதற்காக அந்த நெருக்கடிநிலைக்கு ஏற்றவாறு ஒரு தனித்தன்மையுள்ள நிலையை உயிரியக்கம் மேற்கொள்கிறது. அத்தகைய நிலைதான் நோய் நிலையாக ஆகிறது. குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு இணங்கிப் போவதற்காக உயிரோடிருப்பதைத் தொடர்ந்து இயக்கும் உயிர் இயக்கம் சார்ந்த எதிர்வினையே நோய். அதாவது நமது உயிரியக்க அமைப்பினால் மேற்கொள்ளப்படும் தனித்தன்மையுள்ள நிலை.

நோய் என்பது நீக்கப்பட வேண்டியதல்ல. மாற்றப்படவேண்டிய ஒன்று.

மேலே குறிப்பிட்ட நெருக்கடியோ, சூழ்நிலையோ, இல்லாத போதும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருப்பதான பாவனையில் உயிரியக்கம் எடுக்கும் அதே நடவடிக்கைகள் அதாவது தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை தான் சரி செய்யப்பட வேண்டியவை. இதையே நோய் என்கிறோம். கடுமையான நெருக்கடிகளிலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள உயிர் மேற்கொள்ளும் நடவடிக்கையே நோய் என்று புரிந்து கொணடோமானால் இந்த நடவடிக்கைகள் உயிரியக்கத்தில் சில பதிவுகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவுகள் மீண்டும் இதே போன்ற சூழ்நிலை அல்லது நெருக்கடிகள் வரும்போது மட்டுமே மீண்டும் இதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் உயிரியக்கத்தில் ஏற்பட்ட நலிவு காரணமாக இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதாவது இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் தான் நலமாக இருக்கமுடியும் என்ற தவறான பதிவு காரணமாக உண்மையில் நெருக்கடியான சூழ்நிலையில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இப்போது அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை இல்லாத போதும் தேவையான நடவடிக்கை என்ற பாவனை ஏற்பட்டு நிகழ்கிறது. அதன் மூலமே உயிர் தன்னை மீட்டுக் கொண்டதாகக் கற்பிதம் செய்கிறது. இந்தக் கற்பிதமே நோய்.

துரத்திவரும் அல்சேஷன் நாயிடமிருந்து தப்பிக்க ஓடுவது என்பது தான் அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் செய்ய வேண்டிய பொருத்தமான எதிர்ச்செயல். ஆனால் எந்த நாயும் துரத்தாத போதும் அல்லது குட்டி நாய் துரத்தும் போதும் தலை தெறிக்க ஓடும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் தான் நோய்நிலை. ஒரு முறை ஏற்பட்ட அநுபவமானது ( நெருக்கடிநிலை ) தங்களுடைய வேர்களின் மூலம் சில அனிச்சையான செயல்களை உருவாக்கி விடுகிறது. அந்த அநுபவத்தின் மூலம் ஏற்பட்ட நோய்நிலை தன் வேர்களை உயிரியக்கத்தில் விட்டுச் செல்வதன் மூலம் எத்தனை முறை பூட்டிய வீட்டின் பூட்டை இழுத்துப் பார்த்தாலும் மனம் சமாதனமடைவதில்லை என்பது மட்டுமில்லாமல் அனிச்சைச் செயலாக மாறி விடுவதும் உண்டு. பூட்டை இழுத்துப் பார்க்கும் நடவடிக்கை திருடர்களைப் பற்றிய நியாயமான பயத்தினால் அந்தச் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆனால் எந்த திருட்டுப் பயமும் இல்லாத போதும் பூட்டை இழுத்துப் பார்க்கும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் நோயாக மாறி விடுகிறது. அப்படி அனிச்சைச் செயலைச் செய்வதன் மூலமே அவர் தான் நலமாக இருப்பதான உணர்வைத் தருகிறது. ஆனால் தொடர்ச்சியான பொருத்தமற்ற எதிர்ச்செயல்கள் நோயின் ஆணிவேராக உருப்பெறுகின்றது. இந்த நோயின் வேர்கள் உயிரியக்கத்தில் வேர் கொண்டு விடுவதால் நாளடைவில் இதன் வளர்ச்சிப்போக்கில் விதை செடியாகி மரமாகி பூத்து காய்த்து கனிந்து விடுவதைப் போல இந்த நோய்நிலையும் பரம்பரை நோயாக மாறுகிறது.

நோயிலிருந்து மீட்டல்

ஒரு நெருக்கடிநிலைக்கு பொருத்தமற்ற எதிர்ச்செயலைச் செய்வதன் மூலம் நோய்நிலை உருவாகிறது. அதாவது அல்சேஷன் நாய்க்கும் குட்டி நாய்க்கும் உள்ள வித்தியாசத்தை உணரமுடியாமல் அல்சேஷன் நாய்க்கு எடுத்த எதிர்ச்செயலையே குட்டி நாய்க்கும் எடுக்கிறது உயிரியக்கம். இந்த நோய்நிலையைக் குணப்படுத்த பொருத்தமற்ற எதிர்ச்செயலை மாற்ற வேண்டும். நீக்கக்கூடாது. அதாவது பின்னால் துரத்திவருவது அல்சேஷன் அல்ல. அது ஒரு குட்டி நாய். அல்சேஷன் அளவுக்கு பயங்கரமானதோ, ஆபத்தானதோ இல்லை. அதற்கு தலைதெறிக்க ஓடும் எதிர்ச்செயல் தேவையற்றது. அல்சேஷனைக் கண்டு ஓடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று உயிரியக்கம் உணரவைத்தலே நோயிலிருந்து மீட்டல் ஆகும். அப்படி உணரும்போது உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயலை பொருத்தமான நெருக்கடிநிலை அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும்.

ஆரோக்கியம்

இதற்கு மாறாக ஆரோக்கியம் அந்தக் கணத்தில், அந்தக் கணத்தின் உயிர்த்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்ற மாதிரி ( கூடுதலாகவோ குறைவாகவோ அல்லாமல் ) எதிர்வினை புரிவதும், எதிர்கொள்வதும், சூழ்நிலையின் பரிமாணத்துக்கேற்ப துடிதுடிப்புடன் செயல்படுவதும், நெருக்கடியின் தன்மைக்கேற்ப உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதும் இயற்கைவிதிகளுக்கேற்ப உயிர் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் நிகழ்கிறது. சரியான சூழ்நிலையில் வளர்ந்து வரும் செடி பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதன் மூலம் சரியான சமயத்தில் சரியான காலத்தில் பூக்கிறது. அந்தப் பூக்கள் மணம் வீசி அனைவருக்கும் மகிழ்வூட்டுகிறது. ஆரோக்கியம் ஒன்றே எந்தத் தடையுமின்றி தன்னை முழுமையாகத் அர்ப்பணிக்கத் தூண்டுவது. எல்லா நரம்புகளும் முறுக்கேற்றப்பட்ட, வாசிப்பதற்குத் தயாராக உள்ள வீணை போன்றது ஆரோக்கியம். அதில் எல்லாஸ்வரங்களும், எல்லாராகங்களும் அலைகடலென பொங்கி வரும். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. எந்தத் தயக்கமோ, பயமோ, பிரமையோ, பலகீனமோ கிடையாது. இசைவெள்ளமென பாய்ந்து பரவத் தயாராக இருக்கும். ஆனால் ஏதேனும் ஒரு நரம்பு பலகீனமாக இருந்தாலோ, அறுந்து போயிருந்தாலோ, அந்த வீணையால் முழுமையான, பரிபூரணமான இசையைத் தர முடியாது. என்ன முயற்சி செய்தாலும் இசை ஊனமாகவே தான் பிறக்கும்.

எனவே ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள்.மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள்.

ஆரோக்கியமும் சிலபல முன்நிபந்தனைகள் கொண்டது. ஒரு தனிமனிதனோ, மனிதக்கூட்டமோ ஆரோக்கியமாக இருக்க அவர்களுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டும் காரணிகளாக இருக்க முடியாது. அவர்கள் வாழும் சமூகம், ஏற்றதாழ்வுகளில்லாத, சமத்துவமான, எல்லோருக்கும் இடமளிக்கிற, எல்லோரையும் அங்கீகரிக்கிற, எல்லோருக்கும் சமவாய்ப்பு தருகிற, போட்டி,பொறாமைகள் இல்லாத, பள்ளம் மேடில்லாத, நீதியான, அறவுனர்ச்சிமிக்க சமுகமாக இருக்கும்போதே சமூகம் முழுமைக்குமான உண்மையான ஆரோக்கியம் சாத்தியம். அதுவரை ஆரோக்கியம் என்பது தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் பெரும்போராட்டமே.

Camera360_2014_1_12_113310