Wednesday 17 September 2014

நவீனபுத்தம்

உதயசங்கர்buddha1

ஒரு போதும் ஒரு வார்த்தையும்

உதிர்க்காமல் உறைந்திருப்பதற்கு

ஒரு வார்த்தையேனும் பேசுங்கள்

ஒரு போதும் ஒரு செயலும்

செய்யாது வாளாவிருப்பதை விட

ஏதையேனும் செய்யுங்கள்

ஒரு போதும் ஒரு கனவும்

காணாது உறங்குவதை விட

ஒரு கனவையேனும் காணுங்கள்

ஒரு போதும் ஒருவரையேனும்

காதலிக்காதிருப்பதை விட

ஒரு முறையேனும் காதலியுங்கள்

ஒரு போதும் கருணைநதியில்

கை நனையாதிருப்பதை விட

ஒரு முறையேனும் காருண்யம் செய்யுங்கள்

ஒரு போதும் ஒரு துளிஅன்பையும்

யார் மீதும் வைக்காதிருப்பதை விட

ஒரு முழக்கயிற்றில் தொங்கி விடுங்கள்

உலகம் பிழைக்கட்டும்.

No comments:

Post a Comment