Showing posts with label ஜங்க் புட். Show all posts
Showing posts with label ஜங்க் புட். Show all posts

Monday, 15 September 2014

ஜங்க் ஃபுட் தேசம்

உதயசங்கர்

child-obesity

மண்டியா தேசத்து ராஜா அரசவையில் உள்நாட்டு முதலாளிகளிடமும், வெளிநாட்டு முதலாளிகளிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார். எல்லா முதலாளிகளும் தங்களுக்குக் கிடைக்கும் லாபம் போதவில்லை. இன்னும் அதிகமான லாபம் கிடைக்க மண்டியாவில் சில சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராஜாவைச் சந்திக்க வந்திருந்தார்கள். இதெல்லாம் மந்திரிகளின் ஏற்பாடுதான். ஏனெனில் மந்திரிகளே வேறு ஆட்களின் பெயர்களில் நிறைய தொழிற்சாலைகளையும், கம்பெனிகளையும் நடத்தி வந்தார்கள். ராஜாவுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. முதலாளிகளின் வேண்டுகோளை ஏற்று பொருட்களின் விலையை ஏற்றுவதற்கு சம்மதித்தார். அதற்கான சட்டங்களில் கையெழுத்து போடப் போகும்போது அரண்மனைக்கு வெளியே கூச்சல், குழப்பம் கேட்டது.

ராஜா எழுந்து அரண்மனை உப்பரிகைக்குச் சென்று பார்த்தார். கூட்டம் கூட்டமாக விவசாயிகள் அரண்மனையின் வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். உடனே மந்திரியிடம் அவர்களை உள்ளே அனுப்பும்படி ஆணையிட்டார். அவ்வளவு பேரையும் உள்ளே அனுப்பினால் தாங்காது என்று நினைத்த மந்திரி ஒரு இருபது பேரை மட்டும் உள்ளே அழைத்து வர சேவகர்களுக்கு ஆணையிட்டார் மந்திரி. இருபது விவசாயிகள் ராஜாவைப் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ராஜா அவர்களிடம்

“ உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்.. மாதம் மும்மாரி பெய்கிறதல்லவா.. மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கிறதல்லவா?..”

என்று அப்பாவியாய் கேட்டார். அதற்கு அந்த விவசாயிகள் “ ராஜாதிராஜாவே.. மழை பெய்து இரண்டு வருடங்களாகி விட்டது… விவசாயம் பொய்த்து விட்டது..விவசாய நிலங்கள் அழிந்து வீடுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏதோ கொஞ்சநஞ்சம் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது… அதுவும் அழிந்து விடும் போல இருக்கிறது…நாங்கள் வாழ வழியின்றி தவிக்கிறோம்..”

என்று கண்ணீர் விட்டனர். அதைக் கேட்ட ராஜா மந்திரியைப் பார்த்தார். மந்திரி தலையைக் குனிந்து கொண்டார். ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் ராஜா மந்திரியிடம் மாதம் மும்மாரி பெய்கிறதா என்று கேட்கும்போது அவர் ஆமாம் ராஜாவே என்று பதில் சொல்லுவார். ராஜா விவசாயிகளை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே வந்தார்.

வெளிநாட்டு முதலாளிகளிடம் “ உங்கள் லாபம் அதிகரிக்க இன்னொரு புது வழி இருக்கிறது. கொஞ்சநஞ்சம் நடந்து கொண்டிருக்கிற விவசாயத்தையும் நிறுத்தி விடச் சொல்கிறேன்.. ஆனால் உங்கள் கம்பெனியிலிருந்து விலை மலிவாக என் நாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியுமா…”

என்று கேட்டார். உடனே அந்த முதலாளிகள் ஈயென்று பல்லைக் காட்டிய படியே, “ அப்படியே ராஜா.. உங்களுக்கு இலவசமாக ஆண்டு முழுவதும் உணவு கொடுத்து விடுகிறோம்.. ஏதோ ஏழை நாடுகளுக்கு எங்களால் இயன்ற சேவை….” என்று சொன்னார்கள். ராஜாவுக்கும் மகிழ்ச்சி. உடனே நாடெங்கும் முரசறையச் சொன்னார்.

ஐந்து பைசாவுக்கு டர்கரும், பத்து பைசாவுக்கு கூட்சாவும், ஏழு பைசாவுக்கு பாண்ட்விச்சும் மூன்று பைசாவுக்கு காக்கா, டூப்சி, குளிர்பானங்களும் இருபத்திநாலு மணி நேரமும் வீட்டுக்கு வீடு கொண்டு வந்து கொடுக்கப்படும். வீட்டிலிருந்த படியே கூப்பிடுவதற்கு அல்லைபேசி இலவசமாகத் தரப்படும். ஆனால் அதிலிருந்து அழைக்கப்படும் ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். உணவுப்பொருட்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்ப்பதற்கு வீட்டுக்கு வீடு விலையில்லா தொல்லைக்காட்சிப் பெட்டியொன்று வழங்கப்படும். ஆனால் அதில் விளம்பரங்களைத் தவிர வேறு எதுவும் ஒளிபரப்பாகாது. அப்படி நிகழ்ச்சிகள் இல்லாத சமயத்தில் தொல்லைக்காட்சிப் பெட்டியின் திரையில் கூட்சா தின்ற படி இருக்கும் ராஜாவின் அகன்ற முகம் மட்டுமே தெரியும். அதைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

இப்படியான அறிவிப்புகளை வெளிநாட்டு கம்பெனிகள் செய்ததைப்பார்த்து ராஜாவே மகிழ்ந்து போனார். இப்போது மக்கள் மூன்று வேளையும் கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, குருளைக்கிழங்கு சிப்ஸ், டப்பைக்கிழங்கு ஃபிங்கர்சிப்ஸ், என்று விதவிதமாகச் சாப்பிட்டுக் கொண்டு வீட்டிலேயே கிடந்தனர். விளம்பரங்கள் புதிது புதிதாக வந்தன. விளம்பரங்களில் மண்டியா தேசத்து மக்களின் மனங்கவர்ந்த சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் நடித்தனர். அவர்கள் சாப்பிடுவதனாலேயே மக்களும் அதைச் சாப்பிட்டனர். வியாபாரம் பெருகியது.

ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நம்முடைய பாரம்பரிய உணவுமுறைகளை மாற்றக்கூடாது. வெளிநாட்டு உணவுப்பொருட்களால் புதிய நோய்கள் உருவாகும் என்று மன்றாடினர். ஆனால் ராஜா கேட்கவில்லை. மந்திரியும் கேட்கவில்லை.

மண்டியா தேசத்தில் ஜங்க்ஃபுட் வியாபாரம் கொழித்து நடப்பதைக் கண்ட மற்ற வெளிநாட்டு முதலாளிகளும் இங்கே கடை விரித்தனர். ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைத்தனர். ராஜாவுக்கும் மக்களுக்கும் கொண்டாட்டம். ஆனால் நாட்டில் விவசாயம் இல்லை. ஒரு உணவுப்பொருள் கூட உற்பத்தி ஆகவில்லை. நாளாக நாளாக அரசாங்கத்தின் கஜானாவும், மக்களின் கைப்பணமும் கரைந்தது. சரியாக அந்த நேரத்தில் எல்லாவெளிநாட்டுக் கம்பெனிகளும் தங்களுடைய உணவுப்பொருட்களுக்கு விலையை ஏற்றி விட்டனர். மக்களால் வாங்க முடியவில்லை.

அதோடு இந்த கூட்சாவையும், டர்கரையும், பாண்ட்விச்சையும், காக்காவையும், டூப்சியையும் சாப்பிட்டு எல்லோரும் குண்ண்ட்ட்டாகி விட்டனர். சதை மலைகளைப் போல அசைந்து கொண்டிருந்தனர். உடல் மெலிய வெளிநாட்டு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்போது மண்டியாவின் பாரம்பரிய மருத்துவர் ஒருவர் எல்லோரும் மெலிவதற்கான மருந்துகளைச் சூத்திரமாக எழுதி வைத்திருக்கிறார் என்று ஒரு ரகசியப்பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. உடனே அந்த செய்தி மக்களிடம் பரவியது. பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுங்கள். உணவே மருந்து மருந்தே உணவு இதுவே மந்திரம்.மக்கள் இதைப் படித்தார்கள். என்றாலும்  மண்டியா நாட்டுக்குச் சொந்தமான, பாரம்பரியஉணவுப்பொருட்கள் என்னவென்றே எல்லோருக்கும் மறந்து போனது. அந்த கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, போன்ற உணவுப்பொருட்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். அதைச்சாப்பிடாமல் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

உங்கள் நாட்டில் அப்படியெல்லாம் இல்லை அல்லவா? அதற்கப்புறம் அந்த மண்டியா நாட்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா.. அந்த ஜங்க் ஃபுட் தேசம் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமையாகி விட்டது. அந்த நாட்டு தொல்பொருள்ஆய்வாளர்கள் மண்டியா நாட்டு பாரம்பரியமான உழவுத்தொழில் பற்றியும், உணவுப்பொருட்கள் பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…

Monday, 28 May 2012

மறுக்கும் பக்குவம்

child-obesitykoke

உதயசங்கர்

 

இப்போது பெரியவர்களாக இருக்கும் பெரும்பான்மையோருக்கு தங்கள் பாலியகாலம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. எல்லா வீடுகளிலும் குஞ்சும் குறுமானுமாக குழந்தைகளின் நெருக்கடி. போதும் போதாத வருமானம், அப்போதும் இருந்த விலைவாசி, வேலையின்மை, நிரந்தரமான எதிர்காலப் பயத்திலேயே வாழ்நாளைத் தள்ளிக் கொண்டிருந்த பெற்றோர்கள். ஒண்டிக்குடித்தனம், வாடகை வீடு, தண்ணீர் பிரச்சனை, உணவுப்பற்றாக்குறை என்று ஏராளமான குறைகளுடனே வளர்ந்தவர்கள் இன்றிருக்கும் பெரியவர்கள். இதோடு மட்டுமா? வீட்டில் அடி உதை பள்ளிக்கூடத்தில் தண்டனைகள், வெளியில் குழந்தைகள் என்றாலே ஏளனம் என்று எப்போதும் மனம் சோர்வுறும் வகையிலேயே வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்களுடைய குழந்தைப்பருவம் போல தங்களுடைய குழந்தைகளுக்கும் அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள் அது நியாயம் தான்.

தங்கள் பெற்றோரை விட சற்றே கூடுதலான வசதி வாய்ப்புகளைப் பெற்ற இன்றைய பெரியவர்கள், அதிலும் குறிப்பாக மத்தியதர வர்க்கப் பெற்றோர்கள், இன்னொரு விபரீதமான முடிவெடுத்து குழந்தைகளின் ஆளுமையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தாங்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த எதிர்மறைச்சொற்களான இல்லை முடியாது வேண்டாம் இவற்றைத் தங்களுடைய குழந்தைகள் கேட்கவே கூடாது என்று தீர்மானமான முடிவெடுக்கிறார்கள். தாங்கள் அடைந்த ஏமாற்றங்களைத் தங்களுடைய குழந்தைகள் அடையவே கூடாது என்று மனதுக்குள் சத்தியம் செய்து கொள்கிறார்கள். தனக்குக் கிடைக்காத எல்லாமும், தான் ஆசைப்பட்ட எல்லாமும் தங்களுடைய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றார்கள். இதன் விளைவாக தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த உணவு, சிறந்த உடை, சிறந்த கல்வி (?) சிறந்த இருப்பிடம் சிறந்த விளையாட்டுகள், சிறந்த பொழுதுபோக்குகள் இன்னும் சிறந்த சிறந்த என்று எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவற்றை தேர்ந் தெடுக்க ஆசைப்படுகின்றனர். படித்து நல்ல அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்ற மத்தியதர வர்க்கத்தினரின் குணநலன்களை யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ இல்லையோ முதலாளிகளும், வியாபாரிகளும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே பெரும்பாலான இன்றைய பொருட்களின் விளம்பரங்களில் குழந்தைகள் வருகிறார்கள். நம்மிடம் அந்தப்பொருட்களின் சிறப்புகளைப்பற்றி ஒரு விஞ்ஞானியைப் போல ஆனால் குழந்தைத்தனத்துடன் எடுத்துரைக்கிறார்கள். அத்தோடு அந்தப்பொருள்தான் உலகத்திலேயே சிறந்த பொருள் என்றும் அதை வாங்குவதின் மூலமே பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமையை செய்ததாக, அர்த்தமாகும் என்று எமோசனலாக, செண்டிமெண்டலாக, மனதைத்தொடுகிறார்கள் பல விளம்பரங்களின் முடிவில் பெருமிதமான உணர்வில் கண்கலங்கும் பெற்றோர்களின் குளோசப் முகங்களும், மகிழ்ச்சியில் திளைக்கும், பெற்றோர்களை நன்றிப்பெருக்கோடு அணைத்து மகிழும் குழந்தைகளின் குளோசப்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் மனநிலையும் குழந்தைகளின் மன நிலையும் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சாதாரணமாக எந்தப்பொருள் வாங்கினாலும் அந்தப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் நம்மிடம் கிடையாது. விளம்பரம் செய்தால் போதும் அது நல்ல பொருள்தான் அதிலும் சினிமா, கிரிக்கெட். நடசத்திரங்கள், குழந்தைகள், பெண்கள் வந்து சிபாரிசு செய்தால் அது கண்டிப்பாக மிகச்சிறந்த பொருளாகத்தான் இருக்கும் என்ற மூடநம்பிக்கை பெரும்பான்மையோருக்கு இருக்கிறது மூடநம்பிக்கை எதில் வேண்டுமானாலும் வரலாமே உடனே அந்தப்பொருளை வாங்கிக் குழந்தைக்குக் கொடுப்பதில் ஒரு ஆனந்தம், சாக்லேட், பி°கட், கோக், பெப்சி, பற்பசை, கொசுவர்த்தி, சோப், நகைகள், கார், கணினி, ஹெல்த் டிரிங்க்°, ஜங்க் புட்°, என்று எல்லாவற்றிற்கும் குழந்தைகள் வருகிறார்கள். பெற்றோர்களும் அகமகிழ்ந்து அவரவர் வசதிக்கேற்ப வாங்கித் தருகிறார்கள். பின்பு பெருமையுடன் “சாப்பிடும் போது எம்பையனுக்கு எப்பவும் கோக் இருக்கணும்..... என்ன சொல்ல முடியுது இந்தக்காலத்து பிள்ளைங்ககிட்ட..... என்றோ” இவ.... “இந்த சேவு மிக்சர் எல்லாம் சாப்பிட மாட்டா.... ஒன்லி சாக்லேட், பர்கர், பிட்ஸா, சாண்ட்விச்... அவ படிக்கிற °ஸ்கூல் இண்டர்நேஷனல் °ஸ்கூலாச்சே.... அதான்.....”

என்றோ பெருமையுடன் பேசுகிற பெற்றோர்களும், குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடி, ஆங்கிலக்கனவானாக வளர்க்க நினைக்கும் பள்ளிக்கூடங்களும் தாய்மொழியை வேலைக்காரர்களின் மொழி என்று நினைக்கிற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் சூழலும் சில பல தலை முறைகள் தமிழ் வாசிக்கத் தெரியாமலும், எழுதத்தெரி யாமலும், அப்படியே எழுதத்தெரிந்தாலும் எழுத்துப் பிழைகளும் அர்த்த விபரீதங்களும் நிறைந்ததாக எழுதுகிற தலைமுறைகள் வந்திருப்பதற்கு பெற்றோர்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற போதம் இல்லாமல் எதிர்காலத்தலைமுறைகளை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

கோக், பெப்சியில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட், ஹைட்ரேகுளோரிக் ஆசிட்டினால் இரைப்பையில் அரிப்பு, புண்கள் ஏற்படும் என்று தெரியாதா? சாக்லேட்டில் உள்ள கோக்கோவினால் குழந்தைகளின் பற்கள் சொத்தை விழுவது மட்டுமல்ல, பிடிவாத குணமும் அதிகரிக்கும் என்று தெரியாதா? ஜங்க்புட்°களால் உடல்பருமனும், சிலருக்கு கேன்சரும் வரும் என்றுதான் தெரியாதா? இப்படிக்கேட்டால் நிறைய்யப்பேர் அய்யய்யோ...உண்மையில் தெரியாது என்று சொல்வார்கள் இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் விளம்பரக்காட்சிகளின் மனோவியல் தாக்குதல்களுக்கு முன்னால் எப்போதோ கேட்கவோ, வாசிக்கவோ நேர்கிற அறிவார்ந்த, பகுத்தறிவு பூர்வமான விளக்கங்கள் எடுபடுவது சிரமம்தான்.

ஆனால் குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கிற மனோநிலையை மாற்றலாம். கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலை விபரீதமான, முரட்டுத்தனமான, பிடிவாத குணத்தைக்குழந்தைகளிடம் வளர்க்காதா? ஏற்கனவே கூட்டுக்குடும்பங்கள் சிதைந்த நிலைமையில் உறவுகளே இல்லாத நிலையில், இத்தகைய பிடிவாத மனநிலை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுயோசித்திருக்கிறோமா? இந்தக்குழந்தைகள் பெரியவர்களாகி வெளியுலகை சந்திக்க நேர்கிற போது, ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தச் சமூகத்தின் குரூரம் முகத்திலறையும் போது என்ன ஆவார்கள் என்று யோசித்திருக்கிறோமா? எனவே குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கித் தருகிற, அங்கீகரிக்கிற மனநிலையைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். குழந்தைகளிடம் மறுக்க வேண்டும். பக்குவமாக, மென்மையாக, ஆனால் அழுத்தமாக மறுக்க வேண்டும். குழந்தைகள் முதலில் ஏமாற்றமடையலாம். அழுது புலம்பலாம். ஆர்ப்பாட்டம் செய்யலாம், மௌனமாக ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் பெற்றோர்களுக்கு மறுக்கின்ற பக்குவம் வேண்டும். நல்ல விஷயங்கள் எது எது என்று பெற்றோர்கள் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளிடம் கெட்ட விஷயங்களைப் பற்றி விளக்க முடியும். இதமான மனநிலையில் குழந்தைகளிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அவர்களுக்கு உண்டு. சொல்கிற விஷயம் குறித்து நமக்கு சந்தேகம் இருக்கக் கூடாது. தெளிவாக, பெருமிதமான உணர்வோடு அவற்றைப்பற்றி எடுத்துச்சொல்லும்போது அதே பெருமித உணர்வும் தெளிவும், பக்குவமும் குழந்தைகளிடம் ஏற்படும். தங்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு நல்ல விஷயங்களையேச் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை வளரும். அதற்கு முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுவரவேண்டும். அந்த விழிப்புணர்வைப் பெற பெற்றோர்கள் முன்வரவேண்டும் வருவார்களா?