Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Saturday, 9 June 2012

கதையின் ஆதிபருவம்

 pictures உதயசங்கர்

குரங்கிலிருந்து உழைப்பின் வழியாகவே மானிட இனம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அந்தப் பரிணாமவளர்ச்சியின் பாதையில் விலங்கின் மூளை மனித மூளையாக மாறத் தொடங்குகிறது. அதன் வரையறை குட்பட்ட சைகை மற்றும் ஒலிக்குறிப்புகள் தன் எல்லையை விரிகிறது. அதற்கு முன்புவரை விலங்குகள், பறவைகள்,பூச்சிகள், எல்லாமும் சில குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகளின் மூலம், சைகை மற்றும் உடல் மொழியின் மூலம் தங்கள் தேவைகளான பசி, கோபம், பயம், இணைவிழைச்சு, என்று எல்லா உணர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. இந்த சைகை, உடல், ஒலி, மொழியை அவைகள் கற்றுக் கொள்வதில்லை. பிறக்கும்போதே அதன் உள்ளுணர்வின் ஆழத்தில், தலைமுறை தலைமுறையாக, தொடர்ந்து வருகின்றன. அவை புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது திகைத்துப் போய்விடுகின்றன. தங்கள் ஆதிஞாபகச் சில்லுகளில் தேடிப்பார்த்து ஏமாந்து போகின்றன. குறிப்பிட்ட, வரையறைக்குட்பட்ட,சைகை,மற்றும் உடல் மொழி, ஒலிக்குறிப்புகளைத்தாண்டி அவற்றால் புதிதாகச் சிந்திக்க முடிவதில்லை.

ஆனால் மனிதன் அப்படியில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக்குறித்தும் தன்னுடைய சூழல் குறித்தும் புறவயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். தன்னைக்குறித்து தனியாகவும், சூழலோடு பொருத்தியும், சிந்திக்கிற மனிதனின் ஆற்றலையே பகுத்தறிவு என்கிறோம். மற்ற உயிரினங்களுக்கோ தன்னைச் சூழலில் இருந்து பிரித்துணரும் ஆற்றல் கிடையாது. இயற்கையோடு இணைந்தே அவை தங்களுடைய தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எனவே அந்த இயற்கைச் சூழல் மாறும்போது அல்லது அழியும்போது மாறிய சூழலுக்கேற்ப தங்களுடைய தகவமைப்புகளை மாற்ற முடியாத உயிரினங்கள் அழிந்து விடுகின்றன். பரிணாமக்கோட்பாட்டின் மூலமாக மனிதகுல வரலாற்றில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்திய டார்வினின், தகுதியானவைகளின் உயிர்மீட்சி (survival of the fittest  ) என்ற கொள்கையின்படி இயற்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாத எல்லா உயிரினங்களுமே வாழ்வதற்கான தங்களுடைய தகுதியை இழந்து விடுகின்றன.ஆனால் மனிதர்கள் மட்டுமே தன்னுடைய உழைப்பின் மூலமும் பகுத்தறியும் திறன் மூலமும், இயற்கையின்மீது வினை புரிந்து தாங்கள் வாழத்தகுதியாக இயற்கையை மாற்றுகிற வல்லமை பெற்றவர்களாக மாறியிருக்கின்றனர்.

உழைப்பு சகமனிதர்களுடனான உறவில் பெரும் மாற்றத்தை உருவாக்குகிறது. தங்களுடைய வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, விலங்கு பருவத்திலிருந்த பழைய சைகை மற்றும் உடல்மொழியும், ஒலிக்குறிப்புகளும், போதுமானவைகளாக இல்லை. அப்போது புதிய சைகை மற்றும் உடல்மொழியும் புதிய ஒலிக்குறிப்புகளை சிருஷ்டிக்கின்றனர். சிந்தனையின் ஒளி தன் கிரணங்களை மெல்ல முகிழ்க்கிறது. மனிதமூளையின் மடிப்புகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவங்களை, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளும் பேராவல் அதிகரிக்கின்றது. இந்தப் பேராவலில் விளைந்த பயிர் தான் கதை என்று சொல்லலாம். கடந்த காலத்தைச் சொல்கிற சமூகச் செயல்பாடாகவே ஆதியில் கதைசொல்லுதல் தொடங்கியிருக்கலாம். முதலில் இது குகைப்பாறைக் கீறல்களாக, ஓவியங்களாக, குறியீடுகளாக,அடையாளச் சின்னங்களாக, மெல்ல மெல்ல மனிதனின் நனவிலி மனதில் பெரும் விருட்சமென வளர்ந்திருக்கிறதுகதை. மொழி தோன்றியவுடன் கதைகள் ஆயிரங்கால் பூச்சிகளைப் போல ஊர்ந்து சென்று மனித உயிரில் குடியேறிவிட்டது. பின்னர் கற்பனைகளும், புனைவும் பிறந்து கதைகளை மனித இனத்தின் மூச்சாக மாற்றி விட்டது.

ஆதியில் வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்த போது தன்னுடைய வேட்டையனுபவங்களைக் கதையாக மாற்றினான். ஆற்றங்கரை நாகரிகத்தில் வேளாண்சமூக அனுபவங்களை கதையாக மாற்றினான். மனித சமூகத்தின் உற்பத்திசக்திகளின் மாற்றத்திற்கேற்ப கதைகளும் மாறிக் கொண்டே வந்தன. கதையின் உடல் முழுவதும் மனிதகுலவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறபோது புதிது புதிதாகப் பிறக்கிறது. கதை சொல்வது படைப்பூக்கஉணர்வைத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பழைய கதையாக இருந்தாலும் கதை சொல்பவர் அதை அப்படியே சொல்வதில்லை. கதை கேட்பவரும் அதை அப்படியே கேட்பதும் இல்லை. எனவே தான் கதைகளுக்கு என்றும் மூப்பில்லை. அன்றலர்ந்த மலர் போல மலர்ந்து கொண்டேயிருக்கின்றன கதைகள்.

ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுடைய வெற்றிகளை, தோல்விகளை, வேட்கைகளை, கொண்டாட்டங்களை, கனவுகளை, கதைகளுக்குள் நேரிடையாகவும், மறைமுகமாகவும், பொதிந்து வைத்திருக்கின்றன. அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தவும் செய்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட பிரதேசமும், மண்ணும் நீர்வளமும், இயற்கையும், வாழ்நிலையும் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்துக்கென்றே பிரத்யேகமான கதைகளை உருவாக்குகின்றன. இந்தக் கதைகள் அந்த இனக்குழுவின், அந்த வட்டாரத்தின் மொழிப்பிரயோகம், பழக்க வழக்கங்கள், வரலாறு, பண்பாட்டைத் தெரிவிக்கின்றன.

இன்று ஒற்றைக் கலாச்சாரத்திணிப்பினால் நம் பன்முகக் கலாச்சாரத்தின் வேர்கள் அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே போல தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன் கேம்ஸ்,என்று நவீன சாதனங்கள் பெருகி கதை சொல்லும் நம் மரபினை அரித்துக் கொண்டிருக்கின்றன. பழங்கதைகள்,நாடோடிக் கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வீரகதைகள், துப்பறியும் கதைகள், மந்திரக்கதைகள், ராஜாராணிக்கதைகள், புதிர்க்கதைகள், விடுகதைகள், பஞ்சதந்திரக் கதைகள், என்று கதைகள் தான் எத்தனை வகை?

இன்று குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு தாத்தாக்களோ,பாட்டிகளோ, வீடுகளில் இல்லை. அப்பா, அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடப் பயிற்சிக் கூடங்களாகி விட்டன. ஆனாலும் குழந்தைகள் கதைகளைத் தங்களுக்கே உரிய பாணியில் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளிடம் தான் கதையின் மலர் பூத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு குழந்தை இப்படிக் கதை சொல்லியது; ஒரு வீட்ல களவாணிப்பய வந்து எல்லாத்தையும் சுருட்டி எடுத்துகிட்டுப் போகும் போது அந்த வீட்ல இருந்த குழந்தை பாத்துருச்சி.. அது உடனே களவாணிப்பய கிட்ட என்ன சொல்லுச்சி தெரியுமா? மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்துகிட்டுப் போயிரு..இல்லேன்னா அப்பாவை எழுப்பிருவேன்.

Tuesday, 29 May 2012

மறுப்பதற்கான உரிமை

உதயசங்கர்mother-and-child-bob-botha

குழந்தைகள் தங்களுக்குப் பிடிக்காதவற்றை மறுக்கிறார்கள். தங்களுடைய செயல்களின் மூலம் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். உடனே பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள். திருத்துவதாகச் சொல்லி வதைக்கிறார்கள். குழந்தையிடமிருந்து வருகிற எதிர்ப்பை பொறுக்க முடியாது. ஏனெனில் குழந்தையைவிட பெரியவன் தான் என்ற அகங்காரம். தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம். பெற்றோர், ஆசிரியர், அண்ணன், அக்கா என்று குழந்தையை விட மேலான வளர்ச்சிப்படி நிலையில் இருப்பதால் தனக்குக் கீழே இருப்பவர்கள் தான் சொல்வதற்குக் கீழப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வு.

“முளைச்சி மூணுஇலை விடலை... அதுக்குள்ளே

வேண்டாம்.. முடியாதுன்னு பிடிவாதத்தைப் பாரு...”

என்ற வார்த்தைகள் பேசப்படாத வீடுகள் இருக்குமா என்பது சந்தேகம். அதோடு மட்டுமல்ல, குழந்தையிடமிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்தால் உடனே அடங்காமை, கீழ்ப்படியாமை, சொன்னபடி கேட்காமை என்று சொல்லி குழந்தைகளின் மீது விதவிதமான அடக்குமுறைகளைச் செலுத்த முனைகிறோம். இல்லையென்றால், “அடியாதமாடு படியாது” பிள்ளையை அடித்து வளர்க்கணும், கறிவேப்பிலையை ஒடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? போனற சொலவடைகளை, பழமொழியை அதன் அர்த்தம், காலப்பொருத்தம் தெரியாமலே இன்னமும் உளறிக்கொண்டு திரிகிறோம்.

உலகத்திலேயே மிக அதிகமாக எல்லாவிதமான வன்முறைகளுக்கும் இலக்காகிறவர்கள் குழந்தைகளும், பெண்களும் தான். உடல் ரீதியான வன்முறையில் உயிரிழப்பவர்கள் ஏராளம். அதுமட்டுமல்ல, பட்டினி போடுதல், தனிமைப்படுத்துதல், சுதந்திரமாக அலைய விடாமல் தடுத்தல், சுடுசொல், முறைத்தல், அதட்டுதல், பயமுறுத்தல், நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் அச்சுறுத்தல், பின்விளைவுகளைச் சொல்லி மிரட்டுதல், அடிக்க முனைதல் இவைகள் எல்லாமே வன்முறையின் வேறு வேறு வடிவங்கள் தான். சமபலமில்லாத, சார்ந்து வாழ்கிற எதிர்கொள்வதற்கு முடியாத யாரொருவர் மீதும் உடல் மற்றும் மன ரீதியான வன்முறையைப் பிரயோகிப்பது அவமானகரமான குற்றமாகும்.

எல்லாக் குழந்தைகளும் எப்போதும் தங்கள் எதிர்ப்பையோ, மறுப்பையோ காட்டுவதில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகே அவர்களுக்கேயுரிய தனித்துவக்குணங்கள் உருவாகத் தொடங்கும் போதே தங்களுடைய விருப்பு வெறுப்புகளை எதிர்ப்பாக மறுப்பாக வெளிக்காட்ட முனைகிறார்கள். ஒரு மரத்தின் இலைகளைத் தோராயமாகப் பார்க்கும்போது எல்லாம் ஒன்று போலத் தெரியும். ஆனால் கூர்ந்து ஒவ்வொரு இலையாக உற்றுப்பாருங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும், அளவிலும், பருமனிலும் இருப்பதைக் காணலாம். நிறத்தின் அடர்த்தியிலும், உணவு தயாரிக்கிற, நீரை உறிஞ்சுகிற, உட்கொள்கிற கரியமில வாயுவிலிருந்து, வெளிவருகிற பிராணவாயு வரை எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. ஒவ்வொரு சிறிய இலையுமே தனித்துவமிக்கதாகவே திகழ்கின்றன. அது போலத்தான் குழந்தைகளும். வளரும்போதே தனக்கென்று தனிருசி, விருப்புவெறுப்புகள், உறக்கம், விழிப்பு, உணவு, விளையாட்டு என்று தனித்துவமிக்க பழக்கங்களோடு வளர்கின்றனர். குழந்தைகளின் பரம்பரைக் குணாதிசயங்கள், சூழ்நிலை, உள்ளுணர்வு, படைப்பூக்கம், ஆழ்மனப் பிரதிபலிப்புகள் எல்லாமும் சேர்ந்து இவற்றைத் தீர்மானிக்கின்றன. குழந்தைக்கு ஒவ்வாததை பிடிக்காததைச் செய்யும்போது அல்லது செய்யச் செல்லும்போது குழந்தைகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுகின்றனர். மறுப்பைப் பதிவு செய்கின்றனர்.

பெரியவர்கள் முதலில் குழந்தைகளின் எதிர்ப்பை மதிக்க வேண்டும். மறுப்பை அங்கீகரிக்க வேண்டும். நாம் அதை அங்கீகரிக்கிறோம் என்பதைக் குழந்தைகள் அறியச் செய்யவேண்டும். சில நேரங்களில் அவர்களுடைய எதிர்ப்பிற்கான காரணங்கள் நமக்கு அற்பமானவையாக இருக்கலாம். மறுப்பிற்கான காரணங்கள் அர்த்தமில்லாதவையாக இருக்கலாம். உண்மையில் குழந்தைகள் காட்டுகிற எதிர்ப்பைக் கண்டு நாம் பெருமகிழ்வு கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தை தனக்கான தேவைகளை விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கிறது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து குழந்தையின் மீது கோபம் கொள்வது, எரிச்சல் படுவது, அடிப்பது போன்றவற்றை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழந்தை தன்னுடைய பிரத்யேகமான தேவைகளைத் தெரிந்து கொள்ளவே முடியாது. அது மட்டுமல்ல எந்தச் செயலையும் தனக்குப் பிடிக்கிறது என்றோ, பிடிக்கவில்லை என்றோ தேர்வு செய்ய முடியாமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் அடிபணிவது, சொன்னபடி கேட்பது, கோழையாக இருப்பது, சிறிய சலுகைகளுக்கு தங்களையே இழக்க நேர்வது போன்ற எதிர்விளைவுகள் உருவாகிவிடும்.

அதிகமாக அடக்குமுறைகளுக்கு உள்ளாகிற பெண் குழந்தைகளின் உணர்வுகளை மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் மறுப்பையும், எதிர்ப்பையும் அங்கீகரித்து அனுமதிக்க வேண்டும். அடக்கியே வளர்க்கப்படும் பெண் குழந்தைகளை மிகச்சுலபமாக ஏமாற்றப்படுவதற்கும், இழிவுபடுத்தப்படுவதற்கும் நேரிடும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெரும்பாலும் அந்தக் குழந்தைகளுக்கு நன்றாக அறிமுகமானவர்களாலேயே நிகழ்கிறது. குழந்தைகளின் பரிபூரண நம்பிக்கையை தங்களுடைய வக்கிரபுத்தியினால் பயன்படுத்துகிற கொடூரமனம் கொண்டவர்களாக பலர் இருக்கிறார்கள். பல சமங்களில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் சிறு சிறு சலுகைகளுக்கு தன்னை இழந்து விடுகிற கொடுமையும் நேர்ந்து விடுகிறது. எனவே முதலில் குழந்தைகளுக்கு மறுப்பதற்கான உரிமையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மறுத்துப் பழகும்போது தங்களை ஒரு தனித்துவமான ஆளுமையாகக் குழந்தைகள் உணர்வார்கள். தங்களுடைய சுயமரியாதை குறித்த பெருமிதம் ஏற்படும். அப்போதுதான் பெண் குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு எதிரான எல்லாவித வன்முறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழும் ஆன்மவலிமை உருவாகும்.

குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பதற்கு பெரியவர்களுக்கு சில குணாதிசயமாற்றங்கள் தேவைப்படுகின்றன. குழந்தைகளின் முன்னால் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் அருவெறுப்பான தன் அதிகாரச் சாட்டையை வீசாமலிருக்க வேண்டும். உண்மையான அன்போடு குழந்தைகளின் செயல்களை உற்றுக் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும். இப்படியான மாற்றங்கள் பெரியவர்களிடம் வரவேண்டும்.

அப்படியென்றால் குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் செய்ய எதுவுமே இல்லையா? குழந்தைகள் செய்கிற காரியங்கள் எல்லாமே சரியானதா? அவர்கள் காட்டுகிற எதிர்ப்போ மறுப்போ, தீய விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தால் என்ன செய்வது? அனுபவச் செறிவில்லாத அவர்களுடைய ஆளுமை தானாக எப்படி வளரும்? இது போன்ற கேள்விகள் எல்லோருக்கும் வரலாம்.

நாம் எல்லோருமே நம்முடைய குழந்தைகள் மிகப்பெரிய ஆளுமையாக வளரவேண்டும் என்று தான் மனப்பூர்வமாக ஆசைப்படுகிறோம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் எதற்காக ஆசைப்படுகிறோமோ அதற்கு எதிரான செயல்களைச் செய்கிறோம். அப்படிச் செய்யும்படி இந்த சமூக அமைப்பு அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்வித்துறை, நீதித்துறை, காவல்துறை மற்றும் பண்பாட்டு அமைப்புகள், மத நிறுவனங்கள், எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிதலுள்ள குடிமகன்கள் மட்டுமே தேவை. எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிகிற ஒரு சமூக மனநிலையை உருவாக்க எல்லாவிதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வருகிற சூழலில் மறுப்பதற்கான உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யோசித்துப்பாருங்கள்.

Monday, 28 May 2012

மறுக்கும் பக்குவம்

child-obesitykoke

உதயசங்கர்

 

இப்போது பெரியவர்களாக இருக்கும் பெரும்பான்மையோருக்கு தங்கள் பாலியகாலம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. எல்லா வீடுகளிலும் குஞ்சும் குறுமானுமாக குழந்தைகளின் நெருக்கடி. போதும் போதாத வருமானம், அப்போதும் இருந்த விலைவாசி, வேலையின்மை, நிரந்தரமான எதிர்காலப் பயத்திலேயே வாழ்நாளைத் தள்ளிக் கொண்டிருந்த பெற்றோர்கள். ஒண்டிக்குடித்தனம், வாடகை வீடு, தண்ணீர் பிரச்சனை, உணவுப்பற்றாக்குறை என்று ஏராளமான குறைகளுடனே வளர்ந்தவர்கள் இன்றிருக்கும் பெரியவர்கள். இதோடு மட்டுமா? வீட்டில் அடி உதை பள்ளிக்கூடத்தில் தண்டனைகள், வெளியில் குழந்தைகள் என்றாலே ஏளனம் என்று எப்போதும் மனம் சோர்வுறும் வகையிலேயே வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்களுடைய குழந்தைப்பருவம் போல தங்களுடைய குழந்தைகளுக்கும் அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள் அது நியாயம் தான்.

தங்கள் பெற்றோரை விட சற்றே கூடுதலான வசதி வாய்ப்புகளைப் பெற்ற இன்றைய பெரியவர்கள், அதிலும் குறிப்பாக மத்தியதர வர்க்கப் பெற்றோர்கள், இன்னொரு விபரீதமான முடிவெடுத்து குழந்தைகளின் ஆளுமையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தாங்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த எதிர்மறைச்சொற்களான இல்லை முடியாது வேண்டாம் இவற்றைத் தங்களுடைய குழந்தைகள் கேட்கவே கூடாது என்று தீர்மானமான முடிவெடுக்கிறார்கள். தாங்கள் அடைந்த ஏமாற்றங்களைத் தங்களுடைய குழந்தைகள் அடையவே கூடாது என்று மனதுக்குள் சத்தியம் செய்து கொள்கிறார்கள். தனக்குக் கிடைக்காத எல்லாமும், தான் ஆசைப்பட்ட எல்லாமும் தங்களுடைய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றார்கள். இதன் விளைவாக தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த உணவு, சிறந்த உடை, சிறந்த கல்வி (?) சிறந்த இருப்பிடம் சிறந்த விளையாட்டுகள், சிறந்த பொழுதுபோக்குகள் இன்னும் சிறந்த சிறந்த என்று எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவற்றை தேர்ந் தெடுக்க ஆசைப்படுகின்றனர். படித்து நல்ல அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்ற மத்தியதர வர்க்கத்தினரின் குணநலன்களை யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ இல்லையோ முதலாளிகளும், வியாபாரிகளும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே பெரும்பாலான இன்றைய பொருட்களின் விளம்பரங்களில் குழந்தைகள் வருகிறார்கள். நம்மிடம் அந்தப்பொருட்களின் சிறப்புகளைப்பற்றி ஒரு விஞ்ஞானியைப் போல ஆனால் குழந்தைத்தனத்துடன் எடுத்துரைக்கிறார்கள். அத்தோடு அந்தப்பொருள்தான் உலகத்திலேயே சிறந்த பொருள் என்றும் அதை வாங்குவதின் மூலமே பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமையை செய்ததாக, அர்த்தமாகும் என்று எமோசனலாக, செண்டிமெண்டலாக, மனதைத்தொடுகிறார்கள் பல விளம்பரங்களின் முடிவில் பெருமிதமான உணர்வில் கண்கலங்கும் பெற்றோர்களின் குளோசப் முகங்களும், மகிழ்ச்சியில் திளைக்கும், பெற்றோர்களை நன்றிப்பெருக்கோடு அணைத்து மகிழும் குழந்தைகளின் குளோசப்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் மனநிலையும் குழந்தைகளின் மன நிலையும் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சாதாரணமாக எந்தப்பொருள் வாங்கினாலும் அந்தப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் நம்மிடம் கிடையாது. விளம்பரம் செய்தால் போதும் அது நல்ல பொருள்தான் அதிலும் சினிமா, கிரிக்கெட். நடசத்திரங்கள், குழந்தைகள், பெண்கள் வந்து சிபாரிசு செய்தால் அது கண்டிப்பாக மிகச்சிறந்த பொருளாகத்தான் இருக்கும் என்ற மூடநம்பிக்கை பெரும்பான்மையோருக்கு இருக்கிறது மூடநம்பிக்கை எதில் வேண்டுமானாலும் வரலாமே உடனே அந்தப்பொருளை வாங்கிக் குழந்தைக்குக் கொடுப்பதில் ஒரு ஆனந்தம், சாக்லேட், பி°கட், கோக், பெப்சி, பற்பசை, கொசுவர்த்தி, சோப், நகைகள், கார், கணினி, ஹெல்த் டிரிங்க்°, ஜங்க் புட்°, என்று எல்லாவற்றிற்கும் குழந்தைகள் வருகிறார்கள். பெற்றோர்களும் அகமகிழ்ந்து அவரவர் வசதிக்கேற்ப வாங்கித் தருகிறார்கள். பின்பு பெருமையுடன் “சாப்பிடும் போது எம்பையனுக்கு எப்பவும் கோக் இருக்கணும்..... என்ன சொல்ல முடியுது இந்தக்காலத்து பிள்ளைங்ககிட்ட..... என்றோ” இவ.... “இந்த சேவு மிக்சர் எல்லாம் சாப்பிட மாட்டா.... ஒன்லி சாக்லேட், பர்கர், பிட்ஸா, சாண்ட்விச்... அவ படிக்கிற °ஸ்கூல் இண்டர்நேஷனல் °ஸ்கூலாச்சே.... அதான்.....”

என்றோ பெருமையுடன் பேசுகிற பெற்றோர்களும், குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடி, ஆங்கிலக்கனவானாக வளர்க்க நினைக்கும் பள்ளிக்கூடங்களும் தாய்மொழியை வேலைக்காரர்களின் மொழி என்று நினைக்கிற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் சூழலும் சில பல தலை முறைகள் தமிழ் வாசிக்கத் தெரியாமலும், எழுதத்தெரி யாமலும், அப்படியே எழுதத்தெரிந்தாலும் எழுத்துப் பிழைகளும் அர்த்த விபரீதங்களும் நிறைந்ததாக எழுதுகிற தலைமுறைகள் வந்திருப்பதற்கு பெற்றோர்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற போதம் இல்லாமல் எதிர்காலத்தலைமுறைகளை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

கோக், பெப்சியில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட், ஹைட்ரேகுளோரிக் ஆசிட்டினால் இரைப்பையில் அரிப்பு, புண்கள் ஏற்படும் என்று தெரியாதா? சாக்லேட்டில் உள்ள கோக்கோவினால் குழந்தைகளின் பற்கள் சொத்தை விழுவது மட்டுமல்ல, பிடிவாத குணமும் அதிகரிக்கும் என்று தெரியாதா? ஜங்க்புட்°களால் உடல்பருமனும், சிலருக்கு கேன்சரும் வரும் என்றுதான் தெரியாதா? இப்படிக்கேட்டால் நிறைய்யப்பேர் அய்யய்யோ...உண்மையில் தெரியாது என்று சொல்வார்கள் இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் விளம்பரக்காட்சிகளின் மனோவியல் தாக்குதல்களுக்கு முன்னால் எப்போதோ கேட்கவோ, வாசிக்கவோ நேர்கிற அறிவார்ந்த, பகுத்தறிவு பூர்வமான விளக்கங்கள் எடுபடுவது சிரமம்தான்.

ஆனால் குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கிற மனோநிலையை மாற்றலாம். கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலை விபரீதமான, முரட்டுத்தனமான, பிடிவாத குணத்தைக்குழந்தைகளிடம் வளர்க்காதா? ஏற்கனவே கூட்டுக்குடும்பங்கள் சிதைந்த நிலைமையில் உறவுகளே இல்லாத நிலையில், இத்தகைய பிடிவாத மனநிலை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுயோசித்திருக்கிறோமா? இந்தக்குழந்தைகள் பெரியவர்களாகி வெளியுலகை சந்திக்க நேர்கிற போது, ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தச் சமூகத்தின் குரூரம் முகத்திலறையும் போது என்ன ஆவார்கள் என்று யோசித்திருக்கிறோமா? எனவே குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கித் தருகிற, அங்கீகரிக்கிற மனநிலையைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். குழந்தைகளிடம் மறுக்க வேண்டும். பக்குவமாக, மென்மையாக, ஆனால் அழுத்தமாக மறுக்க வேண்டும். குழந்தைகள் முதலில் ஏமாற்றமடையலாம். அழுது புலம்பலாம். ஆர்ப்பாட்டம் செய்யலாம், மௌனமாக ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் பெற்றோர்களுக்கு மறுக்கின்ற பக்குவம் வேண்டும். நல்ல விஷயங்கள் எது எது என்று பெற்றோர்கள் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளிடம் கெட்ட விஷயங்களைப் பற்றி விளக்க முடியும். இதமான மனநிலையில் குழந்தைகளிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அவர்களுக்கு உண்டு. சொல்கிற விஷயம் குறித்து நமக்கு சந்தேகம் இருக்கக் கூடாது. தெளிவாக, பெருமிதமான உணர்வோடு அவற்றைப்பற்றி எடுத்துச்சொல்லும்போது அதே பெருமித உணர்வும் தெளிவும், பக்குவமும் குழந்தைகளிடம் ஏற்படும். தங்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு நல்ல விஷயங்களையேச் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை வளரும். அதற்கு முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுவரவேண்டும். அந்த விழிப்புணர்வைப் பெற பெற்றோர்கள் முன்வரவேண்டும் வருவார்களா?

Saturday, 26 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்

அப்பணசாமி

நான் ஏன் எழுதுகிறேன்? நான் ஏன் எழுதத் தொடங்கினேன்? நான் எப்படி எழுதத் தொடங்கினேன்? எப்படி யோசித்தாலும் இப்போது எனக்குக் கிடைப்பது ஒரே பதில்தான்!

எழுதுவதுதான் எனக்கு மிக எளிதான தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. மிகவும் கூச்சசுபாவியான எனக்கு எழுதுவதுதான் தனிமையில் மேற்கொள்ளக்கூடிய காரியமாக இருந்திக்கிறது.

ஒவ்வொருவரும் அவரவருக்கான எளிதான சிறந்த தொடர்பு சாதனத்தைத் தேட முற்பட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். பலருக்குப் பேசுவதே மிக எளிதான தொடர்பு சாதனமாக இருக்கலாம். சிலருக்கு ஓவியம், வேறு சிலருக்குக் கவிதை, இசை, பாடல், கதை சொல்லுவது, பாட்டுக் கட்டுவது என பல வடிவங்களில் ஒன்று அவரவருக்கானதாக இருக்கலாம்.

என்னைப் பொருத்தவரை எனது பதின்மப் பருவத்தில் நான் எனக்குள் சுருங்கிப் போனேன். எனது கருத்துகளைப் பகிரங்கமாகச் சொல்லுவதில் தயங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது எழுதினால் மட்டுமே எனது எண்ணங்களைச் சிறப்பாகத் தெரிவிக்க முடியும் என்ற நம்பிக்கை - நான் ஏழாவது படிக்கும்போதே ஏனோ எனக்கு ஏற்பட்டிருந்தது.

அநேகமாக எனது முதல் எழுத்து எனது 12ஆவது வயதில் எழுதிய போஸ்ட் கார்டு காகிதம் (கடிதம்)தான் என்று என்று நினைக்கிறேன். அது எனது அப்பாவுக்கு எழுதிய முதல் கடிதம். எனது வாழ்க்கையில் எனது அப்பாவுக்கு இரண்டே இரண்டு கடிதம்தான் எழுதியிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. முதல் கடிதம் எழுதி சுமார் 25 வருசம் கழித்தே இரண்டாவது கடிதம் எழுத நேர்ந்தது. அக்கடிதத்துக்குப் பிறகு என் அப்பாவை நான் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. 296354_223030614425623_100001560597711_608844_2065706084_n

நான் எனது ஏழாவது வகுப்பை ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அங்கேயே பள்ளியும். கிறித்துவ மிஷனரி நடத்திய தர்மப் பள்ளிக்கூடம். ஹாஸ்டலுக்கும் பீஸ் கிடையாது. எனது ஊரில் இருந்து சுமார் 20 மைல் தொலைவு. தப்பித்துக்கூட ஓட முடியாது. எந்தப் பக்கம் ஆனாலும் குறைந்தது 5 கி.மீ நடந்து கடக்க வேண்டும். அது சாத்தியமில்லை. பிடித்து விடுவார்கள். பிடித்துவிட்டால் காலில் சங்கிலி போட்டு பிணைத்து விடுவார்கள். எனக்கு அதற்கெல்லாம் தைரியம் இல்லை. இருந்தாலும் இந்த வருசம் எப்படியும் தொலையட்டும், அடுத்த வருசம் இங்கு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை; இங்கு மட்டும் இருக்கக்கூடாது என்பது எனது வைராக்கியம். கிட்டத்தட்ட அங்குதான் தனிமை நோய் அல்லது தனிமை சுகம் என்னைப் பீடித்து இருக்கலாம்.

எனது வைராக்கியத்தை அப்பாவிடம் எப்படித் தெரிவிப்பது என்ற ஆராய்ச்சியின் முடிவாகத்தான் கடிதம் எழுதும் யோசனை பிறந்தது. மூணு காசுக்கு போஸ்ட் கார்ட் வாங்கி நாலே நாலு வரி எழுதிப் போட்டேன். எழுதிப்போட்டேன் என்றால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. முதலில் எழுதுவதற்கு ஒரு ரகசியமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். கார்டு வெளியே தெரியாதபடி உடலுக்குள் மறைத்து வைக்க வேண்டும். சர்ச்சுக்கு எதிர் தெருவில் இருக்கும் போஸ்டாபிஸ் திண்ணையில் ஏறி அதில் தொங்கும் பெட்டியில் போட வேண்டும். அப்போது ஒரு சுடுகஞ்சிகூட பார்த்திருக்கக் கூடாது. அப்படியான சாதனையோடு அந்தக் கடிதத்தை எழுதிப் போட்டேன். எந்த வரிசையிலும் முதலாவது நிற்கும் அளவுக்குக் குள்ளம். இப்போது யோசிக்கும்போது பாதிரியாரின் பார்வையை மீறி எந்தக் கடிதமும் அந்த ஊரைவிட்டுப் போயிருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதுஎனது எழுத்தில் மயங்கித்தான், என்னை அப்பா, அங்கிருந்து விடுவித்தார் என மிகவும் நம்பினேன். அதனால் என்னால் சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை அப்போதே துளிர் விட்டிருந்தது.

தொடர்ந்து வகுப்புகளிலும் கேள்விக்கான பதில்களை எழுதும் போது நானே வாக்கியம் அமைத்து எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பதில்களின் நடுவே தந்திரமாக எனது சொந்த வாக்கியங்களைச் சேர்த்துவிடுவேன். தமிழ்க் கேள்வித்தாளில் எனக்குப் பிடித்த கேள்விப் பகுதி வியாசம் (கட்டுரை) எழுதுவதாகவே இருந்தது. அதற்கு எந்த ஆசிரியருக்கும் 10க்கு 6 மார்க்குமேல் போட மனசு வராது.

அப்புறம் வீட்டில் தீப்பட்டிப் பசை நாற்றத்துக்குப் பயந்து தப்பித்து எங்கள் தெரிவில் உள்ள நூலகத்தில் ஒளிந்து கொள்ளும் பழக்கமும் இருந்தது. அங்கு என்னை அறியாமல் வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், ராசு நல்லபெருமாள், கு. அழகர்சாமி ஆகியோரின் புத்தகங்களைப் புரட்டிய நினைவும் இருக்கிறது. அவற்றில் என்னை ஆச்சரியப்பட வைத்தது தாகூர் கதைகளின் மொழிப்பெயர்ப்புப் புத்தகம் ஒன்று. அதில் நமது வீடுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் போலவே கூறப்பட்டிருந்தது. வீட்டில நடப்பதை எழுதினால் அதுவும் கதைதான் என்பதை அக்கதைகள் புரியவைத்தன.

வெகுசீக்கிரத்தில் நான் கணக்குப் புலி ஆகி விட்டேன். கணக்குப் பாடம் தவிர எதுவும் ரசிப்பது இல்லை. கடைசி வரை கணித மாணவனாகவே கழித்து விட்டேன். அதனால் பள்ளிக்கூட நாள்களில் கவிஞனாகும் கனவெல்லாம் இல்லை. படிப்பெல்லாம் முடியும் நேரத்தில் நண்பர்களில் பலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்தப் புத்தகத்தை நானும் வாசிக்க ஆரம்பித்தேன்.

தண்டவாளத்தைத் தாண்டிப்போனால் சில புத்தகங்களைக் கண்ணில் காண்பிப்பார்கள். அப்படி ஜெயந்தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், நீல பத்மநாபன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வாசிக்கக் கிடைத்தது. ஒரு தொகுப்பின் தலைப்பு: சம்மதங்கள். பெரும்பாலும் நமது குடும்பங்களில் நடக்கும் சண்டை, சச்சரவுகளே கதைகளாக இருந்தன. எனக்கு ஒரே ஆச்சரியம். இதுதான் கதையா? அப்படின்னா ‘நம்ம கிட்ட எவ்வளவோ கதைகள் இருக்கே! என நினைத்தேன். ஏனென்றால் என் வீடு இது போன்ற சண்டைகளுக்கு ஜில்லாவிலேயே பிரபலமான வீடு. அப்போது நாமும் இதுபோல கதைகள் எழுத முடியும் என மீண்டும் நினைத்தேன். அதற்கேற்ற மாதிரி நான் ஏன் எழுதுகிறேன்? நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்? நான் பயின்ற பல்கலைக் கழகங்கள் என்பன போன்ற எழுத்து குறித்த மார்க்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய். அலெக்சி டால்ஸ்டாய், சோலோகவ், பிளாக்கனோவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் (லியோ டால்ஸ்டாய், சோலகோவ். பிளாக்கனவ் எழுதிய கட்டுரை/புத்தகங்களின் தலைப்புகள் திடீர் என நினைவுக்கு வரவில்லை) படிக்கக் கிடைத்தன. அந்தப் புத்தகங்களில் எழுத்து என்பது ’பயிற்சிதான்; தொடர்து முயற்சி செய்தாக் யாரும் எழுத்தாளனாகிவிட முடியும் என்பதைத் திரும்ப, திரும்பக் கூறினர். இவ்வாறு எனக்குக் கிடைத்த தொடர் நம்பிக்கை எழுதாமல் முடியாது என்ற நிலையை உருவாக்கியது. எழுதத் தொடங்கினேன்.

மேலும் அது ரகசிய உலகமாக இருக்கிறது. பேசினால் சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனால் எழுத்தில் திருத்தி எழுத முடிகிறது. எண்ண ஓட்டங்களுக்கும் அதை எழுதிமுடிப்பதற்கும் இடையேயான் இடைவெளி பாதுகாப்பானதாக இருக்கிறது. எழுதுவது ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் செயலாக இருக்கிறது. எழுத்து. கள்ளுக் குடித்தது போன்ற போதையைத் தருகிறது. அது பத்திரிகையில் பிரசுரமாகும்போது நான் உயரமானவனாக உணர்கிறேன். என் எழுத்தால் வாசக மனதைக் ககக்கிப்பிழிந்துவிட நினைக்கிறேன். அது அழியாது என நினைக்கிறேன்.

இவ்வளவும் தெரிந்தும் நான் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது மீதி புராணம்!

Tuesday, 17 April 2012

கருகும் கனவுச் சிறகுகள்

எழுதப்படாத கரும்பலகையாய்

குழந்தைகள் மனசு

என்னிடம் இருக்கிறது.

சாக்பீஸ்

சில துகள்கள்

எழுத்துக்களாய்

அப்பிக்கொள்வதும்

சில துகள்கள்

ஒட்டாமல் உதிர்வதும்

நிகழ்ந்து கொண்டே இருக்கிறது

தினமும். - பழ. புகழேந்தி

விந்தையானது குழந்தைகளின் மன உலகம். ஆனால் நாம் அதை என்றுமே புரிந்துகொள்ள முயல்வதில்லை.விந்தையான அந்த உலகத்தின் வண்ணங்களில் மூழ்கி எழுந்து பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து தான் நாமும் பெரியவர்களாகியிருக்கிறோம் என்றாலும் நாம் குழந்தைகளின் உலகத்தை அலட்சியமே செய்கிறோம். புற உலகின் அத்தனை நிகழ்வுகளும் தன் பதிவுகளை குழந்தைகளின் மனஉலகில் சுவடுகளாய் பதித்துக் கொண்டேயிருக்கின்றன. அவற்றிலிருந்து குழந்தைகள் இந்தப் புறஉலகம் பற்றி, சமூகம்பற்றி ஆண்களைப்பற்றி, பெண்களைப்பற்றி, இயற்கையைப்பற்றி, பிற ஜீவராசிகளைப் பற்றி தன் மனதில் கருதுகோள்களை உருவாக்கிக்கொள்கின்றன. இந்தக் கருதுகோள்களே பின்னர் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களுக்கும் சமூகத்துக்குமான உறவு நிலைகளைத் தீர்மானிக்கிறது.

தாய்,தந்தை,சகோதர சகோரரிகள்,வீடு,வெளியுலகம் என்று எல்லோரும் குழந்தையின் மனதை பாதிக்கின்றனர்.நல்லவிதமாகவும் மோசமான விதத்திலும் பாதிக்கின்றனர்.இந்த பாதிப்புகளை குழந்தைகள் ஏற்றுக்கொள்கின்றனர் அதே மாதிரி நல்ல விதமாகவும் மோசமான விதத்திலும்.எல்லா உயிரினங்களைப் போல குழந்தைகளும் தங்களது சூழ்நிலைக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.தாங்கள் ஐம்புலன்களால் கண்டுணரும் புற உலக அனுபவங்களே உண்மை என்று நம்புகின்றனர்.உயிரியல் ரீதியான இயற்கை உணர்வுகளே அவர்களை வழிநடத்துகின்றன.

முதலில் தான் அனுபவித்த அனுபவங்களையே எதிரொலிக்கின்றனர். குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு ஒரு கையில் சிகரெட் புகையுடன் வலம் வரும் தந்தையிடம் இருந்தும், தன்னை அவமானப்படுத்தும் கீழ்த்தரமான சொற்களையே பேசும் தாயிடமிருந்தும், அடித்தும் கிள்ளியும் தன்னைத் துன்புறுத்தி மகிழும் சகோதர சகோதரரிகளிடமிருந்தும் குழந்தை பெறும் அனுபவங்கள் அதன் மனதில் தீராத காயங்களை ஏற்படுத்தி விடுகின்றன. தாங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காக குழந்தைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளினால் குழந்தையின் மனம் கூம்பிவிடுகிறது. விளையாட்டின் மூலமாக உழைப்பின் காரணமாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் குழந்தையின் சுதந்திரவெளி சிறைப்படுகிறது. அதன் உற்சாகம் குலைக்கப்படுகிறது. பெரியவர்கள் தாங்கள் விரும்புகின்ற வகையில் செயல்பட வைப்பதற்காக குழந்தைகளை வற்புறுத்துகிறார்கள். செய்ததையே திரும்பத் திரும்ப சொல்லியதையே திரும்பத் திரும்ப செய்வதற்கும், சொல்வதற்கும் வலியுறுத்துகிறார்கள். புதிது புதிதாக அனுபவங்களைத் தேடுகிற குழந்தைகளின் தேடலை அவர்கள் மறைக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் தடைகளை மீறுகிற வலிமை இல்லாததினால் குழந்தைகள் உள்ளுக்குள் சுருங்கிவிடுகிறார்கள். இவற்றிலும் கூட பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் இடையே மிகுந்த பாரபட்சம் காட்டப்படுகிறது. வாங்கித்தரும் விளையாட்டு பொம்மைகளிலிருந்து உடை, அலங்காரம், அவர்களிடம் பேசும் மொழி, அவர்களை விளையாட அனுமதிக்கிற வெளி, கொடுக்கிற செல்லம், எல்லாவற்றிலும் மாறுபாடுகள் இருக்கின்றன. இதன்மூலம் ஆண், பெண் குழந்தைகளின் மன உலகு பிஞ்சிளம் பருவத்திலேயே தகவமைப்படுகின்றன.வீட்டிலேயே பெற்றோர்களாலேயே இத்தகைய மாறுபாடுகளை, பாரபட்சத்தை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி மனித மனங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அதனாலேயே பெண்சிசுக்கொலை, பெண்கருக்கொலை இன்னமும் நமது சமூகத்தில் வேறு வேறு ரூபங்களில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

குழந்தைகளின் வாழ்நிலை வீடு மட்டுமில்லையே. ஒரு பத்து கிலோ எடை கொண்ட புத்தகப் பைகளை முதுகில் சுமந்து கொண்டு சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு செல்லக் காத்திருக்கும் குழந்தைகளின் முகத்தை என்றாவது ஒரு நாள் ஒரு கணம் உற்று கவனித்திருப்போமா? அவர்களின் முகத்தில் தெரியும் நிராதரவான உணர்வை என்றாவது உணர்ந்திருப்போமா? அந்தக் குழந்தைகள் தங்களை அலட்சியம் செய்தபடி அங்குமிங்கும் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் மீதும் அந்த வாகனங்களின் மீது பயணிக்கும் பெரியவர்கள் மீதும் என்ன விதமான மரியாதை ஏற்படும்?

குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிட்டு லாபவேட்கை கொண்ட இந்த சமூக அமைப்பின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகி வறுமையில் தவிக்கும் தன் குடும்பத்திற்காக சின்னச்சின்ன வேலைகள் செய்து சம்பாதிக்கிற சிறுவர்கள், தாங்கள் அந்த வேலைகளைச் செய்யும் போது படுகிற அவமானங்களை எப்படி மறப்பார்கள்? இதற்குமேல் பள்ளியில் ஆசிரியர் என்ற வன்முறை செலுத்தும் அதிகாரி தன் இஷ்டம் போல் குழந்தைகளை அடிக்கவும், அவமானப்படுத்தவும், புறக்கணிக்கவும், வெளியேற்றவும் செய்கிற கொடுமைகளை எப்படி எதிர்கொள்வார்கள்? குழந்தைகள் அதிகாரமற்றவர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை பெரியவர்களை அண்டியே வாழவேண்டியதிருக்கிறது. எனவே பெரியவர்களின் அதிகாரம் தங்களுக்கு உடல், மன ரீதியான துன்பங்களைத் தரமுடியும் என்பதையும், தன்னைவிட பலசாலியான அதனை தன்னால் எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் அந்த அதிகார மையத்தில் ஆண்தான் கட்டற்ற அதிகாரமுடையவனாக இருக்கிறான். குழந்தைகள் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஆண்களைக்கண்டு அஞ்சுகிறார்கள். கொஞ்சமும் தயக்கமில்லாமல் தன்னைச்சார்ந்திருக்கிற தன்னைவிட பலவீனமான தன்னை எதிர்த்து எதுவும் செய்யமுடியாத குழந்தைகள் மீது எல்லா விதமான அதிகாரத்தையும் செலுத்துகிறார்கள்.

குறிப்பாக வீட்டில் ஒரு அப்பா, அம்மாவின் மீது குழந்தைகளின் மீது செலுத்துகிற அதிகாரத்தைக் கண்டு குழந்தைகள் குழப்பமடைகிறார்கள். மெல்ல மெல்ல இந்த உலகம் ஆண் மைய உலகம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆண் குழந்தைகள் இந்த அதிகாரத்தை பெண் குழந்தைகளோடு விளையாடும் போது போலி செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் வீட்டில் உள்ள பெண்களைப் பார்த்தும், புற உலக சம்பிரதாயங்களைப் பார்த்தும், மூடச் சடங்குகளைப் பார்த்தும், தாங்கள் வளர்க்கப்படும் விதத்தினாலும் தங்களது ஆற்றலை ஒடுக்கி ஆண் மைய அதிகாரத்திற்கு அடங்கி அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் பெண் குழந்தைகளின் ஆளுமை முளையிலேயே கிள்ளியெறியப்படுகின்றன. பெண் குழந்தைகள் செப்புச்சாமான் வைத்து சமையல் விளையாட்டும், பார்லி பாப்பாச்சி பொம்மைகளை வைத்துக் குழந்தைகளைச் சீராட்டும் விளையாட்டும் விளையாடிக்கொண்டிருக்க ஆண் குழந்தைகளோ துப்பாக்கிகள், பீரங்கிகள், கார்கள், பைக்குகள், சூப்பர்மேன், °பைடர்மேன், கள்ளன், போலீ° என்று விளையாட்டிலும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட பழக்கப்படுத்தப்படுகிறார்கள். என்ன கொடுமை இது?

ஆனால் எந்த மாதிரியான மோசமான சூழ்நிலைகளிலும்,குழந்தைகள் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளவும்,அந்த சூழலுக்குள்ளேயே தன்னுடைய சின்னச் சின்ன மகிழ்ச்சித் தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும். அதை அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அந்தச் சூழல் அவர்களை பாதிக்காமல் இருப்பதில்லை. சூழலின் பாதிப்போடு வளர்ந்து வரும் குழந்தைகள் கோழைகளாக, எதையும் கேள்வி கேட்காமல், மறுத்துப் பேசாமல் ஏற்றுக்கொள்கிறவர்களாக தங்கள் ஆளுமைத்திறனை ஒடுக்கிக் கொள்பவர்களாக சமூகத்தின் மீதும், வாழ்வின் மீதும் விரக்தியும், கசப்புணர்வும் கொண்டவர்களாக பழிவாங்கும் மனோபாவம் கொண்டவர்களாக குரூர புத்தியுடையவர்களாக, கலகக்காரர்களாக சமூக விரோதிகளாக மாறுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்பதை நாம் அச்சத்துடன் நினைத்துப் பார்த்தோமானால், குழந்தைகளைக் குறித்து சற்றேனும் யோசிப்போம்.....

Tuesday, 10 April 2012

குழந்தைமை ரகசியம்

images (2) குழந்தைமை ரகசியம்

“குழந்தை தன்னிடத்தே ஒரு வாழ்க்கை ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறது. அந்த ரகசியம் மனிதர் உள்ளத்தை மறைக்கும் திரையை நீக்க வல்லது. இந்த ரகசியத்தை உணர்ந்தால் மனிதன் தன் சிக்கல்களையும், சமூகச் சிக்கல்களையும் எளிதாக நீக்கிவிடலாம்.” - மரியா மாண்டிசோரி

தாயின் வயிற்றில் கரு உருவான சில வாரங்களிலேயே குழந்தையின் மனம் உருவாகி வளர ஆரம்பிக்கிறது. அது பெரும்பாலும் தாயின் உணர்வுகளையே ஏற்று பிரதிபலிக்கிறது. உடலாலும் உணர்வாலும் தாய் படுகின்ற இன்ப துன்பங்களை கோபதாபங்களை விருப்பு வெறுப்புகளை குழந்தையும் அனுபவிக்க நேர்கிறது. தன் பிரதிபலிப்புகளை வயிற்றுக்குள்ளேயிருந்து கொண்டே வெளிப்படுத்தவும் செய்கிறது. எனவே தான் கருவுற்ற காலத்தில் தாயின் உடல், மன ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. தாயின் கசப்பும், வெறுப்பும், விரக்தியும், கோபமும், இனிமையும், மகிழ்ச்சியும், கூட குழந்தையை பாதிக்கிறது.

மகாபாரதத்தில் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அபிமன்யு பத்ம வியூகம் பற்றி கேட்டறிந்த கதையை நாம் கேட்டிருப்போம். குழந்தையின் மனம் தாயின் வயிற்றிலேயே உருவாகி வளர ஆரம்பிக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பேசுவதில்லை என்ற காரணத்தினாலேயே நாம் குழந்தையின் உணர்வுகளை, பிரதிபலிப்புகளை, மகிழ்ச்சியை, அதன் கலகத்தை நாம் உணர்வதில்லை. குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணத்திலிருந்தே புதிய கிரகத்திற்குள் அடியெடுத்து வைக்கிற பரவச உணர்வோடு எல்லாவற்றையும் உற்றுநோக்குகிறது. அவதானிக்கிறது. புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. புதிய புதிய அனுபவங்களை எதிர்கொள்கிறது. அதன் சாராம்சத்தைத் தனக்குள் தக்கவைத்துக்கொள்ள முனைகிறது. காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் முழுமையான அர்ப்பணிப்புணர்வோடு வாழ்கிறது. எப்போதும் மகிழ்வோடு வாழப் பழகுகிறது. உடலின் அத்தியாவசியத் தேவைகளை தன் அழுகையின் மூலம் உணர்த்துகிறது. தன் மீது அன்பு கொண்டவர்களைப் போற்றுகிறது. ஒவ்வொரு நாளையும் புதிது புதிதாக வாழ்கிறது. புத்தம் புது மலர் போல பூத்துக் குலுங்குகிறது. தன் ஒவ்வொரு செய்கையையும் தானே வியக்கிறது. அதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அந்தச் செய்கையை இன்னும் முதிர்வடையாத தன் ஞாபகக் கிடங்கில் சேர்க்கிறது. அந்தச் செய்கையினால் விளையும் இன்பமோ, துன்பமோ அதையும் தன் உணர்வுச் சேகர கோப்புகளில் பதிவு செய்கிறது.

ஒரு கண்டுபிடிப்பாளனைப் போல இந்த உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறது. அறிதலின் இன்பத்தை அனுபவிக்கிறது. குழந்தைமையின் முதலும் முடிவுமான நோக்கம் இன்பமே. வாழ்வை இன்பமாகக் கழிக்கவே விரும்புகிறது. குழந்தை இன்பத்தைக் கண்டடைகிற முயற்சிகளில் தான் உலகை தன் சுற்றுப்புறத்தை தன் சக ஜீவிகளை அறிந்து கொள்கிறது. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்காக அது ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல இந்தப் பூவுலகில் பிறக்கிற ஒவ்வொரு இளம் உயிரும் அந்த ரகசியத்தை அறிந்து வைத்துள்ளது. அந்த வாழ்க்கை ரகசியத்தின் மூலமாகவே வாழ்வைப்புரிந்து கொள்கின்றனர். அந்த வாழ்க்கை ரகசியம் உழைப்பு இந்த அற்புதமான ரகசியத்தின் மூலமாகவே அதாவது தொடர்ந்த இடைவிடாத ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பின் மூலமாகவே தான் மகிழ்ச்சியையும், உடல்நலத்தையும், புத்துணர்வையும் பெறுகிறது. உழைப்பின் மீது ஆசைகொள்வது குழந்தையின் அடிப்படை இயற்கையுணர்வாகும் உண்மையில் குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப் புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கிற பொறுமை, திறமை பெற்றோர்களுக்கும் இல்லை, மற்ற பெரியவர்களுக்கும் இல்லை.

தாயின் வயிற்றிலேயே இந்த உழைப்பு ஆரம்பமாகி விடுகிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னால் உழைப்பு தீவிரமடைகிறது. உழைப்பின் தீவிரம் அதன் வாழ்வைக் களிகொள்ளச் செய்கிறது. அந்த இன்பமே மீண்டும் மீண்டும் உழைப்பின் மீது குழந்தையை ஈடுபாடும் பெருவிருப்பும் கொள்ளச்செய்கிறது.

ஆனால் பெரியவர்கள் குழந்தைகளை பெரும்பாலும் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். குழந்தையை ஏதும் இல்லாத எதுவும் அறியாத ஒரு வெறும் ஜீவி என்று நினைக்கிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தின் மீது நின்று கொண்டே குழந்தைகளை பார்க்கிறார்கள். வேறெங்கும் செலுத்த முடியாத அதிகாரத்தைக் குழந்தைகள் மீது செலுத்த முனைகிறார்கள். தான் தீர்மானிக்கிற, தனக்கு விருப்பமான தனக்குத் தெரிந்த நல்லது கெட்டதுகளைக் குழந்தையிடம் திணிக்கிறார்கள். தனக்குப் பிடிக்காத உருளைக்கிழங்கு குழந்தைக்கும் பிடிக்காது என்று நினைக்கிறார்கள் தனக்குப் பிடித்த கோகோ கோலாவை குழந்தையும் சாப்பிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். தன் சுயநலத்திற்காக குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டிகளிடம் ஒப்படைக்கிறார்கள். பின்பு அதனிடமிருந்து குழந்தைகளை மீட்கப் போராடுகிறார்கள். குழந்தைகளை ஒரு பொருளாகப் பாவிக்கிற எண்ணமே இப்படி அவர்களைக் கையாளச் சொய்கிறது. குழந்தைகள் உடனடியாக வாய் பேசமுடியாது என்பதாலேயே அதற்கு யோசிக்கத் தெரியாது, சிந்தனை கிடையாது, நல்லது கெட்டது தெரியாது என்று குழந்தைகள் சார்பாக அவர்களே முடிவெடுக்கிறார்கள். இறுதியில் குழந்தைகளைத் தனக்குச் சொந்தமான ஒரு பொருள் என கருதி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உரிமையை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தையை அவர்களுடைய சொந்த படைப்பாக எண்ணிக்கொள்கிறார்கள்.

பாவம் குழந்தைகள் தாங்கள் ஒரு தனித்துவமிக்க தனி உயிரி என்ற உரிமையை இழக்கிறார்கள். தங்களுக்குத் தேவையானதைப் பெறுகிற, தங்களுக்குத் தேவையில்லாததை மறுக்கிற சுதந்திரத்தை இழக்கிறார்கள். தங்களுடைய அறிதலின் தாகத்தைக் கட்டுப்படுத்துகிற, ஒடுக்குகிற அதிகாரத்தின் கரங்களுக்குள் உள்ளொடுங்கிப் போகிறார்கள். இந்த உள்ளொடுங்கலே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது சமூகத்தில் நடக்கிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிற மந்தமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. எதையும் கேள்வி கேட்கத் துணியாத கோழைத்தனத்தை உருவாக்குகிறது. எதையும் மறுக்கக்கூடிய உரிமையை இழந்து தவிக்கிறார்கள். கல்விக்கூடங்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு குழந்தைகளின் இயல்பான மேதைமையைக் கட்டுப்படுத்தி சாதாரணமானவனாக்கு (ஹஏநுசுஹழுநு) வதற்காக மெனக்கெடுகிறது. சொல்வதைத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக்குவதற்கு தன் முழு பலத்தையும் பிரயோகிக்கிறது.

குழந்தைகள் இதனால் மனம் வெதும்பி தன் இயல்பான அறிதிறனையும், மேதைமைiயும் இழக்கிறார்கள். அரும்பிலேயே கருகச் செய்யும் நடவடிக்கைகளால் தாங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர்கள் சொன்னபடி நடக்க ஆரம்பிக்கிறார்கள். தங்களுடைய அடிப்படை இயல்பான மகிழ்ச்சிக்கான அறிதலுக்கான உழைப்பையும், அதன் மூலம் கிடைக்கிற உள்ளொளியையும் மறந்து போகிறார்கள். இப்படி குழந்தைகளின் குழந்தைமையை அதன் ரகசியக் கனவுகளையும் கருகச் செய்துவிட்டு பெரியவர்கள் “உன்னைய வளர்ப்பதற்காக என்ன பாடுபட்டிருக்கேன் தெரியுமா?” என்று அங்கலாய்க்கிறார்கள். விநோதத்தைப் பாருங்கள்.

உயிரின் இயல்பான படைப்பூக்க, உணர்வான உழைப்பு தான் குழந்தைமையின் ரகசியம். குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சியடைவதற்கு உழைப்பு தான் முக்கியமான மூலகாரணம் என்று மார்க்சியம் சொல்வதைப் போல குழந்தைகள் உழைப்பதின் மூலமே தங்களின் உள்ளொளியை உள்ளுணர்வை, அறிதிறனை, மேதைமையை மகிழ்ச்சியை வளர்க்கிறார்கள். உழைப்பு அதுதான் எத்தனை அற்புதமான விசயம்! குழந்தைகளை உற்றுநோக்குவோம். நம் அறியாமைகளை அகற்றுவோம்..

Wednesday, 4 April 2012

அப்பா என்றொரு மனிதர்

tears_of_sadness
அப்பா என்றொரு மனிதர்
                               கணபதிக்கு அப்பாவைப் பிடிக்கவில்லை. அப்பா என்ற சொல்லே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது. பொதுவாகவே அப்பாவை குழந்தைகளுக்கு அதுவும் ஆம்பிளைப் பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை. குடும்பத்தில் அப்பா தான் அதிகாரமையம் என்பதை வெகு சீக்கிரத்திலே குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள். அப்பா வீட்டில் இருந்தால் வீடே கையைக் கட்டி வாயைப் பொத்திக்கொண்டு கப்சிப் பென்று அமைதியாகி விடுகிறது. அம்மா ,அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, என்று எல்லோரும் கிசுகிசுப்பாய் பேசிக்கொள்கிறார்கள். எந்த நேரமாயிருந்தாலும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்பாவின் குரல் மட்டும் அந்த வீட்டில் எல்லா அறைகளுக்குள்ளும் புகுந்து புகுந்து வருகிறது. பின்னால் அம்மாவின் அடங்கிய குரல் பதவிசாக கேட்கிறது. அப்பா எப்போது வந்தாலும் வீடு அலங்கோலமாக இருப்பதையே முதலில் சொல்கிறார். எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் அப்பாவின் கண்களுக்கு ஒரு ஒழுங்கின்மை தெரிந்து விடுகிறது. உடனே அவர் சத்தம் போட ஆரம்பிக்கிறார். அம்மா ஏதோ பதில் சொல்ல வாக்குவாதம் முற்றுகிறது. அம்மாவினால் சமாளிக்க முடியாமல் போகும்போது பிள்ளைகளைப் பற்றி ஏதோ சொல்கிறாள். உடனே அப்பாவின் கோபம் பிள்ளைகளின் மீது திரும்புகிறது. கோபத்தின் ஃபாரன்ஹீட்டைப் பொறுத்து சில நேரம் அடிகள், சிலநேரம் வசவுகள், சில நேரம் முறைப்புகள், என்று கோபம் கடைகாலில் ஓடி மறைந்து விடுகிறது. அப்பா வந்தது முதல் பிள்ளைகளுக்கு ஒரு பதட்டம் வந்து விடுகிறது. எப்போதாவது அப்பாவும் சிரிப்பதுண்டு. ரெம்ப அபூர்வமான தருணங்களாக அது இருக்கும்.
எனவே சின்னஞ்சிறு வயதிலேயே குழந்தைகள் அப்பா என்ற பிரதிமையைப் பற்றி சில கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆதலால் அப்பாவைப் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை என்று நினைத்தேன். ஆனால் கணபதி அப்படியில்லை. அவனுக்கு அப்பா ஒரு பிசாசு. பேய். பூதம். கொடூரன். அவன் சொல்வதைக் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.
நான் கணபதியைச் சந்தித்தது சென்னையில். வேலை தேடிச் சுற்றிக் கொண்டிருந்த காலங்களில் சென்னையிலும் சில நாட்கள் தங்கியிருந்து என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்த ஒரு மேன்சனில் நான் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் தான் கணபதி தங்கியிருந்தான். இத்தனைக்கும் அவன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. காலையில் எல்லோருக்கும் முன்னால் குளித்து முடித்து கையில் பயோடேட்டா ஃபைலுடன் வெளியேறி விடுவான். இரவு எல்லோரும் வந்து கூடடைந்த பிறகே வருவான். அறைக்குள் சென்ற அரைமணி நேரத்திற்குள் அவனுடைய குரல் கேட்கத் தொடங்கும். அவனுடைய அப்பாவைப் வையத் தொடங்குவான். குறைந்தது ஒரு மணி நேரமாவது அவனுடைய குரல் உச்சஸ்தாயியில் கேட்கும்.மேன்சனில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல எல்லோரும் நடந்து கொள்வார்கள்.  அந்தக் குரலின் துயரம் என்னைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். எனக்கு உறக்கம் வராது. இத்தனைக்கும் அவனுடைய அப்பா இங்கிருந்து வெகுதூரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறார். அவன் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதைப் போலவே இருக்கும். அவன் பேசிய வார்த்தைகள் வழியே அவனுடைய அப்பாவை நான் உருவகித்துக் கொண்டேன். உண்மையில் அது கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்தது.
ஆசிரியராக இருந்த அவனுடைய அப்பாவுக்கு பையனை கலெக்டர் ஆக்குவது ஒன்றே லட்சியம். அதனால் அவருடைய முழுக் கவனமும் கணபதி மேலே மட்டும் தான் இருந்தது. அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கை களையும் அவர் ஒழுங்கு படுத்தினார். அவன் எப்படி வாழ வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். காலையில் எந்திக்கிற நேரம், பல் துலக்கும் முறை, ஆய் போகிற நேரம், சாப்பிடுகிற உணவு, உடற்பயிற்சி,படிப்பு, பொதுஅறிவு, என்று எல்லாவற்றையும் அவரே தீர்மானித்தார். அவன் அவருடைய கட்டளைகளை ஏற்று செயல்படுத்துகிற ரோபோ மாதிரி தான் இருந்திருக்கிறான். கலகம் செய்யவோ, எதிர்க்குரல் கொடுக்கவோ வழியற்று உழன்று கொண்டிருந்திருக்கிறான் கணபதி. எப்போதாவது அவனுக்கு எதிர்ப்புணர்வு தோன்றும். ஆனால் அதற்கான விளைவு மிகக் கடுமையாக இருக்கும். அவர் அவனைத் தண்டிக்க மாட்டார். தன்னைத் தானே தண்டித்துக் கொ ள்வார். அதன் மூலம் அவனை வசக்குகிற வித்தையைக் கற்றிருந்தார். விசித்திரமான அப்பா!
அப்பாக்களே விசித்திரமானவர்கள் தானோ என்னவோ. எல்லோருடைய வாழ்விலும் அப்பாவுக்கென்று தனித்த ஒரு இடம் உண்டு. நல்லதும் கெட்டதுமாக அப்பாவினால் பாதிப்படையாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். பிஞ்சிளம் பருவத்தில் அப்பா என்கிற படிமம் மனதில் ஏற்படுத்திய ஆதர்சம், அப்பாவின் விரல் பிடித்து அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடந்த பரவச உணர்வு. அப்பாவின் சட்டை, அப்பாவின் செருப்பு, அப்பாவின் பேனா, அப்பாவின் புத்தகம், என்று அப்பாவின் உலகமே அற்புதமாகத் தோன்றும். இளம் வயதில் சாகச நாயகனாகத் தெரியும் அப்பா குழந்தை வளர, வளர, மேக்கப் கலைந்த கோமாளியாகத் தோன்றுவதும், வில்லனாக மாறுவதும் நடக்கும்.அப்பாவின் கண்டிப்பும், அலட்சியமும், அங்கீகரிக்க மறுக்கும் அப்பாத் தனமும், உலகிலேயே மிக மோசமான ஆள் தன்னுடைய அப்பா தான் என்றும் தோன்றும் கலைடாஸ்கோப்பின் ஒரு சிறுகோணமாற்றத்தில் விசித்திரமான தோற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறதே.
என்னுடைய அப்பா மிகவும் அமைதியானவராக இருந்தார். நாங்கள் எந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம் என்று கூடத் தெரியுமா என்பது சந்தேகம் தான். நாங்களும் அவரைத் தொந்திரவு செய்ததில்லை. மில்லில் இரவு பகலாக மாறி மாறி ஷிப்டு பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து உறங்கிக் கொண்டிருப்பார். பெரும்பாலும் என் அப்பாவைப் பற்றி யோசிக்கும் போது அவர் உறங்கிக் கொண்டிருக்கும் சித்திரமே என் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் கணபதி பாவம்.
கல்லூரி வரை பொறுத்துப் போயிருக்கிறான் கணபதி. அதன்பிறகு அவனால் முடியவில்லை. வீட்டை விட்டு ஓடி வந்து விட்டான். அவனுடைய அப்பாவும் விடவில்லை. தேடிப்பிடித்து வந்திருக்கிறார். கணபதி பழைய கணபதியாக இல்லை. அப்பாவின் சுயதண்டனை வித்தையை அவரிமே காட்டினான். நான்கு நாட்களாக சாப்பிடாமல் கிடந்து மருத்துவமனைக்குக் கொண்டு போகிற நிலைமைக்கு ஆகி விட்டது. அப்பா தன் முயற்சியில் தோற்றுப்போய் ஊர் திரும்பி விட்டார். இப்போதும் மாதாமாதம் அவர் தான் பணம் அனுப்புகிறார்.
கணபதிக்குப் பிரமை. எப்போதும் அப்பா அவன் கூடவே இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். அவன் என்ன செய்தாலும் அவன் அருகில் இருந்து கொண்டு அவனுக்கு ஆலோசனைகள் சொல்லிக் கொண்டோ, அறிவுரைகள் சொல்லிக்கொண்டோ, திருத்தங்கள் சொல்லிக்கொண்டோ இருந்தார். அது மட்டுமல்ல அவனைத் திட்டிக் கொண்டுமிருந்தார். அவனால் அப்பாவை விரட்டமுடிய வில்லை. அவருடைய கூர்மையான இடுங்கிய கண்களின் பார்வையிலிருந்து தப்பமுடியவில்லை. அவனுக்கென்று எந்த அந்தரங்கத்தையும் ரகசியமாய் பாதுகாக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் அப்பா நீக்கமற நிறைந்திருந்தார். அவன் அப்பாவை விரட்ட மது அருந்த ஆரம்பித்தான். மது அருந்தியவுடன் அருள் வந்தவன் போல ஆவேசமாகி அப்பாவைத் திட்ட ஆரம்பிப்பான். எதிரிலிருக்கும் அப்பாவை விரட்ட என்னென்னவோ செய்து பார்த்தான். முடியவில்லை.
பல சமயங்களில் நான் அவனிடம் பேசியிருக்கிறேன். எந்த வித்தியாசமும் இல்லாமல் ரெம்ப சாதுவாய் பேசுவான். இரவில் குரலாய் கேட்கிற கணபதிக்கும் நேரில் பார்க்கிற கணபதிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. கேட்கிற கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லுவான். அவனாகப் பேசாத ஒரு விசயத்தைப் பற்றி நாமாகப் பேசுதல் முறையன்று என்ற நயத்தகு நாகரீகத்தினால் நான் மட்டுமல்ல, மேன்சனில் உள்ள மற்றவர்களும் பேசவில்லை. அவனுடைய முகம் நாளுக்கு நாள் கருத்துச்சுருங்கிப் போய்க் கொண்டிருந்தது.
சென்னையில் நான் வேலை தேடி அலைந்ததை விட இலக்கியநண்பர்களைச் சந்திப்பதும் இலக்கியக் கூட்டங்களுக்குப் போவதும் தான் அதிகமாக நடந்தது. கோவில்பட்டியிலிருந்து அங்கு முன்னத்திஆளாகப் போயிருந்த துரையண்ணனும், எழுத்தாளர் விமலாதித்தமாமல்லனும் தான் எனக்குச் சேக்காளிகள். விமலாதித்தமாமல்லனின் சைக்கிளில் முன்னால் ஹேண்ட் பாரில் உட்கார்ந்து கொண்டு சென்னையை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்படியே நாட்கள் கழிந்துபோய் விடும் என்று வெள்ளந்தியாய் நினைத்திருந்தேன்.
அன்று விமலாதித்தமாமல்லனுடன் ஒரு நாடக நிகழ்ச்சிக்குப் போய் விட்டு கொஞ்சம் காலதாமதமாக மேன்சனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்துக்கு எப்போதும் அமைதியாகி விடுகிற மேன்சன் பரபரப்பாக இருந்தது. எல்லோரும் அவரவர் அறை வாசலில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு கணபதியைப் பற்றித்தான். எனக்கு ஏதோ விபரீதம் நடந்திருக்குமோ என்ற பதட்டம் உருவாகி படபடப்பாக இருந்தது.  கணபதியின் அறை வாசலில் நான்கு பேர் நின்று கொண்டு உள்ளேயிருந்த கணபதியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும், நான் கேட்காமலேயே இன்னொரு அறைக்காரரான ரவி,
” நான் மட்டும் பாக்கலென்னா ஐயா இன்னேரம் ஆடிக்கிட்டிருப்பாக. எப்பவும் திரும்பிப் பாக்க மாட்டேன்.. அவன் நல்ல நேரம் கதவு ஓரம் பாக்கேன்.. ஃபேன்ல கயித்தைக் கட்டி மேசை மேல ஏறிக்கிட்டிருக்கான் பக்கத்தில சர்மா சாரையும் கூட்டிட்டு வந்து பயல சத்தம் போட்டு உட்கார வைச்சிருக்கு.. கொஞ்சம் கவனிக்கலன்னா ஆள் காலி.. “
நான் கணபதியின் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கணபதி முட்டங்கால்களைக் கட்டிக் கொண்டு தலையைக் குனிந்த படி உட்கார்ந்திருந்தான். யார் பேசியதும் அவன் காதில் ஏறியதா என்று சந்தேகம் தான். வாய் மட்டும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது. எனக்கு முதல் முறையாக கணபதியின் அப்பாமீது கோபம் வந்தது.
ரவி தான் மறுபடியும்
,” சார் நீங்க தான் எழுத்தாளராச்சே..நல்ல கரு கிடைச்சுதேன்னு சந்தோசப்படுவீங்க.. மூணு நாளைக்கு முன்னாடி இவன் அவனோட அப்பாவுக்கு ஒரு லெட்டர் வேற எழுதியிருக்கான்..சார்.. இந்த லெட்டர் உங்க கையில கிடைக்கிற போது நான் தற்கொலை செய்து இறந்து போயிருப்பேன்னு எழுதியிருக்கான்..சார்..”
என்று சொன்னார்.
எனக்கு இதைக் கேட்டதும் கணபதி மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன முட்டாள்தனம்? அவன் வீட்டில் இந்நேரம் என்ன பாடு பட்டுக் கொண்டிருப்பார்களோ? அப்போது கீழே கணபதியின் பெயரைச் சொல்லி யாரோ அழைப்பதைப் போலிருந்தது. கீழே போன சர்மா சிறிது நேரத்தில் கையில் ஒரு தந்தியுடன் வந்தார்.
“ கணபதியின் கடிதம் படித்த அடுத்த கணம் மாரடைப்பினால் அவனுடைய அப்பா மரணமடைந்துவிட்டார்.”
யாராலும் தேற்றமுடியாதபடி கணபதி அழுது கொண்டிருந்தான்.