Showing posts with label பாட்டி. Show all posts
Showing posts with label பாட்டி. Show all posts

Friday, 10 January 2025

. கோழியைக் காணோம்

 

1.கோழியைக் காணோம்

  உதயசங்கர்




கோழியூர் வறண்ட நாடு. கோழி வளர்ப்பு தான் அந்த நாட்டின் தொழில். அந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் வீடுகளில் கோழிகளை வளர்த்தனர். ஆமைக்கோழி, கடக்கோழி, கம்பான் கோழி, கருங்கோழி, சம்பங்கோழி, சைனாக்கோழி, சிலுப்பாக்கோழி, கழுகுக்கோழி, போந்தாக்கோழி, என்று எல்லாவகையான கோழிகளையும் வளர்த்தனர். அந்தக் கோழிகளின் முட்டைகளை விற்று வரும் பணத்தில் வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் கோழியூர் நாட்டு ராஜா சேவலான் நகர்வலம் வந்தான். நாட்டைச் சுற்றிப்பார்த்து மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று விசாரிப்பது தான் நகர்வலம். ராஜா சேவலானுடன் அமுக்கரான் என்ற மந்திரியும், பிடுங்கரான் என்ற மந்திரியும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்த நாட்டின் கடைசியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குப் போனார்கள். ராஜா சேவலானுக்குப் பசி. பசி வந்து விட்டால் தாங்க முடியாது. அவ்வளவு தான். உடனே திரும்பி அமுக்கரானையும் பிடுங்கரானையும் பார்த்து

“ உடனே அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..என்று கத்தினான். அமுக்கரானும் பிடுங்கரானும் குடிசைக்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு வயதான பாட்டி இருந்தாள். அவளிடம்,

“ ஏய், கிழவி.. ராஜா வந்திருக்கிறார்.. இரண்டு நிமிடத்தில் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்..

என்று கத்தினார்கள். ஒரு நிமிடம் யோசித்தாள் பாட்டி. பிறகு குடிசைக்குப் பின்னால் இருந்த தேக்கு மரத்திலிருந்து கீழே விழுந்த தேக்கிலையை எடுத்துக் கழுவினாள். மண்பனையில் இருந்த நீராகாரத்தில் மிதந்து கொண்டிருந்த கேப்பைக் களி உருண்டைகளில் ஒன்றை எடுத்து இலையில் வைத்தாள். பிறகு இலையின் மூலையில் உப்புக்கல் வைத்தாள். ஒரு பச்சை மிளகாயை வைத்தாள். ஒரு துண்டு கருப்பட்டியை வைத்தாள். ஒரு துண்டு நாரத்தங்காய் ஊறுகாயை வைத்தாள். அவ்வளவு தான்.

“ ராஜாவை வரச் சொல்லுங்கள்… அறுசுவை உணவு தயார்..என்று சொன்னாள் பாட்டி.

நெய்யில் செய்த இனிப்புகள், கோழி சாப்ஸ், ஆட்டு ஈரல் வறுவல், மாட்டுக்கறி பிரியாணி, திராட்சை ரசம் என்று எதிர்பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் சேவலான் ராஜா.

இலையைப் பார்த்ததும் அவனுக்கு ஏமாற்றம். அவன் உடனே,

“ ஏ மந்திரிகளே.. என்ன இது? “ என்று கோபத்துடன் கேட்டான். உடனே அமுக்கரான் தலையை நெஞ்சு வரை குனிந்து,

“ ராஜா.. இந்தக் கிழவியிடம் இரண்டு கருங்கோழிகள் மட்டுமே இருக்கின்றன.. அந்த முட்டைகளை விற்றுத்தான் அவள் வாழ்க்கை நடத்துகிறாள்.. அந்தக் கோழிகள் மாதம் பதினைந்து முட்டைகள் மட்டுமே இடும்.. அதை விற்றால் கேப்பை தான் வாங்க முடியும்.. கேப்பைக்களி உணவு தான் சாப்பிட முடியும்..

என்று சொன்னான். அதைக் கேட்ட சேவலான் ராஜா,

“ அப்படி என்றால் என்னுடைய நாட்டு மக்கள் இப்படித்தான் சாப்பிடுகிறார்களா? “ என்று கேட்டான். அதற்கு பிடுங்கரான் மந்திரி முழங்கால் வரை தலைகுனிந்து,

“ எல்லாவற்றுக்கும் நாட்டுக் கோழிகள் தான் காரணம்.. ராஜாவே.. நாம் வெளிநாட்டிலிருந்து புதிய செயற்கைக்கோழிகளை வாங்கிக் கொடுக்கலாம்.. அந்தக் கோழிகள் தினசரி ஐந்து முட்டைகள் போடும்.. மாதம் நூற்றைம்பது முட்டைகள் கிடைக்கும்.. மக்களும் அறுசுவை உணவு சாப்பிடுவார்கள்.. “

என்று சொன்னான். சேவலான் ராஜா யோசிக்கவே இல்லை.

“ இது நல்ல யோசனையாக இருக்கிறதே..என்றான். அப்போது அமுக்கரான் மந்திரி,

“ ஆனால் அதில் ஒரு சிக்கல்..என்றான்.

“ என்ன சிக்கல்..

வெளிநாட்டுக் கோழிகளை வளர்க்கும் போது நாட்டுக்கோழிகளை வளர்க்கக்கூடாது.. அப்படி வளர்த்தால் மக்கள் வெளிநாட்டுக் கோழிகளைச் சரியாகக் கவனிக்க மாட்டார்கள்… “

“ அவ்வளவு தானே… ஒரு நாட்டுக்கோழிக்கு இரண்டு வெளிநாட்டுக்கோழி என்று முரசறைந்து அறிவிக்கச் சொல்லுங்கள்.. நாட்டுக்கோழிகளை நாம் சாப்பிடுவோம்..ஹ்ஹ்ஹா ஹ்ஹா..

என்று சொல்லிச் சிரித்தான் சேவலான் ராஜா.

மறுநாள் அரண்மனை அறிவிப்பு வந்தது. அறிவியலறிஞர்கள் எச்சரித்தார்கள். இயற்கை ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற வகையில் உயிர்களைப் படைத்திருக்கிறது. எனவே இயற்கைக்கு மாறாக எதையும் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் யாரும் கேட்கவில்லை.. கூட்டம் கூட்டமாக நாட்டுக்கோழிகளைக் கொண்டு போய் அரண்மனையில் கொடுத்தார்கள். அரண்மனையில் தினம் கோழிக்கறி விருந்து தான்.

பதிலுக்கு பெரிய பெரிய வெளிநாட்டுக் கோழிகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவை எல்லாம் குளிர் நாடுகளில் வளர்க்கப்பட்டவை. கோழியூரோ வெப்பநாடு.

வெளிநாட்டுக்கோழிகள் பொதுக் பொதுக் என்று குண்டு குண்டாய் இருந்தன. அதே போல எல்லாம் ஒரே நிறத்தில் இருந்தன. ஒரே சாயலில் இருந்தன.

மக்களுக்குக் குழப்பம்.

அடுத்த சில நாட்களில் கோழியூர் நாட்டில் ஏகப்பட்ட சண்டைகள் நடந்தன.  எது யாருடைய கோழி என்று தெரியவில்லை. என்னுடைய கோழி உன்னுடைய கோழி என்று சண்டை போட்டார்கள்.

 வெளிநாட்டுக்கோழிகள் வெளியில் போய் மேய்வது கிடையாது. உட்கார்ந்த இடத்திலேயே “ க்க்கோக்க்க்கோ..என்று கூவி உணவு கேட்டது. இருபத்திநான்கு மணி நேரமும் தின்று கொண்டேயிருந்தன அந்தக் கோழிகள். மக்களால் தீனி போட்டு முடியவில்லை.

பத்து நாட்களில் கோழியூரின் வெப்பம் தாங்க முடியாமல் ஒவ்வொரு கோழியாகச் செத்துப் போய் விட்டன.

மொத்தத்தில் இந்தப் பத்து நாளில் வெளிநாட்டுக்கோழிகள் ஐந்து முட்டைகளே இட்டன.

ஒரு மாதத்துக்குள் எல்லா வெளிநாட்டுக்கோழிகளும் இறந்து விட்டன. இப்போது கோழியூர் நாட்டில் கோழிகளே இல்லை. மக்களுக்குப் பிழைக்க வழியில்லை. கூட்டம் கூட்டமாக அவர்கள் கோழியூரை விட்டு வெளியேறினார்கள். கோழியூர் நாட்டில் யாருமில்லை.

கோழியூர் நாட்டு ராஜாவான சேவலானும், மந்திரிகள் அமுக்கரானும், பிடுங்கரானும் கூட வெளிநாட்டுக்குப் போய் விட்டார்கள். இந்தத் திட்டமே தவறு என்று எச்சரித்த அறிவியல் அறிஞர்களும் வேறு நாடுகளுக்குப் போய் விட்டார்கள்.

ஆனால் ஊரின் கடைசியில் குடிசை விட்டில் இருந்த பாட்டி எங்கும் போகவில்லை. அவள் ரகசியமாக பாதுகாத்து வந்த கருங்கோழிகளுடனும், பத்துக் குஞ்சுகளுடனும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

“ அட கோட்டிக்காரப் பயல்களா? “ என்று அவ்வப்போது சொல்லிச் சிரிப்பாள்.

அவள் யாரைச் சொன்னாள் என்று உங்களுக்கு தெரிகிறது அல்லவா?

 

2.  நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்


Saturday, 9 June 2012

கதையின் ஆதிபருவம்

 pictures உதயசங்கர்

குரங்கிலிருந்து உழைப்பின் வழியாகவே மானிட இனம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அந்தப் பரிணாமவளர்ச்சியின் பாதையில் விலங்கின் மூளை மனித மூளையாக மாறத் தொடங்குகிறது. அதன் வரையறை குட்பட்ட சைகை மற்றும் ஒலிக்குறிப்புகள் தன் எல்லையை விரிகிறது. அதற்கு முன்புவரை விலங்குகள், பறவைகள்,பூச்சிகள், எல்லாமும் சில குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகளின் மூலம், சைகை மற்றும் உடல் மொழியின் மூலம் தங்கள் தேவைகளான பசி, கோபம், பயம், இணைவிழைச்சு, என்று எல்லா உணர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. இந்த சைகை, உடல், ஒலி, மொழியை அவைகள் கற்றுக் கொள்வதில்லை. பிறக்கும்போதே அதன் உள்ளுணர்வின் ஆழத்தில், தலைமுறை தலைமுறையாக, தொடர்ந்து வருகின்றன. அவை புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது திகைத்துப் போய்விடுகின்றன. தங்கள் ஆதிஞாபகச் சில்லுகளில் தேடிப்பார்த்து ஏமாந்து போகின்றன. குறிப்பிட்ட, வரையறைக்குட்பட்ட,சைகை,மற்றும் உடல் மொழி, ஒலிக்குறிப்புகளைத்தாண்டி அவற்றால் புதிதாகச் சிந்திக்க முடிவதில்லை.

ஆனால் மனிதன் அப்படியில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக்குறித்தும் தன்னுடைய சூழல் குறித்தும் புறவயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். தன்னைக்குறித்து தனியாகவும், சூழலோடு பொருத்தியும், சிந்திக்கிற மனிதனின் ஆற்றலையே பகுத்தறிவு என்கிறோம். மற்ற உயிரினங்களுக்கோ தன்னைச் சூழலில் இருந்து பிரித்துணரும் ஆற்றல் கிடையாது. இயற்கையோடு இணைந்தே அவை தங்களுடைய தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எனவே அந்த இயற்கைச் சூழல் மாறும்போது அல்லது அழியும்போது மாறிய சூழலுக்கேற்ப தங்களுடைய தகவமைப்புகளை மாற்ற முடியாத உயிரினங்கள் அழிந்து விடுகின்றன். பரிணாமக்கோட்பாட்டின் மூலமாக மனிதகுல வரலாற்றில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்திய டார்வினின், தகுதியானவைகளின் உயிர்மீட்சி (survival of the fittest  ) என்ற கொள்கையின்படி இயற்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாத எல்லா உயிரினங்களுமே வாழ்வதற்கான தங்களுடைய தகுதியை இழந்து விடுகின்றன.ஆனால் மனிதர்கள் மட்டுமே தன்னுடைய உழைப்பின் மூலமும் பகுத்தறியும் திறன் மூலமும், இயற்கையின்மீது வினை புரிந்து தாங்கள் வாழத்தகுதியாக இயற்கையை மாற்றுகிற வல்லமை பெற்றவர்களாக மாறியிருக்கின்றனர்.

உழைப்பு சகமனிதர்களுடனான உறவில் பெரும் மாற்றத்தை உருவாக்குகிறது. தங்களுடைய வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, விலங்கு பருவத்திலிருந்த பழைய சைகை மற்றும் உடல்மொழியும், ஒலிக்குறிப்புகளும், போதுமானவைகளாக இல்லை. அப்போது புதிய சைகை மற்றும் உடல்மொழியும் புதிய ஒலிக்குறிப்புகளை சிருஷ்டிக்கின்றனர். சிந்தனையின் ஒளி தன் கிரணங்களை மெல்ல முகிழ்க்கிறது. மனிதமூளையின் மடிப்புகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவங்களை, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளும் பேராவல் அதிகரிக்கின்றது. இந்தப் பேராவலில் விளைந்த பயிர் தான் கதை என்று சொல்லலாம். கடந்த காலத்தைச் சொல்கிற சமூகச் செயல்பாடாகவே ஆதியில் கதைசொல்லுதல் தொடங்கியிருக்கலாம். முதலில் இது குகைப்பாறைக் கீறல்களாக, ஓவியங்களாக, குறியீடுகளாக,அடையாளச் சின்னங்களாக, மெல்ல மெல்ல மனிதனின் நனவிலி மனதில் பெரும் விருட்சமென வளர்ந்திருக்கிறதுகதை. மொழி தோன்றியவுடன் கதைகள் ஆயிரங்கால் பூச்சிகளைப் போல ஊர்ந்து சென்று மனித உயிரில் குடியேறிவிட்டது. பின்னர் கற்பனைகளும், புனைவும் பிறந்து கதைகளை மனித இனத்தின் மூச்சாக மாற்றி விட்டது.

ஆதியில் வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்த போது தன்னுடைய வேட்டையனுபவங்களைக் கதையாக மாற்றினான். ஆற்றங்கரை நாகரிகத்தில் வேளாண்சமூக அனுபவங்களை கதையாக மாற்றினான். மனித சமூகத்தின் உற்பத்திசக்திகளின் மாற்றத்திற்கேற்ப கதைகளும் மாறிக் கொண்டே வந்தன. கதையின் உடல் முழுவதும் மனிதகுலவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறபோது புதிது புதிதாகப் பிறக்கிறது. கதை சொல்வது படைப்பூக்கஉணர்வைத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பழைய கதையாக இருந்தாலும் கதை சொல்பவர் அதை அப்படியே சொல்வதில்லை. கதை கேட்பவரும் அதை அப்படியே கேட்பதும் இல்லை. எனவே தான் கதைகளுக்கு என்றும் மூப்பில்லை. அன்றலர்ந்த மலர் போல மலர்ந்து கொண்டேயிருக்கின்றன கதைகள்.

ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுடைய வெற்றிகளை, தோல்விகளை, வேட்கைகளை, கொண்டாட்டங்களை, கனவுகளை, கதைகளுக்குள் நேரிடையாகவும், மறைமுகமாகவும், பொதிந்து வைத்திருக்கின்றன. அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தவும் செய்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட பிரதேசமும், மண்ணும் நீர்வளமும், இயற்கையும், வாழ்நிலையும் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்துக்கென்றே பிரத்யேகமான கதைகளை உருவாக்குகின்றன. இந்தக் கதைகள் அந்த இனக்குழுவின், அந்த வட்டாரத்தின் மொழிப்பிரயோகம், பழக்க வழக்கங்கள், வரலாறு, பண்பாட்டைத் தெரிவிக்கின்றன.

இன்று ஒற்றைக் கலாச்சாரத்திணிப்பினால் நம் பன்முகக் கலாச்சாரத்தின் வேர்கள் அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே போல தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன் கேம்ஸ்,என்று நவீன சாதனங்கள் பெருகி கதை சொல்லும் நம் மரபினை அரித்துக் கொண்டிருக்கின்றன. பழங்கதைகள்,நாடோடிக் கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வீரகதைகள், துப்பறியும் கதைகள், மந்திரக்கதைகள், ராஜாராணிக்கதைகள், புதிர்க்கதைகள், விடுகதைகள், பஞ்சதந்திரக் கதைகள், என்று கதைகள் தான் எத்தனை வகை?

இன்று குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு தாத்தாக்களோ,பாட்டிகளோ, வீடுகளில் இல்லை. அப்பா, அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடப் பயிற்சிக் கூடங்களாகி விட்டன. ஆனாலும் குழந்தைகள் கதைகளைத் தங்களுக்கே உரிய பாணியில் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளிடம் தான் கதையின் மலர் பூத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு குழந்தை இப்படிக் கதை சொல்லியது; ஒரு வீட்ல களவாணிப்பய வந்து எல்லாத்தையும் சுருட்டி எடுத்துகிட்டுப் போகும் போது அந்த வீட்ல இருந்த குழந்தை பாத்துருச்சி.. அது உடனே களவாணிப்பய கிட்ட என்ன சொல்லுச்சி தெரியுமா? மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்துகிட்டுப் போயிரு..இல்லேன்னா அப்பாவை எழுப்பிருவேன்.