Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Wednesday, 8 August 2012

ஆரோக்கியமும் மருத்துவமும்

உதயசங்கர்

Mohan Das (63)

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம் தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவமுறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவமுறைகளான அக்குபஞ்சர், அக்குப்பிரசர் மருத்துவம் என்று மருத்துவமுறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நினைவில் வருவது ஆங்கில மருத்துவமுறை மட்டும் தான். அது மட்டுமல்ல ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் நாட்டு வைத்தியம் என்று பொதுப்படையான பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். எப்படி நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாகவும் நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கிலமருத்துவம் என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.

முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்கிற பொருட்கள் தான். கொசுக்களை ஒழிப்பதை விட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக்கொல்லிகளை விற்பனை செய்வது தான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ அதில் எல்லாம் தன் கை வரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி நம்மைத் தயாரிப்பதிலும் கில்லாடி. அதனால் தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காக தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறோம். அதுவும் குழைந்தைகளுக்கென்றால் கேட்கவே வேண்டாம். அங்கு மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே,( இது இப்ப ரெம்பப்பழசு ), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்கிறார். எல்லா டெஸ்டுகளையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்திருக்கிறது என்று பயமுறுத்தவும் செய்கிறார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பெற்றோர்களும் சாதாரண சளித்தொந்தரவை எம் பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் ( டானிக்குகளின் மீது அப்படி என்ன தான் மோகமோ ! ) ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?

குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயினால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளினாலும், டானிக்குகளினாலும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி தேவைக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் நம்முடையை உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும். அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம், ஆகியவற்றையும் பாதிக்கும். நாளாவட்டத்தில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி குறைந்து எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?

குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையினால் உருவாகிறது. குளிர், அல்லது வெப்பம் ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மன அழுத்தம், இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளை தவிர்த்தாலே நோய் வராது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மற்றும் மன அமைப்புடனே பிறக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம்தாங்கிகளாகவோ, குளிர்தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம்தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக் கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக் கொள்ளாது, இரண்டுமே ஒத்துக் கொள்ளாத குழந்தைகளும் உண்டு. மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக் கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ணநிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை உண்டுபண்ணும். பெற்றோர்கள் இவற்றையெல்லாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை. ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருக்களோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாதவர்களாக அதாவது குளிர்தாங்கிகளாக இருக்கும். அதேபோல ஒரு குழந்தை குளிர் காலத்தில் சளி, இருமல், தும்மல், என்று அதிகமான சளித்தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர்தாங்க முடியாததாக அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ணநிலையில் நன்றாக இருக்கும். மற்ற காலங்களில் ஏதாவது தொந்திரவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால் நம் உடலில் மாறுமை அல்லது நோய் வந்தால் அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு இருமல் வெளிக்காற்றில் ஒருவருக்கு வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும். இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ, கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால் நோய் என்னவோ இருமல் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, மருத்துவமுறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால் ஆங்கில மருத்துவ முறைக்கு தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளை தனித்துவமிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகின்றது. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவமிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.

சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதால் மருத்துவர்களும் மருத்துவ அறவுணர்வின்றி, மனிதாபிமானமின்றி, சக மனிதன் என்ற அநுதாபமின்றி, பணத்தைக் கறப்பதிலேயேக் குறியாக இருக்கின்ற அவலநிலை இருக்கிறது. இதனால் தேவையில்லாத டெஸ்டுகள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள், என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மருத்துவக்கல்வி தனியார் கைவசம் போனபிறகு ஒருவர் மருத்துவக்கல்வியை முடிக்க கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளை பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இது தான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எதுஎதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும் போதே கற்பித்திருந்தால் இத்தனை மருந்துக் கடைகளுக்கு வேலையிருக்காது. அதோடு நம்முடைய ஆதி மருத்துவமுறைகளை அரசாங்கம் ஆதரித்து அந்த மருத்துவமுறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சை செய்வேன் என்ற மந்தை மனோபாவத்தை விட்டு நம்முடைய மருத்துவ முறைகளுக்குப் போக வேண்டும். நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தை விட எளிமையானது. அதிக செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.

அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்ல வில்லை. அறுவைச் சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, மாற்று அறுவைச்சிகிச்சை, போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை. நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா, அல்லது ஆயுர்வேதம்,அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர், அல்லது அக்குபிரஷர், அல்லது ஆங்கில மருத்துவமுறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவமுறையே எதிர்காலத்தில் ஒரு வலுமிக்க சமுதாயத்தை உருவாக்கும்.

நன்றி – இளைஞர் முழக்கம்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Saturday, 14 July 2012

குழந்தைகளின் ஆரோக்கியம்

 

உதயசங்கர்pictures2

 

குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. சரியான உணவின்றி, மருத்துவக்கவனிப்பின்றி, சரியான சத்துணவுக்கு வழியின்றி, நோய்த்தொற்றினால், பல குழந்தைகள் ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகநேரிடுகிறது. அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனமான அறிவிப்புகள் பெரும்பாலும் ஏழை,எளிய மக்களையே அதிகம் பாதிக்கின்றன. தற்போதைய வறுமைக்கோட்டு வருமான வரம்பு ரூ.32 என்ற அறிவிப்பு ஒன்றே போதும் நமது அரசாங்கம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இதன் விளைவு அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிட்டன. எதிர்கால சமுதாயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத அரசின் மருத்துவக்கொள்கையும், மருந்துக்கொள்கையும், அரசின் சேவையாக இருக்க வேண்டிய மருத்துவத்தை வியாபாரமாக மாற்றி விட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்களமாக இந்தியமக்களின் உடல்,மன,நலமும் மெல்ல மெல்ல மாறி வருகின்றது. மருத்துவர்களும் மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானம் இல்லாத வியாபாரிகளாக மாறி வருகின்றனர். மக்களின் சுரணையின்மை, அலட்சியம், மந்தைபுத்தி, அரசின் கையாலாகாத்தனம், எல்லாம் சேர்ந்து சுற்றுச்சூழல், தண்ணீர், காற்று, உணவு எல்லாவற்றையும் மாசு படுத்தி உயிர்கள் வாழத் தகுதியில்லாததாக இந்தியாவை மாற்றி வருகின்றனர்.

முதலாளித்துவத்தின் உச்சபட்ச நுகர்வின் களமாக மாறியுள்ள இந்தியாவில் மக்கள் மனங்களை வசப்படுத்துவதற்கு ஊடகங்கள் பயன்படுகின்றன. எந்த விளம்பரத்தையும் பணம் கொடுத்தால் போடுவதற்கு தயாராக இருக்கின்ற ஊடகங்கள் அந்தப் பொருட்களின் உண்மைத்தன்மை பற்றிய அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளை வெளியிடத் தயங்குகின்றன. கோக், பெப்சியில் கலந்துள்ள வேதியல் பொருட்கள், டையரிமில்க் சாக்லேட்டில் கண்டெடுக்கப்பட்ட கம்பி, புழுக்கள் பற்றி, ஜங்க் புட் எனச் சொல்லப்படும் உணவுப்பொருட்களினால் ஏற்படும் உடல்நலக்கேடுகள் பற்றி, எதையும் பகிரங்கமாகச் சொல்வதில்லை அல்லது மேலோட்டமாகச் சொல்லிச் செல்கின்றன. ஏனெனில் அந்தக் கம்பெனிகளின் விளம்பரங்கள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தான். அத்துடன் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் இந்திய முதலாளிகளாலேயே நடத்தப்படுகின்றன. எனவே தங்களுடைய வர்க்கத்துக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கமாட்டார்கள். லஞ்சம், ஊழல், மலிந்துள்ள இந்திய அதிகார வர்க்கத்தின் சமூகப்பொறுப்பின்மையும் இதற்குத் துணைபோகின்றன. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 1500 ஆங்கில மருந்துகள் தாராளமாகப் புழக்கத்திலிருக்கின்றன. இந்த மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் தீவிரம் கருதியே மேலை நாடுகளில் இந்த மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் இந்திய மருத்துவக்கவுன்சில் உட்பட யாவரும் அறிந்த ரகசியம்.இப்படிப்பட்ட புறவயமான சூழலில் குழந்தைகளின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று நாமே யோசித்துக் கொள்ளலாம்.

நம்முடைய உயிரோட்டமில்லாத கல்விமுறையினால் படித்தவர்களுக்கும் கூட நோய் என்றால் என்ன? நலம் என்றால் என்ன? என்று சரியாகத் தெரிவதில்லை. நம்முடைய உடலை விட பெரிய மருத்துவர் வெளியில் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். உடலின் மொழியை நாம் தெரிந்து கொண்டோமானால் பெரும்பாலான சாதாரண உடல் உபாதைகளை நாம் நம்முடைய பழக்கவழக்கங்களின் மாற்றத்தினாலேயே சரி செய்து கொண்டு விடலாம். இதற்கு மிகப் பெரிய மருத்துவ அறிவோ மருந்துகளோ தேவையில்லை.

குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. தாயின் வலிமை மிக்க பாதுகாப்புப்படையணி வரிசை குழந்தையையும் பாதுகாக்கிறது. ஆனால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பிறகு, புத்தம் புதிதாய், சின்னஞ்சிறுசாய், இந்த வெளியுலகை எதிர் கொள்கிறது. அதனுடைய உடலின் பாதுகாப்புப்படையணி இன்னும் தன் பிஞ்சுப் பருவத்திலேயே இருக்கிறது. அந்தப் படையணி இந்தப் புதிய உலகத்தில் ஒவ்வொரு பாடமாகக் கற்றுக் கொள்கிறது. அதிகக்குளிர், அதிக வெப்பம், தூசு, மாசு, இவற்றை எதிர்கொள்ளுதல், அது வரை தாயிடமிருந்தே உணவைப் பெற்றுக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்த பிறகு பருப்பொருளான திட மற்றும் திரவ உணவு, அதன் உடலின் செரிமானம், கழிவு வெளியேற்றம், என்று எல்லாவற்றையும் தானே நிர்வகித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போது குழந்தை தன் உடலின் தனித்துவத்துவத்தைப் புரிந்து கொள்கிறது. அதைக் கண்டுபிடிக்கச் சில பரிசோதனைகளை குழந்தையின் உடல் நடத்துகிறது. அதன் மூலம் அது தன் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளவும், அதை தன்னுடைய பாதுகாப்புப்படையணிக்கு உணர்த்தவும் நினைக்கிறது.

நோய் என்றால் என்ன? உடலில் ஏற்படும் மாறுமை. அல்லது மாறுபாடு. உடலில் ஏன் மாறுபாடு ஏற்படுகிறது? உடலின் இயக்கத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும் புறவயமான காரணிகள் ஒரு காரணம். உதாரணத்துக்கு கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட பிறகு அதன் விஷம் உடலில் கலந்து விடாதிருக்க உடலின் மருத்துவர் தன் பாதுகாப்புப்படையணியிடம் இடும் கட்டளைக்கேற்ப வயிற்றாலை என்ற மாறுமையை உருவாக்குகிறது. தொடர்ச்சியான மலக்கழிச்சலின் மூலம் உடலில் சேரவிருந்த விஷப்பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. இது இயற்கையான உடல் தனக்குத் தானே செய்து கொள்ளும் மருத்துவம். இதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. நீர்ச்சத்து உடலில் குறைந்து விடாமலிருக்க அதிக நீரும், எளிய உணவும், ஓய்வும் போதுமானது. உடலிலுள்ள விஷப்பொருட்கள் வெளியேறி விட்டதாக பாதுகாப்புப்படையணிக்குத் திருப்தி ஏற்பட்டதுமே அது வயிற்றாலையை நிறுத்தி விடும். ஆனால் இரண்டு முறைக்கு மேல் வெளியே போய் விட்டால் போதும் அவ்வளவு தான் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருந்துகளைக் கொடுத்து விஷப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேறவிடாமல் தடுத்து விடுகிறோம். அது மட்டுமல்ல கழிவு வெளியேற்ற செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி விடுவதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மலம் வெளியேறாது. அது மட்டுமல்ல பசியிருக்காது. உடல் சோர்வாக இருக்கும். பின்னர் சில சமயம் மலம் வெளியேற மருந்து சாப்பிட வேண்டிய நிலைமைக்கு குழந்தைகளை ஆளாக்குகிறோம். 

இது மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அது ஏதோ அவர்களுக்கு கௌரவக்குறைச்சலாகி விடுகிறது. தூசு, மாசு, அதிகக் குளிர், அதிக வெப்பம் இவற்றால் நம்முடைய உடலிலுள்ள சளிச்சவ்வுகள் உடலின் பாதுகாப்புக் கருதி அதிகமான நீரை உற்பத்தி செய்து தூசிகளை வெளியேற்றுகின்றன, உடலின் சமநிலையைப் பாதுகாக்கின்றன. அதற்காகவே சளி உருவாக்கி நம் உடலின் இயக்கம் தடைபடாமலிருக்கவும், உடலின் முக்கிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாமலிருக்கவும் நமது உடல் மருத்துவர் உருவாக்குகிற முறைகளே, தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், ஆகியன. இதன் மூலம் நம் பாதுகாப்புப்படையணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. காற்றில் பரவி நம் உடலில் நுழையும் கிருமி, வைரஸ், எல்லாவற்றையும் எதிர் கொள்கிற திறனைப் பெறுகிறது. இதற்கு எதிரியின் பலத்தை அறிந்து கொண்டு, அவனுடைய ஆயுதத்தின் திறனை அறிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டியதிருக்கிறது. ஒரு முறை ஒரு எதிரியின் தாக்குதல் முறைகளையும், ஆயுதபலத்தையும் அறிந்து கொண்டு விட்டால் உயிர் அழியும்வரை அதன் ஞாபகத்திலிருந்து மறையாது. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ரெண்டு தும்மல் போட்டாலோ, மூக்கு ஒழுகினாலோ, லேசாக இருமி விட்டாலோ, போதும். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி அவர்கள் தருகிற ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளைக் கொடுத்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை முடமாக்கி விடுகிறார்கள்.

இப்படியெல்லாம் சொல்வதினால் குழந்தைகளை மருத்துவமனைக்கேக் கூட்டிக் கொண்டு போகக் கூடாதென்றில்லை. எதற்கெடுத்தாலும் மருத்துமனை என்ற மனோபாவம் மாறவேண்டும். நம் உடலின் மருத்துவரை நாம் முதலில் நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வாதது எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதை நீக்க முடியுமா அல்லது மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை உணர வேண்டும். அந்தந்தக் குழந்தையின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுக்க அதன் உடல்மொழியை, மனமொழியை அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பற்றி நிறையப் பெற்றோர்களின் புகார் என்னவென்றால் சரியாவே சாப்பிட மாட்டேங்குது என்பது தான். குழந்தை தனக்குத் தேவையானதை தேவையான அளவு சாப்பிடவே செய்யும். ஆனால் பெற்றோர்களுக்கு தான் கொடுப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல குழந்தை தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் குழந்தைகளைப் போல கொழு கொழுவென்று இருக்க வேண்டும் என்ற ஆசையும் கூட. குழந்தையின் ஆரோக்கியம் என்பது அதன் உற்சாகமான செயல்பாடுகளே. அதே போல அதற்கு ஒவ்வாததை எதிர்க்கிற ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியே. அதை விடுத்து கொழு கொழுவென பார்ப்பதற்கு அழகாக பிராய்லர் கோழிக் குழந்தைகள் வேண்டாமே

Saturday, 9 June 2012

கதையின் ஆதிபருவம்

 pictures உதயசங்கர்

குரங்கிலிருந்து உழைப்பின் வழியாகவே மானிட இனம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அந்தப் பரிணாமவளர்ச்சியின் பாதையில் விலங்கின் மூளை மனித மூளையாக மாறத் தொடங்குகிறது. அதன் வரையறை குட்பட்ட சைகை மற்றும் ஒலிக்குறிப்புகள் தன் எல்லையை விரிகிறது. அதற்கு முன்புவரை விலங்குகள், பறவைகள்,பூச்சிகள், எல்லாமும் சில குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகளின் மூலம், சைகை மற்றும் உடல் மொழியின் மூலம் தங்கள் தேவைகளான பசி, கோபம், பயம், இணைவிழைச்சு, என்று எல்லா உணர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. இந்த சைகை, உடல், ஒலி, மொழியை அவைகள் கற்றுக் கொள்வதில்லை. பிறக்கும்போதே அதன் உள்ளுணர்வின் ஆழத்தில், தலைமுறை தலைமுறையாக, தொடர்ந்து வருகின்றன. அவை புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது திகைத்துப் போய்விடுகின்றன. தங்கள் ஆதிஞாபகச் சில்லுகளில் தேடிப்பார்த்து ஏமாந்து போகின்றன. குறிப்பிட்ட, வரையறைக்குட்பட்ட,சைகை,மற்றும் உடல் மொழி, ஒலிக்குறிப்புகளைத்தாண்டி அவற்றால் புதிதாகச் சிந்திக்க முடிவதில்லை.

ஆனால் மனிதன் அப்படியில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக்குறித்தும் தன்னுடைய சூழல் குறித்தும் புறவயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். தன்னைக்குறித்து தனியாகவும், சூழலோடு பொருத்தியும், சிந்திக்கிற மனிதனின் ஆற்றலையே பகுத்தறிவு என்கிறோம். மற்ற உயிரினங்களுக்கோ தன்னைச் சூழலில் இருந்து பிரித்துணரும் ஆற்றல் கிடையாது. இயற்கையோடு இணைந்தே அவை தங்களுடைய தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எனவே அந்த இயற்கைச் சூழல் மாறும்போது அல்லது அழியும்போது மாறிய சூழலுக்கேற்ப தங்களுடைய தகவமைப்புகளை மாற்ற முடியாத உயிரினங்கள் அழிந்து விடுகின்றன். பரிணாமக்கோட்பாட்டின் மூலமாக மனிதகுல வரலாற்றில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்திய டார்வினின், தகுதியானவைகளின் உயிர்மீட்சி (survival of the fittest  ) என்ற கொள்கையின்படி இயற்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாத எல்லா உயிரினங்களுமே வாழ்வதற்கான தங்களுடைய தகுதியை இழந்து விடுகின்றன.ஆனால் மனிதர்கள் மட்டுமே தன்னுடைய உழைப்பின் மூலமும் பகுத்தறியும் திறன் மூலமும், இயற்கையின்மீது வினை புரிந்து தாங்கள் வாழத்தகுதியாக இயற்கையை மாற்றுகிற வல்லமை பெற்றவர்களாக மாறியிருக்கின்றனர்.

உழைப்பு சகமனிதர்களுடனான உறவில் பெரும் மாற்றத்தை உருவாக்குகிறது. தங்களுடைய வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, விலங்கு பருவத்திலிருந்த பழைய சைகை மற்றும் உடல்மொழியும், ஒலிக்குறிப்புகளும், போதுமானவைகளாக இல்லை. அப்போது புதிய சைகை மற்றும் உடல்மொழியும் புதிய ஒலிக்குறிப்புகளை சிருஷ்டிக்கின்றனர். சிந்தனையின் ஒளி தன் கிரணங்களை மெல்ல முகிழ்க்கிறது. மனிதமூளையின் மடிப்புகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவங்களை, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளும் பேராவல் அதிகரிக்கின்றது. இந்தப் பேராவலில் விளைந்த பயிர் தான் கதை என்று சொல்லலாம். கடந்த காலத்தைச் சொல்கிற சமூகச் செயல்பாடாகவே ஆதியில் கதைசொல்லுதல் தொடங்கியிருக்கலாம். முதலில் இது குகைப்பாறைக் கீறல்களாக, ஓவியங்களாக, குறியீடுகளாக,அடையாளச் சின்னங்களாக, மெல்ல மெல்ல மனிதனின் நனவிலி மனதில் பெரும் விருட்சமென வளர்ந்திருக்கிறதுகதை. மொழி தோன்றியவுடன் கதைகள் ஆயிரங்கால் பூச்சிகளைப் போல ஊர்ந்து சென்று மனித உயிரில் குடியேறிவிட்டது. பின்னர் கற்பனைகளும், புனைவும் பிறந்து கதைகளை மனித இனத்தின் மூச்சாக மாற்றி விட்டது.

ஆதியில் வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்த போது தன்னுடைய வேட்டையனுபவங்களைக் கதையாக மாற்றினான். ஆற்றங்கரை நாகரிகத்தில் வேளாண்சமூக அனுபவங்களை கதையாக மாற்றினான். மனித சமூகத்தின் உற்பத்திசக்திகளின் மாற்றத்திற்கேற்ப கதைகளும் மாறிக் கொண்டே வந்தன. கதையின் உடல் முழுவதும் மனிதகுலவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறபோது புதிது புதிதாகப் பிறக்கிறது. கதை சொல்வது படைப்பூக்கஉணர்வைத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பழைய கதையாக இருந்தாலும் கதை சொல்பவர் அதை அப்படியே சொல்வதில்லை. கதை கேட்பவரும் அதை அப்படியே கேட்பதும் இல்லை. எனவே தான் கதைகளுக்கு என்றும் மூப்பில்லை. அன்றலர்ந்த மலர் போல மலர்ந்து கொண்டேயிருக்கின்றன கதைகள்.

ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுடைய வெற்றிகளை, தோல்விகளை, வேட்கைகளை, கொண்டாட்டங்களை, கனவுகளை, கதைகளுக்குள் நேரிடையாகவும், மறைமுகமாகவும், பொதிந்து வைத்திருக்கின்றன. அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தவும் செய்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட பிரதேசமும், மண்ணும் நீர்வளமும், இயற்கையும், வாழ்நிலையும் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்துக்கென்றே பிரத்யேகமான கதைகளை உருவாக்குகின்றன. இந்தக் கதைகள் அந்த இனக்குழுவின், அந்த வட்டாரத்தின் மொழிப்பிரயோகம், பழக்க வழக்கங்கள், வரலாறு, பண்பாட்டைத் தெரிவிக்கின்றன.

இன்று ஒற்றைக் கலாச்சாரத்திணிப்பினால் நம் பன்முகக் கலாச்சாரத்தின் வேர்கள் அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே போல தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன் கேம்ஸ்,என்று நவீன சாதனங்கள் பெருகி கதை சொல்லும் நம் மரபினை அரித்துக் கொண்டிருக்கின்றன. பழங்கதைகள்,நாடோடிக் கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வீரகதைகள், துப்பறியும் கதைகள், மந்திரக்கதைகள், ராஜாராணிக்கதைகள், புதிர்க்கதைகள், விடுகதைகள், பஞ்சதந்திரக் கதைகள், என்று கதைகள் தான் எத்தனை வகை?

இன்று குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு தாத்தாக்களோ,பாட்டிகளோ, வீடுகளில் இல்லை. அப்பா, அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடப் பயிற்சிக் கூடங்களாகி விட்டன. ஆனாலும் குழந்தைகள் கதைகளைத் தங்களுக்கே உரிய பாணியில் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளிடம் தான் கதையின் மலர் பூத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு குழந்தை இப்படிக் கதை சொல்லியது; ஒரு வீட்ல களவாணிப்பய வந்து எல்லாத்தையும் சுருட்டி எடுத்துகிட்டுப் போகும் போது அந்த வீட்ல இருந்த குழந்தை பாத்துருச்சி.. அது உடனே களவாணிப்பய கிட்ட என்ன சொல்லுச்சி தெரியுமா? மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்துகிட்டுப் போயிரு..இல்லேன்னா அப்பாவை எழுப்பிருவேன்.

Saturday, 2 June 2012

விளையாட்டின் உளவியல்

 

உதயசங்கர்

 

“ஓடி விளையாடு பாப்பா - நீpictures2

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா”

மகாகவி பாரதியின் ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் அர்த்தங்கள் துடிப்பது தெரிகிறது. ஓராயிரம் கட்டுரைகளில் விரித்து விரித்து சொல்வதை ஓரிரு வரிகளில் செறிவுடன் சொல்கிறவன் கவிஞன். அதிலும் பாரதி மகாகவி. அவன் கவிதைச் சொற்கள் ஒவ்வொன்றிலும் சமூக உணர்வு பொங்கித் திளைக்கும். எத்தனைமுறை படித்தாலும் அத்தனை ஆழம் இழுத்துச் செல்லும் மகாகவியின் கவிதைகள். மேலே கண்ட பாடலில் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஓடியாடி விளையாடுவது எத்தனை முக்கியம் என்பதை இரண்டாவது வரியில் ஓய்ந்து, சோம்பேறியாக இருக்கக்கூடாது என்று சொன்ன பாரதி அடுத்த வரியில் கூடி விளையாடச் சொல்கிறானே அதோடு யாரையும் நிந்திக்காமலிருக்கவும் கேட்கிறான். ஏன் கூடி விளையாட வேண்டும்?

இன்று பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களின் கட்டுப்பாடுகளினால் வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே தனிமையில் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனக்குத் தானே விளையாடிக் கொண்டு பத்திரமாய் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதைத் தவிர வேறு எந்த சமூகச் செயல்பாடுகளுமின்றி தனிமை, வீட்டில் பெரியவர்களின் கட்டுப்பாடுகளினால் தனிமை. இப்படி உள்ளும் புறமும் தனிமையில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

விலங்குகள், பறவைகள், பூச்சிகள் முதல் மானுட சமூகம் வரை கூடி வாழ்தல் என்பது இயற்கையின் உள்ளுணர்வினால் விளைந்த செயல்பாடு. அது தங்களை இந்த பூமியில் வாழத்தகுதியானவர்களாக்குகிற இயற்கை வாழ்முறை. கூடி வாழ்தலில் தான் ஒரு சமூகம் உயிர்த்திருக்கிறது. கூடி வாழ்வதற்கான கூட்டுச் செயல்பாட்டுக்கான சில அடிப்படை உளவியல் இயல்புகளை எல்லா உயிரினங்களுமே இயல்பாகக் கொண்டிருந்தாலும் மானுட இனம் அதை மிகச் சிறப்பாகவே தன் பகுத்தறிவின் துணைகொண்டு தன் சமூகத்துக்குப் பயிற்றுவிக்கிறது. அது மனதுக்கும், உடலுக்கும் உரமூட்டுவதாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக சமூகத்தின் அங்கத்தினரான ஒவ்வொருவரையும் பண்படுத்துகிறது. அதற்கு குழந்தைப்பருவத்திலேயே சமூகம் கண்ட வழிமுறை தான் விளையாட்டு கூடி விளையாடும் விளையாட்டுகளில் குழந்தையின் மனம் களிப்புறுகிறது. எந்த கட்டுப்பாடுமின்றி தன்னைத் தானாகவே உணர்ந்து, தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, மொத்தத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படும் செயல்களில் விளையாட்டுக்கு முக்கியப்பங்கு உண்டு.

அதுமட்டுமல்ல. புறஉலகின் எல்லா நெருக்கடிகளிலிருந்தும், பெற்றோர்ககளின், ஆசிரியர்களின், வீட்டுப்பாடச்சுமையின் மதிப்பெண் பூதங்களிலிருந்து விடுபட்டு தங்களுடைய இயல்பான படைப்பூக்க உணர்வை மீட்டெடுக்கவே குழந்தைகள் விளையாடுவதற்கு பேராவல் கொள்கின்றனர். படைப்பூக்க உணர்வை மீண்டும் மீண்டும் உருவாக்குவதின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அனுபவிக்கத் துடிக்கின்றனர். இதோடு சமூகத்தில் அவர்கள் இயைந்து வாழ விளையாட்டு அவர்களை பண்படுத்துகிறது. தன் வயதொத்த குழந்தைகளோடு கூடி விளையாடும்போது கூட்டுச்செயல்பாடுக்கான விவேகமும், கூட்டுணர்வும் ஏற்படுகிறது. கூடிச்சேர்ந்து செய்வதில் ஒரு தார்மீக நெருக்கமும், அழகியலும் தோன்றுகிறது. அதோடு கூட்டுச்செயல்பாட்டிலேயே தனித்துவம் காணும் தனிப்பாணியும் உருவாகிறது.

கூட்டுச் செயல்பாட்டை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பும் இயல்பாகவே தோன்றுகிறது. இந்தத் தலைமைப்பண்பின் தனித்தகுதியாக எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்கிற திறன் வளர்கிறது. பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதால், அன்பும், நட்பும் பெருகித் தழைக்கிறது. விளையாட்டுச் சண்டை என்பது விளையாட்டுச் சண்டையாகவே முடிந்து விடுகிறது. குழந்தைகளால் நீண்ட நேரத்திற்குக் கோபத்தையும், வெறுப்பையும், கசப்பையும் வளர்க்க முடியாது. சிறிது நேரத்திலேயே பழம்விட்டு சேர்ந்து கொள்வார்கள். யார் பக்கம் நியாயம் என்று தர்க்கரீதியாக யோசிக்காமல் யார் அதிகமாகப் புண்பட்டிருக்கிறார்களோ, யார் அதிகம் வருத்தமடைந்திருக்கிறார்களோ அவர்களுக்காக விட்டுக்கொடுப்பார்கள். இந்த விட்டுக்கொடுத்து இயைந்து வாழ்கிற பண்பு விளையாட்டின் மூலமே கிடைக்கிறது. இதற்கேற்ப இருவர் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து பத்துபேர் விளையாடும் விளையாட்டுகள் வரை அந்தந்தக் கால சீதோஷ்ண நிலைமைகளுக்கேற்பவும், அந்தந்தப் பகுதி மண், வளம், வாய்ப்புகளுக்கேற்பவும் இருந்து வந்தன. ஆனால் இப்போது அந்தப் பன்முக விளையாட்டுகளின் களத்தை கிரிக்கெட் என்ற ஒற்றை விளையாட்டு அபகரித்துக்கொண்டது. தொலைக்காட்சியின் மூலம் திணிக்கப்பட்ட அந்த விளையாட்டு நிறைய வசதிகளைக் கோருவதால் எல்லாக் குழந்தைகளாலும் அதில் பங்கேற்க முடிவதில்லை. இருந்த இடத்திலே வீட்டின் முற்றத்திலே திண்ணையிலே தெருவிலே, மைதானத்திலே, என்று வித விதமாய் விளையாடக்கூடிய வாய்ப்புகள் இந்த ஒற்றை விளையாட்டினால் அழிந்து போய்விட்டது.

கிட்டிப்புள், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, கிளியாந்தட்டு, தாச்சி, ஓடு அடுக்குதல், எறி பந்து, கல்லாமண்ணா, பாண்டி, கள்ளன்போலீஸ், கபடி, மரம் ஏறுதல், பச்சைக் குதிரை, செதுக்குழுத்து போன்ற ஓடி ஆடும் விளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், ஆடுபுலி, ஒத்தையா ரெட்டையா, போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளுமாய் எத்தனை எத்தனை விளையாட்டுகள்! காலத்திற்கும், பருவத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற மாதிரியான உள்விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகை வகையாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இப்போது காணவில்லை.

காலத்திற்கேற்ப புத்துருவாக்கம் செய்யலாம். ஆனால் இவை மேலே குறிப்பிடப்பட்ட விளையாட்டுகளை எதுவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில்லை. ஆனால் பெரிய அளவில் பொருளாதார வசதி தேவைப்படாத விளையாடுபவர்களின் நோக்கத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கக்கூடிய விளையாட்டுகள். இந்த விளையாட்டுகளை யெல்லாம் விழுங்கி ஏப்பமிட்டது கிரிக்கெட் என்ற வெளிவிளையாட்டு மட்டுமல்ல. கம்ப்யூட்டர் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் என்று சொல்லப்படுகிற உள்விளையாட்டுகளும் தான்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற அந்த வீடியோ கேம்ஸிலும், கம்யூட்டர் கேம்ஸிலும் உள்ள பிரத்யேகமான தன்மை குழந்தை தன்னைப்போன்ற இன்னொரு குழந்தையோடு விளையாடுவதைத் தடுக்கிறது. அது பிரதிமையோடு விளையாடத் தூண்டுகிறது. அந்தக் காட்சிப் பிரதிமைகள் எப்படி இருக்கின்றன? கார்ரேஸ், வேட்டையாடுதல், பைக் ஓட்டுதல் போன்ற குழந்தையின் வயதுக்கும், மனநிலைக்கும், யதார்த்தத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லாத விளையாட்டுகளே குழந்தைகளுக்கு கிடைக்கின்றன. வேறு வழியின்றி பெரியவர்களின் அடக்குமுறைக்கும் அதட்டலுக்கும் அஞ்சி குழந்தைகள் விளையாடுகின்றனர். அதில் எந்தக் கூட்டுச் செயல்பாடும் இல்லை. விட்டுக்கொடுத்தல் இல்லை. தலைமைப்பண்பு தேவையில்லை. அன்போ, நட்போ, பாசமோ, தேவையில்லை. அதிலே ஒரே குறிதான். வெற்றிபெறவேண்டும் நிறைய்ய பாயிண்டுகள் எடுக்கவேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். தனிமையில் விளையாடும் இந்த விளையாட்டு குழந்தையிடம் பிடிவாதத்தை வளர்க்கிறது. தான் என்கிற வெறியை கிளப்புகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.

கார் ரேஸ் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை எதிர்ப்படும் தடைகளை முறியடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறான். சாலையோரத் தடுப்பைத் தகர்க்கிறான். விளக்குக் கம்பங்களை வீழ்த்துகிறான். எந்த சிக்னலையும் மதிக்காமல் விரைகிறான். குறுக்கே எதிர்ப்படும் எவரையும் காரை ஏற்றிக் கொல்கிறான். சில நேரம் பிளாட் பாரத்தில் நடந்து போய் கொண்டிருப்பவர்கள் மீதும் காரை ஏற்றுகிறான். அது பிரதிமையே என்றபோதிலும் குழந்தையின் முகத்தில் காணும் தீவிரத்தையும், வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியையும் பார்க்கும்போது உள்ளம் பதைபதைக்கிறது. அருகில் அவனுடைய பெற்றோர்கள் உட்கார்ந்து கொண்டு அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன மாதிரியான எதிர்கால மானிட சமூகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கவலை பீடிக்கிறது. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலமாக நமது காலம் இருக்கிறது. குழந்தைகள் கூடி விளையாடுவதற்கான தருணங்களே இல்லாமல் ஆகிவிட்டது நம் காலம். வெறிச்சோடிக்கிடக்கின்றன தெருக்கள். குழந்தைகளின் குரலுக்காக ஏங்கித்தவிக்கின்றது நிலா. சுட்டெரிக்கும் சூரியன் கூட இனி சுடமாட்டேன் வாருங்கள் குழந்தைகளே என்கிறது. ஆனால் குழந்தைகள் வீடுகளுக்குள் எப்போதும் அலறும் முட்டாள் பெட்டிகளின் முன்னேயோ, பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களிலோ வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். சமூகத்தின் கூட்டுச்செயல்பாட்டின் ஆதாரமான, தார்மீக நெறிகளைப் பயிலாமலே ஒரு எதிர்கால சமூகம் வளர்ந்தால் என்ன ஆகும்? யோசிக்க வேண்டும்.

Tuesday, 29 May 2012

மறுப்பதற்கான உரிமை

உதயசங்கர்mother-and-child-bob-botha

குழந்தைகள் தங்களுக்குப் பிடிக்காதவற்றை மறுக்கிறார்கள். தங்களுடைய செயல்களின் மூலம் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். உடனே பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள். திருத்துவதாகச் சொல்லி வதைக்கிறார்கள். குழந்தையிடமிருந்து வருகிற எதிர்ப்பை பொறுக்க முடியாது. ஏனெனில் குழந்தையைவிட பெரியவன் தான் என்ற அகங்காரம். தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம். பெற்றோர், ஆசிரியர், அண்ணன், அக்கா என்று குழந்தையை விட மேலான வளர்ச்சிப்படி நிலையில் இருப்பதால் தனக்குக் கீழே இருப்பவர்கள் தான் சொல்வதற்குக் கீழப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வு.

“முளைச்சி மூணுஇலை விடலை... அதுக்குள்ளே

வேண்டாம்.. முடியாதுன்னு பிடிவாதத்தைப் பாரு...”

என்ற வார்த்தைகள் பேசப்படாத வீடுகள் இருக்குமா என்பது சந்தேகம். அதோடு மட்டுமல்ல, குழந்தையிடமிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்தால் உடனே அடங்காமை, கீழ்ப்படியாமை, சொன்னபடி கேட்காமை என்று சொல்லி குழந்தைகளின் மீது விதவிதமான அடக்குமுறைகளைச் செலுத்த முனைகிறோம். இல்லையென்றால், “அடியாதமாடு படியாது” பிள்ளையை அடித்து வளர்க்கணும், கறிவேப்பிலையை ஒடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? போனற சொலவடைகளை, பழமொழியை அதன் அர்த்தம், காலப்பொருத்தம் தெரியாமலே இன்னமும் உளறிக்கொண்டு திரிகிறோம்.

உலகத்திலேயே மிக அதிகமாக எல்லாவிதமான வன்முறைகளுக்கும் இலக்காகிறவர்கள் குழந்தைகளும், பெண்களும் தான். உடல் ரீதியான வன்முறையில் உயிரிழப்பவர்கள் ஏராளம். அதுமட்டுமல்ல, பட்டினி போடுதல், தனிமைப்படுத்துதல், சுதந்திரமாக அலைய விடாமல் தடுத்தல், சுடுசொல், முறைத்தல், அதட்டுதல், பயமுறுத்தல், நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் அச்சுறுத்தல், பின்விளைவுகளைச் சொல்லி மிரட்டுதல், அடிக்க முனைதல் இவைகள் எல்லாமே வன்முறையின் வேறு வேறு வடிவங்கள் தான். சமபலமில்லாத, சார்ந்து வாழ்கிற எதிர்கொள்வதற்கு முடியாத யாரொருவர் மீதும் உடல் மற்றும் மன ரீதியான வன்முறையைப் பிரயோகிப்பது அவமானகரமான குற்றமாகும்.

எல்லாக் குழந்தைகளும் எப்போதும் தங்கள் எதிர்ப்பையோ, மறுப்பையோ காட்டுவதில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகே அவர்களுக்கேயுரிய தனித்துவக்குணங்கள் உருவாகத் தொடங்கும் போதே தங்களுடைய விருப்பு வெறுப்புகளை எதிர்ப்பாக மறுப்பாக வெளிக்காட்ட முனைகிறார்கள். ஒரு மரத்தின் இலைகளைத் தோராயமாகப் பார்க்கும்போது எல்லாம் ஒன்று போலத் தெரியும். ஆனால் கூர்ந்து ஒவ்வொரு இலையாக உற்றுப்பாருங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும், அளவிலும், பருமனிலும் இருப்பதைக் காணலாம். நிறத்தின் அடர்த்தியிலும், உணவு தயாரிக்கிற, நீரை உறிஞ்சுகிற, உட்கொள்கிற கரியமில வாயுவிலிருந்து, வெளிவருகிற பிராணவாயு வரை எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. ஒவ்வொரு சிறிய இலையுமே தனித்துவமிக்கதாகவே திகழ்கின்றன. அது போலத்தான் குழந்தைகளும். வளரும்போதே தனக்கென்று தனிருசி, விருப்புவெறுப்புகள், உறக்கம், விழிப்பு, உணவு, விளையாட்டு என்று தனித்துவமிக்க பழக்கங்களோடு வளர்கின்றனர். குழந்தைகளின் பரம்பரைக் குணாதிசயங்கள், சூழ்நிலை, உள்ளுணர்வு, படைப்பூக்கம், ஆழ்மனப் பிரதிபலிப்புகள் எல்லாமும் சேர்ந்து இவற்றைத் தீர்மானிக்கின்றன. குழந்தைக்கு ஒவ்வாததை பிடிக்காததைச் செய்யும்போது அல்லது செய்யச் செல்லும்போது குழந்தைகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுகின்றனர். மறுப்பைப் பதிவு செய்கின்றனர்.

பெரியவர்கள் முதலில் குழந்தைகளின் எதிர்ப்பை மதிக்க வேண்டும். மறுப்பை அங்கீகரிக்க வேண்டும். நாம் அதை அங்கீகரிக்கிறோம் என்பதைக் குழந்தைகள் அறியச் செய்யவேண்டும். சில நேரங்களில் அவர்களுடைய எதிர்ப்பிற்கான காரணங்கள் நமக்கு அற்பமானவையாக இருக்கலாம். மறுப்பிற்கான காரணங்கள் அர்த்தமில்லாதவையாக இருக்கலாம். உண்மையில் குழந்தைகள் காட்டுகிற எதிர்ப்பைக் கண்டு நாம் பெருமகிழ்வு கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தை தனக்கான தேவைகளை விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கிறது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து குழந்தையின் மீது கோபம் கொள்வது, எரிச்சல் படுவது, அடிப்பது போன்றவற்றை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழந்தை தன்னுடைய பிரத்யேகமான தேவைகளைத் தெரிந்து கொள்ளவே முடியாது. அது மட்டுமல்ல எந்தச் செயலையும் தனக்குப் பிடிக்கிறது என்றோ, பிடிக்கவில்லை என்றோ தேர்வு செய்ய முடியாமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் அடிபணிவது, சொன்னபடி கேட்பது, கோழையாக இருப்பது, சிறிய சலுகைகளுக்கு தங்களையே இழக்க நேர்வது போன்ற எதிர்விளைவுகள் உருவாகிவிடும்.

அதிகமாக அடக்குமுறைகளுக்கு உள்ளாகிற பெண் குழந்தைகளின் உணர்வுகளை மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் மறுப்பையும், எதிர்ப்பையும் அங்கீகரித்து அனுமதிக்க வேண்டும். அடக்கியே வளர்க்கப்படும் பெண் குழந்தைகளை மிகச்சுலபமாக ஏமாற்றப்படுவதற்கும், இழிவுபடுத்தப்படுவதற்கும் நேரிடும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெரும்பாலும் அந்தக் குழந்தைகளுக்கு நன்றாக அறிமுகமானவர்களாலேயே நிகழ்கிறது. குழந்தைகளின் பரிபூரண நம்பிக்கையை தங்களுடைய வக்கிரபுத்தியினால் பயன்படுத்துகிற கொடூரமனம் கொண்டவர்களாக பலர் இருக்கிறார்கள். பல சமங்களில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் சிறு சிறு சலுகைகளுக்கு தன்னை இழந்து விடுகிற கொடுமையும் நேர்ந்து விடுகிறது. எனவே முதலில் குழந்தைகளுக்கு மறுப்பதற்கான உரிமையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மறுத்துப் பழகும்போது தங்களை ஒரு தனித்துவமான ஆளுமையாகக் குழந்தைகள் உணர்வார்கள். தங்களுடைய சுயமரியாதை குறித்த பெருமிதம் ஏற்படும். அப்போதுதான் பெண் குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு எதிரான எல்லாவித வன்முறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழும் ஆன்மவலிமை உருவாகும்.

குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பதற்கு பெரியவர்களுக்கு சில குணாதிசயமாற்றங்கள் தேவைப்படுகின்றன. குழந்தைகளின் முன்னால் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் அருவெறுப்பான தன் அதிகாரச் சாட்டையை வீசாமலிருக்க வேண்டும். உண்மையான அன்போடு குழந்தைகளின் செயல்களை உற்றுக் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும். இப்படியான மாற்றங்கள் பெரியவர்களிடம் வரவேண்டும்.

அப்படியென்றால் குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் செய்ய எதுவுமே இல்லையா? குழந்தைகள் செய்கிற காரியங்கள் எல்லாமே சரியானதா? அவர்கள் காட்டுகிற எதிர்ப்போ மறுப்போ, தீய விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தால் என்ன செய்வது? அனுபவச் செறிவில்லாத அவர்களுடைய ஆளுமை தானாக எப்படி வளரும்? இது போன்ற கேள்விகள் எல்லோருக்கும் வரலாம்.

நாம் எல்லோருமே நம்முடைய குழந்தைகள் மிகப்பெரிய ஆளுமையாக வளரவேண்டும் என்று தான் மனப்பூர்வமாக ஆசைப்படுகிறோம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் எதற்காக ஆசைப்படுகிறோமோ அதற்கு எதிரான செயல்களைச் செய்கிறோம். அப்படிச் செய்யும்படி இந்த சமூக அமைப்பு அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்வித்துறை, நீதித்துறை, காவல்துறை மற்றும் பண்பாட்டு அமைப்புகள், மத நிறுவனங்கள், எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிதலுள்ள குடிமகன்கள் மட்டுமே தேவை. எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிகிற ஒரு சமூக மனநிலையை உருவாக்க எல்லாவிதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வருகிற சூழலில் மறுப்பதற்கான உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யோசித்துப்பாருங்கள்.

Wednesday, 23 May 2012

விளையாட்டே வாழ்க்கை

 

உதயசங்கர்

 

இளம் பருவத்தில் எல்லா உயிரினங்களும் ஓடி, குதித்து, பாய்ந்து, விளையாடித், தங்களுடைய உடலை உறுதி செய்கின்றன. உள் உறுப்புகளை இதயம், நுரையீரல், சிறுநீரகம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்று எல்லாப்பகுதிகளும் சீராக இயங்கவும், வெளி உருவான எலும்புகள், தசைகள், அவற்றின் சக்தி, வலிமை கூடவும் விளையாட்டை உயிரினங்களின் உள்ளுணர்வோடு இணைத்து விட்டிருக்கிறது இயற்கை. குழந்தையும் அப்படித்தான். பிறந்த குழந்தை தன் கை கால்களை உதைப்பதில் துவங்கி அழுவது வரை தன் உடலின் எல்லாப்பகுதிகளையும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சியே. இந்த முயற்சிகளின் விளைவாகவே குழந்தை வேகமாகவும், திடமாகவும் தன் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து போகிறது. குழந்தையின் தன்னம்பிக்கையும் வளர்கிறது.

பொதுவாக குழந்தை இருந்த இடத்தை விட்டு நகராமல் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருக்கும் வரை பெற்றோர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். ஆனால் எப்போது குழந்தை இருந்த இடத்திலிருந்து அசைய ஆரம்பிக்கிறதோ அப்போதே அவர்களைக் கவலை வந்து தொற்றிக்கொள்கிறது. குழந்தை அசையாமல் ஒரே இடத்தில் இருந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தை அசைய ஆரம்பித்ததும் அவர்கள் கவனம் முழுவதும் குழந்தைகயின்பால் திரும்பிவிடுகிறது. அங்கே போகாதே, இங்கே போகாதே அதை எடுக்காதே இதை எடுக்காதே என்றோ பாத்து பாத்து கீழே விழுந்துரப் போற.. அடிகிடி பட்டா என்ன செய்யமுடியும்... என்றோ எச்சரித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதெல்லாம் குழந்தையின் மீது பெரியவர்கள் கொண்டிருக்கும் அபரிமிதமான அன்பின் விளைவு தான் என்றாலும் குழந்தைக்குத் தன்னுடைய சுதந்திரமான சுயேட்சையான வளர்ச்சியில் ஏற்படும் இடையூறாகவேத் தெரியும். தன் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் தன் உடலில், மனதில் புதிய,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தித் தன் கண்டு பிடிப்புகளினால் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறது குழந்தை. திரும்பிக் குப்புறப்படுக்க முயற்சி செய்கிறது, அதற்காக நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து முயற்சித்து தன் உடலையே தூக்கித் திருப்பிப் போடுகிறது. அதோடு தன் தலையையும் நிமிர்த்துகிறது. அதே போலவே தவழ ஆரம்பிப்பது தன் முதுகெலும்பு உரம்பெற உரம் பெற உட்கார முயற்சிப்பது, உட்கார்ந்த பிறகு எழுந்து நிற்க முயற்சிப்பது, நின்றபிறகு ஒவ்வொரு அடியாக தத்தக்கா பித்தக்கா என்று நடக்க முயற்சிப்பது பிறகு எழுந்து குழந்தை தன் உள்ளுணர்வின் வழியே கிடைத்த தூண்டுதல்களினால் புதிதாகக் கண்டு பிடித்து பெருமகிழ்ச்சி கொள்கிறது. எல்லா தூண்டுதல்களையும் இயற்கையாகவே குழந்தை பெற்றிருக்கிறது.

பெரியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தையின் செயல்களுக்கு இடையூறு செய்யாமலிருப்பது தான் குழந்தையிடம் அவநம்பிக்கையான வார்த்தைகளைப் பேசாமல், குழந்தையின் இயல்பான முயற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். குழந்தை விழுவது, எழுவது இயல்பு. தன்னுடைய ஒவ்வொரு செயலின் மூலமும் அதன் விளைவின் மூலமும் குழந்தை ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்கிறது என்பதை பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே குழந்தை என்ன செய்தாலும் அல்லது குழந்தைக்கு என்ன நேர்ந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கள் என்று சொல்வதாக அர்த்தமில்லை..play

பெரும்பாலான பெரியவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போய் விளையாடுவதில் சம்மதமில்லை. வீட்டிற்குள்ளேயே விளையாட வேண்டும், வீட்டில் பெரியவர்கள் வாங்கிக்கொடுத்திருக்கும், கார், பைக், ஹெலிகாப்டர், °பைடர்மேன், ஹீமேன், பார்பி, டெடிபியர், நாய்க்குட்டி போன்ற பொம்மைகளை வைத்துக் கொண்டு அமைதியாக சமர்த்தாக சத்தம் போடாமல் ஓடி ஆடாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே யாருக்கும் தொந்தரவு செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது இந்த கண்டிஷன்கள்! பெரியவர்களான நம்மாலேயே ஒரு இடத்தில் ஒரே மாதிரி ஐந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார முடிவதில்லை. அப்படி இருக்கும் போது குழந்தைகளிடம் வைக்கிற இந்தக் கோரிக்கைகள் எவ்வளவு மோசமானவை. தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் புதிது புதிதாய் பரவசத்தின் உச்சநிலையிலேயே அனுபவிக்கத் துடிக்கும் குழந்தைகளை இப்படியான கட்டுப்பாடுகளால் கட்டிப் போடுவது சரியாக இருக்குமா?

ஏன் குழந்தைகளை வெளியே சென்று விளையாடவிடுவதில் பெருந்தயக்கம்? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகளிடம் பெற்றோர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அறிவியல் பார்வையற்ற அன்பு, வெறி, பாசம், பொசசிவ்னெஸ், என்று சொல்லலாம். இந்த உணர்வுகளின் விளைவாகக் குழந்தையின் பாதுகாப்பையே பிரதானப் படுத்துகிறார்கள். இதனால் குழந்தை எப்போதும் தங்களுடைய கண்முன்னால், கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குழந்தை வெளியே சென்று விளையாடினால் ஏதாவது நிகழ்ந்து விடுமோ? என்ற நிரந்தர அச்சம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தாய்மார்கள் இந்தப் பதட்டம் காரணமாக நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு உளவியல் ரீதியாக வேறொரு காரணமும் இருக்கிறது. முன்பு எல்லாக் குடும்பங்களிலும் மூன்றுக்கு மேள்பட்ட குழந்தைகள் இருந்ததினாலும், சமூக, பொருளாதார வசதிக்குறைவினாலும் குழந்தைகள் மீது இப்போதிருக்கும் அளவுக்கு அக்கறை செலுத்த பெரியவர்களால் முடியவில்லை. ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்ததை விட வெளியில், தெருவில், மைதானத்தில் இருந்தது அதிகம். இதனால் ஏழ்மையின்,இல்லாமையின் நெருக்கடிகளினூடேயும் குழந்தைகள் சற்று சுதந்திரமாக இருக்க முடிந்தது. ஆனால் இப்போது அநேகமாக எல்லா குடும்பங்களிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. மத்தியதர வர்க்கத்தினரின் சற்றே மேம்பட்ட சமூகப்பொருளாதார வசதியும், தாங்கள் தங்களுடைய இளம் வயதில் அனுபவிக்காதது, ஆசைப்பட்டது, எல்லாவற்றையும் தங்களுடைய குழந்தைகள் அநுபவிக்கவேண்டும் என்ற ஆசையும் சேர்ந்து குழந்தைகளின் சுதந்திரத்தை அதிலும் குறிப்பாக விளையாடும் சுதந்திரத்தை பறித்துவிட்டது. இந்தச் சித்திரம் முழுமையானதில்லை. இன்னமும் மைதானங்களில், கிராமங்களில் தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதென்பது கவலையளிக்கிற விஷயமாக இருக்கிறது.

குழந்தைகள் வெளியே சென்று விளையாடி அடிபட்டால், காயம்பட்டால், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கெட்டுப்போய் விட்டால், விளையாட்டிலேயே கவனம் குவிந்து படிப்பில் அக்கறை குறைந்து போய் விட்டால், என்று ஏராளமான பயங்கள் பெரியவர்களுக்கு. எனவே என்ன செய்கிறார்கள் தெரியுமா? பேசாமல் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் உட்கார வைத்து விடுகிறார்கள். கார்ட்டுன் சேனலோ, சுட்டியோ, போகோவோ, ஏதோ ஒரு சேனலின் கையில் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு அதோடு கையில் டைரி மில்க், எக்ளேர், சாக்லேட் வகையறா, குர்க்குறே, லே°, லிட்டில் °கார்ட்ஸ்° வகையறா என்று எல்லாவித பாக்கெட் நொறுக்குத் தீனிகளையும் கையில் கொடுத்துவிட்டு °°..... அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் இயல்பான இயற்கைத் தூண்டுதல்களுக்கு மாறாக ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல எந்த உடல் உழைப்புமின்றி சர்க்கரையும், எண்ணெயும் கொழுப்பும், புரதமும் கூடவே அன்பளிப்புகளாக கெமிக்கல்ஸ் லையும் உட்கொண்டு குண்டாகிக்கொண்டே வருகிறார்கள். தாங்கள் தங்கள் அருமைக்குழந்தைகளை எதிர்கால நோயாளிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் பெரியவர்கள் குழந்தைகளின் பருமனை “கொழுகொழுன்னு எப்படி இருக்கு குழந்தை” என்று மற்றவர்கள் பாராட்டைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓடியாடி விளையாடாமல் உடலில் சேரும் சர்க்கரையும், கொழுப்பும் எப்படி வளர்சிதை மாற்றமடையும்? உடலோடு சேர்ந்து உரம் தருமா? யோசிக்கவேண்டாமா? பள்ளிக்கூடங்கள் அதிலும் பல மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களின் உளவியலை தெரிந்து கொண்டதால் மைதானங்கள் இல்லாமல் பள்ளிக்கூடங்களைக் கட்டுகின்றனர். பி.டி. பீரியட், என்ற வகுப்பு அட்டவணையில் மட்டும் இருக்கிறது. பெற்றோர்களும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. குழந்தைகள் தான் பாவம் தவித்துப்போகிறார்கள். குழந்தைகள் நம்முடைய எதிர்கால சமுதாயம் என்பதை முதலில் பெரியவர்கள் உணரவேண்டும். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை மிக்க, தீரமிக்க, சமூகம் ஆரோக்கியமான, தீரமிக்க, குடிமகன்களாலேயே உருவாகும். இன்றைய குழந்தைகள்தான் நாளைய குடிமக்கள் என்பதை உணர்ந்து அவர்கள் ஆரோக்கியமாக வளர அவர்களை விளையாட விடுங்கள். வீணான பயங்களை விரட்டியடியுங்கள்.

Wednesday, 16 May 2012

குழந்தையின் ஆளுமை

father  

“மிகவும் நெருங்கிப் பழகி வருவதன் காரணமாக, குழந்தையிடம் மறைந்து கிடக்கும் பெருமை வெளிக்குத் தெரிவதில்லை. குழந்தை சிரிக்கிறது. அழுகிறது ஆனால் வெளிப்படையாகத் தெரியும் இந்தச் சிரிப்புக்கும், அழுகைக்கும் மறைவில் எத்தனையோ குணபாவங்கள் இருக்கின்றன..”

- மரியா மாண்டிசோரி

சமூகம் நமக்குக் கற்றுக் கொடுத்த கள்ளமும் கபடமும் கொண்டே நாம் இந்த உலகத்திடம் வேற்றுமை பாராட்டுகிறோம். ஆனால் குழந்தை இந்த உலகத்தில் பிறந்த கணம் முதல் எல்லோரின் மீதும், எல்லாவற்றின் மீதும் வேற்றுமை பாராத அன்பைச் செலுத்துகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்புணர்வோடு எறும்பிடமும் அன்பு செலுத்துகிறது. மரப்பாச்சி பொம்மையிடமும் தன் அன்பைத் தெரிவிக்கிறது. அதற்குத் தான் பணக்காரன் என்றோ ஏழை என்றோ, தான் பிறந்த சாதிபற்றியோ, மதம் பற்றியோ அதன் தன்மைகள் குறித்தோ, விளைவுகள் குறித்தோ தெரியாது. தான் முட்டாள் என்றோ அறிவாளி என்றோ தெரியாது. தன் வீடு சிறியது என்றோ பெரியது என்றோ தெரியாது. தன்னுடைய பெற்றோர்கள், உற்றவர்கள் நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ தெரியாது. இந்த உலகம் எவ்வளவு கொடியது என்றோ எவ்வளவு அற்புதமானது என்றோ தெரியாது. ஆனால் குழந்தைக்கு ஒன்று மட்டும் தெரியும். தான் காணும் உணரும் எல்லாவற்றின் மீதும் தீவிரமான அன்பைச் செலுத்தத் தெரியும்.

இப்படி பரிசுத்தமான, களங்கமற்ற குழந்தையிடம் தான் பெரியவர்கள் எல்லாவிதமான கபடங்களைச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். தான் பிறந்த மதம், சாதி பற்றிச் சொல்கிறார்கள். அது எவ்வளவு உயர்வானது அல்லது எவ்வளவு இழிவானது என்று சொல்கிறார்கள். குழந்தையை சுற்றியுள்ள உலகத்தை குழந்தைக்கு எதிர்மறையாகவே அறிமுகப்படுத்துகிறார்கள். எல்லாப்பொருட்களையும் எல்லா மனிதர்களையும், வெளிச் சூழலையே விரோதியாகக் காட்டுகிறார்கள். குழந்தை முதன்முதலாக பயப்படுகிறது. எல்லாவற்றின் மீதும் அதற்குச் சந்தேகம் வருகிறது. யாரையும் நம்பமுடியாமல் இந்த உலகத்தையே அவநம்பிக்கையோடு பார்க்கிறது. களங்கமில்லாத அதன் அன்பின் அடித்தளம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிச் சிதைகிறது. பயமும், பாதுகாப்பின்மையும் பொங்க இந்த உலகத்தையே வெறுக்கத் தொடங்குகிறது. சமூகம் ஒருபோதும் இதை உணர்வதில்லை. பெரியவர்களும் இதை உணர்வதில்லை. அவர்கள் குழந்தைக்கு அறிவூட்டிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் குழந்தையிடம் ஊட்டப்பட்ட இந்த வெறுப்பு உள்ளே கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களிடம் ஆளுமைச் சிதைவை ஏற்படுத்துகிறது. உண்மையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? குழந்தைக்கு அறிவூட்டுவதல்ல. குழந்தை பிறந்தது முதலே கற்றுக் கொண்டேயிருக்கிறது. தன் அறிவைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அழுகை, சிரிப்பு என்ற இரண்டு உணர்ச்சி வெளிப்பாடுகளிலிருந்து இன்னும் நுட்பமான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தெரிந்து கொள்கிறது. பயம், கோபம், ஏக்கம், நிராதரவு, திருப்தி, ஆவல், உற்சாகம் என்று பல விதமான உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துகிறது. எனவே கற்றுக் கொண்டேயிருக்கும் குழந்தைக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும், குழந்தையின் முன்னால் செய்யத் தகாதனவற்றை செய்யாமலிருப்பதும் எல்லாவற்றுக்கும் மேல் குழந்தையின் ஆளுமையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வேண்டும்.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவமிக்க ஒரு ஆளுமை உள்ளே மறைந்திருக்கிறது. அந்த ஆளுமை தனக்கான தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தக்க சூழ்நிலைக்காக துளிர்க்கவோ, பூக்கவோ வேண்டி மறைந்திருக்கிறது.

விதைக்குள் அடங்கியிருக்கும் விருட்சமாய் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆளுமையை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். எல்லாக்குழந்தைகளிடமும் உடனே தெரிந்து விடும் அளவில் இல்லாமலிருக்கலாம். சில குழந்தைகளின் ஆளுமையைக் கண்டு பிடிக்க சிறிது சிரமம் ஏற்படலாம். சிறிது காலம் ஆகலாம். ஆனால் எல்லாக்குழந்தைகளிடமும் ஒரு ஆளுமை ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டு பிடித்து வெளிக்கொணர வேண்டும். அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் துணை நிற்க வேண்டும். அதற்குத் தேவையான ஒளியையும், காற்றையும், நீரையும் தரவேண்டியது நம் கடமை. வளரும் போது ஒவ்வொரு ஆளுமையும் இந்த பூமிக்கு தன்னுடைய பங்களிப்பை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதற்கான வழிமுறைகளை பள்ளிக்கூடமும், பெற்றோர்களும் சமூகமும் யோசிக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது நம் சமூகத்தில்? யாருமே குழந்தையின் ஆளுமை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்வது இல்லை. அப்படியொன்று இருப்பதாகக்கூட நினைப்பது இல்லை. அப்படியே குழந்தைகளின் ஆளுமைத்திறன் துளிர்த்து வெளிப்பட்டாலும் அதைத் துடிக்கத் துடிக்கக் கிள்ளி எறிந்து விடுகிறோம். ஏனென்றால் செம்மறியாட்டு கூட்டத்தை விட மோசமான மந்தை புத்தி கொண்டவர்களாக பெரியவர்கள் இருப்பது தான். வாய் திறந்து மழலை பேசும் பருவத்திலேயே குழந்தையிடம் நம்முடைய ஆசைகளைத் திணித்து விடுகிறோம். அப்போதும் என்ன இப்படியா ஒரு சமூகம் முழுக்க ஒரே விதமான ஆசையைக் கொண்டிருக்கும்? பாருங்கள் எல்லா குழந்தைகளும் கிளிப்பிள்ளையைப் போல தாங்கள் இஞ்ஜினீயர் ஆக வேண்டும் என்றோ அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்றோ ஒப்பிக்கும். அந்தக் குழந்தைகளுக்கு பொறியாளர் என்றால் யார் என்றோ, மருத்துவர் என்றால் யார் என்றோ சற்றும் தெரியாத பருவத்தில் நம் ஆசையை அப்படிக்கூடச் சொல்ல முடியாது, மந்தைபுத்தியின் விளைபொருளான நம் ஆசையை குழந்தையிடம் திணக்கிறோமே. இதை விட வேறு என்ன அவலம் வேண்டும்?

உலகம் பூரா வெறுமனே பொறியாளர்களும், மருத்துவர்களும் மட்டும் நிறைந்து விட்டால் போதுமா? ஏன் இப்படி? நம்முடைய சமூக அமைப்பு சில திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் பொறியாளர், மருத்துவர் என்ற கல்வியை மதிப்புமிகு வியாபாரப் பொருட்களாக்கி அதை விற்பனை செய்யும் தந்திரங்களில் ஒரு சமூகத்தையே சிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு சமூகத்துக்கு அறிவியல் அறிஞர்கள் தேவையில்லையா? ஓவியர்கள் தேவையில்லையா? கணித மேதைகள் தேவையில்லையா? கட்டடக்கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தேவையில்லையா? இயற்கையியலாளர்கள் தேவையில்லையா? வரலாற்று ஆய்வாளர்கள் தேவையில்லையா? தொல்லியல் அறிஞர்கள் தேவையில்லையா?

சுற்றுச்சூழல் அறிஞர்கள் தேவையில்லையா? நிர்வாகவியல் அறிஞர்கள் தேவையில்லையா? வேளாண்துறை விஞ்ஞானிகள் தேவையில்லையா? மெக்கானிக்குகள் தேவையில்லையா? விளையாட்டு வீரர்கள் தேவையில்லையா? இது போல எண்ணற்ற துறைகளும் தானே இந்த உலகம். அப்புறம் எப்படி இந்த மந்தைபுத்தி உருவாகிறது?

குழந்தைகள் வளரும் போதே அவர்களது ஆளுமைத் திறனின் முளைகள் மலரத்தான் செய்யும். அது ஓவியத்தில் இருக்கலாம். பிரித்து இணைக்கும் செயல்பாடாக இருக்கலாம். கணிதத்திலாக இருக்கலாம். கதை சொல்வதாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இடையூறு செய்யாமல், அடக்கி ஒடுக்காமல், அந்தந்தத் துறையில் வளர்வதற்கான உதவிகள் புரிந்தாலே போதும். குழந்தைகளின் அடிப்படையான அன்பு எல்லோரையும் எல்லாப் பொருட்களையும் நேசிக்கிற மனோபாவம் எந்தக் காயமுமின்றி அடக்குதலும் இன்றி வெளிப்படும். எல்லாத் துறைகளிலும் சாதனைகள் படைக்கும் புதிய சமுதாயம் மலரும். அதிக மதிப்பெண் என்ற தந்திரவதைக்கூடத்துக்குள் குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்காதீர்கள். ஒரே வகை மாதிரியான ஜெராக்ஸ்   சமூகத்தை உருவாக்காதீர்கள்....