Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Friday, 1 May 2026

சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்

 

சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்

 

உதயசங்கர்

 


குழந்தைகளைப் பற்றிய சமூகத்தில் இருக்கும் தாழ்வான பார்வையே சிறார் இலக்கியம் பற்றியும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகள் அடிப்படை உளவியலைக் கட்டமைக்கும் சிறார் இலக்கியத்தைப் பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஒரு குழந்தையின் மனதில், அதன் உணர்வுநிலைகள், அறிவுநிலைகள், வாழ்க்கை குறித்த கருத்துருவாக்கங்கள், தத்துவம், அன்றாடச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் சிறார் இலக்கியம் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் பெரியவர்கள் தாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது தங்களுக்குக் கிடைத்த சிறார் இலக்கியமே சிறந்த தென்ற ஆழமான நோஸ்டால்ஜியாவில் இருக்கிறார்கள். அதனால் தான் வாழ்க்கையின் மாற்றங்களைக் குறித்தும் அதன் விளைவுகளைக் குறித்தும் அறிவியல் பூர்வமாக ஆராயாமல், “ எங்க காலத்தில் எல்லாம் என்றோ அந்தக் காலத்தில்.. என்றோ பொற்காலத்தில் வாழ்ந்த தாக கற்பனையாகச் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு உண்மையை விட புனைவுணர்வின் மீது இயல்பாக ஈர்ப்பு இருப்பதும் யதார்த்தத்தை எதிர்கொள்ளவோ, அறிவுச்செயல்பாடு என்ற புராசெஸுக்குப் பழக்கப்படாத தும் காரணமாக இருக்கலாம்.

 

அப்படித்தான் சிறார் இலக்கியம் பற்றி எந்தப் பெரியவர்களிடம் பேசினாலும் அந்தக் காலத்தில் அம்புலிமாமா கதைகள், ரத்னபாலா கதைகள், பஞ்ச தந்திரக்கதைகள், ஈசாப் நீதிக்கதைகள் என்று பேசத் தொடங்குவதைப் பார்க்கலாம். அப்போதே கூட அந்தக் கதைகளெல்லாம் குழந்தைகளுக்கானதில்லை. முழுக்க முழுக்க அரசர்கள் காலத்தை மீண்டும் மீண்டும் கற்பனையா மீளுருவாக்கம் செய்கிற கதைகள். நவீன ஜனநாயக யுகத்தில் அந்தக் கதைகளுக்கு எந்தப் பொருத்தப்பாடுமில்லை. நாம் ஒரு போதும் சாணக்கியர் காலத்திற்கோ, சேர,சோழ, பாண்டியர் காலத்திற்கோ திரும்பிப் போகப் போவதில்லையே.

 

சமகாலத்தில் சிறார் இலக்கியம் எப்படி வருகிறது? எந்த மாதிரியான கதைகளைக் குழந்தைகள் வாசிக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கை நடைமுறைகளை, அறநெறிகளை அவற்றிலிருந்து பெறுகிறார்கள்? அவையெல்லாம் உலகின் சமகாலத்தைப் பிரதிபலிக்கின்றனவா? பகுத்தறிவும், அறிவியல் மனப்பாங்கும் கொண்ட இலக்கியமாக வெளிவருகிறதா? வாழ்க்கையில் எந்த மாதிரியான விழுமியங்களை முன்வைக்கிறது? என்பதைக் குறித்தெல்லாம் பெரியவர்களுக்கு அக்கறை இல்லையோ என்று தோன்றுகிறது.

 

இன்று குழந்தைகளை மின்னணுசாதனங்களின் செயலிகள் வளர்க்கின்றன அல்லது பழமையான சிந்தனைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட பஞ்ச தந்திரக்கதைகள் உள்ளிட்ட இத்யாதிகள் வளர்க்கின்றன. மின்னணு சாதனங்களின் வளர்ப்பு எதைப் பற்றியும் எந்த அறிவுமில்லாத ரசிகர் கூட்டங்களை உருவாக்குகிறது. பழமையான சிந்தனைகள் மதவெறி சக்திகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இவர்களில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பிற்போக்கான இரண்டு போக்குகளுக்கும் குழந்தைப் பருவத்திலேயே களம் அமைக்கப் பட்டுவிடுகிறதென்பதைச் சொல்லித் தான் தீரவேண்டும்.  

 

தாங்கள் சிறுவயதில் வாசித்தவை, ஆத்திச்சூடி, திருக்குறள், கொன்றை வேந்தன், வெற்றி வேந்தன், , நாலடியார், புராணங்கள், இதிகாசங்கள் பைபிள், குரான், இவை மட்டும் தான் குழந்தை இலக்கியம் என்று சொல்லித்தருபவர்கள், அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் ஒழுக்கத்துடனும், கீழ்ப்படிதலுடனும், நன்னெறிகளுடனும் வளர வேண்டுமென்றால் இவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் பொதுச்சமூகத்திடம் எப்போதுமேயிருக்கிறது.

 

இத்தகைய சூழலில் தான் குழந்தைகள் மீது அக்கறையுள்ள சிறார் இலக்கியப் படைப்புகள் வெளிவருகின்றன. ஆனால் குழந்தைகள் இவற்றைக்கண்டைவது வாசிப்பது எல்லாம் பெரும் தடைகளைக் கடந்து செல்ல வேண்டிய பெரும்பயணமாகி விடுகிறது.

 

பெரியவர்கள் அவர்கள் விரும்பும் நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பார்கள். அது பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை அபிப்பிராயமாகச் சொல்லி விடுவார்கள். உதாரணத்துக்கு கவிதைகளை மட்டும் வாசிப்பவர்கள் கவிதை நூல்களை அவரே தேர்ந்தெடுத்து வாசிக்கிறார். அவருடைய ரசனைக்கேற்ப பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறார். நாவலை மட்டும் வாசிக்கிறவர்களுக்கு நாவலை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிக்க முடியும். இது அனைத்து இலக்கிய வகைமைகளுக்கும் பொருந்துமென்றாலும் இந்தக் கருத்து வகைமை சார்ந்த தில்லை. முதலில் அடிப்படையான பிரச்னையென்பது சிறார் இலக்கியத்தை நேரிடையாகக் குழந்தைகள் தேர்ந்தெடுக்க முடியாது. அத்துடன் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களைச் செய்ய வேண்டிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறார் இலக்கியம் தெரியாது. அவர்கள் வாசிப்பதுமில்லை.

 

இரண்டாவது குழந்தைகள் நேரிடையாகப் புத்தகங்கள் வாங்கிவிட முடியாது. பெரியவர்கள் தான் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களை நல்வழிப்படுத்தியதாக நினைக்கும் புத்தகங்களையே அவர்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அடுத்த தாக புத்தகச்சந்தையில் புத்தகங்களை, வாங்கிக் கொடுக்கக்கூடிய மத்திய தர வர்க்கம் ஆங்கிலவழிக்கல்வி மோகத்தினால் திசை மாறிவிட்டது. அதனால் அவர்கள் தமிழ்ப்புத்தகங்களின் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. வாங்கிக் கொடுப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளில் 99% சதவீதக் குழந்தைகளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. அத்துடன் பெற்றோர் ஆங்கிலப்புத்தகம் போல ரிச்சாக இல்லையே என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுலபமாக தமிழ்க்குழந்தை இலக்கியத்தைத் தாண்டிச் சென்று விடுவார்கள்.

 

எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் உற்பத்தியைத் தீர்மானிப்பது சந்தையே. அதனால் தான் 60-70 களில் தமிழ்வழிக்கல்வி பரவலாக இருந்த காலத்தில் 50 பத்திரிகைகளும், 300 எழுத்தாளர்களும் இருந்த குழந்தை இலக்கிய வெளியில் இப்போது மிகச் சில பத்திரிகைகளே வெளிவந்து கொண்டிருக்கின்றன, 50 க்கும் குறைவான எழுத்தாளர்களே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 சர்வதேச சந்தைக்கும் மாநிலச் சந்தைக்குமான வேறுபாடு சிறார் இலக்கியத்தையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், இங்கே படைப்புகள், புத்தக வெளியீடுகள், அதன் வடிவமைப்பு, விலை, எல்லாம் ஏன் மிகக் குறைந்த தரத்திலேயே இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம். சந்தைப்பெருக்கமே எந்தப் பொருளுற்பத்தியையும் பெருக்கும். அதுவே சிறந்த எழுத்தாளர்களையும் சிறந்த படைப்புகளையும் உருவாக்குமென்ற எளிய உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

 

 அடுத்தது பெற்றோர்கள், ஆசிரியர்களின் மனநிலை. கதைப்புத்தகம் வாசிப்பது வேஸ்ட்...குழந்தைகள் என்றாலே பாடம், பள்ளிக்கூடம், மார்க்கு, ரேங்கு, இத்தியாதி....

அப்படியே சில பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கு எதை வாங்கிக் கொடுப்பது என்று தெரியாது. எதுக்கு வம்பு? காலங்காலமாகச் சொல்லப்படுகிற பஞ்சதந்திரம், தெனாலி ராமன், பீர்பால், முல்லா, அப்பாஜி, ராமாயணம், மகாபாரதம், புராணக்கதைகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். அடுத்தது ஆசிரியர்கள், கதையா கிலோ என்ன விலை? என்று கேட்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கும் சமகாலத்தில் யார் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? என்ன புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன? என்று தெரியாது. தேவையுமில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் அதிகம்.

 

. இப்போது மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆமை வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்குக் கூட அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகமுக்கியமான காரணம். ஆனாலும் மக்களின் பொதுப்புத்தியில் சிறார் இலக்கியம் குறித்து மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே சிறார்களிடம் இலக்கிய வாசிப்பு சென்றடையமுடியும்.

 

அடுத்ததாகப் பதிப்பகங்கள், பெரியவர்களுக்கானப் புத்தகங்களைப் போடும்போது பதிப்புக்குழு வைத்து அந்தப் பிரதியை நாலைந்து பேர் வாசித்து, சரி செய்து பதிப்பிப்பவர்கள் குழந்தைகளுக்கான இலக்கியம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பணம் வாங்கிக் கொண்டும் வாங்காமலும், கண்டமானிக்குப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறார்கள். அவையெல்லாம் குழந்தைகளுக்கானதா? குழந்தைகள் மொழியில் எழுதப்பட்டிருக்கிறதா? என்ன மாதிரியாக எழுதப்பட்டிருக்கிறது? என்றெல்லாம் கவலையே படுவதில்லை. சந்தையைப் பிடிக்கும் அவசரம் மட்டுமே இருக்கிறது.

 

. மேலே குறிப்பிட்ட பதிப்பகங்கள் ஒருவகை என்றால் எந்த அறமுமற்ற பதிப்பகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சாலையில் மோல்டிங்க்கில் பொருள்களை உற்பத்தி செய்வதைப் போல இராமாயாணம், மகாபாரதம், நன்னெறி, அறநெறி, அறிவுரை, பஞ்சதந்திரம், பீர்பால், முல்லா, தெனாலி, திருக்குறள் கதைகள், ஆத்திச்சூடிக்கதைகள், புறநானூற்றுக்கதைகள், நாடோடிக்கதைகள், நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகள், அறிவூட்டும் கதைகள், நல்வழிக்கதைகள், முன்னேற்றக் கதைகள், வெற்றிக்கதைகள், என்ற விதவிதமான அடைமொழியில் புத்தகங்களைக் குவித்து வருகின்றனர். பலநேரங்களில் ஒரே கதை தெனாலியாகவும் பீர்பாலாகவும் டால்ஸ்டாயாகவும் காந்தியாகவும் முல்லாவாகவும் மாறுவேடம் போட்டு வருகின்றன. இவற்றுக்கு அரசின் நூலக ஆணையும் கிடைக்கிறது. மாவட்டங்களிலிருக்கும் கல்வித்துறை அதிகாரிகளின் ஆதரவுமிருக்கிறது.

 

இதனால் பள்ளி கல்லூரிகளில் மகாவிஷ்ணுக்களோ, கிறித்துவ, இஸ்லாமிய மதபோதகர்களோ நுழைகிறார்கள். குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை விதைக்கிறார்கள். அனைத்து மதங்களிலும் இப்படியான செயல்பாடுகளே நடக்கின்றன. மதங்களினால் மட்டும் தான் மனிதனை அறமுள்ளவனாக மாற்றமுடியுமென்ற ஆழமான கருத்தும் மக்களின் பொதுப்புத்தியில் ஊறிக்கிடப்பதும் இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்குக் காரணமாக அமைகிறது.. .

 

குழந்தைகள் தானே என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள் என்ற மேலாண்மை மனநிலையில் அறிவியல்பூர்வமில்லாத, கலை நேர்த்தியில்லாத, கதை போன்ற கதைகளை எழுதுபவர்களும், சொல்பவர்களும் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய சந்தை புதிய நுகர்வோர் என்று சிறார் இலக்கியத்தின் மீது பாயத்தயாராகிக் கொண்டிருக்கிற பதிப்பகங்களும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

.

புதிதாகப் படைப்பவர்களுக்கும், குழந்தை வாசகர்களுக்குமிடையில் பாலமாக இருக்க வேண்டிய விமர்சகர்கள், நீதிபதிகளாக மாறி எதுவுமே சரியில்லை என்று சொல்லி கொஞ்சநஞ்சம் வாசிப்பையும் தடுக்கிறவர்களாக மாறுகிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டித்தான் சிறார் இலக்கியம் தட்டுத் தடுமாறிக் குழந்தைகளிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.

!

இதற்கு குழந்தைகள் என்ன செய்ய முடியும்?

நன்றி - புக் டே

 

Wednesday, 8 August 2012

ஆரோக்கியமும் மருத்துவமும்

உதயசங்கர்

Mohan Das (63)

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம் தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவமுறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவமுறைகளான அக்குபஞ்சர், அக்குப்பிரசர் மருத்துவம் என்று மருத்துவமுறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நினைவில் வருவது ஆங்கில மருத்துவமுறை மட்டும் தான். அது மட்டுமல்ல ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் நாட்டு வைத்தியம் என்று பொதுப்படையான பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். எப்படி நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாகவும் நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கிலமருத்துவம் என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.

முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்கிற பொருட்கள் தான். கொசுக்களை ஒழிப்பதை விட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக்கொல்லிகளை விற்பனை செய்வது தான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ அதில் எல்லாம் தன் கை வரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி நம்மைத் தயாரிப்பதிலும் கில்லாடி. அதனால் தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காக தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறோம். அதுவும் குழைந்தைகளுக்கென்றால் கேட்கவே வேண்டாம். அங்கு மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே,( இது இப்ப ரெம்பப்பழசு ), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்கிறார். எல்லா டெஸ்டுகளையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்திருக்கிறது என்று பயமுறுத்தவும் செய்கிறார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பெற்றோர்களும் சாதாரண சளித்தொந்தரவை எம் பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் ( டானிக்குகளின் மீது அப்படி என்ன தான் மோகமோ ! ) ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?

குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயினால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளினாலும், டானிக்குகளினாலும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி தேவைக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் நம்முடையை உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும். அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம், ஆகியவற்றையும் பாதிக்கும். நாளாவட்டத்தில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி குறைந்து எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?

குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையினால் உருவாகிறது. குளிர், அல்லது வெப்பம் ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மன அழுத்தம், இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளை தவிர்த்தாலே நோய் வராது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மற்றும் மன அமைப்புடனே பிறக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம்தாங்கிகளாகவோ, குளிர்தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம்தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக் கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக் கொள்ளாது, இரண்டுமே ஒத்துக் கொள்ளாத குழந்தைகளும் உண்டு. மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக் கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ணநிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை உண்டுபண்ணும். பெற்றோர்கள் இவற்றையெல்லாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை. ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருக்களோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாதவர்களாக அதாவது குளிர்தாங்கிகளாக இருக்கும். அதேபோல ஒரு குழந்தை குளிர் காலத்தில் சளி, இருமல், தும்மல், என்று அதிகமான சளித்தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர்தாங்க முடியாததாக அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ணநிலையில் நன்றாக இருக்கும். மற்ற காலங்களில் ஏதாவது தொந்திரவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால் நம் உடலில் மாறுமை அல்லது நோய் வந்தால் அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு இருமல் வெளிக்காற்றில் ஒருவருக்கு வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும். இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ, கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால் நோய் என்னவோ இருமல் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, மருத்துவமுறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால் ஆங்கில மருத்துவ முறைக்கு தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளை தனித்துவமிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகின்றது. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவமிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.

சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதால் மருத்துவர்களும் மருத்துவ அறவுணர்வின்றி, மனிதாபிமானமின்றி, சக மனிதன் என்ற அநுதாபமின்றி, பணத்தைக் கறப்பதிலேயேக் குறியாக இருக்கின்ற அவலநிலை இருக்கிறது. இதனால் தேவையில்லாத டெஸ்டுகள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள், என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மருத்துவக்கல்வி தனியார் கைவசம் போனபிறகு ஒருவர் மருத்துவக்கல்வியை முடிக்க கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளை பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இது தான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எதுஎதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும் போதே கற்பித்திருந்தால் இத்தனை மருந்துக் கடைகளுக்கு வேலையிருக்காது. அதோடு நம்முடைய ஆதி மருத்துவமுறைகளை அரசாங்கம் ஆதரித்து அந்த மருத்துவமுறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சை செய்வேன் என்ற மந்தை மனோபாவத்தை விட்டு நம்முடைய மருத்துவ முறைகளுக்குப் போக வேண்டும். நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தை விட எளிமையானது. அதிக செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.

அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்ல வில்லை. அறுவைச் சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, மாற்று அறுவைச்சிகிச்சை, போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை. நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா, அல்லது ஆயுர்வேதம்,அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர், அல்லது அக்குபிரஷர், அல்லது ஆங்கில மருத்துவமுறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவமுறையே எதிர்காலத்தில் ஒரு வலுமிக்க சமுதாயத்தை உருவாக்கும்.

நன்றி – இளைஞர் முழக்கம்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Saturday, 14 July 2012

குழந்தைகளின் ஆரோக்கியம்

 

உதயசங்கர்pictures2

 

குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. சரியான உணவின்றி, மருத்துவக்கவனிப்பின்றி, சரியான சத்துணவுக்கு வழியின்றி, நோய்த்தொற்றினால், பல குழந்தைகள் ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகநேரிடுகிறது. அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனமான அறிவிப்புகள் பெரும்பாலும் ஏழை,எளிய மக்களையே அதிகம் பாதிக்கின்றன. தற்போதைய வறுமைக்கோட்டு வருமான வரம்பு ரூ.32 என்ற அறிவிப்பு ஒன்றே போதும் நமது அரசாங்கம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இதன் விளைவு அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிட்டன. எதிர்கால சமுதாயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத அரசின் மருத்துவக்கொள்கையும், மருந்துக்கொள்கையும், அரசின் சேவையாக இருக்க வேண்டிய மருத்துவத்தை வியாபாரமாக மாற்றி விட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்களமாக இந்தியமக்களின் உடல்,மன,நலமும் மெல்ல மெல்ல மாறி வருகின்றது. மருத்துவர்களும் மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானம் இல்லாத வியாபாரிகளாக மாறி வருகின்றனர். மக்களின் சுரணையின்மை, அலட்சியம், மந்தைபுத்தி, அரசின் கையாலாகாத்தனம், எல்லாம் சேர்ந்து சுற்றுச்சூழல், தண்ணீர், காற்று, உணவு எல்லாவற்றையும் மாசு படுத்தி உயிர்கள் வாழத் தகுதியில்லாததாக இந்தியாவை மாற்றி வருகின்றனர்.

முதலாளித்துவத்தின் உச்சபட்ச நுகர்வின் களமாக மாறியுள்ள இந்தியாவில் மக்கள் மனங்களை வசப்படுத்துவதற்கு ஊடகங்கள் பயன்படுகின்றன. எந்த விளம்பரத்தையும் பணம் கொடுத்தால் போடுவதற்கு தயாராக இருக்கின்ற ஊடகங்கள் அந்தப் பொருட்களின் உண்மைத்தன்மை பற்றிய அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளை வெளியிடத் தயங்குகின்றன. கோக், பெப்சியில் கலந்துள்ள வேதியல் பொருட்கள், டையரிமில்க் சாக்லேட்டில் கண்டெடுக்கப்பட்ட கம்பி, புழுக்கள் பற்றி, ஜங்க் புட் எனச் சொல்லப்படும் உணவுப்பொருட்களினால் ஏற்படும் உடல்நலக்கேடுகள் பற்றி, எதையும் பகிரங்கமாகச் சொல்வதில்லை அல்லது மேலோட்டமாகச் சொல்லிச் செல்கின்றன. ஏனெனில் அந்தக் கம்பெனிகளின் விளம்பரங்கள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தான். அத்துடன் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் இந்திய முதலாளிகளாலேயே நடத்தப்படுகின்றன. எனவே தங்களுடைய வர்க்கத்துக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கமாட்டார்கள். லஞ்சம், ஊழல், மலிந்துள்ள இந்திய அதிகார வர்க்கத்தின் சமூகப்பொறுப்பின்மையும் இதற்குத் துணைபோகின்றன. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 1500 ஆங்கில மருந்துகள் தாராளமாகப் புழக்கத்திலிருக்கின்றன. இந்த மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் தீவிரம் கருதியே மேலை நாடுகளில் இந்த மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் இந்திய மருத்துவக்கவுன்சில் உட்பட யாவரும் அறிந்த ரகசியம்.இப்படிப்பட்ட புறவயமான சூழலில் குழந்தைகளின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று நாமே யோசித்துக் கொள்ளலாம்.

நம்முடைய உயிரோட்டமில்லாத கல்விமுறையினால் படித்தவர்களுக்கும் கூட நோய் என்றால் என்ன? நலம் என்றால் என்ன? என்று சரியாகத் தெரிவதில்லை. நம்முடைய உடலை விட பெரிய மருத்துவர் வெளியில் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். உடலின் மொழியை நாம் தெரிந்து கொண்டோமானால் பெரும்பாலான சாதாரண உடல் உபாதைகளை நாம் நம்முடைய பழக்கவழக்கங்களின் மாற்றத்தினாலேயே சரி செய்து கொண்டு விடலாம். இதற்கு மிகப் பெரிய மருத்துவ அறிவோ மருந்துகளோ தேவையில்லை.

குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. தாயின் வலிமை மிக்க பாதுகாப்புப்படையணி வரிசை குழந்தையையும் பாதுகாக்கிறது. ஆனால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பிறகு, புத்தம் புதிதாய், சின்னஞ்சிறுசாய், இந்த வெளியுலகை எதிர் கொள்கிறது. அதனுடைய உடலின் பாதுகாப்புப்படையணி இன்னும் தன் பிஞ்சுப் பருவத்திலேயே இருக்கிறது. அந்தப் படையணி இந்தப் புதிய உலகத்தில் ஒவ்வொரு பாடமாகக் கற்றுக் கொள்கிறது. அதிகக்குளிர், அதிக வெப்பம், தூசு, மாசு, இவற்றை எதிர்கொள்ளுதல், அது வரை தாயிடமிருந்தே உணவைப் பெற்றுக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்த பிறகு பருப்பொருளான திட மற்றும் திரவ உணவு, அதன் உடலின் செரிமானம், கழிவு வெளியேற்றம், என்று எல்லாவற்றையும் தானே நிர்வகித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போது குழந்தை தன் உடலின் தனித்துவத்துவத்தைப் புரிந்து கொள்கிறது. அதைக் கண்டுபிடிக்கச் சில பரிசோதனைகளை குழந்தையின் உடல் நடத்துகிறது. அதன் மூலம் அது தன் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளவும், அதை தன்னுடைய பாதுகாப்புப்படையணிக்கு உணர்த்தவும் நினைக்கிறது.

நோய் என்றால் என்ன? உடலில் ஏற்படும் மாறுமை. அல்லது மாறுபாடு. உடலில் ஏன் மாறுபாடு ஏற்படுகிறது? உடலின் இயக்கத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும் புறவயமான காரணிகள் ஒரு காரணம். உதாரணத்துக்கு கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட பிறகு அதன் விஷம் உடலில் கலந்து விடாதிருக்க உடலின் மருத்துவர் தன் பாதுகாப்புப்படையணியிடம் இடும் கட்டளைக்கேற்ப வயிற்றாலை என்ற மாறுமையை உருவாக்குகிறது. தொடர்ச்சியான மலக்கழிச்சலின் மூலம் உடலில் சேரவிருந்த விஷப்பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. இது இயற்கையான உடல் தனக்குத் தானே செய்து கொள்ளும் மருத்துவம். இதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. நீர்ச்சத்து உடலில் குறைந்து விடாமலிருக்க அதிக நீரும், எளிய உணவும், ஓய்வும் போதுமானது. உடலிலுள்ள விஷப்பொருட்கள் வெளியேறி விட்டதாக பாதுகாப்புப்படையணிக்குத் திருப்தி ஏற்பட்டதுமே அது வயிற்றாலையை நிறுத்தி விடும். ஆனால் இரண்டு முறைக்கு மேல் வெளியே போய் விட்டால் போதும் அவ்வளவு தான் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருந்துகளைக் கொடுத்து விஷப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேறவிடாமல் தடுத்து விடுகிறோம். அது மட்டுமல்ல கழிவு வெளியேற்ற செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி விடுவதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மலம் வெளியேறாது. அது மட்டுமல்ல பசியிருக்காது. உடல் சோர்வாக இருக்கும். பின்னர் சில சமயம் மலம் வெளியேற மருந்து சாப்பிட வேண்டிய நிலைமைக்கு குழந்தைகளை ஆளாக்குகிறோம். 

இது மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அது ஏதோ அவர்களுக்கு கௌரவக்குறைச்சலாகி விடுகிறது. தூசு, மாசு, அதிகக் குளிர், அதிக வெப்பம் இவற்றால் நம்முடைய உடலிலுள்ள சளிச்சவ்வுகள் உடலின் பாதுகாப்புக் கருதி அதிகமான நீரை உற்பத்தி செய்து தூசிகளை வெளியேற்றுகின்றன, உடலின் சமநிலையைப் பாதுகாக்கின்றன. அதற்காகவே சளி உருவாக்கி நம் உடலின் இயக்கம் தடைபடாமலிருக்கவும், உடலின் முக்கிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாமலிருக்கவும் நமது உடல் மருத்துவர் உருவாக்குகிற முறைகளே, தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், ஆகியன. இதன் மூலம் நம் பாதுகாப்புப்படையணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. காற்றில் பரவி நம் உடலில் நுழையும் கிருமி, வைரஸ், எல்லாவற்றையும் எதிர் கொள்கிற திறனைப் பெறுகிறது. இதற்கு எதிரியின் பலத்தை அறிந்து கொண்டு, அவனுடைய ஆயுதத்தின் திறனை அறிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டியதிருக்கிறது. ஒரு முறை ஒரு எதிரியின் தாக்குதல் முறைகளையும், ஆயுதபலத்தையும் அறிந்து கொண்டு விட்டால் உயிர் அழியும்வரை அதன் ஞாபகத்திலிருந்து மறையாது. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ரெண்டு தும்மல் போட்டாலோ, மூக்கு ஒழுகினாலோ, லேசாக இருமி விட்டாலோ, போதும். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி அவர்கள் தருகிற ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளைக் கொடுத்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை முடமாக்கி விடுகிறார்கள்.

இப்படியெல்லாம் சொல்வதினால் குழந்தைகளை மருத்துவமனைக்கேக் கூட்டிக் கொண்டு போகக் கூடாதென்றில்லை. எதற்கெடுத்தாலும் மருத்துமனை என்ற மனோபாவம் மாறவேண்டும். நம் உடலின் மருத்துவரை நாம் முதலில் நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வாதது எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதை நீக்க முடியுமா அல்லது மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை உணர வேண்டும். அந்தந்தக் குழந்தையின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுக்க அதன் உடல்மொழியை, மனமொழியை அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பற்றி நிறையப் பெற்றோர்களின் புகார் என்னவென்றால் சரியாவே சாப்பிட மாட்டேங்குது என்பது தான். குழந்தை தனக்குத் தேவையானதை தேவையான அளவு சாப்பிடவே செய்யும். ஆனால் பெற்றோர்களுக்கு தான் கொடுப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல குழந்தை தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் குழந்தைகளைப் போல கொழு கொழுவென்று இருக்க வேண்டும் என்ற ஆசையும் கூட. குழந்தையின் ஆரோக்கியம் என்பது அதன் உற்சாகமான செயல்பாடுகளே. அதே போல அதற்கு ஒவ்வாததை எதிர்க்கிற ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியே. அதை விடுத்து கொழு கொழுவென பார்ப்பதற்கு அழகாக பிராய்லர் கோழிக் குழந்தைகள் வேண்டாமே