Thursday, 28 May 2020
கொரோனாவும் ஹோமியோபதியும்
Wednesday, 3 September 2014
பதட்டநோயும் மானுட சமூகமும்
உதயசங்கர்
மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு காலங்காலமாக நோய்களினாலும், இனக்குழுச் சண்டைகளினாலும், இயற்கைப்பேரிடர்களினாலும், இறந்தவர்களை விட கடந்த நூற்றாண்டில் இறந்தவர்கள் அதிகம். கடந்த நூற்றாண்டில் தொடங்கிய அந்தத் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடந்த நூற்றாண்டில் வளர்ந்து வந்த முதலாளித்துவ நாடுகள் தங்களது வியாபாரச்சந்தையை விரிவுபடுத்துவதற்காக நாடுகளைப் பிடிக்க போர்களை நடத்தினர். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர். அப்போதிருந்து இப்போது வரை உலகமுழுவதும் மக்கள் நிரந்தரமான அச்சத்திலேயே வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, மதம், சாதி, பிரதேசம், என என்னென்ன வழிகளில் எல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்வை நிச்சயமின்மையின் கொடுங்கரங்களில் கொடுத்து விட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பெருந்துயரிலிருந்தும் மீண்டு மறுபடியும் இன்னொரு பெருந்துயரில் தங்கள் இன்னுயிரை விடுகின்றனர் மக்கள். சுழன்றடிக்கும் சுனாமி அலைகள் போல தொடர்ந்து நிரந்தரமான பயத்திலும், துன்பத்திலும் தள்ளப்பட்டுள்ள மக்கள் எப்போதும் பதட்டத்திலேயே இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளார்கள்.
பதட்டநோயின் அறிகுறிகள்
பதட்டநோய் ஒரு வித மனதில் ஒருவித இறுக்கத்தை உருவாக்குகிறது. அதோடு ஒரு முட்டுச்சந்துக்குள் மாட்டிய உணர்வு, திசை தெரியாத வெளியில் தனியே இருப்பதான உணர்வு, உயிர்பயம், அடிவயிற்றில் வலி, மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சிலோ அடிவயிற்றிலோ பாரம், எப்போதும் பய உணர்வு, அழுத்தும் கவலைகள், எல்லாவிதமான பயங்கள் ( phobias ) அசுத்தத்தின் மீதான ஒவ்வாமையுணர்வு, என்று பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம். ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.
சிக்மண்ட் ஃபிராய்ட் எல்லாவிதமான உளவியல் நோய்களுக்கும் பதட்டநோயே காரணம் என்று சொல்கிறார். பதட்டநோய் நாம் நினைப்பதை விட மிக நுட்பமாக, மிக வலிமையாக நமது ஆழ்மனதில் நுழைந்து நம்முடைய உடல் நிலைகளிலும், உளவியலிலும் பெரும் மாற்றங்களை உருவாக்க வல்லது. பதட்டநோயின் அறிகுறிகளென சொல்லப்பட்டிருப்பதை விட எண்ணிலடங்கா அவதாரங்களை எடுக்கக்கூடியது.
பதட்டநோயின் பரிணாமம்
வரக்கூடிய ஆபத்தை முன்னுணரும் மூளையின் எதிர்வினையே பதட்டநோய்வேராக இருந்திருக்க முடியும்.. பாலூட்டிகளின் மாறிக் கொண்டேயிருக்கும் மூளை வளர்ச்சியின் விளைவாகவும், அச்சுறுத்தல் அகற்றப்பட்ட பின்பும் ஞாபகச்சில்லுகளில் பதிந்து விட்ட அநுபவச்சிற்பங்களாகவும் பதட்டநோய் இருக்கிறது. பதட்டநோய் உயர்பாலூட்டி இனங்களில் பரிணாமவளர்ச்சி அடைவதற்கு முன்பே புதிய ( நியோ ) - பாலூட்டிகளின் மூளையிலே பதிந்திருக்கிறது. புதிய ( நியோ ) பாலூட்டிகளே பகுத்தறிவையும், முடிவெடுக்கும் குணாதிசயத்தையும் கொண்டிருந்தவை. அதனாலேயே மனிதமூளை தொழில்நுட்பம், சட்டதிட்டம், போன்ற நவீனப்பிரச்னைகளைத் தாங்குகிற சக்தியைப் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் ஊர்வனவும் தொல்பாலூட்டிகள் சந்தித்த பிரச்னைகளான ஆபத்தைத் தவிர்த்தல், போட்டி, இணைவிழைச்சு, போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று மூளைகளின் பரிணாமவளர்ச்சியும் ஒருங்கிணைந்தும் சுதந்திரமாகவும் இன்றைய உயர்நிலை பாலூட்டிகளான மனிதனிடம் செயல்படுகின்றன.
எது பதட்டநோய்?
பதட்டநோயை வரையறுப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஒரு வகையில் சாதாரண தற்காலிக உணர்ச்சிநிலை தான் பதட்டநோயாக மாறுகிறது என்று சொல்லலாம். உணர்ச்சிகளின்அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள உயிரியக்கம் மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு நடவடிக்கையே பதட்டம் என்று சொல்லலாம். அது ஒவ்வாத உணர்ச்சிநிலையாக இருக்கலாம். மிகச்சிறந்த சாதனைகளைத் தருவதற்கான நேர்மறையான ஊக்கசக்தியாகவும் பதட்டநோய் இருக்கக்கூடும். எந்தக் கட்டத்தில் ஒரு உணர்ச்சி நேர்மறையான பதட்டநோயாகவும், எதிர்மறையான பதட்டநோயாகவும் மாறுகிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். வாழ்க்கை சூழ்நிலைக்கு அல்லது நெருக்கடிக்கு பொருத்தமற்ற எதிர்வினையை உயிரியக்கம் எடுப்பதே இத்தகைய பதட்டநோய்க்குக் காரணம். இளமைக்காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வாழ்க்கை அழுத்தங்கள் பதட்டநோயைக் கட்டமைக்கின்றன.
பதட்டநோயின் வகைகள்
புறவயமாகவோ அகவயமாகவோ ஏற்படும் அழுத்தத்தினால் உணர்ச்சிநிலையில் உருவாகும் தற்காப்புநிலை உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். இது நீண்டநாள் நோயாகவும் மாறும். பதட்டநோயைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று விதமாக பிரிக்கலாம். பரம்பரையாக உயிரியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை. வாழ்வில் ஏற்பட்ட அநுபங்களினால் உளவியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை, சில குறிப்பிட்ட வாழ்வநுபவங்கள் அல்லது சம்பவங்களினால் ஏற்படும் குறிப்பிட்ட உளவியல் பாதிப்புக்கு இலக்காகும் தன்மை, இவற்றுள் கடைசியாக வகைப்படுத்தப்பட்ட பதட்டநோய் சமூகபயம், ஆட்கொள்ளப்படும் உளவெறி, குறிப்பிட்ட பயங்கள், பீதி, இவற்றின் காரணமாக உருவாகிறது.
மேலும் பல காரணங்களாக, சுயபாதுகாப்புக்கு ஆபத்து, மனசாட்சியின் நெருக்கடியின் விளைவாக தோன்றும் முரண்பாடு, கொள்கையில் தோல்வி, சுயமரியாதை இழப்பு, அன்றாடம் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அழுத்தங்கள், தவறான நம்பிக்கைகள், தவறான சிந்தனைகள், உடல் நோய்கள், சமூகமுரண்பாடுகள், பாலுறவு பிரச்னைகள், பேராசை, உளவியல் விபத்து, போன்றவையினால் பதட்டநோய் தோன்றும்.
பதட்டநோய் மருத்துவ வரலாறு
முதன்முதலாக வரலாற்றில் உளவியல்-உடற்கூறியல் நோய் மத்திய கால இஸ்லாமிய வரலாற்றில் பெர்சிய உளவியல் மருத்துவர்களான அகமது இபின் சாகுல் அல்-பல்கியும், காலி அப்பாஸும் இந்த நோயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்களே முதன்முதலாக ஒரு மனிதனது மனமும் உடலும் ஒன்றையொன்று பாதிக்கின்றது என்று கண்டுணர்ந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபிரான்ஸ் அலெக்சாண்டர் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தார். ஜார்ஜ் குரோட்டெக்குடன் ஏற்பட்ட தொடர்பினால் சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியல்-உடலியல் நோய்களைப் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு காட்டத்தொடங்கினார். அந்தக் காலத்தில் ஜார்ஜ் குரோட்டெக் உடல்நோய்களை உளவியல் சிகிச்சையின் மூலம் குணமாக்கும் சாத்தியங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.ஹோமியோபதியின் பிதாமகரான ஹானிமன் தன்னுடைய ஆர்கனான் நூலில் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நோயில் காணப்படும் எல்லாக்குறிகளையும் ( symptoms ) அதாவது உடற்குறிகளுடன் முக்கியமான மனக்குறிகளையும் ஒரு மருத்துவர் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அந்நோயை அழிக்கச் சரியான ஒத்த மருந்தை தேர்ந்தெடுக்க முடியும். அதாவது எந்த மருந்து இயற்கை நோய் தோற்றுவித்த உடற்குறிகளையும், மனக்குறிகளையும் நோயற்ற ஒருவரின் உடலில் தோற்றுவிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும், என்று அழகாக விவரித்துள்ளார். ஆக மனம் உடலையும், உடல் மனதையும் பாதிக்கவே செய்கிறது. பதட்டநோய் மனதில் ஏற்படும் நெருக்கடியினால் மட்டுமல்ல, உடலில் ஏற்படும் மாறுபாடுகளினாலும் வரும்..
கற்காலத்துக்கு முன்பிருந்தே உயிர்பயத்தினால் ஏற்பட்ட பதட்டநோய் மனித நாகரிகம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய விசுவரூபம் எடுத்திருக்கிறது. நவீன சமூகத்தின் சிக்கல்கள், இன்னும் மனிதனை பதட்டமுள்ளவனாக்கியிருக்கிறது. வேற்றுமையின்மை, ஏற்றதாழ்வின்மை, சமத்துவம், நிச்சயத்தன்மை, பாதுகாப்புணர்வு, வாழ்வுக்கான உத்திரவாதம், எல்லோருக்கும் சமவாய்ப்பு, என்று மானுட சமூகம் முன்னேறிச் செல்லும் போது தான் பதட்டநோய் மனிதர்களிடமிருந்து முற்றிலும் ஒழிந்து போகும்.
Tuesday, 13 November 2012
தத்துவத்தின் வறுமை
மனிதநலம் காக்கும் ஹோமியோபதி –7
உதயசங்கர்
நாகரீகமடைந்த மனிதகுலத்தின் எல்லாச்செயல்பாடுகளுக்குப் பின்னால் ஒரு தத்துவப்பின்புலமும் அரசியலும் இருக்கிறது. அந்தந்தக் காலகட்டத்தின் ஆளும்வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாக, அல்லது அதற்கு தொந்தரவில்லாத விதமாக தத்துவம் உருவாக்கப்படும். அந்தத் தத்துவத்தின் செயல்முறைத் திட்டமாக அரசியலும், அறிவியலும், இலக்கியமும், கலாச்சாரமும் உருவாக்கப்படும். ஆக அறிவியல் அது மருத்துவத்துறையாக இருந்தாலும் சரி, அணுசக்தித்துறையாக இருந்தாலும் சரி, அதற்குப் பின்னால் ஒரு தத்துவமும் அரசியலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
இன்றைய முதலாளித்துவ தத்துவத்தின் கூறுகளே இன்றைய மருத்துவத்திலும் இருக்கிறது. லாபவெறி கொண்ட மருந்துக் கம்பெனிகள், சேவையை மறந்த மருத்துவர்கள், பணம் பறிக்கும் நோக்கத்துடனேயே நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பல மருத்துவச்சிகிச்சைக் கோளாறுகளைப் பார்க்கிறோம். ஆனால் என்ன செய்வது சார்? அந்த மருத்துவ சிகிச்சை தானே மிகப்பிரபலமாக இருக்கிறது. நவீன சோதனைச்சாலைகளின் துல்லியமான முடிவுகள் கிடைக்கின்றன. உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய முடிகிறது. அவசரச்சிகிச்சை செய்ய முடிகிறது. எல்லாவற்றையும் விட அறிவியல் பூர்வமாக இருக்கிறது. என்று பல குழப்பங்கள் நமக்கு வருகிறது.
ஆங்கில மருத்துவத்துக்கென்று உள்ள தத்துவம் என்ன? ஏற்றத் தாழ்வு மிக்க இன்றைய சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் வறுமையை ஒழிப்போம் என்றே வாக்குறுதிகள் தருகிறார்கள். ஆனால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து வறுமை ஒழியவில்லை. ஒழியவில்லை என்பது மட்டுமல்ல அதிகமாகிக் கொண்டே போகிறது. வறுமைக்கான காரணம் என்ன என்று தெரிந்திருந்தாலும் தெரியாத மாதிரி இலவசங்களை அள்ளித் தெளிக்கிறார்கள். இந்த இலவசங்களால் வறுமை ஒழியாது என்று ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? செல்வம் ஒரு சிலரிடம் சேர்வதற்கானக் காரணம் என்ன? அந்தக்காரணத்தின் வேர் மூலமான தனியுடைமையைக் களைந்து செலவத்தை சமூகமயமாக்கினால் இந்த ஏழ்மையை ஒழித்து விட முடியும். ஆனால் முதலாளிகளுக்குச் சார்பான இன்னும் சொல்லப்போனால் முதலாளிகளால் நடத்தப்படுகிற இந்த அரசாங்கங்கள் காரணங்களை விட்டு விட்டு அதன் விளைவுகளான வேலையின்மை, வேலை இழப்பு, வறுமை இவற்றை ஒழித்து விடப் போவதாக முழக்கமிட்டுக் கொண்டே இருப்பது எத்தனை மோசடியோ அத்தனை மோசடியை ஆங்கில மருத்துவம் நோயாளிகளுக்குச் செய்கிறது.
மழையில் நனைகிறீர்கள். வீட்டுக்குப் போனதும் முதலில் தும்மல் வருகிறது. மூக்கிலிருந்து நீர் ஒழுகுகிறது. உடல் சூடு அதிகரித்து காய்ச்சல் வருகிறது. மருத்துவரிடம் போகிறோம். அவர் அனால்ஜசிக், ஆண்டி பயொடிக்ஸ், இருமல் இருந்தால் காஃப் சிரப் எழுதிக் கொடுக்கிறார். தும்மல், இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அவர் மருந்துகள் கொடுக்கிறார். ஆனால் இவை உண்மையில் நோய்களா? நோயின் அறிகுறிகளா? அல்லது நோயின் விளைவுகளா? ஆனால் இந்த விளைவுகளுக்கான காரணம் என்ன? திடீரென்று தானாக எந்த முகாந்திரமுமின்றி தும்மலும் காய்ச்சலும் வருமா? ஆக தும்மல், இருமல், காய்ச்சலுக்கான காரணம் மழையில் நனைந்ததினால் உடலில் ஏற்பட்ட ஒவ்வாமை. இந்த மழை ஒவ்வாமை தான் நோய். மற்றபடி தும்மல் இருமல் காய்ச்சல் எல்லாம் விளைவுகள். ஆங்கில மருத்துவம் விளைவுகளை மட்டுமே பார்க்கிறது. விளைவுகளை மட்டுமே சோதனைச்சாலைக் கருவிகளால் அளக்கிறது. விளைவுகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கிறது. அதையும் சரியாகச் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை.
கொசுக்களை ஒழித்து விட்டால் கொசுக்களினால் பரவும் நோய்கள் ஒழிந்து விடும். டெங்குவோ, மலேரியாவோ, சிக்கன்குனியாவோ விளைவுகள் தானே. காரணம் எது? நமது அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? கொசுக்களை ஒழிப்பதற்கான எந்தத் திட்டமும் போடாமல் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கொசு விரட்டிக் கம்பெனிகளும், கொசுக்கொல்லிக் கம்பெனிகளும் பெருகி விஷத்தன்மையுள்ள வேதியல் பொருட்களின் கலவையினால் அட்வான்ஸ்டு.. அட்வான்ஸ்டாக கொசுவைத் தேடிப்பிடித்து கொல்லும் விளம்பரங்களின் மூலம் புதிய சுவாசநோய்களை உருவாக்கி வருவது வேறுகதை. ஆக இது தான் ஆங்கிலமருத்துவத்தின் தத்துவ வறுமை. நோய் நாடி, நோய் முதல் நாடி நோக்காமல் நோயின் விளைவுகளை மட்டும் நோக்கி மருந்துகளைக் கொடுக்கும் அல்லது அந்த நோய் விளைவுகளுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் செயல்பாட்டினால் முழு மனித நலத்தை அதனால் ஒரு போதும் மீட்க முடியாது.
அதே போலச் சோதனைச்சாலை முடிவுகள். அதுவும் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதனால் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏற்கனவே சொல்லியிருந்ததைப் போல தனித்துவமிக்க மனிதனை எந்த காமன் டினாமினேட்டராலும் வகுத்து விடை சொல்ல முடியாது. ஆனால் சோதனைச்சாலையோ, மருத்துவ உபகரணங்களோ அதைத்தான் செய்கின்றன. அதாவது நாடித்துடிப்பு எழுபத்தியிரண்டு, ரத்த அழுத்தம் 120/80, சர்க்கரை அளவு 80/120 என்று பொதுமைப்படுத்துகின்றன.அதிலும் வித்தியாசங்கள் வேறு. ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மார்ஜின் வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு சோதனைச்சாலை முடிவுகளும் ஒவ்வொரு மாதிரி, ஒவ்வொரு மருத்துவ உபகரணங்களும் முன்னப்பின்ன, என்று எந்த தர்க்க நியாயமும் இல்லாத முடிவுகளை நவீனமாக நினைத்து அதன் அடிப்படையில் மருந்துகளைக் கொடுப்பதும் அதன் தத்துவ வறுமையைக் காட்டுகிறது.
மனித உடலியக்கத்தை ஒருங்கிணைந்த இயங்கியல் பூர்வமான இயக்கமாகக் கருதாமல் அதைச் சடப்பொருள் போலக் கருதி அறுவைச் சிகிச்சைகளை எந்தத் தார்மீக நெறிமுறையுமின்றி பயன்படுத்துவது. இதய அறுவைச்சிகிச்சை, பிரசவம், டான்சில், தைராய்டு, மூலம், கர்ப்பப்பை, சிறுநீரகக்கல், பித்தப்பைக் கல், குடல்புண், என்று சகலத்தையும் அறுத்து எறிந்து விட்டு தாங்கள் நோயைக் குணப்படுத்திவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்கிறது ஆங்கில மருத்துவ முறை.
மொத்தத்தில் எந்த அறநெறிமுறையுமின்றி நோயாளரின் உயிரைப் பகடைக்காயாக்கி பயமுறுத்தி, மிரட்டி, உயிர்ப்பயத்தை உருவாக்கி, வழிப்பறி செய்து வாழ்கிற ஆங்கில மருத்துவம் அப்படியே முதலாளித்துவ தத்துவத்தின் வறுமையைச் சுவீகரித்துள்ளது. மனிதசமூக சாரம் இல்லாத, மானுடமயமில்லாத எந்த மருத்துவ முறையையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதுவும் அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கோளாறு உள்ள ஆங்கில மருத்துவ முறை குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.
நலம்….காக்க…தொடர்வோம்
Monday, 12 November 2012
மருத்துவத்தின் தத்துவம்
மனித நலம் காக்கும் ஹோமியோபதி- 6
மருத்துவம் என்பது எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடு தான். நாய், பூனை, போன்ற மிருகங்களைக் கவனித்துப்பார்த்தால் தெரியும். தனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் உணவெடுக்காது. அதோடு நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கி விட்ட விஷப்பொருளை கக்கி விடும். நாய்க்கு எப்படி அருகம்புல் தெரியும்? அதன் உள்ளுணர்வில் பதியப்பட்டுள்ள மருத்துவக்குறிப்பு ஞாபகத்தின் மேலாக அலையடித்து அதற்கு வழிகாட்டுகிறது. மனிதன் சமூகவயமாகும் போது கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்து விட்டான். வேலைப்பிரிவினைகள் உருவாகும் போது மருத்துவம், மந்திரம், சடங்குகளோடு இணைந்து விட்டது. மருத்துவம் மிக உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவதே பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது, ஆனால் எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப்போவதில்லை. பெரும்பாலும் கை வைத்தியமாக வீடுகளில் சாதாரண நோய்களைக் குணமாக்கி விடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி, என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு, உணவுப்பத்தியம், பச்சிலைச்சாறு, கஷாயம், சூரணம், என்று கொடுத்துக் குணப்படுத்தி விடுவார்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தது. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.
ஆனால் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. பலருக்கு ஆங்கில மருத்துவம் தவிர மற்ற மருத்துவமுறைகள் எல்லாம் நாட்டு வைத்தியம் தான். ஆங்கிலவைத்தியம் மட்டும் தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் கண்ட்ரி மெடிசின். நோயுற்ற மனிதனை நம்பாமல் சோதனைச்சாலை முடிவுகளின் அடிப்படையிலே மருத்துவம் செய்யும் ஆங்கிலமருத்துவம் நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது. என்ன சொல்ல? அதைப் பற்றி வேறொரு கட்டுரையில் பேசுவோம்.
எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.
தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் வாழ்க்கை பற்றிய விளக்கம். கண்ணோட்டம். உதாரணத்துக்கு இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்கு நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலானோர்கள் நினைக்கிறார்களே அது ஒரு தத்துவவெளிப்பாடு. இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவநோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய உணவுப்பழக்கம், உடை, இருப்பிடம், என்று எல்லாம் மாறியதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அந்த அரசு நிர்வாகத்தை நிர்மாணிக்கிறது. அதைச் செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது? அதன் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி, இவற்றைத் தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் எல்லோரையும் ஏமாற்றும். ஆனால் சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதிமூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. ஆனால் எல்லாத்தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்திலும் ஒரு தத்துவப்பார்வை இருக்கிறது. அது தான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவமுறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப்பார்வை கொண்டவை என்றால் ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாய் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால் அது பலிக்காது என்றும் நம்பப் பட்டது. மருத்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போல மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.
ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. அதற்குச் சந்தை தான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். மைதாஸின் மனநிலை கொண்ட அதன் லாபவெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையது என்பதால் அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தை தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே எல்லாருமே பண்டங்கள் தான். எப்படி மனிதர்களுக்காக பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ அதே போல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் உற்பத்தி செய்யும்.
உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன் தான் என்றாகி விட்டது. இது திட்டமிட்டு பணம் பறிப்பதற்கான செயலாக மாறி விட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிக்குப் பாதிப்பேருக்கு கர்ப்பப்பையை எடுத்து தூரப் போட்டாயிற்று. சமப்ந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாக தடுப்பூசிகளைப் போடச் செய்வது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து அவனை ஒரு இயந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது. எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வம் கொழிக்க பெரும்பான்மை மக்கள் தங்கள் உயிர், பொருள், ஆவி, அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப்பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை.
ஆனால் ஹோமியோபதியின் தத்துவப்பார்வை சமூகவயமானது. தெளிவான தத்துவநோக்கம் கொண்டது. எந்த மர்மங்களுமற்றது. இயற்கையின் விதிகளுக்கேற்ப செயல்படுவது, எளிமையானது, இனிமையானது, முழுமையான நலத்தை மீட்டுத் தருவது. பக்கவிளைவுகளற்றது. எனவே தான் ஹோமியோபதி மருத்துவம் புரட்சிகரமான மக்கள் மருத்துவமாக விளங்குகிறது. அது எப்படி என்று பின்னால் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
நலம் காக்க…தொடர்வோம்
Sunday, 11 November 2012
தலைமைச் செயலாளர்
மனித நலம் காக்கும் ஹோமியோபதி –5
உதயசங்கர்
நம்முடைய உயிராற்றல் என்ற தலைமைச் செயலாளர் அல்லது மேற்பார்வையாளர் இருபத்திநான்கு மணிநேரமும் உடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். உடலின் மாறுபாடுகளுக்கேற்ப அவ்வப்போது உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். உடலிலுள்ள மற்ற உறுப்புகளின் சொற்களைக் கேட்கிறார். அவற்றின் நலம் அல்லது துயரைக் கவனித்து அதற்கேற்ப தன் உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே போல உடலின் உறுப்புகள் தரும் சமிக்ஞைகளுக்குக் கட்டுப்பட்டு தன் உத்திரவுகளை மாற்றவும் செய்கிறார். கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சமிக்ஞைகள், உத்திரவுகள், எதிர்வினைகள், செயல்கள் என்று மிகுந்த ஜனநாயக உணர்வுடன் நமது உயிராற்றலும் உடலும் இயங்குகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைகள் அனைத்தும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஜனநாயக ( CENTRALISED DEMOCRACY ) முறையிலேயே நடக்கும். தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளை மேலிருந்து கீழாகவும் கீழிலிருந்து மேலாகவும் ஜனநாயகபூர்வமான கருத்தொற்றுமை மூலம் தீர்மானிக்கிறார்கள். இது இயற்கையோடு இயைந்த நடைமுறை.
உயிராற்றலை மையம் என்று கொண்டால் அதற்கு அடுத்த வட்டத்தில் மனமும், அதற்கடுத்த வட்டத்தில் உடலின் முக்கியமான ஜீவாதாரமான உறுப்புகளும், அதற்கடுத்த வட்டத்தில் அவ்வளவாக முக்கியமில்லாத உறுப்புகளும் அதற்கடுத்த கடைசி வெளிவட்டத்தில் தோல் போன்ற மிகவும் முக்கியத்துவம் குறைந்த உறுப்புகளும் வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனால் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பு உயிரியக்கத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாதென்பதால் அதன் அதிர்வுகளை உயிராற்றல் மையத்திற்கு வெகு தூரத்திலுள்ள உயிரியக்கநோக்கில் மிகவும் முக்கியத்துமில்லாத தோலுக்குக் கடத்துகிறது.
சரி உயிராற்றல் ஏன் பாதிப்புக்குள்ளாகிறது?. நமது சீரில்லாத ஆரோக்கியக்கேடான, பல்வேறு நடவடிக்கைகளாலும், முறையற்ற, தீமையான மருந்துகளாலும், ஏற்றத்தாழ்வுமிக்க சமூகக் காரணிகளாலும், ( உணவு, நீர், காற்று, சுற்றுச்சூழல், குடும்பம், சமூகம், அரசியல் ) பாதிப்புக்குள்ளாகிறது. இந்தப் பாதிப்பை அப்படியே உயிராற்றல் வைத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அதனால் உயிராற்றலின் கடைசி வட்டத்திலுள்ள தோலுக்கு அந்தப் பாதிப்பைத் தள்ளி விடுகிறது. தோலில் சில பாதிப்புகள் ( கொப்புளங்கள், பருக்கள், கட்டிகள், நிறமாற்றம், அரிப்பு, ஊறல், காந்தல் ) ஏற்படுகின்றன. இவை உயிராற்றல் வெளித்தள்ளும் பாதிப்புகள் என்று நமக்குத் தெரியாததனால் நாம் தோல்நோய் நிபுணரைச் சென்றுச் சந்திக்கிறோம். அவர் கொடுக்கும் மருந்து, ஆயிண்மெண்ட், களிம்பு, என்று பல்வேறு வேதியல் கலவைகளைத் தடவி உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை, மீண்டும் உள்ளே தள்ளுகிறோம்.
சில காலம் கழித்து மூட்டுகளில் வலியோ, ஆஸ்த்மா துயரோ வருகிறது. இருக்கவே இருக்கிறார்கள் ஸ்பெஷலிஸ்டுகள். ஆர்த்தோ அல்லது நுரையீரல் நிபுணர்கள். அவர்களைச் சென்று பார்க்கிறோம். அவர்களும் நமக்கு வந்த தோல் வியாதியைப் பற்றிக் கவலைப்படாமல் ( ஏனென்றால் அது அவர்கள் வேலையில்லையே அதற்குத் தான் தோல் நோய் நிபுணர் இருக்கிறாரே ) இப்போதுள்ள ஆஸ்த்மாவுக்கோ, மூட்டு வலிக்கோ, மருந்துகள் தருகிறார். அதைச் சாப்பிட்ட சிறிது காலத்துக்குப் பிறகு இதயத்தில் வலி வருகிறது. இப்போது இதயநோய் நிபுணரைப் பார்க்கிறோம். அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து நம்மை எப்படியோ உயிரோடு (!) விட்டு விடுகிறார். யோசித்துப்பாருங்கள். உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை தவறான சிகிச்சைமுறையினால் உயிருக்கே ஆபத்தாக்கிக் கொண்டோம். அதில் இன்னொரு வேடிக்கை இப்படிப்பட்ட அறிவியல்பூர்வமற்ற மருத்துவமுறையை நாமெல்லோரும் ரெம்ப அறிவியல்பூர்வமான மருத்துவமுறையென்று கொண்டாடுகிறோம்.
நமது நாட்டில் உடல்நலமின்மையால் இறப்பவர்களில் ஐம்பது சதவீதமானவர்கள் தவறான மருத்துவச் சிகிச்சையினால் இறப்பவர்கள் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா இல்லையா? இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய அறியாமை. மருத்துவம் நமது பிறப்புரிமை என்ற ஞானம் இல்லாததால் அதை யாரோ விற்பன்னர்கள் சமாச்சாரமாக நினைத்து, அவர்களை கடவுளாக வழிபட்டு அவர்கள் கையில் நமது உடலையும் உயிரையும் ஒப்படைத்து விட்டு கையறு நிலையில் காசையும் தொலைத்து விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறோமே.
ஆதியிலிருந்தே இந்த மண்ணில் இருந்து வரும் மருத்துவ முறைகளை மாற்று மருத்துவமுறைகள் என்றும், பாதியில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ஏகாதிபத்திய ஆங்கில மருத்துவத்தை முதல் மருத்துவமாகவும் போற்றுகிறோமே. விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஆங்கிலேய மோகம் இன்னும் மறையவில்லை. அதற்குள் மறுபடியும் நம்மை அடிமை கொள்ள அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?
நலம் காக்க…..தொடர்வோம்.
Saturday, 10 November 2012
நோயின் மூலம் எது?
மனிதநலம் காக்கும் ஹோமியோபதி-4
இப்போது டெங்கு காய்ச்சல் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் பன்றிக்காய்ச்சல், அதற்கு முன்னால் எலிக்காய்ச்சல், கோழிக்காய்ச்சல், ஒரு நாலைந்து வருடங்களுக்கு முன்னால் சிக்கன்குனியா காய்ச்சல், மழை பெய்து விட்டால் வைரஸ் காய்ச்சல், என்று புதிதாய் காய்ச்சல்கள், உருவாகியிருக்கின்றன. இந்த மாதிரியான எல்லாநோய்களுக்கும் மூலகாரணம் என்ன? பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லாஉயிர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமது உடல் தான் நோய்களுக்கு மூலகாரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! எப்படி எப்படி என்று கேட்கத் தூண்டுகிறதல்லவா!
ரெம்ப சிம்பிள். பத்துபேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டால் யாரோ ஒருவருக்கு வயிற்றாலை போகிறது. நமது இந்தியத் திருநாட்டில் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் எல்லாநோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா? நம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுவில், தூசுவில், இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால் அதற்கு நம் உடலே காரணம் இல்லையா?
எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல் தான் நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்!.
இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத் தான் என்று புரிந்து கொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர்சுரப்பிகள் பாதுகாப்பு படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்புமண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அநுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில் தான் உடல் தன் ஆரோக்கியத்தை பேணிக் கொள்கிறது. தனக்கு எது தேவை என்று சொல்கிறது. தேவையில்லாததை நாம் செய்யும் போது எச்சரிக்கிறது. ஒரு முறையல்ல பல முறை. நாம் விடாப்பிடியாக அதைச் செய்யும் போது பலத்த குரலில் உடலின் மூலமாக நம் செவிட்டுக் காதுகளில் அலறுகிறது. இதையெல்லாம் ஒரு ஒழுங்குடன் செய்வதற்குக் கற்றுக் கொண்டுள்ளது. நாம் தான் நமது உடலைப் பற்றிய அறியாமையால் உடலைப் பாழ்படுத்துகிறோம்.
மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல் தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர் தான் நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச்செயல்களும் செவ்வனே நடைபெற உதவுகிறார். இந்த உயிராற்றலில் எப்போது பலவீனம் ஏற்படுகிறதோ அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது புறவயமாக எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைப் போட்டுத் தாக்குகிறது. உடல் நோய்வாய்ப் படுகிறது.
ஆக நம்முடைய உடல் நோய்வாய்ப்படுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்த பலவீனம் நமது உடலின் நோய் ஏதிர்ப்புத் திறனைக் குறைத்து விடுகிறது. நோய் ஏற்புத்திறன் அதிகரித்து விடுகிறது. இதனால் உடல் எளிதில் மாற்றங்கள் தோன்றுகிறது. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழுச் சக்தியோடு இருக்கும் வரை நாம் பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி, என்று எதைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.
நலம் காக்க……..தொடர்வோம்.
Wednesday, 7 November 2012
எது நோய் ?
மனிதநலம் காக்கும் ஹோமியோபதி- 3
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நோய் எது ? என்று தெரிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான உயிரியக்கத்தின் பரிணாமவளர்ச்சியில் நமது உடலுக்குள் ஒரு மருத்துவர் உருவாகியிருக்கிறார். அவர் எப்போதும் அதாவது இருபத்திநாலுமணி நேரமும் நமது உடலியக்கத்தைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார். நாம் நமது உடலுக்குச் செய்யும் நல்லது பொல்லதுகளை உற்றுக்கவனிக்கிறார். எங்கே கோளாறு ஏற்பட்டாலும் உடனே அடுத்த கணமே அப்படிக்கூடச் சொல்லமுடியாது கணத்தின் பின்னநேரத்தில் அந்த இடத்துக்கு தன் அத்தனை படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்தக் கோளாறைச் சரி செய்வதற்காக என்ன விதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார். இது எதையும் நாம் சொல்லிச் செய்வதில்லை அல்லது நம்மிடம் கேட்டுச் செய்வதில்லை. இதற்காக அவர் நம்மிடம் எந்த ஃபீஸும் கேட்பதில்லை. எந்தச் சோதனைச்சாலை பரிசோதனைகளையும் செய்யச் சொலவதில்லை. ஆனால் தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்று தான். அவர் செய்து கொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகளைத் தடுக்காதீர்கள். குழப்பாதீர்கள். வெளியிலிருந்து அந்நியக்குண்டர்களைக் ( MEDICINES ) கொண்டு வந்து தன்னுடைய நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்காதீர்கள்.
சரி. அப்படியானால் என்ன செய்ய வேண்டும் ?
முடிந்தவரை உடலின் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். அதற்கு முதலாவதாக எது நோய் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். எது நம்முடைய உடல் நோயிலிருந்து நலமாவதற்கு செய்யும் முயற்சிகள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
நாம் நம்முடைய சமூகப்பழக்கவழக்கம், பிழைப்பு, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீதநம்பிக்கை இவற்றால் பல உடலுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்கிறோம். நாம் மனமுவந்து செய்கிற காரியங்களைச் செய்யுமுன்னால் உடலால் தடுக்க முடியாது. சிலநேரம் தடுக்க முயற்சிக்கவும் செய்யும். புகை பிடிக்கப் பழக ஆரம்பிக்கும் போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் வரும். மதுவருந்த பழகும் போது ஒமட்டல், வாந்தி, வயிற்றாலை, உணவுப்பாதையில் காந்தல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல், என்று பல வழிகளில் பேசிப்பார்க்கிறது. மன்றாடுகிறது. ஆனால் நாம் அப்படியெல்லாம் விட்டு விடுகிறவர்களா? விடாமல் பழகி உடலியக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்புமண்டலம், எல்லாவற்றையும் அரசின் ஆதரவோடு பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், இரவு பனிரெண்டு மணிக்கு ரோட்டோரக்கடையில் புரோட்டாச் சால்னாவை வளைத்துப் பிடிக்கிறோம். கெட்டுப்போனச் சால்னா உடலுக்குள் விஷமாக மாறி உடல் நலத்துக்கு நிரந்தரமாக தீமை செய்து விடக்கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குகிறார். அதிகமான நீர்ச்சத்தை சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தை குடல் உறிஞ்சி விடுமுன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலி ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. நீராய் பீச்சியடிக்கிறது. வயிற்றாலை என்ற உபாதையினால் உடலின் நீர்ச்சத்து குறைகிறது. தாகம் எடுக்கிறது. உடல் சோர்வாய் இருக்கிறது. ஓய்வெடுக்கச் சொல்கிறது. மிகமிக எளிய உணவைச் சாப்பிடச் சொல்கிறது. உடலுக்கு முழுவிஷத்தையும் வெளியேற்றிய திருப்தி வரும்வரை வயிற்றாலை போகிறது. ஆக வயிற்றாலை என்பது நோயல்ல. உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். அவர் மலச்சிக்கலை உருவாக்கும் மருந்துகளைக் கொடுக்கிறார். அதைச் சாப்பிட்டதும் வயிற்றாலை நின்று விடுகிறது. நமக்குத் திருப்தி. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாளைக்கு மலம் போக மாட்டேனென்கிறது. வயிறு கனமாக பசியின்றி மந்தமாக இருக்கிறது. மறுபடியும் மருத்துவரிடம் சென்று மலச்சிக்கலுக்கு மருந்து வாங்கிச் சாப்பிட்டு மலம் கழிக்கிறோம். இதற்குள் உணவு விஷத்தை வெளியேற்றுவதற்கு உடலின் மருத்துவர் செய்த அத்தனை முயற்சிகளையும் நாம் சாப்பிட்ட மருந்துகள் முறியடித்து விட விஷம் உடலில் தங்கிவிடுகிறது. சரி இரைப்பையில் போகும்போதே உடலுக்கு ஒவ்வாதது என்று தெரிந்து விட்டால் வயிற்றுத்தசைகளை முறுக்கி வாந்தியை ஏற்படுத்துகிறது. இப்படி உடல் எல்லாவழிகளிலும் நம் நலத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறது.
அடிபட்ட இடத்தில் முதலில் ரத்தக்கசிவை உறையவைக்கும் பிளேட்லெட்டுகளுக்கு கட்டளையைக் கொடுத்து உறைய வைக்கிறது. சிதைந்த செல்களைச் சுற்றி வீக்கம், வலி, இவற்றை ஏற்படுத்துகிறது. உடல் சூட்டை அதிகப்படுத்துகிறது. அதிகமான உடல் சூட்டில் வெளியிலிருந்து உடலுக்குள் அந்நிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் நுழையாது. அதற்கு பொருத்தமான சீதோஷ்ணநிலையில் தான் நம் உடலில் நுழையும். உடனடியாக தன் படைவீரர்களுடன் வந்து அந்த இடத்தில் சிதைந்த செல்களை வெளியேற்ற சீழை உருவாக்கி, வெளியேற்றுகிறது. காயத்தின் தன்மையைப் பொறுத்து புதிய செல்களால் அந்தக் காயத்தை பாவு போல நெய்து மூடி விடுகிறது. இந்தக் காரியங்களைச் செய்வதற்கு நம்முடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகவே நெறிகட்டுதல், காய்ச்சல் போன்ற குறிகளை ஏற்படுத்துகிறது.
எனவே முதலில் நமக்கு எது நோய் என்று தெரிய வேண்டும். புறவயமான காரணிகளால் உணவு, காற்று, நீர், குளிர், வெப்பம், மழை, பூச்சிகள், மிருகங்கள், ஆகியவற்றின் கடிகள், காயங்கள், ஆகியவற்றால் உடலில் ஏற்படும் மாறுமைகளுக்கு உடல் உடனடியாக எதிர்வினை புரிந்து விடும். பெரும்பாலான மாறுமைகளை நம்முடைய உடல் மருத்துவரே நலமாக்கிவிடுவார். சிலவற்றுக்கு மட்டும் வெளியிலிருந்து மருந்துப்பொருட்களின் அவசியத்தைக் கோருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோனார் நமது உடலின் மருத்துவர் நலமாக்கும் முயற்சிகளின் போதே தலையிட்டு விடுகிறோம். நாம் நமது உடலைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதனை ஒரு யந்திரமாக நினைத்து அலட்சியம் செய்கிறோம். ஆனால் நமது உடலும் அதன் இயக்கமும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உயிர் பெற்ற அற்புத இயங்கியல் வளர்ச்சி. அதை நாம் அலட்சியப்படுத்தலாமா?
நலம் காக்க…….தொடர்வோம்.
Tuesday, 6 November 2012
மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2
நோய் என்றால் என்ன?.
உதயசங்கர்
நோய் என்றால் என்ன? நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்ய விடாமல் உடல் தரும் தொந்திரவுகள் எல்லாமே நமக்கு நோய் தான். எல்லோருக்குமே தங்களுடைய வழக்கம் பாதிக்கப்படும் போது டென்ஷன் வந்து விடுகிறது. உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளை, ஊசிகளைப் போட்டு உடனே குணமாகி உடனே நம்முடைய ரொட்டீனுக்குத் திரும்பி விட வேண்டும். இது தான் அநேகமாக எல்லோரும் நினைப்பது.
நோய் என்றால் நம்முடைய மன, உடலியக்கத்தில் ஏற்படுகின்ற மாறுதல் அல்லது மாறுமை. உதாரணத்துக்கு புகை, தூசு, மாசு, மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும் போது நம்முடைய உடலுக்கு ஒவ்வாத இந்த புகை, மாசு, தூசு, இவற்றினால் சுவாசக்கோளங்களில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படுகிறது. நுரையீரலில் இவை சேர்ந்து விடாமலிருக்க நுரையீரல் ஒரு கணம் தன் முழுசக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அப்படியும் சுவாசத்தில் நுழையும் ஒவ்வாத இந்த அந்நியப்பொருட்களை சளிச்சவ்வுகளைத் தூண்டி விட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது. இதன் மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கிறது. மனநிலையிலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும் இந்த உணர்வு வரும். இது ஆரம்பகட்டம். இதுவே சுவாசகோசங்களினால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப்பொருள் உள்ளே நுழைந்து விட்டால் அதை அந்தந்த இடத்திலேயே சளிநீர் மூலமாக அரெஸ்ட் செய்து சிறைப்படுத்துகிறது. பின்பு சிறைப்பட்ட அந்த அந்நியனை பிடதியைப் பிடித்து வெளித்தள்ள இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது கூடவே சிறைப்பட்ட அந்த அந்நியனும். நாம் நம்முடைய உடலுக்குச் செய்த தீங்கு தெரியாமல் உடனே ” மூக்கால தண்ணியா ஒழுகுது டாக்டர்..” என்றோ ” ஒரே சளி, இருமல் டாக்டர் “ என்றோ மருத்துவரிடம் செல்கிறோம்.
இன்னொருவகை ஒவ்வாமையென்பது நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தனித்துவமான ஒவ்வொரு மனிதனையும் தனித்துவப்படுத்துவதில் அவனுடைய தனிவெப்பநிலை ( THERMOSTAT ) முக்கிய பங்கு வகிக்கிறது. அவனுடைய தனிவெப்பநிலை குளிர் என்றால் அவனுக்குக் குளிர், குளிர்ந்த தட்பவெப்பம் ஒவ்வாது. அதேபோல அவனுடைய தனி வெப்பநிலை சூடு என்றால் வெப்பம், வெப்பமான சீதோஷ்ணம் ஒவ்வாது. குளிர், சூடு, இரண்டுமே ஒவ்வாதவர்களும் இருக்கிறார்கள். இந்த ஒவ்வாமையினாலும் ஜலதோஷம், சளி, இருமல், ஆகியவை தோன்றலாம். இந்த ஒவ்வாமை கூடும்போது ஈளை ( ASTHMA ) நோயாக மாற வாய்ப்புகள் உண்டு.
முதலில் சொன்ன ஒவ்வாமை உடனடி தீவிர ( ACUTE ) நோய் என்றால் பின்னால் சொல்லப்பட்ட ஒவ்வாமை என்பது நீண்ட கால ( CHRONIC ) நோயாக மாறும் வாய்ப்புள்ள ஒவ்வாமை.
ஆக நோய் என்பது ஒருவர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பாதிப்படைந்து அதனால் புறவயத்தில் அவருடைய இயல்பு மாறித் தோன்றும் தோற்றம், அடையாளம், செயல், நடவடிக்கை.
ஆக நோய் என்பது ஒரு மனிதனின் உடல், மன, இயக்கத்தை ஒருங்கிணைக்கும் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பும் அதன் விளைவாக வெளியே தோன்றும் அறிகுறிகளும் கொண்ட தொகுப்பு.
ஆக நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில், ( உடல்செயல்பாட்டில், உடலின் பாதிப்பினால் மனமோ, மனதின் பாதிப்பினால் உடலோ அடைகின்ற ) ஏற்படுகின்ற மாற்றங்களின் தொகுப்பு.
நலம் காக்க தொடர்வோம்..
Saturday, 3 November 2012
மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம் - 1
உயிர் வாழ்வதின் நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பதா? ஏழேழு தலைமுறைக்கும் தேவையான சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா? நன்றாக உணவுண்டு, நன்றாக உறங்கி, நன்றாக வேலை செய்து கிழப்பருவம் எய்தி நொந்து உயிர்விடுதலா? இல்லை தன் பெண்டு, தன் பிள்ளை என்று தன் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக்கி யந்திரமாய் வாழ்ந்து செத்து மடிவதா? தேடிச் சேகரித்த புகழ் தரும் போதையில் தலைசுற்றிக் கொண்டே திரிவதா? வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருப்பதா? தன் இலக்கு எது என்று தெரியாமலே வாழ்நாள் முழுவதும் அம்புகளை எல்லாத்திசைகளிலும் எறிந்து கொண்டு திரிவதா?
வாழ்வதின் நோக்கம் தான் என்ன?
வாழ்வதன் நோக்கம் இன்பமாக இருத்தல் தான். ஒவ்வொரு உயிரும் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை இன்பமாக இருக்கவே விரும்புகிறது. எந்த ஒரு உயிரும் துன்பத்தை விரும்புவதில்லை. இன்பமாக இருப்பதற்காகவே எல்லாஉயிர்களும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டேயிருக்கின்றன.
சரி. இன்பம் என்றால் எப்படிப்பட்ட இன்பம்? உண்பது, உறங்குவது, எப்போதும் ஏதாவதொரு போதையிலிருப்பது, இப்படிப்பட்ட இன்பங்கள் எல்லாம் புலன்களின் வழியே கிடைக்கிற தற்காலிகஇன்பங்கள். இந்தத் தற்காலிக இன்பங்கள் எல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறது. நல்ல உணவு, காற்று, நீர், உறக்கம் , கலவி, எல்லாவற்றுக்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. தற்காலிக புலனின்பங்களில் உச்சபட்சமானது கலவியின்பம். இயற்கை இனவிருத்தியோடு அதைப் பிணைத்து இடையறாமல் உயிர் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு இந்த அனைத்து இன்பங்களும் இயற்கையின் சுழற்சிக்கு உட்பட்டவை. எனவே இயற்கையின் நியதிகளுக்கேற்ப உயிரினங்கள் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் இயற்கையோடு இயைந்தும் இயற்கையின் மீது ஆளுகை செலுத்தியும் தன் புலனின்பங்களைத் தக்க வைத்துக் கொள்கிறான்.
இந்தத் தற்காலிக புலனின்பங்கள் சீராக இருப்பதற்கு மிக முக்கியமானது உடல்நலம். சரி. உடல்நலம் என்றால் என்ன? உடல்நலம் என்பது மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கணையம், எலும்புகள், தசைகள், நரம்புகள் என்று சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் போலத் தனித் தனியாக நட்டுபோல்ட்டாக இயங்குகிற இயக்கமல்ல. நுரையீரல் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ, இதயம் நன்றாக இருக்கிறது மற்றவை சரியில்லை ஆனால் உடல் நலமாக இருக்கிறது என்றோ சொல்லிவிடமுடியுமா. நாம் அப்படிச் சொல்வதுமில்லை. எல்லாஉறுப்புகளும் ஒன்றிணைந்து இயங்குகிற சமச்சீரான இயக்கத்தையே நாம் உடல்நலம் என்று சொல்கிறோம். உயிர் என்பது மனதும் உடலும் இணைந்தது. உடலும் மனமும் இணைந்தும், மனதின் ஆளுகையின் கீழ் ஒருங்கிணைந்தும் உயிர் தன் இருத்தலை நிச்சயித்துக்கொள்கிறது. எனவே உடல்நலம் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் நலமாக வைத்துக் கொள்வது என்று புரிந்து கொள்ளலாம். இதைப் பொதுவான வரையறையாகக் கொள்ளலாம்.
மரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன? யோசித்துப்பாருங்கள். வெறுமனே மரம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நமக்கு என்ன தோன்றுகிறது. வேப்பமரம், புளியமரம், ஆலமரம், அரசமரம், இப்படிக் குறிப்பிட்ட மரங்களே நமக்குத் தோன்றும். ஏனெனில் மரம் என்ற ஒன்று கிடையாது. அதே போல எல்லாவேப்பமரங்களும் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் குட்டையாய், பருமனாய், உயரமாய், முண்டுகள் நிறைந்து, விரிந்து பரந்ததாய், இப்படி எத்தனை விதமான வேப்பமரங்கள்! சரி அந்த விதவிதமான வேப்பமரத்தின் இலைகள் எல்லாம் ஒன்றுபோலவா இருக்கின்றன? ஒவ்வொரு தனித்தனி இலையும் ஒவ்வொரு விதமாய் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அது தான் இயற்கையின் மாயாஜாலம். அற்புதம். எந்த ஒரு சிறு உயிரையும் ஜெராக்ஸ் பிரதிகள் எடுப்பதைப் போல எடுக்கவில்லை. ஒவ்வொன்றும் தன்னுடைய தனித்துவமான உயிரியக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரின் உள்ளுணர்வு, மரபணுக்களின் ஞாபகச்சேகரிப்பினால் உருவாகிறது. இந்த உள்ளுணர்வும், சூழலும் இணைந்து தனித்துவமிக்க உயிர்களை உருவாக்குகிறது.
இப்படி உயிர்கள் அனைத்தும் தனித்துவமிக்கதாக உருமாற லட்சக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கலாம். சூரியனிலிருந்து தெறித்து விழுந்த இந்தப் பூமியில் உயிர்கள் தோன்ற கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின என்றால் உயிர்களின் பரிணாமவளர்ச்சிக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இந்தப் பரிணாமவளர்ச்சியில் தான் ஒவ்வொரு உயிரும் தான் உயிர்வாழ்வதற்கான தனித்துவமிக்க உடல் உயிரியக்கத்தைப் பெற்றன. சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னால் தான் மனிதகுலத்தின் மூதாதை தோன்றியிருக்கிறாள். இந்தக் கதையெல்லாம் எதற்கென்றால் பூமியிலுள்ள உயிர்கள் அனைத்தும் மனிதன் உட்பட தனித்துவமிக்கவை. எனவே இந்தத் தனித்துவமிக்க உயிர்களின் தனித்துவமிக்க நோய்களுக்குத் தனித்துவமிக்க மருத்துவமுறை வேண்டும்.
தனித்துவமிக்க மனிதனின் தனித்துவமிக்க உடல் உயிரியக்கம் தனித்துவமிக்க நோய்களையே உருவாக்கும். இந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டு மருத்துவம் செய்யும்போது அந்தத் தனித்துவமிக்க நோய் விரைவாகக் குணமாகிறது. அந்தத் தனித்துவமிக்க மனிதனின் நலம் மீட்கப்படுகிறது. ஆக குமாருக்கும் ஆனந்துக்கும் காய்ச்சல் வந்ததென்றால் இரண்டுபேரின் நோயும் ஒன்றல்ல. அதாவது குமாருக்கு வந்த காய்ச்சல் குமார் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். அதேபோல ஆனந்துக்கு வந்த காய்ச்சல் ஆனந்த் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்?
குமாருக்குக் குளிரும் உடல்வலியும் அதனால் அசையமுடியாமையும் தாகமின்மையும் உடல்முழுவதும் சூடாகவும் இருக்கிறது. ஆனால் ஆனந்துக்கு தலையும் கால்களும் சூடாக இருக்க, உடல்வலியினால் புரண்டுகொண்டே இருக்கிறார் தண்ணீர் தாகமும் அடிக்கடி எடுக்கிறது. அப்படியானால் இரண்டு காய்ச்சலும் ஒன்றாகுமா? நாம் இருவருக்கும் ஒரே மருந்தைக் கொடுக்கலாமா?
இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
நலம் காக்க… மீண்டும் தொடர்வோம்.
Tuesday, 23 October 2012
டெங்குக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து
தமிழகமெங்கும் அபரிமிதமான மின் தட்டுப்பாட்டைப் போல டெங்குக் காய்ச்சலும் தினசரி பேசும் பொருளாகி விட்டது. இரண்டுமே அரசு இயந்திரத்தின் கையாலாகாத்தனத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் லாவணி பாடிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போது அரசியல்வாதிகள் உன்னால தான் தீப்பிடிச்சது..உன்னால தான் தீப்பிடிச்சது..என்று தீயை அணைக்கப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை ஒருவருக்கொருவர் விசிறியடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக கூர்மை தீட்ட வேண்டிய ஊடகங்களோ மக்களிடம், சிக்கனமாக மின்சாரத்தைச் செலவழிப்பது எப்படி? என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அம்பானியிடம் போய்ச் சொல்லவேண்டும் மின்சாரத்தைச் சிக்கனமாக செலவு செய் என்று. அரசு விழாக்களில் மின்சாரத்தைச் சிக்கனமாக செலவு செய்யச் சொல்லவேண்டும். பன்னாட்டுக் கம்பெனிகளிடம் போய்ச் சொல்லவேண்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவு செய் என்று. ஆனால் சாமானியர்களிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது சுலபமல்லவா? ஏதோ தன் வீட்டில் இருக்கிற ஃபேன், டி.வி., ஃபிரிட்ஜ், நாலைந்து லைட்டுகளால் தான் இந்த மின் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கூடங்குளம் மின் ஆற்றல் வந்தாலும் அது சாமானியர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தான் போய்ச் சேரப் போகிறது. டெங்கு என்ன திடீரெனவா வந்து விட்டது? பொதுச்சுகாதாரம் பற்றிய அரசின் அக்கறையின்மை, கழிவுநீர் வாய்க்கால்கள், ரோடுகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர், என்று பல காரணங்கள் இருக்கின்றன. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் டெங்குக் கொசுக்களுக்கு உணவாக யார் மாட்டுகிறார்கள். சாதாரண மக்கள் தானே. அதற்கும் மக்களையே குறை சொல்வது நல்ல தந்திரம். சுகாதாரம் பற்றி மக்கள் அறியாமையிலிருந்தால் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியது யார் கடமை? இப்படிக் கேள்விகள் ஆயிரம் இருந்தாலும் வந்து விட்ட ஆபத்தை எதிர்கொள்வது எப்படி அது தான் இப்போதைய முதல் கேள்வி.
ஹொமியோபதி மருத்துவத்தில் டெங்கு, சிக்கன் குனியா, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று எல்லா நோய்களுக்கும் தடுப்பு மருந்துகளும், நோய் குணமாக மருந்துகளும் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் பகுதியில் டெங்குவின் பாதிப்பு இருக்குமானால் கீழ்க்கண்ட மருந்துகளை ஹோமியோபதி மருந்துக் கடைகளில் வாங்கி நீங்களும் சாப்பிடலாம். மற்ற நண்பர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், கொடுக்கலாம். அலோபதி மருந்துகளைப் போல எந்தப் பக்கவிளைவுகளும் கிடையாது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
1. EUPATORIUM PERFOLIATUM – 200 C - 1 DRAM PILLS இந்த மருந்துகளை தினமும் காலை ஒரு மருந்தும் மாலை ஒரு மருந்தும் மூன்று
2. RHUSTOX -200C - 1 DRAM PILLS உருண்டைகளை மூன்று தினங்கள் மட்டும்சாப்பிட டெங்கு வராது.
Thursday, 6 September 2012
உடலின் சொற்கள்
உதயசங்கர்
உயிருள்ள ஒவ்வொரு உடலும் பேசுகிறது. எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கிறது. அதன் மொழி பலருக்குப் புரியவில்லை. புரியவில்லையே என்ற கவலையும் இல்லை. அதனால் அதன் வார்த்தைகளின் அர்த்தம் தெரியவில்லை. அதனால் அதை அலட்சியம் செய்கின்றனர். அப்படியொன்றும் யாருக்கும் புரியாத மொழியில் உடல் பேசுவதில்லை. ஆனால் நாம் அந்த மொழி மருத்துவருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறோம். அதனால் மீண்டும் மீண்டும் நம்முடைய உடல் கதறியும் கேட்காமல் மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை உட்கொண்டு உடலும், உயிரும் பாதிக்க, ஆண்டி பயாட்டிக்குகளையும், வலி நிவாரணிகளையும், ஆண்டி செப்டிக்குகளையும், இன்னும் சில சமயங்களில் ஸ்டிராய்டுகளையும் உட்கொள்கிறோம். ஏனெனில் நாம் அவசரமாக வாழ்கிறோம். அவசரத்தில் வாழ்கிறோம். அதனால் நம் உடலின் சொற்களைக் கேட்பதற்கு அவகாசமில்லை. நம்முடைய குழந்தைகளையும் அவ்வாறே பழக்குகிறோம். தூங்கியும் தூங்காமலும் காலை ஆறு மணிக்கு எழுப்பி ஏழு மணிக்குள் எல்லாகாலைக்கடன்களையும் முடித்து குளித்து சாப்பிட்டு ஏழு ஏழரை மணிக்கு ஸ்கூல் வேனுக்குள்ளோ, ஆட்டோவுக்குள்ளோ, ஸ்கூல் பஸ்ஸிலோ, திணித்து அனுப்பி விடுகிறோம். மாலையில் குழந்தை வந்ததும் ஸ்கூல் ஹோம் ஒர்க், படிப்பு, பின்னர் தூங்கிக் கொண்டே உணவு, அப்படியே உறக்கம். மறுபடியும் காலை ஆறு மணிக்கு எழுந்திரிக்க வேண்டும். இயந்திரமாய் நாமும் மாறி குழந்தைகளையும் இயந்திரமாய் மாற்றுகிறோம். பின்பு சலித்துக் கொள்ளவும் செய்கிறோம். என்ன படிச்சு என்ன செய்ய ஃபர்ஸ்ட் ரேங்க் வரமாட்டேங்கானே, எப்ப பாரு செகண்ட் ரேங்க், இல்லன்னா தேர்டு ரேங்க், காலையில ஒரு அஞ்சு மணிக்கு எந்திரிச்சிப் படிச்சான்னா அடுத்த பரீட்சையிலயாவது ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கலாம், மெமரி பிளஸ் டானிக் வாங்கிக் கொடுக்கணும், இந்த மாதிரியான உரையாடல்களை எங்கும் கேட்கலாம். இதெல்லாம் மூன்று, நான்கு வயது குழந்தைகளைப் பற்றி என்று நினைக்கும் போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை.
மூன்று வயதுக்கு முன்னால் மட்டும் என்னவாம்? குழந்தைகளைப் பற்றி அவர்களுடைய உடல் மொழியைப் பற்றி என்ன தெரியும் நமக்கு. கொடுத்த உணவு ஒவ்வாததினால் உடல் அந்த ஒவ்வாத உணவின் ஒரு துளியும் உள்ளே தங்கி விடக்கூடாதென்று முயற்சிக்கிறது. ஏனெனில் உள்ளே தங்கி விடும் அந்த உடலுக்கு ஒவ்வாத உணவு விஷமாகி விடும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்தே உடலும், உடலின் செயல்களை ஒருங்கிணைக்கும் உயிராற்றலும் மிக விரைவாக செயல்படுகிறது. வயிற்றைச் சுத்தம் செய்ய வயிற்றாலை என்ற அறிகுறியை உருவாக்குகிறது. இந்த வயிற்றாலை என்ற அறிகுறி தான் உடலின் எச்சரிக்கை. இனி இந்த மாதிரி கெட்டுப்போன, ஒவ்வாத உணவைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லும் உடல்மொழி. ஒரு நாலைந்து முறை வயிற்றாலை போனால் போதும் உடனே தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் செல்ல அவர் அவருக்குத் தெரிந்த மருத்துவமொழியில் ( அதுவும் யாருக்கும் புரியாது) மலச்சிக்கலை உருவாக்கும் மருந்தை எழுதிக் கொடுத்து வயிற்றாலையை நிறுத்துகிறார். இப்போது குழந்தையின் வயிற்றாலை நோய் சரியாகி விட்டது. பெற்றோர்களுக்குச் சந்தோஷம். ஆனால் இப்போது குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை. வெளியே போய் நான்கு நாட்களாகி விட்டது. குழந்தையின் சுறுசுறுப்பு குறைந்து விட்டது. தூக்கு மறுபடியும் மருத்துவரிடம். இப்போது மருத்துவர் குழந்தை வெளியே போவதற்காக மலமிளக்கியையும், பசித்துச் சாப்பிட டானிக்குகளையும் எழுதிக் கொடுக்கிறார். சிரத்தையுடன் பெற்றோர் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய அறியாமையினால் குழந்தைக்கு தேவையில்லாத மருந்துகளை கொடுத்து அதன் உடலியக்கத்தில் ஊறு விளைவித்து ஒவ்வாத உணவின் விஷம் உடலில் தங்கி விடும்படி செய்து விட்டார்கள். மருத்துவரும் பணம் சம்பாதித்துக் கொண்டார்.
அப்படியானால் என்ன செய்ய வேண்டும். வயிற்றாலை போவதற்கு ஒவ்வாத உணவு தான் காரணமென்றால் நாலைந்து முறை தண்ணீராய் வெளியே போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உடலில் நீர்ச்சத்து குறையாமலிருக்க உப்பும் சர்க்கரையும் கலந்த நீரும் எளிய உணவும் ஓய்வும் போதுமானது. உயிராற்றல் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தானே சரி செய்து கொள்ளும். மீண்டும் உடல் முழு ஆரோக்கியத்தோடு புத்துணர்ச்சி பெற்று விடும். இல்லையெனில் ஒத்த மருந்தின் விதிப்படி நலமாக்கலை உருவாக்கும் ஹோமியோபதியில் நலம் பெறலாம். குழந்தைகளுக்கு வருகின்ற பெரும்பாலான நோய்கள், செயற்கையான டப்பா உணவுப்பொருட்கள், சாக்லேட், பிஸ்கட்டுகள், நம்முடைய சீதோஷ்ணநிலைக்கு ஒவ்வாத ஆடைகள், உடலின் வளர்ச்சிப்போக்கில் ஏற்படும் சிறு சிறு உபாதைகள், இவற்றில் பல உபாதைகள் மருத்துவமனைக்குச் செல்லாமலே குணமாகி விடக்கூடியவை தான். செயற்கையான டப்பா உணவுப்பொருட்களில் அது கெட்டுப்போய் விடாமலிருப்பதற்காக கலந்திருக்கும் வேதியல் பொருட்கள் குழந்தையின் நலத்தை பாதிக்கும். மாவுப்பொருள் மட்டுமேயான பிஸ்கெட்டுகள் மலத்தை இறுக்கும். சாக்லேட்டுகளில் உள்ள கொக்கோ அதிக அளவில் உடலில் சேரும்போது பற்களில் சொத்தையும், வயிற்றில் புழுக்களும் வளர ஏதுவாகும். அது மட்டுமல்ல அதிகமாகச் சாக்லேட் தின்னும் குழந்தைகளுக்கு பிடிவாதகுணமும் அதிகமாகும்.
பெரியவர்களுக்கும் கூட பொருந்தக்கூடியவை தான். நம்முடைய உணவுப்பழக்கவழக்கங்களில் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமே இன்று சர்க்கரைநோய், புற்றுநோய், இருதயத்தாக்கு, ரத்தக்கொதிப்பு, போன்ற நோய்கள் அதிகமாகிக் கொண்டே வருவதற்குக் காரணம். லாபம் ஒன்றே குறி என்ற முதலாளித்துவ சிந்தனை விவாசாயம் தொடங்கி பரவலாக எல்லா உற்பத்திப்பொருட்களின் சூட்சுமமாகி விட்டது. பொதுநலத்தின் எல்லைகள் சுருங்கி சுயநலத்தின் வெளி விரிந்து கொண்டேயிருக்கிறது. அதனால் மருத்துவமனைகளும் ஸ்பெஷலிஸ்டுகளும் பெருகி வருகிறார்கள். உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிற ஸ்பெஷலிஸ்டுகள், ஹார்ட் ஸ்பெஷலிஸ்டுகள், ஸ்கின் ஸ்பெஷலிஸ்டுகள், கிட்னி ஸ்பெஷலிஸ்டுகள், குடல் ஸ்பெஷலிஸ்டுகள், கைகால் ஸ்பெஷலிஸ்டுகள், நரம்பு ஸ்பெஷலிஸ்டுகள், மனநல ஸ்பெஷலிஸ்டுகள், நுரையீரல் ஸ்பெஷலிஸ்டுகள், பின்னர் இருக்கவே இருக்கிறார்கள் கண், காது,மூக்கு,தொண்டை, பல் ஸ்பெஷலிஸ்டுகள், கிட்டத்தட்ட நமது உடலை ஸ்பேர்பார்ட்ஸ் கடையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். மனிதனை முழுமையாக உடலும், மனமும் சேர்ந்த, உயிராற்றல் மிக்க ஒரு உயிராக ஆங்கில மருத்துவம் பார்ப்பதில்லை.
ஆனால் எப்போதெல்லாம் நமது உயிராற்றல் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அது உடலின் வழியாகப் பேசுகிறது. ஒரு இடத்தில் அடி பட்டால் வலி என்ற உணர்வை ஏற்படுத்தி நம்முடைய உடலின் பாதுகாப்புமையத்துக்கு அவசர உதவி கேட்டு செய்திகள் பறக்கின்றன. அடிபட்ட இடத்தில் சிதைந்த செல்களையும், இறந்த திசுக்களையும் வெளியேற்ற வேண்டும். லேசாக ரிப்பேர் ஆன செல்களைச் சரி செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? அடி பட்ட இடம் அப்படியே எந்த மாற்றமுமின்றி இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நாம் ஓய்வு எடுப்போமா? அதனால் அந்த இடம் வீங்குகிறது. வலி என்ற உணர்வு நீடிப்பதன் மூலம் அடிபட்டவரை அசையாமல் இருக்க வைக்கிறது. பாதுகாப்புப்படை தங்களுடைய மருத்துவ அணியுடன் சென்று தங்களுடைய வேலை முழுமையாக நடப்பதற்காக, உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அடிபட்ட இடம், அடியின் ஆழம் அடிபட்டவரின் ஆரோக்கியம் இவற்றைப் பொறுத்து காயமோ, வீக்கமோ ஆறுகிறது. இறந்த செல்களும் திசுக்களும் சீழாக வெளியேறும். அந்த இடத்த்தில் புதிய செல்களும், திசுக்களும் உருவான பிறகு முதலில் கரடு முரடான பூச்சு போல மேல் பொருக்கு உருவாகி கீழே உள்ள புண்ணைப் பாதுகாக்கும். கீழே உள்ள புண் ஆறியதும் பட்டுத்துணி போல காயம் தழும்பாக மாறி விடும். இதையெல்லாம் நம் உடலின் மருத்துவரே எந்த மருத்துவப்படிப்பும் படிக்காமலேயே செய்கிறார். அவருக்குத் தெரியும் எந்தக்காயம் அவரால் ஆற்றக் கூடியது. எதற்கு வெளியிலிருந்து உதவி தேவைப்படும் என்று. அதற்குத் தகுந்த மாதிரி அவர் உடலை இயக்குவார். அதேபோல காய்ச்சலோ தலைவலியோ நோய்களல்ல உடலின் பாதுகாப்புப்படையின் தரும் சமிக்ஞைகள். அதாவது சிக்னல்கள். அந்த சிக்னல்களைப் புரிந்து கொண்டு எதன் காரணமாகத் தலைவலி வந்ததோ அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறும் தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் அது தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
எல்லா உடல் உபாதைகளுக்கும் காரணம் இருக்கும். பிறவியில் ஏற்படும் நோய்களைத் தவிர தீவிர நோய்கள் என்று சொல்லக் கூடிய அவ்வப்போது வந்து போகக்கூடிய நோய்களுக்குக் காரணம் இருக்கும். உதாரணத்துக்கு நல்ல கோடைகாலத்தில் தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக காற்றோட்டமில்லாத செயற்கை நூலிழைகளில் தயாரிக்கப்பட்ட இறுக்கமான சட்டையை தாங்கள் வெளியே செல்லும்போது குழந்தைக்கு அணிவிக்கிறார்கள். குழந்தை வெப்பம் தாங்கமுடியாமல் வீரிடுகிறது. ஆனால் பெற்றோருக்குப் புரிவதில்லை. அழ அழ அந்தக் குழந்தையோடு மல்லுக்கட்டி வெளியே போய் விட்டு வீட்டிற்கு வந்து சட்டையைக் கழட்டிப் பார்த்தால் உடலெங்கும் திட்டு திட்டாய் கன்னிப் போயிருக்கிறது. உடனே மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள். அவர் கொடுக்கும் மருந்துகளை குழந்தைக்குக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து குழந்தைக்கு சிறிதளவு வெப்பத்தையும் தாள முடியாமல் உடல் உபாதையால் துன்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்ல நேரிடுகிறது. குழந்தையின் உடல்மொழியை பெற்றோர் அறிந்திருந்தால் குழந்தைக்கு இத்தகைய துன்பம் நேரிடுமா?
குழந்தையின் உடல் நலத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவர்களுக்கு அடிக்கடி மருந்துகளைக் கொடுக்காமலிருப்பது நல்லது. சின்னச் சின்ன தானாகவே சரியாகிவிடும் உடல் உபாதைகளுக்கெல்லாம் மருத்துவர், மருந்து என்று பழக்கப்படுத்துவதினால் இரண்டு விதமான பாதிப்புகள் நேரலாம். உடலின் இயற்கையான பாதுகாப்புபடையிலும், உடல் மருத்துவரையும் வெளியிலிருந்து தொடர்ந்து உடலுக்குள் வந்து கொண்டேயிருக்கும் மருந்துகள் ஊனப்படுத்திவிடும். ஊக்கமுடன் செயல்பட விடாமல் எப்போதும் வெளியிலிருந்து உதவியை எதிர்பார்க்கும் நிலைமையை உருவாக்கி விடும். அதாவது இயற்கையான நோயெதிர்ப்புசக்தி குன்றி விடும். இதனுடைய இன்னொரு விளைவு குழந்தை தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டேயிருக்கும்போது மனதளவிலும் பாதிக்கப்படும். ஒருவிதமான மருந்தடிமையாக மாறி விடும் அபாயமும் உள்ளது. தான் ஒரு நிரந்தரமான நோயாளி என்றும் எப்போதும் மருந்துகள் எடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்றும் தோன்றி விடும். எந்தச் சிறிய உடல் உபாதைகளையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இல்லாமல் போகும்.
எனவே பெற்றோர்களுக்கு எது நோய்? எது நலம்? எந்த நோய்க்கு மருத்துவரை அணுக வேண்டும்? எந்த நோய்க்கு மருந்துகள் எடுக்க வேண்டும்? எந்ததெந்த உடல் உபாதைகளுக்கு மருத்துவரோ, மருந்துகளோ தேவையில்லை என்ற ஞானம் வேண்டும். அப்போது தான் எதற்கெடுத்தாலும் மருத்துவமனையை நோக்கி எடுக்கும் படையெடுப்பை நிறுத்த முடியும். குழந்தைகளும் மருந்துகளின் டானிக்குகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவார்கள். இயற்கையான நலமுள்ள குழந்தைகளாக வளருவார்கள்.
Wednesday, 8 August 2012
ஆரோக்கியமும் மருத்துவமும்
உதயசங்கர்
மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம் தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவமுறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவமுறைகளான அக்குபஞ்சர், அக்குப்பிரசர் மருத்துவம் என்று மருத்துவமுறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நினைவில் வருவது ஆங்கில மருத்துவமுறை மட்டும் தான். அது மட்டுமல்ல ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் நாட்டு வைத்தியம் என்று பொதுப்படையான பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். எப்படி நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாகவும் நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கிலமருத்துவம் என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.
முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்கிற பொருட்கள் தான். கொசுக்களை ஒழிப்பதை விட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக்கொல்லிகளை விற்பனை செய்வது தான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ அதில் எல்லாம் தன் கை வரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி நம்மைத் தயாரிப்பதிலும் கில்லாடி. அதனால் தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காக தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறோம். அதுவும் குழைந்தைகளுக்கென்றால் கேட்கவே வேண்டாம். அங்கு மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே,( இது இப்ப ரெம்பப்பழசு ), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்கிறார். எல்லா டெஸ்டுகளையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்திருக்கிறது என்று பயமுறுத்தவும் செய்கிறார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பெற்றோர்களும் சாதாரண சளித்தொந்தரவை எம் பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் ( டானிக்குகளின் மீது அப்படி என்ன தான் மோகமோ ! ) ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?
குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயினால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளினாலும், டானிக்குகளினாலும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி தேவைக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் நம்முடையை உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும். அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம், ஆகியவற்றையும் பாதிக்கும். நாளாவட்டத்தில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி குறைந்து எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?
குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையினால் உருவாகிறது. குளிர், அல்லது வெப்பம் ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மன அழுத்தம், இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளை தவிர்த்தாலே நோய் வராது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மற்றும் மன அமைப்புடனே பிறக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம்தாங்கிகளாகவோ, குளிர்தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம்தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக் கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக் கொள்ளாது, இரண்டுமே ஒத்துக் கொள்ளாத குழந்தைகளும் உண்டு. மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக் கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ணநிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை உண்டுபண்ணும். பெற்றோர்கள் இவற்றையெல்லாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை. ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருக்களோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாதவர்களாக அதாவது குளிர்தாங்கிகளாக இருக்கும். அதேபோல ஒரு குழந்தை குளிர் காலத்தில் சளி, இருமல், தும்மல், என்று அதிகமான சளித்தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர்தாங்க முடியாததாக அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ணநிலையில் நன்றாக இருக்கும். மற்ற காலங்களில் ஏதாவது தொந்திரவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.
இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால் நம் உடலில் மாறுமை அல்லது நோய் வந்தால் அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு இருமல் வெளிக்காற்றில் ஒருவருக்கு வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும். இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ, கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால் நோய் என்னவோ இருமல் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, மருத்துவமுறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால் ஆங்கில மருத்துவ முறைக்கு தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளை தனித்துவமிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகின்றது. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவமிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.
சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதால் மருத்துவர்களும் மருத்துவ அறவுணர்வின்றி, மனிதாபிமானமின்றி, சக மனிதன் என்ற அநுதாபமின்றி, பணத்தைக் கறப்பதிலேயேக் குறியாக இருக்கின்ற அவலநிலை இருக்கிறது. இதனால் தேவையில்லாத டெஸ்டுகள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள், என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மருத்துவக்கல்வி தனியார் கைவசம் போனபிறகு ஒருவர் மருத்துவக்கல்வியை முடிக்க கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளை பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இது தான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எதுஎதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும் போதே கற்பித்திருந்தால் இத்தனை மருந்துக் கடைகளுக்கு வேலையிருக்காது. அதோடு நம்முடைய ஆதி மருத்துவமுறைகளை அரசாங்கம் ஆதரித்து அந்த மருத்துவமுறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சை செய்வேன் என்ற மந்தை மனோபாவத்தை விட்டு நம்முடைய மருத்துவ முறைகளுக்குப் போக வேண்டும். நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தை விட எளிமையானது. அதிக செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.
அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்ல வில்லை. அறுவைச் சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, மாற்று அறுவைச்சிகிச்சை, போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை. நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா, அல்லது ஆயுர்வேதம்,அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர், அல்லது அக்குபிரஷர், அல்லது ஆங்கில மருத்துவமுறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவமுறையே எதிர்காலத்தில் ஒரு வலுமிக்க சமுதாயத்தை உருவாக்கும்.
நன்றி – இளைஞர் முழக்கம்
புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா
