Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Wednesday, 3 September 2014

பதட்டநோயும் மானுட சமூகமும்

 

உதயசங்கர்

மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு காலங்காலமாக நோய்களினாலும், இனக்குழுச் சண்டைகளினாலும், இயற்கைப்பேரிடர்களினாலும், இறந்தவர்களை விட கடந்த நூற்றாண்டில் இறந்தவர்கள் அதிகம். கடந்த நூற்றாண்டில் தொடங்கிய அந்தத் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடந்த நூற்றாண்டில் வளர்ந்து வந்த முதலாளித்துவ நாடுகள் தங்களது வியாபாரச்சந்தையை விரிவுபடுத்துவதற்காக நாடுகளைப் பிடிக்க போர்களை நடத்தினர். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர். அப்போதிருந்து இப்போது வரை உலகமுழுவதும் மக்கள் நிரந்தரமான அச்சத்திலேயே வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, மதம், சாதி, பிரதேசம், என என்னென்ன வழிகளில் எல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்வை நிச்சயமின்மையின் கொடுங்கரங்களில் கொடுத்து விட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பெருந்துயரிலிருந்தும் மீண்டு மறுபடியும் இன்னொரு பெருந்துயரில் தங்கள் இன்னுயிரை விடுகின்றனர் மக்கள். சுழன்றடிக்கும் சுனாமி அலைகள் போல தொடர்ந்து நிரந்தரமான பயத்திலும், துன்பத்திலும் தள்ளப்பட்டுள்ள மக்கள் எப்போதும் பதட்டத்திலேயே இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

பதட்டநோயின் அறிகுறிகள்

பதட்டநோய் ஒரு வித மனதில் ஒருவித இறுக்கத்தை உருவாக்குகிறது. அதோடு ஒரு முட்டுச்சந்துக்குள் மாட்டிய உணர்வு, திசை தெரியாத வெளியில் தனியே இருப்பதான உணர்வு, உயிர்பயம், அடிவயிற்றில் வலி, மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சிலோ அடிவயிற்றிலோ பாரம், எப்போதும் பய உணர்வு, அழுத்தும் கவலைகள், எல்லாவிதமான பயங்கள் ( phobias ) அசுத்தத்தின் மீதான ஒவ்வாமையுணர்வு, என்று பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம். ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

சிக்மண்ட் ஃபிராய்ட் எல்லாவிதமான உளவியல் நோய்களுக்கும் பதட்டநோயே காரணம் என்று சொல்கிறார். பதட்டநோய் நாம் நினைப்பதை விட மிக நுட்பமாக, மிக வலிமையாக நமது ஆழ்மனதில் நுழைந்து நம்முடைய உடல் நிலைகளிலும், உளவியலிலும் பெரும் மாற்றங்களை உருவாக்க வல்லது. பதட்டநோயின் அறிகுறிகளென சொல்லப்பட்டிருப்பதை விட எண்ணிலடங்கா அவதாரங்களை எடுக்கக்கூடியது.

 

பதட்டநோயின் பரிணாமம்

வரக்கூடிய ஆபத்தை முன்னுணரும் மூளையின் எதிர்வினையே பதட்டநோய்வேராக இருந்திருக்க முடியும்.. பாலூட்டிகளின் மாறிக் கொண்டேயிருக்கும் மூளை வளர்ச்சியின் விளைவாகவும், அச்சுறுத்தல் அகற்றப்பட்ட பின்பும் ஞாபகச்சில்லுகளில் பதிந்து விட்ட அநுபவச்சிற்பங்களாகவும் பதட்டநோய் இருக்கிறது. பதட்டநோய் உயர்பாலூட்டி இனங்களில் பரிணாமவளர்ச்சி அடைவதற்கு முன்பே புதிய ( நியோ ) - பாலூட்டிகளின் மூளையிலே பதிந்திருக்கிறது. புதிய ( நியோ ) பாலூட்டிகளே பகுத்தறிவையும், முடிவெடுக்கும் குணாதிசயத்தையும் கொண்டிருந்தவை. அதனாலேயே மனிதமூளை தொழில்நுட்பம், சட்டதிட்டம், போன்ற நவீனப்பிரச்னைகளைத் தாங்குகிற சக்தியைப் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் ஊர்வனவும் தொல்பாலூட்டிகள் சந்தித்த பிரச்னைகளான ஆபத்தைத் தவிர்த்தல், போட்டி, இணைவிழைச்சு, போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று மூளைகளின் பரிணாமவளர்ச்சியும் ஒருங்கிணைந்தும் சுதந்திரமாகவும் இன்றைய உயர்நிலை பாலூட்டிகளான மனிதனிடம் செயல்படுகின்றன.

 

எது பதட்டநோய்?

பதட்டநோயை வரையறுப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஒரு வகையில் சாதாரண தற்காலிக உணர்ச்சிநிலை தான் பதட்டநோயாக மாறுகிறது என்று சொல்லலாம். உணர்ச்சிகளின்அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள உயிரியக்கம் மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு நடவடிக்கையே பதட்டம் என்று சொல்லலாம். அது ஒவ்வாத உணர்ச்சிநிலையாக இருக்கலாம். மிகச்சிறந்த சாதனைகளைத் தருவதற்கான நேர்மறையான ஊக்கசக்தியாகவும் பதட்டநோய் இருக்கக்கூடும். எந்தக் கட்டத்தில் ஒரு உணர்ச்சி நேர்மறையான பதட்டநோயாகவும், எதிர்மறையான பதட்டநோயாகவும் மாறுகிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். வாழ்க்கை சூழ்நிலைக்கு அல்லது நெருக்கடிக்கு பொருத்தமற்ற எதிர்வினையை உயிரியக்கம் எடுப்பதே இத்தகைய பதட்டநோய்க்குக் காரணம். இளமைக்காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வாழ்க்கை அழுத்தங்கள் பதட்டநோயைக் கட்டமைக்கின்றன.

 

பதட்டநோயின் வகைகள்

PicsArt_22-03-2014 09_06_07 PM

புறவயமாகவோ அகவயமாகவோ ஏற்படும் அழுத்தத்தினால் உணர்ச்சிநிலையில் உருவாகும் தற்காப்புநிலை உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். இது நீண்டநாள் நோயாகவும் மாறும். பதட்டநோயைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று விதமாக பிரிக்கலாம். பரம்பரையாக உயிரியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை. வாழ்வில் ஏற்பட்ட அநுபங்களினால் உளவியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை, சில குறிப்பிட்ட வாழ்வநுபவங்கள் அல்லது சம்பவங்களினால் ஏற்படும் குறிப்பிட்ட உளவியல் பாதிப்புக்கு இலக்காகும் தன்மை, இவற்றுள் கடைசியாக வகைப்படுத்தப்பட்ட பதட்டநோய் சமூகபயம், ஆட்கொள்ளப்படும் உளவெறி, குறிப்பிட்ட பயங்கள், பீதி, இவற்றின் காரணமாக உருவாகிறது.

மேலும் பல காரணங்களாக, சுயபாதுகாப்புக்கு ஆபத்து, மனசாட்சியின் நெருக்கடியின் விளைவாக தோன்றும் முரண்பாடு, கொள்கையில் தோல்வி, சுயமரியாதை இழப்பு, அன்றாடம் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அழுத்தங்கள், தவறான நம்பிக்கைகள், தவறான சிந்தனைகள், உடல் நோய்கள், சமூகமுரண்பாடுகள், பாலுறவு பிரச்னைகள், பேராசை, உளவியல் விபத்து, போன்றவையினால் பதட்டநோய் தோன்றும்.

 

பதட்டநோய் மருத்துவ வரலாறு

முதன்முதலாக வரலாற்றில் உளவியல்-உடற்கூறியல் நோய் மத்திய கால இஸ்லாமிய வரலாற்றில் பெர்சிய உளவியல் மருத்துவர்களான அகமது இபின் சாகுல் அல்-பல்கியும், காலி அப்பாஸும் இந்த நோயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்களே முதன்முதலாக ஒரு மனிதனது மனமும் உடலும் ஒன்றையொன்று பாதிக்கின்றது என்று கண்டுணர்ந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபிரான்ஸ் அலெக்சாண்டர் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தார். ஜார்ஜ் குரோட்டெக்குடன் ஏற்பட்ட தொடர்பினால் சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியல்-உடலியல் நோய்களைப் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு காட்டத்தொடங்கினார். அந்தக் காலத்தில் ஜார்ஜ் குரோட்டெக் உடல்நோய்களை உளவியல் சிகிச்சையின் மூலம் குணமாக்கும் சாத்தியங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.ஹோமியோபதியின் பிதாமகரான ஹானிமன் தன்னுடைய ஆர்கனான் நூலில் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நோயில் காணப்படும் எல்லாக்குறிகளையும் ( symptoms ) அதாவது உடற்குறிகளுடன் முக்கியமான மனக்குறிகளையும் ஒரு மருத்துவர் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அந்நோயை அழிக்கச் சரியான ஒத்த மருந்தை தேர்ந்தெடுக்க முடியும். அதாவது எந்த மருந்து இயற்கை நோய் தோற்றுவித்த உடற்குறிகளையும், மனக்குறிகளையும் நோயற்ற ஒருவரின் உடலில் தோற்றுவிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும், என்று அழகாக விவரித்துள்ளார். ஆக மனம் உடலையும், உடல் மனதையும் பாதிக்கவே செய்கிறது. பதட்டநோய் மனதில் ஏற்படும் நெருக்கடியினால் மட்டுமல்ல, உடலில் ஏற்படும் மாறுபாடுகளினாலும் வரும்..

கற்காலத்துக்கு முன்பிருந்தே உயிர்பயத்தினால் ஏற்பட்ட பதட்டநோய் மனித நாகரிகம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய விசுவரூபம் எடுத்திருக்கிறது. நவீன சமூகத்தின் சிக்கல்கள், இன்னும் மனிதனை பதட்டமுள்ளவனாக்கியிருக்கிறது. வேற்றுமையின்மை, ஏற்றதாழ்வின்மை, சமத்துவம், நிச்சயத்தன்மை, பாதுகாப்புணர்வு, வாழ்வுக்கான உத்திரவாதம், எல்லோருக்கும் சமவாய்ப்பு, என்று மானுட சமூகம் முன்னேறிச் செல்லும் போது தான் பதட்டநோய் மனிதர்களிடமிருந்து முற்றிலும் ஒழிந்து போகும்.

Tuesday, 2 September 2014

ஆசைராஜாவின் ஆசை

உதயசங்கர்Photo-0115

 

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவர் ஆசைப்பட்டார். அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே ஆசை கொண்டவர். அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தனர். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து ராஜாவிடம் கொடுத்தனர். இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அநுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச்சிறந்த உடைகள் அவரிடம் ஏராளமாய் இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்து விட்டது. அதேபோல உலகிலே மிகச்சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார். உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த உணவுப்பண்டங்களைச் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக் கொண்டுவந்து ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தனர். சிறிது நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்து விட்டது.

உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்து விட்டது. மிகச்சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகுநாள் நிற்க முடியவில்லை. ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிப்பிரதானிகள் கவலை கொண்டனர். உடனே நாடெங்கும் முரசறைந்து ஆசை ராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் முடித்துக் கொடுத்து நாட்டில் பாதியும் தருவதாக அறிவிப்பு செய்தனர்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லாமூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தனர். ஒவ்வொருத்தரும் விதம் விதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப்பொருட்கள், கலைப்பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தனர். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்து விடுகிறான். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான்.

ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான். அவனும் என்னவெல்லாமோ யோசித்துப்பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவர்சியைக் கலியாணம் முடிக்க முடியாமல் போய் விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான். அதைப்பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு.. “ என்று கேட்டாள். கடைசியில் அவனும் பாட்டியிடம் அவன் கவலையைச் சொன்னான். அவனுடைய பாட்டியும், “ அடக் கோட்டிக்காரப்பயலே இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக்கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.

அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்றுமுன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டு வந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லி விட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிப்பிரதானிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? “ என்று கேட்டனர். அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிப்பிரதானிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.

“ என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிப்பிரதானிகளும் ருசித்தனர்.

ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கலியாணம் முடித்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளியமரங்களை நட்டு வளர்த்தார். அதன்பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கி விட்டது.

கதை சொன்னவர் – டி.சந்திரலேகா/ மருதன்வாழ்வு

நன்றி- தமிழ் இந்து