Tuesday 13 November 2012

தத்துவத்தின் வறுமை

6a00e54fd47339883401675ef208c3970b-320wi

 

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி –7

உதயசங்கர்

 

நாகரீகமடைந்த மனிதகுலத்தின் எல்லாச்செயல்பாடுகளுக்குப் பின்னால் ஒரு தத்துவப்பின்புலமும் அரசியலும் இருக்கிறது. அந்தந்தக் காலகட்டத்தின் ஆளும்வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாக, அல்லது அதற்கு தொந்தரவில்லாத விதமாக தத்துவம் உருவாக்கப்படும். அந்தத் தத்துவத்தின் செயல்முறைத் திட்டமாக அரசியலும், அறிவியலும், இலக்கியமும், கலாச்சாரமும் உருவாக்கப்படும். ஆக அறிவியல் அது மருத்துவத்துறையாக இருந்தாலும் சரி, அணுசக்தித்துறையாக இருந்தாலும் சரி, அதற்குப் பின்னால் ஒரு தத்துவமும் அரசியலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

இன்றைய முதலாளித்துவ தத்துவத்தின் கூறுகளே இன்றைய மருத்துவத்திலும் இருக்கிறது. லாபவெறி கொண்ட மருந்துக் கம்பெனிகள், சேவையை மறந்த மருத்துவர்கள், பணம் பறிக்கும் நோக்கத்துடனேயே நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பல மருத்துவச்சிகிச்சைக் கோளாறுகளைப் பார்க்கிறோம். ஆனால் என்ன செய்வது சார்? அந்த மருத்துவ சிகிச்சை தானே மிகப்பிரபலமாக இருக்கிறது. நவீன சோதனைச்சாலைகளின் துல்லியமான முடிவுகள் கிடைக்கின்றன. உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய முடிகிறது. அவசரச்சிகிச்சை செய்ய முடிகிறது. எல்லாவற்றையும் விட அறிவியல் பூர்வமாக இருக்கிறது. என்று பல குழப்பங்கள் நமக்கு வருகிறது.

ஆங்கில மருத்துவத்துக்கென்று உள்ள தத்துவம் என்ன? ஏற்றத் தாழ்வு மிக்க இன்றைய சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் வறுமையை ஒழிப்போம் என்றே வாக்குறுதிகள் தருகிறார்கள். ஆனால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து வறுமை ஒழியவில்லை. ஒழியவில்லை என்பது மட்டுமல்ல அதிகமாகிக் கொண்டே போகிறது. வறுமைக்கான காரணம் என்ன என்று தெரிந்திருந்தாலும் தெரியாத மாதிரி இலவசங்களை அள்ளித் தெளிக்கிறார்கள். இந்த இலவசங்களால் வறுமை ஒழியாது என்று ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? செல்வம் ஒரு சிலரிடம் சேர்வதற்கானக் காரணம் என்ன? அந்தக்காரணத்தின் வேர் மூலமான தனியுடைமையைக் களைந்து செலவத்தை சமூகமயமாக்கினால் இந்த ஏழ்மையை ஒழித்து விட முடியும். ஆனால் முதலாளிகளுக்குச் சார்பான இன்னும் சொல்லப்போனால் முதலாளிகளால் நடத்தப்படுகிற இந்த அரசாங்கங்கள் காரணங்களை விட்டு விட்டு அதன் விளைவுகளான வேலையின்மை, வேலை இழப்பு, வறுமை இவற்றை ஒழித்து விடப் போவதாக முழக்கமிட்டுக் கொண்டே இருப்பது எத்தனை மோசடியோ அத்தனை மோசடியை ஆங்கில மருத்துவம் நோயாளிகளுக்குச் செய்கிறது.

மழையில் நனைகிறீர்கள். வீட்டுக்குப் போனதும் முதலில் தும்மல் வருகிறது. மூக்கிலிருந்து நீர் ஒழுகுகிறது. உடல் சூடு அதிகரித்து காய்ச்சல் வருகிறது. மருத்துவரிடம் போகிறோம். அவர் அனால்ஜசிக், ஆண்டி பயொடிக்ஸ், இருமல் இருந்தால் காஃப் சிரப் எழுதிக் கொடுக்கிறார். தும்மல், இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அவர் மருந்துகள் கொடுக்கிறார். ஆனால் இவை உண்மையில் நோய்களா? நோயின் அறிகுறிகளா? அல்லது நோயின் விளைவுகளா? ஆனால் இந்த விளைவுகளுக்கான காரணம் என்ன? திடீரென்று தானாக எந்த முகாந்திரமுமின்றி தும்மலும் காய்ச்சலும் வருமா? ஆக தும்மல், இருமல், காய்ச்சலுக்கான காரணம் மழையில் நனைந்ததினால் உடலில் ஏற்பட்ட ஒவ்வாமை. இந்த மழை ஒவ்வாமை தான் நோய். மற்றபடி தும்மல் இருமல் காய்ச்சல் எல்லாம் விளைவுகள். ஆங்கில மருத்துவம் விளைவுகளை மட்டுமே பார்க்கிறது. விளைவுகளை மட்டுமே சோதனைச்சாலைக் கருவிகளால் அளக்கிறது. விளைவுகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கிறது. அதையும் சரியாகச் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை.

கொசுக்களை ஒழித்து விட்டால் கொசுக்களினால் பரவும் நோய்கள் ஒழிந்து விடும். டெங்குவோ, மலேரியாவோ, சிக்கன்குனியாவோ விளைவுகள் தானே. காரணம் எது? நமது அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? கொசுக்களை ஒழிப்பதற்கான எந்தத் திட்டமும் போடாமல் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கொசு விரட்டிக் கம்பெனிகளும், கொசுக்கொல்லிக் கம்பெனிகளும் பெருகி விஷத்தன்மையுள்ள வேதியல் பொருட்களின் கலவையினால் அட்வான்ஸ்டு.. அட்வான்ஸ்டாக கொசுவைத் தேடிப்பிடித்து கொல்லும் விளம்பரங்களின் மூலம் புதிய சுவாசநோய்களை உருவாக்கி வருவது வேறுகதை. ஆக இது தான் ஆங்கிலமருத்துவத்தின் தத்துவ வறுமை. நோய் நாடி, நோய் முதல் நாடி நோக்காமல் நோயின் விளைவுகளை மட்டும் நோக்கி மருந்துகளைக் கொடுக்கும் அல்லது அந்த நோய் விளைவுகளுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் செயல்பாட்டினால் முழு மனித நலத்தை அதனால் ஒரு போதும் மீட்க முடியாது.

அதே போலச் சோதனைச்சாலை முடிவுகள். அதுவும் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதனால் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏற்கனவே சொல்லியிருந்ததைப் போல தனித்துவமிக்க மனிதனை எந்த காமன் டினாமினேட்டராலும் வகுத்து விடை சொல்ல முடியாது. ஆனால் சோதனைச்சாலையோ, மருத்துவ உபகரணங்களோ அதைத்தான் செய்கின்றன. அதாவது நாடித்துடிப்பு எழுபத்தியிரண்டு, ரத்த அழுத்தம் 120/80, சர்க்கரை அளவு 80/120 என்று பொதுமைப்படுத்துகின்றன.அதிலும் வித்தியாசங்கள் வேறு. ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மார்ஜின் வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு சோதனைச்சாலை முடிவுகளும் ஒவ்வொரு மாதிரி, ஒவ்வொரு மருத்துவ உபகரணங்களும் முன்னப்பின்ன, என்று எந்த தர்க்க நியாயமும் இல்லாத முடிவுகளை நவீனமாக நினைத்து அதன் அடிப்படையில் மருந்துகளைக் கொடுப்பதும் அதன் தத்துவ வறுமையைக் காட்டுகிறது.

மனித உடலியக்கத்தை ஒருங்கிணைந்த இயங்கியல் பூர்வமான இயக்கமாகக் கருதாமல் அதைச் சடப்பொருள் போலக் கருதி அறுவைச் சிகிச்சைகளை எந்தத் தார்மீக நெறிமுறையுமின்றி பயன்படுத்துவது. இதய அறுவைச்சிகிச்சை, பிரசவம், டான்சில், தைராய்டு, மூலம், கர்ப்பப்பை, சிறுநீரகக்கல், பித்தப்பைக் கல், குடல்புண், என்று சகலத்தையும் அறுத்து எறிந்து விட்டு தாங்கள் நோயைக் குணப்படுத்திவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்கிறது ஆங்கில மருத்துவ முறை.

மொத்தத்தில் எந்த அறநெறிமுறையுமின்றி நோயாளரின் உயிரைப் பகடைக்காயாக்கி பயமுறுத்தி, மிரட்டி, உயிர்ப்பயத்தை உருவாக்கி, வழிப்பறி செய்து வாழ்கிற ஆங்கில மருத்துவம் அப்படியே முதலாளித்துவ தத்துவத்தின் வறுமையைச் சுவீகரித்துள்ளது. மனிதசமூக சாரம் இல்லாத, மானுடமயமில்லாத எந்த மருத்துவ முறையையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதுவும் அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கோளாறு உள்ள ஆங்கில மருத்துவ முறை குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.

நலம்….காக்க…தொடர்வோம்

1 comment:

  1. ஹோமியோபதி பற்றிய அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு உதயசங்கர்

    ReplyDelete