Showing posts with label ஆங்கிலமருத்துவம். Show all posts
Showing posts with label ஆங்கிலமருத்துவம். Show all posts

Monday, 16 February 2015

ஆண்டிபயாட்டிக் அவசியமா?

antibiotics உதயசங்கர்

ஒரு வேடிக்கையான கதை ஒன்று இப்போது மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000 ஆம் ஆண்டில் ஒருவன் எனக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் அவனை இந்தப்பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர் கி.மு.1000 ஆம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து, என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள். கி.பி. 1850 களில் மாந்திரீகம் மூடபழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950 களில் கஷாயம் விஷம். இதோ சோதனைச்சாலைகளில் நிருபிக்கப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிடச் சொன்னார்கள். கி.பி. 1980- களில் மாத்திரைகள் போதுமானவையில்லை. இதோ நுண்ணுயிரிக்கொல்லி ( Antibiotics ) சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது கி.பி. 2000 ஆம் ஆண்டில் மறுபடியும் பச்சிலையையோ வேரையோ சாப்பிடச் சொல்கிறார்கள்!?. இந்தக் கதையிலுள்ள முக்கியமான விஷயம் மாற்றம் அல்ல. இயற்கைக்குத் திரும்புதலே மனித குலத்துக்கு இறுதியான வழி என்பது தான்.

இப்போது மழைக்காலம் ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல், என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ இரண்டோ நுண்ணுயிரிக்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். நாமும் அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிட்டது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே இந்தக் காய்ச்சல், சளி, தும்மல், இருமல், என்று புரிந்து கொள்வோம். இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் ( வைரஸ்கள் பாக்டீரியாக்கள் ) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் ரெட் அலர்ட் அலாரம். இந்த அலாரம் நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்கு தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம். நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விஷேசமான காரியம். ஒரு முறை நமது உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பையோடேட்டாவை தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்த தந்திரங்களையும் அதற்கு எதிராக தான் எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூட தன்னுடைய மெமெரியில் பதிவு செய்து கொள்ளும். ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால் போதும் உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத்தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிடும் கணப்பொழுதில். ஆனால் உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப்பற்றி நமது பாதுகாப்பு அமைப்புக்குத் தெரியுமுன்னே நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் அதை அழித்து விடும். அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப்பதிவுகளும் இருக்காது. அது மட்டுமல்லாமல் பிறகெப்போதும் அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும் போது வெளியிலிருந்து நுண்ணுயிரிக்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்குப் பலகீனமாகி விடும். தூண்டத்தூண்ட துலங்கும் விளக்கு போல தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.

நமது உடல் ஆரோக்கியமாக, முழுபலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் மூன்று பவுண்ட் அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றிக் கவலைப்படவில்லையென்றால் நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம். நாம் நோய்களுக்கு வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிக்கு என்ன தெரியும்? செக்குன்னு தெரியுமா? சிவலிங்கம்னு தெரியுமா? அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றி அதற்குத் தெரியாது. ஆக அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும் நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது. நமது உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள் உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று, போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி. அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பி யையும், நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்று நோய்க்கு எதிராகவும், செயல்படுகிறது. அதோடு அவை பாக்டீரிசியான் ( bactericions ) என்ற பொருளையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிரிக்கொல்லியாகச் செயல்படுகிறது.

இத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து வெளியிலிருந்து நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் கொன்று விடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லி மருந்துகளினால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக குறைந்தது ஆறு மாதங்களாகும். அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகளினால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் அவற்றினுடைய வலிமை அதாவது தற்காப்புத்திறன் கூடிக்கொண்டே போகிறது. எனவே வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிரிக்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேளைப்பளுவால் சில சமயம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலகீனமாகும்.

எனவே அனாவசியமாக நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிடக்கூடாது. மருத்துவர்களும் எல்லா வைரல் தொற்றுகளுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிட பரிந்துரைக்கக்கூடாது. அவசியமோ, கட்டாயமோ இருந்தால் மட்டுமே நுண்ணுயிரிக்கொல்லிகளை நோயாளர்களுக்குக் கொடுக்க வேண்டும்.. நோயாளரைப் பார்க்கும்போது சகமனித நேசத்தோடு அவரைக் குணப்படுத்த எந்த வகையான எளிய உடலுக்குத் தீங்கிழைக்காத மருந்துகளினால் குணப்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும். பதிலாக நோயாளரை பணங்காய்ச்சி மரமாக நினைக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாயக் கடமை

இயற்கையான எதிர்ப்புசக்தியை எப்படி அதிகரிப்பது? எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம் முக்கியமான காரணம். எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித சம உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புசக்தியைத் தூண்டி பாதுகாப்புப்படைக்கு பலத்தைத் தரும். அந்த பலத்தினால் எந்த தீயநுண்ணுயிரிகளையும் உயிராற்றல் அழித்து ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.

நன்றி- நலம்வாழ, தமிழ் இந்து

Tuesday, 13 November 2012

தத்துவத்தின் வறுமை

6a00e54fd47339883401675ef208c3970b-320wi

 

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி –7

உதயசங்கர்

 

நாகரீகமடைந்த மனிதகுலத்தின் எல்லாச்செயல்பாடுகளுக்குப் பின்னால் ஒரு தத்துவப்பின்புலமும் அரசியலும் இருக்கிறது. அந்தந்தக் காலகட்டத்தின் ஆளும்வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாக, அல்லது அதற்கு தொந்தரவில்லாத விதமாக தத்துவம் உருவாக்கப்படும். அந்தத் தத்துவத்தின் செயல்முறைத் திட்டமாக அரசியலும், அறிவியலும், இலக்கியமும், கலாச்சாரமும் உருவாக்கப்படும். ஆக அறிவியல் அது மருத்துவத்துறையாக இருந்தாலும் சரி, அணுசக்தித்துறையாக இருந்தாலும் சரி, அதற்குப் பின்னால் ஒரு தத்துவமும் அரசியலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

இன்றைய முதலாளித்துவ தத்துவத்தின் கூறுகளே இன்றைய மருத்துவத்திலும் இருக்கிறது. லாபவெறி கொண்ட மருந்துக் கம்பெனிகள், சேவையை மறந்த மருத்துவர்கள், பணம் பறிக்கும் நோக்கத்துடனேயே நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பல மருத்துவச்சிகிச்சைக் கோளாறுகளைப் பார்க்கிறோம். ஆனால் என்ன செய்வது சார்? அந்த மருத்துவ சிகிச்சை தானே மிகப்பிரபலமாக இருக்கிறது. நவீன சோதனைச்சாலைகளின் துல்லியமான முடிவுகள் கிடைக்கின்றன. உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய முடிகிறது. அவசரச்சிகிச்சை செய்ய முடிகிறது. எல்லாவற்றையும் விட அறிவியல் பூர்வமாக இருக்கிறது. என்று பல குழப்பங்கள் நமக்கு வருகிறது.

ஆங்கில மருத்துவத்துக்கென்று உள்ள தத்துவம் என்ன? ஏற்றத் தாழ்வு மிக்க இன்றைய சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் வறுமையை ஒழிப்போம் என்றே வாக்குறுதிகள் தருகிறார்கள். ஆனால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து வறுமை ஒழியவில்லை. ஒழியவில்லை என்பது மட்டுமல்ல அதிகமாகிக் கொண்டே போகிறது. வறுமைக்கான காரணம் என்ன என்று தெரிந்திருந்தாலும் தெரியாத மாதிரி இலவசங்களை அள்ளித் தெளிக்கிறார்கள். இந்த இலவசங்களால் வறுமை ஒழியாது என்று ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? செல்வம் ஒரு சிலரிடம் சேர்வதற்கானக் காரணம் என்ன? அந்தக்காரணத்தின் வேர் மூலமான தனியுடைமையைக் களைந்து செலவத்தை சமூகமயமாக்கினால் இந்த ஏழ்மையை ஒழித்து விட முடியும். ஆனால் முதலாளிகளுக்குச் சார்பான இன்னும் சொல்லப்போனால் முதலாளிகளால் நடத்தப்படுகிற இந்த அரசாங்கங்கள் காரணங்களை விட்டு விட்டு அதன் விளைவுகளான வேலையின்மை, வேலை இழப்பு, வறுமை இவற்றை ஒழித்து விடப் போவதாக முழக்கமிட்டுக் கொண்டே இருப்பது எத்தனை மோசடியோ அத்தனை மோசடியை ஆங்கில மருத்துவம் நோயாளிகளுக்குச் செய்கிறது.

மழையில் நனைகிறீர்கள். வீட்டுக்குப் போனதும் முதலில் தும்மல் வருகிறது. மூக்கிலிருந்து நீர் ஒழுகுகிறது. உடல் சூடு அதிகரித்து காய்ச்சல் வருகிறது. மருத்துவரிடம் போகிறோம். அவர் அனால்ஜசிக், ஆண்டி பயொடிக்ஸ், இருமல் இருந்தால் காஃப் சிரப் எழுதிக் கொடுக்கிறார். தும்மல், இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அவர் மருந்துகள் கொடுக்கிறார். ஆனால் இவை உண்மையில் நோய்களா? நோயின் அறிகுறிகளா? அல்லது நோயின் விளைவுகளா? ஆனால் இந்த விளைவுகளுக்கான காரணம் என்ன? திடீரென்று தானாக எந்த முகாந்திரமுமின்றி தும்மலும் காய்ச்சலும் வருமா? ஆக தும்மல், இருமல், காய்ச்சலுக்கான காரணம் மழையில் நனைந்ததினால் உடலில் ஏற்பட்ட ஒவ்வாமை. இந்த மழை ஒவ்வாமை தான் நோய். மற்றபடி தும்மல் இருமல் காய்ச்சல் எல்லாம் விளைவுகள். ஆங்கில மருத்துவம் விளைவுகளை மட்டுமே பார்க்கிறது. விளைவுகளை மட்டுமே சோதனைச்சாலைக் கருவிகளால் அளக்கிறது. விளைவுகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கிறது. அதையும் சரியாகச் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை.

கொசுக்களை ஒழித்து விட்டால் கொசுக்களினால் பரவும் நோய்கள் ஒழிந்து விடும். டெங்குவோ, மலேரியாவோ, சிக்கன்குனியாவோ விளைவுகள் தானே. காரணம் எது? நமது அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? கொசுக்களை ஒழிப்பதற்கான எந்தத் திட்டமும் போடாமல் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கொசு விரட்டிக் கம்பெனிகளும், கொசுக்கொல்லிக் கம்பெனிகளும் பெருகி விஷத்தன்மையுள்ள வேதியல் பொருட்களின் கலவையினால் அட்வான்ஸ்டு.. அட்வான்ஸ்டாக கொசுவைத் தேடிப்பிடித்து கொல்லும் விளம்பரங்களின் மூலம் புதிய சுவாசநோய்களை உருவாக்கி வருவது வேறுகதை. ஆக இது தான் ஆங்கிலமருத்துவத்தின் தத்துவ வறுமை. நோய் நாடி, நோய் முதல் நாடி நோக்காமல் நோயின் விளைவுகளை மட்டும் நோக்கி மருந்துகளைக் கொடுக்கும் அல்லது அந்த நோய் விளைவுகளுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் செயல்பாட்டினால் முழு மனித நலத்தை அதனால் ஒரு போதும் மீட்க முடியாது.

அதே போலச் சோதனைச்சாலை முடிவுகள். அதுவும் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதனால் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏற்கனவே சொல்லியிருந்ததைப் போல தனித்துவமிக்க மனிதனை எந்த காமன் டினாமினேட்டராலும் வகுத்து விடை சொல்ல முடியாது. ஆனால் சோதனைச்சாலையோ, மருத்துவ உபகரணங்களோ அதைத்தான் செய்கின்றன. அதாவது நாடித்துடிப்பு எழுபத்தியிரண்டு, ரத்த அழுத்தம் 120/80, சர்க்கரை அளவு 80/120 என்று பொதுமைப்படுத்துகின்றன.அதிலும் வித்தியாசங்கள் வேறு. ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மார்ஜின் வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு சோதனைச்சாலை முடிவுகளும் ஒவ்வொரு மாதிரி, ஒவ்வொரு மருத்துவ உபகரணங்களும் முன்னப்பின்ன, என்று எந்த தர்க்க நியாயமும் இல்லாத முடிவுகளை நவீனமாக நினைத்து அதன் அடிப்படையில் மருந்துகளைக் கொடுப்பதும் அதன் தத்துவ வறுமையைக் காட்டுகிறது.

மனித உடலியக்கத்தை ஒருங்கிணைந்த இயங்கியல் பூர்வமான இயக்கமாகக் கருதாமல் அதைச் சடப்பொருள் போலக் கருதி அறுவைச் சிகிச்சைகளை எந்தத் தார்மீக நெறிமுறையுமின்றி பயன்படுத்துவது. இதய அறுவைச்சிகிச்சை, பிரசவம், டான்சில், தைராய்டு, மூலம், கர்ப்பப்பை, சிறுநீரகக்கல், பித்தப்பைக் கல், குடல்புண், என்று சகலத்தையும் அறுத்து எறிந்து விட்டு தாங்கள் நோயைக் குணப்படுத்திவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்கிறது ஆங்கில மருத்துவ முறை.

மொத்தத்தில் எந்த அறநெறிமுறையுமின்றி நோயாளரின் உயிரைப் பகடைக்காயாக்கி பயமுறுத்தி, மிரட்டி, உயிர்ப்பயத்தை உருவாக்கி, வழிப்பறி செய்து வாழ்கிற ஆங்கில மருத்துவம் அப்படியே முதலாளித்துவ தத்துவத்தின் வறுமையைச் சுவீகரித்துள்ளது. மனிதசமூக சாரம் இல்லாத, மானுடமயமில்லாத எந்த மருத்துவ முறையையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதுவும் அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கோளாறு உள்ள ஆங்கில மருத்துவ முறை குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.

நலம்….காக்க…தொடர்வோம்

Monday, 12 November 2012

மருத்துவத்தின் தத்துவம்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி- 6

உதயசங்கர்Medicines-are-obtained-from-animals

 

மருத்துவம் என்பது எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடு தான். நாய், பூனை, போன்ற மிருகங்களைக் கவனித்துப்பார்த்தால் தெரியும். தனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் உணவெடுக்காது. அதோடு நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கி விட்ட விஷப்பொருளை கக்கி விடும். நாய்க்கு எப்படி அருகம்புல் தெரியும்? அதன் உள்ளுணர்வில் பதியப்பட்டுள்ள மருத்துவக்குறிப்பு ஞாபகத்தின் மேலாக அலையடித்து அதற்கு வழிகாட்டுகிறது. மனிதன் சமூகவயமாகும் போது கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்து விட்டான். வேலைப்பிரிவினைகள் உருவாகும் போது மருத்துவம், மந்திரம், சடங்குகளோடு இணைந்து விட்டது. மருத்துவம் மிக உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவதே பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது, ஆனால் எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப்போவதில்லை. பெரும்பாலும் கை வைத்தியமாக வீடுகளில் சாதாரண நோய்களைக் குணமாக்கி விடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி, என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு, உணவுப்பத்தியம், பச்சிலைச்சாறு, கஷாயம், சூரணம், என்று கொடுத்துக் குணப்படுத்தி விடுவார்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தது. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.

ஆனால் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. பலருக்கு ஆங்கில மருத்துவம் தவிர மற்ற மருத்துவமுறைகள் எல்லாம் நாட்டு வைத்தியம் தான். ஆங்கிலவைத்தியம் மட்டும் தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் கண்ட்ரி மெடிசின். நோயுற்ற மனிதனை நம்பாமல் சோதனைச்சாலை முடிவுகளின் அடிப்படையிலே மருத்துவம் செய்யும் ஆங்கிலமருத்துவம் நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது. என்ன சொல்ல? அதைப் பற்றி வேறொரு கட்டுரையில் பேசுவோம்.

எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.

தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் வாழ்க்கை பற்றிய விளக்கம். கண்ணோட்டம். உதாரணத்துக்கு இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்கு நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலானோர்கள் நினைக்கிறார்களே அது ஒரு தத்துவவெளிப்பாடு. இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவநோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய உணவுப்பழக்கம், உடை, இருப்பிடம், என்று எல்லாம் மாறியதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அந்த அரசு நிர்வாகத்தை நிர்மாணிக்கிறது. அதைச் செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது? அதன் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி, இவற்றைத் தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் எல்லோரையும் ஏமாற்றும். ஆனால் சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதிமூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. ஆனால் எல்லாத்தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்திலும் ஒரு தத்துவப்பார்வை இருக்கிறது. அது தான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவமுறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப்பார்வை கொண்டவை என்றால் ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாய் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால் அது பலிக்காது என்றும் நம்பப் பட்டது. மருத்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போல மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.

ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. அதற்குச் சந்தை தான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். மைதாஸின் மனநிலை கொண்ட அதன் லாபவெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையது என்பதால் அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தை தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே எல்லாருமே பண்டங்கள் தான். எப்படி மனிதர்களுக்காக பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ அதே போல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் உற்பத்தி செய்யும்.

உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன் தான் என்றாகி விட்டது. இது திட்டமிட்டு பணம் பறிப்பதற்கான செயலாக மாறி விட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிக்குப் பாதிப்பேருக்கு கர்ப்பப்பையை எடுத்து தூரப் போட்டாயிற்று. சமப்ந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாக தடுப்பூசிகளைப் போடச் செய்வது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து அவனை ஒரு இயந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது. எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வம் கொழிக்க பெரும்பான்மை மக்கள் தங்கள் உயிர், பொருள், ஆவி, அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப்பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை.

ஆனால் ஹோமியோபதியின் தத்துவப்பார்வை சமூகவயமானது. தெளிவான தத்துவநோக்கம் கொண்டது. எந்த மர்மங்களுமற்றது. இயற்கையின் விதிகளுக்கேற்ப செயல்படுவது, எளிமையானது, இனிமையானது, முழுமையான நலத்தை மீட்டுத் தருவது. பக்கவிளைவுகளற்றது. எனவே தான் ஹோமியோபதி மருத்துவம் புரட்சிகரமான மக்கள் மருத்துவமாக விளங்குகிறது. அது எப்படி என்று பின்னால் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

நலம் காக்க…தொடர்வோம்

Sunday, 11 November 2012

தலைமைச் செயலாளர்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி –5medicine

உதயசங்கர்

 

நம்முடைய உயிராற்றல் என்ற தலைமைச் செயலாளர் அல்லது மேற்பார்வையாளர் இருபத்திநான்கு மணிநேரமும் உடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். உடலின் மாறுபாடுகளுக்கேற்ப அவ்வப்போது உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். உடலிலுள்ள மற்ற உறுப்புகளின் சொற்களைக் கேட்கிறார். அவற்றின் நலம் அல்லது துயரைக் கவனித்து அதற்கேற்ப தன் உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே போல உடலின் உறுப்புகள் தரும் சமிக்ஞைகளுக்குக் கட்டுப்பட்டு தன் உத்திரவுகளை மாற்றவும் செய்கிறார். கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சமிக்ஞைகள், உத்திரவுகள், எதிர்வினைகள், செயல்கள் என்று மிகுந்த ஜனநாயக உணர்வுடன் நமது உயிராற்றலும் உடலும் இயங்குகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைகள் அனைத்தும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஜனநாயக ( CENTRALISED DEMOCRACY ) முறையிலேயே நடக்கும். தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளை மேலிருந்து கீழாகவும் கீழிலிருந்து மேலாகவும் ஜனநாயகபூர்வமான கருத்தொற்றுமை மூலம் தீர்மானிக்கிறார்கள். இது இயற்கையோடு இயைந்த நடைமுறை.

உயிராற்றலை மையம் என்று கொண்டால் அதற்கு அடுத்த வட்டத்தில் மனமும், அதற்கடுத்த வட்டத்தில் உடலின் முக்கியமான ஜீவாதாரமான உறுப்புகளும், அதற்கடுத்த வட்டத்தில் அவ்வளவாக முக்கியமில்லாத உறுப்புகளும் அதற்கடுத்த கடைசி வெளிவட்டத்தில் தோல் போன்ற மிகவும் முக்கியத்துவம் குறைந்த உறுப்புகளும் வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனால் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பு உயிரியக்கத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாதென்பதால் அதன் அதிர்வுகளை உயிராற்றல் மையத்திற்கு வெகு தூரத்திலுள்ள உயிரியக்கநோக்கில் மிகவும் முக்கியத்துமில்லாத தோலுக்குக் கடத்துகிறது.

சரி உயிராற்றல் ஏன் பாதிப்புக்குள்ளாகிறது?. நமது சீரில்லாத ஆரோக்கியக்கேடான, பல்வேறு நடவடிக்கைகளாலும், முறையற்ற, தீமையான மருந்துகளாலும், ஏற்றத்தாழ்வுமிக்க சமூகக் காரணிகளாலும், ( உணவு, நீர், காற்று, சுற்றுச்சூழல், குடும்பம், சமூகம், அரசியல் ) பாதிப்புக்குள்ளாகிறது. இந்தப் பாதிப்பை அப்படியே உயிராற்றல் வைத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அதனால் உயிராற்றலின் கடைசி வட்டத்திலுள்ள தோலுக்கு அந்தப் பாதிப்பைத் தள்ளி விடுகிறது. தோலில் சில பாதிப்புகள் ( கொப்புளங்கள், பருக்கள், கட்டிகள், நிறமாற்றம், அரிப்பு, ஊறல், காந்தல் ) ஏற்படுகின்றன. இவை உயிராற்றல் வெளித்தள்ளும் பாதிப்புகள் என்று நமக்குத் தெரியாததனால் நாம் தோல்நோய் நிபுணரைச் சென்றுச் சந்திக்கிறோம். அவர் கொடுக்கும் மருந்து, ஆயிண்மெண்ட், களிம்பு, என்று பல்வேறு வேதியல் கலவைகளைத் தடவி உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை, மீண்டும் உள்ளே தள்ளுகிறோம்.

சில காலம் கழித்து மூட்டுகளில் வலியோ, ஆஸ்த்மா துயரோ வருகிறது. இருக்கவே இருக்கிறார்கள் ஸ்பெஷலிஸ்டுகள். ஆர்த்தோ அல்லது நுரையீரல் நிபுணர்கள். அவர்களைச் சென்று பார்க்கிறோம். அவர்களும் நமக்கு வந்த தோல் வியாதியைப் பற்றிக் கவலைப்படாமல் ( ஏனென்றால் அது அவர்கள் வேலையில்லையே அதற்குத் தான் தோல் நோய் நிபுணர் இருக்கிறாரே ) இப்போதுள்ள ஆஸ்த்மாவுக்கோ, மூட்டு வலிக்கோ, மருந்துகள் தருகிறார். அதைச் சாப்பிட்ட சிறிது காலத்துக்குப் பிறகு இதயத்தில் வலி வருகிறது. இப்போது இதயநோய் நிபுணரைப் பார்க்கிறோம். அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து நம்மை எப்படியோ உயிரோடு (!) விட்டு விடுகிறார். யோசித்துப்பாருங்கள். உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை தவறான சிகிச்சைமுறையினால் உயிருக்கே ஆபத்தாக்கிக் கொண்டோம். அதில் இன்னொரு வேடிக்கை இப்படிப்பட்ட அறிவியல்பூர்வமற்ற மருத்துவமுறையை நாமெல்லோரும் ரெம்ப அறிவியல்பூர்வமான மருத்துவமுறையென்று கொண்டாடுகிறோம்.

நமது நாட்டில் உடல்நலமின்மையால் இறப்பவர்களில் ஐம்பது சதவீதமானவர்கள் தவறான மருத்துவச் சிகிச்சையினால் இறப்பவர்கள் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா இல்லையா? இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய அறியாமை. மருத்துவம் நமது பிறப்புரிமை என்ற ஞானம் இல்லாததால் அதை யாரோ விற்பன்னர்கள் சமாச்சாரமாக நினைத்து, அவர்களை கடவுளாக வழிபட்டு அவர்கள் கையில் நமது உடலையும் உயிரையும் ஒப்படைத்து விட்டு கையறு நிலையில் காசையும் தொலைத்து விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறோமே.

ஆதியிலிருந்தே இந்த மண்ணில் இருந்து வரும் மருத்துவ முறைகளை மாற்று மருத்துவமுறைகள் என்றும், பாதியில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ஏகாதிபத்திய ஆங்கில மருத்துவத்தை முதல் மருத்துவமாகவும் போற்றுகிறோமே. விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஆங்கிலேய மோகம் இன்னும் மறையவில்லை. அதற்குள் மறுபடியும் நம்மை அடிமை கொள்ள அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

நலம் காக்க…..தொடர்வோம்.

Wednesday, 8 August 2012

ஆரோக்கியமும் மருத்துவமும்

உதயசங்கர்

Mohan Das (63)

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம் தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவமுறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவமுறைகளான அக்குபஞ்சர், அக்குப்பிரசர் மருத்துவம் என்று மருத்துவமுறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நினைவில் வருவது ஆங்கில மருத்துவமுறை மட்டும் தான். அது மட்டுமல்ல ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் நாட்டு வைத்தியம் என்று பொதுப்படையான பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். எப்படி நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாகவும் நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கிலமருத்துவம் என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.

முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்கிற பொருட்கள் தான். கொசுக்களை ஒழிப்பதை விட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக்கொல்லிகளை விற்பனை செய்வது தான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ அதில் எல்லாம் தன் கை வரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி நம்மைத் தயாரிப்பதிலும் கில்லாடி. அதனால் தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காக தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறோம். அதுவும் குழைந்தைகளுக்கென்றால் கேட்கவே வேண்டாம். அங்கு மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே,( இது இப்ப ரெம்பப்பழசு ), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்கிறார். எல்லா டெஸ்டுகளையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்திருக்கிறது என்று பயமுறுத்தவும் செய்கிறார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பெற்றோர்களும் சாதாரண சளித்தொந்தரவை எம் பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் ( டானிக்குகளின் மீது அப்படி என்ன தான் மோகமோ ! ) ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?

குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயினால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளினாலும், டானிக்குகளினாலும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி தேவைக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் நம்முடையை உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும். அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம், ஆகியவற்றையும் பாதிக்கும். நாளாவட்டத்தில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி குறைந்து எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?

குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையினால் உருவாகிறது. குளிர், அல்லது வெப்பம் ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மன அழுத்தம், இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளை தவிர்த்தாலே நோய் வராது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மற்றும் மன அமைப்புடனே பிறக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம்தாங்கிகளாகவோ, குளிர்தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம்தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக் கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக் கொள்ளாது, இரண்டுமே ஒத்துக் கொள்ளாத குழந்தைகளும் உண்டு. மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக் கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ணநிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை உண்டுபண்ணும். பெற்றோர்கள் இவற்றையெல்லாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை. ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருக்களோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாதவர்களாக அதாவது குளிர்தாங்கிகளாக இருக்கும். அதேபோல ஒரு குழந்தை குளிர் காலத்தில் சளி, இருமல், தும்மல், என்று அதிகமான சளித்தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர்தாங்க முடியாததாக அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ணநிலையில் நன்றாக இருக்கும். மற்ற காலங்களில் ஏதாவது தொந்திரவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால் நம் உடலில் மாறுமை அல்லது நோய் வந்தால் அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு இருமல் வெளிக்காற்றில் ஒருவருக்கு வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும். இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ, கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால் நோய் என்னவோ இருமல் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, மருத்துவமுறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால் ஆங்கில மருத்துவ முறைக்கு தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளை தனித்துவமிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகின்றது. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவமிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.

சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதால் மருத்துவர்களும் மருத்துவ அறவுணர்வின்றி, மனிதாபிமானமின்றி, சக மனிதன் என்ற அநுதாபமின்றி, பணத்தைக் கறப்பதிலேயேக் குறியாக இருக்கின்ற அவலநிலை இருக்கிறது. இதனால் தேவையில்லாத டெஸ்டுகள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள், என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மருத்துவக்கல்வி தனியார் கைவசம் போனபிறகு ஒருவர் மருத்துவக்கல்வியை முடிக்க கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளை பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இது தான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எதுஎதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும் போதே கற்பித்திருந்தால் இத்தனை மருந்துக் கடைகளுக்கு வேலையிருக்காது. அதோடு நம்முடைய ஆதி மருத்துவமுறைகளை அரசாங்கம் ஆதரித்து அந்த மருத்துவமுறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சை செய்வேன் என்ற மந்தை மனோபாவத்தை விட்டு நம்முடைய மருத்துவ முறைகளுக்குப் போக வேண்டும். நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தை விட எளிமையானது. அதிக செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.

அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்ல வில்லை. அறுவைச் சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, மாற்று அறுவைச்சிகிச்சை, போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை. நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா, அல்லது ஆயுர்வேதம்,அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர், அல்லது அக்குபிரஷர், அல்லது ஆங்கில மருத்துவமுறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவமுறையே எதிர்காலத்தில் ஒரு வலுமிக்க சமுதாயத்தை உருவாக்கும்.

நன்றி – இளைஞர் முழக்கம்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா