Monday, 16 February 2026

காலமறிந்து பாடும் குயிலின் கானமாய்…

 

 காலமறிந்து பாடும் குயிலின் கானமாய்இனிமை தரும் குழந்தைப்பாடல்கள்




.    தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் முதலில் கதைகளும் பாடல்களும் வாய்மொழியாகவே இருந்தது. அப்போது தாலாட்டுப்பாடல்கள் மட்டுமே குழந்தைகளுக்கான பாடல்களாக இருந்தன. தாலாட்டுப்பாடல் வடிவிலிருந்தே குழந்தைப்பாடல்கள் தோன்றியிருக்கிறது. கவிமணி தேசியவிநாயகம் தொடங்கி வைத்த இலக்கியப்பாரம்பரியததை குழந்தைக்கவிஞர். அழ.வள்ளியப்பா உச்சத்துக்குக் கொண்டு சென்றார். 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இன்றும் குழந்தைகளின் நாவில் தவழ்கின்றன அழ.வள்ளியப்பாவின் பாடல்கள். தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலமாக அழ.வள்ளியப்பாவின் காலம் இருந்தது. அவர் காலத்தில் ஏராளமான குழந்தைக்கவிஞர்களும் உருவானார்கள்.

    அந்த வகையில் இன்றைய நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் குழந்தைப்பாடல்களை எழுதிக்கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. அவர்களில் முதன்மையானவராக நம் காலத்தின் கவிஞராக குருங்குளம்.முத்துராஜா இருக்கிறார்.

     குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு அசைச்சொற்களோடு இருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலடியோ ஈற்றடியோ எதுகை மோனையோடு இருக்க வேண்டும். இசைக்கு இசைவாக ஏகாரத்தில் முடிகிற சொற்களைத் தேர்வு செய்ய வேண்டும். பாடலாகப் பாடப்படுகிற இசைக்கோர்வை வேண்டும்.

    பாடல்கள் குழந்தைகளுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தவோ, உலக நடைமுறைகளைப் பற்றிய சித்திரங்களையோ, இயற்கையைப் பற்றிய காட்சிகளையோ,அறிமுகப்படுத்தலாம்.  அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளைப்பற்றியோ, எளிய கணிதம், அறிவியல், பற்றியதாக இருக்கலாம். வேடிக்கையாகவோ, விடுகதைப்பாடல்களாக, இருக்கலாம். மானுட அறம், பகுத்தறிவு, சமூகவிழிப்புணர்வு,உறவுகளின் மேன்மை குறித்தோ, பாடல்கள் இருக்கலாம். குழந்தைகளின் ஆர்வத்தைத்தூண்டும் கதைப்பாடல்களாகவோ, விளையாட்டுப்பாடல்களாகவோ, இருக்கலாம்.

    எளிய வார்த்தைகளை இசையுடனும் பொருளுடனும் கோர்க்கும் திறமை. ஏனெனில் குழந்தைகள் பாடல்களை விளையாட்டாய் பாடும்போதே முதலில் தாய்மொழியை தெரிந்து கொள்கிறார்கள். மொழிவளம் அவர்களுடைய மனதில் உரமாகிறது. அவர்கள் அதன் வழியே உலகை அறிந்து கொள்கிறார்கள்.

    இப்படி குழந்தைப்பாடல்களை எப்படி எழுதுவது என்பது குறித்து சில சிந்தனைகளிருந்தாலும் பெரும்பாலான நம் கவிஞர்களின் பாடல்களில் சில பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. கூறியது கூறல், அசைச்சொற்களின் சமமின்மை, இசையாகப் பாடுவதற்கு இயலாத சொற்சேர்க்கை என்று சொல்லலாம்.

    ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து கிழக்கின் சூரியனாக குருங்குளம் முத்துராஜா எழுகிறார். பாடுபொருளில் புதுமை, எளிய சொற்கள், கருத்துச்செறிவு, சமகாலத்தைப் பேசும் குரல், எதிர்காலத்தை உணர்த்தும் விதம், நகைச்சுவை, கதைப்பாடல், விடுகதைப்பாடல் என்று எல்லாவிதமான பாடல்களையும் அழகாகக் கோர்த்திருக்கிறார்.

    மொழியின் மீதான ஆளுமையே இத்தகைய எளிமையைக் கொண்டு வரும். குழந்தைகளுக்கு எதைக் கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்கவேண்டும் என்ற தெளிவே சமகாலத்தைச் சொல்ல வைக்கிறது.

நேற்றும் இன்றும் நாளையாகும்

நிலைப்பதில்லை எதுவும் புது

மாற்றம் இல்லா பழமைத்தனம்

மூடத்தனம் என்று அறிவோமே..

    இதை விட எளிதான சமூக இயங்கியலைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி சொல்ல முடியுமா? காட்சிரூபமாய் குழந்தைகளிடம் இயற்கை அறிமுகப்படுத்தும் பாடலாக பரங்கிக்காய் பத்தையாக நிலாவையும் சிதறிய அதன் விதைகளாக நட்சத்திரங்களையும் சொல்வது புதுமையான ஒன்று.

    மீண்டும் மீண்டும் ஒலிக்கும் வார்த்தைகளில் ஒரு தோலிசைக்கருவியின் இசையைக் கொண்டு வரும் பாடலாக.நாட்டு நாட்டு என்று தொடங்கும் பாடல் அமைந்துள்ளது. அதன் கடைசிவரிகளில்,

ஏழைபடும் பாடுஅதை

உடைத்தெறியப் பாடுபடு

கவிஞரின் சமூகப்பார்வை புலப்படுகிறது. இன்னொரு பாடலில்,

இருப்பதெல்லாம் பகிர்ந்து கொடுக்கும்

கருவி ஒண்ணு செய்யணும்

எவரும் இங்கே பட்டினியால்

சாகாமல் தடுக்கணும்

என்று சொல்கிறார். மூடநம்பிக்கைகளை குழந்தைகளிடம் சொல்வதற்காக,

பல்லியோட பல்லி பேச

பளீச் என்று கத்துது

பகுத்தறிய வேணும் இதில்

பலன் என்ன இருக்குது?

என்ற கேள்வியை முன்வைப்பதாகட்டும்.

வலிமையாலே காட்டாட்சி

நடத்தியது போதும் இங்கே

எளியவர்க்கும் ஆட்சியிலே

சரிபங்கு வேண்டும்

ஒரே காடு ஒரே அரசன்

உருப்படாது ஓடு

இனத்துக்கொரு தலைவன் இனி

இது எங்க காடு

    என்று சொல்லும்போது சமகாலம் நம் கண்முன்னால் ஓடுகிறது. ஒரு திருமணத்தில் என்னவெல்லாம் பார்க்கப்படுகிறது என்பதையும் அவற்றை நிராகரிக்கும் விதமாகவும் பூனை கலியாணக்கதைப் பாடல் நகைச்சுவையாகச் சொல்கிறது.

    குமாரோட காரு பாடலில் குழந்தைகள் எப்படி காரோட்டுகிறார்கள் என்பதைச் சொல்லும் பாடல். நுட்பமான வார்த்தைகளில் விவரிக்கிறார் முத்துராஜா. சந்தைக்கு வரும் விலங்குகள் இந்த உலகம் எங்களுக்கும் சொந்தம் தான் என்று சொல்வதாக அமைந்த பாடல் பூமிப்பந்தில் அனைத்துயிர்களும் சமமென்பதைச் சொல்கிறது.

    குளத்தில் தட்டைச்சில்லு எறியும்போது தோன்றும் வட்ட வட்ட அலைகளைத் தோசை என்கிறார் கவிஞர். அந்தத் தோசைகளை எண்ணிமுடிக்கும்முன்பே மறைந்துவிடுவதாக முடிக்கும்போது நமக்கு காடியின் அழகியல் உணர்வு தொற்றிக் கொள்கிறது. பெண்ணுரிமை பேசும் நில்லாமல் ஓடி வா என்ற பாடலில் சமகாலத்தில் பெண்குழந்தைகள் எதிர்கொள்ளும் அத்தனை சவால்களையும் முன்வைத்து பேசி அவற்றைத் தகர்த்தெறியும் தன்னம்பிக்கையைக் கொடுக்கிறார் கவிஞர்.

    குழந்தைபாடல்களின் வகைமைகளான கதைப்பாடல்களாக அக்க்காக்குருவி, வேட்டைக்காரநரி, பூனை கலியாணக்கதை, போன்றவையும், விடுகதைப்பாடல், வாழைப்பழப்பாடலும், விளையாட்டுப்பாடலாக கிச்சு கிச்சுத்தாம்பாளமும், இயற்கையை அறிமுகப்படுத்தும் பாடலாக தண்ணீர் பாடலும் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பான பாடலாக அமைந்திருப்பது சிறப்பானது. நமது நாட்டின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் ரயில் பாடல் மிக அற்புதமான பாடல். ஒவ்வொரு மொழியிலும் பாடல் பேசுகிறது. கவிஞரின் அக்கறையையும் உழைப்பையும் காட்டுகிறது. இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் நடைமுறையிலிருக்கும் கொடிய தீண்டாமை குறித்த நாங்க ஏன் ஒதுங்கணும்? என்ற பாடல் கேட்கும் கேள்விகளும் பாடலின் முடிவும் சிந்திக்க வைக்கிறது.

    அம்ரிதா தேவி- மரங்களைக் காப்பாற்றிய பெண் என்ற கதைப்பாடல் உண்மைச்சம்பவத்தைக் குழந்தைகளுக்குப் பாடலாக எப்படிக் கொடுக்க வேண்டுமென்பதற்கு ஒரு முன்னுதாரணம். உடுக்கடிப்பாட்டில் ஓசைநயத்தில் ஓங்கி ஒலிக்கும் சமூக அக்கறை கொண்ட பாடலாக விளங்குகிறது.

    அக்காக்குருவி என்ற இந்தக் குழந்தைகள் பாடல் தொகுப்பில் குருங்குளம் முத்துராஜா முதலிலே குறிப்பிட்டதைப் போல நம் காலத்தைப் பேசும் குழந்தைக்கவிஞராக முத்திரை பதித்துள்ளார். இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும், எழுத நினைப்பவர்களுக்கும் அவ்ருடைய பாடல்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

No comments:

Post a Comment