Showing posts with label ஆளுமைத்திறன். Show all posts
Showing posts with label ஆளுமைத்திறன். Show all posts

Thursday, 19 July 2012

கம்யூனிஸ்ட் மாமுனிவர்

EMS-2 copy220px-Thakazhi_1

தகழி சிவசங்கரம்பிள்ளை

 

தமிழில் – உதயசங்கர்

 

எல்லாவிதங்களிலும் நான் ஆதரிக்கிற இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடினை முதலில் பார்த்தது எப்படி என்று நினைவுபடுத்தமுடியவில்லை. ஏனென்றால் நேரில் பார்ப்பதற்கு முன்பே என்னைக் கவரவும், பாதிக்கவும் செய்த ஆளுமை அவர்.

எனக்குச் சரியாக ஞாபகம் இருக்கிறது. கேஸரிசபையில் நடந்த விவாதங்களுக்கு ஊடே தான் இ.எம்.எஸ். என் வாழ்க்கையில் நுழைந்தார். நான் ப்ளீடர் பரீட்சைக்குத் திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். எங்களுக்குக் குரு கேஸரி பாலகிருஷ்ணபிள்ளை. அப்போது கேஸரிசபை புதிய சிந்தனைகளின் இலக்கியசர்ச்சைகளின் கேந்திரமாக இருந்தது. 1930 களில் என்று ஞாபகம். கேஸரி இ.எம்.எஸ்ஸினைக் குறித்து அடிக்கடிப் பேசுவார். சில நேரங்களில் விமரிசனமும் செய்வார். கேஸரியின் தலைமையில் எங்களுடைய சபையில் இ.எம்.எஸ். பல சமயம் சர்ச்சைக்குரிய விஷயமாகியிருந்தார். புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர் என்ற வகையில் புதிய சிந்தனைகளைத் தேடியடைய ஆசைப்பட்ட என்னுடைய மனசில் இ.எம்.எஸ். இடம் பிடித்தார்.

அப்போது தான் ‘ உண்ணி நம்பூதிரி ‘ பத்திரிகையைப் பற்றியும், நம்பூதிரி யுவஜன சங்கத்தைப் பற்றியும் அறிய நேர்ந்தது. புரட்சியின் சாராம்சம் பிடித்திருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு உண்ணி நம்பூதிரியில் பிரசுரமான கட்டுரைகள் உத்வேகமளித்தன. இந்தப் பத்திரிகையிலுள்ள பல கட்டுரைகளும் கேஸரியின் சபையில் சர்ச்சைக்குரிய விஷயமாயின. இத்தனைக்கும் பின்னால் இ.எம்.எஸ்ஸினுடைய அறிவார்ந்த தலைமை இருந்தது என்று தெரிந்தபோது, அவர் மீதுள்ள மதிப்பு பெருகியது. அன்று திருவிதாங்கூர்காரர்களாகிய எங்களுக்குக் கொச்சியோடும் மலபாரோடும் போதுமான அளவுக்குப் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். இ.எம்.எஸ்ஸினுடைய தலைமையிலும் வெளியீட்டிலும் ‘ முற்போக்கு ‘ என்ற பத்திரிகை வெளிவந்தது. உண்ணிநம்பூதிரியில் கிடைத்த உற்சாகத்தில் நான் ஒரு ஓரங்க நாடகம் எழுதினேன். பெயர் ஞாபகத்திலில்லை. ஆனால் உள்ளடக்கம் ஞாபகத்திலிருக்கிறது. நெருப்பை உமிழும் புரட்சி. அநாதை இல்லங்களை உருவாக்கக்கூடாது. இருப்பவைகளையும் சாம்பலாக்க வேண்டும். சமூகத்தை நேராக்க அநாதை இல்லங்களால் முடியாது. அவை மனிதனைச் சோம்பேறியாக்குகிறது. இன்றைய அத்தியாவசியத் தேவையான சமத்துவக்கொள்கைகளுக்கு அவை உபயோகப்படாது. இதே புரட்சிகர நோக்கத்தோடு தான் கேஸரியில் கதைகள் எழுதினேன். நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். இதற்கெல்லாம் ஒரு உந்துசக்தியாக அன்று நான் நேரில் கண்டிராத இ.எம்.எஸ். இருந்தார்.

மிகக் குறைந்த தடவைகளே நான் இ.எம்.எஸ்ஸை நேரில் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போது கொஞ்சம் நலம் விசாரிப்போம். தீர்க்கமான உரையாடலோ, விவாதமோ, கிடையாது. சில மீட்டிங்குகளில் வைத்துத் தான் இந்தச் சந்திப்புகளும் நிகழ்ந்தன. யதார்த்தமாய் நலம் விசாரித்துக் கொள்ளும்போதும் எனக்கு வெளிப்படையாகத் தெரியாத பாசமும் ஆதரவும் உறுதியாக இருந்தது.

முற்போக்கு இலக்கிய அமைப்போடு ஆரம்பம் முதலே நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஷொரனூர், திருச்சூர், கோட்டயம், கொல்லம், மாநாடுகளில் கலந்து கொண்டுமிருக்கிறேன். 1973 ல் ஷொரனூரில் நடந்த இலக்கிய மாநாட்டில் கேசவதேவோடு கலந்து கொண்ட அநுபவம் உண்டு. அன்று இளம் எழுத்தாளர்களுக்கு கதை கவிதை நாடகம் முதலான இலக்கியப்பிரிவுகளில் போட்டி நடத்தினோம். கேசவதேவும் நானும் சேர்ந்து தான் படைப்புகளைப் பரிசீலித்தோம். ஏராளமான படைப்புகள் கிடைத்தன. ஆனால் அவைகளில் இலக்கியம் இல்லை என்ற விமர்சனம் எங்களுக்கு இருந்தது. அதாவது முற்போக்கு இலக்கிய அமைப்பு உயர்த்திப் பிடித்த சில விஷயங்களோடு வேறுபாடு ஏற்பட்டது. அந்த நிலையில் இ.எம்.எஸ்ஸின் இலக்கியம் சம்பந்தமான நிலைபாடுகளோடு ஒத்துப்போக முடியவில்லை.

முண்டசேரியும் பொதுவாக எங்களோடு உடன்பட்டார். அதே நேரம் இ.எம்.எஸ்ஸினுடைய இலக்கியக் கட்டுரைகளை விருப்பத்தோடு வாசிக்கவும் செய்தோம். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர் படைப்புகளின் புதுமையும், யதார்த்தமும், ஆத்மார்த்தமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. யோசித்துப் பார்க்கும்போது நெருக்கமாகவும் இருந்தது.

ஸி.வி.ராமன் பிள்ளையைப் பற்றி இ.எம்.எஸ். வெளியிட்ட கருத்துகளை அப்படியே என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஸி.வி. நாவல்களின் காலகட்டத்தைப் பரிசோதிக்கும் போது ராஜபக்தி தவறு என்று கருத முடியுமா? கொஞ்சம் தாமதமாக என்றாலும் இ.எம்.எஸ். சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தது. அது நல்ல விதமாகவே வெளிவந்தது சந்தோஷம்.

உலகப்புகழ் பெற்ற இரண்டு சங்கரன்கள் கேரளத்தில் பிறந்தார்கள் என்று நான் நம்புகிறேன். முதலாவது ஆதி சங்கரர் சங்கராச்சாரிய சுவாமிகள். இரண்டாவது இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாடு. ஆதி சங்கரன் ஆன்மீகவாதியாகவும், வேதாந்தியாகவும் இருந்தார். சமகாலச் சங்கரன் உன்னதமான அரசியல் சிந்தனையாளராக இருந்தார். மார்க்சிய அறிவிலிருந்து வெளிப்பட்ட புதிய வெளிச்சம் தான் இ.எம்.எஸ். பாரதத்திற்குக் கொடுத்த மகத்தான கொடை. எனக்கு அறிவார்ந்த தலைமையேற்ற இ.எம்.எஸ்ஸின் அறிவு சாதனை படைத்திருக்கிறது. மற்றவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட, தான் நம்புகிற கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்த வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. இந்த விஷயத்தில் அவருக்குச் சமமாக இன்னொரு ஆளுமையை என்னால் பார்க்க முடியவில்லை. பாரதத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்குத் தெளிவான உருவம் கொடுத்தது இ.எம்.எஸ். தான் என்று நான் நம்புகிறேன். இந்தச் சித்தாந்தத்தின் ஊடே வாழ்க்கைக்கு ஒரு புதிய முகம் தந்து கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்தியது தான் இ.எம்.எஸ்ஸினுடைய வெற்றிக்குக் காரணம். தீர்க்கதரிசனமும், உயிர்த்துடிப்பு மிக்க அறிவும் கொண்ட ஒருவருக்கே இந்த மாதிரியான தன் வயப்படுத்துதல் முடியும். இ.எம்.எஸ். ஒரு யதார்த்தவாதி. பாரதத்தின் ஆத்மாவின் உயிர்த்துடிப்பாக விளங்கியது யதார்த்தவாதம். அதனால் அவருடைய கருத்துகளை சமகால இந்தியா கவனமுடன் கேட்டது. ஏற்றுக்கொள்ளவோ, விமர்சிக்கவோ செய்தது. பாரத பாரம்பரியத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் திறந்த மனதுடன் நான் சொல்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரையிலேனும் கம்யூனிஸ்ட் மாமுனிவர் அவர். லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் போலவே எனக்கும் இன்று அவர் ஒரு மாபெரும் உந்துசக்தி.

நன்றி – மலையாளம் வாரிக

Wednesday, 16 May 2012

குழந்தையின் ஆளுமை

father  

“மிகவும் நெருங்கிப் பழகி வருவதன் காரணமாக, குழந்தையிடம் மறைந்து கிடக்கும் பெருமை வெளிக்குத் தெரிவதில்லை. குழந்தை சிரிக்கிறது. அழுகிறது ஆனால் வெளிப்படையாகத் தெரியும் இந்தச் சிரிப்புக்கும், அழுகைக்கும் மறைவில் எத்தனையோ குணபாவங்கள் இருக்கின்றன..”

- மரியா மாண்டிசோரி

சமூகம் நமக்குக் கற்றுக் கொடுத்த கள்ளமும் கபடமும் கொண்டே நாம் இந்த உலகத்திடம் வேற்றுமை பாராட்டுகிறோம். ஆனால் குழந்தை இந்த உலகத்தில் பிறந்த கணம் முதல் எல்லோரின் மீதும், எல்லாவற்றின் மீதும் வேற்றுமை பாராத அன்பைச் செலுத்துகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்புணர்வோடு எறும்பிடமும் அன்பு செலுத்துகிறது. மரப்பாச்சி பொம்மையிடமும் தன் அன்பைத் தெரிவிக்கிறது. அதற்குத் தான் பணக்காரன் என்றோ ஏழை என்றோ, தான் பிறந்த சாதிபற்றியோ, மதம் பற்றியோ அதன் தன்மைகள் குறித்தோ, விளைவுகள் குறித்தோ தெரியாது. தான் முட்டாள் என்றோ அறிவாளி என்றோ தெரியாது. தன் வீடு சிறியது என்றோ பெரியது என்றோ தெரியாது. தன்னுடைய பெற்றோர்கள், உற்றவர்கள் நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ தெரியாது. இந்த உலகம் எவ்வளவு கொடியது என்றோ எவ்வளவு அற்புதமானது என்றோ தெரியாது. ஆனால் குழந்தைக்கு ஒன்று மட்டும் தெரியும். தான் காணும் உணரும் எல்லாவற்றின் மீதும் தீவிரமான அன்பைச் செலுத்தத் தெரியும்.

இப்படி பரிசுத்தமான, களங்கமற்ற குழந்தையிடம் தான் பெரியவர்கள் எல்லாவிதமான கபடங்களைச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். தான் பிறந்த மதம், சாதி பற்றிச் சொல்கிறார்கள். அது எவ்வளவு உயர்வானது அல்லது எவ்வளவு இழிவானது என்று சொல்கிறார்கள். குழந்தையை சுற்றியுள்ள உலகத்தை குழந்தைக்கு எதிர்மறையாகவே அறிமுகப்படுத்துகிறார்கள். எல்லாப்பொருட்களையும் எல்லா மனிதர்களையும், வெளிச் சூழலையே விரோதியாகக் காட்டுகிறார்கள். குழந்தை முதன்முதலாக பயப்படுகிறது. எல்லாவற்றின் மீதும் அதற்குச் சந்தேகம் வருகிறது. யாரையும் நம்பமுடியாமல் இந்த உலகத்தையே அவநம்பிக்கையோடு பார்க்கிறது. களங்கமில்லாத அதன் அன்பின் அடித்தளம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிச் சிதைகிறது. பயமும், பாதுகாப்பின்மையும் பொங்க இந்த உலகத்தையே வெறுக்கத் தொடங்குகிறது. சமூகம் ஒருபோதும் இதை உணர்வதில்லை. பெரியவர்களும் இதை உணர்வதில்லை. அவர்கள் குழந்தைக்கு அறிவூட்டிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் குழந்தையிடம் ஊட்டப்பட்ட இந்த வெறுப்பு உள்ளே கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களிடம் ஆளுமைச் சிதைவை ஏற்படுத்துகிறது. உண்மையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? குழந்தைக்கு அறிவூட்டுவதல்ல. குழந்தை பிறந்தது முதலே கற்றுக் கொண்டேயிருக்கிறது. தன் அறிவைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அழுகை, சிரிப்பு என்ற இரண்டு உணர்ச்சி வெளிப்பாடுகளிலிருந்து இன்னும் நுட்பமான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தெரிந்து கொள்கிறது. பயம், கோபம், ஏக்கம், நிராதரவு, திருப்தி, ஆவல், உற்சாகம் என்று பல விதமான உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துகிறது. எனவே கற்றுக் கொண்டேயிருக்கும் குழந்தைக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும், குழந்தையின் முன்னால் செய்யத் தகாதனவற்றை செய்யாமலிருப்பதும் எல்லாவற்றுக்கும் மேல் குழந்தையின் ஆளுமையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வேண்டும்.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவமிக்க ஒரு ஆளுமை உள்ளே மறைந்திருக்கிறது. அந்த ஆளுமை தனக்கான தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தக்க சூழ்நிலைக்காக துளிர்க்கவோ, பூக்கவோ வேண்டி மறைந்திருக்கிறது.

விதைக்குள் அடங்கியிருக்கும் விருட்சமாய் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆளுமையை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். எல்லாக்குழந்தைகளிடமும் உடனே தெரிந்து விடும் அளவில் இல்லாமலிருக்கலாம். சில குழந்தைகளின் ஆளுமையைக் கண்டு பிடிக்க சிறிது சிரமம் ஏற்படலாம். சிறிது காலம் ஆகலாம். ஆனால் எல்லாக்குழந்தைகளிடமும் ஒரு ஆளுமை ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டு பிடித்து வெளிக்கொணர வேண்டும். அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் துணை நிற்க வேண்டும். அதற்குத் தேவையான ஒளியையும், காற்றையும், நீரையும் தரவேண்டியது நம் கடமை. வளரும் போது ஒவ்வொரு ஆளுமையும் இந்த பூமிக்கு தன்னுடைய பங்களிப்பை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதற்கான வழிமுறைகளை பள்ளிக்கூடமும், பெற்றோர்களும் சமூகமும் யோசிக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது நம் சமூகத்தில்? யாருமே குழந்தையின் ஆளுமை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்வது இல்லை. அப்படியொன்று இருப்பதாகக்கூட நினைப்பது இல்லை. அப்படியே குழந்தைகளின் ஆளுமைத்திறன் துளிர்த்து வெளிப்பட்டாலும் அதைத் துடிக்கத் துடிக்கக் கிள்ளி எறிந்து விடுகிறோம். ஏனென்றால் செம்மறியாட்டு கூட்டத்தை விட மோசமான மந்தை புத்தி கொண்டவர்களாக பெரியவர்கள் இருப்பது தான். வாய் திறந்து மழலை பேசும் பருவத்திலேயே குழந்தையிடம் நம்முடைய ஆசைகளைத் திணித்து விடுகிறோம். அப்போதும் என்ன இப்படியா ஒரு சமூகம் முழுக்க ஒரே விதமான ஆசையைக் கொண்டிருக்கும்? பாருங்கள் எல்லா குழந்தைகளும் கிளிப்பிள்ளையைப் போல தாங்கள் இஞ்ஜினீயர் ஆக வேண்டும் என்றோ அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்றோ ஒப்பிக்கும். அந்தக் குழந்தைகளுக்கு பொறியாளர் என்றால் யார் என்றோ, மருத்துவர் என்றால் யார் என்றோ சற்றும் தெரியாத பருவத்தில் நம் ஆசையை அப்படிக்கூடச் சொல்ல முடியாது, மந்தைபுத்தியின் விளைபொருளான நம் ஆசையை குழந்தையிடம் திணக்கிறோமே. இதை விட வேறு என்ன அவலம் வேண்டும்?

உலகம் பூரா வெறுமனே பொறியாளர்களும், மருத்துவர்களும் மட்டும் நிறைந்து விட்டால் போதுமா? ஏன் இப்படி? நம்முடைய சமூக அமைப்பு சில திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் பொறியாளர், மருத்துவர் என்ற கல்வியை மதிப்புமிகு வியாபாரப் பொருட்களாக்கி அதை விற்பனை செய்யும் தந்திரங்களில் ஒரு சமூகத்தையே சிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு சமூகத்துக்கு அறிவியல் அறிஞர்கள் தேவையில்லையா? ஓவியர்கள் தேவையில்லையா? கணித மேதைகள் தேவையில்லையா? கட்டடக்கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தேவையில்லையா? இயற்கையியலாளர்கள் தேவையில்லையா? வரலாற்று ஆய்வாளர்கள் தேவையில்லையா? தொல்லியல் அறிஞர்கள் தேவையில்லையா?

சுற்றுச்சூழல் அறிஞர்கள் தேவையில்லையா? நிர்வாகவியல் அறிஞர்கள் தேவையில்லையா? வேளாண்துறை விஞ்ஞானிகள் தேவையில்லையா? மெக்கானிக்குகள் தேவையில்லையா? விளையாட்டு வீரர்கள் தேவையில்லையா? இது போல எண்ணற்ற துறைகளும் தானே இந்த உலகம். அப்புறம் எப்படி இந்த மந்தைபுத்தி உருவாகிறது?

குழந்தைகள் வளரும் போதே அவர்களது ஆளுமைத் திறனின் முளைகள் மலரத்தான் செய்யும். அது ஓவியத்தில் இருக்கலாம். பிரித்து இணைக்கும் செயல்பாடாக இருக்கலாம். கணிதத்திலாக இருக்கலாம். கதை சொல்வதாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இடையூறு செய்யாமல், அடக்கி ஒடுக்காமல், அந்தந்தத் துறையில் வளர்வதற்கான உதவிகள் புரிந்தாலே போதும். குழந்தைகளின் அடிப்படையான அன்பு எல்லோரையும் எல்லாப் பொருட்களையும் நேசிக்கிற மனோபாவம் எந்தக் காயமுமின்றி அடக்குதலும் இன்றி வெளிப்படும். எல்லாத் துறைகளிலும் சாதனைகள் படைக்கும் புதிய சமுதாயம் மலரும். அதிக மதிப்பெண் என்ற தந்திரவதைக்கூடத்துக்குள் குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்காதீர்கள். ஒரே வகை மாதிரியான ஜெராக்ஸ்   சமூகத்தை உருவாக்காதீர்கள்....

Tuesday, 17 April 2012

கருகும் கனவுச் சிறகுகள்

எழுதப்படாத கரும்பலகையாய்

குழந்தைகள் மனசு

என்னிடம் இருக்கிறது.

சாக்பீஸ்

சில துகள்கள்

எழுத்துக்களாய்

அப்பிக்கொள்வதும்

சில துகள்கள்

ஒட்டாமல் உதிர்வதும்

நிகழ்ந்து கொண்டே இருக்கிறது

தினமும். - பழ. புகழேந்தி

விந்தையானது குழந்தைகளின் மன உலகம். ஆனால் நாம் அதை என்றுமே புரிந்துகொள்ள முயல்வதில்லை.விந்தையான அந்த உலகத்தின் வண்ணங்களில் மூழ்கி எழுந்து பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து தான் நாமும் பெரியவர்களாகியிருக்கிறோம் என்றாலும் நாம் குழந்தைகளின் உலகத்தை அலட்சியமே செய்கிறோம். புற உலகின் அத்தனை நிகழ்வுகளும் தன் பதிவுகளை குழந்தைகளின் மனஉலகில் சுவடுகளாய் பதித்துக் கொண்டேயிருக்கின்றன. அவற்றிலிருந்து குழந்தைகள் இந்தப் புறஉலகம் பற்றி, சமூகம்பற்றி ஆண்களைப்பற்றி, பெண்களைப்பற்றி, இயற்கையைப்பற்றி, பிற ஜீவராசிகளைப் பற்றி தன் மனதில் கருதுகோள்களை உருவாக்கிக்கொள்கின்றன. இந்தக் கருதுகோள்களே பின்னர் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களுக்கும் சமூகத்துக்குமான உறவு நிலைகளைத் தீர்மானிக்கிறது.

தாய்,தந்தை,சகோதர சகோரரிகள்,வீடு,வெளியுலகம் என்று எல்லோரும் குழந்தையின் மனதை பாதிக்கின்றனர்.நல்லவிதமாகவும் மோசமான விதத்திலும் பாதிக்கின்றனர்.இந்த பாதிப்புகளை குழந்தைகள் ஏற்றுக்கொள்கின்றனர் அதே மாதிரி நல்ல விதமாகவும் மோசமான விதத்திலும்.எல்லா உயிரினங்களைப் போல குழந்தைகளும் தங்களது சூழ்நிலைக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.தாங்கள் ஐம்புலன்களால் கண்டுணரும் புற உலக அனுபவங்களே உண்மை என்று நம்புகின்றனர்.உயிரியல் ரீதியான இயற்கை உணர்வுகளே அவர்களை வழிநடத்துகின்றன.

முதலில் தான் அனுபவித்த அனுபவங்களையே எதிரொலிக்கின்றனர். குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு ஒரு கையில் சிகரெட் புகையுடன் வலம் வரும் தந்தையிடம் இருந்தும், தன்னை அவமானப்படுத்தும் கீழ்த்தரமான சொற்களையே பேசும் தாயிடமிருந்தும், அடித்தும் கிள்ளியும் தன்னைத் துன்புறுத்தி மகிழும் சகோதர சகோதரரிகளிடமிருந்தும் குழந்தை பெறும் அனுபவங்கள் அதன் மனதில் தீராத காயங்களை ஏற்படுத்தி விடுகின்றன. தாங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காக குழந்தைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளினால் குழந்தையின் மனம் கூம்பிவிடுகிறது. விளையாட்டின் மூலமாக உழைப்பின் காரணமாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் குழந்தையின் சுதந்திரவெளி சிறைப்படுகிறது. அதன் உற்சாகம் குலைக்கப்படுகிறது. பெரியவர்கள் தாங்கள் விரும்புகின்ற வகையில் செயல்பட வைப்பதற்காக குழந்தைகளை வற்புறுத்துகிறார்கள். செய்ததையே திரும்பத் திரும்ப சொல்லியதையே திரும்பத் திரும்ப செய்வதற்கும், சொல்வதற்கும் வலியுறுத்துகிறார்கள். புதிது புதிதாக அனுபவங்களைத் தேடுகிற குழந்தைகளின் தேடலை அவர்கள் மறைக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் தடைகளை மீறுகிற வலிமை இல்லாததினால் குழந்தைகள் உள்ளுக்குள் சுருங்கிவிடுகிறார்கள். இவற்றிலும் கூட பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் இடையே மிகுந்த பாரபட்சம் காட்டப்படுகிறது. வாங்கித்தரும் விளையாட்டு பொம்மைகளிலிருந்து உடை, அலங்காரம், அவர்களிடம் பேசும் மொழி, அவர்களை விளையாட அனுமதிக்கிற வெளி, கொடுக்கிற செல்லம், எல்லாவற்றிலும் மாறுபாடுகள் இருக்கின்றன. இதன்மூலம் ஆண், பெண் குழந்தைகளின் மன உலகு பிஞ்சிளம் பருவத்திலேயே தகவமைப்படுகின்றன.வீட்டிலேயே பெற்றோர்களாலேயே இத்தகைய மாறுபாடுகளை, பாரபட்சத்தை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி மனித மனங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அதனாலேயே பெண்சிசுக்கொலை, பெண்கருக்கொலை இன்னமும் நமது சமூகத்தில் வேறு வேறு ரூபங்களில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

குழந்தைகளின் வாழ்நிலை வீடு மட்டுமில்லையே. ஒரு பத்து கிலோ எடை கொண்ட புத்தகப் பைகளை முதுகில் சுமந்து கொண்டு சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு செல்லக் காத்திருக்கும் குழந்தைகளின் முகத்தை என்றாவது ஒரு நாள் ஒரு கணம் உற்று கவனித்திருப்போமா? அவர்களின் முகத்தில் தெரியும் நிராதரவான உணர்வை என்றாவது உணர்ந்திருப்போமா? அந்தக் குழந்தைகள் தங்களை அலட்சியம் செய்தபடி அங்குமிங்கும் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் மீதும் அந்த வாகனங்களின் மீது பயணிக்கும் பெரியவர்கள் மீதும் என்ன விதமான மரியாதை ஏற்படும்?

குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிட்டு லாபவேட்கை கொண்ட இந்த சமூக அமைப்பின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகி வறுமையில் தவிக்கும் தன் குடும்பத்திற்காக சின்னச்சின்ன வேலைகள் செய்து சம்பாதிக்கிற சிறுவர்கள், தாங்கள் அந்த வேலைகளைச் செய்யும் போது படுகிற அவமானங்களை எப்படி மறப்பார்கள்? இதற்குமேல் பள்ளியில் ஆசிரியர் என்ற வன்முறை செலுத்தும் அதிகாரி தன் இஷ்டம் போல் குழந்தைகளை அடிக்கவும், அவமானப்படுத்தவும், புறக்கணிக்கவும், வெளியேற்றவும் செய்கிற கொடுமைகளை எப்படி எதிர்கொள்வார்கள்? குழந்தைகள் அதிகாரமற்றவர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை பெரியவர்களை அண்டியே வாழவேண்டியதிருக்கிறது. எனவே பெரியவர்களின் அதிகாரம் தங்களுக்கு உடல், மன ரீதியான துன்பங்களைத் தரமுடியும் என்பதையும், தன்னைவிட பலசாலியான அதனை தன்னால் எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் அந்த அதிகார மையத்தில் ஆண்தான் கட்டற்ற அதிகாரமுடையவனாக இருக்கிறான். குழந்தைகள் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஆண்களைக்கண்டு அஞ்சுகிறார்கள். கொஞ்சமும் தயக்கமில்லாமல் தன்னைச்சார்ந்திருக்கிற தன்னைவிட பலவீனமான தன்னை எதிர்த்து எதுவும் செய்யமுடியாத குழந்தைகள் மீது எல்லா விதமான அதிகாரத்தையும் செலுத்துகிறார்கள்.

குறிப்பாக வீட்டில் ஒரு அப்பா, அம்மாவின் மீது குழந்தைகளின் மீது செலுத்துகிற அதிகாரத்தைக் கண்டு குழந்தைகள் குழப்பமடைகிறார்கள். மெல்ல மெல்ல இந்த உலகம் ஆண் மைய உலகம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆண் குழந்தைகள் இந்த அதிகாரத்தை பெண் குழந்தைகளோடு விளையாடும் போது போலி செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் வீட்டில் உள்ள பெண்களைப் பார்த்தும், புற உலக சம்பிரதாயங்களைப் பார்த்தும், மூடச் சடங்குகளைப் பார்த்தும், தாங்கள் வளர்க்கப்படும் விதத்தினாலும் தங்களது ஆற்றலை ஒடுக்கி ஆண் மைய அதிகாரத்திற்கு அடங்கி அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் பெண் குழந்தைகளின் ஆளுமை முளையிலேயே கிள்ளியெறியப்படுகின்றன. பெண் குழந்தைகள் செப்புச்சாமான் வைத்து சமையல் விளையாட்டும், பார்லி பாப்பாச்சி பொம்மைகளை வைத்துக் குழந்தைகளைச் சீராட்டும் விளையாட்டும் விளையாடிக்கொண்டிருக்க ஆண் குழந்தைகளோ துப்பாக்கிகள், பீரங்கிகள், கார்கள், பைக்குகள், சூப்பர்மேன், °பைடர்மேன், கள்ளன், போலீ° என்று விளையாட்டிலும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட பழக்கப்படுத்தப்படுகிறார்கள். என்ன கொடுமை இது?

ஆனால் எந்த மாதிரியான மோசமான சூழ்நிலைகளிலும்,குழந்தைகள் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளவும்,அந்த சூழலுக்குள்ளேயே தன்னுடைய சின்னச் சின்ன மகிழ்ச்சித் தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும். அதை அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அந்தச் சூழல் அவர்களை பாதிக்காமல் இருப்பதில்லை. சூழலின் பாதிப்போடு வளர்ந்து வரும் குழந்தைகள் கோழைகளாக, எதையும் கேள்வி கேட்காமல், மறுத்துப் பேசாமல் ஏற்றுக்கொள்கிறவர்களாக தங்கள் ஆளுமைத்திறனை ஒடுக்கிக் கொள்பவர்களாக சமூகத்தின் மீதும், வாழ்வின் மீதும் விரக்தியும், கசப்புணர்வும் கொண்டவர்களாக பழிவாங்கும் மனோபாவம் கொண்டவர்களாக குரூர புத்தியுடையவர்களாக, கலகக்காரர்களாக சமூக விரோதிகளாக மாறுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்பதை நாம் அச்சத்துடன் நினைத்துப் பார்த்தோமானால், குழந்தைகளைக் குறித்து சற்றேனும் யோசிப்போம்.....

Tuesday, 10 April 2012

குழந்தைமை ரகசியம்

images (2) குழந்தைமை ரகசியம்

“குழந்தை தன்னிடத்தே ஒரு வாழ்க்கை ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறது. அந்த ரகசியம் மனிதர் உள்ளத்தை மறைக்கும் திரையை நீக்க வல்லது. இந்த ரகசியத்தை உணர்ந்தால் மனிதன் தன் சிக்கல்களையும், சமூகச் சிக்கல்களையும் எளிதாக நீக்கிவிடலாம்.” - மரியா மாண்டிசோரி

தாயின் வயிற்றில் கரு உருவான சில வாரங்களிலேயே குழந்தையின் மனம் உருவாகி வளர ஆரம்பிக்கிறது. அது பெரும்பாலும் தாயின் உணர்வுகளையே ஏற்று பிரதிபலிக்கிறது. உடலாலும் உணர்வாலும் தாய் படுகின்ற இன்ப துன்பங்களை கோபதாபங்களை விருப்பு வெறுப்புகளை குழந்தையும் அனுபவிக்க நேர்கிறது. தன் பிரதிபலிப்புகளை வயிற்றுக்குள்ளேயிருந்து கொண்டே வெளிப்படுத்தவும் செய்கிறது. எனவே தான் கருவுற்ற காலத்தில் தாயின் உடல், மன ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. தாயின் கசப்பும், வெறுப்பும், விரக்தியும், கோபமும், இனிமையும், மகிழ்ச்சியும், கூட குழந்தையை பாதிக்கிறது.

மகாபாரதத்தில் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அபிமன்யு பத்ம வியூகம் பற்றி கேட்டறிந்த கதையை நாம் கேட்டிருப்போம். குழந்தையின் மனம் தாயின் வயிற்றிலேயே உருவாகி வளர ஆரம்பிக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பேசுவதில்லை என்ற காரணத்தினாலேயே நாம் குழந்தையின் உணர்வுகளை, பிரதிபலிப்புகளை, மகிழ்ச்சியை, அதன் கலகத்தை நாம் உணர்வதில்லை. குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணத்திலிருந்தே புதிய கிரகத்திற்குள் அடியெடுத்து வைக்கிற பரவச உணர்வோடு எல்லாவற்றையும் உற்றுநோக்குகிறது. அவதானிக்கிறது. புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. புதிய புதிய அனுபவங்களை எதிர்கொள்கிறது. அதன் சாராம்சத்தைத் தனக்குள் தக்கவைத்துக்கொள்ள முனைகிறது. காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் முழுமையான அர்ப்பணிப்புணர்வோடு வாழ்கிறது. எப்போதும் மகிழ்வோடு வாழப் பழகுகிறது. உடலின் அத்தியாவசியத் தேவைகளை தன் அழுகையின் மூலம் உணர்த்துகிறது. தன் மீது அன்பு கொண்டவர்களைப் போற்றுகிறது. ஒவ்வொரு நாளையும் புதிது புதிதாக வாழ்கிறது. புத்தம் புது மலர் போல பூத்துக் குலுங்குகிறது. தன் ஒவ்வொரு செய்கையையும் தானே வியக்கிறது. அதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அந்தச் செய்கையை இன்னும் முதிர்வடையாத தன் ஞாபகக் கிடங்கில் சேர்க்கிறது. அந்தச் செய்கையினால் விளையும் இன்பமோ, துன்பமோ அதையும் தன் உணர்வுச் சேகர கோப்புகளில் பதிவு செய்கிறது.

ஒரு கண்டுபிடிப்பாளனைப் போல இந்த உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறது. அறிதலின் இன்பத்தை அனுபவிக்கிறது. குழந்தைமையின் முதலும் முடிவுமான நோக்கம் இன்பமே. வாழ்வை இன்பமாகக் கழிக்கவே விரும்புகிறது. குழந்தை இன்பத்தைக் கண்டடைகிற முயற்சிகளில் தான் உலகை தன் சுற்றுப்புறத்தை தன் சக ஜீவிகளை அறிந்து கொள்கிறது. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்காக அது ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல இந்தப் பூவுலகில் பிறக்கிற ஒவ்வொரு இளம் உயிரும் அந்த ரகசியத்தை அறிந்து வைத்துள்ளது. அந்த வாழ்க்கை ரகசியத்தின் மூலமாகவே வாழ்வைப்புரிந்து கொள்கின்றனர். அந்த வாழ்க்கை ரகசியம் உழைப்பு இந்த அற்புதமான ரகசியத்தின் மூலமாகவே அதாவது தொடர்ந்த இடைவிடாத ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பின் மூலமாகவே தான் மகிழ்ச்சியையும், உடல்நலத்தையும், புத்துணர்வையும் பெறுகிறது. உழைப்பின் மீது ஆசைகொள்வது குழந்தையின் அடிப்படை இயற்கையுணர்வாகும் உண்மையில் குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப் புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கிற பொறுமை, திறமை பெற்றோர்களுக்கும் இல்லை, மற்ற பெரியவர்களுக்கும் இல்லை.

தாயின் வயிற்றிலேயே இந்த உழைப்பு ஆரம்பமாகி விடுகிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னால் உழைப்பு தீவிரமடைகிறது. உழைப்பின் தீவிரம் அதன் வாழ்வைக் களிகொள்ளச் செய்கிறது. அந்த இன்பமே மீண்டும் மீண்டும் உழைப்பின் மீது குழந்தையை ஈடுபாடும் பெருவிருப்பும் கொள்ளச்செய்கிறது.

ஆனால் பெரியவர்கள் குழந்தைகளை பெரும்பாலும் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். குழந்தையை ஏதும் இல்லாத எதுவும் அறியாத ஒரு வெறும் ஜீவி என்று நினைக்கிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தின் மீது நின்று கொண்டே குழந்தைகளை பார்க்கிறார்கள். வேறெங்கும் செலுத்த முடியாத அதிகாரத்தைக் குழந்தைகள் மீது செலுத்த முனைகிறார்கள். தான் தீர்மானிக்கிற, தனக்கு விருப்பமான தனக்குத் தெரிந்த நல்லது கெட்டதுகளைக் குழந்தையிடம் திணிக்கிறார்கள். தனக்குப் பிடிக்காத உருளைக்கிழங்கு குழந்தைக்கும் பிடிக்காது என்று நினைக்கிறார்கள் தனக்குப் பிடித்த கோகோ கோலாவை குழந்தையும் சாப்பிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். தன் சுயநலத்திற்காக குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டிகளிடம் ஒப்படைக்கிறார்கள். பின்பு அதனிடமிருந்து குழந்தைகளை மீட்கப் போராடுகிறார்கள். குழந்தைகளை ஒரு பொருளாகப் பாவிக்கிற எண்ணமே இப்படி அவர்களைக் கையாளச் சொய்கிறது. குழந்தைகள் உடனடியாக வாய் பேசமுடியாது என்பதாலேயே அதற்கு யோசிக்கத் தெரியாது, சிந்தனை கிடையாது, நல்லது கெட்டது தெரியாது என்று குழந்தைகள் சார்பாக அவர்களே முடிவெடுக்கிறார்கள். இறுதியில் குழந்தைகளைத் தனக்குச் சொந்தமான ஒரு பொருள் என கருதி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உரிமையை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தையை அவர்களுடைய சொந்த படைப்பாக எண்ணிக்கொள்கிறார்கள்.

பாவம் குழந்தைகள் தாங்கள் ஒரு தனித்துவமிக்க தனி உயிரி என்ற உரிமையை இழக்கிறார்கள். தங்களுக்குத் தேவையானதைப் பெறுகிற, தங்களுக்குத் தேவையில்லாததை மறுக்கிற சுதந்திரத்தை இழக்கிறார்கள். தங்களுடைய அறிதலின் தாகத்தைக் கட்டுப்படுத்துகிற, ஒடுக்குகிற அதிகாரத்தின் கரங்களுக்குள் உள்ளொடுங்கிப் போகிறார்கள். இந்த உள்ளொடுங்கலே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது சமூகத்தில் நடக்கிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிற மந்தமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. எதையும் கேள்வி கேட்கத் துணியாத கோழைத்தனத்தை உருவாக்குகிறது. எதையும் மறுக்கக்கூடிய உரிமையை இழந்து தவிக்கிறார்கள். கல்விக்கூடங்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு குழந்தைகளின் இயல்பான மேதைமையைக் கட்டுப்படுத்தி சாதாரணமானவனாக்கு (ஹஏநுசுஹழுநு) வதற்காக மெனக்கெடுகிறது. சொல்வதைத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக்குவதற்கு தன் முழு பலத்தையும் பிரயோகிக்கிறது.

குழந்தைகள் இதனால் மனம் வெதும்பி தன் இயல்பான அறிதிறனையும், மேதைமைiயும் இழக்கிறார்கள். அரும்பிலேயே கருகச் செய்யும் நடவடிக்கைகளால் தாங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர்கள் சொன்னபடி நடக்க ஆரம்பிக்கிறார்கள். தங்களுடைய அடிப்படை இயல்பான மகிழ்ச்சிக்கான அறிதலுக்கான உழைப்பையும், அதன் மூலம் கிடைக்கிற உள்ளொளியையும் மறந்து போகிறார்கள். இப்படி குழந்தைகளின் குழந்தைமையை அதன் ரகசியக் கனவுகளையும் கருகச் செய்துவிட்டு பெரியவர்கள் “உன்னைய வளர்ப்பதற்காக என்ன பாடுபட்டிருக்கேன் தெரியுமா?” என்று அங்கலாய்க்கிறார்கள். விநோதத்தைப் பாருங்கள்.

உயிரின் இயல்பான படைப்பூக்க, உணர்வான உழைப்பு தான் குழந்தைமையின் ரகசியம். குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சியடைவதற்கு உழைப்பு தான் முக்கியமான மூலகாரணம் என்று மார்க்சியம் சொல்வதைப் போல குழந்தைகள் உழைப்பதின் மூலமே தங்களின் உள்ளொளியை உள்ளுணர்வை, அறிதிறனை, மேதைமையை மகிழ்ச்சியை வளர்க்கிறார்கள். உழைப்பு அதுதான் எத்தனை அற்புதமான விசயம்! குழந்தைகளை உற்றுநோக்குவோம். நம் அறியாமைகளை அகற்றுவோம்..