Showing posts with label தகழி சிவசங்கரம்பிள்ளை. Show all posts
Showing posts with label தகழி சிவசங்கரம்பிள்ளை. Show all posts

Sunday, 22 July 2012

என் மலையாள ஆசான் டி.என்.வி.

 

 

உதயசங்கர்

T.N.VENKITESWARAN_THRISSUR

1986-ஆம் ஆண்டு கோவில்பட்டியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட செடியாக நான் வேளானந்தல் ஸ்டேஷனில் போய் விழுந்து கிடந்தேன். வாடி வதங்கி ஒரு துளி உயிர்நீருக்காகத் தவித்துக் கொண்டிருந்தேன். மதுரையைத் தாண்டி வெகுதூரம் போனதில்லை. திருச்சிக்கே ஸ்டேஷன் மாஸ்டர் பயிற்சிக்காகப் போனது தான். அப்போதும் யாருடனும் சகஜமாகப் பழகவில்லை. காரணம் எனக்கு அவ்வளவு சகஜமாக யாருடனும் பழகத் தெரியாது என்பது தான். பயிற்சி முடிந்து மேலும் வடக்கே போஸ்டிங் போட்ட போது இன்னும் உள்ளுக்குள் சுருங்கிப் போனேன். எப்போதும் தனிமை என்னைச் சூழ்ந்து இருளெனக் கவிந்திருந்தது. புதிய ஊர், புதிய மக்கள், புதிய மொழி என்னை மேலும் கலவரப்படுத்தியது. தமிழ் தான் என்றாலும் அந்த மக்களின் மொழியே எனக்குப் புரியவில்லை. அதைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச நாட்களாகியது. எல்லோரும் முரட்டுத்தனமானவர்களாக தெரிந்தார்கள். அதெல்லாம் என் மனப்பிரமை தான். அது மட்டுமல்லாமல் அன்றாடம் இலக்கியம், அரசியல், தத்துவம் என்று பேசித் திரிந்து கொண்டிருந்த நாட்கள் என் கண்ணிலேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் ரயில்வே ஸ்டேஷன் என்பது வேறு ஒரு உலகமாக இருந்தது.

ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எந்தப் பொது விஷயங்களையும் பேசுவதில்லை. நான் தாகத்தால் தவித்துப் போனேன். இப்படியே ஒரு மாதம் கழிந்து விட்டது. யாரோடும் ஒட்ட முடியாமல் நான் தனியாகவே இருந்தேன். உடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் என் மீது அநுதாபம் காட்டினர். அதற்கு மேல் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது தான் பக்கத்து ஸ்டேஷனான தண்டரையிலிருந்து வாராந்திர ஓய்வு தருவதற்காக டி.என்.வெங்கடேஸ்வரன் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். காலையில் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை செல்லும் வண்டி எண்.646 பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கி முகமன் கூறி அறிமுகப்படுத்தியவர் மேஜை மீது இருந்த கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலைக் கையில் எடுத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதுவரை நான் எந்தப் புத்தகம் வைத்திருந்தாலும் யாரும் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. அவர் தொழிற்சங்கத் தலைவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். கேரளாவில் திருச்சூருக்கருகில் உள்ள முள்ளூர்க்கரையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் ரயில்வே நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபரில் தண்டரை வந்திருந்தார். அவருக்குத் தமிழ் தெரியும் என்பது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியப்பரிச்சயமும் இருந்ததைக் கண்டு வியந்து போனேன்.

பிறகென்ன அவர் புதுமைப்பித்தனின் கதைகள், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், கு.சின்னப்பாரதியின் தாகம், டி.செல்வராஜின் மலரும் சருகும், மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் என்று பேச, நான் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த பஷீரின் இளம் பருவத்தோழி, பாத்தும்மாவின் ஆடு, என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, நாவல்களையும், தகழியின் செம்மீனையும், கேசவதேவின் கண்ணாடியையும், அந்தச் சமயத்தில் வெளிவந்திருந்த நவீன மலையாளச் சிறுகதைத் தொகுப்பான சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் புத்தகத்தைப் பற்றிப் பேச அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாக ஆகி விட்டது. அது மட்டுமல்லாமல் ஊர் ஊராக மக்களிடமிருந்து பணம் பெற்று ’ அம்ம அறியான் “ என்ற மக்கள் சினிமா எடுத்த மகத்தான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரகாமுக்கு திருச்சூரில் பண உதவி செய்த தகவலையும் அவர் சொன்னார். தண்ணீரிலிருந்து எடுத்துப் போட்ட மீனாகத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு டி.என்.வி. பெருங்கடலாகத் தெரிந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் வேளானந்தல் வரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினேன். அவர் வந்து விட்டால் அவரை விட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நகர்வதில்லை. அரசியல், தொழிற்சங்கம், இலக்கியம், எல்லாவற்றிலும் ஞானமுடையவராக இருந்தார் டி.என்.வி. அவருடைய அநுபவங்களைக் கேட்டாலே ஒருவன் விவேகமும் தைரியமும் உடையவனாக ஆகி விடுவான்.

எத்தனை டிரான்ஸ்ஃபர்கள்! எத்தனை சம்பள வெட்டுகள்! எத்தனை விசாரணைகள்! 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதனால் 1978-ஆம் ஆண்டு வரை பணி நீக்கம்! கோட்டம் விட்டு கோட்டம் டிரான்ஸ்ஃபர்கள்! இன்னொருவராக இருந்தால் இதற்குள் போராடியதின் எந்தச் சுவடும் இல்லாமல் முடங்கிப் போயிருப்பார்கள். ஆனால் டி.என்.வி. அயராத போராளியாக இருந்தார். அவரிடமிருந்த தீரத்தில் கொஞ்சமாவது எனக்கு இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவர் என்னை விட பதினைந்து வருடங்களுக்கு மூத்தவர். ஆனால் தான் வயதிலோ, அநுபவத்திலோ, முதிர்ச்சியிலோ பெரியவன் என்று காட்டிக் கொள்ளாத அருங்குணம் கொண்டவர். என் வயதிலுள்ள இளைஞர்களுக்கு இணையாக கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனக்கு அவரை விட்டுப் பிரிய மனமேயில்லை. அதனால் எனக்கு ஓய்வாக இருக்கும் போது நான் தண்டரை போய் விடுவேன்.

அப்போது விழுப்புரம்- காட்பாடி செக்‌ஷனில் நிறைய மலையாளிகள் ஸ்டேஷன் மாஸ்டர்களாகப் பணி புரிந்தார்கள். அவரவர் ஓய்வு நாளில் தண்டரை ஸ்டேஷனைப் பார்த்து புற்றீசல் போல புறப்பட்டு விடுவார்கள். அன்று முழுவதும் கொண்டாட்டம் தான். குடம் நிறைய குடிக்கக் கள்ளு, வாத்துக்கறி, மீன் குழம்பு, மாட்டுக்கறி வறுவல், என்று விருந்து தயாராகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டே மலையாளக் கவிதைகளைப் பாடுவார்கள். அதிலும் எமர்ஜென்சி காலத்தில் மலையாளக்கவி கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எழுதிய “ நிங்ஙள் எண்ட கருத்த மக்கள கொன்னு தின்னல்லோ..” என்ற கவிதையை அவர்கள் கோரஸாகப் பாடும்போது ஆக்ரோஷம் பொங்கும். உண்மையில் அவர்கள் வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தார்கள். எனக்குப் பொறாமையாக இருந்தது. அவர்கள் யாரும் தீவிர இலக்கிய வாசகர்கள் கிடையாது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் வள்ளத்தோல், தொடங்கி பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றேகாட்,மலையாற்றூர் ராமகிருஷ்ணன், உரூபு, கமலாதாஸ், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி., முகுந்தன், காக்கநாடன், என்று அத்தனை எழுத்தாளர்களையும் சாதாரணமாக வாசித்திருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மொழியின் மீது உண்மையான பெருமை இருந்தது. தமிழை அரசியல் லாபத்துக்காக மட்டும் மொழியைப் பற்றிப் பேசுகிற தமிழக அரசியல்வாதிகளைப் போலவோ, மொழியைப் பற்றி எந்தப் பெருமிதமுமில்லாத தமிழ் மக்களைப் போலவோ அவர்கள் இல்லை. அநேகமாக தமிழ்மக்கள் சினிமாக்களால் மட்டுமே வளர்க்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது. கலை, இலக்கியம், அறிவியல் எல்லாம் இரண்டாம்பட்சம் தான். இங்கே சாதாரணமாக படித்தவர்களிடமே தமிழ் இலக்கியத்தைப் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி அறிவியலாளர்களைப் பற்றி கேட்டால் என்ன தெரியும் என்பது கேள்விக்குறியே.

எனக்கு வந்த பொறாமையில் நான் மலையாளம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். என் ஆசையை டி.என்.வி.யிடம் சொன்ன போது உற்சாகமாக எனக்கு அட்சரம் எழுதிக் கொடுத்து உடனே என் ஆசானாகி விட்டார். மற்ற மலையாளத் தோழர்களும் அவரவருக்கு முடிந்த அளவில் எனக்குப் புத்தகங்கள் கொடுத்தும், விளக்கம் சொல்லியும், வாசிக்கச் சொல்லிக் கொடுத்தும் என்னை ஊக்குவித்தனர். அஜய்குமார், ரியாஸ் அலிகான், ராஜன் வர்கீஸ், கேசவ பணிக்கர், என்று எத்தனை நண்பர்கள்! நான் இப்போது ஒரு பத்து புத்தகங்களுக்கு மேல் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நானும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற தகுதியோடு இருப்பதற்கு என் ஆசான் தோழர் டி.என்.வி. தான் காரணம்.

மிகச் சிறந்த பேச்சாளரான டி.என்.வி. ரயில்வே தொழிலாளர்களின் விசாரணையில் டிஃபென்ஸ் கவுன்சிலராகவும் போவார். என்ன தான் அவர் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அவரைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பயம் தான். ஏனெனில் அவரால் யாரையும் தன் வசப்படுத்தி விடமுடியும்.யார் சொன்னாலும் கேட்காத, மூக்கய்யர் என்று புகழ் பெற்ற பரமேஸ்வர அய்யரையே வசப்படுத்தியவர் என்ற கதை தெற்கு ரயில்வே முழுவதும் பேசப்படுகிற கதை.

1974- ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட டி.என்.வி. தன் குடும்பத்தைக் கொண்டு செலுத்த ஊட்டியிலிருந்து தேயிலைத்தூளை மொத்தமாக வாங்கி திருச்சூரில் வினியோகம் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் போட்டோ ஸ்டுடியோக்களில் நெகடிவ் கழுவி முடித்த ரசாயனத்தை வாங்கி அதிலிருந்து சில்வர் நைட்ரைட்டைப் பிரித்து விற்பனை செய்திருக்கிறார். எப்படியோ ஜனதா ஆட்சிக் காலத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்த டி.என்.வி. ஒரு வருட காலத்துக்குள்ளே அடுத்த வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்டார். அப்போது முள்ளூர்க்கரை ஸ்டேஷனில் மூக்கய்யர் தான் ஸ்டேஷன் மாஸ்டர். மூக்கு நீண்டு முன்னாடி வளைந்திருந்ததால் அவர் பரமேஸ்வர அய்யர் மூக்கய்யர் ஆகி விட்டார். ஆனால் ஆளு டெர்ரர். அவருக்குக் கீழே பணி புரியும் அத்தனை பேருக்கும் அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும் வயிறு கலங்க ஆரம்பித்து விடும். ஆபீசர்களையே பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார். அவர் ஆபீஸுக்குக் கடிதம் எழுதினார் என்றால் அதற்கு அப்பீலே கிடையாது. அதிகம் பேச மாட்டார். நிர்வாகத்தில் கில்லாடி. எப்போதும் மேலிடத்துக்குச் சாதகமாகவே நடந்து கொள்பவர் என்றெல்லாம் அவரைப் பற்றிப் பல ஒளிவட்டங்கள் சுழன்று கொண்டிருந்தன. அவருக்கு டி.என்.வி.யை பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. பிடித்திருந்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால் டி.என்.வி.யைப் பற்றி எல்லாம் விசாரித்து வைத்திருந்தார். அதனால் டி.என்.வி.யிடம் சற்று மரியாதையுடனும் நடந்து கொண்டார். 1978- ஆம் ஆண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களின் சங்கமான ஆல் இந்தியா ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் தங்களுடைய யூனிஃபார்ம், பணி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக கூட்ஸ் வண்டிகளை வாங்கவோ, அனுப்பவோ போவதில்லை என்று வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த வேலைகளை டி.என்.வி. செய்து கொண்டிருந்தார். பிரச்சாரப்பயணம், துண்டுப்பிரசுரம், போஸ்டர், என்று வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் அவ்வப்போது ஆபீஸுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் மூக்கய்யர். அந்த மாதத்தில் அவர் பணி ஓய்வு பெறப் போகிறார். அதனால் இன்னும் அதிகமான விசுவாசத்தோடு நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நினைத்தார்.

வேலை நிறுத்தத்துக்கு முதல் நாள் டி.என்.வி. டூட்டி முடியும் போது மூக்கய்யர் தான் அவரை மாற்றி விட வந்திருக்கிறார். அவரிடம் நாளைக்கு வேலை நிறுத்தம் என்பதைச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டர்களின் கோரிக்கைகளின் நியாயம் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசியிருக்கிறார். மூக்கய்யர் கேட்டாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் டி.என்.வி. சொல்லி விட்டு கடைசியாக அவரும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு விட்டு நம்பிக்கையில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டார்.

வேலை நிறுத்தநாளன்று காலையில் டூட்டிக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே கூட்ஸ் வண்டியை அனுப்ப மறுத்திருக்கிறார் டி.என்.வி. ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்த நிர்வாகம் உடனே அவரை சஸ்பெண்ட் செய்து விட்டு மூக்கய்யரை டூட்டியில் சேர அழைப்பு விடுத்தது. நிர்வாகத்திலிருந்து இன்ஸ்பெக்டர்கள், மூக்கய்யர் வந்து டூட்டி எடுத்து கூட்ஸ் வண்டியை அனுப்பக் காத்திருந்தார்கள்.

குவாட்டர்ஸிலிருந்து ஃபுல் யூனிஃபார்மில் தலையில் தொப்பியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார் மூக்கய்யர். உள்ளே நுழைந்தவுடன் இன்ஸ்பெக்டர்களிடம் பேசி அலுவலக சஸ்பெண்ட் ஆணையை டி.என்.வி.க்கு கொடுத்து விட்டு அவரை டூட்டியிலிருந்து விடுவித்தார். அதற்குள் இன்ஸ்பெக்டர்கள் சார் முதல்ல கூட்ஸை அனுப்புங்க சார்.. என்று வற்புறுத்தினார்கள். மூக்கய்யர் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு டூட்டியில் ஜாயின் பண்ணுவதற்கான எல்லாஃபார்மாலிட்டிகளையும் முடித்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து தலையில் இருந்த தொப்பியை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு அந்த இன்ஸ்பெக்டர்களைப் பார்த்து நானும் கூட்ஸை அனுப்ப மாட்டேன் என்றாரே பார்க்கலாம். யாருமே மூக்கய்யரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அந்த கூட்ஸ் வண்டியையே ரத்து செய்யவேண்டியதாயிற்று. அந்த வேலை நிறுத்தமும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால் டி.என்.வி.யை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்கள். அவ்வளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார் டி.என்.வி.

வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் டி.என்.வி. ஆனால் இப்போதும் தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும், அவர்களுக்கு வருகிற சார்ஜ் மெமோக்களுக்குப் பதில் எழுதிக் கொடுக்கவும், விசாரணையில் தொழிலாளர் தரப்பில் ஆஜராகவுமாக இருக்கிறார். இன்னமும் இலக்கியம் வாசிக்கவும், எழுத்தாளர் வைசாகனோடு கள்ளு குடிக்கவும், கவிதைகள் பாடவும் செய்கிறார் டி.என்.வி. என் ஆசானே! என் தோழரே டி.என்.வி. உங்களோடு கழித்த அந்த நாட்களை என் நினைவிலிருந்து அழிக்கவே முடியாது. உங்களை என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தோழரே!

நன்றி – மீடியா வாய்ஸ்

Thursday, 19 July 2012

கம்யூனிஸ்ட் மாமுனிவர்

EMS-2 copy220px-Thakazhi_1

தகழி சிவசங்கரம்பிள்ளை

 

தமிழில் – உதயசங்கர்

 

எல்லாவிதங்களிலும் நான் ஆதரிக்கிற இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடினை முதலில் பார்த்தது எப்படி என்று நினைவுபடுத்தமுடியவில்லை. ஏனென்றால் நேரில் பார்ப்பதற்கு முன்பே என்னைக் கவரவும், பாதிக்கவும் செய்த ஆளுமை அவர்.

எனக்குச் சரியாக ஞாபகம் இருக்கிறது. கேஸரிசபையில் நடந்த விவாதங்களுக்கு ஊடே தான் இ.எம்.எஸ். என் வாழ்க்கையில் நுழைந்தார். நான் ப்ளீடர் பரீட்சைக்குத் திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். எங்களுக்குக் குரு கேஸரி பாலகிருஷ்ணபிள்ளை. அப்போது கேஸரிசபை புதிய சிந்தனைகளின் இலக்கியசர்ச்சைகளின் கேந்திரமாக இருந்தது. 1930 களில் என்று ஞாபகம். கேஸரி இ.எம்.எஸ்ஸினைக் குறித்து அடிக்கடிப் பேசுவார். சில நேரங்களில் விமரிசனமும் செய்வார். கேஸரியின் தலைமையில் எங்களுடைய சபையில் இ.எம்.எஸ். பல சமயம் சர்ச்சைக்குரிய விஷயமாகியிருந்தார். புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர் என்ற வகையில் புதிய சிந்தனைகளைத் தேடியடைய ஆசைப்பட்ட என்னுடைய மனசில் இ.எம்.எஸ். இடம் பிடித்தார்.

அப்போது தான் ‘ உண்ணி நம்பூதிரி ‘ பத்திரிகையைப் பற்றியும், நம்பூதிரி யுவஜன சங்கத்தைப் பற்றியும் அறிய நேர்ந்தது. புரட்சியின் சாராம்சம் பிடித்திருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு உண்ணி நம்பூதிரியில் பிரசுரமான கட்டுரைகள் உத்வேகமளித்தன. இந்தப் பத்திரிகையிலுள்ள பல கட்டுரைகளும் கேஸரியின் சபையில் சர்ச்சைக்குரிய விஷயமாயின. இத்தனைக்கும் பின்னால் இ.எம்.எஸ்ஸினுடைய அறிவார்ந்த தலைமை இருந்தது என்று தெரிந்தபோது, அவர் மீதுள்ள மதிப்பு பெருகியது. அன்று திருவிதாங்கூர்காரர்களாகிய எங்களுக்குக் கொச்சியோடும் மலபாரோடும் போதுமான அளவுக்குப் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். இ.எம்.எஸ்ஸினுடைய தலைமையிலும் வெளியீட்டிலும் ‘ முற்போக்கு ‘ என்ற பத்திரிகை வெளிவந்தது. உண்ணிநம்பூதிரியில் கிடைத்த உற்சாகத்தில் நான் ஒரு ஓரங்க நாடகம் எழுதினேன். பெயர் ஞாபகத்திலில்லை. ஆனால் உள்ளடக்கம் ஞாபகத்திலிருக்கிறது. நெருப்பை உமிழும் புரட்சி. அநாதை இல்லங்களை உருவாக்கக்கூடாது. இருப்பவைகளையும் சாம்பலாக்க வேண்டும். சமூகத்தை நேராக்க அநாதை இல்லங்களால் முடியாது. அவை மனிதனைச் சோம்பேறியாக்குகிறது. இன்றைய அத்தியாவசியத் தேவையான சமத்துவக்கொள்கைகளுக்கு அவை உபயோகப்படாது. இதே புரட்சிகர நோக்கத்தோடு தான் கேஸரியில் கதைகள் எழுதினேன். நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். இதற்கெல்லாம் ஒரு உந்துசக்தியாக அன்று நான் நேரில் கண்டிராத இ.எம்.எஸ். இருந்தார்.

மிகக் குறைந்த தடவைகளே நான் இ.எம்.எஸ்ஸை நேரில் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போது கொஞ்சம் நலம் விசாரிப்போம். தீர்க்கமான உரையாடலோ, விவாதமோ, கிடையாது. சில மீட்டிங்குகளில் வைத்துத் தான் இந்தச் சந்திப்புகளும் நிகழ்ந்தன. யதார்த்தமாய் நலம் விசாரித்துக் கொள்ளும்போதும் எனக்கு வெளிப்படையாகத் தெரியாத பாசமும் ஆதரவும் உறுதியாக இருந்தது.

முற்போக்கு இலக்கிய அமைப்போடு ஆரம்பம் முதலே நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஷொரனூர், திருச்சூர், கோட்டயம், கொல்லம், மாநாடுகளில் கலந்து கொண்டுமிருக்கிறேன். 1973 ல் ஷொரனூரில் நடந்த இலக்கிய மாநாட்டில் கேசவதேவோடு கலந்து கொண்ட அநுபவம் உண்டு. அன்று இளம் எழுத்தாளர்களுக்கு கதை கவிதை நாடகம் முதலான இலக்கியப்பிரிவுகளில் போட்டி நடத்தினோம். கேசவதேவும் நானும் சேர்ந்து தான் படைப்புகளைப் பரிசீலித்தோம். ஏராளமான படைப்புகள் கிடைத்தன. ஆனால் அவைகளில் இலக்கியம் இல்லை என்ற விமர்சனம் எங்களுக்கு இருந்தது. அதாவது முற்போக்கு இலக்கிய அமைப்பு உயர்த்திப் பிடித்த சில விஷயங்களோடு வேறுபாடு ஏற்பட்டது. அந்த நிலையில் இ.எம்.எஸ்ஸின் இலக்கியம் சம்பந்தமான நிலைபாடுகளோடு ஒத்துப்போக முடியவில்லை.

முண்டசேரியும் பொதுவாக எங்களோடு உடன்பட்டார். அதே நேரம் இ.எம்.எஸ்ஸினுடைய இலக்கியக் கட்டுரைகளை விருப்பத்தோடு வாசிக்கவும் செய்தோம். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர் படைப்புகளின் புதுமையும், யதார்த்தமும், ஆத்மார்த்தமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. யோசித்துப் பார்க்கும்போது நெருக்கமாகவும் இருந்தது.

ஸி.வி.ராமன் பிள்ளையைப் பற்றி இ.எம்.எஸ். வெளியிட்ட கருத்துகளை அப்படியே என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஸி.வி. நாவல்களின் காலகட்டத்தைப் பரிசோதிக்கும் போது ராஜபக்தி தவறு என்று கருத முடியுமா? கொஞ்சம் தாமதமாக என்றாலும் இ.எம்.எஸ். சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தது. அது நல்ல விதமாகவே வெளிவந்தது சந்தோஷம்.

உலகப்புகழ் பெற்ற இரண்டு சங்கரன்கள் கேரளத்தில் பிறந்தார்கள் என்று நான் நம்புகிறேன். முதலாவது ஆதி சங்கரர் சங்கராச்சாரிய சுவாமிகள். இரண்டாவது இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாடு. ஆதி சங்கரன் ஆன்மீகவாதியாகவும், வேதாந்தியாகவும் இருந்தார். சமகாலச் சங்கரன் உன்னதமான அரசியல் சிந்தனையாளராக இருந்தார். மார்க்சிய அறிவிலிருந்து வெளிப்பட்ட புதிய வெளிச்சம் தான் இ.எம்.எஸ். பாரதத்திற்குக் கொடுத்த மகத்தான கொடை. எனக்கு அறிவார்ந்த தலைமையேற்ற இ.எம்.எஸ்ஸின் அறிவு சாதனை படைத்திருக்கிறது. மற்றவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட, தான் நம்புகிற கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்த வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. இந்த விஷயத்தில் அவருக்குச் சமமாக இன்னொரு ஆளுமையை என்னால் பார்க்க முடியவில்லை. பாரதத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்குத் தெளிவான உருவம் கொடுத்தது இ.எம்.எஸ். தான் என்று நான் நம்புகிறேன். இந்தச் சித்தாந்தத்தின் ஊடே வாழ்க்கைக்கு ஒரு புதிய முகம் தந்து கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்தியது தான் இ.எம்.எஸ்ஸினுடைய வெற்றிக்குக் காரணம். தீர்க்கதரிசனமும், உயிர்த்துடிப்பு மிக்க அறிவும் கொண்ட ஒருவருக்கே இந்த மாதிரியான தன் வயப்படுத்துதல் முடியும். இ.எம்.எஸ். ஒரு யதார்த்தவாதி. பாரதத்தின் ஆத்மாவின் உயிர்த்துடிப்பாக விளங்கியது யதார்த்தவாதம். அதனால் அவருடைய கருத்துகளை சமகால இந்தியா கவனமுடன் கேட்டது. ஏற்றுக்கொள்ளவோ, விமர்சிக்கவோ செய்தது. பாரத பாரம்பரியத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் திறந்த மனதுடன் நான் சொல்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரையிலேனும் கம்யூனிஸ்ட் மாமுனிவர் அவர். லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் போலவே எனக்கும் இன்று அவர் ஒரு மாபெரும் உந்துசக்தி.

நன்றி – மலையாளம் வாரிக