Showing posts with label ஸ்கூல். Show all posts
Showing posts with label ஸ்கூல். Show all posts

Thursday, 14 February 2013

குழந்தைகளின் அற்புத உலகில்-23

கனவாய் ஒரு பள்ளி டோமாயி

உதயசங்கர்dotochan

பெரும்பாலும் நமது சமூகத்தில் நாம் குழந்தைகள் எல்லோரையும் ஒன்று போலவே தான் கருதுகிறோம். ஒவ்வொரு குழந்தையும்

ஒவ்வொரு தனித்தன்மையுடன் வளர்கிறார்கள். அவர்களுடைய தனித்தன்மைகளை கண்டறிவதற்கான பொறுமை நமக்கில்லை.

அப்படியே கண்டறிந்தாலும் அதை வளர்ப்பதற்கான முயற்சிகளும் நம்மிடம் இல்லை. ஏனெனில் நாம் குழந்தைகளின் எதிர்காலம்

குறித்து அச்சப்படுகிறோம். அவர்களுடைய வாழ்க்கையை வடிவமைத்து சீராக்கிக் கொடுக்க வேண்டியது நமது பொறுப்பு என்று

பெற்றோர்கள் கருதுகிறார்கள். ஆகவே சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ள வேலை, சம்பளம், பாதுகாப்பு, என்பதைக் குறித்த

அளவுகடந்த எச்சரிக்கையினால் குழந்தைகளின் தனித்தன்மைகளை அலட்சியப்படுத்துகிறோம். அல்லது அடக்கி ஒடுக்குகிறோம்.

குழந்தைகளை வசக்கி வழிக்குக் கொண்டுவரவே குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கிறோம். பள்ளிக்கூடமும்

குழந்தைகளின் தனித்தன்மையை எப்பாடுபட்டாவது அழிக்க நினைக்கிறது. பெரும்பாலும் பள்ளிகள் அந்த முயற்சியில் வெற்றி பெற்று

விடுகின்றன. ஏனெனில் பள்ளிக்கூடங்களின் கையில் உடல்ரீதியான, மனரீதியான துன்பங்களைத் தருவதற்கான அதிகாரம்

இருக்கிறது. பள்ளிக்கூடத்தால் அப்படி வசக்க முடியாதபோது அது அந்தக்குழந்தையை அவமானப்படுத்தி பள்ளியை விட்டு

நிறுத்துவதற்கான எல்லாவேலைகளையும் செய்கிறது. குழந்தைகளும் பயந்து தாழ்வுமனப்பான்மையினால் ஒடுங்கி பள்ளியை விட்டு

நின்று விடுகின்றன. இப்படி இடைநிற்றலாய் பள்ளிப்படிப்பை விட்ட குழந்தைகள், பள்ளிக்கூடமே வீட்டுக்கு அனுப்பிய குழந்தைகள்,

மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோருக்குமான ஒரு ஜப்பான் பள்ளி தான் டோமாயி. அந்தப் பள்ளியைப் பற்றி அந்தப்பள்ளியில்

படித்த டெட்சுகோ குரோயாநாகி எழுதிய புத்தகம் டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி. சு.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன் இருவரின்

மொழிபெயர்ப்பில் தமிழில் நேஷனல் புக் டிரஸ்டின் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் குழந்தைக்கல்வியில், நாம் எவ்வளவோ

தூரம் போக வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது. இது கல்வித்துறை சார்ந்த புத்தகம் அல்ல. இது ஒரு அற்புதமான

கதைப்புத்தகம். வாசிக்க வாசிக்க குழந்தைகளுக்கு ஆனந்தத்தையும், பெரியவர்களுக்கு ஏக்கத்தையும் தருகிற புத்தகம்.

ஜப்பானியக்கல்வியியலாளர், சோசாகு கோபயாஷி 1937 ஆம் ஆண்டு துவங்கிய பள்ளி தான் டோமாயி. குழந்தைகளின் சுயமரியாதையையும்,

தனித்தன்மையையும் வளர்க்கச் சுதந்திரமான பாடத்திட்டத்தை அவர் தேர்ந்தெடுத்தார். குழந்தைகள் அனைவருமே பிறக்கும்போது உள்ளார்ந்த

நல்லியல்புகளுடனும், திறமையுடனும் தான் பிறக்கிறார்கள். அவர்கள் வளரும் சூழலும் பெரியவர்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின்

பொய்மையும், பாசாங்கும் தான் அவர்களுடைய இயல்பான நல்லுணர்வுகளையும், திறமையையும் அழித்து விடுகிறது. இந்த நல்லுணர்வுகளை

பாதுகாத்து வளர்க்கவும், அவர்களுடைய தனித்தன்மையை வளர்க்க உதவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் டோமாயி என்ற பள்ளி

உருவானது. பழைய ரயில்பெட்டிகள் தான் வகுப்பறைகள். இயற்கையான சூழல். குழந்தைகளின் உள்ளார்ந்த விருப்பங்களை, அவர்களின்

தனித்தன்மைகளை, கண்டறியும் விதமான பாடத்திட்டங்களை, குழந்தைகள் தாங்கள் விரும்பியபடியே நடந்து கொள்ள வாய்ப்பு, என்று

அந்தப்பள்ளியைப் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது.

இந்தக்கதையை எழுதிய டெட்சுகோ குரோயாநாகி என்ற டோட்டோ சான் கோபயாஷி நடத்திய தான் கல்வி பயின்ற கதையைத் தான்

எழுதியிருக்கிறார். அவரும் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும்போதே அவருடைய சேட்டையைத் தாங்கமுடியாமல் பள்ளியிலிருந்து

நீக்கப்பட்டார். ஆனால் டோமாயியில் அவர் கல்வி பயின்று பின்னாளில் ஜப்பான் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடத்துநராக

மாறினார். வாழ்வில் அவர் அடைந்த அத்தனை புகழுக்கும் முன்னேற்றத்துக்கும் டோமாயியில் கோபயாஷியிடம் கல்வி கற்றது தான் காரணம்

என்று சொன்னார். அந்தக் கல்விமுறை தான் அவரை மிகுந்த தன்னம்பிக்கையுள்ளவராக மாற்றியது. காரணம் கோபயாஷியின் பள்ளியில்

குழந்தைகள் தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கும் செய்ல்படுத்துவதற்கும் முழுச்சுதந்திரம் இருந்தது. இந்தப் புத்தகம் ஜப்பானில் வெளியான

ஆண்டே நாற்பந்தைந்து லட்சம் பிரதிகள் விற்றது. அதன் பிறகு உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகம். டோட்டா சான்

ஜன்னலில் ஒரு சிறுமி.

அந்தப்பள்ளியில் கற்பது காலை வேளையில் அதுவும் குழந்தைகளின் விருப்பப்படியே நடக்கும். மாலையில் இயற்கையை உற்று நோக்கல்,

உலாவச்செல்லுதல், தாவரங்களைச் சேகரித்தல், படம் வரைதல், பாடுதல், தலைமையாசிரியரின் உரை கேட்டல், என்று திட்டமிடப்பட்டு

நடத்தப்பட்டது. அந்தப்பள்ளியின் தலைமையாசிரியரான கோபயாஷி இந்த நூலை எழுதிய டோட்டோ சானைப் பார்க்கும் போதெல்லாம் நீ

உண்மையிலேயே நல்லபெண் தான். உனக்குத் தெரியுமா? என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது டோட்டோ சானுக்கு அவ்வளவு

தன்னம்பிக்கையை ஊட்டியது. எல்லாக்குழந்தைகளிடமும் அவ்வாறே அவர் சொல்லியிருந்தார். அதன் மூலம் நேர்மறைச்சிந்தனைகளை மனதில்

விதைக்கும் அவருடைய நல்லெண்ணம் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியில் படித்த எல்லோருமே ஏதாவதொரு துறையில் சிறந்து

விளங்கினார்கள்.

டோமோயிப் பள்ளியில் பள்ளிநேரம் முடிந்த பின்னும் யாரும் வீட்டுக்குப் போக விரும்புவதில்லை. அதே போல காலையில் பள்ளிக்கு

வருவதற்கும் கொஞ்சமும் தாமதிப்பதில்லை. டோமாயி பள்ளி அப்படிப்பட்டதாக இருந்தது என்று டெட்சுகோ கூறுகிறார். அதைக் கேட்கும்போது

நமது பள்ளிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. காலையில் எழுந்தவுடனேயே பள்ளிக்கூடத்துக்குப் போகவேண்டுமே என்ற

கவலையுடனும், மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் சிறையிலிருந்து விடுதலையான உணர்வுடனும் வருகிற நமது குழந்தைகளையும்

நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆரம்பக்கல்வியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. 1930-களிலேயே உலகம் முழுவதும்

இப்படியான சிந்தனைகள் எப்படி பரவியிருந்தன என்பதைத் தான் டோட்டோ சானும் சொல்கிறார்.

நம்முடைய குழந்தைகள் சுயமரியாதையுள்ளவர்களாக, சுயசிந்தனையுள்ளவர்களாக, தன்னம்பிக்கை மிக்கவர்களாக, நல்லுணர்வு மிக்கவர்களாக,

திறமையானவர்களாக வளர்வதற்கும், வாழ்வை எதிர்கொள்வதற்கும் அவர்களுடைய ஆரம்பக்கல்வியில் பெரும்புரட்சியே செய்ய

வேண்டியுள்ளது. அதன் முதல்படி குழந்தைகளும், பெற்றோரும், ஆசிரியர்களும், மற்றவர்களும் டோட்டா சான் சன்னலில் ஒரு சிறுமியை

வாசிக்க வேண்டும். வாசித்து யோசிக்க வேண்டும்.

நன்றி- இளைஞர் முழக்கம்  

Saturday, 9 June 2012

கதையின் ஆதிபருவம்

 pictures உதயசங்கர்

குரங்கிலிருந்து உழைப்பின் வழியாகவே மானிட இனம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அந்தப் பரிணாமவளர்ச்சியின் பாதையில் விலங்கின் மூளை மனித மூளையாக மாறத் தொடங்குகிறது. அதன் வரையறை குட்பட்ட சைகை மற்றும் ஒலிக்குறிப்புகள் தன் எல்லையை விரிகிறது. அதற்கு முன்புவரை விலங்குகள், பறவைகள்,பூச்சிகள், எல்லாமும் சில குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகளின் மூலம், சைகை மற்றும் உடல் மொழியின் மூலம் தங்கள் தேவைகளான பசி, கோபம், பயம், இணைவிழைச்சு, என்று எல்லா உணர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. இந்த சைகை, உடல், ஒலி, மொழியை அவைகள் கற்றுக் கொள்வதில்லை. பிறக்கும்போதே அதன் உள்ளுணர்வின் ஆழத்தில், தலைமுறை தலைமுறையாக, தொடர்ந்து வருகின்றன. அவை புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது திகைத்துப் போய்விடுகின்றன. தங்கள் ஆதிஞாபகச் சில்லுகளில் தேடிப்பார்த்து ஏமாந்து போகின்றன. குறிப்பிட்ட, வரையறைக்குட்பட்ட,சைகை,மற்றும் உடல் மொழி, ஒலிக்குறிப்புகளைத்தாண்டி அவற்றால் புதிதாகச் சிந்திக்க முடிவதில்லை.

ஆனால் மனிதன் அப்படியில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக்குறித்தும் தன்னுடைய சூழல் குறித்தும் புறவயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். தன்னைக்குறித்து தனியாகவும், சூழலோடு பொருத்தியும், சிந்திக்கிற மனிதனின் ஆற்றலையே பகுத்தறிவு என்கிறோம். மற்ற உயிரினங்களுக்கோ தன்னைச் சூழலில் இருந்து பிரித்துணரும் ஆற்றல் கிடையாது. இயற்கையோடு இணைந்தே அவை தங்களுடைய தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எனவே அந்த இயற்கைச் சூழல் மாறும்போது அல்லது அழியும்போது மாறிய சூழலுக்கேற்ப தங்களுடைய தகவமைப்புகளை மாற்ற முடியாத உயிரினங்கள் அழிந்து விடுகின்றன். பரிணாமக்கோட்பாட்டின் மூலமாக மனிதகுல வரலாற்றில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்திய டார்வினின், தகுதியானவைகளின் உயிர்மீட்சி (survival of the fittest  ) என்ற கொள்கையின்படி இயற்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாத எல்லா உயிரினங்களுமே வாழ்வதற்கான தங்களுடைய தகுதியை இழந்து விடுகின்றன.ஆனால் மனிதர்கள் மட்டுமே தன்னுடைய உழைப்பின் மூலமும் பகுத்தறியும் திறன் மூலமும், இயற்கையின்மீது வினை புரிந்து தாங்கள் வாழத்தகுதியாக இயற்கையை மாற்றுகிற வல்லமை பெற்றவர்களாக மாறியிருக்கின்றனர்.

உழைப்பு சகமனிதர்களுடனான உறவில் பெரும் மாற்றத்தை உருவாக்குகிறது. தங்களுடைய வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, விலங்கு பருவத்திலிருந்த பழைய சைகை மற்றும் உடல்மொழியும், ஒலிக்குறிப்புகளும், போதுமானவைகளாக இல்லை. அப்போது புதிய சைகை மற்றும் உடல்மொழியும் புதிய ஒலிக்குறிப்புகளை சிருஷ்டிக்கின்றனர். சிந்தனையின் ஒளி தன் கிரணங்களை மெல்ல முகிழ்க்கிறது. மனிதமூளையின் மடிப்புகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவங்களை, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளும் பேராவல் அதிகரிக்கின்றது. இந்தப் பேராவலில் விளைந்த பயிர் தான் கதை என்று சொல்லலாம். கடந்த காலத்தைச் சொல்கிற சமூகச் செயல்பாடாகவே ஆதியில் கதைசொல்லுதல் தொடங்கியிருக்கலாம். முதலில் இது குகைப்பாறைக் கீறல்களாக, ஓவியங்களாக, குறியீடுகளாக,அடையாளச் சின்னங்களாக, மெல்ல மெல்ல மனிதனின் நனவிலி மனதில் பெரும் விருட்சமென வளர்ந்திருக்கிறதுகதை. மொழி தோன்றியவுடன் கதைகள் ஆயிரங்கால் பூச்சிகளைப் போல ஊர்ந்து சென்று மனித உயிரில் குடியேறிவிட்டது. பின்னர் கற்பனைகளும், புனைவும் பிறந்து கதைகளை மனித இனத்தின் மூச்சாக மாற்றி விட்டது.

ஆதியில் வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்த போது தன்னுடைய வேட்டையனுபவங்களைக் கதையாக மாற்றினான். ஆற்றங்கரை நாகரிகத்தில் வேளாண்சமூக அனுபவங்களை கதையாக மாற்றினான். மனித சமூகத்தின் உற்பத்திசக்திகளின் மாற்றத்திற்கேற்ப கதைகளும் மாறிக் கொண்டே வந்தன. கதையின் உடல் முழுவதும் மனிதகுலவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறபோது புதிது புதிதாகப் பிறக்கிறது. கதை சொல்வது படைப்பூக்கஉணர்வைத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பழைய கதையாக இருந்தாலும் கதை சொல்பவர் அதை அப்படியே சொல்வதில்லை. கதை கேட்பவரும் அதை அப்படியே கேட்பதும் இல்லை. எனவே தான் கதைகளுக்கு என்றும் மூப்பில்லை. அன்றலர்ந்த மலர் போல மலர்ந்து கொண்டேயிருக்கின்றன கதைகள்.

ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுடைய வெற்றிகளை, தோல்விகளை, வேட்கைகளை, கொண்டாட்டங்களை, கனவுகளை, கதைகளுக்குள் நேரிடையாகவும், மறைமுகமாகவும், பொதிந்து வைத்திருக்கின்றன. அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தவும் செய்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட பிரதேசமும், மண்ணும் நீர்வளமும், இயற்கையும், வாழ்நிலையும் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்துக்கென்றே பிரத்யேகமான கதைகளை உருவாக்குகின்றன. இந்தக் கதைகள் அந்த இனக்குழுவின், அந்த வட்டாரத்தின் மொழிப்பிரயோகம், பழக்க வழக்கங்கள், வரலாறு, பண்பாட்டைத் தெரிவிக்கின்றன.

இன்று ஒற்றைக் கலாச்சாரத்திணிப்பினால் நம் பன்முகக் கலாச்சாரத்தின் வேர்கள் அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே போல தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன் கேம்ஸ்,என்று நவீன சாதனங்கள் பெருகி கதை சொல்லும் நம் மரபினை அரித்துக் கொண்டிருக்கின்றன. பழங்கதைகள்,நாடோடிக் கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வீரகதைகள், துப்பறியும் கதைகள், மந்திரக்கதைகள், ராஜாராணிக்கதைகள், புதிர்க்கதைகள், விடுகதைகள், பஞ்சதந்திரக் கதைகள், என்று கதைகள் தான் எத்தனை வகை?

இன்று குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு தாத்தாக்களோ,பாட்டிகளோ, வீடுகளில் இல்லை. அப்பா, அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடப் பயிற்சிக் கூடங்களாகி விட்டன. ஆனாலும் குழந்தைகள் கதைகளைத் தங்களுக்கே உரிய பாணியில் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளிடம் தான் கதையின் மலர் பூத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு குழந்தை இப்படிக் கதை சொல்லியது; ஒரு வீட்ல களவாணிப்பய வந்து எல்லாத்தையும் சுருட்டி எடுத்துகிட்டுப் போகும் போது அந்த வீட்ல இருந்த குழந்தை பாத்துருச்சி.. அது உடனே களவாணிப்பய கிட்ட என்ன சொல்லுச்சி தெரியுமா? மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்துகிட்டுப் போயிரு..இல்லேன்னா அப்பாவை எழுப்பிருவேன்.