Showing posts with label கிரேஸி. Show all posts
Showing posts with label கிரேஸி. Show all posts

Saturday, 14 December 2019

செவ்வாய்


1.   செவ்வாய்
மலையாளத்தில்- கிரேஸி

தமிழில் - உதயசங்கர்
பரண் மீது போட்டிருந்த ஒரு சிறிய காகிதப்பெட்டி தான் அவர்களுடைய வீடாக இருந்தது. அதற்கு மேல்கூரையில்லை. பெட்டியின் சுவர்களில் பல நிறங்கள் உறைந்து கிடந்த வண்ணக்கலவைத்தட்டில் தலை சாய்த்து தூரிகை உறங்கிக் கொண்டிருந்தது. அருகில் ஒரு பெண்பொம்மை இருந்தது. ஆறு கோணத்தில் வலை பின்னி காத்துக்கொண்டிருந்த ஒரு சிலந்தியை உற்றுப்பார்த்த படி மல்லாந்து கிடந்தது. அவளுடைய ஒரு கண்ணை யாரோ நோண்டியெடுத்து விட்டார்கள். கவனித்துப்பார்க்கிற யாருக்கும் அந்த ஒரு கன்ணில் ஒரு காட்சியும் தெரியாது என்பது புரியும். வால் முறிந்து போன ஒரு எலிக்குட்டி இருந்தது. அதன் பஞ்சுத்தலையில் இருந்த கருப்புமுத்துக்கண்கள் எதையோ பார்த்துப் பயந்தமாதிரி மங்கிக் காணப்பட்டன. கருப்பு ஞெகிழி மூக்கு உரிந்த ஒரு குட்டிக்கரடி இழந்த வாசனைகளை மீண்டும் பிடித்து விட ஆசைப்பட்டு அட்டைப்பெட்டியின் அடியில் முகத்தை புதைத்துக் கிடந்தது. சிறகுகள் ஒடிந்த பச்சை பனைஓலைக்கிளி பாதி கிறக்கத்தில் அகாயத்தின் நீலநிறத்தைக் கனவில் காண்பது போல தோன்றியது.
கோடைமழை ஓட்டின் மீது விழுந்து முணுமுணுக்கிற சத்தம் கேட்டு குட்டிக்கரடி முகத்தை உயர்த்தினான்.
“ நண்பர்களே! இதோ மழை! “ என்று கூப்பிட்டு கத்தினான். சட்டென அவனுடைய குரல் சங்கடத்தால் தடுமாறியது.
“ கஷ்டம்! நாம இப்போ உள்ளே அல்லவா இருக்கோம்.. வெளியில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..”
மழையின் சத்தம் கேட்டு பெண்பொம்மையின் ஒரு கண்ணில் ஒரு சிறு ஒளி மின்னியது. எலிக்குட்டி வெடித்துச் சிரித்து ஒரு பாட்டுப் பாடினான்.
“ மழையும் பெய்யுது
மத்தளம் கொட்டுது
மந்தாரப்பூ பூத்து
வாசம் வீசுது..”
எலிக்குட்டி மூக்கைச் சுளித்து
“ மீதிப்பாட்டு மறந்து போச்சே! “ என்றது.
பனையோலை பச்சைக்கிளி நடுக்கத்துடன்,
“ நல்லதாப்போச்சு.. என்னுடைய சிறகுகள் ஒடிந்தபிறகு எனக்கு மழையைப் பிடிக்கலை.. மழைப்பாட்டும் பிடிக்கலை..”
என்றது. அப்போது ஓட்டின் விரிசல்வழியே நிறப்பலகையில் மழைத்துளிகள் சொட்டுச் சொட்டாய் விழத் தொடங்கின. தூரிகை திடுக்கிட்டு எழுந்து சிரித்தது.
“ ஆகா இனிமேல் என்னால் சித்திரம் வரைய முடியும்.. உறைந்திருந்த நிறங்கள் எல்லாம் மழைத்தண்ணீரில் கரைவதைப் பார்த்தீர்களா? “
வெளியில் மழை குலுங்கிச் சிரித்தபடி எங்கேயோ போய் விட்டது. தூரிகை வேகமாக அட்டைப்பெட்டியின் சுவர்களில் சித்திரம் வரையத் தொடங்கியது. இளநீல நிறத்தைத் தொட்டு ஒரு ஆற்றை வரைந்து பெருமூச்சு விட்டது.
“ முன்பு ஆறு இப்படியிருந்தது.. நல்ல சுத்தமான பளிங்குத் தண்ணீர்..”
இப்போது என்னவாயிற்று என்று எல்லோரும் தூரிகையை உற்றுப்பார்த்தனர். அது சங்கடப்பட்டது.
“ இப்போது வெறும் சகதிக்குட்டையா இருக்கு..”
தூரிகை இன்னொரு சித்திரம் வரையத்தொடங்கியது. நீல நிறமுள்ள தீற்றல்கள் வருவதைப் பார்த்த குட்டிக்கரடி,
“ உனக்கு நீல நிறச் சித்திரங்கள் மட்டும் தான் வரையத்தெரியுமா? “
தூரிகையின் குரல் கீச்சிட்டது.
“ இல்லையில்லை…முன்பெல்லாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது.. மலைகளெல்லாம்.. நீலநிறத்தில் இருந்தன.. நிறைய காடுகள் இருந்ததனால் அப்படித் தெரிந்தது.. இப்போது எல்லாம் மொட்டையாகி விட்டது இல்லையா? அது மட்டுமல்ல.. அவற்றின் மண்ணும் பாறையும் மனிதர்கள் அள்ளிக்கொண்டு போய் விட்டார்கள்..”
பின்னர் தூரிகை ஒரு மயானத்தை வரைந்தது. வரைந்த பிறகு உறைந்த குரலில் தொடர்ந்து சொன்னது,
“ முன்னால் இது ஒரு பெரிய வனமாக இருந்தது.. எல்லாவற்றையும் மனிதர்கள் அழித்து விட்டார்கள்.. இப்போது இங்கே ஒரு புல் கூட முளைக்காமல் மயானமாகி விட்டது..”
அட்டைப்பெட்டிக்குள்ளே ஒரு அனல்காற்று வீசி அவர்களை வாட்டத்தொடங்கியது. அப்போது பனையோலைப் பச்சைக்கிளி பயத்துடன் சொன்னது.
“ மழை பிடிக்கலைன்னு நான் இனி எப்போதும் சொல்லமாட்டேன்..”
கடைசியில் ஒரு சிவப்புக்கோளத்தை வரைந்த தூரிகை சொன்னது,
“ இது தான் செவ்வாய்.. மனிதர்கள் இப்போது செவ்வாயில் குடியேறத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.. அதற்குச் செலவாகும் பணத்தை வைத்து இந்த பூமியை செழுமைப்படுத்தலாம்.. அதெப்படி? பயன்படுத்தி விட்டு தூக்கியெறிவது தானே மனிதர்களின் பழக்கம்.. இந்த மாதிரி ஒழுக்கமில்லாத மனிதர்கள் செவ்வாய்க்குப் போனால் என்னாகும்? அதையும் குட்டிச்சுவராக்குவார்கள்!..”
அவர்களுக்கு மனிதர்களைப் பற்றி நினைத்து போதும் போதும் என்றாகிவிட்டது. பெண்பொம்மையின் ஒற்றைக்கண்ணில் உறைந்த பார்வை திரும்பி வந்தது. எலிக்குட்டியின் கருப்புமுத்துக்கண்களில் பழையபடி ஒளி மங்கியது. குட்டிக்கரடி அட்டைப்பெட்டியின் அடியில் முகத்தைப் புதைத்தது. பனையோலை பச்சைக்கிளி மறுபடியும் கண்களை மூடி பாதிமயக்கத்தில் ஆழ்ந்தது. பிறகு ஒரு கொட்டாவி விட்ட தூரிகை நிறப்பலகையில் தலை சாய்த்து உறங்கிப்போனது.

நன்றி - பொம்மி


Thursday, 31 October 2019

கிளிமரம்



கிளிமரம்

மலையாளத்தில் - கிரேஸி

தமிழில் - உதயசங்கர்


அடி முதல் நுனிவரை கசக்கின்ற மரமாக இருந்தது அந்த மரம். பூக்கவோ, காய்க்கவோ இல்லை. அதனால் அந்த மரம் வருத்தத்தில் இருந்தது. ஒரு கிளி கூட அந்த மரத்தின் கிளைகளில் பறந்து வந்து ஓய்வெடுத்ததில்லை. தன்னுடைய பிறவி இப்படி பாழாகி விட்டதே என்று நினைத்து அந்த மரம் நீண்ட பெருமூச்சு விட்டது. கூட்டத்திலிருந்து தப்பி வந்த ஒரு கிளிக்கு அந்த மரத்தின் வருத்தம் புரிந்தது. அந்தக்கிளி மரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கேட்டது,
“ நீ எதற்காக இவ்வளவு வருந்துகிறாய்? “
மரத்திடம் இதுவரை யாரும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதில்லை. மகிழ்ச்சியினால் மரத்தின் கண்கள் நிறைந்தன. இரண்டு துளி கண்ணீர் வடித்த மரம் சொன்னது,
“ நான் ஒரு கசப்பு மரம். நான் எப்படி இப்படியானேன் என்று எனக்குத் தெரியவில்லை… இந்த வழியாகப் பறந்து போகிற கிளிகள் யாரும் என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எல்லா மரங்களையும் தழுவிச் செல்லும் காற்று கூட என்னை மறந்து விட்டுப்போவது தான் வழக்கம்..”
கிளி நேராகப் பறந்து சென்று ஒரு கிளையில் போய் உட்கார்ந்தது. மரம் புளகாங்கிதமடைந்தது. அது கிளியிடம்,
“ ஆகா ஒரு கிளியின் தொடுகை எவ்வளவு சுகம் என்று எனக்கு இப்போது தான் புரிந்தது.. மிக்க நன்றி நண்பா..”
கிளி தூரமாய் பார்த்து எதையோ நினைத்து மௌனமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு சொன்னது,
“ இனிமேல் நாம் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம்.. நான் உன்னுடைய கிளையில் தங்கியிருந்து உனக்காகப் பாடுவேன்..”
மரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. மரம் கேட்டது,
“ நீ வடக்கேயிருந்து தானே வருகிறாய்? உன்னுடைய நாட்டில் குளிர்காலம் கழிந்த பிறகு நீ உன்னுடைய கூட்டத்திடம் திரும்பிப் போய்விடுவாய் இல்லையா? “
“ ஓ “
கிளி வேறு வழியின்றி சொன்னது,
“ எனக்கு யாருமில்லை.. அப்பாவோ அம்மாவோ கூடப்பிறந்தவர்களோ, ஒருவருமில்லை. அதனால் இங்கே உன்னோடு தங்கி இருப்பதில் ஒரு பிரச்னையுமில்லை..”
அப்போது மரத்தின் தொண்டை தழுதழுத்தது.
“ ஒத்தையில் இருப்பதின் துயரத்தை என்னைப் போல யாருக்குத் தெரியும்? ஆனாலும் நண்பா, நீ திரும்பிப் போகத்தான் வேண்டும்.. அதுவரை இங்கே தங்கியிருந்து எனக்காக பாட்டுகள் பாடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..”
கிளி கண்களை மூடிக்கொண்டு தியானித்தது. பின்னர் மிக மிக இனிய குரலில் கசப்பு மரத்துக்காக பாடத்தொடங்கியது. அத்தனை இனிய ஒரு இசையை அந்தக் காடு அதுவரையும் கேட்டதில்லை. மற்ற மரங்களிலிருந்து சளசளத்துக்கொண்டிருந்த பறவைகள் எல்லாம் சட்டென்று அமைதியாகி விட்டன. அந்த வழியாக பயணம் போன பறவைகளும் அருகில் இருந்த மரங்களில் இறங்கி சிறகுகளை மடக்கி காது கொடுத்தன. சில மிருகங்கள் கூட கசப்பு மரத்தின் கீழே வந்து வாயைத் திறந்து மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. பாட்டுக்காரனான கிளி இதையெல்லாம் அறியாமல் இசை கூட்டி இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தது.
பாட்டு முடிந்தபோது மரம் சொன்னது,
“ என்னுடைய ஆன்மாவில் துளியூண்டு இனிமை கலந்து விட்டதாக தோணுது.. ஒருவேளை உன்னுடைய பாட்டைக் கேட்டு நான் ஒரு கசப்பு மரமாக இல்லாமல் மாறிவிடுவேன் என்று தோணுது..”
நனைந்த கண்களோடு கிளி சொன்னது,
“ அப்படி நடந்தால் நான் தான் அதிக மகிழ்ச்சியடைவேன்..”
கிளி இடையிடையில் எங்கேயோ பறந்து சென்று இரை தேடி விட்டு வேகமாய் அந்தக் கிளைக்குத் திரும்பி வந்தது. அது புதிய புதிய பாட்டுகளை மரத்திற்காக இனிமையினிமையாகப் பாடியது. அதைக் கேட்டு கேட்டு மரத்தின் கசப்பு மாறியது. ஆத்மாவில் தெளிவு உண்டாகியது. ஒரு அதிகாலையில் மரம் வெடித்துச் சிதறிப் பூத்தது. அது ஆனந்தத்துடன் அழைத்துக் கூவியது,
“ ஆகா என்னுடைய கிளைகளில் எல்லாம் பூக்கள் பூத்திருக்கின்றன…”
சோர்ந்து போய் மரக்கிளையில் உட்கார்ந்து கிறங்கிப்போயிருந்த கிளியோடு மரம் சொன்னது,
“ பிரியமுள்ள நண்பா! இந்தப் பூக்கள் அத்தனையும் உனக்குத்தான்..”
திடுக்கிட்டு முழித்த கிளியின் கண்களில் பூக்களின் நிறம் தெரிந்தது. மெல்லிய குரலில், அது சொன்னது,
“ எனக்கு மிகவும் மகிழ்ச்சி! மகிழ்ச்சி! “
அப்போது மரம் சொன்னது
“ நண்பா உன்னுடைய சத்தம் மிகவும் பலகீனமாகி விட்டதே.. கண்டிப்பாக ஏதோ ஒரு துயரம் உன்னை வாட்டுகிறது… நீ என்னுடைய கசப்பை மாற்றியதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.. இனிமேலாவது நீ உன்னுடைய கூட்டத்திற்குத் திரும்பிப்போகணும்..”
கிளி எதுவும் பேசாமல் சிறகுகளை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அப்போது ஆனந்த ஆரவாரத்துடன் ஒரு கிளிக்கூட்டம் வடக்கு நோக்கிப் பறந்து போவதை மரம் பார்த்தது. அது கிளியிடம் சொன்னது,
“ பாரு! உன்னுடைய கூட்டமெல்லாம் வடக்கு நோக்கிப் பறக்கிறாங்க.. போ.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கோ..”
கிளி கொஞ்சமும் உற்சாகமில்லாமல் சொன்னது,
“ அது முதல் கூட்டம்.. இன்னம் கூட்டம் கூட்டமாக வருவார்கள்..”
பூக்களில் உள்ள தேனை எடுக்க வந்த தேனீக்களின் கூட்டத்தின் ரீங்காரத்துக்கு இடையில் இரண்டாவது கிளிக்கூட்டம் வடக்கு நோக்கி பறக்கிற சத்தத்தை மரம் கேட்டது. அது பரிதவிப்புடன், சொன்னது,
“ நண்பா! இதோ இரண்டாவது கூட்டமும் பறந்து போகிறதே! நீ வேகமாக அவங்க பின்னால போ..”
கிளி அமைதியாக தன்னுடைய கூட்டாளிகள் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. அதன் மனதில் என்ன இருக்கிறது என்று மரத்தினால் படிக்க முடியவில்லை. அது கண்ணீரோடு தொடர்ந்து சொன்னது,
“ கஷ்டம்! நீ என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறாய்.. இனியும் நீ இங்கேயிருந்து போகவில்லையென்றால் இந்தக் காடு முழுவதும் என்னைக் குற்றம் சொல்லும்.. என்னுடைய சுயநலத்துக்காக நான் உன்னை இங்கே நிறுத்தியிருக்கிறேன் என்று குற்றம் சொல்லுவார்கள். பாரு! இந்தப் பூக்களெல்லாம் முதிர்ந்து காய்களாகும்..பின்னர் அவையெல்லாம் பழுக்கும்.. அதையெல்லாம் சாப்பிட ஏராளமான பறவைகள் வந்து சேரும். ஆனால் உனக்காக என்னுடைய கிளையில் நான் ஒரு பழத்தை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்..”
அப்போது மூன்றாவது கிளிக்கூட்டம் பறந்து செல்கிற சத்தம் மரத்தின் காதுகளில் வந்து மோதியது.
“ ஹா ஒருவேளை இதுவே கடைசிக் கூட்டமாக இருக்கலாம் பிரியமுள்ள நண்பா! இன்னமும் அசமந்தமாக இருக்காதே.. போ..வேகமாகப் போ..”
அப்போதும் கிளி அசையாமல் இருப்பதைப் பார்த்து விசும்பி அழுதது.
“ மற்றவர்களுக்காக வாழ்வதில் உள்ள மகிழ்ச்சியை நீ தானே எனக்குச் சொல்லித் தந்தாய்.. அப்படின்னா இப்போ என்னுடைய சங்கடத்தினால் இந்தப் பூக்கள் எல்லாம் உதிர்ந்து விடும்.. அப்போது எப்படி என்னால் பறவைக்கூட்டத்துக்கு உணவு கொடுக்க முடியும்? “
கிளி மரக்கிளையில் உருகிப்போய் நின்றது. பிறகு சிறகுகளை மெல்ல விரித்தது. வானத்தில் குதிப்பதற்கு முன்னால் மரத்தை ஒரு தடவை சுற்றி வந்தது. பலகீனமாக இருந்தாலும் இனிமையான குரலில் மரத்துக்கு விடை கொடுத்து மறைந்து போனது.
மரத்தில் காய்களெல்லாம் முதிர்ந்து பழுத்து விட்டன. மற்ற எந்தப் பழத்திலுமில்லாத இனிமை கொண்ட பழங்களைச் சாப்பிட காடான காடுகளிலிருந்து பறவைகள் பறந்து வந்தன. மரம் மகிழ்ச்சியோடு கிளைகளை தாழ்த்தி அவர்களை வரவேற்றது. ஆனாலும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு பழத்தை தன்னுடைய இதயத்துடன் சேர்த்து பாதுகாத்து வைத்திருந்தது.
ஆனால், அந்த பாட்டுக்காரக்கிளி பின்னர் ஒருபோதும் வரவில்லை. அதை நினைத்து வருந்திய மரத்திடம் மற்ற பறவைகள் ,
“ அந்தக்கிளி கண்டிப்பாக வேறு ஏதாவது மரத்தின் கசப்பை மாற்றப் போயிருக்கும்..” என்று சொல்லின.
நன்றி - மாயாபஜார்

Wednesday, 10 October 2012

நட்சத்திரம் விழும் நேரத்தில்..

semsar's painting

 

மலையாளத்தில்- கிரேஸி

 

தமிழில்- உதயசங்கர்

 

உலகம் இருளின் கீழ் விரைத்துப் படுத்துறங்குகின்ற பொழுதில் தான் அவனுடைய வாழ்க்கை துடிக்கத் தொடங்கும். அவனுடைய விரல்நுனியில் இந்திரஜாலமிருந்தது. தொட்டமாத்திரத்தில் சன்னல் கம்பிகள் வழிவிட்டு ஒதுங்க அலமாரிகளும் பாதுகாப்புப் பெட்டகங்களும் விரியத் திறந்தன.

அன்று, முன்பே பார்த்து வைத்திருந்த வீட்டு முற்றத்தில் பதுங்கிப் பதுங்கிச் செல்லும்போது அவன் அதிர்ச்சியடையும்படி அந்த வீட்டுக்காரி அங்கே நின்று கொண்டிருந்தாள். இருட்டில் அவள் யாரோ கள்ளக்காதலனுக்காகக் காத்திருந்தாள் என்று அவன் சந்தேகப்பட்டான். அபூர்வமாகத்தான் என்றாலும் அவன் அவளைப் பார்த்திருக்கிறான். ஒரு கள்ளக்காதலனை ஈர்க்கிற அளவுக்கு அழகு அவளுக்கு வாய்க்கவில்லை. கருத்து மெலிந்திருந்தாள். ஆனால் அவளுடைய பெரிய கண்களில் ஏராளமான துயரங்கள் தெரிந்தன. அரண்மனை போன்ற ஒரு வீடும் உயர்ந்த உத்தியோகத்திலிருந்த கணவனும் காரும் வாய்க்கப்பெற்ற ஒரு பெண்ணின் இவ்வளவு துக்கத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் ஆச்சரியப்படவும் செய்தான்.

அவள் கள்ளக்காதலனுக்காகக் காத்திருக்கவில்லை என்று கடைசியில் தான் அவனுக்கு உறுதியாயிற்று. வானத்தை நோக்கி முகம் உயர்த்தி எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே மனித இயல்பினாலான ஒரு குறுகுறுப்பினால் அவன் அவளுக்கு அருகில் சென்றான். அவனும் வானத்திஅ நோக்கி முகம் திருப்பினான். அவனால் பிரத்யேகமாய் எதையும் பார்க்க முடியவில்லை. திடீரென்று தான் அவனுடைய அருகாமையை அவள் உணர்ந்தாள். ஆனந்தத்தோடு அடங்கிய குரலில் அவள் கேட்டாள்;

பாரு..பாரு..அந்த நடசத்திரம் விழுகிறதைப் பார்த்தியா?

அவனைத் தன்னோடு சேர்த்து நிறுத்தி அவள் வானத்தைப் பார்த்துச் சுட்டிக் காண்பித்தாள். அவனுக்கு ஒரு நடசத்திரம் விழுவதைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை. நட்சத்திரங்கள் உள்ள வானத்தை அவன் வெறுத்தான். வெளிச்சம் எப்போதும் அவனுக்கு எதிரியாக இருந்தது.

அவனைச் சேர்த்தணைத்துக் கொண்டு அவள் நடந்தாள்.

அவளுடைய கண்கள் அப்போதும் நட்சத்திர உலகத்தில் தான் இருந்தன. விசாலமான முற்றத்தினுடைய எல்லையையும் தாண்டி அவர்கள் நடைபாதையில் இறங்கி நடந்தார்கள். வாசல் கதவின் கம்பிகள் அவர்களைத் தடுத்தன. பார்வையிலிருந்து மறைந்த நட்சத்திரத்தை நினைத்து அவள் பெருமூச்சு விட்டாள்.

அந்த நட்சத்திரம் வேறு யாருடையவோ வாழ்க்கையினுள்ளே பயணித்திருக்கும் அல்லவா?

அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். அவளுடைய இமை முடிகளில் ஒரு கண்னீர்த்துளி நட்சத்திரம் போல மின்னிக் கொண்டிருப்பதை மங்கிய வெளிச்சத்தில் அவன் பார்த்தான். அவனுடைய நெஞ்சில் தலை சாய்த்து மெல்லக் கண்களை மூடினாள்.

நடசத்திரம் விழுவதைப் பார்த்தால் கெட்ட சகுனம் என்பார்கள். ஆனால் எனக்கு அதைப் பார்க்கும்போது கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படுகிறது. நான் வானத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு நட்சத்திரமாவது விழுவது உண்டு. முன்பும் அப்படித்தான்.

என்னுடைய அழகான தங்கை சொல்லுவாள். அக்காவைப் பார்த்து பயந்து போய் நட்சத்திரங்கள் எல்லாம் ஓட்டம் பிடிக்கின்றன.

இரக்கத்தின் ஒரு அலை அவனுக்குள் இறங்கி அவனை நனைத்தது. பின்பும் எதுவும் பேசாமல் அவன் அவளுடைய முதுகை வெறுமனே தடவிக்கொடுத்தான். அமைதியான குரலில் அவள் தொடர்ந்தாள்.

நட்சத்திரப்பொட்டுகள் சிதறிக்கிடக்கிற இந்த வானவெளி எத்தனை உபயோகமில்லாத வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கு நினைவு படுத்தும். அப்படியே என்னுடைய காயங்களையெல்லாம் நான் மறக்கத் தொடங்குவேன். நடுநிசியில் தூரத்தில் ஏதோ ஒரு மரக்கிளையிலிருந்து மறுமொழியின்றி ஒரு ஆந்தை கூவும்போது எப்படியோ எனக்குள் அமைதி ஊற்றெடுத்து நிறையும்.

அவளுடைய வார்த்தைகள் மௌனத்திற்குள் இடறி விழுந்தன. அவள் உறங்கிவிட்டாளோ என்று அவன் அதிர்ச்சியடையத் தொடங்கினான். அப்போது ஏதோ ஒரு கனவிலிருந்து விழித்தெழுந்ததைப் போல அவள் கேட்டாள்;

நீங்கள் யார்?

அப்போது அவனால் உண்மையைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பெண் அவனுடைய நெஞ்சில் தஞ்சமடைந்திருக்கிறாள்.

நான் ஒரு திருடன்.

அவன் எதிர்பார்த்தது போல அவள் நடுங்கவோ அலறி ஆட்களை கூப்பிடவோ இல்லை.

அதற்குப் பதிலாக உணர்ச்சியே இல்லாத ஒரு குரலில் அவள் சொன்னாள்;

என்னுடைய கணவரும் ஒரு திருடன் தான். ஆனால் அவர் திருடுவது பெண்களின் புனிதத்தை.. நீங்கள்?

காற்றில் அலையும் தீபஒளியைப் போல அவனுடைய இதயம் துடித்தது. சிதறித் தெறிக்கின்ற ஒரு பெருமூச்சோடு அவனுடைய முரட்டுமுகம் அவளுடைய நெற்றியில் பதிந்தது.

பின்பு, அவன் மெல்ல அவளிடமிருந்து விலகி இருளில் எங்கோ மறைந்து இல்லாமல் போனான்.

Gracy

Sunday, 7 October 2012

பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானதே..

black,and,white,drawing,face,girl,art,woman-a8619ec48f601bdb6c57c8a2d15adca9_h_large   

கமலாலயன்

 

மலையாளத்தில் எழுதிக் கொண்டிருப்பவரான கிரேஸியின் கதைகள் இரண்டாவது முறையாகத் தமிழுக்கு ஒரு தொகுப்பாக வந்திருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள், தேர்வு செய்யப்பட்ட ஒரு கதைத் தொகுதி, ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஆக எட்டுப்புத்தகங்களின் ஆசிரியர் கிரேஸி. கல்லூரிப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற பின் கணவர்- மகளுடன் கேரள மாநிலம் ஆலுவாவில் வசித்து வருபவர்.

” எப்படி நீங்கள் எழுத்தாளரானீர்கள்?” இந்தக் கேள்வி எழுதுகிறவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்படுகிறது. இந்தக் கேள்விக்கு யாரால் சரியாகப் பதில் சொல்ல முடியும் என்று கேட்கிறார் கிரேஸி. இருப்பினும் அவருக்குச் சொல்லுவதற்கு ஒரு பதில் இருக்கவே செய்கிறது. கிரேஸி பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு ஸ்லோகப் போட்டி நடந்திருக்கிறது. இவராக உருவாக்கிய ஒரு ஸ்லோகத்தை ‘ இப்படியான ஒன்றைக் கேள்விப் பட்டதேயில்லை.” என்று சகபிள்ளைகள் கோபிக்கின்றனர். அதைச் சொல்லுமாறு வாத்தியார் கேட்க இவருக்குச் சுத்தமாக அது மறந்து போகிறது. வாத்தியாரின் கேள்வியும் பிள்ளைகளின் கைகொட்டிய சிரிப்பும் இவரைக் கண்ணீரில் வழிந்தோடச் செய்கின்றன. அப்படி ஏதேதோ பூமிகளினூடே பிரயாணம் செய்து யாருக்கும் தெரியாமல் ஏராளமான நாலுவரிக் கவிதைகளைத் துண்டுக் காகிதங்களில் எழுதி ஒளித்து வைத்திருந்திருக்கிறார். எழுத்தில் வடிக்காதவற்றை மனசில் பத்திரப்படுத்தி அடைத்து வைத்திருக்கையில் பாடப்புத்தகத்தில் வாசித்த ஒரு கதையிலிருந்து கதையின் சாத்தியங்கள் குறித்துப் புரிந்து கொள்கிறார். தன்னுடைய சின்னச் சின்னத் துக்கங்களை கதையில் சொல்லி சிறிய கவிதைகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஒரு நாள் அந்தக் துண்டுக் காகிதங்களெல்லாம் சேர்ந்து அடுப்பிற்குள் ஏறி விழுந்ததையும் அவர் பார்க்க நேர்ந்திருக்கிறது. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஏற்ற வேலை இதொன்றும் இல்லையென்ற ஒரு தாக்கீது தீச்சூட்டுடன் பதிலாகக் கிடைக்கவும் செய்திருக்கிறது.

இயற்கையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உற்று நோக்க முடிகிறது இவரால். தன் உயிரைப் போல இயற்கையை சிநேகிக்கத் தொடங்குகிறார். அப்போது தான் பெண்ணும் இயற்கையும் ஒன்றே என்ற ஞானம் கைவரப் பெறுகிறது. பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானது தான் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.

கதைகள், புனைவுகளின் இனிமைகளால் நிறைக்கப்பட்டவையென நம்புகிறோம். பொழுதுபோக்குவதற்கு உதவுபவை, எழுதுபவர்களின் கற்பனையில் உதிப்பவை, அழகியல் அம்சங்களால் அணி செய்யப்பட்டவை. நேர்க்கோட்டுத் தன்மையிலோ அல்லது அநேர்க்கோட்டுத் தன்மையிலோ மரபு சார்ந்தும் நவீன கதை சொல்லல் முறை சார்ந்தும் அமைந்திருப்பவை என்று வடிவம் பற்றிய விளக்கங்களைக் கேட்டு வருகிறோம். அப்புறம் கதைகளின் உள்ளடக்கம்-பாடுபொருள்- இருக்கவே இருக்கிறது.

இப்படியான மனப்பதிவுகள் படைப்புலகம் சார்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இவை எல்லாமே உண்மைகள் தாம். ஒரு பெரிய உண்மையின் பகுதி உண்மைகள். இவற்றோடும் இவற்றுக்கு அப்பாலும் தான் வாழ்க்கையின் தரிசனம் நிகழ்கிற இடங்கள் உள்ளன. அந்த வாழ்க்கையில் ” காத்திருப்போரும் மௌனிகளும் தென்பட்டு மறைகிறார்கள் ( இந்தக் கதைகளில்) விரல்களுக்கு இடையே பிளேடுகளை மறைத்திருப்போரும் தமக்குள் அசையும் பெண்டுலம் உடைந்தோரும் திருடர்களும், ஏமாளிகளும், ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்கள் கால் வைத்த இடத்தில் எல்லாம் நிலம் சரிகிறது. பறக்கத் துவங்கினால் இறக்கை முறிகிறது. ஒரு பொழுதைக் கடப்பது இவர்களுக்கு ஒரு யுகத்தைக் கடப்பது போல.”

மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் கிரேஸி கதைகளின் தமிழ் மொழியாக்கத் தொகுப்பில் பின் அட்டையில் இடம் பெற்றுள்ளன. 23 கதைகள் மற்றும் கிரேஸியுடனான நேர்காணலும், ‘ எழுத்தாளனின் பிறப்பு’ என்ற அவரின் சுய அனுபவக் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம் பெற்றவை.

சின்னஞ்சிறிய கதைகள். ‘ ஒரு ஜனரஞ்சகக்கதையின் முடிவு ‘ மட்டுமே பெரிய கதை. 9 பக்க அளவு வந்துள்ள கதை. இத்தொகுப்பிலேயே இது ஒன்று மட்டுமே. பெரும்பாலான கதைகள் ஒன்றரையிலிருந்து மூன்று நான்கு பக்கங்களிலேயே முடிந்து விடுகின்றன. பக்கங்களின் அளவு கொண்டு சிறுகதைகளை அளக்க முடியாது. அதிலும் கிரேஸியின் கதைகளை.

வாழ்க்கையின் பிரம்மாண்டமான துகள்கள் இந்தக் கதைகளில் சிதறிக் கிடக்கின்றன. எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் அநாதி காலந்தொட்டு அலைந்து கொண்டிருக்கிற துகள்களைப் போன்றே கண்ணுக்குப் புலப்படாத தொலைவில் மிதப்பவையாய் இவை இருக்கின்றன. நட்சத்திரம் விழுவதைப் பார்த்தால் கெட்ட சகுனம் என்பார்களாம். ஆனால் நட்சத்திர உலகில் கண்கள் நிலைத்திருக்கப் பார்த்திருக்கிற அந்தப் பெண்ணுக்கு விண்மீன் பொட்டுகள் சிதறிக் கிடக்கிற அந்த வானவெளி எத்தனை உபயோகமில்லாத வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைவுபடுத்துகின்றன. நட்சத்திரம் விழுவதைப் பார்க்கையில் கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படுகிறது அவளுக்கு.

அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் திருடவருகிறவன் தான் அவன். அவனுடைய விரல் நுனிகளில் இந்திரஜாலம், அவன் தொட்ட மாத்திரத்தில் சன்னல் கம்பிகள் வழி விட்டு ஒதுங்குகின்றன. அலமாரிகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் விரியத் திறந்து கொள்ள வைக்கிறவன் அந்தத் திருடன். அவன் அந்தப் பெண்ணின் மனக்கதவைத் திறந்து பார்க்கிற தருணம் தான் ‘ நட்சத்திரம் விழும் நேரத்தில் ‘ கதை. அரண்மனை போன்ற வீடும் உயர்ந்த உத்தியோகத்துக் கணவனும், காரும்- இப்படி எல்லாம் வாய்த்திருந்தும் கூட கருத்து மெலிந்திருந்த அவளுடைய கண்களில் தெரிந்த ஏராளமான துயரங்களின் முன்னால், காற்றில் அலையும் தீபஒளியைப் போல அவனுடைய முரட்டு இதயமும் கூட துடித்து விலகிப் போய் விடுகிறது. நடைமுறை வாழ்க்கையில் உண்மையான திருடர்கள் யார் எந்த வகையில் அவர்களை இனங்கண்டறிய முடியும். எப்படி அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்று வாழ்வது என்ற பல ஆதாரமான கேள்விகளை எழுப்புவதாக இந்தத் தலைப்புக்கதை அமைந்திருக்கிறது. ஒரு திருடனின் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண் இந்தப் பிண்ணனியில் அவனது நெஞ்சில் தஞ்சமடைந்திருக்கிற அந்த நேரம் எவ்வளவு விலைமதிப்பற்றதாக இருக்கிறது என்று மலைத்துப் போகிறோம்.

‘ காட்சிகளின் மறுபக்கம் ‘ கதை ஓர் அபூர்வப்பதிவு. ரயில்களின் சக்கரங்களில் ஏதேதோ காரணங்களால் சிக்கிச் சிதைந்து போகிற மனிதர்களின் அமானுஷ்யக் குரல்கள் எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. அவை அவ்வப்போது மௌனமாக ஞாபகங்களில் மூழ்கிச் சலனமற்று நிற்கின்றன. மெதுவாக ஓடுகின்றன. ஆற்ற மாட்டாத இந்தத் துயர நினைவுகளின் குற்ற உணர்வுகளால் நீட்டி முழக்கிக் கூகூ வென அலறி ஓய்கின்றன. ஆடி அசைந்து பிரயாணம் செய்கின்றன. இப்படி ஆடி அலைந்து கடந்து சென்றது எல்லாம் புறக்காட்சிகளின் மறுபக்கத்தினூடாகவே என்று ரயிலின் ஞானக்கண்கள் உணர்கின்றன. அந்தக் காட்சிகளின் பயங்கரத்தை நினைத்து நடுங்கி நசுங்கிப் போன கனவினுடைய துர்நாற்றத்தின் வழியாக அது வேறொரு வாழ்க்கையை நோக்கி மூச்சுத் திணறியபடி செல்கிறது. பசியினால் கிராமத்திலேயே அழகாயிருந்த பாவத்தினால், பெற்ற அத்தனை பிள்ளைகளும் பெண்களாகவே பிறந்து விட்ட நிலையில் அவர்களைக் கரையேற்ற முடியாத இயலாமையால், அரசியல் களத்தின் வஞ்சகக் கயிற்றால், - தண்டவாளப்பாதைகளில் தலை வேறு முண்டம் வேறாக சிதைந்து போய்க் கிடக்கிற சகமனிதர்களின் துயரங்களைக் கண்களால் காண்கிறோமே தவிர ஒரு நாளும் அந்தக் காட்சிகளின் மறுபக்கத்தை உணர்கிறோமில்லை. ஆனால் இந்த உணர்வுகள் அத்தனையையும் அந்த ரயிலையே பேச வைத்து நமக்கு உணர்த்திவிட கிரேஸியால் முடிந்திருக்கிறது.

“ யாருக்காக யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இப்படிக் கதைகள் எழுதுகிறீர்கள்?” என்று வெறுப்பின் சூடு நிறைந்த கேள்விகள் பல கிரேஸியை எதிர்கொள்கின்றன. ‘ பெண்களுக்கு எழுத வேண்டிய விஷயங்கள் ஏராளமாயிருப்பினும் அநுபவங்கள் குறைவு தான். அப்படிக் குறைந்த அநுபவங்களைக் குறித்து எழுதுகையில் பிரச்னைகள் உண்டாகின்றன’ என்கிறார் கிரேஸி. ‘ எழுத்தில் நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும்’ என்று நாம் சுமக்க நேர்வது சிலுவையையே. இந்தச் சிலுவை யுத்தத்தில் எழுத்தாளர்கள் – உண்மையிலேயே ஆத்மார்த்தமாக எழுதுகிறவர்கள் – ஒவ்வொரு நாளும் பலவற்றை இழந்து தான் தீர வேண்டும், உயிரையுங்கூட.

‘ உயிரை விடுகிற அளவுக்கு இல்லாவிட்டாலும் இன்றைய எழுத்தாளர்களுக்குத் தியாகம் செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன’ என்று உணர்கிறவர் கிரேஸி. ஆனால், “ எழுதும்போது நான் வாத்தியார் அல்ல.. பெண் கூட கிடையாது. என்னுடைய கதாபாத்திரம் சுதந்திரமாக எப்படி உருவாகும் என்று மட்டுமே நான் யோசித்துக் கொண்டிருப்பேன்.’ என்று துணிந்து முன் செல்கிறார். இலக்கிய வாழ்க்கையில் நீண்ட ஓர் இடைவெளி நேர்வது பலருடைய விதியாக இருக்கிறது. கிரேஸிக்கும்கூட. “ ஒரு சமயம் எனக்கு வாசிக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை. இப்போது இவ்வளவாவது செய்ய முடிகிறதே’ என்று அவருக்குச் சந்தோஷமாயிருக்கிறது. ‘ இந்த உலகத்தில் எக்கச்சக்கமான மக்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. எவ்வளவு முடியும் என்று மட்டும் தெரிய வில்லை.” என மலைக்கவும் செய்கிறார்.

பொதுப்புத்தியில் உறைந்து போய்க் கிடக்கிற முன்முடிவுகளாகிய இருட்டில் ஒரோதா என்ற பெண் விசிறிக் கொண்டு நடக்கும் தீப்பந்தத்திலிருந்து தெறித்து விழுந்த பொறிகள் இந்தக் கதைகள் என்றாலும் கூட மிகையில்லை.

‘ பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கலாம், ஆனால் ஆபத்துக் காலத்தில் அவளுடைய துணைக்கு வேறோர் ஆள் தான் வர வேண்டியிருந்தது. அது யாரென்று தெரிய புராணத்தை ஒரு தடவை முழுவதுமாக அலசி ஆராய்ந்து பாருங்கள்..’ என்று உரக்கச் சிரிக்கிற கிருஷ்ணாவின் குரல் இருட்டைக் கீறி ஒளிர்கிற ஒரு தீப்பொறி தானே? ( பாஞ்சாலி கதை )

’பந்து உருண்டையாக இருப்பது இஷ்டம் போல உருட்டி விளையாடத்தானே?’ என்கிற அம்மாவின் கேள்வி ( பந்து )

’இதயத்திற்குப் போகிற வழி சரீரத்தினூடாகத் தான்’ என்று அமைதியாகச் சிரித்துக் கொண்டே சொல்கிற கர்த்தரின் திருமேனியில் சாய்கிற சிஸ்டர் ஏஞ்சல்மேரியின் கண்கள் பொங்கி வழிகின்ற தருணம் ( ரத்தமும் மாமிசமும் )

‘ மகளே மறக்கக் கூடாது. மனிதன் என்றால் ஞாபகங்கள் இருக்க வேண்டும் ‘ என்று மகள் பெரியவளாகும் வரையில் சொல்லுகிற குட்டிச் சங்கரன் மாஸ்டர் கண்களை மூடியதும் இருட்டைப் பார்த்து கூவியலறி அழைக்கிற மகளின் அவலக்குரல் ( ஞாபகங்கள் இருக்கவேண்டும் )

இப்படியாக ‘ நம்பிவிட முடியாத மனிதர்களின் மனதில் அலையும் இருட்காற்றும் அதை வெல்லும் ஒளிக்காற்றுமாய் கிரேஸியின் கதைகள் மனதின் பரிசுத்தத்தை வேண்டுகின்றன. அவரின் சொற்கள் மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளைக் கழுவிக் கரைத்து வெளியே வாரிப் போடுகின்றன. நமது நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்கி விடவும் அவரது சொற்கள் படைத்தவையாயிருக்கின்றன!

கிரேஸி மலையாளத்தில் எழுதிய கதைகளை உதயசங்கர் தமிழில் மூலமொழியின் வாசனை மறையாமல் மொழியாக்கித் தந்திருக்கிறார்.

நட்சத்திரம் விழும் நேரத்தில்.. Gracy

மலையாளமொழிச்சிறுகதைகள்

கிரேஸி

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு; வாசல், 40-டி/3 முதல்தெரு, வசந்த நகர், மதுரை- 625003

தொலைபேசி-9842102133

நன்றி- தீராநதி அக்டோபர் 2012

Thursday, 4 October 2012

ரத்தமும் மாமிசமும்

 

மலையாளத்தில்- கிரேஸிGracy

தமிழில் – உதயசங்கர்

கர்த்தரிடம் அன்பு முற்றிப்போனதால் தான் குஞ்சுமேரி அவருடைய மனைவியானாள். சிறகுகள் இல்லையென்றாலும் அவள் சிஸ்டர் ஏஞ்சல் மேரியாகி விட்டாள். எல்லா இரவுகளிலும் கர்த்தர் சுவர்க்கத்திலிருந்து செம்மறியாட்டின் ரோமங்களைப் போல மிதக்கிற மேகங்களின் துணையோடு அவளுடைய உறக்கத்துக்குள் இறங்கி வந்தார். அவளுடைய இதயம் கர்த்தருடைய உதடுகளிலிருந்து உதிர் மணிகளைப் போலப் பொழிகின்ற வசனங்களைக் கொத்தியெடுத்துக் கொண்டு அதிகாலையின் பரிசுத்தத்தை நோக்கிப் பறந்து சென்றது.

படிப்பில் கெட்டிக்காரியானதால் சபை நடத்துகிற காலேஜில் ஆசிரியையானாள் சிஸ்டர் ஏஞ்சல்மேரி. டிபார்ட்மெண்டிற்குள் வலது காலை யெடுத்து வைத்து நுழைந்ததும் சிஸ்டர் ஏஞ்சல்மேரி அதிர்ந்து போய் நின்றாள்.

அங்கே கர்த்தர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இடது கால் விரல்களை ஊன்றி கைகளை லேசாய் விரித்துக் கொண்டு முன்னால் சாய்ந்து நின்ற சிஸ்டர் ஏஞ்சல்மேரி ஒரு அன்னப்பறவையை நினைவு படுத்தினாள். வெண்மையின் நிழல் கண்களில் குத்தியபோது கர்த்தர் தான் வாசித்துக் கொண்டிருந்த தடிமனான புத்தகத்திலிருந்து முகத்தை உயர்த்தினார். கர்த்தருடைய அமைதியான நீலக்கண்களிலும், கருத்த முந்திரிப்பழங்களைப் போல தோள்களை உரசிக் கொண்டு கிடக்கிற தலைமுடிச் சுருள்களிலும் சிஸ்டர் ஏஞ்சல்மேரியின் பார்வை ஆச்சரியத்துடன் பறந்து நடந்தது.

ஆர்வம் தாங்காமல் சிஸ்டர் ஏஞ்சல்மேரி முன்னால் சென்று அவள் கையில் எடுத்த கர்த்தருடைய கைகளில் ஆணித்துளைகளைத் தடவினாள். கர்த்தர் அமைதியான புன்னகையோடு சொன்னார்.

காலம் எல்லா முறிவுகளையும் ஆற்றி விடும்!

மாடப்புறாக்களைப் போன்ற மென்மையான இளம் சூடுள்ள அந்தக் கைகளில் ஆசையோடு முத்தமிட்டு கீழே வைத்த சிஸ்டர் ஏஞ்சல்மேரி பொங்கி வழிகிற கண்களைத் துடைத்தாள்.

அன்று இரவு சிஸ்டர் ஏஞ்சல்மேரி உறங்கவில்லை. கர்த்தர் ஆகாயத்திலிருந்து இறங்கி வரவுமில்லை.

அடுத்த நாள் மன உளைச்சலோடு சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய அறைக்குச் சென்றாள். கர்த்தருடைய மேலங்கியை உருவி ஒற்றை ரோமமும் இல்லாத நெஞ்சில் கருணையின் கனல் போல ஜொலிக்கிற திருஹிருதயத்தைத் தடவினாள். அப்போதும் கர்த்தர் அமைதியாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இதயத்துக்குப் போகிற வழி சரீரத்தினூடாகத்தான்.

சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய திருமேனியில் சாய்ந்தாள்.

Sunday, 9 September 2012

சீதாயாணம்

 

மலையாளம்- கிரேஸிGracy

தமிழில்- உதயசங்கர்

வெந்து அவிந்து மாமிசப்பிண்டமாகக் கிடக்கும்போது தான் கீதாவுக்கு முற்பிறவி ஞாபகங்கள் வந்தன. உயிரின் கட்டுகள் ஒவ்வொன்றாய் சிதறித் தெறிக்கும்போது பிறவிகளுடைய இருண்ட நாட்டுப்புற வழியில் ஞாபகங்களின் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தது.

அப்போது கீதா சீதாவாக இருந்தாள். வனத்தில் அபாயமான பாதைகளின் வழியே ராமனை நிழல் போலப் பின் தொடர்ந்தாள் சீதா. இலங்கையில் ஏராளமான விதவைகளின் மின்னுகிற கண்ணீரில் முங்கி எழுந்து கல்லையும் பிளந்து விடும் உறுதியினைப் பெற்றாள் சீதா. அக்னிப்பிரவேசம் செய்து சரீரப் புனிதத்தை நிரூபித்திருக்காவிட்டால் அவளை சுக்ரீவனின் வைப்பாட்டியாக்கியிருப்பார்கள். அதுவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு அரக்கனின் வைப்பாட்டியாக்கியிருப்பார்கள்.

அவமானத்தினால் புழுங்கினாள் சீதா. ஒவ்வொரு ரோமக்கால்களிலிருந்தும் அக்னி வெளியே தன் நாவுகளை நீட்டித் துழாவியது. பூமியில் இருக்கிற யாவும் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் அக்னிரூபிணியாக நின்ற பூமியின் மகளுக்கு அவளுடைய உள்ளங்கையில் எதிர்காலம் தெரிந்தது.

குலம் அற்றுப் போகாதிருக்க லவகுசன் என்ற இரட்டைப்பிள்ளைகளைப் பெற்றுச் சீராட்ட வேண்டியதிருக்கிறது என்பதைக் கண்ட சீதா அப்போது குளிர்ந்து போனாள்.

குழந்தைகளின் முன்னால் வைத்து அவமானப்பட்ட போது பூமியின் வயிறு பிளந்து தன்னை மீண்டும் உள்வாங்கிய மண்ணின் கருணையை உணர்ந்த சீதா பின்பு குளிர்ந்து போனாள்.

ஆனால் இப்போது கீதா எப்படி குளிர்ந்து போகமுடியும்?

கீதா இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றது ரமாவையும் உமாவையும் அல்லவா?

ராமச்சந்திரனுக்கு அவசியம் ஏற்படும்போதெல்லாம் பணம் கொண்டு வந்து கொடுக்க கீதாவின் அப்பா பென்சன் வாங்கிக் கொண்டிருக்கிற வெறும் பள்ளிக்கூட வாத்தியார் தானே!

அதனால் அல்லவா மானேஜிங் டைரக்டருடைய படுக்கையறையைத் திறக்கிற ஒரு ரகசியக் கதவை ஸ்ரீராமச்சந்திரன் கீதாவுக்குச் சுட்டிக் காண்பித்தான்.

கீதாவின் ஞாபகங்கள் சிதறித் தெறித்தன. சுற்றிலும் வியாபித்த இருளின் வழியே உயிரின் கடைசி முடிச்சும் அவிழ்ந்து கீதா அடுத்த பிறவியின் ஆபத்தை நோக்கிப் பிரயாணமானாள்.

Saturday, 23 June 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

கிரேஸி

தமிழில்- உதயசங்கர்Gracy

நான் எப்படி எழுத்தாளரானேன்? எனக்குத் தெரியவில்லை. பதினைந்து வயதுவரை பாடப்புத்தகங்களும், ஸ்கூல் லைப்ரரியிலிருந்து கிடைக்கிற சிறிய ஆங்கிலப்புத்தகங்களும் தவிர வாசிப்பு உலகம் எனக்கு அந்நியமாகவிருந்தது.

எனக்குக் கிடைத்த ஒரே கூட்டாளி என்னுடைய அப்பாவின் அப்பா. சாயங்கால நேரங்களில் தாத்தா பனங்கள்ளு குடித்து விட்டு ஏராளமான கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தக் கதைகளிலெல்லாம் மனிதர்கள் குறைவாகவே இருந்தனர். பிரதானபாத்திரம் குட்டிச்சாத்தான் தான். பலவிதமான பாம்புகளும், யானை, புலி, காட்டெருமைகளும், வருகிற கதையில் கொடிய காட்டினை விவரித்துச் சொல்லும்போது நான் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தக் கதைகளெல்லாம் என்னை வேறொரு உலகத்திற்கே கூட்டிக் கொண்டு போய்விட்டன.

என்னுடைய டீச்சரிடம் முட்டத்துவர்க்கியினுடைய நாவல்களின் தொகுப்பு இருந்தது. அவர் அதை வேறு யாருக்கும் கொடுக்காமல் அலமாரியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். ‘ மயிலாடும் குன்று ’ வாங்கிக் கொண்டு வந்த அன்று மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் அம்மாயி அதைச் சத்தமாக வாசிப்பதை ஐந்து வயதுக்காரியான நான் நள்ளிரவு வரை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அப்போது தான் மிருகங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் கதைகள் இருக்கிறதென்று நான் தெரிந்து கொண்டேன். அந்தக் கதைகள் பல சமயங்களில் கண்னீரிலேயே முடிந்து போயின.

வகுப்பில் பிள்ளைகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து வார்த்தை சுலோகப்போட்டி நடத்தும்போது நான் சங்கடத்தோடு ஒளிந்து கொள்வேன். இவர்கள் எல்லாரும் எங்கிருந்து இவ்வளவு சுலோகங்களையும் மனப்பாடம் செய்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. முடிவில் இரண்டு பேர் சொல்லிக் கொடுத்து நான் ஒரு சுலோகத்தை உருவாக்கினேன். இப்படியொரு சுலோகத்தை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை என்று பிள்ளைகள் கோபித்தனர். மலையாளவாத்தியார் அதைச் சொல்லச் சொல்லிக் கேட்டபோது அப்போதே மறந்துபோய் வியார்த்து விறுவிறுத்துப் போனேன். வாத்தியார் கேலி செய்யவும் பிள்ளைகள் கைகொட்டிச் சிரிக்கவும் செய்தனர். நான் கண்ணீரில் வழிந்தோடிப் போனேன். அப்படி வழிந்தோடி, வழிந்தோடி, ஏதேதோ பூமிகளூடே பிரயாணம் செய்தேன். யாருக்கும் தெரியாமல் ஏராளமான நாலுவரிக் கவிதைகளை துண்டுக் காகிதங்களில் எழுதி ஒளித்து வைத்திருந்தேன். அப்ப்டி எழுத்தில் வடிக்காதவற்றை மனசில் பத்திரமாக அடைத்து வைத்தேன்.

காரூரினுடைய ‘ குடை நன்னாக்கானுண்டோ ‘ என்ற கதையைப் பாடப்புத்தகத்தில் வாசித்தபோது கதையினுடைய சாத்தியங்களைக் குறித்து புரிந்தமாதிரி இருந்தது. என்னுடைய சின்னச் சின்னத் துக்கங்களை கதைகளில் சொல்லி நான் சிறிய கவிதைகளைக் காப்பாற்றினேன். ஆனால் ஒரு நாள் அந்தத் துண்டுக்காகிதங்கள் எல்லாம் சேர்ந்து அடுப்பிற்குள் ஏறி விழுந்ததை நான் பார்த்தேன். நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தைகளுக்கு ஏற்ற வேலை இதொன்றும் இல்லையென்ற தாக்கீது தீச்சூட்டோடுப் பதிலாகக் கிடைக்கவும் செய்தது.

அறுவடை முடிந்த வயற்காட்டில் நான் ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினேன். கிட்டிப்புல் விளையாடினேன். தூண்டில் போட்டு மீன் பிடித்தேன். மழை வெள்ளத்தில் பெரிய வள்ளத்தைச் செலுத்திப் போயிருக்கிறேன். மிகவும் உயரமான மாமரத்தின் கிளைகளைப் பிடித்து மரம் ஏறியிருக்கிறேன். பெண்பிள்ளை என்பதையே மறந்து போயிருந்தேன். அதனால் தானோ பொம்பிளைதானே என்ற ஏளனமும் குற்றச்சாட்டும் பிற்காலத்தில் என்னைப் பாதிக்கவில்லை.

எதுவும் செய்யாமலிருக்கும்போது இயற்கையை உற்று நோக்கியவாறு அமர்ந்திருப்பேன். எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் என்னால் அப்படியிருக்கமுடியும். இயற்கையை நான் உயிரைப் போல நேசிக்கத் தொடங்கியது அப்படித்தான். பெண்ணும் இயற்கையும் ஒன்றுதான் என்ற ஞானம் அப்போது தான் கை வந்தது. பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானது என்றும் புரிந்து கொள்ளமுடிந்தது.

பத்தாவது வகுப்பில் பரீட்சை முடிந்து முடிவு தெரிவதற்காகக் காத்திருக்கும் போது மார்த்தாண்டவர்மா என்ற நாவல் முழுமையும் படித்தேன். அதில் வரும் அனந்தபத்மநாபனோடு நெருங்கிப் பழகிவிட்டேன். சுபத்ரா என்ற ஆதர்ச கதாபாத்திரமாகவே மாறியும் விட்டேன். அழுது புரண்டு தான் அம்மாயியிடமிருந்து முட்டத்துவர்க்கியின் நாவல்களை வாங்கினேன். அப்படியே வாசிப்பு எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது.

கல்லூரியில் சேர்ந்தபோது லைப்ரரியிலிருந்து இஷ்டம் போல எடுத்து வாசிக்கலாம் என்றாகி விட்டது. வகுப்புகள் நடக்கிறசமயத்தில் மலையாற்றூரினுடைய, தகழியினுடைய, புத்தகங்கள் பின்பெஞ்சிலிருக்கிற எனக்குத் தோழமையாயிருந்தன. மலையாளம் பி.ஏ. வில் சேர்ந்தபோது இன்னும் சுதந்திரமானவளானேன். வாசிப்பு மட்டுமல்ல எழுதுவதும் மிகவும் மரியாதைக்குரியது என்று நினைத்தேன். பி.ஏ. மூன்றாம் வருடம் படிக்கும்போது ஜனயுகம் வாரப்பதிப்பில் என்னுடைய முதல்க்கதை பிரசுரமானது. ‘ அஸ்தமயம் “ என்ற அந்தக் கதையைக் குறித்து மலையாளநாடு பத்திரிகையில் சாகித்ய வாரபலன் பகுதியில் எம். கிருஷ்ணன்நாயர் எழுதியிருந்ததைப் படித்தபோது மிகுந்த சந்தோஷம் தோன்றியது. அந்தக் காலத்தில் கேரளகௌமுதி வாரப்பத்திரிகையில் புதிதாக எழுதத் தொடங்கியவர்களுக்கென்று ஒரு இடம் இருந்தது. நான் அதில் அவ்வப்போது தலைகாட்டினேன். அதனுடைய மேற்பார்வையாளரான ரோஸ்சந்திரன் என் கதைகளின் குற்றங்குறைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். கார்டில் அவர் எனக்கு எழுதுகிற கடிதவரிகளில் அப்போது தான் பிறந்த சிசுவினுடைய நிர்வாணத்தின் பரிசுத்தம் இருக்கும்.

இது நான் கதை எழுதிய சரித்திரம். ஆனால் இந்தச் சரித்திரத்திலிருந்து நான் எப்படி எழுத்தாளரானேன் என்று கண்டு பிடிக்கமுடியாதல்லவா. ஒருவர் பாடகராவது எப்படி? ஓவியராவது எப்படி? சிற்பியாவது எப்படி? எழுத்தாளராவது எப்படி? யாரால் சரியான பதில் தரமுடியும்?

நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் அக்டோபர் 2001