Thursday 4 October 2012

ரத்தமும் மாமிசமும்

 

மலையாளத்தில்- கிரேஸிGracy

தமிழில் – உதயசங்கர்

கர்த்தரிடம் அன்பு முற்றிப்போனதால் தான் குஞ்சுமேரி அவருடைய மனைவியானாள். சிறகுகள் இல்லையென்றாலும் அவள் சிஸ்டர் ஏஞ்சல் மேரியாகி விட்டாள். எல்லா இரவுகளிலும் கர்த்தர் சுவர்க்கத்திலிருந்து செம்மறியாட்டின் ரோமங்களைப் போல மிதக்கிற மேகங்களின் துணையோடு அவளுடைய உறக்கத்துக்குள் இறங்கி வந்தார். அவளுடைய இதயம் கர்த்தருடைய உதடுகளிலிருந்து உதிர் மணிகளைப் போலப் பொழிகின்ற வசனங்களைக் கொத்தியெடுத்துக் கொண்டு அதிகாலையின் பரிசுத்தத்தை நோக்கிப் பறந்து சென்றது.

படிப்பில் கெட்டிக்காரியானதால் சபை நடத்துகிற காலேஜில் ஆசிரியையானாள் சிஸ்டர் ஏஞ்சல்மேரி. டிபார்ட்மெண்டிற்குள் வலது காலை யெடுத்து வைத்து நுழைந்ததும் சிஸ்டர் ஏஞ்சல்மேரி அதிர்ந்து போய் நின்றாள்.

அங்கே கர்த்தர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இடது கால் விரல்களை ஊன்றி கைகளை லேசாய் விரித்துக் கொண்டு முன்னால் சாய்ந்து நின்ற சிஸ்டர் ஏஞ்சல்மேரி ஒரு அன்னப்பறவையை நினைவு படுத்தினாள். வெண்மையின் நிழல் கண்களில் குத்தியபோது கர்த்தர் தான் வாசித்துக் கொண்டிருந்த தடிமனான புத்தகத்திலிருந்து முகத்தை உயர்த்தினார். கர்த்தருடைய அமைதியான நீலக்கண்களிலும், கருத்த முந்திரிப்பழங்களைப் போல தோள்களை உரசிக் கொண்டு கிடக்கிற தலைமுடிச் சுருள்களிலும் சிஸ்டர் ஏஞ்சல்மேரியின் பார்வை ஆச்சரியத்துடன் பறந்து நடந்தது.

ஆர்வம் தாங்காமல் சிஸ்டர் ஏஞ்சல்மேரி முன்னால் சென்று அவள் கையில் எடுத்த கர்த்தருடைய கைகளில் ஆணித்துளைகளைத் தடவினாள். கர்த்தர் அமைதியான புன்னகையோடு சொன்னார்.

காலம் எல்லா முறிவுகளையும் ஆற்றி விடும்!

மாடப்புறாக்களைப் போன்ற மென்மையான இளம் சூடுள்ள அந்தக் கைகளில் ஆசையோடு முத்தமிட்டு கீழே வைத்த சிஸ்டர் ஏஞ்சல்மேரி பொங்கி வழிகிற கண்களைத் துடைத்தாள்.

அன்று இரவு சிஸ்டர் ஏஞ்சல்மேரி உறங்கவில்லை. கர்த்தர் ஆகாயத்திலிருந்து இறங்கி வரவுமில்லை.

அடுத்த நாள் மன உளைச்சலோடு சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய அறைக்குச் சென்றாள். கர்த்தருடைய மேலங்கியை உருவி ஒற்றை ரோமமும் இல்லாத நெஞ்சில் கருணையின் கனல் போல ஜொலிக்கிற திருஹிருதயத்தைத் தடவினாள். அப்போதும் கர்த்தர் அமைதியாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இதயத்துக்குப் போகிற வழி சரீரத்தினூடாகத்தான்.

சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய திருமேனியில் சாய்ந்தாள்.

No comments:

Post a Comment