Tuesday 30 October 2012

கயிறு இழுக்கும் போட்டி

மலையாளம் – மாலி

தமிழில்- உதயசங்கர்Now-We-Lock-Our-Mouths-orca-killer-whale-vs-elephant-24960522-858-629

யானை எப்போதும் நினைத்துக் கொள்ளும், தான் தான் உலகத்திலேயே வலிமையானவன். திமிங்கிலத்திற்கோ? தான் தான் வலிமையானவன் என்று நினைப்பு. யானை கடலுக்குச் சென்றதில்லை. அதனால் திமிங்கிலத்தைப் பார்த்ததில்லை. அதேபோல் திமிங்கிலமும் கரைக்கு வந்ததில்லை. அதனால் யானையைப் பார்த்ததில்லை. ஆமை கரைக்கும் போகும் கடலுக்கும் போகும். அதனால் யானையையும் பார்த்திருக்கிறது. திமிங்கிலத்தையும் பார்த்திருக்கிறது. அவர்கள் இரண்டு பேரும் அடித்துக் கொள்ள வேண்டும்.அதைப் பார்த்து ரசிக்க வேண்டும். அது தான் ஆமையின் திட்டம்.

ஆமை முதலில் யானையைப் பார்த்தது.

“யானைமாமா! கடலில் திமிங்கிலம் என்று ஒரு பெரிய உயிரினம் இருக்குதாம்..அவன் யானைமாமாவைத் தூசின்னு சொல்றானாம்..கயிறு இழுக்கும் போட்டியில் அவன் யானைமாமாவைத் தோற்கடிச்சிருவானாம்..” என்று சொன்னான்.

ரெண்டாவதாக ஆமை போய் திமிங்கிலத்தைப் பார்த்தது.

“திமிங்கிலண்ணே! திமிங்கிலண்ணே! கரையில் யானைன்னு ஒரு பெரிய உயிரினம் இருக்குதாம்..அவன் திமிங்கிலண்ணனைக் கால்தூசின்னு சொல்றானாம்..கயிறு இழுக்கும் போட்டியில் அவன் எளிதாக செயிச்சிருவானாம்..” என்று ஆமை சொன்னது.

யானைக்குக் கோபம் தலைக்கேறியது. திமிங்கிலத்திற்கும் கோபம் தலைக்கேறியது. ஆமைக்குப் பொழுதுபோக்காய் இருந்தது. அவன் யானையிடம் சென்றான்.

“ஆமை! கயிறு இழுக்கும் போட்டி கரையில் வைச்சு நடத்தணும்..” என்று யானை கூறியது.

“யானைமாமா! திமிங்கிலத்துக்குக் கடலில் மட்டும் தான் இருக்கமுடியுமாம்..கரைக்கு வரமுடியாதாம். நான் முடிவு செய்றபடி நடத்தலாம்..” என்று ஆமை சொன்னது.

அவன் மறுபடியும் திமிங்கிலத்திடம் போனான்.

“ஆமையே! கயிறு இழுக்கும் போட்டி கடலில் வைச்சுத் தான் நடத்தணும்..” என்று திமிங்கிலம் கூறியது.

“திமிங்கிலண்ணே! யானைக்குக் கரையில் மட்டும்தான் இருக்கமுடியுமாம்..கடலில் இறங்க வழியில்லையாம்.. நான் முடிவு செய்றபடி நடத்தலாம்..” என்று ஆமை சொன்னது.

ஆமையின் முடிவு என்னவாக இருந்தது தெரியுமா? யானை கரையில் நிற்கட்டும்.திமிங்கிலம் கடலில் இருக்கட்டும். அப்படியே கயிறு இழுக்கணும்.! யானையும் திமிங்கிலமும் ஒத்துக் கொண்டன.

நிச்சயித்த நாள் வந்தது. கரையில் நிலத்திலுள்ள பிராணிகள் எல்லாம் கூட்டமாய்க் கூடி நின்றன. சிங்கம்,கரடி, மான், முதலான ஏராளமான மிருகங்கள். அவர்களுக்கு யானை வெற்றி பெறவேண்டும்.

கடலில் நீர்வாழ்பிராணிகள் எல்லாம் வந்து நிறைந்தன.முதலை,கொம்புச்சுறா,செம்மீன்,முதலான ஏராளமான பிராணிகள்.அவர்களுக்கு திமிங்கிலம் வெற்றி பெற வேண்டும்.

யானை கரையில் தயாராக நின்றது. திமிங்கிலம் கடலில் தயாராகக் கிடந்தது. ஆமை நீளமான கயிறு ஒன்றைக் கொண்டு வந்தது. கயிறின் இரண்டுமுனைகளிலும் வட்டமுடிச்சு போட்டது.ஒரு முடிச்சை யானையின் கழுத்திலும் இன்னொரு முடிச்சை திமிங்கிலத்தின் கழுத்திலும் மாட்டியது. அதன்பிறகு அவன் நடுவில் நின்று கொண்டான்.கையை உயர்த்தி பெருங்குரலில்” இழுங்க..” என்று கத்தினான்.

யானை இழுத்தது. திமிங்கலமும் இழுத்தது. பார்வையாளர்கள் மூச்சை அடக்கிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதோ யானை நாலடி பின்னால் போகிறது. திமிங்கலம் நாலடி முன்னால் போகிறது. அப்படின்னா யானை வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம். அதோ இப்போது திமிங்கலம் எட்டடி பின்னால் போகிறது. யானை எட்டடி முன்னால் போகிறது. அப்படின்னா திமிங்கலம் வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம்.சில சமயம் யானை வெற்றி பெறப் போவதைப் போலத் தெரியும். அப்போது கரையிலுள்ள மிருகங்கள் ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவார்கள். சிலசமயம் திமிங்கிலம் வெற்றி பெறப் போவதைப் போலத் தெரியும்.அப்போது நீரிலுள்ள பிராணிகள் ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவார்கள்.கயிறு இழுக்கும் போட்டி ரெம்ப நேரம் நடந்தது. கடைசியில் என்ன ஆச்சு? யானை முன்னாலும் போகவில்லை, பின்னாலும் போகவில்லை. அதேபோலதிமிங்கலமும் முன்னாலும் போகவில்லை, பின்னாலும் போகவில்லை. இரண்டு பேரும் தன் சகல சக்தியையும் ஒன்று திரட்டி கயிற்றை இழுக்கிறார்கள். சமநிலை.

‘ட்ப்ப்’ திடீரென கயிறு அறுந்தது. யானை பத்தடிதூரத்தில் பின்னால் போய் விழுந்து கரணமடித்தது. திமிங்கலமும் பத்தடிதூரத்தில் பின்னால் போய் விழுந்து கரணமடித்தது. யானைக்கு வெற்றியுமில்லை. தோல்வியுமில்லை. அதேபோல திமிங்கலத்திற்கும் வெற்றியுமில்லை,தோல்வியுமில்லை.கயிறு தான் அறுந்துவிட்டது. கயிறு இல்லையென்றால் கயிறு இழுக்கும் போட்டி இருக்குமா? பார்வையாளர்கள் கலைந்து போனார்கள்.

ஆமை யானையைப் போய்ப் பார்த்தது.

”யானைமாமா! திமிங்கலத்துக்கு இன்னொரு தடவை போட்டி போடணுமாம்..யானைமாமா இன்னொரு தடவை கயிறு இழுக்கணுமாம்..இல்லேன்னா பயந்தாங்குளின்னு சொல்லுமாம்..” என்று ஆமை சொன்னது.

யானை தலை குனிந்து பேசாமல் நின்றது.

ஆமை திமிங்கலத்தைப் போய் பார்த்தது.

”திமிங்கலண்ணே! யானை செயிச்சிட்டதா சொல்லிகிட்டு நடக்குதாம்..திமிங்கலண்ணன் முட்டாள்னு சொல்லுதாம்..திமிங்கலண்ணனை இனி பார்த்தால் குத்திக் கொன்னுருமாம்..யானை..” என்று ஆமை கூறியது.

திமிங்கலம் எதுவும் பேசாமல் நீந்திச் சென்றது.

No comments:

Post a Comment