Showing posts with label மாலி. Show all posts
Showing posts with label மாலி. Show all posts

Tuesday, 27 November 2012

திருடன் கொண்டு போன நாய்க்குட்டி

மலையாளம்- மாலிMohan Das (3)

தமிழில்-உதயசங்கர்

ராமுவுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைத்தது.நாய்க்குட்டியின் தலையும் வாலும் கருப்பு. உடம்பும் கால்களும் வெள்ளை. அழகான நாய்க்குட்டி. அதே சமயம், உஷாரான நாய்க்குட்டி.

நாய்க்குட்டி இரவில் வராந்தாவில் படுத்து உறங்கும். ராமுவின் அறைக்கு வெளியே தான் வராந்தா இருந்தது. ராமு அறைக்கதவைத் திறந்தே வைத்திருப்பான்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பனிரெண்டு ஆனது. ஒரு மணிச்சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ராமு விழித்து விட்டான். நாய்க் குட்டியும் விழித்து விட்டது. மணிச்சத்தம் அருகில் வந்து கொண்டேயிருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் தூரத்தில் கேட்காமலே போய் விட்டது.

” நாய்க்குட்டியே! இந்த மணிச்சத்தம் எதுக்குன்னு தெரியுமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- தெரியாது என்ற அர்த்தத்தில்.

“எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி பனிரெண்டு மணி ஆயிருச்சின்னா ஒரு திருடன் ரோட்டு வழியே நடந்துபோவான். திருடி விட்டு மணியடித்துக் கொண்டே வீட்டுக்குப் போவான். திருடன் போகிறான் என்று எல்லோருக்கும் தெரியணுமாம்..அதுக்குத் தான் மணியடித்துக் கொண்டு போகிறான்..என்ன உனக்குப் பயமாருக்கா நாய்க்குட்டி?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- பயம் இல்லை என்ற அர்த்தத்தில்.

அடுத்த ஞாயிறு வந்தது.இரவு மணி பதினொன்றரை ஆகி விட்டது. நாய்க்குட்டி என்ன செய்தது தெரியுமா? சத்தம் போடாமல் எழுந்து கேட்டிற்கு அடியில் நுழைந்து ரோட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. அவனுக்கு திருடன் எப்படி இருப்பான்னு கொஞ்சம் பார்க்கணும்!

மணி பனிரெண்டு அடித்தது. அதோ வருகிறான் திருடன் மணியை அடித்துக் கொண்டு. திருடனைப் பார்த்தபோது நாய்க்குட்டி பயத்தில் நடுங்கியது. அரிவாள்மீசை, முட்டைக்கண்கள்,கருப்பு நிறம்,பயங்கரமான ஆள்!

நாய்க்குட்டிக்கு வீட்டிற்குப் போனால் போதும் என்று தோன்றியது. அவன் கேட்டின் அடியில் நுழைய முயற்சித்தான். திருடன் பாய்ந்து ஒரே பிடி. உடனே நூலை வைத்து வாயில் ஒரு கட்டு. நாய்க்குட்டிக்குக் கடிக்கவும் முடியாது, குரைக்கவும் முடியாது. திருடன் நாய்க்குட்டியைக் கையில் எடுத்தான்.மணியை அடித்துக் கொண்டு ஒரே நடை.

முதலில் நாய்க்குட்டி மிகவும் பயந்து போய்விட்டது. பின்பு பயம் இல்லாமல் போய் விட்டது. அவன் யோசித்தான். வாயை மட்டும் தானே கட்டியிருக்கிறார்கள். மூக்கை கட்டவில்லை. கண்ணைக் கட்டவில்லை. அவன் மூக்கைத் திறந்து வைத்தான்.கண்ணைத் திறந்து வைத்தான்.எல்லாமணங்களயும் முகர்ந்து உள்வாங்கினான்.எல்லாகாட்சிகளையும் பார்த்தான். எல்லா மணங்களையும், எல்லாக்காட்சிகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டான்.

பத்து மைல் தூரத்திலிருந்தது திருடனின் வீடு. திருடன் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தான். திருடனின் மனைவி திருடி கதவைத் திறந்தாள். திருடன் நாய்க்குட்டியோடு வீட்டிற்குள் சென்றான். திருடி பத்திரமாய் கதவை அடைத்தாள்.

“திருடி இந்த நாய்க்குட்டி நல்லாருக்கா?” என்று திருடன் கேட்டான்.

“திருடா ரொம்ப நல்லாருக்கு..” என்று திருடி சொன்னாள்.

திருடி நாய்க்குட்டியை சங்கிலியால் கட்டிப் போட்டாள். சோறும் பாலும் கொடுத்தாள். பின்பு படுத்து உறங்கினாள்.

நாலைந்து நாள் கழிந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா? திருடி யோசித்தாள். எவ்வளவு நல்ல நாய்க்குட்டி! நாய்க்குட்டி திருடி சொன்னபடியெல்லாம் கேட்கிறது. கடிப்பதில்லை. குரைப்பதில்லை.திருடி அதை அவிழ்த்து விட்டாலோ வாசல்படி கூட தாண்டுவதில்லை!

ஆனால் இதெல்லாம் வெறும் நாடகம் என்று அவளுக்குத் தெரியாது. அவளை எப்படியாவது ஏமாற்றி விட்டு ஓடிப் போகணும். அதுதான் நாய்க்குட்டியின் திட்டம்.

ஒரு ராத்திரி. மணி ரெண்டு இருக்கும். திருடியும் திருடனும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். நாய்க்குட்டி பதுங்கிப் பதுங்கி ரோட்டில் இறங்கியது.பின்பு ஒரே ஓட்டம்! முன்பு திருடன் தூக்கிக் கொண்டு வரும்போது முகர்ந்த மணங்கள், பார்த்த காட்சிகள், எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே சென்றது.அது பத்து மைல் ஓடி ராமுவின் வீட்டை அடைந்தது. கேட்டின் கீழே நுழைந்து உள்ளே சென்றது. நாய்க்குட்டி இல்லாததினால் ராமு வாசலை பூட்டியிருந்தான். நாய்க்குட்டி சன்னல் வழியே எட்டிப் பார்த்தது. சத்தமாய் நாலைந்து குரைப்பு!

ராமு எழுந்து விட்டான். குரைப்பொலியை உற்றுக் கேட்டான். வேறு நாயோ? இல்லை. நம்மோட நாய் தான். ராமு வாசல் கதவைத் திறந்தான். நாய்க்குட்டி ராமுவின் மேல் ஒரே பாய்ச்சல். பின்னர் நக்கோ நக்கென்று நக்கிக் கொஞ்சியது.

அடுத்த ஞாயிறு ராத்திரி வந்தது. பனிரெண்டு மணி ஆனது. அதோ கேட்கிறது மணிச்சத்தம். திருடன் திருடி விட்டு வீட்டுக்குப் போகிறான்.

“நாய்க்குட்டி! ரோட்டிற்குப் போக வேண்டாமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- வேண்டாம் என்ற அர்த்தத்தில்.

காலையில் ராமு கேட்டைத் திறந்தான்.

“போறியா.. நாய்க்குட்டி!” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது-இல்லை என்ற அர்த்தத்தில்!

புகைப்படம்-மோகன் தாஸ்வடகரா

Tuesday, 30 October 2012

கயிறு இழுக்கும் போட்டி

மலையாளம் – மாலி

தமிழில்- உதயசங்கர்Now-We-Lock-Our-Mouths-orca-killer-whale-vs-elephant-24960522-858-629

யானை எப்போதும் நினைத்துக் கொள்ளும், தான் தான் உலகத்திலேயே வலிமையானவன். திமிங்கிலத்திற்கோ? தான் தான் வலிமையானவன் என்று நினைப்பு. யானை கடலுக்குச் சென்றதில்லை. அதனால் திமிங்கிலத்தைப் பார்த்ததில்லை. அதேபோல் திமிங்கிலமும் கரைக்கு வந்ததில்லை. அதனால் யானையைப் பார்த்ததில்லை. ஆமை கரைக்கும் போகும் கடலுக்கும் போகும். அதனால் யானையையும் பார்த்திருக்கிறது. திமிங்கிலத்தையும் பார்த்திருக்கிறது. அவர்கள் இரண்டு பேரும் அடித்துக் கொள்ள வேண்டும்.அதைப் பார்த்து ரசிக்க வேண்டும். அது தான் ஆமையின் திட்டம்.

ஆமை முதலில் யானையைப் பார்த்தது.

“யானைமாமா! கடலில் திமிங்கிலம் என்று ஒரு பெரிய உயிரினம் இருக்குதாம்..அவன் யானைமாமாவைத் தூசின்னு சொல்றானாம்..கயிறு இழுக்கும் போட்டியில் அவன் யானைமாமாவைத் தோற்கடிச்சிருவானாம்..” என்று சொன்னான்.

ரெண்டாவதாக ஆமை போய் திமிங்கிலத்தைப் பார்த்தது.

“திமிங்கிலண்ணே! திமிங்கிலண்ணே! கரையில் யானைன்னு ஒரு பெரிய உயிரினம் இருக்குதாம்..அவன் திமிங்கிலண்ணனைக் கால்தூசின்னு சொல்றானாம்..கயிறு இழுக்கும் போட்டியில் அவன் எளிதாக செயிச்சிருவானாம்..” என்று ஆமை சொன்னது.

யானைக்குக் கோபம் தலைக்கேறியது. திமிங்கிலத்திற்கும் கோபம் தலைக்கேறியது. ஆமைக்குப் பொழுதுபோக்காய் இருந்தது. அவன் யானையிடம் சென்றான்.

“ஆமை! கயிறு இழுக்கும் போட்டி கரையில் வைச்சு நடத்தணும்..” என்று யானை கூறியது.

“யானைமாமா! திமிங்கிலத்துக்குக் கடலில் மட்டும் தான் இருக்கமுடியுமாம்..கரைக்கு வரமுடியாதாம். நான் முடிவு செய்றபடி நடத்தலாம்..” என்று ஆமை சொன்னது.

அவன் மறுபடியும் திமிங்கிலத்திடம் போனான்.

“ஆமையே! கயிறு இழுக்கும் போட்டி கடலில் வைச்சுத் தான் நடத்தணும்..” என்று திமிங்கிலம் கூறியது.

“திமிங்கிலண்ணே! யானைக்குக் கரையில் மட்டும்தான் இருக்கமுடியுமாம்..கடலில் இறங்க வழியில்லையாம்.. நான் முடிவு செய்றபடி நடத்தலாம்..” என்று ஆமை சொன்னது.

ஆமையின் முடிவு என்னவாக இருந்தது தெரியுமா? யானை கரையில் நிற்கட்டும்.திமிங்கிலம் கடலில் இருக்கட்டும். அப்படியே கயிறு இழுக்கணும்.! யானையும் திமிங்கிலமும் ஒத்துக் கொண்டன.

நிச்சயித்த நாள் வந்தது. கரையில் நிலத்திலுள்ள பிராணிகள் எல்லாம் கூட்டமாய்க் கூடி நின்றன. சிங்கம்,கரடி, மான், முதலான ஏராளமான மிருகங்கள். அவர்களுக்கு யானை வெற்றி பெறவேண்டும்.

கடலில் நீர்வாழ்பிராணிகள் எல்லாம் வந்து நிறைந்தன.முதலை,கொம்புச்சுறா,செம்மீன்,முதலான ஏராளமான பிராணிகள்.அவர்களுக்கு திமிங்கிலம் வெற்றி பெற வேண்டும்.

யானை கரையில் தயாராக நின்றது. திமிங்கிலம் கடலில் தயாராகக் கிடந்தது. ஆமை நீளமான கயிறு ஒன்றைக் கொண்டு வந்தது. கயிறின் இரண்டுமுனைகளிலும் வட்டமுடிச்சு போட்டது.ஒரு முடிச்சை யானையின் கழுத்திலும் இன்னொரு முடிச்சை திமிங்கிலத்தின் கழுத்திலும் மாட்டியது. அதன்பிறகு அவன் நடுவில் நின்று கொண்டான்.கையை உயர்த்தி பெருங்குரலில்” இழுங்க..” என்று கத்தினான்.

யானை இழுத்தது. திமிங்கலமும் இழுத்தது. பார்வையாளர்கள் மூச்சை அடக்கிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதோ யானை நாலடி பின்னால் போகிறது. திமிங்கலம் நாலடி முன்னால் போகிறது. அப்படின்னா யானை வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம். அதோ இப்போது திமிங்கலம் எட்டடி பின்னால் போகிறது. யானை எட்டடி முன்னால் போகிறது. அப்படின்னா திமிங்கலம் வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம்.சில சமயம் யானை வெற்றி பெறப் போவதைப் போலத் தெரியும். அப்போது கரையிலுள்ள மிருகங்கள் ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவார்கள். சிலசமயம் திமிங்கிலம் வெற்றி பெறப் போவதைப் போலத் தெரியும்.அப்போது நீரிலுள்ள பிராணிகள் ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவார்கள்.கயிறு இழுக்கும் போட்டி ரெம்ப நேரம் நடந்தது. கடைசியில் என்ன ஆச்சு? யானை முன்னாலும் போகவில்லை, பின்னாலும் போகவில்லை. அதேபோலதிமிங்கலமும் முன்னாலும் போகவில்லை, பின்னாலும் போகவில்லை. இரண்டு பேரும் தன் சகல சக்தியையும் ஒன்று திரட்டி கயிற்றை இழுக்கிறார்கள். சமநிலை.

‘ட்ப்ப்’ திடீரென கயிறு அறுந்தது. யானை பத்தடிதூரத்தில் பின்னால் போய் விழுந்து கரணமடித்தது. திமிங்கலமும் பத்தடிதூரத்தில் பின்னால் போய் விழுந்து கரணமடித்தது. யானைக்கு வெற்றியுமில்லை. தோல்வியுமில்லை. அதேபோல திமிங்கலத்திற்கும் வெற்றியுமில்லை,தோல்வியுமில்லை.கயிறு தான் அறுந்துவிட்டது. கயிறு இல்லையென்றால் கயிறு இழுக்கும் போட்டி இருக்குமா? பார்வையாளர்கள் கலைந்து போனார்கள்.

ஆமை யானையைப் போய்ப் பார்த்தது.

”யானைமாமா! திமிங்கலத்துக்கு இன்னொரு தடவை போட்டி போடணுமாம்..யானைமாமா இன்னொரு தடவை கயிறு இழுக்கணுமாம்..இல்லேன்னா பயந்தாங்குளின்னு சொல்லுமாம்..” என்று ஆமை சொன்னது.

யானை தலை குனிந்து பேசாமல் நின்றது.

ஆமை திமிங்கலத்தைப் போய் பார்த்தது.

”திமிங்கலண்ணே! யானை செயிச்சிட்டதா சொல்லிகிட்டு நடக்குதாம்..திமிங்கலண்ணன் முட்டாள்னு சொல்லுதாம்..திமிங்கலண்ணனை இனி பார்த்தால் குத்திக் கொன்னுருமாம்..யானை..” என்று ஆமை கூறியது.

திமிங்கலம் எதுவும் பேசாமல் நீந்திச் சென்றது.

Sunday, 28 October 2012

தாமரைப் பூவும் வண்டும்

மலையாளம் – மாலி1663153-Lotus-Flower-0

தமிழில் - உதயசங்கர்

பூமா என்று ஒரு தாமரைப் பூ இருந்தாள். தாமரைக் குளத்தில்தான் அது வாழ்ந்து வந்தாள். அங்கே வேறு தாமரைப் பூக்களும் இருந்தனர். தாமரைப்பூக்கள் காலையில் தேனைச் சுரந்தனர். தேன் குடிப்பதற்காக வண்டுகள் வந்து சேரும். பூமா சுரக்கிற தேன் மிகவும் ருசியாக இருக்கும். எல்லா வண்டுகளுக்கும் அது தெரியும். வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டு வரும். பூமா எல்லோருக்கும் தேன் கொடுப்பாள். பூமாவுக்கு எல்லோரையும் பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடித்திருப்பது யாரைத் தெரியுமா? நீலன் என்ற வண்டைத் தான். நீலன் தான் மிகநன்றாக ரீங்காரப் பாட்டு படிக்கிறவன்.

ஒரு நாள் பூமா,”நீலா இனிமேல் நீ மதியத்திற்கு மேல் வந்தால் போதும்.” என்று சொன்னாள். அதற்கு நீலன்,” ஏன் காலையிலே வந்தா என்ன?” என்று கேட்டான்.

பூமா,” காலையில நெறைய வண்டுகள் வருது..அவர்களுக்குத் தெரியாமல் நான் ஒண்ணு செய்றேன். முதல் தரமான தேனை நான் உனக்காக ஒளிச்சு வைக்கிறேன் மதியத்துக்கு மேலே நீ வந்து குடிச்சிட்டுப் போ..” என்று சொன்னாள்.

நீலன்,” மத்த வண்டுகளூக்கு தேன் கொடுக்காம இருந்தா போதாதா?” என்று கேட்டான்..

“அய்யோ அது முடியாது..எந்த வண்டு தேவைன்னு வந்தாலும் நான் கொடுப்பேன். அதுதான் என் சுபாவம்..ஆனா உன்னோட பாட்டு தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால உனக்கு நான் முதல்தரமான தேனைக் கொடுப்பேன்.” என்று பூமா சொன்னாள்.

அடுத்த நாள் நீலன் மதியத்துக்கு மேல் வந்தான்.பூமா முதல்தரமான தேனை ஒளித்து வைத்திருந்தாள். வந்த உடனே அவள் அதைக் கொடுக்கவில்லை.

“ரீங்காரப்பாட்டுப் பாடி என்னை வட்டமடி! நூறு தடவை சுற்றி வரணும்..அப்பத்தான் நான் தேன் தருவேன்..” என்று பூமா நீலனிடம் கேட்டாள்.

நீலனுக்கு எண்ணத் தெரியாது..அவன் பூமாவிடம்,” பூமா நான் பாட்டுப் பாடிக் கொண்டே உன்னைச் சுற்றி வாரேன்..நீ தான் எண்ணிக்கணும்..” என்று சொன்னான்.

அவன் ரீங்காரப்பாட்டு தொடர்ந்து பாடினான். வெகுநேரம் வட்டம் சுற்றினான். அப்போது தான் பூமா,” சரி..நூறு சுற்று முடிந்தது..” என்று சொன்னாள்.

பிறகு அவள் தேன் கொடுத்தாள்.

உண்மையில் இருநூறு தடவை நீலன் சுற்றியிருந்தான். நூறு என்று பூமா சும்மா சொன்னாள். ஏனெனில் அதிக நேரம் பாட்டு கேட்கிற ஆசை தான்.

இதையெல்லாம் இன்னொரு தாமரைப்பூ பார்த்துக் கொண்டிருந்தது.அவள் பெயர் துர்முகி. துர்முகி சுரக்கிற தேன் சிறிது கசக்கும். அதனால் வண்டுகள் அவளிடம் போவதில்லை. பூமாவும் நீலனும் பிரியமாக இருப்பதைப் பார்த்து அவளுக்குப் பொறாமை தொன்றியது.

துர்முகி,” பூமாவின் தேனில் விஷம் இருக்கிறது “ என்று வண்டுகளிடம் சொன்னாள்.

வரிசையாக எல்லா வண்டுகளூம் துர்முகியை நம்பினார்கள். அவர்கள் எல்லோரும் பூமாவை விட்டு விட்டார்கள். இதில் பெரிய கஷ்டம் நீலனும் துர்முகியை நம்பி விட்டான். அவனும் பூமாவிடம் போவதில்லை.

பூமாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா? மற்ற வண்டுகள் வராவிட்டாலும் பரவாயில்லை.நீலன் வராமல் இருந்தது தான் ரொம்ப சங்கடமாக இருந்தது. அவனும் துர்முகியை நம்பி விட்டானே!

பூமாவின் சங்கடம் துர்முகிக்கு சந்தோசமாக இருந்தது. அவள்,”பூமாவுக்கு அப்படித்தான் வேணும்” என்று நினைத்தாள்.

பூமாவுக்கு சத்யன் ஞாபகத்துக்கு வந்தான். சத்யன் ஒரு நண்டு. அவன் உண்மை தான் பேசுவான். எல்லா வண்டுகளுக்கும் அது தெரியும்.அது மட்டுமில்லை. எல்லா தாமரைப்பூக்களுக்கும் தெரியும்.

சத்யனிடம் சென்று பூமா விவரம் சொன்னாள். காலையில் சத்யன் நீலனைப் பார்த்தது.

“நீலா. பூமா சுரக்கிற தேனில் விஷமும் இல்லை..கிஷமும் இல்லை..அந்தப் பொய்சொல்லி துர்முகியின் வேலைதான் இது..நீ பெரிய தப்பு செய்ஞ்சிட்டே..” என்று கோபத்தோடு சொன்னான் சத்யன்.

நீலன்,” உண்மையா? சத்யா!” என்று கேட்டான்.

“உண்மையில்லைன்னா..என் பேர் அசத்யன்னு மாத்திக்கோ..” என்று சத்யன் சொன்னான்.

நீலன் பூமாவின் அருகில் சென்றான்.

“என்னை மன்னிச்சிரு பூமா!” என்று நீலன் வேண்டினான். பூமாவுக்கு அளவற்ற சந்தோசம். ஆனால் அந்த சந்தோசத்தை வெளிக் காட்டாமல் ,” நீலா நீ இருநூறு தடவ பாட்டுப்பாடிக் கொண்டே என்னைச் சுற்றி வந்தாத்தான் நான் உனக்கு தேன் தருவேன்..” என்று சொன்னாள்.

நீலன் ரொம்ப நேரம் சுற்றினான்.

“சரி.. இருநூறு ஆச்சு..போதும்.. தேன் குடிச்சிக்கோ..” என்று பூமா சொன்னாள்.

ஆனால் உண்மையில் முன்னூறு ஆகியிருந்தது.

நீலனும் பூமாவும் மறுபடியும் பிரியமாகி விட்டார்களா? அதைப் பார்த்து ஒரு தாமரைப்பூவின் முகம் கருத்துப் போய் விட்டது.-அவள் துர்முகி!

Wednesday, 24 October 2012

பழிக்குப்பழி

street-dogs மலையாளம் – மாலி

தமிழில் - உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு தெருநாய் இருந்தது. அது பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தது. ஆனால் சில சமயம் திருடியும் தின்னும். ஒரு தடவை ஒரு தவறு நடந்தது. அது ஒரு மனிதனின் வீட்டுக்குள் போனது. சமையலறைக் கதவு திறந்து கிடந்தது.தெருநாய் சமையலறைக்குள் நுழைந்தது. பாத்திரத்தில் நிறையச் சோறு இருந்தது. பாத்திரம் மூடியிருந்தது. அது மூக்கினால் மூடியைத் தள்ளிவிட்டது. மூடி கீழே விழுந்து கடமுடா கடமுடான்னு சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு மனிதன் ஓடி வந்தான். பாதி தின்னும் திங்காமலும் தெருநாய் வெளியே ஓடியது.மனிதன் கீழே கிடந்த கல்லை எடுத்தான்.ஓடுகிற தெருநாயைப் பார்த்து எறிந்தான்.கல் தெருநாயின் வலது பின்காலில் பட்டது. தெருநாய் நொண்டிநாய் ஆகிவிட்டது. அது நொண்டிக் கொண்டே ஓடிவிட்டது.

அந்த ஊரில் இருபது நாய்களுக்கும் மேலே இருந்தன. அவைகள் எல்லாம் தெருநாயின் கூட்டாளிகள். அவைகள் அந்தத் தெருநாயை நொண்டிநாய் என்றே அழைத்தன.

நொண்டிநாய்க்கு மனிதன் மேல் பகை தோன்றியது. ஒரு மனிதன்தானே தன்னை நொண்டியாக்கியது, எனவே மனிதர்களைப் பழி வாங்கணும். இதுதான் அதன் முடிவு.

ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மனிதனுக்கு நாயைவிட புத்தியுண்டு. சக்தியுண்டு. எனவே பொறுமையாய் செய்யவேண்டும். முதலில் கூட்டாளிகளோடு ஆலோசிக்கவேண்டும்.

நொண்டிநாய் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

‘பிரியமான தெருநாய்களே! மிகவும் முக்கியமான ஒரு காரியம். அதைப் பற்றிப் பேச நாம் ஒரு கூட்டம் போடவேண்டும்.சனிக்கிழமை இரவு பத்து மணிக்குக் கூட்டம். இடம் ஊருக்கு கிழக்கே உள்ள மைதானம். மிக முக்கியமான காரியம். நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும். நான் காத்திருப்பேன்.’

குறித்த நேரத்தில் எல்லாத் தெருநாய்களும் ஆஜராகி விட்டன. வீட்டுநாய்களைப் போல அவைகள் கிடையாது. வீட்டுநாய்களுக்கு இரவில் காவல் வேலை உண்டு. தெருநாய்களுக்கு காவல் வேலை என்ன ஒருவேலையும் கிடையாது.

தெருநாய்கள் வட்டமாய் உட்கார்ந்தன.

நொண்டிநாய் பேசியது.” தெருநாய்களே! மனிதர்களுக்கு நாய்கள் என்றால் பெரிய வெறுப்பு. நான் அதற்கு ஒரு ஆதாரம் தருகிறேன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வெறுக்கிறான். அப்போது அவன் எப்படி அவனைத் திட்டுகிறான்? ஏ பூனையே! என்று சொல்வதில்லை. ஏ கோழி! என்று சொல்வதில்லை. ஏ காளையே! என்று சொல்வதில்லை. மாறாக ஏ நாயே! என்று திட்டுகிறான். இனிமேல் அதற்கு நாம் ஒத்துக் கொள்ளக் கூடாது. நாம என்ன செய்யலாம்?” என்று கேட்டது.

வெறியனான ஒரு தெருநாய்,” நாம ராத்திரியில் சத்தமாய் குரைக்கணும். அப்படி மனிதர்களைத் தூங்கவிடாமல் செய்யணும்” என்று சொன்னது.

“மனிதர்களுடைய சாப்பாட்டையெல்லாம் நாம திருடி திங்கணும்..”இன்னுமொரு வெறிபிடித்த நாய் சொன்னது.

”பார்க்கிற மனுசங்களையெல்லாம் பாய்ஞ்சு கடிக்கணும்..” என்று எல்லோரையும் விட கூடுதல் வெறி பிடித்த தெருநாய் கூறியது.

“இதெல்லாம் ஆபத்தான வழிகள்..மனிதர்கள் நம்மை அடிச்சே கொன்னுருவாங்க..நான் ஒரு நல்ல வழி சொல்றேன்.. ஒரு நாய் இன்னொரு நாயை வெறுத்தால் ‘ஏ மனிதா!’ ன்னு திட்டணும்” என்று நொண்டிநாய் சொன்னது.

சரிதான். எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

தெருநாய்களின் கூட்டத்தில் ஒரு கருங்காலி இருந்தது. கருங்காலிக்குச் சேக்காளியாய் ஒரு வீட்டுநாய் இருந்தது. கருங்காலி நடந்ததையெல்லாம் வீட்டுநாயிடம் சொன்னது. அந்த வீட்டுநாய் அவனுடைய எஜமானனான மனிதனிடம் சொன்னது.அந்த மனிதன் மற்ற மனிதர்களிடம் சொன்னான். மனிதர்களுக்கு தெருநாய்கள் மீது கோபம் வந்தது. அது தெருநாய்களுக்குத் தெரிந்து விட்டது.

நொண்டிநாய்க்கும் மற்ற நாய்களுக்கும் தகவல் கிடைத்தது.மனிதர்கள் கம்புகளோடு வருகிறார்கள். நொண்டிநாய் நொண்டி நொண்டி ஓடத் தொடங்கியது. நொண்டிகளில்லாத மற்ற நாய்கள் நொண்டாமல் ஓடத்தொடங்கின. எங்கே? அடுத்த ஊருக்கு.

நொண்டிநாய்க்குக் கருங்காலி நாயோடு வெறுப்பு தோன்றியது. நேரடியாக மோத முடியாது. ஆனாலும் அது கருங்காலியைக் கூப்பிட்டது.’ஏ மனிதா!’

மற்ற எல்லா தெருநாய்களும் அதைப் பின்பற்றி ‘ஏ மனிதா!’ என்று கூக்குரலிட்டன.

Saturday, 20 October 2012

பல்லின் வேலைநிறுத்தம்

மலையாளம் – மாலி

தமிழில் – உதயசங்கர்16820

 

நாக்கு,”வயிறே! நான் தான் உண்மையில் கொடுத்துவைத்தவன்!” என்று சொன்னது. வயிறு உடனே,”நாக்கே! நீ ஏன் அப்படிச் சொல்றே?” என்று கேட்டது. அதற்கு நாக்கு,” எனக்கு சாப்பாட்டின் ருசி தெரியும். என்னைத் தவிர வேறு யாருக்கும் ருசி தெரியாது. நான் ஒரு வேலையும் செய்ய வேண்டாம். ஆனால் இஷ்டம் போல ருசித்துச் சாப்பிடலாம். பல்லின் வேலையோ பாவம்! அவன் சாப்பாட்டை மென்று சவைக்க வேண்டும்.ஆனால் ருசி அறிய மாட்டான். முட்டாள்!” என்றது.

வயிறும் உடனே,” நீ சொன்னது சரிதான்,நாக்கே! அப்படின்னா நானும் கொடுத்து வைத்தவன் தான்.சாப்பாட்டுக்காக நானும் எந்த வேலையும் செய்வதில்லை.ஆனாலும் எனக்கு சாப்பாடு கிடைக்கிறது. என்னைத் தவிர வேறு யாருக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. பல்லு கூலியில்லாம வேலை செய்ற சுத்தமுட்டாள்” என்று சொன்னது.

இந்த உரையாடலை பல் கேட்டது. அது தனக்குள்,”சாப்பாட்டைக் கடிப்பது நான் நொறுக்குவது நான் அரைப்பது நான் இப்படி பல வேலைகளை நான் செய்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.ஒரு வேலையும் செய்யாத நாக்குக்கும் வயிறுக்கும் எல்லாப் பிரயோசனமும் கிடைக்கிறது. இது அநியாயம்! அநியாயம்!’ முணுமுணுத்தது.

பல்லின் சேக்காளி கண். அதைப் பார்த்து பல் கேட்டது,” கண்ணே! நீ எனக்கு உதவி செய்வாயா?”

அதற்கு கண்,” பல்லே நான் உனக்கு உதவி செய்றேன்” என்று சொன்னது.

நாக்கிற்கு ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். வயிறுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். பல்லுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான்.கண்ணுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். இவர்கள் எல்லோருக்கும் சொந்தக்காரன் ஒரே ஆள் தான் அவன் மனிதன்.

மனிதன் மதியம் சாப்பிட உடகார்ந்தான்.அப்போது கண் தன்னுடைய வேலையைக் காட்டத் தொடங்கியது. கண் மூடிக் கொண்டது. மனிதனால் சோற்றையும் கறிகளையும் பார்க்க முடியவில்லை.மனிதனின் வலது கை இலையைத் தடவியது. சோறு என்று நினைத்து பொரியலை அள்ளினான்.பொரியலை வாய் என்று நினைத்து மூக்கிற்குள் தள்ளினாள்.

மூக்கிற்கு ரொம்ப சங்கடமாகி விட்டது. அவன் கையை அழைத்து,”வலது கையே பொரியலை வாயிலதான் வைக்கணும்.தெரிஞ்சுதா..நான் வாயில்லை..மூக்கு..எனக்கு எவ்வளவு எரிச்சல் தெரியுமா? மூச்சும் முட்டுது..” என்று சொன்னது.

வலது கை மூக்கிலிருந்து பொரியலை வாரி எடுத்தது. ரொம்பக் கஷ்டப் பட்டு அதை வாயில் வைத்தது. மனிதனுக்குச் சாப்பிட ரொம்பநேரமாகி விட்டது.

கண்,”பல்லே! நான் மனிதனைக் கஷ்டப் படுத்திப் பார்த்துவிட்டேன்.ஆனால் அவன் எப்படியோ சாப்பிட்டு விட்டான்..இனி என்னால் முடியாது.. உன் வேலையை நீயே பார்த்துக்கோ..” என்று சொன்னது.

பல் உடனே,”கண்ணே! நீ சொல்றது சரிதான்..ஆனால் நான் என்ன செய்யணும்னு சொன்னா நல்லாயிருக்கும்..” என்று சொன்னது.அதற்கு கண்,” பல்லே! நீ கடிக்காதே! நொறுக்காதே!அரைக்காதே! பேசாமல் இரு! மொத்தத்தில் வேலைநிறுத்தம் செய்யவேண்டும்” என்று சொன்னது.

மனிதன் இரவில் சாப்பிட உட்கார்ந்தான். கண் மூடவில்லை. சோறு,சாம்பார், அப்பளம், மாங்காய்பச்சடி, எல்லாம் வாயில் கிடந்தது. ஆனால் பல்தான் வேலைநிறுத்தம் செய்ததே. அவன் கடிக்கவில்லை. நொறுக்கவில்லை. அரைக்கவில்லை அசையாமல் இருந்தது. நாக்கினுக்கு பழைய மாதிரி ருசி கிடைத்தது. வயிறும் பழைய மாதிரியே நிறைந்தது.

மனிதன் உறங்கினான். இரண்டு மணி நேரம் கழிந்தது. வயிறில் ஒரு புரட்டல்.என்ன காரணம்? சாப்பாடு செரிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வலி கூடிக் கொண்டே போனது. கடைசியில் சகிக்கமுடியவில்லை. வயிறு என்ன செய்தது தெரியுமா? செரிக்காத சாப்பாட்டை மேல் நோக்கி ஒரு தள்ளு..! அதெல்லாம் வாந்தியாக நாக்கில் பட்டு வெளியே வந்தது. வாந்தியின் ருசி தெரிந்த போதோ? அய்யோ! நாக்கிற்கே வாந்தி வந்தது.

அடுத்த நாளும் அப்படியே தான் நடந்தது. அதற்கு அடுத்த நாளும் அப்படியே. நான்கு நாட்களும் அப்படியே நடந்தது. வயிறு பலகீனமாகி விட்டது. நாக்கும் பலகீனமாகிவிட்டது. கண்ணும் பலகீனமாகிவிட்டது. பல்லுக்கு மாத்திரம் பலகீனமே இல்லை!

கண்,” நாக்கே! வயிறே! உங்களால நானும் கஷ்டப் படறேன்..பல் சவைக்கவில்லையென்றாலோ? நாம காலி! பல்லுகிட்ட மன்னிப்பு கேளுங்க! அப்பத்தான் அவன் வேலைநிறுத்தத்தை விடுவான்..” என்று சொன்னது.

உடனே நாக்கு,” பல்லே! உன்னை நான் முட்டாள்னு சொன்னது தப்பு. நான் உங்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று சொன்னது.

வயிறு,” பல்லே! என்னையும் மன்னிக்கணும் இனி நான் உன்னை சுத்த முட்டாள்னு சொல்லமாட்டேன்..இது உறுதி!” என்று சொன்னது.

பல் வேலைநிறுத்தத்தைக் கை விட்டது.அது கடிக்கத் தொடங்கியது. நொறுக்கத் தொடங்கியது.அரைக்கத் தொடங்கியது.எல்லோரும் சுகமாக வாழ்ந்தனர்.முன்னே மாதிரி.

Tuesday, 16 October 2012

வௌவ்வாலுக்கு நன்றி

Parrot-BN_MR7817-w  மலையாளம்- மாலி

தமிழில்- உதயசங்கர்

 

ஒரு கிளியம்மா ஒரு மரத்தின் கிளையில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் முட்டைகளிட்டது. முட்டைகள் பொரியும். அதிலிருந்து குஞ்சுகள் வெளியே வரும். அருமைக் குஞ்சுகள்! ஹா..என்ன அழகு!.

கீழே மரத்தின் அடியில் ஒரு பொந்து இருந்தது. பொந்தில் ஒரு கெட்ட பாம்பு இருந்தது. அதற்கு கிளிமுட்டை என்று சொன்னாலே போதும். வாயில் எச்சில் ஊறிவிடும். கிளி முட்டையிட்டு விட்டது என்ற தகவல் அதற்குக் கிடைத்தது. உடனே கிளியம்மாவின் முட்டைகளை விழுங்கி விட்டது. பின்பு பொந்துக்குள் போய் சுருண்டு படுத்துக் கொண்டது. எதுவும் தெரியாதது மாதிரி. திருட்டுப்பயல்!.

கிளியம்மா திரும்பி வந்து பார்த்தால்? கூட்டில் முட்டைகளில்லை! அது கதறி அழுததது. இந்தத் துக்கத்தை எப்படி தாங்க முடியும்?

கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு வௌவால்தாத்தா தொங்கிக் கொண்டிருந்தது. பகலெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும், அதுவும் தலைகீழாக.

வௌவால்தாத்தாவுக்கு கெட்டபாம்பின் பழக்கம் தெரியும். எப்போதும் காலையில் பொந்திலிருந்து இறங்கிப் போகும். இரையை பிடித்து விழுங்கி விட்டு உச்சிப்பொழுதுக்குத் திரும்பி வரும். அப்புறம் பொந்துக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளும். தூக்கம்னா தூக்கம்! அப்படியொரு தூக்கம்!

மறுநாளும் கெட்டபாம்பு கிளம்பியது.

வௌவால்தாத்தா கிளியம்மாவைக் கூப்பிட்டது.

“கிளியம்மா! உன்னோட முட்டைகளை யாரு தின்னா தெரியுமா? பொந்திலே இருக்கிற கெட்டபாம்பு தான். நான் என் கண்ணாலே பார்த்தேன்.” என்று சொல்லியது.

கெட்டபாம்பின் மீது கிளியம்மாவுக்கு எவ்வளவு கோபம் தெரியுமா? ஆனால் என்ன செய்ய? பாவம் அது ஒரு கிளியம்மா தானே! பாம்பை என்ன செய்ய முடியும்.?

“வௌவால்தாத்தா எனக்கு உதவி செய்யுங்களேன்..” என்று அழுது கொண்டே கூறியது.

“எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்..கிளியம்மா.. நீ அடுத்தமுறை முட்டையிடும் போது எனக்குத் தகவல் சொல்லணும் தெரியுதா? மறந்திராதே!” என்று வௌவல்தாத்தா சொன்னது.

தூரத்தில் ஒரு மரத்தடியில் கீரிப்பிள்ளையின் வீடு இருந்தது. வௌவாலின் சேக்காளி கீரிப்பிள்ளை.

வௌவால் கீரிப்பிள்ளையை சென்று பார்த்து,” கீரிக்கண்னா, நீ ஒரு கெட்டபாம்பைக் கொல்லுவியா?” என்று கேட்டது.

கீரிப்பிள்ளை உடனே,”என்னது? கொல்லுவியாவா..சரியாப்போச்சு! நல்லபாம்பையே நான் கொல்லுவேன்..பின்னே கெட்டபாம்பை விடுவேனா?” என்று சொன்னது. வௌவால்தாத்தா நடந்ததெல்லாம் அதற்கு சொல்லியது. கீரிப்பிள்ளை என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தது. பிறகு மரக்கிளைக்கு திரும்பி வந்து தலைகீழாகத் தொங்கியது.

ஒரு நாள் கிளியம்மா வௌவால்தாத்தாவிடம் வந்து,”வௌவால்தாத்தா, நாளைக் காலையிலே நான் முட்டையிடுவேன்..” என்று சொன்னது.

அடுத்தநாள் பொந்திலிருந்து கெட்டபாம்பு கீழே இறங்கியது. கொஞ்சநேரம் கழித்து கிளியம்மா ரெண்டாவது முட்டையும் இட்டது. வௌவால்தாத்தா போய் கீரிப்பிள்ளையைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தது. கீரிப்பிள்ளை மரத்தடியில் உள்ள புதரில் பதுங்கியிருந்தது.

“கிளியம்மா, நீ முட்டைகளைக் கவ்வியெடுத்து மரத்தடியில் வைச்சுக்கோ! அப்புறம் கூட்டில் போய் ஒளிஞ்சிக்கோ..பத்திரமா இருக்கணும்..பார்த்துக்கோ..” என்று வௌவால்தாத்தா தன் திட்டத்தைச் சொன்னது.

மதியம் கெட்டபாம்பு பொந்திற்கு வந்தது. சுருண்டு போய் படுத்துவிட்டது. நல்லா உறங்கணும் என்று நினைத்துக் கொண்டது.

வௌவால்தாத்தா கெட்டபாம்பைக் கூப்பிட்டு,” பாம்பே! கிளியம்மா மறுபடியும் முட்டைபோட்டிருக்கு..முட்டை கீழே விழுந்திருச்சி..ஆனால் உடையல..உனக்கு அதிர்ஷ்டம்தான்..போய் முழுங்கிக்கோ..!” என்று சொன்னது.

இதைக் கேட்டவுடன் கெட்டபாம்பு நிமிர்ந்து பார்த்தது. வேகமாக மரத்தின் அடிக்கு ஊர்ந்து போனது. கிளியம்மாவின் முட்டைகளைப் பார்த்ததும் அதை நோக்கி நேராகச் சென்றது.பதுங்கியிருந்த கீரிப்பிள்ளை என்ன செய்தது தெரியுமா? ஒரே பாய்ச்சல்! ஒரே கடி! முடிந்தது கெட்டபாம்பின் சோலி!

கிளியம்மாவுக்கு சந்தோசமுன்னா சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம்! அது முட்டைகளைக் கவ்வி எடுத்துக் கொண்டு கூட்டிற்குத் திரும்பியது. முட்டைகள் பொரிந்து கிளிக்குஞ்சுகள் வந்தன. அதன் பிறகும் முட்டைகள் இட்டது. அவைகளும் பொரிந்தன. நிறைய கிளிக்குஞ்சுகள்!

இனி கெட்டபாம்பைப் பற்றி பயப்படவே வேண்டாம்.

அதோடு கிளியம்மா அடிக்கடி,” வௌவால்தாத்தா தாங்கள் செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்.

bat16-c

Tuesday, 2 October 2012

மந்திரமும் தந்திரமும்

மலையாளத்தில் –மாலி

தமிழில் – உதயசங்கர்

 

ஒரு அழகான ராஜகுமாரிக்கும் ஒரு அழகான ராஜகுமாரனுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்தனர்.ஆனால் கல்யாணம் நடக்கவில்லை.காரணம் யார் தெரியுமா? கெட்டவனான ஒரு மந்திரவாதி தான்.

ராஜகுமாரியை தான் கல்யாணம் முடிக்கவேண்டும்- அது தான் அந்த மந்திரவாதியின் ஆசை.அவன் ராஜகுமாரியின் அரண்மனைக்குச் சென்றான். பூந்தோட்டத்தில் ஒளிந்து கொண்டான். அங்கேயே பதுங்கியிருந்தான். ராஜகுமாரி பூப்பறிக்கத் தோட்டத்திற்கு வந்தாள். மந்திரவாதி சில மந்திரங்களை உச்சரித்து ராஜகுமாரியை பெண்நாயாக மாற்றினான்.பின்பு வேகமாக நடக்கத் தொடங்கினான். அந்த நாயும் மந்திரவாதியின் பின்னாலேயே போயிற்று. போகாமலிருக்க முடியாது. அத்தனை வலிமை இருந்தது அந்த மந்திரத்துக்கு.

ராஜகுமாரியைக் காணவில்லையா? ராஜகுமாரனுக்கு அளவு கடந்த துக்கம் உண்டானது. இனி என்ன செய்ய? ஒரே ஒரு வழியே இருக்கிறது. நல்லவனான ஒரு மந்திரவாதி இருந்தான். ராஜகுமாரன் அந்த நல்ல மந்திரவாதியைப் பார்த்து ராஜகுமாரி காணாமல் போனதைச் சொன்னான். நல்லமந்திரவாதி தன் மந்திரசக்தியைக் கொண்டு நடந்ததையெல்லாம் தெரிந்து கொண்டான்.

“ராஜகுமாரா! யார் கண்ணிற்கும் தெரியாமல் மறைந்திருக்கும் மந்திரம் எனக்குத் தெரியும். அதைப் போல பழைய உருவம் திரும்ப கிடைக்கவும் மந்திரம் தெரியும். ரெண்டையும் உனக்குச் சொல்லித் தாரேன்..மந்திரம் மட்டும் போதாது..ஒரு தந்திரமும் சொல்லித் தாரேன்..” என்று நல்லமந்திரவாதி சொன்னான்.

மந்திரமும் தந்திரமும் கிடைத்தவுடன் ராஜகுமாரனுக்கு சந்தோசமாகி விட்டது. அவன் நல்லமந்திரவாதியிடம் பயணம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். கெட்டமந்திரவாதியின் வீட்டைத் தேடிப் போனான். வெகுதூரத்தில் ஒரு மலை இருந்தது. அந்த மலையில் ஒரு குகை இருந்தது. அந்தக் குகையில் தான் கெட்ட மந்திரவாதியின் வீடு இருந்தது. ராஜகுமாரன் வெகுதூரம் பயணம் செய்தான்.நிறைய கஷ்டங்களைச் சந்தித்தான். கடைசியில் குகைக்கு அருகில் வந்து விட்டான்.மறையும் மந்திரத்தைச் சொல்லி மறைந்து குகைக்குள் நுழைந்து விட்டான்.

அது கெட்டமந்திரவாதிக்குத் தெரியாது. அவன் வேலை மும்முரத்திலிருந்தான். மறுநாள் காலையில் கல்யாணம்.நிறைய கூட்டாளிகளைக் கூப்பிட்டிருந்தான். பிரமாண்டமான விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.முகூர்த்தநேரம் வரும்போது தான் மந்திரவாதி மந்திரம் சொல்லி பெண்நாயை ராஜகுமாரியாக்குவான். பின்பு அவளைக் கலியாணம் செய்வான்.

ராஜகுமாரன் பெண்நாயைப் பார்த்தான். துயரத்தைச் சகிக்கமுடியவில்லை. எவ்வளவு கஷ்டம்? தன்னுடைய பிரியமான ராஜகுமாரி இந்த உருவத்திலா? ராஜகுமாரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நல்லவேளை மந்திரவாதி வெளியே போனான். இதற்குத்தானே ராஜகுமாரன் காத்திருந்தது.ராஜகுமாரன் மந்திரவாதியின் அறைக்குள் நுழைந்தான். மேசை திறந்து மந்திரப் புத்தகத்தை எடுத்தான்.பக்கங்களைப் புரட்டி தலைப்புகளைப் பார்த்தான்.அதோ ஒரு தலைப்பு ’மனிதனை நாய்களாக மாற்றுகிற மந்திரம்’. ராஜகுமாரன் அந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து கொண்டான். காலையில் மந்திரமும் சொல்வான். தந்திரமும் செய்வான். அப்போது பார்க்கலாம் பொழுதுபோக்கு.

காலையில் என்ன ஆரவாரம்! நெருங்கிய நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் இஷ்டம் போல சாப்பிட்டார்கள். குடித்தார்கள்.பேசினார்கள். மொத்தத்தில் ஒரே கோலாகலமாக இருந்தது. கடைசியில் முகூர்த்தநேரம் வந்தது. கெட்டமந்திரவாதி மந்திரம் சொன்னான்.அந்தப் பெண்நாய் ராஜகுமாரியாக மாறியது.அப்போது ராஜகுமாரன் என்ன செய்தான் தெரியுமா? மந்திரம் சொல்லி மந்திரவாதியை ஆண்நாயாக்கி விட்டான்.

கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.இதற்கிடையில் ராஜகுமாரன் என்ன செய்தான் தெரியுமா? ராஜகுமாரியையும் மறையச் செய்தான். இருவரும் சேர்ந்து ஒரே ஓட்டம். ராஜகுமாரியின் அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

ஆண்நாயான மந்திரவாதிக்கு ராஜகுமாரன் செய்த தந்திரம் புரிந்துவிட்டது. மனிதனாக மாறினால் தானே மந்திரம் சொல்லமுடியும்.நாயாக இருக்கிறானே! ராஜகுமாரனைக் கடித்துக் கொல்லவேண்டும்!. அந்த நாய் ராஜகுமாரியின் அரண்மனைக்கு ஓடியது.ரொம்ப தூரம் ஓடியதால் வாயில் நுரையும் கிதைப்பும் ஏற்பட்டது. வழியில் கூடியிருந்தவர்கள் அதைப் பார்த்து,”அதோ ஒரு பைத்தியக்காரநாய்..”என்று கூப்பாடு போட்டனர். எல்லோரும் சேர்ந்து அந்த நாயை அடித்துக் கொன்றனர்.

ராஜகுமாரன் மறைவிலிருந்து வெளியே வந்தான். ராஜகுமாரியையும் மறைவிலிருந்து வெளியே கொண்டு வந்தான். பின்பு அவர்கள் கல்யாணம் பிரமாதமாக நடந்தது.sher-christopher-1

Thursday, 27 September 2012

நெருப்போடு விளையாடினால்?

kids indian மலையாளம்- மாலி

தமிழில்- உதயசங்கர்

 

சாயங்காலம் ஆகி விட்டது. அம்மா குத்துவிளக்கு ஏற்றினாள். அதன் முன் உட்கார்ந்து நாமாவளி சொன்னாள். அவள் கூடவே மினியும் சொன்னாள்.

குத்துவிளக்கில் திரி இருந்தது. அதில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. காற்று வீசவில்லை. அதனால் தீபம் அசையாமல் நின்று எரிந்து கொண்டிருந்தது. பார்க்கும் போது எப்படி இருந்தது தெரியுமா? நெற்றியில் வைக்கிற கோபி பொட்டைப் போல இருந்தது. நிறமோ சிவந்த பவழம் போல இருந்தது. என்ன அழகு?

மினிக்கு தீயென்றால் எவ்வளவு இஷ்டம் தெரியுமா?

அம்மா நாமாவளி சொல்லி முடிந்த பிறகு எழுந்து உள்ளே போவதற்குத் தயாரானாள். மினி அங்கேயே இருந்தாள்.

“அம்மா நான் தீயைக் கொஞ்சம் தொட்டுப் பாக்கட்டா?” என்று கேட்டாள்.

“ வேண்டாம் கண்ணே! கை சுட்டுரும்..” என்று அம்மா எச்சரித்தாள்.

”அப்படின்னா என்ன?” என்று மினி யோசனையுடன் கேட்டாள்.

“கண்ணு, தோல் பொத்துப் போகும்.. ரெம்ப வலிக்கும்.. நீ உருண்டு புரண்டு அழுவே.. அதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே போய் விட்டாள்.

மினி தீயையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஹா..என்ன அழகு! அருகில் போய் அதைப் பிடிக்க ஆசை வந்தது.

“தீயே உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிடட்டுமா?” என்று மினி கேட்டாள். தீயின் சுடர் உச்சி கொஞ்சம் சிணுங்கியது.”வேண்டாம் மினி, என்னைத் தொடாதே..தொட்டால் சுடும்..” என்று தீ பதில் சொன்னது.

ஆனால் மினி கேட்கவில்லை. அவள் வலது கையை நீட்டினாள். சுண்டுவிரலை தீக்குள் நீட்டினாள். பட்டென ‘அய்யோ’ என்ற அலறல் கேட்டது. சத்தம் கேட்டு அம்மா பாய்ந்து வந்தாள்.அவள் பார்த்தது என்னதெரியுமா? மினி வலது கையை உதறுகிறாள். அங்கேயே குதிக்கிறாள். சத்தம் போட்டு அழுகிறாள்.!

”நான் அப்பவே சொன்னேன்ல..” என்று அம்மா கோபப்பட்டாள். உடனே அம்மாவின் கோபம் மாறிவிட்டது.அவள் உள்ளே ஓடினாள். தீப்புண்ணுக்கான மருந்தோடு திரும்பி வந்தாள்.

“வலது கையை நீட்டு!” என்று அவசரப்பட்டாள்.

மினி வலது கையைப் பின்னால் இழுத்தாள். அம்மா கையை இழுத்துப் பிடித்தாள். விரலில் மருந்து தேய்த்தாள். துணியைச் சுற்றிக் கட்டினாள்.

மினிக்கு இரவில் கொஞ்சம் வேதனை இருந்தது.விடியும் போது வேதனை இல்லை. ஆனால் ஒன்று மட்டும் மறக்கவில்லை. வேதனையின் ஞாபகம்.

மறுபடியும் மாலை வந்தது. அம்மா குத்துவிளக்கு ஏற்றினாள். நாமாவளி சொல்ல உட்கார்ந்தாள். மினி எங்கே இருந்தாள் தெரியுமா? குத்துவிளக்கிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி உட்கார்ந்திருந்தாள். நாமாவளி சொல்லி முடிந்தது.

“மினி இடது கையில் சுண்டுவிரல் இருக்கில்ல..? அதைத் தீயில நீட்டு. இன்ன..” என்று அம்மா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு உள்ளே போனாள். மினி தீயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அய்ய.ஆளைப்பாரு..எனக்கு வலிக்க வச்சில்ல..மோசமான தீ நீ!” என்று அவள் சொன்னாள். அப்போதும் தீ சொன்னது,” மினி நேத்து நான் உன்னை எச்சரிச்சேன்..நீ கேக்கலை..என்னைத் தொட்டவரை நான் காயப்படுத்துவேன்..எனக்கு அதில் விருப்பமில்லை..ஆனால் நான் அப்படி உருவாகியிருக்கிறேன்..நான் என்ன செய்யட்டும்..?”

அடுத்த நாள் மாலை அம்மா கேட்டாள்,” என்ன மினி தீயைத் தொடலையா?”

அதற்கு மினி,” இனி ஒருநாளும் நான் தீயைத் தொடமாட்டேன்.” என்றாள்.

Tuesday, 18 September 2012

ஓநாயை ஏமாற்றிய முயல்

மலையாளம் – மாலி

தமிழில்- உதயசங்கர்

jolly jackal copy Mandy_Walden-Lunar_hare

ஒரு காட்டில் ஒரு இளைய முயல் இருந்தது. அது உருண்டு திரண்டிருந்தது. ஒரு ஓநாய் அதைப் பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. முயல் எப்போதும் காலையில் ஒரே வழியாகப் போகும். ஓநாய் அந்த வழியைக் கண்டுபிடித்தது. அந்த வழியருகில் ஒரு புதர் இருந்தது. ஓநாய் அந்த புதரில் ஒளிந்திருந்தது. அது முயலுக்குத் தெரியாது. அது புதரின் அருகில் நெருங்கியபோது என்ன நடந்தது தெரியுமா? ஓநாய் பிடித்துக்கொண்டது.

“டேய்..முயலே! நான் இப்போ உன்னைத் திங்கப் போறேன்..” என்று ஓநாய் சொல்லிச் சிரித்தது.

முயல் புத்திசாலி. அவன் ஒரு தந்திரம் யோசித்தான்.ஓநாயின் முகத்தை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையைப் பார்த்தாலே பயந்துபோய் விட்டது தெரியும்.

“என்னடா முயலே! பயந்துபோய் பார்க்கிறே..?” என்று ஓநாய் கேட்டது.

“ஓநாயண்ணே! சொன்னா அண்ணன் தலை சுத்தி விழுந்துருவீங்க..”என்று முயல் சொன்னது.

ஓநாய்க்கு ஆர்வம் வந்துவிட்டது. “சொல்லு.. கேக்கிறேன்..” என்று அவசரப்பட்டது.

“அதுவா.. அண்ணனின் தலையில் ஒரு..ஒரு..பெரிய தேள்..” என்று முயல் சொல்லியது.

ஓநாய் “அய்யோ” என்று கூப்பாடு போட்டது! அதன் கைகள் முயலினை விட்டுவிட்டு தலையைத் தடவியது. தேளினைத் தட்டி விட வேண்டாமா? அது போதாதா முயலுக்கு..ஓடியே போய்விட்டது.

ஓநாய்க்கு வந்தது கோபம்.!. இந்த முயல் என்னை ஏமாத்திருச்சி இல்லியா? அதை இப்படியே விடமுடியாது. முயல் சாயங்காலம் தன்னுடைய இருப்பிடத்துக்குத் திரும்பியது. ஓநாய் முன்பே அந்த இருப்பிடத்தைக் கண்டு பிடித்தது. சாயங்காலத்துக்கு முன்பே இருப்பிடத்துக்கு வெளியே மல்லாந்து கிடந்தது-செத்த மாதிரி.

முயல் வந்தபோது என்ன பார்த்தது தெரியுமா? அதோ மல்லாந்து கிடக்கிற ஓநாய்.ஓநாயைத்தாண்டிப் போகணும். அப்போது தான் இருப்பிடத்துக்குள் நுழைய முடியும். முயலுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.ஓநாய் செத்துபோயிருச்சா? இல்லை செத்தமாதிரி நடிக்கிறதா? எப்படியாவது உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுக்கு என்ன வழி? முயல் யோசித்தது. வழி கிடைத்து விட்டது.

“ஓநாயண்ணே! அண்ணன் செத்துப் போயிட்டில்ல..” என்று கேட்டது. ஓநாய் பதில் சொல்லவில்லை.அப்படியே கிடந்தது. ஆனால் முயலுக்குச் சந்தேகம் தீரவில்லை. சந்தேகத்தைத் தீர்த்தே ஆக வேண்டும்.

“ஓநாயண்ணே! செத்த ஓநாய்னா சாதாரணமா காதுகளை ஆட்டும்..அண்ணன் காதுகள் ஆடவில்லையே அப்ப அண்ணன் சாகலை..இது நிச்சயம்..” என்று முயல் சொன்னது.

அப்போது ஓநாய் நினைத்தது, தான் செத்ததாக முயலை நம்ப வைக்கணும்..அதுக்கு அந்த முட்டாள் என்ன செய்தது தெரியுமா? ரெண்டு காதுகளையும் ஆட்டத் தொடங்கியது.

அதைப் பார்த்த முயலுக்கு ஒன்று உறுதியாகி விட்டது. ஓநாய் சாகவில்லை.அது செத்த மாதிரி நடிக்கிறது. முயல் சிரித்துக் கொண்டே ஒரே ஓட்டம்!

ஓநாய்க்கு கோபம் வந்தது. தன்னை ரெண்டாவது தடவையும் ஏமாற்றி விட்டதே இந்த முயல்! சரி இருக்கட்டும். முக்கா முக்கா மூணு ஆட்டை. அடுத்த தடவை தான் தப்பு செய்யமாட்டேன். ஓநாய் ரகசியமாக ஒரு விசயத்தைக் கண்டுபிடித்தது. முயல் இருப்பிடத்துக்கு வரும்முன்பு ஒரு காரியம் செய்யும். ஒரு குன்றின் மேல் ஏறி உட்கார்ந்து காற்று வாங்கும்.

குன்றின் ஒரு புறம் பெரும் பள்ளம்.ஐநூறு அடி ஆழம் இருக்கும். அதன் உச்சியில் இருந்து தான் முயல் காற்று வாங்கும்.ஓநாய் முயலின் பின்புறமாக குன்றின்மீது ஏறியது. ஒரு சத்தமில்லாமல் பின்னால் போய் முயலைப் பிடித்து விட்டது.

“டேய் முயலே! இந்தத் தடவை நீ என்னை ஏமாத்தமுடியாது.” என்று சொல்லிவிட்டு ஓநாய் உரக்கச் சிரித்தது.

“கண்டிப்பாக ஏமாத்த மாட்டேன்.ஓநாயண்ணே! வேணும்னா ஒரு உதவி செய்றேன்..கீழே நிறைய முயலிருப்பிடம் இருக்கு..அங்கே இருபதுக்கு மேலே முயல்கள் இருக்கு..என்னை விட உருண்டு திரண்ட முயல்கள் இருக்கு..அங்கே பாருங்க..!” என்று முயல் சொன்னது.

ஓநாய் முயலை விட்டுவிட்டு கீழே பார்த்தது. “ எங்கேடா முயல்கள்?” என்று ஓநாய் கேட்டது.

“நல்லா குனிஞ்சி பாருங்க..ஓநாயண்ணே..!” என்று முயல் சொன்னது.

ஓநாய் குனிந்து உற்றுப் பார்த்தது.பின்னாலிருந்து முயல் ஓநாயை ஒரு தள்ளு. ஓநாய் தலைகுப்புற கீழே பள்ளத்தில் விழுந்தது. பின்னாலிருந்து முயல் சிரித்ததை ஓநாய் கேட்கவில்லை. ஏனெனில் ஓநாய் உயிரோடு இல்லை.!

முயல் சிரித்துக்கொண்டே தன் இருப்பிடத்துக்குப் போனது.

Saturday, 11 August 2012

கடல்பிரயாணத்தில் அதிசயங்கள்

மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

Josies-beach-calm-sea

ஒரு ஊரில் அந்தோணி என்று ஒரு பையன் இருந்தான். அவனுடைய அப்பா ஒரு செம்படவன். அந்தோணியை அவனுடைய அப்பா கடலுக்குள் கூட்டிப் போனதில்லை. ஏனெனில் அந்தோணி ரெம்பவும் சின்னப்பையன். அவனுடைய அப்பா ஒவ்வொரு நாளும் கலையில் தனியே கடலுக்கு மீன் பிடிக்கப் போவார்.

தானும் கடலுக்குப் போகவேண்டும் என்று அந்தோணிக்கு ஆசை தோன்றியது.ஆனால் அவனிடம் படகு இல்லை.துடுப்பு இல்லை. வலை இல்லை. எல்லாவற்றையும் சேகரிக்கவேண்டும்.

அந்தோணி குருவியம்மாவைப் பார்த்தது.

”குருவியம்மா! எனக்கு ஒரு முட்டைத்தோடு தாயேன்..” என்று அது கேட்டது.

“அந்தோணி! நேத்து என்னோட ஒரு முட்டை உடைஞ்சி ரெண்டாயிருச்சி..அதிலிருந்து என்னோட குருவிக்குஞ்சு வந்திருச்சி..உடைஞ்ச அந்த முட்டையோட பாதியை நீ எடுத்துக்கோ..” என்று குருவியம்மா சொன்னது.

அந்தோணி வாத்துமாமாவைப் பார்த்தான்.

”வாத்து மாமா! எனக்கு ஒரு ஜோடி துடுப்பு தாயேன்..” என்று கேட்டான்.

“என்னோட காலில் கட்டுற துடுப்புதானே அந்தோணி! எங்கிட்ட ஆறு ஜோடி துடுப்பு இருக்கு..ஒருஜோடியை நீ எடுத்துக்கோ..” என்று வாத்துமாமா சொன்னது.

அந்தோணி சிலந்தியண்ணனைப் பார்த்தது.

“சிலந்தியண்ணே! எனக்கு ஒரு வலை தாயேன்.” என்று அது வேண்டியது.

“அந்தோணி! நான் ஒரு புது வலை பின்னியிருக்கேன்.. அதை நீ எடுத்துக்கோ..” என்று சிலந்தியண்ணன் சொல்லியது.

அந்தோணி முட்டைதோட்டைக் கடலில் இறக்கினான். அதில் ஏறிக்கொண்டான். பின்பு, வாத்துமாமாவின் துடுப்புகளை வீசினான். அப்படியே கடலுக்குள் சென்று விட்டான். பின்பு சிலந்திவலையை எடுத்து வீசினான்.

சிலந்தி வலையில் ஒரு திமிங்கிலம் சிக்கியது.

“என்னைக் கொல்லாதே!” என்று யாசித்தது.

“உன்னைக் கொல்லாம இருந்தா எனக்கு என்ன தருவே?” என்று அந்தோணி கேட்டான்.

“புதுசா சில அதிசயங்கள காட்டுறேன்..” என்று திமிங்கிலம் சொன்னது.

அந்தோணி திமிங்கிலத்தை சிலந்திவலையிலிருந்து விடுவித்தான். திமிங்கிலம் அந்தோணியின் முட்டைத்தோடுபடகில் ஏறியது.திமிங்கிலமே வாத்துத்துடுப்பினால் தண்ணீரை வலித்தது. அவர்கள் திமிங்கிலத்தின் வீட்டைச் சென்று அடைந்தார்கள். அங்கே திமிங்கிலத்தின் மனைவி, நான்கு குழந்தைகள், இருந்தார்கள். அவர்கள் அந்தோணிக்கு நிறைய பெரிய பந்துகளைக் கொடுத்தனர். பச்சை,நீலம், சிவப்பு, முதலான நிறங்களில் உள்ள பவழப்பந்துகள்.அந்தோணி, திமிங்கிலம், திமிங்கிலத்தின் மனைவி, திமிங்கிலக்குட்டிகள், எல்லோரும் முட்டைத்தோடு படகில் ஏறினர். இப்போது எல்லோரிலும் இளைய திமிங்கிலக்குட்டி படகு வலித்தது.

முன்னால் அடர்ந்த சிவப்பில் ஒரு வெளிச்சம்!.

“என்ன அது?” என்று அந்தோணி கேட்டான்.

“அதுவா கடல்தீ” என்று திமிங்கிலத்தின் மனைவி சொன்னாள்.

கடல் முழுவதும் தீ பிடித்து எரிகிறது. குளிர்ந்த தீ. முட்டைத்தோடுபடகு கடல்தீக்குள் புகுந்து முன்னே சென்றது. அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது? வளைந்தவில் போன்ற பாலம். ஏழு நிறங்களில் அந்தப் பாலம் ஒளிர்ந்தது.

“இது என்ன பாலம்?” என்று அந்தோணி கேட்டான்.

“வானவில்பாலம்..” என்று மூத்த திமிங்கிலக்குட்டி சொன்னது.

இந்தப் பக்கத்துக் கடல், அந்தப் பக்கத்துக்கடல், ரெண்டையும் சேர்ப்பதுதான் வானவில்பாலம். முட்டைத்தோடுபடகு எல்லோருடன் வானவில்பாலத்தில் ஏறி அந்தப் பக்கத்தில் இறங்கியது. அந்தப் பக்கத்தில் மஞ்சள்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அதற்கு அப்புறம் வெள்ளைக்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தது.

வெகு நேரம் ஆகி விட்டது.

“அப்பா வருவதற்கு முன்பு நான் வீட்டுக்குப் போகணும்..இல்லேன்னா அப்பா கோபப்படுவார்..” என்று அந்தோணி சொன்னார்.

திமிங்கிலம் வாலினால் தண்ணீரில் மூன்று முறை அடித்தது. முன்னால் ஒரு காற்று வந்து நின்றது. அது ஒரு புயற்காற்று.

“திமிங்கிலசாமி! தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று புயற்காற்று கேட்டது.

“அந்தோணியை உடனே அவன் வீட்டில் கொண்டு போய் சேர்க்கணும்” என்று திமிங்கிலம் ஆணையிட்டது.

திமிங்கிலம்,திமிங்கிலத்தின்மனைவி, திமிங்கிலக்குட்டிகள்,-எல்லோரும் முட்டைத்தோட்டிலிருந்து இறங்கினார்கள்.அந்தோணி மட்டும் முட்டைத்தோட்டுப் படகில் இருந்தான். புயற்காற்று முட்டைத்தோட்டுப் படகைக் கையில் எடுத்தது. பின்பு ஒரே ஊது! முட்டைத்தோடுப்படகு வானத்தில் பறந்து போய்விட்டது. அஞ்சே அஞ்சு நிமிசம். முட்டைத்தோடுபடகு, அந்தோணி, வாத்துத்துடுப்பு, சிலந்திவலை, எல்லாம் அந்தோணியின் வீட்டில் இருந்தார்கள்.

அந்தோணி முட்டைத்தோட்டை குருவியம்மாவுக்குக் கொடுத்தான். வாத்துதுடுப்புகளை வாத்துமாமாவிடம் கொடுத்தான்.சிலந்திவலையை சிலந்தியிடம் கொடுத்தான்.

மாலையில் அப்பா வந்தார். அந்தோணி எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்; எள்ளளவு வித்தியாசமும் இல்லாமல்.

அப்பா சொன்னார்: “நான் நம்புறேன்..”

Wednesday, 25 July 2012

பறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன?

Vector-mythical-creature-1 மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

 

முன்பு ஒரு காலத்தில் பறவைகளுக்கு சிறகுகள் கிடையாது. அவர்கள் தரையில் தான் வசித்தனர். ஆனால் மிருகங்களுக்கு சிறகுகள் இருந்தன. அவர்கள் வானத்தில் பறந்து கொண்டிருந்தனர். மிருகங்களுக்குத் தலைவன் இருந்தான். அதே போல் பறவைகளுக்கும் தலைவன் இருந்தான். அவர்களுக்கிடையில் பகை இருந்தது.

பறவைகளை அடக்கியே தீர வேண்டும்- இது மிருகத்தலைவனின் ஆசை.

“பறவைத்தலைவா! ஒழுங்கா மரியாதையா..கப்பம் கட்டணும்.. தெரியுதா..” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

பறவைத்தலைவன் ரொம்ப மரியாதையானவன். எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவனும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

“மிருகத்தலைவா! நான் கப்பம் தர மாட்டேன்..” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“அப்படியா..நான் யாருன்னு காட்டுறேன்..” என்று மிருகத்தலைவன் பயமுறுத்தினான்.

“என்ன செய்வே? என்னோட அலகை உடைச்சு உப்புப் போட்டு ஊற வச்சி திம்பியா? பேசாம இரு..” என்று பறவைத்தலைவன் சூடாகப் பதில் சொன்னான்.

உடனே மிருகத்தலைவன் பறந்து அருகில் வந்தான். பறவைத்தலைவன் எதிர்த்து நின்றான். அவன் கடித்தான்.இவன் கொத்தினான். அங்கே ஒரு கலகமே நடந்தது. மிருகத்தலைவனின் சிறகு லேசாக முறிந்து விட்டது. பறவைத்தலைவனின் அலகு கொஞ்சம் உடைந்து விட்டது. அதோடு சண்டையும் முடிந்து விட்டது.

ஆனால் மிருகத்தலைவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். எப்படியாவது பறவைகள் மீது படையெடுத்து ஒடுக்கவேண்டும். அவன் ரகசியமாக மிருகங்களை அணி திரட்டி பறவைகளைத் திடீரென்று தாக்கினான். பறவைகள் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் தயாராகவும் இல்லை. ஏராளமான பறவைகள் செத்து விட்டன. மிருகங்கள் வெற்றி பெற்றன.

பறவைத்தலைவனும் யோசித்தான்.மிருகங்கள் மறுபடியும் படையெடுக்கும். முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது. அவன் பறவைகளை ரகசியமாக அணி திரட்டினான். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தான். அதெல்லாம் மிருகத்தலைவனுக்குத் தெரியாது. மிருகத்தலைவன் மறுபடியும் படையெடுத்தான். இந்த முறை எல்லாம் எதிராக இருந்தது. ஏராளமான மிருகங்கள் செத்துப் போயின. வெற்றி பறவைகளுக்குக் கிடைத்தது.

இன்னும் படையெடுக்க வேண்டும்-தயாராக இருந்தான் மிருகத்தலைவன். படையெடுப்பை எதிர்க்கவேண்டும்-இதற்குத் தயாராகப் பறவைத்தலைவன். இந்தமுறை யுத்தம் பயங்கரமாக இருக்கும். இது உறுதி.

மிருகமும் இல்லாமல் பறவையும் இல்லாமல் ஒரு இனம் இருந்தது. அது பாம்பினம். பாம்புகளுக்கு விஷம் உண்டு. அவர்கள் எண்ணிக்கையும் அதிகம். மிருகத்தலைவனுக்கும், பறவைத்தலைவனுக்கும் ஒரு விசயம் உறுதியாகத் தெரிந்தது. பாம்புத்தலைவன் யார் பக்கம் சேர்கிறானோ அவருக்கே வெற்றி.

மிருகத்தலைவன் பாம்புத்தலைவனைப் பார்க்கச் சென்றது. அந்தச் சமயத்தில் பறவைத்தலைவனும் வந்து சேர்ந்தான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அது மட்டுமில்லை.பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

பாம்புத்தலைவனுக்கு முன்பே எல்லாம் தெரியும். இருவரும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை யூகிக்க ஒரு சிரமமும் இல்லை.

“மிருகத்தலைவா! பறவைத்தலைவா! கவனிங்க, நான் ஒரு முடிவு செய்ஞ்சிருக்கேன்..உங்க ரெண்டு பேரில யார் அதை ஏத்துக்கலேன்னாலும்..நானும் என் கூட்டமும் எதிராளி கூடச் சேந்துருவோம்.. என்ன சம்மதமா?” என்று பாம்பு கேட்டது.

பாம்புத்தலைவன் எதிராளியுடன் சேர்ந்தால்? நம்ம சோலி முடிந்துபோகும்.இது மிருகத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது. பறவைத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது.

“எனக்குச் சம்மதம்.” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

“எனக்குச் சம்மதம்” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“சரி..இதுதான் என் முடிவு.மிருகத்தலைவன் தான் முதலில் சண்டை போட்டது.அதுக்கு முதலில் மிருகங்கள் பரிகாரம் செய்யவேண்டும். அவர்கள் பறவைகளுக்கு சிறகுகள் தரணும்..” என்று பாம்புத்தலைவன் சொன்னான்.

மிருகங்களுக்கு வேறுவழியில்லை. அவர்கள் பறவைகளுக்கு சிறகுகளைக் கொடுத்தனர். அன்று முதல் என்னாச்சு? மிருகங்கள் நிலத்தில் வாழ்ந்தன. பறவைகள் ஆகாயத்தில் பறந்து திரிந்தன. இன்று வரை அப்படித்தானே!

Friday, 20 July 2012

அடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்!

மலையாளத்தில் – மாலி

 

தமிழில் – உதயசங்கர்

Black-Cat-Yellow-Eye-Wallpaper

அப்பாபூனையின் நிறம் கருப்பு.உடம்பு முழுவதும் கரியைத் தேய்ச்சது மாதிரி. அம்மா பூனையின் நிறம் வெள்ளை.பாலினால் செய்தது மாதிரி. அவர்களுக்கு நான்கு குட்டிகள் இருந்தன. முதல் குட்டி அப்பாவைப் போல கருப்பு. அவன் பெயர் கருப்பன். இரண்டாவது குட்டி அம்மாவைப் போல.அவளுடைய பெயர் வெளுப்பி. மூணாவது குட்டியின் உடம்பு கருப்பு, கால்கள் வெள்ளை.அவனுடைய பெயர் வெள்ளைக் காலன். நாலாவது குட்டியின் உடம்பு வெள்ளை கால்கள் கருப்பு. அவளுடைய பெயர் கருங்காலி.

அப்பாபூனைக்கு வேலை அதிகம். அவர் எப்போதும் வெளியிலேயே இருந்தார். எப்போதாவது தான் வீட்டிற்கு வருவார். குட்டிகளை வளர்த்ததோ அம்மாதான்.

கருப்பன் பலசாலி. முன்கோபக்காரன். அவன் அவனிஷ்டம் போல தான் நடப்பான்.இளையவர்களைப் பற்றி யோசிப்பதில்லை. அம்மா பால் கொடுக்கும் போதோ கேட்கவே வேண்டாம். கருப்பன் இளையவர்களைத் தள்ளி விட்டு தான் மட்டும் தனியே பால் குடிப்பான். அது மட்டும்தான் என்றால் கூட பரவாயில்லை போகட்டும் என்று விட்டு விடலாம். அவன் அவர்களை அடிக்கவும் கடிக்கவும் செய்வான். அதனால் அவர்களுக்கு அவனைக் கண்டால் அப்படி பயம்!

ஒரு தடவை குட்டிப் பூனைகள் கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். வெளுப்பி தெரியாமல் கருப்பனின் மேல் விழுந்து விட்டது. வந்ததே கோபம் கருப்பனுக்கு! அவன் வெளுப்பியின் மூக்கில் ஒரு அடி. வெளுப்பி அழுது விட்டாள்.

பின்பு ஒருதடவை பால் குடிக்கிற நேரம். முதலில் வெள்ளைக்காலன் ஓடி வந்து குடித்து விட்டான். கருப்பனுக்குக் கோபம் வந்து விட்டது. அவன் வெள்ளைக்காலனின் வாலில் ஒரு கடி. வெள்ளைக்காலன் அய்யோ என்று அலறி விட்டான்.

இன்னொருதடவை வெயில் காயப் போனார்கள் எல்லோரும். கருங்காலி தெரியாமல் என்ன செய்து விட்டாள் தெரியுமா? கருப்பன் எப்பவும் படுக்கிற இடத்தில் படுத்து விட்டான். அது போதாதா கருப்பனுக்கு. அவன் நகத்தை வைத்து கருங்காலியின் வயிற்றில் ஒரு குத்து. கருங்காலியின் வயிற்றிலிருந்து ரத்தம் துளிர்த்தது.

மூத்த மகனின் குணத்தைப் பார்த்து அம்மாபூனை வருத்தப்பட்டது. ஆனால் பாவம் அம்மாபூனை! யாரையும் தண்டிக்க மனசு வரவில்லை. அறிவுரை மட்டுமே சொன்னது ஆனால் அதெல்லாம் ஒண்ணும் பிரயோசனமில்லை. கருப்பன் மாறவேயில்லை பழைய மாதிரியே இருந்தான்.

ஒரு நாள் அப்பாபூனை வீட்டிற்கு வந்தது. அவரிடம் அம்மாபூனை,” மூத்தமகன் போக்கே சரியில்லை..கொஞ்சம் கவனிங்க..” என்று நடந்ததெல்லாவற்றையும் சொன்னாள்.

அப்பாபூனை கருப்பனை கூப்பிட்டது. “மகனே! சின்னவங்களை அடிக்கக்கூடாது.தெரியுதா?” என்று மரியாதையாகச் சொன்னார்.

அப்பாபூனை வேலைக்குப் போய் விட்டால்? கருப்பன் மறுபடியும் அடிக்கத்தொடங்கினான். தம்பிகளூம் தங்கைகளும் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள். வேறு என்ன செய்ய?

சில நாடகள் கழிந்தன.அப்பாபூனை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தது. அப்போது என்ன பார்த்தது தெரியுமா? வெள்ளைக்காலன் படுத்து உருண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். அம்மாபூனை அவனை தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது.

அப்பாபூனை “என்ன நடந்தது?” என்று கேட்டது.

“அப்பா கருப்பண்ணன், வெள்ளைக்காலண்ணனோட காது நுனியைக் கடிச்சித் துண்டாக்கிட்டான்..” என்று கருங்காலி சொன்னாள்.

அப்பாபூனை கருப்பனின் அருகில் சென்றார்.

“டேய்.. கருப்பா..உனக்கு வலிச்சாத்தான் நீ மத்தவங்களை அடிக்காம இருப்பே..” என்று அவர் சொன்னார். சொன்னது மட்டுமில்லையே. அப்பாபூனை பாய்ந்து கருப்பனின் காதில் ஒரு கடி. கருப்பன் கூப்பாடு போட்டான். அப்பாபூனை விடவில்லை.அது மட்டுமா? கருப்பனின் காதுநுனியைக் கடித்துத் துண்டாக்கிவிட்டார். கருப்பன் வேதனையில் நடுநடுங்கிப் போனான்.

“இனி மரியாதையா இருக்கணும்..” அப்பாபூனை சொன்னார்.

அன்றிலிருந்து கருப்பன் யாரையும் அடிப்பதில்லை. கடிப்பதில்லை.

Wednesday, 11 July 2012

ரேடியோ பல்லி

மலையாளத்தில் – மாலி

 

தமிழில் – உதயசங்கர்

lizard

”ராமு கதை கேட்கறீயா?”

கேட்டது யார்? ராமு சுற்றிலும் பார்த்தான். யாரையும் பார்க்க முடியவில்லை.

“கதை கேட்கறீயான்னு கேட்டேன்..” மறுபடியும் கேள்வி.

”கண்டிப்பா கேட்கறேன்..ஆனா கேக்கறது யாருன்னு முதல்ல தெரியணும்” என்று ராமு சொன்னான்.

“ரேடியோவுக்குள்ளே பார்..” என்றது அந்தக் குரல்.

ராமு அங்கே பார்த்தான்.ஒரு பல்லி.

“பல்லியே! நீங்களா பேசியது?” என்று ராமு கேட்டான்.

“ஆமா..நான் தான்..” என்று பல்லி சொல்லியது.

பழுதான ரேடியோ அது. ராமுவின் அப்பா அதை சரி செய்ய முயற்சித்தார். முடியவில்லை. அதை அப்படியே ஒரு பெஞ்சில் வைத்திருந்தார்.

“சரி.. கதை சொல்லு! கேட்கறேன்..” என்று ராமு சொன்னான்.

பல்லி ஒரு கதை சொல்லியது.

”இன்னொரு கதை..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.

“ஒரு நாளைக்கு ஒரு கதைதான் சொல்வேன்..” என்று பல்லி சொன்னது.

ரெண்டாம் நாள் ரெண்டாவது கதை.

“பல்லி! நீங்கள் எப்படி ரேடியோவுக்குள்ளே போனீங்க?” என்று ராமு கேட்டான்.

“அது ரொம்ப சுவாரசியமானது ராமு. என்னோட அம்மா முட்டையிட இதற்குள் வந்தாள். இட்ட முட்டைகளை அம்மா எண்ணி வைத்தாள். அப்புறம் ஒரு நாள் முட்டைகளை எடுத்துட்டு வேற இடத்துக்குப் போனாள்.போகும்முன்பு இன்னொரு தடவை முட்டைகளை எண்ணினாள். எண்ணிக்கை சரியாயிருக்குன்னு நினைத்தாள். ஆனால் அம்மா நினைச்சது தப்பு. ஒரு முட்டை குறைவாக இருந்தது. அந்த முட்டை உருண்டு வேற இடத்தில் கிடந்தது. அதிலிருந்து தான் நான் பிறந்தேன். பிறந்ததிலிருந்து இங்கே தான் இருக்கிறேன்” என்று பல்லி சொன்னது.

பதினைந்து நாட்கள் கழிந்தன. பதினைந்து கதைகளும் கேட்டாயிற்று. எவ்வளவு அருமையான கதைகள்!

“பல்லி உங்களுக்கு இந்தக் கதைகள் எங்கேயிருந்து கிடைத்தன?” என்று ராமு கேட்டான்.

“ரேடியோவில குழந்தைகளுக்கான கதைகள் இருக்கே..பொதுவாக சில கதைகள் நல்லாயிருக்கும்.. அதையெல்லாம் நான் சேகரிச்சு வைத்திருந்தேன்.. எங்கே சேகரிச்சு வைத்திருந்தேன் தெரியுமா? என் வாயிலியா?இல்லை. என் மூக்கிலியா? இல்லை. என் வாலிலா? இல்லை அப்புறம் எங்கே? என் மனசில்..!” என்று பல்லி சொல்லியது.

நாற்பது நாட்கள் கழிந்தன.அப்போது ராமு நாப்பது கதைகள் கேட்டிருந்தான். ஒரு கதை கூட மோசமாக இல்லை.

“பல்லி பெரியவர்களுக்கான கதைகளும் இருக்குமே! நீங்க அதையும் கேட்டிருக்கீங்களா..” என்று ராமு கேட்டான்.

“இல்லை.. அதைக் கேட்டா எனக்கு தூக்கம் வந்துரும். தூங்கறதுக்கு எனக்குப் பிடிக்காது..” என்று பல்லி நல்லுரை பகர்ந்தது.

நூற்றியொரு நாட்கள் கழிந்தன. நூற்றியொரு கதைகளும் கேட்டாச்சு. நூற்றியிரண்டாம் நாள் வந்தது.

“நூத்தியிரண்டாவது கதையைச் சொல்லு..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.

“இல்ல.. நூத்தியொரு கதைகள் தான் என்னிடம் இருந்தன.. நான் என்ன செய்ய?” என்று பல்லி பெருமூச்சுடன் சொல்லியது.

ராமுவுக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

“ராமு நான் உனக்கு கதைகள் சொன்னேன்..பதிலுக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்வியா? என்னை வெளியே விடறதுக்கு உன்னோட அப்பாகிட்ட சொல்றியா?” என்று பல்லி ஆவலுடன் கேட்டது.

ராமு எல்லாவற்றையும் அப்பாவிடம் சொன்னான். அப்பா உடனே என்ன செய்தார் தெரியுமா? ரேடியோவின் பின்புறம் திருகாணிகளைக் கழற்றினார். கனம் குறைந்த பலகையை எடுத்து வைத்தார். வெளியே போவதற்கு பல்லிக்கு எளிதாக இருந்தது.

“எங்கே போறீங்க பல்லி?” என்று ராமு கேட்டான்.

“அடுத்த வீட்டில் ஒரு புதிய ரேடியோ வந்திருக்கு.. அதைச் சுவத்தில மாட்டியிருக்காங்க.. நான் ரேடியோவுக்கும் சுவத்துக்கும் நடுவுல போய் இருந்துக்குவேன்.. பழுதாச்சின்னா நான் உள்ளே போய் இருந்துக்குவேன்.. எனக்கு இன்னமும் குழந்தைகள்  கதைகள் கேட்கணும்..நான் போகட்டுமா? வணக்கம்.” என்று பல்லி சொன்னது.

”வணக்கம்” என்று நான் சொன்னேன்.

ரேடியோபல்லி ஊர்ந்து போனது.

Tuesday, 26 June 2012

கொண்டையில்லாத சேவல்

மலையாளத்தில்- மாலிsculptures71

தமிழில்- உதயசங்கர்

 

அந்தச் சேவலுக்கு ஒரு கெட்டகுணம் இருந்தது. தேவையில்லாமல் அதிகமாய் பேசுவான். ஒருமுறை அவன் கூனன்பூனையைப் பார்த்தான். அவனிடம்,” டேய்! கூனா..உசுப்பிராணின்னா தலையில் கொண்டை வேணும்..உன் தலையில் கொண்டை இல்லை..அதனால நீ உசுப்பிராணியே இல்லை..” என்று சொல்லி முடிக்கும்முன்பே கூனன்பூனை பாய்ந்து ஒரு கடி! சேவல் தலைக் கொண்டை பூனையின் வாயில்!

அன்றிலிருந்து அந்தச் சேவலுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டானது-’கொண்டையில்லாச் சேவல்’.

அவன் பக்கத்துவீட்டுக் கோழியிடம்,”ஏடி! நான் மேகத்தைவிட உயரமாகப் பறக்கப் போறேன் தெரியுமா?” என்றான்.

அதற்கு அந்தக் கோழி,”கொண்டையில்லாச் சேவலே! என்ன இருந்தாலும் நீ ஒரு கோழியினம் தானே! அதனால பறப்பே..ஒத்துக்கிறேன்..ஆனால் ரொம்ப உயரமா எல்லாம்முடியாது..ரொம்ப தூரத்துக்கும் முடியாது..உன்னோட ஆசையை நீ விட்ரு!” என்று உபதேசம் செய்தது.

கொண்டையில்லாச் சேவல் விடவில்லை. அவனுக்கு பிடிவாதமும் கௌரவமும் உண்டு. உயரப் பறக்க படித்தே ஆக வேண்டும். அவன் போய் காக்காவைப் பார்த்தான்.

“காக்கா! நீ எனக்குச் சொல்லிக்கொடு..” என்று வேண்டினான்.

அதைக் கேட்ட காக்கா,” கொண்டையில்லாச் சேவலே! நீ கொஞ்சம் அடக்கஒடுக்கமா இருந்துக்கோ..அதான் உனக்கு நல்லது..” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. கொண்டையில்லாச் சேவல் மைனாவைப் போய்ப் பார்த்தது.

”மைனா மைனா எனக்குச் சொல்லிக்கொடு..”என்று வேண்டினான்.

“கொண்டையில்லாச் சேவலே எனக்கு வேற வேலை இருக்கு...!”என்று மைனா சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டது.

காக்காவும் கைகழுவி விட்டது. மைனாவும் கைகழுவி விட்டது.இவர்களை விட கழுகன் பலசாலி. கொண்டையில்லாச்சேவல் கழுகனைப் போய் பார்த்தான்.

”கழுகா, எனக்குச் சொல்லிக்கொடு..சும்மா ஒண்ணும் வேண்டாம்! தெரியுதா.. எனக்குக் கிடைக்கிற புழுக்கள்ல பாதிப் புழுக்கள் உனக்குத் தாரேன்..” என்று கொண்டையில்லாச் சேவல் சொன்னான்.

“கொண்டையில்லாச் சேவலே! உயரப் பறக்கிறது உனக்கு ஒத்து வராது..சும்மா ஆசைப் பட்டு பிரயோசனமில்லை..நீ உன் வேலையைப் பாரு..” என்று கழுகன் சொன்னான்.

கொண்டையில்லாச்சேவல் விடவில்லை. அவன் கழுகனைத் தொந்தரவு செய்தான். கழுகனுக்கு இரக்கம் வந்தது.

“சரி! நான் சொல்லிக் கொடுக்கிறேன்..முதல் பாடத்தை ஆரம்பிப்போமா..நீ என் முதுகில் ஏறிக்கோ..நான் உன்னைய தூக்கிகிட்டு உயரத்தில் பறக்கிறேன்..”என்று கழுகன் சொன்னான்.

கொண்டயில்லாச்சேவல் உற்சாகமாகி விட்டான். அவன் கழுகனின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கழுகன் சிறகுகளை விரித்து உயரே பறக்கத் தொடங்கினான்.கொண்டையில்லாச்சேவல் கண்களை மூடிக் கொண்டான்.திறக்கவில்லை. இரண்டு பேரும் எங்கே போயிருந்தாங்க தெரியுமா? தென்னை மரத்தை விட உயரமாய் பறந்து போனார்கள். கொண்டையில்லாச்சேவல் இவ்வளவு உயரமாய் பறப்பது இதுதான் முதல்தடவை. தலை சுற்றுவது போல் இருந்தது.கொஞ்சநேரம் கழிந்தது. அப்போது? கொண்டையில்லாச்சேவல் கீழே பார்த்தது. கீழே..ரொம்ப கீழே..கிடந்தது, பூமி. தென்னைமரமே புல்லு மாதிரி தான் தெரிந்தது.

கழுகன் இன்னும் மேலே பறந்து கொண்டிருந்தான்.கொண்டையில்லாச்சேவல் மிகவும் பயந்து போய்விட்டான்.அவன் கழுகனோட இறகுகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.பிடியை விட்டால்..அவ்வளவுதான்.முடிஞ்சது காரியம்!

“கழுகா! தயவு செஞ்சு என்னைக் கீழே இறக்கி விடேன்..” என்று கெஞ்சினான்.

ஆனால் கழுகன் உயரே போய்க் கொண்டேயிருந்தான்.கொண்டையில்லாச்சேவலுக்குக் கீழே பார்ப்பதற்கே பயம். அவன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான்.

“கொண்டையில்லாச்சேவலே! நான் இப்போ உன்னை தள்ளிவிடப் போறேன்..” என்று கழுகன் சொன்னான்.

”அய்யோ தள்ளிராதே..நான் செத்துருவேன்..என்னைக் காப்பாத்து..உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்..” என்று கொண்டையில்லாச்சேவல் .

“இனிமேல் நீ மேகங்களை விட உயரமா பறக்கணுமா..” என்று கழுகன் கேட்டான்.

“இல்ல வேண்டாம்..” என்று கொண்டையில்லாச்சேவல் சொன்னான்.பின்னர் கழுகன் அவனைக் கீழே இறக்கி விட்டான்.

பக்கத்துவீட்டுக்கோழி “என்னாச்சு உன் முதல்பாடம்..” என்று கேட்டது.

கொண்டையில்லாச்சேவல் கொஞ்சமும் தயங்காமல்,” கழுகன்,காக்கா, மைனா, எல்லாம் மோசமான பறவைங்க..உயரப் பறக்கிறது..அவங்களுக்குச் சரிதான்..கோழியின் அந்தஸ்துக்கு அது தேவையில்லை..” என்று சொன்னான்!

Thursday, 21 June 2012

சொர்க்கமும் நரகமும்

மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

 

என் வீட்டில் ஒரு தென்னைமரம் காய்த்தது.ஆனால் தேங்காய்குலைக்குப் பதிலாக மாங்காய்க்கொத்து காய்த்திருந்தது. மாங்காய்க்கொத்தில்

பதினோரு மாங்காய்கள்.ஆந்தைகள் மாங்காய்களைத் தின்று விட்டன. மாங்காய் கொட்டைகளை குளத்தில் நட்டு வைத்தேன்.

பதினோரு மாங்காய் கொட்டைகளும் சேர்ந்து ஒன்றாகி ஒரு பலாக் கொட்டையாகி விட்டன. பலாக் கொட்டையிலிருந்து ஒரு பாக்குமரம்

முளைத்தது. ஒரே நாளில் பாக்குமரம் பெரிதாக வளர்ந்தது.மரத்தின் உச்சியே கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு உயரம்! மரத்தில் ஒரு

வாசகம் எழுதப் பட்டிருந்தது. ’என் மீது ஏறி சொர்க்கம் போகலாம்’

 

நான் மரத்தின் மீது ஏறினேன்.வேகமாக மேலே ஏறி விட்டேன்.அப்போது பாக்குமரத்தின் உச்சி தெரிந்தது. கீழே பார்த்தேன். பூமி தெரியவில்லை.

மேலே பார்த்தால் பாக்குமரத்தில் நெல்லிக்காய்கள். ஒவ்வொரு நெல்லிக்காயும் ஒரு ரத்தினம். வலது பக்கத்தில் ஒரு இடம் தெரிந்தது.அங்கே

போவதற்கு பாக்குமரத்தின் உச்சியில் ஒரு பாலம் இருந்தது. நான் பாலம் கடந்து அந்த இடத்தை அடைந்தேன். மிகவும் அகலமான ஒரு நதி

அங்கே ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதியில் ஒரு வண்டி இருந்தது. அந்த வண்டியில் நான்கு தேனீக்களைப் பூட்டியிருந்தார்கள்.வண்டிக்காரன்

ஒரு பெருச்சாளி. நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன். பெருச்சாளி சாட்டையால் தேனீக்களை அடித்தது. தேனீக்கள் வண்டியை இழுத்துக் கொண்டு

நதியைக் கடந்தது. நான் அக்கரையில் இறங்கினேன்.அங்கே சிவப்பு நிறமான ஒரு வயல். அதில் பச்சைநிறமுள்ள மிளகு நிறைந்து

இருக்கிறது.ஒவ்வொரு பச்சைமிளகின் நீளமும் ஒரு அடி நீளம்.பச்சைமிளகினை அன்னப்பறவைகள் கொத்தித் தின்கின்றன.”பரவாயில்லையே!

காரத்தை இஷ்டப் பட்டு திங்கிற அன்னங்கள்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒரு அன்னப்பறவை ஒரு மிளகைக் கொத்தி

எடுத்து என்னிடம் நீட்டியது.பிறகு,” கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்” என்று சொன்னது. மரியாதைக்காக நான் அந்த மிளகினை வாங்கினேன்.

சந்தேகத்தோடு ஒரு நுனியில் லேசாகக் கடித்தேன். சர்க்கரையைப் போல என்ன ஒரு இனிப்பு! நான் நான்கு மிளகுகள் தின்று தீர்த்தேன்.

 

பின்னர் வயலைத் தாண்டி கடைவீதிக்கு வந்தேன்.இதற்கிடையில் தாகம் அதிகமாகிவிட்டது. நிறைய இனிப்பு சாப்பிட்டாச்சில்லியா? கடைவீதியில்

ஒரு கடையைப் பார்தேன். ‘இங்கே குடிப்பதற்கு காற்று விற்கப்படும்’ என்று எழுதி வைக்கப் பட்டிருந்தது. நான் அந்த கடைக்குள் சென்றேன்.

கடைக்காரன் ஒரு ஓணான்.பல வண்ணமுள்ள பலூன்கள் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன.ஓணான் ஒரு பச்சைப் பலூனை அவிழ்த்துக்

கொடுத்தது.நான் பலூன் காற்றைக் குடித்தேன். காற்று தொண்டையின் வழியாக வயிற்றில் இறங்கியது.இளநீரின் குளிர்மையும் இனிப்பும்

அதற்கு இருந்தது. பின்பு ஆரஞ்சு காற்றைக் குடித்தேன். கடைசியில் எலுமிச்சைக் காற்றையும் குடித்தேன்.இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

ஓணான்,” காற்று குடிக்கிறவர்கள் பணம் கொடுக்கவேண்டியதில்லை. பணம் வாங்கிக் கொள்ளவேண்டும். அதுதான் இங்கே வழக்கம். “ என்று

சொல்லி ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தது.

 

நான் கடையிலிருந்து இறங்கி நடந்தேன். ஒரு திருப்பத்தை அடைந்தேன்.’நரகத்திற்குப் போகும் வழி’ என்று எழுதி வைக்கப் பட்டிருந்தது. நான்

அந்த வழியில் நடந்து போனேன். அங்கே ஒரு ராட்சசன் நின்று கொண்டிருந்தான்.ராட்சசன் என்னை உயரே தூக்கினான்.குகை மாதிரி இருந்த

வாயைத் திறந்தான்.என்னை வாயில் போட்டு வாயை மூடினான். என்னைச் சுற்றிலும் ஒரே இருட்டு. நான் தட்டுத் தடுமாறி முன்னால்

போனேன். தூரத்தில் ஒரு வெளிச்சம்.நான் அதைப் பார்த்துக் கொண்டே போனேன்.வெளிச்சம் பெரியதாகிக் கொண்டே வந்தது.அது

ராட்சசனுடைய காது. நான் அந்தக் காது வழியே தோளில் இறங்கினேன். கையில் தொங்கி கீழே நிலத்தில் குதித்தேன். அங்கே எட்டடி நீளத்திற்கு

ஒரு புழு கிடந்தது.”நான் உனக்கு நரகத்தை காண்பிக்கிறேன்” என்று புழு சொன்னது.பிறகு என்னை மேலே ஏற்றிக் கொண்டு பறந்து சென்றது.

ஒரு நெருப்புக்கோட்டைக்குக் கொண்டு சென்றது.

 

புழு நெருப்புக்கோட்டையினைத் தாண்டிச் சென்றது.அங்கே ஒரு பெரிய மைதானம். மைதானத்தில் கார்மேகங்கள் ஓடி விளையாடிக்

கொண்டிருந்தன. கார்மேகங்களின் பின்னால் கழுகுகள் ஓடின. கழுகுகள் பாட்டுகள் பாடின. புழுவும் நானும் பாட்டைக் கேட்டோம். முன்னால்

குனிந்து நான் புழுவிடம்,”நரகத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?”என்று கேட்டேன்.

 

புழு அதற்கு,” ரொம்பத் தூரமில்லை..கொஞ்சதூரம் தான்..” என்று சொன்னது. திடீரென எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. நான்,”புழுவே!

நரகம் பார்ப்பதற்கு இன்னொரு தடவை வாரேன்..இப்போ வீட்டுக்குப் போகணும்” என்று சொன்னேன். அதற்குப்புழு,”அதுக்கு ஒரு வழி செய்ரேன்..”

என்றது.

 

பின்பு ஒரு குழலை எடுத்து ஊதியது. உடனே ஒரு தவளை வந்தது. வரும்போது ஒரு பீரங்கியையும் உருட்டிக் கொண்டு வந்தது. தவளை

என்னிடம்,” பீரங்கிக்குள்ளே ஏறு!” என்று சொன்னது. நான் உள்ளே ஏறினேன். பயங்கரமான ஒரு சத்தம்! நான் பீரங்கியின் வாயிலிருந்து பாய்ந்து

காற்றில் பறந்தேன். எரிநட்சத்திரக் கல்லைப் போல வேகமாகப் பறந்தேன்.ஒரு மணிநேரம் கழித்து நிலத்தில் இறங்கினேன்.பார்த்தால் எங்கள்

வீட்டு முற்றம்! வானில் ஒரு வானவில்லைப் பார்த்தேன். வானவில்லில் ஒரு வாசகம் தெரிந்தது.’சொர்க்கமும் நரகமும் பூமியில் தான்

 images (1) இருக்கிறது.’

Thursday, 7 June 2012

ஆட்டுக்கல் மீசை

 a_young_kaiser_wilhelm_clip_art_19590 மலையாளத்தில்- மாலி

தமிழில்- உதயசங்கர்

.கேசவன் வாத்தியாரின் மீசை ரெம்ப வித்தியாசமானது. அவ்வளவு கரு கருவென நீளமும் அடர்த்தியும் வேறு எந்த மீசைக்கும் கிடையாது. எல்லோரும் “மீசைன்னா அது கேசவன் வாத்தியாரின் மீசை தான்..” என்று சொல்லுவார்கள். கேசவன் வாத்தியாருக்கு இதில் கொஞ்சம் கர்வம் தான். அவர் பெரும்பாலான நேரங்களில் கண்ணாடி முன்னாலேயே நிற்பார். மீசையைத் தடவுவார். முறுக்குவார். விரிப்பார். அதுதான் அவர் வேலை.

இயல்பாக கேசவன் வாத்தியாரின் மீசை வளர்ந்தது. ரெண்டு பக்கமும் மேல் நோக்கி வளைந்து நட்டமாய் நின்றது. தேள் கொடுக்கு போல. சாக்கு தைக்கிற ஊசியைப் போல கூராக இருந்தது. கேசவன் வாத்தியாருக்கு ஒரு யோசனை தோன்றியது. மீசையின் நுனியில் ஏதாவது குத்தி வைக்கவேண்டும். அப்போது மீசை கொஞ்சம் கீழே இறங்கி நிற்கும்.ரொம்ப அழகாகவும் இருக்கும்.

ஏதாவது பெரிய காரியம் செய்வதற்கு முன்னால்? கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வரும்.தோசை தின்று ஆசை தீர்ப்பார். மீசை தடவுவார். ஒன்றும் மோசமில்லைஎன்று தோன்றும்.இது தான் வழக்கம்.

பெரிய வேலை செய்யப் போறாரில்லையா? கேசவன் வாத்தியாருக்குத் தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்துக் கொண்டார். மீசையைத் தடவினார். பரவாயில்லை..மேசையைத் திறந்தார். காசெடுத்து பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார். ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கினார். மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு எலுமிச்சம்பழத்தைக் குத்தி வைத்தார். அப்படியே வீட்டிற்கு வந்தார். அப்போதும் மீசையின் ரெண்டு நுனிகளும் பொங்கி எழுந்து நின்றன. அன்னிலிருந்து கேசவன் வாத்தியாருடைய மீசைக்கு என்ன பேர் தெரியுமா? எலுமிச்சைமீசை!

எலுமிச்சைமீசை வளர்ந்து கொண்டிருந்தது. எலுமிச்சை ரொம்பச் சின்னது என்று தோன்றியது அவருக்கு. அது மட்டுமா? எலுமிச்சையின் புளிப்புச்சாறு வாய்க்குள் இறங்கிக் கொண்டேயிருந்தது. ஒரு பெரிய காரியம் செய்யவேண்டும். கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்தார். மீசையைத் தடவினார். ம்..பரவாயில்லை..மேசையைத் திறந்தார். காசெடுத்தார். பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார். ரெண்டு பெரிய உருண்டைக் கத்திரிக்காயை வாங்கினார்.மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு கத்திரிக்காயைக் குத்தி வைத்தார். அப்படியே வீட்டிற்குத் திரும்பினார். அன்னிலிருந்து கேசவன் வாத்தியாருடைய மீசைக்கு என்ன பேர் தெரியுமா? கத்தரிக்காமீசை!

கத்திரிக்காமீசை வளர்ந்து கொண்டிருந்தது. கத்திரிக்காய் ரொம்பச் சின்னது என்று தோன்றியது. அது மட்டுமா? கத்த்ரிக்காமீசையிலிருந்து வடிந்த நீரின் மணம் வயிற்றைப் புரட்டியது. இனி ஒரு பெரிய காரியம் செய்யவேண்டும்.கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது.தோசை தின்று ஆசையைத் தீர்த்துக் கொண்டார். மீசையைத் தடவினார்.. ம்..பரவாயில்லை.மேசையைத் திறந்தார்.காசை எடுத்தார். பைக்குள் போட்டார்.கோமுவின் கடைக்குப் போனார். ரெண்டு பூசணிக்காய் வாங்கினார். மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு பூசணிக்காயை குத்தி வைத்தார்.அப்படியே வீட்டிற்குத் திரும்பினார். அப்போதும் மீசையின் நுனிகள் பொங்கி எழுந்து நின்றன. அன்று முதல் கேசவன் வாத்தியாரின் மீசைக்கு என்ன பேர் தெரியுமா? பூசணிக்காமீசை!

ஒரு தடவை கேசவன் வாத்தியார் மீசையிலிருந்து பூசணிக்காய்களை உருவி எடுத்தார். அப்போது அவருடைய மருமகன்,” மாமா! உங்க மீசைநுனி எவ்வளவு கூரா இருக்குன்னு பார்க்கட்டா ? “ என்று கேட்டான். உடனே கேசவன் வாத்தியார் ,” வேண்டாம்..அது விபரீதமாகிவிடும்..” என்று எச்சரித்தார். மருமகன் கேட்கவில்லை. அவன் மீசையின் நுனியில் உள்ளங்கையை வைத்தான். வைத்த உடனே கத்திக் கூப்பாடு போட்டான். உள்ளங்கையிலிருந்து ரத்தம் ஒழுகியது. அன்னிலிருந்து என்னாச்சு? கேசவன் வாத்தியாரின் மீசையை யாரும் தொடுவதில்லை.

பூசணிக்காமீசை வளர்ந்து கொண்டிருந்தது.இன்னமும் பெரிய காரியம் செய்ய வேண்டும். கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்துக் கொண்டார். மீசையைத் தடவினார். ம்.. மோசமில்லை.. மேசையைத் திறந்தார். காசை எடுத்தார். பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார். ஊஞ்சல் வாங்கினார்.மீசையில் கட்டினார். அப்படியே வீட்டிற்கு வந்தார்.அப்போதும் மீசையின் நுனிகள் பொங்கி எழுந்து நின்றன. மருமகன் அதில் ஊஞ்சலாடினான்.அன்னிலிருந்து கேசவன் வாத்தியாரின் மீசைக்கு என்னபேர் தெரியுமா? ஊஞ்சல் மீசை!

ஊஞ்சல்மீசை வளர்ந்து கொண்டிருந்தது. இப்படியே வளர்ந்தால் குழப்பமாகி விடுமே! முத்லில் எலுமிச்சம்பழம் குத்தினார். அது போதவில்லை. அப்புறம் கத்திரிக்காய் குத்தினார். கத்திரிக்காயும் போதவில்லை. பூசணிக்காயைக் குத்தினார். பூசணிக்காயும் போதவில்லை. பிறகு ஊஞ்சல் கட்டினார். ஊஞ்சலும் போதவில்லை. இனிமேல் என்ன செய்ய? ரொம்பப் பெரிய காரியம் செய்யவேண்டும். கேசவன் வாத்தியாருக்கு தோசை திங்க ஆசை வந்தது. தோசை தின்று ஆசையைத் தீர்த்தார். மீசையைத் தடவினார்.ம்.. பரவாயில்லை..மேசையைத் திறந்தார். காசை எடுத்தார். பைக்குள் போட்டார். கோமுவின் கடைக்குப் போனார்.இட்லி,தோசைக்கு அரிசி அரைக்கிற ஆட்டுக்கல் ரெண்டு வாங்கினார்.மீசையின் ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு ஆட்டுக்கல்லைக் குத்தி வைத்தார். ஆட்டுக்கல்லைத் துளை போட்டு மீசையில் சொருகினார். அப்படியே வீட்டிற்குத் திரும்பினார். அப்போதும் மீசையின் நுனிகள் பொங்கி எழுந்து நிற்கின்றன.

அன்னிலிருந்து கேசவன்வாத்தியாரின் மீசைக்கு என்ன பேர் தெரியுமா?

ஆட்டுக்கல்மீசை!

Friday, 11 May 2012

.சங்கரநாராயணனும் கிங்கரயானையும்

ELEPHANT CARTOON_jpg[1] மலையாளத்தில்- மாலி                                தமிழில்- உதயசங்கர்

சங்கரநாராயணன் பின்னால் பதுங்கி பதுங்கிச் சென்றான். கிங்கரயானையுடைய வாலிலிருந்து ஒரு ரோமத்தைப் பறித்தெடுத்தான்.பிறகு எடுத்தானே ஒரு ஓட்டம்! கிங்கரயானைக்கு கோபமான கோபம்! ஆனல் சங்கரநாராயணணனின் பின்னால் ஓடவில்லை. ஏனெனில் சாமி ஊர்வலத்தில் அது போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கிங்கரயானை நினைத்துக் கொண்டேயிருந்தது. சங்கர நாராயணனைப் பிடிக்கணும். ஒரு தடவை அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. சங்கரநாராயணன் பெரிய குளத்தில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தான். கிங்கரயானை குளக்கரைக்கு வந்தது. சங்கரநாராயணன் ஒரு தடவை முங்கி எழுந்தான். பார்த்தால் எதிரே கிங்கரயானை. சங்கரநாராயணன் குளத்தின் அக்கரைக்கு நீந்தினான் கிங்கரயானை விட்டுருமா? அந்தப் பெரிய குளத்தில் ஒரு பாய்ச்சல்! நான்கு கால்களும் தண்ணீருக்கு அடியில் துழாவ, த்லையும் உடம்பும் கூட தண்ணீருக்குக் கீழே முங்கி இருக்க, தும்பிக்கையின் நுனி மட்டும் தண்ணீரின் மேல் தெரிந்தது. சங்கரநாராயணன் நீந்திக் கொண்டே திரும்பிப் பார்த்தான். கிங்கரயானையைக் காணவில்லை. ஆனால் தும்பிக்கையின் நுனி மட்டும் நெருங்கி வருகிறது. சங்கரநாராயணன் ஆவேசத்தோடு நீந்தி அக்கரைக்குப் போய்ச் சேர்ந்தான்.பின்னாலேயே கிங்கரயானையும் அக்கரையில் ஏறியது. சங்கரநாராயணன் முன்னே ஒரு பெரிய மதில் சுவர் இருந்தது. அவன் அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்தான். அதோ கிங்கரயானையும் மதில்சுவரைத் தாண்டிக் குதிக்கிறது. சங்கரநாராயணன்,”அய்யய்யோ” என்று அலறினான் பின்னால் வந்த கிங்கரயானையும் ’ப்பேங்’ என்று பிளிறியது. சங்கரநாராயணனை இப்போது கிங்கரயானை பிடித்து விடும்.

சங்கரநாராயணன் எதிரே ஒரு தென்னை மரத்தைப் பார்த்தான். உடனே அவன் அதில் ஏறினான். யானை தென்னைமரம் ஏறாது என்று நினைத்தான். ஆனால் என்ன நடந்தது தெரியுமா?. அதோ..கிங்கரயானை வேகமாக தென்னைமரம் ஏறி வருகிறது. சங்கரநாராயணன்,”அய்யய்யோ” என்று மறுபடியும் அலறினான். கிங்கரயானையும் ‘ப்பேங்’ என்று பிளிறியது.சங்கரநாராயணன் தென்னைமரத்தின் உச்சிக்கு வந்தான். வேகமாக ஒரு தேங்காயைப் பறித்தான். யானையைக் குறி பார்த்து எறிந்தான். கிங்கரயானை எறி பட்டு கீழே விழுந்து விடும் என்று நினைத்தான்.ஆனால் என்ன நடந்தது தெரியுமா? கிங்கரயானை வாயைத் திறந்து தேங்காயைப் பிடித்தது. பின்பு கடமுடா கடமுடான்னு சவைத்துத் தின்றது. தேங்காய்,சிரட்டை, நார், மட்டை, எல்லாத்தையும் ஒரே வாயில் போட்டுத் தின்றது. சங்கரநாராயணனுக்குத் தப்பிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அம்பத்தியேழுஅடி தூரத்தில் ஒரு புளியமரம் இருக்கிறது. புளியமரத்தில் குதிக்கவில்லையென்றால் அவ்வளவு தான் நிச்சயமாய் யானை பிடித்து விடும். சங்கரநாராயணன் தென்னைமர உச்சியிலிருந்து புளியமர உச்சிக்கு ஒரு பாய்ச்சல்! யானை தாண்டிக் குதிக்காது என்று நினைத்தான். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அதோ காற்றில் பறந்து வருகிறது கிங்கரயானை! ஒரு பறவை பறப்பதைப் போல. பெரிய காதுகளை சிறகுகளைப் போல வீசிக் கொண்டு பறந்து வருகிறது. சங்கரநாராயணன் வேகவேகமாக புளியமர உச்சியிலிருந்து புளியமரத்தின் அடிக்கு இறங்கினான். அதேமாதிரி கிங்கரயானையும் செய்தது. சங்கரநாராயணன் அப்போதும்,”அய்யய்யோ” என்று அலறினான். கிங்கரயானையும்,’ப்பேங்’என்று பிளிறியது. கூப்பாடு போட்டுக் கொண்டே சங்கரநாராயணன் நிலத்தில் ஓடினான்.கிங்கரயானையும் பின்னால் பிளிறிக் கொண்டே ஓடியது. சங்கரநாராயணனின் அருகில் நெருங்கி விட்டது யானை. தும்பிக்கையை நீட்டியது. தொட்டுவிட்டது போலவே இருந்தது.

உடனே ஏதாவது செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் யானை பிடிப்பது உறுதி. நல்லவேளையாய் எதிரே ஒரு வீட்டைப் பார்த்தான். வீட்டின் முற்றத்தில் ஏதோ கிடந்தது. என்ன அது? ஒரு சிறிய ஊதுகுழல். அதை பார்த்த உடனேயே சங்கரநாராயணனுக்கு என்ன செய்யவேண்டும் என்றூ புரிந்து விட்டது. வீடுகளில் குழந்தைகள் வைத்து விளையாடுகிற ஊதுகுழல். சங்கரநாராயணன் ஊதுகுழலுக்குள் ஏறினான். நுழைந்து முன்னால் போனான். அந்தப் பகுதியின் வாசலுக்குப் போய் வெளியே குதிக்க வேண்டும்.. அப்படியே செய்யவும் செய்தான். கிங்கரயானையும் ஊதுகுழலுக்குள்ளே ஏறி விட்டது.நுழைந்து முன்னால் போனது. அந்தப் பகுதியின் வாசலுக்குப் போய் வெளியே குதிக்க வேண்டும். அந்த வாசலுக்கு வந்து விட்டது.தும்பிக்கையும் கொம்புகளும் வெளியே வந்து விட்டது. அதற்கு பின்னாலேயே வயிறும் பின்கால்களூம் வெளியே வந்து விட்டது. சங்கரநாராயணன் ஓடிப் போவதை கிங்கரயானை பார்த்தது. ஆனால் கிங்கரயானையால் எதுவும் செய்ய முடியவில்லை.கிடந்தமாதிரியே கிடந்தது. ஏன் தெரியுமா? கிங்கரயானையின் வால் புல்லாங்குழலுக்குள் மாட்டிக் கொண்டதே!

elephant

Tuesday, 27 March 2012

குழந்தைக்கதைகள் - அய்யாச்சாமி தாத்தா

ayyasaami
அய்யாச்சாமி தாத்தாவுக்கு நீளமான மீசை உண்டு. அதே போல நீண்டு வளர்ந்த தாடியும் இருந்தது.தலைமுடியும் வளர்ந்து தொங்கியது. தலைமுடி நீளம் மட்டும் அல்ல அடர்த்தியாகவும் இருந்தது.அது வைக்கோலின் நிறத்தில் இருந்தது. எல்லாவற்றையும் மொத்தமாகப் பார்க்கும்போது அய்யாச்சாமி தாத்தா தலையில் ஒரு வைக்கோல்படப்பைச் சுமந்து கொண்டிருப்பது போல தோன்றும்.

அய்யாச்சாமி தாத்தாவுக்கு பலாப்பழம் என்றால் ரொம்பப் பிரியம். வெறுமனே பிரியம்னு மட்டும் சொல்லிர முடியாது. வெறி மாதிரி பேராசை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ஒரு பெரிய பலாப்பழம் கிடைத்துவிட்டாலோ? ஒரு மூச்சில் தின்று விட்டுத்தான் வேறு வேலை. சாப்பிட்ட பிறகு ஒரு பெரிய ஏப்பம் விட்டுக் கொண்டே,”சே..ரொம்பச் சின்னப்பழம்!” என்று சொல்வார்.

ஒரு தடவை அய்யாச்சாமி தாத்தா ஒரு பலாப்பழம் சாப்பிட்டார்.கொட்டையை எடுத்து சுளையை முழுங்கினார். என்ன வேகம் தெரியுமா? எப்படின்னு தெரியல ஒரு பலாக்கொட்டை அவருடைய வயிற்றுக்குள் போய்விட்டது. வயிற்றுக்குள் போன பலாக்கொட்டை செரிக்கவில்லை.அதற்குப் பதிலாக முளைக்க ஆரம்பித்தது.இலைகள் துளிர்த்தன.மரமாகி, நீண்டு வளர்ந்து பலாமரமாகி விட்டது. இடது காது வழியே வெளியே வந்து விட்டது.அதற்குப் பிறகு எவ்வளவு வேகமாக வளர்ந்தது தெரியுமா? பருமனாகவும் உயரமாகவும் எல்லாப் பலாமரங்களையும் போல வளர்ந்து கொண்டிருந்தது.அய்யாச்சாமி அந்த பலாமரத்தைப் பார்த்து கர்வம் தோன்றியது. அவர் குழந்தைகளிடம், பலாமரத்தைச் சுட்டிக் காண்பித்து,”குழந்தைகளே! உங்க காதில இத மாதிரி பலாமரம் இருக்கா?” என்று கேட்பார்.

ஊஞ்சலாட்டத்தில் பெரிய கில்லாடி அய்யாச்சாமி தாத்தா. நாள்முழுவதும் ஊஞ்சலாடிக் கொண்டேயிருப்பார். எவ்வளவு ஆடினாலும் திருப்தி வராது.இப்போது தன் சொந்த உடம்பிலேயே பலாமரம் வளர்ந்தால் சும்மா இருப்பாரா? எவ்வளவு வசதியாகப் போய் விட்டது. அவர் அந்த மரத்தின் உயரமான கிளையில் ஊஞ்சல் கட்டினார். ஊஞ்சலில் ஏறி ஆடினாரே ஆட்டம்! அப்படி ஒரு ஆட்டம்!

அய்யாச்சாமி தாத்தாவின் சேக்காளி பக்கத்து வீட்டு பழனிச்சாமி. ஒரு பெரிய பலாபழத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்தார். அய்யாச்சாமி தாத்தா ஒரு பெரிய கயிறு வைத்திருந்தார். அவர் அந்த கயிறைக் கீழே இறக்கினார். பழனிச்சாமி பலாப்பழத்தை அந்த கயிற்றில் கட்டினார். அய்யாச்சாமி தாத்தா கயிற்றை மேலே இழுத்தார். நாலைந்து சுளைகளை பழனிச்சாமிக்காக கீழே போட்டார். மீதி எல்லாவற்றையும் தின்று தீர்த்தார். பிறகு பழனிச்சாமியிடம் ” பழனி! இன்னும் பெரிய பழமாக கிடைக்கலியா?”என்று கேட்டார்.

அய்யாச்சாமி தாத்தாவின் காதில் பலாக்காய் காய்த்தது. ஒரே ஒரு காய் தான். ஆனால் எப்படிப்பட்ட காய் தெரியுமா? பழனிச்சாமியின் உயரம் இருக்கும். காய் பழுத்து பழமானது. பழனிச்சாமிக்கு நாலைந்து சுளைகளை மட்டும் எண்ணிக் கொடுத்து விட்டு மீதி பழத்தை அய்யாச்சாமி தாத்தாவே தின்று தீர்த்தார்.பிறகு அவர்,” பழனி! என் காதில வளர்ந்த பலாப்பழத்தைப் பாத்தீல்ல.. எவ்வளவு சின்னப்பழம்!” என்று சொன்னார்.

பலாப்பழத்தைத் தின்று முடித்த பிறகு அய்யாச்சாமி தாத்தா கண்களை மூடித் தூங்கத் தொடங்கினார். “கீழே விழுந்திராதீங்க..” என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார் பழனிச்சாமி.

அய்யாச்சாமி ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே உறங்கினார். கொஞ்சநேரத்தில் ஒரு கனவு கண்டார். சொர்க்கத்தில் ஒரு பலாமரம். அதில் ஒரு பலாப்பழம். எவ்வளவு சுவையாயிருக்கும்? அவர் அதைப் பறிக்க நினைத்தார். ஊஞ்சல் கயிற்றின் பிடியை விட்டு காற்றில் கைகளை நீட்ட, ஊஞ்சலிலிருந்து ‘பொத்தடீர்’ என்று விழுந்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களோடு பழனிச்சாமியும் ஓடி வந்தார். உயரத்தில் இருந்த ஊஞ்சலில் அய்யாச்சாமி தாத்தா இல்லை.ஊஞ்சல் வெறுமனே ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் பலாமரத்தின் அடியிலோ? ஒரு வைக்கோல்படப்பு கிடந்தது. இதற்கு முன் அங்கு கிடையாது. இப்போது எப்படி அங்கே வந்தது? எல்லோரும் அருகில் சென்று பார்த்தனர். அது வைக்கோல்படப்பு இல்லை. அய்யாச்சாமி தாத்தாவின் மீசை தாடி தலைமுடிதான்! அவர்கள் வைக்கோல்படப்பை விலக்கிப் பார்த்தார்கள். அய்யாச்சாமி தாத்தா அடியில் கிடந்தார். பேச்சுமூச்சு இல்லை.

டாக்டர் வந்து பரிசோதித்தார். “அய்யாச்சாமி தாத்தா இறந்து விட்டார்” என்று டாக்டர் அறிவித்தார். பழனிச்சாமி ஆடகளை விலக்கிக் கொண்டு முன்னால் போனார்.எல்லோரும் அவரையே உற்றுப் பார்த்தார்கள். என்ன செய்யப் போகிறார்? பழனிச்சாமி குனிந்தார். அய்யாச்சாமி தாத்தாவின் காதைக் கண்டு பிடித்தார் காதுக்குள் சத்தமாய்,” அய்யாச்சாமி தாத்தா! பலாப்பழம் தரேன் பலாப்பழம்..!” என்று சொன்னார்.

இறந்து போன அய்யாச்சாமி தாத்தா குதித்து எழுந்தார். “பழனி! கொண்டு வா! பலாப்பழத்தை!” என்றாரே பார்க்கலாம்




மலையாளத்தில்- மாலி
தமிழில்-உதயசங்கர்