Tuesday 18 September 2012

ஓநாயை ஏமாற்றிய முயல்

மலையாளம் – மாலி

தமிழில்- உதயசங்கர்

jolly jackal copy Mandy_Walden-Lunar_hare

ஒரு காட்டில் ஒரு இளைய முயல் இருந்தது. அது உருண்டு திரண்டிருந்தது. ஒரு ஓநாய் அதைப் பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. முயல் எப்போதும் காலையில் ஒரே வழியாகப் போகும். ஓநாய் அந்த வழியைக் கண்டுபிடித்தது. அந்த வழியருகில் ஒரு புதர் இருந்தது. ஓநாய் அந்த புதரில் ஒளிந்திருந்தது. அது முயலுக்குத் தெரியாது. அது புதரின் அருகில் நெருங்கியபோது என்ன நடந்தது தெரியுமா? ஓநாய் பிடித்துக்கொண்டது.

“டேய்..முயலே! நான் இப்போ உன்னைத் திங்கப் போறேன்..” என்று ஓநாய் சொல்லிச் சிரித்தது.

முயல் புத்திசாலி. அவன் ஒரு தந்திரம் யோசித்தான்.ஓநாயின் முகத்தை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையைப் பார்த்தாலே பயந்துபோய் விட்டது தெரியும்.

“என்னடா முயலே! பயந்துபோய் பார்க்கிறே..?” என்று ஓநாய் கேட்டது.

“ஓநாயண்ணே! சொன்னா அண்ணன் தலை சுத்தி விழுந்துருவீங்க..”என்று முயல் சொன்னது.

ஓநாய்க்கு ஆர்வம் வந்துவிட்டது. “சொல்லு.. கேக்கிறேன்..” என்று அவசரப்பட்டது.

“அதுவா.. அண்ணனின் தலையில் ஒரு..ஒரு..பெரிய தேள்..” என்று முயல் சொல்லியது.

ஓநாய் “அய்யோ” என்று கூப்பாடு போட்டது! அதன் கைகள் முயலினை விட்டுவிட்டு தலையைத் தடவியது. தேளினைத் தட்டி விட வேண்டாமா? அது போதாதா முயலுக்கு..ஓடியே போய்விட்டது.

ஓநாய்க்கு வந்தது கோபம்.!. இந்த முயல் என்னை ஏமாத்திருச்சி இல்லியா? அதை இப்படியே விடமுடியாது. முயல் சாயங்காலம் தன்னுடைய இருப்பிடத்துக்குத் திரும்பியது. ஓநாய் முன்பே அந்த இருப்பிடத்தைக் கண்டு பிடித்தது. சாயங்காலத்துக்கு முன்பே இருப்பிடத்துக்கு வெளியே மல்லாந்து கிடந்தது-செத்த மாதிரி.

முயல் வந்தபோது என்ன பார்த்தது தெரியுமா? அதோ மல்லாந்து கிடக்கிற ஓநாய்.ஓநாயைத்தாண்டிப் போகணும். அப்போது தான் இருப்பிடத்துக்குள் நுழைய முடியும். முயலுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.ஓநாய் செத்துபோயிருச்சா? இல்லை செத்தமாதிரி நடிக்கிறதா? எப்படியாவது உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுக்கு என்ன வழி? முயல் யோசித்தது. வழி கிடைத்து விட்டது.

“ஓநாயண்ணே! அண்ணன் செத்துப் போயிட்டில்ல..” என்று கேட்டது. ஓநாய் பதில் சொல்லவில்லை.அப்படியே கிடந்தது. ஆனால் முயலுக்குச் சந்தேகம் தீரவில்லை. சந்தேகத்தைத் தீர்த்தே ஆக வேண்டும்.

“ஓநாயண்ணே! செத்த ஓநாய்னா சாதாரணமா காதுகளை ஆட்டும்..அண்ணன் காதுகள் ஆடவில்லையே அப்ப அண்ணன் சாகலை..இது நிச்சயம்..” என்று முயல் சொன்னது.

அப்போது ஓநாய் நினைத்தது, தான் செத்ததாக முயலை நம்ப வைக்கணும்..அதுக்கு அந்த முட்டாள் என்ன செய்தது தெரியுமா? ரெண்டு காதுகளையும் ஆட்டத் தொடங்கியது.

அதைப் பார்த்த முயலுக்கு ஒன்று உறுதியாகி விட்டது. ஓநாய் சாகவில்லை.அது செத்த மாதிரி நடிக்கிறது. முயல் சிரித்துக் கொண்டே ஒரே ஓட்டம்!

ஓநாய்க்கு கோபம் வந்தது. தன்னை ரெண்டாவது தடவையும் ஏமாற்றி விட்டதே இந்த முயல்! சரி இருக்கட்டும். முக்கா முக்கா மூணு ஆட்டை. அடுத்த தடவை தான் தப்பு செய்யமாட்டேன். ஓநாய் ரகசியமாக ஒரு விசயத்தைக் கண்டுபிடித்தது. முயல் இருப்பிடத்துக்கு வரும்முன்பு ஒரு காரியம் செய்யும். ஒரு குன்றின் மேல் ஏறி உட்கார்ந்து காற்று வாங்கும்.

குன்றின் ஒரு புறம் பெரும் பள்ளம்.ஐநூறு அடி ஆழம் இருக்கும். அதன் உச்சியில் இருந்து தான் முயல் காற்று வாங்கும்.ஓநாய் முயலின் பின்புறமாக குன்றின்மீது ஏறியது. ஒரு சத்தமில்லாமல் பின்னால் போய் முயலைப் பிடித்து விட்டது.

“டேய் முயலே! இந்தத் தடவை நீ என்னை ஏமாத்தமுடியாது.” என்று சொல்லிவிட்டு ஓநாய் உரக்கச் சிரித்தது.

“கண்டிப்பாக ஏமாத்த மாட்டேன்.ஓநாயண்ணே! வேணும்னா ஒரு உதவி செய்றேன்..கீழே நிறைய முயலிருப்பிடம் இருக்கு..அங்கே இருபதுக்கு மேலே முயல்கள் இருக்கு..என்னை விட உருண்டு திரண்ட முயல்கள் இருக்கு..அங்கே பாருங்க..!” என்று முயல் சொன்னது.

ஓநாய் முயலை விட்டுவிட்டு கீழே பார்த்தது. “ எங்கேடா முயல்கள்?” என்று ஓநாய் கேட்டது.

“நல்லா குனிஞ்சி பாருங்க..ஓநாயண்ணே..!” என்று முயல் சொன்னது.

ஓநாய் குனிந்து உற்றுப் பார்த்தது.பின்னாலிருந்து முயல் ஓநாயை ஒரு தள்ளு. ஓநாய் தலைகுப்புற கீழே பள்ளத்தில் விழுந்தது. பின்னாலிருந்து முயல் சிரித்ததை ஓநாய் கேட்கவில்லை. ஏனெனில் ஓநாய் உயிரோடு இல்லை.!

முயல் சிரித்துக்கொண்டே தன் இருப்பிடத்துக்குப் போனது.

No comments:

Post a Comment