Sunday 23 September 2012

பாய்ச்சல்

தால்ஸ்தோய்leo-tolstoy

தமிழில்- உதயசங்கர்

 

உலகம் முழுதும் சுற்றி வந்த கப்பல் கடைசியில் வீட்டை நோக்கி பயணப் பட்டது. காலநிலை அமைதியாக இருந்தது.எல்லோரும் கப்பலின் மேல்தளத்தில் இருந்தனர்.ஒரு பெரிய குரங்கு குட்டிக் கரணம் அடித்து எல்லோரையும் சந்தோசப் படுத்திக் கொண்டிருந்தது.வளைந்தும் நெளிந்தும் குதித்தும் அது வேடிக்கையாக முகத்தைக் கோணலாக்கவும், மற்றவர்களைப் பரிகாசம் செய்து கொண்டுமிருந்தது.எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதனுடைய சேட்டை இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.

கப்பல் கேப்டனின் பனிரெண்டு வயது மகனை நோக்கிக் குதித்தது.அவன் தலையிலிருந்த தொப்பியைப் பறித்துத் தன் தலையில் மாட்டிக் கொண்டு வேகமாக ஓடி கப்பல் கொடிமரத்தில் ஏறிக் கொண்டது. எல்லோரும் சிரித்தனர். தொப்பியில்லாத அந்தப் பையனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. குரங்கு முதல் கொடிமரத்தூணில் நின்று கொண்டது. தன் தலையிலிருந்து தொப்பியைஎடுத்து அதைத் தன் கோரைப்பற்களாலும் நகங்களாலும் கிழிக்க ஆரம்பித்தது. அது அந்தப் பையனைப் பார்த்துக் கையை நீட்டிப் பரிகாசம் செய்தது. பையன் முஷ்டி உயர்த்திக் கத்தினான். ஆனால் குரங்கு இன்னும் தீவிரமாக கிழிக்க ஆரம்பித்தது.மாலுமிகள் சிரித்தனர்.பையனுக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது. அவனுடைய மேல்கோட்டை கழற்றி எறிந்து விட்டு அந்தக் குரங்கின் பின்னால் பாய்மரத்தூணில் ஏறத் தொடங்கினான்.ஒரு நொடியில் முதல் பாய்மரத்தூணில்த்முயற்சித்த கணத்திலேயே வேகமாக அடுத்த கம்பில் ஏறிவிட்டது.

பையனும் மேலே ஏறிக் கொண்டே”நீ எங்கிட்டருந்து தப்பிக்கமுடியாது!” என்று கத்தினான்.

குரங்கு அவனுக்கு வழி காட்டிக் கொண்டு அதற்கு மேலும் ஏறியது. அந்தவிளையாட்டில் உணர்ச்சி வசப்பட்ட பையன் குரங்கைத் தொடர்ந்தான். ஒரு நிமிடத்தில் இரண்டு பேரும் உச்சிக்குப் போய் விட்டார்கள்.உச்சியில் இருந்த பாய் மரக்கம்பில் தன் முழு உடம்பையும் நீட்டி பின்காலில் தொங்கிய படி கடைசியில் இருந்த நுனிக் கம்பில் தொப்பியைத் தொங்கவிட்டது. பின் அப்படியே ஊர்ந்து சென்று பாய்மர உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு பல்லிளித்தது. ஒரு அடி தொலைவில் தொப்பி தொங்கினாலும் அதை எடுக்க வேண்டுமானால் கயிறையும் பாய்மரத்தையும் விட்டு அந்தரத்தில் நடக்கவேண்டும்.

ஆனால் பையனுக்கு ஆர்வம் கூடி விட்டது.பாய்மரத்தை விட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தான்.

கப்பல்தளத்தில் கீழே எல்லோரும் நின்று குரங்கும் கேப்டனின் மகனும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் பையன் பாய் மரத்திற்கு வெளியே அந்தரத்தில் கைகளை விரித்த படி போவதைப் பார்த்தவர்கள் அப்படியே உறைந்து போனார்கள்.

ஒரு தப்பான அடி அவனை அவ்வளவு உயரத்திலிருந்து மோதிச் சிதறடித்து விடும்.அவன் அப்படியே போய் அவனுடைய தொப்பியை எடுத்து விட்டாலும் அவனால் பாய்மரத்தூணுக்குத் திரும்ப முடியாது.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் பெருமூச்சு விட்டனர்.திடீரென அந்தப் பையனுக்கு தன்னுணர்வு வந்தது.கீழே பார்த்தான்.உடனே ஆட ஆரம்பித்து விட்டான்.

அந்த நேரத்தில் கேப்டன் கப்பல் தளத்திற்கு வந்தான்.கடற்புறாக்களைச் சுடுவதற்காக கையில் துப்பாக்கியுடன் வந்தான்.பாய்மரக் கம்பின் நுனியில் தன் மகன் இருப்பதைப் பார்த்தவுடன் அவனைப் பார்த்துத் துப்பாக்கியைக் குறி வைத்தான்.

“குதி! தண்ணீல குதி! இல்லை சுட்டுருவேன்..” என்று கத்தினான்.

பையன் இன்னும் அதிர்ச்சியடைந்தான் அவனால் அப்பா என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை.

”உடனே குதி! இல்லை சுட்டுருவேன்..ஒண்ணு..ரெண்டு..” அவணுடைய அப்பா ”மூணு” சொல்லும்போது பையன் பாய்மரக் கம்பின் நுனியிலிருந்து தலை கீழாகப் பாய்ந்தான்.பீரங்கிக் குண்டைப் போலக் கடலில் விழுந்தான்.அலைகள் அவனை விழுங்குமுன்னே இருபது மாலுமிகள் கடலில் பாய்ந்தனர்.பையன் நாப்பது வினாடிகளுக்குப் பிறகு தண்ணீருக்கு மேலே வந்தான்.கப்பல்தளத்தில் இருந்தவர்களுக்கு அந்த நாப்பது வினாடிகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது. மாலுமிகள் உடனே அவனைத் தூக்கிக் கொண்டு கப்பலுக்கு வந்தனர். பல நிமிடங்களுக்கு தண்ணீர் வாயிலிருந்தும் மூக்கிலிருந்து வந்து கொண்டேயிருந்தது. அதன் பிறகு அவன் மூச்சு விட ஆரம்பித்தான்.

தன் மகன் மூச்சு விட ஆரம்பித்ததைப் பார்த்த கேப்டன் விம்மலோடு குலுங்கி அழ ஆரம்பித்தான்.யாரோ அவனைப் பிடித்து வேகவேகமாக கேப்டனின் அறைக்கு கூட்டிச் சென்றார்கள். கேப்டன் அழுவதை யாரும் பார்த்து விடக் கூடாதில்லையா?

2 comments: