Sunday 9 September 2012

சீதாயாணம்

 

மலையாளம்- கிரேஸிGracy

தமிழில்- உதயசங்கர்

வெந்து அவிந்து மாமிசப்பிண்டமாகக் கிடக்கும்போது தான் கீதாவுக்கு முற்பிறவி ஞாபகங்கள் வந்தன. உயிரின் கட்டுகள் ஒவ்வொன்றாய் சிதறித் தெறிக்கும்போது பிறவிகளுடைய இருண்ட நாட்டுப்புற வழியில் ஞாபகங்களின் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தது.

அப்போது கீதா சீதாவாக இருந்தாள். வனத்தில் அபாயமான பாதைகளின் வழியே ராமனை நிழல் போலப் பின் தொடர்ந்தாள் சீதா. இலங்கையில் ஏராளமான விதவைகளின் மின்னுகிற கண்ணீரில் முங்கி எழுந்து கல்லையும் பிளந்து விடும் உறுதியினைப் பெற்றாள் சீதா. அக்னிப்பிரவேசம் செய்து சரீரப் புனிதத்தை நிரூபித்திருக்காவிட்டால் அவளை சுக்ரீவனின் வைப்பாட்டியாக்கியிருப்பார்கள். அதுவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு அரக்கனின் வைப்பாட்டியாக்கியிருப்பார்கள்.

அவமானத்தினால் புழுங்கினாள் சீதா. ஒவ்வொரு ரோமக்கால்களிலிருந்தும் அக்னி வெளியே தன் நாவுகளை நீட்டித் துழாவியது. பூமியில் இருக்கிற யாவும் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் அக்னிரூபிணியாக நின்ற பூமியின் மகளுக்கு அவளுடைய உள்ளங்கையில் எதிர்காலம் தெரிந்தது.

குலம் அற்றுப் போகாதிருக்க லவகுசன் என்ற இரட்டைப்பிள்ளைகளைப் பெற்றுச் சீராட்ட வேண்டியதிருக்கிறது என்பதைக் கண்ட சீதா அப்போது குளிர்ந்து போனாள்.

குழந்தைகளின் முன்னால் வைத்து அவமானப்பட்ட போது பூமியின் வயிறு பிளந்து தன்னை மீண்டும் உள்வாங்கிய மண்ணின் கருணையை உணர்ந்த சீதா பின்பு குளிர்ந்து போனாள்.

ஆனால் இப்போது கீதா எப்படி குளிர்ந்து போகமுடியும்?

கீதா இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றது ரமாவையும் உமாவையும் அல்லவா?

ராமச்சந்திரனுக்கு அவசியம் ஏற்படும்போதெல்லாம் பணம் கொண்டு வந்து கொடுக்க கீதாவின் அப்பா பென்சன் வாங்கிக் கொண்டிருக்கிற வெறும் பள்ளிக்கூட வாத்தியார் தானே!

அதனால் அல்லவா மானேஜிங் டைரக்டருடைய படுக்கையறையைத் திறக்கிற ஒரு ரகசியக் கதவை ஸ்ரீராமச்சந்திரன் கீதாவுக்குச் சுட்டிக் காண்பித்தான்.

கீதாவின் ஞாபகங்கள் சிதறித் தெறித்தன. சுற்றிலும் வியாபித்த இருளின் வழியே உயிரின் கடைசி முடிச்சும் அவிழ்ந்து கீதா அடுத்த பிறவியின் ஆபத்தை நோக்கிப் பிரயாணமானாள்.

No comments:

Post a Comment