Friday 11 May 2012

.சங்கரநாராயணனும் கிங்கரயானையும்

ELEPHANT CARTOON_jpg[1] மலையாளத்தில்- மாலி                                தமிழில்- உதயசங்கர்

சங்கரநாராயணன் பின்னால் பதுங்கி பதுங்கிச் சென்றான். கிங்கரயானையுடைய வாலிலிருந்து ஒரு ரோமத்தைப் பறித்தெடுத்தான்.பிறகு எடுத்தானே ஒரு ஓட்டம்! கிங்கரயானைக்கு கோபமான கோபம்! ஆனல் சங்கரநாராயணணனின் பின்னால் ஓடவில்லை. ஏனெனில் சாமி ஊர்வலத்தில் அது போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கிங்கரயானை நினைத்துக் கொண்டேயிருந்தது. சங்கர நாராயணனைப் பிடிக்கணும். ஒரு தடவை அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. சங்கரநாராயணன் பெரிய குளத்தில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தான். கிங்கரயானை குளக்கரைக்கு வந்தது. சங்கரநாராயணன் ஒரு தடவை முங்கி எழுந்தான். பார்த்தால் எதிரே கிங்கரயானை. சங்கரநாராயணன் குளத்தின் அக்கரைக்கு நீந்தினான் கிங்கரயானை விட்டுருமா? அந்தப் பெரிய குளத்தில் ஒரு பாய்ச்சல்! நான்கு கால்களும் தண்ணீருக்கு அடியில் துழாவ, த்லையும் உடம்பும் கூட தண்ணீருக்குக் கீழே முங்கி இருக்க, தும்பிக்கையின் நுனி மட்டும் தண்ணீரின் மேல் தெரிந்தது. சங்கரநாராயணன் நீந்திக் கொண்டே திரும்பிப் பார்த்தான். கிங்கரயானையைக் காணவில்லை. ஆனால் தும்பிக்கையின் நுனி மட்டும் நெருங்கி வருகிறது. சங்கரநாராயணன் ஆவேசத்தோடு நீந்தி அக்கரைக்குப் போய்ச் சேர்ந்தான்.பின்னாலேயே கிங்கரயானையும் அக்கரையில் ஏறியது. சங்கரநாராயணன் முன்னே ஒரு பெரிய மதில் சுவர் இருந்தது. அவன் அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்தான். அதோ கிங்கரயானையும் மதில்சுவரைத் தாண்டிக் குதிக்கிறது. சங்கரநாராயணன்,”அய்யய்யோ” என்று அலறினான் பின்னால் வந்த கிங்கரயானையும் ’ப்பேங்’ என்று பிளிறியது. சங்கரநாராயணனை இப்போது கிங்கரயானை பிடித்து விடும்.

சங்கரநாராயணன் எதிரே ஒரு தென்னை மரத்தைப் பார்த்தான். உடனே அவன் அதில் ஏறினான். யானை தென்னைமரம் ஏறாது என்று நினைத்தான். ஆனால் என்ன நடந்தது தெரியுமா?. அதோ..கிங்கரயானை வேகமாக தென்னைமரம் ஏறி வருகிறது. சங்கரநாராயணன்,”அய்யய்யோ” என்று மறுபடியும் அலறினான். கிங்கரயானையும் ‘ப்பேங்’ என்று பிளிறியது.சங்கரநாராயணன் தென்னைமரத்தின் உச்சிக்கு வந்தான். வேகமாக ஒரு தேங்காயைப் பறித்தான். யானையைக் குறி பார்த்து எறிந்தான். கிங்கரயானை எறி பட்டு கீழே விழுந்து விடும் என்று நினைத்தான்.ஆனால் என்ன நடந்தது தெரியுமா? கிங்கரயானை வாயைத் திறந்து தேங்காயைப் பிடித்தது. பின்பு கடமுடா கடமுடான்னு சவைத்துத் தின்றது. தேங்காய்,சிரட்டை, நார், மட்டை, எல்லாத்தையும் ஒரே வாயில் போட்டுத் தின்றது. சங்கரநாராயணனுக்குத் தப்பிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அம்பத்தியேழுஅடி தூரத்தில் ஒரு புளியமரம் இருக்கிறது. புளியமரத்தில் குதிக்கவில்லையென்றால் அவ்வளவு தான் நிச்சயமாய் யானை பிடித்து விடும். சங்கரநாராயணன் தென்னைமர உச்சியிலிருந்து புளியமர உச்சிக்கு ஒரு பாய்ச்சல்! யானை தாண்டிக் குதிக்காது என்று நினைத்தான். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அதோ காற்றில் பறந்து வருகிறது கிங்கரயானை! ஒரு பறவை பறப்பதைப் போல. பெரிய காதுகளை சிறகுகளைப் போல வீசிக் கொண்டு பறந்து வருகிறது. சங்கரநாராயணன் வேகவேகமாக புளியமர உச்சியிலிருந்து புளியமரத்தின் அடிக்கு இறங்கினான். அதேமாதிரி கிங்கரயானையும் செய்தது. சங்கரநாராயணன் அப்போதும்,”அய்யய்யோ” என்று அலறினான். கிங்கரயானையும்,’ப்பேங்’என்று பிளிறியது. கூப்பாடு போட்டுக் கொண்டே சங்கரநாராயணன் நிலத்தில் ஓடினான்.கிங்கரயானையும் பின்னால் பிளிறிக் கொண்டே ஓடியது. சங்கரநாராயணனின் அருகில் நெருங்கி விட்டது யானை. தும்பிக்கையை நீட்டியது. தொட்டுவிட்டது போலவே இருந்தது.

உடனே ஏதாவது செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் யானை பிடிப்பது உறுதி. நல்லவேளையாய் எதிரே ஒரு வீட்டைப் பார்த்தான். வீட்டின் முற்றத்தில் ஏதோ கிடந்தது. என்ன அது? ஒரு சிறிய ஊதுகுழல். அதை பார்த்த உடனேயே சங்கரநாராயணனுக்கு என்ன செய்யவேண்டும் என்றூ புரிந்து விட்டது. வீடுகளில் குழந்தைகள் வைத்து விளையாடுகிற ஊதுகுழல். சங்கரநாராயணன் ஊதுகுழலுக்குள் ஏறினான். நுழைந்து முன்னால் போனான். அந்தப் பகுதியின் வாசலுக்குப் போய் வெளியே குதிக்க வேண்டும்.. அப்படியே செய்யவும் செய்தான். கிங்கரயானையும் ஊதுகுழலுக்குள்ளே ஏறி விட்டது.நுழைந்து முன்னால் போனது. அந்தப் பகுதியின் வாசலுக்குப் போய் வெளியே குதிக்க வேண்டும். அந்த வாசலுக்கு வந்து விட்டது.தும்பிக்கையும் கொம்புகளும் வெளியே வந்து விட்டது. அதற்கு பின்னாலேயே வயிறும் பின்கால்களூம் வெளியே வந்து விட்டது. சங்கரநாராயணன் ஓடிப் போவதை கிங்கரயானை பார்த்தது. ஆனால் கிங்கரயானையால் எதுவும் செய்ய முடியவில்லை.கிடந்தமாதிரியே கிடந்தது. ஏன் தெரியுமா? கிங்கரயானையின் வால் புல்லாங்குழலுக்குள் மாட்டிக் கொண்டதே!

elephant

No comments:

Post a Comment