Thursday 31 May 2012

ஒரு புதிர்க்கதை

abstract-landscape-paintings-common-thread  

தொலைந்து போனவர்கள்

சாத்தியங்களின் குதிரையிலேறி

வனத்தினுள்ளோ

சிறு புல்லினுள்ளோ

கடலுக்குள்ளோ

சிறு மீனுக்குள்ளோ

மலையினுள்ளோ

மரத்திலுறைந்தோ

எங்கோ

எப்போதோ

எப்படியோ

தொலைந்த பின்னும்

ஆற்று மணலைப் போல

கதைகளாகத் திரும்புகிறார்கள்

கொலையுண்டதாகவோ

நோய்வாய்ப்பட்டதாகவோ

பெரும்பணக்காரனாகவோ

ரவுடியாகவோ

பிச்சையெடுத்துக் கொண்டோ

சாமியாராகவோ

காமாந்தகனாவோ

பைத்தியக்காரனாகவோ

அகதியாகவோ

போராளியாகவோ

தியாகியாகவோ

வேற்று நாட்டிலோ

வேற்று ஊரிலோ

எண்ணற்ற கதைகளாக

கலந்து விடுகிறார்கள் காற்றில்

உயிருடன் இருந்தாலும்

மரணித்திருந்தாலும்

யாரும் விடை காணமுடியாத

யாருக்கும் விடை தெரியாத

கதைகளை எழுதிய எழுத்தாளராக

என்றும் புதிராய்

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்..தொலையாத நானோ?

2 comments: