Wednesday 30 May 2012

பரியும் நரியும்

உதயசங்கர்

அவர் கேட்டது நியாயமாகத் தான் தெரிந்தது. ஆனால் ரயில்வே பார்சல் கிளார்க் அநியாயத்துக்குச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். திருவண்ணாமலை ஸ்டேஷனில் எனக்கு அன்று இரவுப் பணி. அப்போது தான் மதுரை- திருப்பதி எக்ஸ்பிரஸ் வண்டி திருவண்ணாமலை ஸ்டேஷனை விட்டு போயிருந்தது. அதற்கப்புறம் தான் இந்தப் பிரச்னை. மதுரை-திருப்பதி வண்டியில் பொதுவாகவே நிறையப் பார்சல்கள் வந்திறங்கும். அன்று ஒரு விசித்திரமான ஒரு பார்சலும் வந்திருந்தது. பார்சலைப் பெற்றுக் கொண்டதற்காக கையெழுத்து போட்டு விட்டு வந்த பார்சல் கிளார்க் மயில்சாமி என்னைப் பார்த்து

“ பாருங்க சார் சொறி நாயையெல்லாம் புக் பண்ணி அனுப்புறாங்க.. காலக்கொடுமையைப் பார்த்தீங்களா..”

என்று சொல்லி அங்கலாய்த்தார். நானும் புன்னகைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் பார்சல் போர்ட்டர் சூசை ஒரு நாயைக் கரகரவென இழுத்துக் கொண்டு வந்தார். அது வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. இவரும் விடமாட்டேன் என்று இழுத்துக் கொண்டு வந்தார்.

“ வா சனியனே.. வா.. நாய்க்குக் கூடத் தெரியுது.. நா ஒரு இளிச்சவாய்ப் பையன்னு.. இந்த பாரு ஒழுங்கா மரியாதியா வந்தேன்னா ஆச்சி.. அப்பால என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”.

என்று நாயுடன் பேசிக்கொண்டே வந்த சூசையின் சத்தம் கேட்டு நான் ஸ்டேஷன் அறையை விட்டு வெளியே வந்தேன். ஒரு செவலை நாய். மெலிந்து வாடிப்போயிருந்தது. முதல் பார்வையிலேயே சொல்லி விடலாம் அது ஒரு தெரு நாய் என்று, அப்படி ஒரு லட்சணம் பொங்கி வழிந்தது. அது பலிபீடத்தில் வெட்டப் போகிற கிடாயைப் போல நான்கு கால்களையும் தரையில் பிறாண்டிக் கொண்டே வந்தது. அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிறை அங்கிருந்த தூணில் கட்டி விட்டு மற்ற பார்சல்களை எடுக்க போனார் சூசை.

அப்போது தான் ஸ்டேஷன் அறைக்குள் அவர் நுழைந்தார். மிகவும் பெரிய மனிதத் தோரணையிலிருந்த அவர் பார்சல் கிளார்க்கிடம் அவர் கையிலிருந்த ரசீதைக் கொடுத்தார். பார்சல் கிளார்க் மயில்சாமியும் அவரை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு அவரிடம் இருந்து ரசீதை வாங்கிச் சரிபார்த்து பதிவேட்டில் பதிந்து அவரிடம் கையெழுத்து வாங்கினார். கையெழுத்து போட்டு விட்டு நிமிர்ந்த அவர்,

“ நாய் எங்கே? “

என்று கேட்டார். அதற்கு மயில்சாமி அலட்சியமாக,

” அதான் வெளிய இருக்குல்ல.. பிடிச்சிட்டுப் போங்க..”

என்று சொன்னார். அவர் வெளியே போய் பார்த்து விட்டு மறுபடியும் உள்ளே வந்தார். மயில்சாமியைப் பார்த்து,

“ எங்கே கெட்டிப் போட்டிருக்கீங்க..”

என்று கேட்டார். ஏற்கனவே ஒரு பார்சல் டேலி ஆகாதக் கவலையில் இருந்த மயில்சாமி எரிச்சலுடன்,

“ அந்தா தூணில கிடக்குல்ல..”

என்று சொல்ல அவர் திரும்பிப் பார்த்தார். அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியாததைப் போல சுற்றிச் சுற்றி எல்லாத் திசைகளிலும் பார்த்தார். பிளாட்பாரம் முழுவதும் தன் கண்களை மேய விட்டார். அங்கே அந்தத் தெரு நாயைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இப்போது அவர் எரிச்சலுடன்,

“ சார்.. நான் அனுப்புன நாய எங்கே?”

என்று கேட்க அதே மாதிரிக் குரலில் மயில்சாமி,

“ நீங்க அனுப்புன நாய் அங்க..”

என்று சொல்ல அந்தப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்து விட்டது.

“ ஹலோ நான் அனுப்புனது.. பொமரேனியன் வொயிட் டாக்.. இதென்ன தெரு நாயக் காட்டிறீங்க..”

“ நீங்க என்ன புக் பண்ணினீங்களோ எனக்குத் தெரியாது..இங்க வந்தது இது தான்..”

“ அதென்ன இப்படிப் பொறுப்பில்லாம பேசறீங்க.. ஐ வில் கம்பிளைண்ட் திஸ் மேட்டர் டு யுவர் ஜி.எம்.”

என்று கொதித்துப் போனார். நான் இது தலையிட வேண்டிய தருணம் என்று உணர்ந்தேன். உடனே அவரிடம் ,

” சார் கொஞ்சம் பொறுங்க..” என்று சொல்லி மயில்சாமி பக்கமாய்த் திரும்பி,

” சார் அந்த நாய்க்குப் பதிலா வேற நாயை இறக்கிட்டாரா சூசை..?”

என்று என்னுடைய சந்தேகத்தைக் கேட்டேன். உடனே மயில்சாமியும் சற்று அமைதியானார். எழுந்து வெளியே போய்,

“ சூசை.. சூசை..”

என்று கத்தினார். அப்போது தான் பார்சல்களை ஏற்றிக் கொண்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த சூசை,

“ தோ..வர்ரேன் சார்..”

என்றார். அருகில் வந்ததும் அவரிடம் நான்,

“ என்ன சூசை நாய மாத்திகீத்தி இறக்கிட்டீங்களா?”

என்று கேட்டேன். அதற்கு அவர்,

“ இல்லீங்க சார்.. அந்த டாக் பாக்ஸ்ல இந்த ஒரு நாய் தான் இருந்திச்சி.. ஏன் என்னவாம்..”

என்று பதில் சொல்ல மறுபடியும் குழப்பம். மயில்சாமி,

“ இவரு..பொமரேனியன் அதான் சடைசடையாமுடி இருக்குமே அத்த அனுப்புனாராமாம் என்னா இது இங்கே தெரு நாயா இரிக்கிதேங்கிறாரு சூசை..”

என்று சொன்னார். எனக்கும் ஒன்றும் புரிய வில்லை. மதுரையிலிருந்து புக் பண்ணின நாய் எப்படி இப்படி அவதாரம் எடுக்கும். கார்டு இருக்கிற பெட்டியிலேயே டாக் பாக்ஸ் இருக்கும். அவரை மீறி எதுவும் செய்யமுடியாது. அந்த பெட்டியில் அடைத்து அதை பூட்டு போட்டு பூட்டி விடுவார் கார்டு. எங்கே இறக்க வேண்டுமோ அங்கே தான் அந்தப் பெட்டியைத் திறப்பார். அப்படி இருக்கும் போது ..ஒரு வேளை அந்தப் பெரிய மனிதர் பொய் சொல்கிறாரோ.. அவரிடம் ரயில்வேயின் நடைமுறைகளை விவரித்தேன். அப்படி மாறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று விளக்கினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அவர்,

“ நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா என்னோட ஜிம்மியைப் புக் பண்ணி டாக் பாக்ஸ்ல அடைச்சிட்டு அதைச் சமாதானப் படுத்துறதுக்காக பிஸ்கட் வாங்கி அந்தக் கார்டு கிட்ட கொடுத்துட்டு அதே டிரெய்ன்ல தானே நானும் வர்ரேன்..”

என்று சொன்னதைக் கேட்ட எங்களுக்குத் தலைசுற்றியது. பரி எப்படி நரியானது? என்று தெரியவில்லை. அவர் அந்தத் தெருநாயை ஸ்டேசனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார். அதோடு கம்பிளையண்ட் புத்தகத்தை வாங்கி புகாரும் எழுதிக்கொடுத்து விட்டுப் போனார். அந்தப் புகாருக்காக யார் யாரோ வந்தார்கள். விசாரித்தார்கள். ஆனால் அந்தப் புதிர் இன்று வரை விடுபடவேயில்லை.

இப்படித்தான் ஒரு நாள் கசங்கிய சட்டையும் பேண்டும் கலைந்த தலைமுடியுடன் மிகவும் பணிவுடன் வந்த ஒரு ஆள், மயில்சாமியிடம்,

“ சார் டிரெய்ன்ல புளி புக் பண்ணனும்..சார்.. எப்ப கொண்டு வரணும் சார்.”

என்று கேட்டான். மயில்சாமி அவனிடம்,

“ எத்தனை கிலோ இருக்கும்..”

என்று கேட்க அவன் சற்று யோசித்து,

“ ஒரு நூறு நூத்தம்பதுகிலோ இருக்கும் சார்..” என்று சொன்னான்.

உடனே மயில்சாமி முகத்தில் பிரகாசம் ஒளிர்விட,

“ எந்த ஊருக்கு? “10222447-the-hand-drawn-sketch-of-the-severe-tiger

என்று கேட்டார். அதற்கு அவன்,

“ தஞ்சாவூருக்கு..”

என்று சொன்னான். உடனே அவனிடம் மயில்சாமி எப்போது கொண்டுவரவேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்று விலாவாரியாகச் சொல்லிக் கொடுத்தார். அவன் அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினான். மறுநாள் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றான்.

மறுநாள் மயில்சாமி சொன்ன நேரத்துக்கு அவன் ஸ்டேஷனுக்கு வந்து விட்டான். மயில்சாமி ஏதோ ஒரு பதிவேட்டில் தலைகுனிந்திருந்தார். நான் அவன் உள்ளே நுழைந்ததுமே மேஜை மீது ஏறி விட்டேன்.என்னுடன் அப்போது பணியில் இருந்த கலியன் ஒரு வினோதமான ஊளையிட்டான். எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. இத்தனைக்கும் தலை நிமிராமலே இருந்தார் மயில்சாமி. வந்தவன்,

“ சார் புளி..கொண்டு வந்திருக்கேன்…”

என்றான். மயில்சாமி ஏறிட்டுப் பார்க்காமல்,

“ புளியை நல்லா பேக் பண்ணிட்டயா?

என்று கேட்டார். அவன் அமைதியாக, 

“ அதான் சார் எப்படி பேக் பண்ணனும்னு சொன்னிங்கன்னா செய்ஞ்சுடலாம்..சார்..”

என்று சொல்ல அப்போது தான் தலையை நிமிர்த்திக் கொண்டே,

“ என்னய்யா.. சாக்குமூட்டையில அடைக்கத் தெரியா….”

என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அப்படியே பாதி வார்த்தையில் நின்று, வாய் குழறி மொழியில்லாத குரலில் ஏதேதோ சத்தங்களை எழுப்பினார். முகம் பயத்தில் வெளிறி விட்டது.

அங்கே எங்களுக்கு முன்னால் ஒரு நிஜப்புலி நின்று கொண்டிருந்தது.

1 comment:

  1. அருமை.
    நாய் எப்படி சார் மாறினது?

    ReplyDelete