Saturday 19 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

 

கவிஞர்.கி.சச்சிதானந்தன்

தமிழில்- உதயசங்கர்.

பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காகத் தான் என்பது தான் என்னுடைய உடனடியான பதில். காரணம் என்னுடைய குடும்பத்தில் தாய்வழியில் பைத்தியத்தின் பாரம்பரியம் உண்டு. பாட்டி, பெரியம்மா, சின்னம்மா, மூன்று பேருக்கும் இந்த நோய் பிடித்திருக்கிறது. அம்மா அதிலிருந்து மீண்டு தப்பிப்பிழைத்தது அவளுடைய தீவிரமான பக்தியினால் தான் என்று நினைக்கிறேன். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அவளுடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் இந்த நோய் உறவு கொண்டாடியிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தபடியால் அதைத் தெரிந்தே வைத்திருந்தோம். என்னுடைய தரிசனமும், கனவும், ஆனந்தமும், துக்கமும், எல்லாவற்றையும் கவிதைகளாக வெளிப்படுத்த முடியாமல் போயிருந்தால் எனக்கும் பைத்தியம் பிடித்திருக்கும் என்று உறுதியாகத் தோன்றுகிறது.220px-Sachidanandan

ஏதோ ஒரு லட்சியத்துக்காகத் தான் நான் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். பனிரெண்டு பதிமூன்று வயதில் பெரிய லட்சியங்கள் உருவாக வழியில்லை இல்லையா? கவிதை வந்த பாதையும் நிச்சயமாகத் தெரியாது. பாலிய கால அனுபவங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது எனலாம். துஞ்சனின் ராமாயணத்தைத் தினசரி பாராயாணம் செய்ததோ, நிரந்தரமான மழையின் தாளங்களோ, பசுக்களோடும், காக்கைகளோடும், இறந்துபோன மாமன்மாரோடு உயிருடன் உள்ள மனிதர்களோடு பேசுவதைப் போலப் பேசிக் கொண்டிருந்த அம்மாவோ, தாய்ப்பால் கூடவே ஊட்டிய யோகப்பயிற்சியோ, சில ஆரம்பகால ஆசிரியர்களின் வழி வந்த காவியப்பயிற்சியோ, மிகவும் தனியனும், மௌனியும் சிந்தனாவாதியாகவும் இருந்த ஒரு சிறுவனின் கனவுத்தரிசன விசித்திரம் தானோ கவிதைகளாக வெளிப்பட்டது என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் பங்கு உண்டு என்று சொல்லலாம்.

வளர்ந்தபோது கவிதைக்கென்று சில இலக்கணங்கள் உண்டென்று தெரிந்து கொண்டேன். நானும் நானுமாக, நானும் மக்களுமாக, நானும் இயற்கையுமாக, நானும் தெய்வமுமாக, - அந்த பிரக்ஞைக்கு என்ன அர்த்தம் கற்பித்துக் கொண்டாலும் சரி – பேசிக் கொள்வதற்கான ஒரு வழியாக அதனை நான் உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு அனுபவத்தையும் நான் கவிதையனுபவமாகப் பார்ப்பதில்லை. பசி, காதல், அழாகு, புரட்சி, கருணை, பக்தி, எல்லாவற்றோடும் அது கலந்திருக்கிறது. என்னுடைய மிகத் தீவிரமான நம்பிக்கை கவிதை. அதனுடைய உள்ளர்த்தங்கள், சாஸ்திரங்களுடைய, மதத்தினுடைய, அரசியலுடைய, உள்ளர்த்தங்களைப் போலச் சரிதான் என்று நான் நினைக்கிறேன். நான் எழுதியதெல்லாம் சிறந்தவையல்ல என்று மற்றெல்லோரையும் விட நன்றாக எனக்குத் தெரியும். உலகத்திலுள்ள கவிதைகளிலெல்லாம் நாம் நினைவு கூர்வது ஐந்தாறு எழுத்துமுறைகளையே. சில வேளைகளில் ஒரேயொரு எழுத்துமுறையை மட்டும் தான். அப்படியானால் ஒரு கவிஞனுடைய மற்ற எத்தனையோ எழுத்துமுறைகள் இந்த ஐந்தாறு எழுத்துமுறைகளை எழுதுவதற்கான தயாரிப்பு மட்டும் தானா? அவற்றிற்கு தனக்கேயுரித்தான அடிப்படையோ, அர்த்தங்களோ இல்லையா? அப்படி நினைப்பது சரியல்ல. மிகவும் சாதாரணம் என்று நினைக்கிற கவிதைக்குக்கூட ஒரு தனித்துவம் உண்டு. கவிஞனுடைய வாழ்க்கையில், எழுதும் முறையில் அதற்கொரு முக்கியத்துவம் உண்டு.

என்னுடைய எல்லா எழுத்துமுறைகளும் சிறந்தவையல்ல என்பது சொல்லவேண்டிய மற்றொரு விஷயம். விமரிசனத்தை நினைத்துக் கொண்டு ஒரு வரியும் நான் எழுதவில்லை. குழந்தைப்பருவத்தில் கவியரங்கங்களில் பங்கெடுத்திருக்கிறேன். அதை மொழிப்பாடத்தின் பரீட்சையாக மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்று கவிதை என்னுடைய இயல்பாகவும் பிரியமான எதிர்வினையாகவும் ஆகி விட்டது. உண்மையைத் தேட, சுதந்திரத்தைப் பற்ரிச் சிந்திக்க, அநீதியை எதிர்கொள்ள, அனுபவத்தின் பின்னங்களில் சஞ்சரிக்க, எனக்குக் கிடைத்த ஒரேயொரு வழி. அதனால் தான் கவிதை அடைக்கலம் தருகிற செயல்பாடு எனவும், எப்போதும் திறந்திருக்கிற கண் எனவும், பாவிகளில்லாத மதம் எனவும் பல காலமாக எழுதி வந்திருக்கிறேன்.

4 comments:

  1. அருமையான பதிவு.
    ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம். அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  2. எழுதுகிற எல்லோரும் இப்படி ஒவ்வொரு தேவையை ஒட்டியே எழுதுகிறார்களோ?

    ReplyDelete