Tuesday 1 May 2012

கடவுளின் பணியைச் செய்து கொண்டு…… –சாதத் ஹசன் மாண்டோ

Manto-02  

தமிழில்- உதயசங்கர்

 

நான் இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள குஜராத் மாநிலம் கத்தியவாரிலிருந்து வந்திருக்கிறேன். பனியா வகுப்பைச் சேர்ந்தவன். பரம்பரையாக வியாபாரம்செய்து வருகிறவன்.கடந்த வருடம் பிரிவினையின் போது உலகமே தலைகீழாக, தாறுமாறாக, குழப்பமடைந்த போது நான் தற்காலிகமாக கொஞ்சநாள் என் தொழிலிருந்து விலகியிருந்தேன். கஞ்சா விற்பனையில் கொஞ்சம் சம்பாதித்ததைத் தவிர.

ஆயிரக்கணக்கான அகதிகள் இங்கேயிருந்து அங்கும், அங்கேயிருந்து இங்கும் குடியேற ஆரம்பித்தனர். ஒரு நாள் நானும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதென்று முடிவு செய்தேன். அங்கே செய்வதற்கு ஏதாவது இருக்கும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். கஞ்சா இல்லையென்றால் வேறு ஏதாவது. நான் கிளம்பி விட்டேன் நான் அங்கே போவதற்கு சிறிது காலம் பிடித்தது. ஆனால் முடிவில் எப்படியோ சமாளித்து விட்டேன். போகும்போது கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டே.

பாகிஸ்தானில் தொழில் செய்வதற்காகவே குடியேறியிருப்பதால் நான் சூழ்நிலையைக் கவனமாக பரிசீலனை செய்தேன். அப்போது இந்துக்கள் கைவிட்டு விட்டுச் சென்ற சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. எங்கு வேண்டுமானாலும் நுழைந்து விடும் திறமையும், மனிதர்களோடு சுலபமாகப் பழகி விடும் இயல்பும் எனக்கு இருந்ததால் அங்கே சரியான இடங்களில் சரியான நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டேன். மிக விரைவிலேயே என் பெயரில் ஒரு வீடு ஒதுக்கப் பட்டது. நான் உடனடியாக அதை விற்று அந்த விற்பனையில் நல்ல பணம் சம்பாதித்தேன். இது நம்பிக்கைக்குரிய தொழிலாகத் தெரிந்தது. நான் ஒரு நகரத்திலிருந்து இன்னோரு நகரத்திற்கு இடம் பெயர ஆரம்பித்தேன். அங்கே எனக்கு ஒதுக்கப்படும் சொத்துக்களை அதற்கான பத்திரங்கள் கிடைத்ததும் எவ்வளவு சீக்கிரம் விற்று விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விற்றேன்.

எல்லா வேலைகளுக்கும் கடும் முயற்சி வேண்டும். வாழ்வில் எதுவும் சுலபமில்லை. அதனால் நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கமுடியும் என்று நம்பவில்லை. அது ஒரு நிரந்தரமான போராட்டம். சில நேரங்களில் முகப்புகழ்ச்சியே தேவையான வேலைகளைச் செய்து விடும். வேறு சில சமயங்களில் லஞ்சம் அல்லது ஒரு மாலை விருந்து,மாலையில் ஒரு ‘ நல்ல பொழுதுபோக்கு’ கூட நமக்குத் தேவையான வேலைகளைச் செய்து விடும். நான் என்ன தெரிந்து கொண்டேன் என்றால் நான் எப்போதும் ஓடிக் கொண்டேயிருந்தேன். நான் ஒரு நகரத்துக்குச் சென்று அங்கேயுள்ள குடியிருப்பு பகுதிகளை மேற்பார்வையிட்டு, ஒரு நல்ல வீட்டை தேர்ந்தெடுத்து பின்பு அதை எப்படியாவது சொந்தமாக்கிக் கொள்வது என்று செய்து கொண்டிருந்தேன்.

கடின உழைப்பு எப்போதும் நல்ல பலனை பெற்றுத் தரும். எனவே ஒரு வருட காலத்திலேயே அது நடந்தது. எப்படியோ நான் கணிசமான செல்வத்தைக் குவித்து விட்டேன். இப்போது ஒரு மனிதன் நன்றாக வாழ்வதற்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் என்னிடம் இருந்தது. ஒரு அழகிய வீடு, வங்கியில் ஏராளமான பணம், வேலைக்காரர்கள், ஒரு பெரிய கார். வியாபாரச் சொத்துக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

ஆனாலும் எனக்கு அமைதியில்லை. நான் கஞ்சா வியாபாரம் செய்யும் போதும் இப்படியான மன அழுத்தம் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் அதை நான் இப்போது அநுபவித்துக் கொண்டிருப்பதோடு ஒப்புமை சொல்ல முடியாது. நான் ஒரு மிகப் பெரிய சுமையில் கீழ் இருப்பதாக உணர்ந்தேன். அது என்ன என்று என்னால் சொல்லமுடிய வில்லை.

நான் புத்திசாலி. ஏதாவது என்னைத் தொந்தரவு செய்தால் நான் எப்படியாவது அது என்ன என்று கண்டு பிடித்து விடுவேன். அதே போல இப்போதும் அத்ன் ஆழத்திற்குச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தேன். என் மீது என்ன தவறு இருக்கிறது?

பெண்கள்?.. நல்லது. நான் வில்லங்கம் இல்லாதவன். குஜராத்தில் என்னுடைய மனைவியை இழந்து விட்டேன். ஆனால் என்ன? வேறு பெண்கள் இருக்கிறார்களே. உதாரணத்திற்கு என்னுடைய தோட்டக்காரனின் மனைவி. ருசிக்கு எந்தக் காரணமும் தேவையில்லை. இந்த விசயத்தில் நான் நம்புகிற ஒரே விசயம் ஒரு பெண்ணிடம் உள்ள இளமை தான். அவள் படித்திருக்கவேண்டும், அல்லது அவளுக்கு நடனமாடத் தெரியவேண்டும் அல்லது உங்களூக்கு தெரிந்ததெல்லாம் அவளுக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. நான் என்னைப் பற்றித்தான் சொல்லமுடியும். எனக்கு இளமையான பெண்களைப் பிடிக்கிறது. அவ்வளவு தான்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ஒரு புத்திசாலி மனிதன். அதனால் என் வாழக்கையில் ஏதோ ஒன்றை இழந்தமாதிரி உணர்ந்தேன். என்னுடைய தொழில் நன்றாக நடந்தது. என்னுடைய வங்கிக் கணக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே போனது. எனக்காக நிறைய மனிதர்கள் வேலை செய்தார்கள். உண்மையில் நான் எந்தவொரு பெரிய முயற்சியும் எடுக்காமலேயே பணம் வந்து சேர்ந்து கொண்டிருக்கிற நிலைமையை அடைந்து விட்டேன். மிகுந்த சிந்தனைக்குப் பிறகு நான் பதிலைக் கண்டுபிடித்து விட்டேன். நான் அமைதியின்றி இருந்ததற்குக் காரணம் என்னவென்றால் நான் பாகிஸ்தானுக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை.

கத்தியவாரில் இருக்கும் போது நான் என்பங்கிறகு சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு என்னுடைய நண்பன் பாண்டுரெங்கன் இறந்த போது நான் அவனுடைய மனைவியை என்னுடைய வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். அதன் மூலம் குறைந்தது இரண்டு வருடங்களுக்காகவாவது பெண்களின் பழமையான தொழிலில் அவள் ஈடுபடாமல் தடுக்கமுடிந்தது. இன்னொரு நண்பன் விநாயக் அவ்னுடைய மரக்காலை உடைத்துக் கொண்ட போது நான் உடனே அவனுக்கு வேறொன்றை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு நாற்பது ரூபாய் செலவானது. கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் வந்ததிலிருந்து எந்த புண்ணிய காரியத்தையும் செய்யவில்லை. அதனால் தான் என் மனம் அமைதியின்றித் தவித்தது.

நான் என்னென்ன நல்ல காரியங்களைச் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். தருமம் செய்யலாமா? சரி. ஒரு நாள் நகரம் முழுவதும் சுற்றி வந்தேன். நகரம் முழுவதும் நிர்வாணமான பசித்த தரித்திரங்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் உணவும் உடையும் யாருடைய உதவியும் இல்லாமல் கொடுத்தால் என்ன? எல்லோருக்கும் பொது உணவறை ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? அது நடைமுறையில் சாத்தியமில்லை. அதைச் செய்யவேண்டுமானால் ஏராளமான தானியங்களை வாங்க வேண்டும். அது கறுப்புச் சந்தையில் மட்டுமே கிடைக்கும். ஒரு நல்ல காரியத்துக்காக சில ஒழுக்கக் கேடான விசயங்களைச் செய்வதில் என்ன நன்மை இருக்கப் போகிறது?

ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் துயரங்களின் கதைகளையும், துரதிருஷ்டங்களின் கதைகளையும் கேட்டுக் கொண்டு பொழுதைக் கழித்தேன். ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு துயரமான கதை இருந்தது. தெருக்களில் படுத்துறங்கியவர்களுக்கும் பரந்த வெளிகளில் தங்கியிருந்தவர்களுக்கும் விலையுயர்ந்த வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது. நடந்து செல்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவனுக்கு வசதியான புதிய செருப்புகள் இல்லை. காரில் செல்கிறவனும் திருப்தியாகைல்லை. தன்னால் புதிய மோஸ்தர் கார் வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான். உண்மையில் எல்லாப் புகார்களும் உண்மையானவை, நியாயமானவை.

முன்பு ஒரு தடவை சோலாப்பூரின் ஆமினாபாயின் சிடால்கர் பாடிய கஜல் என் நினைவுக்கு வந்தது. ( கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தி அளிக்கட்டும்.) அதிலே ஒரு வரி: யாராலும் இன்னோருவரின் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியாது. அப்படித்தான் நானும் இருந்தேன். உதவி செய்வதற்குத் தயாராக இருந்தேன். ஆனால் உதவி செய்ய முடியாமல் இருந்தேன். இங்கே உதவி தேவைப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். மிகுந்த யோசனைக்குப் பின்னால் நான் தர்மம் செய்வதல்ல இதற்குப் பரிகாரம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் பல அகதிகள் முகாமுக்குப் போய் பார்த்தேன். அங்கே தர்மத்தின் காரணமாகப் பெரும்பாலானவர்கள் சோம்பேறிகளாக இருந்தார்கள். அவர்கள் வேலை செய்வதற்கு விரும்பவில்லை. முகாமுக்குள்ளே நாள் முழுதும் சுற்றிக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டோ அல்லது கிசுகிசுக்களைப் பேசிக் கொண்டோ எப்போதும் இலவசமாக கிடைக்கும் உணவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதை நான் பார்த்தேன். எப்படி இந்தப் பிச்சைக்காரர்கள் பாகிஸ்தானுக்காக ஏதாவது செய்ய முடியும்? தருமம் செய்தல் என்பது நல்ல காரியத்திற்கு அருகில் கூட வர முடியாது என்ற முடிவுக்கு நான் வந்தேன். அப்படியென்றால் என்ன செய்வது?

அன்றாடம் நூற்றுக் கணக்கான அகதிகள் முகாமில் இறந்து கொண்டேயிருந்தார்கள். அடிக்கடி பரவுகிற தொற்று நோயால் நகரத்திலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. நான் ஒரு இலவச மருத்துவமனையைக் கட்டுவதற்கு முடிவு செய்தேன். நான் அதற்கான திட்டத்தை நிறைவு செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டேன். நான் ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பை வெளியிடுவேன். கணிசமான தொகையை ஒப்பந்தங்களுக்கான கட்டணத் தொகையாக வசூலிப்பேன். என்னுடைய சொந்தக் கம்பெனி ஒன்றை நிறுவி அதற்கு கட்டிட ஒப்பந்தத்தைக் கொடுப்பேன். எடுத்துக்காட்டாக ஒரு லட்சம் ரூபாய் ( அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு எழுபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகாது எனவே சுத்தமாக ஒரு முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும் ) கொடுத்து என்னுடைய இலக்கை அடந்து விடுவேன். ஆனால் நான் அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன். ஏனெனில் அவர்கள் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றி விட்டால் என்ன ஆவது? மோசம்! இங்கே மக்கள் தொகை நெருக்கடி உண்டாகி விடாதா? அதை இந்த நாடு எப்படிச் சமாளிக்கமுடியும்?

யோசித்துப் பார்க்கும் போது அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இருப்பது தான் இந்தத் துன்பங்களுக்குக் காரணம் என்று தோன்றியது. மக்கள் தொகையின் அளவு பெருத்துக் கொண்டே போகிறது. ஆனால் நிலத்தில் விளையும் தானியங்களின் அள்வு அப்படியே இருந்தது. மழையாலும் மக்களின் இனவிருத்திவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆகையால் நான், மருத்துவமனை கட்டுவது அர்த்தமில்லாதது என்ற முடிவுக்கு வந்தேன்.

பிறகு எனக்கு மசூதி கட்டும் எண்ணம் வந்தது. கடவுள் சோலாப்பூரின் வயதான ஆமினாபாய் சிடால்கரை அவருடைய சொர்க்கத்தின் அமைதிக்குள் வைத்திருப்பார். ஏனெனில் நீங்கள் உயரேபோன பிறகு உங்கள் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி வழக்கமாக அவள் பாடுவாள். அவள் எப்போதும் பாடுகிற நல்ல காரியங்கள் என்னென்ன தெரியுமா? கிணறு தோண்டுதல், பாலங்கள் கட்டுதல், மசூதிகளை ந்ர்மாணீத்தல். ஆனால் இதுவும் அவ்வளவு நல்லவிசயமாக இல்லை. ஏனெனில் நகரத்தில் ஏராளமான மசூதிகள் இருந்தன. மசூதிகள் நிறைய இருந்தால் நம்பிக்கையாளர்களூக்கும் மதத் தீவிரவாதிகளுக்கும் நிறைய சண்டை நடக்கும். அதில் இன்னும் ஒரு எண்ணிக்கையைக் கூட்ட நான் விரும்பவில்லை.

அதற்குப் பதில் நான் மெக்காவுக்குப் புனிதப் பயணம் போக முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய முடிவை செயல்படுத்த ஆரம்பிக்குமுன்பே கடவுள் எனக்கு ஒரு பதிலைத் தந்து விட்டார். நகரத்தில் ஒரு மக்கள் பேரணி நடந்தது. அது பெருங்குழப்ப்த்தில் முடிந்தது. முப்பது பேர் மிதித்துக் கொல்லப்பட்டார்கள். மறுநாள் காலை பத்திரிகைகளில் அந்த சம்பவம் பிரசுமான போது, அவர்கள் கொல்லப்படவில்லை. தியாகிகளாகிவிட்டார்கள் என்று வந்திருந்தது.

இது என்னைச் சிந்திக்க வைத்தது. நான் பல்வேறு தலைசிறந்த மதப் பண்டிதர்களைச் சந்தித்தேன். அவர்கள் விபத்துகளில் இறப்பவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். ஏனென்றால் அது அவருடைய தவறு அல்ல.எனவே தியாகி என்ற பேறு அவர்களூக்குக் கிட்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள்..ஒவ்வொரு மனிதனும் அடய் விரும்புகிற உன்னத நிலையும் அதுதான் என்று சொன்னார்கள். வெறுமனே சாவதற்குப் பதில் மக்கள் தியாகிகளாகச் சாகலாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது அற்புதமில்லையா? சாதாரணமாக மரணமெய்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முழுக்க மோசம். தியாகம் ஒன்று தான் இந்த அவலவாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தரமுடியும்.

மிக உன்னதமான இந்த விசயத்தைப் பற்றி நான் மேலும் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் சுற்றிலும் பார்த்ததென்ன? கூட்டம் கூட்டமாய் குழி விழுந்த கண்களும், போதிய உணவின்றி மஞ்சள் பாரித்த முகங்களும் ஏழ்மையின் சுமையின்கீழ் நசுங்கி கந்தலான உடைகளோடு பேய்களைப் போல அலைந்து கொண்டிருந்த பரிதாபமான ஜீவன்கள்! குப்பை மேட்டில் வீசப்பட்ட கழிவுப் பொருட்களைப் போல கலகலத்த குடிசைகளில் வாழ்ந்து கொண்டு நகரத்திலுள்ள் கடைவீதிகளிலனாதரவான மிருகங்களைப் போல ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.இந்த மக்கள் எதற்காக உயிர் வாழ வேண்டும்? நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? யாருக்கும் தெரியாது. அங்கே அவர்கள் ஆயிரக்கணக்கில், பசியினாலும், தாகத்தினாலும், குளிரினாலும், வெப்பத்தினாலும், செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? துக்கம் அனுஷ்டிக்கப்படாமலும், நினைவு கொள்ளப் படாமலும் இறந்து கொண்டிருப்பது…

அவர்கள் இறந்த போது அவர்களுக்கு என்ன நடந்தது? எதுவுமே இல்லை. ஆகையால் மிகச் சிறந்த யோசனை எனக்கு தோன்றி விட்டது. நிரந்தரமாக பசியாலும், நோயிலும், வலியிலும், வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மக்கள் ஏன் தியாகிகளாக இறக்கக் கூடாது? இந்த உலகத்தில் அவர்களுக்கென்று ஒரு கௌரவமான இடத்தை அவர்கள் ஏன் அடையக் கூடாது. அவர்களுடைய மெலிந்த முகத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் கூட அவர்களைப் பூஜிப்பார்களே!

கேள்வி என்னவென்றால் இந்த மக்கள் தியாகிகளாவதற்கு விரும்புவார்களா? அவர்கள் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். ஏனெனில் அவர்கள் நல்ல இஸ்லாமியர்கள். நல்ல முஸ்லீம்கள் உயர்ந்த தியாகத்திற்காக எப்போதும் ஏங்கிக் கொண்டிருப்பவர்கள். ஏன் இந்துக்களும் சீக்கியர்களும் கூட இப்போது தியாகத்திற்காக ஆசைப் படுவார்கள். ஆனால் நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன். மெலிந்த தரித்திரன் ஒருவனிடம் ,நான் அவன் தியாகியாவதற்கு விரும்புகிறானா என்று கேட்டேன். அவனுக்கு அப்படி எந்த லட்சியமும் இல்லை என்று சொல்லி விட்டான்.

என்னால் உரிந்து கொள்ள முடியவில்லை. இந்த துரதிருஷ்டப்பிராணி வாழ்ந்து என்ன செய்யப் போகிறான்? நான் அவனிடம் விவாதிக்க முயற்சித்தேன்.

“ பார் நண்பனே! நீயோ வயதானவன். எப்படியிருந்தாலும் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்கு மேல் நீ உயிரோடு இருக்க முடியாது. இப்போது உன்னுடைய பலகீனத்தினால் உன்னால் நடக்கக் கூட முடிய வில்லை. உன்னுடைய குத்திருமலுக்குள் நீ நுழைந்து விட்டால் நீ வெளியே வந்து சேர்வது அதிசயம் தான். உன்னிடம் ஒரு நயாபைசா கூட இல்லை. உன்னுடைய வாழ்நாளில் ஒரு நாள் கூட சுகமாக இருந்ததில்லை. உன்னைப் பொறுத்தவரை இனி எதிர்காலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீ ஏன் வாழ விரும்புகிறாய்? எதற்காக? ராணுவத்தில் சேர முடியாத அளவுக்கு உனக்கு வயதாகி விட்டது இல்லையென்றால் உன்னுடைய நாட்டிற்காக சண்டையிட்டு மடிய உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நீ ஏன் தியாகியாவதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது? “

என்று நான் கேட்டேன். அதற்கு அவன்,

“ எப்படி அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது? “

என்று கேட்டான். உடனே நான் அவனுக்கு விளக்கிச் சொல்ல ஆரம்பித்தேன்.

“ ஒரு வாழைப் பழத்தோல் உனக்கு முன்னால் தரையில் கிடக்கிறது என்று வைத்துக் கொள்.. நீ அதில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து நீ தப்பிக்க முடியாது..என்பது தெளிவு. அப்படி நீ இறந்து தியாகியாகி விடலாம்…”

death ஆனால் அவன் என்னுடைய விளக்கத்தை ஏற்கவில்லை. அதற்குப் பதில் அவன்,

“ நீ என்ன என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டாயா? நானே என்னுடைய கண்களைத் திறந்து கொண்டு வாழைப் பழத்தோலில் விழுவேனா? எனக்கு வாழ ஆசையில்லையா என்ன? “

என்று சொன்னான். கடவுளே! இந்தத் துரதிருஷ்டம் பிடித்த எலும்புக்கூடு தான் அப்படிச் சொல்லியது. அவன் வாழ்ந்து கொண்டிருந்தததாக அவன் நினைத்தான்.

அவனுடைய பேச்சு எனக்கு வருத்தமளித்தது. அதை விட வருத்தமளித்த விசயம் என்னவென்றால், மிகச் சுலபமாக தியாகியிருக்கவேண்டியவன் அதற்கு இரண்டு நாட்களூக்குப் பின்னால் தர்மாஸ்பத்திரியில் இரும்புக் கட்டிலில் இருமிக் கொண்டே செத்துப்போனான் என்பது தான்.

பிறகு அங்கே அந்தப் பெண். வாயில் பற்களில்லை. வயிற்றில் குடலே இல்லை. அவளைப் பார்க்கும் போது அவளூடைய இறுதி மூச்சை எப்போது வேண்டுமானாலும் அவள் விட்டு விடுவாள் என்று தோன்றியது. நான் அவளுக்காக மிகுந்த பரிதாபப் பட்டேன்.அவளுடைய வாழ்நாள் முழுவதும் துயரத்திலும் ஏழ்மையிலும் கழித்திருந்தாள். நான் என் கைகளில் அவளைத் தூக்கி ரயில் தண்டவாளங்களின் மீது படுக்க வைத்தேன். ஆனால் ரயில் வருகிற சத்தத்தைக் கேட்டவுடனே ஸ்பிரிங் பொம்மை போல துள்ளியெழுந்து ஓடியே போய் விட்டாள்.

என் இதயம் நொறுங்கி விட்டது. ஆனாலும் நான் விடவில்லை.நான் சத்தியத்தின் குறுகலான நேர்வழியைக் கண்டு கொண்டேன். அதனால் நான் அதிலிருந்து சுலபமாக விலகிச் செல்ல மாட்டேன்.

முகலாய மன்னர்கள் காலத்திய ஒரு பழைய கட்டிடம் நகரத்தில் இருந்தது. அங்கே நூற்று ஐம்பத்தியோரு சிறிய அறைகள் இருந்தன. அனுபவமிக்க என்னுடைய கண்களால் ஒரே பார்வையில் முதல் பெரிய மழை ஏற்கனவே ஒழுகிக் கொண்டிருக்கும் கூரையைத் தகர்த்து விடும் என்று மதிப்பிட்டு விட்டேன். நான் சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். அதை வீடில்லாத ஓரு ஆயிரம் பேருக்கு வாடகைக்கு விட்டேன். மாதம் ஒரு ருபாய்க்கு மேல் வாடகை வாங்க வில்லை. இரண்டு மாதங்களுக்கு நான் வாடகையைப் பெற்றுக் கொண்டேன். முன்பு நான் மதிப்பிட்ட மாதிரியே மூன்றாவது மாத ஆரம்பத்தில் நகரத்துக்கு முதல் மழை வந்தது. கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்து எழுநூறு ஆண்கள், பெண்கள், குழந்தைகளைத் தியாகிகளாக்கி விட்டது.

என்னுடைய இதயம் லேசாகி விட்டது. இப்போது இந்த உலகத்தில் எழுநூறு பேருக்கு உணவு உடை தேவையில்லை. அதை விட பெரிய விசயம் அவர்கள் எல்லோரும் தியாகிகளாகி சொர்க்கத்திற்குப் போய் விட்டார்கள்.

என்னுடைய இந்த நல்ல வேலை தொடர்ந்தது. என்னுடைய முயற்சிகளினால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் தியாகத்தின் இனிய பானத்தை அருந்தாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. எல்லா வேலைகளுக்கும் உழைப்பு தேவைப் படுகிறது. சோலாப்பூரின் வயதான ஆமினா பாய் சிடால்கர் எப்போதும் பாடுவதைப் போல.. அது போகட்டும்.. என்னால் அந்த வார்த்தைகளை நினைவு படுத்தமுடியவில்லை. என்னுடைய புனிதமான இலக்கை அடைவதற்கு நான் மிகுந்த பிரயாசைப் பட வேண்டியதிருந்தது என்று சொல்வது போதுமானது. ஒரு துரதிருஷ்டசாலி இருந்தான். அவனுடைய வழியில் பத்து முறை வாழைப் பழத் தோலை வீசியும் அவனை சொர்க்கத்திற்கு அனுப்ப முடியவில்லை. எப்படியோ மரணத்தைப் போல தியாகமும் முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகிறது போலும். ஒரு நாள் அவன் குளீயலறையில் வழுக்கி விழுந்து மேன்மையான தியாகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டான்.

இப்போது நான் மிகப்பெரிய வசிப்பிடக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான கட்டிட ஒப்பந்தத்தை என்னுடைய சொந்தக் கம்பெனி எடுத்திருக்கிறது. குறைந்தது எழுபத்தைந்தாயிரம் ரூபாயாவது லாபம் ஈட்டி விடலாம் என்பதில் ஊறுதியாக இருக்கிறேன். கட்டிடத்தை காப்பீடும் செய்திருக்கிறேன். மூன்றாவது மாடி உயரும்போது மொத்தக் கட்டிடமும் இடிந்து சரியும் என்று மதிப்பிட்டிருக்கிறேன். அதற்காகவே தரம் குறைவான பொருட்களையே நான் பயன் படுத்தியிருக்கிறேன். கட்டிட வேலைக்காக அமர்த்தப் பட்டுள்ள முந்நூறு பணியாளர்களுக்கு யோகம் தான். ஒருவர் கூட உயிர் பிழைக்க முடியாது. ஆனால் உடனே நிரந்தரமான தியாகவுருவை அடைவார்கள்.

ஒருவேளை சிலர் அதில் பிழைப்பார்களேயானால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்கள் பாவிகள். அன்பும் கருணையும் கொண்ட கடவுள் அவர்களை மேன்மையான தியாகநிலைக்கு அநுமதிக்க விரும்பவில்லை என்று அர்த்தம்.

நன்றி- நற்றிணை காலாண்டிதழ்

No comments:

Post a Comment