Showing posts with label பிரிவினை. Show all posts
Showing posts with label பிரிவினை. Show all posts

Wednesday, 22 August 2012

டிட்வாலின் நாய்

 

சாதத் ஹசன் மண்ட்டோManto-02

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன.

ஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்து செல்கின்றன. ஏதோ இசைக்கலைஞன் தன் வாத்தியத்தில் ஒரு அபஸ்வரத்தைத் தட்டியது போல. அது செப்டம்பர் மாதத்தின் கடைசி. வெப்பமாகவும் இல்லை. குளிர்ச்சியாகவும் இல்லை. அதைப் பார்க்கும்போது கோடைகாலமும் குளிர்காலமும் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமாதிரி இருந்தது. நீலவானத்தில் பஞ்சுமேகங்கள் நாள் முழுவதும் ஏரியின் மீது மிதக்கும்படகுகளைப் போல மிதந்து கொண்டிருந்தன.

படைவீரர்கள் முடிவில்லாத, எதுவுமே பெரிதாய் ஒன்றும் நிகழாத இந்த யுத்தத்தினால் களைப்புற்றிருந்தனர். அவர்களுடைய நிலைகளை தாக்கி வெல்ல முடியாது. அந்த இரண்டு குன்றுகளும்- அதில் தான் அவர்கள் இருந்தனர் – எதிர் எதிராக இருந்தன. இரண்டும் ஒரே விதமான உயரம். அதனால் யாருக்கும் சாதகமில்லை. கீழே பள்ளத்தாக்கில் வேகமாகச் செல்லும் ஒரு ஓடை கற்படுக்கையின் மீது பாம்பைப் போல வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது.

விமானப்படை இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இரண்டு தரப்பினரிடமும் பெரிய துப்பாக்கிகளோ, பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பெரும் தீயை மூட்டுவார்கள். அந்தக் குன்றுகளில் எதிரொலித்து வரும் அவர்களின் குரலை ஒருவருக்கொருவர் கேட்பார்கள்.

இப்போது தான் கடைசிச் சுற்று தேநீர் முடிந்தது. நெருப்பு குளிர்ந்து விட்டது. வானம் தெளிந்து விட்டது. காற்றில் குளிர்ச்சி பரவியிருந்தது. கூரான, இனிய தேவதாரு மரக்காய்களின் மணம் வீசியது. படைவீரர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே உறங்கி விட்டனர். இரவுக் காவலரான ஜமேதார் ஹர்னாம்சிங் மட்டும் விழித்திருந்தார். இரண்டு மணியளவில் அவன் காவலை ஏற்றுக் கொள்ள காண்டாசிங்கை எழுப்பிவிட்டான். பிறகு அவன் படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் போல அவன் கண்களிலிருந்து வெகுதூரத்திலிருந்தது. அவன் ஒரு பஞ்சாபிக் கிராமியப்பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான்.

“ ஒரு ஜோடி செருப்பு வாங்கி வா என் காதலா

நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு

வேண்டுமானால் நீ உன் எருமையை விற்றுவிடு

ஆனால் எனக்கு வாங்கி வா

நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு “

அந்தப் பாட்டு அவனை உணர்ச்சிவயப்படுத்தியது. உற்சாகத்தையும் தந்தது. அவன் ஒருவர் பின் ஒருவராக மற்றவர்களையும் எழுப்பினான். பாண்டாசிங் அங்கிருந்த படைவீரர்களில் இளமையானவன். இனிமையான குரலையுடையவன். “ஹீர் ரஞ்சா” பஞ்சாபி துயரக்காதல் காவியத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பாட ஆரம்பித்தான். ஒரு ஆழ்ந்த சோகம் அவர்கள் மீது கவிந்தது. அந்தச் சாம்பல் நிறக்குன்றுகள் கூட அந்தப் பாடலின் துயரத்தில் மூழ்கியது போல இருந்தது.

இந்த மனநிலையை ஒரு நாயின் குரைப்பொலி தகர்த்தது. ஜமேதார் ஹர்னாம்சிங்,

” எங்கேருந்து இந்தப் பொட்டைநாய்க்குட்டி முளைச்சி வந்தது…”

என்று சொன்னான். அந்த நாய் மீண்டும் குரைத்தது. அதன் சத்தம் மிக அருகில் கேட்டது. புதர்களில் சலசலப்பு தெரிந்தது. பாண்டாசிங் துப்பறிவதற்காக எழுந்து போனான். ஒரு சாதாரணக் கலப்பின நாயைக் கயிற்றில் கட்டி இழுத்து வந்தான். அது வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

” நான் இதை புதர்களுக்குப் பின்னாலக் கண்டுபிடிச்சேன்.. அது எங்கிட்டே அதோட பேரு ஜுன் ஜுன்னு சொல்லிச்சு”

என்று பாண்டாசிங் சொன்னான். எல்லோரும் வெடித்துச் சிரித்தனர்.

அந்த நாய் ஹர்னாம்சிங்கிடம் சென்றது. அவன் அவனுடைய சாமான்பையிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தரையில் எறிந்தான். அந்த நாய் அதை மோந்து பார்த்தது. பின்னர் அதைச் சாப்பிடப்போகும் போது ஹர்னாம்சிங் அதைத் தட்டிப் பறித்தான்.

” நில்லு.. நீ ஒரு பாகிஸ்தான் நாயா இருந்தா..”

அவர்கள் எல்லோரும் சிரித்தனர். பாண்டாசிங் அந்த மிருகத்தைத் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஹர்னாம்சிங்கிடம்,

” ஜமேதார் சாகிப்.. ஜுன் ஜுன் ஒரு இந்திய நாய்..”

என்று சொன்னான்.

” நீ உன் அடையாளத்தை நிருபிச்சுக் காட்டு..”

ஹர்னாம்சிங் அந்த நாய்க்கு ஆணையிட்டான். அது தன்னுடைய வாலை ஆட்ட ஆரம்பித்தது.

” இது அத்தாட்சியில்லை.. எல்லாநாயும் தான் வாலை ஆட்டும்..”

என்று ஹர்னாம்சிங் சொன்னான். பாண்டாசிங்,

” அவன் பாவம் ஒரு அகதி “

என்று நாயின் வாலோடு விளையாடிக் கொண்டே சொன்னான். ஹர்னாம்சிங் ஒரு பிஸ்கட்டை அந்த நாயிடம் எறிந்தான். அதைக் காற்றிலேயேக் கவ்விக் கொண்டது.

“ நாய்கள் கூட இப்போ அவங்க இந்தியரா பாகிஸ்தானியான்னு முடிவு செய்ஞ்சுக்கணும்..”

என்று படைவீரர்களில் ஒருவன் குறிப்பிட்டான். ஹர்னாம்சிங் தன்னுடைய சாமான் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான்.

“ எல்லா பாகிஸ்தானியரும் நாய்கள் உட்பட சுடப் படுவார்கள்..”

என்று சொன்னான். உடனே ஒரு படைவீரன்,

” இந்தியா ஜிந்தாபாத்..”

என்று கத்தினான். அந்த நாய் பிஸ்கட்டை கடிக்கப்போனது அப்படியே நின்று விட்டது. தன்னுடைய வாலை கால்களுக்கிடையில் நுழைத்துக் கொண்டு பயந்துபோய் நின்றது. ஹர்னாம்சிங் சிரித்தான்.

” நீ ஏன் உன்னோட சொந்த நாட்டைப்பார்த்துப் பயப்படுறே…? இங்க பாரு ஜுன் ஜுன் இந்தா இன்னொரு பிஸ்கட்..”

திடுதிப்பென்று காலைப் பொழுதின் வெளிச்சம் யாரோ இருட்டறையில் விளக்கைப் போட்டதைப் போல பரவியது. அது டிட்வால் என்றழைக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் குன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகளிலும் படர்ந்தது.

யுத்தம் பல மாதங்களாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

ஜமேதார் ஹர்னாம்சிங் அவனுடைய பைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தான். எதிர்புறமாக இருந்த குன்றிலிருந்து புகை எழுந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படியென்றால் இவர்களைப் போலவே எதிரியும் காலையுணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருக்கிறான்.

பாகிஸ்தான் ராணுவத்தின் சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய பெரிய மீசையை ஒரு முறை முறுக்கி விட்டுக் கொண்டே டிட்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனுடைய வயர்லெஸ் ஆபரேட்டர் அந்தப் படைப்பிரிவுக் கமாண்டரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதற்காகத் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடி தூரத்தில் பஷீர் என்ற படைவீரன் பாறையில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய துப்பாக்கி அவனுக்கு முன்னால் கிடந்தது.

“ எங்கே கழித்தாய் இரவை என் அன்பே! என் நிலவே! எங்கே கழித்தாய் இரவை! “

என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான். பாடலில் சந்தோஷமடைந்த அவன் இன்னும் சத்தமாக வார்த்தைகளை ரசித்துப் பாட ஆரம்பித்தான். திடீரென அவன் சுபேதார் ஹிம்மத்கானின் அலறலைக் கேட்டான்.

” எங்கே கழித்தாய் இந்த இரவை?”

ஆனால் இது பஷீரைப் பார்த்தல்ல. அவன் கத்தியது ஒரு நாயைப் பார்த்து. சிலநாட்களுக்கு முன்பு அது எங்கிருந்தோ அவர்களிடம் வந்து சேர்ந்தது. அந்த முகாமில் சந்தோஷமாகத் தங்கியிருந்தது. திடீரென நேற்று இரவு காணாமல் போய் விட்டது. ஆனால் இப்போது அது செல்லாத காசைப் போலத் திரும்பி வந்து விட்டது.

பஷீர் புன்னகைத்தான். அந்த நாயைப் பார்த்துப் பாட ஆரம்பித்தான்.

” எங்கே கழித்தாய் இந்த இரவை

எங்கே கழித்தாய் இந்த இரவை? “

ஆனால் நாய் வாலை மட்டும் ஆட்டியது. சுபேதார் ஹிம்மத்கான் ஒரு மிட்டாயை அதனிடம் வீசியபடியே,

” அதுக்குத் தெரிந்ததெல்லாம் வாலை ஆட்டறது மட்டும் தான்..முட்டாள்..”

என்று சொன்னான். அப்போது பஷீர்,

” அது கழுத்தில என்ன சுத்தியிருக்கு..?”

என்று கேட்டான். படைவீரர்களில் ஒருவன் அந்த நாயைப் பற்ரி இழுத்தான். கழுத்தில் கிடந்த கயிற்றுப்பட்டியைக் கழட்டினான். அதில் ஒரு சிறிய அட்டை கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

” என்ன சொல்லுது அது..”

என்று வாசிக்கத் தெரியாத அந்தப் படைவீரன் கேட்டான். பஷீர் முன்னால் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தான்.

” அது ஜுன் ஜுன்னு சொல்லுது..”

சுபேதார் ஹிம்மத்கான் தன்னுடைய புகழ் வாய்ந்த மீசையை இன்னுமொரு தடவை திருகி விட்டுக் கொண்டே,

” பஷீரேய்..! அது ரகசிய வார்த்தை.. வேற எதாச்சும் சொல்லுதா..?”

என்று கேட்டான்.

” ஆமாம் சார்.. அது ஒரு இந்திய நாய்ன்னு சொல்லுது..”

உடனே சுபேதார் ஹிம்மத்கான்,

” அப்படின்னா என்ன அர்த்தம்? “

என்று கேட்டான். பஷீர் தீவிரமாக,

” ஆனால் அது ரகசியம்..”

என்று பதிலளித்தான்.

” அப்படி ரகசியம் இருந்தா அது ஜுன் ஜுன்கிற வார்த்தையில தான் இருக்கும்..”

என்று இன்னொரு படைவீரன் தன்னுடைய புத்திசாலித்தனமான யூகத்தைத் துணிந்து வெளிப்படுத்தினான்.

சுபேதார் ஹிம்மத்கானும்,

” ஏதாச்சும் இருக்கலாம்.. அதிலே..”

என்று குறிப்பிட்டான். கடமையுணர்வுடன் பஷீர் மீண்டும் அதை முழுவதுமாக வாசித்தான்.

” ஜுன் ஜுன் இது ஒரு இந்திய நாய்..”

சுபேதார் ஹிம்மத்கான் வயர்லெஸ் போனை எடுத்தான். அவனுடைய படைப்பிரிவு கமாண்டரிடம் அவர்களுடைய முகாமில் நாய் திடீரெனத் தோன்றியது, முந்திய இரவில் மறைந்து போனது, மறுபடியும் இன்று காலையில் திரும்பியது என்று விவரமாகச் சொன்னான். படைப்பிரிவு கமாண்டர்,

” நீ என்ன பேசிக்கிட்டிருக்கே. .”

என்று கேட்டார்.

சுபேதார் ஹிம்மத்கான் மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். அவன் ஒரு சிகரெட் பாக்கெட் அட்டையைக் கிழித்தான். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை எடுத்து பஷீரிடம் கொடுத்து,

” இப்ப இதில குர்முகியில.. அதான் அந்தச் சீக்கியர்களோட பாஷையில எழுது..”

என்று சொன்னான்.

” நான் என்ன எழுதணும்..?”

”ம்ம்…..நல்லது…”

திடீரென பஷீருக்கு ஒரு ஆவேசம் தோன்றியது.

” சுன் சுன் ஆமாம் அது தான் சரி.. நாம ஜுன் ஜுன்னை சுன் சுன்னால எதிர்ப்போம்..”

சுபேதார் ஹிம்மத்கானும் அதை ஆமோதிக்கிற மாதிரி,

” பிரமாதம்.. அதோட இதையும் சேத்துக்கொ.. இது ஒரு பாகிஸ்தானிய நாய்..”

என்று சொன்னான். அவனே நாயின் கழுத்துப்பட்டியில், எழுதிய அந்தக் காகிதத்தைத் திணித்து,

” இப்ப போய் உன்னோட குடும்பத்தோட சேந்துக்கோ..”

அவன் அதற்கு சாப்பிட ஏதோ கொடுத்தான். பிறகு,

” இங்க பாரு நண்பா.. நம்பிக்கைத் துரோகம் கூடாது.. நம்பிக்கைத் துரோகத்துக்குத் தண்டனை மரணம் தான்..”

என்று சொன்னான்.

அந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டே அதனுடைய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத்கான் அந்த நாயை இந்திய நிலையைப் பார்த்த மாதிரி திருப்பி,

” போ..இந்தச் செய்தியை எதிரிட்ட கொண்டு போ.. ஆனால் திரும்பி வரணும்.. இது உன்னோட கமாண்டரின் கட்டளை..”

என்று சொன்னான். நாய் வாலை ஆட்டியபடியே அந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவேயுள்ள பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வளைந்த மலைப்பாதை வழியே கீழே இறங்கியது. சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய துப்பாக்கியை எடுத்து காற்றில் சுட்டான்.

பகலில் இந்த மாதிரி விஷயங்களுக்கு இது கொஞ்சம் சீக்கிரம் என்று இந்தியர்கள் குழப்பமடைந்தனர். ஏற்கனவே சலிப்பில் இருந்த ஜமேதார் ஹர்னாம்சிங் கத்தினான்.

“ நாம அவங்களுக்குத் திருப்பிக் கொடுப்போம்..”

இரண்டு பக்கமும் ஒரு அரை மணி நேரத்துக்கு துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். உண்மையில் அது முழுவதுமே காலவிரயம்தான். கடைசியில் ஜமேதார் ஹர்னாம்சிங் கொடுத்தவரை போதும் என்று கட்டளையிட்டான். அவன் அவனுடைய நீளமான தலைமுடியைச் சீவினான். கண்ணாடியில் அவனைப் பார்த்துக்கொண்டே, பாண்டாசிங்கிடம்,

“ எங்கே போச்சு..அந்த நாய்..ஜுன் ஜுன் “

என்று கேட்டான். அதற்கு பாண்டாசிங்,

” நாய்கள் எப்போதுமே வெண்ணெயைச் சீரணிப்பதில்லைன்னு....பழமொழி இருக்கே..”

என்று தத்துவார்த்தமாகச் சொன்னான். திடீரென கண்காணிப்புப் பணியிலிருந்த படைவீரன்,

“ அதோ அந்த நாய் வருது..” என்று கத்தினான்.

ஹர்னாம்சிங், “ யாரு ?” என்று கேட்டான். அதற்கு அந்தப் படைவீரன்,

” அது பேரென்ன? ஜுன் ஜுன்..”

என்று பதில் சொன்னான். உடனே ஹர்னாம்சிங்,

” அது என்ன செய்யுது..”

என்று கேட்டான். அந்தப்படைவீரன் பைனாகுலர் வழியே கூர்ந்து பார்த்துக் கொண்டே,

” அது நம்மைப் பாத்து வருது..”

என்று பதில் சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் அவனிமிருந்து பைனாகுலரைப் பறித்து அதன் வழியே பார்த்துக் கொண்டே,

“ அது தான்.. அது கழுத்தில ஏதோ சுத்தியிருக்கே.. இரு..இரு.. அது பாகிஸ்தான் மலையிலிருந்து வருதே..ஙொத்தாலோக்க..”

என்று சொன்னான். அவன் அவனுடைய துப்பாக்கியை எடுத்து குறி பார்த்துச் சுட்டான். துப்பாக்கிக்குண்டு அந்த நாய் எங்கிருந்ததோ அதற்கு அருகில் எங்கோ பாறையில் பட்டுத் தெறித்தது. அந்த நாய் நின்று விட்டது.

சுபேதார் ஹிம்மத்கான் இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவனுடைய பைனாகுலர் வழியே பார்த்தான். அந்த நாய் ஒரு சுற்று சுற்றித் திரும்பி வந்த வழியே திரும்பியது.

” தைரியசாலி யுத்தகளத்தை விட்டு ஓட மாட்டான்.. முன்னேறிப்போ.. உன் வேலையை முடி “

என்று அந்த நாயைப் பார்த்து அவன் கத்தினான். அதைப் பயமுறுத்த பொதுவான திசையில் துப்பாக்கியால் சுட்டான். அதேநேரம் ஹர்னாம்சிங்கும் சுட்டான். அந்த நாய்க்கு சில அங்குல தூரத்தில் குண்டு பாய்ந்து சென்றது. காதுகளை படபடவென அடித்துக் கொண்டு காற்றில் துள்ளி விழுந்தது. சுபேதார் ஹிம்மத்கான் மறுபடியும் சுட்டான். சில கற்களில் பட்டுச் சிதறியது.

அது மிக விரைவில் அந்த இரண்டு படைவீரர்களுக்கான விளையாட்டாக மாறி விட்டது. உயிர் பயத்தில் நாய் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டேயிருந்தது. ஹிம்மத்கானும், ஹர்னாம்சிங்கும் பயங்கரமாகச் சிரித்தனர். அந்த நாய் ஹர்னாம்சிங்கை நோக்கி ஓடத் தொடங்கியது. அவன் சத்தமாக அதை வைதுகொண்டே சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலில் பாய்ந்தது. அது ஊளையிட்டது. திரும்பி ஹிம்மத்கானை நோக்கி ஓடத் தொடங்கியது. அதைப் பயமுறுத்துவதற்காகச் சுடப்பட்ட குண்டுகளைத் தான் அங்கேயும் சந்திக்க வேண்டியிருந்தது.

” தைரியமான பையனாய் இரு.. உனக்குக் காயம் பட்டாலும் உனக்கும் உன் கடமைக்குமான இடைவெளியிலிருந்து அசையாதே… போ…போ…போ…”

என்று பாகிஸ்தானி கத்தினான்.

நாய் திரும்பியது. அதன் ஒரு கால் இப்போது சுத்தமாய் உபயோகமில்லாமல் ஆகி விட்டது. அது காலை இழுத்துக் கொண்டு ஹர்னாம்சிங்கை நோக்கி நகர்ந்தது. அவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கவனமாகக் குறி பார்த்துச் சுட்டுக் கொன்றான்.

சுபேதார் ஹிம்மத்கான் பெருமூச்சு விட்டுக் கொண்டே,

” பாவம் அந்தப் பயல் தியாகியாகி விட்டான்..”

என்று சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் இன்னமும் சூடாக இருக்கும் அவனுடைய துப்பாக்கியின் குழலைத் தடவிக்கொடுத்துக் கொண்டே,

” அது ஒரு நாயைப் போலச் செத்தது..”

என்று முணுமுணுத்தான்.

நன்றி- தி எண்ட் ஆஃப் கிங்டம் அண்டு அதர் ஸ்டோரிஸ்.

நன்றி- மலைகள் இணைய இதழ்

Monday, 25 June 2012

காலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ

உதயசங்கர்

Manto-02

முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. காலத்தின் குரலாய் கலைஞனே இருக்கிறான். அவனே இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை ஜீவராசிகள் மீதும் பேரன்பு செலுத்துகிறவனாக இருக்கிறான். பிரதிபலன் பாராத பேராறாக ஓடுகிறான். தன்னுடைய சிறிய கைகளினால் இந்தப் பிரபஞ்சத்தையே அரவணைக்கும் பேராவல் கொள்கிறான். உயிர்களின் மீது கொண்ட தீராத காதலினால் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருக்கிறான். அவனுக்கு எல்லாஉயிர்களும் மகிழ்வோடு வாழவேண்டும் என்பதே லட்சியம். ஏற்றத்தாழ்வில்லாத, சமத்துவமிக்க, யாரும் யார் மீதும் ஒரு துரும்பைக் கூட போடாத, போட்டிகளற்ற, சமநிலை தவறாத, ஜாதி,மதமாச்சரியங்களற்ற, மனிதன் தான் மனிதனாக வாழ்வதில் பெருமிதம் கொள்கிற ஒரு அழகிய உலகமே அவன் கனவு. அந்த கனவு நனவாக அவன் தன் கலையின் மூலம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறான். மனிதமன இருளை, இருட்குகையினுள் அடைந்துகிடக்கும் மனவக்கிரங்களை தன் படைப்புகளில் ஆராய்ச்சி செய்கிறான். நாமே அறியாத நம் மனதின் அத்தனை மூலைமுடுக்குகளிலும் அவன் பயணிக்கிறான். அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும், அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்.

இந்த பிரபஞ்சத்தை நேசிக்கும் கலைஞன் அதற்காகத் தன்னையே விலையாகக் கொடுக்கிறான். தன் வாழ்வை அர்ப்பணம் செய்கிறான். உலகில் நிகழும் அத்தனைதுயரங்களையும் அவனே அனுபவிக்கிறான். பசியுடன் ஒருவன் இந்த உலகில் இருந்தால் அதற்காக இந்த ஜெகத்தினை அழிக்கும் கோபம் கொள்கிறான். மனித இழிவுகளுக்காக வருந்துகிறான். மனித அவலங்களுக்காக புலம்புகிறான். தன்னைப் பற்றியோ, தன் சுற்றம் பற்றியோ கவலைகொள்ளாமல் எப்போதும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றியே கவலைப்படுகிறான் கலைஞன். அரசியல்வாதிகளைப் போல அதிகாரத்துக்காக அலைவதில்லை. மக்கள்மீது போலியான அன்பைப் பொழிவதில்லை. அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு குணமும், அதிகாரத்தில் இல்லாதபோது ஒரு குணமும் கொள்வதில்லை கலைஞன். அவனுடைய அன்பின் நதி எல்லோரையும் அணைத்து ஈரமாக்குகிறது. எல்லோர் மனதிலும் ஈரத்தை ஊற்றெடுக்க வைக்கிறது. எனவே தான் காலத்தில் உருவாகிற கலைஞன் காலத்தைத் தாண்டியும் வாழ்கிறான். எப்படி வாழ்கிறான் கலைஞன்? அறம் சார்ந்த மனிதமதிப்பீடுகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்துவதின் மூலம், காலம் அவனை, அவனுடைய படைப்புகளைப் பொக்கிஷமாகத் தன் இதயத்தில் பாதுகாத்து வைக்கிறது.

அப்படி காலம் போற்றும் கலைஞர்களில் இந்தியத் துணைக்கண்டத்திலேயே தலைசிறந்த படைப்பாளியான சாதத் ஹசன் மண்ட்டோ மிக முக்கியமானவர். உருது இலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான மண்ட்டோ தன்னை அழித்து தன் படைப்புகளை உருவாக்கியவர். 1912 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பிறந்த அவருடைய நூற்றாண்டு இதோ துவங்கியிருக்கிறது. ஆனால் அவருடைய படைப்புகளில் அவர் எதையெல்லாம் பற்றி எழுதியிருந்தாரோ அந்தத் துயரங்கள் எல்லாம் தீர்ந்து விடவில்லை. மாறாக இன்னும் அபாயகரமாகியிருக்கிறது. மதவெறியெனும் பைத்தியக்காரநோய் விடுதலை அடையும் முன்னரே ஒன்றாகவிருந்த இந்தியாவைப் பீடித்து விட்டது. பிரித்தாளும் பிரிட்டிஷ் சூழ்ச்சியாலும், சுயநலமிக்க அரசியல் சக்திகளாலும் உரமேற்றி வளர்க்கப் பட்ட அந்த நோய் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது உச்சக்கட்டத்தில் தலைவிரித்தாடியது. சாமானியர்களைக் கபளீகரம் செய்தது. கண்ணில் பட்ட எல்லாவற்றையும் சூறையாடியது. கொள்ளையடித்தது. கொலைகளைச் செய்தது. காட்டுமிராண்டிகளை விட கொடூரமாக தன் சக மனிதர்களையே கொன்று குவித்தது. பெண்களின் உடல் மீது மதச்சின்னங்களை வரைந்து மகிழ்ந்தது. குழந்தைகளைக் காவு கொண்டது. அந்தந்த மதத்தில் இருப்பதைத் தவிர வேறெந்தப் பாவத்தையும் அறியாத சாதாரண மக்களை மதவெறிப்பைத்தியம் தன் பலிபீடத்தில் பலி கொண்டது. அப்போது எந்த தெய்வமும் வந்து யாரையும் காப்பாற்றவில்லை.

மதம் என்ற ஒரு நம்பிக்கைக்காக இத்தனை உயிர்களைப் பலி கொண்ட பிரிவினையின் துயரங்களைப் பற்றி சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளை வாசிக்கும் ஒருவருக்கு மதத்தின் மீதான நம்பிக்கையே போய் விடும். ஆனால் மண்ட்டோவை பிரிவினை காலப் படைப்பாளியாகச் சுருக்கி விடமுடியாது. கொந்தளிக்கும் காலகட்டத்தில் கொந்தளிக்கும் மனதோடு நிலை தப்பி வாழ்ந்த ஒரு படைப்பாளி மண்ட்டோ. அவருடைய முதல் சிறுகதை ’தமாஷா’ ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. அதிலிருந்து துவங்கிய மண்ட்டோவின் இலக்கியப்பயணம் சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடை, திரைக்கதை, என்று தொடர்ந்து கொண்டிருந்தது. யாராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத படைப்பாளியாக மண்ட்டோ இருந்தார் என்பதே அவர் அவருடைய மனசாட்சியின் குரலைப் பின்பற்றினார் என்பதற்கு ஆதாரம். அவருடைய சிறுகதைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் ஏறியிருக்கிறார். அவரைக் கம்யூனிஸ்ட் எழுத்தாளன் என்று அரசாங்கம் குற்றப்படுத்தியது. செத்துப்போனவர்களைப் பற்றி எழுதிச் சம்பாதிப்பவன் என்றும், ஆணவம் கொண்டவன் என்றும், பிற்போக்குவாதியென்றும், ஆபாசஎழுத்தாளன் என்றும், எல்லாவிதமாகவும் மண்ட்டோ விமரிசிக்கப்பட்டார். இந்த எல்லாவிமரிசனங்களையும் புறங்கையினால் தள்ளி விட்டு உண்மையை உரத்துச் சொன்ன கலைஞன் மண்ட்டோ.

1936 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உயிர்த் துடிப்போடு இயங்கி வந்தார் மண்ட்டோ. அதுவரை மேட்டுக்குடி மக்களின் வியர்வைப்புழுக்கத்தையே இலக்கியமாகக் கருதியிருந்த நிலையில் மண்ட்டோ அவருடைய படைப்புகளில் சாதாரண அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல்தொழிலாளிகள், என்று சாமானியர்களின் வாழ்வை, அவர்கள் படும் அவலங்களை வலுவாக வாசகமனம் அதிரும்படி சொன்னவர். சமன்குலைந்த சமூகத்தில் சமன் குலையச்செய்யும் எழுத்தே உண்மையான எழுத்து. அப்படிப்பட்ட சமன் குலையச் செய்யும் எழுத்துகளே வாசகனைத் தொந்திரவு செய்து இந்த நிலை மாற ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டுகிறது. மாண்ட்டோ தன் வாழ்நாள் முழுவதும் எல்லாஅதிகாரங்களையும் எதிர்த்தவன். நிறுவனக்களுக்கு எதிரானவன். நிறுவப்பட்ட எல்லாகருத்துகளுக்கும் எதிராகக் கலகம் செய்தவன். எப்போதும் சாதாரண அடித்தட்டுமக்களின் பக்கமே நின்று குரல் கொடுத்தவன்.

சுதந்திரப்போராட்டகாலத்தில் இந்திய சமூகத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதற்கான வரலாற்று ஆவணமே மண்ட்டோவின் படைப்புகள். சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் பிளவுண்ட இந்து, முஸ்லீம், சமூகமக்கள் எப்படியெல்லாம் மன அலைக்களிப்புகளூக்கு ஆளானார்களோ அத்தனை அலைக்களிப்புகளுக்கும் மண்ட்டோவும் ஆளானார். அதனால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிலிருப்பதா அல்லது பாகிஸ்தானுக்குப்போவதா என்ற மனப்போராட்டத்தில் இருந்தார். இறுதியில் பாகிஸ்தானுக்குச் சென்ற அவரை சுதந்திரபாகிஸ்தானும் அவருடைய படைப்புகளின் வெக்கை தாளமாட்டாமல் அடிக்கடி நீதிமன்ற கூண்டில் ஏற்றியது. ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை வாசிக்கும் போது மண்ட்டோ மனம் கொதித்துப் போவார். அவருடைய கொந்தளிப்பை மதுவே கொஞ்சம் சமனப்படுத்தியது. சுமார் இருநூற்றைம்பது சிறுகதைகளுக்கும் மேல் எழுதிய மண்ட்டோவின், மிகச்சிறந்த சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகளைத் தொகுத்து மொழிபெயர்த்து அருமை நண்பர் ராமாநுஜம் தமிழில் மண்ட்டோ படைப்புகள் என்ற பெரும் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார். தமிழிலக்கியத்துக்கு ராமாநுஜம் பெருங்கொடை அளித்துள்ளார் என்றால் மிகையில்லை.

இதோ மண்ட்டோவின் கதைகள் என் முன்னே விரிகின்றன. மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப்பைஜாமாவும் குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நாற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். கையில் எழுதும் அட்டையுடனும் பேனாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயந்தவரல்ல. அவருடைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். ’காலித்’தின் மும்தாஜ், ’அவமானத்தில்’ வரும் பாலியல்தொழிலாளி ஜமுனா, தன் மகளைத் தேடிக் கண்டடையும் ’ திற” வில் வரும் சிராஜூதின், ’சிவப்பு நிறமழைக்கோட்டணிந்த பெண் ‘ணில் வரும் ஓவியக்கலைஞர் மிஸ். எஸ், ‘மோஸலில்” வரும் மோஸல், குருமூக்சிங்கின் கடைசி விருப்பத்தில் வரும் குருமூக்சிங், எத்தனையெத்தனை கதாபாத்திரங்கள் மண்ட்டோவின் ரத்தத்திலிருந்து உருவானவை. சமூக அவலங்களைக் கண்டு அவருடைய துயரப்பெருமூச்சாய் வெளிவந்தவை. நம் மனசாட்சியை உலுக்கி நம் உறக்கம் கெடுப்பவை. எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற மொண்ணைத்தனத்தின் மீது சவுக்கடி கொடுப்பவை. மண்ட்டோ கலைந்த தன் தலைமுடியைக் கோதி விடுகிறார். அருகில் உள்ள பீரோவிலிருந்து விஸ்கியை எடுத்து ஒரு மிடறு விழுங்குகிறார். மறுபடியும் யோசித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கல்லறைக்குறிப்பை எழுதவே அவர் உட்கார்ந்திருக்கிறார். எத்தனையோ முறை மருத்துவர்கள் அவருக்குத் தேதி குறித்தார்கள். ஆனால் எப்போதும் கலகம் செய்வதைப் போல மரணத்திடமும் கலகம் செய்து தப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருக்குத் தெரியும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ரெம்ப நாளைக்கு நீடிக்காது என்று. எவ்வளவு நாளைக்கு நீடிக்கமுடியுமோ அவ்வளவு நாளைக்குத் தள்ளிப்போடலாமே என்று முடிவு செய்திருந்தார். அவ்வப்போது அவர் இருமும்போது ரத்தமும் சேர்ந்து வருகிறது.. சாதத் ஹசன் என்ற மனிதனை, அவனுடைய சிந்தனைகளை, செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள், யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை, தன் ஊனை உருக்கி, உயிரைச் செலுத்தி, அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது. அது மண்ட்டோவுக்கும் தெரியும். அதனால் தான் அவன் தன்னுடைய கல்லறைக்குறிப்பை தான் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே எழுதமுடிந்திருக்கிறது.

” இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்ட்டோ.. அவனுடன் சிறுகதை கலையின் அனைத்து மர்மங்களும், கலைத்திறமும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான். “

கடந்த இருபதாண்டுகளில் மீண்டும் ஜாதியும் மதமும் தங்கள் பைத்தியக்காரத் தொற்றுநோயைப் பரப்பி வருகின்றன. அடையாளங்கள் மீதான மோகம் பெருகி வருகிற காலமாக இருக்கிறது நம் காலம். ஒரே சமயத்தில் உலகமயமாக்கல் எல்லாவற்றையும் சந்தைமயமாக்குவதற்காக பன்முகஅடையாளங்களை அழிக்க முயற்சிப்பதும், அதே நேரம் சனாதனம் காலாவதியாகிப் போன பழைய அடையாளங்களைப் புணருத்தாரணம் செய்யவுமான முயற்சிகள் நடக்கின்றன. இந்த நேரத்தில் மண்ட்டோ மிக முக்கியமாகத் தேவைப்படுகிறார். மனிதத்திற்கு எதிராக போர் தொடுப்பவர்களோடு போரிட மண்ட்டோவின் படைப்புகளே நமக்கு பேராயுதம். அந்த ஆயுதங்களை நாம் தரித்துக் கொள்வோம். அந்த ஆயுதங்களை நமக்குப் படைத்தளித்த மண்ட்டோவைப் போற்றுவோம். மண்ட்டோவின் நூற்றாண்டில் அவர் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்போம்.மண்ட்டோமாமா நீங்கள் உங்கள் படைப்புகளில் சிந்திய ரத்தம் வீணாகாது. வீணாகாது. வீணாகாது. எங்கள் மண்ட்டோமாமா!

நன்றி- மீடியா வாய்ஸ்

Tuesday, 1 May 2012

கடவுளின் பணியைச் செய்து கொண்டு…… –சாதத் ஹசன் மாண்டோ

Manto-02  

தமிழில்- உதயசங்கர்

 

நான் இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள குஜராத் மாநிலம் கத்தியவாரிலிருந்து வந்திருக்கிறேன். பனியா வகுப்பைச் சேர்ந்தவன். பரம்பரையாக வியாபாரம்செய்து வருகிறவன்.கடந்த வருடம் பிரிவினையின் போது உலகமே தலைகீழாக, தாறுமாறாக, குழப்பமடைந்த போது நான் தற்காலிகமாக கொஞ்சநாள் என் தொழிலிருந்து விலகியிருந்தேன். கஞ்சா விற்பனையில் கொஞ்சம் சம்பாதித்ததைத் தவிர.

ஆயிரக்கணக்கான அகதிகள் இங்கேயிருந்து அங்கும், அங்கேயிருந்து இங்கும் குடியேற ஆரம்பித்தனர். ஒரு நாள் நானும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதென்று முடிவு செய்தேன். அங்கே செய்வதற்கு ஏதாவது இருக்கும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். கஞ்சா இல்லையென்றால் வேறு ஏதாவது. நான் கிளம்பி விட்டேன் நான் அங்கே போவதற்கு சிறிது காலம் பிடித்தது. ஆனால் முடிவில் எப்படியோ சமாளித்து விட்டேன். போகும்போது கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டே.

பாகிஸ்தானில் தொழில் செய்வதற்காகவே குடியேறியிருப்பதால் நான் சூழ்நிலையைக் கவனமாக பரிசீலனை செய்தேன். அப்போது இந்துக்கள் கைவிட்டு விட்டுச் சென்ற சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. எங்கு வேண்டுமானாலும் நுழைந்து விடும் திறமையும், மனிதர்களோடு சுலபமாகப் பழகி விடும் இயல்பும் எனக்கு இருந்ததால் அங்கே சரியான இடங்களில் சரியான நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டேன். மிக விரைவிலேயே என் பெயரில் ஒரு வீடு ஒதுக்கப் பட்டது. நான் உடனடியாக அதை விற்று அந்த விற்பனையில் நல்ல பணம் சம்பாதித்தேன். இது நம்பிக்கைக்குரிய தொழிலாகத் தெரிந்தது. நான் ஒரு நகரத்திலிருந்து இன்னோரு நகரத்திற்கு இடம் பெயர ஆரம்பித்தேன். அங்கே எனக்கு ஒதுக்கப்படும் சொத்துக்களை அதற்கான பத்திரங்கள் கிடைத்ததும் எவ்வளவு சீக்கிரம் விற்று விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விற்றேன்.

எல்லா வேலைகளுக்கும் கடும் முயற்சி வேண்டும். வாழ்வில் எதுவும் சுலபமில்லை. அதனால் நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கமுடியும் என்று நம்பவில்லை. அது ஒரு நிரந்தரமான போராட்டம். சில நேரங்களில் முகப்புகழ்ச்சியே தேவையான வேலைகளைச் செய்து விடும். வேறு சில சமயங்களில் லஞ்சம் அல்லது ஒரு மாலை விருந்து,மாலையில் ஒரு ‘ நல்ல பொழுதுபோக்கு’ கூட நமக்குத் தேவையான வேலைகளைச் செய்து விடும். நான் என்ன தெரிந்து கொண்டேன் என்றால் நான் எப்போதும் ஓடிக் கொண்டேயிருந்தேன். நான் ஒரு நகரத்துக்குச் சென்று அங்கேயுள்ள குடியிருப்பு பகுதிகளை மேற்பார்வையிட்டு, ஒரு நல்ல வீட்டை தேர்ந்தெடுத்து பின்பு அதை எப்படியாவது சொந்தமாக்கிக் கொள்வது என்று செய்து கொண்டிருந்தேன்.

கடின உழைப்பு எப்போதும் நல்ல பலனை பெற்றுத் தரும். எனவே ஒரு வருட காலத்திலேயே அது நடந்தது. எப்படியோ நான் கணிசமான செல்வத்தைக் குவித்து விட்டேன். இப்போது ஒரு மனிதன் நன்றாக வாழ்வதற்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் என்னிடம் இருந்தது. ஒரு அழகிய வீடு, வங்கியில் ஏராளமான பணம், வேலைக்காரர்கள், ஒரு பெரிய கார். வியாபாரச் சொத்துக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

ஆனாலும் எனக்கு அமைதியில்லை. நான் கஞ்சா வியாபாரம் செய்யும் போதும் இப்படியான மன அழுத்தம் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் அதை நான் இப்போது அநுபவித்துக் கொண்டிருப்பதோடு ஒப்புமை சொல்ல முடியாது. நான் ஒரு மிகப் பெரிய சுமையில் கீழ் இருப்பதாக உணர்ந்தேன். அது என்ன என்று என்னால் சொல்லமுடிய வில்லை.

நான் புத்திசாலி. ஏதாவது என்னைத் தொந்தரவு செய்தால் நான் எப்படியாவது அது என்ன என்று கண்டு பிடித்து விடுவேன். அதே போல இப்போதும் அத்ன் ஆழத்திற்குச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தேன். என் மீது என்ன தவறு இருக்கிறது?

பெண்கள்?.. நல்லது. நான் வில்லங்கம் இல்லாதவன். குஜராத்தில் என்னுடைய மனைவியை இழந்து விட்டேன். ஆனால் என்ன? வேறு பெண்கள் இருக்கிறார்களே. உதாரணத்திற்கு என்னுடைய தோட்டக்காரனின் மனைவி. ருசிக்கு எந்தக் காரணமும் தேவையில்லை. இந்த விசயத்தில் நான் நம்புகிற ஒரே விசயம் ஒரு பெண்ணிடம் உள்ள இளமை தான். அவள் படித்திருக்கவேண்டும், அல்லது அவளுக்கு நடனமாடத் தெரியவேண்டும் அல்லது உங்களூக்கு தெரிந்ததெல்லாம் அவளுக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. நான் என்னைப் பற்றித்தான் சொல்லமுடியும். எனக்கு இளமையான பெண்களைப் பிடிக்கிறது. அவ்வளவு தான்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ஒரு புத்திசாலி மனிதன். அதனால் என் வாழக்கையில் ஏதோ ஒன்றை இழந்தமாதிரி உணர்ந்தேன். என்னுடைய தொழில் நன்றாக நடந்தது. என்னுடைய வங்கிக் கணக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே போனது. எனக்காக நிறைய மனிதர்கள் வேலை செய்தார்கள். உண்மையில் நான் எந்தவொரு பெரிய முயற்சியும் எடுக்காமலேயே பணம் வந்து சேர்ந்து கொண்டிருக்கிற நிலைமையை அடைந்து விட்டேன். மிகுந்த சிந்தனைக்குப் பிறகு நான் பதிலைக் கண்டுபிடித்து விட்டேன். நான் அமைதியின்றி இருந்ததற்குக் காரணம் என்னவென்றால் நான் பாகிஸ்தானுக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை.

கத்தியவாரில் இருக்கும் போது நான் என்பங்கிறகு சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு என்னுடைய நண்பன் பாண்டுரெங்கன் இறந்த போது நான் அவனுடைய மனைவியை என்னுடைய வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். அதன் மூலம் குறைந்தது இரண்டு வருடங்களுக்காகவாவது பெண்களின் பழமையான தொழிலில் அவள் ஈடுபடாமல் தடுக்கமுடிந்தது. இன்னொரு நண்பன் விநாயக் அவ்னுடைய மரக்காலை உடைத்துக் கொண்ட போது நான் உடனே அவனுக்கு வேறொன்றை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு நாற்பது ரூபாய் செலவானது. கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் வந்ததிலிருந்து எந்த புண்ணிய காரியத்தையும் செய்யவில்லை. அதனால் தான் என் மனம் அமைதியின்றித் தவித்தது.

நான் என்னென்ன நல்ல காரியங்களைச் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். தருமம் செய்யலாமா? சரி. ஒரு நாள் நகரம் முழுவதும் சுற்றி வந்தேன். நகரம் முழுவதும் நிர்வாணமான பசித்த தரித்திரங்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் உணவும் உடையும் யாருடைய உதவியும் இல்லாமல் கொடுத்தால் என்ன? எல்லோருக்கும் பொது உணவறை ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? அது நடைமுறையில் சாத்தியமில்லை. அதைச் செய்யவேண்டுமானால் ஏராளமான தானியங்களை வாங்க வேண்டும். அது கறுப்புச் சந்தையில் மட்டுமே கிடைக்கும். ஒரு நல்ல காரியத்துக்காக சில ஒழுக்கக் கேடான விசயங்களைச் செய்வதில் என்ன நன்மை இருக்கப் போகிறது?

ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் துயரங்களின் கதைகளையும், துரதிருஷ்டங்களின் கதைகளையும் கேட்டுக் கொண்டு பொழுதைக் கழித்தேன். ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு துயரமான கதை இருந்தது. தெருக்களில் படுத்துறங்கியவர்களுக்கும் பரந்த வெளிகளில் தங்கியிருந்தவர்களுக்கும் விலையுயர்ந்த வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது. நடந்து செல்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவனுக்கு வசதியான புதிய செருப்புகள் இல்லை. காரில் செல்கிறவனும் திருப்தியாகைல்லை. தன்னால் புதிய மோஸ்தர் கார் வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான். உண்மையில் எல்லாப் புகார்களும் உண்மையானவை, நியாயமானவை.

முன்பு ஒரு தடவை சோலாப்பூரின் ஆமினாபாயின் சிடால்கர் பாடிய கஜல் என் நினைவுக்கு வந்தது. ( கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தி அளிக்கட்டும்.) அதிலே ஒரு வரி: யாராலும் இன்னோருவரின் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியாது. அப்படித்தான் நானும் இருந்தேன். உதவி செய்வதற்குத் தயாராக இருந்தேன். ஆனால் உதவி செய்ய முடியாமல் இருந்தேன். இங்கே உதவி தேவைப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். மிகுந்த யோசனைக்குப் பின்னால் நான் தர்மம் செய்வதல்ல இதற்குப் பரிகாரம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் பல அகதிகள் முகாமுக்குப் போய் பார்த்தேன். அங்கே தர்மத்தின் காரணமாகப் பெரும்பாலானவர்கள் சோம்பேறிகளாக இருந்தார்கள். அவர்கள் வேலை செய்வதற்கு விரும்பவில்லை. முகாமுக்குள்ளே நாள் முழுதும் சுற்றிக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டோ அல்லது கிசுகிசுக்களைப் பேசிக் கொண்டோ எப்போதும் இலவசமாக கிடைக்கும் உணவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதை நான் பார்த்தேன். எப்படி இந்தப் பிச்சைக்காரர்கள் பாகிஸ்தானுக்காக ஏதாவது செய்ய முடியும்? தருமம் செய்தல் என்பது நல்ல காரியத்திற்கு அருகில் கூட வர முடியாது என்ற முடிவுக்கு நான் வந்தேன். அப்படியென்றால் என்ன செய்வது?

அன்றாடம் நூற்றுக் கணக்கான அகதிகள் முகாமில் இறந்து கொண்டேயிருந்தார்கள். அடிக்கடி பரவுகிற தொற்று நோயால் நகரத்திலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. நான் ஒரு இலவச மருத்துவமனையைக் கட்டுவதற்கு முடிவு செய்தேன். நான் அதற்கான திட்டத்தை நிறைவு செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டேன். நான் ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பை வெளியிடுவேன். கணிசமான தொகையை ஒப்பந்தங்களுக்கான கட்டணத் தொகையாக வசூலிப்பேன். என்னுடைய சொந்தக் கம்பெனி ஒன்றை நிறுவி அதற்கு கட்டிட ஒப்பந்தத்தைக் கொடுப்பேன். எடுத்துக்காட்டாக ஒரு லட்சம் ரூபாய் ( அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு எழுபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகாது எனவே சுத்தமாக ஒரு முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும் ) கொடுத்து என்னுடைய இலக்கை அடந்து விடுவேன். ஆனால் நான் அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன். ஏனெனில் அவர்கள் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றி விட்டால் என்ன ஆவது? மோசம்! இங்கே மக்கள் தொகை நெருக்கடி உண்டாகி விடாதா? அதை இந்த நாடு எப்படிச் சமாளிக்கமுடியும்?

யோசித்துப் பார்க்கும் போது அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இருப்பது தான் இந்தத் துன்பங்களுக்குக் காரணம் என்று தோன்றியது. மக்கள் தொகையின் அளவு பெருத்துக் கொண்டே போகிறது. ஆனால் நிலத்தில் விளையும் தானியங்களின் அள்வு அப்படியே இருந்தது. மழையாலும் மக்களின் இனவிருத்திவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆகையால் நான், மருத்துவமனை கட்டுவது அர்த்தமில்லாதது என்ற முடிவுக்கு வந்தேன்.

பிறகு எனக்கு மசூதி கட்டும் எண்ணம் வந்தது. கடவுள் சோலாப்பூரின் வயதான ஆமினாபாய் சிடால்கரை அவருடைய சொர்க்கத்தின் அமைதிக்குள் வைத்திருப்பார். ஏனெனில் நீங்கள் உயரேபோன பிறகு உங்கள் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி வழக்கமாக அவள் பாடுவாள். அவள் எப்போதும் பாடுகிற நல்ல காரியங்கள் என்னென்ன தெரியுமா? கிணறு தோண்டுதல், பாலங்கள் கட்டுதல், மசூதிகளை ந்ர்மாணீத்தல். ஆனால் இதுவும் அவ்வளவு நல்லவிசயமாக இல்லை. ஏனெனில் நகரத்தில் ஏராளமான மசூதிகள் இருந்தன. மசூதிகள் நிறைய இருந்தால் நம்பிக்கையாளர்களூக்கும் மதத் தீவிரவாதிகளுக்கும் நிறைய சண்டை நடக்கும். அதில் இன்னும் ஒரு எண்ணிக்கையைக் கூட்ட நான் விரும்பவில்லை.

அதற்குப் பதில் நான் மெக்காவுக்குப் புனிதப் பயணம் போக முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய முடிவை செயல்படுத்த ஆரம்பிக்குமுன்பே கடவுள் எனக்கு ஒரு பதிலைத் தந்து விட்டார். நகரத்தில் ஒரு மக்கள் பேரணி நடந்தது. அது பெருங்குழப்ப்த்தில் முடிந்தது. முப்பது பேர் மிதித்துக் கொல்லப்பட்டார்கள். மறுநாள் காலை பத்திரிகைகளில் அந்த சம்பவம் பிரசுமான போது, அவர்கள் கொல்லப்படவில்லை. தியாகிகளாகிவிட்டார்கள் என்று வந்திருந்தது.

இது என்னைச் சிந்திக்க வைத்தது. நான் பல்வேறு தலைசிறந்த மதப் பண்டிதர்களைச் சந்தித்தேன். அவர்கள் விபத்துகளில் இறப்பவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். ஏனென்றால் அது அவருடைய தவறு அல்ல.எனவே தியாகி என்ற பேறு அவர்களூக்குக் கிட்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள்..ஒவ்வொரு மனிதனும் அடய் விரும்புகிற உன்னத நிலையும் அதுதான் என்று சொன்னார்கள். வெறுமனே சாவதற்குப் பதில் மக்கள் தியாகிகளாகச் சாகலாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது அற்புதமில்லையா? சாதாரணமாக மரணமெய்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முழுக்க மோசம். தியாகம் ஒன்று தான் இந்த அவலவாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தரமுடியும்.

மிக உன்னதமான இந்த விசயத்தைப் பற்றி நான் மேலும் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் சுற்றிலும் பார்த்ததென்ன? கூட்டம் கூட்டமாய் குழி விழுந்த கண்களும், போதிய உணவின்றி மஞ்சள் பாரித்த முகங்களும் ஏழ்மையின் சுமையின்கீழ் நசுங்கி கந்தலான உடைகளோடு பேய்களைப் போல அலைந்து கொண்டிருந்த பரிதாபமான ஜீவன்கள்! குப்பை மேட்டில் வீசப்பட்ட கழிவுப் பொருட்களைப் போல கலகலத்த குடிசைகளில் வாழ்ந்து கொண்டு நகரத்திலுள்ள் கடைவீதிகளிலனாதரவான மிருகங்களைப் போல ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.இந்த மக்கள் எதற்காக உயிர் வாழ வேண்டும்? நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? யாருக்கும் தெரியாது. அங்கே அவர்கள் ஆயிரக்கணக்கில், பசியினாலும், தாகத்தினாலும், குளிரினாலும், வெப்பத்தினாலும், செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? துக்கம் அனுஷ்டிக்கப்படாமலும், நினைவு கொள்ளப் படாமலும் இறந்து கொண்டிருப்பது…

அவர்கள் இறந்த போது அவர்களுக்கு என்ன நடந்தது? எதுவுமே இல்லை. ஆகையால் மிகச் சிறந்த யோசனை எனக்கு தோன்றி விட்டது. நிரந்தரமாக பசியாலும், நோயிலும், வலியிலும், வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மக்கள் ஏன் தியாகிகளாக இறக்கக் கூடாது? இந்த உலகத்தில் அவர்களுக்கென்று ஒரு கௌரவமான இடத்தை அவர்கள் ஏன் அடையக் கூடாது. அவர்களுடைய மெலிந்த முகத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் கூட அவர்களைப் பூஜிப்பார்களே!

கேள்வி என்னவென்றால் இந்த மக்கள் தியாகிகளாவதற்கு விரும்புவார்களா? அவர்கள் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். ஏனெனில் அவர்கள் நல்ல இஸ்லாமியர்கள். நல்ல முஸ்லீம்கள் உயர்ந்த தியாகத்திற்காக எப்போதும் ஏங்கிக் கொண்டிருப்பவர்கள். ஏன் இந்துக்களும் சீக்கியர்களும் கூட இப்போது தியாகத்திற்காக ஆசைப் படுவார்கள். ஆனால் நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன். மெலிந்த தரித்திரன் ஒருவனிடம் ,நான் அவன் தியாகியாவதற்கு விரும்புகிறானா என்று கேட்டேன். அவனுக்கு அப்படி எந்த லட்சியமும் இல்லை என்று சொல்லி விட்டான்.

என்னால் உரிந்து கொள்ள முடியவில்லை. இந்த துரதிருஷ்டப்பிராணி வாழ்ந்து என்ன செய்யப் போகிறான்? நான் அவனிடம் விவாதிக்க முயற்சித்தேன்.

“ பார் நண்பனே! நீயோ வயதானவன். எப்படியிருந்தாலும் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்கு மேல் நீ உயிரோடு இருக்க முடியாது. இப்போது உன்னுடைய பலகீனத்தினால் உன்னால் நடக்கக் கூட முடிய வில்லை. உன்னுடைய குத்திருமலுக்குள் நீ நுழைந்து விட்டால் நீ வெளியே வந்து சேர்வது அதிசயம் தான். உன்னிடம் ஒரு நயாபைசா கூட இல்லை. உன்னுடைய வாழ்நாளில் ஒரு நாள் கூட சுகமாக இருந்ததில்லை. உன்னைப் பொறுத்தவரை இனி எதிர்காலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீ ஏன் வாழ விரும்புகிறாய்? எதற்காக? ராணுவத்தில் சேர முடியாத அளவுக்கு உனக்கு வயதாகி விட்டது இல்லையென்றால் உன்னுடைய நாட்டிற்காக சண்டையிட்டு மடிய உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நீ ஏன் தியாகியாவதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது? “

என்று நான் கேட்டேன். அதற்கு அவன்,

“ எப்படி அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது? “

என்று கேட்டான். உடனே நான் அவனுக்கு விளக்கிச் சொல்ல ஆரம்பித்தேன்.

“ ஒரு வாழைப் பழத்தோல் உனக்கு முன்னால் தரையில் கிடக்கிறது என்று வைத்துக் கொள்.. நீ அதில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து நீ தப்பிக்க முடியாது..என்பது தெளிவு. அப்படி நீ இறந்து தியாகியாகி விடலாம்…”

death ஆனால் அவன் என்னுடைய விளக்கத்தை ஏற்கவில்லை. அதற்குப் பதில் அவன்,

“ நீ என்ன என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டாயா? நானே என்னுடைய கண்களைத் திறந்து கொண்டு வாழைப் பழத்தோலில் விழுவேனா? எனக்கு வாழ ஆசையில்லையா என்ன? “

என்று சொன்னான். கடவுளே! இந்தத் துரதிருஷ்டம் பிடித்த எலும்புக்கூடு தான் அப்படிச் சொல்லியது. அவன் வாழ்ந்து கொண்டிருந்தததாக அவன் நினைத்தான்.

அவனுடைய பேச்சு எனக்கு வருத்தமளித்தது. அதை விட வருத்தமளித்த விசயம் என்னவென்றால், மிகச் சுலபமாக தியாகியிருக்கவேண்டியவன் அதற்கு இரண்டு நாட்களூக்குப் பின்னால் தர்மாஸ்பத்திரியில் இரும்புக் கட்டிலில் இருமிக் கொண்டே செத்துப்போனான் என்பது தான்.

பிறகு அங்கே அந்தப் பெண். வாயில் பற்களில்லை. வயிற்றில் குடலே இல்லை. அவளைப் பார்க்கும் போது அவளூடைய இறுதி மூச்சை எப்போது வேண்டுமானாலும் அவள் விட்டு விடுவாள் என்று தோன்றியது. நான் அவளுக்காக மிகுந்த பரிதாபப் பட்டேன்.அவளுடைய வாழ்நாள் முழுவதும் துயரத்திலும் ஏழ்மையிலும் கழித்திருந்தாள். நான் என் கைகளில் அவளைத் தூக்கி ரயில் தண்டவாளங்களின் மீது படுக்க வைத்தேன். ஆனால் ரயில் வருகிற சத்தத்தைக் கேட்டவுடனே ஸ்பிரிங் பொம்மை போல துள்ளியெழுந்து ஓடியே போய் விட்டாள்.

என் இதயம் நொறுங்கி விட்டது. ஆனாலும் நான் விடவில்லை.நான் சத்தியத்தின் குறுகலான நேர்வழியைக் கண்டு கொண்டேன். அதனால் நான் அதிலிருந்து சுலபமாக விலகிச் செல்ல மாட்டேன்.

முகலாய மன்னர்கள் காலத்திய ஒரு பழைய கட்டிடம் நகரத்தில் இருந்தது. அங்கே நூற்று ஐம்பத்தியோரு சிறிய அறைகள் இருந்தன. அனுபவமிக்க என்னுடைய கண்களால் ஒரே பார்வையில் முதல் பெரிய மழை ஏற்கனவே ஒழுகிக் கொண்டிருக்கும் கூரையைத் தகர்த்து விடும் என்று மதிப்பிட்டு விட்டேன். நான் சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். அதை வீடில்லாத ஓரு ஆயிரம் பேருக்கு வாடகைக்கு விட்டேன். மாதம் ஒரு ருபாய்க்கு மேல் வாடகை வாங்க வில்லை. இரண்டு மாதங்களுக்கு நான் வாடகையைப் பெற்றுக் கொண்டேன். முன்பு நான் மதிப்பிட்ட மாதிரியே மூன்றாவது மாத ஆரம்பத்தில் நகரத்துக்கு முதல் மழை வந்தது. கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்து எழுநூறு ஆண்கள், பெண்கள், குழந்தைகளைத் தியாகிகளாக்கி விட்டது.

என்னுடைய இதயம் லேசாகி விட்டது. இப்போது இந்த உலகத்தில் எழுநூறு பேருக்கு உணவு உடை தேவையில்லை. அதை விட பெரிய விசயம் அவர்கள் எல்லோரும் தியாகிகளாகி சொர்க்கத்திற்குப் போய் விட்டார்கள்.

என்னுடைய இந்த நல்ல வேலை தொடர்ந்தது. என்னுடைய முயற்சிகளினால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் தியாகத்தின் இனிய பானத்தை அருந்தாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. எல்லா வேலைகளுக்கும் உழைப்பு தேவைப் படுகிறது. சோலாப்பூரின் வயதான ஆமினா பாய் சிடால்கர் எப்போதும் பாடுவதைப் போல.. அது போகட்டும்.. என்னால் அந்த வார்த்தைகளை நினைவு படுத்தமுடியவில்லை. என்னுடைய புனிதமான இலக்கை அடைவதற்கு நான் மிகுந்த பிரயாசைப் பட வேண்டியதிருந்தது என்று சொல்வது போதுமானது. ஒரு துரதிருஷ்டசாலி இருந்தான். அவனுடைய வழியில் பத்து முறை வாழைப் பழத் தோலை வீசியும் அவனை சொர்க்கத்திற்கு அனுப்ப முடியவில்லை. எப்படியோ மரணத்தைப் போல தியாகமும் முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகிறது போலும். ஒரு நாள் அவன் குளீயலறையில் வழுக்கி விழுந்து மேன்மையான தியாகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டான்.

இப்போது நான் மிகப்பெரிய வசிப்பிடக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான கட்டிட ஒப்பந்தத்தை என்னுடைய சொந்தக் கம்பெனி எடுத்திருக்கிறது. குறைந்தது எழுபத்தைந்தாயிரம் ரூபாயாவது லாபம் ஈட்டி விடலாம் என்பதில் ஊறுதியாக இருக்கிறேன். கட்டிடத்தை காப்பீடும் செய்திருக்கிறேன். மூன்றாவது மாடி உயரும்போது மொத்தக் கட்டிடமும் இடிந்து சரியும் என்று மதிப்பிட்டிருக்கிறேன். அதற்காகவே தரம் குறைவான பொருட்களையே நான் பயன் படுத்தியிருக்கிறேன். கட்டிட வேலைக்காக அமர்த்தப் பட்டுள்ள முந்நூறு பணியாளர்களுக்கு யோகம் தான். ஒருவர் கூட உயிர் பிழைக்க முடியாது. ஆனால் உடனே நிரந்தரமான தியாகவுருவை அடைவார்கள்.

ஒருவேளை சிலர் அதில் பிழைப்பார்களேயானால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்கள் பாவிகள். அன்பும் கருணையும் கொண்ட கடவுள் அவர்களை மேன்மையான தியாகநிலைக்கு அநுமதிக்க விரும்பவில்லை என்று அர்த்தம்.

நன்றி- நற்றிணை காலாண்டிதழ்