Showing posts with label முஸ்லீம். Show all posts
Showing posts with label முஸ்லீம். Show all posts

Monday, 16 August 2021

மானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்டோ

 


மானுட மனசாட்சியின் உரத்தகுரல் சாதத் ஹசன் மண்டோ

உதயசங்கர்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சாதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி இப்படி எழுதி வைத்திருந்தார்,

“ இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்டோ. அவனுடன் சேர்ந்து சிறுகதைக்கலையின் அத்தனை மர்மங்களும், கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன், கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்..”

தன்னுடைய கலையின் மீது எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால் இத்தனை கர்வத்துடன் எழுதமுடியும் அதுதான் சாதத் ஹசன் மண்டோ. உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆசியக்கண்டத்தின் ஈடு இணையற்ற எழுத்தாளருமான சாதத் ஹசன் மண்டோ 1912-ஆம் ஆண்டு மே மாதம் 11 – ஆம் தேதி பஞ்சாபிலுள்ள லூதியானா மாவட்டத்திலுள்ள சம்ராலா என்ற நகருக்கு அருகிலுள்ள பாப்ரௌடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்த பணக்கார வியாபாரிகள். மண்டோவின் தாத்தா பாஷ்மானியா என்று சொல்லப்படும் காஷ்மீரில் வீடுகளில் வளர்க்கப்படும் சங்தாங்கி ஆடுகளின் கம்பளிரோமங்களை வாங்கி விற்கும் வியாபாரியாக இருந்தார். பின்னர் அமிர்தசரஸை நோக்கி குடும்பம் குடிபெயர்ந்தது. மண்டோவின் அப்பா மௌல்வி குலாம் ஹசன் தீவிரமான மத அபிமானியாக இருந்தார்.  அவர் இரண்டு திருமணம் முடித்து மொத்தம் 12 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். மண்டோ மௌல்வி குலாம் ஹசனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தார். மண்டோ தன்னுடைய மூத்த சகோதரர்களிடம் மிகுந்த பயபக்தியுடன் இருந்தார். ஏனெனில் அவர்கள் அவரைவிட வயது மிகவும் மூத்தவர்களாக மட்டுமல்ல நன்கு படித்தவர்களாகவும் இருந்தார்கள். மண்டோவின் அப்பா கண்டிப்பானவர். சம்ராலாவின் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மண்டோவின் அப்பாவுக்கு கத்தியைப் போன்ற கூர்மையான நாக்கும் கண்டிப்பான வழிமுறைகளும் கொண்டிருந்தார். அதனால் மண்டோ அப்பாவைக் கண்டு எப்போது பயந்து கொண்டேயிருந்தார். அவரிடம் ஏற்பட்ட கலகக்குணத்துக்கு அவருடைய அப்பா ஒரு காரணமாக இருக்கலாம். அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மண்டோ.  மற்ற குடும்பத்தினருடன் அவ்வளவு நெருக்கமாக இல்லை.

மண்டோவின் அப்பா மண்டோ கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும், மண்டோவின் மற்ற சகோதரர்களைப் போல வெளிநாடு சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மண்டோவிடம் வளர்ந்து வரும் மதஈடுபாடின்மையையும், மரியாதையின்மையையும் கண்டு மனம் வெதும்பினார். மண்டோவுக்கு வழக்கமான பள்ளிக்கல்வியில் ஈடுபாடில்லை. அவர் இண்டர்மீடியட்டில் இரண்டு முறை தோற்றுப்போனார். அதிலும் குறிப்பாக பின்னாளில் உருது இலக்கியத்தில் சாதனைகள் செய்த மண்டோ உருது மொழிப்பாடத்தில் தோல்வியடைந்தது முரண்நகை. இந்தத் தோல்வியின் விளைவாக அவர் சிற்றின்பக்கேளிக்கைகளில் முழுமூச்சாக இறங்கினார். 1930 – களின் துவக்கத்தில் சூதாட்டம், புகைபிடித்தல், கஞ்சா, சோம்பிக்கிடத்தல், போன்றவற்றில் மூழ்கிக்கிடந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக முஸாவர் பத்திரிகையின் ஆசிரியரான அப்துல் பாரி அலியுடனான சந்திப்பு 1933 – ல் மண்டோவின் இருபத்தியோராம் வயதில் நிகழ்ந்தது.  அவருடன் சேர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அறிமுகமானது. பாரி அலி மண்டோவைச் சந்தித்தபோதே அவருடைய திறமையைக் கண்டு கொண்டார். அவர் மண்டோவின் புரட்சிமோகத்தை இலக்கியத்தின் பக்கம் திசை திருப்பினார். அவருக்கு ருஷ்ய இலக்கியத்தையும் பிரெஞ்சு இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி ஈடுபாடு கொள்ள வைத்தார். ஆஸ்கார் வைல்டு, மாப்பாசான், விக்டர் ஹியுகோ போன்றவர்களின் கலைத்திறனை அறிமுகப்படுத்தினார். எழுத்தின் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற பாதையையும் அவர் காட்டிக் கொடுத்தார். அவர் உடனே லூதியானாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினசரியான மாசாவாத் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அதில் மண்டோ புரட்சிகரக்கவிதைகளையும், கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் செய்யத் தொடங்கினார்.

விக்டர் ஹியுகோவின் The last days of a condemned man என்ற நாடகத்தை உருதுவில் மொழிபெயர்த்தார். அதை லாகூரிலுள்ள லாகூர் புக் ஸ்டோர் என்ற நிறுவனம் ஒரு கைதியின் கதை என்ற பெயரில் வெளியிட்டது. அதன் வெற்றியினால் அவர் ஆஸ்கர் வைல்டின் வேரா அல்லது நிகிலிஸ்டுகள் என்ற நாடகத்தை 1934 –ல் மொழிபெயர்த்தார். அந்த நாடகம் அவருக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னாளில் அவர் அந்த நாட்களைப் பற்றி எழுதும்போது அவரும் அவருடைய நண்பர்களும் அமிர்தசரசின் வீதிகளில் நடந்து போகும்போது ஏதோ மாஸ்கோவில் புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களைப் போல உணர்ந்ததாக எழுதினார். மாவீரன் பகத்சிங்கும் அவரை மிகவும் பாதித்திருந்தார். மண்டோ ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரியாகவும் சோசலிஸ்டாகவும் வளர்ந்தார். பின்னாளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமே கூட அவருடைய படைப்புகளின் மீது விமரிசனங்களை வைத்தபோதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

பாரி அலி மண்டோவை அவருடைய சொந்தப்படைப்புகளை எழுதும்படி வற்புறுத்தினார். மண்டோ மிகவிரைவிலேயே திறமையான எழுத்தாளராகப் பரிணமித்தார். அவருடைய முதல் கதையாகச் சொல்லப்படுகிற தமாஷா என்ற கதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டது.

அவருடைய பாலியகால நண்பரொருவரின் வற்புறுத்தலினால் அலிகாரிலுள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சேர்ந்தார். வழக்கம்போல அங்கே அவரால் மாணவனாக சோபிக்கமுடியவில்லை. ஆனால் அங்கேயிருந்த ஒன்பது மாதங்களில் ஏராளமான கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.

மண்டோவுக்கு அப்போது இருபத்திமூன்று வயதிருக்கும். அவருக்கு காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நெஞ்சுவலியைக் குறைப்பதற்காக அவர் நாட்டுச்சாராயத்தை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். ஆனால் போதிய பலன் தராததால் அவர் மலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் இப்போது தான் காஷ்மீருக்குப் போனார். காஷ்மீரும் அந்த மக்களும் அவரைக் கவர்ந்தனர். அங்கே தான் ஒரு ஆடு மேய்க்கும்பெண் மீது அவருடைய முதல் வசந்தம் வீசியது.

அவர் அமிர்தசரஸ் திரும்பி அங்கிருந்து லாகூருக்கு பராஸ் என்ற பத்திரிகையில் நிரந்தரவேலை கிடைத்துப் போனார். ஆனால் அந்தப்பத்திரிகையின் தன்மை அவருக்கு ஒத்துவரவில்லை. 1935 – ல் மும்பைக்கு வேலை தேடி வந்தார். முசாவ்விர் என்ற சினிமா வாராந்திரியின் ஆசிரியராகச் சேர்ந்தார். மண்டோ மும்பையைத் தீவிரமாக நேசித்தார். அதன் அழகும் ஒயிலும் ஸ்டைலும் அவரை அப்படியே ஈர்த்து விட்டன. இரண்டுமுரை மும்பையை விட்டு வெளியேறியிருந்தார். ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை செய்வதற்காக, அது குறுகிய காலம், இரண்டாவது முறை பிரிவினைக்குப் பிறகு நிரந்தரமாக மும்பையை விட்டுப் பிரிந்தார். அவர் சாகும்வரை மும்பையின் மீதான காதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 1935 – 1947 வரையில் மும்பையிலிருந்த மண்டோ முதலில் சினிமா பத்திரிகையாளராக இருந்து பின்னர் இம்பீரியல் சினிமா கம்பெனியின் ஸ்கிரிப்ட் ரைட்டராக சேர்ந்தார். முதலில் அவர் எழுதி வெளியான திரைப்படம் படுதோல்வியடைந்தது. ஒரே நேரத்தில் சினிமா அவருக்கு ஆசைகாட்டவும் ஏமாற்றவும் செய்தது. ஆனாலும் அவர் விடவில்லை.

ஒரு சமயம் அவர் சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டே இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், இடையிடையே ரேடியாவுக்கும் பங்களித்துக் கொண்டிருந்தார். அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 1940 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவதாக 1942 –ல் அவருடைய கட்டுரைத்தொகுப்பு வெளியானது. அதன் பிறகு 1943 ஆம் ஆண்டு அவர் டெல்லிக்குப் போனார். அங்கே இருந்த இரண்டு ஆண்டுகளும் அவருடைய சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஆண்டுகளாக இருந்தன. அவருடைய அம்மாவும் அவருடைய மூத்தமகனும் இறந்து போனார்கள். இந்த இரண்டு இழப்புகளும் அவருக்கு பேரிடியாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்நாள் முழுவதும் இழப்பின் துயரம் தொடர்ந்தது.

ஆல் இண்டியா ரேடியோவில் அப்போது பேர்பெற்ற இயக்குநராக இருந்த பித்ராஸ் புகாரியுடன் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் ஏற்பட்டன. மண்டோவுக்கு மாதாந்திரச்சம்பளம் கிடைத்த வேலை என்பதைத் தவிர மற்றபடி டெல்லியில் மண்டோ மகிழ்ச்சியாக இல்லை. அந்த வேலையைத் துறந்து மீண்டும் மும்பைக்கு வந்தார்.

முதலில் மீண்டும் முசாவ்விர் பத்திரிகையில் சேர்ந்து வேலை செய்து கொண்டே ஃப்ரீலான்சராக திரைப்படங்களுக்கு எழுதினார்.  1943 –ல் மும்பையில் ஃபிலிமிஸ்தான் என்ற படக்கம்பெனியில் சேர்ந்தார். அந்தக்கம்பெணி புகழ்பெற்ற பம்பாய் டாக்கீஸிலிருந்து பிரிந்து வந்த அவருடைய நெருங்கிய நண்பர்களான ஷியாம், அசோக்குமார், சேர்ந்து ஆரம்பித்திருந்தார்கள். அந்தக்கம்பெனிக்காக பல வெற்றிகரமான திரைப்படங்களுக்குக் கதைகளை எழுதினார்.

நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம். தவிர்க்கமுடியாத பிரிவினையை நோக்கி இந்தியா தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மும்பையில் திடீர் திடீரென்று கலவரங்கள் வெடித்தன. 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி நாட்டின் பிரிவினை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மண்டோவின் மனைவியும் குழந்தைகளும் பாகிஸ்தானுக்குப் போய் விட்டனர். மண்டோவுக்கு மும்பையை விட்டுப் போக மனமில்லை. அவர் இந்தியாவில் இருந்து விடவே விரும்பினார். ஆனால் பம்பாய் டாக்கீஸ் நிர்வாகம் இஸ்லாமியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிகழ்வு அவருக்கு முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் திடீரென்று மண்டோ அவருடைய பைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். ஏன் அப்படி அவர் திடீரென்று புறப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உடனே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மண்டோ அவருடைய நினைவோடைக்குறிப்புகளில் மும்பையில் அவருடைய கடைசிநாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை அவருடைய மிக நெருங்கிய நண்பரான புகழ்பெற்ற திரைநட்சத்திரம் ஷியாமுக்கு அர்ப்பணித்திருந்தார்.

” ஒரு நாள் நானும் ஷியாமும் ராவல்பிண்டியிலிருந்து அகதியாக வந்திருந்த ஒரு சீக்கியக்குடும்பத்துடன் இருந்தோம். அங்கே என்ன நடந்தது என்று அவர்கள் விவரித்ததைக் கேட்டபோது திகைத்துப்போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். அந்தக் கொடூரமான சம்பவங்களைக் கேட்ட  ஷியாம் அழுதுவிட்டான். அவனுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு நான் ஷியாமிடம்,

“ நான் ஒரு முஸ்லீம்.. என்னைக்கொல்லணும்னு உனக்குத் தோணலையா..” என்று கேட்டேன். அதற்கு அவன் இறுக்கமாக

” இப்போது இல்லை.. ஆனால் அவங்க இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்களைச் சொன்ன போது எனக்கு அப்படித் தோன்றியது அப்போது நான் உன்னைக் கொன்றிருப்பேன்..”  என்று சொன்னான். அவனுடைய வார்த்தைகள் என்னை ஆழமாகப் பாதித்தது. அவனைப்போலவே நானும் அவனைக்கொன்றிருக்கமுடியும். அதைப்பற்றி பின்னால் சிந்தித்தபோது இந்தியாவின் மதக்கலவரத்தின் இரத்தப்பாதையின் பின்னாலுள்ள உளவியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. “

கிட்டத்தட்ட இதுவே மண்டோ தன்னுடைய அருமைக்காதலியான மும்பையை விட்டுப்பிரிந்து பாகிஸ்தானுக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பலரும் பலகாரணங்களைச் சொன்னார்கள். புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை வளமாகத் தொடங்கலாம் என்று நினைத்துப் போய் விட்டாரென்றும். எல்லாவற்றையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று போனாரென்றும் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் கைவிட்டுச் சென்ற பெரிய பெரிய மாளிகைகளை இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்ற செய்தியின் அடிப்படையில் மாளிகை கிடைக்கும் என்று போய்விட்டாரென்றும் அவருடைய அருமையான மனைவி, குழந்தைகளைப் பிரிந்திருக்கமுடியாமல் போய் விட்டாரென்றும், அவர் நேசித்த மும்பை சினிமா அவரை விரட்டி விட்ட விரக்தியில் போய் விட்டாரென்றும்,  

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு அவருடைய மறைவு வரை அவர் பாகிஸ்தானில் லாகூரில் இருந்த காலத்தில் மிகத்தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு என்ற விகிதத்தில் எழுதியிருக்கிறார். ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையை முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். பல கதைகள் வெவ்வேறு தொகுப்புகளிலும் திரும்பத்திரும்ப இடம் பெற்றிருக்கின்றன. அந்த நாட்களில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் மீது துயரத்தின் கருநிழல் இரவாய் கவிந்திருக்க எப்போது வெளிச்சம் வரும் என்று யாருக்குமே தெரியாதிருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன், கைக்கும் வாய்க்குமான வறுமையுடன் மனதின் உணர்வெழுச்சிகளைத் தாங்கமுடியாமல் அதீதக்குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் சாதத் ஹசன் மண்டோ.

அவரைத் துரத்திக்கொண்டேயிருந்த பிரமைகளான கரும்பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவும் கொடூரமான கற்பனைக்காட்சிகளிடமிருந்து விடுதலையடையவும்  குடியிடம் சரணடைந்திருக்கிறார். அந்தப் பிசாசுகளை குடி வெற்றிகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநலமருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். எப்போதோ மருத்துவர்கள் அவருக்கு மரணஎச்சரிக்கை செய்து விட்டார்கள். இனி குடித்தால் அவ்வளவுதான். உயிருக்கு உத்திரவாதமில்லை. ஆனால் சாதத் ஹசன் மண்டோவும் குடிக்காமலிருக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு மழுங்கடிக்கப்பட்ட, பாவனையான, போலியான, சமூக அக்கறையை முன்வைத்து எழுதத்தெரியவில்லை. அவருடைய  கூருர்ணவுகள் சமூகத்தின் அவலங்களைப் பார்த்து தங்களுடைய கூர்மைகளால் அவரையே குத்திக்கிழித்தன. அந்தக்காலத்தில் அவர் கேட்ட, பார்த்த, படித்த ஒவ்வொரு சம்பவமும் அவரைக் கூறுபோட்டன. உணர்வெழுச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்வெழுச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமனப்படுத்தியிருக்கிறார். அதற்குக் குடி தேவையாயிருந்திருக்கிறது.

மண்டோவின் வாழ்க்கையை முன்வைத்து இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மண்டோ – நந்திதா தாஸ் இயக்கத்தில் 2018 –ல் வெளிவந்த திரைப்படம். அதில் மண்டோவின் இந்திய-பாகிஸ்தான் வாழ்க்கை சுருக்கமாக ஆனால் மிகவலிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. மண்டோ – இயக்கம் - சர்மட் சுல்தான் கஸூத் ( SARMAD SULTAN KASOOT ) . அந்தத் திரைப்படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படம். தொலைக்காட்சி தொடராக வெளியாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தில் மண்டோவின் பாகிஸ்தான் வாழ்க்கை மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இரண்டு படங்களுமே மண்டோவின் கதாபாத்திரத்தை ஓரளவுக்கு நம் கண்முன்னால் கொண்டு வந்திருக்கின்றன. மண்டோவை வாசிக்கிறவர்கள் அந்தத் திரைப்படங்களையும் பார்க்கும் போது இன்னும் கூட அவருடைய கதைகள் கூடுதல் அர்த்தத்தைக் கொடுக்கும்.

அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம் அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டேயிருந்திருக்கிறது. அதைவிட அதைக் கண்டும் காணாமல் தன்னுடைய சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பொறுப்பின்மை, அவருக்குள் ரௌத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்து கொண்டேயிருந்தது. அதனால் எப்படிச் சொன்னால் இந்த சமூகத்துக்கு உறைக்கும் என்று ஒவ்வொரு கதையிலும் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். எந்தவித அலங்காரமுமின்றி அப்பட்டமாக பச்சையாக எழுதினார் மண்டோ. அப்படி எழுதுவதின் மூலம் மட்டுமே சமூகத்தின் சொரணையை விழிக்கவைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் பொதுச்சமூகம் அவருடைய கதைகளை அப்படிப் பார்க்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திரப்பாகிஸ்தானிலும் ஆறுமுறை அவருடைய கதைகளுக்காக நீதிமன்றத்தில் ஏறி இறங்கியிருக்கிறார். ஒரு முறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் மேல்முறையீட்டில் அதிலிருந்து விடுவிக்கவும் பட்டிருக்கிறார். அப்படி ஒரு சம்பவத்தில்,

“ எழுத்தாளனின் உணர்வுகள் காயப்படும்போது மட்டுமே அவன் தன்னுடைய பேனாவைக் கையிலெடுக்கிறான்.. “ என்று ஒரு நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார்.  அவருடைய காலத்தில் ஒரு பக்கம் அரசாங்கம் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றப்படுத்தியது என்றால் இன்னொருபக்கம் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் மற்ற இலக்கியவாதிகளும் கூட அவரை பிற்போக்குவாதியென்றும் ஆபாச எழுத்தாளரென்றும், இறந்தவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவரென்றும்,  தூற்றியிருக்கிறார்கள். அவருடைய கதைகளைப் பற்றிய விமரிசனங்களுக்கு,

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவனவெல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச்சமூக அமைப்பினையே குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுதான் சிறந்த வழி..

 என்று நெஞ்சுரத்துடன் பதிலளிக்கிறார் மண்டோ. மண்டோ மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்டகாலத்தின் கதைகளை பதிவு செய்தவர். மண்டோ மட்டுமே மனிதனுக்குள் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதைத் தன்னுடைய படைப்புகளில் அந்தக் குரூரத்தை வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார்.  சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள், என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உலகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மண்டோ. அவர்களுடைய வாழ்வின் அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை, வாசகமனம் அதிரும்படி எழுதியர் மண்டோ. சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும் எழுத்தை எழுத்தியவர் மண்டோ. தன்வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தார் மண்டோ. சமூகத்தின் எல்லாவிதமான அதிகாரங்களையும்,  போலித்தனமான ஒழுக்கக்கோட்பாடுகளையும் கேள்வி கேட்டார் மண்டோ.

 அவருடைய படைப்புகளின் கலையுணர்வு ஆக்ரோசமானது ஆனால் கலையின் பூரணத்துவம் கொண்டது. அவருடைய கலையில் கலகக்குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது ஆனால் அதில் கலையின் மகத்துவம் பொங்கிக்கொண்டேயிருந்தது. அவருடைய கலையுணர்வு உரத்தகுரலில் பேசுவது ஆனால் அந்தக்குரலில் பிரச்சாரம் கிடையாது. அவருடைய கலையுணர்வு நேரடியானது ஆனால் நுட்பங்கள் நிறைந்தது. அவருடைய கலையுணர்வு யதார்த்தமானது ஆனால் யாரும் அதுவரை போகாத வழிகளில் சென்றது. அவருடைய கலையுணர்வு வாழ்க்கையின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகமே பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது.

ஒருவகையில் மண்டோவின் எழுத்துகள் பிரிவினை கால இந்திய பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம். நாகரீக சமூகம் நெருக்கடிக்காலங்களில் எப்படி மனிதனுக்குள் இருக்கும் கொடூரகுணங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதற்கான உளவியல் பாடங்கள். குற்றவியலுக்குப் பின்னாலுள்ள சிந்தனைகள், நியாயங்கள் என்று எல்லாவற்றையும் எழுதிப்பார்த்தவர் மண்டோ. அவருடைய படைப்புகளின் வெக்கை நமது சிவில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னையே விசாரணை செய்யத் தூண்டுபவை.

இருபத்திமூன்று வயதில் அவர் முதல் கதையை எழுதினார். அதன்பிறகான இருபது வருடங்களில் இருபத்தியிரண்டு சிறுகதை தொகுப்புகளையும், ஒரு நாவலையும், ஐந்து ரேடியோ நாடகங்களின் தொகுப்பையும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும், இரண்டு நினைவோடைத் தொகுப்புகளையும் தன்னுடைய நாற்பத்திமூன்று வயதுக்குள் எழுதியிருக்கிறாரென்றால் அவருடைய எழுத்தின் வீரியம் நமக்குப் புலப்படும்.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளெல்லாம் மண்டோ பாகிஸ்தான் போனபிறகு எழுதப்பட்டவை. பாகிஸ்தான் சென்றபிறகு அவருடைய மனவெழுச்சியும் சிந்தனைகளும் எப்படியிருந்தன என்பதற்கான சாட்சி. அவருடைய வாழ்க்கையின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்று கூடச் சொல்லலாம்.

மண்டோவுக்கு கிரிக்கெட்டின் மீது காதல் இருந்தது. அவர் இறப்பதற்கு முன்னால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ஏற்கனவே லிவர் சிரோசிஸ் நோயினால் மரணத்தின் விளிம்பிலிருந்த மண்டோ அன்று பத்திரிகையில் ஒரு செய்தியைப் படித்துவிட்டு மன அமைதியின்றி தத்தளித்திருக்கிறார். குஜராத்தில் பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் ஐந்தாறுபேர் கடத்திக்கொண்டு போய் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக குளிர் இரவில் நடுரோட்டில் விரட்டி விட்டிருக்கிறார்கள். அந்த இரவின் குளிரில் அவளும் குழந்தையும் விரைத்து செத்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாசித்த மண்டோ வீட்டை விட்டு வெளியேறியவர் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அவர் வீட்டுக்கு வந்ததும் ரத்தவாந்தி எடுத்திருக்கிறார். அதைப்பார்த்த அவருடைய சகலை ஹமீது ஜலாலின் மகனிடம், இது  வெத்திலை எச்சில் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிறுவனும் யாரிடமும் சொல்லவில்லை. நள்ளிரவில் படுக்கையில் வலியும் வாந்தியும் எடுத்து மனைவியை அழைத்துச் சொன்னபிறகுதான் மருத்துவர் அழைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் அவருடைய நிலைமையைப் பார்த்து உதட்டைப் பிதுக்க, மண்டோவின் இறுதிக்கணங்கள் தொடங்கி விட்டன.  கல்லறையில் குளிர்வதைப்போல குளிர்கிறது என்று சொன்ன மண்டோ இரண்டு போர்வைகளால் போர்த்திக்கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு பெக் விஸ்கியைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார். கொஞ்சம் விஸ்கியை வாங்கிவந்து ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றினார்கள். இரண்டாவது ஸ்பூன் வாயிலிருந்து வெளியே வழிந்து விட்டது. உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். ஹமீது ஜலால் எழுதும்போது, பொறுப்பற்ற ஆட்டங்களை ஆடிய மண்டோவிற்கு பலமுறை அவுட் கொடுக்காமலிருந்த கடவுள் கடைசியில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று விரலை உயர்த்தி அவுட் கொடுத்து விட்டாரென்று எழுதுகிறார்.

அவருடைய கதைகளை உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் பலர் பலவிதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்னும் மொழிபெயர்க்கப்படாத ஒரு நாவல் உட்பட ஏராளமான படைப்புகள் இருக்கின்றன. மண்டோவே பல கதைகளை, தொகுப்புகளை, பலபதிப்பாளர்களிடம் அன்றைன்றையத் தேவைக்காக விற்றிருக்கிறார். அதனால் தான் பல விதமான வேறுபட்ட தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் வாழ்ந்தபோது தன்னுடைய எழுத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மண்டோ அவருடைய மனைவி சஃபியா மண்டோவிடம்

“ நான் ஏராளமாக எழுதியிருக்கிறேன். நான் இறந்தாலும் நீ வசதியாக வாழலாம்.. என்று சொல்லிக் கொண்டேயிருப்பார் ஆனால் உண்மையில் பதிப்பாளர்கள் அவர் எல்லாவற்றுக்கும் பணம் வாங்கி விட்டாரென்று சொல்லி கையை விரித்து விட்டனர்…என்று அவருடைய மூத்தமகள் நுஸாத் மண்டோ சொல்கிறார்…மண்டோ இறந்தபோது அவருடைய மகள்களான நிஹாத் மண்டோ, நுஸாத் மண்டோ, நஸ்ரத் மண்டோ ஆகியோருக்கு முறையே ஒன்பது, ஏழு, ஐந்து வயது தான் பூர்த்தியாகியிருந்தது. சஃபியா மண்டோ தனியே அவர்களை வளர்த்து ஆளாக்கினார். மண்டோ தன்னுடைய கதைகளை எழுதியதும் முதலில் சஃபியாவிடம் தான் வாசித்துக்காட்டுவார். தன்னுடைய குடும்பத்தினர் மீது அளவு கடந்த பிரியம் கொண்டிருந்த மண்டோ அதைவிட ஆழமான பிரியத்தை இந்த சமூகத்தின் மீது வைத்திருந்தார். அது தான் அவருக்கு வரமாகவும் சாபமாகவும் அமைந்தது.

இந்தத் தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் மண்டோவின் கலைமேதைமையை உணர்த்தக்கூடியவை. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ரக்‌ஷானந்த ஜலீல் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த நிர்வாணக்குரல்கள் தொகுப்பிலிருந்தும், சில கதைகள் காலித் ஹசன் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த ராஜ்யத்தின் முடிவு என்ற தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. மண்டோ அசாதாரணத்தையே கதையாக்குகிறார். யாரும் பார்க்கத் துணியாத காட்சிகள், யாரும் பார்த்திராத கதாபாத்திரங்கள் யாரும் யோசித்திராத சம்பவங்கள், என்று கதைப்பின்னலில் எல்லோரும் சாதராணமாகத் தவறவிடுகிற அல்லது அலட்சியப்படுத்திச் செல்கிற அல்லது அருவெறுப்பு கொள்கிற வாழ்வின் சித்திரங்களை நுண்மையாகச் சித்தரிக்கிறார். இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அசாதாரணமானது. பிஸ்மில்லா என்ற விசித்திரமான பெயர் கொண்ட பெண்ணின் கதையின் மர்மம் கடைசியில் விலகும்போது ஏற்படும் அதிர்வின் அலை நம்மை நடுங்கச்செய்யும். ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமான உணர்வை ஆற்றுப்படுத்துகிற காட்சி மிகவும் நுட்பமானது. மெழுகுவர்த்தியின் கண்ணீர் பாலியல் தொழிலாளியின் ஒரு இரவின் இருளில் ஒற்றைக்கண்ணாய் எரியும் மெழுகுவர்த்தியின் ஒளி வரையும் சோகச்சித்திரம். நிர்வாணக்குரல்களில் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான காமத்தின் குரல்களை ஒன்றுபோல மொட்டைமாடியில் சாக்குகள் சுற்றிலும் திரையாகக் கட்டப்பட்ட கட்டில்கள் புலம்புகின்றன. விசித்திரமான அந்த வாழ்நிலைக்கு எல்லாரும் பழகிவிட அதைக்கண்டு அஞ்சி ஓடி மனநிலை பிறழ்கிற கதாபாத்திரம் வாழ்வின் குரூரத்தைச் சொல்கிறது.

தோற்றுக்கொண்டேயிருப்பவன் கதையில் ஒரு பாலியல் தொழிலாளியைக் காப்பாற்றுவதாகக் கொள்ளும் பெருமை மீது இறுதியில் கொடுக்கும் அடி தடுமாறச்செய்கிறது. காமத்தின் கடும் அவஸ்தையில் பாலியல் விடுதிக்குச் செல்ல நினைக்கும் ஒருவனின் மனச்சஞ்சலங்களும் அவஸ்தைகளும் மண்டோ என்ற இலக்கியாளுமையின் வரிகளில் சாக்கடையான சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிறது. சூபிகளின் கோவில்களில் நடக்கும் குழந்தைப்பேறு நேர்த்திக்கடன்களும் அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளை கோவிலில் கொடுத்துவிட்டு வரும் ஒரு பெண்ணின் மன அவஸ்தை. யாசித் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் நடந்த ராஜீய ரீதியிலான மறைமுக யுத்தத்தைப் பற்றிய கதை. இஸ்லாமிய புராணத்திலிருந்த ஒரு வில்லன் கதாபாத்திரம் எப்படி மாறுகிறது என்பது தான் இந்தக்கதை. மிகவும் புகழ்பெற்ற தோபாதேக்சிங் கதையை வாசிக்கும்போது நாம் வாழும் இந்த நிலத்துக்கு என்ன அர்த்தமிருக்கிறது என்ற கேள்வி எழாமல் போகாது. மனதை அதிரவைக்கும் கதை. கேள்விக்குறியான கௌரவம் கதையில் வரும் மீசை மம்மது பாயைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறார்கள், ஆனால் அந்த மம்மது பாய் ஏன் அழுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிற கதை. எல்லாக்கதைகளும் துல்லியமான விவரனைகளுடன், நேர்த்தியான கதைசொல்லலுடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதைமைக்குச் சான்று. மண்டோவின் இருநூற்றைம்பது கதைகளில் தமிழில் இதுவரை ஐம்பது கதைகளுக்குள் தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். அவருடைய அத்தனை கதைகளும் நாவலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும் போது மண்டோவின் மகாமேதைமை இன்னும் சூரியனாய் பிரகாசிக்கும்.

மண்டோவின்  சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. அவரை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே சிவில் சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டுணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். எல்லாரும் சகோதரத்துவதுடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்கவேண்டும்.

 மீண்டும் மீண்டும் மண்டோவை வாசிப்போம்.

 முன்னெப்போதையும் காட்டிலும் மண்டோ இன்று தேவைப்படுகிறார்.

நன்றி - புக் டே

 

Sunday, 22 February 2015

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்!

 

உதயசங்கர்

gandhi

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மகாத்மா காந்தி மீது மதன்லால் பாவா என்ற மதவெறியன் குண்டு வீசிக் கொல்ல முயன்றான். அதிலிருந்து மயிரிழையில் தப்பிய காந்தி கொஞ்சமும் பதட்டமடையாமல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார். ஆனால் அது தான் அவருடைய கடைசி பிரார்த்தனை கூட்டம் என்று அவருக்குத் தெரியாது. அதைப்பற்றி காந்தியுடன் இருந்த ஒரு அரசியல் தலைவர், “ பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் பைத்தியக்காரத்தனமான செயல் “ என்று கூறினார். அதைக் கேட்டு சிரித்த காந்தி, “ முட்டாள்.. இதற்குப் பின்னால் விரிந்து பரந்த சதி இருப்பது உனக்குத் தெரியவில்லையா? “ என்று கூறினார். அவர் கூறிய படியே அதற்கடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சே என்ற இந்து மதவெறியன் அண்ணலை சுட்டுக் கொன்றான். ஒன்றிரண்டு தடவையல்ல. மகாத்மாவைக் கொல்ல கிட்டத்தட்ட பத்து முறை முயற்சித்திருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டிலிருந்தே கொலை முயற்சிகள் தொடங்கி விட்டன. காந்தியும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் “ இதுவரை கொலை முயற்சியிலிருந்து ஏழுமுறை எனது உயிர் காப்பாற்றப்பட்டது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விடப்போவதில்லை. நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிரோடு வாழ்வேன்..” என்று கூறினார். கோட்சே இதற்கு, ” ”அதுவரை உங்களை யார் உயிருடன் விட்டு வைக்கப்போகிறார்கள். என்று பார்த்து விடுவோம்.” என்று தான் நடத்தி வந்த அக்ரானி பத்திரிகையில் பதிலளித்திருந்தான்.

அது உண்மையில் நடந்தேவிட்டது. ஜனவரி 30 ஆம் தேதி மாலை அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படேலிடம் காந்தி பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்று கூறி விடை கொடுத்தனுப்பி விட்டு புறப்பட்டார். பேத்தி ஆவாகாந்தியும், மருமகள் மனுகாந்தியும் இரண்டு பக்கங்களிலும் தோள் கொடுக்க தேசத்திற்காக தன்னையே உடல் பொருள் ஆவி அனைத்தையுமே ஈந்து தன்னையே சத்திய சோதனைக்களமாக மாற்றிய நைந்து போன உடலுடன் கூடிய அந்த வயதான முதியவர் பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. நேரம் மாலை 5.10 மணி. அப்போது காந்திக்கு முன்னால் முப்பத்தைந்து வயது இளைஞன் நின்று தன் உடலை வளைத்து வணங்குகிறான். மகாத்மாவும் பதில் வணக்கம் சொல்கிறார். அந்த இளைஞன், “ இன்று பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதல்லவா? “ என்று கேட்கிறான். காந்தி பதில் சொல்வதற்கு முன்னால் அவனுடைய உள்ளங்கைகளில் முளைத்த துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக பாய்கின்றன. காந்தியின் இதயத்துக்குக் கீழேயும் வயிற்றுக்குக் கீழேயும் குண்டுகள் பாய்ந்தன. ஹே ராம்.. என்ற சப்தத்துடன் காந்தி விழுந்தார். அந்தக் கணமே அவருடைய உயிர் பிரிந்தது.

காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்?

தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.

காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.

மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.

காந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை. ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார். இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.

தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 67 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.

புத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதீத பாவன சீதாராம்

ஈசுவர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்.

இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.

ஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே

எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

அவரால்

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்?

நன்றி – வண்ணக்கதிர் 22-02-15

Tuesday, 1 May 2012

கடவுளின் பணியைச் செய்து கொண்டு…… –சாதத் ஹசன் மாண்டோ

Manto-02  

தமிழில்- உதயசங்கர்

 

நான் இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள குஜராத் மாநிலம் கத்தியவாரிலிருந்து வந்திருக்கிறேன். பனியா வகுப்பைச் சேர்ந்தவன். பரம்பரையாக வியாபாரம்செய்து வருகிறவன்.கடந்த வருடம் பிரிவினையின் போது உலகமே தலைகீழாக, தாறுமாறாக, குழப்பமடைந்த போது நான் தற்காலிகமாக கொஞ்சநாள் என் தொழிலிருந்து விலகியிருந்தேன். கஞ்சா விற்பனையில் கொஞ்சம் சம்பாதித்ததைத் தவிர.

ஆயிரக்கணக்கான அகதிகள் இங்கேயிருந்து அங்கும், அங்கேயிருந்து இங்கும் குடியேற ஆரம்பித்தனர். ஒரு நாள் நானும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதென்று முடிவு செய்தேன். அங்கே செய்வதற்கு ஏதாவது இருக்கும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். கஞ்சா இல்லையென்றால் வேறு ஏதாவது. நான் கிளம்பி விட்டேன் நான் அங்கே போவதற்கு சிறிது காலம் பிடித்தது. ஆனால் முடிவில் எப்படியோ சமாளித்து விட்டேன். போகும்போது கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டே.

பாகிஸ்தானில் தொழில் செய்வதற்காகவே குடியேறியிருப்பதால் நான் சூழ்நிலையைக் கவனமாக பரிசீலனை செய்தேன். அப்போது இந்துக்கள் கைவிட்டு விட்டுச் சென்ற சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. எங்கு வேண்டுமானாலும் நுழைந்து விடும் திறமையும், மனிதர்களோடு சுலபமாகப் பழகி விடும் இயல்பும் எனக்கு இருந்ததால் அங்கே சரியான இடங்களில் சரியான நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டேன். மிக விரைவிலேயே என் பெயரில் ஒரு வீடு ஒதுக்கப் பட்டது. நான் உடனடியாக அதை விற்று அந்த விற்பனையில் நல்ல பணம் சம்பாதித்தேன். இது நம்பிக்கைக்குரிய தொழிலாகத் தெரிந்தது. நான் ஒரு நகரத்திலிருந்து இன்னோரு நகரத்திற்கு இடம் பெயர ஆரம்பித்தேன். அங்கே எனக்கு ஒதுக்கப்படும் சொத்துக்களை அதற்கான பத்திரங்கள் கிடைத்ததும் எவ்வளவு சீக்கிரம் விற்று விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விற்றேன்.

எல்லா வேலைகளுக்கும் கடும் முயற்சி வேண்டும். வாழ்வில் எதுவும் சுலபமில்லை. அதனால் நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கமுடியும் என்று நம்பவில்லை. அது ஒரு நிரந்தரமான போராட்டம். சில நேரங்களில் முகப்புகழ்ச்சியே தேவையான வேலைகளைச் செய்து விடும். வேறு சில சமயங்களில் லஞ்சம் அல்லது ஒரு மாலை விருந்து,மாலையில் ஒரு ‘ நல்ல பொழுதுபோக்கு’ கூட நமக்குத் தேவையான வேலைகளைச் செய்து விடும். நான் என்ன தெரிந்து கொண்டேன் என்றால் நான் எப்போதும் ஓடிக் கொண்டேயிருந்தேன். நான் ஒரு நகரத்துக்குச் சென்று அங்கேயுள்ள குடியிருப்பு பகுதிகளை மேற்பார்வையிட்டு, ஒரு நல்ல வீட்டை தேர்ந்தெடுத்து பின்பு அதை எப்படியாவது சொந்தமாக்கிக் கொள்வது என்று செய்து கொண்டிருந்தேன்.

கடின உழைப்பு எப்போதும் நல்ல பலனை பெற்றுத் தரும். எனவே ஒரு வருட காலத்திலேயே அது நடந்தது. எப்படியோ நான் கணிசமான செல்வத்தைக் குவித்து விட்டேன். இப்போது ஒரு மனிதன் நன்றாக வாழ்வதற்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் என்னிடம் இருந்தது. ஒரு அழகிய வீடு, வங்கியில் ஏராளமான பணம், வேலைக்காரர்கள், ஒரு பெரிய கார். வியாபாரச் சொத்துக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

ஆனாலும் எனக்கு அமைதியில்லை. நான் கஞ்சா வியாபாரம் செய்யும் போதும் இப்படியான மன அழுத்தம் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் அதை நான் இப்போது அநுபவித்துக் கொண்டிருப்பதோடு ஒப்புமை சொல்ல முடியாது. நான் ஒரு மிகப் பெரிய சுமையில் கீழ் இருப்பதாக உணர்ந்தேன். அது என்ன என்று என்னால் சொல்லமுடிய வில்லை.

நான் புத்திசாலி. ஏதாவது என்னைத் தொந்தரவு செய்தால் நான் எப்படியாவது அது என்ன என்று கண்டு பிடித்து விடுவேன். அதே போல இப்போதும் அத்ன் ஆழத்திற்குச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தேன். என் மீது என்ன தவறு இருக்கிறது?

பெண்கள்?.. நல்லது. நான் வில்லங்கம் இல்லாதவன். குஜராத்தில் என்னுடைய மனைவியை இழந்து விட்டேன். ஆனால் என்ன? வேறு பெண்கள் இருக்கிறார்களே. உதாரணத்திற்கு என்னுடைய தோட்டக்காரனின் மனைவி. ருசிக்கு எந்தக் காரணமும் தேவையில்லை. இந்த விசயத்தில் நான் நம்புகிற ஒரே விசயம் ஒரு பெண்ணிடம் உள்ள இளமை தான். அவள் படித்திருக்கவேண்டும், அல்லது அவளுக்கு நடனமாடத் தெரியவேண்டும் அல்லது உங்களூக்கு தெரிந்ததெல்லாம் அவளுக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. நான் என்னைப் பற்றித்தான் சொல்லமுடியும். எனக்கு இளமையான பெண்களைப் பிடிக்கிறது. அவ்வளவு தான்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ஒரு புத்திசாலி மனிதன். அதனால் என் வாழக்கையில் ஏதோ ஒன்றை இழந்தமாதிரி உணர்ந்தேன். என்னுடைய தொழில் நன்றாக நடந்தது. என்னுடைய வங்கிக் கணக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே போனது. எனக்காக நிறைய மனிதர்கள் வேலை செய்தார்கள். உண்மையில் நான் எந்தவொரு பெரிய முயற்சியும் எடுக்காமலேயே பணம் வந்து சேர்ந்து கொண்டிருக்கிற நிலைமையை அடைந்து விட்டேன். மிகுந்த சிந்தனைக்குப் பிறகு நான் பதிலைக் கண்டுபிடித்து விட்டேன். நான் அமைதியின்றி இருந்ததற்குக் காரணம் என்னவென்றால் நான் பாகிஸ்தானுக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை.

கத்தியவாரில் இருக்கும் போது நான் என்பங்கிறகு சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு என்னுடைய நண்பன் பாண்டுரெங்கன் இறந்த போது நான் அவனுடைய மனைவியை என்னுடைய வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். அதன் மூலம் குறைந்தது இரண்டு வருடங்களுக்காகவாவது பெண்களின் பழமையான தொழிலில் அவள் ஈடுபடாமல் தடுக்கமுடிந்தது. இன்னொரு நண்பன் விநாயக் அவ்னுடைய மரக்காலை உடைத்துக் கொண்ட போது நான் உடனே அவனுக்கு வேறொன்றை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு நாற்பது ரூபாய் செலவானது. கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் வந்ததிலிருந்து எந்த புண்ணிய காரியத்தையும் செய்யவில்லை. அதனால் தான் என் மனம் அமைதியின்றித் தவித்தது.

நான் என்னென்ன நல்ல காரியங்களைச் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். தருமம் செய்யலாமா? சரி. ஒரு நாள் நகரம் முழுவதும் சுற்றி வந்தேன். நகரம் முழுவதும் நிர்வாணமான பசித்த தரித்திரங்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் உணவும் உடையும் யாருடைய உதவியும் இல்லாமல் கொடுத்தால் என்ன? எல்லோருக்கும் பொது உணவறை ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? அது நடைமுறையில் சாத்தியமில்லை. அதைச் செய்யவேண்டுமானால் ஏராளமான தானியங்களை வாங்க வேண்டும். அது கறுப்புச் சந்தையில் மட்டுமே கிடைக்கும். ஒரு நல்ல காரியத்துக்காக சில ஒழுக்கக் கேடான விசயங்களைச் செய்வதில் என்ன நன்மை இருக்கப் போகிறது?

ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் துயரங்களின் கதைகளையும், துரதிருஷ்டங்களின் கதைகளையும் கேட்டுக் கொண்டு பொழுதைக் கழித்தேன். ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு துயரமான கதை இருந்தது. தெருக்களில் படுத்துறங்கியவர்களுக்கும் பரந்த வெளிகளில் தங்கியிருந்தவர்களுக்கும் விலையுயர்ந்த வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது. நடந்து செல்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவனுக்கு வசதியான புதிய செருப்புகள் இல்லை. காரில் செல்கிறவனும் திருப்தியாகைல்லை. தன்னால் புதிய மோஸ்தர் கார் வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான். உண்மையில் எல்லாப் புகார்களும் உண்மையானவை, நியாயமானவை.

முன்பு ஒரு தடவை சோலாப்பூரின் ஆமினாபாயின் சிடால்கர் பாடிய கஜல் என் நினைவுக்கு வந்தது. ( கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தி அளிக்கட்டும்.) அதிலே ஒரு வரி: யாராலும் இன்னோருவரின் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியாது. அப்படித்தான் நானும் இருந்தேன். உதவி செய்வதற்குத் தயாராக இருந்தேன். ஆனால் உதவி செய்ய முடியாமல் இருந்தேன். இங்கே உதவி தேவைப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். மிகுந்த யோசனைக்குப் பின்னால் நான் தர்மம் செய்வதல்ல இதற்குப் பரிகாரம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் பல அகதிகள் முகாமுக்குப் போய் பார்த்தேன். அங்கே தர்மத்தின் காரணமாகப் பெரும்பாலானவர்கள் சோம்பேறிகளாக இருந்தார்கள். அவர்கள் வேலை செய்வதற்கு விரும்பவில்லை. முகாமுக்குள்ளே நாள் முழுதும் சுற்றிக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டோ அல்லது கிசுகிசுக்களைப் பேசிக் கொண்டோ எப்போதும் இலவசமாக கிடைக்கும் உணவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதை நான் பார்த்தேன். எப்படி இந்தப் பிச்சைக்காரர்கள் பாகிஸ்தானுக்காக ஏதாவது செய்ய முடியும்? தருமம் செய்தல் என்பது நல்ல காரியத்திற்கு அருகில் கூட வர முடியாது என்ற முடிவுக்கு நான் வந்தேன். அப்படியென்றால் என்ன செய்வது?

அன்றாடம் நூற்றுக் கணக்கான அகதிகள் முகாமில் இறந்து கொண்டேயிருந்தார்கள். அடிக்கடி பரவுகிற தொற்று நோயால் நகரத்திலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. நான் ஒரு இலவச மருத்துவமனையைக் கட்டுவதற்கு முடிவு செய்தேன். நான் அதற்கான திட்டத்தை நிறைவு செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டேன். நான் ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பை வெளியிடுவேன். கணிசமான தொகையை ஒப்பந்தங்களுக்கான கட்டணத் தொகையாக வசூலிப்பேன். என்னுடைய சொந்தக் கம்பெனி ஒன்றை நிறுவி அதற்கு கட்டிட ஒப்பந்தத்தைக் கொடுப்பேன். எடுத்துக்காட்டாக ஒரு லட்சம் ரூபாய் ( அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு எழுபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகாது எனவே சுத்தமாக ஒரு முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும் ) கொடுத்து என்னுடைய இலக்கை அடந்து விடுவேன். ஆனால் நான் அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன். ஏனெனில் அவர்கள் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றி விட்டால் என்ன ஆவது? மோசம்! இங்கே மக்கள் தொகை நெருக்கடி உண்டாகி விடாதா? அதை இந்த நாடு எப்படிச் சமாளிக்கமுடியும்?

யோசித்துப் பார்க்கும் போது அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இருப்பது தான் இந்தத் துன்பங்களுக்குக் காரணம் என்று தோன்றியது. மக்கள் தொகையின் அளவு பெருத்துக் கொண்டே போகிறது. ஆனால் நிலத்தில் விளையும் தானியங்களின் அள்வு அப்படியே இருந்தது. மழையாலும் மக்களின் இனவிருத்திவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆகையால் நான், மருத்துவமனை கட்டுவது அர்த்தமில்லாதது என்ற முடிவுக்கு வந்தேன்.

பிறகு எனக்கு மசூதி கட்டும் எண்ணம் வந்தது. கடவுள் சோலாப்பூரின் வயதான ஆமினாபாய் சிடால்கரை அவருடைய சொர்க்கத்தின் அமைதிக்குள் வைத்திருப்பார். ஏனெனில் நீங்கள் உயரேபோன பிறகு உங்கள் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி வழக்கமாக அவள் பாடுவாள். அவள் எப்போதும் பாடுகிற நல்ல காரியங்கள் என்னென்ன தெரியுமா? கிணறு தோண்டுதல், பாலங்கள் கட்டுதல், மசூதிகளை ந்ர்மாணீத்தல். ஆனால் இதுவும் அவ்வளவு நல்லவிசயமாக இல்லை. ஏனெனில் நகரத்தில் ஏராளமான மசூதிகள் இருந்தன. மசூதிகள் நிறைய இருந்தால் நம்பிக்கையாளர்களூக்கும் மதத் தீவிரவாதிகளுக்கும் நிறைய சண்டை நடக்கும். அதில் இன்னும் ஒரு எண்ணிக்கையைக் கூட்ட நான் விரும்பவில்லை.

அதற்குப் பதில் நான் மெக்காவுக்குப் புனிதப் பயணம் போக முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய முடிவை செயல்படுத்த ஆரம்பிக்குமுன்பே கடவுள் எனக்கு ஒரு பதிலைத் தந்து விட்டார். நகரத்தில் ஒரு மக்கள் பேரணி நடந்தது. அது பெருங்குழப்ப்த்தில் முடிந்தது. முப்பது பேர் மிதித்துக் கொல்லப்பட்டார்கள். மறுநாள் காலை பத்திரிகைகளில் அந்த சம்பவம் பிரசுமான போது, அவர்கள் கொல்லப்படவில்லை. தியாகிகளாகிவிட்டார்கள் என்று வந்திருந்தது.

இது என்னைச் சிந்திக்க வைத்தது. நான் பல்வேறு தலைசிறந்த மதப் பண்டிதர்களைச் சந்தித்தேன். அவர்கள் விபத்துகளில் இறப்பவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். ஏனென்றால் அது அவருடைய தவறு அல்ல.எனவே தியாகி என்ற பேறு அவர்களூக்குக் கிட்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள்..ஒவ்வொரு மனிதனும் அடய் விரும்புகிற உன்னத நிலையும் அதுதான் என்று சொன்னார்கள். வெறுமனே சாவதற்குப் பதில் மக்கள் தியாகிகளாகச் சாகலாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது அற்புதமில்லையா? சாதாரணமாக மரணமெய்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முழுக்க மோசம். தியாகம் ஒன்று தான் இந்த அவலவாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தரமுடியும்.

மிக உன்னதமான இந்த விசயத்தைப் பற்றி நான் மேலும் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் சுற்றிலும் பார்த்ததென்ன? கூட்டம் கூட்டமாய் குழி விழுந்த கண்களும், போதிய உணவின்றி மஞ்சள் பாரித்த முகங்களும் ஏழ்மையின் சுமையின்கீழ் நசுங்கி கந்தலான உடைகளோடு பேய்களைப் போல அலைந்து கொண்டிருந்த பரிதாபமான ஜீவன்கள்! குப்பை மேட்டில் வீசப்பட்ட கழிவுப் பொருட்களைப் போல கலகலத்த குடிசைகளில் வாழ்ந்து கொண்டு நகரத்திலுள்ள் கடைவீதிகளிலனாதரவான மிருகங்களைப் போல ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.இந்த மக்கள் எதற்காக உயிர் வாழ வேண்டும்? நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? யாருக்கும் தெரியாது. அங்கே அவர்கள் ஆயிரக்கணக்கில், பசியினாலும், தாகத்தினாலும், குளிரினாலும், வெப்பத்தினாலும், செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? துக்கம் அனுஷ்டிக்கப்படாமலும், நினைவு கொள்ளப் படாமலும் இறந்து கொண்டிருப்பது…

அவர்கள் இறந்த போது அவர்களுக்கு என்ன நடந்தது? எதுவுமே இல்லை. ஆகையால் மிகச் சிறந்த யோசனை எனக்கு தோன்றி விட்டது. நிரந்தரமாக பசியாலும், நோயிலும், வலியிலும், வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மக்கள் ஏன் தியாகிகளாக இறக்கக் கூடாது? இந்த உலகத்தில் அவர்களுக்கென்று ஒரு கௌரவமான இடத்தை அவர்கள் ஏன் அடையக் கூடாது. அவர்களுடைய மெலிந்த முகத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் கூட அவர்களைப் பூஜிப்பார்களே!

கேள்வி என்னவென்றால் இந்த மக்கள் தியாகிகளாவதற்கு விரும்புவார்களா? அவர்கள் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். ஏனெனில் அவர்கள் நல்ல இஸ்லாமியர்கள். நல்ல முஸ்லீம்கள் உயர்ந்த தியாகத்திற்காக எப்போதும் ஏங்கிக் கொண்டிருப்பவர்கள். ஏன் இந்துக்களும் சீக்கியர்களும் கூட இப்போது தியாகத்திற்காக ஆசைப் படுவார்கள். ஆனால் நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன். மெலிந்த தரித்திரன் ஒருவனிடம் ,நான் அவன் தியாகியாவதற்கு விரும்புகிறானா என்று கேட்டேன். அவனுக்கு அப்படி எந்த லட்சியமும் இல்லை என்று சொல்லி விட்டான்.

என்னால் உரிந்து கொள்ள முடியவில்லை. இந்த துரதிருஷ்டப்பிராணி வாழ்ந்து என்ன செய்யப் போகிறான்? நான் அவனிடம் விவாதிக்க முயற்சித்தேன்.

“ பார் நண்பனே! நீயோ வயதானவன். எப்படியிருந்தாலும் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்கு மேல் நீ உயிரோடு இருக்க முடியாது. இப்போது உன்னுடைய பலகீனத்தினால் உன்னால் நடக்கக் கூட முடிய வில்லை. உன்னுடைய குத்திருமலுக்குள் நீ நுழைந்து விட்டால் நீ வெளியே வந்து சேர்வது அதிசயம் தான். உன்னிடம் ஒரு நயாபைசா கூட இல்லை. உன்னுடைய வாழ்நாளில் ஒரு நாள் கூட சுகமாக இருந்ததில்லை. உன்னைப் பொறுத்தவரை இனி எதிர்காலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீ ஏன் வாழ விரும்புகிறாய்? எதற்காக? ராணுவத்தில் சேர முடியாத அளவுக்கு உனக்கு வயதாகி விட்டது இல்லையென்றால் உன்னுடைய நாட்டிற்காக சண்டையிட்டு மடிய உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நீ ஏன் தியாகியாவதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது? “

என்று நான் கேட்டேன். அதற்கு அவன்,

“ எப்படி அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது? “

என்று கேட்டான். உடனே நான் அவனுக்கு விளக்கிச் சொல்ல ஆரம்பித்தேன்.

“ ஒரு வாழைப் பழத்தோல் உனக்கு முன்னால் தரையில் கிடக்கிறது என்று வைத்துக் கொள்.. நீ அதில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து நீ தப்பிக்க முடியாது..என்பது தெளிவு. அப்படி நீ இறந்து தியாகியாகி விடலாம்…”

death ஆனால் அவன் என்னுடைய விளக்கத்தை ஏற்கவில்லை. அதற்குப் பதில் அவன்,

“ நீ என்ன என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டாயா? நானே என்னுடைய கண்களைத் திறந்து கொண்டு வாழைப் பழத்தோலில் விழுவேனா? எனக்கு வாழ ஆசையில்லையா என்ன? “

என்று சொன்னான். கடவுளே! இந்தத் துரதிருஷ்டம் பிடித்த எலும்புக்கூடு தான் அப்படிச் சொல்லியது. அவன் வாழ்ந்து கொண்டிருந்தததாக அவன் நினைத்தான்.

அவனுடைய பேச்சு எனக்கு வருத்தமளித்தது. அதை விட வருத்தமளித்த விசயம் என்னவென்றால், மிகச் சுலபமாக தியாகியிருக்கவேண்டியவன் அதற்கு இரண்டு நாட்களூக்குப் பின்னால் தர்மாஸ்பத்திரியில் இரும்புக் கட்டிலில் இருமிக் கொண்டே செத்துப்போனான் என்பது தான்.

பிறகு அங்கே அந்தப் பெண். வாயில் பற்களில்லை. வயிற்றில் குடலே இல்லை. அவளைப் பார்க்கும் போது அவளூடைய இறுதி மூச்சை எப்போது வேண்டுமானாலும் அவள் விட்டு விடுவாள் என்று தோன்றியது. நான் அவளுக்காக மிகுந்த பரிதாபப் பட்டேன்.அவளுடைய வாழ்நாள் முழுவதும் துயரத்திலும் ஏழ்மையிலும் கழித்திருந்தாள். நான் என் கைகளில் அவளைத் தூக்கி ரயில் தண்டவாளங்களின் மீது படுக்க வைத்தேன். ஆனால் ரயில் வருகிற சத்தத்தைக் கேட்டவுடனே ஸ்பிரிங் பொம்மை போல துள்ளியெழுந்து ஓடியே போய் விட்டாள்.

என் இதயம் நொறுங்கி விட்டது. ஆனாலும் நான் விடவில்லை.நான் சத்தியத்தின் குறுகலான நேர்வழியைக் கண்டு கொண்டேன். அதனால் நான் அதிலிருந்து சுலபமாக விலகிச் செல்ல மாட்டேன்.

முகலாய மன்னர்கள் காலத்திய ஒரு பழைய கட்டிடம் நகரத்தில் இருந்தது. அங்கே நூற்று ஐம்பத்தியோரு சிறிய அறைகள் இருந்தன. அனுபவமிக்க என்னுடைய கண்களால் ஒரே பார்வையில் முதல் பெரிய மழை ஏற்கனவே ஒழுகிக் கொண்டிருக்கும் கூரையைத் தகர்த்து விடும் என்று மதிப்பிட்டு விட்டேன். நான் சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். அதை வீடில்லாத ஓரு ஆயிரம் பேருக்கு வாடகைக்கு விட்டேன். மாதம் ஒரு ருபாய்க்கு மேல் வாடகை வாங்க வில்லை. இரண்டு மாதங்களுக்கு நான் வாடகையைப் பெற்றுக் கொண்டேன். முன்பு நான் மதிப்பிட்ட மாதிரியே மூன்றாவது மாத ஆரம்பத்தில் நகரத்துக்கு முதல் மழை வந்தது. கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்து எழுநூறு ஆண்கள், பெண்கள், குழந்தைகளைத் தியாகிகளாக்கி விட்டது.

என்னுடைய இதயம் லேசாகி விட்டது. இப்போது இந்த உலகத்தில் எழுநூறு பேருக்கு உணவு உடை தேவையில்லை. அதை விட பெரிய விசயம் அவர்கள் எல்லோரும் தியாகிகளாகி சொர்க்கத்திற்குப் போய் விட்டார்கள்.

என்னுடைய இந்த நல்ல வேலை தொடர்ந்தது. என்னுடைய முயற்சிகளினால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் தியாகத்தின் இனிய பானத்தை அருந்தாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. எல்லா வேலைகளுக்கும் உழைப்பு தேவைப் படுகிறது. சோலாப்பூரின் வயதான ஆமினா பாய் சிடால்கர் எப்போதும் பாடுவதைப் போல.. அது போகட்டும்.. என்னால் அந்த வார்த்தைகளை நினைவு படுத்தமுடியவில்லை. என்னுடைய புனிதமான இலக்கை அடைவதற்கு நான் மிகுந்த பிரயாசைப் பட வேண்டியதிருந்தது என்று சொல்வது போதுமானது. ஒரு துரதிருஷ்டசாலி இருந்தான். அவனுடைய வழியில் பத்து முறை வாழைப் பழத் தோலை வீசியும் அவனை சொர்க்கத்திற்கு அனுப்ப முடியவில்லை. எப்படியோ மரணத்தைப் போல தியாகமும் முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகிறது போலும். ஒரு நாள் அவன் குளீயலறையில் வழுக்கி விழுந்து மேன்மையான தியாகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டான்.

இப்போது நான் மிகப்பெரிய வசிப்பிடக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான கட்டிட ஒப்பந்தத்தை என்னுடைய சொந்தக் கம்பெனி எடுத்திருக்கிறது. குறைந்தது எழுபத்தைந்தாயிரம் ரூபாயாவது லாபம் ஈட்டி விடலாம் என்பதில் ஊறுதியாக இருக்கிறேன். கட்டிடத்தை காப்பீடும் செய்திருக்கிறேன். மூன்றாவது மாடி உயரும்போது மொத்தக் கட்டிடமும் இடிந்து சரியும் என்று மதிப்பிட்டிருக்கிறேன். அதற்காகவே தரம் குறைவான பொருட்களையே நான் பயன் படுத்தியிருக்கிறேன். கட்டிட வேலைக்காக அமர்த்தப் பட்டுள்ள முந்நூறு பணியாளர்களுக்கு யோகம் தான். ஒருவர் கூட உயிர் பிழைக்க முடியாது. ஆனால் உடனே நிரந்தரமான தியாகவுருவை அடைவார்கள்.

ஒருவேளை சிலர் அதில் பிழைப்பார்களேயானால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்கள் பாவிகள். அன்பும் கருணையும் கொண்ட கடவுள் அவர்களை மேன்மையான தியாகநிலைக்கு அநுமதிக்க விரும்பவில்லை என்று அர்த்தம்.

நன்றி- நற்றிணை காலாண்டிதழ்