Showing posts with label தீக்கதிர். Show all posts
Showing posts with label தீக்கதிர். Show all posts

Saturday, 11 November 2017

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

உதயசங்கர்
” காலத்தின் மனசாட்சி தான் நல்ல இலக்கியம். சமகாலத்துப்பிரச்னைகள், துயரங்கள், சீரழிவுகள், சிதைவுகள், மக்கள் வாழ்வின்னல்கள், பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் உன்னத இலக்கியம் பற்றியெல்லாம் பேனா ஜம்பம் அடிக்கிறவர்களை வெறுக்கக்கற்றுக் கொள்ள வேண்டும் மக்களைப்பற்றிக் கவலைப்படுகிற கலை இலக்கியம் தான் அசலான மக்கள் இலக்கியமாக இருக்க முடியும். “  - பூமாயன் சிறுகதைத்தொகுப்பு முன்னுரையில் மேலாண்மை பொன்னுச்சாமி.
1972- நவம்பர் மாதச்செம்மலரில் பரிசு என்ற சிறுகதையின் மூலம் தன் எழுத்துப்பயணத்தைத் துவக்கிய செ.பொன்னுச்சாமி தன்னுடைய இறுதி நாட்கள் வரை எழுதிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிற மேலாண்மை பொன்னுச்சாமி ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள மேலாண்மறை என்ற குக்கிராமத்திலிருந்து இலக்கியத்துக்குள் அடி எடுத்து வைத்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருடைய பால்யகாலமும் இளமைக்காலமும் அவ்வளவு உவப்பானதல்ல. ஊர் ஊராக சைக்கிளில் சென்று புளி விற்றிருக்கிறார். கருப்பட்டி விற்றிருக்கிறார். கருவாடு விற்றிருக்கிறார்.
வாழ்க்கையோடு மல்லுக்கட்டிக்கொண்டு இடதுசாரித்தோழர்களுடைய தொடர்பினால் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறார். அப்போது ஒன்றாக இருந்த ராமநாதபுரம் மாவட்டச்செயலாளராக செயலாற்றிய தோழர்.எஸ்.ஏ.பி. அவருக்கு ஆசானாக இருந்திருக்கிறார். மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் எழுதி வைத்திருந்த ஒரு குயர் நோட்டை வாசித்து அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். எஸ்.ஏ.பி. வாசித்ததில் இருந்து தேர்ந்தெடுத்து செம்மலருக்கு அனுப்பச்சொல்லி வழிகாட்டியிருக்கிறார். அப்படித்தான் மேலாண்மை பொன்னுச்சாமி என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதித்தார்.
 பெருந்தமிழ் வாசகப்பரப்பிற்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கைப்பாடுகளை, பிரச்னைகளைத் தன்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வெளிப்படுத்துகிற எழுத்தாளுமையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.70-களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை உயர்சாதியினர் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் முடிவுக்கு வரத்தொடங்கியிருந்தது. தமிழிலக்கியம் இதுவரை கண்டிராத புதிய திசைகளிலிருந்து புதிய குரல்கள் புதிய வாழ்க்கைப்பாடுகளைப் பேசத்தொடங்கியிருந்தது. குறிப்பாக நாகம்மாவை எழுதி வட்டார இலக்கியப்போக்கைத் துவக்கி வைத்த ஆர்.ஷண்முகசுந்தரம், வட்டார இலக்கியப்போக்கை ஆழமாக ஏர் பிடித்து உழுது பதமாக்கிய கி.ராஜநாராயணன், தொடர்ந்து பயிர்செய்து படைப்புகளை அறுவடை செய்த  பொன்னீலன், நாஞ்சில்நாடன், பூமணி, என்ற படைப்பாளிகளுக்குப் பின்னால் வறண்ட கரிசல் மண்ணிலிருந்து எளிய மக்களின் குரலாக ஒலித்த குரல் மேலாண்மை பொன்னுச்சாமியின் குரல்.
அதேபோல முற்போக்கு இலக்கியத்தில் தொமுசி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், விந்தன், கு.சி.பா. என்று படைப்பாளிகளின் வரிசையில் தன்னை முற்போக்கு எழுத்தாளன் என்ற பிரகடனத்தோடு இணைத்துக் கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. எழுதி எழுதியே தன்னுடைய எழுத்தைச் செதுக்கியவர். அவரைச்சுற்றி அவர் கண்ட மக்களின் வாழ்க்கை அவருக்குள் ஏற்படுத்திய நெருக்கடியே அவரை எழுதத்தூண்டியது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மக்களின் வாழ்க்கைப்பாடுகளிலிருந்து சற்றும் விலகாமல் தன்னுடைய கதைகளை எழுதியவர்.
மனிதவாழ்வின் அவலங்களை மட்டுமல்ல அவனுடைய உன்னதங்களையும் எழுதிப்பார்த்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. உள்மனிதன் என்ற கதையில் காலை நேர டவுண்பஸ் நெருக்கடி, கோபம், தாபம், வசவுக்காடு, என்று பஸ்ஸே எரிச்சலுடன் நகர்ந்து கொண்டிருக்கும். திடீரென பிரசவவலி வந்த பெண்ணின் அவஸ்தையில் பஸ்ஸே தாயாக மாறி பணிவிடை செய்யும். அந்தப்பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகு மறுபடியும் பஸ் கசகசவென மாறிவிடும். மனிதன் அவசியம் நேரும்போது தன்னுடைய உன்னதத்தைக் காட்டுகிறான். அந்த உன்னததருணத்தை அவனே தாங்க முடியாமல் மறுபடியும் சாதாரணணாகி விடுகிறான். அதேபோல மயிலும் கிளியும் என்ற கதையில் கரிசக்காடுகளில் வெள்ளாமையை அழிச்சாட்டியம் பண்ணுகிற கிளிக்கழுதைகளையும், மயில்ச்சனியன்களையும் விரட்டுவதற்கு அங்கும் இங்கும் ஓடி அம்மா படுகிறபாட்டைப் பார்த்து பரிதவிக்கிற மகன் கிளிகளையும் மயில்களையும் கொல்வதற்காக மருந்து வாங்கி வைக்கிறான். தற்செயலாய் கேட்கிற அம்மாவின் உரையாடலில் பொங்கும் தாய்மையுணர்வு அந்தக்கிளிகளையும் மயில்களையும் கூட தன் பிள்ளைகளைப்போல நினைக்கிற பரிவு அவனிடம் மாற்றத்தை உருவாக்கி விடுகிறது.
. 1970-களில் துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த கே.எம்.முத்தையாவைத் தன்னுடைய ஞானத்தந்தையாக குறிப்பிடுவார் மேலாண்மை. கே.எம்.முத்தையாவின் ஊக்கமும் உற்சாகமும் அவரை நேரடி அரசியலில் இருந்து தீவிர எழுத்துப்பணிக்குத் திருப்பியது. ஒரு நேரத்தில் ஒரே செம்மலரில் மேலாண்மை பொன்னுச்சாமியின் இரண்டு கதைகள் கூட வந்திருக்கின்றன. முற்போக்கு சிறுகதைகள் என்றால் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் முதலில் தோன்றுகிற அளவுக்குத் தன்னுடைய அயராத உழைப்பால் எழுத்துப்பணியைச் செய்தார்.
2.
 70-களில் கோவில்பட்டியில் இருந்த பால்வண்ணம், ஆர்.எஸ்.மணி, தேவப்ரகாஷ், போன்ற நண்பர்களிடம் ஒவ்வொரு மாதமும் செம்மலரில் வெளிவந்த அவருடைய கதைகளைப் பற்றிய கருத்துகளையும் விமரிசனங்களையும் கேட்பதற்காக ஊரிலிருந்து சைக்கிளை மிதித்து வருவாராம். அவர்களும் அவருக்கு டீ,வடை, வாங்கிக் கொடுத்து கடுமையான விமரிசனங்களை அவரிடம் சொல்வார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வாராம். அவர்கள் சொன்னதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த கதையை எழுதி செம்மலருக்கு அனுப்பி வைப்பார். அந்தக் கதை வந்ததும் மறுபடியும் கோவில்பட்டிக்கு வருவார். இப்படி அவர் விமரிசனங்களை விரும்பி வாங்கியிருக்கிறார். அதை அவருடைய அனைத்துத் தொகுப்புகளிலும் கூடப் பார்க்க முடியும். முன்னுரையின் முடிவில்
 “ உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும். நீங்கள் கண்டுணர்ந்து சொல்கிற குறைகளும் கூட என்னைச் செதுக்கி மேலும் கூர்மையாக்கும். இரண்டுமே இலக்கியத்துக்குச் சிறப்பு செய்யும். “
என்று எழுதியிருக்கிறார்.
 அவர்களுக்குப்பின்னால் நேரடியாக புதுமைப்பித்தனிலிருந்து வாசிப்பைத் துவங்கிய என்னைப் போன்றவர்களின் கருத்துக்களையும் விமரிசனங்களையும் கேட்டுக் கொள்வார்.
விமரிசனங்களைக் கண்டு அஞ்சி நடுங்குகிற – விமரிசனங்களைத் தவிர்க்க நினைக்கிற-எழுத்தாளர்கள் மத்தியில் விமரிசனங்களைத் தேடிப்போய் வாங்குகிற எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சாகித்ய அகாடமி விருது பெறுகிற அளவிற்கான படைப்புகளை எழுதியிருக்கிற மேலாண்மையின் அர்ப்பணிப்பு எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் வழி தன்னை ஒரு கதை சொல்லியாக நிலை நிறுத்திக்கொண்டவர். யதார்த்தவாதம், விமரிசன யதார்த்த வாதம், சோசலிச யதார்த்தவாதம், என்ற இலக்கியக்கோட்பாடுகளில் உரத்து நின்று எழுதியவர்.
அவருடைய சிக்கல், சிடுக்குகள் இல்லாத எளிய முறையிலான கதை சொல்லல் தான் அவருடைய பாணி என்று சொல்லலாம். மத்தியதரவர்க்க எழுத்தாளர்களிடம் இருக்கும் ஒருவித எழுத்துப்பாசாங்கு அவரிடம் கிடையாது. நேரிடையாகக் கதை சொல்வார். தான் கண்ட கேட்ட கிராமத்து மனிதர்களைப் பற்றி, ( பூமாயன் ) ஆண் பெண் உறவுச்சிக்கல்களைப் பற்றி ( மன உடைப்பு, விளக்குமாறு ) கிராமங்களில் வாழும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி ( ஊர்ப்பண்பு)  அவருடைய கதைகளில் கையாண்ட விதமும், மனித உணர்வுகளின் பேதங்களை மட்டுமல்ல, உன்னதங்களையும், உணர்ச்சித்ததும்பல்களையும்,உரத்துச்சொன்ன மகத்தான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி. தன்னுடைய படைப்புகளில் கலை அமைதி, வடிவ நேர்த்தி, உள்ளடக்கப்பொருத்தம் என்று பெரிய அளவில் கவலைப்பட்டவரில்லை. உணர்ச்சி கொப்பளிக்கும் நிகழ்வுகள், விவாதங்கள், உரத்துப்பேசும் கரிசல் மனிதர்கள், என்று ஒரு கிராமத்தையே  தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர்.
கல்கி, பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பரந்த வாகசப்பரப்புக்குள் வந்த மேலாண்மை பொன்னுச்சாமி, ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகள் எழுதி பெரும் புகழ் பெற்றார். மானுடம் வெல்லும், சிபிகள், கூரை, உள்மனிதன், பூக்காத மாலை, பூச்சுமை, மானுடப்பிரவாகம், மனப்பூ, மின்சாரப்பூ, பூமாயன், போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறுகதை நூல்களையும், கோடுகள், தழும்பு, மரம், பாசத்தீ, போன்ற குறுநாவல் தொகுப்புகளையும், முற்றுகை, இனி, அச்சமே நரகம், ஊர்மண், போன்ற நாவல்களையும், சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. தான் ஒரு இடது சாரி எழுத்தாளன் என்பதை எந்த ஒரு இடத்திலும் உரத்துப்பேசுகிறவர். எல்லோர் மீதும் மிகவும் உரிமையுடன் பழகுகிற, ஆலோசனை சொல்கிற, ஆலோசனை கேட்கிற எளிய மனிதர்.
1975- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். தமுஎகச அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் ஈடுபாடு காட்டியவர். தமுஎகச வின் தலைவராகவும், துணைப்பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பலமுறை தேர்வு செய்யபட்டவர். முற்போக்கு எழுத்தாளர் படை ஒன்றினை உருவாக்க கடுமையாக உழைத்தவர். எழுத்தும் இயக்கமும் என்று இடையறாது இயங்கியவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். வெகுளித்தனமான அவருடைய உரையாடல் எல்லோரையும் மிக நெருக்கமாக்கிக் கொள்ளும். என்மீது தனிப்பட்ட அக்கறையும் அன்பும் கொண்ட மேலாண்மை பொன்னுச்சாமியிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் ஒரே நேரத்தில் இரண்டு டீ குடிப்பார். வெளிப்படையான வெள்ளந்தியான அவருடைய எளிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தும். இதோ டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். என்னருகில் இருந்த நண்பர் கேட்டார்,
”“ என்ன அதிசயமா அடுத்தடுத்து ரெண்டு டீ குடிக்கிறீங்க?..”
நான் மேலாண்மை பொன்னுச்சாமி என்ற மகத்தான படைப்பாளிக்கு, தமிழ் இலக்கியத்துக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்த எழுத்தாளுமைக்கு விடை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
போய் வாருங்கள் எங்கள் அருமைத்தோழரே!
உங்கள் எழுத்துகளை நாங்கள் இப்பொழுதும் எப்பொழுதும் வாசித்து உங்களை நினைவு கூர்வோம்!
நன்றி - தீக்கதிர் இலக்கியச்சோலை




Wednesday, 8 March 2017

திருட்டு விளையாட்டு

திருட்டு விளையாட்டு

உதயசங்கர்

காட்டூர் நாட்டில் வெகுகாலமாக ராஜா இல்லை. ராஜா என்று ஒருவர் வேண்டும் என்று மக்கள் நினைக்கவும் இல்லை. மக்கள் சபை கூடும். அவர்களுடைய தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வார்கள். யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. யாரும் யாரிடமிருந்தும் திருடவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். காட்டூர் நாட்டுக்குப் பக்கத்தில் திருட்டூர் என்ற நாடு இருந்தது. இரண்டு நாட்டையும் நடுவில் ஒரு காடு பிரித்தது. திருட்டூர் நாட்டில் திருட்டு சாதாரணம். திருடர்கள் திருடிவிட்டு அந்தக்காட்டில் மறைந்து கொள்வார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் காட்டூர் பக்கம் வந்ததில்லை.
 ஒருநாள் திருட்டூரிலிருந்து திருடிவிட்டு காட்டுக்குள் ஒளிந்து ஓடிவந்த நாலுதிருடர்கள் காட்டூர் பக்கமாக வந்து விட்டார்கள். அவர்கள் நான்குபேரில் ஒருத்தன் பேர் பக்கா, இன்னொருத்தன் பேர் முக்கா, மற்றவன் பேர் அரைக்கா, இன்னுமொருவன் பேர் காக்கா. காட்டூருக்குள் நுழைந்த அவர்களுக்கு ஆச்சரியம். ராஜா இல்லை. மந்திரி இல்லை. தளபதி இல்லை. காவலர்கள் இல்லை. பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில் வைத்தமாதிரி இருந்தன. யாரும் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்காத்திருடன் பல்லை இளித்தபடியே சொன்னான்,
” இப்படி ஒரு நாட்டுக்கு நான் ராஜாவானால் எப்படி இருக்கும்?”
என்றான். உடனே முக்காத்திருடன் சிரித்தபடியே,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் மந்திரியானால் எப்படி இருக்கும்? “
என்றான்.  அதைக்கேட்ட அரைக்காத்திருடன் புன்னகையோடு,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் தளபதியானால் எப்படி இருக்கும்?
என்றான். கொஞ்சமும் சிரிக்காமல் காக்காத்திருடன்,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் காவலனானால் எப்படி இருக்கும்?”
என்றான். நான்குபேரும் யோசித்தார்கள். திட்டம் போட்டார்கள். திருட்டூர் நாட்டிலுள்ள சில்லரைத்திருடர்களுக்குத் தகவல் சொன்னார்கள். காட்டூருக்கு வந்தால் நிறையப் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்றார்கள். உடனே சில்லரைத்திருடர்கள் காட்டூரை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். காட்டூர் நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது பக்கா, முக்கா, அரைக்கா, காக்கா, திருடர்கள் வெகுளியான காட்டூர் மக்களிடம் சென்று,
“ உங்களைக் காப்பாற்ற ஒரு தலைவன் வேண்டும், ஆலோசனை சொல்ல ஒரு மந்திரி வேண்டும், காவல்படைக்கு ஒரு தளபதி வேண்டும், காவலுக்கு காவலர்கள் வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நல்லவர்களாக இருக்கிற உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.. எங்களுக்கு நீங்கள் எதுவும் தரவேண்டாம்.. நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறோம்… “
என்றார்கள். காட்டூர் நாட்டு மக்களும் அதைக்கேட்டு மகிழ்ச்சியில் கை தட்டினார்கள். உடனே நான்கு திருடர்களும் சேர்ந்து காட்டூர் நாட்டுக்குள் வந்த சில்லரைத்திருடர்களை விரட்டியடித்தனர். காட்டூர் மக்களும் மகிழ்ந்தனர். பிறகு காட்டூர் நாட்டின் ராஜாவாக பக்காத்திருடன் முடி சூடினான். மந்திரியாக முக்காத்திருடன் பதவி ஏற்றான். தளபதியாக அரைத்திருடன் பதவி ஏற்றான். காவலனாக காக்காத்திருடன் பதவி ஏற்றான். பதவி ஏற்றதும் நான்கு திருடர்களும் சேர்ந்து மக்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒன்றை அறிவித்தனர்.
என்ன விளையாட்டு தெரியுமா? திருட்டு விளையாட்டு. மற்றவர்களுக்குத் தெரியாமல் அடுத்தவர் பொருளை யார் திருடிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பரிசு. என்று முரசறைந்து அறிவித்தனர். அவ்வளவுதான் காட்டூர் நாட்டு மக்கள் ஒவ்வொருத்தரும் ராத்திரியில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் பொருளை எடுத்து மறைத்து வைத்தனர். மறுநாள் அரண்மனைக்குக் கொண்டு போய் தாங்கள் திருடிக் கொண்டு வந்த பொருட்களைக் காட்டி பரிசுகள் பெற்றனர். இப்படியே திருடித்திருடி மக்களுக்கு எந்தப்பொருளையும் நேர்வழியில் வாங்க மறந்தனர். எல்லாவற்றையும் திருடினர். நாடு முழுவதும் ராத்திரியில் விழித்து திருடுவதற்காக அலைந்து கொண்டிருந்தனர். ஒருவர் திருடிய பொருளை மற்றவர் திருடினர். அவர் எடுத்துக் கொண்டு வந்ததை மறுபடியும் இன்னொருத்தர் திருடினார். இப்படியே நாடு முழுவதும் திருட ஆரம்பித்தது.
நான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா? அவர்களும் ராத்திரி முழுவதும் காட்டூர் முழுவதும் அலைந்து திரிந்து திருடினார்கள். பக்காத்திருடனான ராஜா மலைகளைத் தோண்டித் தன்னுடைய அந்தப்புரத்தில் கொண்டு போய் வைத்தான். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாப்பிட்டான். முக்காத்திருடனான மந்திரி  ஆறுகளை பொட்டலங்களாக கட்டி வெளிநாட்டுக்கு விற்றான். அரைத்திருடனான தளபதி நிலங்களை சுருட்டி மடக்கி தன்னுடைய பெட்டிகளில் அடைத்து வைத்தான். காக்காத்திருடனான காவலன் காடுகளில் இருந்த செம்மரங்கள், சந்தன மரங்களை வெட்டி அநுமதிச்சீட்டோடு திருட்டூர் நாட்டுக்குக் கடத்தினான். இப்படி காட்டூரும் திருட்டூராக மாறிக் கொண்டிருந்தது.
எல்லோரும் உழைக்காமல் திருடிக்கொண்டிருந்தால் என்னா ஆகும்?
காட்டூரில் வறுமை குடி வந்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அடித்துக் கொண்டனர். ஆனாலும் இரவில் திருடுவதை நிறுத்தவில்லை. நான்கு திருடர்களும் தினம் நகர்வலம் வரும்போது இதைக் கண்டு ரசித்தனர். காட்டூர் மக்கள் திருடர்களாக மாறியதைக் கண்ட உழைப்புதேவதை வருந்தியது.
மறுநாள் இரவில் நிலா வரவில்லை. சூரியன் உதித்தது. எங்கும் இருளே இல்லை. யாராலும் திருட முடியவில்லை. மறுநாளும் அப்படியே இரவிலும் சூரியனே உதித்தது. ஒருவாரத்துக்குப் பின்னர் மக்கள் தங்களுடைய வேலைகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். இந்த ஒருவாரத்தில் தாங்கள் எப்படியெல்லாம் நடந்திருக்கிறோம் என்று யோசித்தனர். அவமானமாக இருந்தது. உழைப்புதேவதைக்கு நன்றி சொல்லினர். ஆனால் நான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா?
யாரும் உழைக்கக்கூடாது திருடித்தான் வாழவேண்டும் என்று சட்டம் போட்டான் பக்காத்திருடனான ராஜா. அந்த சட்டத்தை மீறினால் என்ன என்ன தண்டனைகள் என்று முரசறைந்து அறிவித்தான் முக்காத்திருடன். அந்தத்தண்டனைகளை நிறைவேற்ற அரைத்திருடனும் காக்காத்திருடனும் ஆயுதங்களோடு தயாரானார்கள்.
இதைக் கண்ட உழைப்பு தேவதைக்குக் கோபம் வந்தது. உழைப்புதேவதை காட்டூர் மக்களின் உடம்பில் புகுந்தது. அவ்வளவு தான் ஆவேசம் கொண்ட காட்டூர் மக்கள் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள். அந்தப்புரத்தில் துண்டு துண்டுகளாகப் பதுக்கி வைத்திருந்த மலைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அந்தந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மலையில் போட்டு புதைத்து விடுவதாக மிரட்டினார்கள். பக்காத்திருடன் பயந்து கொண்டே சரி சரி என்றான்.  முக்காத்திருடன் பொட்டலங்களாக போட்டு வைத்திருந்த ஆறுகளை விடுவித்தனர். காட்டூர் நாட்டில் பெய்யும் மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகி விடாமல் ஆறுகளில் குளங்களில் கண்மாய்களில் குட்டைகளில் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அவனை கரை புரண்டோடும் ஆற்றில் தள்ளி விடுவோம் என்று பயமுறுத்தினர். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். நிலங்களை சுருட்டி மடக்கி வைத்திருந்த அரைத்திருடனைப் பிடித்து நிலங்களை விரித்தனர் அதில் அவன் வருடம் முழுதும் உழுது பயிர் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவனை நிலத்தில் புதைத்து விடுவோம் என்று பயங்காட்டினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். மரங்களை வெட்டிக்கடத்திய காக்காத்திருடனுக்கு காட்டூர் நாடு முழுவதும் கோடி மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவித்தனர். இல்லையென்றால் மரங்களை அவன் பிளந்தது போல அவனைப் பிளந்து விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான்.
இப்போது காட்டூர் நாட்டுமக்கள் உழைக்கின்றனர். மகிழ்ச்சியாகச் சிரிக்கின்றனர். உழைப்புதேவதையும் சிரிக்கின்றாள்.
நன்றி- வண்ணக்கதிர், தீக்கதிர்


Monday, 27 April 2015

வேத காலத்துக்குத் திரும்ப முடியுமா?

 

உதயசங்கர்vedas

 

வேதகாலம் பொற்காலம் என்றும் வேதகாலத்துக்குத் திரும்புவோம் என்றும் பழமைவாதிகளும் இந்து மதவெறியர்களும் இன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே வேதகாலம் பொற்காலமாக இருந்ததா? இப்போது வேதகாலத்துக்கு திரும்பினால் எப்படி இருக்கும்? ஆனால் வேதகாலம் எனப்படுவது என்ன? வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சமுதாயம் எப்படிப் பட்டது? அந்த சமூகவிழுமியங்களை இன்று நடைமுறைப்படுத்த முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகள் நம் முன்னே வரிசை கட்டுகின்றன. வேதங்களின் பெயர்களைக் கூட உச்சரிக்கக்கூடாது; அப்படி உச்சரித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரவேண்டும் என்று மனு தர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு அதை நடைமுறைப்படுத்தவும் செய்திருக்கிறார்கள். அந்தப்படி வேதங்களிலிருந்து விலக்கப்பட்ட பெரும்பான்மையான உழைப்பாளி மக்களான சூத்திரர்கள் இன்று சநாதனவாதிகளின் முழக்கங்களை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேதங்களைப் படிக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் தானே இப்படியெல்லாம் சொல்ல முடிகிறது.

வேதகாலம்

வேதங்களில் மிக முக்கியமானதாக கருதுவது ரிக் வேதம். இதுவே காலத்திற்கு முற்பட்டது. அதாவது கி.மு.2500 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இங்கே இருந்த தஸ்யூக்களை வென்று கி.மு. 1200-1000 ஆண்டுகள் வாக்கில் ரிக் வேதத்தின் ஆரம்ப கால ஸ்தோத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்தோத்திரங்கள் கி.மு.1000- 800 க்குமிடையில் திருத்தி எழுதப்பட்டது. கி.மு.600 வாக்கில் புதுப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டங்களில் அதாவது கி.மு.1000-800 களுக்குமிடையிலேயே சாம, யஜூர் அதர்வ வேதங்களும் உருவாக்கப்பட்டன எனலாம். இந்த வேதங்கள் வந்தேறிகளான ஆரியர்களின் நம்பிக்கைகள், சமூக நிலை, புனைவுகள், கடவுள்கள், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் போன்றவை பற்றிய தொகுப்பு. ஆனால் ஆரியர்கள் நாகரிகத்தில் அதிக முன்னேற்றம் பெற்றிராத இடையர் குலத்தவர். நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்கள் குடியேறிய பகுதியான ஹரப்பா மொகஞ்சோதரா மக்களோ நாகரிகத்தில் மிகவும் முன்னேறியவர்களாகவும், நகர வாசிகளாகவும் இருந்தனர் செப்புக் கருவிகளை பயன்படுத்தினர், என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை சாம, தான, தண்ட, பேதங்களால் வெற்றி கொண்ட ஆரியர்கள் இயற்றியதே இந்த வேதங்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

காலத்தில் முற்பட்ட ரிக் வேதத்தை அடிப்ப்டையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களின் பல பகுதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சாம, யஜூர், அதர்வ வேதங்களின் கால சமூக வாழ்க்கையிலிருந்து ரிக் வேத கால மக்களது சமூகவாழ்க்கை வேறு பட்டிருந்தது. ஆடு, மாடு, மேய்க்கும் நாடோடி வாழ்க்கையிலிருந்து பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் முன்னேறிக் கொண்டிருந்ததை சாம, யஜூர், அதர்வ வேதங்கள் தெரிவிக்கின்றன. வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டு நினைவிலிருத்தப்பட்ட இந்த வேதங்களை கி.பி. 400 ஆம் ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்த ஸாயணாச்சாரியார் என்பவரே எழுதியவர்களில் முக்கியமானவர். யாகம் முதலிய சடங்குகளுக்காக பல சமயங்களில் இயற்றப்பட்டு திருத்தி எழுதப்பட்ட சூக்தங்களின் ( ஸ்லோகங்கள் ) தொகுப்பே இன்றைய வேதங்கள்.

மொத்தமாக நான்கு வேதங்களிலும் சேர்த்து 20358 ஸ்லோகங்கள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் 10,522, யஜூர் வேதத்தில் 1984, சாம வேதத்தில் 1875, அதர்வ வேதத்தில் 5977 உள்ளன. ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்களும் உண்டு. குறிப்பாக வருணம் பற்றிய சுலோகம். மூல புருஷனைப் பலி கொடுத்ததன் மூலம் வருணம் உருவானதாக ஒரு இடத்தில் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. நெற்றிலிருந்து பிராமணரும், தோள்களிலிருந்து ஷத்திரியரும், தொடைகளிலிருந்து வைசியரும், பாதங்களிலிருந்து சூத்திரரும் உருவாக்கப்பட்டனர் என்ற சுலோகம் காலத்தால் பிற்பட்டது என்று மொழியியல் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வருணத்தத்துவத்துக்கு ஒரு பழமையான கருதுகோளை உருவாக்கப் புனைந்த தொன்மப்புனைவு தான் இந்த மூலபுருஷன் கதையும் வருணங்களின் தோற்றம் பற்றிய ஸ்லோகம். அதே போல நாடோடிகளான ஆரியர்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்தில் நுழைந்ததும் ஏற்பட்ட ஆச்சரியமான அதிசயமான உணர்வுகளும் பல ஸ்லோகங்களில் பதிவாகியுள்ளன. அங்கே ஏற்கனவே இருந்த தஸ்யூக்களை வெற்றி கொள்ள இந்திரனை உதவி செய்யுமாறு வேண்டி அழைக்கும் துதிப்பாடல்களின் தொகுப்பே ரிக் வேதம்

யாகச்சடங்குகளுக்கான மந்திரங்கள் அடங்கிய வேதமே யஜூர் வேதம். சொன்னதையைத் திரும்பத் திரும்பச்சொல்வதும் அர்த்தமில்லாத ஒலிக்குறிப்புகள் கொண்டதும் ஆகும். யஜூர் வேதத்தில் உள்ள மந்திரங்களில் நான்கில் ஒரு பகுதி ரிக் வேதத்திலிருந்து பிறந்ததாகும்.

சாம வேதமும் புரோகிதர்கள் வேள்வி நேரத்தில் உச்சரிப்பதற்காக இயற்றப்பட்ட மந்திரங்களே நிறைந்தது. அவற்றில் ஆறுக்கும் குறைவான ஸ்லோகங்களைத் தவிர மற்றவை அப்படியே ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

அதர்வ வேதத்தில் மாந்த்ரீகம் சம்பந்தப்பட்டது. பேய், பிசாசு, நோய் நொடி, வனவிலங்குகளைப் பற்றிய அச்சம் இவைகளைக் கட்டுப்படுத்தவற்காக இயற்றப்பட்ட மந்திரங்கள். அதுமட்டுமல்லாமல் பகைவரை அழிக்க மந்திரம், போர் வெற்றிக்கு மந்திரம், நோய் சாந்திக்கு, குழந்தைப்பேறுக்கு, நீண்ட ஆயுளுக்கு, செல்வம் குவிய என்று பல்வேறு மந்திரங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இன்று அரசியல்வாதிகள், பணக்காரர்கள், தொடங்கி சாமானியர் வரை செய்யும் பெரும்பாலான வேள்விகளில் இந்த மந்திரங்களே ஓதப்படுகின்றன.

இத்தகைய தன்மையுள்ள வேதங்கள் இன்றைய அறிவியல் யுகத்துக்குப் பொருத்தமானது தானா என்று சிந்தியுங்கள்?

வேதகால நாகரிகம்

நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி, ஆரியர்கள் நாடோடிகள். ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள். நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் அவர்களுடைய உற்பத்தி உறவுகள் எப்படி பட்டதாக இருக்கும்? அவர்களுடைய சமூக மதிப்பீடுகள் அவர்களுடைய உற்பத்தி சக்திகளான ஆடு, மாடுகள், நாடோடி வாழ்க்கை இவற்றின் அடிப்படையிலேயே இருப்பது இயற்கை தான். எனவே அவர்கள் வாழ்க்கையில் சோம பானம்( கஞ்சா ) என்கிற போதையூட்டுகிற பானம் மிக முக்கியமானதகிறது. அந்த சோம பானத்தை அவர்களுடைய முக்கியக் கடவுளான இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்துகிற ஸ்லோகங்களும், அப்படி குடித்து திருப்தியடைந்த தேவர்களும் ஆரியர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்கிறவர்களாகவும் மாறுவதைப் பற்றி 120 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் ரிக் வேதத்தில் இருக்கின்றன. அதே போல சுரா பானமும் தானியங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை மதுவாகும். இதைத் தவிர பிராமணர்கள் வேறு மது வகைகளைக் குடிக்கக்கூடாது என்று போதாயன தர்ம சூத்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு பானங்களும் அனுபூதியும், மரணமற்ற சாகாநிலையையும் அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இனக்குழு வாழ்க்கையிலிருந்து அரசுகள் உருவாகிக்கொண்டிருந்தது. நிலப்பிரபுத்துவக்கால கட்டம் நிலை பெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசு என்ற இயந்திரம் உருவாகிக் கொண்டிருந்த போது அரசர்கள் தங்களுடைய நாட்டு எல்லையை விரிவு படுத்த, அருகிலிருக்கும் நாட்டு அரசர்களிடம் அங்கீகாரம் பெறுவதற்கும் நடத்தப்படும் அசுவமேதயாகம். கருநிறஅசுவம் ( குதிரை ) ஒன்றை அவிழ்த்து விட்டு அதை நாடுகளெங்கும் சுற்றி வரச்செய்து அதை யாகவேள்வியில் பலி கொடுத்து, அப்படி பலி கொடுக்கப்பட்ட குதிரையோடு அரசனின் மனைவி புணர்ந்து எழுவதான சடங்குகள் கொண்டது. இந்த மாதிரியான யாகத்தை சில பதிலிகளை வைத்து இப்போதும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது கோமேத யாகம். பசுவைக் கொன்று, கொல்லப்பட்ட பசுவின் கொழுப்பை இறந்து போன முன்னோர்களுக்கு யாகவேள்வியில் அர்ப்பணிப்பத்தும், பசுவின் இறைச்சியை யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பது உண்டு. இன்னும் யஜூர் வேதத்தில் எத்தகைய லட்சணமுள்ள பசுக்களையும் காளைகளையும் எந்தெந்த கடவுள்களுக்கு யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

யஜூர் வேதத்தில் புருஷமேதம் என்று சொல்லப்படுகிற யாகத்தில் நரபலி எப்படிக் கொடுப்பது என்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதன் நடைமுறைகள் அசுவமேதயாகத்திலுள்ள நடைமுறைகளை ஒத்திருக்கும். சர்வ மேதம் என்ற யாகத்தில் விசுவகர்மா யாகம் வளர்த்து ஆத்மவதை செய்து கொள்வதைப் பற்றி விவரிக்கிறது. வாஜபேய யாகத்தில் விலங்குகளைப் பலி கொடுப்பதைப் பற்றியும், எந்தெந்த மிருகங்களை, மிருகங்களின் எந்தெந்தப் பாகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே போல ராஜசூய யாகத்தின் முக்கியமான சடங்கே சூதாட்டம் தான். மகாபாரதம் நினைவுக்கு வருகிறதா?

சமூக உறவுகளைப் பொறுத்த வரை புராதன கால மனித குலத்தின் மதிப்பீடுகளையே கொண்டிருந்தனர். மிருகங்களுடன் ( பெண் ஆடு, கிடா, காளை ) புணர்ச்சியில் ஈடுபவது நல்லது என்று யஜூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல அதர்வ வேதத்திலே சகோதர சகோதரிகளுடன் உறவு கொள்வது, தந்தை மகளுக்கிடையேயான உறவு, பாலியல் வீரியத்தை வேண்டியும், பாலியல் சுகத்தை வேண்டியும், பல ஸ்லோகங்கள் யஜூர்,, அதர்வ வேதங்களில் இருக்கின்றன.

வேதகாலத்தில் பெண்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் இல்லை. அதோடு அவர்கள் சுயசொத்தாகக் கருதப்பட்டார்கள். பெண் ஆணின் அடிமையாகவே கருதப்பட்டாள். வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் இருந்தது.பெண்கள் அறிவில் குறைந்தவர்களாகவும் கருதப்பட்டனர். எனவே பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.

உடைகளைப் பொறுத்தவரை கோவணமும், துண்டும் உடுத்தியதாகவும் மீசை, தாடி, குடுமி உடையவர்களாகவும் இருந்தனர் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆரியர்கள் அசைவர்கள். பசு, குதிரை, ஆடு, எருமை உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, முயல், கண்டாமிருகம், போன்ற மிருகங்களைக் கொன்று சாப்பிட்டனர். பால் தயிர், பால், நெய், போன்ற பொருட்களைப் பயன்படுத்தினர். கோதுமையும், பார்லியும் முக்கிய உணவுப் பொருட்களாக இருந்தன.

ஆரம்ப காலகட்டத்தில் விவசாயம் அறியாத ஆரியர்கள் அவர்கள் வெற்றி கொண்ட ஹரப்பா வாசிகளான தஸ்யூக்களைடமிருந்தே விவசாயத்தைக் கற்றிருக்கலாம் என்று கருதுகிற ஆராயச்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரிக் வேதத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய சடங்குகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன.

அனைத்து நோய்களையும் வேள்விகள் மூலம் குணமாக்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்படி வாழ்க்கையின் எல்லா சமூகவிஷயங்களிலும், மதிப்பீடுகளிலும் மனித குல நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில் மனிதசிந்தனையின் தொடக்க கால கற்பனைகளில் உருவானவையே வேதங்கள்.

எனவே வேதகாலம் என்பது அனைவருக்குமான பொற்காலமாக இல்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேண்டுமானால் அது பொற்காலமாக இருந்திருக்கலாம். மனித குலம் அந்த வேதகாலத்திலிருந்து எவ்வளவோ தூரம் கடந்து வந்து விட்டது. தொழில், அறிவியல், பகுத்தறிவு, வாழ்க்கை மதிப்பீடுகள் என்று என்று வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உலகளாவிய சிந்தனைப்போக்குகளோடு கலந்து உறவாடி புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. வரலாற்றை பின்னோக்கி சுற்றுவது அறிவுடைமை ஆகாது. அதிலும் புராதன நாகரிக கால கட்டத்தை நோக்கி வரலாற்று சக்கரம் சுற்றவும் சுற்றாது. வேதகாலம் திரும்பவும் திரும்பாது. திரும்பவும் கூடாது.

துணை நூல்கள்- 1. வரலாறும் வக்கிரங்களும் –ரொமிலா தப்பர்

2. வேதங்கள் ஓர் ஆய்வு-சனல் இடமருகு

நன்றி- தீக்கதிர்

Sunday, 26 April 2015

மந்திரச்சடங்குகளும் பண்பாட்டு அசைவுகளும்

 

உதயசங்கர்

mulaippaari

ஆதியில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மந்தைகளாக வாழ்ந்தனர். கைகளின் உழைப்பின் வழியே மூளை வளர்ச்சி பெற பகுத்தறிவு பிறந்தது. பகுத்தறிவு வளர இனக்குழுவாக மாறினர். மந்தைகளாக இருந்த போது இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஆதிமனிதர்கள் இனக்குழுவாக மாறிய போது இயற்கையுடன் போராடி தங்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மாற்றத்தொடங்கினர். குகைகளிலிருந்தும் மரப்பொந்துகளிலிருந்தும் வெளியேறி குடியிருப்புகளைக் கட்டிப்பார்த்தனர். விவசாயம், மீன் பிடித்தல், துணி நெய்தல், கால்நடைகளை வளர்த்தல், போன்ற தொழில்களை செய்யத் தொடங்கினர். இயற்கையின் மீதான அவர்களுடைய தலையீடு எப்போதும் சாதகமாக இல்லை. இயற்கையின் இயக்கவியலைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவர்களுடைய பகுத்தறிவோ, அறிவியலறிவோ முதிர்ச்சி பெற வில்லை. எனவே அவர்கள் இயற்கையில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற இறந்து போன அனைத்துப்பொருட்களிலும் ஆவி இருப்பதாக கற்பனை செய்தனர். அந்த ஆவிகள் தான் தங்களின் மீது வினை புரிகிறது என்று நம்பினர். அதனால் அந்த ஆவிகளை வழிபடுவதன் மூலம் தங்களுக்கு தேவையான நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதே போல தங்களுக்குத் தீமை செய்யும் கெட்ட விளைவுகளைக் கட்டுபடுத்தலாம் என்று நினைத்தனர். அதற்காக கற்பனைச்சித்திரங்களை உருவாக்கி அதன் மூலம் புறவயமான யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கருதினர்.

இந்த வழிபாட்டு முறையே மந்திரச்சடங்குகளாக மாறியது. மொழி தோன்றுவதற்கு முன்னால் இந்த ஆதி மந்திரங்கள் வெறும் பாவனையாக மட்டுமே இருந்தது. மந்திரங்களை உருவாக்கியதற்கு ஆன்மீக அல்லது கடவுள் நம்பிக்கை காரணமல்ல. பொருளாதாரக்காரணங்கள் தான். ஆரம்ப காலத்தில் உற்பத்திக்கருவிகளும் திட்ட மிட்ட விளைவுகளை உருவாக்குகிற அளவுக்கு சிறப்பாகவோ, போதுமானதாகவோ இல்லை. எனவே இந்த மந்திரச்சடங்குகள் மனிதர்களின் உளவியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதனால் உழைப்புச்சக்தி அதிகமானது. அதாவது உற்பத்திக்கருவிகளின் போதாமையை இந்த மந்திரச்சடங்குகள் ஈடுகட்டியது. இந்த வகையில் அப்போது மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளின் ஒரு அங்கமாகவே திகழ்ந்தது. மனிதனுடைய பொருளாதார , வாழ்வாதார செயல்பாடுகள் அனைத்திலும் மந்திரச்சடங்குகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.

குழந்தைப்பருவத்தில் இருந்த மனித குலம் காலப்போக்கில் வழிபட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களுக்கும் மனித உருவங்களைக் கற்பனை செய்தது. மனிதன்..குலமரபுச்சின்னங்களை உருவாக்கினான். தொன்மங்களை உருவாக்கினான். அறிவியலறிவின் ஆதிப்பருவத்தில் இருந்த மனிதன் இந்தக் கற்பனையான உருவங்கள் அதீத ஆற்றல் கொண்டவையென நமபத் தொடங்கினான். ஆக ஆரம்பத்தில் மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளோடு உற்பத்திக்கருவியாகவே செயல்பட்டிருக்கிறது.

உற்பத்திக்கருவியாகச் செயல்பட்ட மந்திரச்சடங்குகள் உற்பத்தி சக்திகளைக் ( இயற்கை) கட்டுப்படுத்தி தங்களுக்குத் தேவையான உற்பத்தியைப் பெருக்க முயற்சித்தன. எனவே தான் இத்தகைய மந்திரச்சடங்குகளில் இயற்கையின் செயல்களை ஒத்த செயல்களையே பாவனையாக செய்து வழிபட்டனர். கனடாவில் உருளைக்கிழங்கு வளர்வதற்காக உருளைக்கிழங்குச் செடி எப்படி செழிப்பாக வளர வேண்டும் என்று பாவனை நடனம் ஆடினர். .பிரேசிலில் மழை வேண்டி வாயில் தண்ணீரை வைத்து மழை பொழியும் சத்தம் போல ஒலியெழுப்பவர். பின்னர் கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து வானில் எறிந்து இதோ பார்.. இது போலவே செய்.. என்று சத்தமிடுவார்கள். நமது ஊர்களில் பயிர்கள் செழித்து வளர்வதற்கு நவதானியங்களை விதைத்து முளைப்பாரி வளர்த்து அம்மனை வழிபாடு நடத்துவது, உரக்குழி அம்மன் வழிபாடு, என்று பெரும்பாலும் விவசாய வேலைகள் சார்ந்தே சடங்குகள் இருக்கின்றன. அம்மனை வழிபடுவதற்கான காரணம் புராதன சமூகத்தில் பெண்களே விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் ஆவர். அதுமட்டுமில்லாமல் மனிதகுல உற்ப்பத்திக்கும் காரணமாக இருக்கும் பெண்களைச் செழிப்பின் அடையாளமாகவே புராதன சமூகம் கண்டது. அதே போல தானியங்களைப் பெண்களாக உருவகிப்பதும் பல நாடுகளில் இருக்கிறது.

உழைப்பினோடு இயைந்த மந்திரசடங்குகளில் உடலசைவுகள், அருள் வந்து ஆடுதல், பொங்கலிடுதல், போன்ற சடங்குகளில் ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்ற நம்பிக்கையே தொழிற்படுகிறது. இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் கூட வேளாண்சமூகத்தின் செயல்பாடுகளே பாவனையாகச் செய்யப்படுகின்றன. தீயாற்றுகிற சடங்கின் போது இறந்தவரின் எலும்புகளை எடுத்து வைத்து நவதானியங்களை விதைத்து பயிரிட்டு அவை முளைத்து செழிப்பாக வளர்வதை ஒத்த சடங்குகளை நாம் பார்க்கலாம். உற்பத்திக்கருவிகளைக் கும்பிடுதல், இயற்கையை வழிபடுதல், படையல் வைத்தல் பலியிடுதல், போன்ற செயல்கள் உற்பத்தி சக்திகளை திருப்திப்படுத்துவதாகவும், வேண்டுவதாகவும், கட்டளையிடுவதாகவும் அமைகின்றன. இத்தகையச் சடங்குகள் வேட்டைச்சமூகத்தில் தோன்றி வேளாண்மை சமூகத்தில் வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இனக்குழுக்கள் தங்களுக்குத் தேவையான உற்பத்தியை அதிகரிக்கவே இத்தகைய மந்திரச்சடங்குகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் ஒவ்வொரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளும், பண்பாட்டு சேகரங்களும் கலந்திருக்கும். இந்தச் சடங்குகளை நிகழ்த்த தனியான மந்திரங்கள் பொதுவாக இல்லை. அந்தந்த இனக்குழுவிலுள்ள ஒருவரே இந்தச் சடங்குகளை நிகழ்த்துபவராக இருப்பார். இந்தச் சடங்குகள் நிகழும் காலம் தவிர மற்ற காலங்களில் அவரும் இனக்குழுவில் ஒரு அங்கத்தினராக உழைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பார். இந்த மந்திரச்சடங்குகளில் கூட்டான உளவியல் சக்தி ஓருமுகப்படுத்தப்பட்டு புறவயமான யதார்த்தத்தின் மீது வினை புரிந்து அதை மாற்றுகிறது.

புரோகிதச்சடங்குகள்

இதற்கு மாறாக புரோகிதச்சடங்குகள் எல்லாம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக ரிக் வேதத்திலும், யஜூர், அதர்வ வேதங்களிலும் ஏராளமான யாகவேள்விகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 400 யாகவேள்விகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேதங்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இயற்றப்பட்டவை. நாடோடிகளாக, ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இனம் சிந்து சமவெளியை ஆக்கிரமித்து அங்கிருந்த தஸ்யூக்களோடு சணடையிட்டு நிலைபெறத்தொடங்கிய காலத்தில் தங்களுடைய போர்வெற்றி, பகைவர் அழிவு, பாபச்செயல்கள், நோய் சாந்தி, கருவுறுதல், கருப்பாதுகாப்பு, அன்ன சித்தி, ஐஸ்வரியம், இதையே அஸ்வமேத யாகம், ( ராஜீய அதிகரிக்க நடத்தப்படும் யாகம். இதில் குதிரையைப் பலி கொடுப்பர் ) ராஜசூய யாகம்,( அரசர்கள் தங்கள் மேலாண்மையை சிற்றரசர்களுக்கு அறிவிக்க நடத்தப்படும் யாகம். இந்த யாகத்தில் சூதாட்டம் ஒரு முக்கியமான சடங்கு ) புருஷமேதம்,( நரபலி கொடுக்கும் யாகம்) கோமேத யாகம்,( பசுவைப் பலியிட்டு அதன் பாகங்களை பிராமணர்கள் பங்கிட்டுக் கொள்கிற யாகம்) சர்வ மேதம்,( தானாக முன்வந்து அக்னியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் யாகம் ) சுதர்சன யாகம் ( எதிரிகளை அழிக்கச்செய்யப்படும் யாகம் ) என்று எல்லாயாகங்களிலும் தீ வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி, பால் நெய் போன்ற பொருட்களை தீயிலிட்டு, புரியாத மந்திரங்களை ஓதி தங்களுடைய ஆன்மீகமேலாண்மையை நிலை நாட்டிக் கொண்ட புரோகிதர்களின் காலம் அது. இன்றும் புரோகிதச்சடங்குகள் இன்று பரவலாகி விட்டன. புதுமனைப்புகுவிழாவுக்கு கணபதி ஹோமம், திருமணச்சடங்கு, பெண் பூப்பெய்த தீட்டுக்கழிக்கும் சடங்கு, குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு, இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு என்று வாழ்நாள் முழுவதும் புரோகிதச்சடங்குகள் எல்லோர் குடும்பங்களிலும் நடந்து கொண்டேயிருக்கின்றன. புரோகிதச்சடங்குகளில் எல்லாம் மாடு மிகுந்த முக்கியத்துவம் பெறும். மாட்டு மூத்திரம் இல்லாமல் எந்தச் சடங்கும் இருக்காது. காரணம் அவர்களுடைய வேள்விகளிலெல்லாம் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டு உணவாக்கப்பட்டன. ரிக் வேதப்பாடல்களில் பலியிடப்படும் மாடுகளின் எந்தெந்தப் பகுதிகள் எப்படிப்பட்ட சுவையுடன் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இப்போது நடத்தப்படும் எல்லாச்சடங்குகளிலும் பலிப்பொருட்கள், உயிர்களின் பெயர்களைச் சொல்லும் மந்திரங்கள் இருக்கும். ஆனால் அதற்கு மாற்றாக வேறு பொருட்களை வேள்வியில் இட்டுக் கொள்வார்கள்.

தீ வளர்த்து செய்யப்படும் புரோகிதச்சடங்குகள் எந்த உற்பத்தியோடு தொடர்புடையவை? உற்பத்தியோடு எந்தத் தொடர்புமில்லாத யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படுகின்ற வேத மந்திரங்களின் உண்மையான அர்த்தமே ஆரியர்களின் போரும் அதன் வெற்றியும் ஆக்கிரமிப்பும், பகைவர் அழிப்பும் அவர்களுடைய செழிப்பும் தான். தந்தைவழிச்சமூகமான ஆரியர்கள் தங்களுடைய சடங்கு முறைகளை ரிஷிகோத்திரம் என்று சொல்லப்படுகிற தந்தைவழி கோத்திரம் சார்ந்தே நடத்துகின்றனர். ஆனால் தாய் வழிச்சமூகமாகவே வெகுகாலம் இருந்த உழைப்பாளி மக்களுக்கு அந்தக் கோத்திரம் கிடையாது.. ஏழு ரிஷிகளின் கோத்திரத்தில் வந்த பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே கோத்திரம் சிவகோத்திரம் தான். இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட புரோகிதச்சடங்குகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியர்கள் இயற்றிய இந்த வேதங்கள் இன்றும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருப்பதற்கான அடிப்படையான காரணம் மநு தர்மம். மநு தர்மத்தில் வேதங்களைப் பகுத்தறிய முயலக்கூடாது. அவை கடவுளுடைய வார்த்தைகள். அதை ஓதுகிற புரோகிதர்களும் கடவுளுக்கு நிகரானவர். வேதங்களைக் கேள்வி கேட்கவோ, ஆராயவோ கூடாது என்று ஆன்மீக அதிகாரத்தை வேதங்களுக்கு ஏற்றி வைத்ததன் காரணமே இன்றும் அவை செல்வாக்கோடு இருக்கிறது..

எல்லாவற்றையும் தன்வயப்படுத்துவதின் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் பிராமணியம் இப்போது இந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளையும் கபளீகரம் செய்து அதற்கு சமஸ்கிருதத்தன்மையை ஏற்றுகிறது. உதாரணத்துக்கு அறுவடைத்திருநாளான பொங்கல் மகர சங்கராந்தியாக மாற்றப்படுகிறது. உழைப்பாளிகள் தங்களுடைய உற்பத்திக்கருவிகளைக் கும்பிடும் நாள் இன்று சரஸ்வதி பூஜையாகி விட்டது. கார்த்திகைத்திருவிழா தீபாவளிக்கு முன்னால் ஒளி மங்கி விட்டது. இது போக பௌணர்மி, அமாவாசை, பிரதோஷம், பாட்டிமை, அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எம கண்டம், சூலம், பரிகாரம் என்று வாழ்க்கை முழுவதும் பிராமணியமாக்கல் நடக்கிறது. எல்லோர் வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குச் சற்றும் புரியாத புரோகிதச்சடங்குகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. வீடு கட்டினால் கணபதி ஹோமம், குழந்தை பிறந்தால் பெயரிடும் சடங்கு, பெண் பெரியவளானால் புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக்கழிக்கும் சடங்கு, திருமணச்சடங்கு, இறந்தவருக்கு திதி கொடுக்கும் சடங்கு, சந்தானப்பாக்கியத்துக்குச் சடங்கு, என்று பெரும்பாலும் புரோகிதச்சடங்குகள் நடைபெறாத வீடுகளே இல்லை எனலாம். இதற்கு முக்கியமான உளவியல் காரணம் பிராமணியத்தின் மேல்நிலையாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தப்படும் சடங்குகள் சமூகத்தில் மதிப்பு மிக்கவையாக இருப்பதனால் முன்பை விட இப்போது பிராமணப்புரோகிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

புராதன சமூகத்தில் தோன்றி நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலைபெற்ற இந்த மந்திரச்சடங்குகள் இன்றைய நவீன முதலாளித்துவ காலத்தில் பொருளற்றவை தானே. அறிவியல் வளர்ச்சியையும் நவீன விஞ்ஞான சாதனங்களின் கண்டுபிடிப்பையும் முதலாளித்துவம் தன்னுடைய லாபவேட்டைக்குப் பயன்படுத்துவதற்காக நிலப்பிரபுத்தோடு செய்துகொண்ட சமரசத்தினால் மீண்டும் பழமைவாதமும், சநாதனவாதமும், மதவெறியும் முன்னுக்கு வந்திருக்கின்றன. உலக நிதி மூலதனத்தின் நெருக்கடிகளைத் தற்காலிகமாகத் திசை திருப்ப இவை உதவக்கூடும். மக்களிடம் அறிவியல் நோக்கோடு கூடிய சமூகப்பார்வையை வளர்ப்பதும்தான் மநுவையும், புரோகிதச்சடங்குகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிப்பதற்கு உதவும்.

துணை நூல்கள்- 1) மந்திரமும் சடங்குகளும்-ஆ.சிவசுப்பிரமணியன்

2) வேதங்கள் ஒரு ஆய்வு—சனல் இடமருகு

நன்றி-வண்ணக்கதிர்

yagam

Sunday, 22 February 2015

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்!

 

உதயசங்கர்

gandhi

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மகாத்மா காந்தி மீது மதன்லால் பாவா என்ற மதவெறியன் குண்டு வீசிக் கொல்ல முயன்றான். அதிலிருந்து மயிரிழையில் தப்பிய காந்தி கொஞ்சமும் பதட்டமடையாமல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார். ஆனால் அது தான் அவருடைய கடைசி பிரார்த்தனை கூட்டம் என்று அவருக்குத் தெரியாது. அதைப்பற்றி காந்தியுடன் இருந்த ஒரு அரசியல் தலைவர், “ பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் பைத்தியக்காரத்தனமான செயல் “ என்று கூறினார். அதைக் கேட்டு சிரித்த காந்தி, “ முட்டாள்.. இதற்குப் பின்னால் விரிந்து பரந்த சதி இருப்பது உனக்குத் தெரியவில்லையா? “ என்று கூறினார். அவர் கூறிய படியே அதற்கடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சே என்ற இந்து மதவெறியன் அண்ணலை சுட்டுக் கொன்றான். ஒன்றிரண்டு தடவையல்ல. மகாத்மாவைக் கொல்ல கிட்டத்தட்ட பத்து முறை முயற்சித்திருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டிலிருந்தே கொலை முயற்சிகள் தொடங்கி விட்டன. காந்தியும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் “ இதுவரை கொலை முயற்சியிலிருந்து ஏழுமுறை எனது உயிர் காப்பாற்றப்பட்டது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விடப்போவதில்லை. நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிரோடு வாழ்வேன்..” என்று கூறினார். கோட்சே இதற்கு, ” ”அதுவரை உங்களை யார் உயிருடன் விட்டு வைக்கப்போகிறார்கள். என்று பார்த்து விடுவோம்.” என்று தான் நடத்தி வந்த அக்ரானி பத்திரிகையில் பதிலளித்திருந்தான்.

அது உண்மையில் நடந்தேவிட்டது. ஜனவரி 30 ஆம் தேதி மாலை அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படேலிடம் காந்தி பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்று கூறி விடை கொடுத்தனுப்பி விட்டு புறப்பட்டார். பேத்தி ஆவாகாந்தியும், மருமகள் மனுகாந்தியும் இரண்டு பக்கங்களிலும் தோள் கொடுக்க தேசத்திற்காக தன்னையே உடல் பொருள் ஆவி அனைத்தையுமே ஈந்து தன்னையே சத்திய சோதனைக்களமாக மாற்றிய நைந்து போன உடலுடன் கூடிய அந்த வயதான முதியவர் பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. நேரம் மாலை 5.10 மணி. அப்போது காந்திக்கு முன்னால் முப்பத்தைந்து வயது இளைஞன் நின்று தன் உடலை வளைத்து வணங்குகிறான். மகாத்மாவும் பதில் வணக்கம் சொல்கிறார். அந்த இளைஞன், “ இன்று பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதல்லவா? “ என்று கேட்கிறான். காந்தி பதில் சொல்வதற்கு முன்னால் அவனுடைய உள்ளங்கைகளில் முளைத்த துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக பாய்கின்றன. காந்தியின் இதயத்துக்குக் கீழேயும் வயிற்றுக்குக் கீழேயும் குண்டுகள் பாய்ந்தன. ஹே ராம்.. என்ற சப்தத்துடன் காந்தி விழுந்தார். அந்தக் கணமே அவருடைய உயிர் பிரிந்தது.

காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்?

தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.

காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.

மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.

காந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை. ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார். இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.

தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 67 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.

புத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதீத பாவன சீதாராம்

ஈசுவர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்.

இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.

ஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே

எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

அவரால்

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்?

நன்றி – வண்ணக்கதிர் 22-02-15

Saturday, 10 May 2014

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

DSC01118 புத்தக மதிப்புரை

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

வீரபத்ர லெனின்

குழந்தைகள் நம்மிடம் கதை கேட்டால் ஒரு ஊருல ஒரு ராஜா என்று ஆரம்பித்து அவர்கள் தூங்கும் வரை பல கதைகளை அடுக்கிக் கொண்டே போவோம். இப்படிப் போகும்போது அவர்களும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தியன் போல பல கேள்விகளை கேட்பார்கள். அவற்றுக்கும் பதில்களைச் சொல்லிக் கொண்டே போவோம்.

நாம் சிறு வயதில் கேட்ட கதைகளை ஞாபகப்படுத்திக் கூறுவோம். இல்லையென்றால் படித்ததில் பிடித்ததைச் சொல்லுவோம். பலபேருக்கு ஒரு சில கதைகளுக்கு மேல் தெரியாது. சொன்ன கதைகளையே நாம் சொல்லும்போது, “ இதத்தான நேத்தும் சொன்னீங்க, அதத்தானே அன்னைக்கு சொன்னீங்க..” எனக் கேட்டு நம்மைத் துளைத்தெடுத்து விடுவார்கள்.

குழந்தைகள் கதைதானே கேட்கிறார்கள் நாம் ஏதாவது ஒன்றை அடித்து விட வேண்டியது தான் என்ற எண்ணமும் நமக்கு இருக்கக்கூடாது. ஏனென்றால் நாம் கூறிய கதைகள் அவர்கள் மனதில் பசுமரத்தில் ஆணிபோல் பதிந்து விடும். நாம் சொல்லும் கதைகள் பயனுள்ள அறிவை விரிவு செய்கிற விதத்தில் இருக்க வேண்டும்.

இப்படிச் சொல்லும் கதைகளுக்கு பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளோடு மற்ற பிற கதைப்புத்தகங்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதை எளிமைப்படுத்தும் விதத்தில் பாரதி புத்தகாலயம் “ புக்ஸ் ஃபார் சில்ரன் “ என 15 தலைப்புகளில் வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கான கதைகளை சிறு புத்தகக்கொத்தாக வெளியிட்டுள்ளது.

என்னுடைய காக்கா, சின்னத்தேனீ பாடுது, மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை, புலி வருது புலி, ஐந்து பூனைக்குட்டிகளின் கதை, கொள்ளு பிறந்த கதை, யானை வழி, யானையும் தையல்காரனும், மல்லனும் மகாதேவனும், யானையும் அணிலும், மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், வாலறுந்த குரங்கின் கதை, ஆமையும் குரங்கும் வாழை நட்ட கதை, கொக்கும், கொசுவும், மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை, இந்த 15 தலைப்புகளில், படித்தால் குழந்தைகளுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் உதயசங்கர் அழகிய தமிழைக் கையாண்டுள்ளார். புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு.

மல்லனும் மகாதேவனும் என்ற கதையில் இரண்டு நண்பர்கள் காட்டுவழியாகச் செல்லும்போது கரடி ஒன்று வந்து விடுகிறது. இதனால் இருவரும் பயந்து விடுகின்றனர். மல்லன் கரடியிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறான். மகாதேவனோ என்ன செய்வது என்று தெரியாமல் தன் சிறுமூளையைக் கசக்கி இறந்தாற் போல் நடித்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்கிறான். இந்தக் கதையில் பிரச்னைகள் வந்தால் பயந்து விடாமல் அதை எப்படிச் சமாளிப்பது என்பதையும் ஆபத்து என்றால் நண்பனை விட்டு விட்டு நாம் மட்டும் தப்பித்தால் போதும் என்ற கெட்ட எண்ணம் இருக்கக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது.

இக்கதையைக் குழந்தைகள் கேட்டாலும், படித்தாலும், அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும் மற்றவர்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்தப் பிஞ்சுகள் மனதில் பதியும்.

மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், என்ற கதை ஒருவருக்குப் பிரச்னை என்றால் அவரை எப்படி காப்பாற்றுவது என்று கூறுகிறது. சின்னத்தேனீ பாடுது என்ற சிறிய கொத்தில் பாடுது, கேளு பாப்பா கேளூ, என்று குழந்தைகளைக் கேள்வி கேட்கும் அறிவைப் பாடல் மூலம் தூண்டுகிறார் உதயசங்கர்.

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தைத் தூண்ட பெற்றோர்கள் இந்த 15 புத்தகக்கொத்தை வாங்கித் தர வேண்டும். பாரதி புத்தகாலயம் ஏற்கனவே இதுபோல் சில கதைப் பூங்கொத்துகளை வெளியிட்டுள்ளன. நல்ல முயற்சி. தொடர வேண்டும். நாமும் குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுப்பதுபோல் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். கதைகளை விரும்பாத குழந்தைகள் இல்லை. இத்தகைய புத்தகங்களின் தேவை வற்றுவதில்லை.

15 நாடோடிக் கதைகள்

ஆசிரியர்கள்- கெ.டி.ராதாகிருஷ்ணன், சுஜா,சூசன், ஜார்ஜ், இ.என்.ஷீஜா, விமலாமேனன், ராமகிருஷ்ணன்குமரநல்லூர்,

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு- புக்ஸ் ஃபார் சில்ரன்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-600018

விலை-ரூ.525/

Monday, 1 October 2012

ஒருவேளை நீங்கள்..

உதயசங்கர்

015

ஒருபோதும் திறக்காத கதவொன்றை

தட்டிக் கொண்டிருப்பவராக

நீங்கள் இருந்தால்..

ஒருபோதும் மலராத மலரொன்றின்

முன்னால் மண்டியிட்டுப்

பிரார்த்திருப்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் வளையாத

வில்லொன்றை வளைத்து

அம்பு எய்ய யத்தனிப்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் புரியாத

வார்த்தையின் நிழலில்

அர்த்தத்தைத் தேடுபவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் முளைக்காத

மலட்டுவிதையின்

கனி தின்னும் கனவு காண்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் கேளாக்காதுகளின்

வாசலில் உங்கள் குறைகளைச்

சொல்லி மன்றாடுபவராக

நீங்கள் இருந்தால்

ஒருவேளை நீங்கள்

இல்லாத கடவுளாக

ஏதுமறியாத பைத்தியமாக

அல்லது

இந்திய நாட்டின் குடிமகனாக

இருக்கலாம்.

நன்றி- வண்ணக்கதிர்

Tuesday, 7 August 2012

இறப்புச் சடங்குகளின் பின்னால்..

 

உதயசங்கர்

imagesCAUS9Z8Z

ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் தாங்கள் அறியாத இயற்கையின் மர்மங்களை விளங்கிக் கொள்ளும் முயற்சியாகவும், இயற்கையைச் சாந்தப்படுத்துகிற முயற்சியாகவும், உற்பத்தி, வளமைக்கான வேண்டுதலாகவும், பிரார்த்தனையாகவும், கொண்டாட்டமாகவும் உருவாகி நிலை பெற்றிருக்கின்றன. இந்த முயற்சிகளை வேறு குறியீடுகளினால் பிரதிநிதித்துவம் செய்து மொழியின் மூலம் மந்திரங்களாகவும், சாங்கியம் என்று சொல்லப் படுகிற செய்முறைகளில் உருவாக்கப்படும் விசித்திரமான , குழந்தைத்தனமான, அகவயமான செயல்களே தொன்மங்களாகின்றன. இந்தத் தொன்மங்கள் என்பவை ஆதி மனிதன் இந்த உலகைப் புரிந்து கொண்ட விதத்தைக் குறிக்கும் உருவகங்களே. அதனால் இது கலையோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. இவற்றில் தர்க்கஞானத்தை புகுத்த முடியாது. உணர்வுநிலையில் மட்டுமே இயங்கக் கூடியது. திரும்பத் திரும்ப ஒலிக்கப்படும் ஒரே மாதிரியான ஒலிக்குறிப்புகளும் அதன் விசித்திரமான சூழலும் அதைச் செய்கிறவரின் வித்தியாசமான உடல்மொழியும் அதில் ஈடுபடுகிற சாதாரண மக்களின் மனதில் ஒரு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தங்கள் கோரிக்கைகள், வேண்டுதல்கள், கேட்கப்பட்டு விட்டதாக, அல்லது சாந்தியடைந்து விட்டதாக மனதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இனி கேடுகள் எதுவும் வராது என்று மனம் நம்புகிறது. அந்த நம்பிக்கையே வாழ்வை மேலே அடுத்தடுத்து கொண்டு செலுத்த உதவுகிறது.

ஆதி மனித உணர்வுகளை சடங்கியல்களை இறுகிய வடிவமாக நிறுவனமயமாக்கப்படும் சமயம் மாற்றுகிறது. அது மட்டுமல்லாமல் அந்தச் சடங்குகளைச் செய்ய உளவியல் ரீதியான நிர்ப்பந்தமும் கொடுக்கிறது. சமயத்தின் நடைமுறைகளையும், தெய்வீகக்கதைகளையும் புகுத்தி மக்கள் மனதை வசப்படுத்துகிறது. மக்களை கட்டாயப்படுத்துகிறது. இந்த நடைமுறைகளிலும், புராணக்கதையாடல்களிலும் சமயத்தின் தத்துவக்கூறுகளை நிலை நிறுத்தி சமூகத்தில் தன்னையும், சமூக உற்பத்தி முறையையும் உறுதிப்படுத்துகிறது. உற்பத்திமுறைகள் மாற, மாற சமயம் அதற்கேற்ப விஞ்ஞான விளக்கங்களையும் கொடுத்துக் கொள்கிறது. இதன் மூலம் மக்கள் மனதில் எந்த விதமான சந்தேகங்களோ, கேள்விகளோ வரவிடாமல் சமயம் பார்த்துக் கொள்கிறது.

இயற்கையில் எல்லாப்பொருட்களும் மாற்றத்துக்குரியது. மாற்றம் ஒன்றே மாறாதது. பிறப்பு, இறப்பு இயற்கையானது. ஆனால் இயற்கையின் மற்ற உயிரினங்களை விட மேலான அறிவை தன் உழைப்பின் மூலம் பெற்ற மனிதனுக்கு பிறப்பும் இறப்பும் புதிராகவே இருந்தது. எப்படி ஒரு உயிர் உருவாகிறது என்று தெரியாமலிருந்ததைப் போலவே எப்படி ஒரு உயிர் இறக்கிறதென்றும் தெரியவில்லை. தன்னுடனே வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனை இனி எவ்வப்போதும் காணமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வேறு ஒரு உலகத்தில் வாழப் போகிறான் என்று உருவகிப்பதன் மூலம் மனம் சாந்தியடைந்தது. எனவே சாவுச் சடங்குகளில் இம்மை, மறுமை கருத்தாக்கங்கள் உருவாகின்றன. இந்த பூலோகத்தை விட்டு மேலோகம் செல்வதாக கற்பனை விரிகிறது. எனவே தான் இறந்தவரை நீர்மாலை எடுத்து ( நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளம் ) குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி, சந்தனம், குங்குமம், இட்டு உணவு கொடுத்து ( வாய்க்கரிசி ) போகும் வழிச்செலவுக்கு நாணயமும் நெற்றியில் ஒட்டி, பூம்பல்லக்கில் வைத்து அனுப்புகிற விதமாய் சடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே போல அந்தக் காலத்தில் நெருப்பைக் காப்பாற்றி சுடுகாடு வரை கொண்டு செல்வது மிகவும் கடினமான காரியமாக இருந்ததனால் கொள்ளிச்சட்டி என்று எப்போதும் நெருப்பெரியும் மண்கலயத்தைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உருவானது.

சுடுகாட்டில் நீர் நிறைந்த மண்குடத்தைத் தூக்கிக் கொண்டு இறந்தவரின் உடலைச் மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு சுற்றுக்கும் நாவிதர் ஒரு ஓட்டையை அந்தக் கலயத்தில் போடுவார். மூன்று சுற்று முடிந்ததும் அந்தக் கலயத்தை உடைத்து விடுவார்கள். பண்டைய காலம் தொட்டே நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது என்பதினால் இறந்தவர் போய் விட்டாலும் அந்தக் குடும்பத்தில் செழிப்பு தங்கியிருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை ஒரு சிறிய கும்பத்தில் மலர்களிட்டு விளக்கு முன் வைக்கும் பழக்கமும் இந்தச் செழிப்பு நம்பிக்கையில் வந்ததே.

பிராமணசாதியினருக்கு அடுத்து வந்த இடைநிலைச் சாதியினர் எரிக்கும் ( சுடுகாடு ) வழக்கமும், அதற்கடுத்த நிலையில் இருந்த சாதியினர் புதைக்கின்ற ( இடுகாடு ) வழக்கமும் கொண்டிருந்தனர். எரித்த மறுநாள் ஆற்றுகிற சடங்காக தீயாற்றுதல் நடைபெறுகிறது. எரிந்த சாம்பலை எடுத்து, தாம்பாளத்தில் வைத்து சந்தனம், பால், தேன், திருநீறு, நவதானியங்கள் ஆகியவற்றால் அபிசேகம் செய்து இறுதியில் ஒரு குச்சியினால் நிலம் வரைந்து அதில் அந்தக் குச்சியினால் உழுது நவதானியங்களை விதைத்து நீருற்றி உடனே ஒரு கொப்பும் குலையுமாக செடி ஒன்றை அந்த நிலத்தில் நட்டு வைத்து விடுவார்கள். வேளாண்சமூகம் தன்னுடைய குலம் தழைக்க இறந்தவரின் சாம்பலை தங்கள் நிலத்தில் கலந்து விடுவதின் மூலம் வளமை பெறுவதாகவும் உருவகிக்கிற போலச் செய்தல் சடங்கு முறைகள். இதில் ஆதிச் சடங்கியல் முறைகளின் கூறுகள் இருக்கின்றன. சுடுகாட்டில் இறந்தவரின் சடலம் எரிந்து கொண்டிருக்கும்போதே மொட்டை போடுவது இறந்தவரின் ஆண்வாரிசுகள், அல்லது கொள்ளி வைக்கும் பாத்தியதை உள்ள ஆண்களே. இந்தச் சடங்குகள் சாதிக்குச் சாதி சில வித்தியாசங்களுடன் நடக்கிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத சாதிகளில் அவர்களுடைய இனக்குழுவின் சடங்கியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு தெலுங்கு பேசும் சாதியினர் மொட்டை போடுவதில்லை. அதற்குப் பதில் மீசையை அல்லது முன்கையில் சிறிது ரோமத்தை மழித்துக் கொள்கிறார்கள்.

இது வரையான இறப்புச் சடங்குகளில் பிராமணர்கள் தலையீடு இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும். ஐந்தாம் நாள் இறந்தவரின் பெண்பிள்ளைகள் இறந்தவருக்கு செய்யும் படையல் நிகழ்ச்சி ( கிழமை செய்தல்)  நடைபெறுகிறது. நவதானியங்களை அவித்து சிறுபண்டங்களைச் செய்து, இறந்தவருக்கு விருப்பமான பண்டத்தையும் செய்து விளக்கு முன் படைத்து கும்பிடுகிறார்கள். அதற்கு முன் வீட்டு வாசலில் நின்று இறந்தவர் கைலாயமும், வைகுந்தமும் போவதற்கு பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டு நெஞ்சிலடித்துக் கொண்டு பாடுகிறார்கள். ஒரு வேளை இறந்தவரின் ஆத்மா பந்தபாசம் காரணமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் அதை வழியனுப்புகிற ஒரு சடங்காகவே இது இருக்கிறது.

” கைலாயம் உங்களுக்கு

கத்தரிக்காய் எங்களுக்கு

வைகுந்தம் உங்களுக்கு

வழுதனங்காய் எங்களுக்கு “

என்கிற மாதிரி இந்த உலக வாழ்க்கையை விட்டு விடைபெறச் சொல்லி பாடுகிறார்கள்.

பிறகு இறந்தவரின் வீடு தீட்டாகக் கருதப்படுகிறது. பதினாறாவது நாள் விஷேசம் நடத்தும்வரை துட்டி கேட்கப்போகிறவர்கள் கேட்டுவிட்டு வந்ததும் தீட்டைக் கழிக்க குளிக்கிறார்கள். பதினாறாவது நாள் விஷேசத்துக்கு பிராமணர் அழைக்கப்பட்டு பிண்டம் வைத்து இறந்தவரின் ஆவியைச் சாந்தி செய்யும் மந்திரங்கள் ஓதி வீடு முழுவதும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்து தீட்டுக் கழித்து, இறந்தவருக்குப் படைப்பதற்காக வாங்கிப் படையல் வைக்கப்படும் அத்தனை சாமான்களையும் ( அது அவர் எழுதிக் கொடுப்பது தான் ) புது வேட்டி துண்டையும் சடங்குகளை நடத்தியதற்காக ஃபீஸையும் வாங்கிக் கொண்டு பிண்டங்களை அருகாமையில் இருக்கும் நீர்நிலையில் கரைத்து விடச் சொல்கிறார். அன்று அந்த வீட்டிலுள்ளோர் எல்லோரும் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து தீட்டைக் கழிக்கிறார்கள். உடல், உடை, உணவு, இருப்பிடம், எல்லாவற்றிலும் தீட்டு என்கிற தீண்டாமையைக் கற்பித்து அதை மக்கள் மனங்களில் அவர்களின் ஒப்புதலோடு ஏற்றுக் கொள்ள வைத்தது தான் பிராமணியத்தின் வெற்றி.

மேற்சொன்ன சாங்கியங்களில் அறிவியல் பூர்வமானதென்று எதுவும் கிடையாது. இறந்தவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அந்த வீட்டை கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் இதில் உள்ள ஒரே அறிவியல் உண்மை. சுடுகாட்டுச் சடங்குகளில் கூட ஒரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள் இருக்கிறதென்று உணரமுடிகிறது. அதுவும் இப்போது காலத்துக்கு ஒவ்வாததாக மாறி விட்டது. ஆனால் பதினாறாவது நாள் விஷேசம் என்ற பெயரில் பிராமணரை அழைத்துச் செய்கிற சடங்குகள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற விஷேசம். முன்னோர் வழிபாடு என்பது பண்பாட்டு அசைவு. ஆனால் பித்ருக்களாக காக்கா வந்து உணவு எடுக்கவும், திதி என்ற பெயரில் ஆண்டு தோறும் நடக்கும் விஷேசமும், அமாவாசை தோறும் பித்ருக்களுக்காக விரதம் இருந்து அவர்களுக்கு உண்ட பிறகே தாங்கள் உண்ணும் சடங்கு பிராமணிய தந்திரம். இப்படி இனக்குழுவின் சடங்கியல் முறைகளில் அவர்களுக்கே உரித்தான பண்பாட்டு அசைவுகள் இருந்ததென்றால் அதில் தங்களுடைய வேதகாலச்சடங்கியல் முறைகளையும் கலந்து விட்டது பிராமணீயம். இதனால் எவையெல்லாம் அந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள், எவையெல்லாம் பிராமணமதத்தின் சடங்கியல் கூறுகள் என்று அறிய முடியாமல் போய் விட்டது. பிராமணீயத்தை நோக்கிய மேல்நிலையாக்கத்தில் உள்ள விருப்பமும் மிகச் சுலபமாக பிராமணியம் எல்லாச் சடங்குகளுக்குள்ளும் கலந்து விடுவதற்கு ஏதுவாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இது மனுதர்மசாஸ்திரத்தை அறிந்தோ அறியாமலோ எல்லோரும் கடைப்பிடிக்க வழி வகை செய்கிற ஒரு ஏற்பாடாக அமைந்து விட்டது.

தீட்டு என்கிற ஒன்றை மக்கள் ஏற்று கொண்டிருக்கும் வரை பிராமணியமும், மனுதர்மமும் நிலைத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

2

ஒவ்வொருவருடைய மரணத்தை அர்த்தப்படுத்துவது அவர்களுடைய வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையில் அவர் தான் வாழும் சமூகத்துக்காக, தன் சகமனிதர்களுக்காக, என்ன செய்திருக்கிறார் என்பதே காலங்காலமாக நினைக்கப்படும். மானுடவிடுதலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிற தோழர்களும் மரணமடையும் போது நாம் அவரைக் கைவிட்டு விடுகிறோம். அது வரை அவர் எதையெல்லாம் மறுத்தும் எதிர்த்தும் தன் வாழ்நாள் முழுவதும் போரிட்டாரோ பிரச்சாரம் செய்தாரோ இயங்கினாரோ அவரைச் சடங்குகளின் கையில் ஒப்படைத்து விட்டு வாளாவிருக்கிறோம். பல நேரங்களில் அவருடைய சாதி அந்தச் சூழ்நிலையைக் கையாளுகிறது. அதற்கு ஒரு காரணமாக தோழர்களின் குடும்பங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கும் நாம் தான் காரணம் என்று தோன்றுகிறது. தோழர்களின் குடும்பங்களுக்குள் நம்முடைய பண்பாட்டுக் கருத்தியல்களைக் கொண்டு போவதற்கான திட்டம் நம்முடைய அமைப்புகளிடம் போதுமானதாக இல்லை.

வாழ்கிற வரை கம்யூனிஸ்ட்டாக மட்டுமே மற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட தோழர்கள் மரணமடைந்தவுடன் அவருடைய சாதியைச் சேர்ந்தவராக, அவருடைய மதத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப் படுகிறார். அவருடைய சாதியைச் சேர்ந்த இறுதி ஊர்வல வண்டியில் எல்லாச்சாங்கியங்களும் செய்யப்பட்டு நெற்றியில் குங்குமம் சந்தனம் நாணயம் சகிதமாக, சனிக்கிழமை என்றால் கூடவே ஒரு கோழிக்குஞ்சையும் கட்டிக் கொண்டு முன்னால் தன் வாரிசுகள் கொள்ளிச்சட்டி தூக்கிக் கொண்டு நடந்து வர சாதிக்காரர்கள் முன்னால் நடந்து செல்ல பின்னால் தயக்கத்துடன் நம்முடைய தோழர்கள் நடக்கத் தன் இறுதிப் பயணத்தைத் தொடர்கிறார். தான் இது வரை வாழ்ந்த முற்போக்கான வாழ்வின் அர்த்தம் என்ன? என்று தன் தலையை ஆட்டி ஆட்டிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். எத்தனையோ பேரை தன்னுடைய விசாலமான அறிவுத் திறமையினால் விவாதக்கூர்மையினால் வென்றெடுத்து முற்போக்கு இயக்கங்களுக்குள் கொண்டு வந்த தோழர். தீண்டாமை, சாதிவெறி, மதவெறி, மூடநம்பிக்கை இவற்றுக்கெல்லாம் எதிராக சமரசமற்ற போரைத் தன் வாழ்நாள் முழுவதும் நடத்திய அந்தத் தோழருக்கு தனக்கு நடந்து கொண்டிருக்கும் சடங்குகளைத் தடுக்க முடியவில்லை. துணைக்குத் தன் தோழர்களும் இல்லை. அவர்கள் மிகவும் பின்னால் வருகிறார்கள். அவர்களுக்கு இன்னமும் இதன் முக்கியத்துவம் தெரியவில்லை. எப்போதும் அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்களுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் அவரது உரத்தகுரல் இப்போது மௌனமாக இருக்கிறது.

பிராமணியமும் மனுதர்மசாஸ்திரமும் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்?

நன்றி - தீக்கதிர்

Monday, 30 July 2012

சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2

சடங்குகளும் சுயபோராட்டமும்

உதயசங்கர்

emotion-chart-with-picture-reflection

சிந்தனையில், சமூகச்செயல்பாடுகளில் முற்போக்காகவும், சொந்த குடும்ப வாழ்க்கையில் பிற்போக்கான சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவுமான இரட்டைநிலை கொண்ட தோழர்களை நான் அறிவேன். இதற்கு அவர்கள் மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. பண்பாட்டுத் தளத்தில் நாம் புதிய செயல்பாடுகளைச் செய்யத் தவறியதே காரணம். அது மட்டுமேயல்லாமல் அரசியல் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குக் கொடுத்த அளவுக்கு சிறிதளவேனும் முக்கியத்துவம் பண்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கொடுக்கவில்லை என்பதும் யதார்த்தமான உண்மை. நம்முடைய படைப்பாளிகள் முற்போக்கான படைப்புகளை படைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலத்திற்கேற்ற படைப்புகளாக இருக்கின்றனவா என்று நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.முதலாளித்துவ, மதவாத, பண்பாட்டு நடவடிக்கைகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதிலிருந்து அதைச் செரித்துக் கொண்டு புதிய பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதங்களைத் துவக்கியிருக்கிறோமா?

இல்லையெனில் எல்லாபிற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் சமரசம் செய்து கொண்டு ஆனால் அதே நேரம் அரசியல்ரீதியாக முற்போக்காகவும் திகழ்கிற போலிக் கம்யூனிஸ்ட்கள் பெருகி விடும் ஆபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

என் வாழ்வில் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிராக நான் நடத்திக் கொண்டிருக்கிற போராட்டம் மேடு பள்ளங்களைக் கொண்டது தான். நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே சாமி கும்பிடுவதை நிறுத்தி விட்டேன். எனக்குப் பத்தாவது வகுப்பில் தமிழாசிரியராக வந்த குருசாமி வகுப்பில் சொன்ன பகுத்தறிவுக் கருத்துகள் என்னை எதனாலோ ஈர்த்தன. வீட்டிலும் ரெம்ப பழமைவாதம் கிடையாது. ஊரோடு ஒத்துப் போவதற்காக நல்லநாள் கொண்டாடுவார்கள். மற்றபடி வீட்டிற்கு மிக அருகில் இருந்தாலும் கோவிலுக்குச் செல்லும் பழக்கமெல்லாம் வீட்டிலுள்ள யாருக்கும் கிடையாது. அதனால் பெரிய நெருக்கடி ஒன்றும் கிடையாது. அதற்கு முன்பு எட்டாம் வகுப்பு வரை மார்கழி மாதம் விடிகாலைக் குளிரில் எழுந்து குளித்து விட்டு கந்தபுராணத்தையும், விநாயகர் அகவலையும் சத்தம் போட்டு பாடிக் கொண்டே செண்பகவல்லியம்மன் கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வந்தவன் தான். ஆனால் குருசாமி வாத்தியாரின் வகுப்புகள் என்னை ஏதோ செய்தது. அது மட்டுமல்ல என்னுடைய அருமை நண்பனான நாறும்பூநாதனின் நட்பும் ஒரு காரணம். அவனுடைய அண்ணன் ஆர்.எஸ்.மணி மூலமாக அவன் நிறைய முற்போக்கான கருத்துகளைக் கற்றுக் கொண்டு எங்களிடம் வந்து கொட்டுவான். முதலில் அதை எதிர்த்துப் பேசி பின்னர் அது ஆழமாக மனசில் பதிந்து விட்டது. கல்லூரிக் காலத்தில் புத்தகவாசிப்பின் மீதான ஆர்வம் எழுத்தை நோக்கி உந்தித் தள்ள நண்பர்கள் நாங்கள் கையெழுத்துப் பத்திரிகை துவங்கி தமுஎசவில் வந்து சேர்ந்தோம். அப்போது வாசித்த நூல்கள் மதம், சாதி, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் குறித்த புரிதலைத் துவக்கி வைத்தது.

1987-ல் என் திருமணநிகழ்வினை எந்த சாஸ்திரமும் சடங்கும் இல்லாமல் நடத்த பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அது தான் முதல்முறையாக நான் சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களின் வலிமையை உணர்ந்த நாட்கள். வீட்டுப் பெரியவர்களின் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியதாயிற்று. அந்த விரோதம் என்னுடைய அப்பா, அம்மா, இருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.ஆனால் என்னுடைய பிடிவாதம், பால்வண்ணம், பாலு, தேவப்ரகாஷ், போன்ற தோழர்களின் ஒத்துழைப்பினால் சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான என்னுடைய முதல் போர் வென்றது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாலி எடுத்துக் கொடுக்க கைதட்டுதலோடு கலியாணம் முடிந்தது. என்ன பேசியும் தாலியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதையும் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு என் துணைவியார் துறந்து ஒரு பதக்கச் சங்கிலியை அடையாளமாக அணிந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் தோழர்கள் திருமணம் பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இப்போது அதே தோழர்கள் அவர்கள் அவர்களுடைய திருமணத்தைத் தவிர வீட்டில் நடைபெற்ற அத்தனை விழாக்களையும் சடங்குகள் சகிதம் நடத்தியதையும் கண்டேன். இப்போது காலம் தன் சட்டையை உரித்து மீண்டும் அதே பழைய சனாதன உருவத்தோடு காட்சியளிக்கிறது.

என் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தும் சடங்கை என்ன சொல்லியும் என்னால் தடுக்க முடியவில்லை. சலூனில் மொட்டை போடும் என் யோசனைக்கு எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருமணத்துக்குப் பிறகு எல்லாமே குடும்பவிஷயமாக(?) மாறிவிடுவதால் தோழர்களும் தலையிடவில்லை. கடைசியில் சாத்தூர் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் அந்தச் சடங்குகள் நடந்தன. நான் தோல்வியடைந்தாலும் அய்யர் இல்லாமல் நாட்டார்தெய்வக் கோவிலில் வைத்துத் தானே நடக்கிறது என்று மீசையில் ஒட்டிய மண்ணைப் பெருமையுடன்(!) துடைத்துக் கொண்டேன். என் பெண்குழந்தைகள் பருவமடைந்ததை நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை. எந்த விதமான சடங்கும் செய்யவல்லை. என் துணைவியாருக்கோ குழந்தைகளுக்கோ அதில் வருத்தமில்லை.ஆனால் உறவினர்கள் திட்டினார்கள். தோழர்களும், நண்பர்களும் கூட வருத்தப்பட்டார்கள். சடங்கு முக்கியம் என்றார்கள். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக் கழிக்கிற சடங்கைச் செய்த தோழர்கள் வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வந்தார்கள். யாரும் என் வீட்டுக்கு வரவில்லை.அப்போது என் துணைவியார் கொஞ்சம் நம்பிக்கையிழந்தார். நான் சடங்கின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன். ஆனால் நம்பிக்கையிழக்கவில்லை.

என் தந்தையார் இறந்தபோது உறவினர்கள் எல்லோரும் நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது தோழர். சக்தி கூட இருந்ததால் அதைச் சுலபமாகக் கடந்து விட்டேன்.கொள்ளிச்சட்டி தூக்கவோ, மொட்டை போடவோ வேறு எந்த சடங்கையும் செய்யவும் மறுத்து விட்டேன். எல்லோரும் என்னை வேற்றுக் கிரகமனிதனைப்போல பார்த்தார்கள். சிலர் கொள்கையெல்லாம் சரிதான் அப்பாவுக்குத் தானே செய்றீங்க என்று சொன்னார்கள். அந்த நேரம் அப்பா இறந்து போன துக்கத்தை என்னால் முழுமையாக அநுபவிக்க முடியவில்லை என்பது உண்மை தான். இந்தச் சடங்குகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற சிந்தனையே எனக்குள் ஒரு இறுக்கத்தையும், பிடிவாத உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் தம்பிகள் இந்தச் சடங்குகளைச் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. என்பாடே பெரும்பாடாக இருந்தது. ஏற்கனவே கோட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருந்ததால் என் தாயார் இறந்தபோது யாரும் என்னை வற்புறுத்தவில்லை.

சொந்த வீடு கட்டும் போதும் சரி, கட்டி முடித்த பிறகும் சரி எந்தச் சடங்கையும் செய்ய மறுத்து விட்டேன். கிரகப்பிரவேசம் என்று சொல்லப் படுகிற சடங்கையோ, கணபதி ஹோமம் என்ற பெயரில் புது வீட்டுக்குள்ளே மாட்டைக் கூட்டிக் கொண்டு போய் சுத்திக் காண்பித்து அதன் மூத்திரத்தை வீட்டுக்குள்ளே தெளித்து அதுக்கு ஒரு விஞ்ஞானவிளக்கமும் கொடுத்து செய்கிற சடங்கையோ செய்யவில்லை. கிரகப்பிரவேசம் கணபதி ஹோமம் நடத்தி விழா எடுத்த தோழர்கள் வீட்டுக்கு எல்லோரும் போனார்கள். ஆனால் நான் அழைத்தும் யாரும் என் புது வீட்டுக்கு யாரும் வரவில்லை. நாங்கள் பல நாட்கள் எங்களுடைய புது வீட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தோம். பத்திரிகை அடித்து நேரில் சென்று அழைத்து ஸ்பீக்கர் செட் அலற நான் முன்பு சொன்ன சடங்குகள் செய்து சாப்பாடு போட்டால் எல்லோரும் குதூகலமாக வந்து போகிறார்கள். எந்தச் சடங்கையும் செய்யாமல் நீங்கள் சும்மா அழைத்தால் யாரும் தோழர்கள் உட்பட யாரும் வரத்தயாரில்லை. எல்லோரிடமிருந்தும் தனிமைப் பட்ட உணர்வு வந்ததென்னவோ உண்மை தான். என் துணைவியாரும் “ என்னமோ தோழர்கள் அதையெல்லாம் பாக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க..” என்று வறுத்து எடுத்து விட்டார். சடங்குகளின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன்.

1987-லிலேயே வீட்டில் மாட்டுக்கறி எடுத்து சமைப்பதற்குப் பழகியிருந்தோம். இப்போதும் நானே போய் மாட்டுக்கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுகிறோம். அதே போல வெள்ளைப்பன்னிக்கறியும்( கறுப்பு பன்னி மீது இன்னமும் என் வீட்டிலுள்ளவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. நானும் இந்த வரைக்கும் வந்தார்களே என்று சும்மாயிருந்து விட்டேன்.) வீட்டில் சமைத்துச் சாப்பிடுகிறோம். எனக்கு என் துணைவியாரோ,என் மூத்த மகளோ தான் முடி வெட்டி விடுகிறார்கள். எந்தக் குழப்பமும் இல்லை. உண்மையில் சாதிய நடைமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை மறுத்து அதைக் கடந்து செல்லவே பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். விழுதலும் எழுதலுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் நானறியாமல் பல சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களுக்குத் துணை போயிருக்கிறேன். என் தம்பிகள், தங்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருந்திருக்கிறேன். நான் மட்டும் சரியாக இருந்து கொள்கிறேன் மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்ற சுயபெருமித உணர்வுதான் காரணம். இதெல்லாம் பெருமை பேசுவதற்காகவோ யாரையும் குற்றம் சொல்வதற்காகவோ இல்லை. தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து முற்போக்கான அரசியலைப் பேசி, அதற்காகப் போராடிய தோழர் இறந்த பிறகு அப்படியே அவரை அவருடைய சாதியின் கையில் சடங்குகளின் கையில், சாஸ்திரங்களின் கையில், சம்பிரதாயங்களின் கையில் ஒப்படைத்துவிட்டு வாளாவிருப்பது என்ன நியாயம்?

,விரைவில் புரட்சி நடந்து விடும் புதிய கலாச்சாரம் வர்க்கபேதமற்ற, சாதி சமயங்கள் ஒழிந்த, சாஸ்திர, சம்பிரதாயங்கள், அழிந்த ஒரு புதிய சமூகம் பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கையளித்த இடதுசாரிகள் இப்போது மோசமாகிக் கொண்டேயிருக்கும் சாதி மத மயமாக்கப்பட்ட சூழலில் யுத்தகளத்தில் இல்லையோ என்ற அச்சம் வருகிறது.

1990-களில் அத்வானி ” ஆட்சி அதிகாரத்தை விட குடிமைச்சமூகமே எங்களுக்கு முக்கியம்.” என்று சொன்னார். அதில் பெரிய அளவுக்கு அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது. வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் சொன்னதைப் போல அரசியல் ரீதியாக மதவாத சக்திகளை எதிர்கொள்கிற இடது சாரிகள் பண்பாட்டு ரீதியாக வலுவாக எதுவுமே செய்யவில்லை. இதனால் நம் கண்முன்னே குடிமைச்சமூகம் மதவாத சக்திகளிடம் போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவோ, எதிர்கொள்ளவோ, நம்மிடம் திட்டமில்லை. சாதி மத, சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிரான எந்த முயற்சியும் இல்லை. முற்போக்கு பண்பாடு குறித்த விவாதத்தைத் துவங்கவே யில்லை. மிகுந்த உற்சாகத்துடன் என்னுடன் இணைந்து சாஸ்திர, சடங்கு, சம்பிரதாய மறுப்புகளைச் செய்து வருகிற என் துணைவியார், இப்போது சற்று சோர்ந்து போயிருக்கிறார்.

என் மூத்த மகள் சொல்கிறாள், “ நாம ஒரு சதவீதம் தானே இருக்கோம்… சுத்தி எல்லோரும் வேற மாதிரி தான இருக்காங்க ”

“ ஒரு சதவீதம் நூறு சதவீதமாகும் நாள் சீக்கிரம் வந்துரும் “ என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். ஏனென்றால் எதிர்காலச் சந்ததிகள் அவர்கள் தானே. அவர்கள் நம்பிக்கையிழக்கலாமா? ஒரு புதிய பண்பாட்டுப்போரைத் துவக்க வேண்டிய தருணம் இது. நம்முடைய முற்போக்கு பண்பாட்டு நிகழ்ச்சிநிரலை ஆரம்பிக்க வேண்டிய காலம் இது.

நன்றி - தீக்கதிர்

Tuesday, 24 July 2012

சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1

Yajna_14150

 

உதயசங்கர்

 

பண்பாடு என்பதன் பொருளாக ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள், அந்த இனக்குழுவின் தோற்றம், வளர்ச்சி, தங்களை நிலை நிறுத்துவதற்கான போராட்டம்,பெருமை, இவற்றைப் பிரதிபலிக்கிற நடைமுறை வாழ்க்கையையும், கருத்துருவான வாழ்க்கையையும் சொல்லலாம். இதை வெளிப்படுத்தவே சடங்குகள் என்று சொல்லப் படும் பண்பாட்டு நிகழ்வுகளை வாழ்க்கை முழுவதும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அறிவியல் வளராத காலகட்டத்தில் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கருத்துருக்களுக்கு ஏற்பவும், பழைய வரலாற்றை நினைவு கூர்ந்து அதைத் திரும்பச் சொல்லும் முறையிலும் சடங்குகளின் நடைமுறை இருந்தது. ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுக்குள்ளும் சடங்குகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டன. அது அந்த இனக்குழுவின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குமப்பால் உளவியல் ரீதியாக அந்த இனக்குழுவின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, உற்பத்தி உறவுகளின் ஊடாடல், இவற்றை முன்னிலைப்படுத்துவதாகவும் இருந்தது. பண்பாட்டு, சடங்குகள், இவற்றின் அடிநாதமாக கொண்டாட்ட மனநிலை இருப்பதைக் காணலாம். அடுத்தது இனக்குழு கூடி வர்த்தமானங்களை, சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு இடமாக அந்த விழாக்கள் அமைகின்றன. தங்களுடைய பூர்வீகத்தை, மூதாதையரை நினைவு கூர்ந்து மீண்டும் ஒரு தங்கள் இனக்குழு அடையாளத்தை உறுதி செய்கிற நிகழ்வாகவும் இருக்கிறது. தங்களுக்கேயுரிய பண்பாட்டு அசைவுகளை மீளவும் ஒரு சடங்காக செய்து பார்க்கிற நிகழ்வாகவும் பண்பாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன.

என்று பிராமணியம் தன்னுடைய மனுதர்மசாஸ்திரத்தின் மூலம் இந்திய சமூகத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டுவந்ததோ அன்றிலிருந்து பண்பாட்டு நிகழ்வுகளில் பிராமணமதச்சடங்குகளும் இடம் பெற ஆரம்பித்தன. அவற்றை இடம் பெறச் செய்வதில் இந்து சமயமும், புராண, இதிகாசங்களும் பெரும்பங்காற்றின. அதற்கு முன்பு வரை இருந்த நாட்டார்சமய மரபின் இளகிய தன்மையை இறுகச் செய்தது பிராமணமதம் தான். பிராமண மதத்துக்கான அரசு அங்கீகாரம், ஆதரவு மற்ற நாட்டார்சமய மரபுகளையும் மேல்நிலையாக்கத்தினை நோக்கி உந்தித் தள்ள ஆரம்பித்தது. மனுதர்மசாஸ்திரத்தின் உருக்குபோன்ற விதிமுறைகளை மாற்றவோ, உடைக்கவோ முடியாததினால் பிராமண மதத்தின் சடங்குகளைப் போலச் செய்தலின் மூலம் தங்களையும் அந்தக் கண்ணிக்குள் சேர்த்துக் கொள்கிற யத்தனம் நால்வருணங்களில் உள்ள கீழ்வருணங்களிலும், அவர்களைப் பார்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் செய்தனர். அரச ஆதரவு பெற்ற மதமாக இருந்த காரணத்தினால் சாம, தான, தண்ட, பேத முறைகளில் பிராமண மதம் தன்னுடைய சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் அத்தனையையும் மொத்த சமூகத்துக்குள்ளும் மிகச் சுலபமாகத் திணித்து விட்டது.

இனக்குழுக்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து பிராமணீயத்தின் சூழ்ச்சியான சாதியப்படிநிலைகளை ஏற்றுக் கொண்டனர். உட்பிரிவுகளும் உருவாயின. இப்போது சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் சாதியப்படிநிலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், , ஒவ்வொரு சாதியும் தங்களுக்குக் கீழ் உள்ள சாதியின் மீதான தங்களது மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவுமான நினைவூட்டலாக மாறி விட்டது. அந்தந்தச் சாதியினர் தங்களது எல்லைகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்கிற ஏற்பாடாகவும் ஆகி விட்டது. அப்படியே ஏதேனும் மீறல்கள் நடந்தால் அதை அரசின் ஆதரவோடு அடக்கி ஒடுக்கவும் தயாராக மேல்நிலையிலுள்ள உள்ள சாதியினர் தயாராகின்றனர். சாதியப்படி நிலையில் உள்ள தங்களது நிலையை மனதார ஏற்றுக் கொள்ளவே சமய இலக்கியங்கள் புனையப்பட்டு திரும்பத் திரும்ப பாராயாணம் செய்யப்பட்டு, மக்கள் மனதின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். எனவே சாதியைப் பற்றி யார் பேசினாலும், யாரிடமும் என்ன சாதி என்று கேட்டாலும் அதைக் கேவலமானதாக கேட்பவரும் நினைப்பதில்லை.பதில் சொல்பவரும் நினைப்பதில்லை. விஷவிருட்சமாய் வேரோடிப் போயிருக்கும் இந்தச் சாதிய மனநிலைகளையும், அதைக் காப்பாற்றும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களையும் வேரோடு வெட்டியெறிய ஜோதிபா பூலேவையும், அம்பேத்காரையும், பெரியாரையும் தவிர வேறு யாரும் தீவிரமாக முயற்சித்ததாகத் தெரியவில்லை. சமூகசீர்திருத்தவாதிகள் இந்து சமயத்தோடு சமரசமுயற்சியே செய்தனர். அவர்கள் சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்த போதும் அவற்றின் உயிரான மனுதர்மசாஸ்திரத்தை எதிர்ப்பதற்கான வேலைத் திட்டம் அவர்களிடம் இல்லை. அது மட்டுமல்ல சூழ்ச்சித் திறன் மிக்க பிராமண மதம் எல்லா சமயச்சீர்திருத்தவாதிகளையும் உட்கிரகித்துக் கொண்டு தன்னைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கதாக மாறிக் கொண்டேயிருக்கிறது.k.n.panikkar

முன்னெப்போதையும் விட இப்போது அடையாள அரசியலின் எழுச்சி காரணமாக எல்லாச்சாதிகளும் தங்கள் சாதிய அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கவும், சாதியப்பெருமைகளைப் பேசவும், தங்கள் குடும்ப விழாக்களிலும், கோவில் விழாக்களிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்கிற நிலைமையைக் காணலாம். பிராமணமதம் மீண்டும் ஒரு முறை தன்னை மறுமலர்ச்சி அடையச் செய்து கொண்டுள்ளது. சாஸ்திர, சம்பிரதாய , சடங்குகளின் உயிராக பிராமண மதம் இருக்கிறதென்றால் அதன் உடலாக சாதிகள் இருக்கின்றன, அவைகளே பண்பாட்டுச்சூழலைத் தீர்மானிக்கின்றன. கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பிரதோஷம், அஷ்டமி, நவமி, என மைல் கணக்கில் கூட்டம் கோவில்களில் கியூவரிசையில் நின்று கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாக்கோவில்கள் மீதும் படையெடுக்கிறார்கள். முன்னெப்போதையும் விட சாமியார்கள், ஜோசியர்கள், கடல்மணலைப் போலப் பெருகியிருக்கிறார்கள். எந்த எதிர்ப்பும் இல்லாமல் ராஜபாட்டையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன சாதிய, மத வாத சக்திகள். இதையெல்லாம் எதிர்த்து மிகப்பெரும் போரை நடத்த வேண்டிய இடது சாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்காரியவாதிகளிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. அதனால் அந்தந்த அமைப்புகளுக்குள்ளேயே சாதிய, மத, சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களோடு சமரசம் செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் பண்பாட்டுச் சூழல் குறித்து போதிய கவனமின்மை தான். இதனால் குடிமைச்சமூகத்தைக் கைப்பற்றுவதற்கு அடுத்த இருபது முப்பது ஆண்டுகளுக்கான திட்டத்தை மதவாத சக்திகள் உருவாக்கியிருக்கிற போதும் அடுத்த ஆண்டுக்கான திட்டமே இல்லாமல் இடதுசாரிகள் இருப்பது கவலைக்குரியது.

முன்னெப்போதையும் விட நமது பண்பாட்டுச் சூழல் உலகமயம், சநாதனமயம் என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலாளித்துவம் தன்னுடைய உச்சக்கட்ட சுரண்டலான உலகமயமாக்கலின் மூலம் எல்லாநாடுகளிலிருந்தும் பொருள்வளத்தைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிற வேலையைச் செய்கிறது. அந்தந்த நாட்டு மக்களின் தனித்துவமிக்க, பன்முகக்கலாச்சாரத்தை தன் பகாசுர சக்தியினால் ஒடுக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதே நேரம் இந்த மேற்கத்திய உலகமயமாக்கலின் கலாச்சாரச்சீரழிவுகளை எதிர்ப்பதான பாவனையில் சநாதனமும், பழமைவாதமும் தங்களைப் புணருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளினால் வாழ்வின் ஆதாரங்களை இழந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை, அதே உலகமயமாக்கலின் விளவுகளினால் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களும், மதவாதசக்திகளும் சநாதனத்தின் பக்கம் திசை திருப்புகிறார்கள், இதனால் தங்கள் வாழ்வைப் பறித்தவர்களைப் பற்றியோ, காரணங்கள் பற்றியோ அவர்கள் அறியாமல் பழமையை மீட்டெடுக்கும் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

இத்தகையச் சூழலில் இடதுசாரிகளின் வேலை இன்னும் கடினமாகிறது. அரசியல் ரீதியில் முற்போக்காகவும், பண்பாட்டு ரீதியில் பிற்போக்காகவும் இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்களே ஆகி விடுகிற நிலைமை உருவாகிவிடுகிறது. இதற்கு புதிய முற்போக்குப் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடமே காரணம்.வரலாற்றறிஞர் கே. என். பணிக்கர் சொல்வதைப் போல,

“ முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசியல்-பண்பாடு இரண்டுமே சமநிலையில் இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். பண்பாட்டுச் செயல்பாடுகள் மீது அரசியல் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துமானால் பண்பாட்டின் மீது அரசியல் ஒரு சர்வாதிகாரத்தைச் செலுத்துமானால் சில முன்னாள் சோசலிச நாடுகளில் அப்படித்தான் நடந்தது என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்- பண்பாட்டு இயக்கத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்த இயலாமல், தனது வரலாற்றுப் பங்களிப்பைச் செய்ய இயலாமல் போய் விடும் “

உடனடியாக பண்பாட்டுத்தளத்தில் ஏகாதிபத்தியத்தின், சாதி மத வாதத்தின் பண்பாட்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், மக்களிடையே விமர்சனக்கண்ணோட்டத்தை வளர்க்கவும், புதிய முற்போக்கு பண்பாட்டுத் தளங்களையும் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது.

நன்றி - தீக்கதிர்