Sunday 26 April 2015

மந்திரச்சடங்குகளும் பண்பாட்டு அசைவுகளும்

 

உதயசங்கர்

mulaippaari

ஆதியில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மந்தைகளாக வாழ்ந்தனர். கைகளின் உழைப்பின் வழியே மூளை வளர்ச்சி பெற பகுத்தறிவு பிறந்தது. பகுத்தறிவு வளர இனக்குழுவாக மாறினர். மந்தைகளாக இருந்த போது இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஆதிமனிதர்கள் இனக்குழுவாக மாறிய போது இயற்கையுடன் போராடி தங்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மாற்றத்தொடங்கினர். குகைகளிலிருந்தும் மரப்பொந்துகளிலிருந்தும் வெளியேறி குடியிருப்புகளைக் கட்டிப்பார்த்தனர். விவசாயம், மீன் பிடித்தல், துணி நெய்தல், கால்நடைகளை வளர்த்தல், போன்ற தொழில்களை செய்யத் தொடங்கினர். இயற்கையின் மீதான அவர்களுடைய தலையீடு எப்போதும் சாதகமாக இல்லை. இயற்கையின் இயக்கவியலைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவர்களுடைய பகுத்தறிவோ, அறிவியலறிவோ முதிர்ச்சி பெற வில்லை. எனவே அவர்கள் இயற்கையில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற இறந்து போன அனைத்துப்பொருட்களிலும் ஆவி இருப்பதாக கற்பனை செய்தனர். அந்த ஆவிகள் தான் தங்களின் மீது வினை புரிகிறது என்று நம்பினர். அதனால் அந்த ஆவிகளை வழிபடுவதன் மூலம் தங்களுக்கு தேவையான நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதே போல தங்களுக்குத் தீமை செய்யும் கெட்ட விளைவுகளைக் கட்டுபடுத்தலாம் என்று நினைத்தனர். அதற்காக கற்பனைச்சித்திரங்களை உருவாக்கி அதன் மூலம் புறவயமான யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கருதினர்.

இந்த வழிபாட்டு முறையே மந்திரச்சடங்குகளாக மாறியது. மொழி தோன்றுவதற்கு முன்னால் இந்த ஆதி மந்திரங்கள் வெறும் பாவனையாக மட்டுமே இருந்தது. மந்திரங்களை உருவாக்கியதற்கு ஆன்மீக அல்லது கடவுள் நம்பிக்கை காரணமல்ல. பொருளாதாரக்காரணங்கள் தான். ஆரம்ப காலத்தில் உற்பத்திக்கருவிகளும் திட்ட மிட்ட விளைவுகளை உருவாக்குகிற அளவுக்கு சிறப்பாகவோ, போதுமானதாகவோ இல்லை. எனவே இந்த மந்திரச்சடங்குகள் மனிதர்களின் உளவியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதனால் உழைப்புச்சக்தி அதிகமானது. அதாவது உற்பத்திக்கருவிகளின் போதாமையை இந்த மந்திரச்சடங்குகள் ஈடுகட்டியது. இந்த வகையில் அப்போது மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளின் ஒரு அங்கமாகவே திகழ்ந்தது. மனிதனுடைய பொருளாதார , வாழ்வாதார செயல்பாடுகள் அனைத்திலும் மந்திரச்சடங்குகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.

குழந்தைப்பருவத்தில் இருந்த மனித குலம் காலப்போக்கில் வழிபட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களுக்கும் மனித உருவங்களைக் கற்பனை செய்தது. மனிதன்..குலமரபுச்சின்னங்களை உருவாக்கினான். தொன்மங்களை உருவாக்கினான். அறிவியலறிவின் ஆதிப்பருவத்தில் இருந்த மனிதன் இந்தக் கற்பனையான உருவங்கள் அதீத ஆற்றல் கொண்டவையென நமபத் தொடங்கினான். ஆக ஆரம்பத்தில் மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளோடு உற்பத்திக்கருவியாகவே செயல்பட்டிருக்கிறது.

உற்பத்திக்கருவியாகச் செயல்பட்ட மந்திரச்சடங்குகள் உற்பத்தி சக்திகளைக் ( இயற்கை) கட்டுப்படுத்தி தங்களுக்குத் தேவையான உற்பத்தியைப் பெருக்க முயற்சித்தன. எனவே தான் இத்தகைய மந்திரச்சடங்குகளில் இயற்கையின் செயல்களை ஒத்த செயல்களையே பாவனையாக செய்து வழிபட்டனர். கனடாவில் உருளைக்கிழங்கு வளர்வதற்காக உருளைக்கிழங்குச் செடி எப்படி செழிப்பாக வளர வேண்டும் என்று பாவனை நடனம் ஆடினர். .பிரேசிலில் மழை வேண்டி வாயில் தண்ணீரை வைத்து மழை பொழியும் சத்தம் போல ஒலியெழுப்பவர். பின்னர் கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து வானில் எறிந்து இதோ பார்.. இது போலவே செய்.. என்று சத்தமிடுவார்கள். நமது ஊர்களில் பயிர்கள் செழித்து வளர்வதற்கு நவதானியங்களை விதைத்து முளைப்பாரி வளர்த்து அம்மனை வழிபாடு நடத்துவது, உரக்குழி அம்மன் வழிபாடு, என்று பெரும்பாலும் விவசாய வேலைகள் சார்ந்தே சடங்குகள் இருக்கின்றன. அம்மனை வழிபடுவதற்கான காரணம் புராதன சமூகத்தில் பெண்களே விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் ஆவர். அதுமட்டுமில்லாமல் மனிதகுல உற்ப்பத்திக்கும் காரணமாக இருக்கும் பெண்களைச் செழிப்பின் அடையாளமாகவே புராதன சமூகம் கண்டது. அதே போல தானியங்களைப் பெண்களாக உருவகிப்பதும் பல நாடுகளில் இருக்கிறது.

உழைப்பினோடு இயைந்த மந்திரசடங்குகளில் உடலசைவுகள், அருள் வந்து ஆடுதல், பொங்கலிடுதல், போன்ற சடங்குகளில் ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்ற நம்பிக்கையே தொழிற்படுகிறது. இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் கூட வேளாண்சமூகத்தின் செயல்பாடுகளே பாவனையாகச் செய்யப்படுகின்றன. தீயாற்றுகிற சடங்கின் போது இறந்தவரின் எலும்புகளை எடுத்து வைத்து நவதானியங்களை விதைத்து பயிரிட்டு அவை முளைத்து செழிப்பாக வளர்வதை ஒத்த சடங்குகளை நாம் பார்க்கலாம். உற்பத்திக்கருவிகளைக் கும்பிடுதல், இயற்கையை வழிபடுதல், படையல் வைத்தல் பலியிடுதல், போன்ற செயல்கள் உற்பத்தி சக்திகளை திருப்திப்படுத்துவதாகவும், வேண்டுவதாகவும், கட்டளையிடுவதாகவும் அமைகின்றன. இத்தகையச் சடங்குகள் வேட்டைச்சமூகத்தில் தோன்றி வேளாண்மை சமூகத்தில் வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இனக்குழுக்கள் தங்களுக்குத் தேவையான உற்பத்தியை அதிகரிக்கவே இத்தகைய மந்திரச்சடங்குகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் ஒவ்வொரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளும், பண்பாட்டு சேகரங்களும் கலந்திருக்கும். இந்தச் சடங்குகளை நிகழ்த்த தனியான மந்திரங்கள் பொதுவாக இல்லை. அந்தந்த இனக்குழுவிலுள்ள ஒருவரே இந்தச் சடங்குகளை நிகழ்த்துபவராக இருப்பார். இந்தச் சடங்குகள் நிகழும் காலம் தவிர மற்ற காலங்களில் அவரும் இனக்குழுவில் ஒரு அங்கத்தினராக உழைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பார். இந்த மந்திரச்சடங்குகளில் கூட்டான உளவியல் சக்தி ஓருமுகப்படுத்தப்பட்டு புறவயமான யதார்த்தத்தின் மீது வினை புரிந்து அதை மாற்றுகிறது.

புரோகிதச்சடங்குகள்

இதற்கு மாறாக புரோகிதச்சடங்குகள் எல்லாம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக ரிக் வேதத்திலும், யஜூர், அதர்வ வேதங்களிலும் ஏராளமான யாகவேள்விகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 400 யாகவேள்விகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேதங்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இயற்றப்பட்டவை. நாடோடிகளாக, ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இனம் சிந்து சமவெளியை ஆக்கிரமித்து அங்கிருந்த தஸ்யூக்களோடு சணடையிட்டு நிலைபெறத்தொடங்கிய காலத்தில் தங்களுடைய போர்வெற்றி, பகைவர் அழிவு, பாபச்செயல்கள், நோய் சாந்தி, கருவுறுதல், கருப்பாதுகாப்பு, அன்ன சித்தி, ஐஸ்வரியம், இதையே அஸ்வமேத யாகம், ( ராஜீய அதிகரிக்க நடத்தப்படும் யாகம். இதில் குதிரையைப் பலி கொடுப்பர் ) ராஜசூய யாகம்,( அரசர்கள் தங்கள் மேலாண்மையை சிற்றரசர்களுக்கு அறிவிக்க நடத்தப்படும் யாகம். இந்த யாகத்தில் சூதாட்டம் ஒரு முக்கியமான சடங்கு ) புருஷமேதம்,( நரபலி கொடுக்கும் யாகம்) கோமேத யாகம்,( பசுவைப் பலியிட்டு அதன் பாகங்களை பிராமணர்கள் பங்கிட்டுக் கொள்கிற யாகம்) சர்வ மேதம்,( தானாக முன்வந்து அக்னியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் யாகம் ) சுதர்சன யாகம் ( எதிரிகளை அழிக்கச்செய்யப்படும் யாகம் ) என்று எல்லாயாகங்களிலும் தீ வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி, பால் நெய் போன்ற பொருட்களை தீயிலிட்டு, புரியாத மந்திரங்களை ஓதி தங்களுடைய ஆன்மீகமேலாண்மையை நிலை நாட்டிக் கொண்ட புரோகிதர்களின் காலம் அது. இன்றும் புரோகிதச்சடங்குகள் இன்று பரவலாகி விட்டன. புதுமனைப்புகுவிழாவுக்கு கணபதி ஹோமம், திருமணச்சடங்கு, பெண் பூப்பெய்த தீட்டுக்கழிக்கும் சடங்கு, குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு, இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு என்று வாழ்நாள் முழுவதும் புரோகிதச்சடங்குகள் எல்லோர் குடும்பங்களிலும் நடந்து கொண்டேயிருக்கின்றன. புரோகிதச்சடங்குகளில் எல்லாம் மாடு மிகுந்த முக்கியத்துவம் பெறும். மாட்டு மூத்திரம் இல்லாமல் எந்தச் சடங்கும் இருக்காது. காரணம் அவர்களுடைய வேள்விகளிலெல்லாம் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டு உணவாக்கப்பட்டன. ரிக் வேதப்பாடல்களில் பலியிடப்படும் மாடுகளின் எந்தெந்தப் பகுதிகள் எப்படிப்பட்ட சுவையுடன் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இப்போது நடத்தப்படும் எல்லாச்சடங்குகளிலும் பலிப்பொருட்கள், உயிர்களின் பெயர்களைச் சொல்லும் மந்திரங்கள் இருக்கும். ஆனால் அதற்கு மாற்றாக வேறு பொருட்களை வேள்வியில் இட்டுக் கொள்வார்கள்.

தீ வளர்த்து செய்யப்படும் புரோகிதச்சடங்குகள் எந்த உற்பத்தியோடு தொடர்புடையவை? உற்பத்தியோடு எந்தத் தொடர்புமில்லாத யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படுகின்ற வேத மந்திரங்களின் உண்மையான அர்த்தமே ஆரியர்களின் போரும் அதன் வெற்றியும் ஆக்கிரமிப்பும், பகைவர் அழிப்பும் அவர்களுடைய செழிப்பும் தான். தந்தைவழிச்சமூகமான ஆரியர்கள் தங்களுடைய சடங்கு முறைகளை ரிஷிகோத்திரம் என்று சொல்லப்படுகிற தந்தைவழி கோத்திரம் சார்ந்தே நடத்துகின்றனர். ஆனால் தாய் வழிச்சமூகமாகவே வெகுகாலம் இருந்த உழைப்பாளி மக்களுக்கு அந்தக் கோத்திரம் கிடையாது.. ஏழு ரிஷிகளின் கோத்திரத்தில் வந்த பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே கோத்திரம் சிவகோத்திரம் தான். இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட புரோகிதச்சடங்குகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியர்கள் இயற்றிய இந்த வேதங்கள் இன்றும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருப்பதற்கான அடிப்படையான காரணம் மநு தர்மம். மநு தர்மத்தில் வேதங்களைப் பகுத்தறிய முயலக்கூடாது. அவை கடவுளுடைய வார்த்தைகள். அதை ஓதுகிற புரோகிதர்களும் கடவுளுக்கு நிகரானவர். வேதங்களைக் கேள்வி கேட்கவோ, ஆராயவோ கூடாது என்று ஆன்மீக அதிகாரத்தை வேதங்களுக்கு ஏற்றி வைத்ததன் காரணமே இன்றும் அவை செல்வாக்கோடு இருக்கிறது..

எல்லாவற்றையும் தன்வயப்படுத்துவதின் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் பிராமணியம் இப்போது இந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளையும் கபளீகரம் செய்து அதற்கு சமஸ்கிருதத்தன்மையை ஏற்றுகிறது. உதாரணத்துக்கு அறுவடைத்திருநாளான பொங்கல் மகர சங்கராந்தியாக மாற்றப்படுகிறது. உழைப்பாளிகள் தங்களுடைய உற்பத்திக்கருவிகளைக் கும்பிடும் நாள் இன்று சரஸ்வதி பூஜையாகி விட்டது. கார்த்திகைத்திருவிழா தீபாவளிக்கு முன்னால் ஒளி மங்கி விட்டது. இது போக பௌணர்மி, அமாவாசை, பிரதோஷம், பாட்டிமை, அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எம கண்டம், சூலம், பரிகாரம் என்று வாழ்க்கை முழுவதும் பிராமணியமாக்கல் நடக்கிறது. எல்லோர் வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குச் சற்றும் புரியாத புரோகிதச்சடங்குகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. வீடு கட்டினால் கணபதி ஹோமம், குழந்தை பிறந்தால் பெயரிடும் சடங்கு, பெண் பெரியவளானால் புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக்கழிக்கும் சடங்கு, திருமணச்சடங்கு, இறந்தவருக்கு திதி கொடுக்கும் சடங்கு, சந்தானப்பாக்கியத்துக்குச் சடங்கு, என்று பெரும்பாலும் புரோகிதச்சடங்குகள் நடைபெறாத வீடுகளே இல்லை எனலாம். இதற்கு முக்கியமான உளவியல் காரணம் பிராமணியத்தின் மேல்நிலையாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தப்படும் சடங்குகள் சமூகத்தில் மதிப்பு மிக்கவையாக இருப்பதனால் முன்பை விட இப்போது பிராமணப்புரோகிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

புராதன சமூகத்தில் தோன்றி நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலைபெற்ற இந்த மந்திரச்சடங்குகள் இன்றைய நவீன முதலாளித்துவ காலத்தில் பொருளற்றவை தானே. அறிவியல் வளர்ச்சியையும் நவீன விஞ்ஞான சாதனங்களின் கண்டுபிடிப்பையும் முதலாளித்துவம் தன்னுடைய லாபவேட்டைக்குப் பயன்படுத்துவதற்காக நிலப்பிரபுத்தோடு செய்துகொண்ட சமரசத்தினால் மீண்டும் பழமைவாதமும், சநாதனவாதமும், மதவெறியும் முன்னுக்கு வந்திருக்கின்றன. உலக நிதி மூலதனத்தின் நெருக்கடிகளைத் தற்காலிகமாகத் திசை திருப்ப இவை உதவக்கூடும். மக்களிடம் அறிவியல் நோக்கோடு கூடிய சமூகப்பார்வையை வளர்ப்பதும்தான் மநுவையும், புரோகிதச்சடங்குகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிப்பதற்கு உதவும்.

துணை நூல்கள்- 1) மந்திரமும் சடங்குகளும்-ஆ.சிவசுப்பிரமணியன்

2) வேதங்கள் ஒரு ஆய்வு—சனல் இடமருகு

நன்றி-வண்ணக்கதிர்

yagam

1 comment:

  1. மக்களிடம் அறிவியல் நோக்கோடு கூடிய சமூகப்பார்வையை வளர்ப்பதும்தான் மநுவையும், புரோகிதச்சடங்குகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிப்பதற்கு உதவும்.
    உண்மை ஐயா
    உண்மை நன்று சொன்னீர்
    நன்றி ஐயா

    ReplyDelete