Showing posts with label கே.என்.பணிக்கர். Show all posts
Showing posts with label கே.என்.பணிக்கர். Show all posts

Monday, 30 July 2012

சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2

சடங்குகளும் சுயபோராட்டமும்

உதயசங்கர்

emotion-chart-with-picture-reflection

சிந்தனையில், சமூகச்செயல்பாடுகளில் முற்போக்காகவும், சொந்த குடும்ப வாழ்க்கையில் பிற்போக்கான சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவுமான இரட்டைநிலை கொண்ட தோழர்களை நான் அறிவேன். இதற்கு அவர்கள் மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. பண்பாட்டுத் தளத்தில் நாம் புதிய செயல்பாடுகளைச் செய்யத் தவறியதே காரணம். அது மட்டுமேயல்லாமல் அரசியல் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குக் கொடுத்த அளவுக்கு சிறிதளவேனும் முக்கியத்துவம் பண்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கொடுக்கவில்லை என்பதும் யதார்த்தமான உண்மை. நம்முடைய படைப்பாளிகள் முற்போக்கான படைப்புகளை படைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலத்திற்கேற்ற படைப்புகளாக இருக்கின்றனவா என்று நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.முதலாளித்துவ, மதவாத, பண்பாட்டு நடவடிக்கைகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதிலிருந்து அதைச் செரித்துக் கொண்டு புதிய பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதங்களைத் துவக்கியிருக்கிறோமா?

இல்லையெனில் எல்லாபிற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் சமரசம் செய்து கொண்டு ஆனால் அதே நேரம் அரசியல்ரீதியாக முற்போக்காகவும் திகழ்கிற போலிக் கம்யூனிஸ்ட்கள் பெருகி விடும் ஆபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

என் வாழ்வில் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிராக நான் நடத்திக் கொண்டிருக்கிற போராட்டம் மேடு பள்ளங்களைக் கொண்டது தான். நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே சாமி கும்பிடுவதை நிறுத்தி விட்டேன். எனக்குப் பத்தாவது வகுப்பில் தமிழாசிரியராக வந்த குருசாமி வகுப்பில் சொன்ன பகுத்தறிவுக் கருத்துகள் என்னை எதனாலோ ஈர்த்தன. வீட்டிலும் ரெம்ப பழமைவாதம் கிடையாது. ஊரோடு ஒத்துப் போவதற்காக நல்லநாள் கொண்டாடுவார்கள். மற்றபடி வீட்டிற்கு மிக அருகில் இருந்தாலும் கோவிலுக்குச் செல்லும் பழக்கமெல்லாம் வீட்டிலுள்ள யாருக்கும் கிடையாது. அதனால் பெரிய நெருக்கடி ஒன்றும் கிடையாது. அதற்கு முன்பு எட்டாம் வகுப்பு வரை மார்கழி மாதம் விடிகாலைக் குளிரில் எழுந்து குளித்து விட்டு கந்தபுராணத்தையும், விநாயகர் அகவலையும் சத்தம் போட்டு பாடிக் கொண்டே செண்பகவல்லியம்மன் கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வந்தவன் தான். ஆனால் குருசாமி வாத்தியாரின் வகுப்புகள் என்னை ஏதோ செய்தது. அது மட்டுமல்ல என்னுடைய அருமை நண்பனான நாறும்பூநாதனின் நட்பும் ஒரு காரணம். அவனுடைய அண்ணன் ஆர்.எஸ்.மணி மூலமாக அவன் நிறைய முற்போக்கான கருத்துகளைக் கற்றுக் கொண்டு எங்களிடம் வந்து கொட்டுவான். முதலில் அதை எதிர்த்துப் பேசி பின்னர் அது ஆழமாக மனசில் பதிந்து விட்டது. கல்லூரிக் காலத்தில் புத்தகவாசிப்பின் மீதான ஆர்வம் எழுத்தை நோக்கி உந்தித் தள்ள நண்பர்கள் நாங்கள் கையெழுத்துப் பத்திரிகை துவங்கி தமுஎசவில் வந்து சேர்ந்தோம். அப்போது வாசித்த நூல்கள் மதம், சாதி, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் குறித்த புரிதலைத் துவக்கி வைத்தது.

1987-ல் என் திருமணநிகழ்வினை எந்த சாஸ்திரமும் சடங்கும் இல்லாமல் நடத்த பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அது தான் முதல்முறையாக நான் சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களின் வலிமையை உணர்ந்த நாட்கள். வீட்டுப் பெரியவர்களின் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியதாயிற்று. அந்த விரோதம் என்னுடைய அப்பா, அம்மா, இருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.ஆனால் என்னுடைய பிடிவாதம், பால்வண்ணம், பாலு, தேவப்ரகாஷ், போன்ற தோழர்களின் ஒத்துழைப்பினால் சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான என்னுடைய முதல் போர் வென்றது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாலி எடுத்துக் கொடுக்க கைதட்டுதலோடு கலியாணம் முடிந்தது. என்ன பேசியும் தாலியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதையும் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு என் துணைவியார் துறந்து ஒரு பதக்கச் சங்கிலியை அடையாளமாக அணிந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் தோழர்கள் திருமணம் பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இப்போது அதே தோழர்கள் அவர்கள் அவர்களுடைய திருமணத்தைத் தவிர வீட்டில் நடைபெற்ற அத்தனை விழாக்களையும் சடங்குகள் சகிதம் நடத்தியதையும் கண்டேன். இப்போது காலம் தன் சட்டையை உரித்து மீண்டும் அதே பழைய சனாதன உருவத்தோடு காட்சியளிக்கிறது.

என் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தும் சடங்கை என்ன சொல்லியும் என்னால் தடுக்க முடியவில்லை. சலூனில் மொட்டை போடும் என் யோசனைக்கு எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருமணத்துக்குப் பிறகு எல்லாமே குடும்பவிஷயமாக(?) மாறிவிடுவதால் தோழர்களும் தலையிடவில்லை. கடைசியில் சாத்தூர் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் அந்தச் சடங்குகள் நடந்தன. நான் தோல்வியடைந்தாலும் அய்யர் இல்லாமல் நாட்டார்தெய்வக் கோவிலில் வைத்துத் தானே நடக்கிறது என்று மீசையில் ஒட்டிய மண்ணைப் பெருமையுடன்(!) துடைத்துக் கொண்டேன். என் பெண்குழந்தைகள் பருவமடைந்ததை நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை. எந்த விதமான சடங்கும் செய்யவல்லை. என் துணைவியாருக்கோ குழந்தைகளுக்கோ அதில் வருத்தமில்லை.ஆனால் உறவினர்கள் திட்டினார்கள். தோழர்களும், நண்பர்களும் கூட வருத்தப்பட்டார்கள். சடங்கு முக்கியம் என்றார்கள். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக் கழிக்கிற சடங்கைச் செய்த தோழர்கள் வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வந்தார்கள். யாரும் என் வீட்டுக்கு வரவில்லை.அப்போது என் துணைவியார் கொஞ்சம் நம்பிக்கையிழந்தார். நான் சடங்கின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன். ஆனால் நம்பிக்கையிழக்கவில்லை.

என் தந்தையார் இறந்தபோது உறவினர்கள் எல்லோரும் நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது தோழர். சக்தி கூட இருந்ததால் அதைச் சுலபமாகக் கடந்து விட்டேன்.கொள்ளிச்சட்டி தூக்கவோ, மொட்டை போடவோ வேறு எந்த சடங்கையும் செய்யவும் மறுத்து விட்டேன். எல்லோரும் என்னை வேற்றுக் கிரகமனிதனைப்போல பார்த்தார்கள். சிலர் கொள்கையெல்லாம் சரிதான் அப்பாவுக்குத் தானே செய்றீங்க என்று சொன்னார்கள். அந்த நேரம் அப்பா இறந்து போன துக்கத்தை என்னால் முழுமையாக அநுபவிக்க முடியவில்லை என்பது உண்மை தான். இந்தச் சடங்குகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற சிந்தனையே எனக்குள் ஒரு இறுக்கத்தையும், பிடிவாத உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் தம்பிகள் இந்தச் சடங்குகளைச் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. என்பாடே பெரும்பாடாக இருந்தது. ஏற்கனவே கோட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருந்ததால் என் தாயார் இறந்தபோது யாரும் என்னை வற்புறுத்தவில்லை.

சொந்த வீடு கட்டும் போதும் சரி, கட்டி முடித்த பிறகும் சரி எந்தச் சடங்கையும் செய்ய மறுத்து விட்டேன். கிரகப்பிரவேசம் என்று சொல்லப் படுகிற சடங்கையோ, கணபதி ஹோமம் என்ற பெயரில் புது வீட்டுக்குள்ளே மாட்டைக் கூட்டிக் கொண்டு போய் சுத்திக் காண்பித்து அதன் மூத்திரத்தை வீட்டுக்குள்ளே தெளித்து அதுக்கு ஒரு விஞ்ஞானவிளக்கமும் கொடுத்து செய்கிற சடங்கையோ செய்யவில்லை. கிரகப்பிரவேசம் கணபதி ஹோமம் நடத்தி விழா எடுத்த தோழர்கள் வீட்டுக்கு எல்லோரும் போனார்கள். ஆனால் நான் அழைத்தும் யாரும் என் புது வீட்டுக்கு யாரும் வரவில்லை. நாங்கள் பல நாட்கள் எங்களுடைய புது வீட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தோம். பத்திரிகை அடித்து நேரில் சென்று அழைத்து ஸ்பீக்கர் செட் அலற நான் முன்பு சொன்ன சடங்குகள் செய்து சாப்பாடு போட்டால் எல்லோரும் குதூகலமாக வந்து போகிறார்கள். எந்தச் சடங்கையும் செய்யாமல் நீங்கள் சும்மா அழைத்தால் யாரும் தோழர்கள் உட்பட யாரும் வரத்தயாரில்லை. எல்லோரிடமிருந்தும் தனிமைப் பட்ட உணர்வு வந்ததென்னவோ உண்மை தான். என் துணைவியாரும் “ என்னமோ தோழர்கள் அதையெல்லாம் பாக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க..” என்று வறுத்து எடுத்து விட்டார். சடங்குகளின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன்.

1987-லிலேயே வீட்டில் மாட்டுக்கறி எடுத்து சமைப்பதற்குப் பழகியிருந்தோம். இப்போதும் நானே போய் மாட்டுக்கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுகிறோம். அதே போல வெள்ளைப்பன்னிக்கறியும்( கறுப்பு பன்னி மீது இன்னமும் என் வீட்டிலுள்ளவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. நானும் இந்த வரைக்கும் வந்தார்களே என்று சும்மாயிருந்து விட்டேன்.) வீட்டில் சமைத்துச் சாப்பிடுகிறோம். எனக்கு என் துணைவியாரோ,என் மூத்த மகளோ தான் முடி வெட்டி விடுகிறார்கள். எந்தக் குழப்பமும் இல்லை. உண்மையில் சாதிய நடைமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை மறுத்து அதைக் கடந்து செல்லவே பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். விழுதலும் எழுதலுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் நானறியாமல் பல சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களுக்குத் துணை போயிருக்கிறேன். என் தம்பிகள், தங்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருந்திருக்கிறேன். நான் மட்டும் சரியாக இருந்து கொள்கிறேன் மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்ற சுயபெருமித உணர்வுதான் காரணம். இதெல்லாம் பெருமை பேசுவதற்காகவோ யாரையும் குற்றம் சொல்வதற்காகவோ இல்லை. தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து முற்போக்கான அரசியலைப் பேசி, அதற்காகப் போராடிய தோழர் இறந்த பிறகு அப்படியே அவரை அவருடைய சாதியின் கையில் சடங்குகளின் கையில், சாஸ்திரங்களின் கையில், சம்பிரதாயங்களின் கையில் ஒப்படைத்துவிட்டு வாளாவிருப்பது என்ன நியாயம்?

,விரைவில் புரட்சி நடந்து விடும் புதிய கலாச்சாரம் வர்க்கபேதமற்ற, சாதி சமயங்கள் ஒழிந்த, சாஸ்திர, சம்பிரதாயங்கள், அழிந்த ஒரு புதிய சமூகம் பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கையளித்த இடதுசாரிகள் இப்போது மோசமாகிக் கொண்டேயிருக்கும் சாதி மத மயமாக்கப்பட்ட சூழலில் யுத்தகளத்தில் இல்லையோ என்ற அச்சம் வருகிறது.

1990-களில் அத்வானி ” ஆட்சி அதிகாரத்தை விட குடிமைச்சமூகமே எங்களுக்கு முக்கியம்.” என்று சொன்னார். அதில் பெரிய அளவுக்கு அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது. வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் சொன்னதைப் போல அரசியல் ரீதியாக மதவாத சக்திகளை எதிர்கொள்கிற இடது சாரிகள் பண்பாட்டு ரீதியாக வலுவாக எதுவுமே செய்யவில்லை. இதனால் நம் கண்முன்னே குடிமைச்சமூகம் மதவாத சக்திகளிடம் போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவோ, எதிர்கொள்ளவோ, நம்மிடம் திட்டமில்லை. சாதி மத, சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிரான எந்த முயற்சியும் இல்லை. முற்போக்கு பண்பாடு குறித்த விவாதத்தைத் துவங்கவே யில்லை. மிகுந்த உற்சாகத்துடன் என்னுடன் இணைந்து சாஸ்திர, சடங்கு, சம்பிரதாய மறுப்புகளைச் செய்து வருகிற என் துணைவியார், இப்போது சற்று சோர்ந்து போயிருக்கிறார்.

என் மூத்த மகள் சொல்கிறாள், “ நாம ஒரு சதவீதம் தானே இருக்கோம்… சுத்தி எல்லோரும் வேற மாதிரி தான இருக்காங்க ”

“ ஒரு சதவீதம் நூறு சதவீதமாகும் நாள் சீக்கிரம் வந்துரும் “ என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். ஏனென்றால் எதிர்காலச் சந்ததிகள் அவர்கள் தானே. அவர்கள் நம்பிக்கையிழக்கலாமா? ஒரு புதிய பண்பாட்டுப்போரைத் துவக்க வேண்டிய தருணம் இது. நம்முடைய முற்போக்கு பண்பாட்டு நிகழ்ச்சிநிரலை ஆரம்பிக்க வேண்டிய காலம் இது.

நன்றி - தீக்கதிர்

Tuesday, 24 July 2012

சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1

Yajna_14150

 

உதயசங்கர்

 

பண்பாடு என்பதன் பொருளாக ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள், அந்த இனக்குழுவின் தோற்றம், வளர்ச்சி, தங்களை நிலை நிறுத்துவதற்கான போராட்டம்,பெருமை, இவற்றைப் பிரதிபலிக்கிற நடைமுறை வாழ்க்கையையும், கருத்துருவான வாழ்க்கையையும் சொல்லலாம். இதை வெளிப்படுத்தவே சடங்குகள் என்று சொல்லப் படும் பண்பாட்டு நிகழ்வுகளை வாழ்க்கை முழுவதும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அறிவியல் வளராத காலகட்டத்தில் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கருத்துருக்களுக்கு ஏற்பவும், பழைய வரலாற்றை நினைவு கூர்ந்து அதைத் திரும்பச் சொல்லும் முறையிலும் சடங்குகளின் நடைமுறை இருந்தது. ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுக்குள்ளும் சடங்குகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டன. அது அந்த இனக்குழுவின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குமப்பால் உளவியல் ரீதியாக அந்த இனக்குழுவின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, உற்பத்தி உறவுகளின் ஊடாடல், இவற்றை முன்னிலைப்படுத்துவதாகவும் இருந்தது. பண்பாட்டு, சடங்குகள், இவற்றின் அடிநாதமாக கொண்டாட்ட மனநிலை இருப்பதைக் காணலாம். அடுத்தது இனக்குழு கூடி வர்த்தமானங்களை, சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு இடமாக அந்த விழாக்கள் அமைகின்றன. தங்களுடைய பூர்வீகத்தை, மூதாதையரை நினைவு கூர்ந்து மீண்டும் ஒரு தங்கள் இனக்குழு அடையாளத்தை உறுதி செய்கிற நிகழ்வாகவும் இருக்கிறது. தங்களுக்கேயுரிய பண்பாட்டு அசைவுகளை மீளவும் ஒரு சடங்காக செய்து பார்க்கிற நிகழ்வாகவும் பண்பாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன.

என்று பிராமணியம் தன்னுடைய மனுதர்மசாஸ்திரத்தின் மூலம் இந்திய சமூகத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டுவந்ததோ அன்றிலிருந்து பண்பாட்டு நிகழ்வுகளில் பிராமணமதச்சடங்குகளும் இடம் பெற ஆரம்பித்தன. அவற்றை இடம் பெறச் செய்வதில் இந்து சமயமும், புராண, இதிகாசங்களும் பெரும்பங்காற்றின. அதற்கு முன்பு வரை இருந்த நாட்டார்சமய மரபின் இளகிய தன்மையை இறுகச் செய்தது பிராமணமதம் தான். பிராமண மதத்துக்கான அரசு அங்கீகாரம், ஆதரவு மற்ற நாட்டார்சமய மரபுகளையும் மேல்நிலையாக்கத்தினை நோக்கி உந்தித் தள்ள ஆரம்பித்தது. மனுதர்மசாஸ்திரத்தின் உருக்குபோன்ற விதிமுறைகளை மாற்றவோ, உடைக்கவோ முடியாததினால் பிராமண மதத்தின் சடங்குகளைப் போலச் செய்தலின் மூலம் தங்களையும் அந்தக் கண்ணிக்குள் சேர்த்துக் கொள்கிற யத்தனம் நால்வருணங்களில் உள்ள கீழ்வருணங்களிலும், அவர்களைப் பார்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் செய்தனர். அரச ஆதரவு பெற்ற மதமாக இருந்த காரணத்தினால் சாம, தான, தண்ட, பேத முறைகளில் பிராமண மதம் தன்னுடைய சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் அத்தனையையும் மொத்த சமூகத்துக்குள்ளும் மிகச் சுலபமாகத் திணித்து விட்டது.

இனக்குழுக்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து பிராமணீயத்தின் சூழ்ச்சியான சாதியப்படிநிலைகளை ஏற்றுக் கொண்டனர். உட்பிரிவுகளும் உருவாயின. இப்போது சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் சாதியப்படிநிலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், , ஒவ்வொரு சாதியும் தங்களுக்குக் கீழ் உள்ள சாதியின் மீதான தங்களது மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவுமான நினைவூட்டலாக மாறி விட்டது. அந்தந்தச் சாதியினர் தங்களது எல்லைகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்கிற ஏற்பாடாகவும் ஆகி விட்டது. அப்படியே ஏதேனும் மீறல்கள் நடந்தால் அதை அரசின் ஆதரவோடு அடக்கி ஒடுக்கவும் தயாராக மேல்நிலையிலுள்ள உள்ள சாதியினர் தயாராகின்றனர். சாதியப்படி நிலையில் உள்ள தங்களது நிலையை மனதார ஏற்றுக் கொள்ளவே சமய இலக்கியங்கள் புனையப்பட்டு திரும்பத் திரும்ப பாராயாணம் செய்யப்பட்டு, மக்கள் மனதின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். எனவே சாதியைப் பற்றி யார் பேசினாலும், யாரிடமும் என்ன சாதி என்று கேட்டாலும் அதைக் கேவலமானதாக கேட்பவரும் நினைப்பதில்லை.பதில் சொல்பவரும் நினைப்பதில்லை. விஷவிருட்சமாய் வேரோடிப் போயிருக்கும் இந்தச் சாதிய மனநிலைகளையும், அதைக் காப்பாற்றும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களையும் வேரோடு வெட்டியெறிய ஜோதிபா பூலேவையும், அம்பேத்காரையும், பெரியாரையும் தவிர வேறு யாரும் தீவிரமாக முயற்சித்ததாகத் தெரியவில்லை. சமூகசீர்திருத்தவாதிகள் இந்து சமயத்தோடு சமரசமுயற்சியே செய்தனர். அவர்கள் சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்த போதும் அவற்றின் உயிரான மனுதர்மசாஸ்திரத்தை எதிர்ப்பதற்கான வேலைத் திட்டம் அவர்களிடம் இல்லை. அது மட்டுமல்ல சூழ்ச்சித் திறன் மிக்க பிராமண மதம் எல்லா சமயச்சீர்திருத்தவாதிகளையும் உட்கிரகித்துக் கொண்டு தன்னைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கதாக மாறிக் கொண்டேயிருக்கிறது.k.n.panikkar

முன்னெப்போதையும் விட இப்போது அடையாள அரசியலின் எழுச்சி காரணமாக எல்லாச்சாதிகளும் தங்கள் சாதிய அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கவும், சாதியப்பெருமைகளைப் பேசவும், தங்கள் குடும்ப விழாக்களிலும், கோவில் விழாக்களிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்கிற நிலைமையைக் காணலாம். பிராமணமதம் மீண்டும் ஒரு முறை தன்னை மறுமலர்ச்சி அடையச் செய்து கொண்டுள்ளது. சாஸ்திர, சம்பிரதாய , சடங்குகளின் உயிராக பிராமண மதம் இருக்கிறதென்றால் அதன் உடலாக சாதிகள் இருக்கின்றன, அவைகளே பண்பாட்டுச்சூழலைத் தீர்மானிக்கின்றன. கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பிரதோஷம், அஷ்டமி, நவமி, என மைல் கணக்கில் கூட்டம் கோவில்களில் கியூவரிசையில் நின்று கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாக்கோவில்கள் மீதும் படையெடுக்கிறார்கள். முன்னெப்போதையும் விட சாமியார்கள், ஜோசியர்கள், கடல்மணலைப் போலப் பெருகியிருக்கிறார்கள். எந்த எதிர்ப்பும் இல்லாமல் ராஜபாட்டையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன சாதிய, மத வாத சக்திகள். இதையெல்லாம் எதிர்த்து மிகப்பெரும் போரை நடத்த வேண்டிய இடது சாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்காரியவாதிகளிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. அதனால் அந்தந்த அமைப்புகளுக்குள்ளேயே சாதிய, மத, சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களோடு சமரசம் செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் பண்பாட்டுச் சூழல் குறித்து போதிய கவனமின்மை தான். இதனால் குடிமைச்சமூகத்தைக் கைப்பற்றுவதற்கு அடுத்த இருபது முப்பது ஆண்டுகளுக்கான திட்டத்தை மதவாத சக்திகள் உருவாக்கியிருக்கிற போதும் அடுத்த ஆண்டுக்கான திட்டமே இல்லாமல் இடதுசாரிகள் இருப்பது கவலைக்குரியது.

முன்னெப்போதையும் விட நமது பண்பாட்டுச் சூழல் உலகமயம், சநாதனமயம் என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலாளித்துவம் தன்னுடைய உச்சக்கட்ட சுரண்டலான உலகமயமாக்கலின் மூலம் எல்லாநாடுகளிலிருந்தும் பொருள்வளத்தைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிற வேலையைச் செய்கிறது. அந்தந்த நாட்டு மக்களின் தனித்துவமிக்க, பன்முகக்கலாச்சாரத்தை தன் பகாசுர சக்தியினால் ஒடுக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதே நேரம் இந்த மேற்கத்திய உலகமயமாக்கலின் கலாச்சாரச்சீரழிவுகளை எதிர்ப்பதான பாவனையில் சநாதனமும், பழமைவாதமும் தங்களைப் புணருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளினால் வாழ்வின் ஆதாரங்களை இழந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை, அதே உலகமயமாக்கலின் விளவுகளினால் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களும், மதவாதசக்திகளும் சநாதனத்தின் பக்கம் திசை திருப்புகிறார்கள், இதனால் தங்கள் வாழ்வைப் பறித்தவர்களைப் பற்றியோ, காரணங்கள் பற்றியோ அவர்கள் அறியாமல் பழமையை மீட்டெடுக்கும் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

இத்தகையச் சூழலில் இடதுசாரிகளின் வேலை இன்னும் கடினமாகிறது. அரசியல் ரீதியில் முற்போக்காகவும், பண்பாட்டு ரீதியில் பிற்போக்காகவும் இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்களே ஆகி விடுகிற நிலைமை உருவாகிவிடுகிறது. இதற்கு புதிய முற்போக்குப் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடமே காரணம்.வரலாற்றறிஞர் கே. என். பணிக்கர் சொல்வதைப் போல,

“ முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசியல்-பண்பாடு இரண்டுமே சமநிலையில் இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். பண்பாட்டுச் செயல்பாடுகள் மீது அரசியல் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துமானால் பண்பாட்டின் மீது அரசியல் ஒரு சர்வாதிகாரத்தைச் செலுத்துமானால் சில முன்னாள் சோசலிச நாடுகளில் அப்படித்தான் நடந்தது என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்- பண்பாட்டு இயக்கத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்த இயலாமல், தனது வரலாற்றுப் பங்களிப்பைச் செய்ய இயலாமல் போய் விடும் “

உடனடியாக பண்பாட்டுத்தளத்தில் ஏகாதிபத்தியத்தின், சாதி மத வாதத்தின் பண்பாட்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், மக்களிடையே விமர்சனக்கண்ணோட்டத்தை வளர்க்கவும், புதிய முற்போக்கு பண்பாட்டுத் தளங்களையும் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது.

நன்றி - தீக்கதிர்