Tuesday 15 May 2012

ததும்புதல்

 Artwork-Sorrow

உன்னிடம் அதைச் சொன்னபோது

மூச்சு முட்டிச் செத்து மிதந்தன சொற்கள்

அப்போது தான் எனக்குத் தெரிந்தது

நான் அதைச் சொல்லிவிட்டேன் என்று

எப்படியும் சொல்லவேண்டியது தான்

என்றாலும் அப்படிச் சொல்லியிருக்கவேண்டியதில்லை

சந்தித்த முதல் கணத்திலேயே

இந்த இறுதிக் கணமும் சூல் கொண்டு விட்டது

ஆனாலும் இப்போது அதைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை

பாலைவெயிலின் கசகசப்பாகவிருக்கலாம்

முந்தின நாள் பிடித்த நீர்க்கோர்வையினால்

அடுத்தடுத்து வந்த தும்மல்களினால் இருக்கலாம்

எதிரே காற்றில் அலைவுறும் காய்ந்தமலரின் கடைசித்

துடிப்பாக இருக்கலாம்

சிரித்த உன் உதடுகளின் கீற்றில்

ஒளிந்திருந்த கைப்பாக இருக்கலாம்

எப்படியிருந்தாலும் அப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை

அதுவும் அந்த நேரத்தில் சொல்லியிருக்கவேண்டியதில்லை

அந்தக் கணத்திற்குப் பெறுமதியான நிதானத்தையோ

சொற்களுக்கிடையான அமைதியையோ

ஆழ்ந்த உணர்ச்சியையோ

ததும்புகிற கடைசி முத்தத்தையோ

எதையுமே தராமல் எதையுமே பெறாமல்

அறிவின் கூர்வாளால் குத்திக் கிழித்த

நிணச் சொற்களால் அதைச் சொல்லியிருக்கவேண்டியதில்லை

ஒருவேளை சொல்லாமலும் இருந்திருக்கலாம்

கனவில் சுவைத்த அன்பின் ஒரு துளியைத் தேடி

வெறுமையின் இருள்வெளியில்

பேசாமலே பிரிந்திருக்கலாம் ஒரு நாள்

No comments:

Post a Comment