Showing posts with label பறவை. Show all posts
Showing posts with label பறவை. Show all posts

Wednesday, 25 July 2012

பறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன?

Vector-mythical-creature-1 மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

 

முன்பு ஒரு காலத்தில் பறவைகளுக்கு சிறகுகள் கிடையாது. அவர்கள் தரையில் தான் வசித்தனர். ஆனால் மிருகங்களுக்கு சிறகுகள் இருந்தன. அவர்கள் வானத்தில் பறந்து கொண்டிருந்தனர். மிருகங்களுக்குத் தலைவன் இருந்தான். அதே போல் பறவைகளுக்கும் தலைவன் இருந்தான். அவர்களுக்கிடையில் பகை இருந்தது.

பறவைகளை அடக்கியே தீர வேண்டும்- இது மிருகத்தலைவனின் ஆசை.

“பறவைத்தலைவா! ஒழுங்கா மரியாதையா..கப்பம் கட்டணும்.. தெரியுதா..” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

பறவைத்தலைவன் ரொம்ப மரியாதையானவன். எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவனும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

“மிருகத்தலைவா! நான் கப்பம் தர மாட்டேன்..” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“அப்படியா..நான் யாருன்னு காட்டுறேன்..” என்று மிருகத்தலைவன் பயமுறுத்தினான்.

“என்ன செய்வே? என்னோட அலகை உடைச்சு உப்புப் போட்டு ஊற வச்சி திம்பியா? பேசாம இரு..” என்று பறவைத்தலைவன் சூடாகப் பதில் சொன்னான்.

உடனே மிருகத்தலைவன் பறந்து அருகில் வந்தான். பறவைத்தலைவன் எதிர்த்து நின்றான். அவன் கடித்தான்.இவன் கொத்தினான். அங்கே ஒரு கலகமே நடந்தது. மிருகத்தலைவனின் சிறகு லேசாக முறிந்து விட்டது. பறவைத்தலைவனின் அலகு கொஞ்சம் உடைந்து விட்டது. அதோடு சண்டையும் முடிந்து விட்டது.

ஆனால் மிருகத்தலைவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். எப்படியாவது பறவைகள் மீது படையெடுத்து ஒடுக்கவேண்டும். அவன் ரகசியமாக மிருகங்களை அணி திரட்டி பறவைகளைத் திடீரென்று தாக்கினான். பறவைகள் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் தயாராகவும் இல்லை. ஏராளமான பறவைகள் செத்து விட்டன. மிருகங்கள் வெற்றி பெற்றன.

பறவைத்தலைவனும் யோசித்தான்.மிருகங்கள் மறுபடியும் படையெடுக்கும். முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது. அவன் பறவைகளை ரகசியமாக அணி திரட்டினான். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தான். அதெல்லாம் மிருகத்தலைவனுக்குத் தெரியாது. மிருகத்தலைவன் மறுபடியும் படையெடுத்தான். இந்த முறை எல்லாம் எதிராக இருந்தது. ஏராளமான மிருகங்கள் செத்துப் போயின. வெற்றி பறவைகளுக்குக் கிடைத்தது.

இன்னும் படையெடுக்க வேண்டும்-தயாராக இருந்தான் மிருகத்தலைவன். படையெடுப்பை எதிர்க்கவேண்டும்-இதற்குத் தயாராகப் பறவைத்தலைவன். இந்தமுறை யுத்தம் பயங்கரமாக இருக்கும். இது உறுதி.

மிருகமும் இல்லாமல் பறவையும் இல்லாமல் ஒரு இனம் இருந்தது. அது பாம்பினம். பாம்புகளுக்கு விஷம் உண்டு. அவர்கள் எண்ணிக்கையும் அதிகம். மிருகத்தலைவனுக்கும், பறவைத்தலைவனுக்கும் ஒரு விசயம் உறுதியாகத் தெரிந்தது. பாம்புத்தலைவன் யார் பக்கம் சேர்கிறானோ அவருக்கே வெற்றி.

மிருகத்தலைவன் பாம்புத்தலைவனைப் பார்க்கச் சென்றது. அந்தச் சமயத்தில் பறவைத்தலைவனும் வந்து சேர்ந்தான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அது மட்டுமில்லை.பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

பாம்புத்தலைவனுக்கு முன்பே எல்லாம் தெரியும். இருவரும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை யூகிக்க ஒரு சிரமமும் இல்லை.

“மிருகத்தலைவா! பறவைத்தலைவா! கவனிங்க, நான் ஒரு முடிவு செய்ஞ்சிருக்கேன்..உங்க ரெண்டு பேரில யார் அதை ஏத்துக்கலேன்னாலும்..நானும் என் கூட்டமும் எதிராளி கூடச் சேந்துருவோம்.. என்ன சம்மதமா?” என்று பாம்பு கேட்டது.

பாம்புத்தலைவன் எதிராளியுடன் சேர்ந்தால்? நம்ம சோலி முடிந்துபோகும்.இது மிருகத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது. பறவைத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது.

“எனக்குச் சம்மதம்.” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

“எனக்குச் சம்மதம்” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“சரி..இதுதான் என் முடிவு.மிருகத்தலைவன் தான் முதலில் சண்டை போட்டது.அதுக்கு முதலில் மிருகங்கள் பரிகாரம் செய்யவேண்டும். அவர்கள் பறவைகளுக்கு சிறகுகள் தரணும்..” என்று பாம்புத்தலைவன் சொன்னான்.

மிருகங்களுக்கு வேறுவழியில்லை. அவர்கள் பறவைகளுக்கு சிறகுகளைக் கொடுத்தனர். அன்று முதல் என்னாச்சு? மிருகங்கள் நிலத்தில் வாழ்ந்தன. பறவைகள் ஆகாயத்தில் பறந்து திரிந்தன. இன்று வரை அப்படித்தானே!

Friday, 25 May 2012

பறவையின் அழுகை

LADY

பகலைக் குடைந்து இரவுக்குள்

ஊர்ந்து வரும் காமப் புழுக்கள்

வெடித்துப் பிளந்த உடலெங்கும்

காமசரிதைகளை எழுதிச் செல்லும்

ஓடிக்கொண்டிருக்கும் நாயின்

உலர்ந்த நாக்கில் ஒட்டிய

பகல்ஞாபகங்களின் மீது

இருள் போர்வையெனப்

போர்த்தும் காமம்

அடைத்த கடையில் அடைக்கலமான

பசித்த இரவின் கண்களில்

சினிமா நடிகையின் திமிர்த்த

முலைகள் குத்த புரண்ட இரவு

தலை சொறிந்து கைகளில்

தீர்க்கும் காமம்

நிசப்த வெளியெங்கும்

பிரவகிக்கும் காமப்பேராறு

கிசுகிசுக்கும் பேரோசை

சற்றே மௌனம் காக்கும்

காமம் தவறிய ஒற்றைப்

பறவையின் அழுகையில்.

Monday, 21 May 2012

கூண்டுப் பறவை-- தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்.verity_harpy_aug07

செர்யோஷாவின் பிறந்த நாளைக்கு நிறையப் பரிசுகள் கிடைத்தன.பம்பரங்கள்,சாய்ஞ்சாடும் குதிரை, படங்கள் எல்லாம் கிடைத்தன.ஆனால் மிகச் சிறந்த பரிசு அவனுடைய மாமாவிடமிருந்து தான் கிடைத்தது. பறவைகளைப் பிடிப்பதற்கான கூண்டு. சிறிய மரச்சட்டகத்தில் வலை அடித்த கூண்டு.

கொஞ்சம் தானியங்களை உள்ளே போட்டு கூண்டை தோட்டத்தில் வைத்து விட்டால் போதும். தானியங்களை தின்பதற்கு ஏதாவது ஒரு பறவை உள்ளே வந்ததும் அதன் மரக் கதவு தானாக மூடிக்கொள்ளும்.செர்யோஷாவுக்கு ரொம்ப சந்தோசம். அவனுடைய அம்மாவிடம் காட்டுவதற்கு ஓடினான்.

அவள் அதைப் பார்த்துவிட்டு,”ரொம்ப மோசமான விளையாட்டு சாமான்,ஏன் பறவைகளைப் பிடித்து துன்பப் படுத்தணும்”.என்று சொன்னாள்.

அவன்,”நான் அவற்றைப் பிடித்துக் கூண்டில் அடைச்சு வைப்பேன்.அவை எனக்காகப் பாடும்.நான் அதுகளுக்கு சாப்பாடு கொடுப்பேன்” என்றான்.

செர்யோஷா கொஞ்சம் தானியங்களை அந்தக் கூண்டுக்குள் போட்டு, அதைக் கொண்டு போய் தோட்டத்தில் வைத்தான்.அவன் ரொம்ப நேரமாகக் காத்திருந்தான்.ஒரு பறவையும் வரவில்லை.

அவனைப் பார்த்து பறவைகள் பயந்தன.கூண்டின் அருகில் கூட பறக்கவில்லை.செர்யோஷா இரவு உணவுக்காகவீட்டிற்குள் போய் விட்டான்.கூண்டை தோட்டத்திலேயே விட்டு விட்டான். சாப்பிட்டு விட்டு வந்து பார்க்கும் போது கூண்டு அடைபட்டு இருந்தது. ஒரு சிறிய பறவை முட்டி மோதிக் கொண்டிருந்தது.பல்லை இளித்தபடியே செர்யோஷா கூண்டத்தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

“அம்மா, இங்கே பாருங்க! நான் ஒரு பறவையைப் பிடிச்சிட்டேன்.அநேகமாக அது நைட்டிங்கேலாகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அதோட இதயம் எப்படி துடிக்குது பாருங்க..”என்று அவன் சொன்னான்.

அம்மா அவனிடம்,”இது பாடும் சிஸ்கின் பறவை அதை துன்பப் படுத்தாதே..கூண்டைத் திறந்து அதைப் போக விடு..” என்று சொன்னாள்.

”இல்லம்மா நான் அதுக்கு சப்பாடு கொடுப்பேன்.குடிக்கத் தண்ணீரும் கொடுப்பேன்..”என்றான் செர்யோஷா.

செர்யோஷா சிஸ்கினை கூண்டில் அடைத்து, அதற்குத் தானியங்களும் தண்ணீரும் வைத்தான். ஒரு இரண்டு நாட்களுக்குத் தினமும் கூண்டைச் சுத்தம் செய்தான்.ஆனால் மூன்றாவது நாள் அவன் அந்தச் சின்னப் பறவையை மறந்தே போனான். தண்ணீர் மாற்றவும் தீனி போடவும் மறந்து போனான்.

“பாத்தியா, நான் சொன்னேன்ல, நீ அந்தப் பறவையை மறந்துட்டீல்ல.அதை வெளியில விட்டிரு..” என்று அம்மா சொன்னாள்.

உடனே செர்யோஷா “இல்லை..நான் மறக்கலை.. இதோ..நான் உடனே கூண்டைச் சுத்தம் செய்து, தண்ணீர் மாத்தப் போறேன்..” என்று சொன்னான்.கூண்டுக்குள் கையை விட்டு அதைச் சுத்தம் செய்யத் தொடங்கினான்.பயந்து போன சிஸ்கின் கூண்டுக் கம்பிகளில் முட்டிமோதியது.செர்யோஷா கூண்டைச் செய்து முடித்து விட்டு தண்ணீர் எடுத்து வரப் போய்விட்டான்.அம்மா தான் அவன் கூண்டை மூடாமல் போய் விட்டதைக் கவனித்தாள்.

அவள்,அவனைக் கூப்பிட்டாள்,”செர்யோஷா! கூண்டை மூடிட்டுப் போ! இல்லேன்னா அந்தப் பறவை வெளில போய் காயப் படுத்திக்கப் போகுது..”

அவள் சொல்லி முடிக்குமுன்பே அந்த சிறிய சிஸ்கின் கூண்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டுபிடித்து விட்டது.அதன் வழியே சந்தோசமாக தன் சிறிய சிறகுகளை விரித்து பறந்தது. சன்னலைத் தேடி அறையெங்கும் அலைந்தது.சன்னலில் கண்ணாடி இருப்பது தெரியாமல் வேகமாக அதில் முட்டியது. அப்படியே சன்னலின் அடியில் பொத்தென்று விழுந்தது.

செர்யோஷா ஓடி வந்து அதைத் தூக்கி கூண்டுக்குள் வைத்தான்.சிஸ்கின் உயிருடன் இருந்தது.அது சிறகுகளை விரித்து மூச்சுத்திணறலோடு கிடந்தது.செர்யோஷாவுக்கு அதைப் பார்த்து பார்த்து கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அம்மா! நான் என்ன செய்ய?” என்று அழுதுகொண்டே கேட்டான்.

”இனி உன்னால ஒண்ணும் செய்ய முடியாது” என்று அம்மா சொன்னாள்.

செர்யோஷா நாள் முழுதும் அந்தக் கூண்டின் அருகிலேயே,சிஸ்கின் வேகவேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.இரவு அவன் படுக்கப் போகும்போது அது உயிருடனே இருந்தது.அவனுக்கு ரொம்ப நேரமாய் தூக்கம் வரவில்லை.கண்களை மூடும் போதெல்லாம் சிஸ்கின் மூச்சுத் திணறலோடு துடித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. காலையி எழுந்ததும் கூண்டை நோக்கி ஓடினான்.அங்கே சிஸ்கின் தன் சிறிய கால்கள் விரைத்திருக்க இறந்து கிடந்தது.

அதன் பிறகு செர்யோஷா பறவைகளை ஒரு போதும் பிடிக்கவில்லை