Sunday 28 October 2012

தாமரைப் பூவும் வண்டும்

மலையாளம் – மாலி1663153-Lotus-Flower-0

தமிழில் - உதயசங்கர்

பூமா என்று ஒரு தாமரைப் பூ இருந்தாள். தாமரைக் குளத்தில்தான் அது வாழ்ந்து வந்தாள். அங்கே வேறு தாமரைப் பூக்களும் இருந்தனர். தாமரைப்பூக்கள் காலையில் தேனைச் சுரந்தனர். தேன் குடிப்பதற்காக வண்டுகள் வந்து சேரும். பூமா சுரக்கிற தேன் மிகவும் ருசியாக இருக்கும். எல்லா வண்டுகளுக்கும் அது தெரியும். வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டு வரும். பூமா எல்லோருக்கும் தேன் கொடுப்பாள். பூமாவுக்கு எல்லோரையும் பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடித்திருப்பது யாரைத் தெரியுமா? நீலன் என்ற வண்டைத் தான். நீலன் தான் மிகநன்றாக ரீங்காரப் பாட்டு படிக்கிறவன்.

ஒரு நாள் பூமா,”நீலா இனிமேல் நீ மதியத்திற்கு மேல் வந்தால் போதும்.” என்று சொன்னாள். அதற்கு நீலன்,” ஏன் காலையிலே வந்தா என்ன?” என்று கேட்டான்.

பூமா,” காலையில நெறைய வண்டுகள் வருது..அவர்களுக்குத் தெரியாமல் நான் ஒண்ணு செய்றேன். முதல் தரமான தேனை நான் உனக்காக ஒளிச்சு வைக்கிறேன் மதியத்துக்கு மேலே நீ வந்து குடிச்சிட்டுப் போ..” என்று சொன்னாள்.

நீலன்,” மத்த வண்டுகளூக்கு தேன் கொடுக்காம இருந்தா போதாதா?” என்று கேட்டான்..

“அய்யோ அது முடியாது..எந்த வண்டு தேவைன்னு வந்தாலும் நான் கொடுப்பேன். அதுதான் என் சுபாவம்..ஆனா உன்னோட பாட்டு தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால உனக்கு நான் முதல்தரமான தேனைக் கொடுப்பேன்.” என்று பூமா சொன்னாள்.

அடுத்த நாள் நீலன் மதியத்துக்கு மேல் வந்தான்.பூமா முதல்தரமான தேனை ஒளித்து வைத்திருந்தாள். வந்த உடனே அவள் அதைக் கொடுக்கவில்லை.

“ரீங்காரப்பாட்டுப் பாடி என்னை வட்டமடி! நூறு தடவை சுற்றி வரணும்..அப்பத்தான் நான் தேன் தருவேன்..” என்று பூமா நீலனிடம் கேட்டாள்.

நீலனுக்கு எண்ணத் தெரியாது..அவன் பூமாவிடம்,” பூமா நான் பாட்டுப் பாடிக் கொண்டே உன்னைச் சுற்றி வாரேன்..நீ தான் எண்ணிக்கணும்..” என்று சொன்னான்.

அவன் ரீங்காரப்பாட்டு தொடர்ந்து பாடினான். வெகுநேரம் வட்டம் சுற்றினான். அப்போது தான் பூமா,” சரி..நூறு சுற்று முடிந்தது..” என்று சொன்னாள்.

பிறகு அவள் தேன் கொடுத்தாள்.

உண்மையில் இருநூறு தடவை நீலன் சுற்றியிருந்தான். நூறு என்று பூமா சும்மா சொன்னாள். ஏனெனில் அதிக நேரம் பாட்டு கேட்கிற ஆசை தான்.

இதையெல்லாம் இன்னொரு தாமரைப்பூ பார்த்துக் கொண்டிருந்தது.அவள் பெயர் துர்முகி. துர்முகி சுரக்கிற தேன் சிறிது கசக்கும். அதனால் வண்டுகள் அவளிடம் போவதில்லை. பூமாவும் நீலனும் பிரியமாக இருப்பதைப் பார்த்து அவளுக்குப் பொறாமை தொன்றியது.

துர்முகி,” பூமாவின் தேனில் விஷம் இருக்கிறது “ என்று வண்டுகளிடம் சொன்னாள்.

வரிசையாக எல்லா வண்டுகளூம் துர்முகியை நம்பினார்கள். அவர்கள் எல்லோரும் பூமாவை விட்டு விட்டார்கள். இதில் பெரிய கஷ்டம் நீலனும் துர்முகியை நம்பி விட்டான். அவனும் பூமாவிடம் போவதில்லை.

பூமாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா? மற்ற வண்டுகள் வராவிட்டாலும் பரவாயில்லை.நீலன் வராமல் இருந்தது தான் ரொம்ப சங்கடமாக இருந்தது. அவனும் துர்முகியை நம்பி விட்டானே!

பூமாவின் சங்கடம் துர்முகிக்கு சந்தோசமாக இருந்தது. அவள்,”பூமாவுக்கு அப்படித்தான் வேணும்” என்று நினைத்தாள்.

பூமாவுக்கு சத்யன் ஞாபகத்துக்கு வந்தான். சத்யன் ஒரு நண்டு. அவன் உண்மை தான் பேசுவான். எல்லா வண்டுகளுக்கும் அது தெரியும்.அது மட்டுமில்லை. எல்லா தாமரைப்பூக்களுக்கும் தெரியும்.

சத்யனிடம் சென்று பூமா விவரம் சொன்னாள். காலையில் சத்யன் நீலனைப் பார்த்தது.

“நீலா. பூமா சுரக்கிற தேனில் விஷமும் இல்லை..கிஷமும் இல்லை..அந்தப் பொய்சொல்லி துர்முகியின் வேலைதான் இது..நீ பெரிய தப்பு செய்ஞ்சிட்டே..” என்று கோபத்தோடு சொன்னான் சத்யன்.

நீலன்,” உண்மையா? சத்யா!” என்று கேட்டான்.

“உண்மையில்லைன்னா..என் பேர் அசத்யன்னு மாத்திக்கோ..” என்று சத்யன் சொன்னான்.

நீலன் பூமாவின் அருகில் சென்றான்.

“என்னை மன்னிச்சிரு பூமா!” என்று நீலன் வேண்டினான். பூமாவுக்கு அளவற்ற சந்தோசம். ஆனால் அந்த சந்தோசத்தை வெளிக் காட்டாமல் ,” நீலா நீ இருநூறு தடவ பாட்டுப்பாடிக் கொண்டே என்னைச் சுற்றி வந்தாத்தான் நான் உனக்கு தேன் தருவேன்..” என்று சொன்னாள்.

நீலன் ரொம்ப நேரம் சுற்றினான்.

“சரி.. இருநூறு ஆச்சு..போதும்.. தேன் குடிச்சிக்கோ..” என்று பூமா சொன்னாள்.

ஆனால் உண்மையில் முன்னூறு ஆகியிருந்தது.

நீலனும் பூமாவும் மறுபடியும் பிரியமாகி விட்டார்களா? அதைப் பார்த்து ஒரு தாமரைப்பூவின் முகம் கருத்துப் போய் விட்டது.-அவள் துர்முகி!

No comments:

Post a Comment