Wednesday 3 October 2012

குட்டிப்பெண்ணும் காளான்களும்

1242886731968-girl child தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

 

இரண்டு குட்டிப் பெண்கள் கூடை நிறையக் காளான்களைப் பறித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.போகிற வழியில் அவர்கள் தண்டவாளங்களைக் கடக்க வேண்டியது இருந்தது. அவர்கள் ரயில்இஞ்சின் வெகு தூரத்தில் வந்து கொண்டிருந்ததாக நினைத்தனர். எனவே அவர்கள் தண்டவாளத்தை கடப்பதற்காக மேட்டின் மீது ஏறினர்.

திடீரென அவர்களுக்கு ரயில் சத்தம் கேட்டது. இருவரில் பெரியவள் திரும்பி ஓடிவந்து விட்டாள்.ஆனால் அதற்குள் சிறியவள் தண்டவாளங்களுக்கு நடுவில் போய் விட்டாள்.

பெரியவள் “திரும்பி ஓடி வராதே” என்று அவளுடைய தங்கையைப் பார்த்து அலறினாள்.

ஆனால் ரயில் வெகு அருகில் வந்து விட்டது. அந்த சத்தத்தில் அக்கா சொல்வதைச் சரியாகக் கேட்க முடியவில்லை. அவள் திரும்ப ஓடிவரச் சொல்வதாகவே தங்கை நினைத்தாள்.அதனால் திரும்பி தண்டவாளங்களைக் கடக்க முயலும் போது, தடுமாறினாள். அதில் அவள் சேகரித்திருந்த காளான்களெல்லாம் கீழே சிதறி விட்டது.அவசர அவசரமாக அவற்றைப் பொறுக்கிக் கூடையில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருந்தாள்.

இப்போது ரயில் ரொம்ப பக்கத்தில் வந்து விட்டது.ஓட்டுநர் எவ்வளவு வேகமாக விசில் அடிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக விசில் அடித்தார்.

பெரியவள் “காளான்களைக் கீழே போடு” என்று அலறினாள்.ஆனால் சிறியவள் என்ன நினைத்தாளென்றால் எல்லாவற்றையும் நன்றாகப் பொறுக்கச் சொல்லுகிறாள் என்று நினைத்தாள்.உடனே தண்டவாளங்களுக்கு நடுவில் தவழ்ந்து பொறுக்க ஆரம்பித்தாள்.

ரயில் ஓட்டுநரால் அவருடைய இஞ்சினை நிறுத்தமுடியவில்லை. இஞ்சின் விசிலை மட்டும் அவரால் முடிந்த மட்டும் பலமாக அடித்தார். ஆனால் இஞ்சின் அந்த சின்னப் பெண் மீது ஓடி நின்றது..

பெரியவள் அழுது அரற்றினாள். ரயிலிலிருந்த பயணிகள் சன்னல் வழியே எட்டிப்பார்த்தனர்.கார்டு

அந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன ஆயிற்றோ என்று பார்ப்பதற்கு ரயிலின் கடைசிக்கு ஓடிப் போனார். ரயில் தாண்டிய பிறகு அந்தச் சிறுபெண் தண்டவாளங்களுக்கு நடுவில் முகத்தை மூடிக் கொண்டு குப்புற படுத்துக் கொண்டிருந்தாள்.

ரயில் அவளைத்தாண்டிப் போன பிறகு தலையைத் தூக்கினாள்.முட்டி போட்டு மீதி காளான்களையும் பொறுக்கிக் கொண்டு அவளுடைய அக்காவிடம் ஓடினாள்.

1 comment:

  1. அருமை.
    பதற வைத்து விட்டது.
    நன்றி.

    ReplyDelete