Wednesday 10 October 2012

நட்சத்திரம் விழும் நேரத்தில்..

semsar's painting

 

மலையாளத்தில்- கிரேஸி

 

தமிழில்- உதயசங்கர்

 

உலகம் இருளின் கீழ் விரைத்துப் படுத்துறங்குகின்ற பொழுதில் தான் அவனுடைய வாழ்க்கை துடிக்கத் தொடங்கும். அவனுடைய விரல்நுனியில் இந்திரஜாலமிருந்தது. தொட்டமாத்திரத்தில் சன்னல் கம்பிகள் வழிவிட்டு ஒதுங்க அலமாரிகளும் பாதுகாப்புப் பெட்டகங்களும் விரியத் திறந்தன.

அன்று, முன்பே பார்த்து வைத்திருந்த வீட்டு முற்றத்தில் பதுங்கிப் பதுங்கிச் செல்லும்போது அவன் அதிர்ச்சியடையும்படி அந்த வீட்டுக்காரி அங்கே நின்று கொண்டிருந்தாள். இருட்டில் அவள் யாரோ கள்ளக்காதலனுக்காகக் காத்திருந்தாள் என்று அவன் சந்தேகப்பட்டான். அபூர்வமாகத்தான் என்றாலும் அவன் அவளைப் பார்த்திருக்கிறான். ஒரு கள்ளக்காதலனை ஈர்க்கிற அளவுக்கு அழகு அவளுக்கு வாய்க்கவில்லை. கருத்து மெலிந்திருந்தாள். ஆனால் அவளுடைய பெரிய கண்களில் ஏராளமான துயரங்கள் தெரிந்தன. அரண்மனை போன்ற ஒரு வீடும் உயர்ந்த உத்தியோகத்திலிருந்த கணவனும் காரும் வாய்க்கப்பெற்ற ஒரு பெண்ணின் இவ்வளவு துக்கத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் ஆச்சரியப்படவும் செய்தான்.

அவள் கள்ளக்காதலனுக்காகக் காத்திருக்கவில்லை என்று கடைசியில் தான் அவனுக்கு உறுதியாயிற்று. வானத்தை நோக்கி முகம் உயர்த்தி எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே மனித இயல்பினாலான ஒரு குறுகுறுப்பினால் அவன் அவளுக்கு அருகில் சென்றான். அவனும் வானத்திஅ நோக்கி முகம் திருப்பினான். அவனால் பிரத்யேகமாய் எதையும் பார்க்க முடியவில்லை. திடீரென்று தான் அவனுடைய அருகாமையை அவள் உணர்ந்தாள். ஆனந்தத்தோடு அடங்கிய குரலில் அவள் கேட்டாள்;

பாரு..பாரு..அந்த நடசத்திரம் விழுகிறதைப் பார்த்தியா?

அவனைத் தன்னோடு சேர்த்து நிறுத்தி அவள் வானத்தைப் பார்த்துச் சுட்டிக் காண்பித்தாள். அவனுக்கு ஒரு நடசத்திரம் விழுவதைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை. நட்சத்திரங்கள் உள்ள வானத்தை அவன் வெறுத்தான். வெளிச்சம் எப்போதும் அவனுக்கு எதிரியாக இருந்தது.

அவனைச் சேர்த்தணைத்துக் கொண்டு அவள் நடந்தாள்.

அவளுடைய கண்கள் அப்போதும் நட்சத்திர உலகத்தில் தான் இருந்தன. விசாலமான முற்றத்தினுடைய எல்லையையும் தாண்டி அவர்கள் நடைபாதையில் இறங்கி நடந்தார்கள். வாசல் கதவின் கம்பிகள் அவர்களைத் தடுத்தன. பார்வையிலிருந்து மறைந்த நட்சத்திரத்தை நினைத்து அவள் பெருமூச்சு விட்டாள்.

அந்த நட்சத்திரம் வேறு யாருடையவோ வாழ்க்கையினுள்ளே பயணித்திருக்கும் அல்லவா?

அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். அவளுடைய இமை முடிகளில் ஒரு கண்னீர்த்துளி நட்சத்திரம் போல மின்னிக் கொண்டிருப்பதை மங்கிய வெளிச்சத்தில் அவன் பார்த்தான். அவனுடைய நெஞ்சில் தலை சாய்த்து மெல்லக் கண்களை மூடினாள்.

நடசத்திரம் விழுவதைப் பார்த்தால் கெட்ட சகுனம் என்பார்கள். ஆனால் எனக்கு அதைப் பார்க்கும்போது கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படுகிறது. நான் வானத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு நட்சத்திரமாவது விழுவது உண்டு. முன்பும் அப்படித்தான்.

என்னுடைய அழகான தங்கை சொல்லுவாள். அக்காவைப் பார்த்து பயந்து போய் நட்சத்திரங்கள் எல்லாம் ஓட்டம் பிடிக்கின்றன.

இரக்கத்தின் ஒரு அலை அவனுக்குள் இறங்கி அவனை நனைத்தது. பின்பும் எதுவும் பேசாமல் அவன் அவளுடைய முதுகை வெறுமனே தடவிக்கொடுத்தான். அமைதியான குரலில் அவள் தொடர்ந்தாள்.

நட்சத்திரப்பொட்டுகள் சிதறிக்கிடக்கிற இந்த வானவெளி எத்தனை உபயோகமில்லாத வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கு நினைவு படுத்தும். அப்படியே என்னுடைய காயங்களையெல்லாம் நான் மறக்கத் தொடங்குவேன். நடுநிசியில் தூரத்தில் ஏதோ ஒரு மரக்கிளையிலிருந்து மறுமொழியின்றி ஒரு ஆந்தை கூவும்போது எப்படியோ எனக்குள் அமைதி ஊற்றெடுத்து நிறையும்.

அவளுடைய வார்த்தைகள் மௌனத்திற்குள் இடறி விழுந்தன. அவள் உறங்கிவிட்டாளோ என்று அவன் அதிர்ச்சியடையத் தொடங்கினான். அப்போது ஏதோ ஒரு கனவிலிருந்து விழித்தெழுந்ததைப் போல அவள் கேட்டாள்;

நீங்கள் யார்?

அப்போது அவனால் உண்மையைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பெண் அவனுடைய நெஞ்சில் தஞ்சமடைந்திருக்கிறாள்.

நான் ஒரு திருடன்.

அவன் எதிர்பார்த்தது போல அவள் நடுங்கவோ அலறி ஆட்களை கூப்பிடவோ இல்லை.

அதற்குப் பதிலாக உணர்ச்சியே இல்லாத ஒரு குரலில் அவள் சொன்னாள்;

என்னுடைய கணவரும் ஒரு திருடன் தான். ஆனால் அவர் திருடுவது பெண்களின் புனிதத்தை.. நீங்கள்?

காற்றில் அலையும் தீபஒளியைப் போல அவனுடைய இதயம் துடித்தது. சிதறித் தெறிக்கின்ற ஒரு பெருமூச்சோடு அவனுடைய முரட்டுமுகம் அவளுடைய நெற்றியில் பதிந்தது.

பின்பு, அவன் மெல்ல அவளிடமிருந்து விலகி இருளில் எங்கோ மறைந்து இல்லாமல் போனான்.

Gracy

No comments:

Post a Comment